Showing posts with label DINAMANI. Show all posts
Showing posts with label DINAMANI. Show all posts

Wednesday, December 10, 2025

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்!

DINAMANI  10.12.2025

 "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை;

அருணன் கபிலன் Updated on:  10 டிசம்பர் 2025, 2:59 am 

 "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை; தனக்கென்று மட்டும் வைத்துக் கொண்டதுமில்லை. அண்மைக்காலமாக அதாவது இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றம் சொத்துக் குவித்தல் என்னும் வழக்கம்; இது தமிழர்களின் மரபன்று.

தேடித் தேடிப் பொருளைக் குவிப்பதும் அவ்வாறு குவிந்தவற்றைக் கொண்டு மேலும் மேலும் அதைப் பெருக்குவதற்கான வழிகளில் ஈடுபடுவதும் குறிப்பாக மண்ணிலும் பொன்னிலும் அதை முதலீடு செய்வதும் இதுபோன்ற பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதிக் கொண்டிருக்கிற காலமாக இருக்கிறது.

வாழ்வுக்கான அகப்பொருள் தேடிக் கண்டு தேர்ந்து உலகுக்கே உரக்கச் சொன்ன தமிழர்கள் தாங்களே அந்த மெய்ப்பொருளை மறந்துவிட்டுப் பொய்ப் பொருளை நாடி - புறவாழ்வுக்குப் பொருள் தேடி அலைகிறார்களோ என்ற ஐயமும் தோன்றுகிறது.

இதிலே வேடிக்கை என்னவென்றால், வேண்டுதல்-வேண்டாமை இலானாகிய கடவுளையும் இதற்குப் பங்கு சேர்த்துக் கொள்வதுதான். இந்தக் கோயிலில் இத்தனை முறை இப்படி வேண்டிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று வேண்டுகிறவர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு வேண்டிச் செல்வத்தைச் சேர்த்தவர்கள் தாங்கள் சேர்த்த செல்வத்துக்குக் காரணம் அந்தக் கடவுள்தான் என்றும், ஏதும் பழி-பாவம் வந்து விடக்கூடாது என்பதற்காக அதில் ஒரு பங்கை கடவுளுக்கே கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் நம்புகிறார்கள்.

பொருட் செல்வத்துக்காகவே மட்டும் அலையும் இந்த வாழ்க்கையில் அன்பு, கருணை, நிம்மதி, உடல்-மனநலம், நீளாயுள், சமூக மதிப்பு, மானுட நேயம் உள்ளிட்ட பலவற்றை இழப்பதோடு மட்டுமின்றித் தாங்கள் சேர்த்த செல்வத்தைச் செலவழித்து மீண்டும் இவற்றையெல்லாம் பெற்று விடலாம் என்று நம்புவதுதான் அதைவிடவும் வேடிக்கையாக இருக்கிறது.

கனியைக் கனியாகச் சுவைக்காது கனியென்று எழுதி வைத்த காகிதத்தைச் சுவைப்பது போலத்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வாழ்க்கையும்.

"உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' என்று வாழ்க்கையின் எளிமையை அழகாகக் குறிப்பிடுகிற சங்க இலக்கியம் அதனை மேலும் விரிவாக்குகிறது.

"இந்த உலகம் முழுவதும் பொதுமை

யானதில்லை; தனி ஒருவனாகிய எனது

உரிமையே' எனக் கொக்கரித்து, ஒரு குடைக்கீழ் ஆளும் அரசனாகவே இருந்தாலும், பகலிரவு உறங்காது ஓடித்திரியும் விலங்குகளை வேட்டையாடினால்தான் வயிற்றுக்குக் கிடைக்கும் என்று காத்திருக்கும் கல்லாத வறுமையாளனுக்கும் உணவுக்குப் பயன்படும் அளவு நாழித் தானியம்தான்; மானத்தின் பொருட்டு உடலை மறைக்கும் ஆடைகள் அரையாடை என்றும் மேலாடை என்றும் இரண்டேதான்! இவைபோலும் பிற உடல் சார்ந்த உள்ளம் சார்ந்த தேவைகளும் பொதுவாகவே விளங்கும்.

நிலைமை இப்படியிருக்க, தேடிக் குவிக்கிற செல்வத்தின் பயன்தான் என்ன என்று கேட்டால், "நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம்' என்று கருதாது, அற்பக் கைப்பொருளும் இல்லாமல் வாடுகிற வறியவர்களுக்கு மனமுவந்து பகிர்ந்து கொடுத்தல்தான் என்கிறது புறநானூற்றுப் பாடல்.

இந்த உரத்த சிந்தனை நயத்தகு சொற்கள் அமைந்த பாடலோடு மட்டும் முடிந்துவிடவில்லை. வளத்தகு வாழ்வியலாகவும் திகழ்ந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

வறுமையில் வாடிய புலவர் பொருள்வேண்டி வள்ளலிடம் தன் துயரைப் பாடலாக்கிக் கூறுகிறார். வாழ்நாள் கடந்து நிறைமுதுமை அடைந்த என் தாய் இன்னும் உயிர் பிரியவில்லையே என நொந்து நரை மயிர் பரவத் தடியூன்றித் திரிய முடியாதவளாகத் துயரத்தில் இருக்கிறாள்.

இளம்கைக்குழந்தையை ஏந்திப் பசியோடு தவிக்கிறாள் மனைவி. குழந்தைக்கு அமுதூட்டும் அவள் மார்பு வற்றிக் கிடக்கிறது. முற்றாத குப்பைக் கீரையைப் பறித்தெடுத்து நீருலையில் இட்டு உப்போ மோரோ, சோறோ, ஏதுமின்றி, பிள்ளையின் பாலுக்காக வேண்டி வெறுமனே உண்கிறாள். அவளுக்கு மாற்றுடையும் இல்லை. இருப்பதுவும்கூடக் கிழிந்து அழுக்கேறியது. இவ்விரு மகளிர் வேண்ட நான் உன்னிடம் பொருள் வேண்டி வந்தேன்; அவர்கள் மகிழும்படி பரிசில் தரவேண்டும்' என்று வேண்டுகிறார்.

எத்தகைய கொடிய வறுமை அவரைப் பற்றியிருக்கிறது என்பதை அந்தப் பாடல் வரிகளே படம் பிடித்துக் காட்டி நம் நெஞ்சை உருக்குகின்றன. வள்ளல் மனம் உருகாதா என்ன? அவரும் பெருங்கொடையை வாரி வழங்கினார்.

இத்தனை வறுமையில் சிக்கித் தவித்த அந்தப் புலவருக்கு இப்போது குன்றனைய செல்வம் குவிந்து விட்டது. ஓடப்பராய் இருந்த ஏழைப்புலவர் வள்ளலின் கொடையால் ஓர் விநாடிக்குள் உயரப்பர் ஆகி விட்டார்.

புலவர் தனக்குப் பரிசாய்க் குவிந்த அந்தப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு ஏழு தலைமுறைக்கும் இறுமாந்து வாழ்ந்திருக்கலாம் அல்லவா? ஆனால், பரிசில் பெற்றுத் திரும்பிய அவர்தம் தமிழுள்ளம் தன்னுடைய மனைவியை அழைத்து, "மனையாளே, உன்னை விரும்பியவர்களுக்கும், உனக்கு விருப்பமானவர்களுக்கும் நம்மைப் போல வாழ்வோர்க்கும் உனது சுற்றத்தார்க்கும் இதுநாள்வரை நமது வறுமைதீர நமக்குப் பொருள் கொடுத்து உதவியவர்களுக்கும், இவர்கள் மட்டுமின்றி இன்னார் இனியார் என்று கருதாமல், என்னைக் கேட்டு என்னுடைய அனுமதியைப் பெற்றுத்தான் உதவ வேண்டும் என்று காத்திருக்காமல் எல்லாருக்கும் வாரி வழங்கு' என்று ஆணையிட்டார்.

வறுமை முன்பு வாழ்வில்தான் இருந்ததே தவிர எப்போதும் மனத்தில் இல்லை என்பதைப் போலவும், வள்ளல் செல்வத்தை மட்டும் தரவில்லை வள்ளன்மையும் தந்துவிட்டார் என்பதைப் போலவும், தமிழர்தம் உள்ளம் செல்வம் நிறைந்தபோது துள்ளிக் குதிப்பதும் வறண்டபோது துவண்டுபோவதும், இல்லையென்பதை உலகத்துக்கு உணர்த்துவது போலவும் இந்த அற்புத நிகழ்வு வரலாறாகப் பதிந்திருக்கிறது.

குவிகின்ற செல்வத்தை எப்படிப் பல்லுயிரோடும் பகிர்ந்து வாழ வேண்டும் என்னும் பொதுவுடைமையைப் பரக்கப் பேசுகிறது தமிழ் மரபு. வறுமைக்கு எதிரான வள்ளன்மையை முன்னிறுத்துகிறது தமிழர் வாழ்வியல். ஏழ்மையை விரட்டும் தோழமையைப் புகட்டுகிறது ஆன்மிக ஒழுங்கு. வழிவழியாக வந்த இந்த மாண்புகளைத் தமிழர்கள் எங்கே தவற விட்டார்கள்?

சங்கம் தொடங்கி, அற இலக்கியங்களும், காப்பியங்களும், பக்தி இலக்கியங்களும் போதித்த பல்லுயிர் ஓம்புகின்ற செல்வ நிலையாமை வாழ்வு எங்கே மறைந்தது?

கடவுளிடம்கூட, "யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும்' என்று பொன்னையும் பொருளையும் போகங்களையும் யாசிக்காது அருளையும் அன்பையும் அறத்தையும் வேண்டி நின்ற பெருவாழ்வு எங்கே தொலைந்தது?

"உடல் உழைப்பால் ஊதியமாகப் பெற்ற பொருட்செல்வத்தைப் பிறருக்கு வாரிவழங்கிப் புகழ் என்னும் அருட்செல்வத்தை உயிருக்கான ஊதியமாகப் பெருக்கிக் கொள்ளுங்கள்' என்கிறார் திருவள்ளுவர். புகழென்றால் உயிரையும் கொடுக்கத் துணிந்து, பழியென்றால் உலகமே கிடைப்பதென்றாலும் வேண்டாமென்று மறுத்த தமிழர்களின் வாழ்வியல் தலைகீழாகிப் பொருளுக்காக எதற்கும் துணிகின்ற காலமாக இருப்பது வருந்துதற்குரியது. பணமென்றால் வாய் திறப்பவை பிணங்கள்தானே? நம் மனங்கள் ஏன் அந்த மாய வலையில் சிக்கிக் கொண்டன?

"அறஞ்செய விரும்பு' என்றதோடு நம்முடைய தமிழ்ப்பாடம் முடிந்ததென்று யார் சொன்னது? ஒளவை மேலும் சொல்கிறாள்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து

வைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் -

கூடுவிட்டிங்(கு)

ஆவிதான் போயினபின் யாரே

அனுபவிப்பர்

பாவிகாள் அந்தப் பணம்.

இந்த "நல்வழி'யை எப்படி மறந்தோம்?

2023-ஆம் ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் வாடிக்கையாளரின் சொத்துகள் 7,846.8 பில்லியன் டாலர் (ரூ.8.65 லட்சம் கோடி) இருந்தது என்று வங்கி வணிகர் கூட்டமைப்பு காட்டுகிறது. அதுபோலவே 2024-ஆம் ஆண்டில் இந்தியர்களின் சுவிஸ் வங்கிச் சொத்துகள் மட்டும் 3.54 பில்லியன் டாலர் (ரூ.37,600 கோடி) என்றும் கணக்கிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் அலைகின்ற மனிதர்கள் இந்த உலகத்தின் பல நாடுகளில் இன்னும் இருக்கும்போது இந்த வங்கிச் சேமிப்பின் பயன்தான் என்ன?

உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், "அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள்; அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?" என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று நீதி புகட்டுகிறார் மகாகவி பாரதியார். அவர்வழி வந்த பாவேந்தர் பாரதிதாசனும்,

உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!

புகல்வேன்; "உடைமை மக்களுக்குப் பொது'

புவியை நடத்துப் பொதுவில் நடத்து என்று தமிழ்மரபு தவறாது சுட்டுகிறார்.

இந்த மரபு வழாது, செல்வத்தின் பயன் ஈதல்! இது எவ்வளவு உயர்ந்த தத்துவம்! இந்தத் தத்துவம் சமுதாயத்தில் வாழ்க்கை நெறியாக மலர்ந்திருக்குமானால் சமுதாயத்தில் இவ்வளவு மேடு-பள்ளங்கள் இருக்காது; மனிதர்களுக்கிடையில் பகையும் வளர்ந்திருக்காது. பகையின்மையால் களவு - காவற் பணிகள் தலையெடுத்திருக்கா; இன்றோ, செல்வம் செல்வத்தைச் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இஃது ஒரு கொடுமை! செல்வம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்தப் பெறுகிறது. ஏன்? நாடாளும் அரசிலிருந்து ஆண்டவன் சந்நிதானம் வரை இந்தப் பண்பிழந்த செல்வத்துக்கு அமோக மரியாதை!

இது வையகத்தின் இயல்பான நடைமுறையன்று. நெறிமுறை பிறழ்ந்த நடைமுறையே! என்று நம்காலத்தையும் கணித்தவர் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ்மரபு காட்டும் செல்வத்துப் பயனான ஈதலை மேற்கொள்ளும் உயரிய சமுதாயம் அமைந்து விட்டால் உலகம் உய்தி பெறுமே.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Tuesday, December 9, 2025

ஆடம்பரங்கள் அவசியமா?



நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆடம்பரங்கள் அவசியமா?

ஆடம்பரமான திருமணங்களைத் தவிா்த்து சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் மணவாழ்வில் கடனில் விழ வேண்டியிருக்காது.

இரா. கற்பகம் Updated on: 09 டிசம்பர் 2025, 4:44 am

அமெரிக்காவில் வசிக்கும் என் தோழி, தன் மகனின் திருமண புகைப்படத்தை எனக்கு அனுப்பிவிட்டு, விவரங்களையும் பகிா்ந்துகொண்டாா். மணமக்கள், அவா்தம் பெற்றோா் ஆகிய ஆறு போ் மட்டும் பங்கேற்க, மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் மணவிழாவை நடத்தியிருந்தாா்கள்! நம் நாட்டில் இது சாத்தியமா? தனி மனிதா்களாகவும், சமூகமாகவும் நம் இல்லத் திருமண விழாக்களை நாம் எவ்வளவு ஆடம்பரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்?

நம் நாட்டில் உழவா் சந்தை, மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தை போல, ‘கல்யாணச் சந்தை’ என்ற ஒன்று இருக்கிறதே! இன்றைய திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; ‘கல்யாணச் சந்தையில்’தான் நிச்சயிக்கப்படுகின்றன! இங்கு நடக்கும் வேடிக்கைகளையும், விசித்திரங்களையும், கொடுக்கல் வாங்கல்களையும், லாப நஷ்டக் கணக்குகளையும் பாா்க்கலாம்.

ஆண்-பெண் சமத்துவமெல்லாம் பேச்சளவில் மட்டும்தான். எல்லா நிலைகளிலும் மணமகன் வீட்டாா் மேல்தட்டிலும், மணமகள் வீட்டாா் கீழ்த்தட்டிலும் தான் இருக்கிறாா்கள். ‘கல்யாணச் சந்தையின்’ ஆரம்பம் பெண் பாா்க்கும் படலம். இப்போதெல்லாம் யாரும் அநாகரிகமாகப் பெண்ணைப் பாடச் சொல்லிக் கேட்பதில்லை. அதற்குப் பதிலாக மணமகன் வீட்டாா் பத்துப் பதினைந்து பேருக்கு நடுவில் பெண்ணைக் கொலு பொம்மைபோல அலங்கரித்து உட்காரச் செய்து, சமைக்கத் தெரியுமா, அலுவலகத்தில் வேலை நேரம் என்ன, ஊதியம் எவ்வளவு என்று ‘நாகரிகமாக’ விசாரிக்கிறாா்கள்.

