Showing posts with label DINAMANI. Show all posts
Showing posts with label DINAMANI. Show all posts

Friday, January 2, 2026

புத்தாண்டு சபதங்கள்! புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்!

புத்தாண்டு சபதங்கள்! புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்!

புத்தாண்டுபடம் - பிடிஐ ஜி.மீனாட்சி Updated on:  02 ஜனவரி 2026, 7:01 am 2

DINAMANI 

சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது. ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்பதுபோல, புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்! சிலருக்கு புத்தாண்டு பிறந்தால்தான் புதுப் புது யோசனைகள், லட்சியங்கள், இலக்குகள் மனத்துக்குள் முகிழ்ந்தெழும்.

"கண்டிப்பா இந்த ஆண்டு முடியறதுக்குள்ளே 10 கிலோ எடை குறைச்சிடுவேன்' என்று சபதம் எடுப்பவர்கள் பலர். "வெளிநாட்டு மொழி ஒன்றை கற்றே தீருவேன்' என்று வீராவேசமாகக் கிளம்புவோர் பலர். இன்னும் சிலர், இந்தப் புத்தாண்டில் செய்ய வேண்டிய 10 விஷயங்கள், 20 காரியங்கள் என்று அவரவர் செய்ய விரும்பும் செயல்களை நாட்குறிப்பில் பட்டியலே போட்டு வைத்து விடுவார்கள்.

இன்னும் சில முன்ஜாக்கிரதைப் பேர்வழிகள் இருப்பார்கள். புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே அதிநவீன உடற்பயிற்சிக் கூடங்களிலோ அல்லது சங்கீத பயிற்சி நிறுவனங்களிலோ அல்லது ஆங்கிலப் பயிற்சிக்கூடங்களிலோ புத்தாண்டுமுதல் சேர்வதற்காக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, பணமும் கட்டி விடுவார்கள்.

புத்தாண்டு பிறந்த ஜனவரி தொடங்கி இரண்டு மூன்று மாதங்களுக்குள் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை சில பல மடங்குகள் அதிகரித்து, பின்னர் படிப்படியாகக் குறையும் என்பதை புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், புத்தாண்டு வரை காத்திருப்பானேன். இப்போதே... இந்த விநாடியே அதற்கான முயற்சியை எடுத்துவிடலாம் அல்லவா? புத்தாண்டு தினத்தையொட்டி தங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வது ஏன்? எந்த ஒரு நல்ல செயலைத் தொடங்குவதற்கும் நல்ல நாள், கிழமை பார்ப்பது வழிவழியாகவே நம் மனத்துக்குள் ஊறிப்போய்விட்டது. "நல்லது செய்ய நாளும் கோளும் தேவையில்லை' என்பது மூத்தோர் வாக்கு. "நன்றே செய்; அதை இன்றே செய்' என்கிறார்கள் சான்றோர்.

புத்தாண்டையொட்டி எல்லோரும் ஏதோ ஒரு பயிற்சியில் சேர்கிறார்கள் என்பதற்காக ஆர்வக் கோளாறு காரணமாக தம் பெயரையும் கொடுத்து பதிவு செய்து கொள்வார் பலர். இணையதளங்களில் வரும் பல்வேறு அறிவிப்புகளே அதற்குச் சான்று.

 "அலுவலக அரசியலைச் சமாளிக்க வேண்டுமா? நான் மிகச் சிறந்த டிப்ஸ்களைத் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுங்கள். கட்டணம் ரூ.199 மட்டுமே' என்று வருகிறது ஒரு விளம்பரம்.

தொழில்முறையில் ஆங்கிலத்தை எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்க முன் வருகிறது ஒரு நிறுவனம்.

சில நிறுவனங்கள் புத்தாண்டையொட்டி குறைந்த கட்டணத்தில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதாக விளம்பரப்படுத்துகின்றன.

இப்படி புதிய புதிய பயிற்சி வகுப்புகள், ஆலோசனை மையங்கள், அறிவார்ந்த பயிற்சியாளர்கள் அணிவகுத்து வருகிறார்கள். இணையத்தில் உலவுபவர்களின் கண்களில் அடிக்கடி தென்படுகின்றன இந்த விளம்பரங்கள்.

இவற்றையெல்லாம் பார்ப்பவர்கள், தங்களின் முன்னேற்றத்துக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெறுகிறார்கள். அதுவும் சில நாள்கள், மாதங்களுக்கு மட்டும்தான். பிறகு அந்தப் பயிற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், நேரமின்மை என்பதுதான்.

புத்தாண்டு லட்சியங்களின் வாழ்நாள் இரண்டு மாதங்களுக்குள் நீர்க்குமிழிபோல் மறைந்து விடுகிறது. பெரும்பாலானவர்களின் புத்தாண்டுக் கனவுகள் கானல் நீராகிப் போவதற்கு என்ன காரணம்?

இலர் பலராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.

என்கிறார் திருவள்ளுவர்.

திறமையற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர்கள் சிலராகவும், உறுதியற்றவர்கள் பலராக இருப்பதும்தான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

கொண்ட கொள்கையில் உறுதியும், கற்றுக் கொள்வதில் தீவிர வேட்கையும் இல்லாதவர்களின் புத்தாண்டு லட்சியம், வந்த சுவடு தெரியாமலேயே மறைந்துவிடும் என்பதுதான் உண்மை.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் விடாமுயற்சி, பயிற்சி, மன உறுதி ஆகிய மூன்றும் அவசியம். மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காக நாமும் ஒரு செயலைச் செய்ய முற்படுவது தோல்வியில்தான்

முடியும். நமது லட்சியங்கள் "எடுத்தேன்}கவிழ்த்தேன்' என்பதாக இல்லாமல், தெளிவான, உயர்ந்த குறிக்கோள்களுடன் கூடியதாக இருக்க வேண்டும். அந்த லட்சியங்களை அடைய, தொடர் பயிற்சியும், விடாப்பிடியான முயற்சியும் இருக்க வேண்டும். நினைத்தால் பயிற்சி செய்வது, நேரம் கிடைக்காவிட்டால் விட்டுவிடுவது என்றில்லாமல், தொடர் பயிற்சியும், முயற்சியும் மட்டுமே வெற்றிக்கு வித்திடும் காரணிகள்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்}செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

என்ற குமரகுருபரரின் இனிய பாடல் துன்பம், பசி, தூக்கம், பிறர் செய்யும் இடையூறுகள் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் தாம் செய்யும் பணியில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறது.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.

என்ற குறளில் சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர்கள் ஆவர் என்கிறார் திருவள்ளுவர். சோம்பலும், முயற்சியின்மையுமே தோல்விக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உயர்ந்த லட்சியங்களை அடையும் செயல்களைச் செய்ய புத்தாண்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றே, இப்போதே தொடங்குங்கள். படிப்படியாய் உங்கள் முன்னேற்றம் சாத்தியமாகும்போது, ஒவ்வொரு நாளும் புத்தாண்டே!

Wednesday, December 31, 2025

இல்லறத்தின் எதிர்காலம்



இல்லறத்தின் எதிர்காலம்

DINAMANI

ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக் கொண்டனர்

தினமணி செய்திச் சேவை Updated on: 31 டிசம்பர் 2025, 3:02 am

ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக் கொண்டனர்; பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்னர், பயண நோக்கங்கள் குறித்துப் பேசினர். "நடைபெறும் திருமண நிகழ்வுக்குச் செல்லும் வேலையோடு நடந்து முடிந்த திருமண வீட்டுக்கும் செல்ல வேண்டியதிருக்கிறது' என்று சொன்னவரிடம் கேட்டவர் சொன்னார்;"எதற்கும் தெரிந்துகொண்டு செல்லுங்கள்'.

சற்றே குழப்பமாய்ப் பார்த்தார் சொன்னவர். கேட்டவர் விளக்கம் சொன்னார்; "முன்னே மாதிரி இப்போது இல்லை. அண்மையில் திருமணம் முடிந்த வீட்டுக்கு நல விசாரிப்புக்குச் சென்றிருந்தேன். அவர்கள் கேட்டார்கள் தெரிந்துகொண்டுதான் வந்தீர்களா என்று'. என்னவென்று விசாரித்தால், திருமணம் முடிந்த மூன்று நாள்களுக்குள்ளே மணமுறிவு வந்து மணமக்கள் பிரிந்துவிட்டார்கள். அது தெரிந்துதான் விசாரிக்க வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதுமாதிரி, திருமணமான மணமக்கள் இப்போது ஒன்றாக இருக்கிறார்களா, நன்றாக இருக்கிறார்களா? என்று தெரிந்துகொண்டு போனால் நல்லது.

விமானத்துக்கான அறிவிப்பு வந்ததும் அவர்கள் சென்று விட்டார்கள். அந்த உரையாடல் மேலும் பல நினைவலைகளை என்னுள் எழுப்பியது.

முன்பெல்லாம் எந்தவிதக் கருத்து முரண்கள் வந்தாலும் உறவுக்காக, பிள்ளைகளுக்காக, உலகத்தவர்க்காக, சரிசெய்து கொண்டு வாழும் நிலை இருந்தது.

"ஒன்றன் கூறாடை உடுப்பாரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' என்று கலித்தொகை அன்பில் விளைந்த அறம் மலிந்த வாழ்க்கை அனுபவத்தை அழகாகப் பாடியிருக்கிறது (பாலைக்கலி-18).

மரணம் கூடப் பிரிக்கக் கூடாது என்ற மன உறுதி கொண்டு வாழ்ந்த லட்சியத் தம்பதிகளையும் வரலாறு கண்டிருக்கிறது.

"பிறந்த வீட்டில், தேனும் பாலும் கலந்து உண்ட வசதிமிகு வாழ்க்கை இருந்தது உண்மைதான். ஆனால், தான் வாழப் புகுந்த வீட்டில், மானும் ஏனைய விலங்குகளும் கலக்கி உண்டு எஞ்சிய, இலை தழைவீழ்ந்து கலங்கிய நீர் அதைவிடவும் சுவை மலிந்தது' என்று தலைவி சொல்லும் அளவுக்கு அவர்மேல் கொண்ட அன்பின் பெருக்கத்தைக் கபிலரும் பாடியிருக்கிறார். (ஐங்குறுநூறு-203)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

நன்கலம் நன்மக்கட் பேறு (குறள்-60)

என்கிறார் திருவள்ளுவர்.

நன்மக்களைப் பெறுதற்காக, ஆணும் பெண்ணும் கூடி வாழ்வது வாழ்வியல் அறமாகவும், குழந்தைகள் நலனுக்காக தன்னலம் துறப்பது பொதுமை நெறியாகவும் நம்மிடையே இருந்தன. இல்லறத்திலும் துறவறம் பேணுகிற நல்லறமும் நடைமுறையில் இருந்தது. வசதிக் குறைபாடுகள் மிகுந்திருந்த காலத்தில் அன்பின் குறைபாடு ஒருபோதும் இருந்ததில்லை. அன்பின் பெருக்கம், வசதிச் சுருக்கத்தையும் வாழ்க்கைத் துயர்களையும் பொசுக்கிவிடுவதாய் அமைந்தது. அன்பும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அனைத்தையும் ஈடுகட்டிக் கொண்டிருந்தன. ஒருவர் அனைவருக்காகவும், அனைவரும் ஒருவருக்காகவும் கொண்டு-கொடுத்து உறவினைப் பேணி வளர்க்கும் தன்மை இருந்தது. தனிப்பட்ட நிலையில் ஏற்படும் விருப்பு-வெறுப்புகளை, கசப்பு-இனிப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காலங்கடத்த முடிந்தது; அந்தரங்கம் புனிதமாகக் கருதப்பட்டது.

அதனால், நல்லதும் பொல்லாததும் நிகழவே செய்தன. நல்லவை நிலைக்கவும், அல்லவை போக்கவும் முயற்சிகள் நடந்தன. வெளிச்சொல்ல முடியாத துயரங்களும் தொடர் இன்னல்களும் மலியத் தொடங்கிய பிறகு, இடையீடு இல்லாத உறவில் விரிசல்கள் எழுந்தன. அவை விரியவும் பலவிதக் காரணங்கள் உதவின.

"உடன்பாடு இல்லாதவர்களுடன் இணைந்து வாழ்தல் என்பது, பாம்பு உறையும் வீட்டினுள் வாழ்வது போன்றது' என்கிறார் திருவள்ளுவர் (குறள்-890). "ஒருவருக்கொருவர் பகைத்தும் சண்டையிட்டும் வாழ்வது பொருத்தமானதாகப் படவில்லை. வாழ்நாள் எல்லாம் வதைபடவேண்டாம்' என்கிற நிலையில், விடுதலை பெற்றுக்கொள்வது உசிதமாகப்பட்டது. முரண் முற்றிய நிலையில், நீதிமன்றங்களில் முறையிட்டு முறிவு செய்துகொள்ளும் நிலையும் அமைந்தது. திருமணம் எவ்வளவு புனிதமானதோ, அதைப் போலவே திருமண முறிவும் புனிதமாகக் கருதப்பட்டது.

ஜாதகங்கள் பார்த்து, பரிகாரங்கள் செய்து, ஒருவருக்கொருவர் பேசிவிட்டு நிச்சயம் செய்வதுகூட நிச்சயமற்றுப் போய்விடுகிறது. நிச்சயம் செய்த பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ள வசதியாய்க் கைப்பேசி உதவுகிறது என்றாலும், அவர்கள் பதற்றப்படவும், கோபப்பட்டுக்கொள்ளவும், சண்டையிட்டுப் பிரிந்துகொள்ளவும் அந்தக் கைப்பேசி உரையாடலே காரணமாகிவிடுகிறது என்பது பலரது அனுபவம்.

திருமணப் பதிவு நிலையங்கள், பதிவு ஊடகங்கள் வாயிலாக அறிந்து நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும்கூட, பொய்யும் குற்றமும் மலிந்து வருகின்றன.

ஆடம்பரமான மண்டபங்களில், அளவுக்கு மீறிய அலங்கார அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமண வைபவத்தில் முதல் நாளே, திரைப்படப் படப்பிடிப்பு போல, மணப்பெண்ணையும் மணமகனையும் இயக்கிப் பதிவு செய்யும் படங்கள், திருமணத்துக்குப் பின்னரும் இப்போது தொடரப்படுகின்றனவாம். தேனிலவுக்குச் செல்லும் இடங்களில் கூட, இப்படியான காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றனவாம். என்ன செய்து யாது பயன்? புறத்தில் செய்யப்படும் ஒப்பனைகளும் அழகுகளும் அகத்தில் ஒன்றாது போய்விடுகின்ற அவலம் மிகுந்து வருகிறதே.

