Sunday, November 23, 2014

வாழ்க்கை வாழ்வதற்குத்தானே தவிர விபத்தில் தொலைப்பதற்கு அல்லவே..!

திர்பாராத நேரத்தில் நடக்கும் சாலை விபத்துதான் ஒருவரின் வாழ்க்கையை திக்குத்தெரியாமல் திசைமாற்றிவிடுகிறது. கை இழந்து, கால் ஒடிந்து என்று விபத்தில் சிக்கி மீண்டவர்களைக் கேட்டால், அந்தக் கோரத்தின் வலி புரியும். 

அந்தப் பாதிப்பில் இருந்து மீளாமல் இருப்பவர்களும் ஏராளம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

2011-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 15,422 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 2012-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 16,175 ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிகையும் பலி எண்ணிக்கையும் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று அதிர வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு சாலை விபத்து நடைபெறுகிறது. முக்கியமாக 70 சதவிகித விபத்துகள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதாலேயே ஏற்படுகிறது.

விபத்து நடப்பதற்கு சூழ்நிலை மட்டுமே காரணம் இல்லை. மனம் மற்றும் உடல்நிலையும் முக்கிய காரணம். பெரும்பாலான விபத்துக்கு அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்றவையும் முக்கியக் காரணங்கள்.
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதால் ஏற்படும் கவனச் சிதறல் இன்னொரு முக்கியக் காரணம். விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன். எஸ்.எம்.எஸ். வரும்போது அது என்ன என்று அறியும் ஆர்வம் அடுத்த ஐந்து நொடிகளுக்கு நம் கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளியே போதுமானதாக இருக்கிறது.

விபத்தை தவிர்க்க முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விதிகள்

* விபத்தில் பெரும்பாலும் ஆண்கள்தான் சிக்கி கொள்கிறார்கள். பெண்களுக்கு எப்போதுமே பொறுப்பும், எச்சரிக்கை உணர்வும் இருப்பதால் அவர்கள் அதிகம் விபத்தில் சிக்குவதில்லை. தான்தான் முன்செல்ல வேண்டும் என்ற வேக உணர்வால் ஆக்ஸிலேட்டரை வேகமாக முறுக்கி முன்னே சென்று விபத்தில் சிக்குகின்றனர் ஆண்கள். சாலைகளில் வாகனம் ஓட்டும்போது ரேஸ் மனப்பான்மையை தவிர்க்க வேண்டும். பயணத்தின்போது யார் இடதுபுறம், யார் வலதுபுறம் செல்வது என்பதிலும் கவனம் தேவை.

* விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தலை காயத்துடன்தான் வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் மூலம் தலையில் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதன்மூலம் விபத்து ஏற்படும்போது, அதன் தாக்கம் 40 சதவிகிதம் அளவுக்குக் குறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.

அடிக்கடி ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்தியபடியே பிரேக்கைப் பிடிக்கக்கூடாது. இதனால் வண்டி ஒரு பக்கமாக விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைத் தவிர்க்கலாம். வளைவுகளில்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, நிதானம் தேவை.

* வண்டியை எடுக்கும்போது ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டியது மிக அவசியம்.
* உடல் நலக்குறைவு இருக்கும்போது வண்டியை ஓட்டாமல் இருப்பதே நல்லது. சிலர், வீட்டிலேயோ அலுவலகத்திலேயோ ஏற்படும் பிரச்னைகளுடன் கோபமாக வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த நேரத்தில் அவர்கள் உடலில் 'அட்ரினல் ஹார்மோன்’ அதிகமாகச் சுரக்கும். இதனால் படபடப்பு ஏற்பட்டு விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மனக் குழப்பத்துடன் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
வண்டியை ஓட்டும்போது, பின்னால் உட்கார்ந்து இருக்கும் நண்பர்களுடன் பேசியபடியே வண்டி ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது.
வாழ்க்கை வாழ்வதற்குத்தானே தவிர விபத்தில் தொலைப்பதற்கு அல்லவே..!

விதிவிலக்குகளே மேல்!



சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநில முதல்வர், மதுவிலக்கைத் தமது மாநிலத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அதன் ஆரம்பக் கட்டமாக, "பார்'களை மூடிவிடப் போவதாகவும் சொன்னார். அதுபோல, தமிழ்நாட்டிலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்ற பரவலான கருத்து எழுந்தது. முக்கியத் தலைவர்களும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். பின்னர் அதைப் பற்றிய பேச்சையே காணோம்.

