Tuesday, January 17, 2017

குழந்தைகள், மாணவர்களை அதிகம் கவர்ந்த புத்தகங்கள் இவைதான்.    

 .! #BookFairUpdate


சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் நடந்து வரும் 40வது புத்தகக் காட்சி குழந்தைகளையும், மாணவர்களையும் பெரிதும் ஈர்த்து வருகிறது. ஏராளமானோர் பொங்கல் விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளாலும், மாணவர்களாலும் புத்தகக் காட்சி நிறைந்திருந்தது. தொடக்கத்தில் சில நாட்கள் போதிய கூட்டம் இல்லாததால் பதிப்பாளர்கள் மிகவும் கவலையில் இருந்தார்கள். ஆனால் சனி மற்றும் ஞாயிறுக் கிழைமைகளில் கூட்டம் நிறைந்திருந்தது. செழுமையான இலக்கியங்கள், வாழ்வியல் நூல்களைக் கொண்ட ஸ்டால்களுக்கு இணையாக குழந்தைகளுக்கான குறிப்பேடுகள், வண்ணச் சிறுகதைகள், பஸ்ஸில்ஸ் புத்தகங்கள், பேரண்டிங் சார்ந்த நூல்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் விற்கப்பட்ட ஸ்டால்களில் கூட்டம் அலைமோதியது.




முல்லைநகர் டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து வந்திருந்தது மாணவர் பட்டாளம். அகராதிகள், மேப், தன்னம்பிக்கை நூல்கள் என்று ஆளுக்கொரு கட்டு புத்தகங்களோடு ஸ்டால்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் ஜீவாவுக்கு கலாம் தான் ரோல்மாடல்.

‛‛கலாமின் வெற்றிப் பருவங்கள்” என்ற புத்தகம் அவனுடைய தேர்வு. ராகுல்,

அன்பு இல்லத்தின் பாடகனான ராகுல், தமிழ் திரைப்படப் பாடல்கள் அடங்கிய பெரிய தொகுப்பு ஒன்றை நெஞ்சோடு அணைத்திருந்தான். லோகேஷ் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியும், ராஜா லிப்கோ டிக்ஸ்னரியும் வாங்கியிருந்தார்கள். சந்திரமூர்த்தி, ‛அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?' என்ற புத்தகத்தைத் தேடித்திரிந்து வாங்கினானாம். “பார்க்கிற எல்லாப் புத்தகத்தையும் வாங்கனும்போல இருக்கு. ஆனா, அப்பா திட்டுவாரு... அதான், பாத்து பாத்து வாங்குறோம்...“ என்று சிரிக்கிறார்கள்.

குழந்கைளுக்கென்றே பிரத்யேகமாக சில பதிப்பகங்கள் இயங்குகின்றன. குறிப்பிடத்தகுந்தது சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட். வழக்கமாக, கெட்டி அட்டைகளுடன் கூடிய பெரிய எழுத்து வண்ணக் கதைப்புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்தாண்டு சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் தமிழிலும் அத்தகைய நூல்களைக் கொண்டு வந்திருக்கிறது. விலையும் கட்டுபடியாக இருக்கிறது. பொம்மைக் குதிரை, சும்கி அஞ்சலில் சேர்ப்பித்த கடிதம், பலூனும் நானும், மணவிழா ஆடைகள், கிராமத்துக்கு வந்த குரங்குகள் போன்ற அழகிய வண்ண அட்டைகளுடனான குட்டி குட்டிப் புத்தகங்கள் குழந்தைகளை ஈர்க்கின்றன.



9ம் வகுப்பு படிக்கும் அம்பத்தூர் அமிர்தவர்ஷினிக்கு ஓவியம் வரைவதில் தீவிர ஈடுபாடு. தந்தை சின்ன சின்ன ஜோதிட நூல்களைத் தேட இவர், பெருசு.. பெருசா நிறைய டிராயிங் ஆக்டிவிட்டி புத்தகங்கள், பெயிண்டிங் நூல்களை வாங்கியிருக்கிறார்.
“பத்திரிகைகள்ல வர்ற கார்ட்டூன்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி வரைஞ்சு பார்ப்பேன். போன புத்தகக் காட்சியில நிறைய புத்தகங்கள் வாங்குனேன். அதெல்லாம் பிராக்டீஸ் பண்ணி முடிச்சுட்டேன். இப்போ மதுபாணி பெயிண்டிங்ல இன்ட்ரஸ்ட் வந்திருக்கு. அதுக்காக நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கேன்” என்கிறார் அமிர்தவர்ஷினி.

