Saturday, November 19, 2016

இந்த வெள்ளிக்கிழமையை யாருக்கு டெடிகேட் பண்ணப் போறீங்க? #MorningMotivation #FridayFeeling


வெள்ளிக்கிழமை என்றாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், விடுமுறை தினம் அருகில் என்பதே முதன்மையாக இருக்கும். பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு விடுமுறை தினங்களில் நண்பர்களோடு கூடிக் கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். அலுவலகம் செல்வோருக்கு 'அப்பாடா... ரெண்டு நாள் (அ) ஒருநாள் வீட்ல ஹாயா இருக்கலாம்' என்று எண்ணம் இருக்கும். ஆனால் எந்த வெள்ளிக்கிழமையையாவது யாருக்காவது டெடிகேட் செய்ததுண்டா நீங்கள்?
அதென்ன சம்பிரதாயம் என்கிறீர்களா? சொல்கிறேன்.
ஒரு வாரத் துவக்கத்தில், மனது உற்சாகமாய் உணரும்போது இந்த வாரத்தில் இதை இதை செய்வேன் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

அதையெல்லாம் செய்தீர்களா.. இல்லையா என்று எந்த வாரமாவது அலசியிருக்கிறீர்களா? ஆம் என்றால்.. சபாஷ்.. நீங்கள் அல்ரெடி லீடர். இல்லையென்றால்.. டோண்ட் வொர்ரி.. இதோ சில டிப்ஸ்.
ஒரு பேப்பரையும் பேனாவையும்.. சரி விடுங்கள்.. சிஸ்டத்தில் புதிய Blank Document ஒன்றை திறந்துகொள்ளுங்கள். இந்த வாரத்தில் நீங்கள் எதெதற்கெல்லாம் பாராட்டு வாங்கினீர்கள் என்று குட்டி லிஸ்ட் ஒன்று போடுங்கள். ரொம்ப சின்ன விஷயமாக இருக்கலாம்... பெரியதாகவும் இருக்கலாம். வாய் வார்த்தையாக இல்லாமல் செய்கை மூலமாகவும் அந்தப் பாராட்டு இருக்கலாம். சில உதாரணங்கள் பார்ப்போமா?
1. ப்ளூ கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸும் எனக்கு நன்றாக இருப்பதாக வினோத் சொன்னான்.
2 ஃபைலை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்ததாக மீட்டிங்கில் மேனேஜர் என் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
3. மகளுக்கு ஹோம்வொர்க்கில் சந்தேகம் நிவர்த்தி செய்தபோது அவள் கட்டிப்பிடித்து தேங்க்ஸ்பா என்றாள்.
4. ரோட்டில் ஒருவர் குறுக்கே வர, பைக்கை நிறுத்தியபோது அவர் நன்றி சொல்லும் விதமாய் புன்னகைத்துச் சென்றார்.
இப்படி நடந்ததையெல்லாம் மனசுக்குள் ரீவைண்ட் செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது பிரியுங்கள். மேலே உள்ள உதாரணங்களில் இருந்தே பார்க்கலாம்;
நம்பர் 1-ல் நீங்கள் பெர்சனலாக, பெர்சனாலட்டியில் சிறப்பாக இருந்திருக்கிறீர்கள்.
நம்பர் 2-ல்: ஒரு அலுவலக ஊழியராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறீர்கள்.
நம்பர் 3-ல் குடும்பஸ்தராக, குடும்ப உறுப்பினராக நல்ல பெயர் எடுத்திருக்கிறீர்கள்.
நம்பர்4-ல் சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக யாரோ ஒருவரால் ஒருநொடி அடையாளம் காணப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் ஒருவர்... ஒவ்வொரு சூழலிலும் அந்தச் சூழலுக்கு தகுந்த மாதிரி செயல்பட்டு பெயரெடுத்திருக்கிறீர்கள்.
இதில் எந்தப் பாராட்டு உங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது என்று கொஞ்சம் பின்னோக்கிச் சென்று யோசித்துப் பாருங்கள். அந்த விஷயம்தான் உங்களுக்குப் பிடித்த - உங்களின் உள்ளுணர்வு சொல்லும் - நீங்கள். அதற்காக மற்றவை உங்களுக்கு விருப்பமில்லை என்றோ.. தேவையில்லை என்றோ அர்த்தமில்லை. அவை உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். நான்குமே கூடப் பிடித்திருக்கலாம் தப்பில்லை. அப்படி நீங்கள் விரும்பி செய்த, அல்லது செய்து பிறரால் பாராட்டுப் பெற்று நீங்கள் மகிழ்ந்த விஷயத்துக்காக இந்த வெள்ளிக்கிழமை நீங்களே உங்களை தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, இந்த வாரம் செய்யலாம் என்று நினைத்து செய்யாமல் விட்ட விஷயங்களை எழுதுங்கள். அடுத்த வாரம் இதை முடிப்பேன் என்று சபதமெல்லாம் தேவையில்லை. எழுதி முடித்தபிறகு பார்த்தால், தேவையில்லாமல் நாமாக சில விஷயங்களை செய்வதாக கமிட் ஆகிக்கொண்டிருப்போம். அதெல்லாம் வேஸ்ட்.. செய்யவே போவதில்லை... செய்யவும் கூடாது என்று தோன்றும். அதை மனதிலிருந்து CTRL+ALT+DELசெய்யுங்கள். அதன்பிறகு எஞ்சியிருப்பதை அடுத்த வாரம் செய்கிறீர்களா.. இல்லையா என்று சும்மா நினைத்துக் கொள்ளுங்கள்.'கண்டிசனா செய்வேனாக்கும்' என்றெல்லாம் நிர்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.

ஓகேவா? Done? இனி என்ன என்கிறீர்களா? இனி என்ன... திங்கட்கிழமையை உற்சாகமா எதிர்கொள்ளணும்னா...வார இறுதியை எப்படி மாத்தலாம்னு சில யோசனைகள் இருக்கே.. அதுபடி எதாவது பண்ணுங்க. மேல டாகுமெண்ட்ல எழுதினது / டைப்பினதை சும்மா சேமிச்சு வெச்சு அடுத்த வெள்ளி எடுத்துப் பார்த்துக்கோங்க.
விஷயம் என்னன்னா, ரொம்ப சிம்பிள். ரீவைண்ட் பண்ணிப் பார்க்காததால நிறைய விஷயங்களை நாம கவனிக்கறதில்லை. தேவையில்லாம சில கமிட்மெண்ட்கள்ல மாட்டிக்கறது, முடிக்கணும்னு நினைச்சு ஈஸியா முடிக்காம இருக்கற சில விஷயங்கள், நாம சிறப்பா சில செயல்களை செஞ்சிருந்தாலும், அதை நாமளேகூட உணராம இருக்கறது இப்படி. இந்த மாதிரியான ரீவைண்ட் மெக்கானிசம் பெரிய மாற்றங்களை நிச்சயம் கொண்டுவரும். வெள்ளிக்கிழமையின் உற்சாகத்தை அது பன்மடங்கு அதிகரிக்கும்.
ஆக.. இதையெல்லாம் பண்ணினா, இந்த வெள்ளிக்கிழமையை யாருக்கு டெடிகேட் பண்ணணும்னு ஒரு தெளிவு கிடைக்கும். கிடைச்சுதா? யாருக்குன்னு தெரிஞ்சதா?

என்னது.. இவ்ளோ யோசனை சொல்ற எனக்கா? அட.. போங்க பாஸு.. அந்த மாதிரி ரீவைண்ட் லிஸ்ட் போட்டா, உங்களுக்கு நீங்களே டெடிகேட் பண்ணிப்பீங்க. Yes.. You Are The Best! 
-பரிசல் கிருஷ்ணா
Dailyhunt

டாஸ்மாக் பரிமாற்றத்துக்கும் அதிரடி செக்! -வலையில் சிக்கிய அதிகாரிகள்



பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக, விசாரணை வளைத்துக்குள் சிக்கியுள்ளனர் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சிலர். ' வங்கிகளில் பணத்தை மாற்றியது குறித்து ஆதாரபூர்வமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன' என அதிர வைக்கின்றனர் ஊழியர்கள்.

மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை 100, 50 ரூபாய்களாக மாற்றுவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அதிலும், அரசு நிறுவனங்களில் பணம் புழங்கும் இடங்களில், அதிகாரிகளே தங்களது கள்ளப் பணத்தை மாற்றிக் கொள்வதாக புகார் எழுந்தது. அண்மையில், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உள்பட்ட டிப்போக்களில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள், தேர்தல் செலவுகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய்களை மாற்றியதாக புகார் எழுந்தது.

இதன்பேரில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

அதேபோல், ஆவின், அமுதம் அங்காடிகள், கருவூலம் ஆகியவற்றில் பணம் மாற்றிக் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. குறிப்பாக, விருதுநகர் உள்பட சில மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் உயர் அதிகாரிகள் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் பழைய நோட்டுகளைத் திணித்துவிடுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில், 'இனி ஒவ்வொரு நாளும் டாஸ்மாக் கடைகளில் இருந்து வங்கிளுக்குச் செலுத்தப்படும் பணத்தைப் பற்றிய டினாமினேஷன்களை நகல் எடுத்து அனுப்ப வேண்டும்' என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்பார்க்காத டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

"தமிழ்நாடு முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கடைகளிலும் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இப்படி வசூலாகும் தொகைகள் மட்டும் இரண்டாயிரம் கோடியைத் தாண்டும். இந்தப் பணத்தில் பெரும்பகுதி மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்குச் சென்று சேருகிறது" என விவரித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர், "இந்தப் பணத்தை சிலர் ரியல் எஸ்டேட் உள்பட சில தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். சில அதிகாரிகள் பெரும் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை நல்ல நோட்டுகளாக மாற்றுவதற்கு டாஸ்மாக் சூப்பர்வைசர்களைப் பயன்படுத்தி வந்தனர். விருதுநகர், வேலூர் உள்பட பல மாவட்டங்களில் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையில் சில்லறை நோட்டுகளாக மாற்றப்பட்டு வந்தன.

மத்திய அரசின் அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள் பல கோடி ரூபாய்கள், நல்ல நோட்டுகளாக மாறிவிட்டன. சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கள்ளப் பணமும் மாற்றப்படுவதாக புகார் எழுந்தது. இதில் சூப்பர்வைசர்களுக்கும் கணிசமான அளவுக்குக் கமிஷன் கிடைத்தது. இதுதவிர, பார் எடுத்து நடத்தும் அரசியல் புள்ளிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு, 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் சம்பவங்களும் நடந்தன. ' இந்தச் செயலில் யார் யார் ஈடுபடுகிறார்கள்' என அனைத்து விவரங்களும் டாஸ்மாக் எம்.டி.யின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, 'வங்கிகளில் செலுத்தப்படும் டினாமினேஷன் நகல்கள், செலான்களோடு இணைத்து அனுப்ப வேண்டும்' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் வருமானமும் கண்காணிப்பிற்குள் வர இருக்கின்றன. எந்தக்கடையில் இருந்து அதிகப்படியான 500, 1000 வெளியில் சென்றுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது" என்றார் விரிவாக.

'ஒவ்வொரு அரசுத் துறைகளிலும் எவ்வளவு ரூபாய்கள் மாற்றப்படுகின்றன என்பது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் நடவடிக்கை பாய்வதற்கு முன், எச்சரிக்கை நடவடிக்கையாகவே டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என்கின்றனர் அதிகாரிகள் சிலர்.