மதுவிலக்கு நடைமுறையிலிருந்த சமயம் (1972-க்கு முன்) தமிழ்நாடு எப்படி இருந்தது என்று எனக்கு இன்னமும் நன்றாக ஞாபகமிருக்கிறது. பெங்களூரிலிருந்து கோட்ட மேலாளர் சென்னைக்கு வருகை தந்தார். அவருக்காக மேலாளர் ஒரு விஸ்கி பாட்டிலை மறைத்து வைத்து ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு போனார். அந்தக் காலத்தில், இளைஞர்கள் மத்தியில் "பாண்டிச்சேரி போகிறான்' என்றாலே, ஒரு கோணல் சிரிப்பு பரவும்.

அயல்நாட்டவர்களுக்கு மது அருந்துவது என்பது, காப்பி குடிப்பது போல. மேலும் அவர்களுக்கு, Drink என்பதற்கும் Drankard என்ற பதத்துக்கும் உள்ள வேறுபாடு துல்லியமாகத் தெரியும். அங்கு குடித்துவிட்டுச் சாலையில் புரளுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சிகரெட், போதை மருந்து, புகையிலை எல்லாமே மது போல் தீய பழக்கங்கள்தான் - சந்தேகமேயில்லை. ஆனால் சிகரெட், புகையிலை போன்றவைகளால் தனியொரு மனிதன்தான் சீரழிகிறான். என் அலுவலக நண்பர் ஒருவர் "பான்' பழக்கத்தால், தொண்டை புற்றுநோயால் இறந்து போனார். ஆனால், ஒருவர் மது அருந்துவதால், அவரது குடும்பமே சீரழிந்து, நிர்க்கதியில் நிற்கிறது.

நான் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் பல பணிப்பெண்கள் வேலை செய்து கணிசமாகச் சம்பாதிக்கிறார்கள். பால் பாக்கெட் வினியோகம், இளநீர் விற்பது, இல்லங்களில் பாத்திரம் தேய்ப்பது போன்ற பல. இவர்கள் இப்படி சம்பாதித்தாலும், கணவன்மார்களின் குடிப்பழக்கத்தால் குடும்பம் கெட்டுப் போவதைப் பார்க்கிறேன்.

ஏழை எளிய குடும்பங்களில் இப்படியெனில், உயர், மத்தியதர குடும்பங்களில் வேறு விதம். பொருத்தமான வேலை கிடைக்காதது; உரிய காலத்தில் பதவி உயர்வு கிட்டாதது; குடும்பச் சிக்கல்; மண முறிவு - இத்தகைய காரணிகள் இவர்களுக்கு மதுவைத் தீண்ட முதற்படி. தங்கள் மன அழுத்தத்துக்கு ஒரு வடிகாலாக உணர்கிறார்கள். நாளடைவில் அது ஒரு கொடிய பழக்கமாகவே அவர்களைத் தொற்றிக் கொண்டு விடுகிறது. இதனால், கை கால் உதறல்; உடல் நடுக்கம் போன்றவைகள் பற்றிக் கொண்டு, குடும்பமே தள்ளாடும் நிலைமைக்கு வருகிறது.

ஓர் அம்சத்தை இங்கு கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். பல துறைகளில் வளர்ச்சி அடைந்தாலும், சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மது அருந்துதல்தான் இதற்கு முக்கிய காரணம் என்பது வெளிப்படை. விபத்து மட்டுமல்ல, வன்முறை, பாலியல் குற்றம் போன்ற பல்வகைக் குற்றங்கள் பரவிப் பெருக மதுப் பழக்கமே முக்கிய காரணம்.

ஆக, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மது, தீமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. மதுவிலக்கு எதிர்ப்பாளர்கள் என்ன கூறுகிறார்கள்? "வருவாய் வேறு மாநிலத்துக்குப் போகும். கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும்' என்பன போன்ற வாதங்களை வைக்கிறார்கள்; போதாததற்கு விழிப்புணர்வு ஏற்பட மையங்கள் ஏற்பட வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிவுரை வழங்க "நிபுணர் குழு' அமைக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்கள். பற்பல ஆண்டுகளாக பிரசாரம் செய்தும், எவ்விதப் பலனும் இல்லையே?