பாரதி புத்தகாலயம் வழக்கம் போலவே ஏராளமான குழந்தைகள் நூல்களை வெளியிட்டிருக்கிறது. இந்திய வளர்ச்சி நிறுவனத்தின் ”யுரேகா புக்ஸ்” ஸ்டாலில் குட்டி குட்டி அறிவியல் படக்கதை நூல்கல் கவனம் ஈர்க்கின்றன. சுனாமி, புயல் என சிறு தலைப்புகளில் 20-30 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்கள் எளிய மொழியில் அறிவியல் பேசுகின்றன.

புத்தகங்கள் மட்டுமின்றி குழந்தைகளை ஈர்க்க வேறு சில அம்சங்களும் புத்தகக் காட்சியில் இருக்கின்றன. மகேந்திரா ஓவியப்பணி இல்லம் என்ற அமைப்பு, தன் ஸ்டால் முழுவதும் வண்ண வண்ண பென்சில்களை இறைத்து வைத்திருக்கிறது. அட்டைகளையும் அவர்களே தருகிறார்கள். குழந்தைகள் அமர்ந்து அவர்களுக்குப் பிடித்த ஓவியங்களை வரையலாம். ஆர்வத்தோடு வரையும் குழந்தைகளுக்கு ஓவிய நேர்த்தியை கற்றும் தருகிறார்கள். இறுதியில் குழுந்தைகள் வரையும் ஓவியம், அவர்களின் பெயரோடு அந்த ஸ்டாலிலேயே காட்சிப்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் ஓவிய ஆர்வத்தைத் தூண்டவே இந்த ஏற்பாடு என்கிறார்கள்.



ஹனிபீ பப்ளிகேஷன் என்ற நிறுவனம் சில புத்தகங்களோடு நிறைய ஓவிய அட்டைகளை வைத்து ஒரு சூழலியல் கண்காட்சியையே அமைத்திருக்கிறது. தனியார் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரால் நடத்தப்படும் இந்த நிறுவனத்தில் மழை எப்படி பெய்கிறது, மரம் எப்படி வளர்கிறது, தவளை எப்படி கத்துகிறது என்றெல்லாம் அழகிய அட்டைகளால் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளை ஈர்க்கும் இன்னொரு ஸ்டால் இயல்வாகை அமைப்பினுடையது. இயற்கை வேளாண்மை, குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் அடங்கிய நூல்கள் மட்டுமின்றி நிறைய கைத்திறன் பொருட்கள், கொட்டாங்கச்சி சிற்பங்கள், குருவிக்கூடுகள் என ஒரு சூழலியல் வாழ்க்கையையே தங்கள் ஸ்டாலில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். கூடவே சின்ன சின்ன பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நாட்டு விதைகளும், புத்தகங்களுக்கு இணையாக குழந்தைகளைக் கவர்கிறது.

குழந்தைகளின் வாசிப்பைத் தூண்டுவதோடு, அவர்களின் பன்முகத் திறனையும் சிந்தனையையும் வளர்க்கும் இடமாகவும் இருக்கிறது சென்னை புத்தக் காட்சி.

“ஹலோ நான் இனோவா பேசுறேன்!”


“ஹலோ நான் இனோவா பேசுறேன்!”

ஹாய் டியூட்ஸ்...


‘‘ ‘காதல்ல ஏமாந்தவங்களைவிட, கார் வாங்கி ஏமாந்தவங்க அதிகம்’னு ஒரு ஆட்டோ மொபைல் பழமொழி இருக்கு. ஆனா, என் விஷயத்துல நிச்சயமா அது பொய்யாத்தான் இருக்க முடியும். என்னை நம்பிக் கெட்டவங்க யாரும் கிடையாது (நாஞ்சில் சம்பத்தை இழுக்காதீங்க பாஸ்!). எனக்கு இந்த வருஷத்தோட 11 வயசு முடியப் போகுது. 2005-ல்தான் இந்தியாவுக்கு வந்தேன். ஜோதிகா காலத்தில் இருந்து ராதிகா ஆப்தே காலம் வரைக்கும் விதவிதமா என்னை மக்கள் ரசிச்சுக்கிட்டு வர்றாங்க.

