'எங்களுக்காக போராடுற புள்ளங்க எல்லாம் நல்லா இருக்கணும்யா!'' - நெகிழும் அலங்காநல்லூர் பெண்கள்
ஒரு ஊரில் ஆரம்பித்த சிறு தீ இன்று மாணவ,
மாணவிகள் இயக்கமாக மாறி, அரசாங்கத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆணிவேர் அலங்காநல்லூர்தான். தொடர்ந்து ஐந்தாவது
நாளாக ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூர் போராட்டத்தில் பங்கு பெற்று வரும்
பெண்களிடம் பேசினோம்.
நாகலட்சுமி:
''எனக்கு நினைவு தெரிஞ்சது முதலா பாலமேட்டுல ஜல்லிக்கட்டு பார்த்துட்டு இருக்கேன்.
கல்யாணமாகி வந்தது அலங்காநல்லூர்க்கு. அதனால ஜல்லிக்கட்ட
பத்தி அக்குவேறா, ஆணிவேறா தெரியும். கடந்த ரெண்டு வருஷமா ஜல்லிக்கட்டு
நடக்கவே இல்ல. முதல் நாள் போராட்டத்துல கலந்துகிட்டப்ப ஒரு பொண்ணோட கையை
போலீஸ் உடைச்சிருச்சு. எத்தனை வலி, எத்தனை வேதனை. ஆனா எங்களைப்
பார்த்துட்டு எங்க இருந்தோ இருந்த பசங்க, பொம்பளப் புள்ளைங்க எல்லாம் இங்க
வந்து போராடினப்ப கண்ணீர் வந்திடுச்சு. கட்டுப்படுத்தவே முடியல. அவங்க
எல்லாம் நல்லா இருக்கணும்யா. இதோ இத்தன வீட்டு புள்ளைங்க எங்களுக்காக
நிக்கிறப்ப யார் தடுக்க முடியும்? நல்லது நடந்தே தீரும். அதுக்கான
ஒருபடிதான் இப்ப முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறது".
சாலம்மாள்:
''
எனக்கு சொந்த ஊர் தேனி பக்கம்ய்யா. நான் வாக்கப்பட்டதுதான் அலங்காநல்லூர்.
வாடிவாசல் பின்னாடிதான் என் வூட்டுக்காரர் வீடு இருந்துச்சு. பண வசதி
இல்லாம நாங்க அந்த வீட வித்துட்டோம். என் வூட்டுக்காரர் இறந்ததுக்கு
அப்புறமா நான் இந்த ஊர்லேயே இருந்துட்டேன். வேற எங்கேயும் வரமாட்டேனு
புள்ளைங்ககிட்ட சொல்லிட்டேன். பல ஊர்ல இருந்து வர்ற புள்ளைங்க எல்லாம்
இதுக்காக பாடுபடுறப்ப 69 வயசுல நான் சும்மா இருக்கலாமா. அதான் ஒருகை
பாத்துரலாம்னு வந்துட்டேன். எத்தன நாளானாலும் சரி, அலங்காநல்லூர்ல
ஜல்லிக்கட்ட பார்த்துட்டுதான் வீட்டுக்கு போவேன்".
காவியா, +1 மாணவி;
''நான்
படிப்புல மட்டும் கவனம் செலுத்துற பொண்ணு. ஆனா நம்மோட அடையாளத்த ஒண்ணுமே
தெரியாதவங்க வந்து பிடுங்குறப்ப எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க
முடியும் சொல்லுங்க. அதான் அப்பா அம்மாகிட்ட நான் போறேனு சொன்னேன்.
நம்மளுக்கு ஜல்லிக்கட்டு பொழுதுபோக்கில சார். அது நம்மோட அடையாளம். இங்க
இருக்கிற எல்லா அம்மா, அக்கா, சித்தப்பா, பெரியப்பானு ஒவ்வொருத்தர் வீட்டுல
இருக்கிற காள பேரையும் ரேஷன் கார்டுல மட்டும்தான் சேக்கல. கொழந்த மாதிரி
பார்த்துப்பாங்க. கண்ணால பாக்குற ஒண்ண, இல்ல இல்ல... நீங்க
கொடுமப்படுத்துறீங்கனு சொன்னா கோவம் வரும்ல. அந்த கோவம்தான் எங்க
போராட்டம். இப்ப நம்ம போராட்டம். இப்ப அதுக்கான முதல் வெற்றிப்படி
கிடைச்சிருக்கு. மொத்தத்துல எங்களை எல்லாம் ஒத்துமையா சேர்த்ததுக்கு
பீட்டாக்குதான் நன்றி சொல்லணும்".
