Friday, February 6, 2015

வரி பாக்கி: எப்படியெல்லாம் வசூலிக்கிறாங்க...?!



சென்னை: சொத்துவரியை வசூலிக்க, திருநங்கைகளை அழைத்துவந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன்பு நடனமாட வைத்து, சென்னை மாநகராட்சி நூதன வசூலில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈக்காட்டுத் தாங்கலில் பன்னாட்டு நிறுவனத்தின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பெரும் பணம் படைத்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் அளவிலான அனைத்து வித வசதிகளோடும் இயங்கிவரும் இந்த ஹோட்டல், சென்னை மாநகராட்சிக்குச் சொத்துவரி செலுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று காலையில் உதவி வருவாய் அலுவலர் தமிழ் தலைமையில் அதிகாரிகள் ஓட்டலுக்குச் சென்றனர்.

ஹோட்டல் முன்பு தண்டோரா அடித்து திருநங்கைகளை நடனமாட வைத்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் சொத்து வரி கட்டாததற்கான நோட்டீசை வழங்கினார்கள்.

அவர்களுடன் ஹோட்டல் நிர்வாகிகள் சிலர் நேரில் வந்து சொத்து வரி குறித்துப் பேசினர்.அவர்களிடம் உண்மை நிலையை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கிய பின்னர், ஹோட்டல் நிர்வாகத் தரப்பினர் சொத்து வரிக்காக ரூ.33 லட்சத்து 90 ஆயிரத்துக்கு காசோலையைக் கொடுத்தனர்.

இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் , ‘‘நாங்கள் ஹோட்டலுக்கு இதுவரை சொத்துவரி பாக்கி வைத்ததே கிடையாது. சொத்து வரி செலுத்த மார்ச் மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆனால் அதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விட்டனர்’’ என்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சியின் உதவி வருவாய் அலுவலர் தமிழ், "சொத்து வரிக்கான ரசீது கொடுத்து 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும். 15 நாட்கள் தாண்டினால் இதுபோல நோட்டீஸ் கொடுத்து வரியை வசூலிப்போம். மும்பையில்தான் தண்டோரா போட்டு திரு நங்கைகளை நடனமாட வைத்து நட்சத்திர ஓட்டல்களில் சொத்து வரி வசூலிப்பார்கள். அதே பாணியில் தற்போது சென்னையிலும் தண்டோரா போட்டு திருநங்கைகளை நடனமாட வைத்து சொத்து வரிக்காக நோட்டீஸ் கொடுக்கிறோம்" என்றார்.

எப்படியோ..வரி பாக்கி வசூலானால் சரிதான்!

1999: திணறல் திலகம் தென்னாப்பிரிக்கா

ஆலன் டொனால்ட்

ஆயிரம் திறமைகளைக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தால்தான் வெற்றி கிடைக்கிறது. அது, 1999 உலகக் கோப்பையில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கும் பொருந்தும். அந்த அணிக்கு எப்போதுமே ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடித்தபடி இருந்தது.

இல்லாவிட்டால், ஆஸ்திரேலியாவை விட வலுவா னதாகக் கணிக்கப்பட்ட தென்னாப் பிரிக்காவைத் தொடர்ந்து இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றிருக்க முடியாது.

தென்னைப்பிரிக்கா வலுவான அணியாக இருந்தபோதிலும், உலகக் கோப்பையை பொருத்த வரையில் அதிர்ஷ்டம் இல்லாத, அணியாகவே இருந்துவருகிறது. 1992-ல் விந்தையான மழை விதியால், அரையிறுதி வாய்ப்பைப் பறிகொடுத்தது தென்னாப்பிரிக்கா.

நீ தவறவிட்டது கோப்பையை நண்பா!

1999-ல் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. ‘ஐஸ் மேன்’ எனப் பெயற்பெற்ற ஸ்டீவ் வா எப்போதும் போல் நெருக்கடியிலிருந்து அணியை மீண்டும் காப்பாற்றினார்.

272 என்னும் இலக்கை நோக்கி ஆடியபோது, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸி. அப்போது களமிறங்கிய ஆபத்பாந்தவன் ஸ்டீவ் வா, ஆட்டமிழக்காமல் 120 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல உதவினார்.

அவர் 56 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சினை கிப்ஸ் தவறவிட்டார். அப்போது அவரைப் பார்த்து, “நண்பா.. நீ தவறவிட்டது கேட்ச்சை அல்ல. உலகக் கோப்பையை” என்று ஸ்டீவ் வா சொன்னார். அதைப் போலவே அரையிறுதியில் தோற்று வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

அரையிறுதியில் தென்னாப் பிரிக்கா அணி சொதப்பி யதையும், லான்ஸ் குளூஸ்னர் என்ற அதிரடி வீரரின் ஆட்டத்தையும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஆனால், நெருக்கடி யான கட்டங்களில், எளிதில் நெருக்கடிக்குள்ளாகி, நம்ப முடியாத வகையில் சொதப்பிவிடு வதால் கிடைத்த ‘சோக்கர்ஸ்’ என்னும் அடைமொழி இன்றளவும் தொடர்கிறது.

குளூஸ்னர், யார் எப்படிப் போட்டாலும், ராக்கெட் வேகத்தில் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார். 4 போட்டிகளில் ஆட்டநாயகன் பரிசினைப் பெற்றார். அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். ஆனால் ஆஸ்திரேலி யாவுக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் நிலை யில் இருந்த தென்னாப்பிரிக்கா, திடீரென்று சொதப்பி ஆட்டத்தை ‘டை’ செய்து இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் டேமியன் ஃப்ளெமிங்கை எதிர்கொண்டார் ‘அதிரடி’ குளூஸ்னர். மறுமுனையில் கடைசி ஆட்டக்காரரான டொனால்ட். குளூஸ்னருக்கு 9 ரன்கள் மிகச் சாதாரணம் என அனைவரும் நினைத்தனர்.

அதுபோலவே, முதல் இரு பந்துகளில் பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்தார் குளூஸ்னர். 4 பந்துகளில் 1 ரன் தேவை. தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிவிடும் என ஆஸ்திரேலிய வீரர்களே நம்பத் தொடங்கிய நேரத்தில் அது நிகழ்ந்தது.

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை அடித்துவிட்டு, வெற்றி ரன்னுக்கா குளூஸ்னர் ஓடினார். டொனால்டோ, அவரைப் பார்க்காமல் பந்தை பார்த்தபடி இருந்தார். குளூஸ்னர் ஓடிவந்துவிட்டதைக் தாமதமாகவே பார்த்த டொனால்ட், அலறி அடித்துக்கொண்டு ஓடினார். வழியில் தடுமாறி மட்டையைக் கீழே போட்டுவிட்டார். மார்க் வா, பந்தினை பவுலரிடம் வீசினார்.

