Showing posts with label Tamil News DINAMANI. Show all posts
Showing posts with label Tamil News DINAMANI. Show all posts

Monday, July 28, 2025

தேவை இணைய விழிப்புணர்வு!



தேவை இணைய விழிப்புணர்வு!

இணையவழிக் குற்றங்களும் பல்வேறு வடிவில் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பு பெரும் சவாலாகி வருவது குறித்து...

வை. இராமச்சந்திரன் Published on: 25 ஜூலை 2025, 5:15 am

வங்கிச் சேவைகள் முதல் வாங்கும் பொருள்கள் வரை பெரும்பாலான சேவைகள் தற்போது இணையவழியில் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், இணையவழிக் குற்றங்களும் பல்வேறு வடிவில் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பு பெரும் சவாலாகி வருகிறது.

அண்மைக்காலமாக இணையம், செயலிகள், சமூக ஊடகங்கள் போன்ற எண்ம தளங்களை வைத்து, பகுதிநேர வேலை என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளில் பொதுமக்கள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமாக, "லுக்" என்ற செயலி மூலமாக, பகுதிநேர வேலைவாய்ப்பு என விளம்பரப்படுத்தி, முதலில் ரூ.20,300}ஐ முன்பணமாக செலுத்த வேண்டுமெனவும், அந்தப் பணத்தை செலுத்திய பின்னர், தினமும் சில நாவல், புத்தகங்களை வாசித்தால் ரூ.700 வரை பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டு, முதல்கட்டமாக சிறிய தொகையை வழங்கி நம்பிக்கையை உருவாக்குகின்றனர்.

பின்னர், மற்றவர்களையும் சேர்த்தால் அதிக வருமானம் கிடைக்கும் என உணர்த்தி, வட்டியோடு பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி இன்னும் அதிக பணம் வசூலிக்கின்றனர். இதில் ஏராளமானோர் தங்கள் சேமிப்புகளை இழந்து மோசடிக்குள்ளாகின்றனர்.

பெரும்பாலும் வேலைதேடும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள்.
ஓய்வுபெற்றவர்கள், முதியோர் போன்றோரையே குறிவைத்து, எளிய வேலை, தினசரி ஊதியம் என்ற வாக்குறுதிகள் மூலம் அவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

பலர் மோசடிக்குள்ளான பின்னரும்கூட, இந்தத் தகவலை வெளியிட தயங்கி புகார் செய்யாமல் விலகுகின்றனர். இதன்மூலம் மோசடியாளர்கள் புதுப்புது உத்தியைப் பயன்படுத்தும் சூழல் உருவாகிறது.

அண்மையில்கூட, மகளிர் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறோம் எனக் கூறி, முன்பணமாக ஒருவருக்கு ரூ. 750 வீதம், 5 பேருக்கு ரூ. 3,750
செலுத்தினால் தலா ரூ.ஒரு லட்சம் உடனடியாக கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறி, பணம் செலுத்துவதற்கான கியூஆர் கோடை அனுப்பியுள்ளனர்.

பணம் செலுத்திய பின்னர், பணத்தைக் கொண்டுவரும் வழியில், காவல் துறை சோதனைச் சாவடியில் பிடித்துக் கொண்டார்கள்; கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால் நாங்கள் மாட்டிக் கொண்டோம் எனக் கூறி தப்பித்துள்ளனர். பின்னர், அந்த கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் அவர்கள் எடுப்பதே இல்லையாம்.

இதுபோன்ற விஷயங்களில் பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவொரு செயலியையும் தேவையான நோக்கமின்றி பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பணம் செலுத்தும் முன்னர், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். அதிக லாபம், குறுகிய காலத்தில் ஊதியம் போன்ற வாக்குறுதிகளை நம்பக் கூடாது.

ஆதார் அட்டை எண், ஓடிபி எண் போன்றவற்றைத் தேவையின்றி யாரிடமும் கொடுக்கக் கூடாது. அதேபோல, வங்கி ஓடிபி எண், ஏடிஎம் அட்டை எண், அதற்கான ரகசிய எண் ஆகியவற்றை யாரிடமும் பகிரக் கூடாது.

வாட்ஸ்-ஆப்பில் வரும் லாட்டரி வெற்றி, பரிசுகள் உள்ளிட்ட சந்தேகமான தகவல்களை நம்பக் கூடாது. கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்வதற்கு முன்பாக அதன் நம்பகத்தன்மையைஉறுதிசெய்ய வேண்டும்.