கவிநீலா, கல்லூரி மாணவி :
''நான்
பி.எஸ்.சி மேத்ஸ் ரெண்டாவது வருஷம் படிக்கிறேன். எனக்கே ஆரம்பத்தில்
சந்தேகம்தான்... நம் போராட்டம் ஜெயிக்குமா, இல்ல அப்படியே காள மாடு காணாம
போயிடுமானு. ஏன்னா போராட்டம் ஆரம்பிச்ச அன்னைக்கு எங்கூட சேர்ந்து மொத்தம்
பத்து பேருதான் இருந்தாங்க. அப்புறம் பத்து 100 ஆச்சு இன்னிக்கு எண்ண
முடியாத அளவுக்கு தமிழ்நாடு, இந்தியா, வெளிநாடுனு பரவி கெடக்கு. எங்கள
பாத்து மெரண்ட போலீஸ் இப்ப எங்க கூட ஐக்கியமாகிட்டாங்க. இந்த போராட்டத்தால
பல அண்ணண், அக்கா கெடைச்சிருக்காங்க. ஜல்லிக்கட்டு வாசல் தொறக்கிற
அன்னைக்கு இருக்கு எங்களோட முழு சந்தோஷமும்".
- சே.சின்னதுரை
படம் : ஈ.ஜெ.நந்தகுமார், ராம்
Dailyhunt
Thursday, January 19, 2017
ஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்துக்கு இடையே எழும் நம்பிக்கை துளிர்
By DIN | Published on : 19th January 2017 12:40 PM |
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வரும் நிலையில், அதற்கான அதிகாரம் நம்மிடமே உள்ளது என்ற நம்பிக்கைக் குரல் எழுந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கூறியிருப்பதாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம சபைகள் மிகுந்த சக்திவாய்ந்தவை. ஊராட்சி மன்றத் தலைவரை விட அதிக அதிகாரம் மிகுந்தவை. அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் கோழிப் பண்ணைக்கு எதிரான எங்கள் போராட்டங்களில் கிராமசபையை பயன்படுத்தியே நீதிமன்றத்தில் வழக்குகளை வென்றோம். நிரந்தரத் தடை வாங்கினோம்.
கேரளாவில் ப்ளாச்சிமாடா பஞ்சாயத்து கிராமசபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே கேரள உயர்நீதிமன்ற உத்திரவு மூலம் கோகோ கோலா ஆலையை மூடியது (பிறகு உச்சநீதிமன்றம் ஆலைக்கு மீண்டும் அனுமதி கொடுத்துவிட்டது)
அலங்காநல்லூர் ஊராட்சி கிராமசபை தீர்மானம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்யலாம். சட்டமன்றம், நாடாளுமன்றத்தை விட உள்ளூர் விவகாரங்களில் கிராமசபைக்கு அதிகாரம் அதிகம்.
உள்ளூர் விவகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட உள்ளூர் மக்களே திறம்படக் கையாளமுடியும், அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே கிராமசபைக்கு பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல 18வயது நிரம்பிய அனைவரும் கிராமசபையின் உறுப்பினர்கள்.
ராஜீவ்காந்தியின் கனவு திட்டம் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் தங்கள் அருகிலேயே இருக்கும் அதிகாரத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று பதிவு செய்துள்ளார்.
அதே போல, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டவர். அவரிடம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரினால் எப்படி கிடைக்கும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த கிராம சபைக்கு முழு அதிகாரம் உள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்துவதால் கிராம சபைக்கு உச்ச நீதிமன்றத்தால் எந்த சிறைத் தண்டனையும் கொடுக்க முடியாது. அபராதம் மட்டுமே விதிக்க முடியும். எனவே, நம்மிடம் இருக்கும் கிராம சபை எனும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்: ஜல்லிக்கட்டு குறித்து பன்னீர்செல்வம் சூசகம்
By DIN | Published on : 19th January 2017 12:58 PM
புது தில்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என்று புது தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தப் பிறகு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் இயற்றுமாறு பிரதமர் மோடியை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றுமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். தமிழக கோரிக்கையை கவனமுடன் கேட்டுக் கொண்ட பிரதமர், தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், நன்கு அறிந்திருப்பதாகவும் மோடி கூறினார்.