அவர் பதற்றப்படாமல் கீப்பர் கில்கிறிஸ்ட்டிடம் வேகமாக அதை உருட்டி விட்டார். அதைப் பிடித்து டொனால்ட்டை ரன்-அவுட் செய்தார் கில். ஆட்டம் சமனில் முடிந்தது. நிகர ரன் விகித அடிப்படையில் இறுதியை அடையும் வாய்ப்பை ஆஸியிடம் தென்னாப்பிரிக்கா இழந்தது. ‘சோக்கர்ஸ்’ (திணறல் திலகம்) என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது. இன்றுவரை அந்த அணியால் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. இந்தப் பட்டத்தையும் உதற முடியவில்லை.

சச்சினுக்கு வந்த சோதனை

1999 உலகக் கோப்பையை இந்தியா பெரும் நம்பிக்கையோடு எதிர்கொண்டதற்குக் காரணம் மட்டை அணியின் மும்மூர்த்தி களான சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோர்தான்.

இவர்களுக்குத் துணையாக சடகோபன் ரமேஷ், முகம்மது அசருதீன், அஜய் ஜடேஜா ஆகியோரும் நயன் மோங்கியாவும் ஆல்ரவுண்டர் அஜித் அகர்க்கரும் இருந்ததால் இந்தியாவின் மட்டை வலு அபாரமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும்.

இத்தனை வலிமை இருந்தும் இந்தியாவால் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெல்ல முடியவில்லை. எல்லாத் துறை களிலும் அபாரத் திறமை பெற்ற தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற தில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஜிம்பாப்வேயிடம் தோற்றுப் போனதுதான் இந்தியாவின் பின்ன டைவுக்குக் காரணமாக அமைந்தது.

இந்த இரு போட்டிகளுக்கு இடையே ஒரு அசம்பாவிதம் நடந்தது. சச்சினின் அப்பா ரமேஷ் டெண்டுல்கர் காலமாகிவிட்ட செய்தி வந்தது. சச்சின் உடனே கிளம்பி மும்பைக்குச் சென்றார். ஜிம்பாப்வே போட்டியில் அவர் ஆடவில்லை.

டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்த இந்தியா, நன்றாகவே தொடங்கினாலும் தொடர்ந்து சரியாகப் போட வில்லை. ஜிம்பாப்வே 252 ரன்களை எடுத்தது. அன்று இந்தியாவின் பெரிய வில்லன் என்றால் அது உபரி ரன்கள்தான். 21 வைட், 16 நோபால்களுடன் வந்த 51 உபரி ரன்கள் ஜிம்பாப்வேக்கு போனஸாக அமைந்தன. கடைசியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

அடுத்த போட்டி கென்யாவுடன். அதற்குள் திரும்பிவிட்ட சச்சின் அந்தப் போட்டியில் சதம் அடித்தார். அடித்துவிட்டுக் கண்களில் நீர் மல்க வானத்தைப் பார்த்தார். அன்று முதல் ஒவ்வொரு சதம் அடித்த பின்பும் அதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இலங்கையுடனான போட்டியில் கங்குலியும் (183) திராவிடும் (145) அற்புதமாக ஆடியதில் இந்தியா வென்றது. தட்டுத் தடுமாறி சூப்பர் சிக்ஸுக்கும் சென்றது. ஆனால் சூப்பர் சிக்ஸில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோற்று வெளியேறியது.

கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டி, பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டி ஆகிய இரண்டைத் தவிர வேறு எதிலும் இந்தியா சிறப்பாக ஆடவில்லை என்பதால் இந்தியா மறக்க விரும்பும் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒன்றாக இது அமைந்துவிட்டது.

களத்தில் இயர்போனில் பேசிய குரோன்யே

உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புமிக்க மிக வலுவான அணியாகப் பல்வேறு திட்டமிடல்களுடன் இங்கிலாந்து வந்திருந்தது தென்னாப்பிரிக்கா. இந்தியாவுடனான போட்டியில் ஸ்லிப்பில் நின்றிருந்த கேப்டன் ஹன்ஸி குரோன்யே காதில் இயர் போனைப் பொருத்தி, அதில் பயிற்சியாளபர் பாப் உல்மரின் கட்டளைகளைக் கேட்டுக்கொண்டி ருந்தார். அது கண்டறியப்பட்டு, உடனடியாக, போட்டியின்போதே அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

வங்கதேசம், ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி

1999 போட்டிகளில், வித்தியாச மான சிகையலங்காரத்துடன் தோன்றிய ஜிம்பாப்வே வேகப் பந்து வீச்சாளர் ஹென்றி ஒலங்காவை யாரும் மறந்திருக்க முடியாது.

லீக் போட்டியில், 253 ரன் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருந்தபோது, 45-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா 3 ரன்னில் தோற்கக் காரணமாக அமைந்தவர். பின்னாளில், ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின்போது அவரை சச்சின் துவம்சம் செய்தது வேறு விஷயம்.

இதுபோல், முதல் முறையாக போட்டியில் பங்கேற்ற வங்கதேசம், வலுவான பாகிஸ்தான் அணியை, 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி, உலகக் கோப்பையையே வென்றது போன்ற களிப்பில் நாடு திரும்பியது.

17/5 என்ற நிலையில் முதல் பந்தையே பவுண்டரி அடித்த கபில்: 1983 உலகக்கோப்பையை நினைவுகூரும் ஸ்ரீகாந்த்



ஆன்டி ராபர்ட்ஸ் பந்தை 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்கொயர் டிரைவ் ஆடி அசத்திய ஸ்ரீகாந்த். | கோப்புப் படம்.

ஆன்டி ராபர்ட்ஸ் பந்தை 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்கொயர் டிரைவ் ஆடி அசத்திய ஸ்ரீகாந்த். | கோப்புப் படம்.


1983 உலகக்கோப்பை போட்டிகளில் பலமான அணிகளை வென்று கோப்பையையும் முதன் முதலாக கைப்பற்றிய அந்தத் தொடரை முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த முழு பேட்டியில் கூறியிருப்பதாவது:

"உலகக்கோப்பை வெற்றி நாங்கள் சிறந்த அணி என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் அந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாகும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஓல்ட் டிராபர்டில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்றது எங்களிடையே பெரிய தன்னம்பிக்கையை விதைத்தது.