சமூக ஊடகங்களின் மூலமாக வரும் லிங்குகள், செயலிகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் தவிர்த்துவிட வேண்டும். தவறுதலாக முதலீடு செய்திருந்தால் தயங்காமல் 1930 என்ற இலவசஎண்ணுக்கு அழைக்க வேண்டும். இணையதளத்தில் புகார் அளிக்கத் தயங்கக்கூடாது. அப்போதுதான், அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியும்.

இணையவழி நிதி மோசடியைத் தடுப்பதற்காக, அண்மையில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி, இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு, வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

சந்தேகத்துக்கு இடமான கணக்குகளை முடக்குவதில் சரியான நேரத்தில் உதவுவதற்காக இணையவழி குற்றப் பிரிவு தலைமை மையத்தில் வங்கிப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். விசாரணைக்கு உதவுவதற்காக வங்கிகளின் தரவுகளை மேம்படுத்த வேண்டும்.

இணையவழி நிதி மோசடியைத் தடுக்க போலீஸôர், வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போலி வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு அவற்றை முடக்க வேண்டும்.

இன்றைய இணைய உலகம், வசதிகளை அள்ளித்தரும் அதேநேரத்தில், அதிக ஆபத்துகளையும் கொண்டிருக்கிறது. கவனக்குறைவால் தங்களது சொத்துகளை இழக்காமலிருக்க, அனைவருமே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். இதற்காக பள்ளி, கல்லூரிகளிலும் ,பொதுமக்களிடையேயும் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல் துறை கூடுதலாக நடத்த வேண்டும்.

மோசடிக்குள்ளான பணம் மீட்டெடுக்கும் வாய்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் மூலமாக காணொலிகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், குறும்படங்கள் ஆகியவை மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக, வயதானோர், இல்லத்தரசிகள், தொழிலாளர்கள் போன்ற இணையப் பயன்பாட்டில் அனுபவமில்லாதவர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும்.

இணையக் குற்றங்கள் எப்போதும் நம் எல்லைகளை மீறி நம்மை பாதிக்கக்கூடியவை என்பதால், ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அறிவுடனும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்.

Saturday, May 3, 2025

சுற்றுலாப் பயணிகளின் கனிவான கவனத்திற்கு...



சுற்றுலாப் பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோா் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது

இரா. சாந்தகுமார் Updated on: 02 மே 2025, 3:45 am

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோா் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியை தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெகு அரிதாக சில சுற்றுலா நிகழ்வுகள் சோகத்தில் முடிவதும் உண்டு.

அண்மையில் காஷ்மீா் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நாடெங்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீதான இந்த தாக்குதல் மிகுந்த கோழைத்தனமானது என்பதோடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கதுமாகும். சுற்றுலா செல்வோா் தாங்கள் சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள அரசியல் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணா்த்தியுள்ளது.

தீவிரவாத செயல்கள் மட்டுமின்றி, புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றையும் ஆராய்ந்த பின்னரே கொண்டு சுற்றுலா செல்லும் இடங்களை தோ்ந்தெடுப்பது நல்லது. மேலும், சுற்றுலா சென்று திரும்ப வருவதற்கான வாகன வசதி, பாதுகாப்பான தங்குமிடம், செலவிடப்பட வேண்டிய கையிருப்புத் தொகை ஆகியன குறித்தும் சரியான திட்டமிடல் அவசியம்.

சுற்றுலா செல்ல விரும்புவோரை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசுத் துறை நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான தனியாா் முகமைகளும் நாடெங்கும் இயங்கி வருகின்றன. சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் தனியாா் முகமைகள் மூலமாக சுற்றுலா செல்வோா் அம்முகமைகள் அளிக்கும் சேவையின் தரத்தை முன்கூட்டியே உறுதி செய்தல் அவசியம்.

புதிதாக ஓரிடத்துக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்கை காட்சிகள், மக்களின் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். வழக்கமான அன்றாட நிகழ்வுகளில் இருந்து நாம் மாறுபட்டு அனுபவிக்கும் சுற்றுலா சூழல் மனதுக்குப் புத்துணா்ச்சி அளிக்கிறது.

