
Showing posts with label DINAMANI. Show all posts
Showing posts with label DINAMANI. Show all posts
Sunday, January 25, 2026
கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!
DINAMANI
கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!
2023-ஆம் ஆண்டில், 64 கோடி பெண்கள் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து கொண்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) மதிப்பிட்டுள்ளது.

மாதிரிப் படம்
Updated on:
24 ஜனவரி 2026, 5:05 am
ஐக்கிய நாடுகள் சபையில் 2015-ஆம் ஆண்டு ஒரு முக்கியமான திட்டம் உருவாக்கப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த உலகில் நிலையான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, உலகத்துக்கான பதினேழு நிலையான வளர்ச்சி இலக்குகள் (சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் கோல்ஸ் - எஸ்.டி.ஜி.) உருவாக்கப்பட்டன. இந்த பூமியும், பூமியிலிருக்கும் எல்லா உயிரினங்களும் செழித்திருக்கவும், அமைதியாக வாழவும் இந்த இலக்குகள் உருவாக்கப்பட்டன.
இதில் முக்கியமானதாகக் கருதப்படும் ஐந்தாவது இலக்கான பாலின சமத்துவம் (ஆண் - பெண் சமத்துவம்) மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உறுதியளித்திருந்தது. பன்முகத்தன்மை கொண்ட, 146 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், அந்தந்த மாநிலங்களில் காணப்படும் சமூக, அரசியல், பொருளாதார கலாசார விழுமியங்களுக்கேற்ப மக்களின் வாழ்க்கை நிலையில் முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மாறுபட்டதாகவும், சீரற்றதாகவும் உள்ளது. எனினும், இந்த முயற்சியில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
"பெண்கள் மணப்பெண்கள் அல்ல' என்ற உலக நாடுகளின் ஒருமித்த குரல், குழந்தைத் திருமணங்களைத் தடுக்காவிட்டால், அது ஐக்கிய நாடுகள் சபையின் மற்ற நிலையான வளர்ச்சி இலக்குகளையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளது. "குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையாவிட்டால், வறுமை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை, அமைதி மற்றும் நீதி போன்ற ஒன்பது இலக்குகளில் தொய்வு ஏற்படும்' என ஐ.நா. தெரிவித்துள்ளது.
உலக அளவில், 2023-ஆம் ஆண்டில், 64 கோடி பெண்கள் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து கொண்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) மதிப்பிட்டுள்ளது. இதில், மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் மட்டுமே என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா-வின் இலக்கை அடைய இந்தியா இன்னும் வெகுதொலைவு, இருபது மடங்கு வேகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவில் நிலவும் பல்வேறு சமுதாயப் பிரச்னைகளில் ஒன்று குழந்தைத் திருமணம். குழந்தைத் திருமணங்களுக்கு முதன்மைக் காரணமாக சொல்லப்படுவது குடும்பத்தில் நிலவும் வறுமை, கல்வியின்மை, பெற்றோரின் பொறுப்பற்ற செயல்பாடுகள்- இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு, புரிதல் இன்மை ஆகியன காரணிகளாக சொல்லப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குழந்தைத் திருமணமும் ஒரு காரணம்.
இந்தியாவில், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பிகார், திரிபுரா போன்ற மாநிலங்கள் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் சிலவாக இருந்தாலும், நாடு முழுவதும் அவ்வப்போது குழந்தைத் திருமண நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் (நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே) தரவின்படி, குழந்தைத் திருமணங்கள் 2005-2006-ஆம் ஆண்டில் 47.4 சதவீதமாக இருந்தது, 2019-2021-ஆம் ஆண்டில் 23.3 சதவீதமாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் கடந்த காலங்களைவிட தற்போது குறைந்து வந்தாலும், அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
"குழந்தைத் திருமணம்' என்பது, பெண் 18 வயதுக்குட்பட்டவராகவும், ஆண் 21 வயதுக்குட்பட்டவராகவும் இருந்து திருமணம் நடந்தால், அது "குழந்தைத் திருமணம்' எனச் சட்டம் வரையறை செய்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன்படி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இன் கீழ் (போக்ஸோ 2012) இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நம் நாட்டின் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006-இன்படி, குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்தியவர்கள், நிச்சயித்த நபர்கள், பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமீனில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒன்றோ அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தைத் திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட மொத்தம் 3,563 வழக்குகளில், வெறும் 181 வழக்குகள் மட்டுமே விசாரணை முடிவில், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. தற்போதைய தீர்வு விகிதத்தில் நிலுவை வழக்குகளில் தீர்ப்பு வெளியாக 19 ஆண்டுகள் ஆகலாம் என்று குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 முதல் 19 வயது வரையிலான பெண்கள் மகப்பேறு அடைவது பதின்ம மகப்பேறு என அழைக்கப்படுகிறது. இந்த வயதில் மகப்பேறு அடைவது மிகவும்
கவலை தரும் விஷயம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால், தாய்-சேய் உடல் நலன் பாதிக்கப்படும். சிறுமிகளின் கல்வி முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது. புத்தகப் பையை சுமக்க வேண்டிய சிறுமிகள், கருவைச் சுமக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், சிறுமிகள் இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியை இழந்து, சிறு வயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள்.
பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு சிறுமிகள் தள்ளப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் இழந்து இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசு, "பால் விவா முக்த் பாரத் அபியான்' மூலம் நிகழாண்டுக்குள் குழந்தைத் திருமணத்தின் பரவலை 10 சதவீதம் குறைத்து 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை குழந்தைத் திருமணம் இல்லாத நாடாக மாற்ற முயன்று வருகிறது. அண்மையில் அந்த இயக்கம், தனது முதலாமாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, குழந்தைத் திருமணம் இல்லாத நாட்டுக்கான 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது. "பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' பிரசாரமும் முன்னெடுக்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் "குழந்தை திருமணம்' இல்லாத மாவட்டமாக, சத்தீஸ்கரிலுள்ள பலோட் மாவட்டம் மாறி மைல்கல்லை எட்டியது. தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் காக்க பல்வேறு நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. "முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்',
"புதுமைப் பெண் திட்டம்' போன்றவை மூலம் பெண் குழந்தைகளின் நலன்கள் காக்கப்படுகின்றன. எனினும், தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு அதிக அளவில் பிரசவம் நடப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜூலை வரை, தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைவிட 56 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுமிகள் கர்ப்பமாகி மருத்துவமனைக்கு வரும்போதுதான் சட்ட விரோதமாக குழந்தைத் திருமணம் நடந்திருப்பது தெரிய வருகிறது. கடந்த 2025-ஆண்டு ஏப்ரலில் "தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மற்றும் ஆராய்ச்சி' இதழில், 10 முதல் 19 வயதிலான பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் அதிக அபாயங்களைச் சந்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் வேலூரில் மட்டும் 59 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அத்துடன் 18 வயதுக்குட்பட்ட 415 சிறுமிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது குழந்தைகளையும் உள்ளடக்கியது. இந்தக் கால குழந்தைகள் அளவற்ற அறிவும், ஆற்றலும், சக்தியும் உடையவர்களாக விளக்குப் போல ஒளியுடன் இருக்கிறார்கள். எனினும், குழந்தைத் திருமணம் என்பது சமுதாயத்தில் புரையோடிப் போன ஒரு நோய் போன்றது. சமூக மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வு, ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே இந்த நோயைக் காணாமல் போகச் செய்ய முடியும். மலர் போன்ற மென்மைத் தன்மை கொண்ட பெண்கள், தனக்கு எதிராக நடத்தப்படும் கொடுமை
களையும், வேதனைகளையும் மிக அழகாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர்கள். அன்றலர்ந்த மலர்களைப் போலத் தான் பெண்களும், வாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொண்டு உலகில் மலர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
Friday, January 23, 2026
மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!
மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!
அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள்.

தினமணி செய்திச் சேவை
Updated on:
13 ஜனவரி 2026, 4:04 am
பழ. அசோக்குமாா்
அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள்.

தினமணி செய்திச் சேவை
Updated on:
13 ஜனவரி 2026, 4:04 am
பழ. அசோக்குமாா்
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி. எளிய மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த காலத்தில் அதை சாமானியா்களின் பிள்ளைகளும் எளிதில் இலவசமாய்ப் பெற வசதியாக அறிவுக் கதவுகளை திறந்து வைத்தவை அரசுப் பள்ளிகள். இன்றைய மாபெரும் ஆளுமைகள், அறிவியலாளா்கள், மருத்துவா்கள் எனப் பலரும் இந்த அரசுப் பள்ளி எனும் கருவறையில் உதித்தவா்களே. ஆனால், அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் அரங்கேறி வரும் சில நிகழ்வுகள் நம் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளன.
இன்றைய எண்ம (டிஜிட்டல்) உலகில், ஒரு சிறு தவறு நொடிப்பொழுதில் உலகெங்கும் பரவிவிடுகிறது. சில அரசுப் பள்ளி மாணவா்கள் வகுப்பறையில் செய்யும் முதிா்ச்சியற்ற செயல்களையும், விளையாட்டாகச் செய்யும் தவறுகளையும் காணொலியாக எடுத்து, அதைப் பொதுவெளியில் பகிா்ந்து கேலி செய்வது ஒரு நாகரிகமற்ற போக்காக வளா்ந்து வருகிறது.
ஒரு சில மாணவா்களின் செயல்பாடுகளை வைத்து, ஒட்டுமொத்த அரசுப் பள்ளி அமைப்பையே கொச்சைப்படுத்துவது எவ்வளவு பெரிய அநீதி? அந்தக் காணொலிகளை ரசித்துச் சிரிக்கும் நாம், அந்தச் சிறுவனின் அல்லது சிறுமியின் எதிா்காலத்தை அந்தச் சிரிப்பால் சிதைக்கிறோம் என்பதை உணா்வதில்லை.
அரசுப் பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவா்கள் வறுமையின் பிடியிலிருந்தும், போதிய வசதிகள் இல்லாத சூழலிலிருந்தும் வருபவா்கள். பல மாணவா்களின் வீடுகளில் அவா்களுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவோ, உலக நடப்புகளைப் புரியவைக்கவோ வழிகாட்டிகள் இல்லை. அவா்களுக்குப் பள்ளிதான் உலகம்; ஆசிரியா்கள்தான் வெளிச்சம்.
அவா்கள் செய்யும் தவறுகள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தக் கண்டிப்பு வகுப்பறைக்குள் இருக்க வேண்டுமே தவிர, சமூக ஊடகங்களின் ‘விருப்பக் குறிகளுக்காக’ அவா்களைப் பலிகடா ஆக்கக்கூடாது. அவா்களுக்குத் தேவை கண்டனம் கலந்த கேலி அல்ல; அன்பான அரவணைப்பும், சரியான பாதையைக் காட்டும் கரங்களுமே.
ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் உண்டு. ஆனால், நாம் ஏன் எப்போதும் இருண்ட பக்கத்தையே பாா்க்கிறோம்? மதுரையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி சிவதா்ஷினி ‘உன்னை நீயே நம்பு’ என்று கம்பீரமாகப் பேசியபோது தமிழகமே வியந்து பாா்த்தது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான சிவதா்ஷினிகள் நமது அரசுப் பள்ளிகளில் இருக்கிறாா்கள்.
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரா்கள், வான்வெளியில் சாதிக்கத் துடிக்கும் இளம் விஞ்ஞானிகள், கலைத் துறையில் மிளிரும் திறமையாளா்கள் எனப் பல முத்துகள் அரசுப் பள்ளி எனும் சிப்பியில் ஒளிந்து கிடக்கின்றன. ஆனால், இவா்களின் சாதனைகளைப் பகிரும் வேகத்தைவிட, யாரோ ஒரு மாணவா் செய்த தவறுகளைப் பகிா்வதில் நாம் காட்டும் வேகம் அதிகம். இது நம் சமூகத்தின் பாா்வையில் உள்ள குறைபாட்டையே காட்டுகிறது.