மதுவினால் விளையும் கொடுமைகளை நோக்கும்போது, அவ்வப்போது கள்ளச்சாராயக் குற்றங்கள் ஏற்படுவது பரவாயில்லை. அவை விதிவிலக்காகத்தானிருக்கும். நிரந்தரக் கொடுமையைவிட, விதிவிலக்கு மேலானவைதான்!

வேண்டாம் வேலிக் கருவேல மரங்கள்!



இன்று தமிழகத்தில் விவசாயத்தைவிட குடிதண்ணீர் தேவைதான் அதிகம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்காக இவ்வளவு யோசித்தது இல்லை. பின் ஏன் இப்பொழுது மட்டும் இவ்வளவு பிரச்னை? முன்பைவிட தற்சமயம் மக்கள்தொகை அதிகமாகிவிட்டது, கிராமத்தவர்கள் அதிகம் நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டனர், மழை முன்பு போல் அதிகம் பொழிவது இல்லை என கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இருந்து கொண்டிருக்கின்றோம். நாம் எங்கே மழையை பெய்ய விட்டோம்? எல்லா வழிவகைகளையும் அடைத்துவிட்டோம். முன்பு தெய்வத்தை வேண்டினால் மழை பொழியவும், வேண்டாமென்றால் மழையை நிறுத்தவும் நமக்கு நிறைய கதைகள் சொல்லித் தருகின்றன.

அப்படியானால் இப்பொழுது மழை வேண்டும் என்று நினைத்தால் மழை பெய்யுமா? பெய்யும். ஆனால், நாம்தான் மழையை வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டோமே. நாட்டில் உள்ள அனைத்து காடுகளையும் மொட்டையாக்கி அழித்து விட்டோம். நவீன தொழிற்சாலைகள் வேண்டுமெனக்கூறி வான்வெளி பிரபஞ்சத்தையே, கரிய புகை மண்டலமாக்கி விட்டோம். போக்குவரத்து என்ற பெயரில் வாகனங்கள் விடும் புகையோ சொல்லி மாளாது.

பட்டாசு ஆலைகள் விடும் புகையால், நம் பூமி கந்தக பூமியாக வெந்து விட்டது. சரி இவைதான் இப்படி உள்ளது, பக்கத்து மாநிலங்களின் வீணாகி போகும் தண்ணீரைக்கூட குடிப்பதற்கு நமக்கு குடுத்து வைக்கவில்லை.நம் கைதான் நமக்குதவும் என்று நாம் முடிவெடுத்தால்தான் முடியும். அதாவது விவசாயத்திற்கு பல ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் தேவை, ஆனால் நாம் உழவுத்தொழிலில் இறவை பாசனமுறைகளை சுத்தமாக நிறுத்திக் கொண்டோம். ஏன்? நமக்கு தேவையான தண்ணீர் இல்லை என்பதால்தான். பெய்யும் மழைநீரை நமக்கு முன்பாகவே, இந்த சீமை வேலி கருவேல முள்(செடிகள்) மரங்கள் உறிஞ்சிக் கொள்கிறதே, பின் எப்படி நாம் விவசாயம் செய்ய முடியும்? சாதாரணமாக வேலிக் கருவேல மரங்கள் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் தற்பொழுது தமிழகமெங்கும் வியாபித்து செழிப்போடு வளர்ந்து நிற்கிறது. தமிழ்நாடு மொத்தம் எத்தனை ஏக்கர், எத்தனை சதுரமீட்டர் என்ற கணக்குப்படி பார்த்தால் அத்தனை எண்ணிக்கை உள்ள மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. வேளாண் நிலங்களும் புறம்போக்கு நிலங்களும், ஏரி, குளம், ஓடை, கண்மாய், ஆறுகள் எனவும் இப்பொழுது கிராமங்கள், நகரங்கள் என அதன் சுற்றுப்புறத்திலும் வீதிகளை கூட ஆக்கிரமித்தும், தூரத்தில் இருந்து பார்த்தால் அந்த ஊரே கண்ணுக்கு தெரியாமல் ஏதோ ஒரு வனத்திற்குள் ஊர் இருப்பது போல்தான் நாம் பார்க்க முடிகிறது. இந்த மரத்தின் குணாதிசயம் என்னவென்றால், அதன் அடிவேர்கள் நாலாபுறமும் சுமார் 300 மீட்டருக்கும் மேல் பூமிக்கடியில் நீண்டு வளரக்கூடிய தன்மை உடையவை.

