Wednesday, November 16, 2016

அன்றும் இன்றும்! எஸ்.வி.சேகர்

By மாலதி சந்திரசேகரன்  |   Published on : 16th November 2016 10:36 AM  |
தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான நடிகர், நகைச்சுவைப் படங்களில் கதாநாயகனாக நடித்து கோலோச்சி வரும்  நட்சத்திரம், சிறந்த தயாரிப்பாளர், இயக்குனர், புகைப்படக் கலைஞர், திரைக்கதாசிரியர், நாடகக் குழுவை (நாடகப்ரியா) தலைமை பொறுப்பேற்று வழிநடத்துபவர், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (Central Board of Film Certification), பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினர் என இப்படி பன்முகத்டுடன் சகலகலா வல்லவரான எஸ்.வி.சேகர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரைக் கண்டதுமே ‘நம் குடும்பம்’ தொடர் ஞாபகம் வந்தது. உற்சாகமாக பேச்சைத் துவக்கினோம்.
நம் குடும்பம் தொடரின், நீங்கள் சினிமா கதாநாயகனாக மிளிர வேண்டும் என்கிற எண்ணத்தில், உங்களின் மனைவியாக பாத்திரமேற்று நடிப்பவர் ‘டயட் கண்ட்ரோல்’ டயட் கண்ட்ரோல் என்று கூறிக் கொண்டு, தண்ணீரைக் குடிக்கச் சொல்லில் உங்கள் வயிற்றை நிரப்பி அனுப்புவாரே! அப்படி நிஜ வாழ்க்கையில் டயட் சிஸ்டம் உண்டா?’ 
நான் பொதுவாகவே எதையும் அதிகமாக சாப்பிட மாட்டேன். போதாத குறைக்கு பதினைந்து வருடங்களாக சர்க்கரை வியாதி வேறு சேர்ந்திருக்கிறது. எனவே உணவைச் சுருக்கமாக முடித்துக் கொள்வேன்.  நான் காபி பிரியன். ஒரு தம்ளர்
காபியை சர்க்கரை சேர்க்காமல், கால் கால் க்ளாஸ்களாக நான்கு தடவைகள் குடிப்பேன். என்னுடைய அன்றாட அட்டவணையைக் கூறுகிறேன். அதற்கு முன்பாக ஒன்றைக் கூற வேண்டும். நான் சுத்த சைவம். காரம் கூட சாப்பிட மாட்டேன். எப்போதாவது ஊறுகாய் சாப்பிடுவதாக இருந்தால் கூட, அதை நன்றாக கழுவி காரத்தை எடுத்து விட்டுத்தான் சாப்பிடுவேன்.
முதலில் காலை எழுந்தவுடன் ஒரு பெரிய தம்பளரில் வெந்நீர் குடிப்பேன். பின் குளித்து முடித்துவிட்டு, ஸ்வாமிக்கு பூ பறித்துக் கொண்டு வந்து, வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு காபி குடிப்பேன். அந்த காபி, ஹோட்டல் மினி காபியிலும் பாதிதான் இருக்கும். பிறகு சிற்றுண்டி வேளைக்கு இரண்டு தோசை சாப்பிடுவேன். பிறகு தேவைப்பட்டால் பதினொரு மணிக்கு காபி அல்லது வெஜிடபிள் சூப், சில சமயங்களில் மோர் குடிப்பேன். மதிய சாப்பாட்டுக்கு அரிசி உணவைத் தவிர்த்து விடுவேன். காய்கறி வகைகள் எடுத்துக் கொள்வேன். அப்போது மோர் குடிப்பேன். சாயந்திரம் ஸ்நாக்ஸ் டயத்துக்கு தாளித்த அரிசி பொரி ஒரு கப் உண்பேன். இரவு ஆகாரத்துக்கு இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு தோசை சாப்பிடுவேன். இரவு சுமார் பத்தரை மணிக்கு ஒரு கப் பால் குடித்துவிட்டு உறங்கப் போவேன். ஜுரம் வந்தால் மட்டும் தான் இட்லி சாப்பிடுவேன். எங்கள் வீட்டில் ‘டயட்’ என்றால் அது பால் தான். டோன்டு மில்க்தான் உபயோகப்படுத்துகிறோம். நான் வெள்ளைப் பண்டங்களான சர்க்கரை, அரிசி, மைதா மூன்றையுமே உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
சில சமயங்களில் விசேஷ நாட்களில் யாராவது இனிப்பு பண்டத்தினைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு நேராக வாஷ்பேசின் அருகில் சென்று விடுவேன். கொடுத்தவரின் மனத்தை நோகடிக்க விரும்பாமல், வாயில் போட்டுக் கொண்டு நன்றாக சுவைத்துவிட்டு பிறகு துப்பிவிடுவேன். இரண்டு பேரின் நோக்கமும் நிறைவேறிவிடுகிறது இல்லையா? 
எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி?
சந்தோஷம் என்பது வெளியில் இல்லை. தேடிப் போக வேண்டிய அவசியம் கிடையாது. நமக்குள்ளே இருக்கும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மனம் லேசாக இருந்தால், முகமும் மலர்ச்சியாக அழகாகத் தென்படும். இது என் தந்தை எனக்குக் கற்றுத்தந்த பாடம். 
மணல் கயிறு இரண்டாம் பாகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...
மணல் கயிறு சினிமா 1982-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதன் இரண்டாம் பாகம் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. முப்பத்து நான்கு வருடங்கள் கழித்து வெளியாகும் இப்படத்தில், முதல் பாகத்தில் நடித்த விசு, குரியகோஸ் ரங்கா, நான் மூவரும் அதே கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறோம். முதல் பாகத்தில் கிட்டுமணியாக நடித்த நான், நாரதர் நாயுடு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த விசுவிடம், நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் எப்படிப்பட்ட பெண் அமைய வேண்டும் என்பதற்கு எட்டு கண்டிஷன்கள் போடுவேன். இரண்டாம் பாகத்தில் என் மகள் (மணப்பெண்) எட்டு கண்டிஷன்களைப் போடுகிறாள். இது அடுத்த தலைமுறை பற்றிய கதையாக வருகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் (உலக திரைப்பட வரலாற்றில் என்று கூறலாமா என்று தெரியாது) முப்பத்து நான்கு வருடங்கள் கழித்து, ஒரே படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர்களே மீண்டும் இதில் நடிக்கிறார்கள் என்பது இதுதான் முதல் தடவை. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்க, மதன் குமார் இயக்கத்தில், தரன் இசையில், என் மகன் அஷ்வின் சேகர் கதாநாயகனாகவும், பூர்ணா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இதன் திரைக்கதையை நான் எழுதியிருக்கிறேன்.
தற்போது மொத்த நாடே நம் பிரதமரைப் பற்றித் தான் பேசுகிறது. நீங்கள் நம் பாரதப் பிரதமரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்?
பிரதமர் மோடிஜியை எனக்கு 2010-லிருந்தே பழக்கம். சோ அவர்கள் தான் எனக்கு மோடிஜியை அறிமுகப்படுத்தினார். சோ அவர்கள் என் மானசிக குரு. அடுத்த முறை நான் மோடிஜியை சந்தித்த போது, அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? நம்ம ராஜகுரு எப்படி இருக்கிறார்? என்றுதான். அடுத்ததாக பழக்கம் ஆன ஒரு மாதம் கழித்து ஒரு நாள், நான் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக ஃபோன் செய்தேன். அப்போது அவர் குஜராத்தில் இருந்தார். போனை அவருடைய சீஃப் செகரட்டரி தான் எடுத்தார். என்னைப் பற்றிய தகவலைத் தெரிவித்ததும், என் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டு, மோடிஜி மீட்டிங்கில் இருப்பதால் அவரிடம் தெரிவிப்பதாகக் கூறினார். நம்பராவது வாங்கிக் கொண்டாரே என்று நான் திருப்தி பட்டுக் கொண்டேன். ஆனால் மாலை சுமார் ஏழு மணி அளவில் எனக்கு ஒரு ஃபோன் வந்தது. எடுத்தவுடன் ‘சேகர்ஜி, ஐம் மோடி ஹியர்’ என்றார். அதையெல்லாம் விட அவர் கூறியதில் என்ன ஆச்சரியமான விஷயம் என்றால், ‘நீங்கள் ஃபோன் செய்தீர்கள் பதிலுக்கு நான் செய்கிறேன். இது ஒரு அடிப்படை மரியாதை’ என்றவுடன் நான் ஆடிப் போய் விட்டேன். 
பிறகு ஒருமுறை குஜராத்தில் ஒரு கல்யாணத்திற்கு குடும்பத்துடன் செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. அப்போது நான் மோடிஜிக்கு போன் செய்து, நாங்கள் மூன்று நாட்கள் குஜராத்தில் இருப்போம். ஏதாவது ஒருநாள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள் என்று கேட்டேன். அவர், சரி நாளை மதியம் மூன்று மணிக்கு வாருங்கள் என்று கூறினார். அடுத்த நாள் காலை எனக்கு பத்து மணிக்கு ஃப்ளைட். ஒரு மணிக்கு குஜராத் போய்விடலாம். மூன்று மணிக்கு அவரை சந்தித்து விடலாம் என்று இருந்தேன். ஆனால் மறுநாள், ஃப்ளைட் மூன்று மணிக்குத்தான் கிளம்புவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் பனிரெண்டு மணிக்கு மேல் தான் அறிவித்தார்கள். நான், உடனே அவருக்கு SMS அனுப்பினேன். அதில தமிழ்நாட்டில் சீதோஷ்ண நிலை சரியில்லாததால் ஃப்ளைட் இங்கிருந்து கிளம்புவதில் தாமதமாகிறது. நீங்கள் கொடுத்த நேரத்தில் உங்களை சந்திக்க முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது. பெரிய மனது செய்து வேறு அப்பாயிண்ட்மெண்ட் தர முடியுமா? என்று கேட்டிருந்தேன். அடுத்த நாள் வாருங்கள் என்று எழுதி நேரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வளவு பெரிய மனிதர் பாருங்கள். இன்னொருத்தராக இருந்தால், ‘நான் அவகாசம் கொடுத்தும் உன்னால் வர முடியவில்லையா? என்று கோபித்துக் கொண்டு பதில் கூட சொல்ல மாட்டார்கள். அவர் பிறரை வணங்கும் போது கூட உடலை வளைத்து, சிரம் தாழ்த்தி தான் வணங்குவார். அவ்வளவு பண்பானவர், பணிவானவர், அன்புள்ளம் கொண்டவர். நாட்டு நலனில் அக்கறை கொண்டவர். அவரை பிரதமராக அடைந்ததில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.’ என்று முடித்தார்.
கலைவாணர் விருது, கலைமாமணி, வசூல் சக்கரவர்த்தி போன்ற பல விருதுகளை வாங்கியிருக்கும் எஸ்.வி.சேகரிடம் மணல் கயிறு 2 வெற்றி பெற வாழ்த்திவிட்டு விடை பெற்றோம்.
- மாலதி சந்திரசேகரன்

எல்லா செலவுகளுக்கும் ரூ.4,500 போதுமா? விரலில் மை வைப்பதில் எழும் சந்தேகங்களும், கேள்விகளும்!