அப்போதெல்லாம் மேற்கிந்திய தீவுகள் என்பது மிகப்பெரிய அணி, விவ் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்ட் உள்ளிட்ட மகா பேட்ஸ்மென்களும், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், ஜெஃப்ரி டியூஜான் போன்ற நல்ல வீரர்களும் இருந்தனர். மேலும் பந்துவீச்சு அச்சுறுத்தலானது. முதல் போட்டியில் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தோம், அதுதான் அந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை நம்பிக்கையின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

நம்மிடம் வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர்கள் என்ற வகையில் மதன்லால், ரோஜர் பின்னி, இருந்தனர். அவர்களது பாணி பந்துவீச்சுக்கு இங்கிலாந்து மிகவும் பொருத்தமாக அமைந்தது. பின்னி அந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலராக சிறப்புற்றார். இவர்கள் பேட்டிங்கும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும், சிறந்த பேட்ஸ்மென் மொகீந்தர் அமர்நாத் இருந்தார். அவரது பந்துவீச்சும் மதிப்பு மிக்கதாக இருந்தது. கீர்த்தி ஆசாத்தும் ஆல்ரவுண்டரே.

கபிலின் ஜிம்பாப்வேயிற்கு எதிரான 175 ரன் இன்னிங்ஸ் பற்றி...

ஆனால், அனைத்திற்கும் மேலாக கபில்தேவ், நான் பார்த்ததில் சிறந்த ஆல்ரவுண்டர் கபில்தான். பவுலிங், பேட்டிங், பீல்டிங் என்று அனைத்திலும் அவர் மிகத்திறமை வாய்ந்தவர். அவர் மிகப்பிரமாதமான ஸ்விங் பவுலர், ஆக்ரோஷமான பேட்ஸ்மென் மற்றும் சிறந்த ஒரு தடகள மனோபாவம் உள்ள பீல்டர்.

அவரது கிரிக்கெட் வாழ்வின் 2ஆம் பகுதியில் ஸ்லிப்பில் சில அதிர்ச்சிகரமான கேட்ச்களை கபில் பிடித்துள்ளார். இம்ரான் கூட பீல்டிங்கில் சிறந்தவர் என்று கூற முடியாது. ஆனால் கபில் எதைச் செய்தாலும் பிரமாதப்படுத்தக் கூடியவர்.

ஜிம்பாப்வேயிற்கு எதிராக நாம் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தோம். அப்போது பெரும்பாலும் பேட்ஸ்மென்கள் தடுத்து ஆடவே செய்வர். ஆனால் கபில் அந்த நிலையிலும் தான் எதிர்கொண்ட முதல் பந்தை உள்கள பீல்டிற்கு வெளியே தூக்கி பவுண்டரி அடித்தார். அதன் பிறகு உலகின் தலைசிறந்த ஒருநாள் இன்னிங்ஸை அவர் ஆடினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அன்று பிபிசி ஸ்ட்ரைக்கில் இருந்ததால் அதன் வீடியோ இல்லாமல் போனது.

அப்போதெல்லம் நிறைய மூடநம்பிக்கைகள் இருந்தன. ஜிம்பாப்வேயிற்கு எதிராக அன்று கபில் ஆடிக்கொண்டிருந்த போது, ஓய்வறைக்கு வெளியே நானும் என் மனைவி வித்யாவும் நின்று கொண்டிருந்தோம். கபிலின் அந்த இன்னிங்ஸ் முழுதும் நாங்கள் அங்கேயே நிற்க நேரிட்டது. ஒரு இன்ச் கூட நகரவில்லை, காரணம் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் கபில் அவுட் ஆகி விடுவார் என்று நினைத்தோம். அன்றைய தினம் நல்ல குளிர், காற்றும் அடித்துக் கொண்டிருந்தது. எங்களால் அங்கு நிற்க முடியவில்லை. ஆனால் கபிலின் அன்றைய ஆட்டம் அனைத்தையும் மறக்கடித்துவிட்டது.

நாங்கள் கடைசி வரை ஆடினோம், கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர், நல்ல பேட்ஸ்மெனும் கூட, அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்கவில்லை என்றே நான் கூறுவேன். அவர் அந்தத் தொடரில் தனது அனைத்து முயற்சிகளையும் பங்களிப்பு வாயிலாக செய்தார்.

தனது ஹீரோ விவ் ரிச்சர்ட்ஸை முதன்முதலில் சந்தித்தது பற்றி...

அணிகளை பிரிட்டீஷ் ராணி விருந்துக்கு அழைத்திருந்த தருணம் அது. அப்போது விவ் ரிச்சர்ட்ஸிடம் சென்று நானே என்னை அறிமுகம் செய்து கொண்டேன், அவர், ‘வெரி குட் மேன், குட் லக் மேன்’ என்றார். அந்தச் சந்திப்பை என்னால் மறக்க முடியாது.

ரிச்சர்ட்ஸுடன் பேசினேன், டெனிஸ் லில்லி பந்தை எதிர்கொண்டேன், உலகக்கோப்பைப் போட்டிகளை பார்வையிட வந்த குண்டப்பா விஸ்வநாத்துடன் பேசினேன்.

இறுதிப் போட்டியில் தனது 38 ரன் பற்றி...

ஜொயெல் கார்னர் பந்துகள் விளையாட முடியாத தன்மையில் இருந்தது. பிட்சில் ஈரப்பதம் இருந்ததால், ஸ்விங், பவுன்ஸ் என்று கடினமாக இருந்தது. சுனில் கவாஸ்கர் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்தோம், ஆனால் மொகீந்தர் அமர்நாத்தின் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை அளித்தது. நான் ஆண்டி ராபர்ட்ஸ் பந்தை ஸ்கொயர் டிரைவ் ஆடும்போது விஸ்வநாத்தை நினைத்தேன், ஒரு கலைஞன் போல் அவர் அந்த ஷாட்டை ஆடுவார்.

ரிச்சர்ட்ஸ் கேட்சை கபில் பிடித்தது பற்றி...

ரிச்சர்ட்ஸ் அன்று ஆடிய ஆட்டம் என்ன நினைக்க வைத்தது என்றால் தேநீர் இடைவேளையுடன் ஆட்டம் முடிந்துவிடும் என்றே. அப்போது மதன்லால் வீசிய பந்து ஷாட் பிட்ச் ஆனது. ஆனால் ரிச்சர்ட்ஸ் அதனை சரியாக மட்டையுடன் தொடர்பு படுத்தவில்லை. பந்து மேலே எழும்பியது. கபில்தேவ் பின்பக்கமாக, பக்கவாட்டில் வேறு ஒடிக்கொண்டிருந்தார். டீப் ஸ்கொயர் லெக் அருகே பந்து இறங்கிக் கொண்டிருந்தது, யாஷ்பால் சர்மா வேறு பந்தைப் பிடிக்க அருகில் வந்து கொண்டிருந்தார். ஆனால், கபில் “இது என்னுடையது” என்று கத்தினார். கடும் நெருக்கடியில் மிகச்சிறந்த கேட்ச் ஒன்றை கபில் பிடித்தார். உலகக்கோப்பை வெற்றி கேட்ச் அதுவே.

