Sunday, April 5, 2015

'வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குவேன்'- ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியரின் லட்சியப் பயணம்

தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன்

இன்னும் பத்து ஆண்டுக்குள் இந்த ஊரில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைந்தது ஐம்பது அரசு ஊழியர்களையும் உருவாக்கிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன்” என்று உறுதிபடச் சொல்கிறார் தாமரைச்செல்வன்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது சித்தாதிக்காடு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன். 15 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளிக் குழந்தைகளைப் போல இந்தப் பள்ளிக் குழந்தைகளையும் சீருடை, டை அணிந்து மிடுக்காக நடக்கவைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை தந்தவர்.

பொதுவாக கிராமத்துக் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட பெற்றோருக்கு நேரமும் இருக்காது; ஞாபகமும் வராது. இதனால் தனது பள்ளிக் குழந்தை களின் பிறந்த நாளுக்கு தனது செலவிலேயே கேக் வாங்கி வந்து குழந்தைகள் மத்தியில் அதை வெட்டவைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார் தாமரைச்செல்வன். இன்பச் சுற்றுலா, கல்விச் சுற்றுலா - இதெல்லாம் இந்தக் காலத்து பள்ளிக் குழந்தைகளுக்கு கனவாகிவிட்ட நிலையில் தாமரைச்செல்வனின் செலவில் இந்தப் பள்ளிக் குழந்தைகள் ஆண்டு தவறாமல் சுற்றுலா போகிறார்கள்.

“இங்க படிக்கிற பிள்ளைங்க எல்லாருமே வறுமைக் கோட்டுல இருப்பவங்க. பெத்தவங்கள கேட்டால் ‘ஆடி மாசம் பொறந்தான்’னு தான் சொல்லுவாங்க. இந்த நிலைமையை மாத்தி, பிள்ளைகளின் பிறந்த நாளை அனைத்துப் பெற்றோருக்கும் தெரியவெச்சேன். ஒருவாரம் முன்னாடியே பிறந்த நாள் தேதியை பெத்தவங்களுக்கு தெரிவிச்சிருவோம். ஆரம்பத்துல கேக் மாத்திரமில்லாமல் புத்தாடையும் நானே எடுத்துக் குடுத்தேன். இப்ப, ஒன்றிரண்டு பேர் தவிர மத்தவங்க புத்தாடை எடுத்துடுறாங்க. கேக், சாக்லேட் மட்டும்தான் நம்ம செலவு. பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்து மேல நாட்டம் வந்தாதான் படிப்புல ஆர்வம் காட்டுவாங்க. அதுக்காகத்தான் இப்படிச் சின்னச் சின்ன வேலைகளை செய்யுறோம். வீட்டில் நம்ம பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட மாட்டோமா? அப்படித்தான் நினைச்சுக்குவேன்.

வறுமையில இருந்தாலும் சில குடும்பங்களை குடி சீரழிக்குது. அதனாலேயே பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வெக்க முடியாம திண்டாடுறாங்க. இன்னும் சிலருக்கு இயல்பாகவே வறுமை காரணமா படிப்பை தொடர முடியாம போயிடுது. அப்படி பாதியில் படிப்பை நிறுத்த வேண்டாம். மேலே படிக்க நான் உதவி செய்யுறேன்னு தைரியம் கொடுத்து பல பிள்ளைகளை கல்லூரி வரைக்கும் கொண்டு வந்துட்டேன்.

மது அருந்தும் தகப்பன்களிடம், ‘நீ குடியை விடுறதா இருந்தா உன் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்’ என்று சொல்லி அவங்கள குடியிலிருந்தும் மீட்க முயற்சிக் கிறேன். எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைச் சிருக்கு. இப்ப இந்த ஊருல மொத்தம் 187 பட்டதாரிகள் இருக்காங்க. ஆனா அரசு ஊழியர் ஒருத்தர்கூட இல்லை.