உறவுக்கும் பிரிவுக்கும் காரணம் ஏதும் சொல்லத் தெரியாமல் "பிடிக்கவில்லை' என்ற ஒற்றை வார்த்தையைத் தூக்கிப் போடுவது இளைய தலைமுறையினரின் போக்காக இருக்கிறது. விரும்பி இணைபவர்களின் நிலைப்பாடு எப்படியோ?

நிச்சயம் செய்த பிறகு, ஒருவருக்கொருவர் பழகிக் கொள்ளவும் பேசிக் கொள்ளவும் அனுமதிக்கிற பெற்றோர் பாடு பெரும்பாடு ஆகிவிடுகிறது. கைப்பேசி உரையாடல்களில், திருமணத்துக்கு முன்பாகவே இணைந்து பழகி வருவதில் எழுகிற முரண்கள், கோபங்கள், அத்தனை பெரியவர்களின் தீர்மானங்களையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. ஊரைக்கூட்டி, உறவுகளைச் சேர்த்து பல லட்சக்கணக்கில் பணம் செலவழித்து நடத்திய திருமணம் இல்லங்களில் விரித்த பந்தல் பிரிக்குமுன்பே முறிந்துபோய் விடுகின்றன.

காரண காரியங்கள் இன்னதென அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர்களுக்குள் முரண்கள் நேர்கின்றன. அளவுக்கு மீறிய காட்சி ஊடகப் பதிவுகளின் தாக்கங்கள் அவர்களை ஆட்கொண்டு விடுகின்றன.

நடைமுறை அறியாது மேற்கொள்ளும் அவசர முடிவுகள் குடும்ப நெறிகளையே குலைத்துவிடுகின்றன.

"திருமணத்துக்குப் பிறகு மகப்பேறு தேவையில்லை என்ற கருத்தாக்கமும், பெற்றோர் உடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் பிரிவினைக்கு அடித்தளம் இடுகின்றன' என்கிறார்கள். "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற நிலையில் இயங்குகிற பிள்ளைகள்-பெரியவர்கள் ஆகிவிட்டபடியால், அவர்களுக்கும் பெரியவர்கள் சொல்கிற எதுவும் செவியேறுவதில்லை. வயதளவில் முதிர்ந்த பலருள்ளும் மனதளவில் முதிர்ச்சி இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றும் பாலியல் தொடர்பான புரிதல் இன்னும் பலருக்குத் தெளிவாகவில்லை என்றும் உளவியல் மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.

பெற்றோரின் நிர்ப்பந்தத்தை மீற முடியாமல் மனமின்றி ஒப்புக் கொள்ளுதல், மிரட்டல்களுக்குப் பயந்து இசைதல், பதவி-பணிகளால் ஏற்படும் தன்முனைப்பு, தாழ்வுமனப்பான்மை, விருப்பு வெறுப்பு, சக தோழமைகளின் விமர்சனங்கள், ஒப்பிட்டுப் பார்ப்பதில்-சொல்வதில் ஏற்படுகிற உரசல்கள், மெல்லிய சீண்டல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், சின்னச்சின்ன ஊடல்கள் என அனைத்தும் கூடி, ஒட்டுமொத்தப் பிரிவுக்கு வழிவகுத்து விடுகின்றன.

இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? தெரியவில்லை. யாருக்கும் எதற்கும் உத்தரவாதமில்லாத நிலை. வாழ்க்கையே நிலையாமைத் தன்மை உடையதுதான். என்றாலும், ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இல்லறநெறியும் இவ்வாறு ஆகி வருவது கவலை அளிக்கிறது. ஆண்-பெண் எண்ணிக்கையும் சம விகிதத்தில் இல்லாத நிலையில், எதிர்காலத்தில் மக்கட்பேறு என்னவாகும்? முறிவின் தேவையை, நியாயத்தைச் சொல்லிக் காட்டும் பலரும் பிரிவின் துயரத்தைச் சொல்லாததும் பெருங்குறை.

இப்போது, எதிர்ப்படும் எவரிடத்திலும் குடும்பம், குழந்தைகள் குறித்து விசாரிக்காமல் இருப்பதே நல்லது என்கிற முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது சூழல். எப்படியும் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபிறகு, அடிப்படை அறங்கள் தகர்ந்துபோகத்தான் செய்யும். என்றாலும் இப்படியே போவது நல்லதுதானா எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.

வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கசப்புகள், துயரங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டாம் என்கிற நிலையில் பிரிந்து செல்வது மனித நியாயம்தான். வாழப் போகும் முன்பு, அதாவது, திருமண பந்தத்துக்கு உட்படும் முன்பு ஒரு முறைக்கு இரு முறை ஏன் பல முறைகூட நிதானித்துச் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று ஏன் தொடர்புடையவர்களுக்குத் தோன்றவில்லை என்பதே புரியவில்லை.

இளமையும், வசதியும், நட்பும் உறவுகளும் ஒரு காலகட்டம் வரைக்கும்தான் துணையாகும். என்றும் துணையாகும் இல்லறத் துணையுடன் இணைந்து பயணிக்கப் பொறுமையும் நிதானமும் மிகமிகத் தேவை என்பதை முதுமையும் தனிமையும் பின்னர் உணர்த்தும். அதனால் ஆவது யாது?

இணைந்த பெற்றோரால்தான் இப்பிறவி கிட்டியது என்பதைப் பிறந்த மக்கள் நன்றியோடு உணரத் தவறுகிறார்கள். விளைவு என்னவாகும் என்று சொல்லத் தெரியாமல், கைபிசைந்து நிற்கும் மூத்தவர்களின் அக்கறையை உதாசீனம் செய்து காலம் விரைகிறது. இது நல்லதா, கெட்டதா? இல்லறத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று செயற்கை நுண்ணறிவைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அது மட்டும் போதுமா?

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

Tuesday, December 30, 2025

மொட்டுகள் கருகாமல் மணம் வீச...



மொட்டுகள் கருகாமல் மணம் வீச...

DINAMANI 30.12.2025

பெண் சிசுக்கருவை அழிப்பது, மனிதகுலத்தின் எதிர்காலத்தையே அழிப்பதற்குச் சமம்.

பிரதிப் படம்ENS இரா. சரவணன் Updated on: 30 டிசம்பர் 2025, 2:52 am 2 min read வளர்ச்சி மனிதகுலத்துக்கு கிடைத்த வரம். அதில் ஸ்கேன் போன்ற தொழில்நுட்பக் கருவிகள் மனிதர்களின் உடல்நலப் பிரச்னைகளை நுட்பமாக அறிந்து மருத்துவம் செய்யும்வகையில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால், அவற்றில் ஒன்று ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை அறியும் கருவியாகவும், அது பெண் கரு என்றால், அதை அப்போதே அழித்துவிடும் நிலைக்கான ஆயுதமாகவும் பலராலும் தவறாகப் பயன்படுத்தப்படுகி றது. தாயின் உடல்நலத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் அறியவந்த அற்புதக் கருவி எதிர்மறையாக கையாளப்படுகிறது.

இயற்கையின் சமநிலையைச் சீர்குலைக்கும் இந்தச் செயல், வருங்கால சமுதாயத்தில் பாலின விகிதத்தில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் கருக்கொலை சம்பவம் இப்போது பேசுபொருளாகியுள்ளது. பென்னாகரத்தை அடுத்த ஏரியூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், ஏற்கெனவே 2 பெண் குழந்தைகளுக்குத் தாய். இந்த நிலையில், மூன்றாவதாக கர்ப்பமான நிலையில் ஆண் வாரிசு வேண்டும் என்ற குடும்பத்தினரின் ஆசை மற்றும் சமூக அழுத்தத்தின் காரணமாக, இடைத்தரகர்கள் உதவியுடன் சட்டவிரோதமாகப் பாலினத்தைக் கண்டறிந்தார்.

கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தவுடன், சேலம் அருகேயுள்ள ஒரு செவலியர் மற்றும் பெண் இடைத்தரகர் மூலம் வீட்டிலேயே கருவை அழிக்க முயன்றதில், அந்தப் பெண் இறந்துபோனார்.

இது தனிப்பட்ட யாரோ ஒருவருக்கு நேர்ந்த கொடுமையல்ல. தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் சில நகர்ப்புறங்களிலும் வேரூன்றியுள்ள ஒரு மிகப்பெரிய பிற்போக்குத்தன குற்றத்தின் நேரடி வெளிப்பாடு.

பாதுகாப்பற்ற சட்டவிரோத முறையில் செய்யப்படும் இத்தகைய கருக்கலைப்புகள், சிசுவை மட்டுமல்லாது சமயத்தில் தாயையும் சேர்த்துக் கொன்றுவிடுவதால் இது கொலைக் குற்றத்துக்கு சமமே.

கருவில் இருக்கும் மொட்டு மலர்வதற்கு முன்பே கருகுவதற்கும் சில சமயங்களில் செடியும் சேர்ந்து சாம்பலாவதற்கும் மருத்துவத் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் மனிதவிரோதச் செயல்பாடுகளே காரணமாகின்றன.

இந்த சம்பவம்போல, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் கார்களிலேயே சிறிய ஸ்கேன் கருவியை வைத்துக்கொண்டு நடத்தப்பட்ட நடமாடும் ஸ்கேன் மையங்களைக் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கேன் கருவிகள், சீனாவிலிருந்து கால்நடை மருத்துவத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டவை என அறியப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அண்டை மாநிலங்களுக்கு கர்ப்பிணிகளை அழைத்துச் சென்று கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

ஐ.நா. மக்கள்தொகை நிதிய அறிக்கையின்படி நம் நாட்டில் நடைபெறும் தாய்மார்கள் இறப்பில், கணிசமான அளவு இத்தகைய பாதுகாப்பற்ற கருக் கலைப்பால் நிகழ்வதாகக் கூறப்படுவது, நம்மை அதிரவைக்கும் உண்மையாகும்.

அண்மையில் வெளியாகியுள்ள தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு 6-ஆவது சுற்றில் தமிழகத்தின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 1.4 முதல் 1.7 சதவீதம் வரை நிலை பெற்றுள்ளது. இது மறுசீரமைப்பு நிலை எனப்படும் 2.1 சதவீதத்தைவிடக் குறைவானதாகும். அதேசமயம் பிறப்பு பாலின விகிதம் அதிகரித்துள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், உயிரியல்ரீதியான சமநிலையை எட்ட இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

கடந்த 2023-இல் தமிழகத்தில் 902,306 பிறப்புகள் பதிவாகியுள்ளன. பிறப்பு விகிதம் 11.7 சதவீதம். ஆனால், 2024-இல் பிறப்பு எண்ணிக்கை 8,42,412-ஆகக் குறைந்துள்ளது. இது 2023-ஐவிட 6.6 சதவீத சரிவாகும். அதேபோல, 2023-24-இல் தமிழகத்தில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 941 என இருந்தது. 2024-25 பிப்ரவரி வரை இது 940-ஆகஉள்ளது. சராசரியாக கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சுமார் 11 சதவீதம் குறைந்துள்ளதாக குடும்பநல அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண் பாலின விகித சரிவு எதிர்காலத்தில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் போவது தொடங்கி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது வரை கடுமையான சமூக விளைவுகளை ஏற்படுத்தும். இதைத் தடுப்பதற்காகவே இந்திய அரசு, கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் பேறுகாலப் பாலினத் தேர்வு தடைச் சட்டம் 1994-ஐ கடுமையாக்கியுள்ளது.

அதேபோல தமிழகத்தில் கர்ப்பமாகும் ஒவ்வொரு பெண்ணும் பிக்மி எண் ணைப் பெறுவது கட்டாயம். இந்த எண் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் பெற முடியாது. இது மேம்படுத்தப்பட்ட 3.0 மென்பொருள். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கர்ப்பிணிகள் இடம்பெயர்ந்தாலும் அவர்களைக் கண்காணிக்க முடிகிறது.

ஒரு பெண் கர்ப்பமாகப் பதிவு செய்யப்பட்டு, குழந்தை பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றால். அந்த கர்ப்பம் எப்படிக் கலைந்தது என்று சுகாதாரத் துறை கேள்வி எழுப்புகிறது. இது கள்ளக் கருக்கலைப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதால் தமிழக சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கை பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.

அதேபோல, அல்ட்ராசவுண்ட் இயந்திரங்களில் 'சைலண்ட் அப்சர்வர்' போன்ற கருவிகளைப் பொருத்துவதன் மூலம், ஒவ்வொரு ஸ்கேனும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலின சமத்துவம் குறித்த பாடங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.



ஒவ்வொரு பெண் குழந்தையும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையைப் பெற்றுள்ளது. பெண் சிசுக்கருவை அழிப்பது, மனிதகுலத்தின் எதிர்காலத்தையே அழிப்பதற்குச் சமம். சட்டத்தின் கரங்கள் குற்றவாளிகளின் கழுத்தை நெரிக்கும் அதேவேளையில், சமூகத்தின் கரங்கள் பெண் குழந்தைகளை அரவணைக்க நீண்டால் மட்டுமே, இந்த மொட்டுகள் கருகாமல் மலர்ந்து மணம் வீசும்.

Sunday, December 28, 2025

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்!

ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல.

தினமணி செய்திச் சேவை Updated on:  27 டிசம்பர் 2025, 3:12 am 2 min read 

முனைவர் பாலசாண்டில்யன்

மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள். நாம் பார்ப்பதோ, ஒருவன் நினைப்பதோ அல்ல அவன். எதை மறைக்க முயல்கிறானோ அதுதான் அவன். நாம் மறக்க நினைக்கும் அல்லது மறைக்க நினைக்கும் ரகசியங்களைவிட நம்மை வேறெதுவும் தனிமைப் படுத்திவிடமுடியாது. ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல.

உலகத்தினருடன் நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை வைத்து நம்மைக் கண்டறிந்துவிட முடியாது. மக்கள் அந்த ரகசியத்தில் மூழ்கிப் போகும்போது சொன்ன வரை மறந்து போவர்.

நமது ரகசியங்களை மறைப்பது புத்திசாலித்தனம்; அதைச் சொல்லிவிட்ட பிறகு மறைத்திருக்கவேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். ரகசியம் என்பது யாருடனும் எந்தத் தருணத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாதது.