- ஆ.விஜயானந்த்

Dailyhunt

"சாதாரண மனிதர்களால் குருசாமியாக முடியாது"- நம்பியார்சாமியின் வாக்கு! (நம்பியார் நினைவு தின பகிர்வு)

 '

வில்லன்...' என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருபவர் நம்பியார். தமிழ் சினிமாவில் அவருடைய வில்லன் பாத்திரம் வேறு யாராலும் ஈடுசெய்ய முடியாதது. கட்டான உடல்வாகு, கர்ஜிக்கும் குரலில் அனல் பறக்கும் வசனங்கள், ஹீரோக்களுடன் போடும் சண்டைக் காட்சிகள், வில்லத்தனமான சிரிப்புடன் அவர் கைகளைப் பிசைந்தபடி தலையைச் சாய்த்துப்பேசும் பாடிலாங்வேஜ்...

நினைத்த மாத்திரத்தில் நம் மனக்கண்ணில் தோன்றுபவை.

சினிமாவில் அவர் காட்டிய முகம் வில்லன், கொடுமைக்காரன், பணத்துக்காக எதையும் செய்பவன், ஏழைகளையும் பெண்களையும் துன்புறுத்துபவன்... `அப்படிப்பட்டவர், நிஜ வாழ்க்கையிலும் மோசமான ஆளாகத்தானே இருப்பார்?' என்று ரசிகர்களை எண்ணவைத்தன அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்.

நம்பியார் அடிவாங்குகிறாரா? அதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று கொப்பளிக்கும். ஏதோ ஒரு பழி உணர்வைத் தீர்த்துக்கொண்ட திருப்தி ஏற்படும். ஒரு காலத்தில் பெண்களாலும் ரசிகர்களாலும் திரையரங்குகளில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என்.நம்பியாராகத்தான் இருக்க முடியும்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, `நம்பியார்' என்ற பெயர் உருவாக்கிய பிம்பம் இதுதான். ஆனால், திரைப்படங்கள் உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைப்பிடித்தவர் என்பதுதான் பலரும் அறியாத அச்சு அசல் உண்மை.
நம்பியாரின் ஆன்மிக முகம் பிரசித்தமானது. மிகச்சிறந்த ஐயப்ப பக்தர். அவரை அறிந்தவர்கள், நெருங்கியவர்கள் பக்தி கலந்த மரியாதையுடன் அவரை `குருசாமி' என்றோ, `நம்பியார்சாமி' என்றோதான் அழைப்பார்கள்.

அவரது 65 ஆண்டுகால ஆன்மிகப் பாதையில் அவருடன் பல பிரபலங்கள் பயணத்திருந்தாலும், அவரது உள்ளம் கவர்ந்த ஐயப்ப பக்திப் பாடகர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வீரமணி ராஜு. இவர், பிரபல ஐயப்ப பக்திப்பாடல் புகழ் கே.வீரமணியின் அண்ணன் மகன். இவர், நம்பியாரின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர் நம்பியார் நினைவாக நடத்தும் பிறந்தநாள் விழாவில் தவறாமல் பங்கேற்று, பாடி வருபவர்.

அவர், நம்பியாருடன் சென்ற சபரிமலை யாத்திரை... குருசாமியாக நம்பியார் கூறிய ஆலோசனைகள்... அவருடனான தனது அனுபவங்கள்... அத்தனையையும் நம்பியாரின் நினைவு நாளான இன்று (நவம்பர் 19) நினைவுகூர்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட நம்பியார்சாமி குறித்த நீங்காத நினைவுகள்...

சபரிமலையைப் பிரபலமாக்கியவர்!

``சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான். இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர். அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்.

இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே. எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம். அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி!
யார் குருசாமி?
60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி'யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி' என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்' என்பார்.
அதேபோல குருசாமி யார்? என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார். `18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி' என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்தினார்.

ஐயப்பனுக்கு சீசனா?
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்' என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்... இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா?' என்பார் அவர் பாணியில்.
`அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி' என்பார்.
மாதா, பிதா, குரு...
`சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்' என்பார்.
புனித யாத்திரையில் கண்டிப்பு
`எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறைவுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது' என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி.
எம்.ஜி.ஆரின் மரியாதை
நம்பியார் இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும்போது, அவரது மனைவி ருக்மணிதான் நெய்த் தேங்காயில் நெய் ஊற்றி பயணத்தைத் தொடங்கி வைப்பார். அதேபோல எம்.ஜி.ஆர் உயிரோடு வாழ்ந்த காலம் வரை, அவர் அனுப்பிவைக்கும் மாலைதான் முதல் மாலையாக நம்பியாருக்கு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது.

ஊருக்கு உபதேசம்!
'ஊருக்குத்தான் உபதேசம்' என்றில்லாமல் அவர் போதித்த விஷயங்களுக்கு அவரே முன்னுதாரணமாக அவற்றைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். விரத காலங்களில் மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் இறுதி வரை குடிப்பழக்கம், புகைப் பழக்கம் என எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத மாமனிதர் அவர். கறுப்பு வெள்ளைக் (சினிமா) காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. ஆனால், அதற்கான எந்த தலைக்கனமும் அவரிடம் இருந்ததில்லை. திரையில் வில்லனாகத் தோன்றினாலும், நிஜத்தில் எந்த கெட்டப் பழக்க வழக்கங்களும் இல்லாத கதாநாயகனாகத்தான் வாழ்ந்தார். இவரிடம் நடிகர்கள் மட்டுமல்ல, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.

2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால், ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் நம்புகிறோம்.''

- ஜி.லட்சுமணன்
Dailyhunt
இது இல்லாததால்தான்... இவை அரங்கேறின

'கோயில்களைக் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நாட்டில், கழிவறை வசதியை ஏற்படுத்துவற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கூறியிருந்தார். பிரதமர் ஆனபிறகு 'தூய்மை இந்தியா' திட்டத்தைக் கொண்டுவந்தார். பிரதமராகப் பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் காண நினைத்த, 'தூய்மை இந்தியா' இன்னும் நனவாகாத நிலையில், தற்போது கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிக்க 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளில் (நவம்பர்-19), 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில்... கழிப்பறை வசதி இல்லாமல் ஆற்றங்கரைகளையும், ஏரிக்கரைகளையும் தேடிச்செல்வோர் அதிகமிருக்கிறார்கள் என்பது அவரது கவனத்துக்குச் சென்றிருக்குமா எனத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்.

இருட்டிய பின்பு... இல்லையேல் விடியலுக்கு முன்பு. இப்படித்தான் பல கிராமப்புறப் பெண்களின் நிலை இருக்கிறது. 'அருகில், பொதுக் கழிப்பிடம் எங்கே இருக்கிறது' எனத் தெரியாமலேயே (அது நிறைய இடங்களில் இல்லாததால்) அவசரத்துக்குக்கூட இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் நகரப் பெண்களின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு எல்லையே இல்லை. பாலியல் துன்புறுத்தல், கல்வி பாதிப்பு, விஷப் பூச்சிகளால் உயிரிழப்பு, மாதவிலக்கால் ஏற்படும் நோய்த்தொற்று... இன்னும் எத்தனையோ? இவை ஒருபுறமிருக்க, 'கழிப்பறை' என்கிற ஒரே ஒரு வசதியில்லாமல் கீழ்க்கண்ட பெண்கள் அடைந்த நிலையை நீங்களும் கொஞ்சம் படியுங்களேன்...

தற்கொலை செய்துகொண்டனர்!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், குண்டலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. கல்லூரி மாணவியான இவர், தொடர்ந்து தன் பெற்றோரிடம் வீட்டில் கழிப்பறை கட்டித் தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவர்களுக்கோ வறுமை காரணமாக கழிப்பறை கட்டித் தர முடியாத நிலை. இதனால் மனமுடைந்த ரேகா, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர் எழுதிய கடிதத்தில், ''அப்பா எனக்கு வெட்கமாக இருக்கிறது... நான், ஒரு கல்லூரி மாணவி. எனது உணர்வுகளை புரிந்துகொள்ளுங்களேன்'' என்று உருக்கமாக அதில் எழுதியிருந்தார்.





ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பு குமாரி. கல்லூரி மாணவியான இவர், தன் வீட்டில் கழிப்பறை அமைத்துத் தருமாறு பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார். இதை அவர்கள் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த குஷ்பு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ''தன் மகளின் திருமணத்துக்காகப் பணம் சேர்த்து வந்ததாகவும், கழிப்பறை கட்டினால் பணம் செலவாகிவிடும் என்ற காரணத்தால் குஷ்புவின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை'' என்று அவரின் தந்தை ஸ்ரீபதி கூறியிருந்தார்.

பாலியலுக்கு இரையாகி கொலை செய்யப்பட்டார்!

தஞ்சை மாவட்டம் சாலியமங்கத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர், இரவு நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, வீட்டுக்குப் பின்புறமுள்ள கருவேலங்காட்டுக்குச் சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த வாலிபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்தார். ''எங்கள் குடியிருப்பில் டாய்லெட் வசதி கிடையாது. இருந்திருந்தால் என் பொண்ணு செத்திருக்க மாட்டாள்'' என்று அப்போது அழுது புலம்பினார் அவரது தந்தை ராஜேந்திரன்.

திருமணத்தை நிறுத்தி மற்றொருவரை மணந்தார்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் நேகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து வந்தனர். இந்தநிலையில், மணமகன் வீட்டில் கழிவறை கட்டவேண்டும் என்று மணமகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.





உலக கழிப்பறை தினத்தின் சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்..

ஆனால், திருமண தேதி நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படவில்லை. இதனால் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்திய நேகா, பலதரப்பட்டவர்களால் பாராட்டப்பட்டார். அத்துடன், கழிப்பறை வசதிகொண்ட வேறொரு மணமகனைத் திருமணம் செய்து கொண்டார்.

கணவரைப் பிரிந்த பெண்!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா தேவி. இவர், தன் கணவரிடம் கழிப்பறை கட்டித் தருமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர் சொன்னதைப் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் அவரது கணவர். இதனால் பொறுமையிழந்த சுனிதா தேவி, தன் கணவரை விட்டுப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

நாட்டில் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணம், 'கழிப்பறை' என்கிற அத்தியாவசியத் தேவை ஒன்று இல்லாததுதான்.

கழிப்பறை இல்லாத அனைத்து வீடுகளிலும் கழிவறைகளை அமைப்போம்... களிப்புடன் வாழ்வோம்!

- ஜெ.பிரகாஷ்
Dailyhunt

ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தில் வருமானவரித்துறை 8 கோடி பறிமுதல்! பின்னணி தகவல்கள்



சென்னையில் உள்ள ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இன்று ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் சமீபத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களாகும்.
எதற்காக இந்த சோதனை என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "நாடு முழுவதும் கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழிக்கவே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் கணக்கில் காட்டப்பட்ட 500, 1000 ரூபாயை மக்கள் தைரியமாக வங்கிகளில் மாற்றியும் டெபாசிட் செய்தும் வருகின்றனர். ஆனால் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களால் அதை மாற்ற முடியவில்லை. இதனால்,சிலர் குறுக்கு வழியில் பணத்தை மாற்றுவதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகளில் சோதனை நடத்தினோம். சென்னை ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் அந்த குழுமத்துக்கு சொந்தமான கல்லூரியில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்துள்ளோம். அந்தப் பணத்துக்கு உரிய கணக்கு காட்டினால் அதை திரும்ப கொடுத்து விடுவோம். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.



