Saturday, July 8, 2017

vikatan.com


பூப்பெய்துதல் முதல் மெனோபாஸ் வரை... பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலச் சவால்கள்!

அகிலா கிருஷ்ணமூர்த்தி

பெண் வலிமையானவள். பல்வேறு பண்பாட்டுத் தொய்வுகளால் தந்தைவழிச் சமூகமாக இன்றைக்குக் காட்சிப்படுத்தப்பட்டாலும், தாய்வழிச் சமூகம்தான் நம் ஆதி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதற்கானக் கூறுகளை நிலை நிறுத்திக்கொள்ள இன்றளவும் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையிலேயே உடலாலும் மனதாலும் பெண்கள் மிகப்பெரிய சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அதை எதிர்கொள்ளும் பக்குவமும், சரியான நேரத்தில் எடுக்கும் தீர்மானமும்தான் பெண்களின் அடுத்தகட்ட உயரிய லட்சியத்துக்கு வழிவகுக்கும். அதற்கான முதல் கட்டமாக, பெண்கள் தங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை நாம் கையாளக் கற்றுக் கொண்டாலே முறையற்ற பாலின ஈர்ப்பு குறித்த வளர்பருவ தவறுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.



இன்றைக்கும் பெண் சிசுக்கொலையை முற்றிலுமாக ஒழித்துவிட்டோமா என்றால், `நிச்சயம் இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். `பெண்ணாகப் பிறத்தல் சாபம்’ என்கிற பழைய வழக்குநிலைக்குக் காரணம், வரதட்சணை. என்றாலும், பெண் கருவில் தோன்றுவது முதல் வளர்ந்து பூப்பெய்தி, மாதவிடாய்ச் சிக்கல்களை எதிர்கொண்டு, குழந்தைப்பேறு அடைந்து, மாதவிடாய் காலம் நின்று மெனோபாஸ் தன்மைக்கான அடுத்த முதுமைநிலையில் நின்று நிதானிப்பதன் வல்லமையில் இருக்கிறது பெண் எனும் சக்தி.

பாலின உருவாக்கம் கருவிலேயே தொடங்கிவிடுகிறது. அது வளர்பருவ நிலையை அடைந்து, பாலின முதிர்ச்சி பெற்று இனப்பெருக்கத்துக்கான தகுதியை அடைந்து முழுமையடைகிறது. மிக இயல்பான ஒரு சில வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு தாய்மைக்கான பக்குவநிலையைப் பெண் அடைகிறாள். சந்ததிப் பெருக்கம் என்பது எத்தகைய வரம். அதைக் கைவரப்பெறும் ஆற்றலை இயற்கை பெண்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஆண், பெண் என்கிற பாலின உருவாக்கத்தில் மூன்று முக்கியக் கூறுகள் இருக்கின்றன. மருத்துவம் சார்ந்த விஷயங்கள் என நம்மை நாமே ஒதுக்கிவைக்க இயலாது. எப்படித்தான் உருவாகிறோம் எனத் தெரிந்துகொள்ள வேண்டாமா? இதை குரோமோசோமல் (chromosomal sex), கொனாடல் (gonadal sex - sex determination), பீனோடைபிக் (phenotypic sex- sex differentiation) என மூன்றாக வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

குரோமோசோமல் செக்ஸ் என்பது x மற்றும் y என வரையறுத்திருக்கிறார்கள். XX என்பது பெண்களுக்குரியது. XY என்பது ஆண்களுக்குரியது. பிறப்பில் ஆண், பெண் என்கிற உரிமைப் போராட்டம் எல்லாம் கிடையாது. தாயிடம் இருந்து 23 குரோமோசோம்களும், தந்தையிடமிருந்து 23 குரோமோசோம்களும் என மொத்தம் 46 (46,xx: 46,xy) எனச் சரிநிகரில்தான் கரு உருவாகிறது. இரண்டாவதான கொனாடல் செக்ஸில் சினைப்பையின் உருவாக்கம் தொடங்குகிறது. கருவுற்று 46 நாள்களில் இதன் செயல்பாடுகள் தொடங்குகின்றன. கருவுற்ற தாயின் இரண்டாம் பருவநிலையில் (Second trimester - 3 to 6 weeks) வயிற்றில் வளரும் பெண் சிசுவின் சினைப்பையில் தோராயமாக 3 - 7 மில்லியன் ஜெர்ம் செல்ஸ் (ovum) இருக்கக்கூடும். கரு வளர்ந்து பிறக்கிறபோது 1 மில்லியனாகக் குறையும். இறுதியாக `பெண்ணின் இனப்பெருக்கக் காலத்தில் 400 கருமுட்டைகள் மட்டுமே வெளிவரும்' என மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.

மூன்றாவதான பீனோடைபிக் செக்ஸில்தான் உள் மற்றும் வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள் கூடவே இரண்டாம் பாலின (Secondary sex) தன்மையும் தீர்மானிக்கப்படுகிறது. இதிலிருந்துதான் தொடங்குகிறது பெண் என்பவளின் உடல்மொழி. பெண் இனப்பெருக்க மண்டலத்தை வழிநடத்துவது, ஒட்டுமொத்தமாக ஹார்மோன்களின் வேலைதான். எந்தவிதக் குளறுபடிகளும் இல்லாத பட்சத்தில், மூளையில் இருக்கக்கூடிய ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி போன்ற சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய ஹார்மோன்களின் தகவல்கள்தான் ஒரு பெண் பூப்படைதல் (Puberty), கருமுட்டை வளர்ச்சி (Follicle development), அண்ட அணு வெளியேற்றம் (Ovulation), கரு உருவாகி, கர்ப்பப்பையில் ஒட்டி வளர்வதற்கான திசு உருவாக்கம் (Endometrial lining) போன்ற பணிகள் சிறப்பாக நடந்தேறுகின்றன.



முதன்முறையாகப் பெண் இனப்பெருக்க உறுப்பு வழியாக வரக்கூடிய மாதவிலக்கை, `பூப்படைதல்' (Puberty or menarche) என்கின்றனர். அண்டச் சுரப்பிகள் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் எனும் பெண்பால் ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஹைபோதாலமஸ் எனும் சுரப்பி கொனடோட்ராபின் (Gonadotropin - GnRH) ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த GnRH, பிட்யூட்டரி சுரப்பிக்குப் பயணப்படுகிறது. அங்கிருந்து பூப்பெய்துதலை ஊக்குவிக்கக்கூடிய லியூட்டினைசிங் (LH) மற்றும் பாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH) போன்றவை சுரக்கின்றன. இவைதான் கர்ப்பப்பையின் இரண்டு பக்கமும் இருக்கக்கூடிய சினைப்பைகளையும் அதில் இருக்கக்கூடிய கருமுட்டைகளையும் வளர்ச்சி அடையத் தூண்டுகின்றன. மாற்றி மாற்றி வாயில் நுழையாத ஹார்மோன்களா நம்மை ஆட்டிப் படைக்கின்றன என அங்கலாய்த்தால், வேறுவழியில்லை. ஆட்டிப்படைக்கவில்லை. பெண்மையை அழகுபடுத்துவதே இந்த ஹார்மோன்கள்தான். இதைத் தெரிந்துகொண்டால் நமக்குள் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உடலையும் மனதையும் பேணிக்காக்க முடியும்.

பூப்பெய்தும் காலம் என்பது 10 முதல் 16 வயது வரை நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் 6 வயது 7 வயது என தலைசுற்ற வைக்கிறார்கள் பெண் பிள்ளைகள். எல்லாவற்றுக்கும் காரணம் ஹார்மோன் ஏற்றப்பட்ட கோழி இறைச்சியும், பால் உணவுகளும், நொறுக்குத்தீனிகளுமே. அத்துடன் மனஅழுத்தத்தை உருவாக்கக்கூடிய சுற்றுச்சூழலும் முக்கியக் காரணமாக அமைகிறது.

பூப்பெய்தும் காலத்துக்கு முன்னதாகவே மார்பக வளர்ச்சி தொடங்கி, காம்புகளில் வலி உணர்வு தோன்றும். இப்படி உடல் தன்னை தயார்படுத்துவதுபோல், பெண் பிள்ளைகள் மனதளவில் இதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக வேண்டும். மேலும், அக்குள் மற்றும் பிறப்பு உறுப்புகளில் மெல்லிய ரோமங்கள் வளரத் தொடங்கும். அவ்வப்போது கெண்டைக்கால் வலி ஏற்படும். இடுப்பு, கை, கால் எலும்புகள் வளர்ச்சி பெறும். உடல் எடை அதிகரித்து, உயரமாக வளரத் தொடங்குவார்கள். எண்ணெய்ப்பசை அதிகமுள்ள தோல் உடைய பெண்களுக்கு அதிகப்படியான பருக்கள் உருவாகும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பால் எதிர்ப் பாலின ஈர்ப்பு அதிகரிக்கும்.

குழந்தை பிறந்தது முதல் எவ்வித எதிர்பார்ப்பும் அச்சமும் இன்றி விளையாடித் திரிந்த சிறுமிகள் உடலில் ஏற்படும் இத்தகைய திடீர் மாற்றங்களால் நடுங்கிப் போகின்றனர். `நமக்கு என்னவோ ஆகிவிட்டது’ என மனதளவில் மிகப்பெரிய குழப்பமும் கோபமும் உருவாகிறது. தன்னம்பிக்கையைச் சிதைக்கிற வேலைதான். இல்லையென்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும், அந்த நேரத்தில் பெற்றோர்களும் வீட்டில் உள்ள பெரியவர்களும் ஆறுதலாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலத்திய சுகாதாரத்தைக் கற்றுக்கொடுப்பது அவசியம். தன் உள் உணர்வுகளை வெளியில் சொல்ல முடியாத குழந்தைகள், தனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதோ எனத் தவறாகப் புரிந்துகொண்டு உளவியல் சிக்கலுக்கு ஆளாகின்றனர். இந்தச் சூழலை அலங்கரிக்கத்தான், `மஞ்சள் நீராட்டு விழா’ எனக் கிராமங்களில் கொண்டாடுகின்றனர். சுற்றம் சூழச் செய்யும் இந்தச் சடங்கினால் பெண் தன்னை மங்கலகரமாக உணர்கிறாள். பெண்ணாகப் பிறந்த அத்தனை பேரும் கடக்கவேண்டிய பூக்கள் நிரப்பிய பாதை இது.

இதன் தொடர்ச்சியாக மாதம் ஒருமுறை 28 அல்லது 35 நாள்கள் கொண்ட காலச் சுழற்சியாக மாதவிலக்கு நடைபெறும். ஒருசில பெண்களுக்குப் பூப்பெய்திய ஓரிரு ஆண்டுகள் கழித்து இச்சுழற்சி முறைப்படுத்தப்படலாம். ஒவ்வொரு சுழற்சியின்போதும் மாற்றங்கள் ஏற்பட்டு, பெண் உடல் கருத்தரிக்கத் தயாராகிறது. மாதம் ஒருமுறை நிகழும் மாதவிடாய் நிலையை நான்கு வகைகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.



மாதவிடாய்நிலை (Menstrual phase)

மாதவிலக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்து, ஐந்தாவது நாள் வரை கணக்கிடப்படுகிறது. கரு வளர்வதற்கு ஏதுவான கருச் திசு (Endometrium) கர்ப்பப்பையில் வளர்ச்சி அடைகிறது. கரு பதிந்து தாய்மையடையாத நிலையில், கருத்திசு உதிரத்தோடு வெளியேறிவிடுகிறது. இதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். 10 முதல் 80 மி.லி அளவு ரத்தம் வெளியேறுகிறது. மாதவிடாய்ச் சுழற்சியின் நீட்டிப்புத் தன்மை சினைப்பையில் இருந்து முட்டை வெளியேறும் நாள்களை வைத்து நிர்ணயம் ஆகிறது. வளர்பருவத்தில் தொடங்கும் சுழற்சி, ஏறக்குறைய 50 வயது வரை நடைபெறுகிறது. மாதவிடைவு நிலையை (Menopause) நெருங்குகிறபோது இச்சுழற்சி நீண்டு பின் முற்றிலுமாக நின்றுவிடும்.

பெருக்க நிலை (Follicular phase)

மாதவிடாய் முதல் நாளில் தொடங்கி 13 நாள்கள் வரை ஃபாலிக்குலர் நிலை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த முதல் 13 நாள்களில் ஹார்மோன்களின் தூண்டுதலால் ஃபாலிக்கிள் முதிர்ச்சி அடைந்து, முட்டை வெடித்து வெளியேறக் காத்திருக்கும்.

அண்ட அணு வெளியேற்ற நிலை (Ovulation phase)

மாதவிடாய் ஆரம்பித்த 14-ம் நாள் பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன்களின் விளைவால், அண்டச் சுரப்பியில் முதிர்ந்த கருமுட்டையானது கர்ப்பப்பை நாளத்தின் (Fallopian tube) வழியாக அதன் ஆம்புல்லாப் பகுதியினை வந்தடையும். ஒற்றை விந்தணு துளைத்து உள்நுழையும் பட்சத்தில் இங்குதான் கருவுறுதல் நடைபெறுகிறது.