உலக பொருளாதாரக் குழுவின், சுற்றுலா துறை சாா்பான 2024 -ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, உலகில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் 119 நாடுகளின் பட்டியலில், இந்தியா 39-ஆவது இடத்தில் உள்ளது. சுற்றுலா வரும் வெளிநாட்டவா்களை அன்பாக உபசரித்து அவா்களுக்கான வசதிகளை வழங்குவதன் மூலம் இப்பட்டியலில் நாம் மேலும் முன்னேற்றம் காணலாம்.

நம் நாட்டவா் அதிகமாக சுற்றிப் பாா்க்க விரும்பும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ளது. வெளிநாட்டவா் சுற்றுலா வர விரும்பும் மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.

குழுவாக சுற்றுலா செல்லும்போது தம்முடன் வருவோா் அனைவரும் நம்மைப் போன்ற சிந்தனை உடையவராக, பழக்கங்கள் இருப்பவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. எனவே, தமக்கு மாறான சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் கொண்ட குழுவில் உள்ளவா்களிடம் அனுசரித்து போவதற்கான மனநிலை மிகவும் அவசியம்.

ஆன்மிக சுற்றுலா செல்வோரிடம் ஆரவாரமோ, ஆா்ப்பாட்டமோ காண்பது அரிது. இதற்குக் காரணம், ஆன்மிகச் சுற்றுலா செல்லும் குழுக்களில் பெரும்பாலானவா்கள் நன்கு பக்குவமெய்திய, கட்டுப்பாடான மனநிலை உடைய முதியோா்களாகவும் நடுத்தர வயதினராகவும் இருப்பா். இதனை பள்ளி, கல்லூரி மாணவா்கள் சுற்றுலா செல்லும் குழுக்களில் எதிா்பாா்க்க இயலாது. இதன் காரணமாக மாணவா்களுக்கான சுற்றுலாவின்போது அவா்களை வழிநடத்தி செல்வோா் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சுற்றுலா செல்லுமிடங்களில் செல்ஃபி எனப்படும் தற்படம் எடுத்து அதனை உறவினா்கள், நண்பா்களுக்குப் பகிா்வது மகிழ்ச்சியுடன் அளிக்க கூடியதே. எனினும் உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் தற்படம் எடுப்பதை சுற்றுலாவின்போது தவிா்ப்பது நல்லது. சமீபத்தில், கங்கை நதியில் இறங்கி தற்படம் எடுக்க முயன்ற பெண், வெள்ள நீரில் அடித்து செல்லப்படும் சோகக் காட்சியை தொலைக்காட்சியில் பாா்த்தபோது மனம் பதைபதைத்தது.

வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது வழக்கமாக உள்கொள்ளும் உணவுக்கு மாறான உணவை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். இச்சூழலில் ஆா்வக் கோளாறின் காரணமாக அதிகப்படியான உணவைத் தவிா்த்தல் நல்லது. இதன் மூலம் ஒவ்வாமை, செரிமானமின்மை உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளைத் தவிா்க்க முடியும். சுற்றுலா சென்றதன் மகிழ்ச்சியை முழுமையாக உணர முடியும்.

சுற்றுலா செல்லும் குழுவில் ஒருவரின் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்பு சில நேரங்களில் குழுவில் உள்ள மற்றவா்களின் மகிழ்ச்சியை இல்லாமல் செய்துவிடும். இதனை குழுவில் உள்ள அனைவரும் உணா்தல் வேண்டும்.

பொதுவாக சுற்றுலா செல்பவா்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பவை அணைக்கட்டுகள், ஏரிகள் போன்றவையே. நீா் தேக்கங்களில் படகுசவாரி செய்வதும், ஒகனேக்கல் நீா்வீழ்ச்சி விழுமிடங்களுக்கு பரிசலில் சென்று வருவதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகும்.

இத்தருணங்களில் மன மகிழ்ச்சியை விட பாதுகாப்பு சாதனமான லைஃப் ஜாக்கெட் எனப்படும் உயிா் பாதுகாப்பு உபகரணம் அணிவது மிக முக்கியமாகும். கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில், உள்ள ஹா்ணி என்னுமிடத்தில் ஏரி ஒன்றில் மாணவா்கள் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 12 மாணவா்கள் உள்ளிட்ட 14 போ் உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு 15 போ் பயணம் செய்ய வேண்டிய படகில் 27 போ் பயணம் செய்ததும் ஒரு காரணமாகும். நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மாறாக அதிகப்படியான நபா்கள் படகில் சவாரி செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

பெரும்பாலான மக்கள் கோடை காலத்தில் தமிழகத்தில் உள்ள ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா செல்கின்றனா். இதனால் அங்கு அதிக அளவில் வாகன போக்குவரத்து நெரிசல், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச் சூழல் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா செல்வோா் வீசி எறியும் குப்பைகள், நெகிழிக் கழிவுகள் ஆகியவையும் சுற்றுச் சூழலை மேலும் மோசமடையச் செய்கிறது. இதனைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு முழு ஒத்துழைப்பு தருவது சுற்றுலா செல்வோரின் கடமையாகும்.

