Saturday, December 13, 2014

திரைவாழ்வில், எந்த நடிகரும் எட்டாத புதிய உயரத்தை அடைந்துகாட்டியவர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த்| கோப்புப் படம்.

ரஜினிகாந்த் பிறந்தநாள்: 12.12.1950

1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படம் வெளியானபோது, படத்தின் இறுதிக் காட்சியில் நின்ற நிலையிலேயே உயிரைவிட்டு, ஸ்ரீவித்யா தொட்டதும் சரிந்துவிழும் அந்த அறிமுக நடிகர், உச்ச நட்சத்திரமாக உயர்ந்து, 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் கதாநாயகனாக நடிப்பார் என்று அந்தக் கால ரசிகர்கள் கணித்திருப்பார்களா தெரியவில்லை. ஆனால், அலட்சியமான வேகத்துடன் கைகளால் மேல் கோட்டைப் பின்னோக்கித் தள்ளிவிட்டபடிநடக்கும் ‘லிங்கா’ படத்தின் ஸ்டில்களை இப்போது பார்க்கும் அந்த ரசிகர்கள், கண்முன்னே பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் கால மரத்தின் குன்றாத பசுமையை நிச்சயம் உணர்வார்கள்.

திரைவாழ்வில், எந்த நடிகரும் எட்டாத புதிய உயரத்தை அடைந்துகாட்டியவர் ரஜினிகாந்த். இவரது படம் வெளியாகும்போதுதான், நட்சத்திர நடிகர்கள் கூடப் பாமர ரசிகர்களாகி, திரையரங்குக்குப் படையெடுக்கும் அதிசயம் நிகழும். மிகச் சில தோல்விகளின் வடுக்களும், பிரம்மாண்டமான பல வெற்றி மகுடங்களும் கொண்ட 40 ஆண்டுகாலப் பயணம் அவருடையது.

கவர்ச்சியான போக்கிரி

70-களின் இறுதியில் இளையராஜா பாரதிராஜா - மகேந்திரன் - ரஜினி - கமல் என்று புதிய திறமைகளின் அலை ரசிகர்களை ஈர்த்தது. அப்போது வெற்றிப் படங்களுக்கு உத்தரவாதம் தரும் கலைஞராகவும், ரசிகர்களின் பெரும் விருப்பத்துக்குரியவராகவும், மளமளவென உயர்ந்தார் ரஜினி. வித்தியாசமான உச்சரிப்பு, உற்சாகமான வேகம், அலைபாயும் தலைமுடி என்று ரசிகர்களைக் கட்டிப்போடத் தொடங்கியிருந்தார். கவர்ச்சியான போக்கிரித் தோற்றம் அவரது பலங்களில் ஒன்றாக அமைந்தது.

முன்கோபம் கொண்ட முரட்டு இளைஞன் பாத்திரத்தில் அவர் நடித்த ‘பைரவி’, ‘தப்புத்தாளங்கள்’ போன்ற படங்கள் அவர் மீதான அனுதாபத்தை வளர்த்தன. மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ படத்தில் சுயஇரக்கமும், தன்மானமும் மிக்க முரடனாக அவர் நடித்த காளி பாத்திரம் இவற்றின் உச்சமாக அமைந்தது. முழுமையான நாயகனாக அவர் உருக்கொள்வதற்கு முன் வெளியான இந்தப் படம், அவரது நடிப்பின் நுட்பங்களைச் சாத்தியப் படுத்தியது. தான் முற்றிலும் வெறுக்கும் சரத்பாபு, தன் தங்கையைப் பெண் கேட்டு வந்த பின்னர் அவர் ஆடும் ருத்ரதாண்டவம் ரசிகர்களை மட்டுமல்ல, திரையில் இருக்கும் சக நடிகர்களையே உலுக்கி யெடுத்துவிடும்.

வில்லத்தனம் நிறைந்த நாயகன்

வில்லன்களின் உலகிலிருந்து நல்லவர்களின் பக்கம் வந்த நடிகர் ரஜினி, வில்லன்களுக்கு உரிய பலம், ஆக்ரோஷம், சூழ்ச்சி என்று அனைத்தையும் கைக்கொண்டிருக்கும் ஒருவர் நாயகனானபோது ரசிகர்களுக்குக் கிடைத்த பாதுகாப்பு உணர்ச்சி அவரது வெற்றிக்கு அடித் தளமாக அமைந்தது எனலாம். எனவேதான், பிரம் மாண்டமான மொட்டைத் தலை வில்லனைப் ‘பறந்து பறந்து’ ரஜினி அடித்தபோது, திரையரங்கில் விசில் பறந்தது. ரவுடிகளால் தள்ளிவிடப்படும் பெரியவர், தன் காலில் விழும்போது தூக்கிவிடும் ரஜினியைப் பார்த்துக் கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. குழந்தைகள், பெண்களின் மதிப்பையும், அபிமானத்தையும் பெற்ற நடிகராக ரஜினி உயர்ந்ததன் ரகசியம் இதுதான்.

