Tuesday, March 3, 2015

Farmer loses bag containing Rs 1.80 lakh in Chennai, fertilizer dealer returns it

CHENNAI: It might be just a coincidence. But a fertilizer dealer at Tambaram here made a farmer's day in a big way!

A 70-year-old farmer from Sriperumbudur who came to Chennai to attend his granddaughter's engagement lost a bag containing Rs 1.80 lakh in cash on Monday morning. However, he got the bag and the money back in a few hours thanks to an honest fertilizer dealer in Tambaram.

Police said the farmer, identified as Santhanam, lost his bag and money while he was going to a marriage hall in Tambaram where his granddaughter's engagement was taking place.

To his pleasant surprise, Santhanam received a call from a fertilizer and pesticides dealer, Ram Babu, who told him that he had found a bag containing money and asked him to meet him at the Tambaram police station to collect it.

Babu found the bag lying on the road when he reached the bus stop to see his grandchildren off to school. He opened the bag and found cash in it. There was an invitation card in the bag where Santhanam's celephone number was written. He made a call to the number and contacted Santhanam.

Babu handed over the bag and money to Santhanam in the presence of Tambaram police inspector.

Questions on cricket stump board exam candidates

NEW DELHI: It wasn't an easy beginning for those writing the CBSE Class XII board exams on Monday. Lengthy and confusing comprehension passages and tricky value-based questions gave students jitters and many could not complete the otherwise average English (core) paper.

Students said the paper was made difficult primarily by questions related to cricket and pilgrimage. "The paper was difficult and the passages lengthy and confusing. I could not complete it as I took a long time to read the passages," Chestha Chanan of Army Public School, Dhaula Kuan, said.

Not just students, even teachers found the paper, which saw significant changes this year, difficult. "This being the first paper, students were anxious," Ramjas School, RK Puram, English HoD, Meera Bhardwaj said. One question on privileges enjoyed by cricketers left many surprised.

Mahua Mallick, an English teacher at Ahlcon International, Mayur Vihar, said, "Students found the passage on 'pilgrimage' difficult. There were questions like 'How can a pilgrim keep his body healthy' and 'How do we satisfy our ego'. Only those who read regularly could answer."

"The rest of the paper was easy and had direct questions," said Nilesh Rastogi, a student from Ahlcon International.

Monday, March 2, 2015

ஜனநாயகத்தின் நாற்றுகளை 'உற்பத்தி' செய்யும் அரசுப் பள்ளிகள்

கோப்புப் படம்

'தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன்.

ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

"இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?" என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

எந்த மெக்காலேவின் ஆய்வை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பைக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் என்பதுஆய்வுக்குரியது. ஒரு சமூகக் குற்றம் நடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரே காரணம் என்றும், அரசுப் பள்ளியின் கல்விச் சூழல் மட்டுமே காரணம் என்றும் கருத்தை உருவாக்கும் வகையில் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல.

ஓர் அரசுப் பள்ளி மாணவன், ஒரு மாணவியைக் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழல் உருவாக அரசுப் பள்ளியின் கல்வி முறையும், அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் மட்டுமே காரணம் என்று குற்றம் சுமத்துவது நியாயமற்றது. இப்படிப் பேசுவதைக் கூட, பணக்கார வர்க்கக் கல்வியாளர்கள் பின்பற்றிவரும் நவீனத் தீண்டாமைக் கொள்கை என்றுதான் குறிப்பிட வேண்டும்.

அரசுப் பள்ளிப் பெற்றோர்கள் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க முடியாதவர்கள் என்ற துணிவில் இந்தக் கருத்தைக் கட்டுரையாளர் கூறியிருக்கிறார் என்றும் கருதத் தோன்றுகிறது. ஒட்டு மொத்த சமூகத்தின் அவலங்களையும், கல்வியின் அவலங்களையும் ஏழைகள் மீதும் ஏழைகளின் பள்ளிகளின் மீதும் மட்டுமே சுமத்துவது நியாயமற்ற செயலாகவே கருத முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், தனது ஆசிரியை ஒருவரை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொன்றார். இந்தச் சூழல் உருவானதற்கு ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை மாணவர்களை இப்படி "உற்பத்தி" செய்கிறது என்றும், இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும் காரணம் என்றும் யாராவது குற்றம் சாட்டினார்களா? குற்றங்களைப் பற்றிப் பேசுவதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அணுகுமுறை, ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அணுகுமுறை என்ற பாகுபாடு உருவாக்கப்படுவது கல்வியில் ஜனநாயகத் தன்மைகளை அழித்துவிடும்.