வரலாற்று வெற்றிக்கு பிறகு ஹோட்டல் விடுதியில் இந்திய வம்சாவளி ரசிகர்கள் பாட்டு, டான்ஸ் என்று களைகட்டினர். அது ஒரு நம்பமுடியாத உணர்வை தந்தது.

நாங்கள் சிறந்த பீல்டிங் அணியாக இருந்தோம், உலகக்கோப்பை முழுதும் ஒரே ஒரு கேட்சைத்தான் விட்டோம். முதல் போட்டியில் மைக்கேல் ஹோல்டிங்குக்கு மொகிந்தர் அமர்நாத் ஸ்கொயர் லெக்கில் விட்ட கேட்ச்தான் அது. அதன் பிறகு ஒரு கேட்சைக் கூட விடவில்லை. நான் கவர் மற்றும் கவர் பாயிண்டில் பீல்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்து வந்தேன்.

அணி நல்ல செட்டில்டு அணியாக இருந்தோம், திலிப் வெங்சர்க்கார், ரவிசாஸ்திரி போன்ற நல்ல வீரர்களுக்குமே கடைசியில் அணியில் இடமில்லாமல் போனது.

1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மினி உலகக்கோப்பையை வென்றது பற்றி...

ஆஸ்திரேலியாவில் பிட்ச்களில் பவுன்ஸ் அதிகம் இருந்ததால் நான் பந்துகள் எழும்பும் இடத்திலிருந்தே டிரைவ் ஆடத் தொடங்கினேன். நான் கட் ஷாட், புல் ஷாட், ஹூக் ஷாட் என்று அனைத்தையும் விளையாடினேன். ஆஸ்திரேலியாவில் பேட் செய்த தருணங்களை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.”

என்ற ஸ்ரீகாந்த் அந்தத் தருணங்களைப் பற்றி பேசும்போது அவரது கண்களில் இன்னமும் அதே மகிழ்ச்சி, சிரிப்பு தெரிந்தது.

தமிழில்: ஆர்.முத்துக்குமார்.

துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம்

‘நல்லவன் வாழ்வான்’ படத்தில்

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜா.

அந்நாளில் தமிழகம் தாண்டி இலங்கை, ரங்கூன், பினாங்கு ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்றது டி.எஸ். நடராஜனின் ‘என் தங்கை’ என்ற நாடகம். அதை அப்படியே தழுவி சினிமாவாக எடுக்கப்பட்டது. சி.எல். நாராயணமூர்த்தி, எம்.கே.ஆர். நம்பியார் ஆகியோர் திரைப்படமாக இயக்கிய அந்த நாடகத்தில், அண்ணன் வேடத்தில் நாயகனாக நடித்தவர் சிவாஜி கணேசன்.

அசோகா பிக்சர்ஸ் இந்த நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. அந்த நாடகத்தில் நடித்துவந்த சிவாஜியையே படத்திலும் ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் ‘பராசக்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

“ பராசக்தி கதையிலும் அண்ணன் தங்கை பாசம் இருக்கிறது. ‘என் தங்கை’யிலும் அதுதான் கருப்பொருள். எனவே இதில் சிவாஜி மீண்டும் நடிப்பதைவிட எம். ஜி. ராமச்சந்திரன் பொருத்தமாக இருப்பாரே” என்றார் பெருமாள் முதலியார். அதை ஏற்று எம்.ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தனர். கதாநாயகனுக்கு அடுத்து கதையைத் தோளில் சுமந்து செல்வது தங்கையின் வேடம்.

ஆனால் பொருத்தமான நடிகை கிடைக்கவில்லை. அதனால் ஒரு புதுமுகத்தையே தேர்வுசெய்துவிடுவது என்று முடிவு செய்தனர். அப்போது மயிலாப்பூரில் புகழ்பெற்ற நாட்டியக் கலாசேத்திரமாக இருந்தது வழுவூர் பி. ராமையாப் பிள்ளையின் நடனப்பள்ளி. அதன் ஆண்டு விழாவில் அவருடைய மாணவி பி.இ. சரோஜாவின் நாட்டியத்தைக் கண்டு இவர்தான் தங்கை மீனாவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அறிமுகப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. பராசக்திக்கு முன்பே வெளியாகி எம்.ஜி.ஆருக்கும் புகழைக் கொண்டுவந்தது. பார்வையற்ற பெண்ணாக நடித்து அறிமுகப் படத்திலேயே பெரும் புகழ்பெற்ற இ. வி. சரோஜா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

என்கண் தந்த கலைச்செல்வி

இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பழம்பெருமை மிக்க, பாடல்பெற்ற முருகன் தலமாக இருக்கும் ‘என்கண்’தான் இ.வி.சரோஜா பிறந்து வளர்ந்த ஊர். வேணு பிள்ளை ஜானகி அம்மையார் தம்பதியின் இரண்டாவது வாரிசாகப் பிறந்த இவருக்கு சிறு வயதுமுதலே நடனத்தில் ஆர்வம். இரண்டு வயதுமுதல் அம்மாவிடம் நடனம் கற்றுக்கொண்டு பிரகாசித்தார்.

அப்போது மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் பரதக் கலையின் வித்தக மையமாக விளங்கியது. அதற்குக் காரணம் வழுவூர்ப் பாணி நாட்டியம் டெல்லிவரை புகழ்பெற்று விளங்கியது. காண்போரை மயக்கும் லயசுத்தமும், அங்க சுத்தமும் கொண்டதே அதற்குக் காரணம். அதை உருவாக்கியவர் நாட்டிய மேதை நட்டுவனார் பி. ராமையாபிள்ளை.

திரையுலகில் அன்று முத்திரை பதித்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரின் மாணவிகளே. பதினோரு வயதில் இ.வி. சரோஜாவின் திறமையைக் கண்டு, அவரைத் தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டு முறைப்படி நடனம் பயிற்றுவித்தார் வழுவூரார். ஆசானின் பெயரைக் காப்பாற்றும் விதமாக 14 வயதில் அரங்கேற்றம் செய்து 16 வயதுக்குள் 100 மேடை நிகழ்ச்சிகளில் ஆடிச் சாதனை புரிந்தார் சரோஜா.