முன் மாதவிடாய் நிலை (Luteal phase)

மாதவிடாய்க் காலத்தின் 15-ம் நாளில் இருந்து 28-ம் நாள் வரை இந்த நிலையைக் குறிப்பிடலாம். ஓவுலேஷன் நிலையில் கருத்தரிப்பு நிகழவில்லையெனில், 12 முதல் 24 மணி நேரத்துக்குள் அண்டம் இறந்துவிடும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களால் கருத்திசு கர்ப்பப்பையில் இருந்து விடுபடும் தருவாயில் இருக்கும். அத்துடன் செயலிழந்த அண்டமும் உதிரத்தோடு வெளியேறக் காத்திருக்கும். அடுத்து வரும் மாதவிடாய் நிலை, அதாவது 28-ம் நாள் மாதவிலக்கு ஏற்பட்டு எண்டோமெட்ரியமும் கருவுறாத முட்டையும் வெளியேறி விடும்.



முன் மாதவிடாய்க் காலத்தில் (Pre menstrual syndrome) ஏற்படும் சிரமங்கள்தான் பெண்களால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்குகின்றன. மனதளவில் கடுமையான கோபமும் எரிச்சலும் ஏற்படலாம். உடலளவில் முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைவலி, அடிவயிறு பெரிதாகுதல், வாந்தி வருவது போன்ற உணர்வு, மார்பக வலி போன்றவை தோன்றும். ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும்போது ஆத்திரமும் புரோஜெஸ்ட்ரோன் அதிகரிக்கும்போது மனச்சோர்வும் ஏற்படலாம். சில நேரங்களில் தற்கொலைக்கான மனநிலைகூட உருவாகும் என்கிறார்கள். மாதவிலக்கு அடைந்தவுடன் அத்தனை அறிகுறிகளும் மறைந்து மன அமைதி பெறும்.

இது குறித்து சேலத்தைச்சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சரஸ்வதி கூறுகிறார்...

``பெண் என்பவள் பொதுவாக அமைதியானவள். கோபம் குறைவானவள். சகிப்புத் தன்மையும் பொறுமையும் நிறைந்தவள். இந்த அற்புதக் குணங்கள் இருப்பதனாலேயே பெண்ணால் ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்கும் சிரமங்களைத் தாங்கி, இந்த உலகத்தை தழைக்கச்செய்ய முடிகிறது. சூழ்நிலைக் காரணிகள் ஒருபக்கம் இருந்தாலும், அறிவியலின்படி அமைதி, ஆனந்தம், ஆத்திரம், கோபம், தாபம் ஆகிய இந்த உணர்வுகள் அனைத்தும் நமது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே. இதை ஒரு பெண்ணிடம் சரியான அளவுக்கு இருக்கச் செய்வது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள்தான்.

பருவம் எய்தும்போதும் பருவத்தின்போதும் பருவம் முடியும்போதும் இந்த ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. இதனால் அடிக்கடி எரிச்சலும் அழுகையும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியோடு உள்மனதில் ஏற்படும் மாற்றங்களையும் ஒரு பெண்ணுக்கு இயற்கை அளித்திருப்பது அதன் குற்றம் அல்லாமல் வேறென்ன?’’

எனவேதான், புரிதலுக்கான முன்னெடுப்புகளைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தவேண்டியிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது, நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் காலம். இதைத்தான் ‘மெனோபாஸ்’ எனக் கூறுகிறார்கள். தொடர்ச்சியாக 12 மாதங்கள் மாதவிடாய் வரவில்லை என்றால், அதை மெனோபாஸ் எனக் கருத்தில்கொள்ளலாம். 45 முதல் 55 வயதில் இவை ஏற்படலாம். இது ஒரே நாளில் ஏற்படக்கூடியது அல்ல. நீடித்த செயல்பாடு. காரணம். ஹார்மோன்கள் மாற்றமும் சினைப்பையில் உள்ள ஃபாலிக்கிள் உற்பத்திச் செயல்பாடுகள் குறைவதுமே. முதல் மாதவிலக்கை கணக்கில்கொண்டு, மெனோபாஸ் ஏற்படுவதில்லை. மாதவிலக்கு நிற்பதற்கான தன்மைகள் நான்கு வருட இடைவெளிகளுக்கு முன்னரே ஆரம்பிக்கின்றன. இதை ‘பெரிமெனோபாஸ் (Perimenopause) நிலை’ என்கிறார்கள். இச்சமயத்தில் குழந்தை பிறப்புக்கான ரசாயன மாற்றங்கள் குறைந்துவிடுகின்றன. முறையற்ற சுழற்சி. குறிப்பாக சில நேரங்களில் அதிகமாகவும் பின்னர் குறைவாகவும் உதிரப்போக்கு ஏற்படும். 30 செகண்ட்டில் இருந்து 10 நிமிடங்கள் வரை சூடான உதிரப்போக்கு உண்டாகும். இதனால் இனம் புரியாத நடுக்கம், தோல்கள் சிவப்பாதல், பதற்றத்துடன்கூடிய அதிக வியர்வை உருவாகலாம். பிறப்பு உறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை, சிறுநீரகச் செயல்பாட்டில் மாற்றம் போன்றவை ஏற்படும். இவை எல்லாம் மெனோபாஸ் ஆகப்போகும் பெண்கள் அத்தனைப் பேருக்கும் கண்டிப்பாக நிகழும் எனச் சொல்ல முடியாது. பரம்பரைத்தன்மை, வாழ்க்கைத் தரம் போன்றவற்றால் மாறுபடக்கூடும்.

மெனோபாஸ் நிலையின் பக்கவிளைவுகளுக்கும் பெண் முதுமைத் தன்மையின் நோய்க் கூறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடலில் ஏற்படக்கூடிய ரசாயன ஏற்ற இறக்கங்களும், புதிய செல்கள் உருவாகும் பலமிழப்பதும். நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, ஒன்றன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நோய்கள் வரவும் காரணமாகின்றன. எலும்பின் கடினத்தன்மை குறைதல் (osteoporosis), இதய மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் குறிப்பாக LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகரித்தல், உடல் எடை கூடுதல், நினைவாற்றல் மங்குதல், உளச்சோர்வு போன்றவை ஏற்படலாம். பெண் இனப்பெருக்க மண்டலம் என்பது மகப்பேறு மட்டும் சார்ந்ததல்ல. சைக்யாட்ரிஸ்ட் மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் மருத்துவர்களையும் உள்ளடக்கியது. எந்தவிதக் கோளாறுகளும் இல்லாமல் பெண் இனப்பெருக்கச் செயல்பாடுகள் நடக்கின்றன என்றால் மகிழ்ச்சி. ஆனால், இதில் ஏதேனும் சந்தேகத்துக்குள்ளான சிறிய அறிகுறிகள் தோன்றினாலும், தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ வார்த்தைகளால் மிரட்டுவதற்காக அல்ல மேற்சொன்ன அத்தனை விளக்கங்களும். இவையெல்லாம் நாம் வாழ்கிற வாழ்க்கையை எப்படி தகவமைக்கிறோம் என்பதைப் பொறுத்து மாற்றியமைக்கலாம். இயல்பாக நடக்கக்கூடிய உடல்மொழியின் அடுத்தடுத்த மாற்றங்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். வளர் பருவ பெண்களின் புரிதல் மிகவும் அவசியமானது. உங்கள் பாடத் திட்டங்களில் உள்ள `பெண் இனப்பெருக்க மண்டலம்’ என்பது, தேர்வுக்கான சாய்ஸில் விடுவதற்கு அல்ல. நாம் யார் என்பதை உணர்வுபூர்வமாக என்பதோடு அறிவியல்ரீதியாகவும் உணர வேண்டும். செயற்கை உரமில்லாத இயற்கை உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானிய வகைகளை உட்கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்த இசை, விளையாட்டு, கலைகள், இயற்கைக் காட்சிகள், சமூக சேவை என மனதைக் குதூகலமாக வைத்திருங்கள். அந்தந்த வயதுக்கான மாற்றங்களை எளிமையாகக் கையாண்டு, இந்தச் சமூகத்தை திடத்தோடு எதிர்கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை, பெண்களை, தாய்மார்களை, மூதாட்டிகளை அரவணைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெண்களே பெண்களைக் கொண்டாடும் நிலை முதலில் வர வேண்டும். இயற்கை தரும் இத்தகையச் சவால்களை வென்று சாதிக்கும் பெண்கள் நிச்சயம் வலிமையானவர்களே!

‘இனி திருமணங்களைப் பதிவு செய்யாவிட்டால், சிக்கல்!’ - மணமக்களின் பெற்றோர் மீது பாயுமாம் வழக்கு
எஸ்.மகேஷ்




இந்தியாவில் நடைபெறும் திருமணங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் உதவித்தொகை மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலை நாட்டு கலாசாரத்தால் இந்தியாவின் கலாசாரம் சீரழிந்து வருகிறது. குறிப்பாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டுக்கே சிக்கல் எழுந்துள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை மாயமாகி தனிக்குடித்தனத்துக்குச் செல்லும் கணவன், மனைவிக்கு இடையே எதற்கெடுத்தாலும் ஈகோ பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால், பலருக்குத் திருமண வாழ்க்கை விரைவில் கசந்துவிடுகிறது. கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்ப நீதிமன்றங்கள் மூலம் விவகாரத்துப் பெறும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றன. குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் ஏற்கெனவே நடந்த திருமணங்களை மறைப்பதைத் தடுக்கவும்
திருமணப்பதிவை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்யும் ஏமாற்று ஆண்கள், பெண்களும் சமூகத்தில் அதிகமாகிவருகின்றன. இதற்கெல்லாம் முறைப்படுத்தப்படாத திருமணங்களே காரணம் என்று மத்திய அரசு கருதியது. இதனால், திருமணங்களை முறைப்படுத்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்த மத்திய சட்ட ஆணையம், சமீபத்தில் மத்திய அரசுக்கு அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அதில், "இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்தத் தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படவேண்டும். அதன்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்டத் திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு திருமணப்பதிவு சட்டத்தின்படி திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். தற்போது, திருமணம் நடந்த 30 நாள்களுக்குள் கட்டாயமாகத் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள், திருமணச் சலுகைகளைப் பெற முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகப் பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 ன் படி தமிழகத்தில் நடக்கும் திருமணங்கள் 90 நாள்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், பதிவு செய்ய 60 நாள்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் திருமணத்தைப் பதிவு செய்வதில்லை. 150 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மணமக்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், இதை யாரும் கண்டுக்கொள்வதில்லை. தற்போது, மத்திய அரசு, திருமணத்தைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதால் திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் மீது மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் திருமணச் சலுகைகள் இல்லை என்பதால் இனித் திருமணப்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும்" என்றார்.

திருமணத்தைப் பதிவு செய்யும் வழிமுறைகள்

தமிழ்நாடு திருமணச் சட்டம் - 2009ன் படி திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவுச் செய்யவேண்டும். 90 நாள்களுக்குள் பதிவு செய்தால் 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் அபராதக் கட்டணம் 50 ரூபாயுடன் 150 ரூபாய் செலுத்தவேண்டும். 150 நாள்களுக்குப் பிறகு திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது.

திருமணத்தன்று ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாயிருக்க வேண்டும். திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ், கோயில், சர்ச், பள்ளிவாசல் ஆகிய நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாகக் கொடுக்கும் ஆவணம், நோட்டரி அபிடிவிட் போன்ற ஆவணங்களைச் சமர்பிக்கலாம். முகவரிக்காக, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்பிக்க வேண்டும். வயதுக்கான சான்றிதழாகப் பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகிய ஒன்றில் கொடுக்கலாம். மேலும், மூன்று நபர்கள் சாட்சியாக கையெழுத்திட வேண்டும். சாட்சிகளும் ஓர் அடையாள அட்டையும் காண்பிக்க வேண்டும். அடுத்து, மணமக்கள் தலா நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கென விண்ணப்படிவமும் உள்ளது. அதை பூர்த்தி செய்து பதிவுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பித்தால் போதும் என்று வழிமுறைகளையும் விளக்கினர் பதிவுத்துறை வட்டாரங்கள்.
10 பள்ளி மாணவர்களுடன் வாரம் ஒருநாள் விருந்து!” - ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முயற்சி! 

ஷோபனா எம்.ஆர்



“ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, துணை ஆணையர் பங்களாவில் இரவு விருந்து அளிக்கப்படும். அதற்கு முன்பு, துணை ஆணையர் அலுவலகத்தில் நடக்கும் பணிகளை அந்த மாணவர்கள் கவனிப்பார்கள். அவர்களின் மாவட்டத்தைப் பற்றி துறை ரீதியாக அறிந்துகொள்வார்கள். இது, அவர்களின் மாவட்டத்துக்கு நன்மை செய்யும் திட்டத்தை, கனவுகளை அவர்களுக்குள் விதைக்கும் என்று நம்புகிறேன்” - இப்படி ஒரு அறிக்கையுடன் வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ளார், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தமெங்லாங் (Tamenglong) மாவட்டத்தின் துணை ஆணையர் ஆம்ஸ்ட்ராங் பாமே. அட சுவாரஸ்யமா இருக்கே... என்றபடியே அவரை தொலைபேசியில் பிடித்தோம்.

“நான் இங்கே துணை ஆணையராகப் பதவியேற்று ஒரு மாதமாகிறது. இதுதான் என் சொந்த மண். சொந்த மாவட்டத்திலேயே துணை ஆணையராகச் சேர்ந்தது சந்தோஷமாக இருக்கிறது. என் சிறு வயதில், துணை ஆணையர் அலுவலகத்தைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். இந்த அலுவலகம் எப்படி இயங்குகிறது? யாரெல்லாம் இருப்பார்கள்? அவர்களுக்கு என்ன மாதிரி வேலை இருக்கும் எனப் பல கேள்விகள் எனக்குள் எழும். ஆச்சர்யமாக துணை ஆணையர் அலுவலகத்தை பார்த்தபடியே நகர்வேன். அந்த ஆர்வம்தான் என்னை ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கவைத்தது. 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றேன். ஆனால், நான் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்குக் காரணமாக இருந்த என் அப்பா அப்போது உயிரோடு இல்லை. அவர் ஒரு பள்ளி ஆசிரியர். அவருக்குள் நிறையக் கனவுகள் இருந்தன. நிலவில் முதன்முதலில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்கை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் நினைவாக எனக்கு இந்தப் பெயரைச் சூட்டினார். சகோதர, சகோதரிகளுடன் சேர்த்து நாங்கள் ஏழு பேர்.

