Friday, December 5, 2014
ஏழை படும் பாடு!

வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை நேரடியாக, வங்கியில் செலுத்தும் நடைமுறையைப் பொருத்தவரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பாஜக அரசுக்கும் இரண்டு வித்தியாசங்கள்தான்.
முந்தைய அரசு ஆதார் அட்டை கட்டாயம் என்றது. இன்றைய அரசு ஆதார் அட்டை இல்லாவிட்டால், வங்கி சேமிப்புக் கணக்கு விவரத்தைக் கொடுப்பது கட்டாயம் என்று கூறியுள்ளது. முந்தைய அரசு, மாதம் ஒரு எரிவாயு உருளை வீதம் ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு மானியம் கிடைக்கும் என்றது. இன்றைய அரசு, ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு மட்டுமே மானியம் என்கிறது.
வங்கிச் சேமிப்பு கணக்கை ஏற்றுக்கொள்வதும், ஆண்டுக்கு மொத்தம் 12 உருளைகளுக்கு மானியம் என்பதும், அடம்பிடித்து அழும் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பதைப் போன்றதுதான். அரசின் இலக்கு ஒன்றுதான். அதாவது, தற்போது பெட்ரோல், டீசலை சந்தை விலைக்கு வாங்கப் பழக்கிவிட்டதைப் போலவே, சமையல் எரிவாயு உருளை விவகாரத்திலும், மானியத்தை மெல்ல மெல்ல மறக்கடிக்க வைப்பதுதான்!
இந்தியாவில் எரிவாயுவுக்கான தேவை ஆண்டுதோறும் பெருகி வருகிறது. 2012-13-ஆம் ஆண்டு 13.5 லட்சம் டன் எரிவாயு உற்பத்தியானது. அது 2013-14-ஆம் ஆண்டில் 15 லட்சம் டன்னாக உயர்ந்தது. இவற்றில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு 75%!
2012-13 நிதியாண்டில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானியம் மட்டும் ரூ.46,458 கோடி என்கின்றன எண்ணெய் நிறுவனங்கள். ஆகவே, மத்தியில் ஆள்வது எந்த அரசாக இருந்தாலும், அவற்றின் ஒரே நோக்கம் சமையல் எரிவாயு உருளைக்கு மானியம் இல்லாமல் செய்வதே! ஆனால், அதைச் செய்யும்போது வாக்குவங்கிக்கு குந்தகம் ஏற்படாமல், ஒட்டகத்தின் மீது சுமையை ஏற்றி, ஒட்டகத்தின் திருப்திக்காக அதன் கண் எதிரில் ஒரு சிறு மூட்டையை கீழே வீசுவதைப்போன்று, சில கபட நாடகங்களை நடத்துகிறார்கள்.
இந்தியாவில் சுமார் 13 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் சற்றொப்ப 1.5 கோடி குடும்பங்கள் இணைப்பு பெற்றுள்ளன. இவற்றில் குறைந்தபட்சம் 10% இணைப்புகள் போலியானவை என்பது எண்ணெய் நிறுவனங்
களின் கணிப்பு. ஆதார் அல்லது வங்கிக் கணக்குடன் எரிவாயு இணைப்பை இணைத்து, நேரடி மானியம் வழங்கத் தொடங்கினால், இந்த 10% போலி இணைப்பை இல்லாமல் செய்துவிடலாம் எனக் கருதுகின்றன.
சில குடும்பங்கள், குடும்பத் தலைவர் இறந்தபிறகு எரிவாயு இணைப்பை வாரிசு பெயரில் மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வந்திருக்கின்றன. வருவாய்த் துறையில் வாரிசு சான்று பெறுவது "செலவு' ஏற்படுத்தும் என்பதால் மெத்தனமாக இருந்துவிட்டனர். இப்போது இவர்கள்தான் அல்லல்படப் போகிறார்கள். இவர்களுக்கான எளிய மாற்றுத் திட்டத்தையும் அரசு அறிவிக்க வேண்டும்.