அந்தக் காலகட்டத்தில் அமிதாப் நடித்த ‘கோபக் கார இளைஞன்’ வேடத்தின் தமிழ் நகல்தான் என்றாலும், தனக்கே உரிய பிரத்யேக பாணியில் அதை மிளிரச் செய்தார் ரஜினி. வில்லனை வீழ்த்தும் அசுர பலம் கொண்டிருந்தாலும் சற்று நேரம் அவனிடம் அமைதியாகவும், போலியான பயத் துடனும் ரஜினி உரையாடும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தன. காற்றில் கலைந்து புரளும் முடியைக் கைகளால் ஒதுக்கிக்கொண்டே புன்னகையுடன் வில்லன்களை எச்சரிக்கும் ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது?

‘பாட்ஷா’வுக்குப் பிறகு

90-களின் மத்தியில் தமிழ்த் திரையுலகின் இசை, தொழில்நுட்பம் போன்ற தளங்களில் ஏற்பட்ட மாறுதலின் பின்னணியில் வெளியான ‘பாட்ஷா’, அவரது பிம்பத்தைப் பல மடங்கு பெருக்கியது. தமிழக அரசியலில் நிலவிய கொந்தளிப்பான சூழலைத் திரையில் பிரதிபலிக்கும் படங்களில் ரஜினி தொடர்ந்து நடித்தார். அது அரசியல் களத்தில் அவரை நிறுத்தாவிட்டாலும், ‘திரை அரசிய’லில் கோலோச்ச அவருக்கு உதவியது. ‘முத்து’ படம் ஜப்பானில் பிரபலமானதும், ‘படையப்பா’ அமெரிக் காவில் வெளியானபோது ‘வண்டி கட்டிக்கொண்டு’ திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுத்ததும், ரஜினியின் நட்சத்திர மதிப்பின் வீச்சை உணர்த்தியது.

எல்லையைக் குறுக்கிக்கொண்டவர்

சமகால நடிகரும் நண்பருமான கமல், பரிசோதனை முயற்சிகளில் இறங்கிவிட்ட பின்னர், வணிகப் படங்களே தனது பிரதேசம் என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டார். இத்தனைக்கும் தமிழின் தரமான படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ரஜினி நடித்த படங்களும் அடங்கும். ஒருகட்டத்தில் வணிக உலகின் திரையிலிருந்து மீளமுடியாமல் அதிலேயே தேங்கிவிட்டார் என்ற விமர்சனம் ரஜினி மீது உண்டு. ஆனால், உண்மையில், அமிதாப் நடித்த ‘சீனி கம்’ போன்ற, அசல் வயதுக்குரிய வேடங்களில் நடிக்கும் ஆர்வம் ரஜினிக்கு இருக்கிறது.

சமீபத்தில் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க இளையராஜாவுடன் சென்றபோது, இதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘சந்திரமுகி’ வேட்டையன், ‘எந்திரன்’ சிட்டி எல்லாம்கூட அதன் வெளிப்பாடுதான் என்று கொள்ளலாம். தமிழில் இப்போது உருவாகியிருக்கும் ‘புதிய அலை’ இயக்குநர்களால் நிச்சயம் ரஜினியின் இந்த ஆசைக்குத் தீனிபோட முடியும். ரஜினி மீண்டும் அப்படியொரு படத்தில் நடிப்பதுதான் அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய வாழ்நாள் சவாலாக இருக்கும். ஆனால், அப்படி யான ஒரு சவாலை எதிர்கொள்வதில்தான் ஒரு அசலான கலைஞனின் ஆத்மார்த்த வெற்றி அடங்கியிருக்கிறது. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது... நல்வரவு ரஜினி!

- வெ. சந்திரமோகன்

உண்மையில் ஒரு தவறு நடக்கும்போதுதான் தெரிகிறது, நம்முடைய அமைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் நிறைந்து கிடக்கும் தவறுகள்.

வேரை விட்டுவிட்டுக் கிளையை வெட்டுவதேன்?


டெல்லியில் டாக்ஸி ஓட்டுநரால் பெண்ணொருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான சில கேள்விகளை எழுப்புகிறது.