By DIN  |   Published on : 16th November 2016 10:47 AM  
சென்னை: வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி வேறு நோட்டுகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.
* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்?
* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா? அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்?
* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா?
* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்?
* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது?
*ஒரு முறை விரலில் மை வைக்கப்பட்டவர் மறுமுறை எப்போது வந்து வங்கியில் பணம் எடுக்கலாம் என்பதை நிர்ணயித்துள்ளார்களா?
* குடும்பத்தில் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் கையில் இருக்கும் பணத்தை வங்கிக்குச் சென்று மாற்றி வருவார் எனில், அவரது விரலில் மை வைக்கும் பட்சத்தில், குடும்பத்தில் உள்ள அனைவரும், கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து வங்கிக்குச் சென்று வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுமா?
*கர்ப்பிணியின் மருத்துவ செலவுக்காக கையில் வைத்திருக்கும் பணத்தை அவரது கணவர் மாற்றி வருவதற்கு இந்த மையால் தடை ஏற்படுமாயின், கர்ப்பிணியே நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டிய பரிதாப நிலை உண்டாகுமா?
* இரண்டு வயதான தம்பதிகள் இருக்கும் வீடுகளில் ஒருவர் முடியாமல் இருந்தால், மற்றொருவர் மட்டுமே வங்கிக்குச் சென்று பணத்தை மாற்றி வருவார். அப்படி இருக்கும்போது, அவருக்கு மை வைத்தால், முடியாமல் இருக்கும் மற்றொரு முதியவரை கட்டிலோடு வங்கிக்கு தூக்கிச் செல்ல வேண்டுமா?
* வாடகை, மளிகை, பள்ளிக் கட்டணம் என அனைத்தையும், இந்த வங்கிகள் ஒரே ஒரு முறை கொடுக்கும் 4,500 ரூபாயில் செலுத்தி விட முடியுமா? அல்லது வாடகை, ரயில், பேருந்து கட்டணம், மளிகை என எல்லா வற்றையும் மத்திய அரசு இந்த மாதத்துக்கு மட்டும் தள்ளுபடி செய்து விடுமா?
இந்த கேள்விகளுக்கு மை வைக்கும் முடிவை அறிவித்தவர்களே பதிலையும் சொல்ல வேண்டும்.

பண அட்டை மோசடிகள்

By எஸ். ராமன்  |   Published on : 16th November 2016 12:39 AM 
கடந்த அக்டோபர் மூன்றாவது வாரம் வெளியான திடுக்கிடும் பத்திரிகை செய்தி, வங்கி வாடிக்கையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தது எனலாம். அந்த செய்தியை கேட்டு, பல வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்குகளை சரிபார்க்க வங்கி கிளைகளுக்கு படை எடுத்தனர்.
32 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். அட்டைகளின் (Debit cards)   ரகசிய குறியீட்டு தகவல்கள் திருடப்பட்டிருப்பதற்கான(hacking of confidential data) சாத்திய கூறுகள் உள்ளன என்ற பீதி அளிக்கக் கூடிய செய்திதான் அது.
அம்மாதிரி திருட்டு மூலம், 19 வங்கிகளை சேர்ந்த 641 வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து, ரூ.1.3 கோடி அளவு நிதி திருட்டு நடந்திருக்கிறது என்று பின்னூட்டு செய்திகள் சம்பவத்தை ஊர்ஜிதம் செய்தன. இந்திய வங்கிதுறையின் அட்டை மோசடி சரித்திரத்தில் இது ஒரு மிகப்பெரிய அளவிலான நிகழ்வாக கருத்தப்படுகிறது.
அட்டையின் எண், துவக்க மற்றும் காலாவதி தேதி, ரகசிய குறியீட்டு எண் ஆகிய திருடப்பட்ட தகவல்களை பயன்படுத்தி, நகல் அட்டைகள்(Cloned cards)   உருவாக்கப்பட்டு, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில், நிலுவையில் இருக்கும் பணத்தை திருட அவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் தங்கள் வங்கி கணக்கை தினமும் ஆராய்ந்து, விழிப்போடு செயல்பட்ட சிலரின் புகாரால் இந்திய வங்கிகள் விழித்துக்கொண்டு, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சந்தேகத்துக்குள்ளான பல லட்சம் அட்டைகள் வங்கிகளால் உடனடியாக முடக்கப்பட்டன. ஏ.டி.எம். ரகசிய எண்களை உடனடியாக மாற்றும்படி வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். முடக்கப்பட்ட அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகள், எந்தவித கட்டணமும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
ஸ்டேட் பாங்க், பாங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பாங்க், ஆந்திரா பாங்க் உள்பட பல அரசு வங்கிகள், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ், யெஸ் பாங்க் போன்ற தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருடப்பட்ட தொலைபேசி மற்றும் இ-மெயில் தொடர்பு தகவல்களை பயன்படுத்தி, வங்கிகள் கேட்பதுபோல், பணத்தை எடுப்பதற்கு தேவைப்படும் மேலும் சில நுண்ணிய விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்டு, மோசடிக் கும்பல் வேகமாக செயல்பட்டிருக்கிறது. வங்கிகள் என்று ஏமாந்து, மோசடிக்காரர்களிடம் தங்களை பற்றிய முழு விவரங்களை அளித்தவர்கள், இந்த சம்பவத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
திருட்டு, இயற்கை சீற்றங்கள் ஆகிய எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து தாங்கள் சேமித்த பணத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் வங்கி கணக்குகளை நாடியவர்களுக்கு, இந்நிகழ்வு கேள்வி குறியாகிவிட்டது.
இந்திய வங்கிகளின் ஏ.டி.எம். இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் தளத்தின் (Hitachi Payment Services Platform)  பாதுகாப்பு அரண்களை  (Anti virus system),  சில தீய மென்பொருள்கள்(Malware)   மூலம் உடைத்து, ஊடுருவுவதில், மோசடிக்காரர்கள் இம்முறை வெற்றி கண்டிருக்கின்றனர் என்பதை இதுவரை வெளியான தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.
அரண்மனையை (ATM ser vers)  சுற்றி எதிரிகள் நுழைய முடியாத வகையில், பெரும் முதலைகள் (Anti virus program) அடங்கிய அகழிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், முதலைகளை விட கொடிய விஷ ஜந்துக்களை (Malware)  பயன்படுத்தி, அவைகளை செயல் இழக்க செய்து, அரண்மனைக்குள் எதிரிகள் நுழைவது போன்ற நிகழ்வுதான் இது.
ஏற்கெனவே நிலுவைத் தொகை இருக்கக்கூடிய வங்கி கணக்குகள் சார்ந்த அட்டைகள் மட்டும்தான் (Debit cards)  இந்த மோசடி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. கடன் சார்ந்த அட்டைகளுக்கு (Credit cards) எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் தகவல் அறிக்கையின்படி, ஸ்ஹிம்மர் ஸ்டிக்கர் போன்ற மென்பொருள் வைரஸ், இந்த நிகழ்வின் வில்லனாக, மோசடிக் கும்பலால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலின் பின்புலங்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் ஆகியவைகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, இந்திய பணப்பட்டுவாடா வாரியத்தால் (Payment council of India)  நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய வங்கி வாடிக்கையாளர்களிடையே இரு வகையான அட்டைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. பணப்பரிமாற்ற நிகழ்வுகளில், மின்காந்த தகடுகள் (Magnetic stripes)  பொருத்தப்பட்ட அட்டைகளில் அடங்கியிருக்கும் தகவல் பரிமாற்றத்தின்போது, அத்தகவல்களை எளிதாக கடத்திவிட முடியும்.
நுண் தகடுகள் (Micro chips) பதிக்கப்பட்ட மற்றொரு வகையான அட்டைகளில், தகவல்கள் சங்கேத முறையில் பரிமாறப்படுவதால், இம்மாதிரியான அட்டைகளிலிருந்து தகவல் திருட்டு அவ்வளவு எளிதல்ல.EMV (Europay, Master, Visa)  என்று சுருக்கமாக அழைக்கப்படும் அட்டைகளில் இத்தகைய பாதுகாப்பு வசதி அடங்கியிருக்கிறது.
வங்கி அட்டை தகவல் திருட்டு குற்றங்கள், நம் நாட்டுக்கு மட்டுமான தனிப்பட்ட பிரச்னை இல்லை. சமீபத்தில், உலகின் பல பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஒரு மாதிரி சர்வேயின்படி (Sample survey)  டெபிட், கிரெடிட் மற்றும் டிராவல் அட்டை வைத்திருப்பவர்களில் 30 சதவீதத்தினர், கடந்த ஐந்தாண்டுகளில் ஏதாவது ஒரு தருணத்தில் அட்டையின் தகவல் திருட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் 17 சதவீதத்தினர், டெபிட் அட்டை தகவல் திருட்டுக்கு பலியானவர்கள் ஆவர்.
மூன்றாவது நபரால் விளையும் அட்டையின் தகவல் திருட்டால், நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகைகள் வழங்கும் செலவினங்களை தவிர, தங்கள் வாடிக்கையாளர்களையும் வேகமாக இழக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட கணக்குகளை மேற்கொண்டு தொடர வாடிக்கையாளர்கள் உணர்வுபூர்வமாக பயப்படுவதே அதற்கு முக்கிய காரணமாகும். இந்த பய உணர்வுக்கு Back-of-wallet syndrome என்று பெயர். ஒரு முறை பாதிக்கப்பட்டவர்கள், இம்மாதிரி நவீன சாதனங்களின் மீது அவர்கள் இழந்த நம்பிக்கையை மீட்க நீண்ட காலம் பிடிக்கும்.
2015-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 2016 நிறுவனங்களில் இம்மாதிரியான தகவல் திருட்டுகள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்ஸிகோ (56%), பிரேஸில் (49%), அமெரிக்கா (47%) ஆகியவை முன்னணியில் இருக்கின்றன.
வாடிக்கையாளர்களின் பணத்தை நிர்வகிக்கும் நிதி நிறுவனங்கள் மட்டும் இம்மாதிரி மோசடி நிகழ்வுகளுக்கு முழுக் காரணம் அல்ல. வாடிக்கையாளர்களின் தவறான பழக்க வழக்கங்களும் மோசடிகளுக்கு வித்திடுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2014-இல், அமெரிக்க பல்பொருள் அங்காடியான டார்கெட்டில் (Target) நிகழ்ந்த தகவல் திருட்டு பெரிய அளவில் பேசப்பட்டது. பில் தொகையை, தங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்திய 40 மில்லியன் வாடிக்கையாளர்களின் அட்டை தகவல்கள், மோசடிக்காரர்களால் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களிலிருந்து திருடப்பட்டன.
வாடிக்கையாளர்கள் அட்டையை பயன்படுத்தும்போதே மோசடிக்காரர்கள் அட்டை தேய்க்கப்படும் இயந்திரங்களில் முன்கூட்டியே பதித்து உலவ விட்டிருந்த தீய மென்பொருள்கள், வாடிக்கையாளர்களின் அட்டை தகவல்களை ரஷியாவில் இயங்கிக் கொண்டிருந்த அவர்களின் கம்ப்யூட்டருக்கு மாற்றிக்கொண்டிருந்தன.
இம்மாதிரி மோசடிகளை தடுப்பதற்காக டார்கெட் நிறுவனம், நிகழ்வுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தீய மென்பொருள்களை கண்டறிந்து தடுக்கும் மென்பொருளை தங்கள் கம்ப்யூட்டர்களில் பதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தின் காரணங்களுக்கான ஆய்வுகளின்போது, டார்கெட் நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் விசாரிக்கப்பட்டனர்.
வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஒப்படைத்த பணத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வங்கிகளை சார்ந்ததாகும். அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செயல் முறைகளில் போதிய அரண்களை அமைத்து, அவைகளின் செயல்பாடுகளை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்துவதில் வங்கிகள் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
தற்போது பல பண பரிவர்த்தனை செயல்பாடுகள், வங்கிகளால் வெளி நிறுவனங்களுக்கு "அவுட் சோர்ஸ்' செய்யப்படுகின்றன. அம்மாதிரி செயல்பாடுகளின் பாதுகாப்பு பற்றிய முழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறைபாடுகள் களையப்பட வேண்டும்.
அட்டை மோசடிகளை தடுக்கும் விஷயத்தில், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவும் பின் நம்பர்களை வங்கிகளின் வழிமுறைகளின்படி அடிக்கடி மாற்றி அவைகளுக்கு உரிய ரகசியத்தை பாதுகாக்க வேண்டும்.
பண பரிவர்த்தனைகளை தெரியப்படுத்தும் வங்கி குறுந்தகவல் வசதியை கேட்டுப் பெற்று, பெறப்படும் குறுஞ்செய்திகளை கவனமாக ஆராய்ந்து, தவறான பரிவர்த்தனைகளை வங்கிக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். பணம் எடுக்கும்போது அறிமுகமாகாத அந்நியர்களின் உதவி பெறுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
சமீபத்திய நிகழ்வுகளின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மோசடிகளை தடுக்கும் சாதனங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியிருக்கும் செய்தி வரவேற்கத்தக்கதாகும்.
இம்மாதிரி சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வங்கிகளின் கூட்டமைப்பும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிந்தித்து செயல்படுத்தினால்தான் நவீன பண பட்டுவாடா சாதனங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை கூடும்.
டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனைகள், கருப்பு பண புழக்கத்தை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வல்லமை படைத்தவை. அதற்குரிய அடித்தளம், அம்மாதிரி பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடையே பரப்புவதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