உலகத்தில் உள்ள மரங்களின் நிழல்களிலேயே மிக வெப்பமானது புளியமரம்தான். ஆனால், அதைவிட ஆயிரமடங்கு வெப்பத்தன்மை கொண்டது இந்த வேலிக்கருவேல மரங்கள். இப்பொழுது அதன் தண்ணீர் செலவைப் பார்ப்போம். ஒரு மரம் ஒரு ஆண்டிற்கு 500 கனஅடி தண்ணீரை மிக எளிதாக உறிஞ்சக்கூடிய தாவரமாகும். இந்த தாவரத்தின் தேவைக்கு ஏற்ப மழை கூட பெய்யவில்லை. எனவே அதற்கேற்ப நீர் கிடைக்காத போது அது பூமியின் அதாவது பாறைவரை உள்ள மண்ணின் நீர்சத்தை எல்லாம் உறிஞ்சி மண்வளத்தையும் மலடாக்கிவிட்டது. பூமித்தாய் உலர்ந்து வெப்பமாகி, மலடாகி கிடக்கின்ற வேளையில் இந்த தாவரம் தனக்குத் தேவையான நீர்சத்து பூமியில் இல்லாததால் தன் கிளை, இலைகளால் வான்வெளியில் உள்ள ஈரக்காற்றை எல்லாம் உறிஞ்சிவிட்டது. இனி அடுத்த சந்ததியினருக்காவது மழை பொழிவதற்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டுமல்லவா? இந்த பூமியையும் வான்வெளியையும் காப்பாற்றுவது நம் கடமையல்லவா? இதற்கு முதலில் தமிழகமெங்கும் ஆக்கிரமித்துள்ள இந்த வேலி கருவேல முட்செடிகளை அகற்ற வேண்டும். பாழ்பாட்டுப்போன விவசாயத்தை சீர்தூக்கி நிறுத்த வேண்டுமென்றால் இந்த முட்தாவரத்தை ஒழித்தே ஆக வேண்டும்.

Saturday, November 22, 2014

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்



தமிழ்த் திரையுலக வரலாற்றில் இசையோடு நடிப்பிலும் ஆற்றல் பெற்றவராக விளங்கியவர்கள் பலர். அவர்களில் இலக்கியச் செறிவுள்ள பாடல்களைப் பாடி தன்னுடைய ‘கணீர்’ காந்தக்குரலால் ரசிகர்களைக் கவர்ந்த சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்களின் நினைவலைகளைக் காண்போம். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முதல் பாடல் 1953-ல் வெளிவந்த பொன்வயல் படத்தில். இதில் சிரிப்புதான் வருகுதய்யா’ என்ற பாடலைப் பாடி தமிழ் ரசிகர்களின் காதுகளில் தென்றலாய் நுழைந்தார் அவர். இதே படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘ஜல்திஜல்தி மாடுகளா’ (சரியாக இது விளங்கவில்லை) பாடலும் ரசிகர்களின் இதயக் கதவுகளை திறந்த முழுமையைப் பெற்றதுபக்தி, தத்துவம், வீரம், நகைச்சுவை, காதல் என பலவகையான பாடல்களை உணர்ச்சி ததும்பப் பாடி பிரபலமாக்கினார் எஸ். கோவிந்தராஜன்.

நகைச்சுவைக்கு ‘காதலிக்க நேரமில்லை’, சோகத்திற்கு ‘ஆடி அடங்கும் வாழ்க்கையாடா’, சவாலுக்கு ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா’ மற்றும் ‘சங்கே முழங்கு’, பக்திக்கு ‘அறுபடை வீடுகொண்ட திருமுருகா’, தத்துவத்திற்கு ‘காசிக்குப் போகும் சன்யாசி’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ போன்ற பாடல்கள் அவரது குரலில் சரித்திரப்புகழ் பெற்றவை.


தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர்களாத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவருக்கும் பல திரைப்படப் பாடல்களைப் பாடி ‘சூப்பர்ஹிட்’ ஆக்கியவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக நாடாடி மன்னன் படத்தில் அவர் பாடிய ‘உழைப்பதிலா இன்பம் உழைப்பைப் பெறுவதிலா’ , சக்கரவர்த்தி திருமகள் ‘எல்லையில்லாத இன்பத்தில்’ , நல்லவன் வாழ்வான் படத்திற்காக ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ ஆகியவை ரசிகர்களின் காதுகளில் என்றும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.