அதே சமயம், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இது குறித்து மத்திய அரசு எதுவும் செய்ய இயலாது. ஆனால், ஜல்லிக்கட்டு குறித்து மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
எனவே, மாநில அரசு இது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். நன்மையே யாவும் நன்மையிலேயே முடியும் என்று தெரிவித்தார்.
Wednesday, January 18, 2017
நாளை டெல்லியில் அவசர கூட்டம் தொடர் போராட்டம் - எதிரொலி
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் கடந்த நான்கு
நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.அலங்காநல்லூரில் 3வது நாளாகவும்,
சென்னை மெரீனா, நெல்லை,விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், கோவையில் 2வது
நாளாகவும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு
அனுமதியும், பீட்டாவுக்கு தடையும் கொண்டு வந்தால் மட்டுமே போராட்டத்தை
கைவிடுவதாகவும், அதுவரை, தங்களின் போராட்டம் தொடரும் எனவும் தமிழ முதல்வர்
பன்னீர் செல்வம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர்.இது
தொடர்பாக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழக இளைஞர்களின் உணர்வுகளை
மதிக்கிறேன் ஆகையால் மாணவர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென
கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக போலீசார் முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக
உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிட போலீசார் பல முறை பேச்சுவார்த்தை
நடத்தினார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை எங்கள் போராட்டம்
தொடரும் என மாணவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். நாளை டெல்லியில்
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தலைமையில் அவசர
கூட்டம் நடக்க உள்ளது. மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அந்த
கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என
தெரிகிறது.
Dailyhunt
ஜல்லிக்கட்டு விவகாரம்...!! கடந்து வந்த பாதை... - ஒர் அலசல்
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டை 2014ம் ஆண்டில் நீதிமன்றம் தடை
செய்தது. இந்த முறை தமிழர்களும் எப்படியாவது நமது பாரம்பரிய விளையாட்டை
நடத்தியே தீர வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், நீதிமன்ற
ஆணைக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்களை உலகம் முழுவதும் போராட்டம்
நடத்தியும் இன்று வரை தீர்வு கிடைக்காமால் உள்ளது.
இந்த வருடமாவது
பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைக்குமா? என நீதிமன்ற
உத்தரவுக்கு காத்து இருந்த போது 3வது முறையாக நீதிமன்றம் தடை செய்தது.
ஜல்லிக்கட்டு தடை எப்படி வந்தது
ஜல்லிக்கட்டை
நிரந்தரமாக தடை செய்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் மத்திய அமைச்சர்
விலங்குகளிடம் பெரிதும் அன்பு பாராட்டுபவருமான மேனகாகாந்தி முதலில்
ஜல்லிக்கட்டு எதிராக குரல் கொடுத்தார்.
2008 ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் சார்பில்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை
உத்தரவு பெற்றார். தமிழர்கள் வாங்கிய அடிகள்
முதல் அடி
விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மேல் மறுமுறையீடு
செய்து ஒரு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போட்டி நடத்த அனுமதி
பெற்றது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 2009' சட்டத்தை
இயற்றியது. இச்சட்டம் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சில
விதிமுறைகளை நீதிமன்றம் அட்டவணைப்படுத்தியது.
இரண்டாவது அடி 2010
நவம்பர் 27ல் நீதிபதி ஆர். ரவீந்திரன், ஏ. கே. பட்நாயக் அடங்கிய அமர்வு ஒரு
நெறிமுறைகளை கூறியது அதன்படி, ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டத்தில் அந்த
மாவட்ட ஆட்சியர், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் விலங்குகள் அனைத்தும்
விலங்குகள் நலவாரியத்தில் பதிவு செய்வதையும், போட்டியை விலங்குகள் நலவாரிய
பிரதிநிதி ஒருவர் கண்காணிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். போட்டிக்கு ஒரு
மாதம் முன்பு அனுதி பெறவேண்டும்.
