Tuesday, April 7, 2015

சிக்கல்களை தவிர்க்க‌ வங்கிகளில் ஆதார் எண்ணை பதிவு செய்வது அவசியம்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வங்கிகளில் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் ஆதார் எண்களை ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையத்திடம் பதிவு செய்தல் வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய ஓய்வூதியதாரர் உயிர் வாழ் சான்றிதழை, எந்தவித அசவுகரியங்களும் இல்லாமல் சமர்ப்பிக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

க‌டந்த ஆண்டு நவம்பர் மாதம், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட இணையம் வழி சமர்ப்பிக்கும் `ஜீவன் பிரமான்' எனும் டிஜிட்டல் ஓய்வூதியதாரர் உயிர் வாழ் சான்றிதழை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இதன் காரணமாக, வயதான ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர் வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க நேரடியாக வங்கிக்கோ அல்லது ஓய்வூதிய பட்டுவாடா முகமைக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கள் வீடுகள் அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களில் இருந்து இணையம் வழியாகவே சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு எண் ஆகியவற்றை இணைக்கும் போது, ஆள்மாறாட்டத்தையும் தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் தற்சமயம் 50 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மணியார்டர் சேவை நிறுத்தமா?- தபால் துறையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்புகின்றன- மத்திய தபால்துறை அதிகாரி சுற்றறிக்கை



சாமானிய மக்களும் அதிகளவில் பயன்படுத்தும் மணியார்டர் சேவை நிறுத்தப்படவில்லை. சில போட்டி தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புகின்றன என்று தபால் துறை விளக்கமளித்துள்ளது.

நாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களும் அவசர தேவைகளுக்காக எவ்வித சிரமமும் இன்றி பணம் அனுப்புவதற்கு தபால் துறையின் மணி ஆர்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், “மணியார்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது” என்று இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் ஷிவ் மதுர்குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அச்சேவையை பயன்படுத்திவரும் ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர். அது பற்றி தெரிந்துகொள்வதற்காக அருகில் உள்ள தபால் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தியா போஸ்ட் (தபால்கள்) பிரிவின் செயலாளர் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுவதாக தகவல்கள் பரவிவருகின் றன. தமது சிறப்பான செயல்பாட்டால், இதே துறையில் ஈடுபட்டுள்ள பல தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தபால்துறை விளங்கிவருகிறது. அந்நிறுவனங்கள், சமீப காலமாக, செல்போன் மூலமாக பணம் அனுப்பும் சேவையிலும் ஈடுபட்டுள்ளன. அச்சேவைக்கு, தபால்துறையின் மணி ஆர்டர் சேவை போட்டியாக அமைந்துள்ளது. அதனால், பொய்யான தகவலை பரப்பிவருகின்றன.

இது தொடர்பாக அனைத்து அஞ்சலக வட்டாரத் தலைவர்களும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், உடனுக்குடன் பணம் அனுப்பும் ‘இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்’, ‘மொபைல் மணி ஆர்டர்’, ‘சர்வதேச மணி ஆர்டர்’ போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்டார தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

தபால் துறையின் மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. வழக்கமான மணி ஆர்டர், அதனையொத்த மின்னணு மணி ஆர்டர் (இ.எம்.ஓ.) ஆகியவை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. மணி ஆர்டர் (அட்டை) படிவத்துக்கு பதிலாக, கம்ப்யூட்டர் மூலமாக தலைமை தபால் அலுவலகங்களுக்கு சில விநாடிகளில் மணி ஆர்டர் பற்றிய தகவல்களை அனுப்பும் இ.எம்.ஓ.வும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பணத்தை ஒரு கிளையில் செலுத்திவிட்டால், போய்ச் சேர வேண்டிய கிளைக்கு சில விநாடிகளில் தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து தபால்காரர்கள் மூலம் பணம் உரியவருக்கு உடனே போய் சேரும். தமிழகத்தில் கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் 3 கோடி மணி ஆர்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், 11 லட்சம் மணி ஆர்டர்கள், தமிழக அரசின் சமூகநலத் திட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டவையாகும்.

உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம்: திடீர் சோதனையில் சிக்கிய 326 அதிகாரிகள்

Return to frontpage

உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த போலீஸார் உட்பட 326 அதிகாரிகள் சிக்கினர். இங்குள்ள முராதாபாத் மற்றும் ஷாஜாஹாபூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடந்த அதிரடி சோதனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வசூலானது.

டெல்லியில் இருந்து கிளம்பி உ.பி.யின் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ரயில் நிலையங்களை கடந்து ரயில்கள் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ், கிசான் எக்ஸ்பிரஸ், முகல்சராய் எக்ஸ்பிரஸ் மற்றும் சியல்தா எக்ஸ்பிரஸ் ஆகியன பல்வேறு இடங்களுக்கு செல்லும்.

இந்த ரயில்களில் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே டெல்லி அதிகாரிகளின் சோதனைக் குழு திடீர் சோதனை நடத்தியது. இதில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 14 உ.பி. போலீஸார், வங்கி மேலாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார்கள் உட்பட 326 பேர் சிக்கினர். இவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

இதில், சிக்கியவர்கள் தம் செய்த தவறை எண்ணி வருந்துவதை விடுத்து சோதனை செய்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி உள்ளனர். சிலர், தமக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் ரயில்வே துறை அதிகாரிகள் பணியில் இருப்பதாகக் கூறி தப்ப முயன்றுள்ளனர்.

இன்னும் சிலர் தமக்கு மத்திய அமைச்சர்களின் நெருக்கம் இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். எனினும், அவர்கள் மிரட்டலுக்கு பயப்படாத சோதனை அதிகாரிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்படுவர் என மிரட்டியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி மன்னிப்பு கேட்டதுடன் மற்ற பயணிகள் முன்னிலையில் அவமானப்படாமல் இருக்க வேண்டி அபராதம் செலுத்தி உள்ளனர்.

டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள உ.பி. ரயில் நிலையங்களில் இருந்து பணியின் நிமித்தமாக அன்றாடம் பயணம் செய்யும் பயணிகள் அதிகம். வழக்கமாக மாத சலுகைக்கான டிக்கெட்டுகள் பெற்று பயணம் செய்யும் பவர்களில் பலரும் அதைக் கூட வாங்காததுடன், எக்ஸ்பிரஸ் ரயில்களின் குளிர்சாதனப் பெட்டிகளிலும் பயணம் செய்து விடுவது உண்டு. இதற்காக, அப்பெட்டிகளின் டிக்கெட் பரிசோதகர்களை ‘கவனித்து’ விடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதுபோன்றவர்களிடம் தான், இன்று திடீர் சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று அன்று | 1927 ஏப்ரல் 6: ரத்தக்கண்ணீர் படைப்பாளியின் பிறந்த தினம்....by சரித்திரன்

பெரியாருடன் தங்கராசு.

அது ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் ஒன்று. தொழுநோய் பாதிப்பால் அடையாளமே தெரியாமல் உருக்குலைந்து போன உருவத்துடன் எதிர்ப்படும் எம்.ஆர். ராதாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, உணவு தருவதற்காக வீட்டுக்கு அழைத்துவருவார் எஸ்.எஸ்.ஆர். திண்ணையில் அமர்ந்திருக்கும் எம்.ஆர். ராதா அந்த நிலையிலும் படு நக்கலாகப் பேசுவார்.

ராதா: ஏம்ப்பா, சாப்பாடு போடுறதும் போடுற. கறிச்சோறா போடு தம்பி, சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி...

எஸ்.எஸ்.ஆர்: அடடே, நாங்க கறி சாப்பிடறதில்லையேப்பா…

ராதா: ஏன், வீட்ல பத்தியமா?

எஸ்.எஸ்.ஆர்: இல்ல, நாங்க ஜீவகாருண்ய கட்சில சேந்திருக்கிறோம்.