மயக்கிய மான் நடனம்

அறிமுகப் படம் தந்த புகழ் அவரை மடமடவென்று புகழ்பெற்ற நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளில் ஒல்லியான உடலமைப்பு கொண்ட கதாநாயகிகள் அபூர்வம். இ.வி. சரோஜாவுக்கு ஒல்லியான உடற்பாங்குடன் அகலமான நெற்றி, நீளமான முகம், கருணையும் கவர்ச்சியும் இணைந்த கண்கள், கொவ்வை இதழ்கள், குளிர் சிரிப்பு என்று ரசிகர்களைத் தன் கண்ணியமான அழகினால் கவர்ந்தார்.

வழுவூர் பாணி நடனத்தை சினிமாவுக்கான நடத்துடன் இணைத்து ஒவ்வொரு நடன அசைவையும் இவர் நளினமாக வெளிப்படுத்திய பாங்கில் ரசிகர்கள் உருகிப்போனார்கள். இளம் மான்போல் துள்ளித் துள்ளி பல படங்களில் இவர் ஆடிய நடனம், ரசிகர்களின் இதயத்தை வருடியது.

பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கிய திரைக்கதாசிரியர் ஏ. பி. நாகராஜன் கதை, வசனம் எழுதி நடித்த ‘பெண்ணரசி’ படத்தை வேணுசெட்டியாரின் தயாரிப்பில் இயக்கினார் கே.சோமு. அதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துத் தனது திறமையான நடனத்தால் கவர்ந்தார்.

பின்னர் டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி. ஆர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த ‘குலேபகாவலி’ படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் “சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்க ஜவாபு” என்ற பாடலுக்கு பாடி ஆடிய நடனம், சரோஜாவைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.

பின்னர் எம்.ஜி. ஆருக்கு வெள்ளிவிழா காவியமாக அமைந்த ‘மதுரை வீரன்’ படத்தில் கதாநாயகி பொம்மியின் (பானுமதி) தோழியாக நடித்தார். அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிடும் புள்ளிமானைத் துரத்திவரும் மதுரைவீரன் எம்.ஜி.ஆரை “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” என்று பகடி செய்யும் விதமாக இ.வி.சரோஜா பாடி ஆடிய நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இதேபடத்தில் பானுமதி, பத்மினி ஆகியோர் ஆடிய நடனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இ.வி. சரோஜாவின் நடனமே ரசிகர்களைத் திரையரங்குக்குத் திரும்பத் திரும்பச் சுண்டி இழுத்தது. இ. வி. சரோஜாவின் நடனக் காட்சி இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. இதனால் 50க்கும் அதிகமான படங்களில் அவரது நடனம் கதையில் பொருத்தப்பட்டது.

மதுரை வீரனுக்குப் பிறகு ‘அமர தீபம்’, ‘ பாவை விளக்கு’, ‘கற்புக்கரசி’, ’எங்க வீட்டு மருமகள்’, ‘தங்கப் பதுமை’, ‘ நீலமலைத் திருடன்’ என்று சரோஜாவுக்குப் புகழைச் சேர்த்த படங்கள் பல. நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கதாநாயகி ஆக முடியாது என்ற மாயையையும் சரோஜாவே முதலில் உடைத்தார்.

சந்திரபாபுவுடன் மூன்று படங்களில் இணையாக நடித்த அவர், பிறகு எம். ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்குப் படவுலகில் அக்னிநேனி நாகேஷ்வரராவ் என முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பதினைந்து வயதில் தொடங்கி 26 வயதுவரை மட்டுமே நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நடனத் தாரகை

புகழின் உச்சியில் இருந்தபோது, இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவைத் திருமணம் செய்துகொண்டார். தன் சகோதரர் இ.வி. ராஜனுடன் இணைந்து படநிறுவனம் தொடங்கி ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தைத் தயாரித்தார். ப. நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், இ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் சரோஜாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை கிடைத்தது. ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது. சரோஜா ராமண்ணா தம்பதிக்கு நளினி என்ற ஒரே மகள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நடனத்தைத் தன் கண்ணென நேசித்ததால் ‘மனோன்மணியம்’ காவியக் கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து இந்தியா முழுவதும் நடத்திக் காட்டி நடனத்திலும் தனது பங்களிப்பைச் திறம்படச் செய்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். ஆனால் நடனத்தில் அவர் வைத்த ஒவ்வொரு அடியும் அமரத்துவம் பெற்றது.

படங்கள் உதவி: ஞானம்

லிங்கா: சிக்கலின் பின்னணி



சினிமாவில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். ஆனாலும், வெற்றி தரும் பரவசத்தைவிடத் தோல்வி கொடுக்கும் படிப்பினைதான் சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும். ஆனால், இப்போது சினிமாவில் நடக்கும் கூத்து தனி ரகம். ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதே இங்கே திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

அந்த விதத்தில் சமீபத்தில் வெளியான விஜயின் ‘கத்தி’, ரஜினியின் ‘லிங்கா’, விக்ரமின் ‘ஐ’ ஆகிய மூன்று முக்கியப் படங்களின் வசூல் விவரங்களே பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இந்த மூன்று படங்களின் வெற்றி - தோல்வி பற்றி அலசினால் அது இன்றைய தமிழ் சினிமா வசூல் களத்தின் நிஜமான நிலவரமாக இருக்கும்.

இந்த மூன்று படங்களையும் ஆவலுடன் பார்த்த ரசிகர்களின் மனநிலை என்ன? ‘கத்தி’ வெற்றி; ‘ஐ’ அளவான வெற்றி; ‘லிங்கா’ சுமார்! தங்களுக்கென பெரிய அளவில் ரசிகர்களை வைத்திருப்பவர்கள் ரஜினி, விஜய் இருவரும். விக்ரம் இயக்குநர் ஷங்கருடன் கைகோத்துக் கொண்டதால் அவருக்கும் ரசிகர்கள் அளவில் சமபலமே.

ஆனாலும், கதை, படமாக்கியவிதம், திரைக்கதையின் சுவாரஸ்யம் என்கிற விதங்களில் ரசிகர்களின் கணிப்பு ‘கத்தி’, ‘ஐ’ படங்களுக்குச் சாதகமாகவும், லிங்காவுக்குப் பாதகமாகவும் அமைந்திருக்கிறது.

அடுத்து விநியோகஸ்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? ‘கத்தி’, ‘ஐ’ ஆகிய படங்கள் எங்களுக்கு லாபம்தான். ‘கத்தி’ படத்தின் வியாபாரம் மற்றும் வசூலை ‘துப்பாக்கி’ படத்தோடு ஒப்பிட்டால் கம்மிதான். ஆனால், படம் வெளியான தீபாவளி தினத்தில் போட்டிக்கு வேறு படங்கள் இல்லை.