ரகசியம் பல வகை. அடுத்த வாரம் திருமணம்; பிள்ளையின் பிறந்த நாளுக்கு வாங்கி வைத்திருக்கும் பரிசு; காதல் செய் வது பெற்றோருக்குத் தெரியாமல் இருப்பது; புதிதாக ஏற்பட்டிருக்கும் (புகைத்தல்) பழக்கம் என இப்படி எல்லாமே ரகசியம் தான். ஒரு ரகசியத்தைக் காப்பது என்பது சொத்தைக் காப்பதைவிடக் கடினம்.

ரகசியங்கள் ஒருவரை நங்கூரம்போல முடக்கிப் போடும்; செயலிழக்க வைத்து விடும். ஒருவரின் உடல்நலன் சரியில்லை என்பது ரகசியம். அதை மிகவும் நெருக்கமானவர்களிடம் மறைக்கும்போது அந்த நோயின் தன்மையே அதிகம் ஆகிறது என்கின்றன பல ஆய்வுகள்.

உங்களிடம் ஒருவர் தனது ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார் என்பது மகிழ்ச்சி. அதே சமயம் மிகவும் மனதின் பாரமும் கூட. உங்களை நம்பி ஒருவர் சொல்லி இருக்கிறார் என்பது நல்ல விஷயம்தான். அதை நீங்கள் எப்படிப் பாதுகாப்பீர்கள் என்பது நமது கவலைதானே தவிர, ரகசியம் சொன்னவரது அல்ல.

ஏற்கெனவே நீங்கள் மறைத்து வைத்திருக்கும் உங்கள் ரகசியம், கூடுதலாக பிறரின் ரகசியம் வேறு; மனதின் பாரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. வளர்த்துக் கொள்ளும் மனஉறுதிதான் நமது நற் பெயர் மற்றும் நம்பகத்தன்மை இரண்டை யும் காப்பாற்றும்.

பிறர் நம்மிடம் ஒரு ரகசியத்தைச் சொல்கிறார் என்றால், அது சிறியதா அல்லது பெரியதா என்று பார்க்க வேண்டும். பெரியது என்றால் உங்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மிகவும் அதிகம் என்று அர்த்தம். நீங்கள் காக்க வேண்டியது இரண்டையும்தான். சில ரகசியங்கள் சட்ட ரீதியானதாக இருக்கலாம்; வணிக ரீதியாக இருக்கலாம்; அவை கசிந்து விட்டால் தெரிந்திருக்கும் நமது நிலை குறித்துத் தெரியாமல் போகலாம்.

குறிப்பாக, பிரபலங்களின் மறைவு வாழ்க்கை, சொத்துகள், அவற்றைச் சேர்த்த விதம், செய்யும் தொழில் என்று எல்லாமே ரகசியம் தான். அவை நமக் குத் தெரியாதவரை நல்லதுதான். அப்படிப்பட்ட சில ரகசியங்களை நம்மால் மனைவி அல்லது கணவரிடம்கூட சில நேரம் சொல்ல முடியாது. அதை மறைக்க நாம் படும்பாடு மிகக் கொடுமையானது. நமது சொந்த ரகசியம் என்றால், எவ்வளவு காலம் மறைக்கப்பட வேண்டும்; யாரிடம் இருந்து மறைக்கப்பட வேண்டும். சில நேரம் அது நிரந்தரமாக மறைக்கப்பட வேண்டிய ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால், எந்த ரகசியமும் ஒரு நாள் போட்டு உடைக்கப்பட்டு அதன் காலாவதி நாளை அல்லது இறுதி நாளை நெருங்கிவிடும்.

சில நேரம் நமது மன நிம்மதிக்காக கண்ணாடி முன் நின்று ஒரு முறை சொல்லிவிடலாம். சில நேரம் நமது டைரியில் எழுதி வைக்கலாம். அது யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது. எதுவும் தெரியாதது போலவே நடிப்பது என்பது ஒரு கலை. சிலருக்கு மட்டுமே அது கைவந்த ஒன்று. நம்மில் பலருக்கு நடுங்கும் கைகளும்சிமிட்டும் கண்களும் காட்டிக் கொடுத்து விடும். நேர்மையாக இருக்க அதிக துணிச்சல் வேண்டும். ரகசியமே இல்லாத திறந்த புத்தகமாக வாழ்ந்து மறைந்தவர் வெகு சிலரே. அந்தக் காலத்தில் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கப் போவது மிகுந்த ரகசியமாக இருக்கும். ஐபிஎல் விளையாட்டில் எந்த வீரரை ஓர் அணி எவ்வளவுரூபாய்க்கு ஏலம் எடுக்கப் போகிறது என்பது அண்மையில் ஏற்பட்ட ரகசிய நிகழ்வு.

தெரிந்த ஒரு ரகசியத்தை எப்போது வெளியே சொல்லலாம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு முக்கியத் தலைவர் இறந்து விட்டார் என்றால், அதை எப்போது எப்படிச் சொன்னால் பல்வேறு பொதுவெளி தொல்லை - தொந்தரவுகள் வராமல் சட்டம்-ஒழுங்கைக் காக்கலாம் என்று அரசும் அதிகாரிகளும் சிந்திப்பர்.

சொல்லக்கூடாத ஒரு ரகசியத்தை தவறிச் சொல்லிவிட்டு என்னாகுமோ என்ற மனநிலையில் தவிப்பவர்களை நாம் பார்த்திருப்போம். இப்போதெல்லாம் ஒரு படத் தில் யார் நடிக்கிறார்கள், என்ன வேடத்தில் நடிக்கிறார்கள், அதன் கதை என்ன, தலைப்பு என்ன என்பதை ரகசியமாக வைத்திருக்கும் நிலையைப் பார்க்கிறோம்.

ரகசியத்தை மறைக்கும் ஒருவரின் நடவடிக்கைகள் விநோதமாக இருப்பதைவைத்தே அவர் மீது சந்தேகம் வரக்கூடும். வேண்டாத விளக்கங்கள், தேவையற்ற புன்னகைகள், சமாளிப்புகள், வஞ்சக் கதைகள் எல்லாமே ஒருவரைக் காட்டிக் கொடுத்து விடும். சில பெண்கள் ரகசியங்களை மனதில் வைத்துப் பூட்டி சாவியை எறிந்து விடுவார்கள்.

நாயும் நரியும் முதலில் ஒன்றுபோலத் தெரிந்தாலும், அதன் குட்டு ஒரு நாள் வெளிப்படும். முழுப் பூசணியை சோற் றில் மறைக்க முடியாது என்பதுபோல், ஒரு நாள் ரகசியம் வெளியே வந்தே தீரும். சில சமயம் ரகசியம் அவருள் இருக்கும்; அவருடனேயே ரகசியம் புதைக்கப் படுவதும் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Friday, December 26, 2025

வாஜ்பாய் எனும் பன்முக ஆளுமை வாஜ்பாயின் பன்முக ஆளுமைத் திறன் குறித்து...

வாஜ்பாய் எனும் பன்முக ஆளுமை வாஜ்பாயின் பன்முக ஆளுமைத் திறன் குறித்து...

‘சதைவ் அடல்’ வாஜ்பாய் நினைவிடம்

முனைவா் கோ. விசுவநாதன் Updated on:  25 டிசம்பர் 2025, 4:56 am 3 min read 

ஒருமுறை அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு குறித்து குறிப்பிடும்போது, அவையில் மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவர் ஹிரேன் முகர்ஜி, ஹிந்தியில் மிகச் சிறப்பாக பேசக்கூடியவர் அடல் பிகாரி வாஜ்பாய் என்று சான்றிதழ் வழங்கினார் 1957-இல் மக்களவைத் தலைவராக இருந்த அனந்தசயனம் ஐயங்கார்.

வாஜ்பாய் 1957-இல் ஜனசங்கம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். பாரதிய ஜனசங்கம் என்கிற அரசியல் கட்சி, 1951-இல் சியாமா பிரசாத் முகர்ஜியால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவாகத் தொடங்கப்பட்டது. அதன் வளர்ச்சி நிதானமாக இருந்தது. 1967-இல் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாநிலங்களின் உள்ள சட்டப்பேரவைகளில் 300 உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக ஜனசங்கம் இருந்தது.

அவசரநிலைப் பிரகடனத்தின்போது வாஜ்பாய் போன்ற ஜனசங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். பெங்களூரில் ஒரு நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்துக்குச் சென்றபோது நான், வாஜ்பாய் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். நிலைக் குழுக் கூட்டம் முடிந்துவிட்டதால், நான் (கட்டுரையாளர்) பெங்களூரில் இருந்து வேலூருக்கு புறப்பட்டு வந்துவிட்டேன். ஆனால், அன்று நள்ளிரவு இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்து எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்தார். தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளரான வாஜ்பாயை நள்ளிரவில் தட்டி எழுப்பி கைது செய்தனர். மறுநாள் செய்தித்தாள் மூலம் அதைத் தெரிந்துகொண்டேன்.

பெங்களூரில் முப்பது நாள்கள் சிறைவைக்கப்பட்டு இருந்தபோது, வாஜ்பாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். பிறகு, அவரைச் சந்தித்தபோது சிறை அனுபவம் எப்படி இருந்தது என்று நான் அவரைக் கேட்டேன். "அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன் ஜாலியாக' என்று சிரித்தபடியே என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னார்.

1977-இல் எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஜனதா கட்சியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்ததால் ஜன சங்கம் தலைவர்களுக்கும் ஆட்சி அதிகார வாய்ப்புக் கிடைத்தது. அப்போது 542 தொகுதிகளில் ஜனதா கட்சி 295 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், 90 இடங்களில் ஜனசங்கத்தினர் வெற்றி பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்றவர்களாக இருந்தனர். அதற்காக அவர் பிரதமராக ஆசைப்படவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.

1996-இல் அதிக இடங்களை வென்ற கட்சி என்பதால் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். பாரதிய ஜனதா அந்தத் தேர்தலில் 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வேறு கட்சிகள் ஆதரவு தரவில்லை. எனவே, பதின்மூன்று நாள்கள்தான் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். ஆனால், பாரதிய ஜனதா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும், காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பதையும் நிரூபித்தார்.

அவர் ஆட்சி மீதான வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தில், "நான் ஏன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்பதற்கான காரணத்தை எளிய முறையில் விளக்கி உரையாற்றினார். அந்த உரையை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியது. பிரதமரின் நம்பிக்கை வாக்கெடுப்பு இப்படி நேரடி ஒளிபரப்பானது அதுதான் முதல்முறை; அதுதான் தொடக்கமும்கூட.

பாரதிய ஜனதாவால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று காங்கிரஸ், தேசிய முன்னணி, இடதுசாரிகள் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலம் அது. ஆனால், அது உண்மையில்லை என்பதை தனது வாதத்தால் பிரதமர் வாஜ்பாய் தெளிவுபடுத்தினார்.

ராஜிநாமா கடிதத்தை அவர் குடியரசுத் தலைவரிடம் கொடுப்பதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் அவர் பேசிய கடைசி வரி இதுதான். "நாங்கள் திரும்பவும் வருவோம். சக்கர வியூகத்துக்குள் நுழைவது எப்படி என்று தெரிந்த எங்களுக்கு அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதும் தெரியும்' என்று சவாலாகச் சொன்னார். ஆட்சி கலைந்தது. அவர் சொன்னபடி 1998 பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் பிரதமரானார்.

இப்போது, நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வித்திட்டவர் வாஜ்பாய். வெளிநாட்டு வங்கிகள் துணை நிறுவனங்களாகச் செயல்பட அனுமதித்தது வாஜ்பாய் அரசு. வங்கிகளில் அந்நியச் செலாவணி 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரித்தது.

மே, 1998-இல் இந்தியா நடத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை வாஜ்பாய் ஆட்சியின் ஒரு மறக்க முடியாத சாதனை. இந்த அணுகுண்டு சோதனையால் மேற்கத்திய நாடுகள் வாஜ்பாய் அரசை கடுமையாகக் கண்டித்தன; விமர்சித்தன. அப்போது, அணு ஆயுதத்தை ஆத்திரப்பட்டு பயன்படுத்த மாட்டோம் என்று வாஜ்பாய் சொன்னதை இன்றுவரை இந்தியா கடைப்பிடிக்கிறது.

இதேபோல், வாஜ்பாய் ஆட்சியில் தொலைத்தொடர்பு வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. கல்வி எனது உரிமை என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வ சிக்ஷ அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் வாஜ்பாய். எல்லோரும் படிக்க வேண்டும் என்ற இந்தத் திட்டப்படி கல்வித் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

1999- 2000-இல் இரண்டு பெரும் சூறாவளி தாக்குதல், 2001-இல் மிகப் பெரிய பூகம்பம். ஆனால், ஜிடிபியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர் வாஜ்பாய். அதேபோல 1998-இல் தங்க நாற்கர சாலை என்ற பெயரில் உலகத் தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய்.

தில்லியில் மெட்ரோ ரயில் திட்டத் துக்கு ஒப்புதல் வழங்கியது வாஜ்பாய் தான். நிலவுக்கு 2008-இல் இந்தியா விண்கலம் அனுப்பும் என்று உறுதிபடச் சொன்னவர் பிரதமர் வாஜ்பாய். அதன் பிறகுதான், இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை உருவாக்கியது.

வடகிழக்கு மாநிலங்களுக்கு தனித் துறை ஏற்படுத்தியது வாஜ்பாய் காலத்தில்தான். வாஜ்பாய் ஆட்சி குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியைக் கண்டதற்கு அவரது அனுபவ அறிவு ஒரு காரணம். முதலில் நாடாளுமன்ற உறுப்பினர், பிறகு எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர், பிரதமர் என்று அவரது வளர்ச்சி படிப்படியாக இருந்தது. எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவம் தெரிந்தவர் பிரதமர் வாஜ்பாய் என்று சொல்லலாம். அதனால்தான், அவரது ஆட்சியில் எதிர்க்கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சிக்க யோசித்தன.

அவர் என் சக நாடாளுமன்ற உறுப்பினர் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. வாஜ்பாயை நான் அறிந்த வரையில் அவர் தீவிரமான மதச்சார்பாளர் என்று என்னால் சொல்ல முடியவில்லை. பாரதிய ஜனதா கட்சியில் அவர் இருந்தாலும் தன்னை அவர் மிதவாதியாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். கட்சித் தலைவராக இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் மாற்றுக் கட்சியினருடனான அவரது உறவு சுமுகமாகத்தான் இருந்தது.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா சார்பில் பேச எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாயைத்தான் அனுப்பி வைத்தார் பிரதமர் நரசிம்மராவ். ஐ.நா. சபையில் முதல்முதலில் ஹிந்தியில் உரையாற்றியவர் என்ற பெருமை பெற்றார் வாஜ்பாய்.