ராதா: அடிசக்க! திங்கறதுக்குக் கூட கட்சி வச்சிருக்காண்டா யப்பா… ஜீவகாருண்ய கட்சின்னா என்ன தம்பி அர்த்தம்?

எஸ்.எஸ்.ஆர்: அதாவது, உயிர்களைக் கொலை செய்யக் கூடாது.

ராதா: ஆஹாங்!? நீங்க உயிரக் கொல்ற தேயில்லையா?

எஸ்.எஸ்.ஆர்: இல்லையே.

ராதா: ராத்திரில மூட்டப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?

எஸ்.எஸ்.ஆர்: ஒனக்கு உண்மையிலேயே திமிருதாண்டா…

இந்த வசனங்கள் எம்.ஆர். ராதாவின் பாத்திரம் எத்தகையது என்பதை உணர்த்திவிடும். முழுக்க முழுக்க அரசியல், சமூக விமர்சனங்கள், மூட நம்பிக்கைகளைப் பரிகசிக்கும் வசனங்கள் நிரம்பிய அந்தப் படம் வெளியானபோது, திரை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எனினும், பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம், சமூக நீதிக்கான போராட்டங்களின் தாக்கம் தமிழகத்தில் வெகுவாகப் பரவியிருந்த அந்தக் காலகட்டத்தில் ரத்தக்கண்ணீர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. முக்கியப் பாத்திரத்தில் நடித்த எம்.ஆர். ராதா, அநாயாசமான தனது நகைச்சுவையாலும், தொழுநோயாளியின் பாதிப்பின் அவஸ்தையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் தனது நடிப்பாலும் படத்தைத் தாங்கியிருப்பார். படத்தில் பேசப்பட்ட புரட்சிகரமான அந்த வசனங்கள் எம்.ஆர். ராதாவுடையவை என்று இன்றும்கூடப் பலரும் நினைக்கக் கூடும். ஆனால், அந்த வசனங் களை எழுதியவர் திருவாரூர் கே. தங்கராசு. படத்தின் கதை, திரைக்கதையும் அவர்தான்.

1927 ஏப்ரல் 6-ல் நாகப்பட்டினத்தில் பிறந்தவர் திருவாரூர் கே. தங்கராசு. அரசு ஊழியராகப் பணிபுரிந்த அவரது தந்தை குழந்தைவேலு, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆனால், தங்கராசு அதற்கு நேரெதிராக இருந்தார். நெற்றியில் பட்டையுடன்தான் காட்சியளிப்பார். கோயில்களுக்குச் செல்வார். திருவாரூரில் பன்னீர் கம்பெனியில் வேலை பார்த்தபோது, கடையில் மாட்டப்பட்டிருக்கும் கடவுள் படங்களுக்குத் தீபாராதனை காட்டியது முதல் கோயில்களின் ஸ்தல புராணங்களைப் பாராயணம் செய்ததுவரை பக்திமான்களுக்குரிய எல்லாச் செயல்களையும் செய்தவர். பின்னாட்களில் பெரி யாரின் கருத்துகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியபோது, புராணங்களை விமர்சிக்க, மேற்சொன்ன தனது பக்திமான் பண்புகள் உதவிகரமாக இருந்ததாக தங்கராசுவே கூறியிருக்கிறார்.

ஆசிரியர்களே வியக்கும் வகையில் ஆழ்ந்த கல்வியறிவு கொண்டிருந்த தங்கராசு, வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. திருவாரூரில் கணக்குப் பிள்ளையாக வேலைபார்த்தபோது, அவரது அறிவுத்திறன் அவரது பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் உதவியது. எனினும், அரசியல் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டது அவரது முதலாளிகளின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொடுத்தது. இதனால், அவர் இரண்டு முறை வேலையை இழக்க நேரிட்டது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மேடையில் பேசிவந்தார். பின்னாட்களில், திருவாரூர் நகர திராவிடர் கழகத்தின் தலைவர் சிங்கராயருடனான நட்பு, திராவிடர் கழகத்தின் பக்கம் தங்கராசுவை இழுத்துவந்தது. பெரியாரின் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்லத் தொடங்கினார்.