2015 மார்ச் மாதத்துக்குப் பிறகு எல்லாருக்கும் சந்தை விலையில்தான் சமையல் எரிவாயு கிடைக்கும். ஜூன் மாதத்துக்குள் சேர்ந்தால் அந்த மூன்று மாத மானியத்தை பெறலாம். இல்லாவிட்டால் சந்தை விலையில்தான் அவர்கள் எரிவாயு உருளையைப் பெற முடியும். அதாவது, நேரடி மானியம் பெறுவோர் சந்தை விலைக்கு மறைமுகமாகப் பழகுவார்கள். மானியம் பெறாதவர்கள் சந்தை விலைக்கு நேரடியாகவே பழகிவிடுவார்கள். இதுதான் அரசின் திட்டம்.
வங்கிச் சேமிப்புக் கணக்கு இருந்தால் போதும் என விதித்தளர்வு ஏற்பட்ட பிறகும், ஆதார் அட்டை பணியை முடுக்கிவிடும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது ஏன்? இந்த விவகாரத்தில் எரிவாயு உருளையைக் காட்டிலும், இதை முன்வைத்து அனைவருக்கும் ஆதார அட்டை வழங்கிவிட வேண்டும் என்ற துடிப்பையே காண முடிகிறது. ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் ஆதார் இணைந்த நேரடி மானியத் திட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டால், அடுத்ததாக நியாயவிலைக் கடைகளில் பெறும் சர்க்கரை, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள் மானியத்தையும் இதே முறைக்குக் கொண்டுவந்துவிட முடியும்.
அனைவருக்கும் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு தருகிறோம் என்று கூறி, வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தவர்களின் மானிய விலை மண்ணெண்ணெய்க்கு அரசு முதலில் முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது நேரடி மானியம் என்கிற பெயரில் எரிவாயு மானியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருக்கிறது.
சந்தையில் முழு விலை கொடுத்து வாங்கிக்கொள். மானியத்தை வங்கியில் பார்த்துக்கொள் என்கிறது அரசு. முன்கூட்டியே முழுத் தொகையும் கட்டி எரிவாயு உருளையை வாங்குவது எத்தனை ஏழைகளுக்கு சாத்தியம்? அதைப்பற்றி யாருக்கென்ன கவலை!
தாம்பரம் நகராட்சியில் புதுமுறை அறிமுகம் : சுகாதார சீர்கேடு குறைவதற்கு வாய்ப்பு
தாம்பரம்: நகராட்சிகளிலேயே முதல் முறையாக, தாம்பரத்தில், பூமிக்கு அடியில் புதைக்கப்படும் முன்மாதிரி குப்பை தொட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. பகுதிவாசிகள் மத்தியில், இந்த திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதால், அதிக தொட்டிகளை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், குப்பை பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எந்த மாதிரியான திட்டங்களை கொண்டு வந்தாலும், பகுதிவாசிகளின் ஒத்துழைப்பு இன்றி தோல்வியில் முடிகிறது.சோதனை முயற்சி
ஒவ்வொரு உள்ளாட்சி பகுதியிலும், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை, தரம்வாரியாக பிரித்துக் கொடுப்பதில் பகுதிவாசிகளின் அலட்சியம்; திறந்தவெளியில் தொட்டி இருந்தும், கண்ட இடங்களில் துாக்கி வீசுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், வெளிநாடுகளில் உள்ளதை போன்று, பூமிக்கு அடியில் புதைக்கப்படும் நவீன குப்பை தொட்டிகளை, தமிழகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சோதனை முயற்சியாக, முதல் முறையாக, தாம்பரம் நகராட்சியில், ஐந்து இடங்களில் பூமிக்கடியில் புதைக்கும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.

தாம்பரம் தெருக்களில், வைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத, வீட்டு மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு வைக்கப்பட்டு உள்ள தொட்டிகள்.
கூடுதல் இடங்களில்...
வாரத்தில் இரண்டு நாட்கள், ஊழியர்கள் வந்து, தொட்டியில் உள்ள குப்பையை தனித்தனியாக சேகரித்து, கிடங்கிற்கு எடுத்து செல்வர். சோதனை முயற்சியான இந்த திட்டத்திற்கு, பகுதிவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும், குப்பையை தரம் பிரித்து, அந்த தொட்டிகளில் போடுவது, அத்திட்டம் வெற்றி பெற்றுள்ளதை காட்டுகிறது. இதனால், கூடுதல் இடங்களில், தொட்டிகளை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் கரிகாலன் கூறியதாவது:
4 மாதங்களாக...