என் குடும்பம் ஏழ்மையான சூழலில் இருந்தாலும், எங்கள் படிப்புக்குச் செலவுசெய்ய அப்பா யோசித்ததே இல்லை. அரும்பாடுபட்டுப் படிக்கவைத்தார். நாங்கள் ஜிமா (zema) என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் இனத்திலிருந்து வரும் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி நான்தான். என் மக்களுக்குத் தொடர்ந்து பல நன்மைகள் செய்ய நினைக்கிறேன்'' என்று உற்சாகமாகப் பேசிய ஆம்ஸ்ட்ராங் பாமே, மாணவர்களுக்கான விருந்து விஷயம் பற்றி சொல்லும்போது மேலும் உற்சாகமாகிறார்.

''குழந்தைகளிடம் தலைமைப் பண்புகள் வளர வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தத் துணை ஆணையர் அலுவலகச் சந்திப்பும் விருந்தும். என் நண்பர்கள் பலரும் மருந்துவர்களாகவும் பல துறையின் வல்லுநர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ஸ்கைப்’ மூலம் மாணவர்களிடம் பேசவைக்கப் போகிறேன். இதன்மூலம், மாணவர்களுக்கு உலகில் கொட்டிக்கிடக்கும் கல்வி வாய்ப்புகளை அறிவார்கள். அவர்களின் கனவுகள் விரிவடையும். அவர்களுக்கான தொழில்நுட்பத்தையும் இதன்மூலம் அறிமுகப்படுத்துவேன்” என்கிறார் உற்சாகம் குறையாமல்.

இதுபோன்ற வித்தியாசமான திட்டங்களை செய்வது இவருக்குப் புதிதல்ல. 2012-ம் ஆண்டு, அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலத்தின் சாலைகளை மணிப்பூருடன் இணைக்கும் வகையில், ஒரு முயற்சியில் இறங்கினார். தன்னார்வலர்களின் உதவியுடன் நிதி திரட்டி 100 கிலோமீட்டர் தூரத்துக்குச் சாலையை அமைத்தார். இந்தப் பணிக்காக தனது சொந்தப் பணத்திலிருந்து ஐந்து லட்சத்தை ஒதுக்கினார். மேலும், இவர் மனைவி அவிடோலி (Avitoli) மற்றும் சகோதரர் ஜெரிமியாவும் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தனர்.

''எந்த ஒரு நல்ல விஷயத்தையும் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அது... ஊர், மாநிலம், நாடு என விரியும்போது நம் கனவுகள் ஜெயிக்கும்'' என்கிறார் ஆம்ஸ்ட்ராங் பாமே.
 
அன்று ஊருக்குச் சாலை அமைத்தவர், இன்று குழந்தைகளுக்கு புது வாசலைத் திறந்திருக்கிறார். இவரின் முயற்சிக்கு ஒரு ராயல் சல்யூட்!
ராஜ சாப்பாடு வழங்கி ஜி.எஸ்.டி வரியும் செலுத்தும் 'ஆச்சர்ய' கேன்டீன்! 

எம்.குமரேசன்

கோவை மாநகர் சிங்காநல்லூரில் சாந்தி பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. கோவை - உதகை சாலையில் உள்ள துடியலூர் மற்றொரு புறநகர் பகுதி. துடியலூரில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள சிங்காநல்லூர் சாந்தி பங்கிற்கு வந்து பெட்ரோல் நிரப்பிச் செல்லும் வாகன ஓட்டிகளை கோவையில் பார்க்க முடியும். கோவை மக்களிடையே 'சாந்தி' என்கிற பெயருக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு நற்பெயர். புகழ்பெற்ற சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் இது. இதன் அருகிலேயே செயல்படுகிறது சாந்தி கேன்டீன்.



'அம்மா ' உணவகத்துக்கு முன், கோவைவாசிகளுக்கு கிடைத்த 'அட்சய பாத்திரம்' என்றே இந்தக் கேன்டீனை சொல்லலாம். காலையில் இட்லி, சப்பாத்தி, வடை மலிவு விலையில் கிடைக்கும். மதியம் கூட்டு , பொறியல், வடை, அப்பளம், பழம் என 13 வகை கூட்டுகளுடன் 'சரவண பவன்' ரேஞ்சுக்கு 'லஞ்ச்' கிடைக்கிறது. ' இன்று என்ன ஸ்பெஷல்' என்பதும் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும்.

எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம். உங்கள் வயிறு நிரம்பாமல் போனால் மட்டுமே சாந்தி கேன்டீன் வருத்தப்படும். விலையோ வெறும் 25 ரூபாய்தான். வாடிக்கையாளர்களுக்கு ராஜ சாப்பாடு வழங்கி, அதற்கான ஜி.எஸ்.டி வரியையும் இந்த கேன்டீனே செலுத்துகிறது என்பதுதான் இப்போதையை ஆச்சரியத் தகவல். கோவை நகரில் பத்து ரூபாய்க்கு டீ கூட குடிக்க முடியாது. இந்தக் கேன்டீனிலோ ஃபில்டர் காபியின் விலையே 5 ரூபாய்தான்.

ஜி.எஸ்.டி வரி அமலுக்கு வந்ததும் ஹோட்டல்களில் 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் ரூ. 128 பில் கட்ட வேண்டியதிருக்கிறது. பிரச்னை என்னவென்றால், ஜி.எஸ்.டி வரியைக் காரணம் காட்டி குடிநீர் கேன் சப்ளை செய்பவர்கள் கூட 5 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளனர். இவர்கள் எந்த பில்லும் கொடுப்பதில்லை. நாமும் பில் பற்றி யோசிப்பதும் இல்லை. இதைப்போலவே பல ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி என்ற பெயரில் தாறுமாறாக பில் ஏற்றுகின்றனர். அத்தியாவசியப் பொருட்களில் அரிசி, காய்கறிக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை. சில பொருட்களுக்கு 5,12,18,28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை, பால், இன்ஸ்டன்ட் காபி, டீ போன்றவற்றுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரிதான் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல ஹோட்டல்களில் காபிக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறார்கள். ஹோட்டலில் பொங்கல், காபி சாப்பிடுகிறீர்கள் என்றால், மொத்த பில் 88.50 வருகிறது என்றால், அந்த 88.50 ருபாய்க்கு 18 சதவிகித வரி விதிக்கிறார்கள் காபிக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரிதானே விதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லாததால், பில்லை சரிபார்க்காமலேயே செலுத்தி விடுகின்றனர். ஆனால், சாந்தி கேன்டீனைப் பொறுத்தவரை, எந்த பொருளுக்கு என்ன ஜிஎஸ்டி வரியோ... அதை மட்டும் பில்லில் சரியாக காட்டி, வாடிக்கையாளர்கள் சார்பில் அரசுக்கு செலுத்தப்படுகிறது.

இங்கு, சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பண்டத்துக்கும் அதற்கான சி. ஜி.எஸ்,டி வரியும் எஸ்.ஜி.எஸ்.டி வரியும் தனித் தனியாக பிரித்துக் காட்டப்படுகிறது. ‘ஒரு குடும்பத்தின் மொத்த பில் ரூ.110 ஆகியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 3 கிச்சடி விலை ரூ.30, வெண்பொங்கல் ஒன்றின் விலை ரூ.10 , சப்பாத்தி ஒரு செட் ரூ.20,புளி சாதம் ரூ.10 ,ராகி பால் 3 ரூ.15, ராகி தோசை ரூ.10, பில்டர் காபி ரூ.5 ஆக மொத்தம் 110 பில் வருகிறது. அதில், கிச்சடியில் இருந்து காபி வரை ஜிஎஸ்டி வரி தனித்தனியாக பிரித்துக் காட்டப்படுகிறது. வாடிக்கையாளர் பில் தொகை 110 மட்டும் கட்டினால் போதுமானது. ஜி.எஸ்.டி வரியை கேன்டீன் நிர்வாகமே செலுத்துகிறது.

பல கடைகளில் என்ன பொருளுக்கு ஜி.எஸ்.டி வரி எவ்வளவு என்பதையும் பார்க்காமல் வாங்கி விடுகிறோம். மொத்த பில்லுக்குமாகச் சேர்த்து 18, 28 சதவிகிதம் என ஜி.எஸ்.டி வரியைச் செலுத்துகிறோம். தனித்தனியாக ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி வரி என்ன என்பதை நிறுவனங்கள் காட்ட முன்வருவதில்லை. இதுகுறித்த, விழிப்பு உணர்வு வாடிக்கையாளர்களுக்குத் தேவை!
கோவில் திருவிழாக்களில் குறையும் பக்தர்கள் கூட்டம்

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
01:36

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், வரதராஜப்பெருமாள் கோவில் திருவிழாவை தவிர, மற்ற கோவில்களின் விழாக்கள் மற்றும் உற்சவங்களில், பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது.

எனினும், காலம் காலமாக இடை விடாமல் நடைபெறும் விழாக்களில், இந்து மத பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என, கோவில் ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

பல்லவர்கள்

காஞ்சிபுரத்தில், சைவம், வைணவம், பவுத்தம், சமணம் என, பல மதங்களை சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். அதனால், பாரம்பரிய நகரமாக பெயர் ஏற்பட்டது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் இன்னும் சிறப்பு பெற்று விளங்கி வருகின்றன.கோவில்களை நிர்மாணித்தவர்கள், கோவில்களின் செலவு மற்றும் விழாக்களுக்கான வருமானத்திற்கு, ஏராளமான நிலங்களை ஒதுக்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை பயன்படுத்தினர்.

பக்தர்களும், தங்கள் அன்றாட கடமை போல, கோவில் விழாக்களில் ஆர்வமாக பங்கேற்றனர்.இந்த நடைமுறை, மன்னர்கள் காலம் முடிந்த பின்னும் தொடர்ந்து நடந்தது. சமீப காலமாக, கோவில் நிலங்களை குத்தகையாக பெற்றவர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள், கோவில் நிர்வாகத்திடம் பணம் கொடுப்பதில்லை.

இதனால், கோவில்களில் வருமானம் குறைந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும், கோவில் விழாக்களை காணவும், அதில் பங்கேற்கவும், பக்தர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது.தேரோட்டம், பல்லக்கு ஊர்வலம், தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகளில் கூட, பக்தர்கள் பங்கேற்காமல், கோவில் நிர்வாகத்தினரும், அர்ச்சகர்களும் மட்டுமே பங்கேற்கும் நிலை காணப்படுகிறது.

தனித்தனி சமுதாயத்தினர் சார்பில் நடத்தப்படும் கோவில் விழாக்களில், சிறிதளவு கூட்டம் இருக்கிறது. ஆனால், பொதுவான விழாக்களில், அநேகமாக, பக்தர்கள் கூட்டம் இருப்பது இல்லை. கோவில் வழிபாடு, இறை நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், விழாக்களில் பங்கேற்போர் எண்ணிக்கை குறைந்து வருவது, கோவிலை நிர்வகிப்போருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை பொறுத்த மட்டில், ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழாவிற்கும், வரதராஜப்பெருமாள் கோவில் தேர் திருவிழாவிற்கும் மக்கள் கூட்டம் இருப்பது போல, மற்ற கோவில்களில் கூட்டத்தை காண முடிவதில்லை.பெரிய அளவில்இன்னும் சொல்லப்போனால், பிரசித்தி பெற்று விளங்கும் பழமையான கோவில் தேர் திருவிழாவிற்கு, பெரிய அளவில் தேர் இல்லை என்பதால், வண்டியில் தேர் போல் அலங்கரித்து இழுத்து செல்கின்றனர்; அதில் கூட மக்கள் செல்வதில்லை.எதிர்காலத்தில் இவ்வாறு திருவிழாக்களில் மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே போனால், அந்த கோவில்களில் விழா நடத்துவதற்கு ஆர்வம் இல்லாமல் போகும் நிலை உருவாகும்.

இதை தவிர்க்கும் வகையில், அறநிலையத்துறை மற்றும் வழக்கமாக திருவிழா நடத்தும் சமூக அமைப்புகளை அழைத்து பேசி, மக்கள் கூட்டத்தை அதிகரிக்க அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

முக்கிய விழாக்களில் பக்தர்கள் கூட்டம்

பிரம்மோற்சவ காலத்தில் குமரகோட்டம் முருகன் கோவிலில் இல்லாத கூட்டம் சஷ்டிக்கு இருக்கிறது. அதே போல, கச்சபேஸ்வரர் கோவிலில், கடைசி ஞாயிறு விழாவிற்கு கூட்டம் அதிகமாக இருக்கும். சித்திர குப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று ஆயிரக்கணக்கான கூட்டத்தை காண முடியும். வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி அன்று கூட்டம் இருக்கும்.மகா சிவராத்திரி அன்று கைலாசநாதர் கோவிலில், விடிய விடிய பக்தர்கள் கூட்டத்தை காண முடியும்.