காங்கிரஸ் இல்லாத ஒரு கட்சி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மத்தியில் முதல்முதலாக ஆட்சி செய்தது என்ற சாதனையை நிகழ்த்தியதும் வாஜ்பாய் தான்.

10 முறை மக்களவை உறுப்பினர், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வாஜ்பாய் எனது நெருங்கிய நண்பர். அவசரநிலைப் பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று நான், வாஜ்பாய், எனது நண்பர் சுதந்திரா கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பிலுமோடி ஆகியோர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருந்தோம். அப்போது, நான் எந்தக் கட்சியிலும் இல்லை. வாஜ்பாய் மற்றும் பிலுமோடி வற்புறுத்தல் காரணமாக சில காலம் ஜனதா கட்சியில் இருந்தேன்.

Advertisement

நான் தில்லிக்கு எப்போது சென்றாலும் நேரம் கிடைக்கும்போது வாஜ்பாயைச் சந்திக்கத் தவறியதில்லை. அவர் உடல்நிலை சரியின்றி நினைவாற்றல் இல்லாமல் இருக்கிறார் என்ற செய்தியறிந்து அவரைச் சந்திக்கப் போனேன். "அவருக்கு நினைவாற்றல் இல்லை. உங்களை எப்படி அவர் அடையாளம் காண்பார்' என்ற சந்தேகத்துடன் அவரது வளர்ப்பு மகள் என்னை அழைத்துச் சென்றார்.

நான் வாஜ்பாய் அருகில் சென்று அமர்ந்ததும் உன்னை எனக்குத் தெரியாதா என்பதுபோல் என் கையைப் பிடித்துக்கொண்டு புன்னகை செய்ததார்; கண் களில் தாரைதாரையாக கண்ணீர் வரத்தொடங்கியது. உண்மையிலேயே உணர்வுபூர்வமான சந்திப்பு அது. அவரது வளர்ப்பு மகள் உள்பட அங்கு இருந்த எல்லோரும் வியப்பாகப் பார்த்தனர்.

பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், அரசியல் தலைவர், பிரதமர் என்று அவரது பன்முகத்தன்மை விரிந்தது. இவை எல்லாவற்றையும்விட அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மிதவாதியாக இருந்தார் வாஜ்பாய். பல்வேறு மொழி, கலாசாரம் அரசியல் கட்சிகள் கொண்ட இந்தியாவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகத் தனது 93-ஆம் வயதில் மறைந்தாலும், அனைவரது நினைவிலும் வாழ்பவர் வாஜ்பாய்.

இன்று (டிச.25) வாஜ்பாய் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு

கட்டுரையாளர்:

வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.

Tuesday, December 23, 2025

கவலையளிக்கும் ஆக்கிரமிப்புகள்

கவலையளிக்கும் ஆக்கிரமிப்புகள் 

DINAMANI 

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுப் பாதையை அடைப்பதும், அரசு புறம்போக்கு இடங்களை தனி நபர் ஆக்கிரமித்து வைத்திருப்பதும் பெரும் பிரச்னையாக தொடர்வதைப் பற்றி...

கவலையளிக்கும் ஆக்கிரமிப்புகள்!

ஐவி.நாகராஜன் Updated on: 22 டிசம்பர் 2025, 3:30 am

புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை உருவாக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய ஆட்சிப் பகுதிகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பு, மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 138 (1ஏ), 210 டி பிரிவுகளின்படி மோட்டார் பொருத்தப்படாத சைக்கிள், சாலைக் கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றைக் கண்காணிப்பது, போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தடுப்பது எனப் பல முக்கியமான அம்சங்கள் சார்ந்து நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

நாட்டில் சாலைகளில் பாதசாரிகளுக்கு எனத் தனிப் பாதை அமைக்கப்பட்டாலும், பயன்படுத்த முடியாத அளவுக்கு அது ஆக்கிரமிக்கப்படுவதையும், அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை அலட்சியமாகக் கையாள்வதையும் மறுக்க முடியாது. சென்னை போன்ற நகரங்களின் சில பாதைகளில் சைக்கிள்கள் இயக்கத்துக்கு எனத் தனிப் பாதை அமைக்கப்பட்டாலும், அதில் சைக்கிள் மட்டுமே செல்வது உறுதிப்படுத்தப்படவில்லை.

விதிகள் இருந்தாலும், அபராதங்கள் விதிக்கப்பட்டாலும் தலைக்கவசம் அணியாமல் செல்வது, எதிர்திசையில் பயணிப்பது எனப் போக்குவரத்து விதிகளை மக்கள் அலட்சியப்படுத்துவதும் சாலை விபத்துகளுக்குக் காரணமாகின்றன.

இந்தச் சூழலில் பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டார் அல்லாத வாகனங்கள், பாதசாரிகள் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை இதுவரை வகுக்கவில்லை எனில், மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் அனைத்து மாநில, மத்திய ஆட்சிப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு விதிகளை ஆறு மாதங்களில் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் பின்பற்றப்படும் விதிகளை அமல்படுத்த மாநில அரசுகள் விரும்பினால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுப் பாதையை அடைப்பதும், அரசு புறம்போக்கு இடங்களை தனி நபர் ஆக்கிரமித்து வைத்திருப்பதும் பெரும் பிரச்னையாக தொடர்கிறது.

அவ்வாறு பொதுப் பாதையை 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் எனப் பயன்படுத்தி வந்த எளிய மக்களுக்கு இடையூறாக தனி நபர்கள் ஆக்கிரமித்து வருவாய் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தி பட்டா வாங்கி வைத்திருப்பதும், நீதிமன்றத்தின் மூலம் பயனாளிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு நீதிமன்ற உத்தரவு வாங்கி வைத்திருப்பதும் எனப் பிரச்னைகள் அதிகமாக உள்ளன.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்று புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை உருவாக்குவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் அதிக விபத்துகள் நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் உள்ளது. எனவே, புதிய விதிகளை உருவாக்குவதில் தமிழக அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

நீர்நிலைகள் உள்ளிட்டவற்றில் நீண்ட காலம் வசித்துவரும் மக்கள், போதிய சான்று ஆவணங்களை வைத்திருந்தும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர்களின் வீடுகள் இடிக்கப்படுவது, அந்த உத்தரவையே கேள்விக்கு உள்ளாக்கும் சூழல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஏன் தாக்கல் செய்யக் கூடாது என்ற விவாதமும் பொதுவெளியில் தொடர்வதை அரசு பரிசீலிக்க வேண்டும்.

அரசு புறம்போக்கு இடங்களை நீண்ட காலம் பொதுப் பாதையாகப் பயன்படுத்தி வருவதை ரகசியமாக பட்டா வாங்கி வைத்துக்கொண்டு, இதை யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற முறையில் தனி நபர்கள் நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று வைத்திருப்பதையும் அரசும், வருவாய்த் துறையும் நியாயபூர்வமாக ஏன் பரிசீலிக்க முடியவில்லை? இப்படி தமிழகம் முழுவதும் பொதுப் பாதையை அடைப்பதும், அரசு புறம்போக்கு நிலத்தை பட்டா வாங்கிக்கொண்டு வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்ற வக்கிர புத்தியோடு சிலரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு (பொது பாதை ஆக்கிரமிப்பு மனு ) அல்லது பொதுப் பாதை வழக்கு அல்லது வண்டி பாதை - இன்றைய சூழ்நிலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதில் அரசு நிலமும், தனியார் நிலமும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு அரசு, அரசாணை 540 எண் சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான விவரங்கள் எதுவாக இருந்தாலும், அரசாணை எண் 540-ஐ கொண்டு அகற்றலாம் எனச் சட்டம் சொல்கிறது. பொதுப் பாதை ஆக்கிரமிப்பு குறித்து ஊராட்சியாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் மனுக்களைக் கொடுக்கலாம் அல்லது நகராட்சியாக இருந்தால் ஆணையரிடமும் மனுக்கள் கொடுக்கலாம்.

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன்படி இவர்கள் நடவடிக்கைகள் எடுக்காவிடில் வட்டாட்சியரிடம் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு மனு எழுதிக் கொடுக்கலாம். அப்படி மனுக்கள் எழுதிக் கொடுத்த பின்னர் தகுந்த ஆவணங்களாக உள்ள கிராம வரைபடம், அடங்கல் நகல் அல்லது அந்தப் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததற்கான ஆதாரம் இவை இருந்தால் நிச்சயம் அதை வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரிபார்த்து நடவடிக்கை எடுக்கச் சொல்வார் என்று சட்டம் சொல்கிறது.

வாகனங்கள் செல்ல வண்டிப் பாதையை அடைத்து அதில் சுவர் கட்டுதல், ஆடு, மாடுகளைக் கட்டுதல் மற்றும் அந்தப் பாதையை அவர்கள் மட்டுமே பயன்படுத்தினாலும் மனுக்கள் வட்டாட்சியரிடம் கொடுக்க முடியும். முடிந்த அளவுக்கு இதையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்கு குறைந்தபட்சம் புதிய சாலைப் பாதுகாப்பு விதிகளை அரசு உருவாக்க வேண்டும்.

இப்படியான பிரச்னைகள் குறித்து தொடர்புடைய பயனாளிகளோ அல்லது பொதுநல வழக்கோ நீதிமன்றத்தில் தொடரும்போது, அவை மீது முழுமையாக ஆய்வு செய்து உரிய நியாயம் வழங்க நீதிமன்றமும் முன்வர வேண்டும் என்று எளிய மக்கள் எதிர்பார்ப்பதும் நியாம்தானே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Friday, December 19, 2025

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

DINAMANI

நடுப்பக்கக் கட்டுரைகள் 

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல் 

மார்கழிக் கோலங்கள் என்பவை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் செல்வம். ஆனால், அவை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் மாறிவிடக்கூடாது என்பதைப் பற்றி...

. ப. ஈஸ்வரி Updated on: 15 டிசம்பர் 2025, 3:20 am 

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கும் அகத் தூய்மைக்கும் உரிய உன்னதக் காலமாகக் கருதப்படுகிறது. பனியும் குளிரும் சூழ்ந்த அதிகாலைப் பொழுதுகளில், உறக்கத்தைத் துறந்து விடியலுக்கு முன்பே விழித்தெழும் தமிழ் வீதிகள், இந்த மாதத்தின் தனித்துவமான அடையாளம்.

உத்தராயணக் கால தொடக்கத்தைக் குறிக்கும் இந்த மாற்றத்தின்போது, வீட்டு வாசல்களில் வரையப்படும் கோலங்கள் வெறும் அரிசி மாவுச் சித்திரங்கள் மட்டுமல்ல; பக்தியையும் தாண்டி, கணிதமும், சூழலியலும், சமூக அறிவியலும் சங்கமிக்கும் வாழ்வியல் சூத்திரங்களாகக் கோலங்கள் திகழ்கின்றன.

மேலைநாட்டினர் இன்று வியந்து பேசும் "காலை ஐந்து மணி மன்றம்' என்ற சுய முன்னேற்றக் கோட்பாட்டை, நம் தமிழ்ச் சமூகம் பல நூற்றாண்டுகளாகவே ஒரு வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வருகிறது. "பிரம்ம முகூர்த்தம்' எனப் போற்றப்படும் அந்த அதிகாலைப் பொழுதில் விழித்தெழுவதன் அவசியத்தை அறிவியல் ரீதியாகப் பார்த்தால், அந்நேரத்தில் வளிமண்டல மாசு குறைந்தும், ஆக்சிஜன் மற்றும் உயிர் அயனிகள் செறிந்து காணப்படுவதும் உடலுக்கும் மனதுக்கும் பெரும் புத்துணர்வை அளிக்கின்றன.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் துயிலெழுந்து, கோலமிடுதல் போன்ற கடமையைச் செய்யத் துணியும் அந்த மனத்திண்மை, வாழ்வில் விடாமுயற்சியைக் கற்பதற்கான முதல் படியாகும். அந்த வகையில், அதிகாலையில் கோலமிடுதல் என்பது ஒரு நாளின் தொடக்கத்தை ஒழுக்கத்துடனும், நேர்மறை ஆற்றலுடனும் கட்டமைக்கும் ஒரு சிறந்த உளவியல் கருவியாகத் திகழ்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் கோலங்கள் வெறும் புள்ளிகளும் கோடுகளும்தான். ஆனால், கணித நுட்பத்துடன் அணுகினால், அவை "வரைபடக் கோட்பாட்டின்' நடைமுறை வடிவங்கள் என்பது புலப்படும். குறிப்பாக, ஒரு புள்ளியில் தொடங்கி, கையை எடுக்காமல், மீண்டும் அதே புள்ளியில் வந்து முடிக்கும் "சிக்கல் கோலங்கள்' அல்லது "இழைக் கோலங்கள்', யூலரியன் பாதைகள் மற்றும் முடிவிலி (இன்பினிட்டி) தத்துவத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.

மையப் புள்ளியை ஆதாரமாகக் கொண்டு விரியும் கோலங்களின் சமச்சீர்மை, மூளையின் இரு அரைக்கோளங்களையும் ஒருங்கிணைக்கும் சிறந்த பயிற்சியாகும். இன்றைய மென்பொருள் பொறியாளர்களைப் போலவே, நம் முன்னோர்களும் எந்தப் பாடப்புத்தகமும் இன்றி, இடைவெளி மேலாண்மை மற்றும் வடிவவியல் அறிவை தரையில் வடிவமைத்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஜீவகாருண்யத் தத்துவம், பச்சரிசி மாவில் இடும் கோலங்களில் உயிர்பெறுகிறது. விடியற்காலையில் உணவைத் தேடி வரும் எறும்புகளுக்கும், சிறு உயிரினங்களுக்கும் உணவளிக்கும் இந்த உன்னத அறத்தை, இன்றைய நவீன செயற்கை வண்ணங்களும், ஒட்டுவில்லைகளும் சிதைத்து விடாமல் காக்க வேண்டும்.

"விருந்தினர் உண்ட பின்னரே தான் உண்ண வேண்டும்' என்ற தமிழரின் விருந்தோம்பல் பண்பு, வீட்டு வாசலிலேயே தொடங்கிவிடுகிறது. ஒரு கைப்பிடி அரிசி மாவில், "பல்லுயிர் ஓம்பல்' என்ற உயரிய சூழலியல் அறிவை நம் முன்னோர் பொதிந்துவைத்துள்ளனர் என்பது போற்றத்தக்கது.