தமிழகத்தில் எந்த திட்டமாக இருந்தாலும், சோதனை முயற்சியாக தாம்பரத்தில் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில், இந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இத்திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கூடுதலாக 550 இடங்களில், இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 157 இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தொட்டியின் பயன்பாடு என்ன?
ந்த தொட்டிகள் மக்கும், மக்காத, வீட்டு உபயோக மருத்துவக் கழிவுகள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொட்டியும், ஐந்து அடி உயரமும், ஒன்றரை டன் கொள்ளளவும் கொண்டவை.இரண்டு அடி பூமிக்கு அடியிலும், மூன்று அடி வெளியில் இருக்குமாறும் புதைக்கப்பட்டிருக்கும். குப்பையை கொண்டு வருவோர் ஒவ்வொரு தொட்டியிலும், அதற்கேற்ற குப்பையை போட்டு விட்டு செல்லலாம். குப்பை தொட்டியை பகுதிவாசிகள் திறந்து கொட்டலாம். ஆனால், குப்பை போட்டு முடித்தவுடன், தானாகவே மூடிக்கொள்ளும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனால், சாலைகளில் குப்பை தேங்காது. துர்நாற்றம் வீசுவதற்கு வாய்ப்பில்லை. நாய், பன்றி கிளற முடியாது.
ஜெர்மனியில் இருந்து இறக்குமதி
நவீன குப்பை கலன் திட்டம், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுளில்தான் பரவலாக உள்ளது. அந்த நாடுகளில், குப்பை சேகரிக்கும் இத்திட்டம், சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டு, தமிழக நகராட்சிகளில் முதல் முறையாக, சோதனை முறையில், தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக, ஜெர்மனியில் இருந்து நவீன குப்பை தொட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. மூன்று வகையாக குப்பையை பிரிக்கும் (ஒரு செட்) தொட்டிகளின் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய்.
சமையல் காஸ் மானிய விண்ணப்பம்: படிக்காதவர்கள் அல்லல்படும் அவலம்

சமையல் காஸ் நேரடி மானியத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை, பூர்த்தி செய்ய தெரியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.மத்திய அரசு, சமையல் காஸ் சிலிண்டருக்கு, வழங்கி வரும் மானிய தொகையை, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தும் திட்டத்தை, கடந்த 2013ல் துவக்கியது.
காங்., ஆளும் மாநிலங்கள்:
இத்திட்டத்திற்கு, தமிழகம் உள்ளிட்ட, பல மாநில அரசுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்., ஆளும் மாநிலங்களில் மட்டும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்தியில், புதிதாக அமைந்த பா.ஜ., அரசு, நேரடி மானிய திட்டத்தில், சில மாற்றங்கள் செய்து, கடந்த மாதம் 15ம் தேதி, 11 மாநிலங்களில் உள்ள, 54 மாவட்டங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அடுத்த மாதம் முதல், நாடு முழுவதும், காஸ் சிலிண்டர் நேரடி மானியம் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தில் உள்ள காஸ் ஏஜென்சிகளில், நேரடி மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட்டு வருகின்றன.
* வாடிக்கையாளர், தங்களின் காஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்.
* 'ஆதார்' அட்டை இருந்தால், ஒரு விண்ணப்பம்; 'ஆதார்' அட்டை இல்லாதவர்களுக்கு, மற்றொரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
'ஆதார்' அட்டை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியது:
* 'படிவம் - 1', 'படிவம் - 2' என, இரண்டு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
* 'படிவம் - 1'ஐ, பூர்த்தி செய்து, 'ஆதார்' அட்டை நகலுடன், வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கியில் வழங்க வேண்டும்.
* பின், 'படிவம் -2'ஐ, பூர்த்தி செய்து, 'ஆதார்' அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், காஸ் ஏஜென்சியிடம் வழங்க வேண்டும்.