என்னோட லேட்டஸ்ட் பெயர்: டொயோட்டா இனோவா கிரிஸ்டா. முன்ன மாதிரி இல்லாம 7 காற்றுப் பைகள், ABS (இந்த பிரேக் இருந்தா வீல் லாக் ஆகாது), டச் ஸ்க்ரீன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்னு எல்லா வசதிகளோடும் வர ஆரம்பிச்சுட்டேன். கண்ணை மூடிக்கிட்டு என்னை ஹைவேஸில் ஓட்டலாம். அந்த அளவு ஸ்டெபிலிட்டிக்கு நான் கியாரன்ட்டி. அது மட்டுமில்ல; நாஞ்சில்கூட ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு... ‘நோவாமல் பயணிக்க இனோவா’ அப்படீனு! இப்போல்லாம் நான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்; வேகம்னு வந்துட்டா ஃபெராரி, டியூட்ஸ்!

ஒரு காரில் மஞ்சள் போர்டு ரிலீஸ் ஆகிட்டா, (அதாவது, வாடகை கார்) சொந்தமா கார் வாங்குறவங்க அந்தக் காரை ‘டாக்ஸி கார்’னு ஒதுக்கிடுவாங்கனு ஒரு டாக் இப்போவும் இருக்கு. அதை உடைச்சதுல எனக்கு இன்னும் கொஞ்சம் கர்வம். ஒரு கறவை மாடு இருந்தா ஒரு குடும்பமே பிழைச்சுக்கும்னு சொல்வாங்களே... அந்த மாதிரி என்னை வாங்கி வெச்சுக்கிட்டா ஒரு டாக்ஸி டிரைவரோட மொத்தக் குடும்பத்துக்கும் நான் கியாரன்ட்டி.



கொஞ்சம் கொஞ்சமா நான் அரசியல், சினிமா, மிடில் க்ளாஸ்னு எல்லா ஏரியாவுலேயும் ரவுண்டு கட்டி சுத்த ஆரம்பிச்சேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகூட இன்னும் என்கூட பயணம் பண்றதைத்தான் விரும்புறார்னு சொன்னா நம்புவீங்களா? இப்படி எல்லாம் கௌரவமா இருந்த என் மேல, சமீபகாலமா ஒரு டாக் இருக்கு. அதாவது, அரசியல்ல என்னை ஒரு காமெடி பீஸாகவும் ராசி இல்லாதவன்னும் சொல்றாங்க! எப்படீனு கேட்கிறீங்களா?

2011-ல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவோட கூட்டணி வெச்சுக்கிட்டு ஜெயிச்சாரே... ஞாபகம் இருக்கா? அப்போ கவர்ன்மென்ட் சார்பா அவருக்கு என்னைத்தான் கொடுத்ததா சொன்னாங்க. ஆனா, நடந்து முடிஞ்ச சட்டசபைத் தேர்தலுக்கு அப்புறமா, ‘ஓட்டுகளைப் பிரிச்சுட்டார்’னு அவர் மேல ஏகப்பட்ட கமென்ட்ஸ். மக்கள் நலக் கூட்டணி டவுன் ஆனதுக்கு, என் மேல பழி போட்டா எப்படி மக்கழே?