எஞ்சி இருக்கிற எனது பத்தாண்டு பணிக் காலத்துக் குள்ள இந்த ஊருல வீட்டுக்கு ஒரு பட்டதாரியையும் குறைஞ்சது 50 அரசு ஊழியர்களையும் உருவாக்கிக் காட்டுவேன். அதுக்காக விரைவில் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுறதுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம்னு இருக்கேன்” என்கிறார் தாமரைச்செல்வன்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் காலியாக இருக்கும் வீடுகள்: தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய காரணம்


சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான வீடுகள் காலியாக உள்ளன. இதனால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போரையும், வீடு தேடி வருபவர்களையும் அனுசரித்து நடக்கத் தொடங்கியுள்ளனர்.

வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் பல நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். தண்ணீரை குறைவாகத்தான் செலவிட வேண்டும், மின்சார கட்டணத்தை கூடுதலாக தரவேண்டும் என்றெல்லாம் வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகளால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் திணறி வந்தனர். இதற்காகவே கடன்பட்டு வீடு வாங்கிச் சென்றவர்கள் ஏராளம்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பதால் சென்னையில் சுமார் 30 ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் காலியாக உள்ளன. வங்கிக் கடனில் வீடு வாங்கியவர்கள் அதனை வாடகைக்கு விடும்போது அவர் மாதந்தோறும் கட்டும் கடன் தவணைத் தொகையைவிட வாடகை குறைவாக இருக்கிறது. அதனால் தன் கையில் இருந்து பணத்தைப் போட்டு மாத தவணை கட்டும் நிலையில் வீட்டு உரிமையாளர்கள் பலர் உள்ளனர். மேலும் வீட்டில் குடியிருப்பவர்கள் காலி செய்தால் மாத பட்ஜெட்டில் துண்டு விழுமே என்ற பயத்தால் குடியிருப்போரை அனுசரித்துப் போகத் தொடங்கியுள்ளனர்.

“கடந்த 10 ஆண்டுகளில் சொத்து வரியும், தண்ணீர் வரியும் 40 சதவீதம் அதிகரித்திருப்பதால் வீட்டுக்கான பராமரிப்பு செலவு அதிகமாகியிருக்கிறது. இருந்தாலும், வீட்டு வாடகையை அதிகரிக்க முடியவில்லை. அப்படி அதிகரித்தால் வாடகைக்கு குடியிருப்பவர்கள் வீட்டை காலிசெய்துவிடுகிறார்கள். புதியவர்கள் வராமல் நான்கைந்து மாதங்கள் வீடு காலியாக இருக்கிறது. அந்த காலத்தில் ஏற்படும் நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு சற்று குறைந்த வாடகைக்கு வீடு கொடுத்துள்ளேன்” என்கிறார் பெரம்பூரைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ராஜேஷ்.

தனியார் வீடுகளுக்கு மட்டுமின்றி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டிக்கொடுக்கும் வீடுகளிலும் இதே நிலைதான். சோழிங்கநல்லூரில் சுயநிதித் திட்டத்தில் கட்டிக் கொடுத்த 900 அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 100 வீடுகள் வரை வாடகைக்குப் போகாமல் இருக்கின்றன. சென்னையில் பரவலாக வீடுகளில் ‘டூ லெட்’ போர்டு தொங்குவதைப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பலரும் இடமாறிச் செல்வதால் வீடுகளில் ‘டூ லெட்’ போர்டு தொங்கும். சில நாட்களிலேயே வீடு வாடகைக்கு விடப்பட்டுவிடும். ஆனால், இப்போது சென்னையின் மையப் பகுதியில்கூட ஒரு மாதம் வரை வீடு காலியாகவே கிடக்கிறது. இதற்கு தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நகரில் சென்னைக் குடிநீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் மட்டுமே வீடுகள் வாடகைக்கு போகிறது. மற்ற பகுதிகளில் உள்ள வீட்டு உரிமை யாளர்கள் நிலை திண்டாட்டம்தான்.

இதனால் வாடகை வீடு கேட்டு வருபவர்கள், வீட்டு உரிமையாளரிடம் நிபந்தனையின்றி வீடு வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் - பிஎச்.டி. முடித்திருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி கட்டாயம்



தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.9.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டுக்குரியவை ஆகும்.

2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி. முடித்திருந்தால் மட்டும் தகுதித்தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த விதிமுறையைத்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம் செய்து அதன்படியே, உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்களைப் பெற்றது.

