Thursday, April 20, 2017

தலையங்கம்
தமிழ்நாடு கையில் துருப்புச்சீட்டு

ஏப்ரல் 20, 03:00 AM

சமீபத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்திருக்கிறது. 4 மாநிலங்களில் பா.ஜ.க.வும், ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினாலும், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பெற்ற பெருவாரியான வெற்றிதான், வருகிற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் 14–வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க.வுக்கு கைகொடுக்கும். ஆனால், முழுமையான வெற்றிக்கு இது போதாது. அதுபோல, இந்த வெற்றி டெல்லி மேல்–சபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரித்துவிடாது. தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிதி மந்திரியாக இருந்தவர். பழுத்த காங்கிரஸ்காரர். கடந்த தேர்தலில் அவரை காங்கிரஸ் கட்சி நிறுத்தி வெற்றிபெற வைத்தது. பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் ஜூலை மாதத்தில் முடிகிறது. எனவே, அதற்கு முன்னால் புதிய ஜனாதிபதி தேர்தல் நடந்தாகவேண்டும். ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றாலும், இந்த தேர்தலுக்கான நடைமுறைகள் ஜூன் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களாலும், மாநில சட்டசபை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாநில மேலவை உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை இல்லாதவர்கள் ஆவார்கள். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 4,120 எம்.எல்.ஏ.க்களும், 776 பாராளுமன்ற மற்றும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களும், புதிய ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு அளித்து தேர்ந்தெடுக்கும் ‘எலக்ட்டோரல் காலேஜ்’ என்று கூறப்படும் ‘தேர்வுக்குழு’ என அழைக்கப்படுவார்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டுமதிப்பு 708 ஆகும். ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டுமதிப்பு அவருடைய மாநிலத்தின் மக்கள்தொகையை வைத்து கணக்கிடப்படும். அதாவது அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை, அங்குள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வகுத்து, அதில் வரும் தொகையை மீண்டும் ஆயிரம் என்ற புள்ளியால் வகுத்தால், எவ்வளவு வருமோ? அதுதான் அந்த மாநில எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பாகும். ஒரு ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால், மொத்த மதிப்பில் பாதி மதிப்பு அதாவது 5,49,442 புள்ளிகள் எடுக்கவேண்டும். தற்போது உத்தரபிரதேசத்தில் 325 எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றிருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு 5,31,954 புள்ளிகள்தான் கிடைக்கும். இன்னும் 17,488 புள்ளிகள் கிடைத்தால்தான் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெற முடியும்.

தமிழ்நாட்டில், அ.தி.மு.க.வில் உள்ள 134 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 23,584 புள்ளிகள் இருக்கின்றன. இதேபோல் 57 எம்.பி.க்களுக்கு 40,356 புள்ளிகள் இருக்கின்றன. ஆக, அ.தி.மு.க.வின் ஆதரவுபோல, ஒடிசாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பிஜு ஜனதாதளத்திலும் எம்.எல்.ஏ.க்களுக்கு 17,433 புள்ளிகளும், எம்.பி.க்களுக்கு 19,824 புள்ளிகளும் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலிலும், முக்கியமான மசோதாக்கள் டெல்லி மேல்–சபையில் நிறைவேறுவதற்கும், அ.தி.மு.க.வின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு நிச்சயம் தேவை என்ற நிலையில், தமிழகத்தின் கோரிக்கைகள் எல்லாவற்றுக்கும் குறிப்பாக, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம், தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கான உதவிதொகை ரூ.1,650 கோடி, வறட்சி நிவாரணத் தொகையாக ஏற்கனவே கேட்ட ரூ.39,565 கோடி, ‘வார்தா’ புயல் நிவாரணத்தொகை ரூ.22,573 கோடி உள்பட பல கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து பெறுவதற்கான சரியான நேரம் இதுதான். ஏனெனில், கையில் துருப்புச்சீட்டை வைத்துக்கொண்டு தயங்கிக்கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 27ல் துவக்கம்

பதிவு செய்த நாள்
ஏப் 19,2017 22:22



சென்னை: 'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, உயர்கல்வி அமைச்சர், கே.பி.அன்பழகன் மற்றும் உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் வெளியிட்டனர். கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும், பிளஸ் 2 மாணவர்கள், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதை, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங் செயலர் முகவரிக்கு, தபால் மூலமோ அல்லது நேரிலோ
சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்தலாம்.  இதன் விபரங்கள், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேதி விபரம்

தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை
அதிகாரப்பூர்வ அறிவிக்கை - ஏப்., 30
கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு துவக்கம் - மே 1
விண்ணப்பத்தை பதிவு செய்ய கடைசி நாள் - மே 31
விண்ணப்ப பிரதியை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 3
ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 20
தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 22
கவுன்சிலிங் துவங்கும் நாள் - ஜூன் 27
50 சதவீத ஒதுக்கீடு கோரி டாக்டர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள்19ஏப்  2017   22:51

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,225 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 'இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள்படி, இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை கோரி, டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட பல இடங்களில், நேற்று தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இன்று முதல், காலையில், இரண்டு மணி நேரம், புறநோயாளிகள் பிரிவில், பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

Wednesday, April 19, 2017


வெயில் அளவு - வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன்


சென்னையில் கடும் வெயில் காரணமாக வீடற்ற வீதியோரவாசிகள் கடும்

சென்னையில் இன்று 45 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என வாட்ஸ்அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அவரது முகநூல் நிலைத்தகவல் பின்வருமாறு:

சென்னையில் இன்று 45 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என வாட்ஸ்அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்

சென்னையில் இன்றைய தினம் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டுவதே கடினம். நேற்றையதினம் போலவே காலை 11.30 மணியளவில் கடற்காற்று வீசத்தொடங்கும். இதனால், 45 டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் 40 டிகிரியை வெப்பம் தாண்டாவிட்டாலும் அனல்காற்று வீசும்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள அனல் காற்று எச்சரிக்கையை 45 டிகிரி செல்சியஸ் வெயில் என தவறாக திரித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பாதீர். அத்தகைய வாட்ஸ் அப் தகவல்களைப் பகிரவும் செய்யாதீர்.

40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் வாட்டினால் என்ன செய்யலாம்?