ஓர் அரசியல்வாதிக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன். அவரால நான் தமிழ்நாட்ல பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனேன். கண்டுபிடிச்சிருப்பீங்க... யெஸ், நாஞ்சில் சம்பத்! அவர் பேரையே என்னோட லிங்க் பண்ணி மீடியாக்கள்லாம் கிண்டல்கூட பண்ணியிருக்காங்க. அம்மா கட்சியில துணை கொ.ப.செ-வா நாஞ்சில் சம்பத் சேர்ந்ததுக்கப்புறம், அவர் வீட்டு வாசல்ல நான் பரிசா இறங்கினேன். அதுக்கப்புறம் ஒரு டி.வி பேட்டியில வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம, கட்சித் தலைவருக்கு நல்லது பண்றேன்னு நினைச்சு அவர் பேசினது காமெடியாகி, அவரைக் கட்சிப் பதவியிலேருந்தே தூக்கிட்டாங்க. ‘இந்த காருக்காகத்தான் நீங்க கட்சி மாறுனதா சொல்றாங்க; தயவுசெஞ்சு அதைத் திருப்பிக் கொடுத்துடுங்க’னு என்னைப்பத்தி அவருகிட்டே போட்டுக் கொடுத்திருக்காங்க.! என்னால அவர் மானமே போச்சுங்கற மாதிரி மீடியாவுலயும் எழுதுறாங்க. இப்போகூட அம்மா போனதுக்கப்புறம், என்னைத் திருப்பிக் குடுத்துட்டாரு; ஆனா, அதுக்கப்புறம் அவருக்கு சூப்பரான செகண்ட் இன்னிங்ஸ் கிடைக்கறதுக்கும் நான்தான் காரணமா இருந்திருக்கேன்! இப்போ மறுபடியும் அவரோட செட்டில் ஆகிட்டேன்!



மதுரையில அழகிரிக்கும் என் மேல ஒரு கிரேஸ் இருந்துச்சு. ‘அண்ணனோட இனோவா வருதுடா’னு ஒரு காலத்துல மதுரையையே கிடுகிடுக்க வெச்சுக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் அவர் பண்ணின அட்ராசிட்டியில, வழக்கம்போல நம்மளைக் கோத்துவிட்டாய்ங்க! நல்லவேளை, ஏர்போர்ட்ல சசிகலா புஷ்பாகிட்ட அறை வாங்கின தி.மு.க எம்.பி சிவா, இப்போ டாடா சஃபாரி வெச்சிருக்காரு... இல்லேன்னா, அவர் அந்தம்மாகிட்ட அறை வாங்குனதுக்குக் காரணம் நான்தான்னு எழுதுனாலும் எழுதுவாங்க.

துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு, டி.கே.எஸ்.இளங்கோவன்னு இன்னும் நிறைய பேர் என்னை செல்லமா வெச்சிருக்காங்க. சினிமாக்காரங்க பென்ஸ் காரை ‘ராசியில்லாத காரு’ன்னு ஒதுக்கற மாதிரி, அரசியல்வாதிங்க என் பேரைக் கேட்டாலே பதறுறீங்களே... ஏன்? எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கோங்க... ஏன் ராசி பார்த்து அடுத்தவங்களைப் பழி வாங்குறீங்க? 8 கோடி ரூபாய் போட்டு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கினாலும், அது ரோட்டுக்கு வந்துதான் ஆகணும் பாஸ்! நான், நீங்கள்லாம் எம்மாத்திரம்? வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!’’

- தமிழ்
படம்: ஆர்.ராம்குமார்

85 வயதில் மீன்குழம்பு சமையலில் கலக்கும் கொடிவேரிப் பாட்டி!

பழனியம்மாள்

ஈரோடு மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையும் ஒன்று. இயற்கை சூழலில் அழகாய் அமைந்துள்ளது கொடிவேரி. இங்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள கடைகளின் மீன் வறுவலை சுவைக்காமல் செல்வதில்லை. எக்கச்சக்கமான கடைகள் இங்கே வந்துவிட்ட போதும் மிகச்சுவையான வறுவலும் மீன் குழம்பும் இங்கே கிடைத்தாலும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

பல தரப்பட்ட கடைகள் இங்கே முளைத்து விட்ட போதும் இங்கே பாட்டிகடை என்பது பிரசித்தம். அப்படியென்ன சிறப்பு அங்கே.. யார் அந்த பாட்டி என்று அறிந்துகொள்ள ஆவலுடன் அந்தக் கடைக்கு சென்றோம். நாம் யாரென்று அறியாத போதும், ‘வாங்கப்பா சாப்பிடுங்க.. சாப்பாடு எடுத்து வை’ என்ற சத்தம் காதினில் விழுந்தது. 85 வயது பாட்டி முதுமையிலும் நம்மை அன்போடு வரவேற்றார். அவரைப் பார்த்ததும் உழைத்து வாழ வயது ஒரு தடையே அல்ல என்பது நமக்குப் புரிந்தது.