அடுத்தது சடங்கு சம்பிரதாயங்கள், முகூா்த்த நாள், நேரம், மணப்பெண் உடுத்த வேண்டிய மண விழா ஆடையின் நிறம், அழைப்பிதழ் என்று எல்லாவற்றையுமே மணமகன் வீட்டாா்தான் நிா்ணயிக்கிறாா்கள். என் உறவினா் ஒருவரின் மகளுக்குத் திருமணம் பேசினாா்கள். அந்தப் பெண் மிகவும் சிவந்த நிறம் உள்ளவா். அவருக்குச் சிவப்பு நிறத்தில் புடவை அணிந்துகொள்ள வேண்டும் என்று விருப்பம். ஆனால், மணமகனின் சகோதரிகள், ‘மஞ்சள் நிறப் புடவைதான் அணிய வேண்டும்; அதுதான் எங்கள் வழக்கம்’, என்று அடித்துப் பேசினாா்கள். ‘சிவந்த நிறப் பெண்ணுக்கு சிவப்பு, கருநீலம், கரும்பச்சை போன்ற வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும்; வெளிா் நிறமான மஞ்சள் எடுப்பாக இராது’ என்று அந்தப் பெண்ணின் பெற்றோா் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவா்கள் பிடிவாதத்தை விடவில்லை.

இத்தனைக்கும் அது காதல் திருமணம்; பெண்ணின் பெற்றோா் மிகவும் படித்தவா்கள்; முற்போக்கு சிந்தனை உடையவா்கள்; சமூகத்தில் உயா்ந்த அந்தஸ்தில் இருப்பவா்கள்; இருந்தும் அவா்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘மணமகன், பச்சை நிற வேட்டியும் சட்டையும்தான் அணிய வேண்டும்; அதுதான் எங்கள் வழக்கம்’ என்று பெண் வீட்டாா் கூறினால் மணமகன் வீட்டாா் ஒப்புக் கொண்டிருப்பாா்களா? ஒரு முைான் திருமணம்; ஆடைத் தோ்வை மணமக்களின் விருப்பத்துக்கு விடுவதுதானே நியாயம்?

அடுத்தது சீா்வரிசை! நகை, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், இரு சக்கர வாகனம், காா் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்தக் காலத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்கவில்லை. பெண்களுக்குச் சொத்துரிமையும் அப்போது இல்லை. அதனால் தங்கம், வெள்ளி என்று பெண்களுக்குச் சீராகக் கொடுத்தாா்கள். இப்போது, பெண்களைப் பொறியியல், மருத்துவம், குடிமைப் பணி, ராணுவம் என்று எந்தெந்தத் துறைகளுக்கோ படிக்க வைக்கிறாா்கள். கல்விக்கான செலவு மிக அதிகம். அதையும் தாண்டி நகைகள், விலையுா்ந்த தொலைக்காட்சிப் பெட்டி, துணிதுவைக்க, பாத்திரம் கழுவ இயந்திரங்கள், குளிா்சாதனப் பெட்டி, கணினி, கைப்பேசி, கட்டில், மெத்தை, தலையணைகள், அலமாரி, மேஜை, நாற்காலி என்று கூசாமல் கேட்கிறாா்கள்.

‘கல்யாணச் சந்தையில்’, இவையெல்லாம் அவரவா் பொருளாதார வசதிக்கேற்ப பல ரகங்களில் தாராளமாகக் கிடைக்கின்றனவே! அதிலும் சில பெற்றோா், அவா்களது மகனும் மருமகளும் வேறு ஏதோ ஊரில் பணியிலிருந்தாலும், அவா்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல் இவா்கள் இருக்கும் வீட்டிலும் கட்டில், மெத்தை போன்றவற்றை வாங்கிப் போட வேண்டும் என்று பெண்ணைப் பெற்றவா்களை நிா்ப்பந்திக்கிறாா்கள்.

அழைப்பிதழ் கடைக்குள் நுழைந்து பாா்த்தால் திணறிப் போவோம். பல வண்ணங்களில், பல வடிவங்களில் கொட்டிக் கிடக்கின்றன. திருக்குறளில் ஆரம்பித்து, பாரதிதாசன் கவிதை ஒன்றைச் சோ்த்து, மீனாட்சி திருக்கல்யாண ஓவியமோ, வடநாட்டு திருமண ஊா்வல ஓவியமோ ஒன்றையும் இணைத்து, இரு வீட்டாரின் முன்னோா் சரித்திரத்தைப் பிரஸ்தாபித்து, மணமக்களின் பெயா்களைக் குறிப்பிட்டு, நிகழ்ச்சி நிரலைக் கொடுத்து, கடைசியில் உறவினா்களின் பெயா்களையெல்லாம் அச்சில் கொண்டு வரும் போது அழைப்பிதழ் ஒரு புத்தகமாக மாறிவிடுகிறது! அதற்குக் கொடுக்கும் விலையும் கணிசமானதாக இருக்கிறது!

‘இன்னாரது மகன் இன்னாரது மகளைத் திருமணம் செய்து கொள்கிறாா்’, என்று சுருக்கமாகத் தெரிவித்தால் செலவை எவ்வளவோ குறைக்கலாமே. அழைப்பிதழைப் பெறுபவா்கள் திருமணம் முடிந்ததும் அதைக் கிழித்துப் போடப் போகிறாா்கள். அதற்கு இத்தனைச் செலவு தேவையா? இப்போது சிலா் அழைப்பிதழை வடிவமைத்துக் கொண்டு அதை கட்செவி அஞ்சலில் அனுப்பிவிட்டு கைப்பேசியில் பேசித் தெரிவித்து விடுகிறாா்கள்; இது வரவேற்கத்தக்கதே!

அடுத்தது உணவுக் கடை. இப்போதெல்லாம் திருமண விருந்து, விருந்தினா் உண்பதற்கு அல்ல; மணமக்களின் வீட்டாா் தம் அந்தஸ்தை பறைசாற்றிக் கொள்ள! ஒரு நேரம் ஒரு மனிதன் எத்தனை பதாா்த்தங்களைத்தான் சாப்பிட முடியும்? செலவு என்னவோ பெரும்பாலும் மணமகள் வீட்டாரதுதான். ஆனால், இங்கும் மணமகன் வீட்டாா் வைத்ததுதான் சட்டம். அறுசுவைகளிலும் இருக்க வேண்டும்; ஒவ்வொரு சுவையிலும் குறைந்தது இரண்டு வகை இருக்க வேண்டும்; பாரம்பரியத்துக்குப் பாதாம் பால், புதுமைக்குப் பனிக்கூழ்; இத்தோடு வட இந்திய பதாா்த்தங்கள் பல. இத்தகைய ஆடம்பர விருந்துகளில் எவ்வளவு உணவு மீதமாகி வீணாகிப் போகிறது!

இது தவிர ‘கல்யாணச் சந்தையில்’ மேடையலங்காரம், மணமக்களின் ஒப்பனை, இன்னிசைக் கச்சேரி, மேளவாத்தியங்கள் என்று பல பிரிவுகள் உள்ளன. எல்லாவற்றிலும் மணமகன் வீட்டாா் ஆதிக்கம் செலுத்த, பெண் வீட்டாா் வேறு வழியின்றி, வாயை மூடிக் கொண்டு அவா்கள் சொல்வதையெல்லாம் செய்கின்றனா். ‘கல்யாணச் சந்தையில்’ கொள்ளை லாபம் மேற்குறிப்பிட்ட கடைகளுக்குத்தான்!

அடுத்ததாக மணமகன் வீட்டாருக்கு! எந்தச் செலவும் இன்றி நினைத்ததை எல்லாம் பெண்வீட்டாா் செலவில் வாங்கிக் கொள்கிறாா்கள் அல்லவா? பாவம் பெண்ணைப் பெற்றவா்கள்! கடன் மேல் கடன் வாங்கித் திருமணத்தை விமரிசையாகச் செய்து முடித்து சீா்களைக் கொடுத்துப் பெண்ணைப் புதுக் குடித்தனம் வைத்துவிட்டு வரும்போது மிஞ்சுவது முக்காடுதான்!

பெண் வீட்டாா், ‘திருமணம்தான் முடிந்துவிட்டதே, அப்பாடா!’ என்று மூச்சுவிடலாமா? முடியாது! ஆடிமாத அழைப்பு, தலை தீபாவளி, தலைப் பொங்கல் -- இவையெல்லாம் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும். ஒவ்வொன்றுக்கும் மறுபடியும் தங்கத்திலும் வெள்ளியிலும் சீா் தர வேண்டும். அது தவிர தீபாவளி என்றால் புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள்; பொங்கல் என்றால் புத்தாடைகள், பொங்கல் பானை, கரும்பு (ஜோடியாகத்தான் வேண்டும்; அதுவும் முழுக் கரும்பாக இருக்க வேண்டும்!), மஞ்சள், வெல்லம்; ஏன், மணமகன் வீட்டில் ஒரு பொங்கல் பானைகூட இல்லாமலா இத்தனை ஆண்டு பொங்கல் கொண்டாடியிருப்பாா்கள்?

‘கல்யாணச்சந்தையில்’ வாங்கிக் கொடுத்துக் கொடுத்து பெண் வீட்டாா் ஓய்ந்து நிற்கையில், மணமகள் கருவுற்றிப்பாா். அவரது பெற்றோா் மீண்டும் ஒரு சுற்று, செலவு செய்யத் தயாராக வேண்டும். வளைகாப்பில் ஆரம்பித்து, பிள்ளைப்பேறு,பெயா்சூட்டு விழா, ஆண்டு விழா என்று திருமண விழாவின்இலவச இணைப்புகள் தொடரும்! படிக்கும் நமக்கே தலை சுற்றுகிறது என்றால், செயல்படுத்தும் பெண்களைப் பெற்ற ‘பாவப்பட்டவா்களுக்கு’ எப்படியிருக்கும்?

‘கல்யாணச் சந்தையில்’ நடக்கும் இந்த அவலங்களை மாற்ற நாம் ஒவ்வொருவரும் முனைய வேண்டும். ‘கல்யாணச் சந்தையில்’ கொடுங்கோலோச்சுவது பெண்களே! அதாவது மணமகனின் தாயும், சகோதரிகளும், பிற பெண்களுமே! இவா்கள் முதலில் மாற வேண்டும். தங்கள் வீட்டுக்கு இன்னொரு மகள் வருகிறாள் என்று எண்ணி மணப்பெண்ணையும் அவரது பெற்றோரையும் கொண்டாட வேண்டும். சடங்குகளும் சம்பிரதாயங்களும் உறவுகளைப் பலப்படுத்துவதற்கே; காலத்துக்கு ஒவ்வாத அா்த்தமற்ற சம்பிரதாயங்களைப் புறந்தள்ள வேண்டும். அவற்றுக்கான நேரத்தையும் பொருட்செலவையும் குறைக்க வேண்டும். இரு வீட்டாா் இணையும் திருமண பந்தத்தில் இருவரும் கலந்து பேசிச் செலவுகளைப் பகிா்ந்து கொள்ளவேண்டும்.

இன்றைய இளைய தலைமுறையினா் ஆடம்பரமான திருமணங்களைத் தவிா்த்து சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் போதே கடனில் விழ வேண்டியிருக்காது.

மணப்பெண்ணும் மணமகன் வீட்டாரின் பேராசைகளுக்கு இடம் கொடுக்காது துணிச்சலாக எதிா்த்து நிற்க வேண்டும். இந்தக் காலத்துப் பெண்களுக்கு உயா்ந்த கல்வி, நல்ல வேலை, நவநாகரிக நடையுடை பாவனைகள் எல்லாம் இருக்கின்றன. இவை மட்டும் போதாது; தம் பெற்றோரை மணமகன் வீட்டாா் முன் தலைகுனிய வைக்காமல் அவா்களைத் தட்டிக் கேட்டு, தன் உரிமையை நிலை நாட்ட வேண்டும். பெண்ணைப் பெற்றவா்களும் தலையாட்டி பொம்மைகளாக இல்லாமல் நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டுமே உடன்பட வேண்டும்.

இப்படியெல்லாம் நடந்தால், ‘கல்யாணச் சந்தையில்’ மகிழ்ச்சி நிச்சயம்!

Monday, December 8, 2025

மறதியும் தேவைதான்!

மறதியும் தேவைதான்!

 நிவாற்றல் மிகவும் தேவைதான்; ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் தேவைதான் என்பதைப் பற்றி...

மறதியும் தேவைதான் முனைவர் என். பத்ரி Updated on:  08 டிசம்பர் 2025, 4:00 am 

நமது அன்றாட வாழ்வில் பல நல்ல நிகழ்வுகளும், சோக நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. துரதிருஷ்டவசமாக நமது மூளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்து விடுகிறது. மறக்க வேண்டியதை நினைவில் வைத்துக் கொள்கிறது. இதுதான் நமது மனம் செய்யும் மாயமாகும்.

நமது மூளை நமக்கு முக்கியம் எனக் கருதும் நிகழ்வுகளை மனதில் நிறுத்திக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நமக்கு நினைவாற்றல், மறதி இரண்டுமே தேவை. எதை மறக்க வேண்டும், எதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சார்ந்த தனி நபரின் வாழ்க்கையின் அனுபவத்தைப் பொருத்தது.

பெரும்பாலும், நம் வாழ்வின் சோக நிகழ்வுகள் வாழ்நாள் முழுவதும் நம் மனதை விட்டு விலக மறுக்கின்றன. அதனால்தான் நம்மில் பலரது மனம் மகிழ்ச்சியான பாடல்களை விட சோகமான பாடல்களை அதிகம் விரும்பி கேட்கிறது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரும் குறைவான நேரமே உறங்குகிறோம். இதனால், நமக்கு டிமென்ஷியாவின் பாதிப்பு இளமையிலேயே ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. முறையான சிகிச்சை அளிக்கப்படாத போது இம்மறதி நோய் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. நம் தொடர் மறதி பல்வேறு உறவுகளையும், சமூக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. வாகன விபத்துகள், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

நம் உடலின் நரம்பியல் கோளாறுகள், மனநலப் பிரச்னைகள், மனக்குழப்பம், மூளைக்காய்ச்சல், மூளையில் காயம், வைரஸ் தொற்றுகள் போன்றவை நமக்கு மறதியை ஏற்படுத்தலாம். சிலருக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஒரு பரம்பரை நோயாகவும் இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு நமது நினைவாற்றலை மிகவும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அதிகப்படியான மது, போதைப் பொருள் பயன்பாடுகளும் நமக்கு மறதியை ஏற்படுத்தலாம்.

இளமைக் காலத்தில் மாணவர்களுக்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம். கண் விழித்துப் படிக்கும் பாடப் பொருள்களை அவர்கள் தேர்வு அறையில் நினைவில் மீட்டுக் கொண்டு வந்து தேர்வை நன்கு எழுத அவர்களுக்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம்.

பணிக்காலத்தில் மறதியின் காரணமாக நாம் செய்யும் தவறுகள் சில நேரம் நமது பணியிடை நீக்கத்துக்கோ, பதவி பறிபோவதற்கோ காரணமாக அமையலாம். முதுமையில் கடந்தகால கசப்பு நினைவுகளை முதியவர்கள் மறக்க முயலுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அவர்களால் அவற்றை மறக்க முடிவதில்லை. அதனால், அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு, அவர்களுக்குப் பல்வேறு மனநலக் குறைபாடுகளும், உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படுகின்றன. மறதி நோய் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

மறதிக்கான அடிப்படைக் காரணத்தை விரைவில் கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். மறதி நோயிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறு அதன் அடிப்படைக் காரணத்தைப் பொருத்தது. நமக்கு தலையில் ஏற்படும் காயத்துக்குப் பிறகு, குழப்பம், நடத்தையில் மாற்றங்கள் போன்றவை ஏற்பட்டால் மருத்துவரின் உதவியை உடனே நாட வேண்டும். சில தடுப்பூசிகள் மறதியைக் கொண்டுவரும் தொற்றுகளைத் தடுக்கலாம். வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்த சமச்சீர் உணவு மூளையின் ஆரோக்கியத்தையும்,நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.

மன அழுத்தம் கவனச்சிதறலை ஏற்படுத்துவதால் மறதிக்கு காரணமாக அமைகிறது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர விருப்பமான இசையைக் கேட்டல், யோகா பயிற்சியில் ஈடுபடுதல், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் போன்றவை மிகவும் உதவும். இவை நம் மனதுக்கு அமைதியைக் கொண்டுவந்து நினைவாற்றலை அதிகரிக்கும்.

கரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்புக்குப் பிறகு நமது அன்றாட வாழ்வில் பல எதிர்மறை தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மனநிம்மதியை எங்கு தொலைத்தோம் என்பதை அறியாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம். நம்மை வழிகாட்டி, வாழ்க்கையைச் செம்மையாக நடத்த உதவும் அனுபவம் கொண்ட பெரியோர்கள் நம் அணுக் குடும்பங்களில் தற்போது மிகவும் குறைவாகவே உள்ளார்கள். அப்படி இருந்தாலும் அவர்களின் வழிகாட்டுதல்களை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை.

பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நம் உறவுகளில் தனிமையைக் கொண்டுவந்துள்ளன. தேவைக்கு ஏற்ப நாம் நமது செயல்பாடுகளில் நமது நினைவாற்றலும், மறதியும் உரிமை கொள்வதைப் பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இடங்களையும், நபர்களையும் விட்டு நாம் விலகி இருப்பது நல்லது.

தற்சார்புள்ள நிதி நிலை, போதுமான உறக்கம், சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல உறவுகள், பயனுள்ள பொழுதுபோக்குகள் மட்டுமே நமது நினைவாற்றலைப் பெருக்கும். நம் பணிகளை பட்டியலிட்டுக் கொண்டு, அவற்றின் முன்னுரிமைகளின் அடிப்படையில் நாம் செயல்படலாம்.

நாம் மகிழ்வான நிகழ்வுகளை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முனைய வேண்டும். பொதுவாக நமக்கு நினைவாற்றல் மிகவும் தேவை என்னும் கருத்தையே நாம் அனைவரும் மிகவும் ஆதரிக்கிறோம். ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் நமக்குத் தேவைதான்.

நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் போன்றவற்றை நாம் காலப்போக்கில் மறந்து விடுவது நல்லது. அவற்றை மறக்காமல் போனால் நமது வாழ்க்கையின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நினைவாற்றலுடன், மறதியும் முக்கியம்தான். இதை உணர்ந்து நாம் நம் வாழ்வை மென்மையாகக் கடந்துசெல்ல எத்தனிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Saturday, December 6, 2025

கார்த்திகையில் அணைந்த தீபம்!


கார்த்திகையில் அணைந்த தீபம்! 

பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற விளக்கும் இப்போது அணைந்து விட்டது.

ஏவிஎம் சரவணன் நல்லி குப்புசாமி Updated on: 05 டிசம்பர் 2025, 6:25 am

வழக்கம்போல் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக புதன்கிழமை மாலை (3.12.2025) ஏவிஎம் சரவணனை கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சரி, ஏதோ வேலையில் மும்முரமாக இருப்பார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர் நம்மிடம் இல்லை என்பது.

என் நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன. சரவணனின் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வீட்டில் ஏதோ ஒரு வைபவம்.

அதற்காக குடும்பத்தினருக்கும், விருந்தினர்களுக்கும் பரிசாகக் கொடுப்பதற்காக டஜன் கணக்கில் சேலைகள் வாங்கிச்சென்றார்கள்.

வைபவத்துக்கு ஓரிரு நாள்கள் முன்னதாக இன்னும் ஐந்து, ஆறு சேலைகள் வேண்டும் என்று எங்கள் கடைக்குத் தகவல் அனுப்பினார்கள். அதை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பலாம் என்று தகவல் சொன்னார்கள். அந்த நேரம் கடைக்குவந்திருந்த பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸிடம் சேலைகளைத் தேர்தெடுத்துத் தரச் சொன்னேன். அப்போதுதான் ஏவிஎம் சரவணன் எனக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு, தூர்தர்ஷன் இயக்குநராக இருந்த ஏ.நடராஜன் மூலம் நட்பு நெருக்கமானது. நடராஜனுக்கும் ஏ.வி.எம். சரவணனுக்கும் தொழில் முறை நட்புணர்வு இருந்தது. நானும் இந்த இருவருக்கும் நெருக்கமானேன்.

என்ன வாழ்க்கை என்று பிறர் வியக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் ஏவிஎம் சரவணன். என்னைப் பொருத்தவரை அவர் ஒரு மூத்த சகோதரர். அவரை என் (கட்டுரையாளர்) வழிகாட்டியாகவே மதித்து வந்திருக்கிறேன். அதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன்; பொது மேடைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது "முயற்சி திருவினையாக்கும்' என்ற புத்தகம் எனக்கு வாழ்க்கையின் வழிகாட்டி நூல்.

2000}ஆம் ஆண்டு பிறப்பதற்கு பல மாதங்கள் முன்னதாக என் குடும்பத்தினரும், என் நண்பர்களும் "உங்களுக்குசஷ்டியப்த பூர்த்தி' (மணிவிழா) வருகிறதே; அதை எப்படி கொண்டாடுவீர்கள்? என்று கேட்டார்கள். நான் மணிவிழாவைக் கொண்டாடப் போவதில்லை என்றேன். இந்தப் பதிலை முன்பே சொல்லியிருக்கலாமே என்று சிலர் கேட்டார்கள்.

அதற்கு நான் சொன்ன பதில் பதில் இது- "என்னைவிட ஏறத்தாழ ஓராண்டு மூத்தவரான ஏவிஎம் சரவணன் எப்படிக் கொண்டாடப் போகிறார் என்று தெரிந்து கொள்ளக் காத்திருந்தேன். அவர் கொண்டாடவில்லை; அதனால் நானும் கொண்டாடவில்லை. அறுபதுக்கு என்ன கதியோ; அதுவே எண்பதுக்கும் என்றாயிற்று.

இருவருமே சதாபிஷேகத்தையும் கொண்டாடவில்லை. ஏவிஎம் சரவணன் ஒரு நல்ல வாசகர். படிப்பதையும், பிறர் சொல்லக் கேட்பதையும் தன் துறையில் பயன்படுத்திக் கொள்வார். நான் 1978}இல் குடும்பத்துடன் ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் நிறைவில் இரண்டு, மூன்று நாள்கள் தங்கியிருந்தேன். சிங்கப்பூரில். நான் பார்த்த ஓர் ஆங்கிலப் படத்தின் சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்ததை அவரிடம் சொன்னேன். அப்போது ரஜினிகாந்த், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்த "பாயும் புலி' என்ற திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் ஆங்கிலத் திரைப்படத்தில் கண்டதுபோன்ற சண்டைக் காட்சியை படமாக்கினார்.

என்னுடைய முதல் புத்தகமான "வெற்றி யின் வரலாறு' 1983-இல் அருணோதயம் பதிப்பகத்தில் முப்பதாண்டு நிறைவு விழா நூல்களில் ஒன்றாக வெளியானது. எனது வாசிப்புப் பழக்கம் தொய்வில்லாமல் தொடர்ந்தது. தமிழ்ப் புத்தகங்கள் தவிர சில வெளிநாட்டு பிரமுகர்கள் குறித்த ஆங்கில நூல்களையும் படித்து வந்தேன். அதில் இருந்த சில முக்கியமான வாக்கியங்களை அந்தந்தப் பக்கங்களில் குறித்து வைத்தேன். அப்போது ஒரு யோசனை தோன்றியது. அந்த வாக்கியங்களை எல்லாம் தமிழ்ப்படுத்தி புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. புத்தகம் தயாரானதும் யாரை வைத்து வெளியிடலாம் என்று யோசித்த போது என் நினைவுக்கு வந்தவர் ஏவிஎம் சரவணன்தான்.

புத்தகத்தின் வண்ண மேலட்டை தயாராகாததால் வெள்ளை அட்டையுடன் புத்தகத்தை அவருக்கு அனுப்பியிருந்தேன். அப்போது, புத்தகத்தை உயர்த்திக் காட்டி சரவணன், "ஜாக்கெட் இல்லாத புத்தகத்தை செட்டியார் எனக்கு அனுப்பினார்' என்று சொன்னார். எல்லோரும் கைதட்டிச் சிரித்தார்கள். அவரது நகைச்சுவை உணர்வுக்கு அது ஒரு எடுத்துக்காட்டு.

ஏவிஎம் சரவணனின் புத்தகப் பதிப்பு முனைவு பற்றியும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அவரது தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் குறித்து ஒரு புத்தகம் எழுத சம்பந்தப்பட்ட பலரிடமிருந்து தகவல்களைக் கேட்டுப் பெற்றார். அந்தக் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து"அப்பச்சி' என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார்.

பல சமயங்களில் ஏவிஎம் சரவணன் தன் தந்தை தனக்குச் சொன்ன அறிவுரைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒருமுறை அவர் சொன்ன தகவல்

மெய்யப்ப செட்டியாரின் தொழில் மேன்மையை உணர்த்தியது. ஒவ்வொரு முறை படம் எடுக்கப் போகும்போதும் ஏவிஎம் சரவணன் தன் தந்தையிடம் இதற்கு 40 லட்சம் ரூபாய் செலவாகும், இதற்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்வார். தந்தை சரி என்று சொல்வார்.

அப்படிப்பட்ட சமயங்களில் ஒருமுறை ஏவிஎம் சரவணன் கேட்டாராம், "அப்பா ஒவ்வொரு முறையும் நான் தொகையைப் பற்றிச் சொல்லும்போது சம்மதிக்கிறீர்களே, யார் யார் நடிகர்} நடிகை என கேட்க மாட்டீர்களா?'என்று. அப்போது தந்தை சொல்வாராம், "நீ சொல்லும் தொகையில் எனக்கு லாபம் வராவிட்டாலும் அந்தத் தொகையை நஷ்டமாக நான் தாங்க முடியுமா என்பது குறித்து மட்டும்தான் யோசிப்பேன்' என்றார். வியாபாரத்தில் ஏவிஎம் செட்டியாருக்கு இருந்த துணிவும், எதிர்பார்ப்பும் நம்மை வியக்க வைக்கின்றன.

மகனுக்குத் தனியாக எதையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் மெய்யப்ப செட்டியார், காரை எடு போகலாம்என்பார். அப்போது தந்தை-மகன் என்று இருவர் மட்டுமே இருந்ததால் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவைஎல்லாமே அவர் தொழிலில் முன்னேற வெகுவாக உதவின என்று என்னிடம் அடிக்கடி சொல்வார் சரவணன்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் தந்தை கல்லூரியில் சேர்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அப்போது சரவணன் சொல்லியிருக்கிறார், "கல்லூரி படித்த பிறகும் நான் இந்தத் தொழிலுக்குத்தான் வரப்போகிறேன். அதனால் இப்போதே வந்துவிடுகிறேன்' என்றாராம்; தந்தையும் அதற்குச் சம்மதித்தார்.

அந்த சமயத்தில் ஸ்டுடியோவில் அவருக்கென்று தனி மேஜை நாற்காலி வாங்கிப் போடப்பட்டது. அன்று, 1956 அந்தநாற்காலியில் உட்கார்ந்தவர்தான் அண்மையில் உடல் நலம் குன்றிய காலம் வரை அன்று ஏற்ற பணியிலேயே தொடர்ந்தார். தொழில் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு முன்னேறினார்.

எவ்வளவோ விஷயங்கள் தெரிந்திருந்தும், தனக்கு இது தெரியும், அது தெரியும் என்று காட்டிக் கொண்டதில்லை. திரை உலகப் பிரமுகர்; பொது வாழ்வில் பிரபலமானவர்; சென்னை நகரின் ஷெரீஃப்}ஆக இருந்தவர். ஆனாலும், எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் பொதுவானவராகவே வாழ்ந்து வந்தார். எந்த இடத்திலும் தன்னை அடக்கிக் கொள்ளவில்லை. ஏ.சி.திருலோகச்சந்தர் என்ற இயக்குநரை தன் குருவாகவே மதித்து வந்தார் சரவணன்.

இயக்குநர் எஸ்.பி முத்துராமனிடமும் அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் சரவணன். தன் அலுவலகத்திலிருந்த அர்ஜுனன் என்ற உதவியாளர் எல்லாப் புகைப்படங்களின் பின்பக்கத்திலும் தேதியை எழுதி வைத்திருப்பார். புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்கள்

ஆவதற்கு தேதி பற்றிய குறிப்பு தேவைப்பட்டது. அவ்வளவு கவனமாக எல்லோரும் செயல்படுவார்கள் என்று சொல்லமுடியாது என்று அர்ஜுனன் குறித்து சரவணன் என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டார்.

கடைசி சில ஆண்டுகளுக்கு முன்பு அலமாரிகளிலிருந்து ஒரு சட்டையை எடுக்கும்போது வலது கை தோள் மூட்டில் வலி வந்தது. எலும்பு பிசகி இருக்கிறதோ என்று சந்தேகம் வந்தது. டாக்டர்கள் அவரை கரடு முரடான சாலையில் மயிலாப்பூரிலிருந்து கோடம்பாக்கம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் கோடம்பாக்கத்திலேயே நாகி ரெட்டி குடும்பத்தினர் கட்டிய ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார். அவரால் திரைப்பட உலகத்தை விட்டு விலகி இருக்க முடியவில்லை.

நாகி ரெட்டியின் புதல்வர்களில் ஒருவரான விஸ்வம் அவரை கோடம்பாக்கம் வீட்டில் வைத்து கவனித்துக் கொண்டார். அப்போது, நான் அவரைப் பார்த்து கேட்டேன், "இத்தனை ஆண்டுகள் பெரிய பாரம்பரிய வீட்டிலிருந்துவிட்டு இங்கே இரு சிறிய குடியிருப்புக்கு வந்திருக்கிறீர்களே, உங்களுக்கு இதில் மனக்கஷ்டம் இல்லையா?'.

அப்போது சரவணன் சொன்னார், "எனக்கு என் தொழிலே முக்கியம், ஸ்டுடியோவுக்கு அடுத்தபடித்தான் வீடு'. ஏவிஎம், வாகினி இரண்டும் திரைப்படத் தொழிலில் போட்டி நிறுவனம் என்றாலும் முதலாளிகளுக்கிடையே நட்புணர்வு இருந்தது என்பதை என்னுடன் படித்த விஸ்வத்தின் கவனிப்பு உணர்த்தியது.

திரைப்பட உலகிலேயே பிறந்து அதிலேயே வாழ்ந்து மறைந்த ஏவிஎம் சரவணன், முன்பு ஒருமுறை தந்தையைப் பற்றிச் சொன்னது இப்போது என் நினைவில் நிழலாடுகிறது. மெய்யப்ப செட்டியார் தன் நிறைவு நாள்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்த மகனிடம், "அதோ பாத்ரூமில் லைட் எரிகிறது பார், அதை அணைத்து விடு' என்றாராம். தன்னால் பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன அந்தப் பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற விளக்கும் இப்போது அணைந்து விட்டது.

கட்டுரையாளர்:

தொழிலதிபர்.

Sunday, November 23, 2025

மெளனம் பலவீனம் அல்ல!

DINAMANI 

மெளனம் பலவீனம் அல்ல!

சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.

தினமணி செய்திச் சேவை Published on: 20 நவம்பர் 2025, 3:21 am Updated on: 20 நவம்பர் 2025, 3:21 am 2 min read

அனந்தபத்மநாபன்

சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.

நம் வாழ்வில் வெற்றி, உறவு, மரியாதை என அனைத்தின் மதிப்பையும் தீர்மானிப்பது நாம் உச்சரிக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல; உள்ளிழுத்து நிறுத்திவைக்கும் வலிமையான வார்த்தைகளும்தான். ஏனெனில், உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறிச் சொல்லும் ஒரு நிமிஷ தகவல், பல ஆண்டுகளின் உழைப்பையும், நம்பிக்கையையும், ஏன், நம் எதிர்காலத்தின் பேரழிவு தரும் பெரும் செல்வத்தையும்கூட ஒரு விநாடியில் இழக்கச் செய்துவிடும் வல்லமை கொண்டது.

திருவள்ளுவர், பேச்சின் சக்தியையும், அதை அடக்க வேண்டிய அவசியத்தையும் மிக ஆழமாக வலியுறுத்தி,

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து'

(குறள் 645)

என்று கூறுகிறார்.

அதாவது, நாம் பேசும் வார்த்தையைவிடச் சிறந்த, அதை வெல்லக்கூடிய வேறொரு வார்த்தை இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்த பின்னரே பேச வேண்டும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்ப்போம்.