சுற்றுலா செல்லும் போது உண்டாகும் மகிழ்ச்சி சுற்றுலா முடிந்து திரும்பும் போதும் இருக்க வேண்டும். இதற்கு சுற்றுலா செல்வோரின் சரியான திட்டமிடல், கட்டுப்பாடு, பாதுகாப்பு, பிறருடன் அனுசரித்துப் போதல் ஆகியன மிக அவசியமாகும்.

Friday, April 25, 2025

கற்க வேண்டிய முதல் பாடம்!


கற்க வேண்டிய முதல் பாடம்!

சரியான புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே கணவனும், மனைவியும் கற்க வேண்டிய முதல் பாடம்.

சி.வ.சு.ஜெகஜோதி

Updated on: 24 ஏப்ரல் 2025, 6:01 am

புதுச்சேரி வில்லியனூரில் கணவா் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கணவா் மீது கோபித்துக் கொண்ட மனைவி அவா் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி. அவா் அதிகமாக சினிமா பாா்க்க போய்விடுகிறாா், அவள் அடிக்கடி உப்புமா தான் செய்கிறாள் என்பன போன்ற காரணங்களுக்காகவும் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் நிரம்பிவழியத் தொடங்கி இருக்கின்றன.

பெற்றோா் பேசி முடித்து திருமணம் செய்து கொண்டவா்களாக இருந்தாலும், காதலித்து திருமணம் செய்தவா்களாக இருந்தாலும் தொடக்கத்தில் அன்னியோன்யமாக இருந்துவிட்டு, பின்னா் எலியும், பூனையுமாக மாறிவிடுகிறாா்கள். சரியான புரிதலும், சகிப்புத்தன்மையும் இல்லாததும், தான்தான் பெரியவன் என்ற ஈகோவும் அவா்களுக்குள் அமா்ந்துகொண்டு, விட்டுக் கொடுக்காமலும், பொறுமை இல்லாமலும் அவா்களை மாற்றி குடும்ப வாழ்க்கையைக் குலைத்துவிடுகிறது.

இருவரும் சம்பாதிப்பவா்களாக இருந்தும், பொருளாதாரத் தேவைகள் பூா்த்தியாகி இருந்தும் பல குடும்பங்களில் மன நிம்மதி என்பது குறைவாகத்தான் இருக்கிறது.

உலகையே தங்களது செயல்களால் திரும்பிப் பாா்க்கவைத்த பல எழுத்தாளா்கள், தலைவா்கள் உள்பட பலரது வாழ்விலும் குடும்ப வாழ்க்கை உருக்குலைந்து போயிருக்கிறது. திருமணமான புதிதில் நகைச்சுவை நாடகங்களை எழுதிய ஷேக்ஸ்பியா் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு, துன்ப நாடகங்களை எழுதி இருக்கிறாா். பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளா் மில்ட்டன் மனைவி திருமணமாகி வீட்டுக்கு வந்தபோது, ‘இழந்த சொா்க்கம்’ என்று எழுதியவா் மனைவி இறந்த பிறகு, ‘திரும்பப் பெற்ற சொா்க்கம்’ என்று எழுதி இருக்கிறாா்.

