புத்தாண்டு சபதங்கள்! புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்!
புத்தாண்டுபடம் - பிடிஐ ஜி.மீனாட்சி Updated on: 02 ஜனவரி 2026, 7:01 am 2
புத்தாண்டு சபதங்கள்! புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்!
புத்தாண்டுபடம் - பிடிஐ ஜி.மீனாட்சி Updated on: 02 ஜனவரி 2026, 7:01 am 2
ரகசியம் காப்போம்!
ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல.
தினமணி செய்திச் சேவை Updated on: 27 டிசம்பர் 2025, 3:12 am 2 min read
முனைவர் பாலசாண்டில்யன்
மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள். நாம் பார்ப்பதோ, ஒருவன் நினைப்பதோ அல்ல அவன். எதை மறைக்க முயல்கிறானோ அதுதான் அவன். நாம் மறக்க நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் ரகசியங்களைவிட நம்மை வேறெதுவும் தனிமைப் படுத்திவிடமுடியாது. ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல.
உலகத்தினருடன் நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை வைத்து நம்மைக் கண்டறிந்துவிட முடியாது. மக்கள் அந்த ரகசியத்தில் மூழ்கிப் போகும்போது சொன்ன வரை மறந்து போவர்.
நமது ரகசியங்களை மறைப்பது புத்திசாலித்தனம்; அதைச் சொல்லிவிட்ட பிறகு மறைத்திருக்கவேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். ரகசியம் என்பது யாருடனும் எந்தத் தருணத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாதது.
ரகசியம் பல வகை. அடுத்த வாரம் திருமணம்; பிள்ளையின் பிறந்த நாளுக்கு வாங்கி வைத்திருக்கும் பரிசு; காதல் செய் வது பெற்றோருக்குத் தெரியாமல் இருப்பது; புதிதாக ஏற்பட்டிருக்கும் (புகைத்தல்) பழக்கம் என இப்படி எல்லாமே ரகசியம் தான். ஒரு ரகசியத்தைக் காப்பது என்பது சொத்தைக் காப்பதைவிடக் கடினம்.
ரகசியங்கள் ஒருவரை நங்கூரம்போல முடக்கிப் போடும்; செயலிழக்க வைத்து விடும். ஒருவரின் உடல்நலன் சரியில்லை என்பது ரகசியம். அதை மிகவும் நெருக்கமானவர்களிடம் மறைக்கும்போது அந்த நோயின் தன்மையே அதிகம் ஆகிறது என்கின்றன பல ஆய்வுகள்.
உங்களிடம் ஒருவர் தனது ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார் என்பது மகிழ்ச்சி. அதே சமயம் மிகவும் மனதின் பாரமும் கூட. உங்களை நம்பி ஒருவர் சொல்லி இருக்கிறார் என்பது நல்ல விஷயம்தான். அதை நீங்கள் எப்படிப் பாதுகாப்பீர்கள் என்பது நமது கவலைதானே தவிர, ரகசியம் சொன்னவரது அல்ல.
ஏற்கெனவே நீங்கள் மறைத்து வைத்திருக்கும் உங்கள் ரகசியம், கூடுதலாக பிறரின் ரகசியம் வேறு; மனதின் பாரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. வளர்த்துக் கொள்ளும் மனஉறுதிதான் நமது நற் பெயர் மற்றும் நம்பகத்தன்மை இரண்டை யும் காப்பாற்றும்.
பிறர் நம்மிடம் ஒரு ரகசியத்தைச் சொல்கிறார் என்றால், அது சிறியதா அல்லது பெரியதா என்று பார்க்க வேண்டும். பெரியது என்றால் உங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மிகவும் அதிகம் என்று அர்த்தம். நீங்கள் காக்க வேண்டியது இரண்டையும்தான். சில ரகசியங்கள் சட்ட ரீதியானதாக இருக்கலாம்; வணிக ரீதியாக இருக்கலாம்; அவை கசிந்து விட்டால் தெரிந்திருக்கும் நமது நிலை குறித்துத் தெரியாமல் போகலாம்.
குறிப்பாக, பிரபலங்களின் மறைவு வாழ்க்கை, சொத்துகள், அவற்றைச் சேர்த்த விதம், செய்யும் தொழில் என்று எல்லாமே ரகசியம் தான். அவை நமக் குத் தெரியாதவரை நல்லதுதான். அப்படிப்பட்ட சில ரகசியங்களை நம்மால் மனைவி அல்லது கணவரிடம்கூட சில நேரம் சொல்ல முடியாது. அதை மறைக்க நாம் படும்பாடு மிகக் கொடுமையானது. நமது சொந்த ரகசியம் என்றால், எவ்வளவு காலம் மறைக்கப்பட வேண்டும்; யாரிடம் இருந்து மறைக்கப்பட வேண்டும். சில நேரம் அது நிரந்தரமாக மறைக்கப்பட வேண்டிய ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால், எந்த ரகசியமும் ஒரு நாள் போட்டு உடைக்கப்பட்டு அதன் காலாவதி நாளை அல்லது இறுதி நாளை நெருங்கிவிடும்.