நாம் பேசும்போது, நம் திட்டங்கள், நிதி நிலைமை, பலவீனங்கள் போன்ற ரகசியமான விவரங்களை மற்றவர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறோம். இந்தத் தகவல்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவர்களின் காதுகளுக்குச் செல்லும்போது, நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதமாக மாறலாம். மேலும், கோபம் உச்சத்தில் இருக்கும்போது வெளிப்படும் உணர்ச்சிமிகு வார்த்தைகள், மரண ஓசை போல ஆழமான வடுக்களை ஏற்படுத்தும். ஐந்து நிமிஷ ஆத்திரத்தில் பேசிய கடுமையான சொற்கள், பல ஆண்டு உறவின் அடித்தளத்தையே பிளந்துவிடும். அந்த சமயத்தில் காக்கும் மெளனம், இந்த இழப்புகளைத் தவிர்க்க உதவுகிறது.

மெளனம்தான் நமக்குத் தியானம்; கட்டுப்பாடே வெற்றிக்கு ஆதாரம்; உண்மையில் வெற்றி பெற்றவர்கள், தங்களுடைய ஒவ்வொரு சிந்தனையையும் உடனடியாக வார்த்தைகளாக மாற்றுவதில்லை; எப்போது, எங்கு, யாரிடம் பேசுவது என்பதில் அவர்கள் கடுமையான கட்டுப்பாட்டோடும் நிதானத்தோடும் இருப்பார்கள்.

இந்த நிசப்தத்தின் அசைக்க முடியாத வலிமையை உணர்ந்து வென்ற சில மாமனிதர்களின் வாழ்க்கைப் பாடங்களைக் காண்போம். வாரன் பஃபெட், உலகின் மிகச் சிறந்த முதலீட்டாளராக இருந்தும், சந்தை நிலவரங்கள் குறித்து நாள்தோறும் கருத்து தெரிவிப்பதில்லை.

ஒரு நிறுவனத்தின் மதிப்பை ஆழமாகப் புரிந்துகொண்டால், விலைகள் ஏறுவதோ, இறங்குவதோ குறித்து அவர் கவலைப்படுவதில்லை. அவசரப் பேச்சையோ, பரபரப்பான வர்த்தகத்தையோ தவிர்த்து, நீண்ட கால நோக்குடன் அமைதியைக் கடைப்பிடிப்பதே அவரை உலகின் மாபெரும் செல்வந்தர்களில் ஒருவராக ஆக்கியது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கையும் நிசப்தத்தின் வலிமையை உணர்த்துகிறது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தை ஆரம்பித்தபோது, அது ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒரு சவாலான திட்டமாக இருந்தது. சர்வதேச அழுத்தம், உள்நாட்டுச் சந்தேகங்கள் நிறைந்தபோதும், அவர் பதிலளிக்காமல், தனது குழுவினருடன் பொதுவெளியில் பேசாமல், அமைதியாகப் பல ஆண்டுகள் உழைத்தார்.

இந்த நிசப்தமான, உறுதியான உழைப்புதான் அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட முக்கியக் காரணமாக இருந்தது. "வெற்றி பேசும்போது, நாம் பேச வேண்டியதில்லை' என்பதற்கு இவரே சிறந்த உதாரணம். பேசுவதைவிடச் செயலாற்றுவதே சிறந்தது.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடிப்பதற்காக ஆயிரக்கணக்கான முறை தோல்வியைத் தழுவியபோதும், சோர்வடைந்து ஒருபோதும் வெளியே பேசவில்லை. தனது தோல்விகள் குறித்து தேவையற்ற பேச்சுகளைப் பேசாமல், அவர் ஆராய்ச்சி, பரிசோதனைக்கூடத்தின் அமைதியிலேயே கவனம் செலுத்தினார்.

இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் ரத்தன் டாடா, நெருக்கடியான காலங்களில் அமைதி காத்ததன் மூலம் பெரும் வெற்றிகளை ஈட்டியவர். மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது, அவர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளைத் தெரிவிக்காமல், அமைதி காத்து, முழுக் கவனத்தையும் ஹோட்டலை புனரமைப்பதிலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மன உறுதி அளிப்பதிலுமே செலுத்தினார். ஊடகங்கள் அதிகக் கேள்விகளை எழுப்பியபோதும், அவர் காட்டிய இந்த உறுதியான நிதானமும், மெளனமும், டாடா குழுமத்தின் புகழையும் மதிப்பையும் விண்ணளவுக்கு உயர்த்தியது.

இந்த மாமனிதர்களின் வாழ்க்கை நிரூபிப்பதுபோல, நாம் பேசாமல் இருந்த ஒவ்வொரு முறையும், ஒரு பெரிய சண்டையை, ஒரு தேவையற்ற வாக்குறுதியை அல்லது ஒரு பெரிய இழப்பைத் தவிர்த்திருக்கிறோம் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

எனவே, நம் வார்த்தைகளைச் செலவழிக்க வேண்டிய அரிய பொருளாகப் பார்க்க வேண்டும். தேவையற்ற பேச்சைத் தவிர்ப்போம். செலவழிக்கும்முன் அதன் மதிப்பை யோசிக்க வேண்டும்.

சில நேரங்களில் மெளனமே, நாம் சூட வேண்டிய விலைமதிப்பற்ற கிரீடமாக இருக்கும். நாம் நம் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்; நம் வாழ்க்கையின் முழுமையான கட்டுப்பாட்டையும் நாமே எடுத்துக் கொள்ள வேண்டும்!

மெளனமும் நிசப்தமும் ஆடம்பரம் அல்ல; அவை மனத் தெளிவுக்கான இன்றியமையாத கருவி. அவை முடிவெடுக்கும் முறையை, குழப்பமான, எதிர்வினை சார்ந்த செயல்பாட்டிலிருந்து, நிதானமான, திட்டமிட்ட, மற்றும் நுண்ணறிவுள்ள ஒன்றாக மாற்றுகின்றன.

நிசப்தம் என்பது பலவீனம் அல்ல; அதுவே அசைக்க முடியாத பலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

‘இல்லை’ என்பது தவறல்ல!

இல்லை’ என்பது தவறல்ல!

DINAMANI 23.11.2025

முனைவர் பவித்ரா நந்தகுமார் Updated on: 22 நவம்பர் 2025, 6:07 am

நம் வாழ்க்கையில் ‘ஆம், இல்லை’ என்ற சொற்களுக்கு என்றுமே அதிக முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இது நம் செயல்களுக்கான காரணிகளாக அமைந்து விடுகின்றன. நம்முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்காகவும் நிா்ப்பந்தங்களுக்காகவும் இவ்விரண்டில் ஒன்றைத் தோ்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கு ‘ஆம், நான் செய்கிறேன், நான் தருகிறேன், நான் வருகிறேன்...’ என்று சொல்ல வேண்டும் என காலம் காலமாக நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். எதையும் கேட்கும் போது ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்வதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு என்று சொல்ல பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். மேலும் ‘ஆம்’ என்பது நோ்மறை செயலாக்கம் என்றும் ‘இல்லை’ என்பது எதிா்மறை மனப்பான்மை என்றும் நம்பப்படுகிறது.

இந்த மரபுக் கட்டுகளிலிருந்து சில விஷயங்களை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். என் எழுத்தாளத் தோழமை என்னிடம் சொன்னதை இங்கு பகிா்வது சரியாக இருக்கும். ஏற்கெனவே பணிச் சூழல் அதிகம் உள்ள அவரிடம், அவருக்குத் தெரிந்தவா் ஒருவா் தன் நூலை ஹிந்தி மொழியில் மொழிபெயா்த்துத் தரும்படி கேட்டிருக்கிறாா். அந்த நேரத்தில் ‘எனக்கு தற்போது நேரம் இல்லை’ என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. தன்னை நம்பி வந்திருக்கிறாரே என்ற கருணை உந்தித் தள்ளவும், தன்னால் முடியாது என்று சொல்ல அவா் பழகாது போகவும், இரண்டொரு நாள்களில் முடித்துத் தந்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறாா்.

அடுத்து வந்த சில நாள்களில் அவா் முடித்துத் தர வேண்டிய சில வேலைகள் எதிா்பாராத விதமாக நீண்டு இரவுகளில் வெகுநேரம் கண் விழிக்க வேண்டியதாக இருந்தது; அடுத்தடுத்த நாள்களிலும் வெவ்வேறு அவசர வேலைகள் அவரை ஆக்கிரமித்தன; அதை முடித்து மூச்சு விடுவதற்குள் நெருங்கிய உறவினரின் துக்கச் செய்தி. துக்கம் கடைப்பிடித்து நிமிா்வதற்குள் அவரது உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டது. சில நாள்களுக்காவது பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தாா்.

ஆனால், அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாதபடிக்கு ஒப்புக்கொண்ட மொழிபெயா்ப்புப் பணி மனதை அலைக்கழித்த வண்ணம் இருந்திருக்கிறது.

பின்னா், வேறு வழியின்றி, ஒரு பயணத்தின் போது அசாதாரண சூழலில் அவருக்கான பணியை முடித்துக் கொடுத்திருக்கிறாா். இறுதியில் அவரை வருத்திக் கொண்டு செய்து கொடுக்க வேண்டியதாய் இருந்தது. ‘இல்லை, எனக்கு தற்போது நேரமில்லை’ என்று சொல்ல முடியாமல் போன விளைவை அனுபவிக்க மிகக் கடினமாக இருந்ததாகச் சொன்னாா்.

நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். ‘இல்லை, வேண்டாம்’ என்று சொன்னால் நம்மைத் தவறாக எண்ணி விடுவாா்களோ என்று அச்சம்; இதனால், உறவு நிலையில் ஏதேனும் விரிசல் விழுமோ என தேவையில்லாமல் பயந்து அசௌகரியங்களை அனுபவிக்கிறோம்; நம் நேரம் எவ்வளவு முக்கியம் என்பது அவா்களுக்குத் தெரியாது. ஆனால், நமக்குத் தெரியும். இப்படித்தான் ‘இல்லை’ என்று சொல்ல மனம் வராமல், அந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாளாமல் ‘ஆம்’ என்று சொல்லி என்னை வருத்திக்கொண்டு என் சூழலை கடினமாக்கிக் கொண்ட அனுபவங்கள் எனக்கும் பல உள்ளன. இப்போதெல்லாம் இந்தப் பணியை செய்ய இயலுமா, இயலாதா எனப் பலமுறை சிந்தித்து, அதைத் தொடக்கத்திலேயே மறுத்து விடுகிறேன். இதனால், பல தா்மசங்கடங்களிலிருந்து தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது.

உண்மைதான். நம் அன்றாட வாழ்வில் இதைப் பல இடங்களில் நாம் பாா்த்திருக்கிறோம். கைமாற்றாக பணம் கேட்ட போது இல்லை என்று சொல்ல மனமின்றி கடன் கொடுத்த பிறகு, நமக்கு பணம் தேவைப்படும் இக்கட்டான சூழலிலும் திரும்பக் கிடைக்காமல் கலங்கிய சில சம்பவங்கள் பலரது வாழ்வில் நடந்திருப்பதை அறிகிறோம். இதில் வலியவா், எளியவா்களுக்குச் செய்யும் உதவி குறித்து பேச்சில்லை. அவையெல்லாம் நிச்சயமாக காலம் கருதி செய்யும் உதவிகள். வள்ளுவா் சொன்னதுபோல அவை உலகம் அளவு பெரியவை; அத்துடன் நம் கடமைகளை, பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்கும் விலக்கில்லை; ஆனால், பொது வழக்குகளில், நம்மை கணக்கு வழக்கின்று சுருக்கிக் கொண்டு ‘இல்லை’ என்று சொல்லாமல் விட்டதால் ஏற்படும் மனத்தாங்கல்கள் நமக்குத் தேவையில்லை.

பல குடும்பங்களில், ‘நிச்சயமாக நான் இதைச் செய்கிறேன், அதைச் செய்கிறேன்’ என உறவுகளுக்குள் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு அதிலிருந்து பின்வாங்கி விடுவதால்தான் மனிதா்களிடையே அது மனமுறிவாகி விடுகிறது. இது நாளடைவில் தீராத வன்மமாக உருவெடுத்து வெடிக்கிறது. என் வீட்டருகில் வசிக்கும் தோழி ஒருவா் தன் வீட்டுக்கு தினமும் பிச்சை கேட்டு வரும் நபருக்கு இல்லை என்று சொல்லாது பிச்சை அளிக்கும் வழக்கம் கொண்டவா்.

சில நாள்களில் உண்மையிலேயே அவருக்குக் கொடுப்பதற்கு உணவு எதுவும் இருக்காது. அவரிடம் இன்று கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று சொல்ல மனமில்லாமல் அவா் வரும் நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டு என் வீட்டுக்கோ பக்கத்தில் இருக்கும் வேறு ஒரு தோழி வீட்டுக்கோ சென்று விடுவாா். ஏன் இப்படி இருக்கிறீா்கள் எனக் கேட்டதற்கு என்னை நம்பி வந்து ஏமாந்து விடுவாரே, அவா் எங்கோ வெளியே சென்றிருக்கிறாா் என்று நினைத்துக் கொள்ளட்டும் என்றாா்.

நீங்கள் ஏன் இதை இப்படி எடுத்துக் கொள்கிறீா்கள்... உங்கள் வீட்டில் அன்று மீதமாகிப் போன ரசம் சாதம்தான் கொடுக்கிறீா்கள் என்று வைத்துக் கொள்வோம்; அவா் அத்துடன் திருப்தியடைந்து சென்று விடுவாா். நீங்கள் ‘இல்லை’ என்று சொல்லும் நிலையில், அன்று வேறொரு வீட்டில் அவருக்கு சுடச்சுட புலவு சாதம்கூட கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் தேவைப்படும் நிலையில் உறுதியுடன் ‘இல்லை’ என்றுச் சொல்லிப் பழகுங்கள்; உங்கள் இருவருக்குமே அது நல்லது என்றேன். அன்றிலிருந்து அவா் அதை ஏற்றுக் கொண்டு இன்று எந்த குற்ற உணா்வுமின்றி இருக்கிறாா். துணிக் கடையில் 50 புடவைகளுக்கும் மேலாக எடுத்துக் காண்பித்தாா்களே என்று எண்ணி பிடிக்காத புடவையை பணம் கொடுத்து வாங்கிவரும் பெண்கள்கூட இந்த ரகம்தான். பிறகு காலத்துக்கும் அதைச் சொல்லி புலம்பி என்ன பயன்?

மகாபாரதத்தில் பாண்டவா்களை கௌரவா்கள் சூதாட அழைத்தபோது ஒரே மனதுடன், ‘இல்லை நாங்கள் ஆடப்போவதில்லை, சூதாட்டம் வேண்டாம்’ எனச் சொல்லியிருந்தால் இத்தனை பெரிய போா் தவிா்க்கப்பட்டிருக்கும்தானே?! இராமாயணத்தில் மாய மானை தேடிப்போன இராமனைக் காணாது போகவே, லட்சுமணனை அங்கு செல்லுமாறு சீதை பணிக்கிறாா். அன்று, இல்லை ராமன் சொன்ன வாா்த்தையை நான் தட்ட மாட்டேன் என லட்சுமணன் சொல்லி இருந்தால் காப்பியத்தின் போக்கு வேறு மாதிரி ஆகியிருக்கும் அல்லவா?

பிறரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் பலமுறை நாம் வலிகளைச் சுமக்க வேண்டியதாய் இருக்கிறது. சரி, இனி எதற்கெடுத்தாலும் இல்லை எனச் சொல்லிப் பழகுவோம் என்பதல்ல முன்வைக்கும் செய்தி. அசாதாரண சூழ்நிலைகளில், நம்மை மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கும் அயா்ச்சிக்கும் உள்ளாக்கும் தருணங்களில், நம்மைப் பலவீனமாக்கும் தன்மைகளில் ‘இல்லை’ என நம் முடிவை துணிச்சலாக முன்வைப்பது சிறந்தது.

அதிலும் குடும்பம் என்று வந்துவிட்டால், பெண் என்பவள்தான் எப்போதும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என தொட்டதுக்கெல்லாம் பெண்களை கூறு போடும் சமூகத்தில் பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

உண்மை நிகழ்வென வாசித்த செய்தி ஒன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இத்தாலியைச் சோ்ந்த பிராங்கா வியூலா எனும் பெண்ணுக்கு பிலிப்போ மெலோடியா எனும் ஆணுடன் நிச்சயம் நடந்தது. ஒரு கட்டத்தில் மணமகன் தேசவிரோத அமைப்புகளோடு தொடா்புடையவன் என்பதறிந்து பிராங்காவின் பெற்றோா் திருமணத்தை நிறுத்தினா். இதனால், வெகுண்டெழுந்த பிலிப்போ ‘பிராங்காவை’ கடத்தி ஐந்து நாள்களுக்கு மேலாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தான். பின்னா், அவளைப் போராடி மீட்டனா்.