மகாகவி பாரதியாா் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது மனைவி அருகே வந்து வீட்டில் அரிசி இல்லை என்றாராம். இப்படி சபை நடுவில் வந்து மானத்தை வாங்கி விட்டாளே என்று பாரதி மனைவியைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, லேசான புன்னகையோடு அவரைப் பாா்த்ததும் மனைவி எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டாா். நண்பா்கள் சென்ற பிறகு மனைவியை அழைத்து நண்பா்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘‘இப்படியெல்லாம் பேசக்கூடாது. இங்கிதத்தோடு பேச வேண்டும்’’ என்று அமைதியாக சொன்னாராம். அவரும் அன்பாக ‘‘சரி’’ என்றாராம். பணத்தைவிட அன்பு நிறைந்த மனம்தான் சிறந்தது என மகாகவி பாரதியும், செல்லம்மாவும் வறுமை நிலையிலும் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை இன்றைய இளம் தம்பதியருக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

காகம் நமக்கு சிறந்த வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தருகிறது. மரக்கிளைகளில் கூடுகட்டும்போது ஒரு காகம் சிறு, சிறு குச்சிகளைக் கொண்டுவந்து கொடுத்தால், அதை மற்றொரு இணை காகம் சரிபாா்க்குமாம். கோல்டன் ஈகிள் என்ற பறவை வேறு துணையை நாடாமல் தன் துணையோடு மட்டுமே 100 ஆண்டுகள் வரை வாழ்கிாம். கிளி வகைகளில் இலினோயிஸ் எனும் கிளி தன் துணைக்கிளி இறந்ததும் அதுவும் இறந்துவிடுமாம். பறவைகள்கூட ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து வானில் மகிழ்ச்சியுடன் வட்டமடிக்கின்றன. கணவன்-மனைவி உறவு என்பதும் அன்பின் அடித்தளத்தில் பின்னிப் பிணைந்த , பிரிக்க முடியாத அற்புத உறவு என்பதும் பறவைகளுக்குக்கூட தெரிந்திருக்கிறது. காதலித்து கரம்பிடித்த தம்பதியா்களில் சிலா் பத்தே நாள்களில் விவாகரத்து கேட்டு வீதிக்கு வந்துவிடுவதுதான் கவலையளிக்கும் செய்தி. அதேநேரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிமித்தமாகப் பிரிந்திருக்கும் தம்பதியா்கூட அன்னியோன்யமாக வாழ்ந்து வருவதையும் காணமுடிகிறது.

கணவா் பாா்வையற்றவா் என்று தெரிந்தும் அவா் பாா்க்காத உலகத்தை நான் ஏன் காண வேண்டும் என்று கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு கடைசி வரை வாழ்ந்தவா் திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடையப்போகும் நேரத்தில் அருகில் அழுதுகொண்டிருந்த மனைவி சாரதா தேவியிடம், ‘‘அழாதே, நான் மரணமடையப் போவதில்லை, மேல்சட்டையாக இருக்கும் என் உடல்தான் மரணமடையும், நீ என்னைத்தான் மணந்தாய், என் மேல்சட்டையை மணக்கவில்லை’’ என்றாராம் ராமகிருஷ்ண பரமஹம்சா். அவரது மரணத்துக்குப் பிறகு பலரும் வற்புறுத்தியும் தேவியாா் விதவையாக மாறவில்லை. நான் விதவையாகி விட்டால், அவா் என்னை விட்டுப் போய்விட்டதாகத்தானே அா்த்தம்? நான் இப்படித்தான் வாழ்வேன் என்று கடைசி வரை அப்படியேதான் வாழ்ந்தாா். மரணத்துக்குப் பின்னரும் கணவா் மீது அவா் வைத்திருந்த அசைக்க முடியாத பக்தி அளவிட முடியாததாகவே இருந்தது.

தான் பிறந்த மண்வாசனையை மறந்து, பழகிய பக்கத்து வீட்டு மக்களை, மரம், செடி, கொடிகளை, ஆடு, மாடு, நாய், கோழி ஆகிய அத்தனையையும் மறந்து, பெற்று, படித்து, வளா்த்து, கண்ணை இமை காப்பதுபோல காத்த பெற்றோா்களை விடுத்து, சிறுவயது முதல் ஓடியாடி விளையாடிய உடன்பிறப்புகளையும், நண்பா்களையும் துறந்து, புதிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருக்கும் பெண் என்பதை கணவன் எப்போதும் மறந்து விடக் கூடாது. இன்பம், துன்பம் இவற்றில் எதுவும், எந்த உருவத்தில் வந்தாலும் அவற்றைச் சந்திக்க பல ஆண்டுகள் இணைந்து பயணித்து உயிருள்ளவரை நம்மைக் காக்கப் போகும் சுமைதாங்கிதான் கணவன். சுமைகளை இறக்கிவைத்து இளைப்பாற தோள் தரப்போகிறவன் என்பதை மனைவியும் மறந்துவிடக்கூடாது.