விநாயகர் கோவிலில் வழக்கத்தை விட விநாயகர் சதுர்த்தி, ஆடி மாதங்களில் காமாட்சி அம்மன் கோவிலில் ஏராளாமான பக்தர்கள் வருவர்.

திருவிழாவிற்காக ஆகும் செலவு

ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பிரம்மோற்சவத்திற்காக ஒவ்வொரு கோவில்களிலும் செலவு வேறுபடுகிறது. ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய உற்சவங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. வரதராஜப்பெருமாள் கோவிலின் முக்கிய உற்சவத்திற்கு, 70 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.

ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விசேஷம் இருக்கும். அதற்கான கூட்டமும் அந்த விழாவில் காண முடியும். எல்லா காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் வரும் கோவில்களில் உண்டியல் வருமானம் அதிகம் இருக்கும். பிரமாண்டமாக கோவில்கள் இருக்கும் அளவிற்கு, பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. கோவில் விழாக்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கே. ஜெகதீசன், காஞ்சிபுரம்

பிரம்மோற்சவம் துவங்கும் முன் உபயதாரர்களுக்கு பத்திரிகை கொடுப்போம். அதற்கு முன் திருவிழா குறித்து ஒரு கூட்டம் நடத்துவோம். அதில் வழக்கமாக உபயதாரர்கள் கருத்தும் தெரிவிப்பர். கோவில் திருவிழா குறித்து விளம்பரம் சிலர் செய்வர். தற்போது இது தான் நடைமுறையில் இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் கூட்டத்தை வரவழைக்க வேண்டுமானால் இன்னும் விளம்பரப்படுத்த வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகும். மக்கள் விரும்பும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம். அவ்வாறு ஏற்பாடு செய்தால் இன்னும் கூட்டத்தை அதிகப்படுத்தலாம்.

கோவில் செயல் அலுவலர், காஞ்சிபுரம்கோவில் விழாக்களில் பக்தர்கள் அதிகளவு பங்கேற்க தேவையான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்; விளம்பரப்படுத்த வேண்டும்.

பி.நந்தகுமார், காஞ்சிபுரம்
மூக்கில் மோதிரம் அகற்றிய டாக்டர்கள்

  பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
00:06

திண்டுக்கல், திண்டுக்கல் காமாட்சிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்த்திக்,3. விளையாடும் போது பிளாஸ்டிக் மோதிரத்தை எடுத்து மூக்கில் திணித்து விட்டான்.

இதனால் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியபடி இருந்தது.
இது குறித்து அறியாத பெற்றோர், சிறுவனை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூக்கில் ஸ்கேன் செய்த டாக்டர்கள், மூக்கில் மோதிரம் சிக்கி இருந்ததை கண்டனர். பின், எண்டாஸ்கோபி மூலம் மூக்கில் இருந்த பிளாஸ்டிக் மோதிரத்தை எடுத்தனர். இந்த சிகிச்சை 30 நிமிடம் நடந்தது.
காரைக்குடி தியேட்டர்களில் ஒரே வகுப்பு, ஒரே கட்டணம்

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
22:28

காரைக்குடி, நாடு முழுவதும் ஜூலை 1ல் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி, தமிழகத்தில் 100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு 18 சதவீதம், அதற்கு மேலான டிக்கெட்டுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர உள்ளாட்சிகள் மூலம் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தியேட்டர்கள் நான்கு நாட்கள் மூடப்பட்டது.

தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.
காரைக்குடியில் நான்கு தியேட்டர்கள் உள்ளன. பாண்டியன் தியேட்டரில் முதல் வகுப்பு ரூ.40, இரண்டாம் வகுப்பு ரூ.30, மூன்றாம் வகுப்பு ரூ.5, சத்தியன் தியேட்டரில் ரூ.30, 25, 4, நடராஜா தியேட்டரில் ரூ.40, ரூ.35, ரூ.5, சிவம் தியேட்டரில் ரூ.40, 30, 25, 10 என மூன்று நான்கு வகுப்புகளாக டிக்கெட் கட்டணம் பொதுமக்கள் பார்வைக்காக எழுதி வைத்திருந்தாலும், ஒரே வகுப்பு, ஒரே கட்டணம் என்ற அடிப்படையில் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
சிவம் தியேட்டரில் மட்டும் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு பின் பாண்டியன், சத்தியன், நடராஜா தியேட்டரில் டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆக உயர்த்தப்பட்டது.
நுழைவு கட்டணம் ரூ.99.84, சி.ஜி.எஸ்.டி., ரூ.17.98, உள்ளாட்சி கேளிக்கை வரி ரூ.1,
எஸ்.ஜி.எஸ்.டி., 0.18, மொத்தம் 119. நேற்று கூட்டம் இல்லாததால் நடராஜா தியேட்டரில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
சிவம் தியேட்டரில் ரூ.30 கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு கணினி வழி டிக்கெட் இல்லாததால், வரிக்காக பிரித்து போடவில்லை.
மானாமதுரை: ஜி.எஸ்.டி.,க்கு பின் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் கேளிக்கை வரிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாததால், பழைய கட்டணங்களையே தியேட்டர்களில் வசூலித்து வருகின்றனர்.
சீனியப்பா தியேட்டரில் முதல் வகுப்பு : ரூ.90 இரண்டாம் வகுப்பு: ரூ.70 பெண்கள் : 30

ஸ்ரீபிரியா தியேட்டரில் முதல் வகுப்பு: ரூ.70, பெண்கள் : 20
காளையார்கோவிலில் உள்ள தியேட்டரில் கட்டண மாற்றம் இல்லை.
சிவகங்கை: ரவிபாலா தியேட்டரில் பழைய கட்டணம்: முதல் வகுப்பு 30 ரூபாய், இரண்டாம் வகுப்பு 20 ரூபாய், மூன்றாம் வகுப்பு 4 ரூபாய். ஜி.எஸ்.டி.,க்கு பின் புதிய கட்டணம் மாற்றமில்லை. ஜே.பி., தியேட்டரில் பழை கட்டணம்: 2 ரூபாய். ஜி.எஸ்.டி.,க்கு பின் கட்டணம் மாற்றமில்லை.
50 வயது கடந்த ஊழியர்களுக்கு உ.பி.,யில் கட்டாய ஓய்வு

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
00:20




லக்னோ: அரசு அலுவலகங்களில் வேலை செய்யாமல் துாங்கி வழியும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

பணிகள் பாதிப்பு : இம்மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், ஊழியர்களின் அலட்சியம் மற்றும் சோம்பேறித்தனத்தால், பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. பல ஊழியர்கள், பணி நேரத்தில் வேலை செய்யாமல் துாங்கி வழிவதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இதையடுத்து, மாநில தலைமை செயலர் ராஜிவ் குமார், அனைத்து துறை செயலர்கள், கூடுதல் செயலர்களுக்கு அனுப்பிய உத்தரவு:அரசு அலுவலகங்களில் பணிபுரியும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களின் பணித்திறன் கண்காணிக்கப்படும். உரிய நேரத்தில் பணிகளை முடிக்காதவர்களுக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்படும்.

3 மாத நோட்டீஸ் : இதற்கு, 2017 மார்ச், 31 அன்று, 50 வயது நிறைவடைந்த ஊழியர்களின் பட்டியலை தயாரித்து, பணியாளர் நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். தங்கள் துறையில் உள்ள, 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள், கட்டாய ஓய்வில் செல்ல, மூன்று மாத, 'நோட்டீஸ்' வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ரயில்வே தேர்வு
319 கோடி பேப்பர்கள் மிச்சம்

புதுடில்லி:பல்வேறு பதவிகளுக்கான தேர்வை, ஆன்லைனில் ரயில்வே நடத்தியதன் மூலம், 319 கோடி பேப்பர்கள் மிச்சமானதாக, தெரிவிக் கப்பட்டுள்ளது.




இது பற்றி இந்திய ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரயில்வே பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வ தற்கு, எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், 'ஏ 4' அளவுடைய பல கோடி பேப்பர் கள் செலவாகி வந்தன. ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபு பொறுப்பேற்றபின், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ரயில்வே பணிகளுக்கான தேர்வை, ஆன்லைனிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. உதவி ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உட்பட 14 ஆயிரம்பணியிடங்களுக்கான, முதல் கட்ட தேர்வு, நாடு முழுவதும், 351 மையங்களில், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது; 92 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 2.73 லட்சம் பேர், தேர்வு செய்யப்பட்டு, அடுத்த கட்ட எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த தேர்வு, கடந்த, ஜன., 17 - 19 தேதிகளில் நடந்தது.

இதுவும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. இதில் இருந்து, 45 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, நேர் முக தேர்வுக்குஅழைக்கப்பட்டனர்.பேப்பர் செலவு இல்லாமல் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம், 319 கோடி பேப்பர்கள் மிச்சமாயின; நான்கு லட்ச மரங்கள் காப்பாற்றப்பட்டன.

ஆன் லைனில் நடத்தப்பட்டதால், முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. கேள்வி தாள் வெளியானது உட்பட, எந்தமுறைகேடுக் கும், இதில் இடமில்லை. நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களில், 14 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் சான்றிதழ் கள், செப்டம்பரில் ஆய்வு செய்யப்பட்டு, தீபாவளிக்கு முன் அவர் கள் பணியில் சேருவர். உலகிலேயே, ஆன் லைனில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தேர்வு, என்ற சாதனையையும், ரயில்வே படைத்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
 வேண்டும் இஸ்ரேல் தொழில்நுட்பம்!
 
பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்றதில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். ஒவ்வொரு சுற்றுப்பயணமும் ஏதாவது ஒருவகையில் சிறப்பு மிகுந்ததாக இருக்கிறது. 
 
பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்றதில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். ஒவ்வொரு சுற்றுப்பயணமும் ஏதாவது ஒருவகையில் சிறப்பு மிகுந்ததாக இருக்கிறது. அந்தவகையில், இதுவரையில் எந்த இந்திய பிரதமரும் சென்றிராத இஸ்ரேல் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்த்துவிட்டார். இஸ்ரேல் நாடு சுதந்திரம் அடைந்து

70 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையில், இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் சென்றதில்லை என்றவகையில், நரேந்திர மோடியை வரவேற்ற இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன் யாஹூ 70 ஆண்டுகளாக இந்திய பிரதமரின் வருகைக்காக இஸ்ரேல் காத்துக் கொண்டிருந்தது என்று கூறினார். இந்தியாவுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் 1992–ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் இருந்தாலும், அந்த உறவுகள் எல்லாம் இதுவரையில் இப்போதுபோல் வலுப் பட்டது இல்லை. இவ்வளவுக்கும் நமது ராணுவ தளவாடங் களை பெருமளவில் இஸ்ரேல் நாட்டிலிருந்துதான் வாங்கு கிறோம்.

இந்த சுற்றுப்பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. குறிப்பாக நீர்வளம், வேளாண்மை, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற பல துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு நன்மை பயக்கும். இந்த பயணத்தில் நரேந்திரமோடி, இஸ்ரேல் நாட்டு மக்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டு போய்விட்டார் என்றே கூறலாம். ‘பெர்சனல் டச்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒவ்வொரு உள்ளத்தையும் தொடுவதுபோல 41 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விமான கடத்தலை தடுக்க முயன்ற போது உயிர் இழந்த இஸ்ரேல் நாட்டு பிரதமர் நேதன் யாஹூவின் சகோதரர் யோனத்தான் பற்றி தன்பேச்சில் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் படையால் 15 லட்சம் குழந்தைகள் உள்பட 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட பேரழிவு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் 26–ந்தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்த மதகுருவான தன் தந்தையையும், தாயையும் இழந்து தான் மட்டும் உயிர்தப்பி, தற்போது இஸ்ரேலில் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வரும் 11 வயது சிறுவன் மோஷேயை வரவழைத்து அவனிடம் அன்புடன் பேசினார். மேலும் அவனும், அவனது குடும்பத்தினரும் எந்த நேரத் திலும் இந்தியாவுக்கு வரலாம் என்ற வகையில், ‘நீண்டகால விசா’ வழங்கியது மிகவும் உருக்கமாக இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் நரேந்திரமோடியும், நேதன் யாஹூவும் நெருங்கிய நண்பர்களைப்போல பழகினர்.

இஸ்ரேல் நாடு தண்ணீர் பஞ்சம் உள்ள நாடு. அங்கு கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்கள் மூலமாகத்தான் பெரும்பாலான விவசாயம், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், குறைந்தளவு பெய்யும் மழை நீரையும் முறையாக சேமிக்கும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துபவர்கள் இஸ்ரேல் நாட்டினர். அங்கு கடல்நீர் அல்லது மாசு கலந்த தண்ணீரிலிருந்து சுவைமிக்க குடிநீரை தயாரிப்பதற்கான அதிநவீன நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள ஓல்கா கடற்கரைக்கு நரேந்திரமோடி அந்த நாட்டு பிரதமருடன் சென்றபோது, இந்த வாகனத்தில் இருந்து கடல்நீரை குடிநீராக மாற்றி கிடைத்த தண்ணீரை இருவரும் பருகினர். இந்த வாகனம் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும். அதுபோல, 80 ஆயிரம் லிட்டர் சகதி, மாசு கலந்த ஆற்றுநீரை அல்லது குளத்து நீரை சுத்திகரிக்க முடியும். கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கி லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவோம் என்று நேதன் யாஹூ குறிப்பிட்டி ருக்கிறார். இஸ்ரேல் நாட்டின் இந்த தொழில்நுட்பங்களை உடனடியாக வாங்கி தமிழ்நாடு போன்ற தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். தமிழக அரசும் இந்த கோரிக்கையை பிரதமருக்கு வைக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு அரசிதழில் வெளியீடு





மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு, அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஜூலை 08, 2017, 03:45 AM

புதுடெல்லி,


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க 7-வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன், 197 படிகளை ஆய்வு செய்தது. அவற்றில் 53 படிகளை கைவிடுமாறு சிபாரிசு செய்தது. 37 படிகளை மற்ற படிகளுடன் இணைக்குமாறு கூறியது.