எம்.ஆர். ராதாவின் நாடகங்களில் கதை, வசனம் எழுதிவந்த கலைஞர் கருணாநிதி ஏதோ காரணத்துக்காக, அவரது குழுவிலிருந்து விலகிவிட, சிங்கராயர் மூலம் அந்த வாய்ப்பு தங்க ராசுவுக்கு வந்தது. ராசிபுரத்தில் உள்ள பேருந்து உரிமையாளரின் விருந்தினர் விடுதியில் ஒரு அறையில் தங்கியிருந்தபோது ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை எழுதினார் தங்கராசு. 1949 ஜனவரி 14-ல் திருச்சியில் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் அரங்கேறியது. ஒவ்வொரு முறையும் நாடகத்தின் காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, நாடகம் மெருகேற்றப்பட்டது.

சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞரை அறிமுகம் செய்த ‘பராசக்தி’ படத்தின் தயாரிப் பாளரான ‘நேஷனல் பிக்சர்ஸ்’-ன் பி.ஏ. பெருமாள், ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முன் வந்தார். அந்தப் படத்துக்கு எம்.ஆர். ராதா வாங்கிய சம்பளம் ரூ. 1 லட்சம். தங்கராசுவுக்கும் கணிசமான தொகை சம்பளமாகக் கிடைத்தது.

அத்துடன், தனது வசனங்கள் மாற்றப்படக் கூடாது என்றும் உறுதியாக இருந்தார். இப்படிப் பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தின் பின்னணியில் உண்டு. ‘ரத்தக் கண்ணீர்’ படம் இன்று தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் சேனல் மாற்றாமல் பார்க்கும் ரசிகர்கள் உண்டு. பல முறை மேடையேற்றப்பட்ட நாடகம் இது.

‘பெற்ற மனம்’, ‘தங்கதுரை’ஆகிய படங்களுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார் தங்கராசு. எனினும், தன்னை ‘சினிமாக்காரன்’ என்று சொல்லிக்கொள்ள அவர் விரும்பவில்லை. தனது கருத்துகளைப் பரப்பக்கூடிய வாகனம்தான் சினிமா என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவர். பெரியார் மீது பெரும் மதிப்பும், அவரது கொள்கைகளில் ஆழ்ந்த பற்றும் கொண்டவராகவே கடைசிவரை இருந்தார் தங்கராசு. அண்ணா, கருணாநிதி, எம்.ஆர். ராதா என்று பலருடன் நல்ல நட்பும், அதேசமயம் முரண்பட்ட கருத்துகளையும் கொண்டிருந்தார். தனது கருத்துகளை ஒளிவுமறைவில்லாமல் துணிச்சலாகப் பேசிய தங்கராசு, 2014 ஜனவரி 5-ல் தனது 87-வது வயதில் மறைந்தார்.

முதியோரைக் கைவிடுகிறோமா நாம்?



உலகின் எந்தப் பெருநகரமாக இருந்தாலும் சரி, போக்குவரத்து சிக்னலில் சில நிமிஷங்கள் நின்று சாலையைக் கடக்க முயற்சி செய்யுங்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் உடல் தகுதியுள்ள விளையாட்டு வீரர் அளவுக்கு நீங்களும் வலிமையும் சுறுசுறுப்பும் உள்ளவராக இருந்தால்தான் சாலையை பச்சை சிக்னல் எரிந்து முடிவதற்குள்ளான நேரத்தில் கடக்க முடியும். சில விநாடிகள் தாமதித்தாலும் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் பெருங்குரலெடுத்து உறுமத் தொடங்கிவிடும்.