பாகப்பிரிவினை படத்தில் ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே’, படிக்காத மேதையில் ‘எங்கிருந்தோ வந்தான்’ என அவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாகும்.

சீர்காழி கோவிந்தராஜனின் ‘கணீர்’ வெண்கலக் குரலில் அவர் பாடிய பக்திப் பாடல்கள் ரசிகர்களின் இதயங்களில் கோயில் தெய்வமாக அவரை குடியிருக்க வைத்துள்ளன. அவர் பாடிய பக்திப்பாடல்கள் இன்றளவும் கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இசையோடு நடிப்பிலும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன். அகத்தியர் திரைப்படத்தில் அகத்தியராகவும் , கந்தன் கருணை தசாவதாரத்தில் நாரதராகவும் , ‘வா ராஜா வா’வில் போலீஸ்காரராகவும் , திருமலை தென்குமரியில் பாகவதாராகவும் நடித்தும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். பாடல்களில் பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தன்னிகரில்லாத இடம் பிடித்தவர் சீர்காழி எஸ், கோவிந்தராஜன் என்றால் அது மிகையில்லை.

நன்றி : சன் டி.வி

வெற்றி நிச்சயம்...சுகி சிவம்




புதிய வார்ப்புகள்: பாரதிராஜா படத்தில் சந்திரசேகர் அறிமுகம்


நாடக நடிகராக இருந்த சந்திரசேகர், பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்'' படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நாடக வாய்ப்பு, அதைத் தொடர்ந்து டிவி சீரியல் வாய்ப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்த சந்திரசேகரின் கலை வாழ்க்கையின் அடுத்த முயற்சி சினிமாவாக இருந்தது.

இந்த சமயத்தில்தான், பாரதிராஜா இயக்கிய முதல் படமான "16 வயதினிலே'' திரைக்கு வந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நம்மை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டிய டைரக்டர் பாரதிராஜாதான் என்ற முடிவுக்கு வந்தார், சந்திரசேகர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

"சினிமாவில் நடிக்கும் முயற்சியில் சில டைரக்டர்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். இந்த சமயத்தில் மிட்லண்ட் தியேட்டரில் "16 வயதினிலே'' படம் ரிலீசாகியிருந்தது.

ரிலீசான அன்றே படம் பார்க்கப்போனேன். தியேட்டரில் அதிக கூட்டம் இல்லை. டைட்டில் பாடலாக "சோளம் விதைக்கையிலே'' பாடலைக் கேட்டதுமே, "ஆஹா! நம்ம ஊர் மண் வாசனையுடன் கூடிய படமாக இருக்கும் போலிருக்கிறதே'' என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

படம் முடியும்போது, `சீட்' நுனிக்கே வந்துவிட்டேன். படம் முடிந்ததும் எனக்குள் எழுந்த கேள்வி: `இந்தப் படத்தின் டைரக்டர் பாரதிராஜா எங்கிருக்கிறார்?'

அப்போதே எனக்குத் தெரிந்த கலை நண்பர்களிடம் போனில் டைரக்டர் பாரதிராஜாவின் முகவரியை கேட்டு வாங்கினேன்.

பாரதிராஜா அப்போது தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.

மறுநாள் காலையில் அந்த வீட்டின் கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரத்தில் தலை நிறைய முடியுடன் தூக்கக் கலக்கத்தில் ஒருவர் வந்தார். அவரிடம், "டைரக்டர் பாரதிராஜாங்கறது...'' என்று இழுக்க, அவரோ, "நான்தான் பாரதிராஜா'' என்றார்.

அப்போதுதான் முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். இந்த இளைஞருக்குள்ளா அப்படியொரு கலைஞானம் என்ற வியப்பினால் பேச வார்த்தை வராமல், நின்று கொண்டிருந்தேன்.

அவரது ஊர் மதுரை பக்கம் என்பதை தெரிந்து கொண்டதும், நானும் மதுரை பக்கம்தான் என்றேன். "படம் எப்படி இருக்குது?'' என்று என்னிடம் பாரதிராஜா கேட்டார். "நன்றாக இருக்கிறது. அதனால், நிச்சயமாக நன்றாக ஓடும். உங்களுக்குப் பெரிய அளவில் பெயர் கிடைக்கும்'' என்று சொல்லிவிட்டு, "நானும் நடிக்கத்தான் ஊரில் இருந்து வந்தேன். நான் நடிக்கிற முதல் படம் நீங்க டைரக்ட் செய்ற படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்றேன். "வாய்ப்பு தருகிறேன். எனக்கு வருகிற வாய்ப்புகளை பொறுத்து இது அமையும்'' என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு தினமும் அவரைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு வணக்கத்தையாவது போட்டுவிட்டுப் போய்விடுவேன்.