செல்லாத என்று அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுக்களை கல்லூரி ஊழியர்கள் மூலம் மாற்றவும் முயற்சிகள் நடந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகவே அங்கு 8 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகிறது. ஆனால் அதற்கு முன்பே வருமானவரித்துறை அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளது.இது போல கறுப்புப் பண முதலைகள் தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் வங்கிகளில் வருமானவரி உச்சவரம்பிற்கு ஏற்ப டெபாசிட் செய்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

"ஜே.பி.ஆர் கல்வி குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனை மற்ற கல்வி குழுமத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பே தகவல் கிடைத்த சென்னையை சேர்ந்த பிரபல கல்வி குழுமம் குறிப்பிட்ட பெரிய தொகையை கை மாற்றிவிட்டுள்ளது. அதுபோல இன்னொரு தனியார் மருத்துவ கல்லூரியும் இதை செய்துள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு எந்தவகையில் அந்த கல்வி குழுமங்களுக்கு சென்றது என்பது விவரம் தெரிந்தவர்களின் கேள்வியாக உள்ளது. இதில் பிரபல கல்வி குழுமத்துக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருக்கும்" என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

ஜே.பி.ஆர் கல்வி குழுமம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கணக்கு காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடங்களிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை தயாராகி விட்டது. பான் கார்டு, ரகசிய தகவல்கள் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் பதுக்கி வைத்த கறுப்புப் பணத்தை மாற்ற சிலர் குறுக்கு வழிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்த கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கென தனி நெட்வோர்க் செயல்படுகிறது. சென்னையில் கைமாறும் கறுப்புப் பணத்துக்கு மதுரையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அடுத்து திருச்சியில் கை மாறும் கறுப்புப் பணத்துக்கு சென்னையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழகம் முழுவதும் செயல்படும் இந்த கும்பல், போனிலேயே பேரம் பேசி கறுப்புப் பணத்தை கை மாற்றி விடுகின்றனர். கடைசியில் கறுப்பு பணமாக இருக்கும் செல்லாத 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் செலுத்தப்படுவது புரியாத புதிராக உள்ளது. இந்த நெட்வோர்க்கில் தனிநபர் முதல் சில வங்கி அதிகாரிகள் வரை உள்ளனர். அரசியல்வாதிகள் முதல் தொழிலபதிபர்கள் வரை தங்களால் முடிந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை செல்லும் கரன்சியாக மாற்றி வருகின்றனர். இதைத் தடுக்க வருமானவரித் துறை கிடுக்குப்பிடி போட்டாலும் அதிலிருந்து கறுப்பு பண முதலைகள் தப்பி விடுவது வேதனை அளிக்கிறது, எனவே இந்த காலக்கட்டத்தில் வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையே கறுப்பு பணத்துக்கு போடப்படும் கடிவாளமாக அமையும்.


எஸ்.மகேஷ்

மதிப்புமிகு ஆசிரியர்கள்

By த. ஸ்டாலின் குணசேகரன்  |   Published on : 19th November 2016 12:54 AM  

அறிஞர்கள் பாராட்டப்படாத நாட்டில் அறிஞர்கள் தோன்ற மாட்டார்கள். கவிஞர்கள் போற்றப்படாத தேசத்தில் கவிஞர்கள் முகிழ்க்க மாட்டார்கள். அறிவியல் மேதைகள் ஊக்கப்படுத்தப்படாத மண்ணில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அரிதாகவே நிகழும் என்பது உலகப் பெரும் அறிஞர்கள் பலராலும் அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.
இதன் அடிப்படையிலேயே மிகச்சிறந்த ஆசிரியர்கள் உருவாக அடித்தளமிடும் சிந்தனையோடு ஆசிரியர் பாராட்டு விழா ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மேல் நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெறுகிறபோது பள்ளித் தலைமையாசியர்கள் அந்தந்தப்பள்ளியின் தேர்வு அதிகாரிகளாகச் செயல்படுகின்றனர். வேறுபள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இவரின் பள்ளிக்கு தேர்வு நடைபெறுகிற வகுப்பறைகளில் மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் பணிக்கப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடக்கும் சூழலில் தேர்வு நடைபெறும் ஓர் அரசு மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் காலை தேர்வு தொடங்கியதும்மாணவர்கள் தேர்வெழுதுகிற வகுப்பறைகள் ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். அப்போது தேர்வு தொடங்கி சில நிமிடங்களானபின்பும் ஒரு மாணவன் இடம் காலியாக இருந்தது.அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசித் தேர்வு. அதற்கு முன்பு நடைபெற்ற நான்கு தேர்வுகளுக்கும் அம்மாணவன் வந்து தேர்வு எழுதியதையும் அன்று மட்டும் கடைசித் தேர்வுவெழுத அம்மாணவன் வரவில்லை என்பதையும் அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியரைக்கேட்டுத் தெரிந்து கொண்டார்.
உடனே அம்மாணவனின் முகவரியை அவரிடமிருந்த ஆவணங்கள் மூலம் தேடியெடுத்து தேர்வுக் கண்காணிப்பில் ஈடுபடாத இரண்டு ஆசிரியர்களை அழைத்து அம்மாணவன் வீட்டுக்குச் சென்று அம்மாணவன் தேர்வுக்கு வராத காரணத்தை அறிந்து வருவதோடு இயன்றால் அழைத்து வரவும் கூறினார். அந்த இரண்டு ஆசிரியர்களில் ஒருவர் உதவித் தலைமையாசிரியர்.
இப்பள்ளி ஒரு கிராமத்தில் உள்ளது. அம்மாணவனின் வீடு பக்கத்து ஊரில் இருக்கிறது. பொறுப்பளிக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் தங்களின் இரு சக்கர வாகனத்தில் அம்மாணவன் வீடு உள்ள பகுதிக்குச் சென்றனர். ஊரே காலியாக இருந்தது. விசாரித்ததில் ஊர்க்காரர்களெல்லாம் உள்ளூர் திருவிழாவுக்காக பக்கத்திலுள்ள ஆற்றுக்குச் சென்றவிட்டதாக அறிந்து இரண்டு ஆசிரியர்களும் ஆற்றை நோக்கிச் சென்றனர்.
எதிரில் திருவிழாக் குழுவினருடன் இவர்கள் தேடிவந்த மாணவனும் தலையில் தண்ணீர்க் குடம் வைத்து ஆடிக்கொண்டு வந்துள்ளான். மாணவன் எழுத வேண்டிய தேர்வு குறித்தும் அன்று அவன் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் ஏதுமே அறியாத அம்மாணவனின் பெற்றோரும் அவனைப் போலவே தண்ணீர்க் குடம் எடுத்து அக்கூட்டத்தோடு வந்தனர்.
ஆசிரியர்கள் அவசர அவசரமாக அம்மாணவனை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஈரமாக இருந்த தலையைத் துவட்டிவிட்டு, அவனை சீருடையுடன் பள்ளிக்கு அழைத்து வந்து தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர்.
ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் அம்மாணவனை தேர்வெழுதும் அறைக்கு அழைத்துச் சென்று அவனது இருக்கையில் அமர வைத்துத் தேர்வெழுத வைத்தார் தலைமையாசிரியர்.
தேர்வெழுதத் தொடங்கும் நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கும் மேல்தாமதமாக வரும் மாணவனை தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என்று விதி இருப்பினும் இத்தலைமையாசிரியர் 30 நிமிடங்களுக்கும் மேல் தாமதமாக வந்த அம்மாணவனை அனுமதித்ததோடு, "விதிகளெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்பதற்குத்தானே தவிர அந்த விதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஒருவனின் வாழ்க்கையை வீணடிப்பதற்காக அல்ல' என்று அவ்வகுப்பில் கண்காணிப்புப்பணி செய்து கொண்டிருந்த ஆசிரியரிடம் விளக்கமளித்துவிட்டு "வேண்டுமானால் உங்கள் பாதுகாப்புக்கு அம்மாணவன் 15 நிமிடங்களுக்குள் வந்து விட்டதாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்' என்றும் கூறியுள்ளார்.
அம்மாணவன் அப்பாடத்தில் மட்டுமல்லாது ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று அதே பள்ளியில் மேல் நிலை வகுப்பில் படித்து, அதனையும் முடித்து கல்லூரியில் பட்ட வகுப்பையும் முடித்துதற்போது பட்டதாரியாக உருவெடுத்துள்ளான்.
அரசுப் பள்ளித் தலைமையாசிரியரின் உதவியால், கல்வியின் சுவடேயில்லாத குடும்பத்தில் பிறந்த அந்த மாணவன் தற்போது ஒரு பட்டதாரி.
மின் விளக்குக்கூட இல்லாத குக்கிராமக் குடிசை வீட்டில் வாழும் மிக நன்றாகப் படிக்கக் கூடிய அரசுப் பள்ளி மாணவியின் சூழலையறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள் அம்மாணவிக்கு உதவிட முன் வந்தனர். மாணவியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் தங்களது பொறுப்பில் பெற்றுக் கொடுத்துவிட எண்ணி மின்சாரத் துறையை ஆசிரியர்களே அணுகினர்.
புதிய கம்பங்கள் போட வேண்டியுள்ளதோடு மற்ற தேவைகளையும் சேர்த்து பெரும் தொகை செலவாகும் என்பதையறிந்து, அம்மாணவியின் வீட்டிற்கு ரூ.20,000 செலவிட்டு சோலார் முறை மூலம் மின்னொளி கிடைக்க அம்மாணவியின் ஆசிரியர்களே ஏற்பாடு செய்தனர்.
ஆசிரியர்களின் இவ்வுதவியைப் பெற்ற அம்மாணவி மிகச் சிறப்பாகப் படித்துத் தேர்ச்சி பெற்றதோடு நல்ல மதிப்பெண்களையும் பெற்றார். ஆசிரியர்கள் தங்கள் கடமைஅத்தோடு முடிந்தது என்று கருதிவிடாமல் ஊக்கத்துடன் உழைக்கும் அம்மாணவிக்கு சென்னையிலுள்ள ஓர் அறக்கட்டளையின் உதவியைப் பெற வழிவகை செய்தனர்.
ஆசிரியர்களின் உதவியால் அந்த அறக்கட்டளையினர் அம்மாணவியின் வீட்டிற்கே வந்து ஆய்வு செய்து மேற்படிப்பை புகழ்மிக்க சென்னைக் கல்லூரியில் தொடர ஆவன செய்ய, தற்போது எவ்விதச் செலவுமில்லாமல் அம்மாணவி சென்னையில் பட்டப் படிப்பைச் சிறப்பாகப் படித்து வருகிறார்.
பவானியைச் சேர்ந்த அரசுப் பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் தனது நீண்ட காலக் கல்வி அனுபவத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்த முடிவு செய்தார். ஈரோடு அருகில் பெரிய அக்ரஹாரம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரப் பாட ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுவதையறிந்து அப்பள்ளித் தலைமையாசிரியரை அணுகி மாணவர்களுக்குப் பொருளாதாரப் பாடத்தைத் தான் எடுக்க விரும்புவதாகக் கூற தலைமையாசிரியரும் மகிழ்வோடு சம்மதித்தார்.
தினசரி இரு சக்கர வாகனம் மூலம் சென்று பாடம் எடுத்தார். பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் படித்ததும், ஆய்வுகள் மேற்கொண்டதும் பொருளாதாரம்தான். பொருளாதாரப் பாட ஆசிரியராகத்தான் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். ஆசிரியர் இல்லாமல் சிரமப்பட்ட மாணவர்களின் குறை முற்றிலும் நீங்கியது மட்டுமல்லாமல் அக்கல்வியாண்டுப் பொதுத் தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் அப்பள்ளி மாணவர்கள் நூறு சதவிகிதத் தேர்ச்சியும் பெற்றனர்.
பெரிய அரசுப் பள்ளியின் தலைமையாசிரியராக செல்வாக்கோடு விளங்கிய ஒருவர் அதைவிட இளையவருக்குக் கீழ் ஒரு ஆசிரியராக மட்டும் இருந்து வேலை செய்வதற்கு பெரிய மனதும், சமூக நோக்கும் வேண்டும்.
போக வர இரண்டு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் செலவையாவது தாங்கள் ஏற்பதே மரியாதை என்று தலைமையாசிரியர் சொன்னபோது அதைக்கூட வாங்க மறுத்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி முழுக்க சேவை மனப்பான்மையோடும் ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்ற பெருநோக்கோடும் அவர் பணியாற்றியுள்ளார்.
இவையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கிற நிகழ்வுகள் என்று இவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட இயலாது. இவையாவும், இத்தகைய சிந்தனையும் எண்ணமும் பல அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் உதாரணங்களேயாகும்.
அத்தகைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் இனம் கண்டு அவர்களின் உழைப்பையும், சமூக உணர்வினையும் அங்கீகரிப்பதும் அவர்களை ஒருங்கிணைப்பதும் அரசின் கடமையாகும்.
இவர்களைப் போலவே அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் செயல்பட அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
அவ்வாறு அவர்கள் செயல்பட்டேயாக வேண்டிய காலச்சூழல் நிலவுகிறது. அவர்களைச் செயல்படுத்துவது குறித்து வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டவும் அவற்றை செயல்படுத்தவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.
இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சமூக நல ஆர்வலர்களுக்கும் அமைப்புகளுக்கும் உண்டு.
இப்பணி அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர் -
தலைவர்,
மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.