வேகமாக நடக்க முடியாமல் உங்களுக்கு உடலில் கோளாறு இருந்தாலோ, மிக கனமான சூட்கேஸ் அல்லது பையை நீங்கள் வைத்திருந்தாலோ, வயதான வராக இருந்தாலோ பொறுமையில்லாத இந்த வாகன ஓட்டிகள் நம்மை இடித்துத் தள்ளிவிடுவார்களோ என்ற அச்சத்துடனும் மரண பயத்துடனும்தான் கடக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான உலக நாடுகளில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளின் வேகம் விநாடிக்கு 1.2 மீட்டர் என்று கணக்கிட்டு, சிக்னல்களில் விளக்குகள் எரியும் நேரத்தை நிர்ணயித்துள்ளனர். ஆனால், வயதானவர்களின் வேகம் விநாடிக்கு 0.7 மீட்டர் முதல் 0.9 மீட்டர் வரையில்தான்!

ஆரோக்கியத்துக்கு மட்டுமே அனுமதி

நகரங்களின் சாலை, போக்குவரத்து சிக்னல், நடை மேம்பாலங்கள், பாதையோர நடைமேடைகள், சுரங்கப் பாதைகள், ஒரு சிக்னலுக்கும் இன்னொரு சிக்னலுக்குமான இடைவெளி, சாலையின் நடுவே கடப்பதற்கான இடைவெளிகள் என்று எல்லாமும் நல்ல ஆரோக்கியமும் இளமையும் வலிமையும் உள்ள மனிதர்களை மட்டுமே மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. ஊன்றுகோலோ, சக்கர நாற்காலியோ தேவைப்படாத, மின்னல் வேகத்தில் சுற்றிவரக்கூடிய ஆரோக்கியமான மனிதர்கள் மட்டுமே நகரங்களில் வசிப்பார்கள் என்ற அடிப்படையில் எல்லாம் கட்டப்படுகின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன.

2030-வது ஆண்டில் உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் நகரங்களில் மட்டுமே அதுவும் அதிக வருவாய் உள்ள சமூகங்களுடன் சேர்ந்து வாழப் போகின்றனர். நகர மக்களில் கால்வாசிப் பேருக்கு 60-க்கும் மேல் வயதாகியிருக்கும்.

வெளியிடங்களுக்குச் செல்வது எளிதல்ல

வயதானவர்கள் தங்களுடைய குடும்பங்களிலும் வெளியிடங்களிலும் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க நினைப்பார்கள், அனைவருடனும் கலந்து பழக விரும்புவார்கள், எல்லா இடங்களுக்கும் செல்ல விரும்புவார்கள் என்ற எண்ணம் பொதுவாக நிலவுகிறது. ஆனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேருக்கு வீட்டைவிட்டு வெளியே செல்வது எளிதில்லை. அவர்களைப் பொறுத்தவரை நகரம் என்பது அவர்களுக்கு விரோதமான இடம். பொதுப் போக்குவரத்து அனைத்துமே முதியோரால் எளிதில் பயன்படுத்த முடியாத வகையில் இருக்கின்றன. பேருந்து அல்லது ரயில்களில் - அவை புறப்படுவதற்குள் ஏறுவது, உட்கார இடம் பிடிப்பது, மற்றவர்களால் இடிக்கப்படாமல், தள்ளப்படாமல், மிதிக்கப்படாமல் பயணிப்பது போன்றவை பெரிய சவால்கள். வீதியில் இறங்கி நடக்கலாம் என்றால் மேடு பள்ளமான நடைமேடைகள், கரடுமுரடான சாலைகள், இரவில் போதிய விளக்கொளி இல்லாமல் மங்கிய பகுதிகள், தெளிவாகத் தெரியாத அடையாள போர்டுகள், இடித்துத் தள்ளிவிடுவதைப் போல வரும் வாகனங்கள், முகப்பு விளக்கினால் கண்களைக் கூசச் செய்யும் வாகன ஓட்டிகள், பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க முடியாதவாறு வீதி இரைச்சல்கள், சாலைத் தடைகள், வேகத் தடைகள், குப்பைக் கூளங்கள், அசுத்தங்கள், மூடிகள் கழன்ற பாதாளச் சாக்கடைத் திறப்புகள், இருட்டில் காத்திருக்கும் நாய், மாடுகள், கழுதைகள் போன்ற பிராணிகள்தான் பெரும்பாலும் வரவேற்கின்றன.

பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் வந்து நிறுத்தாத நகர பேருந்துகள், கால் வைத்து ஏற முடியாத உயரத்தில் பேருந்து படிகள், அப்படியே சமாளித்து ஏறினாலும் உள்ளே வந்து பாதுகாப்பாக நிற்கவோ, உட்காரவோ விடாமல் உடனே வேகம் எடுக்கும் டிரைவர்கள் என்று இந்த அவதிகளைச் சில முறை அனுபவித்த பிறகு, வீட்டிலேயே அடைபட்டுவிடத் தீர்மானிக்கிறார்கள் முதியவர்கள். இதனால், தனிமையும் விரக்தியுமே அவர்களை அதிகம் ஆட்கொள்கிறது என்கிறார், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூக முதியோரியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் கிறிஸ் பிலிப்சன்.

நகர மையங்களில் இளைஞர்கள் ஆதிக்கம்

ஏழை, நடுத்தரக் குடும்பத்து முதியோர் இப்படி வீதிகளுக்கே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால், நகரின் மையப் பகுதிகளில் இளைஞர்களை மட்டுமே அதிகம் பார்க்க முடிகிறது. மற்றபடி பணம், பதவி, செல்வாக்கு உள்ள முதியவர் களை மட்டுமே நகரங்களில் அடிக்கடி காண முடிகிறது.

வசதியும் இளமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே நகரின் முக்கியப் பகுதிகள், முதியவர்களுக்கு அல்ல என்பது புதுவிதமான சமூக அநீதி. இப்போது நம் சமூகத்தில் இது நிரந்தரமாகிவிட்டது. ஏழைகளும் முதியவர்களும் செல்ல முடியாத (ஷாப்பிங் மால் போன்ற) பகுதிகளும் நகரங்களுக்குள் உருவாகி வருகின்றன. இது மிகவும் ஆபத்தானது, சில சமுதாயங்களை வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வழி செய்கிறோம் என்கிறார் பிலிப்சன்.

உலக சுகாதார அமைப்பு இதைத்தான் 2006-ல், ‘முதியவர்களுக்கு உகந்த நகரங்கள்’ என்ற திட்டம் மூலம் அமல்படுத்த விரும்பியது. இதில் உலகம் முழுக்க 258 நகரங்களும் சமூகங்களும் இணைந்தன. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரம் முதலாவதாக இணைந்தது. வடக்கு லண்டனில் உள்ள ஐலிங்டன் சமுதாயத்தையும் இணைக்க விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. நகரக் கட்டமைப்புகளில் முதியவர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே இம்முயற்சியின் நோக்கம்.

வீடுகள், அடுக்ககங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என்று ஒவ்வொரு இடமும் எல்லாவித வயதினரும் பயன்படுத்த எளிதான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். எல்லாத் திட்டமிடல்களிலும் முதியவர்களின் உடல் நிலைமைகளையும் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், அரசும் பெருநிறுவனங்களும் இதில் அக்கறை காட்டுவதில்லை.

மான்செஸ்டர் நகரின் ஒரு பகுதியில் உள்ள கடைகளில், கடைகளுக்கு முன்பாக ஓரிரு இருக்கை களைப் போட ஆரம்பித்திருக்கின்றனர். வயதானவர்கள் நீண்ட நேரம் நின்று எதையும் பார்த்து வாங்கச் சிரமப் படுவார்கள் என்பதால் வந்ததும் உட்கார இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் வெயில், மழையிலிருந்து காக்க மேற்கூரைகளும் வயதானவர்கள் அமர இருக்கைகளும் போடப்படுகின்றன.

பிற நாடுகளிலும் முதியவர்களுக்கு எப்படியெல்லாம் பொது இடங்களில் வசதிகள் செய்து தரலாம் என்று சிந்திக்கின்றனர். அடேக், கைசர் என்ற சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் ஜெர்மனியில் முதியோர் களுக்காகவே அகலமான ஜன்னல்கள், வழுக்காத தரைகள், உயரக் குறைவான ஷெல்ஃபுகள், பிரகாசமான விளக்குகள், பெரிய எழுத்தில் அச்சிடப்பட்ட லேபிள்கள் என்று வசதி செய்துள்ளன. எழுத்துகளைப் பெரிதாக்கிப் படிக்க உதவும் பூதக் கண்ணாடிகளையும் கயிறு கட்டி ஆங்காங்கே தொங்கவிட்டுள்ளன.