அரசுப்பள்ளி மாணவா்களைக் கேலி செய்பவா்கள் ஒன்றை மறந்துவிடுகிறாா்கள். இன்று இந்தியா தலைநிமிா்ந்து நிற்பதற்குத் தோள் கொடுக்கும் பல மாபெரும் ஆளுமைகள் இதே அரசுப் பள்ளிகளில் படித்தவா்களே.
ஏவுகணை நாயகன் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், இஸ்ரோவின் மேதைகள் டாக்டா் மயில்சாமி அண்ணாதுரை, டாக்டா் கே. சிவன் மற்றும் சந்திரயான்-3 திட்ட இயக்குநா் பி. வீரமுத்துவேல் ஆகியோா் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவா்களே. ஏராளமான முன்மாதிரி மனிதா்கள் நம் அரசுப் பள்ளிப் பின்னணியில் இருந்து வந்தவா்களே.
இன்று அரசு மாதிரிப் பள்ளிகளில் படித்து தைவான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முழு உதவித்தொகையுடன் உயா் கல்விக்குச் செல்லும் மாணவா்களும், ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற நிறுவனங்களில் தடம் பதிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அறிதிறன்பேசி இன்று வரமாகவும் சாபமாகவும் இருக்கிறது. ஒரு மாணவரின் தவறைப் பகிா்வதற்கு முன்பாக, ‘இதை என் வீட்டுப் பிள்ளை செய்திருந்தால் நான் இப்படிச் செய்வேனா?’ என்று ஒரு நிமிஷம் யோசித்தால் அந்தத் தவறு அங்கே தடுக்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவா்களை ஏளனமாகப் பாா்ப்பதை நிறுத்துவோம். ஒரு சிற்பம் சரியாக அமையவில்லை என்றால் கல்லைக் குற்றம் சொல்ல மாட்டோம்; செதுக்குபவனின் திறமையில்தான் குறை காண்போம். அதேபோலத்தான், ஒரு மாணவா் தவறு செய்கிறான் என்றால், அவனுக்குச் சரியான சூழலையும் வழிகாட்டலையும் தராதது சமூகமாகிய நமது தோல்வியே தவிர, அந்த மாணவரின் தோல்வி அல்ல.
மாற்றம் என்பது மாணவா்களிடம் மட்டுமல்ல; அது அவா்களைப் பாா்க்கும் நம் பாா்வையில்தான் தொடங்க வேண்டும். அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள். சமூக ஊடகங்களில் எதிா்மறைப் பதிவுகளைத் தவிா்த்து, அரசுப் பள்ளி மாணவா்களின் நோ்மறையான சாதனைகளை உரக்கச் சொல்வோம். அவா்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்; அவா்களைக் கேலி செய்து அந்தத் தூண்களைப் பலவீனப்படுத்த வேண்டாம்.
அரசுப் பள்ளிகள் என்பவை வெறும் வறுமையின் அடையாளங்கள் அல்ல; அவை இந்தத் தேசத்தின் அறிவுப் பசி தீா்க்கும் அட்சய பாத்திரங்கள். அங்கே பயிலும் மாணவா்கள் கிண்டலுக்குரிய கேலிச் சித்திரங்கள் அல்ல; மாறாக, எத்தகைய சவால்களையும் எதிா்கொண்டு எழும் தன்னம்பிக்கையின் முகவரிகள். அவா்களின் ஒரு சிறு சறுக்கலை காட்டுத் தீயாய் சமூக ஊடகங்களில் பரப்புதலை விடுத்து, அவா்களின் ஒவ்வொரு சிறு முன்னேற்றத்தையும் கொண்டாடுவோம். ஏனெனில், ஒரு மாணவரை நாம் அவமதிப்பது, ஒரு சமூகத்தின் எதிா்கால நம்பிக்கையையே அவமதிப்பதற்குச் சமம். எளியவா்களின் கல்விக் கனவு சிதையாமல் காப்பது ஒரு நாகரிகச் சமூகத்தின் அறப் பணி..!
Thursday, January 22, 2026
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல.

Updated on:
22 ஜனவரி 2026, 6:00 am
புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முடக்கி விட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிா்ப்பும், ஆதரவும் மாறி மாறி ஏற்பட்டது. இவற்றில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது.
23 ஆண்டுகளாக தொடா் வலியுறுத்துதல் போராட்டத்தின் விளைவாக பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையானதுதானா, அரசு ஊழியா்களுக்கு உண்மையிலேயே பலன் தருமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. அதாவது, அரசு ஊழியா்களின் ஊதியத்தில் எந்தத் தொகையும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. ஆனால், இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது.
அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல. அதாவது, ஏப்ரல் 2003-க்குப் பிறகு கொண்டுவரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது 14 %ஊழியா்களின் அடிப்படை ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடான தொகையை அரசு செலுத்தும். ஓய்வு பெறும்போது அப்படிச் சேரும் தொகையைக் கொண்டு ஒரே கட்டமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் பெறுவதில் பல ஆண்டுகளாக பல்வேறு குழப்பங்கள் நிலவின. ஏனெனில், அரசின் பங்களிப்புத் தொகை செலுத்தப்பட்ட விவரத்தை ஊழியா்களால் தெரிந்து கொள்ள இயலாத நிலையே நீடித்தது.
நிலைமை இவ்வாறு இருக்கையில், பல்வேறு துறை அரசு ஊழியா்களின் போராட்டத்தை நிறுத்தவும், தோ்தலை முன்வைத்தும் திமுக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பல சலுகைகள் இதில் இல்லை; திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் போன்ற சலுகைகள் இவற்றில் இல்லை. ஆகவே, ஏமாற்றம் அளிக்கிறது.
குறைவாக ஊதியம் பெறும் தொகுப்பூதிய ஊழியா்கள் 20, 30 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ரூ. 2,000 ஓய்வூதியம் பெறுகிறாா்கள். மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமே ரூ. 7 ஆயிரம் என்று தீா்மானித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு அவா்களையும் இந்தத் திட்டத்தில் கொண்டு வந்து நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அரசு கடும் கடன் நெருக்கடியில் இருந்துவரும் சூழ்நிலையில், இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு உள்நாட்டு உற்பத்தியில் 8.6% வளா்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பொருளாதாரத்தில் அகில இந்திய அளவில் 2-ஆவது மாநிலமாக தமிழகம் வளா்ந்திருக்கிறது. ஆகவே, அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் தருவது கூடுதல் சுமையல்ல. ஏனெனில், சுமாா் 35 ஆண்டுகள் அரசில் பணியாற்றி விட்டு, வயது முதிா்ந்த காலத்தில் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நகா்த்துவதற்கு இந்த ஓய்வூதியம் பெரும் பயனாகவும், ஊழியா்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
ஆகவே, இதைச் செலவினமாகக் கருதக் கூடாது என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆகவேதான், ஊழியா்களின் பங்களிப்புத் தொகையைத் தவிா்க்கவும், திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் இவற்றில் இருந்து விலக்களிக்கவும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியா்களுக்கு தோராயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசு ஊழியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 23 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவா்கள், பணியின்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சுமாா் 54 ஆயிரம். இதில் 48 ஆயிரம் பேருக்கு மேல் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ பெற்று விட்டாா்கள். மிஞ்சி இருக்கிற கொஞ்சம் போ் மட்டும் பிற்காலத்தில் நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் செட்டில்மென்ட் வாங்காமல் காத்திருக்கிறாா்கள்.
தற்போது அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலமாக 10 ஆண்டுகளும், முழுப் பணிக்காலமாக 30 ஆண்டுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதித் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்ட காலத்தில் பணியில் சோ்ந்து ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்ற 48 ஆயிரம் பேருக்கும் சிறப்புக் கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது,. இவற்றில் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ மூலமாக பணம் கைக்கு வந்தாலும் அவை 5, 6 மாதங்களிலேயே செலவாவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அதற்கென்று ஒரு தேவை உருவாகி விடும். மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும் போது ஊழியா்களுடைய பங்களிப்பு 10 % என்பதும் தொடா்வதும், பணிக்காலத்தை நிறைவு செய்யாத ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது முரண்பாடுகளாகும். அவற்றுக்கு முறையான தெளிவான அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
தமிழ்நாட்டில் சுமாா் 9 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்றி வரும் நிலையில், இதில் பலருக்கும் பழைய ஓய்வூதியம் கிடையாது. குறிப்பாகச் சொன்னால் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் இருக்கிறது. அதன் பிறகு, பணியில் சேரும் ஊழியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்கிடையே, ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்கிற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசில் 2003-க்கு முன்பாக பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியத் தொகை கடைசி மாத ஊதியத்தில் 50 % உறுதியாகக் கிடைக்கும். ஊழியா்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து எந்தத் தொகையும் பங்களிப்பாக செலுத்தத் தேவையில்லை. முழுச் செலவையும் அரசே ஏற்கும். இதர பலன்கள், அகவிலைப்படி (டி.ஏ) உயா்வு உண்டு. குடும்ப ஓய்வூதியம் முழுமையாகக் கிடைக்கும். இது அரசுக்கு மிகப் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நிலவியது.
2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியத் தொகை முதலீடு சாா்ந்தது. நாம் முதலீடு செய்த தொகை மற்றும் சந்தை லாபத்தைப் பொருத்தே அமையும். ஓய்வூதியம் உறுதி கிடையாது. ஊழியா்கள் ஊதியத்தில் 10 % பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு 14% பங்களிப்பை வழங்குகிறது. ஓய்வு பெறும் போது 60 %தொகையை மொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகுப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து மாத ஊதியம் (ஆன்யுட்டி) வழங்கப்படும். அகவிலைப்படி உயா்வு கிடையாது. பங்குச்சந்தை அபாயமும் உள்ளது. ஆகவேதான், இது அரசு ஊழியா்களுக்கு விருப்பம் இல்லாத ஓய்வூதியமாக அமைந்து விட்டது.
‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் 2024-2025’ என ஊழியா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டம் மற்றும் முதலீடு கலந்த பலன்கள், ஊழியா் பங்களிப்பு ஆகியவை உள்ளன. அரசு தனது பங்களிப்பை வழங்கும். இதன் வாயிலாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கிறது. அகவிலைப்படி உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அரசுக்கும், ஊழியா்களுக்கும் இடையிலான ஒரு நடுத்தர, சமரச திட்டமாகும் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதியாக வழங்கி உள்ள நிலையிலும், அதைச் செயல்படுத்துவதற்கு அரசு தயாராக இல்லை. ஹிமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டமே அமலில் இருக்கிறது. முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2023 ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், 1.36 லட்சம் அரசு ஊழியா்கள் பலன் அடைந்து வருகிறாா்கள்.
2003 மே 15-க்குப் பிறகு, பணியில் சோ்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த ஊழியா்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம் என்ற வசதியையும் அங்கு ஏற்படுத்தியிருக்கிறாா்கள். ஓய்வு பெற்ற பிறகு ஊழியா்கள் தங்களின் கடைசி ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறலாம். சமீபத்திய தகவலின்படி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடா்ந்து செயல்படுத்த ஹிமாசல அரசு உறுதியாக உள்ளது. ஊழியா்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஹிமாசல பிரதேச அரசு சொல்கிறது.
தற்போதைய தமிழ்நாடு அரசு பல்வேறு நிலைப்பாடுகளில் மத்திய அரசை எதிா்த்துச் செயல்படுகிறது; ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்கிற கேள்வி எழுகிறது.
கட்டுரையாளா்:
முன்னாள் அமைச்சா்.
சமூக ஒற்றுமையின் விதைகள்!
DINAMANI
சமூக ஒற்றுமையின் விதைகள்!
நாம் சிறந்த மனிதா்கள் என்பதற்கு மனைவி, அண்டை வீட்டினா், நண்பா்கள் ஆகிய மூன்று தரப்பினரின் நற்சான்றிதழ் அவசியம்.