சம்பள கமிஷன் கைவிடுமாறு கூறிய 53 படிகளில், 12 படிகளை கைவிடுவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், படிகள் குறித்த சிபாரிசுகளில், 34 திருத்தங்கள் செய்தது.

அரசிதழில் வெளியீடு

இந்த திருத்தங்களுடன் கூடிய 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுக்கு மத்திய மந்திரிசபை கடந்த மாதம் 28-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்த சிபாரிசுகள், நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டன. இதனால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள்.

7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்த படிகளால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.29 ஆயிரத்து 300 கோடி செலவாகி இருக்கும். ஆனால், படிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டதால், ரூ.1,448 கோடி சுமை அதிகரித்து, மொத்தம் ரூ.30 ஆயிரத்து 748 கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத சம்பளத்தில் கிடைக்கும்

உயர்த்தப்பட்ட படிகளை, ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. எனவே, இந்த மாத சம்பள ரசீதிலேயே உயர்த்தப்பட்ட படிகள் இடம்பெறும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உரிய ஆணையை பிறப்பிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நகரங்களைப் பொறுத்து, 8 சதவீதம் (ரூ.1,800), 16 சதவீதம் (ரூ.3,600), 24 சதவீதம் (ரூ.5,400) என்ற விகிதங்களில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட உள்ளது.

வீட்டு வாடகைப்படி

அகவிலைப்படி 50 சதவீதம் மற்றும் 100 சதவீதத்தை எட்டும்போது, வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது. ஆனால், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதத்தை எட்டும்போதே வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நர்சுகளுக்கு மாதந்தோறும் உடை படி என்ற புதிய படி அறிமுகப்படுத்தப்படுகிறது.
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது




மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க இன்றே கடைசி நாள்.

ஜூலை 08, 2017, 03:45 AM

சென்னை,

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க 2,900 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள்போக, மாநில ஒதுக்கீட்டுக்கு 2,445 இடங்கள் உள்ளன. இதில் 85 சதவீத இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கப்படும்.

ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும், 10 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இதில் மொத்தம் 1,800 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

மருத்துவ கல்விக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. மருத்துவ கல்விக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? பிளஸ்-2 தேர்வு அடிப்படையில் சேர்க்கையா? என்று இன்னும் தெரியாமல் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். இதுபற்றி தமிழக அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.

கடந்த மாதம் 27-ந் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. நேற்று விண்ணப்பங்கள் வழங்க கடைசி நாள். மொத்தம் 43 ஆயிரம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 26 ஆயிரம் பேர் தான் விண்ணப்பங்கள் பெற்றனர்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு என்ற முகவரிக்கு இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் வந்துசேர வேண்டும். மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்தில் நேற்றே ஏராளமான மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து நிரப்பப்பட்ட படிவங்களை சமர்ப்பித்தனர். நேற்றைய நிலவரப்படி 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மருத்துவ கலந்தாய்வு நடத்தும் அதிகாரி கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் ஜனாதிபதி கையெழுத்திட்டு வந்தால், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும். அவ்வாறு வரவில்லை என்றால் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.

இப்போதைய நிலவரப்படி 14-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 17-ந் தேதி கலந்தாய்வு தொடங்கும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்



சென்னை நகரில் குடிநீருக்காக காலி குடங்களுடன் மக்கள் வீதி, வீதியாக அலையும் நிலை காணப்படுகிறது.

ஜூலை 08, 2017, 05:30 AM

சென்னை,

தமிழகத்தின் தலைநகரான சென்னை கடந்த 1947, 1954, 1968, 1972, 1975, 1982, 1983, 2001 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் குடிநீர் பஞ்சத்தில் சிக்கியது. தற்போது பருவமழை பொய்ப்பு, வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் மீண்டும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி உள்ளது.

சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் கோடையை சமாளிப்பதற்கு கைகொடுக்கவில்லை. கடல் போன்று காட்சி அளித்த இந்த ஏரிகள் அனைத்தும் இன்று வறண்ட பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இதனால் சென்னை நகரின் குடிநீர் தேவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும் நிலையில், அதில் பாதி அளவு கூட தண்ணீர் கிடைப்பது இல்லை.

ஏரிகள் ஏமாற்றினாலும் நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 கோடி லிட்டர் தண்ணீரும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 6 கோடி லிட்டர் தண்ணீரும், 22 கல்குவாரிகளில் இருந்து 3 கோடி லிட்டர் தண்ணீரும் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

இது ‘யானைப்பசிக்கு சோளப்பொரி’ என்பதற்கு உதாரணம் போன்று இருக்கிறது. வீடுகளில் நாள்தோறும் குழாய்களில் பொங்கி வழிந்த தண்ணீர் இன்று சிறுதுளிகளாக விழுகின்றன. பல இடங்களில் குடிநீர் குழாய்களை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக காற்று வீசும் நிலைதான் காணப்படுகிறது.

குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட பெரும்பாலான குடிநீர் குழாய்களும் காட்சி பொருளாக மாறி விட்டன. தண்ணீர் வரும் குழாய்களிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது.

குடிநீர் எங்கே வருகிறது, குடிநீர் லாரி எப்போது வரும்? என்ற மனநிலையே மக்களிடம் காணப்படுகிறது. காலிகுடங்களுடன் மக்கள் வீதி, வீதியாக தண்ணீரை தேடி அலைவது அன்றாட காட்சியாகி விட்டது. தண்ணீர் கிடைக்கும்போது, அதை சேமித்து வைக்கவேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் அதிகரித்து உள்ளது. இதனால் பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு சென்னை நகரம் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவித்த போது, ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சரக்கு ரெயில் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த ஆண்டு சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு மற்ற மாவட்டங்களால் கைகொடுக்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, July 7, 2017

இனி டில்லி தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம்

புதுடில்லி: யூனியன் பிரதேசங்களின் நகர்புற வளர்ச்சி துறையினரை மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு சந்தித்து பேசினார். இக்கூட்டத்தில் டில்லி சார்பில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் பங்கேற்றனர்.அப்போது டில்லியின் தூய்மையை காக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து வெங்கைய்யாவிடம் விரிவாக விளக்கப்பட்டது. இதில், டில்லியின் தூய்மையை காப்பதற்காக இனி தெருக்களில் குப்பை கொட்டுவோருக்கு பார்த்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். குப்பைகள் இரவு நேரங்களிலேயே அப்புறப்படுத்தப்படும். பகல் பொழுதில் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் மற்றும் மற்ற ஏஜன்சிகளை சேர்ந்தவர்களும் சேகரிப்பர்.அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான குடிநீர் வசதி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வெங்கைய்யா, இது தொடர்பான வரைவு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை நடைமுறை படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் டில்லியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகராக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
குழந்தைகள் தோல்வியும் பழக வேண்டும்... ஏன் தெரியுமா?#GoodParenting




அது ஒரு கல்யாண வீடு. உறவுகளின் கேலி கிண்டல்ளுக்கு மத்தியில் குழந்தைகளின் ரகளையும் கலகலப்பு சேர்ந்தது. சொந்தங்கள் புதுப்புது விளையாட்டுகளில் களம் இறங்கினர். வெற்றிபெற்றால் பரிசு என்று சொல்லப்பட்டது. போட்டியும் கமெண்டுமாக சுட்டிகள் கூட்டம் களம் இறங்கியது. கல்யாணப் பெண்ணின் அம்மா சாந்தி, விசேஷத்துக்கு வந்த ஒரு குழந்தைகூட மனம் வருத்தப்படக் கூடாது என்பதில் கவனமாகச் செயல்பட்டார். மியூசிக்கல் சேர் போட்டியின் ஒவ்வொரு ரவுண்டிலும் வெளியேறிய குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்து புன்னகைக்கச் செய்தார். இது சரியா?

அது ஒரு பூங்கா... அங்கு சற்றுமுன்பு அறிமுகமான குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சந்துருவுக்கு திடீரென கீழே விழுந்து முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பதறியடித்து உதவ முன்வந்தனர். சந்துருவை அள்ளிக்கொண்ட அவன் அம்மாவோ, ''நான் உன்கூட இருக்கேன் சந்துரு. உனக்கு எதுவுமில்லை. சரியாகிடும்'' என அன்பு வார்த்தைகளால், அவன் விழுந்ததை மறக்கவைக்க முயற்சி செய்தார். இப்படி வலியே அறியாமல் நம் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமா?

ஷாப்பிங் செல்லும்போதெல்லாம் பார்க்கும் பொருள்களில் எதையாவது வாங்கித் தரச்சொல்லி அடம்பிடிப்பாள் மித்ரா. தராவிட்டால் முகம் சோர்ந்துவிடும். அவள் கேட்பதற்கும் மேலாக வாங்கித் தந்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அம்மா சித்ரா. ஆனாலும், மித்ரா எதிலும் திருப்தியடையாமல் எல்லாவற்றையும் கேட்டு சித்ராவை திகைக்கவைப்பாள். குழந்தைகள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தருகிறார் மனநல ஆலோசகர் பாபு ரங்கராஜன், ''ஒற்றைக் குழந்தைகள் மட்டுமே உள்ள நியூக்ளியர் குடும்பங்களில், குடும்பத்தின் மொத்த கவனமும் குழந்தை மீதே குவிகிறது. அவர்கள் பசியை உணரும் முன்பே உணவூட்டப்படுகிறது. விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக் குவிக்கப்படுகிறது. குழந்தை தனக்கு எது தேவை என்று யோசிப்பதற்கான வாய்ப்பே கொடுக்கப்படுவதில்லை. பெற்றோரின் அதீத கவனிப்பு, அவர்களின் வாழ்விலிருந்து அனுபவம் வழியாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது.



நாம் எதிர்பார்க்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. சிலவற்றுக்குக் காத்திருக்க வேண்டும். தோல்விகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதைக் குழந்தைகள் உணராமல் வளர்க்கப்படுகின்றனர். சிறு வயதில் தான் நினைத்தது கிடைக்காவிட்டால், அந்தக் குழந்தை அழுகையாகவும் அடம்பிடித்தலாகவும் வெளிப்படுத்தும். அதன் அழுகையை நிறுத்துவதற்காகவும் மனம் வருந்தக்கூடாது என்ற நோக்கத்திலும் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இது தவறான நடைமுறை. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தை நல்ல விஷயங்களைச் செய்யும்போது, பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே குழந்தை தவறு செய்யும்போது தண்டிப்பதால், குழந்தை கோபம்கொள்கிறது. இங்கே தண்டிப்பதற்குப் பதிலாக, 'நீ செய்தது தவறு' எனப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

குழந்தைகளின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் தோல்வியில் முடியும்போது, சமாதானப்படுத்துவது தவறு. மாறாக, 'நடந்தது நடந்துவிட்டது அடுத்து என்ன செய்யலாம்?' என்று உங்கள் குழந்தையிடமே கேளுங்கள். தோல்விக்கான காரணங்களை குழந்தைகளிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடுங்கள். எதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று ஆலோசித்து தன்னை மதிப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்பை குழந்தைக்குக் கொடுங்கள். தன்னிடம் மாற்ற வேண்டிய குறைகள் இவைதான் என்று குழந்தைகள் மனம் பட்டியலிட்டுக்கொள்ளும். அவற்றை மாற்றவும் முயற்சி செய்யும். இதுபோன்ற விஷயங்கள் குழந்தைக்குள் தானாகவே நடக்கும். தோல்வியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அந்தக் குழந்தைக்குள் பிராப்ளம் சால்விங் திறன் வளரும்.

வாழ்வில் எப்போதும் ஏதாவது ஒரு தோல்வி அல்லது ஏமாற்றத்தை நாம் சந்தித்தாக வேண்டும் என்ற இயல்பை குழந்தைகள் புரிந்துகொள்ளட்டும். கீழே விழுந்து அடிபடுவதும் வலிப்பதும் இயல்பு என்பதைப் புரிந்துகொள்ளட்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் இது பொதுவானதே. அப்போதுதான் பிரச்னைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் யோசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதற்கு வாய்ப்பற்ற குழந்தைகள்தான் தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காகவோ, கல்லூரியில் எதிர்பார்த்த படிப்பு கிடைக்காமல் போனதற்காகவும் தற்கொலை வரை போகின்றனர். வாழ்வின் இன்பதுன்பங்கள் இரண்டையும் குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதற்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அவர்கள் வலியிலிருந்து வெளியில் வர நாம் உதவலாம். ஆனால், வலியே தெரியாத மாதிரி வளர்க்கக் கூடாது'' என்கிறார் பாபு ரங்கராஜன்.