சில நேரம் நமது மன நிம்மதிக்காக கண்ணாடி முன் நின்று ஒரு முறை சொல்லிவிடலாம். சில நேரம் நமது டைரியில் எழுதி வைக்கலாம். அது யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. எதுவும் தெரியாதது போலவே நடிப்பது என்பது ஒரு கலை. சிலருக்கு மட்டுமே அது கைவந்த ஒன்று. நம்மில் பலருக்கு நடுங்கும் கைகளும்சிமிட்டும் கண்களும் காட்டிக் கொடுத்து விடும். நேர்மையாக இருக்க அதிக துணிச்சல் வேண்டும். ரகசியமே இல்லாத திறந்த புத்தகமாக வாழ்ந்து மறைந்தவர் வெகு சிலரே. அந்தக் காலத்தில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கப் போவது மிகுந்த ரகசியமாக இருக்கும். ஐபிஎல் விளையாட்டில் எந்த வீரரை ஓர் அணி எவ்வளவுரூபாய்க்கு ஏலம் எடுக்கப் போகிறது என்பது அண்மையில் ஏற்பட்ட ரகசிய நிகழ்வு.
தெரிந்த ஒரு ரகசியத்தை எப்போது வெளியே சொல்லலாம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு முக்கியத் தலைவர் இறந்து விட்டார் என்றால், அதை எப்போது எப்படிச் சொன்னால் பல்வேறு பொதுவெளி தொல்லை - தொந்தரவுகள் வராமல் சட்டம்-ஒழுங்கைக் காக்கலாம் என்று அரசும் அதிகாரிகளும் சிந்திப்பர்.
சொல்லக்கூடாத ஒரு ரகசியத்தை தவறிச் சொல்லிவிட்டு என்னாகுமோ என்ற மனநிலையில் தவிப்பவர்களை நாம் பார்த்திருப்போம். இப்போதெல்லாம் ஒரு படத் தில் யார் நடிக்கிறார்கள், என்ன வேடத்தில் நடிக்கிறார்கள், அதன் கதை என்ன, தலைப்பு என்ன என்பதை ரகசியமாக வைத்திருக்கும் நிலையைப் பார்க்கிறோம்.
ரகசியத்தை மறைக்கும் ஒருவரின் நடவடிக்கைகள் விநோதமாக இருப்பதைவைத்தே அவர் மீது சந்தேகம் வரக்கூடும். வேண்டாத விளக்கங்கள், தேவையற்ற புன்னகைகள், சமாளிப்புகள், வஞ்சக் கதைகள் எல்லாமே ஒருவரைக் காட்டிக் கொடுத்து விடும். சில பெண்கள் ரகசியங்களை மனதில் வைத்துப் பூட்டி சாவியை எறிந்து விடுவார்கள்.
நாயும் நரியும் முதலில் ஒன்றுபோலத் தெரிந்தாலும், அதன் குட்டு ஒரு நாள் வெளிப்படும். முழுப் பூசணியை சோற் றில் மறைக்க முடியாது என்பதுபோல், ஒரு நாள் ரகசியம் வெளியே வந்தே தீரும். சில சமயம் ரகசியம் அவருள் இருக்கும்; அவருடனேயே ரகசியம் புதைக்கப் படுவதும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
வாஜ்பாய் எனும் பன்முக ஆளுமை வாஜ்பாயின் பன்முக ஆளுமைத் திறன் குறித்து...
‘சதைவ் அடல்’ வாஜ்பாய் நினைவிடம்
முனைவா் கோ. விசுவநாதன் Updated on: 25 டிசம்பர் 2025, 4:56 am 3 min read
ஒருமுறை அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு குறித்து குறிப்பிடும்போது, அவையில் மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவர் ஹிரேன் முகர்ஜி, ஹிந்தியில் மிகச் சிறப்பாக பேசக்கூடியவர் அடல் பிகாரி வாஜ்பாய் என்று சான்றிதழ் வழங்கினார் 1957-இல் மக்களவைத் தலைவராக இருந்த அனந்தசயனம் ஐயங்கார்.
வாஜ்பாய் 1957-இல் ஜனசங்கம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். பாரதிய ஜனசங்கம் என்கிற அரசியல் கட்சி, 1951-இல் சியாமா பிரசாத் முகர்ஜியால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவாகத் தொடங்கப்பட்டது. அதன் வளர்ச்சி நிதானமாக இருந்தது. 1967-இல் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாநிலங்களின் உள்ள சட்டப்பேரவைகளில் 300 உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக ஜனசங்கம் இருந்தது.