"ஒரு மாணவன் வருடம் முழுவதும் என்ன கற்றுக்கொண்டான்? அதை எப்படி தேர்வில் எழுதினான் என்பெதெல்லாம் தாண்டி, அன்றைய தேர்வுக்கு யார் அறைக் கண்காணிப்பாளராக வந்தார்கள், எப்படி தாராளமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுறது" என்று கட்டுரையாளர் கூறியுள்ள குற்றச்சாட்டு தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். கண்காணிப்பாளருக்குக் கப்பம் கட்ட அரசுப் பள்ளிகளுக்கு என்ன வாய்ப்பு இருக்கப்போகிறது? கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போலக் குடிகாரப் பெற்றோர்களின் பிள்ளைகளல்லவா அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்? கண்காணிப்பாளர்களுக்கு கப்பம் கட்ட வாய்ப்புள்ள தனியார் பள்ளிகளில்தானே இப்படியெல்லாம் மாணவர்களின் தேர்ச்சியை நிர்ணயிக்க முடியும்.

பெரும்பாலான தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பாடங்கள் ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் பதினோராம் வகுப்பிலும் கற்பிக்கப்படுகின்றன. இந்த முறைகேட்டின் மூலமே தனியார் பள்ளி மாணவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களைவிட அதிக தேர்ச்சி விகிதமும் மதிப்பெண் விகிதமும் பெறுகின்றனர். இதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்விச் சேர்க்கை வாய்ப்புகள் பறிபோகின்றன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த ஒரு விழுக்காட்டினர்கூட இடம் பெற முடிவதில்லை. இந்தச் சமூக அநீதிக்குக் காரணமான தனியார் பள்ளிகளின் முறைகேட்டைத் தடுக்க பதினோராம் வகுப்பிலும் அரசு பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவரவேண்டும். மேலும் தவறு செய்யும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவேண்டும் என்று இதுவரை எத்தனைபேர் கேட்டிருக்கிறார்கள்?

கேட்கும் தகுதியுடைய பெற்றோர்களின் குழந்தைகள் அனைவரும் எப்படியாவது மதிப்பெண் பெற்றால் போதும் என்ற ஒரே குறிக்கோளில் தனியார் பள்ளிகளில் கேட்ட அளவுக்குக் கட்டணம் செலுத்திப் படித்துவருகிறார்கள். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்கவைக்கும் ஏழைப் பெற்றோர்களோ இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் குற்றவாளிகளாக உருவாக்கப்படுகிறார்களா? அரசுப் பள்ளிக் கல்வி முறைதான் நாட்டில் பெண்களைப் பலாத்காரம் செய்து கொலை செய்பவர்களை "உற்பத்தி" செய்கிறதா?

அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் படிக்காமல் தேர்வில் காப்பி அடித்து மதிப்பெண் வாங்கினார்களா? அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மாணவர்களைத் தேர்வில் பார்த்து எழுதவைத்துதான் மதிப்பெண் வாங்க வைக்கிறார்களா? என்று கேள்வி கேட்கும் வகையில் ஒட்டு மொத்தமாக அனைவர்மீதும் தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயமற்றது.