தேசத்தின் உச்சபட்சப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தலைநகரிலேயே இப்படியென்றால், மற்ற நகரங்களைப் பற்றி என்ன சொல்வது? அந்த டாக்ஸி ஓட்டுநர் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று வந்திருக்கிறார் என்ற தகவலும், பாலியல் அத்துமீறல்களில் வழக்கமாக ஈடுபடக் கூடியவர்தான் அவர் என்பதும் மேலும் அதிர வைக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு நபர், எப்படி இவ்வளவு சுதந்திரமாகத் திரிய முடிந்தது என்பது புதிர். அவருக்கு வேலை அளித்த உபேர் நிறுவனம், இது போன்ற பின்னணித் தகவல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. வேலைக்குச் சேர அந்த ஓட்டுநர் போலியாக நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல, உபேர் நிறுவனத்தில் ஓட்டுநர்களாக இருக்கும் 4,000 பேரின் பின்னணித் தகவல்கள் பற்றியும் முறையான ஆவணங்கள் அந்த நிறுவனத்திடம் இல்லை என்பதுதான் விசித்திரம். யார் வேண்டு மானாலும் எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அது பற்றித் தெரிவிக்காமல் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர முடியும் என்ற நிலை எதன் அடையாளம்?

பாலியல் வன்முறைச் சம்பவம் வெளியில் தெரிந்தவுடன், உபேர் டாக்ஸியை டெல்லியில் தடைசெய்திருக்கிறார்கள். 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் உபேர் டாக்ஸியின் செயல்பாடுகள் பல முறை கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. மற்ற டாக்ஸிகளை விட குறைந்த கட்டணம் என்பதால், அந்தத் துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி ஏகபோகமாகத் தொழில் நடத்து வதாகவும் இந்தியா உட்படப் பல நாடுகளில் அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

அது மட்டுமல்லாமல், இந்த நிறுவனம் ஒரு கைபேசி ‘ஆப்’ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. டாக்ஸியை வரவழைப்பதிலிருந்து பயணக் கட்டணத்தைச் செலுத்துவது வரை அவர்கள் செயல்படுத்தும் ‘ஆப்’ மூலமாகச் செய்ய முடியும். ஒருவர் இதில் கணக்கு தொடங்கி விட்டால், இந்த ‘ஆப்’ மூலமாக அமெரிக்க டாலராகத்தான் கட்டணம் செலுத்த முடியும். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒருவர், இந்தியப் பணத்தைக் கட்டணமாகச் செலுத்துவதுதானே முறையாக இருக்க முடியும்.

பிரச்சினையின் வேரைக் களையாமல் அதன் கிளையை மட்டும் வெட்டுவது எந்த விதத்தில் பலன் கொடுக்கும்? அந்த நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை தவறு என்பதல்ல இங்கே பிரச்சினை. அந்த நிறுவனம் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதை இவ்வளவு நாட்கள் கழித்துதான், அதுவும் ஒரு பெண் மீது கொடுமையாகப் பாலியல் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பிறகுதான், கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது என்பதுதான் பிரச்சினை. உண்மையில் ஒரு தவறு நடக்கும்போதுதான் தெரிகிறது, நம்முடைய அமைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் நிறைந்து கிடக்கும் தவறுகள். அரசு தவறுகளை மறைப்பதை விட்டுவிட்டு, அமைப்பைத் திருத்த முயற்சிக்க வேண்டும்!

அடுத்த நூற்றாண்டில், காளை மாடுகள் அருங்காட்சியகங்களில் பார்க்கும் விலங்காக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கடந்து போகும் காளைகள்


நிகழாண்டில் பழனியில் முடிவடைந்த காளை மாடுகளுக்கான சந்தையில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பங்கேற்கவில்லை.

இயந்திரப் பயன்பாடு அதிகரித்து வருவதால் மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சந்தைகளும் களை இழந்து விட்டன.

காளை மாடுகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. டெல்டா பகுதிகளின் உயிர்நாடியான விவசாய வேலைகளுக்கு தோள் கொடுத்தவை இக்காளைகளே. 100 குழி அளவுள்ள நிலத்தை உழுவதற்கு அரை நாள் தேவைப்படும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு நாள் ஆகும்.

அந்த நேரத்தில், வெயிலையும் பொருள்படுத்தாமல் உழைக்கும் வல்லமை பெற்றவை காளைகள். விவசாயப் பகுதிகளில் செய்யப்படும் உழவு, அறுவடை, மூட்டைகளை சுமத்தல், நீண்ட தூரப் பயணம் உள்ளிட்ட வேலைகளைச் சலிக்காமல் செய்யக்கூடிய திறன் பெற்றவை.