கால்கள் தள்ளாடும் வயதிலும் வார்த்தை தள்ளாடாமல் அவரின் வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு அழகாக பகிர்ந்துகொண்டார்.

“என் பேரு பழனியம்மாள். என் கணவர் பேரு காளியண்ணன். இங்கதான் மீன் பிடிக்கிறார். நான் இங்க வந்து 30 வருசத்துக்கு மேல ஆச்சு தம்பி. நான் இங்க மீன் கடை வச்சு இருக்கேன். நான் இங்க வந்தப்போ மொத்தமே ரெண்டு கடைதான் இருந்துச்சு. அப்போ அஞ்சு ரூபாய்க்கு மீன் குழம்பும் சாப்பாடும் செஞ்சி போட்டேன். வயிறு நிறைய நிறைய சாப்பிடலாம். அப்போ விலையெல்லாம் கம்மி.. அதனால அவ்வளோ கம்மியான பணத்துக்கு சாப்பாடு போட்டேன். அந்த விலையில இருந்து இப்போ முப்பது ரூபாய்க்கு விலையை ஏத்தியாச்சு., அதுக்கு முப்பது வருசம் ஆகிடுச்சு” எனச் சிரிக்கிறார் அந்த பாட்டி. அந்த சிரிப்பினில் தெரிந்தது குறைந்த விலையிலும் மற்றவர்களின் பசியை நிரப்பும் மகிழ்ச்சி.



ஈரோடு கொடிவேரி அணையை சுற்றியுள்ள மக்களின் அழகியல் வாழ்க்கை...
சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...


“என்னோட பையனும் மீன் பிடிக்கிறதுன்னு போய் அஞ்சாவது மேல படிக்காம போய்ட்டான். இப்போ பேரனைத்தான் இங்கிலீசு மீடியம் படிக்க வைக்கிறோம்” என்றார். இவருக்கு உதவியாய் இருக்கும் இவரது மருமகள், “பாட்டி சும்மாவே இருக்க மாட்டாங்க.. ஏதாவது வேலை பார்த்துகிட்டே இருப்பாங்க. அதற்கு தகுந்த மாதிரி இங்க வர்றவங்களும் பாட்டி கடையை தேடி வர்றாங்க. அவங்க பாட்டி தான் எங்களுக்கு பரிமாறணும்னு சொல்வாங்க. பாட்டி மேல அவங்களுக்கு அவ்ளோ மரியாதை. இங்கே வருபவர்களில் நிறைய பேர் இங்கே உடைமைகளை வைத்துவிட்டு செல்வார்கள். அதில் தங்கம் நகை பணம் எல்லாம் இருக்கும். நான் கேட்பேன், ‘எப்படி இந்த மாதிரி நம்புறீங்க’னு. ‘பாட்டியை எங்களுக்குத் தெரியாதா’ன்னு சொல்வாங்க. அந்த அளவு பாட்டி மேல அவங்களுக்கு நம்பிக்கை.



ஒருதடவை திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகாரங்க இங்க வந்து கம்பெனியோட பில்-பணம் எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டாங்க. அடுத்த நாள் வந்து தேடுனாங்க நான் பத்திரமா எடுத்து வச்சு இருந்து அவங்ககிட்ட கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் அவங்க அடிக்கடி இங்க வந்து பாட்டி கையால சாப்பிட்டுதான் போவாங்க. போன வாரம் கூட வந்து 300 ரூபாய் கொடுத்துட்டு போனாங்க. ஒருமுறை தனியார் தொலைக்காட்சியில பாட்டியோட மீன் குழம்பு சமையல் வந்துச்சு. அதுக்கப்புறம் பாட்டி கடைதான் இங்க ஃபேமஸ்” என்றார் அவரது மருமகள்.



