Sunday, January 15, 2017

கல்லூரியிலேயே எல்.எல்.ஆர்., மாணவர்களுக்கு அசத்தல் திட்டம்

மும்பை, ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., எனப்படும், பயிற்சி ஓட்டுனர் உரிமம் வழங்க, மஹாராஷ்டிரா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., வழங்க மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், அதிகளவில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பிக்கின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அதிகரிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நேரம் வீணாவதை தடுக்கவும், அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., வழங்க முடிவு செய்யப்பட்டது.
கல்லுாரிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில், போக்குவரத்து துறையின் மென்பொருளை நிறுவி, அதன் மூலம், பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லுாரி வழங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தி, இந்த உரிமத்துக்கு விண்ணப்பிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், மாணவ, மாணவியர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஏற்பாட்டை, அனைத்து கல்லுாரி மாணவ, மாணவியரும், கல்லுாரி முதல்வர்களும் வரவேற்றுள்ளனர்.

Saturday, January 14, 2017

சேலத்தில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி



சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு முன்பு சிறு கன்றுகுட்டியை கிராம மக்கள் நேர்ந்து விட்டனர். இந்த கன்று வளர்ந்து காளையானதும் ஊர்மக்கள் நன்கு உபசரித்து வந்தனர். தங்களது வீட்டில் ஒரு உறுப்பினர் போலவே கோயில் காளையை நடத்தினர். கடந்த 17 ஆண்டுகளாக பொதுமக்களுடன் இணக்கமாக பழகி வந்த இந்த காளை நேற்று வயோதிகம் காரணமாக உயிரிழந்தது. இதனைக்கண்டு கொண்டயம்பள்ளி கிராம மக்கள் கண்ணீர் வடித்தனர்.

கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். அதன்படி, ஊரில் யாரும் வேலைக்கு செல்லாமல் துக்கம் அனுசரித்தனர். தொடர்ந்து மாட்டை குளிப்பாட்டி உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசினர்.
மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கொம்பு பகுதியில் வெள்ளிக்கொடிகளை கட்டி அலங்கரித்தனர். அதன் பிறகு, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றி கொண்டையம்பள்ளி ஏரிக்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்குள்ள மதுரகாளியம்மன் கோயில் வளாகத்தில் கோயில் காளை அடக்கம் செய்யப்பட்டது.

Dailyhunt

ஒருமுறை மட்டுமே கருணை வேலை ஐகோர்ட் தீர்ப்பு

மதுரை: கருணை அடிப்படையிலான வேலை என்பது தொடர் ஓட்டம் அல்ல எனக்கூறிய ஐகோர்ட் கிளை, மீண்டும் பணி வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூரை சேர்ந்த தமிழ்மதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''என் கணவர் பால்ராஜ். வேளாண்மைத்துறையில் பணியாற்றினார். பணிக்காலத்தில் கடந்த 24.4.2002ல் இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் திருமணமாகாத என் 6வது மகள் விக்ேனஸ்வரியின் தகுதிக்கேற்ற வேலை வழங்க உத்தரவிட வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.

மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அரசு வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜராகி, 'மனுதாரரின் 3வது மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

14.7.2015ல் பணியில் சேர்ந்த அவர் 6 மாதத்தில் குடும்ப பிரச்னை காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட்டார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவதாக மீண்டும் வாய்ப்பு கேட்கின்றனர். இது ஏற்புடையதல்ல' என்றார்.

இதையடுத்து நீதிபதி, ''கருணை அடிப்படையிலான வேலை என்பது தொடர் ஓட்டம் போன்றதல்ல. வேலைக்கு சேர்க்கப்பட்ட ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். அதனால் மற்றொருவருக்கு தாருங்கள் என கேட்க முடியாது. மனுதாரர் தரப்பு கோரிக்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்டது. எனவே, இந்த மனு ஏற்புடையதல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
Dailyhunt

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மெல்போர்னையே திரும்பி பார்க்க வைத்த ஆஸி. தமிழர்கள்

சிட்னி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரில் இன்று மாபெரும் அமைதி கூடல் நடத்தியுள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படவில்லை. இது குறித்த வழக்கிலும் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் தமிழர்கள் வியாழக்கிழமை அமைதி கூடல் நடத்தினர்.