பிரதிப் படம்ENS
Updated on:
20 ஜனவரி 2026, 3:39 am
நசீா் அதாவுல்லாஹ்
இன்றைக்கு நகா்ப்புறங்களுக்கு பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயா்ந்து வருகின்றனா். 2050-ஆம் ஆண்டுக்குள் நம்நாட்டில் 52.8 சதவீத மக்கள் நகா்ப்புற வாழ்க்கைக்கு தள்ளப்படுவாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ‘அருகில் இருப்பவா் அயலான்-நெஞ்சில் இருப்பவா் உறவினா்’ என்பாா்கள். இன்றைக்கும் கிராமங்களில் அண்டை வீட்டாா் உறவு ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், நகா்ப்புறங்களில் பாலமாக இருக்க வேண்டிய இந்த உறவுமுறை எல்லைகளாக மாறி விட்டது.
காலையில் சென்று இரவில் திரும்பும் இயந்திர வாழ்க்கை அண்டை வீட்டாருடன் ஒரு நிமிஷம் பேசுவதற்கான நேரத்தைக்கூட நமக்குத் தருவதில்லை. நாம் சிறந்த மனிதா்கள் என்பதற்கு மனைவி, அண்டை வீட்டினா், நண்பா்கள் ஆகிய மூன்று தரப்பினரின் நற்சான்றிதழ் அவசியம். இவா்கள்தான் நம்மோடு அருகில் இருப்பவா்கள். பரபரப்பான வாழ்வின் ஓட்டத்தில் இந்தச் சான்றிதழைப் பெறுவது கடினமாகி விட்டது என்றாலும், நெருக்கடியான சூழ்நிலைகளில் நமக்கு உடனடி உதவியும், ஆறுதலும் தருவதில் இவா்கள்தான் முதன்மையானவா்கள்.
மன அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், குறிப்பாக இளம் தலைமுறையினா் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கைக்கு அண்டை அயலாருடன் நல்லுறவைப் பேணி வருவது மிக அவசியம்.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான உத்திகளைத் தேடி, அண்டை வீட்டாருடன் சிறிது நேரம் செலவிடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். நமது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அவா்களுடனான நல்லுறவு அவசியம். நாம் வாழ்க்கையில் உயா்வதைப் போல, நம் அண்டை வீட்டாரும் உயா்வதற்கு நாம் உதவ வேண்டும். அவா்கள் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் வாழ்த்துவது, துக்கம் என்றால் ஆறுதல் சொல்வது குறிப்பாக, அண்டை வீட்டாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனே சென்று நலம் விசாரிப்பது, தேவையான உதவிகளைச் செய்வது போன்ற செயல்கள் உறவுப் பாலத்தை உறுதியாக்கும். இவைதான் சமூக ஒற்றுமையின் விதைகள்.
நமது வாழ்வில் வேலை, தொழில் நிமித்தமாகப் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியவா்களாக இருக்கிறோம். பேருந்து, ரயில், விமானத்தில் சில மணி நேரங்கள் செலவிட வேண்டியுள்ளது. அந்த வேளையில் கைப்பேசியில் தலை கவிழ்ந்து இருப்பதைவிடவும் அருகில் இருக்கும் சக பயணிகளிடம் (அவருக்கு இடையூறு இல்லாமல்) சில அன்பான வாா்த்தைகள், நலன் விசாரிப்புகள் செய்யலாம். குறைந்தபட்சம் புன்முறுவல் பூக்கலாம். அதன் மூலமாக புதிய நட்புகள் உருவாகலாம்-பயணமும் இனிதாகலாம்.
மூத்த குடிமக்கள், இளைஞா்கள், பிள்ளைகள், சான்றோா்களுடன் நமது சந்திப்பைத் தவிா்க்கக் கூடாது. சில நிமிஷ சந்திப்புகள், உரையாடல்கள் நமக்கும், அவா்களுக்கும் பெரும் பலனைத் தரும். மனித உறவுகளின் இடைவெளியைக் குறைக்கும்.
ஊரெல்லாம் பத்திரிகை வைத்து தங்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு அழைப்பு விடுப்பாா்கள். பக்கத்துக்கு வீட்டாருக்கு அழைப்புத் தருவதில்லை. இது மிகவும் வெறுக்கத்தக்க குணம் ஆகும். வெளிப்பாா்வைக்கு சிலா் கரடுமுரடாக தெரிவாா்கள். நெருங்கிப் பழகினால்தான் அவா்களின் உண்மை இயல்பை அறிந்து கொள்ள முடியும். இவா்கள் பலாப் பழத்தைப் போன்றவா்கள். வெளித்தோற்றதை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீா்கள்.
நம்மைச் சுற்றியுள்ள மக்களை அறிந்து கொள்வது நம்மை மேலும் பாதுகாப்பாக உணர வைக்கிறது. நாம் உதவியற்ற சூழ்நிலையில் நமக்கு உதவ ஒருவா் இருக்கிறாா். ஏனென்றால், உங்கள் நெருங்கிய அண்டை வீட்டாா் உங்கள் தொலைதூர சகோதரனைவிட சிறந்தவா். காரணம், முதலில் உதவிக்கரம் நீட்டுபவா்கள் அண்டை வீட்டாா்தான் என்பது நடைமுறை உண்மையாகும்.
பக்கத்து வீட்டினா் அனைவரும் நல்லவா்களாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதில் தவறில்லை. அதற்கு முதலில் நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் தோட்டத்தில் இருந்து பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அண்டை வீட்டாருடன் பகிா்ந்து கொள்வது சிறப்பான விஷயமாகும். அவா்களும் தங்கள் வீட்டில் செய்த இனிப்புகள் உள்ளிட்டவற்றை உங்களுடன் பகிா்ந்து கொள்வதில் ஆா்வமுடன் இருப்பாா்கள். அன்பும் நட்பும் உறுதியாகும்.
சமூகத்தில் மாற்றம் தொடங்க வேண்டிய இடம் நம் வாசல்! சமூக ஊடகங்களில் எத்தனை நண்பா்கள் இருந்தாலும், நம்முடைய அசல் சமூகம் நம்முடைய தெருவில்தான் உள்ளது. அண்டை வீட்டாரின் உரிமைகள் காப்போம்-உறவுகளைப் பேணுவோம். அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணும் செயலானது ஒரு வீட்டின் மதிப்பை உயா்த்துவதுடன், மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கைக்கான அடித்தளமாகவும் அமைகிறது.
அண்டை வீட்டாரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவரது ரகசியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடாது. அண்டை வீட்டருகே குப்பைகளை வீசுவதோ, கழிவு நீரை வெளியேற்றுவதோ ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவா் மற்றவரிடம் இருந்து பாதுகாப்பு உணா்வைப் பெறவில்லை என்றால், அவா் நல்ல அண்டை வீட்டாராகக் கருதப்பட மாட்டாா். சிறிய அன்பளிப்புகளைப் பரிமாறிக் கொள்வது உறவைப் பலப்படுத்தும்.
அற்புதமான அண்டை வீட்டு உறவுகளை அற்ப காரணங்களுக்காகப் புறக்கணித்து விடாமல் நல்லுறவைப் பேணி வருவோம். சிறு சிறு பிரச்னைகளை சுமுகமாக உரையாடி தீா்த்துக் கொள்ள வேண்டும். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய முடியும். அன்பைப் பரப்புவோம்; வெறுப்பை விரட்டுவோம்!
அண்டைவீட்டாா் உறவு அன்பால் தழைக்கிறது; சண்டையால் சிதறுகிறது. விட்டுக் கொடுத்தவா் கெட்டுப் போவதில்லை. நல்லுறவைப் பேணுவது சமூக அமைதிக்கும், தனிமனித மகிழ்ச்சிக்கும் மிகவும் அவசியமாகும். அவா்களுக்கு உதவுவதும், அன்பாக நடந்து கொள்வதும் நம்முடைய கடமையாகும். மௌனம் சுவா் கட்டும்; உரையாடல் பாலம் கட்டும். உரையாடுவோம்-உறவாடுவோம்!
Friday, January 9, 2026
மன நோய் தீர்க்கும் குணசீல பெருமாள்!
மன நோய் தீர்க்கும் குணசீல பெருமாள்!
மனநோயாளிகளுக்கு நிவாரணம் தரும் குணசீலம் பெருமாள் கோயில் பற்றி..
குணசீலம் பெருமாள் கோயில் இணையதளச் செய்திப் பிரிவு
Updated on: 09 ஜனவரி 2026, 7:00 am
திருப்பதி வேங்கடாசலபதி மீது அபார பக்தி கொண்டிருந்த ரிஷி குணசீலருக்கு, ஓர் எண்ணம் உதித்தது. "பெருமாளை தரிசிக்க திருப்பதி சென்று வருகிறோமே... ஏன் பெருமாளையே நம் ஆசிரமத்தில் எழுந்தருளச் செய்யக் கூடாது?'' - இந்த எண்ணம் அலைமோத பெருமாளை நோக்கி ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். அவரது தவத்துக்கு இரங்கிய பெருமாள் காட்சி தந்து வேண்டும் வரம் கேட்டார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் குணசீலர். அவர் விருப்பப்படி பெருமாள் அங்கு எழுந்தருள, அந்த இடம் முனிவரின் பெயரால் குணசீலம் என்றே ஆனது.
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில், முசிறிக்கு சற்று முன்னர் சுமார் 25 கி.மீ. தொலைவில், காவிரியின் மறு கரையில் உள்ளது குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில். ஆலயத்தின் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம். அதில் அனுமன் புடைப்புச் சிற்பமாகத் திகழ்கிறார். கோயில் அழகிய கோபுரம், கொடிமரம், தீர்த்தக் குளம் உள்ளிட்ட அனைத்துடனும் திகழ்கிறது.
இங்கே ஒரு விசேஷ அம்சமாக, வைகானஸ ஆகமத்தைத் தோற்றுவித்த ஸ்ரீவிகனஸருக்கு தனி சன்னதி உள்ளது. ஆவணித் திருவோண நாளில் இவர் புறப்பாடு கண்டருள்கிறார். இங்கே பெருமாளுக்கு மட்டுமே சன்னதி உள்ளது. தாயாருக்கு இல்லை. வேறு பரிவார மூர்த்தங்களும் இல்லை. மூலவர் சாளக்ராம மாலை அணிந்து அழகாகக் காட்சி தருகிறார். திருப்பதி வேங்கடேசரைப் போன்ற உருவம். உற்ஸவர் ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். சுவாமி சன்னதியை வலம் வரும்போது, கோஷ்ட தெய்வங்களாக நவநீத கிருஷ்ணர், நரசிம்மர், வராஹர், யக்ஞநாராயணர் ஆகியோர் உள்ளனர். சன்னதி வலம் வரும்போது உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் இருப்பதைக் காணலாம்.
இங்கே தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. திருமஞ்சனம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது.
மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்தி அடைய வழிபடவேண்டிய தலம் இது. இங்கே, மனநோயாளிகள் தங்கியிருக்க இலவசமாக செயல்படும் மறுவாழ்வு மையம் உள்ளது.
காலை, மாலையில் பெருமாளுக்கு நடக்கும் விசேஷ பூஜைகளின்போது இவர்களுக்கு பிரசாத தீர்த்தம் தருகின்றனர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச் செய்து, நடக்கும் பூஜையை தரிசிக்கச் செய்கின்றனர். திருமஞ்சன தீர்த்தத்தை பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளிக்கிறார்கள்.
காலை, மாலையில் பெருமாளுக்கு நடக்கும் விசேஷ பூஜைகளின்போது இவர்களுக்கு பிரசாத தீர்த்தம் தருகின்றனர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச் செய்து, நடக்கும் பூஜையை தரிசிக்கச் செய்கின்றனர். திருமஞ்சன தீர்த்தத்தை பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளிக்கிறார்கள்.
மேலும், கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் ச்ருத தேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கே தங்கள் குறை நீங்கப் பெற்றுள்ளனர். இவ்வாறு, பார்வைக் கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் மன நிம்மதிக்காகவும், நிவாரணம் பெறவும் பெருமாளை வேண்டிக் கொள்கின்றனர்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
புத்தகத் திருவிழாவின் ஒட்டு மொத்த வெற்றியை கூட்டத்தின் எண்ணிக்கையால் மட்டுமே அளவிடக் கூடாது.