Ads by ZINC




பணத்தட்டுப்பாட்டால் மனநல பாதிப்பில் மக்கள்: சம்பவங்களுடன் எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்

பிடிஐ

மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் கிராமப்புற வர்த்தகர்கள் உட்பட பலரும் கடும் அவதிக்குள்ளாகி மனநல பாதிப்பு நிலைக்குத் தள்ளப்படுவதாக உளவியல் நிபுணர்களும் மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் கிராமப்புற உருளைக்கிழங்கு மொத்த விற்பனையாளர் ஒருவர் ரூ.50-60 லட்சம் பெறுமான உருளைக்கிழங்குகளை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். இவர் சிறிய காய்கறி வியாபாரிகளுக்கு அதனை ரொக்கத்திற்கு விற்று வருபவர், ஆனால் மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் வாங்குவதற்கு ஆளில்லாமல் வியாபாரம் நின்று போனது. இதனையடுத்து மனத்தளவில் பாதிப்படைந்த மொத்த வியாபாரி வாய்க்கு வந்த படி பேசிய படி தான் இறந்து விடுவோம் என்ற அச்சப்பட்டு மூலையில் ஒடுங்கிக் கிடப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் பிறகு மூத்த மனநல மருத்துவர் சஞ்சய் கார்க் என்பவரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் கூறும்போது, “தனது ஒட்டுமொத்த ரூ.50-60 லட்சம் பெறுமான உருளைக் கிழங்குகள் விற்காமல் விரயமாகி விடும் என்று அவர் கடுமையாக பயந்து போயுள்ளார். இதனால் ஏற்படும் நஷ்டம் தன்னை அழித்து விடும் என்று மரணபயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பல உளவியல் மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது, ரூபாய் நோட்டு நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு, அன்றாட வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றினால் மனச்சோர்வு உள்ளிட்ட மனநிலை பிரச்சினைகளுடன் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் தங்களை அணுகுவதாக தெரிவித்தார்.

பொதுவாக இவர்கள் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். காரணம் மேற்கு வங்கத்தின் கிராமப்புற வர்த்தகத்தில் கார்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பண உபயோகம் இன்னும் பெரிய அளவுக்கு இல்லை என்பதே.

சாந்தாஸ்ரீ குப்தா என்ற மற்றொரு மன நல மருத்துவர் கூறும்போது, தன்னை அணுகிய கணவனை இழந்த 50 வயது பெண்மணி தன்னுடைய கணவனின் சேமிப்பான ரூ.30 லட்சம் பணத்தை மாற்ற முடியாமல் கடும் மனக்கவலையில் சிக்கினார் என்றார்.

“இந்தத் தொகையில் ஒரு குடியிருப்பு ஒன்றை வாங்கி மீதிப்பணத்தில் தன் மகன் திருமணத்தையும் முடித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் தற்போது கடந்த 10 நாட்களாக கடும் மன அவஸ்தையிலும், மன பாதிப்பிலும் அவர் என்னை அணுகியுள்ளார்,நான் அவருக்கு ஆலோசனைகளையும் சிகிச்சையும் அளித்து வருகிறேன்” என்றார்.

பூரி மற்றும் திகா என்ற ஊர்களில் ஹோட்டல் நடத்தி வரும் அசீஸ் ரே, மத்திய அரசின் நடவடிக்கையை அடுத்து கடுமையாக குடித்து விட்டு குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவதாக மனநல மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

“சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைந்து போனதால் அவரது வர்த்தகம் கடுமையாக பின்னடைவு கண்டது. விடுதியில் தங்கியிருப்பவர்கள் கூட பணத்தை கொடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குடியை அதிகப்படுத்தினார் இதனால் நடத்தையும் பாதிக்கப்பட்டது” என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கார்க் என்பவர் கூறுகிறார்.

ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாராந்திர செக்-அப் செய்து கொள்ள முடியவில்லை, மருத்துவக் கட்டணங்களுக்கு போதுமான பணம் இல்லை.

சில நோயாளிகள் சில சோதனைகளையும் சிகிச்சைகளையும் சீரான இடைவெளியில் எடுத்துக் கொள்வது அவசியம் ஆனால் பணத்தட்டுப்பாடு இவர்களை பாதிப்பதால் அவர்களது ஆரோக்கியம் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது, என்கிறார் மற்றொரு மருத்துவர்.

தற்போது பணத்தட்டுபாடு காரணமாக் மன உளைச்சல் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஆழ்நிலை பிராணாயாமம், இசை கேட்க வைத்தல், நடைப்பயிற்சி உள்ளிட்ட பிற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மனநல மருத்துவர் கார்க் தெரிவித்துள்ளார்.

கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவினால் குடும்ப தலைவிகள் மீதும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவி செய்யும் குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடும்ப தலைவிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை தாராளமாக வங்கியில் டெபாசிட் செய்யலாம். அவர்களின் டெபாசிட் ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதேபோல ஜன்தன் வங்கி கணக்குதாரர்கள் ரூ.50 ஆயிரம் வரை டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் கறுப்பு பணத்தை மாற்ற சில குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மற்றும் ஜன்தன் வங்கி கணக்குதாரர்கள் உதவி செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள் மற்றும் ஜன்தன் வங்கி கணக்குதாரர்களிடம் ஆசைவார்த்தை காட்டி கறுப்புப் பணத்தை மாற்ற சிலர் முயற்சிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதன்படி குடும்ப தலைவிகள், தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இது சட்டப்படி குற்றமாகும்.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை தீவிரமாக ஆய்வு செய்யும். தவறு இழைப்பவர்கள் மீது வருமான வரித் துறை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நோட்டு மாற்றுவதில் சிக்கல்: வங்கிகளில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்பு - பொதுமக்கள் ஏமாற்றம்

விரலில் வைக்க மை வராதது, ரிசர்வ் வங்கியிலிருந்து போதிய அளவில் பணம் விநியோகம் செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் நேற்று பெரும்பாலான வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்று வதில் சிக்கல் ஏற்பட்டது. பல வங்கிகளில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிவித்தது. இதை யடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வரு ழ்ழ்ணம் மாற்றுவதை தடுப்பதற்காக பணம் எடுப்பவர்களின் விரல்களில் மை வைக்கப்படும் என கடந்த செவ் வாயன்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை வங்கிகளுக்கு மை வரவில்லை. இதனால், இத்திட் டத்தை செயல்படுத்துவதில் குழப் பம் நிலவுகிறது.

ரிசர்வ் வங்கி பணம் அனுப்பவில்லை

இந்நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறி விப்பில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500-க்கு பதிலாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தது. இதைக் கேட்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று அந்த 2 ஆயிரம் ரூபாய் கூட பெரும்பாலான வங்கிகளில் வழங்கப்படவில்லை. பல வங்கி களில் டெபாசிட்கள் மட்டுமே ஏற்கப் பட்டன. ரிசர்வ் வங்கியில் இருந்து போதிய அளவில் பணம் விநியோகம் செய்யப்படாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறும் போது, “விரலில் வைப்பதற்கான அடையாள மை வராததால் பெரும் பாலான வங்கிகளில் இன்று (நேற்று) பழைய ரூபாய் நோட்டு களை மாற்றித் தரவில்லை. மேலும், சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிகளில் வழங்கப்படுகின்றன. இதை வாங்க பொதுமக்கள் மறுக்கின்றனர்.

வங்கி ஊழியர்கள் பாதிப்பு

தொடர்ந்து விடுமுறையின்றி வங்கி ஊழியர்கள் வேலை செய்து வருவதால் பலர் உடல்நலம் பாதிக் கப்பட்டு விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் வங்கி வாடிக்கையாளர் களுக்கு சேவை வழங்க முடியாத நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு அவற்றை மாற்றி தரவும் முடிய வில்லை. அத்துடன், மத்திய கூட்டுறவு சங்க வங்கி ஊழியர்களின் போராட் டத்தால் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது, “விரலில் வைக்க மை வராததால் வங்கிகளில் இன்று (நேற்று) பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்தவர்களுக்கு பணம் வழங்கவில்லை. அத்துடன், புதிய 500 ரூபாயும் இதுவரை வரவில்லை. இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் பணம் வழங்க முடியவில்லை’ என்றார்.

ரிசர்வ் வங்கியிலும்..

பணம் மாற்றுவதற்கு கைவிரலில் மை, ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே பழைய நோட்டுக்கள் மாற்றப் படும் என்ற அறிவிப்பால் நேற்று ரிசர்வ் வங்கியில் பணம் மாற்றுவோர் எண்ணிக்கை பெரு மளவு குறைந்தது.

வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத மை வைக்க வேண்டாம்: நிதியமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்


வங்கிகளில் பணம் மாற்ற வாடிக்கையாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச் சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவின்போது வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர் களுக்கு அழியாத மை வைக்க நிதியமைச்சகம் உத்தரவிட்டுள் ளது. இதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச் சகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 19-ம் தேதி பல்வேறு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் பணம் மாற்றச் செல்லும் வாடிக்கை யாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டாம். கை விரலில் அழியாத மை வைக்கும் முறை தேர்தலில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பணம் மாற்றுவதற்கு பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Thursday, November 17, 2016

இவர்களும்தான் பணத்தை ஒழித்தார்கள்.. ஆனால் கடைசியில் என்னாச்சு தெரியுமா?
oneindia tamil

டெல்லி: பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் ஒழிப்பை பலரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். ஆனால் சாமானிய பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அடிப்படைத் தேவைக்காக தெருத் தெருவாக அலைந்து கொண்டுள்ளனர். மோடியைப் போலவே மேலும் பல நாடுகளிலும் கூட பண ஒழிப்பு நடந்தது. ஆனால் எதுவுமே எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதுதான் முக்கியமானது.

உண்மையில் அந்த நாடுகளில் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை, அந்த அரசுகளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கருப்புப் பணத்தை முடக்க அல்லது அழிக்கப் போய் தற்போது பெரும்பான்மையான மக்களின் தவிப்பை வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் திட்டமும், நோக்கமும் மிக நல்ல விஷயம்தான் என்றாலும் கூட முறையான திட்டமிடல் இல்லை. குறிப்பாக வங்கிகள் மகா மோசமான திட்டமிடலை மேற்கொண்டதால்தான் இந்தப் பெரும் குழப்பம். இதையெல்லாம் முன்கூட்டியே சரி செய்திருக்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை. அதுவும் கூட வாயைப் பொத்திக் கொண்டுதான் உள்ளது.