எனவேதான், மாடுகளை கவுரவிக்க கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் டெல்டா மாவட்டங்களில் விமரிசையாக இருக்கும். பசு மாடுகளை பொருத்தவரை வீடுகளிலேயே மாலை அணிவித்து பொங்கல் கொண்டாடி விடுவர்.

ஆனால், காளை மாடுகளுக்கு கிராமத்தின் பொதுவான இடத்தில் வைத்து பொங்கல் கொண்டாடப்படும். அதாவது, ஊரில் காளை வைத்துள்ள அனைவரும் தங்களது மாடுகளை கோயிலுக்கு கூட்டி வருவர்.

அங்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்படும். பின்னர் மாடுகள் அவிழ்த்து விடப்படும்.

தை மாதம் என்பதால் பயிர்கள் அனைத்தும் அறுவடை நிலையில் இருக்கும். யாரும் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்ற விதிமுறை கிராமங்களில் இருக்கும். என்றாலும் அன்றைய தினம் மட்டும் கட்டுப்பாடு தளர்த்தப்படும்.

ஏனெனில், சில ஊர்களில் கோயில்கள் வயல்களின் ஓரத்தில் இருக்கும். மாடுகள் கொஞ்சம் திரும்பினாலே வயல்களுக்கு செல்லும் நிலையில் இருக்கும். ஆகவே, அன்று யாரும் மாடுகளை அடிக்காமல் பத்திரமாக வயல்களை விட்டு வெளியேற்ற வேண்டும்.

காளைகள் பாய்ந்துச் சென்று தங்களின் முதலாளியின் வீட்டு வாசலில் சரியாக நிற்கும். அங்கே வீட்டுப் பெண்களால் ஆரத்தி எடுக்கப்பட்டு, திலகமிடப்பட்டு அதற்குரிய இடத்தில் கட்டப்படும். காலம் காலமாக நடந்து வந்த நிகழ்வு இது.

அப்போதெல்லாம் மாட்டுப் பொங்கல் நாளில் மாலையில் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களிலோ அல்லது பெரும் திடலிலோ காளை மாடுகள் அணிவகுத்து நிற்கும்.

தங்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக விளங்கிய காளைகளை கவுரவிப்பதில் விவசாயிகள் அதிக அக்கறை காட்டினர்.

அதன்பிறகு காளைகளின் பயன்பாடு குறைய ஆரம்பித்து, இயந்திரப் பயன்பாடு தலை தூக்க ஆரம்பித்தது. மாட்டுப் பொங்கலுக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கையும் மெல்ல குறைய ஆரம்பித்தது.

தற்போது மக்கள் மட்டுமே கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு வீடுகளுக்கு வெறுமையாக செல்கின்றனர்.

தற்போது உள்ள சிறுவர்கள் இந்த நிகழ்வுகளை பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே.

தற்போது இனவிருத்திக்காக கிடை போடுவோர் சிலர் காளை மாடுகளை வளர்த்து வருகின்றனர். உழவுக்காக காளைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது.

தனக்கு உதவிய தோழனை கடைசி வரை வைத்து பராமரிக்கும் எண்ணமும் மக்களிடையே குறைந்து விட்டது. அதனாலேயே பல இடங்களில் காளைகள் அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தாய் - தந்தையரே முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் காலத்தில் வாழுகின்ற நாம், மாடுகளின் மீது கருணை காட்டுவோரை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

கட்டை வண்டி, டயர் வண்டி, கூண்டு வண்டி இவையெல்லாம் மாடுகள் இழுத்த வாகனங்கள். வசதியானவர்கள் வைத்திருந்த கூண்டு வண்டிகள் ஏறக்குறைய மறைந்துவிட்டது.

கிராமிய திரைப்படங்களில் மட்டுமே காண முடிகிறது. கட்டை வண்டிகளும், டயர் வண்டிகளும் ஒரு சில இடங்களில் பயன்பாட்டில் உள்ளன.

இனி வரும் தலைமுறையினர் உழவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காளைகளை ஆச்சர்யத்தோடு பார்க்கும் நிலைமை வரலாம். காளைகளின் குளம்படி ஓசைகளும் கழுத்து மணி ஓசைகளும் கிராமப்புறங்களிலிருந்து மெல்ல மறைந்து வருகின்றன.

அடுத்த நூற்றாண்டில், காளை மாடுகள் அருங்காட்சியகங்களில் பார்க்கும் விலங்காக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.4,479 கோடி கருப்பு பண பட்டியல்: முதல்முறையாக மத்திய அரசு வெளியீடு


சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பலரும் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை பதுக்கி உள்ளனர்.