சென்னை நகரைப் பொறுத்தவரையில் உள்பகுதிகளில் இன்று வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். மாநிலத்தின் உள் மாவட்டங்களிலும் வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னையில் கடலில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும் பகுதிகளில் இன்று 40 டிகிரி செல்சியஸுக்கும் சற்று அதிகமாகவே வெயில் இருக்கும். எனவே, வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லவும். தொப்பியை மறக்க வேண்டாம். சூரிய வெப்பம் நேரடியாக தலையில் விழும்படி வெளியே செல்ல வேண்டாம். அப்படிச் சென்றால் நீர்ச்சத்து இழப்பு நிச்சயம் ஏற்படும். இந்த முன்னேற்பாடுகளே போதுமானது. இதற்கு மேலும் பயம் கொள்ள அவசியம் இல்லை.

சென்னையில் இதுவரை அதிகபட்சமாக கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 45 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. அதன்பின்னர் அத்தகைய அளவு வெயில் அடிக்கவில்லை. இப்போதைக்கு 45 டிகிரியில் இருந்து 48 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்ற வதந்தியைப் பரப்பாதீர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களின் 50% ஒதுக்கீட்டை காக்க அவசர சட்டம்: அன்புமணி ராமதாஸ்

.
மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீட்டை காக்க தமிழக அரசு அவரச சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப்படிப்பில் 50% இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைப்பதற்கு காரணமான இந்த ஏற்பாட்டை தமிழக அரசு பாதுகாக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 பிரிவுகளில் 789 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களும், 15 பிரிவுகளில் 396 மருத்துவ பட்டய மேற்படிப்புகளும், 8 பிரிவுகளில் 40 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1205 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்திய மருத்துவக் கழகம் உருவாக்கிய விதிகளைக் காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படி அனைத்து மருத்துவ மேற்படிப்பு இடங்களும் வெளியாட்களைக் கொண்டு தான் நிரப்பப்படும் என்றும், அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாது என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த 50% இடஒதுக்கீட்டால் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மருத்துவர்களில் 603 பேருக்கு மருத்துவ மேற்படிப்பு இடங்கள் கிடைத்து வந்தன. இது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கும், மருத்துவ சேவைக்கும் பெரிதும் உதவியாக இருந்து வந்தது. அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டும் தான் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்பதால் மருத்துவர்கள் பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்தனர். அதுமட்டுமின்றி, 50% ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று விதி இருப்பதால் அரசு மருத்துவமனைகளுக்கு தாராளமாக மருத்துவர்கள் கிடைத்து வந்தனர். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அதிக ஊதியம் வழங்கும் நிலையில், அரசு மருத்துவமனைக்கு தரமான மருத்துவர்கள் கிடைப்பதில் நிலவிய தட்டுப்பாட்டை இந்த ஏற்பாடு தான் போக்கி வந்தது. இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில் இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு தரமான மருத்துவர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசால் கட்டமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் அரசு மருத்துவமனைக்கான மருத்துவர்களை உருவாக்கும் நாற்றாங்கால்களாகத் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டியதால் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சிக்கலை சரி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்குத் தான் இருக்கிறது. உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாகவோ, அல்லது தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீட்டு முறை தொடரும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசர சட்டம் பிறப்பிக்க வைப்பதன் மூலமாகவோ 50% இடஒதுக்கீட்டை தமிழக அரசு மீட்க வேண்டும்.

மற்றொருபுறம், மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்தும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள 3 நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக முன்தேதியிட்டு மாணவர் சேர்க்கையை நடத்தி, அதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதியையும் பெற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அதை அரசு வழக்கறிஞர் எதிர்க்காதது ஐயத்தை ஏற்படுத்துகிறது. உயர்நீதிமன்றத்தின் இடைக்கால அனுமதிக்கு எதிராகவும் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுபான கடைகளை மூடச்சொன்னால் இடமாற்றம் செய்வதா?- உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

கி.மகாராஜன்



உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வது சரியல்ல என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுபான கூடங்களையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மட்டும் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் செயல்பட்ட 2800 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய இடங்களில் மதுபான கடைகளை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. புதிய இடங்களில் மதுபான கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். மதுரை பொய்கைகரைப்பட்டியில் புதிய மதுபான கடைகளை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.

இந்நிலையில் மதுரை, சிவகங்கை, தேனி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிய இடங்களில் மதுபான கடைகள் திறப்பதற்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. அப்படியிருக்கும் போது மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முயல்வது ஏன்? என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

டாஸ்மாக் சார்பில், மதுபான கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்தால் எங்கு தான் கடையை திறப்பது, ஊருக்குள் கடை திறக்க விடாவிட்டால் காட்டில் தான் திறக்க வேண்டும் என்றார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், புதிய இடங்களில் கடை திறப்பதில் தற்போதைய நிலை (திறக்கக்கூடாது) தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதை அதிமுகவினர் உணர்கிறார்களா?

முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தொடங்கி, தமிழகத்தின் ஆளும் கட்சியைத் தொற்றிக்கொண்டிருக்கும் பரபரப்புச் சூழலுக்கு எப்போது அக்கட்சியினர் முடிவுகொடுப்பார்கள், மாநிலப் பிரச்சினைகளில் எப்போது முழு அளவில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கவலையாக உருவெடுத்திருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கட்சித் தலைமை சசிகலாவின் கையிலும் ஆட்சித் தலைமை பன்னீர்செல்வம் தலைமையிலும் இருந்த ஒரு சின்ன இடைவெளியில், கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்கியது அரசு நிர்வாகம். அதன் பிறகு விரிசல் விழுந்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பன்னீர்செல்வம் தலைமையில் புதிதாக ஒரு அணி உருவானது. இடையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சசிகலா சிறை செல்ல நேர்ந்தபோது, அவருடைய உறவினர் தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆனார். பழனிசாமி முதல்வரானார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட்டன. பிளவின் விளைவாகக் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது.

ஆளும்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டின்பேரில் தேர்தலையே தள்ளிவைத்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில், இடைத் தேர்தலில் எதிரெதிராகக் களம் கண்ட அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்று சேர்ப்பதற்கு இப்போது முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. இந்த நகர்வுகள் தொடர்பிலான ஒவ்வொரு நிகழ்வும் ஆளும் கட்சியை மட்டும் அல்லாமல், தமிழகப் பொதுவெளியின் பிரதான கவனத்தை முழுமையாக ஆக்கிரமித்திருப்பதால், மாநிலத்தின் பிரச்சினைகள் கவனிப்பாரின்றிக் கிடக்கின்றன.

கடுமையான வறட்சி, குடிநீர்ப் பற்றாக்குறை, விவசாயத்தின் பேரழிவு, கடன்சுமை அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பாடநூல்கள் தமிழ் மொழியில் கிடைக்காததால் மாணவர்கள் எதிர்கொள்ளும் அவதி என்று ஒவ்வொரு தரப்பும் வெவ்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் தொடர் செயல்பாடுகளால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகிறார்கள் மக்கள். இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களின் தேசியக் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழகத்தின் அரசு தன் உள்கட்சி சண்டையில் தானும் சிக்கி மக்களையும் சிக்கவைத்து வதைப்பது கொடுமை.