ஆசிரியர் பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, தமிழ், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு இறுதி தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, உளவியல், சமூகவியல், சமஸ்கிருதம், இந்திய கலாசாரம் உள்ளிட்ட பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 25-ம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு மார்ச் 31-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வுப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, உதவி பேராசிரியர் பணிக்கு, பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களில், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பிஎச்டி பட்டதாரிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

எனவே, ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய புதிய தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்படுமா? அல்லது முதலில் பணிக்கு அனுமதித்து குறிப்பிட்ட காலத்துக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற கால அவகாசம் அளிக்கப்படுமா? என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சொல்லத் தோணுது 28: உதிர்ந்த இலைகள்

Return to frontpage

தொலைக்காட்சிப்பெட்டி ஒன்றுதான் இன்று மனிதர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாமல் போனால் இந்த ‘பெருசுகளிடம்’ பேசுவதற்கு யார்தான் துணையிருக்கிறார்கள்?

வீட்டிலுள்ளப் பெரியவர்கள் பேசுவதை எவரும் விரும்புவதில்லை. பேசினாலும் சுருக்கமாகப் பேசச்சொல்லி கண்டிக்கிறார்கள். நான் நண்பர்களின் வீட்டிற்கோ, விருந்தினர் வீட்டிற்கோ சென்றால் முதலில் பார்க்க விரும்புவது அந்த வீட்டிலுள்ள முதியவர்களைத்தான். பேச்சுத் துணைக்கும், நலன் விசாரிப்புக்கும் ஏங்குகின்ற அவர்களை பெரும்பாலான வீடுகளில் கட்டிவைத்திருக்காத நாய்கள் போலவே நடத்துவதை கண்டுகொண்டேதான் வருகிறேன். விருந்தினர்களும், நண்பர்களும் வீட்டிற்கு வரும்போது எத்தனைபேர் தங்களின் வயதான உறவுகளை நாம் கேட்காமலேயே அறிமுகப்படுத்துகிறார்கள்!

வெளியூர் சென்றிருந்தபொழுது என் படைப்புகள் மேல் பற்றுகொண்ட ஒருவர் பலமுறை வற்புறுத்தி அழைத்ததினால் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பெரிய விருந்து என்றே சொல்லலாம். விடைபெற்றுத் திரும்பும்போது எனது கைப்பேசியை மறந்து அங்கேயே வைத்துவிட்டு வந்து விட்டதால் மீண்டும் நினைவுக்கு வந்து அதனை எடுப்பதற்காக கொஞ்ச நேரத்திலேயே திரும்பிப் போனேன். அழைப்புமணி அடித்தும்கூட யாரும் வரவேயில்லை. வீடு திறந்திருந்ததால் நானே உள்ளே சென்றேன்.யாரும் கண்ணில் படவில்லை. ஆனால் மேலே மாடியின் அறைக்குள்ளிருந்து யாரையோ அடிக்கின்ற சத்தமும், அடியை வாங்குபவர் அலறுவதும் கேட்டது. அவரின் மனைவியும் சேர்ந்து திட்டிக்கொண்டிருந்தார். அவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி அடி வாங்குபவர் என்னைப் பார்க்க முயன்றதற்காக சண்டை மூண்டிருந்தது. மீண்டும் நண்பர் அவரைத் தாக்குவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நானே மாடிக்குப் போனேன். அனைவருமே அதிர்ந்து போனார்கள்.அடி வாங்கிய அப்பா என்னைக்கண்டதும் அழுகையை மறைத்துக்கொண்டார். அதன்பின் அந்த நபர் என்னை பார்ப்பதையேத் தவிர்த்தார்.