கருப்பு பண மீட்பு நடவடிக்கை

இந்த கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், மற்றொரு முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும், 11 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு தனது பணிகளை தொடங்கி உள்ளது.

628 பேர் பட்டியல்

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரை கொண்ட பட்டியலை மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி தாக்கல் செய்தது. பிரான்சு அரசிடமிருந்து பெற்ற அந்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அப்படியே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் இந்த கணக்குகளில் 289 கணக்குகளில் பணம் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்து, சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்தது.

427 பேர் மீது நடவடிக்கை

இந்த நிலையில் கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரில் (இவர்களின் பெயர் விவரங்களை அரசு தெரிவிக்கவில்லை) 201 பேர் இந்தியாவில் வாழ்கிறவர்கள் அல்ல அல்லது அவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள். 427 பேர் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

மொத்த தொகை

இந்த 628 கணக்குகளில் தொடர்புடைய தொகை சுமார் ரூ.4 ஆயிரத்து 479 கோடி. (இந்த தகவல் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.)

இதில் 79 பேரின் கணக்கு களை வருமான வரித்துறை அளவிட்டுள்ளது. இவர்களின் தெரிவிக்கப்படாத கணக்கு இருப்பு தொகையின் மீது ரூ.2 ஆயிரத்து 926 கோடி வரியாக வட்டியுடன் பெறப்பட்டுள்ளது.

அபராத நடவடிக்கை

46 கணக்குகள் தொடர்பாக அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் 3 கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வரி ஏய்க்கும் நோக்கத்தில் செயல்பட்ட 6 கணக்குகளில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 கணக்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

மற்றவைகளில், தேவையான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுகின்றன. வரும் மாதங்களில் அவற்றில் கூடுதலான முன்னேற்றம் ஏற்படும்.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பை பொறுத்தமட்டில், ஒரு இரும்பு தாது ஏற்றுமதி நிறுவனம் உள்பட 31 கணக்குகளில் உண்மையான மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சேகரித்துள்ளது.

அவர்களில் 11 பேர் மதிப்பை குறைத்து காட்டியதை ஒப்புக்கொண்டு, ரூ116.73 கோடி அபராதம் செலுத்தி விட்டனர். மற்றவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

சொத்துகள் முடக்கம்

ஒடிசாவில் சுரங்க தொழில் அதிபர்கள் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ரூ.400 கோடி சொத்துகளை மத்திய அமலாக் கப்பிரிவு முடக்கி வருகிறது.

கர்நாடகத்தில் 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, ரூ.995.97 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

ஜார்கண்டில் ரூ.452.43 கோடி சொத்துகளை முடக்க தற்காலிக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கர்நாடகத்தில் ரூ.884.13 கோடி சொத்துகளும், ஆந்திராவில் ரூ.1,093.10 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லி தகவல்

இதற்கிடையே டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், “எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் மார்ச் 31-ந் தேதிக்குள் முடியும்” என குறிப்பிட்டார்.

உள்நாட்டில் உள்ள கருப்பு பணம்

சுப்ரீம் கோர்ட்டில், சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையில், உள்நாட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.14 ஆயிரத்து 958 கோடி கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கருப்பு பண விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு 13 சிபாரிசுகளை செய்துள்ளது. அவை வருமாறு:-

வெளிநாடுகளில் யாராவது சட்டவிரோத சொத்துகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு ஈடான அவர்களின் உள்நாட்டு சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக ‘பெமா’ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ரூ.50 லட்சத்துக்கு மேல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது ‘சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பான் நம்பர்

கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக, கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கும் பணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். அந்த உச்சவரம்புக்கு மேல், பணத்தை எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது.

ரூ.1 லட்சத்துக்கு மேல், ரொக்கமாகவோ, காசோலை மூலமாகவோ பணம் செலுத்தினால், அதற்கு ‘பான்’ நம்பரை குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். குஜராத்திலும், மராட்டியத்திலும், பணம் எடுத்துச் செல்லும் கூரியர்களாக அங்காடியாக்கள் என்பவர்கள் செயல்படுகிறார்கள். கருப்பு பண பரிவர்த்தனையில் அவர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

விரைவில் அமல்

மேலும், சுரங்கம், நிதி திட்டங்கள், இரும்பு தாது ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்கள், கருப்பு பண பரிவர்த்தனை அதிகமாக நடக்கும் தொழில்களாக உள்ளன. நாங்கள் கூறிய நடவடிக்கைகள் மூலம், கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருப்பதையும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதையும் பெருமளவில¢ தடுக்கலாம். இந்த யோசனைகள் தற்போது பரிசீலனையில் உள்ளன. விரைவில் இவை அமல்படுத்தப்படலாம்.