தினமணி செய்திச் சேவை, பொ. ஜெயசந்திரன் Updated on: 09 ஜனவரி 2026, 4:32 am
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் "பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற "ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், 49-ஆவது புத்தகத் திருவிழா வியாழக்கிழமை (ஐன. 8)- முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆயிரம் அரங்குகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள் கொண்ட புத்தகங்கள் இடம் பெறலாம்.
இத்திருவிழா பொங்கல் விடுமுறையில் நடத்தப்படுவது ஒரு பொதுவான நடைமுறை. சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர் பயணம், உறவினர்கள் சந்திப்பு, கோயில் விழாக்கள், பாரம்பரியமான மதுரை ஜல்லிக்கட்டு- இதற்கெல்லாம் திட்டமிட்டு போக்குவரத்துக்கு முன்பதிவு செய்கின்றனர்.
பிற மாவட்டங்களிலிருந்து புத்தகத் திருவிழாவுக்காக சென்னைக்கு வர நினைக்கும் வாசகர்கள் கூட்ட நெரிசலால் பயணத்தைத் தவிர்க்கக் கூடும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கனடா, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்களோ, விமானக் கட்டண உயர்வு; டிக்கெட் கிடைக்கவில்லை போன்ற காரணங்களால் வர இயலாமல் போகலாம். இங்குள்ள மாணவர்கள் விடுமுறைக்கு சொந்த ஊர் அல்லது சுற்றுலா செல்லக்கூடும்.
புத்தகத் திருவிழா என்பது அறிவின் திருவிழா. அது மன அமைதி, நேரம், கவனம் ஆகியவற்றை நாடும் ஒன்று. பொங்கல் விடுமுறை காலத்தில், வாசகர்களின் கவனம் இயல்பாகவே சிதறுகிறது. புத்தகங்கள் வாங்க வருகிறார்களா? குடும்பக் கடமைகளுக்கிடையே வேகமாக, ஓடி வந்து ஒரு சுற்று பார்ப்பதற்கு மட்டுமா? என்று பல கேள்விகள் உருவாகலாம். ஆகவே, அனைத்துத் தரப்பிலும் பொங்கல் நேரத்தில் புத்தகத் திருவிழா என்பது வாசகர்களுக்கு சிறிய பின்னடைவே. வரும் காலங்களில் இதில் மாற்றம் செய்யலாம்.
சென்னை, ஈரோடு, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி, இன்று சிறு நகரங்களில்கூட புத்தகத் திருவிழாக்கள் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், இதில் எழும் முக்கியமான கேள்வி, இளைஞர்கள் எங்கே?; அரங்குகளில் பெரும்பாலும் நடுத்தர வயதினரும், மூத்தவர்களுமே அதிகம் காணப்படுகின்றனர். மாணவர்கள் வருகிறார்கள் என்றாலும், அவர்களின் பங்கேற்பு, புத்தகங்கள் வாங்குதல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செல்ல வாய்ப்புக் குறைவு. இதே நிலை நீடித்தால், புத்தகத் திருவிழாக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக வாய்ப்புண்டு. எந்த அறிவுசார் இயக்கமும் இளைஞர்கள் இல்லாமல் நீடிக்க முடியாது.
இளைஞர்கள் புத்தகங்களை விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். ஆனால், புத்தகத் திருவிழாக்களின் மாலை நேரத்தில் நடக்கும் நிகழ்வில், ஒரு விசித்திரமான ஒற்றுமை காணப்படுகிறது. எந்த மாவட்டம் என்ற வேறுபாடில்லாமல் மேடைகளில் பேசுபவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சிலரே. ஆனால், இன்றைய இளைஞர்களுக்குத் தேவை கேட்பதற்கான மேடைமட்டுமல்ல, பேசுவதற்கான மேடைதான். புத்தகத் திருவிழாக்களில் இளைஞர்களுக்கு பேச வாய்ப்பளிப்பது மிகக் குறைவு.
புத்தகங்கள் தலைமுறைகளை இணைக்கும் பாலம். அதன் நடுப்பகுதியில் இளைஞர்கள் நிற்கவில்லை என்றால், அந்தப் பாலம் ஒரு நாள் பயன்பாடில்லாமல் காணாமல் போய்விடும். இளைஞர்களை நாளைய வாசகர்கள் என்று பார்ப்பதைவிட, இன்றைய பங்கேற்பாளர்கள் என பார்க்கும் மனநிலை மிக அவசியம்.
அறிவுத் திருவிழா என்பது புதிய குரல்களை உருவாக்கும் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இலக்கியம், வரலாறு, சமூகநீதி எனப் பல துறைகளில் பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். புத்தகத் திருவிழா மேடைகளில் இவர்களுக்கு வாய்ப்பு அரிதே.
அதே வேளை, சிறிய பதிப்பகங்களுக்கும், புதிய எழுத்தாளர்களுடைய நூல்களுக்கும் உரிய இடம் வழங்கும்போது, புத்தகத் திருவிழா பல்வேறு வகையில் நன்மை பெறுகிறது. நூல் வெளியீட்டு விழாவில், குறைந்தபட்சம் 25 வாசகர்களுக்காவது அழைப்பு விடுத்தல், சமூக வலைதளத்தில் நூல் வெளியீடு குறித்த தகவல் பகிர்வது போன்றவற்றைச் செயல்படுத்தலாம்.
புத்தகத் திருவிழா என்பது வெறும் விற்பனைக்கான இடம் மட்டுமல்ல. அது அறிவை விரிவுபடுத்தும் பொது வெளி. இது எப்போதும் உயிர்ப்புடன் இயங்க வேண்டுமென்றால் நடத்துபவர்கள், விற்பனையாளர், நூலாசிரியர், புத்தக ஆர்வலர்கள் எனஅனைவரின் ஒற்றுமை அவசியம். இந்த ஒற்றுமை இல்லாவிட்டால், புத்தகத் திருவிழா வணிகச் சந்தையாக மட்டுமே சுருங்கும்.
புத்தகத் திருவிழாக்கள் நடத்துபவர்கள் திசை காட்டினால், விற்பனையாளர்கள், நூலாசிரியர்கள் அதை நடைமுறையில் கொண்டு வருகிறார்கள். புத்தகங்களை நேசித்து வாங்குகின்ற வாசகர்கள் அதற்கு உயிர் கொடுக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் பயணம் செய்தால்தான், அது உண்மையில் அறிவைக் கொண்டாடும் விழாவாக இருக்கும்.
புத்தகத் திருவிழாவின் ஒட்டு மொத்த வெற்றியை கூட்டத்தின் எண்ணிக்கையால் மட்டுமே அளவிடக் கூடாது. எத்தனை புதிய வாசகர்கள் உருவாகியுள்ளனர்; எத்தனை உள் மாவட்ட புதிய எழுத்தாளர்கள் நூல்களை அறிமுகம் செய்தனர்; அர்த்தமுள்ள கலந்துரையாடலில் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்துள்ளது இதுபோன்ற மதிப்பீடுகள் அவசியம்.
புத்தகம் வாங்குவது மட்டுமல்ல, வாசகர்களின் கருத்தைக் கேட்பது, சிந்தனையை விவாதிப்பது, புதிய குரலை அறிமுகப்படுத்துவது- இவை அனைத்தும்தான் அறிவுத் திருவிழாவின் அடையாளம். அப்படிப்பட்ட அடையாளத்தை சென்னைபுத்தகத் திருவிழா உருவாக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
Thursday, January 8, 2026
எண்ணமே வாழ்வு!
DINAMANI
எண்ணமே வாழ்வு!
நம் உடல் மொழியாலும், செயல்களினாலும் மற்றவர்கள் மீது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் போது நம்மீதான சமூக நன்மதிப்பு உயர்கிறது.
ஐவி.நாகராஜன் Updated on: 08 ஜனவரி 2026, 7:23 am
வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறிய- பெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் எதிர் கொள்ளும் தோல்விகளால் மனம் உடைந்து வெளிவர முடியாத கூண்டுக்குள் நம்மை அடைத்துக் கொள்வதும், எதிர்- கொள்ளும் தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றுவதும் நம் எண்ணங்களைப் பொருத்தே அமையும்.
என்னால் முடியாது என்பதே மனதின் எண்ணமானால் நாம் எடுத்த காரியத்தைச் சாதிக்க முடியாது. என்னால் முடியும் என்பது எண்ணமாகும் போது வெற்றியை நோக்கிச் செல்வோம்.
தினமும் நாம் மற்றவர்கள் மீது பல வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். நம் உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள், உடன் செயல்படுகிறவர்கள், புதிதாகக் காண்பவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் நம்மால் பலதரப்பட்ட தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். நம்மைப் பற்றிய உயர்வான எண்ணத்தை மற்றவர்கள் கொள்வதும், நம்மைப் பற்றி தாழ்வாக அவர்கள் எண்ணுவதும் நம் கையில் இருக்கிறது.
நம் உடல் மொழியாலும், செயல்களினாலும் மற்றவர்கள் மீது நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் போது நம்மீதான சமூக நன்மதிப்பு உயர்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதும், மற்றவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதும், பொதுநலத் தொண்டு புரிவதும் நம் எண்ணங்களின் செயல்பாடே.
நம் மனதில் உலாவரும் எண்ணங்களில் ஒரு சிலவற்றின் மீதே நாம் நம் கவனத்தைத் திருப்புகிறோம். அந்த எண்ணம் காட்டும் வழியில் நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம். எண்ணற்ற எண்ணங்கள் மனதில் தோன்றி, வந்த வேகத்தில், நம் உணர்வுகளைத் தூண்டாது மறைந்தும் விடுகின்றன.
இலக்கை நோக்கி மனது திசை திருப்பும். இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை ஆராயும். இது குறித்த முந்தைய அனுபவங்கள் மற்றும் மனதில் உள்ள தகவல்கள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யும். ஆழ்மனதுடன் சைகைகள் வாயிலாகவோ, வார்த்தைகள் வாயிலாகவோ உரையாடும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா எண்ணங்களுக்கும் பின்னாலும் ஏற்படுவதில்லை.
எண்ணங்கள் பொதுவாக ஒரு இலக்கை மையப்படுத்தி தோன்றுகின்றன. நோக்கம் வேறுபடும் போதும், ஒவ்வொருவருக்கும் உள்ள அனுபவம் வித்தியாசமாக இருக்கும் போதும்,திறமையும் கல்வி அறிவும் வேறுபட்டு இருக்கும் போதும், ஆழ்மனதின் தேவைகள் மாறுபட்டு இருக்கும் போதும், உடல் மன நிலைகள் வெவ்வேறாக இருக்கும் போதும்
எண்ணங்கள் வேறுபடுகின்றன. இதன் காரணமாக எல்லா விஷயங்களிலும் இரு வேறு நபர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திப்பது இல்லை. அதே நேரத்தில் பொதுவான குறிக்கோளை அடைவதற்கான முயற்சி எடுக்கும்போது பலருடைய எண்ணங்கள் ஒத்திருப்பதையும் காணலாம்.
நம் எண்ணங்களே நம்மை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வெளிச்சமாகிறது. தரமற்ற எண்ணமுடையவர்கள் சமூகத்தின் பார்வையில் உயர்வானவர்களாகவோ சிறப்புகளுக்குத் தகுதியானவர்களாகவோ கருதப்படுவதில்லை. இதற்குக் காரணம் மனதின் எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே நம் குணமும் அமைந்துவிடுகிறது.
நம் எல்லாச் செயல்களும் எண்ணங்களாலேயே தோன்றுகின்றன. எதேச்சையாக நடக்கும் செயல்களுக்கும் திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்கும் இது பொருந்தும். எண்ணத்தின் உருவகமே செயல். மகிழ்வும் துக்கமும் எண்ணத்தின் வெளிப்பாடே.
