Tuesday, June 2, 2015

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: ஜூன் 4 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 4 முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறையின் இணை இயக்குநர் (பணியாளர்) கே.ஸ்ரீதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29-ந் தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில்,வியாழக்கிழமை (ஜூன் 4) முதல் மாணவர்கள் தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த இணையதளத்துக்குள் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துவிடலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றுயிராக கிடந்த வாலிபர்... காப்பாற்ற போராடிய கலெக்டர்... கண்டுகொள்ளாத 108 ஆம்புலன்ஸ்!

நாகப்பட்டினம்: நாகையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் நின்று போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அழைத்தும், 108 ஆம்புலன்ஸ் வாகனம் கடைசி வரை வரவில்லை.
நாகை டாடா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். மீனவரான இவர் மோட்டார் சைக்கிளில், நாகூரில் இருந்து நாகை நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தார். அப்போது நாகை கலெக்டர் அலுவலகம் அருகில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அந்த சமயத்தில் கலெக்டர் பழனிச்சாமி தன் வீட்டில் இருந்து, அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். விபத்தை பார்த்ததும் உடனடியாக காரை நிறுத்தினார்.

காரில் இருந்து இறங்கி அங்கிருந்தவர்கள் உதவியுடன் சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி விபத்தில் காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தார். ஏராளமான ஆட்டோக்கள் சென்றபோதும், ஒரு ஆட்டோ டிரைவர் கூட நிறுத்தவில்லை. பின்னர் ஆட்சியரே மருத்துவ இணை இயக்குனரை தொடர்பு கொண்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் 108 ஆம்புலன்சும் வரவில்லை. 

கலெக்டர், 45 நிமிடங்களாக, நடுரோட்டில் நின்று அழைத்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் கோபடைந்த கலெக்டர், மருத்துவமனை அதிகாரிகளைத் திட்டி தீர்த்து விட்டார். பின்னர் நாகையில்  நின்று கொண்டிருந்த ராஷ்டிரிய சாம்விகாஸ் யோஜனா திட்டத்துக்கான ஜீப்பை எடுத்துக்கொண்டு, மருத்துவ இணை இயக்குனர் குருநாதனே சம்பவ இடத்துக்கு வந்தார். அதன்பிறகு  சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, சாலையில் நின்று, உயிருக்கு போராடியவரை காப்பாற்ற முயற்சித்த போதும் அவருக்கு கைகொடுக்காமல் நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர்களின் செயலையும், அவசரத்திற்கு உதவாத, 108 ஆம்புலன்ஸ் சேவையையும் மக்கள் கடுமையாக விமர்சித்தனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு


மும்பை: பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கு, வரும் 30ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது.


நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெளிக்கொணர்வதற்கும், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கவும், பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற, கடந்த ஆண்டு ஜனவரியில், ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளில், ஆண்டு குறிப்பிடப்படவில்லை. அதன்பின், அச்சிடப்பட்ட நோட்டுகளின் பின்புறம், கீழ் பகுதியில் சிறிய அளவில் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 30ம் தேதி வரை, வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கு உள்ள வங்கிக் கிளையில், பழைய 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அளித்து மாற்றிக் கொள்ளலாம். 10க்கும் மேற்பட்ட, 500 அல்லது 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது, வங்கிக் கணக்குடன், குடியிருப்பு மற்றும் அடையாள சான்றை அளிக்க வேண்டும்.


ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் நோட்டு களை மாற்றும் போது பான் எண்ணை குறிப்பிட வேண்டும். பழைய நோட்டுகளுக்கான பணம், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.அதன்பின், இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கியில் கணக்கு வைத்திருப்பதுடன், அடையாள மற்றும் குடியிருப்பு சான்றுகளை வழங்க வேண்டும்.


வரும் 30ம் தேதிக்கு பின், வங்கி அல்லது ஏ.டி.எம்., மையங்களில் பழைய நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இவ்வாறு சேகரிக்கப்படும் பழைய நோட்டுகள், இறுதி தேதிக்கு பின், ரிசர்வ் வங்கியால் அழிக்கப்படும். இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிரைவரை தேடி வருகின்றனர்.