அனைத்துக் குழந்தைகளும் உயிர் வாழ்வதற்கும், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் சமவய்ப்புகளையும் சமஉரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் கல்வி முறை ஒன்றே நமது ஒரே குறிக்கோளாக இருக்க முடியம். மேலும் ஓர் உண்மையான மக்களாட்சி அமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படைக் கடமையும் கூட இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த உயரிய நோக்கத்தை அடைவதற்கு நாம் அரசுப் பள்ளிகளைக் காப்பதையும் மேம்படுத்துவதையும் முதன்மை இலக்காகக் கொள்ளவேண்டும். அரசுப் பள்ளிகளின் மதிப்பைத் தாழ்த்தும் படியான வகையில் நியாயமற்ற கருத்துகளைப் பொத்தாம் பொதுவாக கூறிவருவது ஆபத்தானது.

அரசுப் பள்ளிகள் மூலம்தான் தமிழகத்தில் இதுவரையில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் கட்டணமில்லாமல் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கல்விக் கூடங்களுக்குள் காலடிவைத்த முதல் தலைமுறையினர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, சந்திராயன் திட்ட இயக்குனர் போன்ற சிகரங்களைத் தொட்ட தமிழர்கள் பலர் அரசுப் பள்ளியில் தாய்மொழிவழியில் படித்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏழைகளின் அறிவுக்கூடமாய் விளங்கும் அரசுப் பள்ளிகளில் பல குறைகள் இருக்கலாம். அவை களையப்படவேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை.

எனவே, இருக்கின்ற குறைகளைக் களைய உதவுவதே ஆக்கபூர்வமான பணியாக இருக்க முடியும். அரசுப் பள்ளிகள் மீது அவநம்பிக்கைச் சேற்றை இறைப்பதால் எதிர் விளைவுகளே ஏற்படும். அரசுப் பள்ளிகள் ஜனநாயகப் பயிர்களை வளர்த்தெடுக்கும் நாற்றங்கால்கள் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவோம்.

அரசுப் பள்ளியில் இரண்டு மகன்களைப் படிக்க வைக்கும் ஒரு தந்தை என்ற உரிமை காரணமாகவும், அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் என்ற பொறுப்புணர்வினாலும் இந்த வேண்டுதலை அனைவருக்கும் முன்வைக்கிறேன்.

சு.மூர்த்தி, கட்டுரையாளர் - ஒருங்கிணைப்பாளர். கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம். தொடர்புக்கு- moorthy.teach@gmail.com

மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி?

Return to frontpage

வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால் தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர் மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் செய்தித்தாள்கள் முழுவதும் தனியார் பள்ளி விளம்பரங்களும், அவர்கள் நிகழத்திய சாதனைகளும் (?) நிறைந்திருக்கும்.

அரசுப் பள்ளிகளில் இத்தனை பள்ளிகள் எவ்வளவு சதவீதம் தேர்ச்சி எந்தெந்த பாடங்களில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி, எந்த பாடத்தில் தேர்ச்சி குறைந்தது என மீளாய்வு கூட்டங்கள் நடத்தி, அதிகாரிகள் தங்களை திட்டுவது, அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிப்பது என்பதெல்லாம் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியர்களுக்கும் பழகி விட்ட ஒன்றாகிவிட்டது.

தோல்வியடைந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற தகுதியில்லாதவர்களா? வெற்றி பெற்ற அனைவரும் தகுதியானவர்களா என்று உங்களுக்குள் ஒரு கேள்வி கேட்டுப்பாருங்கள்? உண்மை புரியும். தேர்வு நடந்த நாள் தோல்வியடைந்த மாணவனுக்கு நல்ல நாளாக அமையவில்லை. அல்லது தனது திறமையை வெளிப்படுத்தும் சூழல் இல்லை.

ஒரு மாணவன் வருடம் முழுவதும் என்ன கற்றுக்கொண்டான்? அதை எப்படி தேர்வில் எழுதினான் என்பெதெல்லாம் தாண்டி, அன்றைய தேர்வுக்கு யார் அறைக் கண்காணிப்பாளராக வந்தார்கள், எப்படி தாராளமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுறது. அவ்வளவுதான். கடந்த வருடத்தில் மட்டும் சில மாவட்டங்கள் திடீரென 10 முதல் 15 இடங்கள் வரை தேர்ச்சி சதவீதத்தில் முன்னேறி இருக்கிறது. எப்படி இந்த மாயாஜாலம் நிகழந்தது என்பது விட்டலாச்சார்யா படங்களை விஞ்சும் மர்மங்களாக உள்ளது.