இதற்கு முன்பு பல நாடுகளிலும் இதுபோல அதிரடியாக பெரிய மதிப்பிலான பணத்தை ஒழித்துப் பார்த்தனர். ஆனால் அங்கு தோல்வியிலேயே அந்த நடவடிக்கைகள் முடிந்துள்ளன. அதுகுறித்த ஒரு ரவுண்டப்...

Source: tamil.oneindia.com

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன் அப்போது வெடித்துச் சிதறக் காத்திருந்த நேரம். கார்பசேவ் அதிபராக இருந்தார். ஆண்டு 1991. அந்த ஆண்டு ஜனவரி மாதம் உயரிய மதிப்பிலான ரூபிளை திரும்பப் பெறுவதாக திடீரென அறிவித்தார் கார்பசேவ். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இதை அறிவித்தார் கார்பசேவ். 50 மற்றும் 100 ரூபிள் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் கார்பசேவ்.

நடந்தது என்ன?

ஆனால் இந்த ரூபிள் ஒழிப்பால் எதிர்பார்த்த விளைவு கிடைக்கவில்லை. பணவீக்கம் சற்றும் குறையவில்லை. மாறாக மக்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களிடையே பெரும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்தன. பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. இது கார்பசேவின் பதவியை குறி வைத்த புரட்சிக்கும் வித்திட்டது. அடுத்த ஆண்டே சோவியத் யூனியன் சிதறியது.

வட கொரியா

2010ம் ஆண்டு வட கொரியாவின் மறைந்த சர்வாதிகாரி கிம் ஜோங் 2 இதேபோன்ற கரன்சி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் அது பெரும் விபரீதத்திற்கே விட்டது. நாடே பஞ்சத்தில் மூழ்கியது. சாப்பிடக் கூட எதுவும் இல்லாமல் மக்கள் செத்து விழுந்தனர். மிகப் பெரிய விலை உயர்வையும் நாடு சந்தித்தது. இதை சற்றும் எதிர்பாராத கிம், மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அசரடித்தார். அதேசமயம், இந்த சீர்திருத்தத்திற்கு யோசனை கூறிய நிதித்துறை அமைச்சரை தலையைத் துண்டித்துக் கொலை செய்து கிம் அதிரவும் வைத்தார்.

ஜயர்

ஜயர் நாடு 1990களில் பெரும் பொருளாதார சீர்குலைவுகளைச் சந்தித்தது. இதையடுத்து சர்வாதிகாரி மொபுடு செசே சீக்கோ கரன்சிகளில் சீர்திருத்தங்களை அறிவித்தார். 1993ம் ஆண்டு சில கரன்சிகளை அவர் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டார். அது பெரும் பண வீக்கத்திற்கு இட்டுச் சென்றது. டாலருக்கு எதிரான ஜயர் நாட்டு கரன்சியின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. உள்நாட்டுப் போர் வெடித்தது. 1997ல் மொபுடு ஆட்சியை விட்டுத் துரத்தப்பட்டார்.

நைஜீரியா

நைஜீரியாவில் 1984ம் ஆண்டு ராணுவ சர்வாதிகாரி முகம்மது புஹாரி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தார். புதிய ரூபாய் நோட்டுக்களை அவர் வெளியிட்டார். புதிய நிறத்துடன் வந்த அந்த ரூபாய் நோட்டுக்களால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையே அது சீர்குலைத்து விட்டது. பின்னர் வந்த புரட்சியில் புஹாரி வெளியேற்றப்பட்டார்.

மியான்மர்

1987ம் ஆண்டு மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் புழக்கத்தில் இருந்த பணத்தில் 80 சதவீத மதிப்பை குறைத்து அறிவித்தனர். கருப்புப் பண ஒழிப்பை குறி வைத்தே இந்த நடவடிக்கை. ஆனால் அது அப்பாவி மக்களைத்தான் கடுமையாக பாதித்தது. போராட்டங்கள் வெடித்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

கானா

ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் 1982ம் ஆண்டு 50 செடி கரன்சி ஒழிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் சீர் குலைந்தன. மக்களுக்கு வங்கிகள் மீது இருந்த நம்பிக்கை தகர்ந்தது. நாடே ஸ்தம்பித்தது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பல மைல் தூரம் நடந்து வந்து வங்கிகளில் பணத்தை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்ற முடியாமல் பல கோடிப் பணம் வீணாக மூட்டை மூட்டையாக வீசப்பட்டது.

திட்டமில் இல்லாவிட்டால் தோல்விதான்

சரியான திட்டமிடல் இல்லாததால் வந்த வினைதான் இந்த நாடுகளில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம். இந்தியாவிலும் கூட தற்போது முறையான திட்டமிடல் இல்லாமல்தான் பெரும் குழப்பமாக உள்ளது. எனவே மோடியின் நடவடிக்கை எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்யத்தான் இந்த நடவடிக்கை என்று அரசு சொல்லுமேயேனால் இந்தத் திட்டத்தை தோல்வி என்று இப்போதே கூறி விடலாம்.. காரணம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மக்கள்தான்.. கருப்புப் பண முதலைகளோ அல்லது பெரும் பணக்காரர்களோ அல்ல!

Dailyhunt

வங்கி டெபாசிட் ரூ. 2.5 லட்சத்தை தாண்டினால் நடவடிக்கை: பான் கார்டு அவசியமாகிறது

பிடிஐ

வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி வரை போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகை செலுத்துவோர் பான் கார்டு விபரத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பலரும் ரூ. 49 ஆயிரத்தை பல முறை தங்கள் வங்கிக் கணக்கில் போட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையான காலத்தில் ஒரு கணக்கில் போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாயிருந் தால் அது வரி விதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்றார்போல மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் ஆண்டு வருவாய் கணக்கு தாக்கல் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டில் ஒரு தனிநபர் தங்கள் கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தால் அது குறித்த தகவலை தங்களுக்கு தெரிவிக்குமாறு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு வரி விதிப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வரம்பை ரூ. 2.5 லட்சமாகக் குறைத்துள்ளது.

நடப்புக் கணக்குகளில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையில் போடப்பட்ட தொகையின் அளவு ரூ. 12. 50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு வரி விதிப்பு ஆணையம் கூறியுள்ளது.

இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் தபால் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றாலும், ஒருவரே பல வங்கிகளில் கணக்கு வைத்து அதை செயல்படுத்தினால் அது எவ்விதம் ஒருங்கிணைக்கப்படும் என்ற தகவல் தெரியவில்லை.

பயணம் மகிழ்ச்சியாய் அமைய...


ரயில் நிலையத்திற்குள் நுழைந் ததுமே உங்கள் பயணம் இனி தாய் அமையட்டும் என்று ஒலிபெருக்கியில் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். நாமும் அதை கேட்டுவிட்டு ரயில் ஏறினால் அரு கில் இருப்பவர் கூட சில சமயங் களில் நம்மிடம் சரியாக பேச மாட்டார். மேலும் பொழுதுபோக்கு அம்சங்களும் பயணத்தின் போது இருக்காது. நீண்ட தூர பயணங் களின் போது நாம் மொபைல் போன் வழியாக பாடல் கேட்பதுண்டு. அதுவும் இல்லையென்றால் மிகவும் கஷ்டம்தான்.

ஆனால் இனி அப்படி ரயில் பயணிகள் கஷ்டப்படத்தேவை யில்லை. உங்களை மகிழ்விக்க பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே கொண்டு வர உள்ளது. ஏற்கெனவே இலவச வை-பை திட்டத்தை ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது. தற்போது ரயில் பயணத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் முயற்சியில் இந்திய ரயில்வே இறங்கியுள்ளது.

அதாவது ரயில் பயணத்தின் போது நாடகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள், பக்தி சார்ந்த விஷயங்கள், பாடல்கள் என அனைத்தையும் ரயில் பயணத்தின் போது பார்ப்பதற்கு ரயில்வே துறை முயற்சித்து வருகிறது. இதை யொட்டி ஆப்லைன் ஸ்ட்ரீமிங் சந்தையில் முன்னணியில் உள்ள மூவிங் டாக்கிஸ், ஸ்பீடு பெட்ச், மைப்ரீடிவி ஆகிய நிறுவனங்க ளோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக ராஜ தானி எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தங்களது சேவையை மூவிங் டாக் கிஸ் நிறுவனம் சோதனை முறையில் பரிட்சித்து பார்த்துள்ளது. ஸ்பீடு பெட்ச் நிறுவனமும் சோதனை முறையில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிட்சித்து பார்த்துள்ளது.

இந்த பொழுதுபோக்குச் சேவை மூலம் ரயில்வே துறைக்கு மிகப் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அடுத்த மூன்று வருடத்திற்குள் ரயில்வே துறையின் பொழுதுபோக்குச் சந்தை 2,277 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் கூறியுள்ளது. இது ஐந்து வருடங்களில் 3,495 கோடி ரூபாயாக உயரும் என்றும் ஒரு மணி நேரத்தில் 70 லட்சம் பேர் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் விளம்பரங்கள் மூலம் அதிகமான வருமானம் ரயில்வே துறைக்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளது. தற்போது பல நிறுவனங்கள் ரயில்வேயுடன் இணைந்து இந்த பொழுதுபோக்கு சேவையை வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

முக்கியமான ரயில் நிலையங்களில் வை-பை வசதி கொண்டு வந்தது. பல ரயில்களில் பயோ-டாய்லெட் என்ற திட்டத்தையும் கொண்டு வந்தது உட்பட சமீப காலத்தில் ரயில்வே சேவையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் 1000 ரயில்களில் ரயில் ரேடியோ சேவையை ரயில்வே துறை ஆரம்பித்தது. இது பயணிகளிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரேடியோ மூலம் விளம்பரங்கள் அதிகமாக வருவதால் வருவாயும் ரயில்வே துறைக்கு கிடைத்து வருகிறது.

அதனால் அடுத்தடுத்த வருடங்களில் அனைத்து ரயில்களிலும் ரேடியோ சேவையை அளிக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுவரும் பொழுது ரயில்வேயின் வருமானம் அதிகரிப்பதோடு பயணிகளின் பயணமும் மகிழ்ச்சியாக அமையும்.

சுவிஸ் வங்கி பதுக்கல் முதல் ஏடிஎம் காத்திருப்பு வரை: மாநிலங்களவையில் மோடி அரசை கிழித்த எதிர்க்கட்சிகள் இணையதள செய்திப் பிரிவு


மாநிலங்களவை விவாதம்: மேலே - ஆனந்த் ஷர்மா, பிரமோத் திவாரி | கீழே - மாயாவதி, யெச்சூரி
ரூபாய் நோட்டு உத்தி மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) கடுமையாக விமர்சித்தன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, "ஒரே இரவில் 86% பணத்தை புழக்கத்திலிருந்து அரசு தடை செய்துள்ளது. அப்படியெனில் அரசு அந்த பணம் அத்தனையும் கள்ளப்பணம் என நினைத்ததா? அப்படி என்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு வெளியிட்ட அறிக்கையில் புழக்கத்தில் உள்ள பணத்தில் 0.02% மட்டுமே கள்ளப்பணம் என ஏன் சொன்னது.

மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்கள் எல்லோருமே மருத்துவம் படிக்காமலே மருத்துவர்கள் போல் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாகிவிட்டனர். காரணம் அவர்கள் அவ்வப்போது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.

சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையை எடுத்துவிட்டு சுவிஸ் வங்கியில் பணத்தை குவித்துவைத்திருப்பவர்களை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது? வங்கிகளில் பெருமளவில் பணத்தை கடனாக வாங்கிவிட்டு அவற்றை திருப்பிச் செலுத்தாவதற்கள் பெயரை இந்த அரசு வெளியிடுமா?