Dailyhunt
"மூன்றுநாள் ரயில் பயணம்... பிளாட்பாரத்தில் தூக்கம்!" - மகன் வீட்டுக்குச் சென்ற வேலூர் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்


சென்னையில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்ற வேலூர் பெண், முகவரியை மறந்து மூன்று நாள்கள் ரயிலிலேயே பயணித்துள்ளார். ஒரு வாரத்துக்குப்பிறகு அவரை மீட்டு மகனிடம் ஒப்படைத்துள்ளனர் மனிதநேயமுள்ளவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், அன்னனூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் மூதாட்டி ஒருவர், சில தினங்களாக படுத்திருந்தார். பயணிகள் கொடுக்கும் உணவை மட்டும் சாப்பிட்ட அவர், யாரிடமும் உதவி கேட்கவில்லை. யார் இவர்? என்ற கேள்வி பயணிகளில் பலருக்கு எழுந்தாலும் மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை. அந்தவழியாகச் ரயிலை இயக்கும் டிரைவர் அச்சுதன், கண்ணில் அந்த மூதாட்டி தென்பட்டார். உடனடியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களை இயக்கும் டிரைவர்கள் நடத்தும் 'நல்ல சமாரியன் மீட்பர் குழு'வுக்கு அச்சுதன் தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அன்னனூர் ரயில் நிலையத்துக்கு மீட்பு குழுவினரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் சங்கரநாரயணனும் சென்றனர். அவர்கள், மூதாட்டிக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். பிறகு மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது, மூதாட்டி தன்னுடைய பெயர் சேஷம்மாள், மகன் சென்னையில் இருப்பதாகவும் மகள் வேலூர் காட்பாடியில் வசிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அவர்களுடைய முகவரி மட்டும் தனக்குத் தெரியவில்லை என்று பரிதாபமாக மூதாட்டி சேஷம்மாள் தெரிவித்தார். மேலும், சேஷம்மாள், நடக்க முடியாதளவுக்கு காலில் காயங்களும் இருந்தன. அதுகுறித்து கேட்டபோது பிளாட்பாரத்திலிருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கண்ணீர்மல்க தெரிவித்தார்.




இதனால் சமூக சேகவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெங்கடேஷுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெங்கடேஷும், சமூக சேவகி வசந்தி மற்றும் பாலாஜி ஆகியோர் அன்னனூர் ரயில் நிலையத்துக்குச் சென்றனர். சேஷம்மாளை மீட்டு சென்னை போரூரில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்ததோடு சிகிச்சையை அளிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். மறுநாள் வெங்கடேஷ், தன்னுடைய அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். அப்போது காலைப்பத்திரிகையில் சேஷம்மாளைக் காணவில்லை என்ற விளம்பரம் வெங்கடேஷ், கண்ணில் தென்பட்டது. உடனடியாக விளம்பரத்திலிருந்த போன் நம்பரில் பேசினார். அவர், தெரிவித்த தகவல் கேட்டு எதிர்முனையிலிருந்த சேஷம்மாளின் மகன் கிஷோர்பாபுவிற்கு மகிழ்ச்சியடைந்தார். பிறகு, போரூர் முதியோர் இல்லத்துக்குச் காரில் சென்ற கிஷோர்பாபு, சேஷம்மாளைப் பார்த்துக் கண்கலங்கினார். அங்கிருந்து அவரை அழைத்துக்கொண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சேஷம்மாளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து வெங்கடேஷ் கூறுகையில், "அன்னனூர் ரயில் நிலையத்தில் நடக்க முடியாமல் சேஷம்மாள் படுத்திருக்கும் தகவல் எங்களுக்கு தெரிந்ததும், உடனடியாக அங்குச் சென்றோம். அங்கு சேஷம்மாள், முழு விவரத்தையும் எங்களிடம் சொன்னார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் சேஷம்மாள் குடியிருந்து வந்தார்.

சேஷம்மாளின் மகன் கிஷோர்பாபு, சென்னையில் வசிக்கிறார். அங்கு செல்ல தனியாக ரயிலில் வந்துள்ளார் சேஷம்மாள். முதுமை காரணமாக மகனின் முகவரியை மறந்துவிட்டார். இதன்பிறகு, அந்த ரயிலிலேயே மூன்று நாள்கள் பசியுடன் பயணித்துள்ளார். அவரிடம் செல்போனும் இல்லை. இதனால், யாரையும் தொடர்பு கொள்ளமுடியாமல் சிரமப்பட்டுள்ளார். அன்னனூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது இறங்கிய சேஷம்மாள் பிளாட்பாரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், எங்கும் செல்ல முடியாமல் பிளாட்பாரத்திலேயே படுத்துறங்கினார். யாரிடமும் உதவியும் கேட்காமல் அங்கு தங்கியிருந்த சேஷம்மாள் குறித்து எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். சேஷம்மாளுக்கு 'டிமென்ஷியா' என்ற முதுமை மறதி நோயும் இருப்பது தெரிந்தது. இதனால்தான் அவர் தன்னுடைய மகனின் முகவரியை மறந்துவிட்டு ரயிலில் பயணித்துள்ளார். பிளாட்பாரத்தில் படுத்துறங்கியுள்ளார்" என்றனர். சேஷம்மாளைக் காணாமல் அந்தக்குடும்பம் பரிதவித்துள்ளது. நான், விளம்பரத்தைப் பார்த்து கிஷோர்பாபுவிற்கு போன் செய்ததும் அவரால் மகிழ்ச்சியில் பேச முடியவில்லை" என்றார்.

ஒரு வாரத்துக்குப்பிறகு போரூர் காப்பகத்தில் சேஷம்மாளும் கிஷோர்பாபு மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சந்தித்தபோது கண்ணீர்மல்க கட்டித்தழுவிக் கொண்டனர். தாய், மகன் பாசத்தைக் கண்டு முதியோர்களும் ஆனந்தத்தில் பேச முடியாமல் அமைதியாகினர்.
Dailyhunt

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் 85% உள்ஒதுக்கீடு நீட் தேர்வு முறையை பாதிக்காது: உச்சநீதிமன்றம்



புதுதில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் 85 சதவீத உள்ஒதுக்கீடு நீட் தேர்வு முறையை பாதிக்காது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனகோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் 85 சதவீதம் உள்ஒதுக்கீடு நீட் தேர்வு முறையை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தது.

மேலும், நீட் தேர்வு முறையை பாதிக்கும் வகையில், தமிழக அரசின் அரசாணை இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படியும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Dailyhunt
சிறப்பாக செயல்படாத அரசு அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி




லக்னோ: உத்தரபிரதேச அரசு நிர்வாகத்தில் சரிவர பணியாற்றாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கும் அறிவிப்பை உத்தரபிரதேச புதிய தலைமைச்செயலாளர் ராஜிவ்குமார் வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது அரசு அலுவலகங்களை பார்வையிட்டு பணிகளை சரிவர செய்யாத அதிகாரிகளுக்கு அவ்விடத்திலேயே உரிய தண்டனையும் அளித்து வருகிறார்.

அந்தவகையில், இந்த மாதம் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளனர். அந்த ஆய்வில் சரிவர செயல்படாத அதிகாரிகளின் பட்டியலில், 50 வயது மற்றும் அதை கடந்தவராக இருப்பின் அவர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான அறிவிக்கைக்கு அவரது பெயர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று   தலைமைச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

"இதுபோன்ற அதிரடி உத்தரவு, அரசு இயந்திரங்களை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், அவை துருப்பிடிக்காமலும், முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டங்களை வழங்குவதற்கு உதவும்" என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சுத்தமான மற்றும் திறமையான நிர்வாகத்தின் வாக்குறுதியால் பாஜக ஆட்சிக்கு வந்தது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுநலனை கருத்தில் கொண்டு சில துறைச்சார்ந்த அதிகாரிகளின் ஓய்வு வயதை 50 ஆக குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, அதற்கான நடவடிக்கைகளில் தற்போதே துணிச்சலுடன் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அதிரடி அறிக்கையால் சுமார் 40 சதவீதம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
Dailyhunt

நீதிமன்றத்தை எதிர்த்துப் போராட அதிகாரம் தந்தது யார்? ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி



சென்னை: நீதிமன்றத்தை எதிர்த்துப் போராட ஆசிரியர் சங்கங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்தது தொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்துக் கூறியிருந்தார்.

இந்த கருத்துகளை எதிர்த்து, நீதிபதி கிருபாகரனுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அரசு பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஐஐடி மாணவர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தனக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உயர் நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?ஆண்டின் பாதி நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பணிக்குச் செல்வதில்லை. முறைகேடு செய்வோர் ஆசிரியர் சங்கத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆசிரியர் சங்கத்தில் இருக்கும் நிர்வாகிகள், பணிக்கு சரியாக வருவதில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பிற ஆசிரியர்கள் முன் வைக்கின்றனர். இதற்கு ஆதாரம் இருக்கிறது.

பலரும் இது தொடர்பாக கடிதம் எழுதி வருகின்றனர் என்று கூறினார்.

மேலும், குழந்தைகள் தோல்வி அடைவதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் பெற்றோர், குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Dailyhunt
மெகா சீரியல் என்ற குட்டிச்சாத்தான்!



மனித படைப்புகளிலேயே மிகவும் அபாயகரமானவை இரண்டு. ஒன்று, ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியில் வெடித்த அணுகுண்டுகள். மற்றொன்று, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்கள்.

ஜப்பானில் வெடித்த அணுகுண்டுகளைப் பற்றியும், அதன் பாதிப்புகளையும் நாம் கண்கூடாக பார்த்துவிட்டோம். அதைப்பற்றி விவாதிக்கத் தேவையில்லை. ஆனால், மெகா சீரியல்கள் இந்த அணுகுண்டுகளை விட மோசமான விளைவுகளை நம்மிடைய விதைத்து வருகிறது. பாதிப்புகள் இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது.

மகாபாரதத்தை எழுதிய வியாசரே வியந்துபோகும் கதையமைப்பு மற்றும் கதா பாத்திரங்கள். சகுனியை மிஞ்சும் சூழ்ச்சி. துரியோதனனையே விழுங்கி ஏப்பம் விடும் வில்லத்தனம். ஷேக்ஸ்பியரின் யாகு, புரூடஸ் கதாபாத்திரங்களின் நயவஞ்சகங்கள் ஆகிய அனைத்து அம்சங்களும் சேர்ந்ததுதான் இன்றைய மெகா சீரியல்கள்.

மெகா சீரியல்கள் உளவியல் ரீதியாக நம்ம வீட்டு மனிதர்களிடம் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரின் எதிர்பார்ப்பு, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆவல், இந்த இரண்டையும் உசுப்பேற்றி அந்த நபரை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்கின்றன.

பிடிக்காத மருமகள் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறாள். மாமியார் ஒரு பாம்பாட்டியோடு வருகிறார். அவன் ஜன்னல் வழியாக பாம்பை உள்ளே வீசுகிறான். பாம்பு மெதுவாக மருமகளின் கட்டில் மேல் ஏறுகிறது. படமெடுத்து கொத்துவதற்கு ஆயத்தமாகிறது. சட்டென்று தொலைக்காட்சியின் ஓரத்தில் 'தொடரும்' என்ற வாசகம் ஒளிர்கிறது. பாம்பு கொத்தியதா? விடை அடுத்த நாள் கிடைக்கும்.
நாம் பார்க்கின்ற தொடரில் அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியுமென்றால், நமது உயிரியல் ரீதியான பதில் (Biological response) அமைதியாக மட்டுமே இருக்கும். அப்படியில்லாமல், நம்மால் கணிக்க முடியவில்லை என்றால், மூளை சுறுசுறுப்பாகி நிலைமையை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கும். இந்த நிலையை பயன்படுத்தி நம்மை தொலைக்காட்சி தொடர்களோடு கட்டிப்போட்டு விடுகிறார்கள்.

சின்ன மருமகளின் குழந்தையை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று அவர் குடிக்கும் பாலில் எதையோ கலக்கிறார் பெரிய மருமகள். பாலைக் குடித்த சின்ன மருமகள் துடிதுடித்து கதற, 'தொடரும்' என்ற வார்த்தையோடு முடிவுக்கு வருகிறது அன்றைய ஆட்டம்.

அடுத்தவரின் குழந்தையை கடத்துகிறார் ஒருவர். முகம் முழுக்க மீசை, முகத்தில் மிகப் பெரிய மரு, வெட்டுக்காயத் தழும்பு இப்படிப்பட்ட ஒருவர் அந்த வில்லத்தனத்தை செய்கிறார் என்று நினைக்க வேண்டாம். வில்லத்தனத்தை செய்பவர் ஒரு அழகிய பெண். கதையின் நாயகியைவிட கொஞ்சம் அதிக மேக்கப்புடன் தோன்றுகிறார். அவர்கள் நம்மிடையே திணிக்கும் ஒரு விஷயம், தவறை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கென்று தனி பயிற்சியோ, ரெளடிகளோ, திருடர்களோ தேவையில்லை. நம்மிடையே மறைந்திருக்கும் வில்லத்தனமே போதும்', என்ற தத்துவத்தை உலகிற்கு புரியவைக்கிறார்கள்.

மாமனார், மாமியார், மைத்துனன், தங்கையின் கணவன் என்று எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு படுபாதகி. மாமனாரின் வீட்டை அபகரிக்க செய்யும் கேவலமான காரியங்கள், அப்பப்பா! சாதாரணமாக குடும்பத்தில் ஏற்படும் வாய்ச் சண்டைக்கு அம்மி குழவியை தூக்கி தலையிலே போட வைக்கும் அளவுக்கு வெறியை மனத்தில் விதைக்கும் ஒரு கதாபாத்திரம். மனம் முழுவதும் விஷம் நிரம்பிய ஒருவரால் மட்டுமே இத்தகைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும்.