அதிமுகவினருக்கு ஒரு விஷயம் புரிகிறதா என்று தெரியவில்லை. மக்களிடம் நம்பிக்கை இருக்கும் வரைதான் எவ்வளவு பெரிய கட்சிக்கும் மதிப்பு. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால், எவ்வளவு பேர் அணி சேர்ந்தாலும் அதற்கு எந்தப் பொருளும் இருக்கப்போவதில்லை. இன்றைக்கு மக்கள் மத்தியில் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தி உருவாகியிருக்கிறது. மறுபுறம் அதன் எதிர் அணியினரின் செயல்பாடுகளும் மெச்சத்தக்கதாக இல்லை. இரு தரப்புகளுமே அவரவர் நலன் சார்ந்து மட்டுமே செயல்படுவதன் வாயிலாகப் போட்டி போட்டுக்கொண்டு, அதிமுக எனும் பெயருக்கு அதிருப்தியையே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இது நியாயமும் அல்ல; நல்லதும் அல்ல!

தினகரன் வெளிநாடு செல்ல திட்டமிட்டது உண்மை; நெருங்கிய வட்டாரங்களே உறுதி செய்தன: தில்லி போலீஸ்

By DIN  |   Published on : 19th April 2017 12:21 PM  | 

dinakaran

புது தில்லி:  டிடிவி தினகரன் ஒரு சுதந்திர மனிதனாக வெளியே நடமாடும் நாட்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டாலும், இதுபோன்ற தகவல் கசிய அடிப்படையில் ஒரு காரணம் இருந்திருக்கிறது.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற  தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சென்னை வந்து, டிடிவி தினகரனிடமும் விசாரணை நடத்த தில்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், இவர்களது சென்னைப் பயணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அதற்காக டிடிவி தினகரனை அவர்கள் சுதந்திரமாக விட்டுவிடவில்லை. தில்லி காவல்துறையினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில்தான். தில்லி காவல்துறை மூலமாக இந்திய விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், டிடிவி தினகரன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, அவரது வருகையை கவனியுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனை, தில்லி கூடுதல் ஆணையர் (குற்றவியல்) பிரவீன் ரஞ்சன் உறுதி செய்துள்ளார்.
அதாவது, தினகரனுக்கு மிகவும் நெருங்கிய நபர்கள், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில்தான் தில்லி காவல்துறை இந்த அறிவுறுத்தலை அனுப்பியது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் அடிப்படையில், டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது, தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா அணிக்கே பெற்றுத் தருவதாக தினகரனிடம் சுகேஷ் உறுதி அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகேஷூக்கு, தினகரன் கொடுத்தனுப்பிய 10 கோடியில் மீதமிருக்கும் ரூ.8.7 கோடியை தேடும் பணியில் தில்லி காவல்துறை ஈடுபட்டுள்ளது என்றும் பிரவீன் ராஜன் கூறினார்.
இந்த நிலையில், இன்று காலை அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதாவது,வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக தகவல்கள் வெளியானது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த தினகரன், எனது பாஸ்போர்ட் பல ஆண்டு காலமாக நீதிமன்றத்தில்தான் உள்ளது. பிறகு எப்படி என்னால் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று விளக்கம் அளித்தார்.
அதன்பிறகு, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், ஆங்கில ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, எனது பாஸ்போர்ட் என்னிடம் இல்லை. நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னால் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது என்றார்.
மேலும், தாங்கள் சிங்கப்பூர் குடிமகன் என்று தகவல்கள் வெளியாகிறதே என்ற கேள்விக்கு, நான் சிங்கப்பூர் குடிமகனாக இருந்தேன். இப்போது இல்லை. நான் இந்திய பிரஜை. சிங்கபூரின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து காலாவதி ஆகிவிட்டது என்றார்.
எனவே, நெருப்பு இல்லாமல் புகையாது என்பது போல, ஏதோ திட்டம் போடப்பட்டுள்ளது. அதுதான் தில்லி காவல்துறை மூலமாகக் கசிந்துள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
அதற்கேற்றார் போல, அதிமுகவின் துணைப் பொதுச் செயலராக இருந்து, முதல்வர் கனவோடு இருந்த டிடிவி தினகரன், இன்று அவருக்கு எதிராக அமைச்சர்கள் கொடி பிடித்ததுமே எந்த எதிர்ப்பும் காட்டாமல், 'நான் நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டேனே' என்று பதில் அளித்துள்ளார்.
இந்த சாமர்த்தியமான பதிலும், அவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.
தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்
பிடிஐ



தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினகரன், வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதால் விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி க்ரைம் பிராஞ்சு இணை ஆணையர் பிரவீர் ரஞ்சன், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார். தூதரக அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரை அணுகியதாகவும். இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தால் ரூ.60 கோடி லஞ்சம் தர தினகரன் தயாராக இருந்ததாகவும் சுகேஷ் டெல்லி போலீஸில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே தினகரனுக்கு வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னீர்செல்வம், பழனிசாமி அடுத்தடுத்து ஆலோசனை! பரபரப்பில் கிரீன்வேஸ் சாலை
vikatan சகாயராஜ் மு



சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோனை நடத்திவருகிறார். இந்த நடவடிக்கையால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு நிலவிவருகிறது.

சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரிந்து சென்ற பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க-வையும், சின்னத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இதனிடையே, பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் குழு ஒன்றை அமைப்பதுகுறித்து முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.



இந்த நிலையில், மைத்ரேயன் எம்பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், செம்மலை, ராஜகண்ணப்பன், விஸ்வநாதன், மோகன், சண்முகநாதன், நிர்மலா பெரியசாமி ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்துள்ளனர். அவர்களுடன் பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.

முதல்வர் பழனிசாமி அணி அமைச்சர்களின் அழைப்புகுறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது, முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது.

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் அடுத்தடுத்து நடத்திவரும் ஆலோசனையால், கட்சியினர் இடையே பரபரப்பு நிலவிவருகிறது.
‘பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ - எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக் #VikatanExclusive

ஆ.விஜயானந்த்




அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பில் நடக்கும் நிபந்தனைகளால் தினகரன் வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 'மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார் பன்னீர்செல்வம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள அரசு தொடர்வதையே பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.