''இதுல பெருசா வருமானம் வரலையப்பா., 100 ,150 னு தினம் கிடைக்கும் அதுவும் எல்லாத்துக்கும் சரியாய் போகிடும். லீவு நாட்கள்ல 200, 300 னு கிடைக்கும் அவ்ளோதான். வேற எதுவும் எங்களுக்கு தெரியாதுப்பா'', 'பேசாமல் வீட்டில் ஓய்வு எடுக்கலாமே' என்று நாம் கேட்டதுக்கு “இத்தனை ஆண்டுகள் வர்றவங்க, போறவங்க முகத்தை பார்த்துட்டு இருந்து பழக்கமாகிடுச்சு திடீர்னு அவர்களை பார்க்காமல் இருக்க முடியலை. வீட்டில் இருந்து சும்மா சாப்பாடு சாப்பிடவும் முடியலை. அதான் என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ வேலை செய்கிறேன். இனிமேலும் செய்வேன். உழைக்கறதுல என்ன கஷ்டம் தம்பி?” என்று நம்மிடமே கேட்டு அடுத்து வந்தவர்களை கவனிக்க சென்றார்.

இக்காலத்தில் அதுவும் இந்த முதுமையடைந்த வயதில் உழைத்து உண்ண நினைக்கும் இந்த பாட்டி ஓர் அதிசயம்தான். நமது வாழ்த்துக்களை பாட்டிக்கு சொல்லிவிட்டு, பாட்டி கையால் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

- ச.செந்தமிழ் செல்வன்,
மு. முருகன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

Monday, January 16, 2017

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள்: வங்கிகளுக்கு நாளை விடுமுறை

      

குறள் இனிது: சந்தேகம் வந்திடுச்சா... காரியம் கெட்டுச்சு..! சோம.வீரப்பன்

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக
நினைப்பானை நீங்கும் திரு (குறள்: 519)
எனது நண்பர் ஒருவர் ஒரு வங்கியில் 1970-களில் அதிகாரியாக சேர்ந்தார். எந்த ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையைப் பார்த்தாலும் அதன் நிறைகுறைகளை உடனே பிட்டுப்பிட்டு வைத்து விடுவார். யமகாதகர், ஏமாற்ற முடியாது, எக்ஸ்-ரே கண் அவருக்கு என்பார்கள்.

கடன் துறையில் பணியாற்றியவர்களுக்கும் வங்கிகளில் கடன் கேட்டவர்களுக்கும் தெரியும். ஒப்புதலுக்கு விண்ணப்பம் வந்தால் வங்கியின் முதல் வேலை அதிலுள்ள குறைகளை எல்லாம் பட்டியலிடுவதுதான். ஆனால் நம்ம நண்பர் அதிலுள்ள நிறைகளைப் பட்டியலிடுவார்! விண்ணப்பதாரருக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டுமென்று ஆராய்வார், எழுதுவார், வாதிடவும் போரிடவும் செய்வார்! தரமான விண்ணப்பம் என்றால், முதலில் ஒப்புதலை அனுப்பி விடுவார். தனியே ஒரு கடிதம் எழுதி பதில் வாங்கிக் கொள்வார்!

என்னப்பா, இப்படிச் செய்கிறாயே, பெயருக்காவது கேள்வி கேட்டு, காலந்தாழ்த்தி பின்னர் ஒப்புதல் கொடுத்தால்தான் நமக்குத் தொந்தரவு வராது என யாரும் கூறினால் அலட்டிக்க மாட்டார். நான் நேர்மையானவன், என்னை வங்கி நம்புகிறது. நான் செய்வதெல்லாம் வங்கியின் வர்த்தகம் வளர்வதற்காக என்பார். உண்மைதானுங்க. அப்பழுக்கற்றவர். யாரிடமும் ஒரு இனிப்புப் பெட்டியோ, நாட்காட்டியோ கூட எதிர்பார்க்க மாட்டார்!

அவருக்குப் பதவி உயர்வு வந்த பொழுது வங்கியின் தலைமை அலுவகத்தில் கடன் பிரிவின் தலைவராக அமர்த்தப்பட்டார். அவரது அணுகுமுறை வங்கியெங்கும் பலன் தர ஆரம்பித்தது! நல்ல விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதே வேகத்தை சரியில்லாத விண்ணப்பங்களை நிராகரிப்பதிலும் காட்டினார் அவர். மாலை வீடு திரும்பும் பொழுது கோப்பு எதுவும் தன் மேசையில் தங்கி இருக்கக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

இங்கு மட்டும் வேலை எப்படி இவ்வளவு வேகமாக நடக்கிறது என்கிற பேச்சு எழ ஆரம்பித்தது. தலைமையகத்தில் இருந்த சில பழம் பெருச்சாளிகளுக்கு இது பிடிக்கவில்லை. நண்பர் பல வாடிக்கையாளர்களிடம் நெருங்கிப் பழகுவதைப் பார்த்த உயரதிகாரிகள் சிறிது சந்தேகப்படவும் ஆரம்பித்தனர். அவரிடம் அவரது உயரதிகாரி வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேச வேண்டாம், கிளை மூலமாகவேதொடர்பு கொள்ள வேண்டுமென்றார்.