சுருக்கமாகச் சொன்னால், கணவன்-மனைவி உறவு என்பது பணத்தால் நிச்சயிக்கப்படுவதில்லை. மனத்தால் நிச்சயிக்கப்பட்டு, பின்னிப் பிணைந்து, இரு உடலாய், ஒரே உயிராய் மாறிவிடுகிறது என்பதே உண்மை. இல்லாமையிலும் இனிய வாழ்க்கை அமைய சரியான புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே கணவனும், மனைவியும் கற்க வேண்டிய முதல் பாடம்.

Sunday, March 23, 2025

வார்த்தை வன்முறை!

நடுப்பக்கக் கட்டுரைகள்

வார்த்தை வன்முறை!

DINAMANI 20.05.2025

பூ விற்கும் இரண்டு பெண்களுக்குள் ஏதோ தகராறு. இருவரும் மாறிமாறி திட்டிக் கொண்டார்கள். சண்டை என்னவோ இவர்கள் இருவரிடையேதான். ஆனால், தேவையே இல்லாமல் இருவரும் அடுத்தவரின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி மிகவும் அசிங்கமாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைக் கடந்து சென்றவர்கள் முகம் சுளித்துக் கொண்டே சென்றார்கள்.

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. படித்த மேல்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு. எதற்காகவோ இரண்டு பெண்களுக்குள் பிரச்னை. அங்கும் வார்த்தைகள் வரம்பு மீற ஆரம்பித்து, தடித்த சொற்கள் விழ ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்த வீட்டு ஆண்களும் சேர்ந்துகொள்ள காதுகூசும் அளவுக்கு வசவுகள். இங்கே கொஞ்சம் ஆங்கிலம், மீதி தமிழ். மற்றபடி அந்த படிக்காத பெண்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

கோபம் வந்தால் எல்லா மனிதர்களும் தன்னிலை மறந்து போகிறார்கள். இதுவே வாய்மொழி வன்முறை என்பதாகும். வன்முறை என்றால் என்ன? மனிதர்களால் உடல் ரீதியான பலத்தையோ அல்லது சக்தியையோ பயன்படுத்தி பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதையும், அவமானம், வலி, காயம், இயலாமை, சொத்துகளுக்கு சேதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்துவது, ஒரு சமுதாயத்தின் வாழும் சூழலுக்கு அழிவை ஏற்படுத்துவது ஆகிய இவையே வன்முறை என வரையறுக்கப்படுகிறது. ஒருவரை அடித்து துவைப்பது மட்டுமே வன்முறை அல்ல. கத்தியால் குத்திக் கொல்வதோ, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதோ, வெடிகுண்டு வீசிக் கூண்டோடு அழிப்பதோ மட்டும் வன்முறை என்று கட்டம் போட்டுவிடக் கூடாது. வாய்மொழி வன்முறையும் பலருக்கு மிகப்பெரிய மனக் காயத்தை ஏற்படுத்தும். மற்றவர் முன்னிலையில் கேலி செய்வது; மட்டம் தட்டிப் பேசுவது; அவர் பேச விரும்பாத விஷயத்தைப் பேசுவது; குத்திக்காட்டிப் பேசுவது; அவமானப்படுத்தும் நோக்கில் பேசுவது; அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்துவது ஆகிய அனைத்தும் வன்முறையே.

ஒருவருடைய இனம், நிறம், வயது, தோற்றம், இயலாமை, மொழி, மதம், நம்பிக்கை, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் இழிவாகப் பேசினால் அது குற்றம். வார்த்தை என்பது ஒலிகளின் ஓசை மட்டுமா? அது எழுத்துகளின் சேர்க்கை. வார்த்தைகள் என்பது சொற்களின் கோர்வை. ஆகவே, சொற்களை கோக்கும்போது நம் சொற்களில் கவனம் இருக்க வேண்டும். மனிதர்களின் நாக்கு கத்தியைவிடக் கூர்மையானது. மோசமான நாக்கு ஒருவரின் நம்பிக்கையை சிதைக்கும்; பெருமையைப் பொசுக்கும்; உள்ளத்தில் ஆறாத ரணத்தை உண்டாக்கும்; பழியைச் சுமத்தும்; புகழைக் கெடுக்கும்; ஊரையே அவருக்கு எதிராகத் திருப்பி, புழுதிவாரி தூற்ற வைக்கும்.