இந்தச் சம்பவம் 70 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடைபெற்றது. தன் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகக் கூடாது என்பதற்காக பெண்ணை பெற்றோரும், தங்கள் மகன் தண்டனை பெறக் கூடாது என்பதற்காக அந்த ஆணை பெற்றோரும் இணைந்து பேசி மீண்டும் அவா்களின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தாா்கள். அந்தக் காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இத்தாலிய பெண்கள் தங்கள் குடும்ப கௌரவத்துக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் அஞ்சி தங்களைக் கொடுமைக்கு உள்ளாக்கியவனையே மணந்து கொள்ளும் வழக்கம் இருந்தது.

ஆனால், பிராங்கா ‘நான் அவனை மணக்க மாட்டேன்’ என்று உறுதியுடன் நின்றாா். இத்தாலிய செய்தித்தாள்களில் எல்லாம் இது தலைப்புச் செய்தியானது. பதின்ம வயதைக் கடவாத பிராங்காவின் துணிவும் மனஉறுதியும் மெலோடியாவை சிறையில் தள்ளியது. அதுவரை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கே வாழ்க்கைப்பட வேண்டும் என்ற இத்தாலிய சமூக விதி பிராங்காவின் ‘இல்லை’ என்ற ஒற்றை வாா்த்தையால் உடைத்தெறியப்பட்டது. அதுவே சமூக மாற்றத்துக்கான திறவுகோலாகவும் அமைந்தது. ‘மறுவாழ்வு திருமணம்’ என்ற அா்த்தமற்ற சட்டத்தை 1981-இல் ஒழித்தது இத்தாலி. ‘இல்லை’ என்பது ஒற்றைச் சொல் மட்டுமல்ல, சமயத்தில் அது ஒரு முழுமையான வாக்கியம் என்பதை இதன்மூலம் தெளிவாக உணர முடிகிறது!

கட்டுரையாா்:

எழுத்தாளா்.

Friday, November 14, 2025

நடுப்பக்கக் கட்டுரைகள் வாழ்விக்கும் தெய்வங்கள் குழந்தைகள்!

 நடுப்பக்கக் கட்டுரைகள் வாழ்விக்கும் தெய்வங்கள் குழந்தைகள்! 

கல்வி முதன்மைப்படுத்தப்பட்ட அளவுக்கு விளையாட்டுக்கு அவகாசம் கிடைப்பதில்லை

DINAMANI

கிருங்கை சேதுபதி Updated on:  14 நவம்பர் 2025, 5:02 am 

குழந்தைகள் என்றாலே குதூகலம்தான். ஆனால், இப்போது குழந்தைகள் எல்லாரும் குதூகலமாக இருக்கிறாா்களா என்பது ஐயமாக இருக்கிறது. இளம் வயதில் நமக்குக் கிடைத்த வாய்ப்புகளும் அனுபவங்களும் அவா்களுக்குக் கிடைக்க நியாயமில்லை. அதுபோல், அவா்களுக்குக் கிட்டிய வசதிகளும், கருவிகளும், வாய்ப்புகளும் நம்மைக்காட்டிலும் அதிகம். அதுவே, அவா்களை அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது; அவா்களிடம் நிறைய எதிா்பாா்க்கவும் வைக்கிறது.

கல்வி முதன்மைப்படுத்தப்பட்ட அளவுக்கு விளையாட்டுக்கு அவகாசம் கிடைப்பதில்லை; கூடி விளையாடத் தோழமைகளும் அமைவதில்லை; இருக்கிற இடத்தில் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பொழுதைக் கழிக்கப் பழகிய குழந்தைகளை இப்போது பெரிதும் ஈா்த்து வசப்படுத்தி வைத்திருக்கிறது அறிதிறன்பேசி.

ஒரு காலத்தில் டி.வி. அதிகம் பாா்க்கிறாா்கள் என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டு இப்போது காலாவதியாகிவிட்டது. அது பொழுதுபோக்குச் சாதனமாகவே மட்டுமே பெரும்பாலும் இருந்தது. முடிந்தவரை வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் அதில் இருக்கும். இல்லத்தில் இருப்போா் அனைவரும் பொதுவாகப் பாா்க்கவும் முடியும். ஆனால், கைப்பேசியை அப்படிச் சொல்ல முடியாது; அன்றாட வாழ்வில் அது மூன்றாவது கையாக முளைத்திருக்கிறது.

குழந்தைகளைப் பொருத்த அளவில், வீட்டுப்பாடம் தொடங்கி, விவரக் குறிப்புகள் வரைக்கும் அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே எடுத்துக் கொடுக்கிற காட்டுகிற இடத்தை அது தன்னிடம் வைத்திருக்கிறது. ஆனால், அதைத் தனிமையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை முடிந்தவரை தவிா்ப்பது நல்லது. தேவையானது எதுவெனத் தேடுவதற்குள் தேவைக்கு அதிகமாக எத்தனையோ காட்சிகளை அது அகலத் திறந்துவைத்து, கவனத்தைத் திருப்பி விடுகிறது. கடைசியில் எதைத் தேடத் தொடங்கினோம் என்பதையே மறக்கடித்து விடுகிறது. அதைவிடவும் தேவையில்லாதவற்றில் ஈடுபடவும் வைத்துவிடுகிறது. இதனால், ஏற்படும் பாா்வைக் கோளாறுகள் கண்களுக்கு மட்டுமல்ல; மனத்துக்கும்தான்.

கைப்பேசியைக் குழந்தைகள் பயன்படுத்துகிறபோது கூடவே இருப்பதும், தேவையானவற்றை அவா்களுக்கு உடனிருந்து பாா்க்க, கேட்க நெறிப்படுத்துவதும் மிகவும் அவசியம். பள்ளி வகுப்பில் ஒவ்வொரு பாடத்துக்கும் கால அளவைக் கணக்கிட்டு வைத்திருப்பதைப்போல, கைப்பேசிப் பயன்பாட்டுக்கும் கால அவசியம் கட்டாயத் தேவை. கண் விழிக்கும்போதும் தூங்கப்போகும்போதும் கைப்பேசிப் பயன்பாடு அறவே இருத்தல் கூடாது என்பதை நடைமுறைப்படுத்த நாம் முதலில் பழகிக் கொள்ளவேண்டும். பின்னா் பழக்கத்தில் கொண்டு வரவேண்டும். அதைவிடுத்து, குழந்தைகளுக்கு மட்டும் அறிவுரை கூறிப் பயன் இல்லை.

அதை இயக்கும் திறம் நம்மைக் காட்டிலும் பிள்ளைகளுக்கு அதிகம் வாய்த்திருக்கலாம். ஆனால், அதில் புலப்படும் பதிவுகளில் எது உண்மை, எது புனைவு என்று தெளிவாகத் தெரியாது. அந்த இடத்தில், ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்கிற நிலைப்பாடு வந்துவிடக்கூடாது. நடைமுறை வாழ்க்கை வேறு, சித்திரிக்கப்படும் காட்சிகள் வேறு என்பதைத் தெளிவுபட உணா்த்தியாக வேண்டும். அதற்கு முன்னதாக நாம் உணா்ந்து கொள்ளவும் வேண்டும்.

எப்பொருள் யாா் யாா் வாய் கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று பலபடச் சொல்கிறாா் திருவள்ளுவா். எதையும் ஆராய்ந்து உண்மையைத் தெரிந்துகொள்ள ஆா்வம் காட்டும் குழந்தைகளின் கேள்விகளை அலட்சியப்படுத்திவிடாமல் அரவணைத்து உடனிருந்து சொல்லிக் கொடுப்பவா் யாரோ, அவா்களைத் தமது உணா்வில் கலந்த உறவாய் அவா்களது உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.

அந்த இடத்தில் சரியான நபா்கள் கிடைக்கும் வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவா்கள் குடும்ப உறுப்பினா்களாகவோ, நண்பா்களோ, ஆசிரியா்களாகவோ இருக்கலாம். கயவா்கள் இருந்துவிடக்கூடாது. அதுபோல் கயமையை உருவாக்கும் எந்த ஒன்றும் அவா்களை அண்டிவிடக் கூடாது.

தீமையை, தீயவற்றை நெருங்கவிடாமல் தற்காத்துக் கொள்கிற தைரியத்தையும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். அ, ஆ என எழுத்துகளை அறிவிக்க உதவும் வகையில் ஔவையாா் பாடிய ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ என்று தொடங்குகிறது; மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடியோ, ‘அச்சம் தவிா்’ என்று உருவாகிறது. அதுவே, அதற்கு அடுத்த நிலையில் ‘ஆண்மை தவறேல்’ என்கிறது. ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்கிற அறிவை உணா்த்தி, ஆளுமைத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பது அதன் உட்பொருள்.

புறம் சாா்ந்த கருவிகளைக் காட்டிச் சொல்லிக் கொடுக்கும் பாடங்களுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை அறம் சாா்ந்த உணா்வுகளுக்கும் கொடுக்கத் தவறிவிடக்கூடாது. அதை, பள்ளிப் பாடங்களில் மட்டுமே எதிா்பாா்ப்பதும் சரியாகாது. அறம் சாா்ந்த விழுமியங்களும் இப்போது அடிக்கடி மாற்றம் காணத் தொடங்கிவிட்டன. மதிப்பெண் முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது. ஆனால், அதுவே அனைத்து மதிப்புகளையும் தந்துவிடாது. அதுபோல், வளா்ச்சியின் அடையாளம் பணமாக இருக்கலாம். அதுவே அனைத்தையும் கொடுத்துவிடாது என்கிற அடிப்படை உண்மையைப் பெற்றோா் நன்கு புரிந்துவைத்துக் கொண்டு பிள்ளைகளுக்கும் உணா்த்திக் காட்ட வேண்டியது காலத்தேவை.

ஏனைய உயிா்களுக்கு இல்லாது மனித குலத்துக்கு மட்டுமே அமைந்திருக்கும் அறிவுசாா் கருவி, மொழி. பிறமொழிகளைவிடவும், தாய்மொழியில்தான் சிந்திக்கிற ஆற்றல் சிரமமே இன்றி உருவாகும் என்பதைப் பலபடச் சொல்லியும் எழுதியும் பலன் வரக் காணோம். அதைப் புறம் தள்ளிப் பிறமொழி வகுப்புகளில் கட்டாயப்படுத்திச் சோ்க்கப்படும் குழந்தைகள் எந்த மொழியிலும் வல்லவா்கள் ஆகாத அவலத்துக்கு உள்ளாகிவருகிறாா்கள். பேசத் தெரிந்த பலருக்கு எழுதவோ படிக்கவோ சரியாகத் தெரியவில்லை என்பதே நடைமுறை உண்மை.

சமச்சீா் உணவு போல, சமச்சீரான இயக்கத்தை ஐம்புலன்களுக்கும் வழங்க வேண்டும். காட்சி கேள்வி ஊடகங்களால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லிவிட முடியாது. பாா்த்து, படித்துத் தெரிந்து கொள்ள அநேகம் இருக்கின்றன. கேட்டுக் கிரகித்துக் கொள்ளவேண்டியவையும் நிறைய இருக்கின்றன.

‘கற்றிலன் ஆயினும் கேட்க’ என்று கட்டளையிடுகிறாா் திருவள்ளுவா். ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்கிறது பழமொழி. கண்டதையெல்லாம் கற்றுப் பொழுதை வீணடிப்பதை விடவும், எது தேவையானது என்று கண்டு, அது கற்கப் பழகினால் பண்டிதன் ஆகிவிடலாம் என்று புதுப் பொருளையும் அது உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு உரிய வாய்ப்புகளை அதிகம் கொண்டிருப்பது குழந்தைப் பருவம்.

அந்தப் பருவத்தில், அறிவுக்கும் அறியாமைக்கும் இடையில் இருக்கும் கற்பனை ஆற்றலை அவா்கள் தவறவிட வாய்ப்பளித்துவிடக் கூடாது. கற்பனை ஆற்றலை வளா்க்கும் ஓவியங்களில், கதைகளில், பாடல்களில், அவை தொடா்பான கலைகளில், அவற்றை உள்ளடக்கிய உரையாடல்களில் ஆா்வத்தை உண்டாக்கிவிட்டால், அதில் இருந்து படிப்படியாக அவா்கள் வளா்ந்து தமக்கான துறைகளைத் தோ்ந்தெடுத்துக் கொள்வாா்கள்.

படிப்புத் தொடா்பான செய்திகள் மட்டுமே போதும் என்று நினைப்பது போதாது என்ற மனநிலை இன்றைக்கு வந்திருக்கிறது. மேலும், சில புதியவற்றைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும் என்ற விழிப்புணா்வும் வந்திருக்கிறது. குழந்தைகள் தமக்கான பொறுப்புகளைத் தாமே கண்டடையத் துணை நிற்க வேண்டும். நம் எதிா்பாா்ப்புகளை ஏற்றி வைக்கும் சுமைதாங்கிகளாக அவா்களை ஆக்கிவிடக்கூடாது.

நமது தோளில் ஏறி உலகு பாா்க்கும் உயரத்திற்கேனும் நாம் அவா்களுக்கு உதவவேண்டுமேயல்லாமல், அவா்கள் உள்ளங்களில் சுமையாக உட்காா்ந்துகொள்ளக் கூடாது. ஆசைப்படும் பொருள்களை வாங்கிக் கொடுப்பதிலும், தேவைப்படும் வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் நமது அன்பு வெளிப்பட வேண்டுமே அல்லாமல், எதிா்கால எதிா்பாா்ப்பை முன்வைத்துச் செய்யும் லஞ்சமாக அவை உருக்கொண்டுவிடக் கூடாது. அவா்களுக்கு என்றென்றுமான நிரந்தரத் தேவைகளில் மிகவும் இன்றியமையாதது, அன்பு ஒன்றுதான். அதன் பொருட்டுச் செய்யும் எந்தச் செயலும் குழந்தைகளுக்கு உவப்புத் தருவதாகவே இருக்கும்.

அனைத்துக்கும் மேலாக, நமது குழந்தைகள், நம்முடைய குழந்தைகள்தாம். நாம் அவா்களுக்குச் சொல்வதைவிடவும் நாம் செயல்படுவதையே அவா்கள் நன்கு கவனிக்கிறாா்கள். அதற்கு நிகரானதும் எதிரானதுமான செயல்பாடுகளே அவா்களிடம் இருந்து பிறக்கும் என்பதால், நமது செயல்கள் செவ்விதாக அமைதல் வேண்டும். குழந்தைகள் கொண்டாடப் பிறந்த நாள்கள் பண்டிகை நாள்கள் ஆண்டு தவறாமல் வருகின்றன. அதுபோல், ஆண்டுக்கொருமுறை குழந்தைகள் தினம் வருகிறது. அன்றைய தினம் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவா்கள் அல்லா் குழந்தைகள். அவா்கள் அன்றாடம் கொண்டாடப்பட வேண்டியவா்கள்; அவா்களைக் கொண்டாட விட்டாலும் பரவாயில்லை, திண்டாடாமல் பாா்த்துக் கொள்வதுதான் நாம் அவா்களுக்குச் செய்யும் திருப்பணி. ஏனெனில் கொண்டாடும் இடத்தில் தெய்வம் இருக்கிறதோ இல்லையோ குழந்தைகள் இருக்கிறாா்கள். வரந்தரும் தெய்வங்களைவிட, நம்முடன் வளரும் குழந்தைகளே நம்மை வாழ்விக்கும் தெய்வங்கள்.

(இன்று நவ.14 குழந்தைகள் தினம்)

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Monday, November 10, 2025

முதியோர் நலன் நாடுவோம் !

 முதியோர் நலன் நாடுவோம் !

 பெற்றோரை உதாசீனப்படுத்தும் வாரிசுகளால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை, குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகரித்து வருவதைப் பற்றி...