தமிழகத்தில் மட்டும் எப்படி இவ்வளவு தேர்ச்சி சதம் வருகிறது என்ற கேள்வியை அண்டை மாநில ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கேட்கும் போது நம்மிடம் பதில் இல்லை. தேர்ச்சி சதம் என்பது ஒரு முக்கியமான காரணிதான். ஆனால் அதையே கல்விக்கான அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியுமா? மூன்றாம் தலைமுறையில் கற்கும் மாணவன் பெறும் மதிப்பெண்ணையே முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவன் பெற முடியுமா?

வீட்டு வாசற்படியில் இருந்து பள்ளி வகுப்பறை வரை மகிழுந்தில் பயணம் செய்து கல்வி கற்கும் மாணவனும், விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று சில பல மைல்கள் நடந்து சென்று, சில பாட ஆசிரியர்கள் இல்லாமல் தானே கற்கும் மாணவனும் ஒன்றா? ஈரோட்டில் விளையும் மஞ்சள் திருவண்ணாமலையில் விளையுமா? கன்னியாகுமரியில் விளையும் ரப்பர் கடலூரில் விளையுமா? இயற்கையாகவே ஒரு மண்ணில் எது விளையுமோ அது மட்டுமே விளையும். இது இயற்கை நமக்கு கற்றுத்தந்த பாடம்.

காஷ்மீர் ஆப்பிளை தமிழ்நாட்டில் விளைவிக்க முயற்சி செய்தால் தோல்வியே மிஞ்சும் என்பது நல்ல விவசாயிக்கு தெரியும். ஆனால் அதையும் தாண்டி நமது மண்ணுக்கு ஒத்துவராத பயிர்களை கடந்த 20, 30 ஆண்டுகளாக பயிரிட்டதும், உரமிட்டதும் நமது மரபு சார்ந்த விவசாயத்தையும், மண்ணின் தன்மையையும் கொன்றொழித்து விட்டது. நவீன உரங்களை நம்பி நாம், இன்று விசமுள்ள உணவுகளை உற்பத்தி செய்து வருகிறோம். பசுமைப் புரட்சி நமது மண்ணின் உயிரை எடுத்து விட்டது. தற்போது மண் மலடாகிவிட்டது. வெள்ளைக்காரன் நமது மரபு சார்ந்த விவசாயத்தை ஒழிக்க நினைத்தான். அது நிறைவேறிவிட்டது.

மாணவர்களும் அறிவில்லாத மலடுகளாக பள்ளிக்கல்வியை முடிக்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பயில் ஒரு மண்ணில் விளைய பல்வேறு காரணிகள் உள்ளது. பயிர் விளைச்சளைத் தரவில்லை எனில் விவசாயி மட்டும்தான் காரணமா? மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியர்கள் காரணமா? பயிர் விளைய பருவமழை, மண்ணின் தன்மை, பயிர் செய்த காலம், பராமரிப்பு, நல்ல விதை போன்ற பல காரணிகள் உள்ளது.

பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத சமூக, பொருளாதார, சாதி ரீதியான, புவியியல் ரீதியான பல ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் குடும்பங்களில் நிலவி வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல பெற்றோர்கள் தினக்கூலிகளாக பெங்களூரிலும், திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளிலும் வேலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்கள் தாங்களே சமைத்து சாப்பிட்டு பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது. சில மாணவிகள், பெற்றோர் உடன் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதும் உண்டு.

தொடர்ந்து இடைவெளியில்லாமல் ஒரு நிலத்தில் பயிர் செய்தால் நிலம் மலடாகிவிடும். தொடர்ந்து நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தால் பயிர் வளராது என்பதும் நல்ல விவசாயிக்கு தெரியும். ஆனால் மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு, அரையாண்டு விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதே காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. தனியார் பள்ளிகளைப் பார்த்து தற்போது அரசுப் பள்ளிகளும் அதைப் பின்பற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தங்கள் விடுமுறையையும் மகிழ்ச்சியையும் பறித்த ஆசிரியர்கள் மீது ஏன் மாணவர்களுக்கு கோபம் வராது?

இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?

ஒரு பெண்ணின் கருவறையில் உள்ள கருவை சோதிக்கும் போது முறையாக வளர்ச்சி இல்லை எனில், அதை கரு நீக்கம் செய்வதே ஓர் உண்மையான மருத்துவரின் கடமை. அது கொலையல்ல. ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மகிழுந்தில் பழுது என்றால் அதை அப்படியே ஒரு நிறுவனமோ, பொறியாளரோ சாலையில் ஓடவிட்டால் சில பல நபர்களை அது பலிவாங்கும். குறைபாடுடன் வாகனம் விற்பனைக்கு விடப்பட்டது தெரியவந்தால் நீதிமன்றம் மூலமாக பல லட்சங்கள் கோடிகளை நிறுவனம் தண்டம் கட்ட வேண்டி வரும். நிற்க.

இந்த காருக்கு பதிலாக நமது மாணவனை நினைத்துக்கொள்ளுங்கள். பொறியாளருக்கு பதிலாக ஆசிரியர்களையும், நிறுவனத் தலைவருக்கு பதிலாக நமது கல்வித் துறையையும் பொருத்திப் பாருங்கள். பள்ளி எனும் மனிதவள உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் எத்தனை குறைபாடுள்ள மகிழுந்துகள் வெளியே சென்று எத்தனை பேரின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும்.ெ

தற்போது பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு முன்னால் மாணவனின் பங்கு உள்ளது. காரணம்... மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வியையோ, விழிப்புணர்வோ தராமல் வெறும் மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றிவிட்டது நவீன மெக்காலேக்களின் கண்டுபிடிப்பு.்

மதியம் 10 நிமிடமே இடைவேளை விட வேண்டும். மீதி நேரம் வடக்கு பார்த்து வாஸ்து முறைப்படி உட்கார்ந்து கொண்டு படிக்க வேண்டும் என்றெல்லாம் சுற்றறிக்கைகள் விடப்படுகிறது. 10 நிமிடத்தில் ஒரு மாணவன் உணவருந்த முடியுமா? பள்ளியில் சத்துணவு 10 நிமிடத்தில் வழங்கப்பட்டு விடுகிறதா? சிறைக் கைதிகளுக்கு இருக்கும் மனித உரிமை கூட மாணவர்களுக்கு இல்லையா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் நமக்கென்ன என்று ஆசிரியர்கள் இருந்துவிடுகிறார்கள்.

தேர்ச்சி சதவீதம் என்ற பெயரில் மாணவர்களை கசக்கிப் பிழவதும், அவன் எதையும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை, தேர்ச்சி பெற்றால் போதுமானது என்ற நிலைக்கு ஆசிரியர்களை கல்வித்துறை தள்ளி பல வருடங்கள் ஆகிவிட்டது.

ஒரு பள்ளியில் ஒரு பெண்ணாசிரியரை தகாத வார்த்தைகளில் திட்டுகிறார் ஒரு மாணவர். ஆசிரியர் அறைக்கு சென்று அழுவதை தவிர அந்த ஆசிரியையால் எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த வருடத்தில் மட்டும் எத்தனை பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும், எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும் ஆய்ந்து பாருங்கள், எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களால் தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என நினைத்துப் பாருங்கள். நாம் கல்வி என்ற பெயரில் மாணவர்களுக்கு எதைக் கற்பித்தோம் என்பது புரியும்.