அவசரநிலைப் பிரகடனத்தின்போது வாஜ்பாய் போன்ற ஜனசங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். பெங்களூரில் ஒரு நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்துக்குச் சென்றபோது நான், வாஜ்பாய் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நிலைக் குழுக் கூட்டம் முடிந்துவிட்டதால், நான் (கட்டுரையாளர்) பெங்களூரில் இருந்து வேலூருக்கு புறப்பட்டு வந்துவிட்டேன். ஆனால், அன்று நள்ளிரவு இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்து எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்தார். தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளரான வாஜ்பாயை நள்ளிரவில் தட்டி எழுப்பி கைது செய்தனர். மறுநாள் செய்தித்தாள் மூலம் அதைத் தெரிந்துகொண்டேன்.
பெங்களூரில் முப்பது நாள்கள் சிறைவைக்கப்பட்டு இருந்தபோது, வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். பிறகு, அவரைச் சந்தித்தபோது சிறை அனுபவம் எப்படி இருந்தது என்று நான் அவரைக் கேட்டேன். "அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன் ஜாலியாக' என்று சிரித்தபடியே என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னார்.
1977-இல் எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஜனதா கட்சியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்ததால் ஜன சங்கம் தலைவர்களுக்கும் ஆட்சி அதிகார வாய்ப்புக் கிடைத்தது. அப்போது 542 தொகுதிகளில் ஜனதா கட்சி 295 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், 90 இடங்களில் ஜனசங்கத்தினர் வெற்றி பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்றவர்களாக இருந்தனர். அதற்காக அவர் பிரதமராக ஆசைப்படவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.
1996-இல் அதிக இடங்களை வென்ற கட்சி என்பதால் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். பாரதிய ஜனதா அந்தத் தேர்தலில் 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வேறு கட்சிகள் ஆதரவு தரவில்லை. எனவே, பதின்மூன்று நாள்கள்தான் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். ஆனால், பாரதிய ஜனதா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும், காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பதையும் நிரூபித்தார்.
அவர் ஆட்சி மீதான வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தில், "நான் ஏன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்பதற்கான காரணத்தை எளிய முறையில் விளக்கி உரையாற்றினார். அந்த உரையை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது. பிரதமரின் நம்பிக்கை வாக்கெடுப்பு இப்படி நேரடி ஒளிபரப்பானது அதுதான் முதல்முறை; அதுதான் தொடக்கமும்கூட.
பாரதிய ஜனதாவால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று காங்கிரஸ், தேசிய முன்னணி, இடதுசாரிகள் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலம் அது. ஆனால், அது உண்மையில்லை என்பதை தனது வாதத்தால் பிரதமர் வாஜ்பாய் தெளிவுபடுத்தினார்.
ராஜிநாமா கடிதத்தை அவர் குடியரசுத் தலைவரிடம் கொடுப்பதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் அவர் பேசிய கடைசி வரி இதுதான். "நாங்கள் திரும்பவும் வருவோம். சக்கர வியூகத்துக்குள் நுழைவது எப்படி என்று தெரிந்த எங்களுக்கு அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதும் தெரியும்' என்று சவாலாகச் சொன்னார். ஆட்சி கலைந்தது. அவர் சொன்னபடி 1998 பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமரானார்.
இப்போது, நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வித்திட்டவர் வாஜ்பாய். வெளிநாட்டு வங்கிகள் துணை நிறுவனங்களாகச் செயல்பட அனுமதித்தது வாஜ்பாய் அரசு. வங்கிகளில் அந்நியச் செலாவணி 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரித்தது.
மே, 1998-இல் இந்தியா நடத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை வாஜ்பாய் ஆட்சியின் ஒரு மறக்க முடியாத சாதனை. இந்த அணுகுண்டு சோதனையால் மேற்கத்திய நாடுகள் வாஜ்பாய் அரசை கடுமையாகக் கண்டித்தன; விமர்சித்தன. அப்போது, அணு ஆயுதத்தை ஆத்திரப்பட்டு பயன்படுத்த மாட்டோம் என்று வாஜ்பாய் சொன்னதை இன்றுவரை இந்தியா கடைப்பிடிக்கிறது.
இதேபோல், வாஜ்பாய் ஆட்சியில் தொலைத்தொடர்பு வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. கல்வி எனது உரிமை என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வ சிக்ஷ அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் வாஜ்பாய். எல்லோரும் படிக்க வேண்டும் என்ற இந்தத் திட்டப்படி கல்வித் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
1999- 2000-இல் இரண்டு பெரும் சூறாவளி தாக்குதல், 2001-இல் மிகப் பெரிய பூகம்பம். ஆனால், ஜிடிபியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர் வாஜ்பாய். அதேபோல 1998-இல் தங்க நாற்கர சாலை என்ற பெயரில் உலகத் தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய்.