'சசிகலா குடும்பம் அல்லாத அ.தி.மு.க' என்ற ஒற்றை கோரிக்கையோடு பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோர்த்துள்ளனர். நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த அவசர ஆலோசனையில், ‘ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், கழகமும் நம் கையைவிட்டுப் போய்விடும்' என விவாதித்துள்ளனர். முதல்வரின் முடிவை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல், தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பகமாக உள்ளது' என்றார். இந்தக் கருத்தை எதிர்பார்த்த தினகரனும், 'எம்.எல்.ஏக்கள் அனைவரும் என் பின்னால்தான் உள்ளனர்' எனப் பேட்டியளித்தார். தற்போது தினகரனுக்கு ஆதரவாக, வெற்றிவேல், சுப்ரமணியம், தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

"அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பது என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்கூட்டியே சில நிபந்தனைகளை விதித்தனர். அதில், ‘முதல்வர் பதவியை மீண்டும் பன்னீர்செல்வத்துக்கே வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். கூடவே, மா.ஃபா.பாண்டியராஜன் உள்பட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனை கொங்கு மண்டல அமைச்சர்கள் ரசிக்கவில்லை. இதுகுறித்து, தங்களுக்குள் விரிவாக ஆலோசனை செய்தனர். இந்த விவாதத்தில், ‘முதல்வர் பதவியில் சமசரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்ற கருத்தையே கொங்கு மண்டல அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வர் பதவி மட்டுமல்லாமல், அமைச்சரவை மாற்றத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை. அமைச்சர்களின் ஒருமித்த கருத்தாகவும் இது உள்ளது. இதற்குக் காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலா எதிர்ப்பு என்பது தீபா பக்கம் சென்றது. முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகு, சசிகலா எதிர்ப்பு அவர் பக்கம் சென்றது. மக்களும் அவர் பக்கம் நின்றார்கள். இந்த இடத்தில்தான் பன்னீர்செல்வம் தவறு செய்தார் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் பழனிசாமி,



‘சசிகலா குடும்பத்தின் நிர்பந்தத்தை ஏற்று பன்னீர்செல்வம் பதவியில் இருந்து விலகினார். அரசியலில் பாலபாடம் என்பது, உறுதியான உத்தரவாதம் இல்லாமல் எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதுதான். பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்த நேரத்தில், 'மீண்டும் அமைச்சரவையில் அவரை சேர்க்கக் கூடாது' என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். இந்த ஏமாற்றத்தில்தான் அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்தார். 'தற்போது நிலைமை அப்படி இல்லை. மிகக் குறைந்த மெஜாரிட்டியில்தான் இந்த அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அப்படியே தொடரும். இன்னொரு மாற்று அரசு அமைவதற்கு வாய்ப்பில்லை. எந்தச் சூழ்நிலையிலும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. பன்னீர்செல்வத்தை மீறித்தான் இந்த அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்ததுபோல, இந்தப் பதவி நமக்கு வந்து சேரவில்லை. அமைச்சரவையில் நம்பர் டூ இடத்தில் இருந்ததால்தான் முதல்வர் பதவி வந்து சேர்ந்தது. இதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அனைத்து அமைச்சர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து அரசை செலுத்துவேன். நான் பொம்மை முதல்வர் என்று யாரும் சொல்ல முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போதும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த அதிரடியை பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இரு தரப்பும் ஏற்கும்விதமாக பேச்சுவார்த்தைக் குழு அமைக்க உள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் விவகாரம் முடிவுக்கு வரும்" என்றார் விரிவாக.

"பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார் பிரதமர் மோடி. அதிலும், கொங்கு மண்டல லாபியை வளர்த்துவிடுவதான் பா.ஜ.கவின் முக்கிய நோக்கம். கொங்கு மண்டலத்தின் சில தொகுதிகளில் பா.ஜ.கவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. அ.தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியை வளர்த்துவிடுவதன் மூலம், அந்த வாக்குகளையும் பா.ஜ.கவை நோக்கித் திருப்ப முடியும் என உறுதியாக நம்புகிறது பா.ஜ.க தலைமை. அதையொட்டியே, 'எடப்பாடி பழனிசாமியே பதவியில் தொடரட்டும். கட்சிப் பதவியை பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிடலாம்' என சீனியர் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

தினகரனால் வளர்த்துவிடப்பட்ட பன்னீர்செல்வமும் சசிகலாவால் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்துவிட்டனர். இந்தக் கோட்டை அழிக்கும் வித்தை தெரியாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், 'துரோகம் தொடர்ந்து கொண்டே இருந்தால் என்னதான் செய்வது?' எனப் புலம்பி வருகிறாராம் தினகரன்.
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி

vikatan news

ராகினி ஆத்ம வெண்டி மு.



படம்: ஸ்ரீநிவாசலு

'அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படுவில்லை. நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன்' என்று டி.டி.வி.தினகரன் தடாலடியாகக் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க அம்மா அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதற்காக நான் வருந்தவில்லை. நேற்று இரவே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன். அமைச்சர்கள், தற்போது நடத்திய கூட்டத்துக்கு என்னையும் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். கட்சியும் ஆட்சியும் பிளவுபட, நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். கட்சியில் சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் மட்டுமே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவசரகதியில் அமைச்சர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர். கட்சியில் இருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டதால், கட்சிக்கு நன்மை அளிக்கும் எந்த முடிவுக்கும் நான் ஒத்துழைப்பேன்.

சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை நீக்க பார்க்கிறார்கள். அமைச்சர்களுக்கு ஏற்பட்ட அச்சத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் என்னிடம் போனில் பேசினார்கள். அமைச்சர்கள் திடீர் முடிவெடுக்க ஏதோ பயம் உள்ளது.

அமைச்சர்கள் அவர்களது முடிவை கூறியிருந்தால் நானே ஒதுங்கியிருப்பேன். பின்னணியில் பாஜக இருக்கிறதாதென எனக்கு உறுதியாக தெரியவில்லை. சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. எனக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர்கள் யாருக்கும் பயப்படாமல் கட்சி, ஆட்சியை வழிநடத்த வேண்டும். கட்சி களங்கப்பட்டு விடக்கூடாது. கட்சி பொறுப்பை எனக்கு கொடுத்தது சசிகலாதான். சசிகலா கூறுவதை ஏற்று நான் முடிவு எடுப்பேன்" என்று கூறினார்.

இதனிடையே, டி.டி.வி.தினரகன் ஆதரவு எம்எல்ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமைச்சர்களின் அவசர நடவடிக்கையில் ஏதோ பின்னணி உள்ளது. அமைச்சர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர்.
எம்எல்ஏ-க்கள் கூட்டம் கூட்ட எங்களுக்கு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ-க்களின் கூட்டத்தை டி.டி.வி.தினகரன் நடத்த முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் விரைவில் கைதாகலாம்!