வந்தது பாருங்க கோபம் நம்ம நண்பருக்கு. என்னை நம்பவில்லையா என்று விடுமுறை போட்டுவிட்டு கிளம்பியவர் பின்னர் வேலையை ராஜினாமாவும் செய்து விட்டார். வங்கிக்கு அந்த மாதிரி ஆள் பின்னர் கிடைக்கவேயில்லை! நீங்களே சொல்லுங்கள். ஓட்டுனர் நன்றாகக் கார் ஓட்டும் பொழுதா பாடம் சொல்வது? சிறந்த சமையற்காரர் சமையல் செய்யும் பொழுதோ, தையல்காரர் துணி வெட்டும் பொழுதோ திறமையைச் சந்தேகப்பட்டுப் பேசலாமா?
சிறந்தவன் எனத் தெரிந்து பொறுப்பைக் கொடுத்து, வேலையும் ஒழுங்காக நடக்கும் பொழுது சந்தேகத்தைக் காட்டலாமா? காரியத்திலேயே கருத்தாக இருப்பவன் நடத்தையை தவறாக நினைத்தால் செல்வம் நீங்குமென்கிறது குறள்.
- somaiah.veerappan@gmail.com

பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் 'ஸ்வைப்' இயந்திரங்கள் பயன்பாட்டால் தீ விபத்து ஏற்படும் அபாயம்: எச்சரிக்கையை கண்டுகொள்ளுமா மத்திய அரசு?

க.சக்திவேல்

பெட்ரோல் நிரப்பும் இடத்துக்கு அருகில் ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், அதன் மூலம் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தெளிவான வழிகாட்டுதல்களை எண்ணெய் நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து டெபிட், கிரெடிட் கார்டுகள், மொபைல் வாலட், இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, தற்போது பெரும்பாலான பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) அனுப்பிய கடிதத்தில், “பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடத்துக்கு அருகில் மொபைல் வாலட் பயன்படுத்தினால் அல்லது கார்டு ஸ்வைப் இயந்திரம் செய்தால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, அபாயகரமான பகுதியை குறிப்பிட்டு ஸ்வைப் மெஷின்களை பாதுகாப்பாக பயன்படுத்த விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கமும், தென்மண்டல தலைமை வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், “எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலிய விற்பனையாளர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டி அபாயகரமான பகுதி குறித்து தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தது.

விபத்து அபாயம்:

ஆனால், இதுவரை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும் இடத்துக்கு அருகிலேயே தற்போது வரை ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச்செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களும், தமிழகத்தில் 4,570 பெட்ரோல் நிலையங்களும் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவற்றில் மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று ஸ்வைப் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பயன்பாடு அதிகரிப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ஸ்வைப் இயந்திரங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்புவோரின் எண்ணிக்கை 35 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலிய விதிகள் 2002-ன்படி பெட்ரோல், டீசல் விநியோகிக்கும் இடத்துக்கு அருகில் அபாயகரமான பகுதிகளை குறிப்பிட்டு, அந்த பகுதியில் செல்போன், ஸ்வைப் இயந்திரம் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இந்த அளவீடுகள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை.

விழிப்புணர்வு வேண்டும்

மேலும், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசலை டீலர்கள் விற்பனை செய்தாலும், வெடிபொருள் பாதுகாப்பு உரிமத்தை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (பிஇஎஸ்ஓ) எண்ணெய் நிறுவனங்களுக்குத்தான் வழங்குகிறது. எனவே, அதைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே, ஸ்வைப் மெஷினை எவ்வளவு தூரத்தில், எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெறும் உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உருவெடுத்தது செயற்கையானது அல்ல. அமெரிக்காவைத் தாண்டியும் நேசிக்கப்பட்ட அதிபர் அவர். சவடால்களுக்காக அல்லாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக உலகின் கவனத்தை ஈர்த்த அதிபர் அவர்.