நிலுவையில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமானவரி வழக்குகளை விசாரிக்க மும்பையில் கூடுதலாக ஐந்து தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Friday, December 12, 2014

தற்கொலை முயற்சிகள் கண்டிக்கத்தக்கது... தண்டிக்கத்தக்கதல்ல!


தற்கொலை சுற்றுலா என ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சுவிட்சர்லாந்து நாட்டில்தான் தற்கொலை சுற்றுலா எனும் முறை உள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகருக்கு சென்று தற்கொலை செய்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். அங்கு தற்கொலை கிளினிக் என ஒன்று உண்டு. அங்கு சென்று நீங்கள் தற்கொலை செய்து கொள்ளலாம். இதுபோன்ற தற்கொலைகளை அந்நாட்டின் சட்டம் தடுப்பதில்லை. இதைத்தான் தற்கொலை சுற்றுலா என அழைக்கிறார்கள்.

ஆனால் இந்தியா அப்படியல்ல. தற்கொலைகள் இங்கு சட்ட ரீதியாகவும், சமுதாய கண்ணோட்டத்திலும் அனுமதிக்கப்படுவதில்லை. தற்கொலை முயற்சிகளும் கூட இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. சட்டரீதியாக நீங்கள் தற்கொலைக்கு முயன்றாலோ அல்லது யாரையாவது தற்கொலைக்கு தூண்டினாலோ நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதுதான் நம் நாட்டின் தற்போதைய நிலை. ஆனால் தற்கொலைகளின் எண்ணிக்கை இங்கே குறைந்தபாடில்லை. சாதாரண வயிற்று வலியில் துவங்கி உடல் உபாதைகள், பணப்பிரச்னை, உறவு பிரச்னை, பயம், குற்ற உணர்ச்சி என தற்கொலைகளுக்கு ஏகப்பட்ட காரணங்கள் இங்கு குவிந்து கிடக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் 25 வயது வாலிபர் ஒருவர் வேலையின்மையால் தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்ட அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு முயன்ற குற்றத்துக்காக அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309ன் படி அவர் மீது வழக்கு தொடர்ந்தனர் காவல்துறையினர். "எனக்கு வேலை கிடைக்கலை. என்னால வாழ முடியலை. அதுக்காக சாகறேன். என் மேல எதுக்கு சார் கேஸ் போடறீங்க?" என காவல்துறையினரை பார்த்து அவர் கேட்ட கேள்விக்கு அவர்களால் சரியா விளக்க முடியவில்லை.

'இந்திய தண்டனை சட்டத்தின் படி (309) தற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குரிய குற்றம்' இதை மட்டும் தான் காவல்துறையினர் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆனால் அந்த சட்டத்தை மக்களுக்கு புரியும் வகையில், காவல்துறையினரால் சொல்ல முடியவில்லை. சொல்லவும் முடியாது. ஏனென்றால் இந்த சட்டம் ஒரு பொருந்தாத சட்டம்.

நம் அரசியல் அமைப்பு சாசனத்தின் படி, ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையும், அதிகாரமும் அவருக்கு வழங்கப்படுவதில்லை. அதனால் தற்கொலை முயற்சி என்பது நம் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றம். அதன்படி ஓராண்டு வரை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்கிறது சட்டம். 'அட தற்கொலைக்கு முயற்சி செய்யுறதே பெரிய தண்டனைதான். இதுக்கு ஜெயில் வேறயா?'னு கேக்கறீங்களா? ஆமாம். அப்படித்தான் சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த தற்கொலை முயற்சி வழக்குகள் பெரும்பாலும் போடப்படுவதில்லை. ஒரு அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக தினமும் 5 பேர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்குகள் போடப்படுவதில்லை.

இந்தியாவை பொறுத்தவரை தென்னிந்திய பகுதிகளில்தான் தற்கொலைகள் அதிகம். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள் தற்கொலைகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளதாக சொல்கின்றன புள்ளி விவரங்கள். ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், 5 முதல் 10 பேர் தற்கொலைக்கு முயன்று, பின்னர் உயிர் பிழைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனால் இத்தனை பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடுவது என்பது சாத்தியமில்லைதான்.

அரசு அலுவலகங்களில் வேலை நடக்கவில்லை என்றோ அல்லது அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தியோ, பொது இடங்களிலோ நடக்கும் தற்கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே பதியப்படுகின்றன.