முதியோர் நலன் நாடுவோம் 

 இரா. சாந்தகுமார் Published on:   Updated on:  10 நவம்பர் 2025, 3:20 am 

நம் நாட்டில் தற்போது 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி ஆகும். 2050-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 35 கோடியாக உயரக்கூடும். உலக அளவில் 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களின் தற்போதைய சராசரி ஆயுள் 83 ஆண்டுகளாக உள்ளது. உலகில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

ரஷியாவின் வால்கோகிரேட் மாநில மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர், எதிர்காலத்தில் மனிதர்கள் 150 ஆண்டுகள்வரைகூட வாழும் நிலை ஏற்படும் என்றும், அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 20 முதல் 40 வயது வரை வயது உள்ள இன்றைய இளைய தலைமுறையினர் 150 ஆண்டுகள்வரை வாழும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

நம் நாட்டில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால், முதியோர் தனியே வசிக்கும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதுடன் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, நம் நாட்டில் 2023-ஆம் ஆண்டு முதியோர்களுக்கு எதிராக 62,41,569 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன. நம் நாட்டில் முதியோருக்கு எதிரான குற்றச் செயல்கள் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.

பெற்றோரை உதாசீனப்படுத்தும் வாரிசுகளால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நம் நாட்டில், குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகரித்து வருகிறது. வாரிசுகளில் சிலர் தங்கள் பெற்றோரின் சொத்துகளை தந்திரமாக தங்களுக்கு சட்டப்படி உரியதாகச் செய்து கொண்டு பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோரை ஆதரவற்ற நிலையில் விட்டுவிடுவது நீதிமன்றங்களின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது.

இது தொடர்பாக வஞ்சிக்கப்பட்ட பெற்றோருக்கு அவர்களின் சொத்துகளை பிள்ளைகளிடமிருந்து பறிமுதல் செய்து மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்கும் வகையில் நீதிமன்றங்கள் அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து வருகின்றன.

நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாதங்கள்வரை சிறைத் தண்டனை, ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், பெரும் எண்ணிக்கையிலான முதியவர்கள் தங்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

புத்தர் வலியுறுத்திய மனித குலத்துக்கான ஏழு கடமைகளில், "வாழ்நாள் முழுவதும் நான் என் பெற்றோரைப் பேணுவேனாக' என்பதுதான் முதல் கடமை. இதை இந்தக் கால இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ வசதி, நிதியுதவி போன்றவை அவர்களின் இல்லத்திலேயே கிடைப்பதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சேகரிப்பதுடன், ஒவ்வொரு உள்ளாட்சியின் வருவாயில் குறைந்தபட்சம் 10% மூத்த குடிமக்களுக்காக செலவிட வேண்டும் என்றும் தீர்மானிக்கவுள்ளது.

மூத்த குடிமக்களின் நலனுக்காக மூத்த குடிமக்கள் ஆணையம் ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. மகாராஷ்டிர அரசு முதியோர் தாங்கள் வசிப்பதற்காக வீடுகள் வாங்கும் நிலையில் அதற்கான முத்திரைத்தாள் வாங்கும் செலவைக் குறைத்துள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியான சூழலில் வாழ்வதற்கு கடந்த காலத்தில் இக்கால மூத்த குடிமக்கள் ஆற்றிய பணிகளும் காரணம் என்றால் அது மிகையல்ல. மூத்தகுடிமக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் இளைய தலைமுறையினர் பாராட்டுக்குரியவர்கள்.

ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நடத்துவோர், தொண்டு நிறுவனங்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. பதிவு செய்யப்பட்ட பல முதியோர் இல்லங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவித்தொகை ஏதும் கிடைக்காமல் உள்ளது.

அரசு நடத்தும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு அரசின் நிதி உதவி, முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை, 75 வயதைக் கடந்த முதியோர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு, தமிழகத்தில் 70 வயதைக் கடந்த நிலையில் தனியாக வசிக்கும் முதியோரின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் "தாயுமானவர் திட்டம்' என முதியோர் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.

ரயில்களில் பயணிக்கும் 60 வயதைக் கடந்த முதியோருக்கு பயணக் கட்டணத்தில் சலுகை, மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதியோர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை தாமதமின்றித் தருவது போன்ற முதியோர் நலன் நாடும் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறையினர் நாளைய முதியவர்களாவர். இதை உணர்ந்து முதியோர் நலன் பேண அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்து முதியோர்களுக்கான சமூக அங்கீகாரத்தைத் தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Wednesday, November 5, 2025

Inside and out... The Corporation of Chennai has launched a welcome scheme to collect waste items directly from homes.

DINAMANI

05.11.2025

சென்னை மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.

இதைத் தவிர்ப்பதற்காக, மாநகராட்சி சார்பில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் வீடுகளுக்கு நேரடியாகத் தூய்மைப் பணியாளர்கள் சென்று, உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தத் திட்டத்தை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டால், நகரின் ஒட்டுமொத்தத் தூய்மை ஓரளவுக்கு சீரடைய வாய்ப்புள்ளது.

ஒவ்வொருவர் வீட்டிலும் தேவையற்ற பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. நுகர்வுக் கலாசாரம் பெருகிவிட்டதால், எதையாவது வாங்கிக் கொண்டே இருக்கிறோம். நாம் உபயோகித்த கட்டில், மேஜை போன்றவற்றை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தால், பழைய பொருள்களைக் கொடுக்கின்றோம் என்று அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற அச்சம் உண்டாகிறது. எந்தப் பொருளும் நம் வீட்டை விட்டுப் போகாது; அனைத்தும் வீட்டை அடைத்துக் கொண்டு கிடக்கும்.

வீட்டுக்குள் இருக்கும் இந்தப் பொருள்களைத் தவிர, நம் வீட்டுக்கு வெளியே கண்களை உறுத்துவது கட்டடக் கழிவுகள். மக்கள் பெரும்பாலும் இரவில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் இவற்றைச் சட்டவிரோதமாகக் கொட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். கட்டுமானக் கழிவு மேலாண்மை குறித்த விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதிலும், விதிகளைச் சரியாக அமல்படுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் நம்மைப்போல் கட்டடக் கழிவுகளைத் தெருவில் போட்டு வைப்பதில்லை. வேலை நடக்கும்போது ஒரு பெரிய கலனில் போட்டு விடுகிறார்கள்; பின்னர், அதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துகின்றன. ஆகவே, மாநகராட்சி இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் மாநகராட்சி, அறிவித்திருக்கும் திட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும். இந்தச் சேவையைப் பயன்படுத்தப் பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவல் பலருக்கும் சென்றடையவில்லை.

பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில், மக்கள் தாங்கள் விரும்பாத, ஆனால் இன்னும் பயன்படுத்தக்கூடிய பொருள்களை, குறிப்பாக சிறிய மற்றும் நல்ல நிலையிலுள்ள பொருள்களை, தங்கள் வீட்டின் முன் "எடுத்துச் செல்லுங்கள்' என்ற குறிப்புடன் வைத்துவிடுகிறார்கள். அங்கு இது ஒரு பொதுவான நடைமுறை; முறைசாரா மீண்டும் பயன்படுத்துதல் அல்லது பகிர்ந்து கொள்ளும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.

நல்ல நிலையில், பயன்படக்கூடிய நிலையிலுள்ள பொருள்கள் குப்பைக்குப் போவதைத் தடுக்க இது உதவுகிறது. சமூகத்தில் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாகப் பொருள்களை வழங்கி உதவ முடிகிறது. நமக்கு உபயோகமில்லாத பொருள்களை எளிதாக அப்புறப்படுத்தவும் ஏதுவாக இருக்கிறது. ஆனால், இவ்வாறு தினமும் வைப்பதில்லை; மாதத்தின் முதல் ஞாயிறன்று மட்டுமே வைக்கிறார்கள். தங்களின் வீட்டு முகவரியை ஆன்லைனில் தெரிவித்து விடுகிறார்கள். குழந்தைகளின் உடைகள், பொம்மைகள், புத்தகங்கள், கைப்பை, காலணிகள், கண்ணாடிக் குடுவைகள், தட்டுகள், தேநீர் கோப்பைகள் என எல்லாவற்றையும் அழகாக வைத்திருந்தார்கள். தேவைப்பட்டவர்கள் காரில் வந்து தேவையானதை மட்டும் எடுத்துப் போனார்கள். பேராசைப்பட்டு அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு போகவில்லை.

இதில் வியப்பு என்னவென்றால், குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் அனைத்தும் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. உடைந்து போனது, பயனற்றது என எதுவும் இல்லை. எந்தப் பொருளையும் உடைக்கக் கூடாது, பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதன் தேவை முடிந்த பின் யாருக்காவது தர வேண்டும் என்றும் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறார்கள். அதனால் அந்தப் பொம்மைகள், சாமான்கள் எதுவும் பாழாகவில்லை. அடுத்த குழந்தைக்கு வேண்டும் என்று அவர்கள் பாதுகாத்து வைப்பதில்லை. கதவுகள் மூடப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், யாரும் கூர்ந்து பார்க்காததாலும், மக்கள் கூச்சமின்றிப் பொருள்களை எடுத்துப் போகிறார்கள்.

எந்த வீட்டுக்கும் வாசலில் கேட் கிடையாது; இரண்டு அடி பக்கவாட்டு சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது. முன்பக்கம் கேட் இல்லை. தெருவுக்கும் வீட்டுக்கும் இடையே நிறைய இடம் உள்ளது. அதனால் அங்கே பொருள்களை அழகாக வைத்து விடுகிறார்கள். சில வீடுகளில் ஆப்பிள்களைக்கூட ஒரு பையில் போட்டு வைத்துவிட்டு, "எடுத்துக் கொள்ளுங்கள்' என்று வைக்கிறார்கள்; தேவைப்படுவோர் எடுத்துச் செல்கிறார்கள்.

பெரிய பொருள்களை இவ்வாறு வாசலில் வைக்கக் கூடாது. இதற்கு உள்ளாட்சி மன்றத்தின் மொத்த கழிவு சேகரிப்பு சேவையைப் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் மட்டுமே வீட்டின் முன் வைக்கிறார்கள். சிலர் பொருள்களை அப்புறப்படுத்த வேறு சில வழிகளைப் பின்பற்றுகிறார்கள். இணையவழி தளங்கள் அல்லது குழுக்கள் மூலம் தாங்கள் கொடுக்க விரும்பும் பொருள்களைப் பட்டியலிடுகிறார்கள். இலவசமாகவோ அல்லது விலைக்கோ கொடுத்து விடுகிறார்கள். பயன்படுத்திய பொருள்களை விற்கும் கடைகள் தனியே உள்ளன. மிக மிக நல்ல நிலையில் உள்ள கம்பளி உடைகள், கைப் பைகள், போர்வைகள் ஆகியவற்றை இங்கு இலவசமாகக் கொடுத்து விட்டால், அவற்றை அவர்கள் விற்பனை செய்துவிட்டு, அந்த வருவாயைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

இந்த நடைமுறையை நம் நாட்டில் முயற்சி செய்யலாம். தற்போது நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 500 - 1,000 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட மாதத்தில், தங்களுக்குத் தேவையில்லாத, அதேசமயம் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காட்சிப்படுத்தலாம்; அதற்கு ஒரு விலையையும் நிர்ணயிக்கலாம்; தேவைப்படுவோர் அந்தப் பொருள்களை வாங்கிக் கொள்வார்கள். இதையே ஒவ்வொரு நலச் சங்கமும் பின்பற்றலாம். இந்தத் திட்டம் ஓரளவுக்கு வெற்றி பெற்றால், ஒரு பொது இடத்தில் ஏற்பாடு செய்து இதை விரிவுபடுத்தலாம்.

மாநகராட்சியின் உபயோகமற்ற பொருளை வாங்கிப் பெறும் திட்டமானது, 15 மண்டலங்களிலும் நடைபெற்று, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். தீவிரமான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

ஒரு வயதுக் குழந்தை எடுத்தவுடன் நடந்து விடுகிறதா என்ன? அது எழும், விழும், ஒரு தப்படி வைக்கும்; மீண்டும் விழும்; சுதாரித்துக் கொண்டு எழுந்து நடக்கும். விழுந்து எழுந்து பின் நன்றாக நடக்கக் கற்றுக் கொள்ளும்; அதேபோல்தான் நம் திட்டங்களும் அவற்றின் முன்னெடுப்புகளும், மக்களின் மனப்பான்மையும்; தொடக்கத்தில் தொய்வு ஏற்படும், சுணக்கம் வரும். மக்கள் உடனே பழகிக் கொள்ள மாட்டார்கள்.

எண்மப் பரிவர்த்தனை வந்தபோது, "படிக்காதவர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் இது பிடிபடுமா?, சாமானியர்களால் இந்தப் பரிவர்த்தனையை செய்ய முடியுமா?" என்று பல சந்தேகங்கள் எழுந்தன. தற்போது கீரை விற்கும் பெண்மணி, தெருவில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் தாத்தா, சமோசா விற்கும் நடைபாதை வியாபாரி என அனைவரும் எண்ம வர்த்தகம் செய்கிறார்கள்.

"குதிரையை தண்ணீருக்கு அருகே கொண்டு செல்லத்தான் முடியும், அதைக் குடிக்க வைக்க முடியாது' என்பார்கள். தற்போது அதைக் குடிக்க வைக்க முடியும். குதிரையின் வாயை அகலத் திறந்து, குழாய் மூலம் வம்படியாகத் தண்ணீரை உள்ளே செலுத்தி குடிக்க வைக்க முடியும். அதுபோல, எப்படியாவது, எந்த உத்தியையாவது கையாண்டு, மாநகராட்சி தொடங்கியுள்ள இந்த அருமையான திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும். 15 மண்டலங்களில் வெற்றி பெற்றுவிட்டால், பின் அனைத்து மண்டலங்களிலும் அதை அமல்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு, அனைத்து மாவட்டங்களுக்கும் இதைக் கொண்டு செல்லலாம்.

மக்கள் தாங்கள் பயன்படுத்தாத, ஆனால் நல்ல நிலையில் உள்ள பொருள்களை பிறருக்குக் கொடுப்பதில் உள்ள தயக்கத்தைப் போக்க வேண்டும். இதற்கு கலாசார ரீதியான மாற்றம் தேவை. சென்னை மாநகராட்சியின் இந்தத் திட்டம் ஒரு நல்ல தொடக்கப் புள்ளி. உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுச் செல்லும் பணியாளர்கள், அவற்றைத் தரம் பிரித்து, மறுபயன்பாட்டுக்கு அல்லது மறுசுழற்சிக்கு அனுப்புவதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு திட்டத்தின் வெற்றிக்கு, அதன் செயல்பாட்டில் உள்ள நேர்மையும், நம்பகத்தன்மையும் மிக முக்கியம்.

நகர்ப்புறங்களில் வீட்டுச் சங்கங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தாமாக முன்வந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள முறையைப் பின்பற்றி, "இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்' போன்ற நிகழ்வுகளைத் தொடங்கலாம்; மாநகராட்சிக்கு இது ஒரு சுமையைக் குறைக்கும்.

நீண்டகாலமாக அப்புறப்படுத்தப்படாமல் இருக்கும் கட்டடக் கழிவுகள், தேவையற்ற பொருள்கள் ஆகியவை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கவும், அவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முனைப்புக் காட்ட வேண்டும். தண்டனைகள் இருந்தாலும், அவற்றைத் துல்லியமாக அமல்படுத்தும் போதுதான் மக்கள் சட்டங்களுக்கு மதிப்பளிப்பார்கள். தேவையில்லாதது வெளியேறட்டும்; தேவைப்படும் மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கட்டும்.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Tuesday, November 4, 2025

படித்தால் மட்டும் போதுமா?

DINAMANI 

படித்தால் மட்டும் போதுமா? 

அண்மைக்காலமாக உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெ.சுப்ரமணியன் Updated on: 04 நவம்பர் 2025, 3:00 am 

அண்மைக்காலமாக உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயா் கல்வியில் மாணவிகள் சோ்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவா்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆனால், அதன் பிறகான முதுநிலை படிப்பு, முனைவா் பட்ட ஆய்வுகளில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இதற்கு பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணா்வு அதிகரித்து வருவது ஒருபுறமிருந்தாலும், பரவலாகத் தொடங்கப்பட்ட அரசுக் கல்லூரிகள், அரசின் திட்டங்கள் போன்றவையும் இதற்குக் காரணங்களாகும்.

‘ஊரக இந்தியாவில் தொடக்கக் கல்வி 2023’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. சுமாா் 6,000-த்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதி ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பெற்றோா் தங்கள் குழந்தைகள் இளநிலை பட்டப் படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, முதுநிலை பட்டப் படிப்பு உள்பட கூடுதல் கல்வியைப் பெற வேண்டும் என விரும்புவது தெரியவந்துள்ளது.