சில ஆண்டுகளுக்குப்பின் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த நபரின் அப்பாதான் முதியோர் இல்லத்திலிருந்து எழுதியிருந்தார். “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தாராம். அவரால் என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கவில்லையாம். ஒருமுறை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு அதிகப்படியான எழுத்துப் பிழைகளோடு எழுதியிருந்த அந்தக் கடிதத்தை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

இரண்டு மாதங்களுக்கு முன் அந்த ஊர் போயிருந்ததால் அவரின் நினைவு வந்து முதியோர் இல்லத்துக்குச் சென்றேன். பக்கவாதத்தால் ஒரு காலும் கையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. தன் மனதில் இவ்வளவுகாலம் தேக்கி வைத்திருந்ததையெல்லாம் கொட்டினார். அப்பொழுதும் அவரின் மகன் மீது குற்றம் சொல்லவேயில்லை. இறுதிவரை தச்சுத் தொழில் செய்து வந்த படிக்காத அவர் அவருக்கென எந்த சேமிப்பையும் வைத்துக்கொள்ளவில்லை. அடிக்கடி ஏற்படும் சண்டையைத் தவிர்க்க வெறுப்பிலிருந்து மீள முடியாமல் திடீரென ஒரு இரவு யாருக்கும் சொல்லாமல் அந்த இல்லத்தில் வந்து சேர்ந்துவிட்டாராம். பொங்கலன்று மகனும் மருமகளும் வந்து பார்த்தார்களாம். மகன்தான் கொஞ்ச காலமாக பணம் செலுத்துகிறாராம். அங்கிருந்து என்னால் மீண்டு வரவேமுடியவில்லை. அங்கிருந்த ஒவ்வொரு தாய் தகப்பன்களுக்கும் ஒரு கதை இருக்கிறது. திரும்பி வரும்போது அவர்களின் வாழ்கைப்பற்றி ஒரு படமெடுக்கச்சொல்லி கெஞ்சினார்கள்.

என்றைக்கு தொலைக்காட்சிப்பெட்டி வந்ததோ, ஒவ்வொருவரின் கைகளுக்கும் கைப்பேசிக் கருவி வந்ததோ, அன்றிலிருந்தே மனிதனோடு மனிதன் நேரில் பேசிக்கொள்வது நின்றுவிட்டது. முதியவர்களுக்கு வீட்டு விலங்குள் போலவே வேளாவேளைக்கு உணவு மட்டும் கிடைக்கிறது. கண்களில் தேங்கியுள்ள ஏக்கத்தோடு தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கையிலிருந்த பிள்ளைகள் எங்கோ போய்விட்டன. பெட்டியை இயக்கும் கருவி மட்டும் ஒவ்வொரு தாய் தகப்பன் கைகளில் இருக்கிறது.

கிராமங்களிலாவது பேச்சுத்துணைக்கு இவர்கள் போலவே முதியவர்கள் இருக்கிறார்கள். நகரங்களில் எங்கே போவது. மாதச் சம்பளத்தில் பணிபுரிந்தவர்களாவது எதிர்காலம் குறித்து சிந்தித்து சேமிப்பை உருவாக்கிக்கொண்டார்கள். மற்றவர்களுக்கு கையில் எதுவும் இல்லை. அரசாங்கத்தைவிட்டால் ஏது வழி!

இந்தக் கொடுமைகளை களையத்தான் இந்திய அரசாங்கம் தங்களை உருவாக்கியப் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை எனச் சொல்லி புதிய சட்டத்தை உருவாக்கியது. பெற்றோர்கள் நினைத்தால் தங்களைத் தவிக்கவிடும் பிள்ளைகள் மீது காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். அவர்களின்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனையும் கிடைக்கும். பிள்ளைகளை தண்டிக்கச் சொல்லி வழக்குத் தொடுக்கும் அளவுக்கு இன்னும் பெற்றோர்களின் மனது கல்லாக மாறவில்லை.

கடந்த முப்பதாண்டுகளுக்குப் பின்தான் இந்த மணமுறிவுகளும், முதியோர் இல்லங்களும் இந்த மண்ணில் உருவானது. இடம்பெயர்வினாலும், பொருள் தேடலினாலும்,தன்னலத்தாலும் கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. ஆளாளுக்கு தனித்தனியாக சம்பாதித்து கையில் பணத்தைப் பார்த்ததினால்தான் இந்தப்பற்றின்மை.