* வாடிக்கையாளர் முகவரியில் மாற்றம் இருந்தால், அதற்கான சான்றை அளிக்க வேண்டும்.
'ஆதார்' அட்டை இல்லதாவர்கள் பின்பற்ற வேண்டியவை:
'படிவம் - 3'ஐ, பூர்த்தி செய்து, காஸ் ரசீது நகலுடன், வங்கியில் வழங்க வேண்டும் அல்லது 'படிவம் - 4'ஐ, பூர்த்தி செய்து, வங்கிக் கணக்கு எண் நகல், காஸ் ரசீது நகல் ஆகியவற்றை, காஸ் ஏஜென்சிகளிடம் வழங்க வேண்டும். அவ்வாறு, காஸ் ஏஜென்சிகளிடம் வழங்கப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், வரும் ஜனவரி முதல், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், காஸ் மானியம் வரவு வைக்கப்படும் என, தெரிகிறது.
763 ரூபாய்:
இதையடுத்து,பொது மக்கள், சந்தை விலையில், அதாவது, இம்மாத விலையான, 763 ரூபாய் கொடுத்து, சமையல் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், மானிய தொகை வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், சமை யல் காஸ் சிலிண்டர், நேரடி மானியம் வழங்கும் திட்டத்திற்கு, பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மொத்த பணத்தையும் கொடுத்து, காஸ் வாங்க முடியாது. வங்கிக்கு சென்று பணம் எடுக்க, பல கட்டுப்பாடுகள் உள்ளதால், தற்போது உள்ளபடியே, குறைந்த விலையில் காஸ் வழங்க வேண்டும்.
மகேஷ்வரி, சேப்பாக்கம்
விண்ணப்பங்கள், ஆங்கிலத்தில் உள்ளதால், படிக்காதவர்களால், அதை பூர்த்தி செய்ய முடியவில்லை. நேரடி மானிய திட்டத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவது உறுதி. எனவே இந்த திட்டத்தை, அரசு கைவிட வேண்டும்.
முனியம்மாள், ஐஸ் அவுஸ்
விலைவாசி உயர்ந்துள்ளதால், அதிக விலை கொடுத்து, காஸ் வாங்க முடியாது. நேரடி மானிய திட்டத்தின் மூலம், வங்கியில், எப்போது பணம் போடுவர் என, தெரியாது. இதனால், பழைய முறையே தொடர வேண்டும்.
சாந்தா, திருவல்லிக்கேணி
- நமது நிருபர் -
தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடக்கம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 19-ல் தொடங்குகிறது

சென்னை,
தமிழ்நாட்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
பிளஸ்-2 தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள் அமைக்கப்படுகிறது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 125 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளும் எழுதுகிறார்கள்.
இந்த தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.
இதன்படி, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 5-ந்தேதி தொடங்கி, மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 19-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது.
பிளஸ்-2அட்டவணை
பிளஸ்-2 தேர்வுக்கான அட்டவணை விவரம் வருமாறு:-
2015-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி- தமிழ் முதல் தாள்.
6-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.
9-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.
10-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.
13-ந்தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ்.
16-ந்தேதி- வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
18-ந்தேதி- கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்.
20-ந்தேதி- அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்.
23-ந்தேதி- வேதியியல், அக்கவுண்டன்சி.
27-ந்தேதி- இயற்பியல், பொருளாதாரம்.
31-ந்தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.
எஸ்.எஸ்.எல்.சி. அட்டவணை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-
மார்ச் 19-ந்தேதி- தமிழ் முதல் தாள்.
24-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.
25-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.
26-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.
30-ந்தேதி- கணிதம்.
ஏப்ரல் 6-ந்தேதி- அறிவியல்.
10-ந்தேதி- சமூக அறிவியல்.
தேர்வு தொடங்கும் நேரம்
பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும்.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் மாணவ- மாணவிகளை புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாளில் இடம்பெறுகிறது. அது மட்டுமில்லாமல், மாணவ- மாணவிகளின் பதிவு எண்களும் அந்த விடைத்தாளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Comments (Atom)
நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...