ராஜதந்திர நெருக்கம்!

By ஆசிரியர்  |   Published on : 16th November 2016 12:40 AM  |   
நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, அரசுமுறைப் பயணமாகச் சென்ற முதல் நாடு ஜப்பான்தான். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு என்பது நெருக்கமானதும், நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டதுமான ஒன்று. பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு உதவ முன்வந்த நாடும் ஜப்பான்தான். அரசு நிறுவனமான எச்.எம்.டி. கைக்கடிகாரம் தயாரிக்க முற்பட்டபோதும் சரி, மாருதி கார்கள் தயாரிக்க முடிவெடுத்தபோதும் சரி, நமக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கி இந்தியாவின் தொடக்க காலத் தொழில் வளர்ச்சியில் கணிசமாக பங்காற்றி இருக்கும் தேசங்களில் ஜப்பானும் ஒன்று. இந்தப் பின்னணியில்தான், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தை நாம் பார்க்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தில், ஜப்பானுடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தாலும்கூட, அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது என்னவோ, இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம்தான். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்த முறையும் கையெழுத்தாகாது என்று அனைவரும் கருதி இருந்த நிலையில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் காட்டிய முனைப்பால், ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்த நாட்டுடனும் ஜப்பான் இதுவரை அணுசக்தி உடன்பாடு செய்துகொண்டதில்லை. இந்தப் பிரச்னைதான் இத்தனை ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கு இடையேயும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்ததற்குக் காரணம். அந்த முட்டுக்கட்டை சாதுர்யமாக இப்போது அகற்றப்பட்டு விட்டிருக்கிறது.
இந்த உடன்படிக்கை கையெழுத்தாகி இருப்பதாலேயே ஜப்பானின் துணையோடு இந்தியாவில் நிறைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை. அதற்கு முதலீடு, அரசியல் ரீதியிலான முடிவுகள், மக்கள் எதிர்ப்பு என்று பல பிரச்னைகளை எதிர்கொண்டாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உடன்படிக்கையில் ஒரு முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா எந்தக் காரணத்திற்காகவும் அணுஆயுத சோதனை நடத்த முற்பட்டால், இந்த அணுசக்தி உடன்பாடு உடனடியாக ரத்தாகிவிடும் என்பதுதான் அது.
பல கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இருந்தாலும்கூட, இந்த உடன்படிக்கையால் ஜப்பானிடமிருந்து தொழில்நுட்பக் கூட்டுறவு எல்லா துறைகளிலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, உலகில் நிறுவப்படும் எந்தவொரு அணுமின் உலையாக இருந்தாலும் அதில் முக்கியமான பாகங்களும், சில அடிப்படைத் தொழில்நுட்பமும் ஜப்பானியர்களுடையதுதான். அதனால், எந்தவொரு நாட்டுடன் அணுமின் உற்பத்திக்கான முயற்சியில் நாம் இறங்கினாலும் இந்த ஒப்பந்தம் தேவைப்படுகிறது. அது அமெரிக்காவோ, பிரான்úஸா, ஏனைய நாடுகளோ, அவர்களிடமிருந்து அணுமின் உலைகளை வாங்குவதற்கு ஜப்பானின் சம்மதம் தேவைப்படுகிறது.
அடுத்தபடியாக, நாம் பாரீஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். அதன்படி, கரியமில வாயுவைக் கட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டும். சூரிய மின்சக்தியும், காற்றாலை மின்சாரமும் மட்டுமே நமது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியாது. அதற்கு, ஆபத்துகள் நிறைந்த அணுமின்சக்தியைத்தான் நாம் நம்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அணுமின்சக்தி உடன்படிக்கை மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையே இன்னும் பல முக்கியமான உடன்படிக்கைகளும் கையெழுத்தாகி இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும், முதலீடும் கணிசமாக அதிகரிக்க இந்த அரசுமுறைப் பயணம் வழிகோலி இருக்கிறது. ஏனைய உலக நாடுகள் அனைத்தையும்விடக் குறுகிய காலத்தில், மிக அதிகமான வர்த்தக உதவி ஜப்பானுடன் மேம்பட்டிருக்கிறது. ஜப்பானின் உதவியும் முதலீடும் சேர்ந்து ஆண்டொன்றுக்கு 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33,750 கோடி) எனும்போது, இது சீனா போன்ற நாடுகளைவிட மிக அதிகம்.
ஏனைய நாடுகளுடனான தொடர்பைவிட, ஜப்பானுடனான நமது தொடர்பு சற்று வித்தியாசமானது, ஆக்கபூர்வமானது. தொழிற்பேட்டைகளையும் "கன்டெய்னர்' முனையங்களையும் இந்தியாவின் பல்வேறு பாகங்களில் உருவாக்குவதில் ஜப்பானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதன்மூலம் இந்தியாவுக்கு பலமான அடித்தளத்தையும், ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கும் உற்பத்திக்கு வழிகோலும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதையும் ஜப்பான் உறுதி செய்கிறது. பொலிவுறு நகரங்கள் நிர்மாணிப்பது, அதிவேக ரயில்களை இயக்குவது உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் நாடும் ஜப்பான்தான்.
மோடி - அபே கூட்டு அறிக்கையில் தென்சீனக் கடல் பிரச்னை குறித்துக் கூறியிருப்பது சீனாவைக் கோபப்படுத்தக்கூடும். ஆனால், இந்தியா அணுசக்தி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சேர்வதை எதிர்ப்பதிலும், பயங்கரவாதிகள் ஹபீஸ் சையது, மசூத் அஸார் ஆகியோருக்கு எதிரான தடை குறித்தும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுக்கும்போது, இந்தியாவும் முக்கியமான பிரச்னைகளில் எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட இருக்கும் சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு நெருங்கிய நண்பர்கள் தேவைப்படுகிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான், பிரதமர் மோடியின் ஜப்பான் விஜயம் அணுகப்பட வேண்டும்!

"ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதால் ஊழலை ஒழித்துவிட முடியாது'

By DIN  |   Published on : 16th November 2016 12:28 AM  |   
புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதால், ஊழலுக்கு முடிவு கட்டிவிட முடியாது என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் கய் சோர்மன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறும் இந்திய அரசின் முடிவானது, புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கை ஆகும். ஆனால் இந்நடவடிக்கையால் ஊழலுக்கு முடிவு கட்டி விட முடியாது.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கையும், புத்திசாலித்தனமானதுதான். இருந்தபோதிலும், இந்நடவடிக்கையானது வர்த்தக செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
அதிக அளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட பொருளாதாரத்தில் ஊழல் எப்போதும் மிகுந்து இருக்கும். ஊழலை கட்டுப்படுத்துவதற்கு விதிகளை தளர்த்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும் என்றார் கய் சோர்மன்.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரத்துறை முன்னாள் முதன்மை ஆலோசகரும், பிரபல பொருளாதார நிபுணருமான இலா. பட்நாயக் கூறியபோது, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி திடீரென செல்லாது என்று அறிவித்திருப்பதற்கு பல்வேறு நோக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போரை வெகுவாக பாதித்துள்ளது. இந்த நிலவரத்தை எப்படி கையாள்வது? இதற்கு தீர்வு காண்பதற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க போகிறோம்? என்ற திகைப்பில் ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகளவு பணத்தை வைத்திருப்போர் உள்ளனர்.
அதேபோல் புதிதாக வெளியிடப்படும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை இனிமேல் ஊழலுக்கோ அல்லது பதுக்கி வைக்கவோ பயன்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், இதுபோன்று மீண்டும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கலாம் என்ற அச்சத்தில், அமெரிக்க டாலர்கள், தங்கம் அல்லது வைரம் ஆகியவற்றை சட்டவிரோத செயலுக்கு அதிகளவுக்கு பயன்படுத்தப்படலாம் என்றார் பட்நாயக்.

Tuesday, November 15, 2016

பணம் எடுப்போர் விரலில் 'மை'- ரூபாய் நோட்டுகளை மாற்ற மத்திய அரசு புதிய கட்டுப்பாடு


ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், பணம் எடுப்பவர்கள் கை விரலில் எளிதில் அழிக்கமுடியாத மை வைக்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

கைவிரலில் அடையாள மை வைக்கும் முறை இன்றுமுதல் பெருநகரங்களில் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், ரொக்க கையிருப்பு பணம் போதுமான அளவு இருப்பதால் மக்கள் நாட்டில் பணப் புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப் பட்டது.

இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. காசோலை மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

மக்களின் சிரமம் கருதி சில சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில கெடுபிடிகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி:

1. பழைய ரூ.1000, 500 மாற்றுவோரின் கை விரலில் அடையாள மை வைக்கப்படும்

2. இதன் மூலம் ஒரே நபர் மீண்டும் மீண்டும் வரிசையில் நிற்பதாலேயே கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க 'மை' நடவடிக்கை

3. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஆட்களை அனுப்பி பணத்தை மாற்றுவது தடுக்கப்படும்.

4. கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

5. ஜன்தன் கணக்குகளில் செலுத்தப்படும் பணத்தை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நியாயமான முறையில் அந்த கணக்குகளில் பணம் செலுத்துபவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.

6. கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் தங்களது உண்டியலில் பெறப்படும் ரூ.100, 50, 20, 10 சில்லறை பணத்தை உடனடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சில்லறை புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.

7. கிளை தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த இரண்டு பேரில், நீங்கள் உண்டா?


உலக நீரிழிவு நோய் நாள்: நவ. 14

பரபரப்பான பணி அவருக்கு. எப்போதும் அலுவலகம், களப்பணி என்று 24 மணி நேரமும் டென்ஷன்தான். இத்தனைக்கும் அவர் வேலை பார்த்தது மருத்துவத் துறை. நீரிழிவு நோய் இருப்பது அவருக்குத் தெரியும், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?, சிகிச்சை செய்துகொள்ளாவிட்டால் அது என்ன பாடுபடுத்தும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த நீரிழிவு நோய்க்கு முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார்.