மேலும் மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் விக்டோரியா ஹவுஸ் முன்பு இன்ற மாலை 6 மணிக்கு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதி கூடல் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு இந்த அளவில் தமிழர்கள் கூடியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இதே போன்று சிட்னி நகரில் வசிக்கும் தமிழர்கள் ஓபரா ஹவுஸ் முன்பு திரண்டு அமைதி கூடல் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தில் போராடும் சக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த போராட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
source: oneindia.com
Dailyhunt

100 வயது வரை வாழ்வேன்..மக்களுக்கு நல்லது செய்துவிட்டுதான் என் கட்டை போகும்: விஜயகாந்த் திடீர் பேச்சு

காஞ்சிபுரம்: நான் 100 வயது வரை வாழ்வேன். என் மனைவி இருக்கும் வரை எந்த வியாதியும் என்னை அண்டாது. அண்டவும் முடியாது. 100 வயதில் ஒரு நாளாவது நான் தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஏதாவது நல்லது பண்ணிட்டுத்தான் என் கட்டை போகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள காயார் கிராமத்தில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கிராம மக்களுடன் தேமுதிக தொண்டர்களும் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

விழாவில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டதற்கு அதிமுக, திமுக அரசுகள் தான் காரணம் என குற்றம்சாட்டினார்.

மேலும், பொங்கல் விழா தமிழர்களுக்கான வீர தமிழர் திருவிழாவாகும். வர்தா புயல் பாதிப்பு, வறட்சியால் தமிழகத்தில் விவசாயிகள் அனைவரும் நொந்து போய் உள்ளனர். 
 வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது மனைவியும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆகையால்தான் நான் உழவன் மகன் படத்தில் நடித்தேன்.

நான் 100 வயது வரை வாழ்வேன். என் மனைவி இருக்கும் வரை எந்த வியாதியும் என்னை அண்டாது. அண்டவும் முடியாது. 100 வயதில் ஒரு நாளாவது நான் தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஏதாவது நல்லது பண்ணிட்டுத்தான் என் கட்டை போகும். அதுதான் உண்மை. இவ்வாறு விஜயகாந்த் கூறினார். இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
source: oneindia.com
Dailyhunt

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்: இன்று இயக்கப்படுகிறது

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையிலான முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. மேலும், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றுமொரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்
ரயில் எண் 06092: ஜனவரி 14 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் நாகர்கோயில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், செங்கநூர், திருவலா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிற்கும்.
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி முன்பதிவில்லா சிறப்பு ரயில்
ரயில் எண் 06091: ஜனவரி 15 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாசலம், அரியலூர், திருச்சி, திண்டுகல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
Dailyhunt

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சீனிவாசு தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிலம்பாட்டம், கோலாட்டம், உறியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். மாணவிகள் பொங்கல் வைத்துகொண்டாடினர்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் குளோபல் பள்ளியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள் விகாஷ் சுரானா, சுரேஷ்கன்காரியா, அஸ்திமல் சுரானா, பி.ஜி.ஆச்சாரியா, முதல்வர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணையக் குழுச் செயலாளர் நீதிபதி எஸ்.கிரி கலந்து கொண்டு பேசினார்.

விழாவை, பள்ளி மாணவர்கள் பொங்கல் வைத்தும், நாற்று நட்டும் கொண்டாடினர்.

இதேபோல, செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிறுவனரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வீ.தமிழ்மணி தலைமை வகித்தார். முதல்வர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை, கல்வி மருத்துவ பண்பாட்டு அறநிலையத் துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். தாளாளரும், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவருமான கோ.ப.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
இதில், கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
இதேபோல, மதுராந்தகம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை, பள்ளித் தாளாளர் டி.லோகராஜ் தலைமையில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

உத்தரமேரூரில்...

உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பென்னலூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை, தூய்மை பாரத இயக்கம் சார்பில் சுகாதார பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவானந்தம், ஊராட்சிச் செயலாளர் ராஜி, அரசினர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.
Dailyhunt

NEWS TODAY 09.06.2026