ரசிப்பதற்கான வசதிகள்

தனியார்களுக்குச் சொந்தமான இடங்களில் முதியவர்கள் தங்கி சிறிது நேரம் இளைப்பாறவும், நண்பர்களுடன் பேசி மகிழவும், வேடிக்கை பார்க்கவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டிட வடிவமைப்பாளர்கள், முதியோருக்கு இயன் முறை மருத்துவம் செய்வோர், குடியிருப்போர் சங்கத்தவர் சேர்ந்து இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தெரு விளக்குகளின் கீழேயே வசதி யாக உட்கார்ந்துகொள்ளவும், நடைமேடைகளில் சிறிதுநேரம் அமரவும் சாய்வான இருக்கைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. ஒரு குடியிருப்புக்கும் அடுத்த குடியிருப்புக்கும் இடையிலான வேலிகூட முதியோரை வருத்தாத வகையிலும் அவர்கள் விரும்பினால் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நடக்கவும் ஏற்றபடி வடிவமைக்கப்படுகின்றன. இதன் வாயிலாக நகரங்களில் முதியவர்களை வீட்டுக்குள் விரட்டி அடிப்பதற்குப் பதிலாக அவர்களையும் நம்மோடு சேர்த்து எல்லாவற்றையும் ரசிக்க அனுமதிக்க முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை அரசு, தனியார் துறை, சமுதாயம் என்று அனைத்துத் தரப்பும் இணைந்து தொடர வேண்டும்.

© ‘தி கார்டியன்’, | தமிழில் சுருக்கமாக: சாரி |

இந்தப் 'பாவம்' செய்யாதவர்கள் கை உயர்த்துக!

தன்னுடைய பால்ய காலத்தில் கிடைக்காத ஒன்றை தன் பிள்ளைகளுக்கு அளிப்பது அன்பின், பிரியத்தின் ஒருவகையென்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அப்படியான பொருட்கள் அந்தக் குழந்தைகளை ஒருவிதத்தில் மகிழ்ச்சியூட்டினாலும், விதவிதமான பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்க்கவும் தவறுவதில்லை.

கிட்டத்தட்ட கோடை விடுமுறை துவங்கிவிட்டது. குடியிருப்பு பகுதிகளின் வீதிகளிலிருந்து பத்து பனிரெண்டு வயதுப் பிள்ளைகள் ஹோண்டா ஆக்டிவா (அ) ஹீரோ ப்ளெஸ்ரை வண்டிகளில் சாலைகளில் வந்து நுழைகின்றன. சாலையில் நிதானமாய்ச் செல்லவேண்டும், இடது பக்கம் செல்ல வேண்டும், பின்பக்கக் கண்ணாடி பார்க்க வேண்டும், திருப்பங்களில் ஒலியெழுப்ப வேண்டும், திரும்பும்போது பகல் நேரங்களில் கை காட்ட வேண்டும் எனும் எந்தவிதத் தெளிவும், அறிவும் இல்லாத அந்தப் பிள்ளைகள் வளைந்து நெளிந்து பட்டாம்பூச்சி போலச் செல்வதையெல்லாம் ரசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. குப்பென அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது. அவர்களில் பலர் தரையின் இரண்டு பக்கமும் கால் ஊன்றும் அளவுக்குக்கூட உயரமாக இருப்பதில்லை.