நோட்டு நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்னரே அரசு முன்னேற்படுகளை செய்திருந்தால் இப்போது பணப் பற்றாக்குறை வந்திருக்காது. சொந்த நாட்டில் மக்கள் பணத்துக்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்க பிரதமரோ ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்து மக்களை அவர் அவமானப்படுத்திவிட்டார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாளைக்கு ஐந்து முறை உடையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

நோட்டு நடவடிக்கை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால், பாரத ஸ்டேட் வங்கிக்கு கடந்த மார்ச் மாதமே நோட்டு நடவடிக்கை குறித்து தெரியும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு தனக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே நோட்டு நடவடிக்கை குறித்த தகவலை கசியவிட்டிருக்கிறது" என்றார்.

மோடியை ஹிட்லர், முசோலினியுடன் ஒப்பிட்ட பிரமோத் திவாரி

மாநிலங்களவை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி, பிரதமர் மோடியை ஹிட்லர், முசோலினி, மற்றும் கடாஃபி ஆகிய சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டார்.

அவர் பேசும்போது, "சீதாராம் யெச்சூரி கோரியது போல் ரூ.500, 1000 நடவடிக்கை மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசை ஏதோ சிட்பண்ட் நிறுவனம் போல் மாற்றிவிட்டீர்கள்.

சில தொடர் நோட்டுகளை மட்டுமே புழக்கத்திலிருந்து விடுவிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் 86% நோட்டுகளை முடித்துள்ளீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? அயல்நாடுகளுக்கு அனுப்பும் தொகையின் உச்ச வரம்பை அதிகரித்ததன் மூலம் 10 மாதங்களாக இதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்.

உங்களுக்கு ‘பிடித்தமான’ மாநிலங்களில் நிறைய பணம் டெபாசிட் ஆகியுள்ளன. பிரதமர் 50 நாட்கள் கேட்கிறார், ஆனால் 50 நாட்களுக்குப் பிறகு ராபி, கரீப் விளைச்சலை வாங்க ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள். நம் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக்கி விட்டீர்கள். உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.

நம் பிரதமரை இந்த விஷயத்தில் ஹிட்லர், முசோலினி, கடாஃபியுடன் ஒப்பிடலாம்," என்றார்

இவ்வாறு இவர் பேசியவுடன் எதிர்ப்பு கிளம்பியது. ஹிட்லருடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று ரவிசங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் பிரமோத் திவாரி தனது ஒப்பீட்டை தொடர்ந்தார். கடைசியில் "ஒரே வழிதான் உள்ளது, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கவும், நீங்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்க இதனைச் செய்யவில்லை. உங்கள் நண்பர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை" என்று முடித்தார் தன் பேச்சை.

அதிமுக எதிர்ப்பு:

ரூபாய் நோட்டு நடவடிக்கையால் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் சேமிப்பும் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார். அதிமுக எப்போதுமே கறுப்புப்பணத்தை எதிர்க்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் எங்கள் கட்சி எப்போதுமே வரவேற்றிருக்கிறது. கறுப்புப் பணத்தை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கிறார்.

ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறாக புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்ததால் கிராமப்புறங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தியிருக்க வேண்டும் என அவர் கூறினார். | விரிவாக வாசிக்க > மத்திய அரசின் ரூபாய் நோட்டு உத்திக்கு தமிழக அரசு எதிர்ப்பு

மக்களை ஏன் வதைக்கிறீர்கள்?- சீதாராம் யெச்சூரி

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பொதுமக்களை ஏன் வதைக்கிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறும்போது, "தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் இலாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக தனது கட்சி நிதியை பிரதமர் அறிவிப்பதற்கு முன்னதாகவே வங்கியில் செலுத்தியது எப்படி? இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாற்று ஏற்பாடுகள் முழுமை பெற 50 நாட்கள் ஆகும் என பிரதமரே சொல்லியிருக்கும் நிலையில் அதுவரை மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளையே பயன்படுத்தலாம் என அறிவியுங்கள்" என்றார்.

மாயாவதி சரமாரி தாக்கு:

மாநிலங்களவை விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசும்போது, மத்திய அரசின் ரூ.500, 1000 நோட்டுகள் மீதான நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பணக்காரர்களை பாதுகாக்க மத்திய அரசு உதவி செய்ததாக குற்றம்சாட்டி அவர் மேலும் பேசும்போது, "நிதி நெருக்கடி நிலை பிரகடனம் போல் செய்துவிட்டனர். இந்தியாவே முடக்கப்பட்டது போல் உள்ளது. ஜப்பானிலிருந்து வந்த பிரதமர் காஸியாபூர் கூட்டத்தில் பேசும்போது தான் ஊழலுக்கு எதிரானவர் என்றார். ஆனால் அவர் பேசிய கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடே ஊழல் வழிமுறைகளைக் கையாண்டு செய்யப்பட்டதுதான்.

தனது கட்சியினர், சாதகமானோர் மற்றும் பணக்காரர்கள் பெரிய நோட்டுகளுக்கான 'தகுந்த' ஏற்பாடுகளை செய்யும் வரை காத்திருந்து 10 மாதங்கள் எடுத்துக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பகுஜன் முன்னதாக கட்சியாகும் முன் இயக்கமாகவே வளர்ந்தது, சாதாரண மக்களிடமிருந்து நிதி திரட்டியே கட்சியை வளர்த்தோம், கோடீஸ்வர நபர்களிடமிருந்து நிதி திரட்டவில்லை.

இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அலட்சியம் காட்டிய அரசு, பணக்காரர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க உதவி புரிந்துள்ளது. தற்போது உங்கள் பலவீனங்களை மறைக்க மற்ற கட்சியினரை குற்றம் சொல்லத் தொடங்கியுள்ளீர்கள்.

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து இத்தகைய நடவடிக்கையை எடுக்கக் காரணம் உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநில தேர்தல்களே. இந்த மாநில மக்கள் நிச்சயம் உங்களுக்கு தண்டனை அளிப்பார்கள். மக்கள் கையில் மை-யை பூசியதற்கான தகுந்த பலனை எதிர்பார்க்கலாம்' என்றார் மாயாவதி.

கால்கள் செயலிழந்தாலும் மனம் தளராத மருத்துவர்: சக்கர நாற்காலியில் சுழலும் தன்னம்பிக்கை

மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலியில் வந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆறுமுகம்.
என்.சுவாமிநாதன்

வைரஸ் காய்ச்சலால் தனது 2 கால்களையும் இழந்த மருத்துவர், நோயாளிகளின் நம்பிக்கையாலும் குடும்பத்தினரின் அரவணைப்பாலும் மீண்டு வந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிகிச்சை அளித்து வருகிறார்.


கன்னியாகுமரி மாவட்டம், தளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆறுமுகம்(63), மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் மருத்துவர் இவர். தளக்குளம் பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நடக்க முடியாத இவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், வார்டுகளுக்கும் சக்கர நாற்காலியிலேயே சென்று சிகிச்சை அளிக்கிறார். ஏழைகளுக்கு அவர்களது வருமானத்தின் அடிப்படையில் மிக சொற்ப கட்டணமே வசூலிக்கிறார்.

இதுகுறித்து மருத்துவர் ஆறுமுகம் கூறியதாவது:

எனது தந்தை பழனியாண்டி பெரிய விவசாயி. தான, தர்மம் அதிகமாக செய்வார். இரணியல் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்தான் கல்வி பயின்றேன். அப்போதே மருத்துவம் படிக்கும் ஆசை உதயமானது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். தொடர்ந்து 1979-ல் எம்டி பொது மருத்துவம் முடித்தேன். என் தந்தையின் விருப்பப்படி, கிராமப்புறத்தில் சேவை செய்ய விரும்பி, நெய்யூரில் ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். 1985-ம் ஆண்டு வேலூர் சிஎம்சியில் இதயவியலும், 1987-ல் மதுரை மருத்துவக் கல்லூரியில் மூளை நரம்பியலும் படித்தேன். குமரி மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் மருத்துவர் நான்தான். ஆனாலும், தொடர்ந்து நெய்யூரிலேயே பணி செய்தேன்.

கடந்த 1992-ம் ஆண்டு எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. சிகிச்சைக்குப் பிறகு, எனது முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால்கள் உட்பட இடுப்புக்குக் கீழ் பகுதி செயல் இழந்துவிட்டது. வீட்டில் படுத்தே இருக்க வேண்டிய சூழல். அப்போதும் சிகிச்சைக்காக நோயாளிகள் தேடி வர ஆரம்பித்தனர். சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் நான் இருப்பதை, என் குடும்பத்தினர் சொன்னபோதும், ஆலோசனை மட்டுமாவது கேட்டுச் செல்கிறோம் என நோயாளிகள் தேடி வந்தனர். மக்கள் வைத்திருந்த அந்த நம்பிக்கையே என்னை ஆபரேட்டிவ் பேட்டரி வீல்சேருக்கு உயர்த்தியது.

தளக்குளம் கிராமத்தில் 1993-ல் சொந்த மருத்துவமனை கட்டி, சிகிச்சை அளித்து வருகிறேன். நர்ஸிங் கல்லூரி, நர்ஸிங் பள்ளி ஆகியவை அமைத்து ஏழை மாணவர்களுக்கு நன்கொடையே இல்லாமல் என்னால் முடிந்த கல்விச் சேவையையும் வழங்கி வருகிறேன் என்றார்.

மாநில அரசின் சிறந்த சேவைக்கான விருது, ஹெலன் கெல்லர் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ள மருத்துவர் ஆறுமுகத்தை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் தேசிய அறக்கட்டளை உறுப்பினராக மத்திய அரசு சமீபத்தில் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஏ.டி.எம் களில் என்ன நடக்கின்றன? ஸ்பாட் விசிட்

சென்னை

தற்போதைய நிலையில் சென்னை போன்ற நகரங்களில் நாலு பேர் எங்காவது வரிசையாக நின்று கொண்டு இருந்தாலே ஏ டி எம் வாசலில்தான் நிற்கிறார்கள் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து எங்கு பார்த்தாலும் பணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

அரசின் புதிய அறிவிப்புகள், தீயாக பரவும் வதந்திகள், அன்றாட வேலைகளோடு வங்கிக்கு சென்று தங்கள் கையிருப்பில் உள்ள பழைய தாள்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், வங்கி கணக்கில் பணம் நிறைய இருக்க சாப்பாட்டுக்கும் போக்குவரத்து செலவுக்கும் கூட வழி இல்லாமல் தவிக்கும் அவலம் என பலதரப்பு மக்களையும் மனதளவில் கடுமையாக பாதித்திருக்கிறது புதிய ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் வாசலில் 7 செக்கியூரிட்டிகள் நின்று கொண்டு இருக்கிறார்கள். வங்கிக்குள் நுழைய முற்படும் ஒவ்வொருவரையும் நிறுத்தி அந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா என விசாரித்து விட்டு அதில் பணம் டெபாசிட் செய்ய வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

சில இடங்களில் வங்கி ஊழியர்கள் ஏ டி எம்களில் பணத்தை நிரப்பிவிட்டு வெளியேறிய பிறகு, அந்த ஏடிஎம் காவலர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், எண் கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கும் முதலில் அழைத்து "பணம் போடப்பட்டிருக்கிறது, சீக்கிரமா வந்து எடுத்துக்கங்க" என தகவல் சொல்வதோடு அதற்கான டிப்ஸையும் வாங்கிக் கொள்கிறார்களாம். ஏ டி எம்மில் பணம் இருந்தாலுமே இல்லை என சொல்லும் அவலமும் நிகழ்கிறது.

இன்னொரு பக்கம், ஏ.டி.எம் வரிசையில் நின்றவர்களைத் தாண்டி பணம் நிரப்புபவருடன் வந்த கன்மேனிடம் பேச்சு கொடுத்தோம். ராஜஸ்தானைச் சேர்ந்த அவர் இங்கு செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். ‘தினம்தினம் கட்டுக்கட்டா பணத்துக்கு காவல் நிக்கறேன். கையில் பத்து ரூபாய் கூட இல்லைங்க’ என்று சோகமாகப் புலம்பிவிட்டுச் சென்றார்.