ஆகையால் ‘கத்தி’ மிகப் பெரிய வசூல் செய்தது. தயாரிப்பாளருக்கும், எங்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல லாபம். ‘ஐ’ படமும் ஓரளவுக்கு லாபம்தான். காரணம், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் வியாபார உத்தி.

கம்மியான விலைக்கு நேரடியாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கொடுத்தார் ரவிச்சந்திரன். இதனால் அதிகத் திரையரங்குகள் கிடைத்தன. பிரம்மாண்ட வசூல் இல்லை என்றாலும், முதல் போட்டவர்களைக் காப்பாற்றிய படமாக ‘ஐ’ இருந்தது.

‘லிங்கா’ படத்தில் எல்லாமே தலைகீழ். விளம்பரம், வியாபாரம் எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தாலும், அடுத்தடுத்து அந்தப் படம் கைமாறிய விதம்தான் கவலைக்குரியது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கையிலிருந்து ஈராஸ்... அங்கிருந்து வேந்தர் மூவிஸ்... பிறகு விநியோகஸ்தர்கள்... கடைசியாகத் திரையரங்க உரிமையாளர்களுக்குப் போனது படம். ஒவ்வொருவரும் தங்களுக்கு லாபம் பார்க்க நினைத்து, அநியாயத்துக்குப் படத்தின் விலையை ஏற்றினார்கள்.

ரஜினி படம் ரூ.5 கோடி வியாபாரமாகும் ஏரியாவில் விலை ரூ.8 கோடியானது. ஆனால், இந்த அளவுக்கு வசூல் இல்லை. சரியான விலைக்குக் கைமாறியிருந்தாலே இந்த நிலை வந்திருக்காது’ என்பது சில முன்னணி விநியோகஸ்தர்களின் கருத்து.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தரிடம் இது குறித்துக் கேட்டபோது “‘கத்தி’ வெளியான தீபாவளி நாளில் விஷாலின் ‘பூஜை’யைத் தவிர்த்துப் பெரிய போட்டியே இல்லை. சரியான நேரத்தில் வெளியிட்டதும், ஒரு சில சர்ச்சைகளும், நல்ல கதையும் ‘கத்தி’யைக் காப்பாற்றி, முதல் போட்டவர்களையும் காப்பாற்றிவிட்டது.

‘ஐ’ விஷயத்திலும் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ‘ஐ’ நஷ்டமான படம்தான். விநியோகஸ்தர்களுக்குத் தோல்வியான படம். என் நண்பர் திருச்சி விநியோக உரிமையை வாங்கினார். 5 கோடி 40 லட்சம் வாங்கியவருக்கு 60 லட்சத்தில் இருந்து 75 லட்சம் வரை இழப்பு வரும் நிலை. பெரிய அளவில் உருவாகியிருந்த எதிர்பார்ப்பை ‘ஐ’ பூர்த்தி செய்யவில்லை.

5 கிலோ தூக்க முடிந்த ஒருவர் தலையில் 10 கிலோவை ஏற்றிவைத்த கதைதான் ‘லிங்கா’ விஷயத்தில் நடந்தது. அந்தப் படத்தின் பிரம்மாண்ட விளம்பரத்துக்கும், வியாபாரத்துக்கும் மிகப் பெரிய வசூல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரஜினி படம் என்று உள்ளே வந்தவர்களுக்குப் படம் பிடிக்கவில்லை. அதனால் பெரிய நஷ்டம்” என்றார் மிக வெளிப்படையாக.

மொத்தத்தில், கத்தி - லாபம்; ஐ - எதிர்பார்த்த லாபம் இல்லை. லிங்கா - பெரிய நஷ்டம் என்பதுதான் உண்மை நிலவரம். நட்சத்திர நடிகர்கள் நடித்தாலும் படம் பெரிதாகப் போகாததற்கு வியாபார விஷயங்கள் முக்கியக் காரணங்கள் என்றாலும், மக்களை ஈர்க்கும் கதையோ, காட்சிகளோ இல்லாததுதான் உண்மையான காரணம். படத்தின் விளம்பரத்துக்காக யோசிக்கும் நேரத்தில் பாதியாவது கதைக்கு யோசிக்கலாமே என்பதுதான் ரசிகனின் எண்ணம்.

‘உப்பில்லாத உப்புமாவுக்கு ஒன்பது தட்டாம்’ என்பார்கள் கிராமத்தில். பிரம்மாண்ட விளம்பரங்களும், நட்சத்திர அடையாளங்களும் உரிய கதையில்லாமல் தடுமாறும்போது உப்பு இல்லாத உப்புமா கதைதான். நல்ல கதையும், கைக்கு அடக்கமான விற்பனையும், வெளியீட்டு நேரத்தைக் கணிக்கும் நேர்த்தியும் அமைந்தால், நிச்சயம் பெரிய நஷ்டம் என்னும் பேச்சுக்கே இடமிருக்காது என்பது வசூல் களம் கூறும் உண்மை.

பிரச்னை நகையல்ல!

மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது விலை உயர்ந்த நகைகளை அணிந்துவரக் கூடாது, செல்லிடப்பேசி கொண்டு வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு மாணவி தன் வகுப்புத் தோழியின் காதணிக்கு ஆசைப்பட்டு, அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த நேரத்துக்கான அதிரடி நடவடிக்கையாக இருக்கலாமே தவிர, இன்றைய பள்ளிச் சூழலுக்கும் வளர் இளம் பருவம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்க முடியாது.

உறவினரை, மனைவியை, நண்பனை ஆத்திரத்தால், பொறாமையால் இறந்து போகும் நிலைக்கு காயப்படுத்தும் சம்பவங்களில் பெரும்பாலானோர் செய்யக்கூடியது, நகைகளை, உடைமைகளை எடுத்து மறைத்து, அந்தக் கொலையை யாரோ நகைக்காக செய்ததுபோல திசைதிருப்புவதுதான். வெறும் காதணிக்காக சக மாணவியைக் கொன்றிருக்கிறார் என்பது, முதல் தகவல் மட்டுமே. உண்மையில் அவர்களுக்குள் எத்தகைய நட்பு இருந்தது, அந்த நட்பு எவ்வாறு பகைமையானது, எதனால் மரணம் நேர்ந்தது என்று பல கோணங்களில் விசாரிக்க வேண்டிய வழக்கை, வெறும் காதணிக்காக கொலை என்று முடிவு செய்துவிட முடியாது.