மனதில் கொடிய, தீங்கிழைக்கும் எண்ணங்கள் ஒருவரைத் தீய செயலுக்கு உட்படுத்துகிறது. மனதில் எழும் எண்ணங்கள் தூய்மையாக, நல்லதாக இருக்குமேயானால் அவர் நற்செயல்கள் செய்கிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
உன்னதமான குணம் ஒருவருக்குத் திடீரென ஏற்படுவதில்லை. மேலிருந்து கொடுக்கப்படுவதுமில்லை. எண்ணங்களை நெறிப்படுத்துவதாலும், கட்டுப்படுத்துவதாலும், வழிமுறைப்படுத்துவதாலும் உயர் எண்ணங்கள் தங்குகின்றன. தவறான, சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எண்ணங்கள் மனதைவிட்டு ஒதுங்குகின்றன. மனமும் தூய்மை அடைகிறது.
எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்போது மகிழ்ச்சி நம்மைப் பின் தொடர்கிறது. நம் குணம் மற்றவர்களால் நம் வழித்தடங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் கருதப்படுகிறது. சான்றோர் அவையில் நமக்கென தனி இடம் கிடைக்கும், போற்றப்படும். எனவே, மறுக்க முடியாத தேவை. அதன் தொடர்ச்சியாக, வளமிக்க நல்வாழ்விற்கு நல்ல சிந்தனைகள் நம் மனதில் எண்ணங்களாக நிலைக்க வேண்டும்.
சுரங்கத்தின் ஆழத்தில்தான் தங்கமும் வைரமும் கிடைக்கும். ஆழ்மனதைத் தேடத் தேட நல்லெண்ணங்கள் ஊற்றாகப் பாயும். அவ்வெண்ணங்கள் நம் குணமாக மாறும். மனதைக் கட்டுப்படுத்தும். எண்ணங்களை ஏற்றத்தின் பாதையாக்கும் போது வியத்தகு நற்பெயர் நம்மைத் தேடிவரும். ஆழ்மனதைக் கேட்கும்போதும், தட்டும் போதும், தேடும்போதும்தான் நற்குணம் வெளிப்படும். முன்னேற்றத்திற்கான பாதைகள் உதயமாகும். இடைவிடாத முயற்சி மூலம் நம் குணத்தை மாற்ற முடியும்; சிறப்பானதாக்கவும் முடியும்.
பூக்கள் பூத்துக் குலுங்கும் தோட்டம் போன்றது மனது. அத்தோட்டத்தில் பூக்கும் பூக்களே எண்ணங்கள். சிறப்பாகத் திட்டமிட்டு உழைப்பது மூலம் நல்ல, அழகிய, பயன்தரக்கூடிய பூக்களை தோட்டத்தில் வளர்க்கலாம். கவனக்குறைவு காரணமாக தேவையற்ற முட்புதர்கள் தோன்றி நல்லெண்ணங்களை பாழ்படுத்த முடியும். கவனியாது விட்டுவிட்டால் பூக்கள் மறைந்து வறண்ட நிலமாகத் தோட்டம் மாறிவிடும். எனவே, மனதின் எண்ணங்களைத் தொடர்ந்து கண்காணித்தாக வேண்டும்.
எண்ணங்களும் குணங்களும் சூழலின் தாக்கத்தால் பாதிக்கப்படும். பல குணங்கள் நமக்கு இல்லை என்று தோன்றும். ஆனால் இக்கட்டான, இடர்கள் நிறைந்த, சவாலான சூழல்களில், எதிர்பாராதவிதத்தில் அக்குணங்கள் வெளிப்படும். ஆழ்மனதின் எண்ணங்கள் சூழ்நிலை ஏற்படும் போது குணமாக வெளிப்பட்டு விடும். வாழ்வில் வளர்ச்சியும் முன்னேற்றமும் தினம் தினம் ஏற்படுகிறது. இதனால் தினமும் மனதில் எழும் எண்ணங்கள் குறித்துக் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
Tuesday, January 6, 2026
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோப்புப்படம் பெ. சுப்ரமணியன் Updated on: 03 ஜனவரி 2026,
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், எல்லோரும் அறிந்திராத, உடனடி வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் எனும் எதிர்பார்ப்பில் புதிய படிப்புகளில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அத்துடன் போதிய உடற்திறனை எட்டியதும் வருமானம் ஈட்டவேண்டும் என்பதற்காக தொழிற்கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்வோர் கவனம் பெறாதவர்களாகவே இருந்தனர்.
ஒரு காலகட்டத்தில் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தபோது தொழிற்பயிற்சி நிலையங்களின் நிலை கவலைதரும் வகையில் இருந்தது. ஆனாலும், தொழிற்கல்வி பயிலும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் இருக்கவே செய்தது.
இதனால், பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளின் வளாகத்தில் தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்) தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை குறையத் தொடங்கி மூடப்பட்டாலும், அவ்வளாகத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
ஆயினும், பொறியியல் கல்லூரிகளில் தொழிற்கல்வி பயில்வதை பெருமையாகக் கருதும் மனநிலை இளைஞர்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது. தொழிற்கல்வி பயில வேண்டும் எனும் போது பொறியியல் கல்லூரிகளே பெரும்பாலானோரின் தேர்வாக இருந்தது. ஆனால், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர், குறைவான காலத்தில் வருமானம் ஈட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களுக்கு பொறியியல் கல்வி சாத்தியமானதாகக் கருதப்படவில்லை.
இத்தகையோரின் தேர்வு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களாகவே உள்ளது. ஆனாலும், தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் அரசு நடத்தும் 132 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்பட 543 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
குறைவான பாடப் பிரிவுகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு, மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றுவந்த நிலையில் அண்மைக்காலமாக மாணவிகளும் சேர்க்கை பெற்று வருகின்றனர். இதனால், கடந்த 2023-24-ஆம் கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 93.30 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து கடந்த 2024-25-ஆம் கல்வியாண்டில் கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், இராமநாதபுரம், நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு அதே ஆண்டில் சேர்க்கையும் நடைபெற்றது.
இந்நிலையில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியதால் 100 பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடங்க அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்கை பெறச் செய்ய முடியும் என்பதிலும், இடைநிற்றல் என்பது வெகுவாகக் குறையும் என்பதிலும் மாற்றமில்லை.
கடந்த 1981-இல் 32.95 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள்தொகை 2011கணக்கெடுப்பின்போது 48.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதேபோன்று சிறு கிராமங்களில் கூட நகர்ப்புறங்களின் தாக்கம் காணப்படுகிறது. அதனால், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், வெல்டிங் போன்ற பணிகளுக்கான பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பொதுவாக இதுபோன்ற திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் போது அரசியல் தலையீடுகள் இருப்பதுண்டு. குறிப்பாக, பள்ளிகள் தரம் உயர்வு, புதிய கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் போது போக்குவரத்து. குடிநீர், சாலைவசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் அரசியல் தலையீடுகளும் இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. எனவே, பள்ளி வளாக தொழிற்கல்வி நிலையங்கள் தொடங்கப்படுவதில் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அதிகப்படியான மாணவ-மாணவியர்கள் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்து அதனடிப்படையில் பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களின் அமைவிடத்தைத் தேர்வு செய்வது பொருத்தமானதாக இருக்கும். கிராமப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான இட வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிற்கல்வி எனும்போது அத்தொழிலைப் பற்றிய நுண்ணறிவைப் பெற்றவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், பள்ளி வளாக தொழிற்பயிற்சி நிலையங்களில் பற்றாக்குறையின்றி தொடர போதிய நிரந்தர ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
தொழிற்கல்வியைப் பொருத்தவரை எழுத்துமுறையைக் காட்டிலும் செய்முறைப் பயிற்சியே முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் போதிய கட்டட வசதிகளுடன் ஆய்வக வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். சரியான திட்டமிடலுடன் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்து போதிய உபகரணங்களைக் கொண்ட ஆய்வகங்களை அமைக்க வேண்டும்.
பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போதும், புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் போதும் வழக்கமான பாடப்பிரிவுகளே தொடங்கப்படுகின்றன. ஆனால், இவ்வகை தொழிற்பயிற்சி நிலையங்களில் வழக்கமான பாட ப்பிரிவுகள் அல்லாது தேவையான, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, எளிதில் வேலை கிடைக்கக்கூடிய பாடப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும்.
அதேபோன்று இதற்கான பூர்வாங்க பணிகளை முன்கூட்டியே தொடங் வேண்டும். கல்வியாண்டு தொடக்கத்தின்போது அல்லது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னதாக இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த அளவில் சேர்க்கை நடைபெறுவதுடன் இத்திட்டத்தின் நோக்கமும் நிறைவேறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
Monday, January 5, 2026
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
DINAMANI
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
ஐந்தாண்டு பட்ஜெட் வருவாயில் இரண்டாண்டு பட்ஜெட் ஆட்சி செய்வோரின் கஜானாவுக்கு எந்தெந்த வழிகளிலோ போய்விடுகிறதே என்பதைப் பற்றி...
ஆர். நடராஜன் Updated on: 05 ஜனவரி 2026, 3:30 am
இவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான். அதேநேரம் பணம் குறித்துக் கவலைப்படாமல் என்ன விலை கொடுத்தாலும் அந்தப் பொருளை டஜன் கணக்கில் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள் அரசியல்வாதிகள். பணம் என்னய்யா பணம், வாங்கிப் போடு எல்லாவற்றையும் என்பவர்கள் ஆளும்கட்சியினர். இதுதான் நம் ஜனநாயகத்தில் பதுங்கியுள்ள பண நாயகம்.
மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது என்று கவலைப்படுகிறார்கள் வர்த்தகர்கள். அரசின் புள்ளிவிவரங்களோ பொய்களுக்கு உண்மை முலாம் பூசி பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறது.
சரி, மக்களிடம் புழங்காத பணம், மக்கள் வரியாகச் செலுத்தும் பணம், எங்குதான் போகிறது? "நாங்கள் உங்கள் சேவகர்கள்' என்று கூறும் வெள்ளைச் சட்டைகளுக்குள் கருப்புப் பணமாக நிரம்பி வழிகிறது. அது ஆட்சி செய்வோரிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது என்பது உள்ளத்தைச் சுடும் உண்மை.
அந்தப் பணம் சில்லறைகளாகத் தேர்தல் காலத்தில் தலைகாட்டுகிறது. தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் ஒளித்து வைத்திருந்த கருப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சம் வெள்ளையாகத் தலைகாட்டுகிறது. அதுவும்கூட அதிகம் அல்ல. யானை தன் துதிக்கையால் எடுத்து வாயில் பிடித்துக் கொண்ட பெரிய சோற்று உருண்டையிலிருந்து சில பருக்கை கீழே விழுந்தால் அது பல எறும்புகளுக்கு உணவாகும். அதுபோலவே, வரிப் பணத்தை சாப்பிட்டவர்களிடமிருந்து கிடைக்கும் சில பருக்கைகளே தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் பணமும், பரிசுப் பொருள்களும்.
ஐந்தாண்டு பட்ஜெட் வருவாயில் இரண்டாண்டு பட்ஜெட் ஆட்சி செய்வோரின் கஜானாவுக்கு எந்தெந்த வழிகளிலோ போய்விடுகிறது. அது மாயப் பணம், நம் கண்களில் படுவதில்லை. ஒரு குடும்பத்தின் செலவு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று குடும்பத் தலைவனோ, தலைவியோ நினைக்கிறார்கள். வரவுக்குள் செலவை அடக்க வேண்டும் என்பதற்காக சிக்கனமாக வாழ்கிறார்கள்.
மாநிலமே தங்கள் குடும்பம் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் வரவுக்குள் செலவை அடக்குவதில்லை. அது முடியாதோ என்று கேட்டுவிட வேண்டாம். முடியும்; நிச்சயம் முடியும். வரவு முழுவதையும் வழியில் யாரும் மடக்கிவிடாமல் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.