11, 12 ம் வகுப்பு பாடங்களில் 12-ம் வகுப்பு பாடங்களில் 10 சதவீதத்தைப் படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம் என்பதே நிதர்சனம். 10 சதவீதத்தை கூட படிக்க முடியாமல் முடியாமல் மாணவன் தோல்வியுறுவதும், இந்த 10 சதவீதத்தைப் படிக்க வைப்பதற்கே சனி, ஞாயிறு, விடுமுறை, காலை, மாலை என்று சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் அலைவதையும் நினைத்தால் தெரியும் நமதுமாணவனின் தரமும், கல்வித்துறையின் நிலையும்.

கற்றல் பணி மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்று ஆய்வதற்கு எந்த அதிகாரியும், ஆசிரியர்களும் தயாராக இல்லை. தேர்ச்சி சதமும் மதிப்பெண்களும் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்பதிலேதான் ஆசிரியர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையைப் பொறுத்த வரையில் கல்லூரி கல்விக்கு மூலப்பொருட்கள் தயார் செய்து அனுப்பும் ஒரு தொழிற்சாலையாக மாறிவிட்டது. ஆனால் மூலப்பொருட்களின் தரம்தான் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. 12ம் வகுப்பை தாண்டிய மாணவர்கள் தங்கள் பள்ளிக்காலத்தில் எத்தனை முறை அறிவியல், மொழி ஆய்வகங்களில் நுழைந்தனர் எனக் கேட்டால் தெரியும். நமது பள்ளிக்கல்வியின் தரம். ஆனால் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டும் வானளவு உயர்ந்து நிற்கிறது.

இதையும் தாண்டி தேர்ச்சி சதவீதம் குறைந்தால் 'நான் மாற்றப்படுவேன், நீங்கள் தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றப்படுவீர்கள்' என்று ஆசிரியர்களை மன ரீதியாக பயமுறுத்தி, மாவட்டத்தின் நலன் கருதி ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது.

விளைவு...? தமிழைக் கூட வாசிக்கத் தெரியாத மாணவர்கள் 11ம் வகுப்பை அடையும் நிலையில் நமது கல்வியின் தரம் உள்ளது. அவனுக்கு தமிழ் தெரிந்தால் என்ன? ஆங்கிலம் தெரிந்தால் என்ன? நமக்கு தேர்ச்சி விகிதம் வந்தால் சரி. ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் மாணவர்களை அமர வைப்பதே பெரும் பாடாகி விட்டது. எனக்கு எப்படி தேர்ச்சி பெறுவது என்று தெரியும் என்று மாணவன் ஆசிரியரைப் பார்த்து கேலி செய்யும் நிலைக்கு ஆசிரியர் சமூகம் தள்ளப்பட்டுவிட்டது.

கற்றுக் கொடுப்பது கல்வி என்பது போய் புள்ளி விவரங்களில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறது அரசும், அரசு அதிகாரிகளும். மாதம் மும்மாரி மழை பெய்யாவிட்டால் உங்களை தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றிவிடுவேன் என்று மேலதிகாரி சொன்னால் நான்கு முறை நன்றாக பொழிந்தது என்று கூட புள்ளிவிவரம் சமர்ப்பித்து நல்ல பெயர் வாங்கும் அதிகாரிகள் பலர் உள்ளனர்.

கடந்த வருடம் ஐஐடி போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஒரு சுமார் லட்சம் மாணவர்களில் வெறும் 450 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள். அதிலும் வெறும் 31 பேர் மட்டுமே மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதை விட்டுவிட்டு தேர்ச்சி சதம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வித்துறை செயல்பட்டால் இந்த சமூகம் அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை வருங்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியாது.

உண்மையான பிரச்சனைகளை ஆராய்ந்து தரமான 'கல்வியை' (தேர்ச்சி சதவீதத்தை அல்ல) வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தேர்ச்சி சதம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னெடுக்கும் செயல்பாடுகள், கல்வி என்ற மரத்தின் வேரில் ஊற்றிய வெந்நீராகவே இருக்கும்.