‘அடப் போகும்போது என்னத்த அள்ளிட்டுப் போகப் போறோம், பாக்காலாம்ங்க. வாயைக் கட்டுப்படுத்திக்கிட்டு எப்படிங்க இருக்க முடியும்; அப்படி ஒரு வாழ்க்கைத் தேவையா’ என்று சொல்லி எந்த உணவுக் கட்டுப்பாடுமில்லை; பரபரப்பு, டென்ஷனில் இருந்து அவர் தன்னை மாற்றிக்கொள்ளவும் இல்லை. விளைவு, ஒரு நாள் நள்ளிரவில் கடுமையான மாரடைப்பு. மனைவியையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார்.

நீரிழிவு நோய் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது என்று அந்நோய் இருப்ப வர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடம்பில் வேறு ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றிருந்தபோது, தற்செயலாகக் கண்டுபிடித்ததாகத்தான் பலரும் சொல்வார்கள். அதற்குள் உடலில் நீரிழிவின் பாதிப்புகள் ஏற்கெனவே உடலில் தொடங்கியிருக்கும்.

குழந்தைகளும் விதிவிலக்கல்ல

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கணிசமான மாணவர்களுக்கு - அதிலும் வளரிளம் மாணவிகளுக்கு ‘டைப் 2’ நீரிழிவு நோய் வருவதற்கான தொடக்கநிலை சாத்தியக்கூறு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றமும், தவறான உணவுப் பழக்கமும்தான்.

இந்தக் காலக் குழந்தைகள் உணவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், நொறுக்குத்தீனியை விரும்பி சாப்பிடுகிறார்கள். வாய்க்குள் நுழையாத பெயர் கொண்ட நொறுக்குத்தீனிகளின் பட்டியல் நீளமானது. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இவற்றைத் தின்கிறார்கள். போதாததற்கு சக்கை உணவையும் (Junk food) இஷ்டம்போல் வயிற்றுக்குள் தள்ளுகிறார்கள். குளிர்பானங்களையும் விட்டுவைப்பவதில்லை. சில உணவகங்களில் ‘காம்போ ஆபர்’ என்ற பெயரில் சக்கை உணவுடன் விலை மலிவாகவோ அல்லது இலவசமாகவோ தரப்படுகிறது.

விளையாட்டு அவசியம்

குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளியிலிருந்து வந்தவுடன் டியூஷன். பின்னர் ஹோம் ஒர்க், டியூஷன் ஹோம் ஒர்க் முடிக்கவே இரவு வெகு நேரமாகிவிடுகிறது. பிறகு எப்போது விளையாடுவது? பள்ளியிலும் விளையாட்டு பீரியடின்போது போர்ஷன் முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக, படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 80 விழுக்காடு மாணவர்கள் வாரத்தில் ஒருநாள்கூட வீட்டுக்கு வெளியில் விளையாடுவதே இல்லையாம். இவையெல்லாமே குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும், பின்னாளில் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

நேரம் கிடைக்கும்போது குழந்தைகளை ஓடியாடி விளையாடச் சொல்லவேண்டும். வீட்டிலும் சின்னச்சின்ன வேலைகளைச் செய்ய வைக்கவேண்டும். உடல் நலமாக இருப்பதற்கு அளவான, சரிவிகித உணவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதைக் குழந்தை களுக்குப் புரியவைக்க வேண்டும். இதன்மூலம் நீரிழிவு இளவயதில் எட்டிப்பார்ப்பதைத் தடுக்க முடியும்.

தேவை துரித நடவடிக்கை

நீரிழிவு நோயைக் கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி 40 வயதை நெருங்கும்போது நீரிழிவுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதுதான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது தொடர வேண்டும். ஒருவேளை நீரிழிவு இருந்தால், தொடக்க நிலையிலேயே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். நீரிழிவுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்சிகிச்சை எடுத்துக்கொள்வது, நீரிழிவின் பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க உதவும். அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இதற்கான மருந்து மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைத் துரிதப்படுத்தா விட்டால் 2040-ல் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 64 கோடியாகிவிடும் என்று ‘உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பு’ தெரிவிக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், தகுந்த உணவு பழக்கம் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கவோ, தள்ளிப்போடவோ அல்லது அதன் பக்கவிளைவுகளிலிருந்து தடுத்துக்கொள்ளவோ முடியும்.

நீரிழிவு நோய்க்கு மருத்துவம் செய்துகொள்ளாததால் ஏற்படும் பக்கவிளைவுகளைச் சமாளிக்க மிகுந்த கஷ்டப்பட வேண்டியதை நினைக்கும்போது, அதைக் கட்டுப்படுத்தப் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய் நமக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் நோய் உறுதிப்படுத்தப்படாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு நீரிழிவு நோயாளிகளில், நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும்.

கட்டுரையாளர், மதுரை தேசிய கண் மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்த தொழிலதிபர்

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தன்னிடம் இருந்த ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார். இந்தத் தொகையில் ரூ.5,400 கோடி வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.

நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார். இந்தத் தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.

பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட், சூட்டை ஏற்கெனவே லால்ஜிபாய் ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர். மேலும் அரசின் பெண் குழந்தை களின் கல்விக்காக ரூ.200 கோடியை அவர் நன்கொடையாக அளித்துள்ளார். தன்னிடம் பணிபுரி யும் ஊழியர்களுக்கு தீபாவளி தோறும் கார், வீடுகளையும் பரிசளித்து வருகிறார்.

அவர் தாமாக முன்வந்து ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பருவத்தே பணம் செய்: நகைச் சீட்டு சேரலாமா?


சேமிப்பு என்பது நம்மில் பலருக்கு வாழ்வாதாரம். அதனால்தான் அதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். நம் சராசரி வயது அறுபத்தைந்து என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் இருபது ஆண்டுகள் படிப்புக்காகச் செலவாகிவிடும். அடுத்த முப்பது ஆண்டுகள் நாம் முழு மூச்சோடு உழைக்கும் காலகட்டம். அந்தக் காலகட்டத்தில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் கல்விக்காகத் திட்டமிட வேண்டும்.

மீதமுள்ள பதினைந்து ஆண்டுகள் நம் ஓய்வு காலம். இளமைக் காலத்தை எண்ணி ரசித்தபடி, நம் குடும்ப வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை அசைபோட்டபடி, பிள்ளைகளின் வெற்றிகளைக் கண்டு பெருமிதப்பட்டபடி கழிக்க வேண்டிய காலகட்டம். ஆனால், அந்த ஓய்வு காலத்திலும் பசிக்கும். உடல் நலத் தேவைகளுக்காகப் பணம் செலவிட வேண்டியிருக்கும்.

இந்தத் தேவைகளுக்கு எங்கே போவது? நாம் நம் பெற்றோருக்குச் செய்தது போல, நமக்குப் பிள்ளைகள் செய்வார்கள் என்று அவர்களை நம்பி இருக்கலாமா? இருக்கலாம், ஆனால் நாம் சுமையாகத் தோன்றும் நிலை வந்துவிடக் கூடாது. அதனால், ஓடியாடி உழைக்கும் காலத்திலேயே எல்லாத் தேவைகளுக்கும் போக மீதம் ஒரு தொகையைச் சேமித்து வந்தால், ஓய்வு காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அதனால்தான் சேமிப்பு முக்கியம் என்று கூவ வேண்டியிருக்கிறது. சரி, சேமிக்கவில்லை என்றால் என்ன? இப்போதைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைப்பவர்கள், தள்ளாத வயதிலும் பத்து மணி நேரம் வேலை செய்யும் முதியோர்களைக் கொஞ்சம் பாருங்கள். உங்கள் எண்ணம் தானாகவே மாறும்.

சீட்டு வளையம்

சீட்டு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது ஒரு விஷயத்தை விட்டுவிட்டேன். அது நகைச் சீட்டு. மத்தியத்தர மக்களை மிகவும் கவரக்கூடிய விஷயம் இந்த நகைச் சீட்டு. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டிக்கொண்டே வந்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கட்டிய தொகைக்கு ஏற்பத் தங்க நகையாக வாங்கிக்கொள்ளும் திட்டம் இது.

பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் விளம்பரங்களைக் கொட்டும் பெரிய நகை விற்பனை நிறுவனங்கள்கூடத் தங்கள் வாடிக்கையாளர்களை இந்தச் சீட்டு வளையத்துக்குள் சிக்கவைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது சின்னச் சின்ன நகைக் கடைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

கார், கம்ப்யூட்டர், பைக் போன்ற பரிசுகள், சேமிப்பில் பல சலுகைகள் என்று எல்லா வித்தைகளையும் காட்டி வாடிக்கையாளர்களை மடக்கப் பாடுபடும் இந்த நகைச் சீட்டு விஷயத்தில், நாம் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தெளிவு தேவை

முன்பு இரண்டு, மூன்று ஆண்டுகள் என்று நீண்ட கால அளவில் சீட்டுகள் சேர்க்கப்பட்டன. ஆனால், சீட்டு என்பதும் பணப் பரிவர்த்தனைதான். அதை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரத்தான் வேண்டும். பதினோரு மாதங்களைத் தாண்டிய எந்தச் சேமிப்புக்குமே கணக்கு சொல்ல வேண்டிய நிலை இருப்பதால், இப்போதெல்லாம் நகைச் சீட்டாகவே இருந்தாலும் பதினோரு மாதங்கள்தான் பரவலாகக் கணக்கிடப்படுகின்றன. அதைத்

தாண்டிய கால அளவைச் சொல்லும் நகை விற்பனை நிறுவனங்களிடம் ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்டுக்கொண்டு சீட்டில் சேருவது நல்லது.

கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள்

“எங்கள் நிறுவனச் சீட்டில் சேர்ந்தால் ஐந்து கிராம் தங்கம் போனஸாகக் கிடைக்கும். எங்கள் சீட்டில் பத்து மாதங்களுக்கு மட்டும் தொகையைச் செலுத்திவிட்டு பதினோரு மாதங்களுக்குரிய பலனை அடையலாம். எங்கள் நிறுவனச் சீட்டில் சேர்ந்தால் கார் பரிசு கிடைக்கும்” என்றெல்லாம் விளம்பரம் செய்வார்கள். நாம் கொடுக்கும் பணத்துக்கு ஈடாகத் தங்கம் தருவதாகச் சொல்லும் இவர்களால் எப்படி இந்தக் கூடுதல் பரிசுகளை நமக்குத் தர முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தரம் முக்கியம்

சீட்டு கட்டும் மக்களுக்கு நகை விற்பனை நிறுவனங்கள் போலியான, தரமில்லாத தங்க நகைகளைக் கொடுக்கிறார்கள் என்று சொல்லவில்லை. நமக்குப் பழக்கமான 22 கேரட் நகையை நினைத்துக்கொண்டு சீட்டு கட்டுவோம். கடைசியில் அவர்கள் 18 கேரட் நகையைக் கொடுத்தால் என்னாவது? அதனால், சீட்டில் சேருவதற்கு முன்பே இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

நீங்கள் சீட்டு கட்டிச் சேமிக்கும் பணத்துக்கு ஈடான நகைகளை, செய்கூலி சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். கடைக்குப் போய்ப் பார்த்தால் கண்ணுக்கே தெரியாத பொடி எழுத்தில் குறிப்பிட்ட மாடல்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று போட்டிருப்பார்கள். நாம் நகை வாங்குவதே ஆண்டுக்கு ஒருமுறை. அதில் நவீன மாடல்களை வாங்க முடியாமல் முட்டுக்கட்டை போடும் விஷயமாக இந்த நகைச் சீட்டு அமைந்துவிடக் கூடாது.