இதற்குள் "16 வயதினிலே'' படம், மிகப்பெரிய வெற்றிப்படமானது. எங்கு பார்த்தாலும், பாரதிராஜா பேசப்பட்டார். பட உலகம் வியந்து பார்க்கிற ஒரு மாமனிதராகி விட்டார்.

அடுத்தபடி "கிழக்கே போகும் ரெயில்'' படத்தை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. விடுவேனா? மறுநாள் காலையில் அவர் வீட்டு முன் போய் நின்றேன்.

என்னைப் பார்த்த பாரதிராஜா, "இந்தப் படத்தில் இரண்டு மூன்று கேரக்டர்தான் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால் உனக்கு கேரக்டர் தர்றதுக்கு வாய்ப்பு இல்லே. நீ என்னிடம் அசிஸ்டெண்ட்டா சேர்ந்துக்க. நடிக்கிற வாய்ப்பு தானாய் அமையும்'' என்றார். எனக்கு நடிப்பின் மீது மட்டுமே நோக்கமாக இருந்ததால், `உதவி இயக்குனர்' வாய்ப்பை தவிர்த்து விட்டேன். "சரி.தினமும் என்னை வந்து பார்த்துப்போ'' என்றார் பாரதிராஜா.

"கிழக்கே போகும் ரெயில்'' படமும், பாரதிராஜாவின் வித்தியாசமான கைவண்ணத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

பாரதிராஜா இப்போது மேலும் பிஸியாகி விட்டார். அடுத்து "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தை இயக்கி அதுவும் வெற்றி. இப்போது மனோபாலா என்ற புதியவர் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருந்தார். ஏற்கனவே மனோபாலா எனக்கு நண்பர். நாகேஸ்வரராவ் பார்க்கில் என்னை உட்கார வைத்து போட்டோவெல்லாம் எடுத்திருக்கிறார். நடிகனாக வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார்.

இப்போது மனோபாலா, டைரக்டர் பாரதிராஜாவிடம் சேர்ந்து விட்டதால் நான் நடிகனாகும் வாய்ப்பு நெருங்கி விட்டதாகவே உணர்ந்தேன்.

"சிவப்பு ரோஜாக்கள்'' படத்தை அடுத்து, புதிய படத்தின் கதை மற்றும் `ஷெட்ïல்' முடிவு செய்யப்பட்டு நடிகர்- நடிகைகளும் முடிவாயினர். நடிகர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை என்பதை மனோபாலா மூலம் தெரிந்து கொண்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

அன்றிரவு 9 மணிக்கு மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி பாரதிராஜாவின் வீட்டை நோக்கி நடந்தேன். நான் நனைந்து வருவதை தூரத்தில் இருந்தே கவனித்து விட்டார், பாரதிராஜா. என்னைப் பார்த்ததும், "என்னய்யா! மழையில் நனைந்து வர்ற அளவுக்கு என்ன விசேஷம்?'' என்று கேட்டார்.

நான்தான் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறேனே. அந்த கடுப்பை வேறுவிதமாக அவரிடம் வெளிப்படுத்த எண்ணினேன். "ஒரு மகிழ்ச்சியான செய்தி. எனக்கு படம் `புக்' ஆகியிருக்கிறது'' என்றேன்.

"ரொம்ப சந்தோஷம்யா! யாருடைய படம்?'' என்று கேட்டார், பாரதிராஜா.

"உங்க படம்தான்!'' என்றேன்.

"யோவ்! என்னய்யா சொல்றே?'' என்று திகைப்புடன் கேட்டார், பாரதிராஜா.

"பாலா (மனோபாலா) வந்து ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட்ல என் பேர் இல்லைங்கிறார். நான் உங்க கூட அவுட்டோர் வரப்போறேன். படத்தில் எனக்கு சின்ன ரோலாவது நீங்க கொடுத்தே தீரணும்'' என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர் என் முகத்தை பார்த்தார். பிறகு, "சரி வாய்யா!'' என்றார்.