*

கட்டுரையாளர் - கை.இளங்கோவன் | பொதுச் செயலாளர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சங்கம். | தொடர்புக்குelangotnhspg@gmail.com

பிளஸ்2 தேர்வு கண்காணிப்பு பணி: குலுக்கல் முறை ஒதுக்கீட்டுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு



பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்புப் பணி ஒதுக்கீடு செய்வதற்கு, குலுக்கல் முறை பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

மார்ச் 5-ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 64 மையங்களில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, அறைக் கண்காணிப்பாளராக நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக புதிய நடைமுறையின்படி குலுக்கல் முறையில் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த ஆண்டு வரை, விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்து வந்த நிலையில், தற்போது குலுக்கல் முறையில் தொலைதூரப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அறிந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு தேர்வு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தொடக்கக் கல்வி இணை இயக்குநர் செல்வராஜ் கூறியது:

குலுக்கல் முறையில் சில ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் உள்ள பள்ளிகள் கிடைத்தால், அதனை மாற்றிக் கொடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

கடந்த தேர்வு வரை, சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், குறிப்பிட்ட ஆசிரியர்களை தங்கள் பள்ளி கண்காணிப்புப் பணிக்கு அழைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையிலேயே, நிகழாண்டு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகள் நுழைவுத் தேர்வு: 6,786 பேர் பங்கேற்பு

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் 6,786 பேர் பங்கேற்றனர்.

விண்ணப்பித்தவர்களில் 3,083 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.எஸ்., எம்.டி., முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்புகளில் மொத்தம் 1,154 இடங்கள் உள்ளன. இதுபோல் முதுநிலை பல் மருத்துவப் படிப்பான எம்.டி.எஸ். படிப்பில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

இவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கு தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறை சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

2015-16 ஆம் கல்வியாண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வுக்கு எம்.எஸ்., எம்.டி., முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர்வதற்காக மொத்தம் 8,713 பேர் விண்ணப்பித்திருந்தனர். எம்.டி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க 1,156 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நுழைவுத் தேர்வானது சென்னையில் மட்டும் பச்சையப்பன் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி, முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் எம்.டி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 1,107 பேரும், பிற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 5,679 பேரும் பங்கேற்றனர். 3,083 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலை. அறிமுகப்படுத்துகிறது



கலை அறிவியல் பல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

வருகிற 2015-16 கல்வி ஆண்டு முதல் இந்தப் புதிய வசதி பொறியியல் மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது. பாரம்பரியமான ஆசிரியர் சார்ந்த கல்வி முறை என்ற நிலை மாறி, மாணவர் சார்ந்த கல்வி முறை இப்போது பிரபலமடைந்து வருகிறது.

மாறி வரும் காலச் சூழல், தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை தாங்களாகவே மாற்றித் தேர்வு செய்து கொள்ளும் வகையிலான விருப்பப் பாடத் தேர்வு முறை (சாய்ஸ் பேஸ்ட் கிரெடிட் சிஸ்டம்-சி.பி.சி.எஸ்.) பல கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, ஒரு படிப்பின் அடிப்படை பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் (கோர், அலைடு பாடங்கள்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிப்பதுதான் சி.பி.சி.எஸ். முறை.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் பெரும்பாலான கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதற்கென தனி வழிகாட்டுதலையும் யுஜிசி வெளியிட்டிருக்கிறது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்திலோ அல்லது பொறியியல் கல்லூரிகளிலோ இந்த நடைமுறை இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

இருந்தபோதிலும், பிரபலமான சில தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் மட்டும் இந்த நடைமுறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில உயர் கல்வி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.சி.எஸ். முறை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சி.பி.சி.எஸ். முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும் என அண்மையில் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில், இந்தப் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் இப்போது முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 530 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், விருப்பப் பாடத்தைத் தாங்களே தேர்வு செய்துகொள்ளும் வசதி கிடைக்க உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறியது: மாணவர்களுக்கான விருப்பப் பாடத் தேர்வு முறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான அனைத்து நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதம் நடைபெற உள்ள பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

இதன்மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் அல்லது ஆர்வமுள்ள பாடங்களைத் தேர்வு செய்து படிக்க முடியும் என்றார் அவர்.

NEWS TODAY 20.08.2026