அரசு கஜானாவிலிருந்து மக்கள் நலத் திட்டத்துக்காக செலவிடும் தொகை அந்தத் திட்டங்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். பொய்க் கணக்கு, இல்லாத கணக்கு எழுதி குறுக்குசால் ஓட்டக் கூடாது. இப்படி மக்கள் பணம் சிக்கனமாக பொய்க் கணக்கு எழுதப்படாமல் செலவிடப்பட்டால் வெளியே கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏதோ ஒரு அவசரத்துக்காக ஒரு குடும்பத் தலைவன் வெளியே கடன் வாங்கினால் அதை அடைக்கும் வரை கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறான். எல்லாவற்றிலும் சிக்கனத்தை நாடுகிறான். தேவைகளைக் குறைத்துக் கொள்கிறான். ஆனால், அரசு கடனுக்கு மேல் கடன் வாங்கி வட்டித் தொகையைச் செலுத்தவும் கடன் வாங்குகிறது. கடன் வாங்கியது குறித்துக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. புதிய செலவுகளை மேற்கொண்டு மேலும் மேலும் கடன் வாங்கப் பயப்படுவதில்லை. அதுதான் விசித்திரமாக இருக்கிறது.
அரசு வாங்கும் கடனை விமர்சிக்கும் எதிர்த்தரப்பும் ஆட்சிக்கு வந்தவுடன் கூடுதலாகவே கடன் வாங்குகிறது. இந்தியக் குடிமகன் கடனில் பிறந்து, கடனிலே வளர்ந்து, கடனிலேயே மரிக்கிறான். குடும்பத்தின் பெரியவர் தன் மனைவியையோ, மகனையோ பார்த்து, " வரவுக்குள் செலவு செய், கடன் வாங்காதே, உன் பிள்ளைக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, கடனில் தள்ளிவிடாதே' எனக் கூறுவது உண்டு. இது தனி மனித வாழ்க்கை. பொது வாழ்வில் நீதியும், நிதியும் மாறுபடுகின்றன. இந்த நிலையை மாற்ற முன்வரும் அறநெறி அரசியல் இன்று வரை இங்கு உருவாகவில்லை.
உண்மையுடன் நம்மவர்கள் எப்போதும் கூட்டணி வைத்துக் கொண்டதில்லை. ஆனால், கள்ளப் பணத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே கூட்டணி உண்டு. தெலங்கானாவில்-ஆந்திரத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இதே நிலை நிலவுகிறது. உளவுத் துறை சொல்லியிருப்பதாகத் தெரியவரும் தகவல்படி பேதாபேதமில்லாமல் தமிழக வாக்காளர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பதற்காக ஆங்காங்கே கல்லாக்கள் திறக்கப்பட்டதாகப் பரவலாகப் பேசிக் கொள்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது புதிதல்ல. ஒரு பழைய சம்பவத்தைப் பார்ப்போம். அது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி செலுத்திய காலம். அப்போது ராமேசுவரம் நகரின் மொத்த மக்கள்தொகை இருபதாயிரம்தான். அதில் சுமார் கால்வாசியினர்தான் வாக்காளர்கள். ஏனெனில், அப்போதைய வாக்குரிமை வயது 21. அப்போது காங்கிரஸ் கட்சி வாக்காளர்களுக்கு தலா இரண்டு ரூபாய் கொடுத்தது. காங்கிரûஸ எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர் கோடூர் ராஜகோபால சாஸ்திரி. நேர்மையான அந்தப் பிரமுகர் யாருக்கும் ஒரு காசு கொடுக்கவில்லை. ஆனாலும், அவரே பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அடுத்த தேர்தலிலும் கை சுத்தமான அந்த சாஸ்திரியே வென்றார். வாக்காளர்களுக்குக் கொடுத்த பணம் வாக்குகளில் எதிரொலிக்கவில்லை. மூன்றாம் முறையும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால சாஸ்திரியே வெற்றி பெறுவார் என்ற நிலை வந்தபோது அவரின் வாய்ப்பைத் தடுக்கும்படியாக அப்போதைய காங்கிரஸ் அரசு ராமேசுவரத்தின் நிர்வாகத்தை நகரியமாக (டவுன்ஷிப்) மாற்றி மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆட்சிக்குக் கொண்டுவந்தது. அதனால், தேர்தல் நடைபெறவில்லை.
அது பணம் வெற்றி பெற முடியாத காலம், இது பணம் மட்டுமே வெற்றி பெறும் காலம். அப்போது இரண்டு ரூபாய், இப்போது இரண்டாயிரம் ரூபாய். வாக்காளர்களின் மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்திருக்கிறது, பெருமைப்பட வேண்டாமோ? இப்போது நம் ஜனநாயகத்தில் பணம் உள்ளே, ஜனம் வெளியே.
அண்மையில் உளவுத் துறை தகவலின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தலா இரண்டாயிரம் என்றால் ஒரு தொகுதிக்கு ரூ. 40 கோடி செலவாகும்; 234 தொகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி செலவாகும்; இது வாக்காளர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் தொகை. வேட்பாளர்களின் பிரசார செலவுகளைச் சேர்த்தால் அது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆகலாம்.
இந்தப் பணமெல்லாம் ஊழல் முறைகேடுகளில் ஆட்சி செய்த, ஆளும் கட்சிகள் சேர்த்து வைத்துள்ள மொத்தத் தொகையில் அதிகபட்சமாக 10 % எனக் கணக்கிட்டால் அவர்களிடம் பதுங்கி இருக்கும் 90% தொகையை கணக்கிட முயன்றால், எந்த கால்குலேட்டரும் பளு தாங்காமல் உடைந்துவிடும்! யாரேனும் மனக்கணக்குப் போட முன்வந்தால் அவர்களுக்குத் தலை சுற்றும். இதை வாக்காளர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை.
எது எப்படியோ போகட்டும் என்ற மக்களின் பொதுவாழ்வு விலகல் தன்மையே இதற்குக் காரணம். அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல, மெத்த படித்தவர்களும்கூட விலகித்தான் இருக்கிறார்கள். மக்களின் இந்த மனநிலையே ஜனநாயகம் பணநாயகமாக மாற உதவுகிறது.
நம் தேசத்தில் தனி மனித நிதி நிர்வாகத்துக்கும் அரசு நிதி நிர்வாகத்துக்கும் நீதிநெறி அளவில் பெருத்தளவில் வேறுபாடு இருக்கிறது. இதை பல சமூக அமைப்புகளும் கண்டும் காணாமல் செல்கின்றன. வாக்காளர் என்ற திருமகன் திரு இல்லாத வெறு மகன் ஆகிறான். இதற்கெல்லாம் விடிவுகாலம் உண்டா? எப்போது, எப்படி?.
"யாருடைய பணமாக இருந்தால் என்ன, எடுத்துக் கொள், அனுபவி ராஜா அனுபவி' என ஏழேழு தலைமுறைக்கும் சேர்த்துக் கொள்வதே நம் ஜனநாயகத்தின் நிதி நிர்வாகம். வலுவான, ஒழுக்கமான, குடியரசுத் தலைவரின் முழுக் கட்டுப்பாட்டில் மத்திய அரசு இயங்க வேண்டும். அந்த மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளைக் கண்காணிக்க நேர்மையான ஒரு நிதித் தணிக்கைக் குழு இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற ஆட்சி ஓரளவுக்கு சாத்தியம்.
இப்படிச் சொன்னால் அது மறைமுகமான சர்வாதிகாரமாகாதோ என்கிற கேள்வி எழலாம். நேர்மையான, ஊழலற்ற ஆட்சி நடக்குமானால் பொதுமக்களைப் பொருத்தவரை தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காத கட்டுப்பாடான சர்வாதிகாரத்தை வரவேற்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஜனநாயகம் என்கிற பெயரில் தற்போது நடக்கும் அராஜகத்தையும், ஊழலையும், அடாவடித்தனங்களையும் பார்க்கும்போது, மனிதாபிமானத்துடன் கூடிய நேர்மையான சர்வாதிகாரமே மேல் என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
களத்தில் பிரசாரம் செய்யும் ருத்ராட்ச பூனைகளின் மியாவ், மியாவ் குரல்களுக்கு செவிசாய்ப்பவர்களாகவும், தேர்தல் அறிக்கைகளில் வீசப்படும் இலவசங்கள் என்கிற தூண்டில் புழுக்களுக்கு மயங்குபவர்களாகவும் வாக்காளர்கள் இருந்தால் அறநெறி சார்ந்த ஆட்சியை எதிர்பார்ப்பது கானல் நீரைப் போன்றதுதான்.
கட்டுரையாளர் : அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
Friday, January 2, 2026
புத்தாண்டு சபதங்கள்! புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்!
புத்தாண்டு சபதங்கள்! புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்!
புத்தாண்டுபடம் - பிடிஐ ஜி.மீனாட்சி Updated on: 02 ஜனவரி 2026, 7:01 am 2
DINAMANI
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது. ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்பதுபோல, புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்! சிலருக்கு புத்தாண்டு பிறந்தால்தான் புதுப் புது யோசனைகள், லட்சியங்கள், இலக்குகள் மனத்துக்குள் முகிழ்ந்தெழும்.
"கண்டிப்பா இந்த ஆண்டு முடியறதுக்குள்ளே 10 கிலோ எடை குறைச்சிடுவேன்' என்று சபதம் எடுப்பவர்கள் பலர். "வெளிநாட்டு மொழி ஒன்றை கற்றே தீருவேன்' என்று வீராவேசமாகக் கிளம்புவோர் பலர். இன்னும் சிலர், இந்தப் புத்தாண்டில் செய்ய வேண்டிய 10 விஷயங்கள், 20 காரியங்கள் என்று அவரவர் செய்ய விரும்பும் செயல்களை நாட்குறிப்பில் பட்டியலே போட்டு வைத்து விடுவார்கள்.
இன்னும் சில முன்ஜாக்கிரதைப் பேர்வழிகள் இருப்பார்கள். புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே அதிநவீன உடற்பயிற்சிக் கூடங்களிலோ அல்லது சங்கீத பயிற்சி நிறுவனங்களிலோ அல்லது ஆங்கிலப் பயிற்சிக்கூடங்களிலோ புத்தாண்டுமுதல் சேர்வதற்காக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, பணமும் கட்டி விடுவார்கள்.
புத்தாண்டு பிறந்த ஜனவரி தொடங்கி இரண்டு மூன்று மாதங்களுக்குள் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை சில பல மடங்குகள் அதிகரித்து, பின்னர் படிப்படியாகக் குறையும் என்பதை புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், புத்தாண்டு வரை காத்திருப்பானேன். இப்போதே... இந்த விநாடியே அதற்கான முயற்சியை எடுத்துவிடலாம் அல்லவா? புத்தாண்டு தினத்தையொட்டி தங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வது ஏன்? எந்த ஒரு நல்ல செயலைத் தொடங்குவதற்கும் நல்ல நாள், கிழமை பார்ப்பது வழிவழியாகவே நம் மனத்துக்குள் ஊறிப்போய்விட்டது. "நல்லது செய்ய நாளும் கோளும் தேவையில்லை' என்பது மூத்தோர் வாக்கு. "நன்றே செய்; அதை இன்றே செய்' என்கிறார்கள் சான்றோர்.
புத்தாண்டையொட்டி எல்லோரும் ஏதோ ஒரு பயிற்சியில் சேர்கிறார்கள் என்பதற்காக ஆர்வக் கோளாறு காரணமாக தம் பெயரையும் கொடுத்து பதிவு செய்து கொள்வார் பலர். இணையதளங்களில் வரும் பல்வேறு அறிவிப்புகளே அதற்குச் சான்று.
"அலுவலக அரசியலைச் சமாளிக்க வேண்டுமா? நான் மிகச் சிறந்த டிப்ஸ்களைத் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுங்கள். கட்டணம் ரூ.199 மட்டுமே' என்று வருகிறது ஒரு விளம்பரம்.
தொழில்முறையில் ஆங்கிலத்தை எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்க முன் வருகிறது ஒரு நிறுவனம்.
சில நிறுவனங்கள் புத்தாண்டையொட்டி குறைந்த கட்டணத்தில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதாக விளம்பரப்படுத்துகின்றன.