தன்னை உருவாக்கியவர்களை கைவிடக்கூடாது என ஒவ்வொரு பிள்ளைகளும் நினைத்தாலும் வாழ்வு அனைவருக்கும் வசதியாக வாய்த்து விடுவதில்லை. நகரத்து வாழ்வில் தொலைந்து போய்விட்ட கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு அவர்கள் வாழ்வதற்கே இங்கு ஒரு அறைக்கு உத்திரவாதமில்லை. வீடு இருப்பவர்கள் வீட்டுக்குமேல் வீடு வாங்கி குவித்துக்கொண்டேப் போகிறார்கள். அப்பா, அம்மாவுக்கு ஒரு அறை தந்து அவர்களை மகிழ்ச்சியாக தங்களுடன் வைத்துக்கொள்ள நினைத்தாலும் பொருளாதாரம் இடம் தருவதில்லை.

தங்கள் பிள்ளைகள் தங்களின் தாய் தகப்பன்களின் கைகளில்தான் வளர வேண்டும் அதுதான் சிறந்த வாழ்வு என நினைத்தாலும் அது கனவாகவே பலருக்கு முடிந்துவிடுகிறது.

மெத்தப்படித்த தேர்ந்த மருத்துவர் ஒருவர் எனக்கு நெருக்கமான நண்பனாக இருக்கிறார். கிராமத்தில் ஏழு பேரோடு பிறந்தவர். சுவற்றில் மாட்டியிருக்கும் தன் தாய் தந்தையரின் படத்தையும், தங்களின் மகன்கள் இருவரின் படத்தையும் கணினியில் பார்த்த படியும் உட்கார்ந்திருக்கிறார். முதுமை அவரை முடக்கிவிட்டது. அமெரிக்காவில் ஒருவரும், லண்டனில் ஒருவரும் குழந்தைகளோடு வாழ்கிறார்கள். மாடிப்படி ஏறி இறங்க முடியவில்லை. தங்களை கவனித்துக்கொள்ளத் துணைக்கு ஆட்களும் இல்லை. ‘‘தங்களால் இனி தமிழ்நாட்டில் வந்து வாழமுடியாது. இருப்பதிலேயே சிறந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறோம். அவர்கள் சிறப்பாக கவனித்துக்கொள்வார்கள். நிம்மதியாக வாழலாம். பணத்தை நாங்கள் இருவருமே பகிர்ந்துகொள்கிறோம்’’ என மகன்கள் சொல்லிவிட்டார்களாம். என் வீட்டிற்கும், அவர் வீட்டிற்கும் தொலைவு என்றாலும் அடிக்கடி அவரைச் சென்று பார்த்தும், தொலைபேசியில் பேசிக்கொண்டும் வருகிறேன்.

இன்று கட்டிடக்கலை எனும் படிப்பை கரைத்துக் குடித்த பிள்ளைகள் இப்படிப்பட்ட முதியோர்கள் ஒரே இடத்தில் வாழும்படி முதியோர் இல்லங்களை அவரவர்களுக்கு சொந்தமாகவே கட்டித்தர தொடங்கிவிட்டார்கள். அங்கே நீங்கள் கேட்கின்ற எல்லாமும் இருக்கும்.. நீங்கள் பெற்று வளர்த்தப்பிள்ளைகள் தவிர! கோயம்புத்தூர் மாவட்டத்தில்தான் இதுபோன்ற வீடுகள் அதிகமாக கட்டி முடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.இறுதிச்சடங்கிற்கு மட்டும் பிள்ளைகள் வந்தால் போதும்.ஒருவேளை வராமல்போகிறவர்களுக்கு வீடியோவில் அவர்களே படமெடுத்தும் அனுப்பி வைப்பார்களாம்.

கூடிய விரைவில் அரசின் நிதிநிலை அறிக்கைகளில் அரசாங்கமே முதியோர் இல்லத்துக்கான நிதியை ஒதுக்கி அறிவிக்கப்போகும் நாட்கள் வரத்தான் பொகிறது.
- சொல்லத் தோணுது…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

சி.பி.ஐ. விசாரணையை தவிர்ப்பதற்கே கைது... சந்தேகப்படும் இளங்கோவன்!

சென்னை: சி.பி.ஐ. விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் வலுக்கிறது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருநெல்வேலி மாவட்ட விவசாய பொறியியல் துறையின் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமார சாமி தற்கொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு நடை பெற்ற உடனே இது தற்கொலை அல்ல, இதில் விவசாயத்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டு இருக்கிறார் என்று முதல் முதலாக குரல் எழுப்பினேன்.