வில்லன் ஏதோ ஒரு ஊசியைப் போட, தன் நினைவை இழந்து புதிய மனிதனாய் வலம் வருகிறார் ஒருவர். அவர் வாழைப்பழத்தை தின்றுவிட்டால், மீண்டும் பழைய நியாபகம் வருமாம். என்ன கேளிக்கூத்து இது! இப்படி ஒரு சம்பவத்தை நிஜத்தில் நடத்திக் காட்ட முடியுமா? எதைக் காண்பிடித்தாலும் மக்கள் பார்ப்பார்கள். அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற திமிரான எண்ணம் மட்டுமே இத்தகைய கதையை அரங்கேற்றியுள்ளது.

அடுத்தவரின் கணவனை அடைந்தே தீருவேன் என்று அலையும் வில்லி. கதாநாயகிக்கும் அவருக்கும் போட்டி. இப்படிப்பட்ட கண்றாவி கருவோடு நகரும் ஒரு தொடர். அடுத்தவன் மனைவியை கல்யாணம் பண்ணியே தீருவேன் என்று அலையும் வில்லன் மகன். அதற்கு உதவும் வில்லன். இப்படி ஒரு தொடர்.

இதையெல்லாம் விட, ஊர் முழுக்க நாத்திகம் பேசும் அரசியல் தலைவர்கள் தங்களது சொந்த தொலைக்காட்சியில் மகாபாரதத்தையும், பேய்க் கதைகளையும், பாம்புக் கதைகளையும் ஒளிபரப்புகின்றனர். பேய், பூதம், கடவுள் என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்றால், அதை வளர்ப்பது ஏன்? இப்படிப்பட்ட நம்பிக்கைகள் மக்களின் மனத்தில் விதைத்தால் மட்டுமே தங்களது நாத்திகத்தை திறம்பட சந்தையிட முடியும் என்ற சித்தாந்தமா? அல்லது நாத்திகம் என்பது ஓட்டு வாங்குவதற்கும், மூடநம்பிக்கையை வளர்ப்பது என்பது பையை நிரப்புவதற்கு என்று அர்த்தம் கொள்ளலாமா?

அப்பாடா கதையில் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது, இந்த வாரத்தோடு சீரியல் முடிந்துவிடும் என்று நினைக்கும் போது, புதிய வில்லன் உள்ளே நுழைவார், புதிய சில கதாபாத்திரங்களும் உள்ளே நுழையும். அவ்வளவுதான். மீண்டும் தன் பயணத்தை தொடங்குகிறது.

தனக்கு பிடிக்காதவர்களை சிறுக சிறுக துன்புறுத்துவது, அதைக் கண்டுரசிப்பது, சாதாரண தவறுகளுக்கு மிகப்பெரிய கொடூரங்களை பதிலடியாக கொடுப்பது', என்று மக்கள் மனத்தில் வன்முறையையும், குரூரத்தையும் விதைக்கும் அற்புதமான பணிகளைச் செய்து வருகிறது இத்தகைய சீரியல்கள்.

இவையெல்லாமே நெகடிவான விஷயங்கள். மனிதனின் மனத்தை ரணமாக்கி, குதர்க்கமாக யோசிக்க வைக்கிறது. நாம் பார்க்கும் ஒழுக்க குறைவான செயல்களுக்கும், குற்றங்களுக்கும் நிச்சயமாக இன்றைய சீரியல்கள் அடித்தளமாக இருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

நம்மைச் சுற்றி ஏற்படும் அசைவுகள், சத்தங்கள் ஆகியவற்றை புலன்களால் உணர்ந்து கொண்ட மூளை நம்மை எச்சரிக்கிறது. இதனால் தான் நாய் துரத்தும் முன் நாம் ஓட்டமெடுக்கிறோம். இது இயற்கை நமக்கு அளித்த பாதுகாப்பு அமைப்பு. தொலைக்காட்சி தொடர்களில் வரும் சத்தம், நிகழ்வுகள், காட்சி மாற்றங்கள் ஆகியவை இத்தகைய பாதுகாப்பு அமைப்பை தட்டி எழுப்புகிறது. இதனால் தேவையில்லாமல் நமது மூளையில் ஒரு எழுச்சி ஏற்படுகிறது. இருதய துடிப்பு குறைகிறது. நம்மைச் சுற்றி எத்தகைய பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது என்பதை மூளை ஆராய்கிறது. ஆனால் உண்மையில் அப்படி ஏதும் நடப்பதில்லை.

தொலைக்காட்சி தொடர்களை தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் தூக்கமின்மை, சாப்பிடும் நொறுக்குத் தீனி ஆகியவற்றால் பதினைந்து சதவீதம் இருதய நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். டைப் 2 என்று சொல்லப்படும் நீரிழிவு நோய் ஏற்பட இருபது சதவீதம் வாய்ப்பிருக்கிறதாம்.

குழந்தைகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் போது, அவர்கள் மனத்தில் விஷயங்களை தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை இழக்கிறார்களாம்.

நமது மூளையின் இடது புறத்தில் (Logical thought and critical analysis) தர்க்க ரீதியான விஷயங்களும், பகுத்து அறியும் விஷயங்களும் கையாளப்படுகிறது. வலது புறத்தில் உணர்வு பூர்வமான விஷயங்கள் கையாளப்படுகின்றன. தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் போது மூளையின் செயல்பாடுகள் மூளையின் இடது புறத்திலிருந்து, வலது புறத்திற்கு மாறுகிறது. இதனால், தொடர்களை பார்க்கும் போது, விஷயங்களை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது.

தொடர்களை பார்க்கும் போது, நமது உடல் என்டோர்பின்ஸ் என்ற இரசாயனத்தை வெளியிடுகிறது. இது நமக்கு ஒருவித திருப்தி நிலையை அளிக்கிறது. இதனால் தொடர்களை பார்க்கும் உந்துதல் நமக்கு ஏற்படுகிறது. ஒரு குட்டித் தூக்கம் போடுவதை விட டிவி பார்ப்பது அதிக ஓய்வை அளிப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் இது மன அழுத்தத்தை மட்டுமே அதிகரிக்கிறது.

Social Cotnitive Theory ன்படி தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்து பெரும்பாலான விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். தொலைக்காட்சி தொடர்களின் கதாபாத்திரங்களின் பேச்சுக்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை நமது வீட்டு மனிதர்களிடம் அவர்களுக்கும் தெரியாமலேயே நுழைந்து விடுகிறது. அவர்களின் தனிப்பட்ட குணங்கள், பேச்சு, செயல் ஆகியவற்றில் சீரியல்களின் தாக்கத்தை பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில், எப்படி தப்பு செய்வது என்பதை தெரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப்பட வேண்டும். அத்தகைய தவறுகள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக நடக்கும். அல்லது ஏதாவது ஒரு இடத்தில் மறைவாக நடக்கும். அந்தக் காலம் மலையேறிப் போச்சு. இப்போது அப்படி கஷ்டப்பட வேண்டியதில்லை. கெட்ட விஷயங்களை நம்ம வீட்டுக்கு ஹோம் டெலிவரி செய்து வருகிறது இந்த மெகா சீரியல்கள். இந்த சீரியல்கள் எதை நமக்கு கற்றுக் கொடுத்தன? எதை நாம் கற்றுக் கொண்டோம்? இந்த இரண்டு கேள்விகளை நம்மிடமே கேட்போம். இதற்கு நியாயமான பதில் கிடைக்கிறதா? நிச்சயமாக கிடைக்காது. அதனால் அடுத்தவரை குறை சொல்வதில் அர்த்தமில்லை. இனி விழித்துக் கொள்ள வேண்டியது நாம் தான்.

மெகா சீரியல்களை முறைப்படுத்த வேண்டும். தொடர்களை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கவேண்டும், தொடர்களில் குரூர சிந்தனைகளை விதைக்கக்கூடாது', என்று ஒரு கோரிக்கையை அரசிடம் வைத்து அதற்காக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கேட்பதைவிட கேவலமானது வேறு எதுவும் இருக்க முடியாது. இது ரேஷன் கடைகளில் மதுபானம் விற்பதற்குச் சமம்.

தொடர்களை பார்ப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை நம்மிடம் இருக்கிறது. ஆகையால், தொலைக்காட்சிக்கு அதிக ஓய்வு கொடுங்கள். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழியுங்கள். இதை அனைவரும் உணரும் போது சீரியல் தயாரிப்பாளர்கள் தங்களின் எண்ண ஓட்டங்களை மாற்றிக் கொள்வார்கள். தரமான படைப்புகளை வழங்குவார்கள்.

ஒரு குட்டிக் கதையை பார்ப்போம்.

ஒரு செழிப்பான நாடு. மக்கள் அமைதியோடு வாழ்ந்து வந்தனர். அந்த நாட்டுக்குள் குட்டிச் சாத்தான் ஒன்று நுழைந்தது. மனித உருவில் ஒரு விவசாயி வீட்டிற்கு சென்றது. வீட்டு நபர்களுடன் பழகியது.

வீட்டில் நெல் சேமித்து வைக்கும் குதிர் ஒன்று இருந்தது. அதைப் பார்த்த குட்டிச்சாத்தான், சேமித்து வைத்திருக்கும் நெல்லை வைத்து தனது ஆட்டத்தை தொடங்குவது என்று முடிவெடுத்தது. விவசாயியை அழைத்தது. அரிசியில் மதுபானம் தயாரிக்கும் நுட்பத்தை சொல்லிக் கொடுத்தது. பிறகு தயாரித்த மதுபானத்தை குடிக்கவும் சொல்லிக் கொடுத்தது. விவசாயியைப் பார்த்த மற்றவர்களும் சொந்தமாக மதுபானம் தயாரிக்க கற்றுக் கொண்டார்கள். சிறிது நாட்களில் நாடு போதையில் தள்ளாடியது.

விஷயம் அரசனை சென்றடைந்தது.

'மக்களின் இந்த நிலைக்கு காரணம் அரிசி. ஆகையால், இனி யாரும் அரிசியை விதைக்கக்கூடாது. அதற்கு பதிலாக கோதுமையை பயிரிட வேண்டும்', என்ற ஆணை பிறப்பித்தான் அரசன்.

சில மாதங்களுக்குப் பிறகு கோதுமை செழிப்பாக வளர்ந்தது. குட்டிச்சாத்தான் மீண்டும் நாட்டுக்குள் வந்தது. இம்முறை கோதுமையிலிருந்து மது தயாரிப்பது எப்படி என்ற நுட்பத்தை சொல்லிக்கொடுத்தது. மீண்டும் மதுபானம் நாட்டில் ஆறாக ஓடியது. அரசன் மீண்டும் கவலை கொண்டான். நேராக சாதுவிடம் சென்றான்.

'சாதுவே! நாட்டின் இந்த நிலைக்கு காரணம் கோதுமை. ஆகையால் கோதுமையை தடை செய்யட்டுமா?', என்று கேட்டான்.

'அரசே! கோதுமையோ, அரிசியோ இந்த நிலைக்கு காரணமல்ல. அரிசியிலும், கோதுமையிலும் உள்ள நல்ல விஷயங்களை மறைத்து அதை தவறாக பயன்படுத்த சொல்லிக் கொடுத்த குட்டிச்சாத்தானே இந்த பிரச்னைக்கு காரணம்', என்று சொல்லி குட்டிச்சாத்தானை தேடிப் புறப்பட்டார்.

எதிரில் கண்ட குட்டிச்சாத்தானை பிடித்து ஒரு குடுவையில் அடைத்தார். பின் அரசனை சந்தித்தார்.

'அரசே இவ்வளவு பிரச்னைக்கும் காரணமான குட்டிச்சாத்தானை அடைத்துவிட்டேன். ஆனால், பிரச்னை இதோடு முடிந்துவிடும் என்று நினைக்காதீர்கள். அது விதைத்த விஷ விதைகள் இன்றும் மக்களின் மனத்தில் ஒளிந்திருக்கிறது. அதை நீக்கும் வரை நிலைமை சீராகாது. ஆகையால், அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். அரிசி, கோதுமை ஆகியவற்றின் நல்ல குணங்களை மக்களுக்கு புரியவையுங்கள். இந்த முயற்சி உடனடியாக பலனைத் தராவிட்டாலும், வரும் நாட்களில் அரிசி, கோதுமை ஆகியவற்றின் நல்ல குணங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அது அவர்களை நல்லவர்களாக மாற்றும்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

தொலைக்காட்சி என்ற அற்புத சாதனத்தை கலாச்சாரம், ஒழுக்கம் ஆகியவற்றை சீரழிக்கும் ஆயுதமாக மாற்றியிருக்கிறது இன்றைய மெகா சீரியல்கள் என்ற குட்டிச்சாத்தான்கள். இந்த நிலை மாற வேண்டும். குட்டிச்சாத்தான்களை அடையாளம் கண்டு கொள்வோம். அது விதைத்த விஷ விதைகளை அகற்றுவோம். தொலைக்காட்சி என்ற அற்புதமான ஒரு சாதனத்தை நம் வளர்ச்சிக்கும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பயன்படுத்துவோம்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
Dailyhunt






'OCI students eligible for counselling'

DH News Service, Bengaluru, Jun 28 2017, 1:18 IST

The state government on Tuesday informed the High Court of Karnataka that Overseas Citizens of India (OCI) have already been included under the definition of Persons of Indian Origin (PIO) and Non-Resident Indians (NRI).

Additional Advocate General A S Ponnanna submitted to the court that through an amendment in April 2017 to the Karnataka Professional Educational Institutions (Regulation of Admission and Determination of Fee) Act, 2006, OCIs have been brought under the definition of NRIs. 

The court was hearing pleas filed by OCI students who have challenged Rule 5 of the Karnataka Selection of Candidates for Admission to Government Seats in Professional Educational Institutions Rules, 2006. The rule restrains OCIs from applying for government seats.