இப்படி புதிய புதிய பயிற்சி வகுப்புகள், ஆலோசனை மையங்கள், அறிவார்ந்த பயிற்சியாளர்கள் அணிவகுத்து வருகிறார்கள். இணையத்தில் உலவுபவர்களின் கண்களில் அடிக்கடி தென்படுகின்றன இந்த விளம்பரங்கள்.
இவற்றையெல்லாம் பார்ப்பவர்கள், தங்களின் முன்னேற்றத்துக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெறுகிறார்கள். அதுவும் சில நாள்கள், மாதங்களுக்கு மட்டும்தான். பிறகு அந்தப் பயிற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், நேரமின்மை என்பதுதான்.
புத்தாண்டு லட்சியங்களின் வாழ்நாள் இரண்டு மாதங்களுக்குள் நீர்க்குமிழிபோல் மறைந்து விடுகிறது. பெரும்பாலானவர்களின் புத்தாண்டுக் கனவுகள் கானல் நீராகிப் போவதற்கு என்ன காரணம்?
இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
என்கிறார் திருவள்ளுவர்.
திறமையற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர்கள் சிலராகவும், உறுதியற்றவர்கள் பலராக இருப்பதும்தான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
கொண்ட கொள்கையில் உறுதியும், கற்றுக் கொள்வதில் தீவிர வேட்கையும் இல்லாதவர்களின் புத்தாண்டு லட்சியம், வந்த சுவடு தெரியாமலேயே மறைந்துவிடும் என்பதுதான் உண்மை.
எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் விடாமுயற்சி, பயிற்சி, மன உறுதி ஆகிய மூன்றும் அவசியம். மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காக நாமும் ஒரு செயலைச் செய்ய முற்படுவது தோல்வியில்தான்
முடியும். நமது லட்சியங்கள் "எடுத்தேன்}கவிழ்த்தேன்' என்பதாக இல்லாமல், தெளிவான, உயர்ந்த குறிக்கோள்களுடன் கூடியதாக இருக்க வேண்டும். அந்த லட்சியங்களை அடைய, தொடர் பயிற்சியும், விடாப்பிடியான முயற்சியும் இருக்க வேண்டும். நினைத்தால் பயிற்சி செய்வது, நேரம் கிடைக்காவிட்டால் விட்டுவிடுவது என்றில்லாமல், தொடர் பயிற்சியும், முயற்சியும் மட்டுமே வெற்றிக்கு வித்திடும் காரணிகள்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்}செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
என்ற குமரகுருபரரின் இனிய பாடல் துன்பம், பசி, தூக்கம், பிறர் செய்யும் இடையூறுகள் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் தாம் செய்யும் பணியில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறது.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
என்ற குறளில் சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர்கள் ஆவர் என்கிறார் திருவள்ளுவர். சோம்பலும், முயற்சியின்மையுமே தோல்விக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உயர்ந்த லட்சியங்களை அடையும் செயல்களைச் செய்ய புத்தாண்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றே, இப்போதே தொடங்குங்கள். படிப்படியாய் உங்கள் முன்னேற்றம் சாத்தியமாகும்போது, ஒவ்வொரு நாளும் புத்தாண்டே!
Wednesday, December 31, 2025
இல்லறத்தின் எதிர்காலம்
இல்லறத்தின் எதிர்காலம்
DINAMANI
ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக் கொண்டனர்
தினமணி செய்திச் சேவை Updated on: 31 டிசம்பர் 2025, 3:02 am
ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக் கொண்டனர்; பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்னர், பயண நோக்கங்கள் குறித்துப் பேசினர். "நடைபெறும் திருமண நிகழ்வுக்குச் செல்லும் வேலையோடு நடந்து முடிந்த திருமண வீட்டுக்கும் செல்ல வேண்டியதிருக்கிறது' என்று சொன்னவரிடம் கேட்டவர் சொன்னார்;"எதற்கும் தெரிந்துகொண்டு செல்லுங்கள்'.
சற்றே குழப்பமாய்ப் பார்த்தார் சொன்னவர். கேட்டவர் விளக்கம் சொன்னார்; "முன்னே மாதிரி இப்போது இல்லை. அண்மையில் திருமணம் முடிந்த வீட்டுக்கு நல விசாரிப்புக்குச் சென்றிருந்தேன். அவர்கள் கேட்டார்கள் தெரிந்துகொண்டுதான் வந்தீர்களா என்று'. என்னவென்று விசாரித்தால், திருமணம் முடிந்த மூன்று நாள்களுக்குள்ளே மணமுறிவு வந்து மணமக்கள் பிரிந்துவிட்டார்கள். அது தெரிந்துதான் விசாரிக்க வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதுமாதிரி, திருமணமான மணமக்கள் இப்போது ஒன்றாக இருக்கிறார்களா, நன்றாக இருக்கிறார்களா? என்று தெரிந்துகொண்டு போனால் நல்லது.
விமானத்துக்கான அறிவிப்பு வந்ததும் அவர்கள் சென்று விட்டார்கள். அந்த உரையாடல் மேலும் பல நினைவலைகளை என்னுள் எழுப்பியது.
முன்பெல்லாம் எந்தவிதக் கருத்து முரண்கள் வந்தாலும் உறவுக்காக, பிள்ளைகளுக்காக, உலகத்தவர்க்காக, சரிசெய்து கொண்டு வாழும் நிலை இருந்தது.
"ஒன்றன் கூறாடை உடுப்பாரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' என்று கலித்தொகை அன்பில் விளைந்த அறம் மலிந்த வாழ்க்கை அனுபவத்தை அழகாகப் பாடியிருக்கிறது (பாலைக்கலி-18).
மரணம் கூடப் பிரிக்கக் கூடாது என்ற மன உறுதி கொண்டு வாழ்ந்த லட்சியத் தம்பதிகளையும் வரலாறு கண்டிருக்கிறது.
"பிறந்த வீட்டில், தேனும் பாலும் கலந்து உண்ட வசதிமிகு வாழ்க்கை இருந்தது உண்மைதான். ஆனால், தான் வாழப் புகுந்த வீட்டில், மானும் ஏனைய விலங்குகளும் கலக்கி உண்டு எஞ்சிய, இலை தழைவீழ்ந்து கலங்கிய நீர் அதைவிடவும் சுவை மலிந்தது' என்று தலைவி சொல்லும் அளவுக்கு அவர்மேல் கொண்ட அன்பின் பெருக்கத்தைக் கபிலரும் பாடியிருக்கிறார். (ஐங்குறுநூறு-203)
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (குறள்-60)
என்கிறார் திருவள்ளுவர்.
நன்மக்களைப் பெறுதற்காக, ஆணும் பெண்ணும் கூடி வாழ்வது வாழ்வியல் அறமாகவும், குழந்தைகள் நலனுக்காக தன்னலம் துறப்பது பொதுமை நெறியாகவும் நம்மிடையே இருந்தன. இல்லறத்திலும் துறவறம் பேணுகிற நல்லறமும் நடைமுறையில் இருந்தது. வசதிக் குறைபாடுகள் மிகுந்திருந்த காலத்தில் அன்பின் குறைபாடு ஒருபோதும் இருந்ததில்லை. அன்பின் பெருக்கம், வசதிச் சுருக்கத்தையும் வாழ்க்கைத் துயர்களையும் பொசுக்கிவிடுவதாய் அமைந்தது. அன்பும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அனைத்தையும் ஈடுகட்டிக் கொண்டிருந்தன. ஒருவர் அனைவருக்காகவும், அனைவரும் ஒருவருக்காகவும் கொண்டு-கொடுத்து உறவினைப் பேணி வளர்க்கும் தன்மை இருந்தது. தனிப்பட்ட நிலையில் ஏற்படும் விருப்பு-வெறுப்புகளை, கசப்பு-இனிப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காலங்கடத்த முடிந்தது; அந்தரங்கம் புனிதமாகக் கருதப்பட்டது.
அதனால், நல்லதும் பொல்லாததும் நிகழவே செய்தன. நல்லவை நிலைக்கவும், அல்லவை போக்கவும் முயற்சிகள் நடந்தன. வெளிச்சொல்ல முடியாத துயரங்களும் தொடர் இன்னல்களும் மலியத் தொடங்கிய பிறகு, இடையீடு இல்லாத உறவில் விரிசல்கள் எழுந்தன. அவை விரியவும் பலவிதக் காரணங்கள் உதவின.
"உடன்பாடு இல்லாதவர்களுடன் இணைந்து வாழ்தல் என்பது, பாம்பு உறையும் வீட்டினுள் வாழ்வது போன்றது' என்கிறார் திருவள்ளுவர் (குறள்-890). "ஒருவருக்கொருவர் பகைத்தும் சண்டையிட்டும் வாழ்வது பொருத்தமானதாகப் படவில்லை. வாழ்நாள் எல்லாம் வதைபடவேண்டாம்' என்கிற நிலையில், விடுதலை பெற்றுக்கொள்வது உசிதமாகப்பட்டது. முரண் முற்றிய நிலையில், நீதிமன்றங்களில் முறையிட்டு முறிவு செய்துகொள்ளும் நிலையும் அமைந்தது. திருமணம் எவ்வளவு புனிதமானதோ, அதைப் போலவே திருமண முறிவும் புனிதமாகக் கருதப்பட்டது.
ஜாதகங்கள் பார்த்து, பரிகாரங்கள் செய்து, ஒருவருக்கொருவர் பேசிவிட்டு நிச்சயம் செய்வதுகூட நிச்சயமற்றுப் போய்விடுகிறது. நிச்சயம் செய்த பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ள வசதியாய்க் கைப்பேசி உதவுகிறது என்றாலும், அவர்கள் பதற்றப்படவும், கோபப்பட்டுக்கொள்ளவும், சண்டையிட்டுப் பிரிந்துகொள்ளவும் அந்தக் கைப்பேசி உரையாடலே காரணமாகிவிடுகிறது என்பது பலரது அனுபவம்.
திருமணப் பதிவு நிலையங்கள், பதிவு ஊடகங்கள் வாயிலாக அறிந்து நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும்கூட, பொய்யும் குற்றமும் மலிந்து வருகின்றன.
ஆடம்பரமான மண்டபங்களில், அளவுக்கு மீறிய அலங்கார அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமண வைபவத்தில் முதல் நாளே, திரைப்படப் படப்பிடிப்பு போல, மணப்பெண்ணையும் மணமகனையும் இயக்கிப் பதிவு செய்யும் படங்கள், திருமணத்துக்குப் பின்னரும் இப்போது தொடரப்படுகின்றனவாம். தேனிலவுக்குச் செல்லும் இடங்களில் கூட, இப்படியான காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றனவாம். என்ன செய்து யாது பயன்? புறத்தில் செய்யப்படும் ஒப்பனைகளும் அழகுகளும் அகத்தில் ஒன்றாது போய்விடுகின்ற அவலம் மிகுந்து வருகிறதே.
உறவுக்கும் பிரிவுக்கும் காரணம் ஏதும் சொல்லத் தெரியாமல் "பிடிக்கவில்லை' என்ற ஒற்றை வார்த்தையைத் தூக்கிப் போடுவது இளைய தலைமுறையினரின் போக்காக இருக்கிறது. விரும்பி இணைபவர்களின் நிலைப்பாடு எப்படியோ?
நிச்சயம் செய்த பிறகு, ஒருவருக்கொருவர் பழகிக் கொள்ளவும் பேசிக் கொள்ளவும் அனுமதிக்கிற பெற்றோர் பாடு பெரும்பாடு ஆகிவிடுகிறது. கைப்பேசி உரையாடல்களில், திருமணத்துக்கு முன்பாகவே இணைந்து பழகி வருவதில் எழுகிற முரண்கள், கோபங்கள், அத்தனை பெரியவர்களின் தீர்மானங்களையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. ஊரைக்கூட்டி, உறவுகளைச் சேர்த்து பல லட்சக்கணக்கில் பணம் செலவழித்து நடத்திய திருமணம் இல்லங்களில் விரித்த பந்தல் பிரிக்குமுன்பே முறிந்துபோய் விடுகின்றன.