தில்லியில் மெட்ரோ ரயில் திட்டத் துக்கு ஒப்புதல் வழங்கியது வாஜ்பாய் தான். நிலவுக்கு 2008-இல் இந்தியா விண்கலம் அனுப்பும் என்று உறுதிபடச் சொன்னவர் பிரதமர் வாஜ்பாய். அதன் பிறகுதான், இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை உருவாக்கியது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு தனித் துறை ஏற்படுத்தியது வாஜ்பாய் காலத்தில்தான். வாஜ்பாய் ஆட்சி குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியைக் கண்டதற்கு அவரது அனுபவ அறிவு ஒரு காரணம். முதலில் நாடாளுமன்ற உறுப்பினர், பிறகு எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர், பிரதமர் என்று அவரது வளர்ச்சி படிப்படியாக இருந்தது. எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவம் தெரிந்தவர் பிரதமர் வாஜ்பாய் என்று சொல்லலாம். அதனால்தான், அவரது ஆட்சியில் எதிர்க்கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சிக்க யோசித்தன.
அவர் என் சக நாடாளுமன்ற உறுப்பினர் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. வாஜ்பாயை நான் அறிந்த வரையில் அவர் தீவிரமான மதச்சார்பாளர் என்று என்னால் சொல்ல முடியவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் அவர் இருந்தாலும் தன்னை அவர் மிதவாதியாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். கட்சித் தலைவராக இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் மாற்றுக் கட்சியினருடனான அவரது உறவு சுமுகமாகத்தான் இருந்தது.
ஜெனீவாவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா சார்பில் பேச எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயைத்தான் அனுப்பி வைத்தார் பிரதமர் நரசிம்மராவ். ஐ.நா. சபையில் முதல்முதலில் ஹிந்தியில் உரையாற்றியவர் என்ற பெருமை பெற்றார் வாஜ்பாய்.
காங்கிரஸ் இல்லாத ஒரு கட்சி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மத்தியில் முதல்முதலாக ஆட்சி செய்தது என்ற சாதனையை நிகழ்த்தியதும் வாஜ்பாய் தான்.
10 முறை மக்களவை உறுப்பினர், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வாஜ்பாய் எனது நெருங்கிய நண்பர். அவசரநிலைப் பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று நான், வாஜ்பாய், எனது நண்பர் சுதந்திரா கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பிலுமோடி ஆகியோர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருந்தோம். அப்போது, நான் எந்தக் கட்சியிலும் இல்லை. வாஜ்பாய் மற்றும் பிலுமோடி வற்புறுத்தல் காரணமாக சில காலம் ஜனதா கட்சியில் இருந்தேன்.
Advertisement
நான் தில்லிக்கு எப்போது சென்றாலும் நேரம் கிடைக்கும்போது வாஜ்பாயைச் சந்திக்கத் தவறியதில்லை. அவர் உடல்நிலை சரியின்றி நினைவாற்றல் இல்லாமல் இருக்கிறார் என்ற செய்தியறிந்து அவரைச் சந்திக்கப் போனேன். "அவருக்கு நினைவாற்றல் இல்லை. உங்களை எப்படி அவர் அடையாளம் காண்பார்' என்ற சந்தேகத்துடன் அவரது வளர்ப்பு மகள் என்னை அழைத்துச் சென்றார்.
நான் வாஜ்பாய் அருகில் சென்று அமர்ந்ததும் உன்னை எனக்குத் தெரியாதா என்பதுபோல் என் கையைப் பிடித்துக்கொண்டு புன்னகை செய்ததார்; கண் களில் தாரைதாரையாக கண்ணீர் வரத்தொடங்கியது. உண்மையிலேயே உணர்வுபூர்வமான சந்திப்பு அது. அவரது வளர்ப்பு மகள் உள்பட அங்கு இருந்த எல்லோரும் வியப்பாகப் பார்த்தனர்.
பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், அரசியல் தலைவர், பிரதமர் என்று அவரது பன்முகத்தன்மை விரிந்தது. இவை எல்லாவற்றையும்விட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மிதவாதியாக இருந்தார் வாஜ்பாய். பல்வேறு மொழி, கலாசாரம் அரசியல் கட்சிகள் கொண்ட இந்தியாவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகத் தனது 93-ஆம் வயதில் மறைந்தாலும், அனைவரது நினைவிலும் வாழ்பவர் வாஜ்பாய்.
இன்று (டிச.25) வாஜ்பாய் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு
கட்டுரையாளர்:
வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.
கவலையளிக்கும் ஆக்கிரமிப்புகள்
திசைமாறும் சிறார்கள்
நம் நாட்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெ.கண்ணப்பன் Updated on: 18 டிசம்பர் 2025, 2:56 am
புதுதில்லியில் அமைந்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள கள ஆய்வு அறிக்கையில், நம் நாட்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக 10 மாநிலங்களில் நகர், புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு, தனியார் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுக்காக விவரங்கள் திரட்டப்பட்டவர்களில் 53% பேர் மாணவர்கள்; 47% பேர் மாணவிகள். இவர்கள் 11 முதல் 15 வயதுடையவர்கள். ஓராண்டு காலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பள்ளி செல்லும் மாணவர்களில் 16.3% பேரும், மாணவிகளில் 13.8% பேரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும், கடந்த ஓராண்டுக்குள் போதைப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் 10% என்பதும் தெரியவந்தது.
போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறார்களில் 95% பேர் போதைப் பொருள்களின் பயன்பாடு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதைத் தெரிந்தே பயன்படுத்துகின்றனர் என்றும், 40% சிறார்களின் குடும்பத்தில் மது அருந்தும் பழக்கமுடைய உறுப்பினர் உள்ளனர் என்றும், 8% பேர் குடும்பத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கமுடைய உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகையிலையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் போதையூட்டும் பொருள்கள், மதுபானங்கள், கஞ்சா, ஓபியம், ஹெராயின், மருத்துவப் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் போதை ஏற்படுத்தும் மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக பள்ளிச் சிறார்கள் ஆய்வின்போது தெரிவித்துள்ளனர். போதைப் பொருள்கள் தங்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன எனவும் ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பள்ளிச் சிறார்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 10 முதல் 17 வயதுடைய 1.48 கோடி சிறார்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவிக்கிறது. இந்திய சிறார்கள் 11-12 வயதில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்கின்றனர் என புதுதில்லியில் அமைந்துள்ள தேசிய போதைப் பொருள் சிகிச்சை மையத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது.
சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில், சீருடை அணிந்த மாணவிகள் சிலர் வகுப்பறையில் ஒன்றுகூடி மது அருந்தும் காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது தவறான செயல் அல்ல என்ற உணர்வு சமுதாயத்தில் பரவிவருவதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
கல்வி கற்க பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்த பழகிக் கொள்வதால், கல்வி கற்பதில் நாட்டம் அவர்களிடம் குறையத் தொடங்குகிறது. ஒழுக்கக்கேடான செயல்கள் அவர்களிடம் வெளிப்படுகிறது. மேலும், குற்றவியல் சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபடுகிற சூழலும் ஏற்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களை கூர்நோக்கு இல்லங்களில் விசாரணை முடியும்வரை தங்க வைக்கப்படுகின்ற நடைமுறை நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்தியப் பெருநகர் ஒன்றில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களில் 86% பேர் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்ட சிறார்கள் பெரும்பாலும் குற்றம் புரியும்போது போதைப் பொருள்களைப் பயன்படுத்தி இருந்ததாகவும் தெரியவருகிறது.
கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களில் சிலர் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்டு, கூர்நோக்கு இல்லங்களில் தங்கிச் சென்றவர்கள் என்பதும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிற சிறார்களில் பலர் மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும் கள ஆய்வில் தெரியவருகிறது.
போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற சிறார்களில் ஒரு சிலர் மட்டுமே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான சிறார்கள் தங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான போதைப் பொருள்களை வாங்க பணம் இல்லாதவர்கள். அவர்களில் சிலர் போதை பொருள்கள் விற்பனை செய்யும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான போதைப் பொருள்களை வாங்குகிற சிறார்களும் உண்டு.
கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களில் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிறார்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களை போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைத்து, நல்வழிப்படுத்தும் முயற்சியை சிறார் நீதிக் குழுமம் மேற்கொள்கிறது.
கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்படும் போதைப் பழக்கம் உடைய சிறார்கள் அனைவரையும் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்து, போதைப் பொருள்கள் பயன்படுத்துவதில் இருந்து மீட்கப்படுவதும், மீண்டும் போதைப் பொருள்களை நாடி அவர்கள் செல்லாமல் கண்காணிப்பதும் முக்கியத்துவம் பெறாத நிலை நம் நாட்டில் நிலவுகிறது.
சிறார் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதும், இந்திய பெருநகரங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறார் குற்றங்கள் நிகழும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளதும் திசைமாறிச் செல்லும் சிறார்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் முன்னுரிமை பெறப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
சிறார்களிடம் சமூக ஊடகத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகின்ற தற்போதைய சூழலில், நண்பர்கள் ஏற்படுத்தும் அழுத்தம், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், தனிமை மற்றும் தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுதல், உடைந்த குடும்பம், பெற்றோர்களின் குறைவான கண்காணிப்பு, மலிவாகவும், எளிதாகவும் சிறார்களுக்கு போதைப் பொருள்கள் கிடைக்கிற சூழல் போன்ற சமூக காரணங்களால் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை சிறார்கள் எளிதில் கற்றுக் கொள்கின்றனர்.
சிறார்களிடையே போதைப் பொருள் பழக்கம் தொற்றிக்கொள்ளாமல் தடுப்பதில் குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம் மற்றும் காவல் துறை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. பெற்றோர்-குழந்தைகள் இடையே மனம் திறந்த உரையாடல், குழந்தைகளின் நட்பு வட்டம், இணையப் பயன்பாடு போன்றவற்றைப் பெற்றோர் கண்காணித்தல், மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே மையமாகக் கொண்ட கல்விக்குப் பதிலாக வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் கல்வியை ஊக்கப்படுத்துதல், சிறார்களை இலக்காகக் கொண்டு செயல்படும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுத்தல் போன்றவை போதைப் பொருள்கள் மீதான சிறார்களின் ஆர்வத்தைத் தடுக்க துணைபுரியும்.