காளைகளும் மாடுபிடி வீரர்களும்
முறையாக பதிவு செய்தல், காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவுதல்,
சேறு சகதிபூசி வெறியூட்டுதல் கூடாது. ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு
பேருக்கு மேல் அடக்கக்கூடாது. காளையை வாலைப்பிடித்து திருகுவதோ வேறுவிதமான
கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது. காளைகள் ஓடவும் வீரர்கள்
அடக்கவும் களத்தில் போதிய இடவசதி இருக்கவேண்டும் என நெறிமுறையுடன்
அறிவுறுத்தப்பட்டது.
மூன்றாம் அடி நீதிமன்ற நெருக்கடி போதாதென்று
மத்திய அரசின் அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரிடமிருந்து
புதிய இடையூறு வந்தது. சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை
கூண்டிலடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக்கூடாதென்பது சட்டம்.
இதில் ஒரு திருத்தம் செய்து காளைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்தார்
முன்னாள் மத்தியஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
நான்காம் அடி சில
நிபந்தனைகள் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என நீதிமன்றம் கூறியது அதன்படி சிறிய
ஜல்லிக்கட்டுக்கு 2 லட்ச ரூபாயும், பெரிய ஜல்லிக்கட்டுகளுக்கு 5 லட்ச
ரூபாயும் முன்வைப்புத்தொகை, முறையான அனுமதி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள்
போட்டியில் காயமடைபவர்கள், பலியாகிறவர்களின் மருத்துவச் செலவுக்காகவும்
இரண்டு லட்ச ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என கூறியது.போட்டி நடத்த
முடியமால் தங்கள் செயலில் பின் வாங்கியது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை இந்த
சட்டத்திருத்தம் மேலும் சோர்வடைய வைத்தது.
ஜந்தாம்அடி ஒரு வழியாக
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012, 2013ம் ஆண்டில் தமிழக அரசு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்தது. கடந்த 2013ம் ஆண்டு விலங்குகள் நல
வாரிய உறுப்பினர்களான டாக்டர் மணிலால் வால்யதே, அபிஷேக் ராஜே இருவரும்
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளைப் பார்த்து
உச்சநீதிமன்றத்தில் மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
இந்த
அறிக்கைகள் காளையடக்கும் போட்டிகளின்போது காளைகளை வாடிவாசலிலிருந்து
தள்ளிவிடுதல், கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றுதல், அடித்தல் போன்ற
துன்புறுத்துதல். தப்பியோட முயன்ற காளையொன்றின் கால் முறிந்ததையும்,
மிரண்டோடிய காளையொன்று பேருந்தில் மோதி இறந்தததையும் அந்த அறிக்கையில்
பதிவுசெய்தனர்.விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களின் பிரதிநிதி ஒருவர்
அவசியம் ஜல்லிக்கட்டில் பார்வையாளராக இடம்பெறவேண்டு மென்ற நெறிமுறையை
அவர்கள் சரிவரப் பயன்படுத்திக்கொண்டனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்
நடந்த வழக்கில் தமிழக அரசு, விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதாகவும்,
போட்டிகளை மேலும் முறைப்படுத்தலாம்,முழுமையாக தடைவிதிக்கக்கூடாதென
வாதிட்டது
ஆனால் விலங்குகள் நல வாரியம் "போட்டிகளில் மாடுகள்
வதைக்கப்படுகின்றன தேவையின்றி துன்றுத்தப்படுகின்றன. மிருகவதை தடைச்
சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் நடத்துவது குற்றம்" என வாதங்களை
முன்வைத்தது.
விலங்குகள் நல ஆர்வலர்களோ, கடந்த 20 ஆண்டுகளில்
ஜல்லிக்கட்டு போட்டியில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 200க்கும் மேல்,
காயமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் வருவர். காளைகளின் காயமும் மரணமும்
பெரும்பாலும் கணக்கிலேயே வருவதில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும்
ஒருசேர தீங்கு விளைவிக்கும் இப்போட்டியை பாரம்பரியத்தின் பேரால் தொடரத்தான்
வேண்டுமா என கேள்விகளை எழுப்பினர்.