அரசுப் பேருந்துகளிலோ நீங்கள் 20 ரூபாய், 50 ரூபாய் கொடுத்தாலும், 10 ரூபாய் நோட்டை சேஞ்சாக கொடுப்பதில்லை. 5 ரூபாய் காயின்களைப் பொறுக்கிக் கொடுக்கின்றார்கள் கண்டக்டர்கள். கைகளில் பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் கூட அதைக் கொடுப்பதில்லை என்கிறார் பயணி ஒருவர்.

இன்னொரு பக்கம், வங்கிகளில் பணம் மாற்ற நிற்கும் நீண்ட வரிசையிலேயே வந்து ‘உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா?’ என்று கூச்சமே படாமல் கேள்வி எழுப்புகின்றனர் சில தனியார் வங்கி எக்ஸிக்யூடிவ்கள். சில வங்கிகளிலோ பணம் மாற்றுபவர்களிடம் அங்கும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லி மூளைச்சலவையும் நடைபெறுகிறது.



எத்திராஜ் கல்லூரி அருகே இருக்கும் இந்தியன் வங்கி கிளை ஒன்றின் வாசலில் வரிசையில் நின்றவாறு..,

"இந்தப் புது ரூபாய் நோட்டுகள் பத்தின அறிவிப்பு வெளியானதலிருந்து பேங்குக்கும், ஏ டி எம்களுக்கும் போய் வருவதே பெரிய வேலையா இருக்கு. அதிலும் முதல்ல பணம் இருக்கும் ஏ டி எம் மெஷின் எங்க இருக்குனு கண்டுபிடிக்கணும். அங்க ஒன்னு வேலை செய்யுது சீக்கிரம் போங்கன்னு யாராச்சும் சொல்லிட்டு போவாங்க. வேகமா போய் பார்த்தா பணம் தீர்ந்திருக்கும். அப்படியே பணம் இருந்தாலும் ஏற்கெனவே வரிசையில நிர்க்குறவங்களோட கடைசியா நின்னு பணம் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு
போறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது சார்" என வேதனையுடன் சொல்கிறார் முதியவர் ஒருவர்.

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் ஏ டி எம் மெஷினில் இரண்டு லட்சம் ரூபாய் நிரப்பப்படுகிறது என்றால், வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் 4, 5 கார்டுகளை எடுத்துச் சென்று பணம் எடுத்துவிடுகிறார்கள். ரொம்ப சிக்கலான நிலையில் அவசரத்துக்கு பணம் எடுக்க வந்தவர்கள் வெகுநேரம் வரிசையில் நின்றுவிட்டு பணத்தை எடுக்க முடியாமல் விரக்தியோடு திரும்பிச் செல்லும் நிலையும் இருக்கிறது.

வங்கி ஊழியர் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் "நீங்க ஏற்கெனவே 4000 ரூபாயை எடுத்து விட்டீர்கள், இனி எடுக்க இயலாது" எனச் சொல்லியிருக்கிறார். உடனே அந்த இளைஞர் தன் கையிலிருந்த படிவங்களை கிழித்து எறிந்து, கோவத்தில் கத்திவிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். அதே வங்கியில் ஒரு பெண் புதியதாக வெளியிடபட்டுள்ள 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து "100 ரூபாய் நோட்டுகள் தான் வேண்டும் " என அழுத சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. இப்படி ஒரு குழப்பமான
மனநிலையை பலரிடமும் பார்க்க முடிகிறது. வெளியில் இயல்பாக பேசி சிரித்துக்கொண்டாலும் எல்லோருக்குள்ளுமே சிறிய பதற்றம் நிறைந்திருக்கிறது.

கறுப்புப் பண ஒழிப்பு , பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதையெல்லாம் தாண்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத உறுதியான சேவைகளும் ஒரு நாட்டிற்கு தேவை தானே...!?

நகைகள் 100கோடி...ஹெலிகாப்டருக்கு 20கோடி! காஸ்ட்லி கல்யாணத்தின் ஆச்சர்ய தகவல்கள் - படங்கள்


முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழில் அதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் இன்று பெங்களூருவில் இன்று பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. மகளின் திருமணத்தை நடத்த ரூ.200 கோடிக்கு மேல் ஜனார்த்தன ரெட்டி செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. ஆனால், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999-ம் ஆண்டுதான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்கள். தற்போதையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வாராஜுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ரெட்டி சகோதரர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது, சுரங்கத் தொழிலுக்கான லைசென்ஸ் கிடைத்தது. சுரங்கத் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஜனார்த்தனரெட்டிக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்ந்திருந்தது. கர்நாடகத்தில் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார் ஜனார்த்தன ரெட்டி. தொடர்ந்து 2009-ம் ஆண்டு பெல்லாரி சுரங்க ஊழலில் சிக்கினார். இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்துதான் மகள் பராமனியின் திருமணத்தை நடத்துகிறார்.



மணமகன் ராஜிவ் ரெட்டிக்கு 25 வயதாகிறது. பிபிஎம் பட்டதாரி. மணமகள் பிரமானிக்கு 21 வயதாகிறது. ஹைதராபத் தொழிலதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன்தான் ராஜிவ். தந்தை நடத்தும் நிறுவனத்தின் வெளிநாட்டு தொடர்புகளை கையாள்கிறார்.

இந்த திருமணத்துக்காக எத்தனை கோடி செலவு செய்யப்பட்டது. எப்படி செலவிடப்பட்டுள்ளது என்று பார்க்கலாம். எல்ஈடி திரையுடன் கூடிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டது.அழைப்பிதழை திறந்தவுடன் 'பிரமானி வெட்ஸ் ராஜிவ்' என்ற பாடல் திரையில் ஓடும். ரெட்டி குடும்பத்தினரும் திரையில் தெரிவார்கள். இதற்கு ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

திருமணத்துக்காக குடும்பத்தினர் அனைவருக்கும் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் ரூ.100 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் கலை நிகழ்ச்சிக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் வருவதற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தவுள்ளது. இதற்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்துக்காக ரூ 20 கோடி செலவிடப்பட்டுள்ளது. திருமணத்துக்கான செட் அமைப்பது போன்ற பிற விஷயங்களுக்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த திருமணத்துக்காக தனது 10 சொத்துக்களை அடமானம் வைத்து ஜனார்த்தன ரெட்டி பணத்தை திரட்டியுள்ளார். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக மாநில பெரும் அரசியல் புள்ளிகள் நடிகர்- நடிகைகள் தொழிலதிபர்கள் முதல் நண்பர்கள், உறவினர்கள் என 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவுள்ளனர்.



இதனால் திருமணம் நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3000 தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வி.வி.ஐ.பிக்கள் திருமணத்தில் பங்கேற்பதால் 300 போலீஸ் அதிகாரிகளும் திருமணம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். திருமணத்தை நடத்தி வைக்க திருப்பதி கோயிலில் இருந்து 8 புரோகிதர்கள் வந்துள்ளனர்.

திருமணம் நடைபெறும் பெங்களூரு அரண்மனை மைதானம் பெல்லாரி நகரம் போலவே மாற்றப்பட்டுள்ளது. பெல்லாரி நகரில் உள்ள காவல் பஜார், தனாப்பா பீடி தெரு, ஜனார்த்தன ரெட்டி படித்த பள்ளி ஆகியவை அரங்குக்குள் எழுப்பப்பட்டுள்ளன. இரு பிரமாண்டமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினர் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெங்களூருவில் 1,500 நட்சத்திர ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல 2000 டாக்ஸிகள் விருந்தினர்களுக்காக ஓடுகின்றன. 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பறந்து பறந்து விருந்தினர்களை அழைத்து வரப் போகின்றன. குதிரைகள், யானைகள் போன்றவையும் விருந்தினர்களை வரவேற்க அரண்மனை முகப்பில் நிறுத்தப்படவுள்ளன.

- எம்.குமரேசன்

2000 ரூபாய் நோட்டு சாயம் போனால்தான் ஒரிஜினலா? ஆர்.பி.ஐ. அளித்த விளக்கம்



சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டு ஒரிஜினல் என்ற தகவல், பொது மக்களுக்கு பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.ஐ. தரப்பில் இந்த கேள்வியை கேட்டதற்கும் மழுப்பலான பதிலையே அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கறுப்புப் பணத்தை கமிஷன் பெற்றுக் கொண்டு சிலர் மாற்றுவதாக தகவல் வந்தது. அதை தடுக்க பணத்தை மாற்ற வருபவர்களின் வலது கையில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் ஒரு நபர் மீண்டும், மீண்டும் அடுத்தடுத்த வங்கிகளில் ஒரே நாளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். இந்த மை அழியாது. வங்கி, தபால் நிலையங்களுக்கு ஆர்.பி.ஐ. ஆலோசனைபடி மை சப்ளை செய்யப்படும். முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும். அனைத்து வங்கி கிளைகளுக்கும் 5 மி.லி கொண்ட மை பாட்டில் கொடுக்கப்படும். அதில் உள்ள மூடியில் மை வைப்பதற்கான பிரஸ் இருக்கும். மை வைக்கும் பணியில் கேஷியர் அல்லது வங்கி தரப்பில் நியமிக்கப்படும் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இடது கை விரல்களில் மை வைக்கப்பட்டால் அவரால் பணத்தை மாற்ற இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து வங்கிகளுக்கும், தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், புதிய வரவான 2000 ரூபாய் நோட்டுக்களில் சாயம் போனால்தான் ஒரிஜினல் என்ற தகவலும் வெளியானதால் பொது மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த தகவல்கள் உண்மையா என்ற கேள்வியை ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பானா கில்வாலா முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "பணத்தை மாற்ற மட்டுமே விரலில் மை வைக்கப்படுகிறது. வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு மை வைப்பதில்லை. முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு நகரங்களிலும் கிராம பகுதிகளிலும் மை வைக்கும் பணி விரிவுப்படுத்தப்படும். ஆர்.பி.ஐ விதியில் சேதமடைந்த ரூபாய் நோட்டுக்களுக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்கள் வழங்க முடியும். தேர்தலுக்கு மட்டுமே இடது விரலில் மை வைக்கப்படும். வங்கிகளில் பணத்தை மாற்ற வலது விரலில் மை வைக்கப்படுகிறது" என்றார்.

சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டுக்கள் ஒரிஜினல், மை வைக்கப்பட்ட நபர் மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா போன்ற கேள்விகளுக்கு அல்பானா கில்வாலா பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "விரலில் மை வைப்பதற்கு முன்பே குறிப்பிட்ட ஒரு வங்கியில் பணத்தை மாற்றியவர், அடுத்து 14 நாட்களுக்குப் பிறகே அந்த வங்கியின் எந்த கிளைகளிலும் பணத்தை மாற்ற முடியும். அதே நடைமுறை மை வைத்தப்பிறகும் தொடரும். இதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் 2000 ரூபாய் நோட்டு சாயம் போனால்தான் ஒரிஜினல் என்பது குறித்தும் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் பவுண்ட் பணம், சாயம் போனால்தான் அது ஒரிஜினல் என்ற தகவலும் உள்ளது. தற்போது மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ஆர்.பி.ஐ தெளிவான பதிலளிக்க வேண்டும். எங்களிடம் பொது மக்கள் கேட்கும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை" என்றனர்.

தபால்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஒரு நபர் 4,500 ரூபாய் வரை பணத்தை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் தபால்துறையில் புதிய ரூபாய் நோட்டு பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் நலன்கருதி ஒரு நபருக்கு 2,000 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கிறோம். மேலும் 'மை' வைக்கும் நபர், மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா என்பதற்கும் பதில் இல்லை" என்றனர்.