இதனை நீதிமன்றங்களும் சில நேரங்களில் உணர்ந்து கொண்டன. பஞ்சாப்பில் தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றில், ‘தற்கொலை முயற்சிக்கு தண்டனை என்பது கட்டாயமல்ல. அதை நீதிமன்றமே முடிவு செய்து கொள்ளும்' என நீதிமன்றம் தெரிவித்திருப்பது இதைத்தான் காட்டுகிறது. இன்னொரு வழக்கில் 'தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கச் சொல்லும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 நம் அரசியலமைப்புக்கு எதிரானது' என சொன்னது நீதிமன்றம். இது உச்ச நீதிமன்றத்தால் ஏற்கபடவில்லை என்றாலும் கூட, தற்கொலை முயற்சிப்பவர்களுக்கு தண்டனை அவசியமல்ல. அதனால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்த்தவே செய்தது.

இதன் அடுத்தக்கட்டம்தான், 'தற்கொலை முயற்சி இனி குற்றமாக கருதப்படமாட்டாது'என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருப்பது. தற்கொலை முயற்சிக்கு சிறைத் தண்டனை விதிக்கும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 இயற்கைக்கு பொருந்தாத சட்டம். அந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

"பொதுவாக மன வேதனையில் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு மேலும் தண்டனை விதிப்பது என்பது சரியாகாது. அவர்களின் துயரை துடைக்க வேண்டுமே தவிர, தண்டனை தரக்கூடாது. எனவே இது பொருந்தாத சட்டம். இதை நீக்க வேண்டும்" என தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக சட்ட கமிஷனே கடந்த 2008ம் ஆண்டில் இந்த சட்டப்பிரிவை நீக்க பரிந்துரைத்தது. இந்த கோரிக்கைகளும், பரிந்துரைகளும்தான் இப்போது சட்டப்பிரிவு 309 நீக்கப்பட உள்ளதற்கு முக்கிய காரணம்.

மத்திய அரசின் இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "ஏற்கனவே தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலை முயற்சிகளுக்கு தண்டனை இல்லை என்றால் அது தற்கொலைகளை அதிகரிக்குமே என்று சிலர் கேட்கக்கூடும். நிச்சயம் இல்லை. ஏனென்றால் தண்டனை ஒருவரை தற்கொலை முயற்சியில் இருந்து நிச்சயம் தடுக்காது. ஒருவர் மனரீதியாக சிக்கலுக்கு உள்ளாவது தான் தற்கொலை முயற்சிகளுக்கு காரணம். தன் உயிரையே இழக்க துணிந்து விட்டவர், நிச்சயம் தண்டனைக்கு பயந்து தற்கொலை முயற்சியை தள்ளிப்போட வாய்ப்பில்லை. எனவே இந்த சட்டம் நீக்கப்படுவது வரவேற்கத்தக்கது," என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

அதே நேரத்தில் தற்கொலைகள் தடுப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். தற்கொலைகள் ஏன்? எதற்கு நடக்கிறது என்பதை ஆய்வு செய்து, அதனடிப்படையில் தற்கொலை செய்து கொள்ள முயலுபவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் தற்கொலைகளை தடுக்கும். தற்கொலைக்கு முயல்பவர்களையும், தற்கொலைக்கு முயல ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் அது எதுவும் தற்கொலை முயற்சியை நியாயமாக்கி விடாது.

தற்கொலை முயற்சிகள் கண்டிக்கத்தக்கது. ஆனால் தண்டிக்கத்தக்கதல்ல!

- ச.ஜெ.ரவி

RGUHS All Set to Check Hi-tech Exam Cheating



BENGALURU: The Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) has decided to tackle hi-tech exam malpractices with stiff punishment and penalty.

Debarring students wearing customized T-shirts for two exams is among the stringent measures. The authorities have been flummoxed by the innovative cheating ways of students like having hi-tech copying devices fitted into the T-shirt. These proposals have been approved by the syndicate at its recent meeting.

According to the revised penalty clause, the copy of which is available with Express, the highest punishment fixed is for tampering of answer scripts — fine of `25,000 and debarring from taking three examinations, including the one in which the student is involved in malpractice.

Speaking to Express, Dr S Sachidanand, Registrar, Evaluation, said, “Following the recent cases of tampering of answer scripts, we have introduced it as one of the malpractices and fixed stringent punishment.”

As per the existing rules, those indulging in whatever crime/malpractice related to examinations had to appear before a committee which used to finalise the penalty amount.

The committee has no role to play under the revised norms and the university will follow the fixed punishment.

“The revised penalty/punishments will also cover the examinations concluded recently,” he said.

தற்கொலையும் தண்டனையும்!