இன்று மாணவர்கள் கொண்டு செல்லும் ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசி விலை மிக அதிகம். ஏறக்குறைய எல்லா மாணவர்களும் வைத்திருக்கிறார்கள். இன்று ஒரு 100 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தின் விலை சுமார் ரூ.60,000. பல மாணவர்கள், குறிப்பாக, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில்தான் வலம் வருகின்றனர். இன்றைய வளர் இளம் பருவத்தினர் அனைவரும் ஏ.டி.எம். அட்டை வைத்திருக்கின்றனர். பல மாவட்டங்களில் கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கவே செய்கிறது. வெறும் நகை, பணம், வாகனம், செல்லிடப்பேசி இவற்றுக்காக மட்டுமே சக மாணவனையோ, மாணவியையோ கொலை செய்ய முடியும் என்றால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் கொலைக்களமாகத்தான் இருக்க வேண்டும். உண்மை நிலை அதுவல்ல.

இன்றைய வளர் இளம் பருவ மாணவர்களிடம் உள்ள சிக்கல், அவர்களது இனம் புரியா உணர்ச்சிக் கொந்தளிப்புதான். இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு ஒருதலைக் காதலாக, தன் அந்தரங்கத்தில் அடுத்தவர் தலையீட்டின் காரணமாக, கேலியின் விளைவாக, பதிலுக்குப் பதில் கொடுக்கும் ஆக்ரோஷமாக இருப்பதுதான் பெரும்பாலும் இளம் சிறார்கள் குற்றத்தில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. இந்தச் சிக்கலை உருவாக்கக்கூடிய, வன்மம் விளையும் இடமாக பள்ளி வளாகம் இருப்பதால், இந்த உணர்வுக் கொந்தளிப்பை நெறிப்படுத்தி, அமைதிகொள்ள செய்யும் இடமாகவும் பள்ளி வளாகம்தான் இருக்க முடியும்.

வளர் இளம் பருவத்தினரின் வன்மத்துக்கு அடிப்படைக் காரணம் தாங்கள் காட்டிக் கொடுக்கப்படுவதும், தங்கள் அந்தரங்கத்தில் பிறர் தலையிடுவது அல்லது அதைத் தெரிந்துகொண்டு தங்களை மிரட்டுவதும்தான். கல்லூரி வளாகங்களில் நடக்கும் கொலைகளுக்கான அடிப்படைக் காரணமே இவைதான். இதே காரணங்கள் இப்போது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகங்களிலும் பரவத் தொடங்கிவிட்டன. இந்த வகையில், உயர்நிலைப் பள்ளிகள் இளநிலைக் கல்லூரிகளாக மாறியிருக்கின்றன. இதுதான் உண்மையான சிக்கல்.

பள்ளிக்கு வராமல் தான் வெளியே சுற்றியதை வீட்டிற்குத் தெரியப்படுத்திவிட்டான் அல்லது வேறு மாணவர்களிடம் சொல்லிவிட்டான் என்பதிலும், தனது செல்லிடப்பேசியின் சேமிப்பு அறைகளைத் திறந்துப் பார்த்து அந்தரங்கங்களை அறிந்துகொண்டு விட்டான் என்பதிலும்தான் இன்று இளைஞர்களிடையே முதல் வன்மம் தொடங்குகிறது. நட்பின் எல்லை எது? ஒருவருடைய அந்தரங்கம் என்பது என்ன? எதைக் கேலி செய்யலாம்? எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் போன்ற பொது வெளி பழகு முறைதான் இன்று பள்ளியில் சொல்லித் தரப்பட வேண்டிய பாடம். இதை எப்படிச் செய்வது என்பது குறித்துதான் நமது கல்வித் துறை சிந்திக்க வேண்டும்.

இன்றைய மாணவர்களுக்கு பாலியல் கல்வி தேவையே இல்லை. அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சி என்று பேசுவது பயனளிக்காது. அவர்களிடம் சொல்ல வேண்டியது "கைக்கிளை' குறித்தும், "பொருந்தாக் காமம்' குறித்தும்தான். ஒருவரையொருவர் நேசிப்பதுதான் காதல் என்றாலும், உன்னை நேசிக்கும்படி இன்னொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதை மாணவர்களுக்குப் புரிய வைப்பதுதான் இன்றைய தேவை. அதிகாரத்தாலும் பணத்தாலும் மிரட்டலாலும் காதலைப் பெற முடியாது என்பதை உணர்த்துவதுதான் இன்றைய பாலியல் கல்வியாக இருக்க முடியும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இருபது பேருக்கு ஓர் ஆசிரியரை, அவர் வகுப்பறைக்கு வெளியே தோழனாக இருக்கும் நிலையை உருவாக்குவதும், மாணவர்களின் திசைமாறும் போக்குகளை சுட்டிக் காட்டவும், பிணக்குகளில் விலகி நின்று சிக்கலை அவிழ்க்க உதவும் நண்பனாய் இருப்பவரே இன்றைய நல்லாசிரியர். அவர் நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய் மாறுவது நிச்சயமாக மாணவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் கிடைக்க உதவாதுதான். ஆனால், அவர்கள் மனிதனாய் மாற அது உதவும்.

ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும் என்பதுதான் இன்றைய கல்வித் துறையின் உத்தரவாக இருக்க வேண்டும்.

Thursday, February 5, 2015

ரசித்துப் படியுங்கள்... தேர்வு பயம் காணாமல் போகும்!...by கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி



பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. தேர்வு என்றதும் பலருக்கும் இனம் புரியாத காய்ச்சல் ஒன்று எட்டிப்பார்க்கும். நன்றாக படிப்ப வர்களுக்கும் சேர்த்துதான். உண் மையில் அப்படி எல்லாம் ஒரு காய்ச்சல் இல்லவே இல்லை. எல்லாம் நாமாக கற்பிதம் செய்துகொள்வதுதான்.

தேர்வு பயத்தை விரட்டி அடிப்பது எப்படி என்பதை முதலில் கண்டறி யுங்கள். அதற்கு நான் உதவுகிறேன். தேர்வு சமயத்தில் உங்களை எந்தெந்த விஷயங்கள் பயமுறுத்துகின்றன என்பதை முதலில் பட்டியலிடுங்கள். ஒன்று, அந்த விஷயங்களை நினைக் காதீர். அவற்றை மனதிலிருந்து விலக்கி வையுங்கள் அல்லது அதனை துணிச்சலுடன் அணுகி சமாளிக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்படை இதுதான்.

நாளை தேர்வு எனில் முதல் நாள் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படித்ததையே மீண்டும் மீண்டும் படிப்பதை நிறுத்துங்கள். தூக்கம் கெட்டால் புத்தி கெடும். மூளையின் நியூரான் சோர்வடைந்து அங்குமிங்கும் நினைவலைகள் அலைபாயும். நேற்று வரை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஒப்பிக்க முடிந்த பதில் தேர்வு அறையில் மறந்து போவதற்கான மருத்துவ ரீதியான காரணங்களில் முக்கியமானது இது.