அதேபோல கல் பதித்த நகைகள் கணக்கில் வராது, வைர நகைகளை நாங்கள் சீட்டுப் பணத்துக்கு ஈடாகத் தர மாட்டோம், நாணயங்களாகவோ, பிஸ்கெட்டுகளாகவோ தர மாட்டோம் என்றெல்லாம் நிபந்தனைகள் போட்டிருப்பார்கள். அதையும் கவனமாகத் தெரிந்துகொண்ட பிறகு சீட்டுச் சேரும் முடிவை எடுப்பது நல்லது. ஆனால், எல்லா நிபந்தனைகளையும் தடைகளையும் தாண்டி ஏதோ ஒரு வகையில் நாம் சேமிக்க வேண்டும். அது முக்கியம்.

சரி, தங்கத்தில் செய்யும் சேமிப்பு நல்லதா, கெட்டதா? அடுத்து அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

ரூபாய் நோட்டு அனுபவம்: முழு திருப்தி தந்த வங்கி சேவை


500 - 1000 நோட்டு மாற்றுவதில் ஆளாளுக்கு ஒரு பதிவினைப் போட்டுக் கொண்டிருக்க, என் பங்குக்கு நானும் ஒரு பதிவு போட வேண்டும் என நினைக்கிறேன். கவலை வேண்டாம், இது யார் மீதும் வெறுப்பை வளர்த்து, பழி போட்டு, புகார் சொல்லி, வஞ்சனை செய்யும் பதிவல்ல. புதிய நோட்டு / சில்லறை மாற்ற முயற்சித்த போது எனக்கு கிடைத்த நல்ல அனுபவம் இது.

குறிப்பிட்ட நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நாளன்று என் கையிலிருந்தது 500 ரூபாய் தாள் ஒன்று மட்டுமே. அடுத்த சில நாட்களுக்கு அதை மாற்ற தேவை வரவில்லை. எப்படியும் தேவைப்படும், அடுத்த சில நாட்களில் ஏடிஎம், வங்கிகளில் கூட்டம் குறைந்த பின் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

ஆனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானதே தவிர குறையவில்லை. எப்படியும் மாற்றித்தானே ஆக வேண்டும் என முடிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை, கொட்டிவாக்கத்தில் நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக்கு விரைந்தேன்.

தனியார் வங்கிகளும் சரியில்லை, வாடிக்கையாளர்களை சரியாகக் கவனிப்பதில்லை போன்ற புகார்களை நானும் கடந்து வந்திருக்கிறேன். எனக்கும் சில தனிப்பட்ட அனுபவங்கள் அப்படி இருக்கிறது. ஆனால் அன்று நடந்த விஷயங்கள் அந்த அபிப்பிராயத்தை மாற்றியது.

ஏற்கெனவே அங்கு பெரிய வரிசை இருந்ததை கடந்த சில நாட்களாக பார்த்த எனக்கு அன்று கூட்டம் சற்று குறைவாக இருந்ததாகவே பட்டது. அரைக் கம்பத்தில் கொடி பறப்பது போல, ஷட்டரை பாதி திறந்து வைத்திருந்தனர். வங்கி வாசலிலேயே வங்கி அதிகாரிகள் இருவர் நின்று கொண்டு, விசாரிக்க வருபவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.

நான் சென்றதும், சார் உங்கள் கணக்கில் காசு இருந்தால் ஒரு காசோலை போட்டு பணத்தை எடுக்கலாம். புது நோட்டு, சில்லறை அதற்கேற்றார் போலத் தருவோம். அதே போல பழைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதை கணக்கில் போட்டு வைக்கலாம். ஆனால் இப்போது பழைய நோட்டுகளை மாற்ற மட்டும் (exchange) இயலாது என்றனர்.

இதை அவர்கள் சொன்ன தொனி மிகவும் பணிவாகவும், தோழமையுடனும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வேளை, ரோட்டில் நின்று கொண்டு, ஒரே கேள்விக்கு மீண்டும் மீண்டும் பதிலளிக்கும் நிலையிலும் அவர்களது அந்த தொனி மாறவில்லை என்பது ஆச்சரியமும், ஆறுதலும் தந்தது.

வீட்டுக்குச் சென்று ஒரு காசோலையைப் பூர்த்தி செய்து, கணக்கில் போட வேண்டிய பழைய 500-1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு, எனது அடையாள அட்டை நகல் ஒன்றை பிரதி எடுத்து மீண்டும் வங்கிக்கு சென்றேன். இம்முறை வாசலில், பிளாட்பாரத்தில் ஒருவர் மேஜை போட்டு உட்கார்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் சென்று கேட்டதும் பொறுமையாக என்ன செய்ய வேண்டும் என விளக்கி, பணத்தைப் போடுவதற்கான சீட்டையும் புது நோட்டுகளைப் பெறத் தேவையான படிவத்தையும் தந்தார்.

உள்ளே சென்று, இருந்த சின்ன வரிசையில் நின்று வேண்டிய பணத்தை முதலில் பெற்றுக் கொண்டேன். எனக்குத் தேவையான நூறு ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு, மீதியிருந்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செலுத்தி விடலாம் என சீட்டை நிரப்பி வரிசையில் நின்றேன்.

அப்போது என்னை கவனித்த வங்கி ஊழியர் ஒருவர், சார், 2000 ரூபாய் புழக்கத்தில் வரவேண்டும் என்று தான் அதை வெளியே தருகிறோம், நீங்கள் மீண்டும் அதை கணக்கில் போட்டால் எங்கள் நோக்கம் நிறைவேறாது, நீங்கள் வேண்டுமென்றால் அந்த 2000க்கான 1000 ரூபாய் நோட்டுகள் என்னிடம் உள்ளன, இதை கணக்கில் போடுங்கள், உங்கள் 2000 நோட்டுகளை நாங்கள் புழக்கத்தில் விடுவோம் எனப் பொறுமையாக எடுத்துக் கூறினார். அவர் கூறியதில் இருந்த நியாயம் புரிந்தது. அவர் கையிலிருந்த 1000 ரூபாய் தாள்கள் என்னிடம் வந்தது. எனது 2000 நோட்டுகள் அவரிடம் சென்றது.

இவ்வளவு சிக்கலிலும், முகம் சுளிக்காமல், பொறுமையாக எடுத்துச் சொல்லி, சந்தேகங்களை தீர்த்து வைத்து, இன்முகத்துடன் அனுப்பி வைத்த வங்கி ஊழியர்களை நினைத்தால் நிறைவாக இருந்தது.

நம்மைச் சுற்றி ஆயிரம் எதிர்மறை செய்திகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையா, புரளியா எனத் தெரியாமல் பல்லாயிரம் தகவல்கள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் பரவி வருகின்றன. ஏராளமானோர் தங்களுக்கு அடிப்படை கூட சுத்தமாக தெரியாத விஷயங்கள் குறித்து விமர்சனம் செய்து ஆராய்ந்து வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் சுற்றியிருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்கள் எல்லாம், தங்களுக்கு பிரச்சினை என வரும்போது மனிதாபிமானி ஆகி நீலிக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இவ்வளவுக்கும் நடுவில் நாமும் ஏன் நமக்கு வந்த கஷ்டத்தை, சில்லறை இன்றி படும் அவஸ்தையை மட்டுமே பெரிதாக்கி எழுத வேண்டும்? இப்படிப்பட்ட நல்ல அனுபவங்களும் அதிகமாக அறியப் படவேண்டும் தானே என்ற நோக்கிலேயே இதை எழுதுகிறேன்.

குறிப்பு: வங்கிக்கு விளம்பரம் போல இருக்க வேண்டாம் என்ற நோக்கிலேயே வங்கியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆண்களின் கவனத்துக்கு-நலம் நல்லது 7 #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அவசியமே இல்லாமல், இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்து வருகிறது' என்கின்றன சில மருத்துவ ஆய்வுகள்.

ஒரு மில்லி விந்து திரவத்தில் 60-120 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் இப்போது இல்லை. `15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை' என மருத்துவம் இறங்கி வந்து ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் விந்தணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறதாம். `31 - 40 வயதுள்ள தம்பதிகளில் 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை' என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. அதன் விளைவுதான் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகி வருவது.
வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்குவதால் பிறக்கும் டையாக்சின் மற்றும் வேறு பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அந்தப் பெண்ணின் கருவிலிருக்கும் ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. இப்படி ஆண்மைக் குறைவுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம், காண்டாமிருகக் கொம்பு என கண்டதையும் தேடிப் போகாமல் கீரை, காய்கறி சாப்பிட்டாலே போதும், உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்.

ஆண்மையைப் பெருக்க வழிகள்..!

* சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதன காமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என பெரிய பட்டியல் இருக்கிறது. நெருஞ்சி முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களைப் பெருக்க டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்கின்றன. உடனே இவற்றைத் தேடி ஓடக் கூடாது. ஆண்மைக் குறைவு பிரச்னைக்கு காரணம் விந்தணு உற்பத்தியிலா, அது செல்லும் பாதையிலா அல்லது மனத்திலா என்பதை மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்ய வேண்டும்.
* வெல்கம் டிரிங்காக மாதுளை ஜூஸ், அதன்பிறகு, முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளை சம்பா சோற்றுடன் முருங்கைக்காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு... முடிவில் தாம்பூலம். இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.
* நாட்டுக்கோழி இறைச்சி காமம் பெருக்கும்.
* உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (Zinc) பங்கு அதிகம். அதை பாதாம் பால்தான் தரும் என்பது இல்லை. திணையும் கம்பும் அரிசியைவிட அதிக துத்தநாகச் சத்துள்ளவை.
* `காமம் பெருக்கிக் கீரைகள்' எனப்படும் முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.
* 5-6 முருங்கைப் பூக்களுடன் பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டால் உயிர் அணுக்களின் உற்பத்தியும் இயக்கமும் பெருகும்.
* செரட்டோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம் கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள் நிறைந்த மாதுளை தாம்பத்தியத்துக்கு பேருதவி செய்யும் கனிகள்.
* உடல் எடை அதிகரிப்பதால் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) ஆண்களுக்கான முக்கிய சிக்கல்கள். இரண்டையும் முறையான சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.
* நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும்.
* நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.
* குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தையின்மையைக் கொடுக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தரிப்பை, அழகான தாம்பத்திய உறவை சாத்தியப்படுத்த ஆணுக்கு அவசியத் தேவை உடல் உறுதி மட்டும் அல்ல, மன உறுதியும்தான்!
தொகுப்பு: பாலு சத்யா
Dailyhunt