Dinamani
தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமல்ல என்று விரைவிலேயே அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தியத் தண்டனையியல் சட்டப் பிரிவு 309-இன்படி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைத்தவர் மீது சட்டப்படி வழக்குத் தொடரலாம். அவருக்கு அதிகபட்சத் தண்டனையாக ஒரு வருட சிறையும், அபராதமும் அல்லது இரண்டுமே வழங்கப்படலாம் என்கிறது இந்தச் சட்டப் பிரிவு. இந்த சட்டப் பிரிவு விரைவில் அகற்றப்படப் போவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

கிறிஸ்தவ மதப்படி, இறைவனால் தரப்பட்ட உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை மனிதர்களுக்கு கிடையாது. அதனால், விக்டோரியா மகாராணி காலத்தில் பிரிட்டனில் தற்கொலை முயற்சி ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதே அடிப்படையில், இந்தியாவில் தண்டனைச் சட்டம் அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டு வரப்பட்டபோது, இங்கேயும் தற்கொலை முயற்சி தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய சட்ட ஆணையம் 1971 ஜூன் மாதம் தாக்கல் செய்த தனது 42-ஆவது அறிக்கையில், தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் என்கிற சட்டப் பிரிவை அகற்றப் பரிந்துரைத்திருந்தது. 1985-இல் தில்லி உயர்நீதிமன்றமும், 1987-இல் மும்பை உயர்நீதிமன்றமும், 1994-இல் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டபோது, சட்டப் பிரிவு 309 அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கருத்துத் தெரிவித்தன.

2008-இல் சட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தற்கொலை முயற்சியை கிரிமினல் குற்றமாகக் கருதுவது கூடாது என்று மீண்டும் பரிந்துரைத்தது. தற்கொலை முயற்சி என்பது பரிவுடனும், மனோதத்துவ சிகிச்சையுடனும் அணுக வேண்டிய ஒன்றே தவிர, தண்டனைக்குரியதாகக் கருதுவது மனிதநேயமாகாது என்று சட்ட ஆணையம் கருதியது.

சட்ட ஆணையத்தின் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் மாநில அரசுகளின் கருத்தைக் கோரியது. தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களும், நான்கு யூனியன் பிரதேசங்களும் தண்டனையியல் சட்டப் பிரிவு 309 அகற்றப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மத்திய அரசு தற்கொலையை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவிக்க இருக்கிறது.

அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரப்படி 2012-ஆம் ஆண்டில் 1,35,445 பேரும், 2013-ஆம் ஆண்டில் 1,34,799 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 24% பேர் குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்றும், தற்கொலை செய்து கொண்டவர்களில் 39.8% பேர் தூக்குப் போட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தேசிய அளவில், 2013-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நாளொன்றுக்கு 369 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தெரிகிறது. மகாராஷ்டிரத்தை (16,622) தொடர்ந்து தற்கொலையில் அதிகமாக ஈடுபடுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (16,601) என்கிறது புள்ளிவிவரம். மேலே குறிப்பிட்டதெல்லாம், தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் இதைப்போல பல மடங்கு அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மும்பை உயர்நீதிமன்றம் கூறியதுபோல வாழ வழியில்லாமல் அல்லது பிடிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஒருவரை, தற்கொலை முயற்சி என்கிற பெயரில் தண்டிப்பது மனிதாபிமானமாகாது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், தற்கொலை சட்டப்படி குற்றமில்லை என்றாகிவிட்டால், இன்றைய சமூக, பொருளாதாரச் சூழலில் சாதாரணமான பிரச்னைகளுக்குக்கூட மனிதர்கள், குறிப்பாக மாணவ - மாணவியரும், இளைஞர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டார்களா என்கிற கேள்வி எழுகிறது.

அரசியல் தலைமையின் பார்வை படுவதற்காக அல்லது அரசியல் காரணங்களால் உணர்ச்சி மேலெழுந்து தீக்குளிப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற நடவடிக்கைகள் சட்டப்படி பாதுகாப்புடன் நடக்கத் தொடங்குமே, அப்போது என்ன செய்யப் போகிறோம்?

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டவர்கள் மிகமிகக் குறைவு. பொதுவாக நீதிமன்றங்கள் அப்படிப்பட்டவர் களைக் கண்டித்து விடுதலை செய்வதுதான் வழக்கமாக இருக்கிறது.

தற்கொலை முயற்சிக்குத் தண்டனை என்பது மனிதாபிமானமற்றதுதான். ஆனால், தண்டனையே இல்லாமல் இருப்பது, தற்கொலை முயற்சிகளுக்கு ஊக்கமளிக்குமே, அதுதான் பயமாக இருக்கிறது.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...