மருத்துவராகப் பதிவு செய்ய தேர்வு நடத்த மத்திய அரசு முயற்சி: டாக்டர்கள் சங்கம் கண்டனம்

எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த பிறகு மருத்துவராக இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய தேசிய அளவிலான தேர்வில் வெற்றி பெற வேண்டும் என, மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய முறைக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எம்.பி.பி.எஸ். படிப்பவர்கள் பயிற்சி மருத்துவத்தை முடித்த பிறகு தேசிய அளவில் நடத்தப்படும் வெளியேறும் தேர்வில் ("எக்சிஸ்ட் டெஸ்ட்') வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்ற பின்னரே மருத்துவராக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய முடியும்; முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை எழுத முடியும் என்ற புதிய முறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
மீண்டும் எதற்கு தகுதித் தேர்வு? இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்தான் தேர்வுகளை நடத்துகின்றன. ஒரு மருத்துவராக வெளிவருவதற்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர்தான் ஒருவர் மருத்துவராகிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு தகுதித் தேர்வு என்பது அவசியமற்றது.
மாற்று என்ன? ஒரு தகுதித் தேர்வின் மூலம் மட்டுமே மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தி விட முடியாது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தரம் குறைவாக உள்ளது. பாடத் திட்டங்களிலும், பயிற்சி முறைகளிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
இந்தக் குறைபாடுகள் முதலில் சரி செய்யப்பட வேண்டும்.
மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டும். அதை விடுத்து முதுநிலை மருத்துவ மாணவர் நுழைவுத் தேர்வில் மாணவர் வாங்கும் மதிப்பெண்களில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன என்ற காரணத்தைக் காட்டி வெளியேற்றும் தேர்வு முறையைக் கொண்டு வருவது சரியல்ல.
இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மருத்துவர்களின் நலன்களுக்கு எதிரான செயலாகும். எனவே வெளியேற்றும் தேர்வு முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்'' என்று டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம் செய்த கல்வி நிறுவனத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: ராதிகா தடாலடி



ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றும் நடிகை ராதிகா, அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில்ரீதியானது மட்டுமே, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ராதிகா தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமூக தளங்களில் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் புகைப்படங்கள் மற்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சிலர் அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றெல்லாம் தகவல் பரப்பினர்.

இதையடுத்து, ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாழும் மொழி ஆக வாய்மொழி பேணுவோம்