ஆடாத விளையாட்டுகள்

By மன். முருகன்  |   Published on : 15th November 2016 02:27 AM

ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பாரதி, "மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ள' சொல்கிறார்.
இன்று இந்த வழக்கம் எல்லாம் கிடையாது. விளையாட்டு என்பதே இன்றைய பெற்றோர்களுக்கு எட்டிக் காய் கசப்புதான். அவர்களுக்கு காலை 6 மணி தனி வகுப்பில் ஆரம்பித்து 9 மணிக்கு பள்ளிப் படிப்பு தொடங்கி, மீண்டும் மாலை 5 மணிக்குத் தனி வகுப்பு, வேறு ஏதாவது மூளை வளர்க்கும் (?) திறன் இருந்தால் முடித்துவிட்டு அப்படியே மறுநாள் தனி வகுப்புச் சென்றால் பரவாயில்லை என்பார்கள்.
விளையாட்டை மறந்த குழந்தைகள் ஒரு தலைமுறையைத் தாண்டிவிட்டனர். விளையாட முடியாமைக்குப் பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அடுக்ககங்களில் வாழ்கின்றனர். நகரத்தில் எங்கே போய் விளையாடுவது? இன்றைக்குப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல் எங்கே இருக்கிறது? இப்படி நிறைய.
ஆனால் இவை மேம்போக்கான காரணங்கள்தான். உண்மையில் ஆசையுடன் தம் குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர் இருக்கின்றனரா? அவர்களுக்கு ஆயிரம் கனவுகள்; அந்தக் கனவுகளில் எல்லாம் அந்நிய தேசங்கள். களியாட்டங்கள்; கைநிறைய சம்பளங்கள்.
நாம் நம் குழந்தைகளுக்கு சொல்ல மறந்த விளையாட்டுகள் என 201-ஜ தேடித் தொகுத்து பதிவு செய்துள்ளார் முனைவர் செங்கை பொதுவன். இவை அத்தனையும் தமிழகத்தில் மறைந்து வரும் விளையாட்டுகள். விளையாட்டையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறோம்.
15, 20 ஆண்டுகளுக்கு முன்னர், கிராமங்களில் அரசுப் பள்ளியில் படித்தவர்களின் மாலை நேரம்தான் எத்தனை இனிமையானது? மாலை 3.10-க்கு பள்ளிக் கூடம் முடிந்தால் 4 மணி வரை பள்ளியில் மாலை வகுப்பே விளையாட்டுதான். அது முடிந்து வீட்டுக்கு வந்தால் இரவு 8, 9 மணி வரையும் விளையாட்டுதான்.
6-ஆம் வகுப்பு மேல் படிக்கும் மாணவர்கள்தான் ஏதாவது வீட்டுப் பாடம் செய்வார்கள். அவர்களும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டு விளையாடத் தொடங்கிவிடுவர்.
கிராமத்து அரசுப் பள்ளிகளை அழிக்கத் தொடங்கியதில் இருந்து முடிவுக்கு வரத் தொடங்கியது சிறுவர்களின் விளையாட்டு உலகம்.
இன்றைக்குத் தனியார் பள்ளிகள் பெருகின. கட்டணக் கல்வி கடிவாளங்களைப் பரப்பியது. அவை முதலில் காலி செய்தது விளையாட்டைத்தான். அது ஏதோ வேண்டாத விபரீதமாகவே பாவிக்கப்படுகிறது. "மாலை முழுதும் விளையாட்டா?' அவ்வளவுதான் அமெரிக்க கனவு என்னாவது பாரதி?
மேலும், நவீன தொழில்நுட்ப உலகம் விளையாட்டுகளை கேம்களாக சுருக்கி குழந்தைகளின் விளையாட்டுத் திடலை, அங்கு விளையாட வேண்டிய உடலையும் சுருக்கி, சுறுசுறுப்பை குலைத்துவிட்டது.
தமிழ்நாட்டில்தான் குழந்தைகளுக்கு எத்தனை எத்தனை விளையாட்டுகள்... அம்மானை, குலைகுலையா முந்திரிக்கா, பம்பரம், கிட்டிபுள், திருடன்-போலீஸ், பச்சைக் குதிரை, கபடி, கோலி, உப்பு எடுத்தல், செதுக்கு முத்து, கிளித்தட்டு, ஒற்றையா இரட்டையா, காற்றாடி, நொட்டி, தட்டாங்கல், தாயம், பரமபதம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பூப்பறிக்க வருகிறோம், கரகரவண்டி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அதேபோல் வீர விளையாட்டுகளான சிலம்பம், சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்), இளவட்டக்கல், மற்போர் போன்றவை இளைஞர்களுக்கான விளையாட்டுகள்.
ஒவ்வொரு விளையாட்டிலும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள். கபடி: தன் மண்ணை கவர நினைப்பவனை மண்ணைக் கவ்வ வைக்கும். நாட்டுப்பற்றை வளர்க்கும். பல்லாங்குழி: இருக்கும் இடத்தில் இருந்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளரச் செய்யும். பரமபதம்: ஏற்றம் இறக்கம் இரண்டும் கலந்து இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்தும்.
கில்லி: கூட்டல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை களிப்புடன் மகிழ்ந்து கற்கச் செய்யும். தாயம்: வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி அடைவேன் என்ற தன்னம்பிக்கை வளர்க்கும். சதுரங்கம்: எவ்வழியும் இல்லாதபோதும் இறுதி வரை போராடும் உறுதி மிக்க மனம் பெற உதவும்.
நொண்டி: சமமாக இல்லாத போதும் சாதிக்கத் தூண்டும் சக்தி உண்டாக வழிவகுக்கும். கண்ணாமூச்சி: ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழ்ந்திருக்கும் பெருமையும் உண்டாகச் செய்யும்.
தமிழ்நாட்டில் ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு, முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பண்களை மணப்பதற்கு காளையை அடக்குவது இன்றியமையாததாகியது. அதற்கும் காரணம் உண்டு.
பெரும்பான்மை மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். விவசாயத் தொழிலுக்கு உடல் வலிமை தேவை. உடல் வலிமை உள்ள ஆண்மகனே பெண்டிருக்கு நற்கணவான இருக்க முடியும்.
எனவேதான் காளையை வணங்குதல் (நந்தி வழிபாடு), காளையை அடக்குதல் என்ற வீர விளையாட்டாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
விளையாட்டினால் ஒற்றுமை, படிப்பு, சுறுசுறுப்பு, போட்டியிடும் மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் பண்பு, வெற்றி - தோல்விகளைச் சமமாகப் பாவிக்கும் குணம் குழந்தைகளுக்கு ஏற்படும். உள்ளத்தையும் உடலையும் ஆற்றல் படுத்தும். சமயோஜித புத்தியை வளர்க்கும்.
மண்ணில் விளையாடுவதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுவதாக ஆராய்ச்சிகள் உறுதிபடக் கூறுகின்றன. இளம்வயதில் கண் பார்வைக் குறைபாடு, சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கிறது.
மேலும், விளையாடுவதன் மூலமே சிறப்பாக கல்வியைப் பயில முடியும் என்பதை உலகம் ஏற்றுக் கொள்கிறது. குழந்தைகள் விளையாட களம் அமைத்து, விளையாட்டை ஊக்குவிப்போம்.விளையாட்டுகள் மண்ணின் அடையாளம், மரபின் தொடர்ச்சி.

Monday, November 14, 2016

நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்: இயல்பு நிலைக்கு திரும்பும் ஏடிஎம்கள்


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கிகளில் மட்டும் ரூ.75,945 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.3,753 கோடி அளவுக்கு பழைய பணத்தைக் கொடுத்து புதிய பணமாக பொதுமக்கள் மாற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் எஸ்பிஐ வங்கியில் ரூ.100 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என ரூ.7,705 கோடி அளவுக்கு பணம் பொது மக்களால் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் அனைத்து ஏடிஎம்களும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருப்புப் பணத்தை மாற்றுவது எப்படி? கூகுளில் தேடியதில் குஜராத் முதலிடமாம்; மோடி சார் பார்த்துக்கோங்க...

By DIN  |   Published on : 14th November 2016 12:23 PM
புது தில்லி: கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது எப்படி என்று கூகுளில் தேடியவர்களில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கிகள் ஒரு நாளும், ஏடிஎம்களுக்கு இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், தங்கள் கைவசம் உள்ள கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது எப்படி என்று ஏராளமான வெள்ளந்தி மக்கள் கூகுள் சேர்ச்சில் போட்டுத் தேடியுள்ளனர்.
இதில் குஜராத் மக்கள் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால், நம் தமிழ்நாட்டு மக்களோ கூகுளில் குறைந்த அளவில் தேடி 22வது இடத்தைப் பிடித்து தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

வடமாநிலங்களில் மூட்டை மூட்டையாக 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

By DIN  |   Published on : 14th November 2016 12:42 PM  

பாட்டியாலா: கறுப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நிலையில், வடமாநிலங்களில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் வாகனசோதனையின் கணக்கில் வராத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இதனிடையே, போலீஸாருக்கு தொலைபேசியில் வந்த தகவலையடுத்து, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரில், 5 வாகனங்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டரை கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பஞ்சாப் மாநில போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டத்தில் அகமதாபாத் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில், மறைத்து கொண்டுவரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் கோல்ஃப் கிளப் அருகே 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், காரில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூட்டை மூட்டையாக கங்கை மற்றும் சாலைகளில் கொட்டப்பட்டும், எரிக்கப்பட்டும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai Bench, first to decide on demonetisation

A 1978 precedent and a 1996 Supreme Court verdict made it dismiss the case

The nation is yet to recover from jitters sent by Prime Minister Narendra Modi’s surprise address to the people on Tuesday announcing demonetisation of Rs. 500 and Rs. 1,000 currency notes, but the Madurai Bench of the Madras High Court has already created history by being the first in the country to hear, deliberate and dismiss a case against the Centre’s move that has earned both bouquets and brickbats.

However, what made the Madurai Bench reject the case was a decision of the Supreme Court taken on August 9, 1996 by a four-judge Bench of Justices M.K. Mukherjee, Kuldip Singh, M.M. Punchhi, and N.P. Singh upholding the Constitutional validity of the High Denomination Bank Notes (Demonetisation) Act, 1978 enacted during the Prime Ministership of Morarji Desai to demonetise Rs. 1,000, Rs. 5,000 and Rs. 10,000 currencies.

Section 2 (d) of the Act defined the term ‘high denomination bank notes’ to mean the three currency notes and Section 3 declared that on expiry of January 16, 1978 all high-denomination notes would, notwithstanding anything contained in Section 26 of the Reserve Bank of India Act 1934, ceased to be legal tender in payment or on account at any place.

Section 4 of the Act prohibited transfer and receipt of the currencies from the specified date.

Assailing the Act, the petitioners before the Supreme Court had contended that it violated their fundamental rights enshrined in Articles 19 (1) (f) and 31 of the Constitution. While the first Article recognised the right to acquire any property by lawful means, hold it and dispose of it freely, limited only by reasonable restrictions, the second Article provided that the State could acquire private property for a public purpose only on payment of compensation to the owner.

Since Section 26 of the RBI Act cast a duty upon the bank to honour the obligation of accepting currencies issued by it as legal tender, it was contended that the Demonetisation Act extinguished the debts due from the RBI to the holders of high denomination notes and that such extinguishment of debts amounted to compulsory acquisition of property without payment of compensation which was mandatory under Article 31(2) of the Constitution.

Rejecting the arguments, the apex court said the contention based on Article 19(1)(f ) was “wholly misconceived for after compulsory acquisition of their property by the impugned Act, the petitioners’ right thereto stood extinguished and consequently the question of reasonable restriction to the exercise or enjoyment of a right, which became non est, could not arise”.

On the issue of compensating the holders of demonetised bank notes, the court said: “Equally untenable is the petitioners’ contention that they were deprived of their right to get compensation for such acquisition as Sections 7 and 8 of the Demonetisation Act lay down an elaborate procedure to apply for and obtain an equal value of the high denomination bank notes in the manner prescribed thereunder.”