தொடக்கத்தில் ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில், தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்தேன். முத்துக் குமாரசாமி இறப்பதற்கு முன்பு, அவர் கடந்த 3 மாதங்களில் யார் யாரோடு பேசினார் என்கிற தொலைபேசி, அலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலை ஆதாரமாக வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பதவி, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பின்பு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்தன. நேற்றிரவு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ? என்கிற சந்தேகம் வலுக்கிறது.

அதனால் இந்த வழக்கில் தமிழக அமைச்சரே சம்பந்தப்பட்டிருப்பதால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும். ஏனெனில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இறுதியாக குற்றவாகளிகள் தப்பித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, நான் ஏற்கனவே கோரியிருந்த மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைப்பதன் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என்று கூறி உள்ளார்.

அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது கண்துடைப்பு நாடகமே... ஆவேசப்படும் ராமதாஸ்!

சென்னை: முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது வெறும் கண்துடைப்பு நாடகமே என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிருவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான வழக்கில் வேளாண்துறையின் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது காலம் கடந்து எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.

முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்த வேண்டும், விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக அவரை பதவி நீக்க வேண்டும் என அப்போதே நான் வலியுறுத்தினேன். ஆனால், முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பான ஆதாரங்களை அழிக்கவும், செய்திகள் வெளிவராமல் தடுக்கவும் தான் அரசு முயன்றதே தவிர, உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி போனபோது தான் மார்ச் மாதம் 7 ஆம் தேதி அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். அப்போதும் இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்& அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.

அதுமட்டுமின்றி, அதிகாரி முத்துக்குமாரசாமியை வருமானவரித்துறை விசாரணைக்கு அழைத்து இருந்ததாகவும், அதற்கு பயந்து கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் ஊடகங்களின் மூலம் காவல்துறை வதந்தி பரப்பியது. மேலும், முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி காரணமில்லை என்று மறுக்கும்படி அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாலும், இவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்ததாலும் தான் தாங்கள் இவ்வழக்கை நியாயமாக நடத்துவதாகக் காட்டும் நோக்குடன் முன்னாள் அமைச்சரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்பே தவிர, இதனால் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது. உண்மையில் இது அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உயர்ந்த இடத்தில் இருந்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சி ஆகும். அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஊழல் மூலம் சேர்த்த பணத்தை அவரே வைத்துக் கொள்ளவில்லை. அனைத்து அமைச்சர்களும் ஊழல் மூலம் ஈட்டும் பணத்தை தங்களின் மேலிடத்தில் ஒப்படைத்து விட்டு அவர்கள் தரும் குறிப்பிட்ட விழுக்காடு கமிஷனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் எழுதப்படாத சட்டம் என்று அதிமுகவினரே கூறுகின்றனர்.

இந்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டால் ஊழல் மூலம் கிருஷ்ணமூர்த்தி சேர்த்த பணம் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்ற உண்மைகள் எல்லாம் தோண்டி எடுக்கப்படும். இதைத் தடுக்கும் நோக்குடன் தான் இப்போது கிருஷ்ணமூர்த்தி கைது என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இது போதுமானதல்ல. இவ்வழக்கில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சி.பி.ஐ.யால் மட்டுமே முடியும் என்பதால் இவ்வழக்கை அந்த அமைப்பிடம் ஒப்படைக்கவேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை பொறியாளர் செந்தில் ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை வேளாண் துறை பொறியாளர் செந்தில் ஆகிய இருவரையும் இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு முழுவதும் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று காலை 5.00 மணியளவில் அவரை கைது செய்து, நெல்லைக்கு அழைத்து சென்றனர்.
அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்றனர். அங்கும், இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணைக்கு பின் அவர்களை நெல்லை 3வது ஜுடிஷியல் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முதன்மை பொறியாளர் செந்தில் ஆகிய இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். பின்னர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வழக்கறிஞர், அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதனை பரிசீலித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை அளிக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இருவரரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் சிறைச்சாலை மருத்துவமனையில் அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால், நாளையே இருவரையும் போலீஸ் காவலில் எடுக்கும் மனு சி.பி.சி.ஐ.டி. சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...