Ponnanna informed the court that counselling for OCI students can be conducted as the Act has been amended. He said the government will hold a meeting with private medical colleges with regard to the concessional agreement for seat allotment for undergraduate medical courses. A division bench issued notice and adjourned the next hearing to July 3.
State govt has no power to decide on citizenship, MCI tells high court

DH News Service, Bengaluru, Jul 7 2017, 1:26 IST




The Medical Council of India (MCI) on Thursday informed the High Court of Karnataka that the state government does not have the powers to decide on the citizenship-related issues with regard to including Overseas Citizens of India (OCI) students under the NRI quota for medical admissions.

The state government, in the previous hearing, had said that OCIs have already been included under the definition of Persons of Indian Origin (PIO) and NRIs.

Advocate N Khetty, representing MCI, submitted to the court that there is a 2009 notification by the Union government which allows even a foreign national to fly to India and write the medical entrance exam and get a medical seat. But the NRI quota, which has been created through a Supreme Court direction, does not come under the statute. Hence, OCIs cannot be included under the NRI quota. These submissions were made with regard to a batch of petitions filed by OCI students who have challenged Rule 5 of the Karnataka Selection of Candidates for Admission to Government Seats in Professional Educational Institutions Rules, 2006.

The rule restrains OCIs from applying for government seats. It states: ‘No candidate is eligible for admission to government seats unless he is a citizen of India’.

Headmaster placed under suspension


District Elementary Education Officer K. P. Kanagamani has placed under suspension Senthamarai Kannan, headmaster of Panchayat Union Elementary School at Kaikattipudur, on Thursday evening.
Mr. Kanagamani said that the departmental action was initiated on the charge that Senthamarai Kannan had instigated an agitation by students early on the day asking for more teachers.

“Despite knowing that the school’s sanctioned strength of teachers was only two, the agitation was organised seeking more teachers. The sanctioned strength is two teaching staff, including the headmaster, as the school has only 60 students in the entire roll,” he said.

According to him, even a replacement teacher has been sanctioned in the place of another teacher who was posted out of the school. “Agitation took place at a time when the new teacher was supposed to join on Friday,” he said.

On the day, the students staged road blockade agitation demanding that more teachers should be posted to the school.

1 kg of tomato touches Rs. 100 mark

Traders say it’s due to dwindling arrival

Price of tomato has shot up to Rs. 100 per kg in Tiruchi’s retail market. Till two weeks ago, one kg of tomato was being sold between Rs. 15 - 20 a kg.

The price rose gradually and swung between Rs. 50 - 60 a week ago and now hovers in the range of Rs. 80 to Rs. 100 a kg. A retail grocery trader at Cantonment in Tiruchi was selling a kilo of tomato at Rs. 100 on Thursday.

However, wholesale traders at Gandhi Market quote Rs. 60 for one kg of tomato and it was Rs. 10 higher in Gandhi Market’s retail shops. The rate was the same at the Uzhavar Sandhai in Thennur.

The price of one box (25 kg) of tomato hovered between Rs. 1,400 and Rs. 1,600 at Gandhi Market, traders said. “Out of a 25 kg box, 2 kg would have rotten during the transportation period. Traders will have to make profit with the remaining 23 kg of tomato,” said an official of Uzhavar Sandhai.
Since the price was high, customers shied away from buying tomatoes. “Though tomato is an important commodity for cooking, not many customers prefer to buy one kg of tomato at Rs. 100. They manage the situation by limiting their purchase to 200-300 grams,” said G. Manikandan, a retail grocery trader at Cantonment.

Traders attribute the high price to the dwindling arrival from Andhra Pradesh, Krishnagiri, Theni and Oddanchathiram. A wholesale trader in Gandhi Market said that as against the arrival of 20 loads, it had come down to just four to seven loads per day and this situation had persisted for the last 10 days, he said.

Officials’ absence embarrasses govt.

 Against tradition of House: DMK

The brief absence of senior Indian Administrative Service officials and the Director General of Police from the officers’ gallery in the State Legislative Assembly caused huge embarrassment to the AIADMK government on Thursday, as the DMK questioned their absence not just once but twice, contending it was against the tradition of the House.

DMK Deputy Floor Leader Duraimurugan went on to say that he would not commence his speech on the debate on the demand for grants on the police department until the DGP and the Chennai Police Commissioner arrived in the House.

“It has long been the tradition of this House that the police officers are present during the police (department) demand. You can ask former DGP R. Natraj (Mylapore AIADMK MLA), who is here,” Mr. Duraimurugan said and refused to continue his speech until the officers came.

Even as the Leader of the House K.A. Sengottaiyan said the DGP was in the adjacent conference hall and would arrive soon, DGP T.K. Rajendran was seen rushing into the officers’ gallery. When Minister P. Thangamani contended that that the DMK cannot compel the government on this account, Mr. Duraimurugan said it was only part of the tradition of the House.

When the Chief Minister, other Ministers and the MLAs gestured that the officer had arrived, Mr. Duraimurugan went ahead with his speech.

IndiGo does not want govt in any AI deal
New Delhi: 
 


`Don't Sell Assets Abroad To State-Owned Airlines' 
 
Low-cost carrier (LCC) IndiGo does not want the government as a partner if its attempt to acquire the international operations of Air India and AI Express works out. The airline also said it will start low-cost long-haul overseas flights “with or without“ the AI deal working out. It has cautioned that selling AI's assets like slots at airports abroad to a state-owned foreign airline could be a “Shakespearean tragedy“, akin to “outsourcing“.
 
“We would look at acquiring all of AI's international operations and AI Express,“ IndiGo's reticent founder-promoter Rahul Bhatia said on Thursday.His partner, Rakesh Gangwal, said, “A joint venture or joint ownership with the government is at best a very , very difficult proposition .... government has owned and managed AI for more than 50 years. They are looking to divest in it ...From our perspective as a corporate entity , we would not go down a path where there would be a JV or even a minority , majority stake which the government would own. Maybe (it's) a good model, but we cannot bring value to that proposition.“

IndiGo had last Wednesday sent a formal expression of interest for international operations of AI and AI Express after the government had approved divesting its stake in AI. If acquisitions of only inter national operations are not possible, IndiGo had offered to acquire all operations of AI and AI Express.
  
Explaining this move, the two founder-promoters said India is a huge market for international travel but its hubs for globetrotting are abroad. With over 40% domestic market share, IndiGo felt it should enter the long-haul market “irrespective of how the AI story plays out“. “Our original plan was to share our thinking at the end of this month. However, that got pre-empted due to the government's in principle decision to divest itself of Air India,“ Gangwal said. “We believe international long-haul markets are ready for right type of low cost operations,“ Gangwal said.
According to Rahul Bhatia, carving out of an airline operations for sale is not a new concept. “A few decades ago, United Airlines acquired Panam's Pacific operations. Based on the success of that transaction, United then followed up by acquiring Pan Am's London routes in 1990.“


Now, students will have a say in accreditation of varsities
New Delhi 
 


Like universities abroad, students in India will now have a say in assessment and accreditation of their academic institutions. The National Assessment and Accreditation Council (NAAC), which launched its new methodology for grading universities, will give 20% weightage to online student satisfaction survey (SSS) while offering accreditation from this year.
 
NAAC has made the new methodology completely digitised and technology-driven with far less human intervention. This was necessitated following complaints of corrupt practices during assessment in the past. The council re-opened the process for universities to apply for assessment on Thursday . In order to do away with “corruption“ and subjectivity in assessment and grading of higher education institutions, the ministry of human resource development had in March asked for a complete overhaul of the accreditation process.The new methodology gives just 20% weightage to peer team assessment instead of 100% as in the past in deciding the grade of an institution. In top universities across the globe, students' feedback for facultycourses is mandatory and an important aspect of assessment. Many universities use this as an internal ranking parameter as well.

According to sources, NAAC's SSS will carry 20% weightage during the assessment and grading. Institutions will have to provide email IDs of students and an online survey will be conducted.

 “This is an important factor in the assessment process and the online survey will be done in the second stage of the assessment,“ said Virander Singh Chauhan, chairperson of University Grants Commission. The MHRD, according to sources, has asked the council to outsource the entire travel and logistics of the peer team. “Till now the institutions used to arrange the logistics of the peer team.From now on, they will have no say in this matter and till the last moment the institution will not know who is visiting them for the on site assessment,“ said a ministry official. According to sources in MHRD, concerns were raised over inferior institutions being granted good grades in the past. “So NAAC is planning to get the data submitted by an institution via Quality Indicator Framework,“ said the official.
Terminate jobs, studies of those faking caste: SC
New Delhi 
 


The Supreme Court on Thursday ruled that those using fake caste certificates to avail of quota for admissions to educational institutions or getting government jobs must lose the benefit the moment the forgery is discovered. Despite clear directions from the SC to adopt “zero tolerance“ against those using fake certificates to illegally usurp seats in educational institutions and government jobs, there have been instances where HCs have permitted such persons to continue in their jobs because they had put in several years in service. In other instances, HCs have permitted students to complete studies after paying fine for using fake caste certificate to gain entry into educational institutions.

Settling a major issue in determining castes which belong to the scheduled category in Maharashtra, a bench of CJI J S Khehar and Justice D Y Chandrachud said leniency by the HCs must stop forthwith as those who used fake caste certificates had criminal intent to usurp the benefits reserved for persons belonging to oppressed and socially and educationally backward commu nities.

Writing the judgment for the bench, Justice Chandrachud said leniency to such people would amount to depriving a genuine beneficiary of his her dues. He said the person found usurping benefits with fake caste certificate must face prosecution.

The issue for consideration before the bench arose from Maharashtra, where a full bench of the Bombay HC had held that even when the caste certificate was invalidated by the SC, the person who used this to get the job could continue in service considering the long period he had spent in the job. This judgment had a spiralling effect as smaller benches followed this to grant similar benefit.
Setting aside Bombay HC's judgment, the SC bench reminded HCs that in1994, the SC had cancelled the admission of one Kumari Madhuri Patil midway through her BDS course after the scrutiny committee found her caste certificate to be forged.

“It is true that the applications for admission to educational institutions are generally made by a parent, since on that date many a time the student may be a minor. It is, therefore, necessary that the certificates issued are scrutinised at the earliest .“


  • ஜூலை 19 (செ) ஆடி கார்த்திகை
  • ஜூலை 21 (வெ) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு தினம்
  • ஜூலை 23 (ஞா) ஆடி அமாவாசை
  • ஜூலை 26 (பு) ஆடிப்பூரம்
  • ஜூலை 26 (பு) நாக சதுர்த்தி
  • ஜூலை 28 (வெ) கருட பஞ்சமி
Pondy univ bars 304 MBBS students from 1st yr exams
Puducherry: 
 


Pondicherry University has barred 304 MBBS students, who joined under management quota in three private medical colleges, from appearing for first year examinations, as neither the Puducherry government nor the college managements submitted necessary documents to prove their basic academic qualifications.
 
Pondicherry University , which had deferred the examinations for first year MBBS students for the academic year 2016-17 by a month, finally decided to hold it from July 13. The university had not received the proof of academic qualification of the students who joined the course in three private colleges under management quota.

“The first year MBBS exam is conducted only for those students whose qualifications are recognised and registered as matriculates of our university for the academic year 2016-17. For the remaining students admitted under management quota, examination will be conducted on receipt of recognition order from the academic section of the university ,“ said controller of examinations (in-charge) K Tharanikkarasu in an official communication.

The Puducherry government and private medical colleges have to submit the list of students joining MBBS course under state and management quotas with documents proving their academic qualifications to Pondicherry Univer sity. “The university recognised the lists of MBBS students under state quota but raised a few queries on the lists of MBBS students under management quota and sought the concurrence of the government,“ said a university official.
An health directorate official said it has begun issuing concurrence to the university and added that the government will soon decide on the issue. “We are waiting for the government's direction,“ said the official.


மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையை நடத்தலாம் : ஐகோர்ட் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

பதிவு செய்த நாள் 06 ஜூலை
2017
23:33

புதுடில்லி: தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் வகையில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட், தடை விதித்துள்ளது. இதன் மூலம், 1,000த்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் துவங்கும்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இடங்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கும், 50 சதவீத இடங்கள் மாநில அரசு இட ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு : அதில், மாநில அரசுக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக, 50 சதவீத இடங்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில், தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கிராமப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது சலுகை மதிப்பெண் இல்லையென இந்திய மருத்துவ கவுன்சில் விதி கூறுகிறது.
இந்நிலையில், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக, மே, 6ல், புதிய அரசாணையையும், அதன் அடிப்படையில் மே, 7-ல் தகுதிப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டது. அதில், தமிழக அரசு ஒதுக்கீட்டான, 1,066 இடங்களில், 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.கிராமப்புறங்களில் சேவையாற்றிய டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது; அதன்படி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த அரசாணை மற்றும் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி, விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் பிரணிதா உள்ளிட்ட பலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த ஐகோர்ட், மருத்துவ மேற்படிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை மற்றும் தகுதிப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன், புதிய தகுதிப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது.

மேல் முறையீடு : இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நேற்று அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் தொடர்பான வழக்குகளில், இது போன்று மாணவர் சேர்க்கை நடைமுறையை ரத்து செய்து தீர்ப்பு அளிக்கக் கூடாது. இந்த வழக்கில், மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் வகையில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.

கிராமப்புறங்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும். கிராமப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது சலுகை மதிப்பெண் இல்லையெனக் கூறும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிற விதிகளைப் பின்பற்றி மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.வழக்கின் விசாரணை, செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 23.12.2025