"மாதங்களில் நான் மார்கழி' என்று பகவத் கீதையில் (அத்தியாயம் 10, ஸ்லோகம் 35) கண்ணன் உரைத்ததற்கேற்ப, இது இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமாகும். ஆனால், இயற்கையின் சுழற்சிப்படி இது கடும் பனிக்காலம்.

பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், கிருமிகளின் தாக்கமும் இயல்பாகவே கூடுகிறது. புனிதமான இந்த மாதத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்கொள்ளவே, கோலத்தின் மையத்தில் பசுஞ்சாண உருண்டையை வைத்து, அதில் பூசணிப் பூவைச் செருகி வைக்கும் மரபு தோன்றியது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பசுஞ்சாணத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தி கிருமிகள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கும் ஒரு இயற்கை உயிர்வேலியாகச் செயல்படுகிறது.

இன்றைய நவீன உடற்பயிற்சிக் கூடங்களில் நாம் செய்யும் பயிற்சிகளுக்கு இணையாக, கோலமிடுவதன் மூலம் நமது உடல் நலத்தைப் பேண முடியும். குனிந்து நிமிர்ந்து, இடுப்பை வளைத்து, கைகளை லாவகமாகச் சுழற்றிப் பெரிய கோலங்களை இடுவது, "சூரிய நமஸ்காரம்' போன்ற யோகாசன நிலைகளை ஒத்த ஒரு சிறந்த பயிற்சியாகும். இது முதுகெலும்பை வலுப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அதிகாலைக் காற்றை ஆழமாகச் சுவாசிப்பதன் மூலம் நுரையீரலுக்கும் வலுசேர்க்கிறது.

உடல் நலத்தைத் தாண்டி, சமூகப் பார்வையில் அன்றைய திண்ணைகளும் வாசல்களுமே இன்றைய சமூக ஊடகங்களுக்கு முன்னோடிகள். பெண்கள் வாசலில் கூடி உரையாடுவது சமூகப் பிணைப்பை வலுப்படுத்தியது. இன்றைய தனிமைப்படுத்தப்பட்ட அடுக்குமாடிக் கலாசாரத்தில், வாசலில் கோலமிடும் அந்தச் சிறு கால அவகாசமே, அண்டை வீட்டாருடன் ஒரு புன்னகையையோ, வாழ்த்தையோ பரிமாறிக் கொள்ளும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

மார்கழிக் கோலங்கள் என்பவை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் செல்வம். ஆனால், அவை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் மாறிவிடக்கூடாது. ரசாயனக் கற்களையும், செயற்கை வண்ணங்களையும் தவிர்த்து, மீண்டும் அரிசி மாவுப் பயன்பாட்டுக்குத் திரும்புவதன் நோக்கத்தை நாம் உணர வேண்டும். இயற்கையிடமிருந்து நாம் எடுத்துக்கொண்ட வளங்களுக்குச் செய்யும் சிறிய கைம்மாறாக, எறும்புகள் போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பது மன நிறைவைத் தருகிறது.

நகரமயமாக்கலின் நெரிசலில், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் குறுகிய வராந்தாக்களில் இந்தக் கலை சுருங்கிவிட்டாலும், அதன் தத்துவத்தைச் சுருங்கிவிடாமல் காப்பது நம் கடமை. வெறும் கோலப் போட்டிகள் நடத்துவது மட்டும் போதாது; அதன் பின்னால் உள்ள கணிதத்தையும், அறிவியலையும், ஈகையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க இந்த மார்கழி மாதத்தைப் பயன்படுத்த வேண்டும். வாசலில் இடப்படும் ஒவ்வொரு புள்ளியும், நம்மைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் ஒரு குறியீடு. அந்தப் புள்ளிகளை இணைக்கும் கோடுகள், மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவின் சாட்சிகளாகத் தொடரட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Thursday, December 18, 2025

திசைமாறும் சிறார்கள்

 திசைமாறும் சிறார்கள் 

நம் நாட்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பெ.கண்ணப்பன் Updated on:  18 டிசம்பர் 2025, 2:56 am 

புதுதில்லியில் அமைந்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள கள ஆய்வு அறிக்கையில், நம் நாட்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 10 மாநிலங்களில் நகர், புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு, தனியார் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுக்காக விவரங்கள் திரட்டப்பட்டவர்களில் 53% பேர் மாணவர்கள்; 47% பேர் மாணவிகள். இவர்கள் 11 முதல் 15 வயதுடையவர்கள். ஓராண்டு காலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பள்ளி செல்லும் மாணவர்களில் 16.3% பேரும், மாணவிகளில் 13.8% பேரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும், கடந்த ஓராண்டுக்குள் போதைப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் 10% என்பதும் தெரியவந்தது.

போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறார்களில் 95% பேர் போதைப் பொருள்களின் பயன்பாடு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதைத் தெரிந்தே பயன்படுத்துகின்றனர் என்றும், 40% சிறார்களின் குடும்பத்தில் மது அருந்தும் பழக்கமுடைய உறுப்பினர் உள்ளனர் என்றும், 8% பேர் குடும்பத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கமுடைய உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகையிலையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் போதையூட்டும் பொருள்கள், மதுபானங்கள், கஞ்சா, ஓபியம், ஹெராயின், மருத்துவப் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் போதை ஏற்படுத்தும் மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக பள்ளிச் சிறார்கள் ஆய்வின்போது தெரிவித்துள்ளனர். போதைப் பொருள்கள் தங்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன எனவும் ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பள்ளிச் சிறார்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 10 முதல் 17 வயதுடைய 1.48 கோடி சிறார்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவிக்கிறது. இந்திய சிறார்கள் 11-12 வயதில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்கின்றனர் என புதுதில்லியில் அமைந்துள்ள தேசிய போதைப் பொருள் சிகிச்சை மையத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில், சீருடை அணிந்த மாணவிகள் சிலர் வகுப்பறையில் ஒன்றுகூடி மது அருந்தும் காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது தவறான செயல் அல்ல என்ற உணர்வு சமுதாயத்தில் பரவிவருவதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

கல்வி கற்க பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்த பழகிக் கொள்வதால், கல்வி கற்பதில் நாட்டம் அவர்களிடம் குறையத் தொடங்குகிறது. ஒழுக்கக்கேடான செயல்கள் அவர்களிடம் வெளிப்படுகிறது. மேலும், குற்றவியல் சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபடுகிற சூழலும் ஏற்படுகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களை கூர்நோக்கு இல்லங்களில் விசாரணை முடியும்வரை தங்க வைக்கப்படுகின்ற நடைமுறை நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்தியப் பெருநகர் ஒன்றில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களில் 86% பேர் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்ட சிறார்கள் பெரும்பாலும் குற்றம் புரியும்போது போதைப் பொருள்களைப் பயன்படுத்தி இருந்ததாகவும் தெரியவருகிறது.

கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களில் சிலர் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்டு, கூர்நோக்கு இல்லங்களில் தங்கிச் சென்றவர்கள் என்பதும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிற சிறார்களில் பலர் மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும் கள ஆய்வில் தெரியவருகிறது.

போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற சிறார்களில் ஒரு சிலர் மட்டுமே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான சிறார்கள் தங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான போதைப் பொருள்களை வாங்க பணம் இல்லாதவர்கள். அவர்களில் சிலர் போதை பொருள்கள் விற்பனை செய்யும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான போதைப் பொருள்களை வாங்குகிற சிறார்களும் உண்டு.

கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களில் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிறார்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களை போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைத்து, நல்வழிப்படுத்தும் முயற்சியை சிறார் நீதிக் குழுமம் மேற்கொள்கிறது.

கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்படும் போதைப் பழக்கம் உடைய சிறார்கள் அனைவரையும் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்து, போதைப் பொருள்கள் பயன்படுத்துவதில் இருந்து மீட்கப்படுவதும், மீண்டும் போதைப் பொருள்களை நாடி அவர்கள் செல்லாமல் கண்காணிப்பதும் முக்கியத்துவம் பெறாத நிலை நம் நாட்டில் நிலவுகிறது.

சிறார் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதும், இந்திய பெருநகரங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறார் குற்றங்கள் நிகழும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளதும் திசைமாறிச் செல்லும் சிறார்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் முன்னுரிமை பெறப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

சிறார்களிடம் சமூக ஊடகத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகின்ற தற்போதைய சூழலில், நண்பர்கள் ஏற்படுத்தும் அழுத்தம், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், தனிமை மற்றும் தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுதல், உடைந்த குடும்பம், பெற்றோர்களின் குறைவான கண்காணிப்பு, மலிவாகவும், எளிதாகவும் சிறார்களுக்கு போதைப் பொருள்கள் கிடைக்கிற சூழல் போன்ற சமூக காரணங்களால் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை சிறார்கள் எளிதில் கற்றுக் கொள்கின்றனர்.

சிறார்களிடையே போதைப் பொருள் பழக்கம் தொற்றிக்கொள்ளாமல் தடுப்பதில் குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம் மற்றும் காவல் துறை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. பெற்றோர்-குழந்தைகள் இடையே மனம் திறந்த உரையாடல், குழந்தைகளின் நட்பு வட்டம், இணையப் பயன்பாடு போன்றவற்றைப் பெற்றோர் கண்காணித்தல், மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே மையமாகக் கொண்ட கல்விக்குப் பதிலாக வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் கல்வியை ஊக்கப்படுத்துதல், சிறார்களை இலக்காகக் கொண்டு செயல்படும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுத்தல் போன்றவை போதைப் பொருள்கள் மீதான சிறார்களின் ஆர்வத்தைத் தடுக்க துணைபுரியும்.

சிறார் குற்றங்களும், சிறார்களின் போதைப் பொருள் பழக்கமும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் முக்கியமான சமூகப் பிரச்னையாக கடந்த காலத்தில் உருவெடுத்தன. இதை எதிர்கொள்ள சிறார் நீதி அமைப்பும், சிறார் நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன.

தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத்தையே குறிக்கோளாகக் கொண்டு அவை செயல்பட்டன. பள்ளிக்கூடங்களில் போதைப் பொருள்கள் பழக்கம் உள்ள சிறார்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நம் நாட்டிலும் சிறார் நீதிச் சட்டம், சிறார் நீதிக் குழுக்கள், சிறார் சிறப்பு இல்லங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சிறார் குற்றங்களும், போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டத்துக்கு முரணாகச் செயல்படும் சிறார்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை இது உணர்த்துகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் ஆய்வும், உரிய தொடர் நடவடிக்கையும் சிறார்களின் நலனை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்:

காவல் உயர் அதிகாரி (ஓய்வு).

Wednesday, December 10, 2025

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்!

DINAMANI  10.12.2025

 "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை;

அருணன் கபிலன் Updated on:  10 டிசம்பர் 2025, 2:59 am 

 "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை; தனக்கென்று மட்டும் வைத்துக் கொண்டதுமில்லை. அண்மைக்காலமாக அதாவது இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய மாற்றம் சொத்துக் குவித்தல் என்னும் வழக்கம்; இது தமிழர்களின் மரபன்று.

தேடித் தேடிப் பொருளைக் குவிப்பதும் அவ்வாறு குவிந்தவற்றைக் கொண்டு மேலும் மேலும் அதைப் பெருக்குவதற்கான வழிகளில் ஈடுபடுவதும் குறிப்பாக மண்ணிலும் பொன்னிலும் அதை முதலீடு செய்வதும் இதுபோன்ற பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதிக் கொண்டிருக்கிற காலமாக இருக்கிறது.

வாழ்வுக்கான அகப்பொருள் தேடிக் கண்டு தேர்ந்து உலகுக்கே உரக்கச் சொன்ன தமிழர்கள் தாங்களே அந்த மெய்ப்பொருளை மறந்துவிட்டுப் பொய்ப் பொருளை நாடி - புறவாழ்வுக்குப் பொருள் தேடி அலைகிறார்களோ என்ற ஐயமும் தோன்றுகிறது.

இதிலே வேடிக்கை என்னவென்றால், வேண்டுதல்-வேண்டாமை இலானாகிய கடவுளையும் இதற்குப் பங்கு சேர்த்துக் கொள்வதுதான். இந்தக் கோயிலில் இத்தனை முறை இப்படி வேண்டிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று வேண்டுகிறவர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு வேண்டிச் செல்வத்தைச் சேர்த்தவர்கள் தாங்கள் சேர்த்த செல்வத்துக்குக் காரணம் அந்தக் கடவுள்தான் என்றும், ஏதும் பழி-பாவம் வந்து விடக்கூடாது என்பதற்காக அதில் ஒரு பங்கை கடவுளுக்கே கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் நம்புகிறார்கள்.

பொருட் செல்வத்துக்காகவே மட்டும் அலையும் இந்த வாழ்க்கையில் அன்பு, கருணை, நிம்மதி, உடல்-மனநலம், நீளாயுள், சமூக மதிப்பு, மானுட நேயம் உள்ளிட்ட பலவற்றை இழப்பதோடு மட்டுமின்றித் தாங்கள் சேர்த்த செல்வத்தைச் செலவழித்து மீண்டும் இவற்றையெல்லாம் பெற்று விடலாம் என்று நம்புவதுதான் அதைவிடவும் வேடிக்கையாக இருக்கிறது.

கனியைக் கனியாகச் சுவைக்காது கனியென்று எழுதி வைத்த காகிதத்தைச் சுவைப்பது போலத்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வாழ்க்கையும்.

"உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' என்று வாழ்க்கையின் எளிமையை அழகாகக் குறிப்பிடுகிற சங்க இலக்கியம் அதனை மேலும் விரிவாக்குகிறது.

"இந்த உலகம் முழுவதும் பொதுமை

யானதில்லை; தனி ஒருவனாகிய எனது

உரிமையே' எனக் கொக்கரித்து, ஒரு குடைக்கீழ் ஆளும் அரசனாகவே இருந்தாலும், பகலிரவு உறங்காது ஓடித்திரியும் விலங்குகளை வேட்டையாடினால்தான் வயிற்றுக்குக் கிடைக்கும் என்று காத்திருக்கும் கல்லாத வறுமையாளனுக்கும் உணவுக்குப் பயன்படும் அளவு நாழித் தானியம்தான்; மானத்தின் பொருட்டு உடலை மறைக்கும் ஆடைகள் அரையாடை என்றும் மேலாடை என்றும் இரண்டேதான்! இவைபோலும் பிற உடல் சார்ந்த உள்ளம் சார்ந்த தேவைகளும் பொதுவாகவே விளங்கும்.