மண் சார்ந்தும், மனம் சார்ந்தும் வெளிப்படும் ஒலிக்குறிப்புகள் பொருள் உணர்த்தும் பான்மையில் மொழியாகிவிடுகின்றன. சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் இடையில் உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைவதுபோல வளரும் உரையாடல் பல்வேறு கருத்துருக்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்துவிடுகிறது.
அறிவும், அனுபவமும் கூடிக்குலவிப் பெற்றளிக்கும் குழந்தையேபோல் வளரும் இன்பம் இலக்கியமயமாகிறது. இவ்வண்ணம், மக்கள் பேசும் மழலையில் தமிழ்வாணி தன்னைப் புதிதாய்ப் பிறப்பித்துக் கொள்கிறாள். ஒலிவழியாக வெளிப்படும் மொழியின்தன்மை பொதுமை கொண்டிருப்பினும் மொழிபவர்களின் குரல் வளம், குணநலம், மண் மணம் கலந்து அது புதுமை பெற்றுவிடுகிறது. இத்தகு வட்டாரத் தன்மைகளின் பங்களிப்புகளால் செந்தமிழ் செழுந்தமிழாகி வளர்கிறதே ஒழியச் சிதைவது கிடையாது.
மனோன்மணியம் சுந்தரனார் சொல்வதுபோல, உலக வழக்கு அழிந்து ஒழிந்தால்தான் மொழியானது சிதையும். இந்த அழிவிலிருந்து மொழியைக் காக்க, இலக்கிய வழக்கு மட்டும் போதாது. உலகியல் வழக்கும் மிகமிகத் தேவை. உற்று கவனித்தால், உலகியல் வழக்கிலிருந்துதான் இலக்கிய வழக்கே உருவாவது புலனாகும். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் என்கிறது தொல்காப்பியம்.
எனவே, ஒரு மொழியைச் சிதைவுறாமல் காக்கவும், செழுமையோடு வளர்க்கவும் உடனடியாகச் செய்ய வேண்டியது செழுந்தமிழை, மழலைச் செல்வங்களில் செம்பவள மெல்லிதழ்களின் உள்ளே தவழ்ந்து உலவும் செந்நாவுகளில் நட(ன)மாட விடுவதுதான். பேச்சில் இருந்து சொல்லுக்கும், சொல்லில் இருந்து எழுத்துக்கும் வருவதே இயல்பான கற்றல் முறை.
ஆனால், நடைமுறையில் என்ன செய்கிறோம்? எழுத்துகளைத்தான் வலிந்து திணிக்கிறோம். எழுதுகோல்களைவிடவும் பிஞ்சு விரல்களை அஞ்சும்படியாய் வளைக்கிறோம், சுழிக்கிறோம், இழுக்கிறோம். கூடவே அவர்தம் நெஞ்சங்களையும். பற்றாக்குறைக்கு, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்கிற அங்கலாய்ப்பு வேறு. இதில் கொடுமை என்னவென்றால், ஐம்பது வயதுக்கும் மேலே வ(ள)ர வேண்டிய அறிவை, ஐந்து வயதுக்குள்ளேயே அவசரப்பட்டுத் திணித்துவிட வெறிகொள்வதுதான்.
புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கக் கட்டாயப்படுத்துவதைவிட, புதிய உறவுமுகங்களை நிறுத்திப் பேசவிடுவதே கற்றலுக்குப் பெரிதும் துணை புரியும். பேச்சு, பேச்சுக்குப் பதில் பேச்சு என்று வளர்வதே உரையாடல். அதனோடு சேர்ந்து உறவும் வளர்கிறது.
எங்கள் ஊர்ப் பகுதிகளில் பேச்சாக்குதல் என்றே ஒரு மரபு உண்டு. பழகியவர்களையும், புதியவர்களையும் கண்டு பேச்சாக்குவது வழக்கம். குறை களைந்து நிறைபடுத்துவதே ஆக்கம். பேச்சு ஆக்கம் எழுத்து ஆக்கம் ஆகவும், ஏற்கெனவே எழுத்தாக்கம் ஆகியவை பேச்சாக்கமுமாக ஆகிறபோது வாழ்க்கை ஆக்கம் பெறும்.
ஆக, ஆக்குதல் என்ற சொல், எவ்வளவு அடர்பொருள் தருகிறது பாருங்கள். சொல்லச் சொல்லத்தான் சொல் வ(ள)ரும். பாடப் பாடத்தான் பாட்டு. எழுத எழுதத்தான் எழுத்து. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் என்பதுதான் நம்மரபு.