VIKATAN NEWS

BHUVANESHWARI K



'இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், டி.டி.வி தினகரன் விரைவில் கைதாகலாம்' என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் இதுவரை இந்திய அரசியலில் நிகழ்ந்திருக்குமா? என்பது கூட சந்தேகம்தான். அந்த அளவுக்கு தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. "மோசமானவற்றில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்" என்றார் பெரியார். அதுதான் தற்போது தமிழக அரசியலில் நிகழ்ந்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. இந்த இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டிக்கான காய் நகர்த்தலால் 'பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு' எனும் பரபரப்பு அரங்கேற்றப்பட்டு தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாறுதலையும் சந்தித்தது.

இந்த நிலையில், ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியானது. தி.மு.க., பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து களமிறங்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் 'இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு நின்றன.

இரட்டை இலைக்கான சண்டை!

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலைச் சின்னத்தை எந்த அணிக்கும் வழங்காமல் முடக்கி வைத்தது. மேலும், 'அ.தி.மு.க-வின் பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது' என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தனித்தனியான சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி ஆர்.கே நகரில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பட்டுவாடாக் குற்றச்சாட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் அடிபட்டது. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ச.ம.க தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக வருமானவரித்துறை தெரிவித்தது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்குப் போக 12-ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.

சின்னத்துக்காக பணம் கொடுத்தது அம்பலம் !

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் சசிகலா அணியும் ஒ.பன்னீர்செல்வம் அணியும் சேருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தைப் பெற்று தருவதற்காக டி.டி.வி தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுகேஷிடம் இருந்து 1.3 கோடி ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார்களையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத்தருவதற்காக, டி.டி.வி தினகரனிடம் 50 கோடிக்கு ரூபாய்க்கு பேரம் பேசியதாகவும் சுகேஷ் கூறியுள்ளார். முன் பணமாக சுகேஷ் வாங்கியத் தொகையான 1.3 கோடி ரூபாய் மற்றும் டி.டி.வி தினகரனுடன் பேசிய ஆடியோ ஆகியவற்றை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினகரன் மீது வழக்கு பதிவு ..!

இதன் அடிப்படையில் தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் சென்னை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்ற தினகரன் அவரை சந்திக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அங்கேயே வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் சொல்கின்றனர்.

இதுகுறித்துப் பேசும் டெல்லித் தரப்பினர், "தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் சென்னை வர தயாராகி வருகின்றனர். அவர்கள் எந்த நேரத்திலும் அங்கு வரலாம். ஏற்கெனவே மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் சென்னை வந்துவிட்டார்கள்" என்ற ரகசியத் தகவலையும் கசியவிடுகின்றனர்.

சுகேஷ் சொல்லிய பி.ஜே.பி தலைவர் ?

டெல்லி பி.ஜே.பி வட்டாரத்தில் பேசியபோது, ''தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சியையும் சின்னத்தையும் சசிகலா அணிக்கு சாதகமாக முடித்துக் கொடுக்க பி.ஜே.பி-யைச் சேர்ந்த இரு தலைவர்கள் செயல்பட்டனர்'' என்கின்றனர். விசாரணையிலும் பி.ஜே.பி-யில் உள்ள அந்த தலைவரின் பெயரை சுகேஷ் சந்திரசேகர் உச்சரித்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ''இந்தத் தகவல், பி.ஜே.பி-யின் மேலிடத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேலிடம் நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் சந்தேகம்'' என்கிறார்கள்.

சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டது குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களிடம் நான் எப்படி பேசியிருக்க முடியும்?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் .

மீண்டும் பெரியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது .."கெட்டதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்!"
கைவிரித்த உறவுகள்..கடிவாளம் போட்ட பி.ஜே.பி!- திணறும் தினகரன்

SYED ABUTHAHIR A


“அ.தி.மு.கவில் முப்பது ஆண்டுகளாக ஆளுமை செலுத்தி வந்த சசிகலா குடும்பத்திற்கு அந்த கட்சியில் முடிவுரை எழுதப்பட்டு விட்டது” என்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர்.



ஆர்.கே நகரில் தொப்பி சின்னத்தில் தினகரனுக்கு வாக்குகேட்ட அமைச்சர்கள் எல்லாம் இன்று தினகரன் குடும்பமே கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று போர்க்கொடி துாக்கியுள்ளார்கள். எந்த குடும்பத்தை சசிகலா பலமாக நினைத்தாரோ அந்த குடும்பத்திலே குழப்பம் உச்சத்துக்கு வந்துள்ளது. திரைமறைவில் திறமையாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்த சசிகலா குடும்பத்தினரால், திரைக்கு முன்னால் தினகரன் திண்டாடுவதை அவர்கள் குடும்ப உறவுகளே ரசிப்பது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் அடையும் முன்பே சசிகலாவுக்கு கட்சி பதவி தரவேண்டும் என்று திவாகரன் விரும்பினார். ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியபோது தான் சசிகலாவின் குடும்பம் அ.தி.மு.க-வின் தலைமை பதிவிக்கு வந்துவிடும் என்ற கணிப்பு அ.தி.மு.கவினர் மத்தியில் ஏற்பட்டது. அதன் பிறகு சசிகலாவிடம் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வலியுறித்தியதன் பின்னணியிலும் சசிகலாவின் குடும்ப உறவுகளே இருந்தார்கள். பன்னீர்செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவியின் மீது சசிகலாவின் பார்வையை திரும்ப செய்தவர்களும் அதே குடும்பத்தினர் தான்.

முதல்வராக சசிகலா பதவியேற்கும் விழாவை தங்கள் குடும்ப விழாவாக கொண்டாட சசிகலா உறவுகள் திட்டமிட்ட போதுதான் திருப்பங்கள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. பன்னீர் போர்க்கொடி, உச்சநீதிமன்ற தீர்ப்பு என சசிகலாவை நோக்கி ஒவ்வொரு அம்பாக ஏவப்பட்டது. அப்போது தான் மத்திய அரசு தங்களுக்கு எதிராக திரும்பிவிட்டதை உணரத் துவங்கியது சசிகலா குடும்பம். பி.ஜே.பி அரசை சரி செய்ய சசிகலா தரப்பில் இருந்து பலகட்ட முயற்சிகளுக்கும் இன்றுவரை பலனில்லை.



சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்கிற முடிவை மத்திய அரசு எடுத்ததுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வல்லமை சசிகலா தரப்பில் இல்லாமல் போய்விட்டது. சிறைக்கு போகும் வேலையில் அவசர அவசரமாக தினகரனை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்துவிட்டு கொத்துசாவியை தினகரன் கையில் கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. அது வரை தினகரனை கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு, அவர் மீது கண்வைத்தது. பத்தொன்பது ஆண்டுகள் நிலுவையில் இருந்த பெரா வழக்கை துாசிதட்டி எடுத்தது.

அதே நேரம் தினகரன் கட்சிக்குள் குடும்ப உறவுகள் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கடுமையாக இருக்க குடும்ப உறவிலும் சிக்கல் எழுந்தது. தினகரனின் மாமா திவாகரன் பெங்களுர் சிறையில் இருந்த சசிகலாவிடம், “ஆர்.கே நகர் தேர்தல் முடிந்தவுடன் எனக்கு பதவிவேண்டும்” என்று கோரிக்கைவைத்தார். அதற்குக் காரணம் தினகரன் கட்சியில் செலுத்திய ஆளுமை தான். தங்கள் குடும்ப சொத்தாக அ.தி.மு.கவை கருதிய குடும்ப உறவுகளுக்கு தினகரனின் தனி ஆவர்த்தனம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினகரனை காலி செய்ய வேண்டும் என்ற சத்தம் அவர்கள் உறவுகளின் வாயில் இருந்தே கேட்க துவங்கியது.

மத்திய அரசோ தினகரனை கட்சியில் இருந்து கழற்றுவதற்கு முன் அவரை சுற்றி அரணாக நிற்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. தினகரன் பக்கத்தில் இருந்தால் இது தான் நிலை என்ற அச்சத்தை தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் மத்திய அரசு ஏற்படுத்தியது. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டு அமைச்சர்களுக்கு தரப்பட்ட எச்சரிக்கை சிக்னலாகவே பார்க்கபட்டது. அதன் பிறகு தான் அமைச்சர்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதை அறிந்து கொண்ட பி.ஜே.பி தரப்பு, தமிழகத்தின் சில முக்கிய புள்ளிகள் மூலம் அமைச்சர்களிடம் தனித்தனியாக மத்திய அரசின் எண்ணத்தை பதியவைத்துள்ளார்கள். ஆட்சியும் கட்சியும் காப்பாற்றவேண்டுமானால் ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதை தவிற வேறு வழியில்லை என்பதை தெரிவித்துள்ளார்கள்.

மறுபுறம் சசிகலா குடும்பத்தில் இருந்தே தினகரனுக்கு நெருக்கடிகளை கொடுக்க முடிவு செய்து, சில அமைச்சர்களை தினகரனுக்கு எதிராக பேசச் சொல்லியுள்ளார்கள். திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராகவே செயல்பட நெருக்கடியின் உச்சத்துக்கு சென்றார் தினகரன். ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று குடும்பத்தையும் மத்திய அரசையும் சரி செய்துவிடலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்திய தினகரனுக்கு தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு அடுத்த சோதனையாக அமைந்தது. தேர்தல் ரத்து செய்யபட்டாலே அ.தி.மு.கவில் மீண்டும் ஒரு குழப்பம் வந்துவிடும் என மத்திய உளவுத்துறை சொன்ன தகவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.



மத்திய அரசு எதிர்பார்த்தது போலவே ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானதும் கொங்கு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக வாய்திறக்க ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்த நினைத்த மத்திய அரசு, தினகரனுக்கு அடுத்த நெருக்கடி கொடுக்க இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கை டெல்லியில் பதிவு செய்ய அமைச்சர்கள் மனநிலை அப்போதே சசிகலா குடுமபத்துக்கு எதிராக மாறியுள்ளது. அதே நேரம் திவாகரன் தரப்பில் இருந்து சில அமைச்சர்களிடம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்குங்கள், ஓ.பி.எஸ் அணியுடன் நீங்கள் இணைந்து செயல்படுங்கள் என்று சொன்னதாக ஒரு தகவல் உள்ளது.

குடும்ப உறவுகள் ஓருபுறம், மத்திய அரசு ஒருபுறம் என தினகரனுக்கு கொடுக்கபட்ட நெருக்கடியால் தனது பதவியை ராஜினாமா செய்யும் மனநிலையில் தான் தினகரன் இருந்துள்ளார். ஆனால் எங்கிருந்தோ வந்த ஒரு தகவலால் தான் நேற்று காலை வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் சில அமைச்சர்களை வீட்டிக்கு வர வைத்துள்ளார். அவர்ளிடம் என்னை ஒதுக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும். மத்திய அரசு இந்த அரசை செயல்படவிடாது என்று சொல்லியுள்ளார். அதற்குள் ஓ.பி.எஸ், “சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி ஒன்றிணைய வாய்ப்பில்லை” என்று சொன்னதும், அமைச்சர்கள் தரப்பினர் இதைப் பார்த்து காத்திருந்தது போல “தினகரன், சசிகலா குடும்பத்தின் தலையீடு இனி இருக்காது” என்று பேட்டி கொடுத்துள்ளார்கள். இப்படி பேட்டி கொடுப்பார்கள் என்று தினகரனும் எதிர்பார்த்திருந்தாராம். இந்த சிக்கலில் தனது குடும்ப உறவுகள் சிலருக்கு போன் போட்டு என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்து இவருக்கு சரியாக ரெஸ்பான்ஸ் வரவில்லையாம். “இத்தனை நாள் நீதானே எல்லாம்னு சொன்ன, இந்த பிரச்னையும் நீயே பார்த்துக்கோ” என்ற ரீதியில் கடுப்பாக பேசியுள்ளார் குடும்ப உறவினர் ஒருவர்.

தலைக்கு மேல் தண்ணீர் போய்விட்டதை தினகரனும் உணர்ந்துள்ளார். "எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு பெரிதாக இருக்காது, மத்திய அரசுக்கு பயந்து தான் அவர்கள் செயல்படுவார்கள், இனி விசுவாசத்துக்கு வேலையில்லை” என்று தனது நண்பரிடம் போனில் சொல்லியுள்ளார். ஆனாலும் “கட்சியை விட்டு விலகாமல் கடைசி வரை போராட வேண்டும் என்ற முடிவில் தினகரன் இருக்கிறார். இரண்டு அணியும் ஒன்றிணைந்தாலே அங்கு கிளம்ப போகும் பிரச்னைக்குப் பிறகு நாம் அடுத்த கட்டமாக விஸ்வரூபம் எடுப்போம், மாவட்டச் செயலாளர்களை சரி செய்தாலே இப்போது போதும் என்ற முடிவில் தினகரன் உள்ளார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய தகவல் வந்ததும் மன்னார்குடியில் இருந்து திவாகரன் புறப்பட்டு சென்னை வந்துவிட்டாராம். இன்று கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் அறிவிப்பே தன் பின்னால் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்து கொள்ளதானாம். ஆனால் இந்த கூட்டத்தையும் நடத்தவிடாத வேலைகளில் அமைச்சர்கள் தரப்பினர் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

“கண் அசைவிக்கு கட்டுபட்டவர்கள் எல்லாம், கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள் ”என்ற கவலை தினகரனை இப்போது வாட்டிவருகிறது.