அதே சாலைகளில்தான், இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப் போட்டவாறு எவ்வித பேலன்ஸும் இல்லாமல், தடுமாறியபடி ஏதோ ஒரு நிதானத்தில், புதிதாக வண்டி ஓட்டும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் சென்று கொண்டிருக்கின்றனர். நம்ம ஊர் சாலை அமைப்புகளுக்கு எவ்விதமும் பொருந்தாத எருமைக்கிடாய் அளவும், சிறுத்தையின் பாய்ச்சலும் கொண்ட பெரிய பைக்குகளில், ஒல்லியாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி 'விர்..விர்'ரென சீறலோடு பாய்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்பது மறைந்து, பைக் கேப்பில் மினிடோர் என ஆம்புலன்ஸ்க்கு நிகரான அவசரத்தில் மினிடோர்காரர்கள் பறக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ஒலிப்பான்களில் அகிலமே அதிர்கிறது.

இந்த ஆக்டிவா, ப்ளெஸ்ஸர் பிள்ளைகளின் அப்பா / அம்மாவையோ, தாத்தா/ பாட்டியையோ சந்திக்கையில் "எங்க அஸ்வினு / சுவாதி இப்பவே வண்டில என்ன போடு போடுது தெரியும்ங்ளா!?" எனச் சொல்லும்போது அவர்களிடம் வழிந்தோடும் பெருமையை நொய்யல் ஆற்றில் திருப்பிவிட்டால் அத்தனை கழிவுகளையும் கடலுக்கே அடித்துச் சென்றுவிடும்.

வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சார்பாக, அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்... எல்லாப் பாய்ச்சல்களும், பெருமைப் பீற்றல்களும் எந்தவொரு தீங்கும் நடக்காதவரைதான்... ஒற்றைச் சிறு கவனப்பிசகில், எல்லா ஒளியும் பொய்த்து இருள் சூழும் கொடுங்கணத்தில்... பெருமையாகவும், பொறாமையாகவும் பார்த்த அத்தனை உறவும் நட்பும் ஒத்த குரலில், "விரலுக்கு தவுந்த வீக்கம் வேணும்.... இந்த வயசுல இந்தப் புள்ளைக்கு எதுக்கு வண்டி" எனச் சொல்லும். அந்நிலையில் அவர்கள் அப்படிச் சொல்வது சரியா தவறா என நீதிபரிபாலனை செய்யும் மனநிலையில் நீங்க இருக்கச் சாத்தியமில்லை. காரணம், சூன்யமான வாழ்வின் மிகக் கசப்பான காலகட்டத்தில் இருப்பீர்கள்.

தேவைக்கும், தகுதிக்கும் மீறிய ஒரு பொருளை பெருமையென வாங்கிக் கொடுப்பது அல்லது இயக்கக் கொடுப்பது பாசம், பிரியம், கௌரவம், அந்தஸ்து என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் உலகில் வேறெதுவும் இல்லை. அப்படி அளிக்கும் ஒன்றின் மூலம் உருவாகும் தீங்கின் அத்தனை பாவமும் கொடுத்தவர்களையே சாரும்!

ஈரோடு கதிர் - எழுத்தாளர், அவரது வலைதளம் http://maaruthal.blogspot.in/

This two-wheeler won’t budge without helmet

LUCKNOW: His innovation has power to save lives. On Monday, Himanshu Garg, a student from Agra, received cash prize of Rs 5 lakh from Chief Minister Akhilesh Yadav for developing a technology that ensures a motorcycle cannot start until the rider straps on a helmet.

For Himanshu, it is not his first experiment with practical science. His most recent innovation involves a bike that not does start unless the rider wears a helmet. More over, the engine's power will be cut off if the helmet is removed during the ride.

The electronic fuse can be charged with a solar panel or mobile phone chargers. The price of the helmet, once the prototype is finalised and ready for commercial use, will be higher than of regular ones. Garg also said on Monday he had earlier developed a technology that could prevent train collisions by bringing a train to a halt at a 300 meter distance of each other if they were on the same track. He also said he was felicitated by former Railway minister Mamata Banerjee for his feat.

On Monday, the wiz kid demonstrated the technique in the presence of Akhilesh at the latter's official residence. Lauding his efforts, the CM recommended that industry bodies like ASSOCHAM help commercialise the product. Announcing the award to facilitate more innovations by Garg, Akhilesh also said his government will set up an Innovation Fund to encourage scientific temper among students.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...