இன்றைய கல்வியில் சித்திரம் இருக்கிறது. மனப்பாடம் இருக்கிறது. நல்லதொரு நாப்பழக்கம் நல்கும் பேச்சுத் தமிழ் இருக்கிறதா? ஆனால், ஸ்போக்கன் இங்க்லீஷ் மட்டும் இருக்கிறது. அதற்கு லாங்குவேஜ் லாபும் (Language lab) இருக்கிறது. அப்படியொரு மொழிப் பயிற்சிக் கூடம் தமிழுக்கு இருக்கிறதா? நன்றாய்த் தமிழில் பேசப் பழகிவிட்டால் ஆங்கிலம் வராது எனச் சொல்வது நவீன மூடத்தனம்.
தமிழின் முதல் எழுத்துக்களான 30 தொடங்கி, முழுவதுமான 247 எழுத்துக்களோடு, ஒலித்தலுக்காக நாம் உருவாக்கிக் கொண்ட ஷ, ஸ, ஜ, ஹ, க்ஷ உள்ளிட்ட எழுத்துக்களையும் அறிந்து கொண்ட குழந்தைக்கு வெறும் 26 எழுத்துக்களைக் கொண்ட ஆங்கிலத்தைக் கற்றுத் தேறுவதில் என்ன சிரமம் இருக்க முடியும்?
எங்கள் வீட்டு மாடியில் வாழ்கிற வட இந்தியப் பெண் குழந்தை தன் தாயிடம் ஹிந்தியிலும், என் தாயிடம் தமிழிலும், எதிர்வீட்டு மாயா அக்காவிடம் தெலுங்கிலும், பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் மலையாளத்திலும், சில ஆங்கிலச் சொற்கலந்தும் பேசிக்கொள்கிறாள். (இதில் வட்டாரத் தமிழ் வேறு. மெய்யாகவே பாரத விலாஸ்தான் எங்கள் அடுக்ககம்).
அவள் இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. சென்ற பிறகு, கற்றுக் கொடுப்பவர்களின் கட்டாயத் திணிப்பால், வேறு எந்த மொழியைவிடவும் நம் சொந்த மொழியாகிய தமிழ்தான் உயிரிழக்கும். கட்டாயம் அவள் வீட்டில் ஹிந்திதான் பேசுவாள். ஆனால், தாய்மொழி தமிழாகக் கொண்ட தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் வீடுகளில் தமிழ் இருக்காதது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, செம்மையான ஆங்கிலமும். பிள்ளை வளர்கிறபோது பேச்சுதான் முதலில் இயல்பாக வருவது.
எண்ணியதை எண்ணியவாறு எடுத்துச் சொல்ல குழந்தைக்கு முதலில் மொழிச் சுதந்திரம் வேண்டும். வாயைத் திறந்தவுடன் வரும் அம்மா - அடிக்கோ, அதட்டலுக்கோ பயந்து விழுங்கப்பட்டு - மம்மியென மொழி மாறி, முணுமுணுக்கப்படுகிற போதே சொல்ல வந்தது மறந்துவிடுகிறது. தொடர வேண்டிய சிந்தனைக்கண்ணி அறுந்துவிடுகிறது.
தயக்கம் பெருகி, தேக்கமாகிறபோது வளர்ச்சி குன்றிவிடுகிறது. அதனால்தான், வெடிப்புறப் பேசு என்று கட்டளையிடுகிறார் பாரதி. எல்லாக் கவலைகளையும், தயக்கங்களையும் விட்டுவிட்டுப் பேசுகிற வீட்டிலேயே தனக்கான மொழி மறுக்கப்படுகிறபோது, அது வீடா? சின்னச் சிறைச்சாலை ஆதல் தகுமா?
புகுந்த வீட்டில் தன் வாக்குக்கு மதிப்பில்லையென்று நீதிமன்றத்துக்கே சென்று மணவாழ்வை நிராகரிக்க நினைப்பதை நியாயம் என்கிறோமே, அதில் பகுதிப் பங்கேனும் பிள்ளைகட்கு இல்லையா?
அந்த ஆத்திரத்தில்தான் பாரதி, "வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ' என்று துரத்துகிறார். இவரது வாக்கின்படி, எந்த மொழி கற்கவும் தடையில்லை. ஆனால், சொந்த மொழி பேசுதற்குத் தடை விதிப்பதுதான் கொடுமை. அது தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் சுயகொள்ளி.