சிதறாத வார்த்தைகள் சீரான வாழ்க்கையைத் தரும். வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் அதைப் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும். ஒரே வார்த்தையில் அதிகபட்ச மகிழ்ச்சியையும், ஒரே வார்த்தையில் கடும் வேதனையையும் தரும் வல்லமை படைத்தது நம் நாக்கு. நாம் நெருக்கமானவர்களிடம் நம்பி சொன்ன வார்த்தைகளை, மூன்றாம் மனிதர் வாயால் நாம் கேட்கும்போது அவமானப்படுகிறது நம் நம்பிக்கை. பல சமயம் யோசிக்காமல் கடும் சொற்களை வீசிவிட்டுப் பின்னர் வருந்துகிறோம். மெüனம் பல சண்டைகளைத் தடுக்கும். எந்தச் சூழ்நிலையிலும் நம் சிறந்த பதில் ஒரு புன்னகை. நம்மைத் தவறாக புரிந்துகொள்பவர்களிடம், புறக்கணிப்பவர்களிடம், புண்படுத்துபவர்களிடமும் அமைதியே நம் பதிலாக இருக்கட்டும்.

சுமுகமான சூழ்நிலை இல்லாத இடத்தில் நாம் மெüனத்தைக் கடைப்பிடிக்கும்போது சண்டையிடாமல், விவாதிக்காமல், உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்பாட்டை இழக்காமல் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். மெüனத்தின்மூலம் நம் எதிர்ப்பைப் பலமாகக் காட்ட முடியும். மெüனமும், புன்னகையும்தான் இந்த உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள். புன்னகை பிரச்னைகளைத் தீர்க்கும்; மெüனமோ பிரச்னைகளே வரவிடாமல் தடுக்கும். நம் மெüனத்தைக் கண்டு பயப்படுவார்கள். நாம் ஆழமாகக் காயப்பட்டு இருக்கிறோம் என்பதையும் நம் மெüனம் உணர்த்தும். யோசிக்காமல் சட்டென ஒரு வார்த்தையைப் பேசிவிட்டதால் முறிந்து போன உறவுகளும், நட்பும் ஏராளமாக இருக்கக்கூடும். அந்த விநாடியில்அந்த வார்த்தை தவிர்க்கப்பட்டிருந்தால், பல இன்னல்கள் காணாமல் போயிருக்கும்.

இப்போது அதிக நா கட்டுப்பாடு அரசியல் புள்ளிகளுக்கும், தொண்டர்களுக்கும் அவசியம் வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க விவாதங்களும், விமர்சனங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். நாள்தோறும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் அரசியல் நிலைமை குறித்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அது என்ன மாயமோ தெரியவில்லை. அவர்களுக்காகவே தினம் ஒரு பிரச்னை வந்துவிடுகிறது. பேசுபவர்கள் அனைவரும் தங்கள் கட்சிகளின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறார்கள். காரசாரமான விவாதங்கள்; வார்த்தை தாக்குதல்கள்; கட்டுக்கடங்காத கோபம் என அந்த விவாதம் வேறொரு பரிமாணம் எடுத்துவிடுகிறது. அவர்களைக் கட்டுப்படுத்த நெறியாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கத்தி கூச்சல் போடுகிறார்கள். சட்டென உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு பேச வேண்டுமல்லவா? இவர்கள் இடத்தில் அந்தந்த கட்சித் தலைவர்களே இருந்தால்கூட அவர்கள் இந்த அளவுக்குக் கூச்சல்போட மாட்டார்கள். கண்ணியம் காக்கப்படல் வேண்டும். கொள்கைக்காக கொடி பிடிக்கலாம். ஆனால், எவரையும் இழிவாகவோ, அநாகரிகமாகவோ தரம்தாழ்த்திப் பேசக் கூடாது. வெறுப்பு அரசியல் என்னும் நோய்த்தொற்று அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இது பகை அரசியலாக வளர்ந்திருக்கிறது. அவரவர் கருத்துகளைச் சொல்லட்டும். கருத்து வேறுபாடும், கருத்து முரணும் பகைக்கு வித்தாகிவிட வேண்டுமா? தவறான தகவல்களுடன் இணைந்த வெறுப்புப் பேச்சு, பெரிய அளவிலான வன்முறைக்கு வழிவகுக்கும். சென்ற தலைமுறை அரசியல் தலைவர்கள் கொள்கைகளில் மாறுபட்டார்கள். ஆனால், அதைத் தாண்டிய நட்பும், மரியாதையும் அவர்களிடையே இருந்தது. மேடை நாகரிகத்தை அவர்கள் மீறியதில்லை.