காரண காரியங்கள் இன்னதென அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர்களுக்குள் முரண்கள் நேர்கின்றன. அளவுக்கு மீறிய காட்சி ஊடகப் பதிவுகளின் தாக்கங்கள் அவர்களை ஆட்கொண்டு விடுகின்றன.
நடைமுறை அறியாது மேற்கொள்ளும் அவசர முடிவுகள் குடும்ப நெறிகளையே குலைத்துவிடுகின்றன.
"திருமணத்துக்குப் பிறகு மகப்பேறு தேவையில்லை என்ற கருத்தாக்கமும், பெற்றோர் உடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் பிரிவினைக்கு அடித்தளம் இடுகின்றன' என்கிறார்கள். "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற நிலையில் இயங்குகிற பிள்ளைகள்-பெரியவர்கள் ஆகிவிட்டபடியால், அவர்களுக்கும் பெரியவர்கள் சொல்கிற எதுவும் செவியேறுவதில்லை. வயதளவில் முதிர்ந்த பலருள்ளும் மனதளவில் முதிர்ச்சி இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றும் பாலியல் தொடர்பான புரிதல் இன்னும் பலருக்குத் தெளிவாகவில்லை என்றும் உளவியல் மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.
பெற்றோரின் நிர்ப்பந்தத்தை மீற முடியாமல் மனமின்றி ஒப்புக் கொள்ளுதல், மிரட்டல்களுக்குப் பயந்து இசைதல், பதவி-பணிகளால் ஏற்படும் தன்முனைப்பு, தாழ்வுமனப்பான்மை, விருப்பு வெறுப்பு, சக தோழமைகளின் விமர்சனங்கள், ஒப்பிட்டுப் பார்ப்பதில்-சொல்வதில் ஏற்படுகிற உரசல்கள், மெல்லிய சீண்டல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், சின்னச்சின்ன ஊடல்கள் என அனைத்தும் கூடி, ஒட்டுமொத்தப் பிரிவுக்கு வழிவகுத்து விடுகின்றன.
இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? தெரியவில்லை. யாருக்கும் எதற்கும் உத்தரவாதமில்லாத நிலை. வாழ்க்கையே நிலையாமைத் தன்மை உடையதுதான். என்றாலும், ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இல்லறநெறியும் இவ்வாறு ஆகி வருவது கவலை அளிக்கிறது. ஆண்-பெண் எண்ணிக்கையும் சம விகிதத்தில் இல்லாத நிலையில், எதிர்காலத்தில் மக்கட்பேறு என்னவாகும்? முறிவின் தேவையை, நியாயத்தைச் சொல்லிக் காட்டும் பலரும் பிரிவின் துயரத்தைச் சொல்லாததும் பெருங்குறை.
இப்போது, எதிர்ப்படும் எவரிடத்திலும் குடும்பம், குழந்தைகள் குறித்து விசாரிக்காமல் இருப்பதே நல்லது என்கிற முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது சூழல். எப்படியும் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபிறகு, அடிப்படை அறங்கள் தகர்ந்துபோகத்தான் செய்யும். என்றாலும் இப்படியே போவது நல்லதுதானா எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.
வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கசப்புகள், துயரங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டாம் என்கிற நிலையில் பிரிந்து செல்வது மனித நியாயம்தான். வாழப் போகும் முன்பு, அதாவது, திருமண பந்தத்துக்கு உட்படும் முன்பு ஒரு முறைக்கு இரு முறை ஏன் பல முறைகூட நிதானித்துச் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று ஏன் தொடர்புடையவர்களுக்குத் தோன்றவில்லை என்பதே புரியவில்லை.
இளமையும், வசதியும், நட்பும் உறவுகளும் ஒரு காலகட்டம் வரைக்கும்தான் துணையாகும். என்றும் துணையாகும் இல்லறத் துணையுடன் இணைந்து பயணிக்கப் பொறுமையும் நிதானமும் மிகமிகத் தேவை என்பதை முதுமையும் தனிமையும் பின்னர் உணர்த்தும். அதனால் ஆவது யாது?
இணைந்த பெற்றோரால்தான் இப்பிறவி கிட்டியது என்பதைப் பிறந்த மக்கள் நன்றியோடு உணரத் தவறுகிறார்கள். விளைவு என்னவாகும் என்று சொல்லத் தெரியாமல், கைபிசைந்து நிற்கும் மூத்தவர்களின் அக்கறையை உதாசீனம் செய்து காலம் விரைகிறது. இது நல்லதா, கெட்டதா? இல்லறத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று செயற்கை நுண்ணறிவைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அது மட்டும் போதுமா?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
Tuesday, December 30, 2025
மொட்டுகள் கருகாமல் மணம் வீச...
மொட்டுகள் கருகாமல் மணம் வீச...
DINAMANI 30.12.2025
பெண் சிசுக்கருவை அழிப்பது, மனிதகுலத்தின் எதிர்காலத்தையே அழிப்பதற்குச் சமம்.
பிரதிப் படம்ENS இரா. சரவணன் Updated on: 30 டிசம்பர் 2025, 2:52 am 2 min read வளர்ச்சி மனிதகுலத்துக்கு கிடைத்த வரம். அதில் ஸ்கேன் போன்ற தொழில்நுட்பக் கருவிகள் மனிதர்களின் உடல்நலப் பிரச்னைகளை நுட்பமாக அறிந்து மருத்துவம் செய்யும்வகையில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால், அவற்றில் ஒன்று ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை அறியும் கருவியாகவும், அது பெண் கரு என்றால், அதை அப்போதே அழித்துவிடும் நிலைக்கான ஆயுதமாகவும் பலராலும் தவறாகப் பயன்படுத்தப்படுகி றது. தாயின் உடல்நலத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் அறியவந்த அற்புதக் கருவி எதிர்மறையாக கையாளப்படுகிறது.
இயற்கையின் சமநிலையைச் சீர்குலைக்கும் இந்தச் செயல், வருங்கால சமுதாயத்தில் பாலின விகிதத்தில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் கருக்கொலை சம்பவம் இப்போது பேசுபொருளாகியுள்ளது. பென்னாகரத்தை அடுத்த ஏரியூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், ஏற்கெனவே 2 பெண் குழந்தைகளுக்குத் தாய். இந்த நிலையில், மூன்றாவதாக கர்ப்பமான நிலையில் ஆண் வாரிசு வேண்டும் என்ற குடும்பத்தினரின் ஆசை மற்றும் சமூக அழுத்தத்தின் காரணமாக, இடைத்தரகர்கள் உதவியுடன் சட்டவிரோதமாகப் பாலினத்தைக் கண்டறிந்தார்.
கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன், சேலம் அருகேயுள்ள ஒரு செவலியர் மற்றும் பெண் இடைத்தரகர் மூலம் வீட்டிலேயே கருவை அழிக்க முயன்றதில், அந்தப் பெண் இறந்துபோனார்.
இது தனிப்பட்ட யாரோ ஒருவருக்கு நேர்ந்த கொடுமையல்ல. தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் சில நகர்ப்புறங்களிலும் வேரூன்றியுள்ள ஒரு மிகப்பெரிய பிற்போக்குத்தன குற்றத்தின் நேரடி வெளிப்பாடு.
பாதுகாப்பற்ற சட்டவிரோத முறையில் செய்யப்படும் இத்தகைய கருக்கலைப்புகள், சிசுவை மட்டுமல்லாது சமயத்தில் தாயையும் சேர்த்துக் கொன்றுவிடுவதால் இது கொலைக் குற்றத்துக்கு சமமே.
கருவில் இருக்கும் மொட்டு மலர்வதற்கு முன்பே கருகுவதற்கும் சில சமயங்களில் செடியும் சேர்ந்து சாம்பலாவதற்கும் மருத்துவத் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் மனிதவிரோதச் செயல்பாடுகளே காரணமாகின்றன.
இந்த சம்பவம்போல, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் கார்களிலேயே சிறிய ஸ்கேன் கருவியை வைத்துக்கொண்டு நடத்தப்பட்ட நடமாடும் ஸ்கேன் மையங்களைக் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கேன் கருவிகள், சீனாவிலிருந்து கால்நடை மருத்துவத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டவை என அறியப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அண்டை மாநிலங்களுக்கு கர்ப்பிணிகளை அழைத்துச் சென்று கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
ஐ.நா. மக்கள்தொகை நிதிய அறிக்கையின்படி நம் நாட்டில் நடைபெறும் தாய்மார்கள் இறப்பில், கணிசமான அளவு இத்தகைய பாதுகாப்பற்ற கருக் கலைப்பால் நிகழ்வதாகக் கூறப்படுவது, நம்மை அதிரவைக்கும் உண்மையாகும்.
அண்மையில் வெளியாகியுள்ள தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு 6-ஆவது சுற்றில் தமிழகத்தின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 1.4 முதல் 1.7 சதவீதம் வரை நிலை பெற்றுள்ளது. இது மறுசீரமைப்பு நிலை எனப்படும் 2.1 சதவீதத்தைவிடக் குறைவானதாகும். அதேசமயம் பிறப்பு பாலின விகிதம் அதிகரித்துள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், உயிரியல்ரீதியான சமநிலையை எட்ட இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.
கடந்த 2023-இல் தமிழகத்தில் 902,306 பிறப்புகள் பதிவாகியுள்ளன. பிறப்பு விகிதம் 11.7 சதவீதம். ஆனால், 2024-இல் பிறப்பு எண்ணிக்கை 8,42,412-ஆகக் குறைந்துள்ளது. இது 2023-ஐவிட 6.6 சதவீத சரிவாகும். அதேபோல, 2023-24-இல் தமிழகத்தில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 941 என இருந்தது. 2024-25 பிப்ரவரி வரை இது 940-ஆகஉள்ளது. சராசரியாக கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சுமார் 11 சதவீதம் குறைந்துள்ளதாக குடும்பநல அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பெண் பாலின விகித சரிவு எதிர்காலத்தில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் போவது தொடங்கி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது வரை கடுமையான சமூக விளைவுகளை ஏற்படுத்தும். இதைத் தடுப்பதற்காகவே இந்திய அரசு, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பேறுகாலப் பாலினத் தேர்வு தடைச் சட்டம் 1994-ஐ கடுமையாக்கியுள்ளது.
அதேபோல தமிழகத்தில் கர்ப்பமாகும் ஒவ்வொரு பெண்ணும் பிக்மி எண் ணைப் பெறுவது கட்டாயம். இந்த எண் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் பெற முடியாது. இது மேம்படுத்தப்பட்ட 3.0 மென்பொருள். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கர்ப்பிணிகள் இடம்பெயர்ந்தாலும் அவர்களைக் கண்காணிக்க முடிகிறது.
ஒரு பெண் கர்ப்பமாகப் பதிவு செய்யப்பட்டு, குழந்தை பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றால். அந்த கர்ப்பம் எப்படிக் கலைந்தது என்று சுகாதாரத் துறை கேள்வி எழுப்புகிறது. இது கள்ளக் கருக்கலைப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதால் தமிழக சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கை பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.
அதேபோல, அல்ட்ராசவுண்ட் இயந்திரங்களில் 'சைலண்ட் அப்சர்வர்' போன்ற கருவிகளைப் பொருத்துவதன் மூலம், ஒவ்வொரு ஸ்கேனும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலின சமத்துவம் குறித்த பாடங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பெண் குழந்தையும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையைப் பெற்றுள்ளது. பெண் சிசுக்கருவை அழிப்பது, மனிதகுலத்தின் எதிர்காலத்தையே அழிப்பதற்குச் சமம். சட்டத்தின் கரங்கள் குற்றவாளிகளின் கழுத்தை நெரிக்கும் அதேவேளையில், சமூகத்தின் கரங்கள் பெண் குழந்தைகளை அரவணைக்க நீண்டால் மட்டுமே, இந்த மொட்டுகள் கருகாமல் மலர்ந்து மணம் வீசும்.
Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...