எனவே, ஆங்கிலமோ, ஹிந்தியோ, அயலக மொழிகளோ, யாது கற்பதற்கும் அவரவர் வாய்மொழியாகிய தாய்மொழி தூண்டுதலாகித் துணை செய்யுமே ஒழியத் தடையாகாது. என்றாலும், தமிழகத்தில் தமிழ் அதற்குத் தடையெனக் கருதுதற்குப் பெருங்காரணம், இங்கு எழுத்துமொழி வேறாகவும், பேச்சுமொழி வேறாகவும் இருக்கிறது. நாளுக்கு நாள் இதன் இடைவெளி அதிகமாகிக் கொண்டு வருகிறபோது பயன்பாடு குறைகிறது.
தேர்வில் எழுதப் பயன்படும் மொழியாகத் தமிழ் இருக்கிறதேயல்லாமல், பேசப் பயன்படும் மொழியாக இல்லை. எழுத்துப் பயிற்சிக்குக் கொடுக்கப்படுவதுபோல, பேச்சுப் பயிற்சிக்கு மதிப்பெண்கள் இல்லை.
மேலும், எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பவர்களே தடுமாறும்போது, வருங்காலத்தில் தமிழ் எங்ஙனம் வாழும்? பண்டைக்காலப் பேச்சு வழக்கை அடியொற்றிப் பிறந்த சங்கப் பாடல்கள் பயிற்றுவிக்கப்படுகிறபோது, சமகாலத் தமிழின் பேச்சு வழக்குப் படைப்புகள் பாடமாகக் கூடாதா?
தாமே படைக்கிறவண்ணம், படிப்பவர்களை உருவாக்கும் பாட முறைகள் என்றைக்கு நடைமுறைக்கு வருகின்றனவோ, அன்றைக்குத்தான் அதற்குக் கல்வி என்று பெயர். ஆக, அடிப்படைக் கல்வியில் பேச்சுத் தமிழ் வேண்டும். வட்டார வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் வளர்ந்த நடை நோக்கிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கான புதிய அகராதிகள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். முதலில், நினைப்பதைச் சொல்லவும், சொல்லியவண்ணம் எழுதவும் பழகுதற்கு இடம் கொடுக்க வேண்டும்.
அப்போது, பிள்ளைகளின் கருத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய, பிழைகளுக்கு அழுத்தம் கொடுக்கலாகாது. இதற்கு, இசையும், நாடகமும் சிறப்பான வாயில்கள். சில தனித்தன்மை வாய்ந்த பள்ளிகளில் இவற்றுக்குச் சிறப்பிடம் உண்டு. சின்னத்திரை, பெரியதிரைக் காட்சிகளை விட்டொதுக்கி, பல்கலைக்கழக இசை, நாடகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு இதற்கெனப் பயிற்சி அளிக்க வேண்டும்.
பெற்றோர் கூட்டம் நடத்துவதுபோல, பெற்றோர்களின் பெற்றோர்கள் கூட்டமும் (grandparents meeting) நடத்த வேண்டும். அவர்களைக் கொண்டு பாடல்களும், கதைகளும், விடுகதைகளும், பழமொழிகளும், சொலவடைகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படுமானால், பன்முக ஆளுமைபெற்று இளையபாரதம் எழுச்சியோடு வளரும். காரணம், அறிவியல் சார்ந்த அனைத்துத் துறைக் கல்விக்கும் எண்ணும் எழுத்துமே அடிப்படை. கண்ணெனத் தகும் இவ்விரண்டையும் செம்மையாய்ப் பெற மொழியே துணை.
வாக்கு நன்றானால் வாழ்வும் நன்றாகும். வாழ்வையும், வாக்கையும் இனிது பேணுகிற நாட்டுக் கல்வியும், வீட்டுக் கல்வியும் தவிர்த்து வழங்கும் வேறுவிதப் பயிற்சிகளால் புல்லே வளராதபோது, நல்ல புதல்வர்களா வளருவார்கள்?
பேச்சுத் தமிழ் மரபு பேணப்படாத நிலை நீடிக்கும் என்றால், வழக்கொழிந்த மொழிகளின் வரிசையில் தமிழும் போய்ச் சேரும். பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்பதை உணர்ந்து கடைப்பிடித்தால், நாளும் தமிழ் மகள் புதிதாய்ப் பிறப்பாள்.