இப்போது எனக்குள் இருந்த பல நாள் சந்தேகத்தை அவரிடம் கேட்டேவிட்டேன். "என் மூஞ்சி அழகாக இல்லேன்னுதான் எனக்கு நடிக்க சான்ஸ் தராம இருந்தீங்களா?'' என்று கேட்டேன்.

பாரதிராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. "உன் நடிப்பை ஜனங்க ஏத்துக்கிட்டாங்கன்னா அப்புறம் மூஞ்சி என்னடா மூஞ்சி?'' என்றார்.

அப்போதே அவர் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அந்தப் படத்துக்கு `புதிய வார்ப்புகள்' என்று பெயர் சூட்டிய பாரதிராஜா, தனது உதவியாளர் பாக்யராஜையே படத்தின் கதாநாயகனாக்கினார்.

தேனியில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்பு தொடங்கி 20 நாட்கள் வரை நான் சும்மாவே இருந்தேன். படப்பிடிப்பில் சின்னச்சின்ன வேலைகள் செய்தபடி எனக்கான வாய்ப்பை எதிர் நோக்கியிருந்தேன்.

21-வது நாளில் என்னை அழைத்தார் பாரதிராஜா. "யோவ்! நீ நடிக்கிறே! நாளைக்கு காலைல மேக்கப்போட்டு ரெடியா இரு'' என்றார். மறுநாள் காலை 5 மணிக்கே மேக்கப் போட்டு நான் ரெடி. `அல்லி நகரம்' ராஜேந்திரன்தான் மேக்கப் மேன். அவர் என்னிடம், "பாரதிராஜாவுக்கு சொந்தமா?'' என்று கேட்டார். "ஆமாம்ணே'' என்றேன்.

"ஊரில் இருந்து ஒரு ஆள் சினிமாவுக்கு வந்துடக்கூடாதே! உடனே நடிக்கணும்னு எல்லோரும் புறப்பட்டு வந்துருவீங்களே! வர்றதுதான் வரீங்க! வரும்போது கண்ணாடியில் முகத்தைப் பார்த்துட்டு வந்திருக்கலாமில்லே!'' என்றார்.

நான் அதை கண்டுகொள்ளவில்லை. நடிக்கத் தயாரானேன். கதைப்படி படத்தின் கதாநாயகி ரதியை நான் பொண்ணு பார்க்கப்போகிற காட்சி. நான் மாப்பிள்ளைக் கோலத்தில், கொஞ்சம் காலை சாய்த்து நடந்தபடி பெண் வீட்டுக்குப் போகவேண்டும். நான் போகிற வரப்பு வழியில் கொஞ்சம் மாட்டுச் சாணத்தைப் போடச் சொன்னார், பாரதிராஜா. நான் அதில் மிதித்து விட்டு பெண்ணின் தந்தையை பார்த்து, "மாமா! நடந்து வர்றப்ப சாணியை மிதிச்சிட்டேன்'' என்று சொல்ல வேண்டும்.

டைரக்டர் சொன்னபடி செய்தேன். முதல் `ஷாட்'டிலேயே காட்சி ஓ.கே.யானது. மகிழ்ச்சியுடன் என்னை அழைத்த டைரக்டர், "நீ நடந்து வரும்போது எதுக்காக சாணியில் மிதிச்சிட்டு வரச்சொன்னேன் தெரியுமா? சாணி என்பது மங்களகரமானது. முதன் முதலா நடிக்க வர்றே. நிறைய படங்களில் நடிச்சு பெயர் வாங்கணும். புகழ் கிடைக்கணும். அப்படி உன் நடிப்பு வாழ்க்கை அமையணும்னுதான் சாணியில் மிதிச்சிட்டு வர்ற மாதிரி முதல் காட்சியை எடுத்தேன்'' என்றார்.

என் மேல் எத்தனை அன்பு, எத்தனை அக்கறை! அவரது அந்த அன்பில் நெகிழ்ந்து போனேன்.''

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? - தெரிந்துகொள்வோம்


ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.


* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.


* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.


* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.


* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.


* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.


* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.


* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.


* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.


* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்

Mid-air mishap: Hot curry spills on passenger, costs airline ₹25k

Mid-air mishap: Hot curry spills on passenger, costs airline ₹25k  CONSUMER IS KING  Vindhya.Pabolu@timesofindia.com 02.02.2026 Bengaluru : ...