நிலைமை இப்படியிருக்க, தேடிக் குவிக்கிற செல்வத்தின் பயன்தான் என்ன என்று கேட்டால், "நாமே எல்லாவற்றையும் அனுபவிப்போம்' என்று கருதாது, அற்பக் கைப்பொருளும் இல்லாமல் வாடுகிற வறியவர்களுக்கு மனமுவந்து பகிர்ந்து கொடுத்தல்தான் என்கிறது புறநானூற்றுப் பாடல்.

இந்த உரத்த சிந்தனை நயத்தகு சொற்கள் அமைந்த பாடலோடு மட்டும் முடிந்துவிடவில்லை. வளத்தகு வாழ்வியலாகவும் திகழ்ந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

வறுமையில் வாடிய புலவர் பொருள்வேண்டி வள்ளலிடம் தன் துயரைப் பாடலாக்கிக் கூறுகிறார். வாழ்நாள் கடந்து நிறைமுதுமை அடைந்த என் தாய் இன்னும் உயிர் பிரியவில்லையே என நொந்து நரை மயிர் பரவத் தடியூன்றித் திரிய முடியாதவளாகத் துயரத்தில் இருக்கிறாள்.

இளம்கைக்குழந்தையை ஏந்திப் பசியோடு தவிக்கிறாள் மனைவி. குழந்தைக்கு அமுதூட்டும் அவள் மார்பு வற்றிக் கிடக்கிறது. முற்றாத குப்பைக் கீரையைப் பறித்தெடுத்து நீருலையில் இட்டு உப்போ மோரோ, சோறோ, ஏதுமின்றி, பிள்ளையின் பாலுக்காக வேண்டி வெறுமனே உண்கிறாள். அவளுக்கு மாற்றுடையும் இல்லை. இருப்பதுவும்கூடக் கிழிந்து அழுக்கேறியது. இவ்விரு மகளிர் வேண்ட நான் உன்னிடம் பொருள் வேண்டி வந்தேன்; அவர்கள் மகிழும்படி பரிசில் தரவேண்டும்' என்று வேண்டுகிறார்.

எத்தகைய கொடிய வறுமை அவரைப் பற்றியிருக்கிறது என்பதை அந்தப் பாடல் வரிகளே படம் பிடித்துக் காட்டி நம் நெஞ்சை உருக்குகின்றன. வள்ளல் மனம் உருகாதா என்ன? அவரும் பெருங்கொடையை வாரி வழங்கினார்.

இத்தனை வறுமையில் சிக்கித் தவித்த அந்தப் புலவருக்கு இப்போது குன்றனைய செல்வம் குவிந்து விட்டது. ஓடப்பராய் இருந்த ஏழைப்புலவர் வள்ளலின் கொடையால் ஓர் விநாடிக்குள் உயரப்பர் ஆகி விட்டார்.

புலவர் தனக்குப் பரிசாய்க் குவிந்த அந்தப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு ஏழு தலைமுறைக்கும் இறுமாந்து வாழ்ந்திருக்கலாம் அல்லவா? ஆனால், பரிசில் பெற்றுத் திரும்பிய அவர்தம் தமிழுள்ளம் தன்னுடைய மனைவியை அழைத்து, "மனையாளே, உன்னை விரும்பியவர்களுக்கும், உனக்கு விருப்பமானவர்களுக்கும் நம்மைப் போல வாழ்வோர்க்கும் உனது சுற்றத்தார்க்கும் இதுநாள்வரை நமது வறுமைதீர நமக்குப் பொருள் கொடுத்து உதவியவர்களுக்கும், இவர்கள் மட்டுமின்றி இன்னார் இனியார் என்று கருதாமல், என்னைக் கேட்டு என்னுடைய அனுமதியைப் பெற்றுத்தான் உதவ வேண்டும் என்று காத்திருக்காமல் எல்லாருக்கும் வாரி வழங்கு' என்று ஆணையிட்டார்.

வறுமை முன்பு வாழ்வில்தான் இருந்ததே தவிர எப்போதும் மனத்தில் இல்லை என்பதைப் போலவும், வள்ளல் செல்வத்தை மட்டும் தரவில்லை வள்ளன்மையும் தந்துவிட்டார் என்பதைப் போலவும், தமிழர்தம் உள்ளம் செல்வம் நிறைந்தபோது துள்ளிக் குதிப்பதும் வறண்டபோது துவண்டுபோவதும், இல்லையென்பதை உலகத்துக்கு உணர்த்துவது போலவும் இந்த அற்புத நிகழ்வு வரலாறாகப் பதிந்திருக்கிறது.

குவிகின்ற செல்வத்தை எப்படிப் பல்லுயிரோடும் பகிர்ந்து வாழ வேண்டும் என்னும் பொதுவுடைமையைப் பரக்கப் பேசுகிறது தமிழ் மரபு. வறுமைக்கு எதிரான வள்ளன்மையை முன்னிறுத்துகிறது தமிழர் வாழ்வியல். ஏழ்மையை விரட்டும் தோழமையைப் புகட்டுகிறது ஆன்மிக ஒழுங்கு. வழிவழியாக வந்த இந்த மாண்புகளைத் தமிழர்கள் எங்கே தவற விட்டார்கள்?

சங்கம் தொடங்கி, அற இலக்கியங்களும், காப்பியங்களும், பக்தி இலக்கியங்களும் போதித்த பல்லுயிர் ஓம்புகின்ற செல்வ நிலையாமை வாழ்வு எங்கே மறைந்தது?

கடவுளிடம்கூட, "யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும்' என்று பொன்னையும் பொருளையும் போகங்களையும் யாசிக்காது அருளையும் அன்பையும் அறத்தையும் வேண்டி நின்ற பெருவாழ்வு எங்கே தொலைந்தது?

"உடல் உழைப்பால் ஊதியமாகப் பெற்ற பொருட்செல்வத்தைப் பிறருக்கு வாரிவழங்கிப் புகழ் என்னும் அருட்செல்வத்தை உயிருக்கான ஊதியமாகப் பெருக்கிக் கொள்ளுங்கள்' என்கிறார் திருவள்ளுவர். புகழென்றால் உயிரையும் கொடுக்கத் துணிந்து, பழியென்றால் உலகமே கிடைப்பதென்றாலும் வேண்டாமென்று மறுத்த தமிழர்களின் வாழ்வியல் தலைகீழாகிப் பொருளுக்காக எதற்கும் துணிகின்ற காலமாக இருப்பது வருந்துதற்குரியது. பணமென்றால் வாய் திறப்பவை பிணங்கள்தானே? நம் மனங்கள் ஏன் அந்த மாய வலையில் சிக்கிக் கொண்டன?

"அறஞ்செய விரும்பு' என்றதோடு நம்முடைய தமிழ்ப்பாடம் முடிந்ததென்று யார் சொன்னது? ஒளவை மேலும் சொல்கிறாள்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து

வைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் -

கூடுவிட்டிங்(கு)

ஆவிதான் போயினபின் யாரே

அனுபவிப்பர்

பாவிகாள் அந்தப் பணம்.

இந்த "நல்வழி'யை எப்படி மறந்தோம்?

2023-ஆம் ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் வாடிக்கையாளரின் சொத்துகள் 7,846.8 பில்லியன் டாலர் (ரூ.8.65 லட்சம் கோடி) இருந்தது என்று வங்கி வணிகர் கூட்டமைப்பு காட்டுகிறது. அதுபோலவே 2024-ஆம் ஆண்டில் இந்தியர்களின் சுவிஸ் வங்கிச் சொத்துகள் மட்டும் 3.54 பில்லியன் டாலர் (ரூ.37,600 கோடி) என்றும் கணக்கிடப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் அலைகின்ற மனிதர்கள் இந்த உலகத்தின் பல நாடுகளில் இன்னும் இருக்கும்போது இந்த வங்கிச் சேமிப்பின் பயன்தான் என்ன?

உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், "அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள்; அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?" என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று நீதி புகட்டுகிறார் மகாகவி பாரதியார். அவர்வழி வந்த பாவேந்தர் பாரதிதாசனும்,

உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!

புகல்வேன்; "உடைமை மக்களுக்குப் பொது'

புவியை நடத்துப் பொதுவில் நடத்து என்று தமிழ்மரபு தவறாது சுட்டுகிறார்.

இந்த மரபு வழாது, செல்வத்தின் பயன் ஈதல்! இது எவ்வளவு உயர்ந்த தத்துவம்! இந்தத் தத்துவம் சமுதாயத்தில் வாழ்க்கை நெறியாக மலர்ந்திருக்குமானால் சமுதாயத்தில் இவ்வளவு மேடு-பள்ளங்கள் இருக்காது; மனிதர்களுக்கிடையில் பகையும் வளர்ந்திருக்காது. பகையின்மையால் களவு - காவற் பணிகள் தலையெடுத்திருக்கா; இன்றோ, செல்வம் செல்வத்தைச் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இஃது ஒரு கொடுமை! செல்வம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்தப் பெறுகிறது. ஏன்? நாடாளும் அரசிலிருந்து ஆண்டவன் சந்நிதானம் வரை இந்தப் பண்பிழந்த செல்வத்துக்கு அமோக மரியாதை!

இது வையகத்தின் இயல்பான நடைமுறையன்று. நெறிமுறை பிறழ்ந்த நடைமுறையே! என்று நம்காலத்தையும் கணித்தவர் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ்மரபு காட்டும் செல்வத்துப் பயனான ஈதலை மேற்கொள்ளும் உயரிய சமுதாயம் அமைந்து விட்டால் உலகம் உய்தி பெறுமே.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Tuesday, December 9, 2025

ஆடம்பரங்கள் அவசியமா?



நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆடம்பரங்கள் அவசியமா?

ஆடம்பரமான திருமணங்களைத் தவிா்த்து சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் மணவாழ்வில் கடனில் விழ வேண்டியிருக்காது.

இரா. கற்பகம் Updated on: 09 டிசம்பர் 2025, 4:44 am

அமெரிக்காவில் வசிக்கும் என் தோழி, தன் மகனின் திருமண புகைப்படத்தை எனக்கு அனுப்பிவிட்டு, விவரங்களையும் பகிா்ந்துகொண்டாா். மணமக்கள், அவா்தம் பெற்றோா் ஆகிய ஆறு போ் மட்டும் பங்கேற்க, மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் மணவிழாவை நடத்தியிருந்தாா்கள்! நம் நாட்டில் இது சாத்தியமா? தனி மனிதா்களாகவும், சமூகமாகவும் நம் இல்லத் திருமண விழாக்களை நாம் எவ்வளவு ஆடம்பரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்?

நம் நாட்டில் உழவா் சந்தை, மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தை போல, ‘கல்யாணச் சந்தை’ என்ற ஒன்று இருக்கிறதே! இன்றைய திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; ‘கல்யாணச் சந்தையில்’தான் நிச்சயிக்கப்படுகின்றன! இங்கு நடக்கும் வேடிக்கைகளையும், விசித்திரங்களையும், கொடுக்கல் வாங்கல்களையும், லாப நஷ்டக் கணக்குகளையும் பாா்க்கலாம்.

ஆண்-பெண் சமத்துவமெல்லாம் பேச்சளவில் மட்டும்தான். எல்லா நிலைகளிலும் மணமகன் வீட்டாா் மேல்தட்டிலும், மணமகள் வீட்டாா் கீழ்த்தட்டிலும் தான் இருக்கிறாா்கள். ‘கல்யாணச் சந்தையின்’ ஆரம்பம் பெண் பாா்க்கும் படலம். இப்போதெல்லாம் யாரும் அநாகரிகமாகப் பெண்ணைப் பாடச் சொல்லிக் கேட்பதில்லை. அதற்குப் பதிலாக மணமகன் வீட்டாா் பத்துப் பதினைந்து பேருக்கு நடுவில் பெண்ணைக் கொலு பொம்மைபோல அலங்கரித்து உட்காரச் செய்து, சமைக்கத் தெரியுமா, அலுவலகத்தில் வேலை நேரம் என்ன, ஊதியம் எவ்வளவு என்று ‘நாகரிகமாக’ விசாரிக்கிறாா்கள்.

அடுத்தது சடங்கு சம்பிரதாயங்கள், முகூா்த்த நாள், நேரம், மணப்பெண் உடுத்த வேண்டிய மண விழா ஆடையின் நிறம், அழைப்பிதழ் என்று எல்லாவற்றையுமே மணமகன் வீட்டாா்தான் நிா்ணயிக்கிறாா்கள். என் உறவினா் ஒருவரின் மகளுக்குத் திருமணம் பேசினாா்கள். அந்தப் பெண் மிகவும் சிவந்த நிறம் உள்ளவா். அவருக்குச் சிவப்பு நிறத்தில் புடவை அணிந்துகொள்ள வேண்டும் என்று விருப்பம். ஆனால், மணமகனின் சகோதரிகள், ‘மஞ்சள் நிறப் புடவைதான் அணிய வேண்டும்; அதுதான் எங்கள் வழக்கம்’, என்று அடித்துப் பேசினாா்கள். ‘சிவந்த நிறப் பெண்ணுக்கு சிவப்பு, கருநீலம், கரும்பச்சை போன்ற வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும்; வெளிா் நிறமான மஞ்சள் எடுப்பாக இராது’ என்று அந்தப் பெண்ணின் பெற்றோா் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவா்கள் பிடிவாதத்தை விடவில்லை.

இத்தனைக்கும் அது காதல் திருமணம்; பெண்ணின் பெற்றோா் மிகவும் படித்தவா்கள்; முற்போக்கு சிந்தனை உடையவா்கள்; சமூகத்தில் உயா்ந்த அந்தஸ்தில் இருப்பவா்கள்; இருந்தும் அவா்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘மணமகன், பச்சை நிற வேட்டியும் சட்டையும்தான் அணிய வேண்டும்; அதுதான் எங்கள் வழக்கம்’ என்று பெண் வீட்டாா் கூறினால் மணமகன் வீட்டாா் ஒப்புக் கொண்டிருப்பாா்களா? ஒரு முைான் திருமணம்; ஆடைத் தோ்வை மணமக்களின் விருப்பத்துக்கு விடுவதுதானே நியாயம்?