இதனிடையே, ஏற்கனவே வெளியான 1000 ரூபாய் நோட்டிலும் சாயம் போனதாகவும் தகவல் உள்ளன. தற்போது, புதிய 2000 ரூபாய் நோட்டு வேறு வண்ணத்தில் இருப்பதால் அதிலும் சாயம் போகிறது குறிப்பிடத்தக்கது.

'எங்களுக்கு பணமே வேண்டாமே!' - பணமில்லா தேசங்கள் எப்படி இயங்குகின்றன? #CashlessCountries


இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், பணப் பரிவர்த்தனையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட சில நாடுகளும் (cashless countries) இருக்கின்றன. இங்கு பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் இதை அந்தந்த நாட்டு மக்கள் எதிர்த்தாலும் பின்னாளில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்



இத்தகைய நாடுகளில், 80 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதம் வரை மக்கள் பணப் பரிவர்த்தனையை கைவிட்டு, அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குகின்றனர். ஆரம்பகாலத்தில் கொள்ளையர்கள் பேங்குகளிலும், பொருட்களை வாங்க கடைக்குச் சென்ற வாடிக்கையாளர்களிடம் பணத்தைக் கொள்ளையடித்ததால், இத்தகைய திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்பு, மக்களே ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியதால், பணப் பரிவர்த்தனையை ஒழிக்கும் முயற்சியில் அந்த நாடுகள் இறங்கின. இதில், ‘இன்னும் 20 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களையும் கூடிய விரைவில் கேஷ்லெஸ் முறைக்கு (Cashless Method) மாற்றிவிடுவோம்’ என்கின்றன அந்த நாடுகள். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்...

பெல்ஜியம்



இங்கு முற்றிலும் பணப் பரிவர்த்தனை ஒழிக்கப்பட்டு, கேஷ்லெஸ் முறை கையாளப்பட்டு வருகிறது. இதை அதிகளவில் செயல்படுத்திவரும் முதல்நாடாக இது இருக்கிறது. இங்கு 93 சதவிகித வர்த்தகப் பரிமாற்றங்கள் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்தியே நடக்கின்றன. பெல்ஜியத்தில் 86 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த நாட்டில் 3,000 யூரோக்களுக்கு அதிகமான தொகையை ஒருவர் செலவழிக்க விரும்பினால், அதை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே செய்யவேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் 2,25,000 யூரோக்கள் வரை அரசுக்கு அபராதம் செலுத்த நேரிடும்.

ஃபிரான்ஸ்



பெல்ஜியத்துக்கு அடுத்தபடியாக கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றும் நாடு ஃபிரான்ஸ். பெல்ஜியத்தைப் போன்றே ஃபிரான்ஸிலும் 3,000 யூரோவுக்கு மேல் ஒருவர் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால், அரசு மூலம் அந்த நபருக்கு கடும் தண்டனைகள் கிடைக்கும். அத்துடன், அதிக அபராதமும் செலுத்த நேரிடும். இங்குள்ள மக்களில் 93 சதவிகித மக்கள் பணப் பரிவர்த்தனையைச் செய்வது கிடையாது. இவர்கள் இணைய வழியாகவே தங்களின் பரிவர்த்தனையைச் செய்கிறார்கள். இங்கு, 70 சதவிகிதத்துக்கும் மேலான மக்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கனடா



கேஷ்லெஸ் முறையைப் பயன்படுத்துவதில், தற்போது கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள மொத்த வர்த்தகத்தில் 90 சதவிகிதம், ஆன்லைன் வர்த்தகமாக உள்ளது. கனடாவில், 88 சதவிகிதம் மக்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். வர்த்தகத்தில் பல நடவடிக்கைகளைக் கொண்டுவந்த கனடா அரசு, கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நாணயங்கள் அச்சடிப்பதையும், அவைகளைப் புழக்கத்தில்விடுவதையும் முற்றிலும் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து



சமீபத்தில் ஐரோப்பிய யூனியனை விட்டுத் தனியாகப் பிரிந்துவந்தது இங்கிலாந்து. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்போது அதன் தரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் நம்பியுள்ளது. இந்த நாட்டில் 90 சதவிகித மக்கள் கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்கிலாந்து மக்களில் சுமார் 89 சதவிகிதம் பேர் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இங்கு போக்குவரத்துக்காகப் பெறப்படும் கட்டணங்கள் யாவும் பணமாகப் பெறப்படுவதை இங்கிலாந்து அரசு நிறுத்தியுள்ளது.

சுவீடன்



முதன்முதலாக இந்த கேஷ்லெஸ் முறையைக் கையிலெடுத்தது சுவீடன்தான். காரணம், இங்குள்ள வங்கிகளில் இருந்த பணம், கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்த நாடு கேஷ்லெஸ் முறையைக் கொண்டு வந்தது. இங்கு வங்கிகள், அரசு அலுவலகங்கள், மால்கள், உணவகங்கள் போன்ற அனைத்துமே ஆன்லைன் வர்த்தகம் அல்லது கார்டு முறைகளைத்தான் பின்பற்றி வருகின்றன. இங்குள்ள பொதுப் பேருந்துகளும் கார்டு முறையையே பின்பற்றுகின்றன. இங்கு பெரும்பான்மையான மக்கள் கேஸ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்குள்ள நான்கு வங்கிகளில் ஒரு வங்கி மட்டும், பணப் பரிவர்த்தனையைச் செய்கிறது. அதுவும் கூடிய விரைவில் நிறுத்திவிடும் என்று சுவீடன் அரசு அறிவித்துள்ளது. கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றிவரும் நாடுகளில் சுவீடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Wednesday, November 16, 2016

இனி, வங்கிகளில் ஐந்தில் ஒரு பங்காக கூட்டம் குறையும்: மை வைக்கும் நடவடிக்கையால் ஒரே நபர் பலமுறை வர இயலாது

By கு. வைத்திலிங்கம்  |   Published on : 16th November 2016 02:53 AM  |   
விரலில் மை வைக்கும் திட்டத்தால், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவோர் கூட்டம் ஐந்தில் ஒரு பங்காக குறைந்துவிடும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 5 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி ஒரு நாளைக்கு ரூ.4000 வீதம் பழைய நோட்டுகள் மாற்றப்படுகின்றன.
ஆதார் அட்டையை காட்டி பணம் மாற்றியவர்கள் அடுத்தமுறை அதே ஆவணத்தைக் காட்டினால், கணினி காட்டிக் கொடுக்கிறது. இதனால், வங்கி அலுவலர்கள் திருப்பிவிடுகிறார்கள்; அல்லது 10 நாட்களுக்குப் பிறகு வாருங்கள் என்கிறார்கள்.
இதனால், ஒருநாள் ஆதார் அட்டையை காட்டினால், மறுநாள் குடும்ப அட்டை, அடுத்த நாள் ஓட்டுநர் உரிமம் என்று மாற்றி மாற்றி பணம் எடுக்க வரும் கூட்டத்தால்தான் தற்போது வங்கிகளில் நீண்ட வரிசை இருக்கிறது.
இந்நிலையில், பணம் பெற்றவர்களுக்கு மை வைக்கப்படுவதால் அவர் ஏற்கெனவே பணம் பெற்றவர் அல்லது எத்தனையாவது முறையாக வருகிறார் என்பதையெல்லாம் கணித்துவிடுவது எளிது. இதனால், இனி வங்கிகளில் கூட்டம் குறையும் என்கின்றனர் வங்கி அதிகாரிகள்
""இதை முன்னதாகவே செய்திருக்கலாம். இதுவரை பல பேர் ரூ. 400 கமிஷனுக்காக பல முறை வந்திருக்கிறார்கள்.
அவர்களைத் தெரியும். ஆனால், திருப்பி அனுப்ப முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு ஆவணத்துடன் வருவார்கள். அவர்கள் உண்மையாகவே ஏழைகள். அது அவர்களுடைய பணம் அல்ல என்பதை ஊகிக்க முடியும்.
ஆனால், எங்களால் இல்லை என்று சொல்ல முடியாது. தொடக்கத்திலேயே இத்தகைய மை வைக்கும் திட்டத்தை அரசு அறிவித்திருந்தால், ஒரு நபர் திரும்பத் திரும்ப வருவது தடுக்கப்பட்டிருக்கும்'' என்கின்றனர் வங்கித் துறையினர். வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற வருவோரே அதிகமாக இருக்கின்றனர். தங்கள் கணக்குகளில் பணத்தை வரவு வைப்போர் குறைவாக இருக்கின்றனர். ஒரு கிளைக்கு 1000 முதல் 1500 பேர் வரை பழைய நோட்டுகளை மாற்ற வருகிறார்கள். ஆனால், தங்கள் கணக்கில் பழைய நோட்டுகளை வரவு வைக்க வருவோர் சுமார் 200 பேர் மட்டுமே.
முடிந்தவரை, கணக்கில் போடாமல் மாற்ற முடியுமா என்பதிலேயே பலரும் விருப்பமாக இருக்கிறார்கள். ஏனென்றால், பழைய நோட்டுகளை கணக்கில் வரவு வைக்கும்போது, சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு எண், அதில் செலுத்தப்பட்ட பழைய நோட்டுகளின் தொகை என முழு விவரமும் ரிசர்வ் வங்கிக்கு நாள்தோறும் அனுப்பப்படுகிறது.
நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை செல்லாத நோட்டுகளை வழக்கத்துக்கு மாறாக, அல்லது அதிகமாக செலுத்தியவர்கள் எத்தனை பேர் என்று ஜனவரி மாதம் மிக துல்லியமாக ஆராயப்படும் என்கின்றனர் வங்கி உயர் அதிகாரிகள்.
வங்கி மேலாளர் உதவியுடன் பணத்தை மாற்றுகிறார்கள் என்றும், 20% கமிஷன் கிடைப்பதாகவும் வரும் செய்திகள் குறித்து கேட்டபோது, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், ""வங்கிகளில் முறைகேடு இரண்டு வகைகளில் மட்டுமே சாத்தியம். முதலாவதாக பணம் மாற்ற வருவோர், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட தொகையைவிட குறைவாக மாற்றினால், மீதியுள்ள தொகைக்கு வங்கி மேலாளரே, அவர் வாங்கியதாக கணக்கில் சேர்த்து காட்டி, கருப்பு பணத்தை மாற்ற உதவ முடியும். இரண்டாவது, சில செயல்படாத கணக்குகள் என வங்கியில் உண்டு. அந்தக் கணக்குகள் வங்கி மேலாளருக்குத் தெரியும். அதில் பணத்தைப் போடச் செய்து, போலி நபர்களைக் கொண்டு மீண்டும் வித்ட்ராயல் செய்யும்படியும் செய்யலாம். இரண்டுமே கிரிமினல் நடவடிக்கை. சிக்கிக் கொண்டால் சிறை செல்ல வேண்டியதுதான்'' என்று விளக்கம் அளித்தனர் வங்கி அதிகாரிகள்.
பெட்ரோல் பங்க்குகள் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி நடப்பது குறித்து வருமான வரித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, ""நவ.8-ம் தேதி முதல் டிச.30 வரை அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குக்கு எவ்வளவு பெட்ரோல் ஐஓசி மூலம் வழங்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்துகொண்டு, அதன் பிறகு அவர்கள் கணக்கை பிப்ரவரி வாக்கில் வருமானவரித் துறை நிதானமாக ஆய்வு செய்யும். அப்போது அவர்கள் ஐஓசியில் வாங்கிய பெட்ரோல்-டீசலுக்கும் அவர்களது நடப்புக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகைக்கும் அதிக வித்தியாசம் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள்'' என்கின்றனர்.

NEWS TODAY 27.09.2024