தன்னுடைய உரையில், தனது அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளைப் பட்டியலிட்டார். அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வைப் பற்றி எச்சரித்தார். இனரீதியான பிரிவினைகளைப் பற்றி நிதானமாக மக்களிடம் பேசினார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அவரது ஜனநாயகக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அவர் பதவியிலிருந்து இறங்குகிற இந்தச் சூழலில் குலைந்து கிடக்கிறது கட்சி. அரசியலில் தாக்கம் செலுத்துகிற பணத்தின் திருவிளையாடல்களைக் குறைப்பதன் மூலம் ஜனநாயக அமைப்புகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது கடைசி உரையில் கேட்டுக்கொண்டார். பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் அமெரிக்க நாடாளுமன்றம் திணறுவதைச் சமூகத்தின் அடித்தளத்தில் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் சரிசெய்ய வேண்டும் என்றார். தனது கொள்கைகளுக்கு முரணாக, அமெரிக்காவின் தேர்வாளர் சபையில் இனரீதியான பிளவுகள் அதிகரித்துவிட்டன என்பதை அவர் அறிவார். அவர் மனதுக்கு மிக நெருக்கமான, துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை அவரால், பெரிய அளவில் முன்னெடுத்தச் செல்ல முடியவில்லை. அதேசமயம், அவரைச் சங்கடத்தில் ஆழ்த்தினாலும், பொதுமக்களை அதிகமாகக் கொல்லக்கூடிய ஆள் இல்லாத விமானங்கள் போன்ற ட்ரோன் போர்க் கருவிகளைப் பயன்படுத்த அனுமதி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. அமைப்புக்குள் தன்னால அளவில் அவர் போராடினார் என்று சொல்லலாம். உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளில் மனதில் நிற்கக்கூடிய ஒரு தாக்கத்தை அவர் உருவாக்கினார்.

அமெரிக்காவைக் கடுமையான பொருளாதார மந்தம் தந்த அழுத்தத்தின் மத்தியில் அவர் வழிநடத்தினார். முதல் நான்கு ஆண்டுகளில் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர பணியாற்றினார். அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான நிறையச் சட்டங்களை அவர் உருவாக்கினார். அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியதுபோல, வேலையில்லாத் திண்டாட்டம் இன்றைய அமெரிக்காவில் பத்தாண்டு காலத்துக்கு முந்திய நிலைக்குக் குறைந்துள்ளது. மீண்டும் வளர்கிறது அமெரிக்கப் பொருளாதாரம்! வெளியுறவுக் கொள்கையில் ஈரான் அணு ஒப்பந்தம் தொடர்பில் அவர் பெருமைப்பட்டுக்கொள்வதில் நியாயம் உண்டு. அவர் கியூபாவைக் கெடுபிடி காலக் கட்டத்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஒசாமா பின்லேடன் மரணம் மூலம் அவர் நிறைவுரை எழுதினார். பகைமை நாடுகளான ரஷ்யா, சீனாவை எதிர்கொள்வதில் அவர் குறைவான திறன்கொண்டிருந்தார். அவரது மென்மையான அணுகுமுறையால் அந்த நாடுகள் பல விவகாரங்களில் அமெரிக்காவுக்குச் சவால் விடுத்துவிட்டுத் தப்பித்தன.

ஒபாவின் சாதனைகள், தோல்விகளுக்கான பெறுமதியை அவர் பெறாவிட்டாலும் ஒரு மனிதன் என்ற முறையில் அவரை மக்கள் எப்போதும் நினைவுகூர்வார்கள். ஆழமான சிந்தனையோடு செயல்பட்ட தலைமை அதிகாரியாக, அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் நினைவுகூரப்படுவார். சமூக ஊடகங்களோடும் மக்களின் பண்பாட்டோடும் நல்ல உறவுகளைப் பேணிய 21 –ம் நூற்றாண்டு மனிதராக அவர் இருந்தார். துப்பாக்கிக் கலாச்சாரத்தாலும், இன வெறுப்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்தவராக அவர் இருந்தார். மக்களின் நினைவில் எப்போதும் அவர் இருப்பார்!

NEWS TODAY 09.06.2026