அடுத்தது சீா்வரிசை! நகை, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், இரு சக்கர வாகனம், காா் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்தக் காலத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்கவில்லை. பெண்களுக்குச் சொத்துரிமையும் அப்போது இல்லை. அதனால் தங்கம், வெள்ளி என்று பெண்களுக்குச் சீராகக் கொடுத்தாா்கள். இப்போது, பெண்களைப் பொறியியல், மருத்துவம், குடிமைப் பணி, ராணுவம் என்று எந்தெந்தத் துறைகளுக்கோ படிக்க வைக்கிறாா்கள். கல்விக்கான செலவு மிக அதிகம். அதையும் தாண்டி நகைகள், விலையுா்ந்த தொலைக்காட்சிப் பெட்டி, துணிதுவைக்க, பாத்திரம் கழுவ இயந்திரங்கள், குளிா்சாதனப் பெட்டி, கணினி, கைப்பேசி, கட்டில், மெத்தை, தலையணைகள், அலமாரி, மேஜை, நாற்காலி என்று கூசாமல் கேட்கிறாா்கள்.

‘கல்யாணச் சந்தையில்’, இவையெல்லாம் அவரவா் பொருளாதார வசதிக்கேற்ப பல ரகங்களில் தாராளமாகக் கிடைக்கின்றனவே! அதிலும் சில பெற்றோா், அவா்களது மகனும் மருமகளும் வேறு ஏதோ ஊரில் பணியிலிருந்தாலும், அவா்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல் இவா்கள் இருக்கும் வீட்டிலும் கட்டில், மெத்தை போன்றவற்றை வாங்கிப் போட வேண்டும் என்று பெண்ணைப் பெற்றவா்களை நிா்ப்பந்திக்கிறாா்கள்.

அழைப்பிதழ் கடைக்குள் நுழைந்து பாா்த்தால் திணறிப் போவோம். பல வண்ணங்களில், பல வடிவங்களில் கொட்டிக் கிடக்கின்றன. திருக்குறளில் ஆரம்பித்து, பாரதிதாசன் கவிதை ஒன்றைச் சோ்த்து, மீனாட்சி திருக்கல்யாண ஓவியமோ, வடநாட்டு திருமண ஊா்வல ஓவியமோ ஒன்றையும் இணைத்து, இரு வீட்டாரின் முன்னோா் சரித்திரத்தைப் பிரஸ்தாபித்து, மணமக்களின் பெயா்களைக் குறிப்பிட்டு, நிகழ்ச்சி நிரலைக் கொடுத்து, கடைசியில் உறவினா்களின் பெயா்களையெல்லாம் அச்சில் கொண்டு வரும் போது அழைப்பிதழ் ஒரு புத்தகமாக மாறிவிடுகிறது! அதற்குக் கொடுக்கும் விலையும் கணிசமானதாக இருக்கிறது!

‘இன்னாரது மகன் இன்னாரது மகளைத் திருமணம் செய்து கொள்கிறாா்’, என்று சுருக்கமாகத் தெரிவித்தால் செலவை எவ்வளவோ குறைக்கலாமே. அழைப்பிதழைப் பெறுபவா்கள் திருமணம் முடிந்ததும் அதைக் கிழித்துப் போடப் போகிறாா்கள். அதற்கு இத்தனைச் செலவு தேவையா? இப்போது சிலா் அழைப்பிதழை வடிவமைத்துக் கொண்டு அதை கட்செவி அஞ்சலில் அனுப்பிவிட்டு கைப்பேசியில் பேசித் தெரிவித்து விடுகிறாா்கள்; இது வரவேற்கத்தக்கதே!

அடுத்தது உணவுக் கடை. இப்போதெல்லாம் திருமண விருந்து, விருந்தினா் உண்பதற்கு அல்ல; மணமக்களின் வீட்டாா் தம் அந்தஸ்தை பறைசாற்றிக் கொள்ள! ஒரு நேரம் ஒரு மனிதன் எத்தனை பதாா்த்தங்களைத்தான் சாப்பிட முடியும்? செலவு என்னவோ பெரும்பாலும் மணமகள் வீட்டாரதுதான். ஆனால், இங்கும் மணமகன் வீட்டாா் வைத்ததுதான் சட்டம். அறுசுவைகளிலும் இருக்க வேண்டும்; ஒவ்வொரு சுவையிலும் குறைந்தது இரண்டு வகை இருக்க வேண்டும்; பாரம்பரியத்துக்குப் பாதாம் பால், புதுமைக்குப் பனிக்கூழ்; இத்தோடு வட இந்திய பதாா்த்தங்கள் பல. இத்தகைய ஆடம்பர விருந்துகளில் எவ்வளவு உணவு மீதமாகி வீணாகிப் போகிறது!

இது தவிர ‘கல்யாணச் சந்தையில்’ மேடையலங்காரம், மணமக்களின் ஒப்பனை, இன்னிசைக் கச்சேரி, மேளவாத்தியங்கள் என்று பல பிரிவுகள் உள்ளன. எல்லாவற்றிலும் மணமகன் வீட்டாா் ஆதிக்கம் செலுத்த, பெண் வீட்டாா் வேறு வழியின்றி, வாயை மூடிக் கொண்டு அவா்கள் சொல்வதையெல்லாம் செய்கின்றனா். ‘கல்யாணச் சந்தையில்’ கொள்ளை லாபம் மேற்குறிப்பிட்ட கடைகளுக்குத்தான்!

அடுத்ததாக மணமகன் வீட்டாருக்கு! எந்தச் செலவும் இன்றி நினைத்ததை எல்லாம் பெண்வீட்டாா் செலவில் வாங்கிக் கொள்கிறாா்கள் அல்லவா? பாவம் பெண்ணைப் பெற்றவா்கள்! கடன் மேல் கடன் வாங்கித் திருமணத்தை விமரிசையாகச் செய்து முடித்து சீா்களைக் கொடுத்துப் பெண்ணைப் புதுக் குடித்தனம் வைத்துவிட்டு வரும்போது மிஞ்சுவது முக்காடுதான்!

பெண் வீட்டாா், ‘திருமணம்தான் முடிந்துவிட்டதே, அப்பாடா!’ என்று மூச்சுவிடலாமா? முடியாது! ஆடிமாத அழைப்பு, தலை தீபாவளி, தலைப் பொங்கல் -- இவையெல்லாம் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும். ஒவ்வொன்றுக்கும் மறுபடியும் தங்கத்திலும் வெள்ளியிலும் சீா் தர வேண்டும். அது தவிர தீபாவளி என்றால் புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகள்; பொங்கல் என்றால் புத்தாடைகள், பொங்கல் பானை, கரும்பு (ஜோடியாகத்தான் வேண்டும்; அதுவும் முழுக் கரும்பாக இருக்க வேண்டும்!), மஞ்சள், வெல்லம்; ஏன், மணமகன் வீட்டில் ஒரு பொங்கல் பானைகூட இல்லாமலா இத்தனை ஆண்டு பொங்கல் கொண்டாடியிருப்பாா்கள்?

‘கல்யாணச்சந்தையில்’ வாங்கிக் கொடுத்துக் கொடுத்து பெண் வீட்டாா் ஓய்ந்து நிற்கையில், மணமகள் கருவுற்றிப்பாா். அவரது பெற்றோா் மீண்டும் ஒரு சுற்று, செலவு செய்யத் தயாராக வேண்டும். வளைகாப்பில் ஆரம்பித்து, பிள்ளைப்பேறு,பெயா்சூட்டு விழா, ஆண்டு விழா என்று திருமண விழாவின்இலவச இணைப்புகள் தொடரும்! படிக்கும் நமக்கே தலை சுற்றுகிறது என்றால், செயல்படுத்தும் பெண்களைப் பெற்ற ‘பாவப்பட்டவா்களுக்கு’ எப்படியிருக்கும்?

‘கல்யாணச் சந்தையில்’ நடக்கும் இந்த அவலங்களை மாற்ற நாம் ஒவ்வொருவரும் முனைய வேண்டும். ‘கல்யாணச் சந்தையில்’ கொடுங்கோலோச்சுவது பெண்களே! அதாவது மணமகனின் தாயும், சகோதரிகளும், பிற பெண்களுமே! இவா்கள் முதலில் மாற வேண்டும். தங்கள் வீட்டுக்கு இன்னொரு மகள் வருகிறாள் என்று எண்ணி மணப்பெண்ணையும் அவரது பெற்றோரையும் கொண்டாட வேண்டும். சடங்குகளும் சம்பிரதாயங்களும் உறவுகளைப் பலப்படுத்துவதற்கே; காலத்துக்கு ஒவ்வாத அா்த்தமற்ற சம்பிரதாயங்களைப் புறந்தள்ள வேண்டும். அவற்றுக்கான நேரத்தையும் பொருட்செலவையும் குறைக்க வேண்டும். இரு வீட்டாா் இணையும் திருமண பந்தத்தில் இருவரும் கலந்து பேசிச் செலவுகளைப் பகிா்ந்து கொள்ளவேண்டும்.

இன்றைய இளைய தலைமுறையினா் ஆடம்பரமான திருமணங்களைத் தவிா்த்து சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் போதே கடனில் விழ வேண்டியிருக்காது.

மணப்பெண்ணும் மணமகன் வீட்டாரின் பேராசைகளுக்கு இடம் கொடுக்காது துணிச்சலாக எதிா்த்து நிற்க வேண்டும். இந்தக் காலத்துப் பெண்களுக்கு உயா்ந்த கல்வி, நல்ல வேலை, நவநாகரிக நடையுடை பாவனைகள் எல்லாம் இருக்கின்றன. இவை மட்டும் போதாது; தம் பெற்றோரை மணமகன் வீட்டாா் முன் தலைகுனிய வைக்காமல் அவா்களைத் தட்டிக் கேட்டு, தன் உரிமையை நிலை நாட்ட வேண்டும். பெண்ணைப் பெற்றவா்களும் தலையாட்டி பொம்மைகளாக இல்லாமல் நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டுமே உடன்பட வேண்டும்.

இப்படியெல்லாம் நடந்தால், ‘கல்யாணச் சந்தையில்’ மகிழ்ச்சி நிச்சயம்!

Monday, December 8, 2025

மறதியும் தேவைதான்!

மறதியும் தேவைதான்!

 நிவாற்றல் மிகவும் தேவைதான்; ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் தேவைதான் என்பதைப் பற்றி...

மறதியும் தேவைதான் முனைவர் என். பத்ரி Updated on:  08 டிசம்பர் 2025, 4:00 am 

நமது அன்றாட வாழ்வில் பல நல்ல நிகழ்வுகளும், சோக நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. துரதிருஷ்டவசமாக நமது மூளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்து விடுகிறது. மறக்க வேண்டியதை நினைவில் வைத்துக் கொள்கிறது. இதுதான் நமது மனம் செய்யும் மாயமாகும்.

நமது மூளை நமக்கு முக்கியம் எனக் கருதும் நிகழ்வுகளை மனதில் நிறுத்திக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நமக்கு நினைவாற்றல், மறதி இரண்டுமே தேவை. எதை மறக்க வேண்டும், எதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சார்ந்த தனி நபரின் வாழ்க்கையின் அனுபவத்தைப் பொருத்தது.

பெரும்பாலும், நம் வாழ்வின் சோக நிகழ்வுகள் வாழ்நாள் முழுவதும் நம் மனதை விட்டு விலக மறுக்கின்றன. அதனால்தான் நம்மில் பலரது மனம் மகிழ்ச்சியான பாடல்களை விட சோகமான பாடல்களை அதிகம் விரும்பி கேட்கிறது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரும் குறைவான நேரமே உறங்குகிறோம். இதனால், நமக்கு டிமென்ஷியாவின் பாதிப்பு இளமையிலேயே ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. முறையான சிகிச்சை அளிக்கப்படாத போது இம்மறதி நோய் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. நம் தொடர் மறதி பல்வேறு உறவுகளையும், சமூக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. வாகன விபத்துகள், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

நம் உடலின் நரம்பியல் கோளாறுகள், மனநலப் பிரச்னைகள், மனக்குழப்பம், மூளைக்காய்ச்சல், மூளையில் காயம், வைரஸ் தொற்றுகள் போன்றவை நமக்கு மறதியை ஏற்படுத்தலாம். சிலருக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஒரு பரம்பரை நோயாகவும் இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு நமது நினைவாற்றலை மிகவும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அதிகப்படியான மது, போதைப் பொருள் பயன்பாடுகளும் நமக்கு மறதியை ஏற்படுத்தலாம்.

இளமைக் காலத்தில் மாணவர்களுக்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம். கண் விழித்துப் படிக்கும் பாடப் பொருள்களை அவர்கள் தேர்வு அறையில் நினைவில் மீட்டுக் கொண்டு வந்து தேர்வை நன்கு எழுத அவர்களுக்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம்.

பணிக்காலத்தில் மறதியின் காரணமாக நாம் செய்யும் தவறுகள் சில நேரம் நமது பணியிடை நீக்கத்துக்கோ, பதவி பறிபோவதற்கோ காரணமாக அமையலாம். முதுமையில் கடந்தகால கசப்பு நினைவுகளை முதியவர்கள் மறக்க முயலுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அவர்களால் அவற்றை மறக்க முடிவதில்லை. அதனால், அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு, அவர்களுக்குப் பல்வேறு மனநலக் குறைபாடுகளும், உடல்நலக் குறைபாடுகளும் ஏற்படுகின்றன. மறதி நோய் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

மறதிக்கான அடிப்படைக் காரணத்தை விரைவில் கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். மறதி நோயிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறு அதன் அடிப்படைக் காரணத்தைப் பொருத்தது. நமக்கு தலையில் ஏற்படும் காயத்துக்குப் பிறகு, குழப்பம், நடத்தையில் மாற்றங்கள் போன்றவை ஏற்பட்டால் மருத்துவரின் உதவியை உடனே நாட வேண்டும். சில தடுப்பூசிகள் மறதியைக் கொண்டுவரும் தொற்றுகளைத் தடுக்கலாம். வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்த சமச்சீர் உணவு மூளையின் ஆரோக்கியத்தையும்,நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.

மன அழுத்தம் கவனச்சிதறலை ஏற்படுத்துவதால் மறதிக்கு காரணமாக அமைகிறது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர விருப்பமான இசையைக் கேட்டல், யோகா பயிற்சியில் ஈடுபடுதல், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுதல் போன்றவை மிகவும் உதவும். இவை நம் மனதுக்கு அமைதியைக் கொண்டுவந்து நினைவாற்றலை அதிகரிக்கும்.

கரோனா நோய்த்தொற்று பரவல் பாதிப்புக்குப் பிறகு நமது அன்றாட வாழ்வில் பல எதிர்மறை தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மனநிம்மதியை எங்கு தொலைத்தோம் என்பதை அறியாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம். நம்மை வழிகாட்டி, வாழ்க்கையைச் செம்மையாக நடத்த உதவும் அனுபவம் கொண்ட பெரியோர்கள் நம் அணுக் குடும்பங்களில் தற்போது மிகவும் குறைவாகவே உள்ளார்கள். அப்படி இருந்தாலும் அவர்களின் வழிகாட்டுதல்களை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை.

பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நம் உறவுகளில் தனிமையைக் கொண்டுவந்துள்ளன. தேவைக்கு ஏற்ப நாம் நமது செயல்பாடுகளில் நமது நினைவாற்றலும், மறதியும் உரிமை கொள்வதைப் பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இடங்களையும், நபர்களையும் விட்டு நாம் விலகி இருப்பது நல்லது.

தற்சார்புள்ள நிதி நிலை, போதுமான உறக்கம், சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல உறவுகள், பயனுள்ள பொழுதுபோக்குகள் மட்டுமே நமது நினைவாற்றலைப் பெருக்கும். நம் பணிகளை பட்டியலிட்டுக் கொண்டு, அவற்றின் முன்னுரிமைகளின் அடிப்படையில் நாம் செயல்படலாம்.

நாம் மகிழ்வான நிகழ்வுகளை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முனைய வேண்டும். பொதுவாக நமக்கு நினைவாற்றல் மிகவும் தேவை என்னும் கருத்தையே நாம் அனைவரும் மிகவும் ஆதரிக்கிறோம். ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் நமக்குத் தேவைதான்.

நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் போன்றவற்றை நாம் காலப்போக்கில் மறந்து விடுவது நல்லது. அவற்றை மறக்காமல் போனால் நமது வாழ்க்கையின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நினைவாற்றலுடன், மறதியும் முக்கியம்தான். இதை உணர்ந்து நாம் நம் வாழ்வை மென்மையாகக் கடந்துசெல்ல எத்தனிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Saturday, December 6, 2025

கார்த்திகையில் அணைந்த தீபம்!


கார்த்திகையில் அணைந்த தீபம்! 

பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற விளக்கும் இப்போது அணைந்து விட்டது.

ஏவிஎம் சரவணன் நல்லி குப்புசாமி Updated on: 05 டிசம்பர் 2025, 6:25 am

வழக்கம்போல் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக புதன்கிழமை மாலை (3.12.2025) ஏவிஎம் சரவணனை கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சரி, ஏதோ வேலையில் மும்முரமாக இருப்பார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர் நம்மிடம் இல்லை என்பது.

என் நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன. சரவணனின் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வீட்டில் ஏதோ ஒரு வைபவம்.

அதற்காக குடும்பத்தினருக்கும், விருந்தினர்களுக்கும் பரிசாகக் கொடுப்பதற்காக டஜன் கணக்கில் சேலைகள் வாங்கிச்சென்றார்கள்.

வைபவத்துக்கு ஓரிரு நாள்கள் முன்னதாக இன்னும் ஐந்து, ஆறு சேலைகள் வேண்டும் என்று எங்கள் கடைக்குத் தகவல் அனுப்பினார்கள். அதை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பலாம் என்று தகவல் சொன்னார்கள். அந்த நேரம் கடைக்குவந்திருந்த பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸிடம் சேலைகளைத் தேர்தெடுத்துத் தரச் சொன்னேன். அப்போதுதான் ஏவிஎம் சரவணன் எனக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு, தூர்தர்ஷன் இயக்குநராக இருந்த ஏ.நடராஜன் மூலம் நட்பு நெருக்கமானது. நடராஜனுக்கும் ஏ.வி.எம். சரவணனுக்கும் தொழில் முறை நட்புணர்வு இருந்தது. நானும் இந்த இருவருக்கும் நெருக்கமானேன்.

என்ன வாழ்க்கை என்று பிறர் வியக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் ஏவிஎம் சரவணன். என்னைப் பொருத்தவரை அவர் ஒரு மூத்த சகோதரர். அவரை என் (கட்டுரையாளர்) வழிகாட்டியாகவே மதித்து வந்திருக்கிறேன். அதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன்; பொது மேடைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது "முயற்சி திருவினையாக்கும்' என்ற புத்தகம் எனக்கு வாழ்க்கையின் வழிகாட்டி நூல்.

2000}ஆம் ஆண்டு பிறப்பதற்கு பல மாதங்கள் முன்னதாக என் குடும்பத்தினரும், என் நண்பர்களும் "உங்களுக்குசஷ்டியப்த பூர்த்தி' (மணிவிழா) வருகிறதே; அதை எப்படி கொண்டாடுவீர்கள்? என்று கேட்டார்கள். நான் மணிவிழாவைக் கொண்டாடப் போவதில்லை என்றேன். இந்தப் பதிலை முன்பே சொல்லியிருக்கலாமே என்று சிலர் கேட்டார்கள்.

அதற்கு நான் சொன்ன பதில் பதில் இது- "என்னைவிட ஏறத்தாழ ஓராண்டு மூத்தவரான ஏவிஎம் சரவணன் எப்படிக் கொண்டாடப் போகிறார் என்று தெரிந்து கொள்ளக் காத்திருந்தேன். அவர் கொண்டாடவில்லை; அதனால் நானும் கொண்டாடவில்லை. அறுபதுக்கு என்ன கதியோ; அதுவே எண்பதுக்கும் என்றாயிற்று.

இருவருமே சதாபிஷேகத்தையும் கொண்டாடவில்லை. ஏவிஎம் சரவணன் ஒரு நல்ல வாசகர். படிப்பதையும், பிறர் சொல்லக் கேட்பதையும் தன் துறையில் பயன்படுத்திக் கொள்வார். நான் 1978}இல் குடும்பத்துடன் ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் நிறைவில் இரண்டு, மூன்று நாள்கள் தங்கியிருந்தேன். சிங்கப்பூரில். நான் பார்த்த ஓர் ஆங்கிலப் படத்தின் சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்ததை அவரிடம் சொன்னேன். அப்போது ரஜினிகாந்த், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்த "பாயும் புலி' என்ற திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் ஆங்கிலத் திரைப்படத்தில் கண்டதுபோன்ற சண்டைக் காட்சியை படமாக்கினார்.

என்னுடைய முதல் புத்தகமான "வெற்றி யின் வரலாறு' 1983-இல் அருணோதயம் பதிப்பகத்தில் முப்பதாண்டு நிறைவு விழா நூல்களில் ஒன்றாக வெளியானது. எனது வாசிப்புப் பழக்கம் தொய்வில்லாமல் தொடர்ந்தது. தமிழ்ப் புத்தகங்கள் தவிர சில வெளிநாட்டு பிரமுகர்கள் குறித்த ஆங்கில நூல்களையும் படித்து வந்தேன். அதில் இருந்த சில முக்கியமான வாக்கியங்களை அந்தந்தப் பக்கங்களில் குறித்து வைத்தேன். அப்போது ஒரு யோசனை தோன்றியது. அந்த வாக்கியங்களை எல்லாம் தமிழ்ப்படுத்தி புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. புத்தகம் தயாரானதும் யாரை வைத்து வெளியிடலாம் என்று யோசித்த போது என் நினைவுக்கு வந்தவர் ஏவிஎம் சரவணன்தான்.

புத்தகத்தின் வண்ண மேலட்டை தயாராகாததால் வெள்ளை அட்டையுடன் புத்தகத்தை அவருக்கு அனுப்பியிருந்தேன். அப்போது, புத்தகத்தை உயர்த்திக் காட்டி சரவணன், "ஜாக்கெட் இல்லாத புத்தகத்தை செட்டியார் எனக்கு அனுப்பினார்' என்று சொன்னார். எல்லோரும் கைதட்டிச் சிரித்தார்கள். அவரது நகைச்சுவை உணர்வுக்கு அது ஒரு எடுத்துக்காட்டு.

ஏவிஎம் சரவணனின் புத்தகப் பதிப்பு முனைவு பற்றியும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அவரது தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் குறித்து ஒரு புத்தகம் எழுத சம்பந்தப்பட்ட பலரிடமிருந்து தகவல்களைக் கேட்டுப் பெற்றார். அந்தக் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து"அப்பச்சி' என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார்.

பல சமயங்களில் ஏவிஎம் சரவணன் தன் தந்தை தனக்குச் சொன்ன அறிவுரைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒருமுறை அவர் சொன்ன தகவல்

மெய்யப்ப செட்டியாரின் தொழில் மேன்மையை உணர்த்தியது. ஒவ்வொரு முறை படம் எடுக்கப் போகும்போதும் ஏவிஎம் சரவணன் தன் தந்தையிடம் இதற்கு 40 லட்சம் ரூபாய் செலவாகும், இதற்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்வார். தந்தை சரி என்று சொல்வார்.

அப்படிப்பட்ட சமயங்களில் ஒருமுறை ஏவிஎம் சரவணன் கேட்டாராம், "அப்பா ஒவ்வொரு முறையும் நான் தொகையைப் பற்றிச் சொல்லும்போது சம்மதிக்கிறீர்களே, யார் யார் நடிகர்} நடிகை என கேட்க மாட்டீர்களா?'என்று. அப்போது தந்தை சொல்வாராம், "நீ சொல்லும் தொகையில் எனக்கு லாபம் வராவிட்டாலும் அந்தத் தொகையை நஷ்டமாக நான் தாங்க முடியுமா என்பது குறித்து மட்டும்தான் யோசிப்பேன்' என்றார். வியாபாரத்தில் ஏவிஎம் செட்டியாருக்கு இருந்த துணிவும், எதிர்பார்ப்பும் நம்மை வியக்க வைக்கின்றன.

மகனுக்குத் தனியாக எதையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் மெய்யப்ப செட்டியார், காரை எடு போகலாம்என்பார். அப்போது தந்தை-மகன் என்று இருவர் மட்டுமே இருந்ததால் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவைஎல்லாமே அவர் தொழிலில் முன்னேற வெகுவாக உதவின என்று என்னிடம் அடிக்கடி சொல்வார் சரவணன்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் தந்தை கல்லூரியில் சேர்கிறாயா என்று கேட்டிருக்கிறார். அப்போது சரவணன் சொல்லியிருக்கிறார், "கல்லூரி படித்த பிறகும் நான் இந்தத் தொழிலுக்குத்தான் வரப்போகிறேன். அதனால் இப்போதே வந்துவிடுகிறேன்' என்றாராம்; தந்தையும் அதற்குச் சம்மதித்தார்.

அந்த சமயத்தில் ஸ்டுடியோவில் அவருக்கென்று தனி மேஜை நாற்காலி வாங்கிப் போடப்பட்டது. அன்று, 1956 அந்தநாற்காலியில் உட்கார்ந்தவர்தான் அண்மையில் உடல் நலம் குன்றிய காலம் வரை அன்று ஏற்ற பணியிலேயே தொடர்ந்தார். தொழில் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு முன்னேறினார்.

எவ்வளவோ விஷயங்கள் தெரிந்திருந்தும், தனக்கு இது தெரியும், அது தெரியும் என்று காட்டிக் கொண்டதில்லை. திரை உலகப் பிரமுகர்; பொது வாழ்வில் பிரபலமானவர்; சென்னை நகரின் ஷெரீஃப்}ஆக இருந்தவர். ஆனாலும், எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் பொதுவானவராகவே வாழ்ந்து வந்தார். எந்த இடத்திலும் தன்னை அடக்கிக் கொள்ளவில்லை. ஏ.சி.திருலோகச்சந்தர் என்ற இயக்குநரை தன் குருவாகவே மதித்து வந்தார் சரவணன்.

இயக்குநர் எஸ்.பி முத்துராமனிடமும் அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் சரவணன். தன் அலுவலகத்திலிருந்த அர்ஜுனன் என்ற உதவியாளர் எல்லாப் புகைப்படங்களின் பின்பக்கத்திலும் தேதியை எழுதி வைத்திருப்பார். புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்கள்

ஆவதற்கு தேதி பற்றிய குறிப்பு தேவைப்பட்டது. அவ்வளவு கவனமாக எல்லோரும் செயல்படுவார்கள் என்று சொல்லமுடியாது என்று அர்ஜுனன் குறித்து சரவணன் என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டார்.

கடைசி சில ஆண்டுகளுக்கு முன்பு அலமாரிகளிலிருந்து ஒரு சட்டையை எடுக்கும்போது வலது கை தோள் மூட்டில் வலி வந்தது. எலும்பு பிசகி இருக்கிறதோ என்று சந்தேகம் வந்தது. டாக்டர்கள் அவரை கரடு முரடான சாலையில் மயிலாப்பூரிலிருந்து கோடம்பாக்கம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் கோடம்பாக்கத்திலேயே நாகி ரெட்டி குடும்பத்தினர் கட்டிய ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார். அவரால் திரைப்பட உலகத்தை விட்டு விலகி இருக்க முடியவில்லை.

நாகி ரெட்டியின் புதல்வர்களில் ஒருவரான விஸ்வம் அவரை கோடம்பாக்கம் வீட்டில் வைத்து கவனித்துக் கொண்டார். அப்போது, நான் அவரைப் பார்த்து கேட்டேன், "இத்தனை ஆண்டுகள் பெரிய பாரம்பரிய வீட்டிலிருந்துவிட்டு இங்கே இரு சிறிய குடியிருப்புக்கு வந்திருக்கிறீர்களே, உங்களுக்கு இதில் மனக்கஷ்டம் இல்லையா?'.

அப்போது சரவணன் சொன்னார், "எனக்கு என் தொழிலே முக்கியம், ஸ்டுடியோவுக்கு அடுத்தபடித்தான் வீடு'. ஏவிஎம், வாகினி இரண்டும் திரைப்படத் தொழிலில் போட்டி நிறுவனம் என்றாலும் முதலாளிகளுக்கிடையே நட்புணர்வு இருந்தது என்பதை என்னுடன் படித்த விஸ்வத்தின் கவனிப்பு உணர்த்தியது.

திரைப்பட உலகிலேயே பிறந்து அதிலேயே வாழ்ந்து மறைந்த ஏவிஎம் சரவணன், முன்பு ஒருமுறை தந்தையைப் பற்றிச் சொன்னது இப்போது என் நினைவில் நிழலாடுகிறது. மெய்யப்ப செட்டியார் தன் நிறைவு நாள்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்த மகனிடம், "அதோ பாத்ரூமில் லைட் எரிகிறது பார், அதை அணைத்து விடு' என்றாராம். தன்னால் பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன அந்தப் பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற விளக்கும் இப்போது அணைந்து விட்டது.

கட்டுரையாளர்:

தொழிலதிபர்.

NEWS TODAY 02.01.2026