6 வது அடி இன்றைக்கு
இனப்பெருக்கத்துக்குக் கூட காளைகளின் நேரடி தயவு தேவையில்லை.
காளைகளிடமிருந்து விந்து சேகரிக்கப்பட்டு உறைநிலையில் ஊசி
மருந்தாக்கப்பட்டு விற்பனையாகும் நிலையில் ஜல்லிக்கட்டு தொடருமா என்ற
அச்சத்தில் பலர் தாங்கள் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பராமரிக்க
முடியமால் விற்கத் தொடங்கி இறுதியில் அடிமாடுகளைப் போன்று இறைச்சிக்காக
விற்பனைக்கு போக ஆரம்பித்தன.
இறுதி அடி ஜல்லிக்கட்டு மீதான தடையை
நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என
மத்திய அரசு கூறியது. ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்க
உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால்
தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் இடைக்கால தீர்ப்பு எதுவும் வழங்க முடியாது
என உச்சநீதிமன்றம் தெரிவித்து ஆகையால் தமிழகத்தில் உச்சநீதிமன்றம் தடை மீறி
நடத்த முடியாது என்பதால் இளைஞர் நேரடியாக தற்போது போராட்டத்தில்
குதித்துள்ளார்.இந்தி எதிர்ப்பு மாநாடு போல் கட்சி, இனம், ஜாதி, மதம்
வேறுபாடு இல்லாமால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்திற்கு சினிமா,
கிரிக்கெட், இதர துறை பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
Dailyhunt
வாவ் கட்ஜு.. இப்படி ஒரு ஜட்ஜு இல்லாம போயிட்டாரே சுப்ரீம் கோர்ட்டில்!
சென்னை: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜு கிட்டத்தட்ட ஒரு தமிழ்ப் போராளியாகவே மாறி விட்டார்.
தமிழக
அரசியல் தலைவர்களுக்கு இல்லாத துணிச்சலுடன், தைரியத்துடன், தீரத்துடன்
தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்
கட்ஜு. எப்படியெல்லாம் செய்தால் ஜல்லிக்கட்டை மீட்கலாம் என்று சட்ட
ஆலோசனைகளையும் தொடர்ந்து கூறி வருகிறார்.
தமிழகத்து எம்.பிக்கள்
எல்லாம் எங்கே போனார்கள் என்று கோபம் காட்டி வருகிறார். இந்த நிலையில்
முழுமையான தமிழ் உணர்வுடன், தமிழக மக்கள் அமைதியாக நடத்தி வரும் உணர்ச்சிப்
போராட்டம் குறித்து ஒரு போஸ்ட் போட்டு அத்தனை தமிழர்களையும் நெகிழ
வைத்துள்ளார்.
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. இதுதான் கட்ஜு போட்டுள்ள பேஸ்புக் போஸ்ட்.
source: oneindia.com
Dailyhunt
போராட்டங்கள் நடந்தாலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட முடியாது.. ஹைகோர்ட் கைவிரிப்பு
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று, சென்னை ஹைகோர்ட் கூறிவிட்டது.
சுப்ரீம்கோர்ட்
விதித்த ஜல்லிக்கட்டு தடையை மீறும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட
அறிவிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அந்த தடையை நீக்க கோரி
நடைபெற்ற வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி
தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதை காரணம் காட்டி, சென்னை
ஹைகோர்ட்டை தலையிட கோரி வழக்கறிஞர் கே.பாலு இன்று, ஓபன் கோர்ட்டில்
இப்பிரச்சினையை எழுப்பினார்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும்
நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு முன்னிலையில், இதுகுறித்த கோரிக்கையை
வழக்கறிஞர் பாலு முன் வைத்தார்.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ளதால் அதில் தாங்கள் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறிவிட்டனர்.
ஹைகோர்ட்டோ,
தமிழக அரசோ, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இந்த நிலைமையில் எதையும் செய்ய
முடியாது. மெரினா சாலை போராட்டங்கள் நடத்த ஒதுக்கப்பட்ட இடம் கிடையாது.
எனவே இந்த சூழ்நிலையில் ஹைகோர்ட் இதில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.
source: oneindia.com