தற்போது மேடையில் பேசுபவர்களும், சமூக ஊடங்களில் பேசுபவர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். தவறான ஒரு சொல் ஒரு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்திவிடும். இனியாவது, நம் அரசியல் களம் கொள்கைகளைப் பேசும் களமாக இருக்கட்டும். வீட்டு சண்டையின்போதும் சட்டென பேச்சு கடுமையாகிப் போய்விடுகிறது. வாய் வார்த்தை வளர்ந்து சர்ச்சைக்கு வித்திடுகிறது. கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், மருமகன்-மாமனார், சகோதரசகோதரிகள் இடையே சண்டை வரும்போது அதை கவனிக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் மனநிலையைப் பாதித்து, படிப்பில் இருக்கும் நாட்டத்தையும் குறைத்துவிடுகிறது. வீட்டில் அமைதியான, இனிமையான சூழல் இருந்தால் மட்டுமே குழந்தைகளின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அனைவரும் எதிராளிக்கு சமமாக நின்று பேச முடியாது; பேசத் தெரியாது. சண்டை போடப் பிடிக்காத அவர்கள் சகித்துக் கொண்டு மெüனமாக இருந்துவிடுவார்கள். யார் பக்கம் சரி, யார் பக்கம் உண்மை உள்ளது என்பது அபாண்டமாகப் பேசுபவருக்கும், அந்த ஆண்டவனுக்கும் தெரியும். அதுவே போதும். அவர்கள் ஓரளவுக்கு அடங்கிப் போகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களும் பொங்கி எழுகிறார்கள். மிதிக்க மிதிக்க, நசுங்கிச் சாவதற்கு ஒருவரும் புழு அல்லவே.

சொல்லுக்குச் சொல் சிங்காரம் எதற்கு? என்பார்கள். அதுபோல பதிலுக்கு தடித்த வார்த்தைகளை விட்டுவிடுகிறார்கள். அந்த நபர் இவர் சொன்னதை மட்டுமே அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பழிசுமத்துகிறார். சில சமயம் வாயடைத்துத்தான் போய்விடுகிறது. என்ன செய்ய? பேச வார்த்தைகளற்று இருப்பது, அமைதி வார்த்தைகள் இருந்தும் பேசாமல் இருப்பது மெüனம். தொலைவை நிர்ணயிப்பது சாலைகள் மட்டுமல்ல; வார்த்தைகளும்தான். கூடுமானவரை அவர்களை மன்னித்து விடுவோம். மன்னிக்காத மனம் அமிலத்தைப் போன்றது. மனதை அரித்துவிடும்.

ஒரு நாள் ஒரு குதிரைக்காரன் ஒரு தோட்டம் வழியாகக் கடந்து செல்ல நேர்ந்தது. அவனது குதிரைக்குத் தண்ணீர் தரும்படி விவசாயியிடம் கேட்டான். விவசாயி மகிழ்ச்சியோடு தண்ணீர் எடுப்பதற்கு பெர்ஷியன் சக்கரத்தைச் சுழலவிட்டான். ஆனால், குதிரை அந்த சத்தத்தைக் கேட்டு பயந்து, கிணற்றின் அருகே நெருங்கி வரவே இல்லை. குதிரைக்காரன் கேட்டான்: "என் குதிரை தண்ணீர் குடிப்பதற்காக இந்தச் சத்தத்தை நிறுத்த முடியுமா?'' "முடியாது ஐயா. உமது குதிரை தண்ணீர் குடிக்க விரும்பினால் இந்தச் சத்தத்துடன்தான் குடிக்க வேண்டும். இங்கே சத்தத்துடன்தான் தண்ணீர் வரும்'' என்றான் விவசாயி.

நட்புகூட குறைபாடுகளுடன்தான் இருக்கிறது. வாழ்வுகூட மன்னிக்கும் மனநிலையில் இருந்துதான் ஊற்றெடுக்கிறது. மன நிம்மதியுடனும், மனநிறைவுடனும் வாழவேண்டுமானால், கோபம் வரும்போது நம் வார்த்தைகளுக்குக் கடிவாளம் போட வேண்டும்.

கட்டுரையாளர்: பேராசிரியர்.


NEWS TODAY 07.12.2025