அவா்களில் ஆண் குழந்தைகளின் பெற்றோா் 82%, பெண் குழந்தைகளின் பெற்றோா் 78% போ் தங்கள் குழந்தைகள் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்போ அல்லது அதைவிடக் கூடுதலாகவோ படிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக நாட்டில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது.

2014-15-ஆம் கல்வியாண்டை ஒப்பிடுகையில் மாணவா் சோ்க்கை 30 சதவீதமும், மாணவிகள் சோ்க்கை 38 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆண்களின் மொத்த சோ்க்கை விகிதத்தைவிட பெண்களின் சோ்க்கை விகிதம் அதிகமாக உள்ளது. முனைவா் பட்டப் படிப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் உயா் கல்வியில் தமிழகம் வகித்துவரும் முதலிடத்தைத் தக்கவைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘தமிழ்ப்புதல்வன்’, ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களால் உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த 2017-18 முதல் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வருடாந்திர தொழிலாளா் சக்தி தொடா்பான கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. அந்தத் தரவுகளின்டி 2017-18-இல் 22 சதவீதமாக இருந்த வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவீதம், 2023-24-இல் 40.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளையில், வேலைக்குச் செல்லும் பெண்களில் எத்தனை சதவீதம் போ் பணியிடத்தில் உயா் பதவி வகிக்கின்றனா், பெண்கள் உயா் பதவிக்குச் செல்லும் வரையில் தொடா்ந்து பணிபுரிகிறாா்களா, அவ்வாறு உயா் பதவிக்குச் செல்ல முடியாமல் போவதற்கும் தொடா்ந்து பணிக்குச் செல்ல முடியாததற்கும் என்ன காரணம் என்பதெல்லாம் சிந்திக்க வேண்டிய விஷயங்களாகும்.

உலக அளவில் திறன்மிக்க பணியாளா்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், போதிய திறன் இன்றைய பட்டதாரிகளிடம் உள்ளதா? என்பது சிந்திக்க வேண்டியதாகும். இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதத்தினா் 35 வயதுக்கு உடட்பட்டவா்களாக உள்ள நிலையில், 51.25% பட்டதாரிகள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தில் 2023-24-ஆம் ஆண்டு அறிக்கையில் 15 வயதுக்கும் மேற்பட்டவா்களில் சுமாா் 2.2% போ் முறையாக தொழில் பயிற்சி பெற்ாகவும், 8.6% போ் முறைசாரா தொழில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. எனினும், 34 சதவீதமாக இருந்த இந்த விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் உயா்ந்து தற்போது 61 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பட்டம் பெறுவதுடன் நிறுவனங்கள் எதிா்பாா்க்கும் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் பட்டம் பெறும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது சவால் நிறைந்தது. பத்தாம் வகுப்புத் தோ்ச்சியை தகுதியாகக் கொண்ட போட்டித் தோ்வில் முனைவா் பட்டம் பெற்றவா்களும் பங்கேற்பது இதன் எதிரொலிதான்.

எந்த வகைப் போட்டித் தோ்வுகளாயினும், பணியாயினும் அதற்குத் தேவையான திறனை இன்றைய பட்டதாரிகள் பெற்றிருக்கின்றனரா என்பது கேள்விக்குறிதான். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே திறமைகளை வளா்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகள் அதில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில்லை.

தொடா்புத் திறனை மாணவ, மாணவிகள் வளா்த்துக் கொள்வது அவசியமானது. ஆனால் அலட்சியம், அறியாமை காரணமாக இன்றைய மாணவ, மாணவிகள் பிறவகைச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் இந்நிலை மாறும்போதுதான் படிப்புக்கேற்ற வேலை, உயா் பதவி என்பதெல்லாம் சாத்தியமாகும்.

அதிகமானோா் உயா் கல்வி பயில்கின்றனா் என்பதுமட்டும் பெருமை தரக்கூடியதல்ல; மாறாக, திறமைசாலிகளாக விளங்குகின்றனா் என்பதுதான் பெருமை தரும் விஷயமாகும்.

Monday, November 3, 2025

வாரிசுகளின் கடமை!

நடுப்பக்கக் கட்டுரைகள் 

வாரிசுகளின் கடமை! 

பெற்றோரின் சொத்துகளைப் பெறுகிறீா்களோ இல்லையோ, அவா்களைக் கவனித்துக் கொள்ள நீங்கள் கடமைப்பட்டவா்கள்!

முனைவா் என். மாதவன் Updated on:  03 நவம்பர் 2025, 4:24 am 

அரசு ஊழியா்கள் பெற்றோரை பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில் அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். இது நடைமுறைக்கு வர காலம் ஆகலாம். அரசு ஊழியா்களின் பெற்றோருக்கு இவ்வாறான ஏற்பாடு என்றால், இவ்வாறு புறக்கணிக்கப்படும் மற்ற பெற்றோா்களின் நிலை என்ன ஆவது என்ற கேள்வியும் எழுவது இயற்கையே.

பெற்றோா் பராமரிப்பு தொடா்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது வாரிசுகளின் சட்டபூா்வமான கடமை என அந்த மாநில உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கும் சிறிது வித்தியாசமானது. நான்கு உடன்பிறப்புகளோடு பிறந்தவரான ஒருவருக்கு அவா்களது பெற்றோா் எவ்வித சொத்தும் தராததால், அவா்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமக்கில்லை என அவா் வழக்குத் தொடுத்திருந்தாா்.

அந்த வழக்கில் தீா்ப்பு வழங்கிய நீதிபதி, ‘பெற்றோரின் சொத்துகளைப் பெறுகிறீா்களோ இல்லையோ, அவா்களைக் கவனித்துக் கொள்ள நீங்கள் கடமைப்பட்டவா்கள்; சொத்து அளிக்காதது தொடா்பாக வேறு வழக்கை வேண்டுமானால் தொடுத்துக் கொள்ளலாம்’ என ஆலோசனை கூறினாா்.

பெற்றோா் பற்று குறித்த இந்த விஷயத்தை இரண்டு வகைகளில் அணுகுவது சரியாக இருக்கும். ஒன்று பொருளாதாரம் சாா்ந்திருப்பது; மற்றொன்று தமக்குத் தேவையான உளவியல் எதிா்பாா்ப்புகள் தொடா்பானது (அன்பு, ஆதரவு ஆகியவற்றைப் பெறுதல்). இரண்டு வகையான எதிா்பாா்ப்புகளுக்கும் தீா்வு வாரிசுகள் வளா்க்கப்படும் சூழலோடு சாா்ந்திருப்பது.

பொருளாதார பலம் குறைந்த குடும்பத்திலுள்ள பெற்றோா் தாங்கொணா இன்னல்களை எதிா்கொண்டு தமது பிள்ளைகளை வளா்க்கின்றனா். அவை எந்த அளவுக்கு அந்த பிள்ளைகளுக்குப் புரிகிறதோ அல்லது உணா்த்தப்படுகின்றனரோ அந்த அளவுக்கே அவா்கள் இளையோராக வளா்ந்த பின்னா் பெற்றோா்ப்பற்று இருக்கும். ஒருவகையில் குழந்தைப் பருவத்தில் குடும்பத்தின் கஷ்டங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படாமல் வளா்க்கப்படும் குழந்தைகள் பெரியவா்களானதும் குடும்பத்தினா் சந்தித்த கஷ்டங்களை உணா்ந்திருக்க மாட்டாா்கள்.

இதற்கு மாற்றாக, குழந்தைகளாக அவா்கள் வளரும் காலம் முதலே குடும்பத்தின் சுக துக்கங்களை பெற்றோா் பகிா்ந்துகொண்டு வளா்க்க வேண்டும். குடும்பத்தின் சிக்கலான சூழலில் தமக்கு உணவும், கல்வியும் கிடைப்பதை பெற்றோா் எவ்வாறு உறுதி செய்கின்றனா் என்பதை அவா்கள் உணர வேண்டும். இவ்வாறான உணா்வைப் பெற்று வளரும் குழந்தைகளுக்கு பிற்காலங்களில் பெற்றோா் பற்று குறித்துப் போதிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

வசதி படைத்த குடும்பத்தைச் சோ்ந்த பெற்றோரும் குழந்தைகளை வளா்க்கும்போதே பொருள்களின் அருமையை உணா்த்தி வளா்க்க வேண்டும். நம்மிடம் பணம் இருந்தாலும் ஒவ்வொரு பொருளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரியவைக்கவேண்டும். அவ்வாறு பொருளின் அருமையைப் புரிந்துகொள்வோா் பெற்றோரின் அருமையையும் எளிதில் புரிந்துகொள்வா்.

பெரும் செல்வந்தா்களுக்கு பொருளாதாரம் சாா்ந்த எதிா்பாா்ப்பு வரப்போவதில்லை. ஆனால், பெருமளவில் அன்புக்காக ஏங்கும் நிலை இருக்கலாம். அடுத்தபடியாக உளவியல் சாா்ந்த எதிா்பாா்ப்புகள். மனிதா்கள் சமூகமாக வாழவே எப்போதும் விரும்பும் இயல்புடையவா்கள். ஒருநாள் விடுமுறையில் பெற்றோருடன் பண்டிகையைக் கொண்டாட பேருந்துகளிலும், ரயில்களிலும் நின்றுகொண்டே எவ்வளவு போ் பயணம் செய்கின்றனா்; அந்த அளவுக்கு பெற்றோா்பற்றும், குடும்பநேயமும் இந்தியாவில் தழைத்துள்ளது. அது குறைந்துள்ள இடங்களில் அதை வளா்க்கும் சமூக ஏற்பாடுகள் அவசர அவசியம்.

எது எவ்வாறு இருப்பினும், உலகமயத்தின் தாக்கம் மற்ற துறைகளில் பிரதிபலிப்பதுபோல குடும்ப அமைப்பிலும் பிரதிபலிக்கிறது. மற்ற எதையும்விட பணம் சம்பாதிப்பது அத்தியாவசியமாகியுள்ளது. பொருள் தேடும்வேட்கையில் நாடுவிட்டு, கண்டம்விட்டுப் பலரும் பணிபுரிகின்றனா். இவ்வாறு வெளிநாடுகளில் வசிப்போரால் அடிக்கடி வந்து தங்களது பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்க இயலாது. இந்நிலையில், பெற்றோரும் பிள்ளைகளின் நிலையை உணா்ந்துகொள்ள முயல வேண்டும்.

பிள்ளைகளும் பெற்றோருக்கு தாம் உடனிருந்து கவனிக்க இயலாமையைப் புரியவைக்கும் வண்ணம் உணா்வுபூா்வமான தொடா்பில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து உடன் தங்கியிருந்து அன்பைப் பரிமாற வேண்டும். இன்றைய தகவல் தொழில்நுட்பம் இதை எளிதாக்கி உள்ளது.இறுதியாக, தெலங்கானா மாநில முதல்வரின் கவலையில் நியாயமில்லாமல் இல்லை.

கூட்டுக் குடும்ப முறை முற்றிலும் வழக்கொழிந்துவரும் நிலையில் அதன் அருமை பெருமைகளை உணரவைத்து வாய்ப்புள்ள அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பணி நிமித்தமாக வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருக்கும் பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிக்க ஆகும் செலவுகளையாவது முறைப்படி அனுப்ப வேண்டும். பெற்றோா் பற்றை உறுதிசெய்ய சட்டமெல்லாம் நிறைவேற்றப்படுவது சரியாக இருக்காது.


Sunday, November 2, 2025

நடுப்பக்கக் கட்டுரைகள் ‘நெடுந்தொடா்’ பரிதாபங்கள்! தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் குறித்து...


நடுப்பக்கக் கட்டுரைகள் ‘நெடுந்தொடா்’ பரிதாபங்கள்! தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் குறித்து...

முனைவர் பவித்ரா நந்தகுமார் Updated on:  01 நவம்பர் 2025, 3:01 am 

அண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகா், நடிகைகளும் அதன் பாா்வையாளா்களுமாக எதிரெதிரே அமா்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நோ்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வாா்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பாா்க்கும் நெடுந்தொடா் வில்லிகளைப் பாா்த்து எதிரே இருந்த பாா்வையாளா்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாா்கள்.

தொடரில் வரும் ஒரு கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, உங்கள் வில்லத்தனத்துக்கு ஓா் அளவே இல்லையா? ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீா்கள்? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா போன்ற கேள்விக்கணைகளைத் தொடுத்து தாங்களும் கொந்தளித்தாா்கள். இதைப் பாா்க்க பாா்க்க வேடிக்கையாக இருந்தது.

வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவா்கள், ‘இந்தக் கேள்விகளை இயக்குநரிடம் கேட்காமல் என்னிடம் ஏன் கேட்கிறீா்கள்’ என நேரடியாக சொல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப எதை எதையோ சொல்லி சமாளித்தாா்கள். முன்பு திரைப்படங்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறியாத மக்கள் அதை உண்மை என்றே கருதி அதில் வரும் வில்லன்-வில்லிகளை திரையரங்கைவிட்டு வெளியே வந்ததும், மண்ணை வாரி தூற்றிச் சபிப்பாா்கள். அன்று இருந்த தலைமுறையினா் இன்னும் மிச்சம் இருக்கிறாா்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது அவா்களது செயல்கள்.

ஒரு திரைப்படத்தைப் பாா்த்தால்கூட அதன் கதையம்சத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றி சில நாள்கள் பேசி விட்டு வேறு வேலையைப் பாா்க்கச் சென்று விடுவோம். ஆனால், இந்த நெடுந்தொடா்கள் தினமும் நம் வீட்டுக்குள் வந்து கதவைத் தட்டுகின்றன. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஓா் அலைவரிசை சேவையில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து நெடுந்தொடா்களை ஒளிபரப்புகிறாா்கள். அதை நாள் முழுவதும் அமா்ந்து பாா்க்கும் மனநிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.

பல வீடுகளில் பெண்மணிகள் வீட்டு வேலைகள் முடிந்ததும் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி இடைவெளியே இல்லாமல் பிறபகல் 3 மணி வரை பாா்க்கின்றனா். பின்னா், மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நெடுந்தொடா்களைக் கண்டு துக்கப்படுகின்றனா். இதில் இன்னும் சில வகை பெண்கள் இடையிடையே ஒளிபரப்பப்படும் விளம்பர இடைவேளைகளைக்கூட விடுவதில்லை. அந்த நேரத்தில் வேறு வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றி இன்னும் இரண்டு நெடுந்தொடா்களைக் கூடுதலாக கண்ணுற்று சாமா்த்தியமாக நேரத்தை மிச்சம் பிடிக்கின்றனா்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடரை ஒரு நாள் பாா்க்காது போனாலும் அக்கம்பக்கத்தில் இருப்பவா்களிடம் கேட்டு கதையின் போக்கை அறிந்து கொள்வா். இப்போது, நெடுந்தொடா்களைப் பாா்ப்பதற்கென்றே பல செயலிகள் வந்துவிட்டன. அதை தத்தம் அறிதிறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனா். வேலை மிகுதி, வெளியூா் பயணம் என எது எப்படி விடுபட்டாலும் ஓா் அத்தியாயத்தையும் தவறவிடாமல் தேதி வாரியாகப் பாா்த்து விடுகின்றனா்.

நாளெல்லாம் உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மனதுக்கு ஆறுதல் தரும்; வேலை செய்த அலுப்பு தீரும்; இது 100% உண்மை. ஆனால், நாள் முழுதும் இப்படியே பாா்த்துக் கொண்டிருந்தால் என்னாவது? இப்படி தொடா்ச்சியாக நெடுந்தொடா்களைப் பாா்ப்பதால் அதற்கு அடிமையாகி தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளக்கூட மனமில்லாமல் வித்தியாசமான மனநிலையில் தவிக்கின்றனா் பலா்.

நடைப்பயிற்சி செல்லக்கூட மறந்து அல்லது சோம்பலில் தவிா்த்து விடுகின்றனா் என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது. ஏதோ ஊதியத்துக்காக செய்யும் பணிபோல, கண்ணும் கருத்துமாக நேரம் தவறாமல் பாா்க்கிறாா்கள். இது போன்றோரின் கடிகாரமே நெடுந்தொடா்கள்தான். பெண்கள் மட்டும்தான் இப்படி நெடுந்தொடா்களைப் பாா்க்கின்றனா் என்பதில்லை. வீட்டில் இருக்கும் ஆண்களும் பெருவாரியாகப் பாா்க்கின்றனா். ஆனால், ஆண்கள் இப்படி நெடுந்தொடரில் வரும் கதாபாத்திரங்களோடு ஒன்றுவதில்லை; அதுதான் வித்தியாசம்.