சிறார் குற்றங்களும், சிறார்களின் போதைப் பொருள் பழக்கமும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் முக்கியமான சமூகப் பிரச்னையாக கடந்த காலத்தில் உருவெடுத்தன. இதை எதிர்கொள்ள சிறார் நீதி அமைப்பும், சிறார் நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன.
தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத்தையே குறிக்கோளாகக் கொண்டு அவை செயல்பட்டன. பள்ளிக்கூடங்களில் போதைப் பொருள்கள் பழக்கம் உள்ள சிறார்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நம் நாட்டிலும் சிறார் நீதிச் சட்டம், சிறார் நீதிக் குழுக்கள், சிறார் சிறப்பு இல்லங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சிறார் குற்றங்களும், போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டத்துக்கு முரணாகச் செயல்படும் சிறார்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை இது உணர்த்துகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் ஆய்வும், உரிய தொடர் நடவடிக்கையும் சிறார்களின் நலனை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர்:
காவல் உயர் அதிகாரி (ஓய்வு).
செல்வத்துப் பயனே ஈதல்!
DINAMANI 10.12.2025
"திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை;
அருணன் கபிலன் Updated on: 10 டிசம்பர் 2025, 2:59 am
"திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை; தனக்கென்று மட்டும் வைத்துக் கொண்டதுமில்லை. அண்மைக்காலமாக அதாவது இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றம் சொத்துக் குவித்தல் என்னும் வழக்கம்; இது தமிழர்களின் மரபன்று.
தேடித் தேடிப் பொருளைக் குவிப்பதும் அவ்வாறு குவிந்தவற்றைக் கொண்டு மேலும் மேலும் அதைப் பெருக்குவதற்கான வழிகளில் ஈடுபடுவதும் குறிப்பாக மண்ணிலும் பொன்னிலும் அதை முதலீடு செய்வதும் இதுபோன்ற பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதிக் கொண்டிருக்கிற காலமாக இருக்கிறது.
வாழ்வுக்கான அகப்பொருள் தேடிக் கண்டு தேர்ந்து உலகுக்கே உரக்கச் சொன்ன தமிழர்கள் தாங்களே அந்த மெய்ப்பொருளை மறந்துவிட்டுப் பொய்ப் பொருளை நாடி - புறவாழ்வுக்குப் பொருள் தேடி அலைகிறார்களோ என்ற ஐயமும் தோன்றுகிறது.
இதிலே வேடிக்கை என்னவென்றால், வேண்டுதல்-வேண்டாமை இலானாகிய கடவுளையும் இதற்குப் பங்கு சேர்த்துக் கொள்வதுதான். இந்தக் கோயிலில் இத்தனை முறை இப்படி வேண்டிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று வேண்டுகிறவர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு வேண்டிச் செல்வத்தைச் சேர்த்தவர்கள் தாங்கள் சேர்த்த செல்வத்துக்குக் காரணம் அந்தக் கடவுள்தான் என்றும், ஏதும் பழி-பாவம் வந்து விடக்கூடாது என்பதற்காக அதில் ஒரு பங்கை கடவுளுக்கே கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் நம்புகிறார்கள்.
பொருட் செல்வத்துக்காகவே மட்டும் அலையும் இந்த வாழ்க்கையில் அன்பு, கருணை, நிம்மதி, உடல்-மனநலம், நீளாயுள், சமூக மதிப்பு, மானுட நேயம் உள்ளிட்ட பலவற்றை இழப்பதோடு மட்டுமின்றித் தாங்கள் சேர்த்த செல்வத்தைச் செலவழித்து மீண்டும் இவற்றையெல்லாம் பெற்று விடலாம் என்று நம்புவதுதான் அதைவிடவும் வேடிக்கையாக இருக்கிறது.
கனியைக் கனியாகச் சுவைக்காது கனியென்று எழுதி வைத்த காகிதத்தைச் சுவைப்பது போலத்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வாழ்க்கையும்.
"உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' என்று வாழ்க்கையின் எளிமையை அழகாகக் குறிப்பிடுகிற சங்க இலக்கியம் அதனை மேலும் விரிவாக்குகிறது.
"இந்த உலகம் முழுவதும் பொதுமை
யானதில்லை; தனி ஒருவனாகிய எனது
உரிமையே' எனக் கொக்கரித்து, ஒரு குடைக்கீழ் ஆளும் அரசனாகவே இருந்தாலும், பகலிரவு உறங்காது ஓடித்திரியும் விலங்குகளை வேட்டையாடினால்தான் வயிற்றுக்குக் கிடைக்கும் என்று காத்திருக்கும் கல்லாத வறுமையாளனுக்கும் உணவுக்குப் பயன்படும் அளவு நாழித் தானியம்தான்; மானத்தின் பொருட்டு உடலை மறைக்கும் ஆடைகள் அரையாடை என்றும் மேலாடை என்றும் இரண்டேதான்! இவைபோலும் பிற உடல் சார்ந்த உள்ளம் சார்ந்த தேவைகளும் பொதுவாகவே விளங்கும்.