Taking a cue from that judgement, the Madurai Bench held:

“Now Article 19(1)(f) is no more in force. Therefore, as of now, right to own property is no more a fundamental right. Similarly, Article 31 also stands supplemented by certain other provisions introduced.

When the Honourable Supreme Court had declared that demonetisation of currency notes did not violate Article 19(1)(f), it is difficult for us to hold that it offends any other fundamental right.”

A Division Bench of Justices S. Nagamuthu and M.V. Muralidaran also went on to state that the present petitioner who had challenged the recent decision to demonetise Rs. 500 and Rs. 1,000 notes had not made out any case, even prima facie, to show that the Finance Ministry’s notification under challenge was either illegal, irrational or it suffered from procedural impropriety or proportionality for the court to exercise judicial review.

On the issue of hardship caused to the common man due to the sudden move, the judges said:

“Of course, it is true that it has caused some inconvenience. As expressed by the Hon’ble Prime Minister of India, in his address to the nation, it is not as though the Government was not aware of these possible inconvenience or hardship to the common man and the poor people of this country.

“His Excellency, the President of India, who himself is a great scholar, economist and who had held the portfolio of finance for a considerable time, has issued a Press Note wherein His Excellency has welcomed the said action taken by the Central Government, which, according to him, will help to unearth unaccounted money as well as counterfeit currency.

“As it has been expressed by His Excellency the President of India and the Hon’ble Prime Minister of India, we, the people of this country, should be hopeful that this measure would speed up the growth of the economy.... and it would free the country from corruption, black money, terrorism and other evils,” the judges concluded.

Government was aware of possible inconvenience and hardships to common man

Justice S. Nagamuthu

His Excellency the President himself has welcomed the decision

Justice M.V. Muralidaran
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர்: ட்ரம்ப் அதிரடி

வாஷிங்டன்: சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார், இவர் 2017 ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ட்ரம்ப் இன்று பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் அதிபரானதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற்றப்படுவர்.

கிரிமினல் பின்னணி இருப்பவர்கள், ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்து இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இந்த எண்ணிக்கை 20 லட்சமாக இருக்கலாம் அல்லது 30 லட்சமாகக் கூட இருக்கலாம். அவர்களை வெளியேற்றுவேன் அல்லது சிறையும் பிடிப்பேன்.
ட்ரம்ப் தநது தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதியளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்த்தே, அவர் அதிபராக தகுதியில்லாதவர் என்று அமெரிக்காவில் பல பிரிவினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: tamil.oneindia.com
Dailyhunt

வருமுன் காப்போம்

By அ. பன்னீர்செல்வம் | Published on : 14th November 2016 01:54 AM | அ+அ அ- |

பன்னாட்டு சர்க்கரை நோய் கூட்டமைப்பு உலகம் முழுவதும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர் 14}ஐ உலக சர்க்கரை நோய் தினமாக அறிவித்தது.
சர்க்கரை நோயைத் தடுப்பதற்கு உண்டான சாத்தியக் கூறுகள் 1997 வரை இல்லாமல் இருந்தது. தடுப்பதற்கு சாத்தியம் இல்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
1997-இல் சீனாவில் நடந்த ஓர் ஆய்வில் இரண்டாம் வகை சர்க்கரை நோயை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் 42% வரை தடுக்க முடியும் என்ற தகவல் வந்தது. அதையடுத்து அமெரிக்காவில் நடந்த ஆய்வில் 58% வரை தடுக்க முடியும் எனத் தெரிய வந்தது.
அதையடுத்து இந்தியாவில் நடந்த ஆய்வு முதல் பல நாடுகளில் நடந்த ஆய்வுகள் சரக்கரை நோயை வராமல் தடுப்பதற்குண்டான வழிமுறைகள் உள்ளன. வந்துள்ளதை மிக ஆரம்பத்திலேயே கண்டறிந்து (சாப்பிடுவதற்கு முன் 100-125 மி.கி.%, சாப்பிட்டு இரு மணி நேரம் பொறுத்து 140-200 மி.கி.%, மூன்று மாத சராசரி அளவு - 5.7 - 6.5%) தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் இயல்பு நிலைக்கும் சென்று விடுகிறது.
அதாவது சாப்பிடும் முன் 100 மி.கி.%க்கு குறைவாக, சாப்பிட்டபின் 140 மி.கி.%க்கு குறைவாக, மூன்று மாத சராசரி அளவு 5.7%க்கு குறைவாக வைத்துக் கொள்ள முடியும்.
சர்க்கரையின் அளவை மாதம் ஒரு முறை பார்த்துக் கொண்டும், மூன்று மாத சராசரியை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் பார்த்து வந்தால் இந்நோய் தொடர் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தற்போது சர்க்கரையின் அளவு 250 மி.கி.% (அ) 300 மி.கி.% அளவிற்கு மேல் சென்று, மூன்று மாத சராசரியும் எட்டு (அ) ஒன்பதுக்கும் மேல் சென்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்குண்டான எவ்வித தொடர் முயற்சியும் எடுக்காததால் அநேக பேர் அவதியுறுகின்றனர்.
பின்விளைவுகள் வந்தபின்தான் தனக்கு சர்க்கரை நோய் உள்ளதையே உணருகிறார்கள். இந்நோயின் மிக ஆரம்பம் எவ்வித அறிகுறியையும் தருவதில்லை. சில நேரங்களில் சர்க்கரை நோயாளர்களுக்கு ஏற்படும் மாரடைப்பும் (வலியில்லாமல்) அறிகுறியின்றிதான் உள்ளது.
படித்த நாம் ஏற்கெனவே பெரியம்மை, போலியோ போன்றவற்றை தடுப்பூசிகள் மூலம் ஒழித்துள்ளோம். கினிவேர்ம் மற்றும் நீரால் பரவக்கூடிய பல நோய்களைத் தடுத்துள்ளோம். சமீபத்தில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளோம்.
ஆனால் சர்க்கரை நோயாளர்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் மக்களுடனும், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இந்நோய் வராமல் தடுப்பது எப்படி, மிக ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது எப்படி, கண்டுபிடித்தபின் இயல்புநிலையில் தொடர்ந்து வைத்துக் கொள்வது எப்படி, பின் விளைவுகள் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இந்நோயின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கலாம்.
சர்க்கரை சத்து, கொழுப்புச் சத்து, உப்புச் சத்து உள்ள உணவு வகைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளதால் மக்களின் மோகம் இயல்பாகவே அதன் பக்கம் கடந்த 15 ஆண்டுகளாக திரும்பிவிட்டது.
மேலும் ஒரு காலத்தில் 1950களில் அனைத்து வேலைகளும் மனித உடலுழைப்பால் செய்யப்பட்டன. அதன்பின் மின்மயமானது. தற்போது கணினி மற்றும் தொலைவில் இருந்து செயல்படுத்த உபகரணங்கள் (தங்ம்ர்ற்ங்)வந்துவிட்டன. உடலுழைப்பின்றி தற்கால மனிதன் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகளை உண்பதால் உடல் எடை கூடுகிறது.
இயல்பாக சுரக்கும் இன்சுலின் சரிவர வேலை செய்ய மறுக்கிறது. இயல்பான சுரப்பு குறைய ஆரம்பித்து சர்க்கரை நோயை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனுடன் கொலஸ்ட்ரால் அளவுகளும் ரத்தத்தில் கூடுதலாகின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகி ரத்தக் குழாய்களில்
அடைப்பு ஏற்பட்டு அது மாரடைப்பாகவோ பக்கவாதமாகவோ சிறுநீரக செயலிழப்பாகவோ மாறுகிறது.
கால்களில் புண் ஆறவில்லை. பார்வை குறைகிறது என்று பின்விளைவுகள் வந்தபின் சர்க்கரை நோய்க்கும், மிகு ரத்த அழுத்தத்திற்கும் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். இவைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மது அருந்தும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் எந்த அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் குறைந்தபாடில்லை. சர்க்கரை நோய், மிகு ரத்த அழுத்த நோயுடன் இப்பழக்கங்களும் இருந்தால் சிகிச்சை அளித்தும் பயன்
இருக்காது என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை ஒழிக்க தடுப்பு மருந்துகள் இருந்தது போல் சர்க்கரை நோயை ஒழிக்க தடுப்பு மருந்து ஏதும் இல்லை. தடுப்பு மருந்து இல்லாமல் கினி வேர்ம், தொழுநோய், காலரா, சிரங்கு மற்றும் குடும்பக் கட்டுபாடு முறைகளை விழிப்புணர்வு மூலம் வெற்றிகண்டுள்ளோம்.
மக்களிடம் ஏற்படுத்தப்படும் தொடர் விழிப்புணர்வுதான் இந்நோயின் தாக்கத்தைக் குறைக்கும். இல்லையேல்
ஆண்டுக்கு ஆண்டு உலக நீரிழிவு தினத்தை தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரித் போல கொண்டாடிக் கொண்டிருக்கலாமேயொழிய மக்களுக்கு பயன் இருக்காது.

(இன்று உலக சர்க்கரை நோய் தினம்)

கட்டுரையாளர்: நீரிழிவு மருத்துவர்.

ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை!

By ஆசிரியர் | Published on : 14th November 2016 01:50 AM |

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பாக ரூ.500, ரூ.1000 காகிதச் செலாவணிகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கிகளின் முன்னாலும், ஏ.டி.எம். இயந்திரங்களின் முன்னாலும் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அன்றாடச் செலவுக்குக்கூடப் பணமில்லாமல் சாமானியர்கள் தவிக்க வேண்டியதாகி விட்டது என்பதில் சந்தேகமே இல்லை.

÷அரசின் அதிரடி முடிவு மக்களின் அன்றாட வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், "இந்த முடிவால் கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது, கள்ளநோட்டுகளுக்கு முடிவு கட்டிவிட முடியாது என்றெல்லாம் பேசுவது (பிதற்றுவது)' அரசியலே தவிர, தேசத்தின் மீது உண்மையான அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்டவர்கள் பேசுகிற பேச்சல்ல.

÷அதேபோல, எல்லா வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் போதிய பணத்தை முன்கூட்டியே கிடைக்கும்படி செய்திருந்தால், பொதுமக்கள் இந்த அளவுக்கு அவதி அடையத் தேவையில்லைதான். ஆனால், அப்படியெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருந்தால், கருப்புப் பண முதலைகள் மோப்பம் பிடித்திருப்பார்கள்.

÷இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படும்போது பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. நில உச்சவரம்பு கொண்டுவந்தபோது, இதேபோலத்தான் மிகப்பெரிய ஓலம் எழுப்பப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தவித சிரமமோ பாதிப்போ கூடாது என்றால், மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

÷பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால், ஏறத்தாழ இரண்டு ஆண்டுத் திட்டமிடல் இருந்திருக்கிறது என்பது இப்போது தெரிகிறது. யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம், மிகவும் ரகசியமாகவும், சாதுரியமாகவும் பிரதமர் மோடி காயை நகர்த்தி வந்திருக்கிறார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை சட்டப்படி இந்தியாவுக்குத் திருப்பிக் கொண்டு வருவது இயலாது என்பதைத் தெரிந்து கொண்டது முதல், கருப்புப் பணத்துக்கு எதிரான தனது தாக்குதலுக்குப் புதிய வியூகத்தை அவர் வகுக்கத் தலைப்பட்டிருக்கிறார்.
÷தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பிரதமர் பயணித்ததற்குப் பின்னால், இந்தப் பிரச்னையும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் தொடங்கி, எந்தெந்த நாட்டு வங்கிகளிளெல்லாம் இந்தியர்களின் கருப்புப் பணம் அதிகமாகக் காணப்படுகிறதோ, அந்த நாடுகளிடம், இந்தியர்களின் கணக்குகள் குறித்த பட்டியலை இந்திய அரசு கோரத் தொடங்கியது. விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக அவர்கள் அந்தக் கருப்புப் பணத்தை ஹவாலா பரிமாற்றத்தின் மூலமும், அந்நிய முதலீடு என்கிற பெயரிலும் இந்தியாவிற்குக் கொண்டு வர முற்பட்டனர்.