மாதிரி தேர்வுக்கு இப்போது படித்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா. அதுபோலவே படியுங்கள் போதும். நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் படித்தாலும் படிப்பதை விரும்பி, ரசித்து, கதையை படிப்பது போல படியுங்கள். அதெப்படி கெமிஸ்டிரி பாடத்தை கதையைப் படிப்பது போல படிக்க முடியும்? என்று கேள்வி எழுகிறதா? கணிதம் தொடங்கி அறிவியல் வரை எல்லாமுமே ஒரு புதிர்தான். புதிரை அவிழ்ப்பதில்தான் சுவாரஸ்யமே இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? புரிந்து கொண்டுப் படியுங்கள். ஆராய்ந்துப் படியுங்கள். ரசித்துப் படியுங்கள். இப்படி படிப்பீர்களேயானால் கெமிஸ்ட்ரி, கணிதம் முதலான பாடங்கள் சுவாரஸ் யமான சதுரங்க விளையாட்டைப் போல... காமிக்ஸை, கதைப் புத்த கத்தைப்போல... ஒரு த்ரில் சினிமாவைபோல... உங்களை உள்ளே இழுத்துக் கொண்டு போய்விடும். அப்புறம் என்ன? பாடப் புத்தகத்தையும் தாண்டி புதிர் அவிழ்ப்பீர்கள் நீங்கள். படிப்பதின், வெற்றி பெறுவதின் மிக முக்கிய சூட்சுமம் இதுதான்.

மாதிரி தேர்வின்போதே பொதுத் தேர்வுக்கு பயிற்சி எடுங்கள். கேள்வித்தாளை கையில் வாங்கியதும், சாய்ஸில் விட வேண்டிய கேள்விகளை பார்க்காமல், நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதலாம். சாய்ஸில் விட்ட கேள்வி அடுத்த மாதிரி தேர்வில் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். தெரியாமல் விட்ட கேள்விகளை குறிப்பெடுத்துக் கொண்டு, அந்த கேள்விகளுக்கான பதிலை நன்றாக மனதில் பதித்து படிக்கலாம். இதனால், தெரியாத கேள்வி மீதுள்ள பயம் பறந்து போகும். மாதிரி தேர்வில் விட்ட கேள்விக்கான பதில் அல்லது தவறாக எழுதிய பதிலை மீண்டும் மீண்டும் எழுதிப் பாருங்கள்.

சரி வந்தே விட்டது தேர்வு. தேர்வு அறைக்கு செல்லும் முன்பு நண்பர் களுடன் ஆலோசிக்க வேண்டாம். நமக்கு தெரியாத கேள்வி, பதில் குறித்து நண்பர்கள் கூறினால், பதற்றம் தொற்றிக்கொள்ளும். தெரிந்த பதிலைக்கூட பயம் மறக்கடித்துவிடும். அன்றைய தினம் காலை 8 மணி முதல் 9.30 மணிவரை தனிமையாக இருங்கள். புத்துணர்வுடன் இருங்கள். மனதை தெளிவாக வையுங்கள். தேவையற்ற பேச்சுகளையும், சுய சந்தேகங்களையும் தவிருங்கள். இதனால், நினைவு சக்தி அதிகரிக்கும். கண்ணை மூடி நான்கு முறை மூச்சை ஆழ்ந்து இழுத்து, மெதுவாக மூச்சை விடுவதன் மூலம் புத்துணர்வு பெறலாம்.

தேர்வு அறையில் கேள்வியை படிக்க அளிக்கப்படும் ஐந்து நிமிடத்தை பதற்றம் இல்லாமல் பயன் படுத்திக்கொள்ளுங்கள். தெளிந்த மனதுடன் புரிதலுடன் கேள்வித்தாளை படியுங்கள்.

தேர்வுக்கு செல்லும் போது பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேலை தேடி அலைவதை தவிர்க்கவும். பெற் றோர்கள் இதற்கு உதவ வேண்டும். பெரும்பாலும் மாதிரித் தேர்வில் பயன்படுத்திய பேனாவையே பொதுத் தேர்விலும் பயன்படுத்துங்கள். பழைய பேனா தவறில்லை. புதுப் பேனா மக்கர் செய்தால், தேவையில்லாத குழப்பம் தானே.

தெரியாத கேள்விக்கான விடையை எழுத வேண்டாம். சென்ற ஆண்டு ஒரு மாணவி மூன்றாம் கேள்விக்கான விடையைத் தெரியாமல் எழுதிவிட்டு, பின், அதனை அடித்து விட்டு நான்காம் கேள்விக்கான விடையை அருமையாக எழுதி முடித்தார்.

ஆனால், கேள்வி எண் மூன்று என்பதை நான்காக மாற்றத் தவறியதால், மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதில் மிகுந்த கவனம் தேவை.

குளிர் காலத்தில் இருந்து கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், உடல் நிலையை பராமரிப்பதும் அவசியம். படிப்பு... படிப்பு... என்று வீட்டில் முடங்கியிருக்காமல், தினமும் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செல்லுங் கள். தேர்வு அறையில் தலைவலி, ஜல தோஷம் உள்ளிட்ட உடல் உபாதை களைத் தவிர்க்க உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அடிக்கடி காஃபி, சாக்லெட், குளிர்பானங்கள் அருந்த வேண்டாம். காஃபியில் உள்ள கோக்கைன் ரசாயனம் மந்தநிலையை ஏற்படுத்தக் கூடியது.

பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும்போது பெற்றோர்கள் வீட்டு பிரச்சினைகளை பேச வேண்டாம். குடும்ப சச்சரவுகளை தவிர்க்கவும். தொலைக்காட்சி சீரியல் களையும் தவிர்க்கவும். அதேபோல் குழந்தைகளிடம் தாழ்வு மனப் பான்மையை உருவாக்கும் வகையில் பேச வேண்டாம்.

தவிர்க்க வேண்டியவை...

* கணித தேர்வுக்கு ஏழு நாட்கள் விடுமுறை உள்ளதால் கேள்வித்தாள் கடினமாக இருக்கும் என்கிற பயத்தை கைவிடுங்கள்.

* தேர்வு முடிந்ததும் எழுதி முடித்த வினா - விடை குறித்து ஆலோசனை செய்வதும், அதனை மறுமதிப்பீடு செய்வதும் வேண்டாம். முடிந்ததை நினைத்து அடுத்தத் தேர்வை சொதப்பிக்கொள்ள வேண்டாம்.

* இறுக்கமான ஆடை அணிந்து தேர்வுக்கு செல்ல வேண்டாம். அது இனம் புரியாத அசவுகர்யத்தை ஏற்படுத்தும்.

NEWS TODAY 11.06.2026