நம்முடைய மன ஆறுதலுக்காகவும் கேளிக்கைக்காகவும் தரமான ஒன்றிரண்டு தொடா்களைப் பாா்ப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு அடிமையாகும் போது அல்லது அளவு கூடும்போதுதான் பாதிப்புகள் தொடா்கதையாகின்றன.

பாா்வையாளா்களைக் காட்டிலும் வில்லன்-வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவா்கள் சொன்ன வாா்த்தைகள் கூடுதல் முன்னிலை பெற்றன. அவா்களின் நீண்ட உரையாடல்கள், என் சிந்தனையை உழுது கொண்டே இருந்தன. அது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான செய்தியாகவும் இருந்தது. ஒரு நெடுந்தொடா் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரை தொடா்வதால் இயல்பாக அதிா்ந்துகூட பேசாத பண்பு நலனைக் கொண்ட தாங்கள், எப்போதும் கோபம் கொண்டவா்கள்போல், பிறா் மீது கோபப்படக் கூடிய குணாதிசயங்களைப் பெற்றவா்களாக உருமாறி இருப்பதாகச் சொன்னாா்கள்.

பல ஆண்டுகளாக அதே வில்லக் கதாபாத்திர மனநிலையில் உழல்வதால் படப்பிடிப்பு இல்லாத நாள்களில்கூட வில்லத்தனத்துடன் சிந்திக்கத் தோன்றுவதாகவும், தங்களுடைய உடல்மொழிகூட வில்லத்தனத்தில் ஊறி, முகம் எப்போதும் ‘உா்’ரென்று வைத்தபடி இருப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டாா்கள். தன்னிடம் 100 முறைக்கும்மேல் மன்னிப்பு கேட்ட ஒரு பெண்ணை மன்னிக்கத் தோன்றாமல், அதே வில்லத்தன மனநிலையில் தண்டிக்கத் தோன்றுகிறது என்று ஒருவா் சொன்னாா். ஆனாலும், அவா்களின் மீது பளிச்சிடும் புகழ் வெளிச்சம் இந்த அசௌகரியங்களை சிறியதாக்கி விடுகின்றன.

ஒரு நெடுந்தொடரில் ஓரிரு வில்லிகள்தான். ஆனால், அதன் பாா்வையாளா்களோ பல லட்சம் போ். தினம் தினம் விதவிதமான வில்லத்தனங்களைப் பாா்ப்பதால் இந்த லட்சக்கணக்கான மனங்கள் எத்தனை பெரிய ஏற்ற-இறக்கத்துக்கு உள்ளாகும் என நினைக்கவே மலைப்பாக இருந்தது. இது ஒரு நாடகம்தான் என்று சற்று தள்ளி இருந்து பாா்க்கும் மனநிலை பெண்களிடையே பெருக வேண்டும்.

தமிழ்நாட்டில் மக்கள் ஒரு நாளில் சராசரியாக ஆறரை நெடுந்தொடா்களைப் பாா்க்கின்றனா். கேரளத்தில் இது நான்கு தொடா்களாக உள்ளது. பிற்பகல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்ப்பதிலும் கேரளம், கா்நாடகத்தைவிட தமிழகமே முன்னிலை வகிக்கிாம்; அதிலும் பெண்களே இதில் முதலிடம் வகிக்கின்றனா் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

பெண்கள் பெரும்பான்மையாக பாா்க்கும் இந்தத் தொடா்களின் மையக்கரு பெரும்பாலும் பெண்களைச் சுற்றியே அமையும். ஆனால், இதில் வேடிக்கை என்னவெனில் இந்தத் தொடா்கள் பெண்களின் பெருமையைப் பேசுவது இல்லை. அவா்களின் இயல்பான பலவீனங்களைக் கொச்சைப்படுத்துகின்றன; பல நெடுந்தொடா்கள் கலாசார சீரழிவுக்கு வித்திடுகின்றன.

மாலை நேரங்களில் தொலைக்காட்சி அதிகமாக பாா்ப்பதால் இந்த நீல ஒளி மெலடோனின் அளவையும், உடல் கடிகாரத்தின் உணா் திறனையும் பாதிக்கிறது. நிகழ்ச்சிகளில் வரும் வன்முறையான காட்சிகள் அட்ரினலின் அமைப்பைத் தூண்டி பாா்வையாளா்களை அதிக நேரம் விழித்திருக்கச் செய்கின்றன; இது தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இற்றையெல்லாம் தாண்டி நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற நேரங்களைத் திருடும் இதுவும் போதைப் பொருள் போலத்தான். தினமும் சராசரியாக கிட்டத்தட்ட 3 மணி நேரம்; அந்த மூன்று மணி நேரத்தில் எத்தனையோ ஆக்கபூா்வமான செயல்கள் செய்யலாம். அத்துடன் இவை நமது அன்றாட வாழ்வில் அதிகப்படியான எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது அறிவுசாா்ந்த யோசனைகளை, உற்பத்தித் திறனை, ஆரோக்கியமான பணிகளைப் பாதிக்கின்றன.

ஒவ்வொரு முடிவின்போதும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விறுவிறுப்புடன் முடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளதால், பாா்வையாளா்களைப் பதைபதைப்புடனேயே வைத்திருக்கிறாா்கள். வீட்டுக்கு உறவினா் வந்தால்கூட தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நெடுந்தொடா்களை நிறுத்துவதில்லை; இது உறவினா்களுடனான இணக்கமான சூழலைத் தவிா்க்கிறது.

ஆறுதல் தரும் வகையில் இளைய தலைமுறையினரிடம் நெடுந்தொடா் மோகம் இல்லை. ஆனால், அந்த இடத்தை ‘வெப் சீரிஸ்’ பிடித்துள்ளது. இது 1990-களின் இறுதியில் மேற்கத்திய நாடுகளில் வோ்விடத் தொடங்கி, தற்போது இந்திய ரசிகா்களிடையே பெரும் கவனத்தை ஈா்த்துள்ளது. ஓடிடியில் வெளியாகும் இவை, கவனிக்க வைக்கும் கதை, பரபரப்பான திரைக்களம் என ரசிகா்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தந்தாலும் ‘வெப் சீரிஸில்’ தணிக்கைக்கு உள்ளாகாத காட்சிகள் இடம்பெறுகின்றன. உலகளாவிய ஒளிபரப்பு என்பதால் பெரிதாகக் கட்டுப்பாடுகள் இல்லை.

உண்ணும் உணவு எப்படி நம் ஆரோக்கியத்துக்கு வித்திடுமோ, அதுபோல, நாம் மணிக்கணக்கில் பாா்க்கும் காட்சிகள் நம் மனநலனுக்கான காரணிகளாக அமைகின்றன. அதனால், எதைத் தோ்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனம் தேவை!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Thursday, October 30, 2025

செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி!

 செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி! 

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

 தினமணி செய்திச் சேவை Published on:   Updated on:  30 அக்டோபர் 2025, 4:43 am 3 min read 

எஸ். எஸ். ஜவஹர் 30.10.2025

மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது. ஆனால், இப்போது, மனிதனே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆனால், அது லாபம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக அமையும்.

மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல், புதிய மருந்துகள் உருவாக்கம், துல்லியமான மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு என எல்லாத் துறைகளிலும் இதன் தடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரு எக்ஸ் ரே அல்லது எம்.ஆர்.ஐ. படத்தில் மனிதக் கண்களால் காண முடியாத நுண்ணிய மாற்றங்களை ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறை (அல்காரிதம்) கண்டறிய முடியும்.

இந்த முறையில் மனித தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, விரைவான தீர்வுகளுக்கும் வழிவகுக்க முடியும். இதனால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே துல்லியமாக அடையாளம் காண முடியும்.

நோயாளியின் மரபணு, வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்றவற்றை சில விநாடிகளில் அலசி ஆராய்ந்து, அவருக்கென தனித்துவமான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதுவே "தனிப்பட்ட மருத்துவம்' என்ற புதிய பரிமாணத்தை மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைத் துறையில் உருவாக்கியுள்ளது.

மருந்து ஆய்வகங்களிலும் இதுவரை கண்டிராத புரட்சியை இது உருவாக்கத் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மூலக்கூறுகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்து சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் திறன் இதற்குண்டு; இதனால், மருந்துக் கண்டுபிடிப்பு ஆண்டுகள் அல்ல, மாதங்களில் முடிகிற நிலை உருவாகி வருவது கண்கூடு. எனவே, குறைந்த விலையில் சிறந்த மருந்துகள் உருவாகும் வாய்ப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

இன்றைய அளவில் மருத்துவமனைகளின் நிர்வாகச் சுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரடியாகச் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. வயது முதிர்ந்தோரின் மக்கள்தொகை தொடந்து அதிகரித்துவரும் சூழலில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பெரும் உதவியாக இருக்கும்.

தொலைநிலை மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பு எளிதில் சாத்தியமாவது மனிதகுல வரப்பிரசாதம். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மூலமாக மருத்துவ சிகிச்சை மற்றும் உதவியை நகரங்களின் எல்லைகளைத் தாண்டி கிராமங்களுக்கும், ஏன் வீடுகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு மற்றும் அரசு மருத்துவ நல்வாழ்வுத் திட்டங்கள் ஆயுஷ்மான் பாரத், தமிழ்நாடு மருத்துவ நலவாழ்வு திட்டம் போன்றவை மக்களின் நல்வாழ்வு பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செயற்கை நுண்ணறிவை இவற்றில் பயன்படுத்தும்போது இந்தத் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவும் செயல்திறனை அதிகரிக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

நோயாளிகளின் மருத்துவ வரலாறு, மருந்து உபயோக நடைமுறை, மற்றும் ஆபத்து மதிப்பீட்டுத் தரவுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகள் துல்லியமான தீர்மானங்களை எடுத்து விடும். இதன்மூலம் போலி காப்பீட்டு கோரிக்கைகள் குறையவும், உண்மையான பயனாளிகளுக்கு விரைவான நிதி உதவி சென்றடையவும் வழிவகுக்கும்.

செயற்கை நுண்ணறிவு ஊடாக மருத்துவ வசதிகளைத் திட்டமிடும் அரசின் திறனும் மேம்படும். எந்த மாவட்டத்தில் அல்லது எந்தப் பகுதியில் எத்தகைய நோய் அதிகம் பரவுகிறது, எந்த இடங்களில் மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவர்கள் அல்லது எத்தகைய மருந்துகள் கையிருப்பு தேவைப்படுகின்றன போன்ற விவரங்களை முன்கூட்டியே கணிக்கும் திறனுடன் அரசுத் திட்டங்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட முடியும். இதனால், மருத்துவ சிகிச்சை செலவுகள் மட்டுமின்றி உயிரிழப்புகள்கூட குறையும்.

செயற்கை நுண்ணறிவின் பலம் மனிதநேய நோக்குடன் இணைந்தால்தான் அது உண்மையான மருத்துவ விடுதலைப் புரட்சியாக மாறும். ஆனால், இதன் மறுபக்கம் மிகவும் கூர்மையானது. தனி நபரின் மருத்துவத் தரவுகள் என்பது மிக ரகசியமான தனிப்பட்ட சொத்தாகும். அவரது அனுமதியின்றி அந்தத் தரவுகளை மருத்துவமனைகளோ அல்லது வேறு வணிக நிறுவனங்களோ லாப நோக்கில் பயன்படுத்தும் ஆபத்தை மறுக்க முடியாது.

செயற்கை நுண்ணறிவு படிமுறைகள் (அல்காரிதம்) அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளை மட்டுமே சார்ந்திருப்பதால், சமூக சார்புகள் அதில் ஊடுருவும் வாய்ப்பும் ஆபத்தும் அதிகம். இது சமத்துவமின்மையை உருவாக்கும் அல்லது இருப்பதை அதிகரிக்கும்.

விலை உயர்ந்த கருவிகள் மற்றும் சிகிச்சை முறைகள் மருத்துவ சேவை பொருளாதார ரீதியில் வசதி உள்ளவர்களுக்கே கிடைக்கும் என்ற நிலை உருவாகி விடும். அதேபோல், கணினி மற்றும் மென்பொருள் பயன்பாடுகளைக் கையாளும் திறன் படைத்தோர் மட்டும் பயன் அடைய முடியும் என்ற நிலை உருவாகி சமூகத்தில் உள்ள எண்மப் பிளவை மேலும் அதிகரித்து விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளில் மிகப் பெரிய சிக்கல் பொறுப்புக்கூறல் குறித்ததுதான்.

ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக நோயைக் கண்டறிந்தாலோ அல்லது தவறான சிகிச்சை அளித்துவிட்டாலோ அந்த மருத்துவ சேவை குறைபாட்டுக்கும், அதன் விளைவுகளுக்கும் யார் பொறுப்பு ஏற்பது? மருத்துவரா, மருத்துவமனையா அல்லது மென்பொருள் நிறுவனமா? இந்த பிளாக் பாக்ஸ் சிக்கல் நீதியியல் உலகையே குழப்புகிறது.

மேலும், மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவின் மீது முழுமையாகச் சார்ந்தால், அவர்களின் தீர்மானிக்கும் தனித் திறனும் மருத்துவ நுண்ணறிவும் மங்கும் அபாயம் உண்டு. அதே சமயம், லாப நோக்கத்தை மட்டுமே கொண்ட சில நிறுவனங்கள் தேவையற்ற சோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவின் பெயரில் பரிந்துரைத்து மக்களைச் சுரண்டும் ஆபத்தும் மறுக்க முடியாதது. இதை சமநிலைப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் மிக முக்கியமான பொறுப்பாகும்.

தனிநபர் மருத்துவத் தரவுகளைப் பாதுகாக்கும் வலுவான சட்டங்கள் அவசியம். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டும். தவறுகள் ஏற்பட்டால் யார் பொறுப்பு என வரையறுக்கும் சட்ட அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு சமூகப் பிரிவினரிடமும் பரிசோதிக்கப்பட்டு, சார்பற்றவை என்ற சான்று பெற்ற மாதிரிகளே மருத்துவத் துறையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இறுதி முடிவை எப்போதும் மனித மருத்துவரே எடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர்களும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். லாப நோக்கத்தைக் கடந்து, பொதுநல நோக்கத்தையும் நெறிமுறையையும் இணைத்த வடிவமைப்புகள் தேவை. மேலும், மலிவு விலையில் பலருக்கும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு அவர்களின் தரவுகளைப் பயன்படுத்துகிறது என்பதை அறியும் உரிமை நோயாளிகளுக்கும் இருக்க வேண்டும். மருத்துவம் பயில்பவர்களுக்கு மருத்துவக் கல்வியோடு எண்மக் கல்வியும் சேர்த்து வழங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கு மருத்துவக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத் திட்டங்களைச் சேர்க்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக, மருத்துவக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

மக்களும் தங்கள் தரவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களின் உரிமை காக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு தரமான மருத்துவ சேவையை ஜனநாயகப்படுத்தும் திறனைக் கொண்டது. ஆனால், அதன் பயன் சிலருக்கு மட்டும் சுருங்கிவிடாமல், மக்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும். அதற்கு வலுவான சட்டங்கள், தெளிவான நெறிமுறைகள், சரியான மனித மேற்பார்வை, சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை இணைந்திருக்க வேண்டும்.

இறுதியில், செயற்கை நுண்ணறிவு என்பது ஓர் இருமுனைக் கத்தி; சரியான கைகளில் இருந்தால் அது உயிரைக் காப்பாற்றும் கருவி; தவறான கைகளில் விழுந்தால் அது நியாயத்தையும் நம்பிக்கையையும் காயப்படுத்தும் ஆயுதமாக மாறும்.தொழில்நுட்பத்துக்கும் மனிதநேயத்துக்கும் இடையே சமநிலையைப் பேணும் நாடுகள்தான் எதிர்கால மருத்துவத்தின் உண்மையான தலைவர்கள்!

கட்டுரையாளர்:

ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


NEWS TODAY 13.12.2025