-அ.சையது அபுதாஹிர்
அரசாங்கமா... அவமானமா? - ஆனந்த விகடன் தலையங்கம்

 விகடன் டீம்

தமிழக மக்கள், மோசமான ஒரு காலகட்டத்தை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே கோடை வெப்பத்தால் புழுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சமும் மக்களைத் தாக்குகிறது. மக்களின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய அரசாங்கமோ, குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில்தான் மும்முரமாக இருக்கிறது. டாஸ்மாக்குக்கு எதிராக வீதிக்கு வந்து மக்கள் போராடினால், போலீஸைக் கொண்டு அடக்குகிறது அரசு. அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் இல்லாமல் பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் காலியாகவே இருப்பதால், மக்கள் தினம் தினம் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். இன்னொரு புறம், தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வற்புறுத்தி மூன்றுகட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.
 
`நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டதா, சட்டமன்றத்தில் அனைத்துத் துறை மானியக் கோரிக்கை விவாதங்கள் எப்போது' என எதுவுமே தெரியவில்லை. அரசாங்கமே கோமா நிலையில் சிக்கியிருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை அன்றாட நிகழ்வாகும் அளவுக்கு அவலநிலை. ஆனால், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு இதுவரை நிவாரணத்தொகையைக்கூட முழுமையாக வழங்கவில்லை. `விவசாயிகளின் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?' என உச்ச நீதிமன்றமே ஆதங்கத்தோடு கேட்கும் அளவுக்குத்தான் தமிழக அரசின் `அக்கறை' இருக்கிறது. தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடங்கி, எதிர்க்கட்சிகள் அறிவித்திருக்கும் கடை அடைப்புப் போராட்டம் வரை அடுத்தடுத்து நடத்தப்படும் போராட்டங்கள்கூட இம்மி அளவும் தமிழக அரசைச் சலனப்படுத்தவில்லை. 

உள்ளாட்சித் தேர்தல் வந்தால் மக்களைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தேர்தலை முடிந்த அளவுக்குத் தள்ளிப்போட முயன்றுகொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மூலகாரணம், முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பலரும் பதவிச் சண்டையிலும் பணச் சண்டையிலும் மும்முரமாக இருப்பதுதான். 
மாண்புமிகு முதலமைச்சரே... மாட்சிமை தாங்கிய அமைச்சர்களே... வணக்கத்துக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே... உங்களில் பலர், தலைமைச் செயலகத்துக்கும் வருவதில்லை; தொகுதிப் பக்கமும் வருவதில்லை. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதுகூட பல சமயங்களில் மக்களுக்குத் தெரிவதில்லை. மதுக்கடைகள் தொடங்கி விவசாயிகள் பிரச்னை வரை எந்த விஷயத்திலும் அரசின் நிலைப்பாடு என்ன என்றுகூட நீங்கள் சொல்வதில்லை. இந்த ஆட்சி இப்படியே தொடர்ந்து நடைபெற்றால், அது தமிழகத்துக்கு மேலும் மேலும் அவமானத்தை மட்டுமே பெற்றுத் தரும். 

தயவுசெய்து உங்களின் கழ(ல)கப் பிரச்னைகளை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மக்களின் பிரச்னைகள் மீது கவனம் செலுத்துங்கள். இல்லையேல், `இந்த அசிங்கம்பிடித்த அரசாங்கம் எப்போது தொலையும்?' என்ற மனநிலைக்கு மக்களை நீங்களே தள்ளிவிடுவீர்கள். எச்சரிக்கை!

காத்திருக்கும் பேரிடர்!