÷அடுத்தபடியாக, சாமானியர்கள் தங்களது கையிருப்புகளையும் சேமிப்புகளையும் மாற்றிக் கொள்வதற்கு வழிகோலும் வகையில் "ஜன் தன்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி 25.45 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒரு புறம், நேரடி மானியம் செலுத்துவதற்கும், இன்னொரு புறம், தங்களிடம் இருக்கும் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கும் இது உதவப் போகிறது. அடுத்த சில நாள்களில் புதிய ரூ.500, ரூ.2000 வரும்வரை மட்டுமே சாமானியர்கள் சிரமப்பட வேண்டிவரும். அதற்குப் பிறகு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பதால் அடித்தட்டு வர்க்கத்தினர், சாமானியர்கள், நேரிடையாக வரி செலுத்துபவர்கள் யாருடைய சேமிப்பும் பாதிக்கப்படாது.
÷கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரும் வகையில் கணக்கில் காட்டாத பணத்தை, வரியும் அதற்கான அபராதமும் செலுத்தி சரி செய்து கொள்ளும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்தனைக்கும் பிறகுதான், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களேகூட அரசைக் குறை சொல்வது நியாயமாகாது.

÷நாட்டில் ஏறத்தாழ 17,60,000 கோடி ரூபாய் புழங்குவதாகக் கூறப்படுகிறது. இதில் ஐந்து அல்லது ஆறு லட்சம் கோடி ரூபாய் கணக்குக் காட்டாதவையாக இருக்கும். அவை வரி வலையில் வந்து விடும். புழக்கத்தில் இருக்கும் இன்னொரு நான்கு முதல் ஐந்து லட்சம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் செயலிழந்துவிடும். கணக்குக் காட்ட முடியாமல், வங்கியில் செலுத்த முடியாமல் இருக்கும் சுமார் நாலரை லட்சம் கோடி ரூபாய் குப்பைக் காகிதமாகிவிடும். இவையெல்லாம் புழக்கத்திலிருந்து அகலும்போதுதான், இந்தியப் பொருளாதாரம் நிஜமான நிலைக்குத் திரும்பும். வரும் டிசம்பருக்குப் பிறகுதான் இந்தியா நிஜமான வளர்ச்சியையும், நிலைமையையும் காணப் போகிறது.÷பிரதமர் நரே  ந்திர மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக, இந்தியப் பொருளாதாரம் வரும் ஜனவரி முதல் நியாயமான, எதார்த்தமான வளர்ச்சியை நோக்கி நகரப் போகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் நாம் 12% வளர்ச்சியை அடைந்தால் வியப்படையத் தேவையில்லை. இதுதான் பிரதமரின் நோக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

÷பிரதமருக்கும் அரசுக்கும் ஒரு வேண்டுகோள். சிறு வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு வரி கட்டாததற்கு 200% அபராதம் என்பது கடுமையானது. இது அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தக்கூடும். அதை வெறும் 45% அபராதமாக அறிவித்து, இனியாவது பொறுப்புள்ள குடிமக்களாக நடந்துகொள்ள அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட வேண்டும்!

Sunday, November 13, 2016

சில்லரை கொடுத்து மருத்துவமனைக்குப் பாடம் புகட்டிய நோயாளி!


'

இந்தியாவில், இனி பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என மத்திய அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரு தினங்களாக இந்தியாவே ஸ்தம்பித்து உள்ளது. வியாபாரத் தளங்களில், 'புது ரூபாய் நோட்டுகள்தான் வேண்டும், அல்லது நூறு, ஐம்பதாக சில்லைறையாக வேண்டும்' என்கிறார்கள் வியாபாரிகள் அனைவரும்.இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குக் கூட கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு வங்கிகள், பெட்ரோல் பங்க், தபால் நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால், கடந்த இரு தினங்களாக பல பெட்ரோல் பங்க் மற்றும் மருத்துவமனைகள் இந்த அறிவிப்புகளை காதில் வாங்கிக்கொள்ளாமல், 'புது ரூபாய் நோட்டுகளைத் தான் வாங்குவோம் அல்லது சில்லரையாகத்தான் வாங்குவோம்' என்று சொல்லிவருகிறது.

இந்த நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மாட்டோம் என்று அடம்பிடித்த மருத்துவமனை ஒன்றில், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களை 40 ஆயிரம் ரூபாய்க்கு மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு போய் தக்கப் பாடம் புகட்டியுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுகந்தா சாலே. சில தினங்களுக்கு முன் இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், பி.பிபோடர் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமையன்று இரவு, 'சிகிச்சை முடிந்தது. சிகிச்சைக்கான கட்டணம் ரூபாய் 40 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு நோயாளியை அழைத்க்ச் செல்லலாம்' என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால், சுகந்தா சாலே குடும்பத்தினர் வங்கிக்குச் சென்று 500, 1000 ரூபாய் நோட்டுகளாக 40 ஆயிரத்தை எடுத்து வந்திருக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்று இரவே மத்திய அரசு, '500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவித்துவிட்டது. இதனால், இவர்கள் கொடுத்த 500, 1000 ரூபாய் தாள்களை மருத்துவமனை நிர்வாகம் வாங்க மறுத்துவிட்டது. 'எங்களுக்கு 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் தாள்களாகத்தான் வேண்டும்; அதுவரை நோயாளியை டிஸ்சார்ஜ் செய்ய இயலாது' என்றும் சொல்லியிருக்கின்றனர்.

'காசோலையாகத் தருகிறோம் டிஸ்சார்ஜ் செய்யுங்கள்' எனக் கேட்டதற்கும் மருத்துவமனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தா சாலேவின் குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்குப் பாடம் புகட்ட நினைத்தார்கள். அதன்படியே வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக பிரச்னையைச் சொல்லி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடத்தில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் காசுகளாக அனுப்பும்படி உதவி கேட்டுள்ளனர்.

இந்த வகையில் அவர்கள் சேகரித்துக் கொடுத்த 40 ஆயிரம் சில்லரையையும் ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள் சுகந்தா சாலே குடும்பத்தினர். ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ இப்போது, 'சில்லரைகளாக வேண்டாம். காசோலையாக கொடுங்கள் வாங்கிக்கொள்கிறோம்' என்று யு டர்ன் அடித்திருக்கின்றனர். ''இந்தியாவில் மாற்றத் தக்க சில்லைறை காசுகளை கொடுக்கிறோம்.... நீங்கள் வேண்டாம் என்கிறீர்கள். வாங்க மறுத்தால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்போம்" என்று மிரட்டியுள்ளனர்.

இதன்பின்னர், 'சில்லறை காசுகளை வாங்குவதை தவிர வேறு வழியில்லை' என்ற முடிவுக்கு வந்த மருத்துவமனை நிர்வாகம், ஆறு ஊழியர்களைக் கொண்டு 'காசு சரியாக உள்ளதா?' என எண்ணிப் பார்த்தபிறகே, சுகந்தா சாலேவை டிஸ்சார்ஜ் செய்துள்ளது.

இதுவல்லவோ மருத்துவ சேவை!

விரட்டும் வங்கிகள்... மல்லுக்கட்டும் மக்கள்... தொடரும் அவஸ்தைகள்!



500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகள் முன்பு மக்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு விதிமுறையை அறிவித்து மக்களை வங்கிகள் விரட்டியடிப்பதால் பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் பெரிதும் அல்லல்படுகின்றனர்.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ம் தேதி அதிரடியாக அறிவித்தார். அடுத்து 9ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஏ.டி.எம் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி முதல் வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புதிய வரவான 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக வங்கிகளில் மக்கள் கால்கடுக்க காத்திருக்கின்றனர். புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்து அன்றாட செலவுகளை மக்கள் சந்திக்க முடிவதில்லை. இதனால் புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்களையும் மக்கள் கேட்டு பெறுகின்றனர். ஆனால் அத்தகைய நோட்டுக்களை பெரும்பாலான வங்கிகள் மக்களுக்கு வழங்குவதில்லை.

இந்நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஒருநாளைக்கு 4000 வரை பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ற வரையறை வகுக்கப்பட்டது. இதனால் மக்கள் ஒவ்வொரு வங்கி கிளையாக சென்று 4000 ரூபாய் என்ற விதத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு முடியுமா அவ்வளவு தொகையை பெற்று வந்தனர். இதற்கு 'செக்' வைக்கும் வகையில் ஒரு நபர் ஒரு வங்கியில் 4000 ரூபாயை வரை மாற்றும் வகையில் புதிய வரையறையை வகுத்துள்ளது வங்கி.

இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "ஆதார்கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசு ஊழியர்களின் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டைகளைக் கொண்டு பணத்தை மாற்றும் மக்கள், ஒவ்வொரு வங்கிகளிலும் ஒரு அடையாள அட்டைகளை கொடுத்து வந்தனர். ஒரே வங்கியின் மற்றொரு கிளைக்கு ஒரே நபர் பணத்தை மாற்ற முடியாது. அதே நபர் மற்றொரு வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக தனியார் வங்கிகள், ஒரு நபர் 4000 ரூபாய் மாற்றினால் அந்த நபர் 12 நாட்களுக்குப் பிறகே மாற்ற வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 4000 ரூபாயை மாற்றிக் கொள்ளலாம். அவசர தேவையாக பணம் தேவைப்படுபவர்கள், தங்களுடைய பணத்தை டெபாசிட் செய்யலாம். அதில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளலாம்" என்றனர்.



வங்கிகளின் இந்த அதிரடி அறிவிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் கையில் வைத்திருக்கும் 500, 1000 ரூபாய் பணத்தை மாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். ஏ.டி.எம் மையங்களும் காலியாக காட்சியளிப்பதால் அங்கும் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். இதனால் மக்கள், பணத்தை மாற்ற பரிதவித்து வருகின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி தரப்பில் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள் விடுமுறையின்றி செயல்படும. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வங்கிகளிலும் தேவையான பணம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளின் இந்த நடவடிக்கையால் மக்கள், புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற தில்லாலங்கடி வேலைகளிலும் ஈடுபட தொடங்கி விட்டனர். குறிப்பாக கமிஷன் அடிப்படையில் ஒருவருடைய அடையாள அட்டைகளைப் பெறுகின்றனர். பணத்தை மாற்றி கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் கமிஷனாக வழங்கப்படுகிறது. சில தனியார் வங்கிகளில் இதற்கென ஏஜென்ட்களும் இருக்கின்றனர். வங்கிகளின் கெடுபிடியால் அவர்களை தேடி மக்கள் செல்லத் தொடங்கி விட்டனர்.

புதிய 2000 ரூபாய் பெற மக்கள் 2000 அவஸ்தைகளை நாள்தோறும் அனுபவித்து வருகின்றனர்.

எஸ்.மகேஷ்

NEWS TODAY 27.09.2024