நிலைமை இப்படியிருக்க, தேடிக் குவிக்கிற செல்வத்தின் பயன்தான் என்ன என்று கேட்டால், "நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம்' என்று கருதாது, அற்பக் கைப்பொருளும் இல்லாமல் வாடுகிற வறியவர்களுக்கு மனமுவந்து பகிர்ந்து கொடுத்தல்தான் என்கிறது புறநானூற்றுப் பாடல்.
இந்த உரத்த சிந்தனை நயத்தகு சொற்கள் அமைந்த பாடலோடு மட்டும் முடிந்துவிடவில்லை. வளத்தகு வாழ்வியலாகவும் திகழ்ந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
வறுமையில் வாடிய புலவர் பொருள்வேண்டி வள்ளலிடம் தன் துயரைப் பாடலாக்கிக் கூறுகிறார். வாழ்நாள் கடந்து நிறைமுதுமை அடைந்த என் தாய் இன்னும் உயிர் பிரியவில்லையே என நொந்து நரை மயிர் பரவத் தடியூன்றித் திரிய முடியாதவளாகத் துயரத்தில் இருக்கிறாள்.
இளம்கைக்குழந்தையை ஏந்திப் பசியோடு தவிக்கிறாள் மனைவி. குழந்தைக்கு அமுதூட்டும் அவள் மார்பு வற்றிக் கிடக்கிறது. முற்றாத குப்பைக் கீரையைப் பறித்தெடுத்து நீருலையில் இட்டு உப்போ மோரோ, சோறோ, ஏதுமின்றி, பிள்ளையின் பாலுக்காக வேண்டி வெறுமனே உண்கிறாள். அவளுக்கு மாற்றுடையும் இல்லை. இருப்பதுவும்கூடக் கிழிந்து அழுக்கேறியது. இவ்விரு மகளிர் வேண்ட நான் உன்னிடம் பொருள் வேண்டி வந்தேன்; அவர்கள் மகிழும்படி பரிசில் தரவேண்டும்' என்று வேண்டுகிறார்.
எத்தகைய கொடிய வறுமை அவரைப் பற்றியிருக்கிறது என்பதை அந்தப் பாடல் வரிகளே படம் பிடித்துக் காட்டி நம் நெஞ்சை உருக்குகின்றன. வள்ளல் மனம் உருகாதா என்ன? அவரும் பெருங்கொடையை வாரி வழங்கினார்.
இத்தனை வறுமையில் சிக்கித் தவித்த அந்தப் புலவருக்கு இப்போது குன்றனைய செல்வம் குவிந்து விட்டது. ஓடப்பராய் இருந்த ஏழைப்புலவர் வள்ளலின் கொடையால் ஓர் விநாடிக்குள் உயரப்பர் ஆகி விட்டார்.
புலவர் தனக்குப் பரிசாய்க் குவிந்த அந்தப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு ஏழு தலைமுறைக்கும் இறுமாந்து வாழ்ந்திருக்கலாம் அல்லவா? ஆனால், பரிசில் பெற்றுத் திரும்பிய அவர்தம் தமிழுள்ளம் தன்னுடைய மனைவியை அழைத்து, "மனையாளே, உன்னை விரும்பியவர்களுக்கும், உனக்கு விருப்பமானவர்களுக்கும் நம்மைப் போல வாழ்வோர்க்கும் உனது சுற்றத்தார்க்கும் இதுநாள்வரை நமது வறுமைதீர நமக்குப் பொருள் கொடுத்து உதவியவர்களுக்கும், இவர்கள் மட்டுமின்றி இன்னார் இனியார் என்று கருதாமல், என்னைக் கேட்டு என்னுடைய அனுமதியைப் பெற்றுத்தான் உதவ வேண்டும் என்று காத்திருக்காமல் எல்லாருக்கும் வாரி வழங்கு' என்று ஆணையிட்டார்.
வறுமை முன்பு வாழ்வில்தான் இருந்ததே தவிர எப்போதும் மனத்தில் இல்லை என்பதைப் போலவும், வள்ளல் செல்வத்தை மட்டும் தரவில்லை வள்ளன்மையும் தந்துவிட்டார் என்பதைப் போலவும், தமிழர்தம் உள்ளம் செல்வம் நிறைந்தபோது துள்ளிக் குதிப்பதும் வறண்டபோது துவண்டுபோவதும், இல்லையென்பதை உலகத்துக்கு உணர்த்துவது போலவும் இந்த அற்புத நிகழ்வு வரலாறாகப் பதிந்திருக்கிறது.