By ஆசிரியர்  |   Published on : 19th April 2017 01:31 AM  |    
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அனல் காற்று வீசத் தொடங்கிவிட்டது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும், வானிலை ஆய்வு மையமும் இது குறித்த எச்சரிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பி இருக்கின்றன. தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் ஏறத்தாழ 20 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. கடலோர மாவட்டங்கள் தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் இப்போதே அனல் காற்று வீசத் தொடங்கிவிட்டது. நண்பகல் நேரத்தில் வெளியே செல்வது, திறந்த வெளியில் வகுப்புகள் நடத்துவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்துகின்றனர்.
வட இந்தியாவில், குறிப்பாக, மேற்கு, மத்திய, வட மாநிலங்களில் கோடையின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் இப்போதே அனல் காற்றுக்கு இருவர் பலியாகி இருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மட்டுமல்ல, குஜராத், ஒடிஸா, ஹரியாணா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் வழக்கத்தைவிட அதிகமான வெப்பத்தை இந்த ஆண்டு அனுபவிக்கின்றன. அங்கெல்லாம் மரணம் எதுவும் இல்லை என்றாலும், ஆங்காங்கே வெப்பத்தின் பாதிப்பால் மயக்கம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வழக்கத்தைவிட அதிகமான கோடை வெப்பத்தை இந்த ஆண்டு இந்தியா எதிர்கொள்ளப்போகிறது என்று அறிவித்திருக்கிறது, இந்திய வானிலை ஆய்வு மையம். அதிக வெப்பத்தாலும், அனல் காற்றாலும் பாதிக்கப்படக்கூடிய 50 மாவட்டங்களை அடையாளம் கண்டு அறிவித்திருக்கிறது. வழக்கத்தைவிட 7 அல்லது 8 டிகிரி அதிகமான வெப்பத்தை மேலே குறிப்பிட்ட மாவட்டங்கள் இந்த ஆண்டு எதிர்கொள்ளும் என்றும், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்த அளவுக்கு மோசமான கோடைக்காலம் இருந்ததில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வழக்கத்தைவிடக் குறைவான பருவ மழையும், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து காணப்பட்டு வரும் வறட்சியும், இந்த ஆண்டு கோடையை மேலும் கடுமையாக்கிவிட்டிருக்கின்றன. பருவநிலை மாற்றம், கடல் வெப்பம் அதிகரிப்பு, காடுகள் அழிக்கப்படுதல் போன்றவையே கோடைக்கால வெப்பம் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையமும், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் வெப்பம் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு சில செயல்திட்டங்களை முன்வைத்திருக்கின்றன. பொது இடங்களில் பரவலாகக் குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வது, பள்ளி, அலுவலக நேரங்களில் மாற்றம் செய்வது, மருத்துவமனைகளில் பெண்கள் - குழந்தைகள் இருக்கும் பகுதிகளைக் கீழ்த்தளங்களுக்கு மாற்றுவது, ஏழைகளுக்கும் தெருவோரம் வசிப்பவர்களுக்கும் மின்விசிறி, குடிதண்ணீருடன் கூடிய பகல்நேரத் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்வது, பொதுமக்கள் மத்தியில் வெப்பம் குறித்தும் அதை எதிர்கொள்ளும் வழிகள் குறித்தும் விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்துவது உள்ளிட்ட பல செயல்திட்டங்களைப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.
கடுமையான கோடையின் தாக்கத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் அபாயம் அதிகம். கோடைக் காலத்தில் தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். உடலில் நீர்ச்சத்து குறையும்போது, பலவீனம் ஏற்பட்டு மயக்கமும், உடனடியாக கவனிக்கப்படாவிட்டால் அது மரணம் வரை இட்டுச் செல்லும் அபாயமும் உண்டு. ஆங்காங்கே நீர்ச்சத்து அதிகரிப்புக்காக உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீர் பாக்கெட்டுகள் கிடைக்க வழிவகை செய்வது அவசியம்.
ஏப்ரல் மாதமே கடுமையான வெயில் தொடங்கி இருக்கும் நிலையில், மே, ஜூன் மாதங்களில் அது உச்சம் தொடும்போது ஏற்பட இருக்கும் பாதிப்புகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டும் பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும் என்கிற நிலைமை ஏற்பட்டால், இந்தியா மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ள வேண்டிவரும். விவசாயம் பொய்த்து, அது தொடர்பான எல்லா தொழில்களும் பாதிக்கப்பட்டு கடுமையான வறட்சியாலும் பஞ்சத்தாலும் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிக்கப்படலாம்.
கோடையின் தாக்கம் ஒருபுறம் இருக்க, இதன் இன்னொரு விளைவாகக் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தையும் எதிர்கொண்டாக வேண்டும். குறிப்பாக, தென்னிந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்களில் வழக்கத்தைவிட நீர் மட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. ஆற்றிலும், கிணறுகளிலும், ஏரிகளிலும்கூட நிலைமை அதுதான். குடிதண்ணீருக்கும், மின் உற்பத்திக்கும், பாசனத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்படலாம். இதையெல்லாம் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகங்களும் இப்போதே திட்டமிடத் தொடங்கியாக வேண்டும்.
நகரங்களில் அளவுக்கதிகமான மக்கள் பெருக்கம் ஏற்பட்டிருப்பதால், கடுமையான கோடையாலும், குடிதண்ணீர் தட்டுப்பாட்டாலும் மக்கள் கொந்தளிப்பு அடையாமல் எப்படி சமாளிப்பது என்பதை இப்போதே அரசுகள் யோசித்தாக வேண்டும். மிக அதிகமான மின்சாரத் தேவை ஏற்படுவதையும் மின்கசிவினால் ஏற்படும் மின்தடை, தீவிபத்து ஆகியவற்றையும் அரசு எதிர்கொண்டாக வேண்டும்.
தண்ணீரும், மின்சாரமும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க என்ன செய்யப்போகிறது அரசு? இப்படியொரு சூழலில், அரசியல் நிலையற்றத்தன்மையும் ஏற்படுமானால்... நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது!

ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான காசோலைக்கு ரூ.100 கட்டணம்: எஸ்பிஐ கார்டு வசூலிப்பு

By DIN  |   Published on : 19th April 2017 01:15 AM  | 
sbi
ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான மதிப்பில் வழங்கப்படும் காசோலைக்கு ரூ.100 கட்டணத்தை 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, ஜிஇ கேபிடல் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக எஸ்பிஐ கார்டு நிறுவனம் உள்ளது. நாடு முழுவதும் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) வழங்கும் பணியை 'எஸ்பிஐ கார்டு' செய்து வருகிறது. இதில் 40 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரூ.2 ஆயிரம் அல்லது ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான தொகை மதிப்புடைய காசோலைக்கு ரூ.100 கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வசூலிக்கப்படுகிறது. ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புடைய காசோலைக்கு கட்டணம் கிடையாது. இலவசமாகும்.
மத்திய அரசின் கொள்கையின்படி, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே இந்த முடிவின் நோக்கமாகும் என்று 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜய் ஜசுஜா கூறுகையில்,'முதல்முறையாக கடன் அட்டை பெறுவோருக்கு வழங்கப்படும் 'எஸ்பிஐ கார்டு உன்னதி' அட்டையை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், காசோலை மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது' என்றார்.

     

    தாம்பரம் அருகே கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 165 பவுன் நகைகள் கொள்ளை ரூ.8 லட்சம் வைர நகைகளையும் திருடி சென்றனர்


    தாம்பரம் அருகே கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 165 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்புடைய வைர நகைகள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ஏப்ரல் 19, 04:15 AM

    தாம்பரம்,

    சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர் மாடம்பாக்கம் சரவணா நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் மைதிலி (வயது 64).

    இவரது மகன் கார்த்திகேயன். தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கார்த்திகேயனுடன் அவரது தாயார் மைதிலி ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் குடும்பத்தினருடன் டெல்லி சென்று விட்டார். வீட்டில் தாயார் மைதிலி தனியாக இருந்தார்.தங்கம் மற்றும் வைர நகைகள்

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மைதிலி வீட்டை பூட்டி விட்டு அருகில் சரஸ்வதி நகரில் உள்ள இளைய மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் அவர் வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள் பகுதி முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.

    வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 165 பவுன் தங்க நகைகள், ரூ.8 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், பங்கு பத்திரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.வலைவீச்சு

    இது குறித்து மைதிலி சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள வீடு பல மாதங்களாக பூட்டி கிடக்கிறது. மற்றொரு புறம் உள்ள வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.மிளகாய் பொடியை தூவி

    இந்நிலையில் மைதிலி வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவில் வீட்டின் பின்பக்க பகுதியில் உள்ள கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே பல இடங்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!
    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை
    விடுமுறை விடப்படும். முதலில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகுதான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
    ஆனால் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுவதாலும், அனல் காற்று வீசுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் 25 முதல் 29-ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    தற்பொழுது தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
    இவ்வாறு செங்கோட்டையன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

    DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...