குவிகின்ற செல்வத்தை எப்படிப் பல்லுயிரோடும் பகிர்ந்து வாழ வேண்டும் என்னும் பொதுவுடைமையைப் பரக்கப் பேசுகிறது தமிழ் மரபு. வறுமைக்கு எதிரான வள்ளன்மையை முன்னிறுத்துகிறது தமிழர் வாழ்வியல். ஏழ்மையை விரட்டும் தோழமையைப் புகட்டுகிறது ஆன்மிக ஒழுங்கு. வழிவழியாக வந்த இந்த மாண்புகளைத் தமிழர்கள் எங்கே தவற விட்டார்கள்?
சங்கம் தொடங்கி, அற இலக்கியங்களும், காப்பியங்களும், பக்தி இலக்கியங்களும் போதித்த பல்லுயிர் ஓம்புகின்ற செல்வ நிலையாமை வாழ்வு எங்கே மறைந்தது?
கடவுளிடம்கூட, "யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும்' என்று பொன்னையும் பொருளையும் போகங்களையும் யாசிக்காது அருளையும் அன்பையும் அறத்தையும் வேண்டி நின்ற பெருவாழ்வு எங்கே தொலைந்தது?
"உடல் உழைப்பால் ஊதியமாகப் பெற்ற பொருட்செல்வத்தைப் பிறருக்கு வாரிவழங்கிப் புகழ் என்னும் அருட்செல்வத்தை உயிருக்கான ஊதியமாகப் பெருக்கிக் கொள்ளுங்கள்' என்கிறார் திருவள்ளுவர். புகழென்றால் உயிரையும் கொடுக்கத் துணிந்து, பழியென்றால் உலகமே கிடைப்பதென்றாலும் வேண்டாமென்று மறுத்த தமிழர்களின் வாழ்வியல் தலைகீழாகிப் பொருளுக்காக எதற்கும் துணிகின்ற காலமாக இருப்பது வருந்துதற்குரியது. பணமென்றால் வாய் திறப்பவை பிணங்கள்தானே? நம் மனங்கள் ஏன் அந்த மாய வலையில் சிக்கிக் கொண்டன?
"அறஞ்செய விரும்பு' என்றதோடு நம்முடைய தமிழ்ப்பாடம் முடிந்ததென்று யார் சொன்னது? ஒளவை மேலும் சொல்கிறாள்,
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து
வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் -
கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே
அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்.
இந்த "நல்வழி'யை எப்படி மறந்தோம்?
2023-ஆம் ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் வாடிக்கையாளரின் சொத்துகள் 7,846.8 பில்லியன் டாலர் (ரூ.8.65 லட்சம் கோடி) இருந்தது என்று வங்கி வணிகர் கூட்டமைப்பு காட்டுகிறது. அதுபோலவே 2024-ஆம் ஆண்டில் இந்தியர்களின் சுவிஸ் வங்கிச் சொத்துகள் மட்டும் 3.54 பில்லியன் டாலர் (ரூ.37,600 கோடி) என்றும் கணக்கிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் அலைகின்ற மனிதர்கள் இந்த உலகத்தின் பல நாடுகளில் இன்னும் இருக்கும்போது இந்த வங்கிச் சேமிப்பின் பயன்தான் என்ன?
உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், "அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள்; அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?" என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று நீதி புகட்டுகிறார் மகாகவி பாரதியார். அவர்வழி வந்த பாவேந்தர் பாரதிதாசனும்,
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்; "உடைமை மக்களுக்குப் பொது'
புவியை நடத்துப் பொதுவில் நடத்து என்று தமிழ்மரபு தவறாது சுட்டுகிறார்.
இந்த மரபு வழாது, செல்வத்தின் பயன் ஈதல்! இது எவ்வளவு உயர்ந்த தத்துவம்! இந்தத் தத்துவம் சமுதாயத்தில் வாழ்க்கை நெறியாக மலர்ந்திருக்குமானால் சமுதாயத்தில் இவ்வளவு மேடு-பள்ளங்கள் இருக்காது; மனிதர்களுக்கிடையில் பகையும் வளர்ந்திருக்காது. பகையின்மையால் களவு - காவற் பணிகள் தலையெடுத்திருக்கா; இன்றோ, செல்வம் செல்வத்தைச் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இஃது ஒரு கொடுமை! செல்வம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்தப் பெறுகிறது. ஏன்? நாடாளும் அரசிலிருந்து ஆண்டவன் சந்நிதானம் வரை இந்தப் பண்பிழந்த செல்வத்துக்கு அமோக மரியாதை!
இது வையகத்தின் இயல்பான நடைமுறையன்று. நெறிமுறை பிறழ்ந்த நடைமுறையே! என்று நம்காலத்தையும் கணித்தவர் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ்மரபு காட்டும் செல்வத்துப் பயனான ஈதலை மேற்கொள்ளும் உயரிய சமுதாயம் அமைந்து விட்டால் உலகம் உய்தி பெறுமே.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
மறதியும் தேவைதான்!
நிவாற்றல் மிகவும் தேவைதான்; ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் தேவைதான் என்பதைப் பற்றி...
மறதியும் தேவைதான் முனைவர் என். பத்ரி Updated on: 08 டிசம்பர் 2025, 4:00 am