கட்டுரையாளர்:
துணைப் பேராசிரியர்,
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,
புதுச்சேரி.

உயர் கல்வியில் நெகிழ்வுத் தன்மை!

நிகழாண்டில் பொறியியல் கல்விக்கான ஆர்வம் குறைந்து, கலை அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதை வெளிப்படையாகக் காண முடிகிறது. கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப் படிவம் பெறுவதற்காக அலைமோதும் மாணவர், பெற்றோர் கூட்டமே இதற்குச் சான்று.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பப் படிவம் வாங்கியவர்கள் அனைவருமே பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்கவில்லை. கடைசி நாள் வரை சுமார் 1.60 லட்சம் படிவங்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
பொறியியல் படிப்பு மட்டுமே படிப்பு என்கின்ற மாயை விலகி, மற்ற படிப்புகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம். இருப்பினும், இந்த மாற்றத்துக்கு ஏற்ப, மாணவர்கள் சேர்க்கையைக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் எளிமைப்படுத்தியாக வேண்டும். இல்லையெனில், இதிலும் முறைகேடுகளும், நன்கொடை அபகரிப்பும் இடம் பெறுவது நிச்சயம்.
தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 635 கலை - அறிவியல் கல்லூரிகளும், 672 கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 85% தனியார் கல்லூரிகள். இந்தக் கல்லூரிகள் எவ்வாறு மாணவர்களைச் சேர்க்க வேண்டும், இவர்களது விண்ணப்பப் படிவத்தின் விலை எவ்வளவாக இருக்க வேண்டும் என்கிற நடைமுறைகள் யாவும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய சிக்கல்- ஒரு மாணவர் அல்லது மாணவி எத்தனை கல்லூரிக்கு விண்ணப்பித்துக் காத்திருக்க முடியும் என்பதுதான். இடம் கிடைப்பது அரிது என்ற அச்சத்தால் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் நன்கொடையை வெளிப்படையாக அல்லது மறைமுகமாகச் செலுத்திவிட்டுச் சேரும் நிலை உருவாகி வருகிறது.
பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 60%க்கு அதிகமாக மதிப்பெண் பெற்றவர்கள். இளநிலைப் படிப்புகள் எதுவானபோதிலும், அதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையானது, அக்கல்லூரியில் இருக்கும் இடங்களைவிட மூன்று, நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு மாணவரும் நான்கு அல்லது ஐந்து கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் நிலையும் உள்ளது.
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு எவ்வாறு பொதுக் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகிறதோ, அதேபோன்று கலை அறிவியல் இளநிலைப் படிப்புக்கும், பி.எட். போன்ற கல்வியியல் படிப்புக்கும் பொதுக் கலந்தாய்வு நடத்தப்பட்டாக வேண்டும். அதுதான் நேர்மையான மாணவர் சேர்க்கைக்கு வழி வகுக்கும். 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்காக பொதுக் கலந்தாய்வு நடத்த முடியும் என்றால், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொதுக் கலந்தாய்வு நடத்துவது சாத்தியமே!
பொதுக் கலந்தாய்வை சென்னையில் நடத்தாமல், தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் நடத்தலாம். பொறியியல் கலந்தாய்வுக்கு கட்ஆஃப் மதிப்பெண் நிர்ணயிப்பதைப் போல கலை அறிவியல் படிப்புகளுக்கு நிர்ணயிப்பது சாத்தியமில்லை. இருப்பினும், இதையும் எளிமைப்படுத்த முடியும். ஒவ்வோர் இளநிலைப் படிப்புக்கும் ஒரு முதன்மைப் பாடம் உண்டு. அதில் அவர் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடத்துவது மிக எளிது.
உதாரணமாக, ஆங்கில இலக்கியம் படிக்க விரும்பும் மாணவரின் தரவரிசை அவர் பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அமையும். அதேபோன்று, கணிதம், கணக்கியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு அவர்தம் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி ஒரே நாளில் தமிழ்நாட்டின் அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கையை முடிக்க முடியும். இதனால், பெற்றோருக்கு அலைச்சல் இருக்காது. மாணவர்கள் பதற்றத்துடன் பல்வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யும் செலவு மிச்சமாகும்.
தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், அந்தக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை, கலை அறிவியல் படிப்புகளுக்காக ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? இதன்மூலம், இளநிலைப் படிப்பில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் பகுதியில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆயிற்று. பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேராததால் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏற்பட்டுள்ள மனவாட்டத்துக்கு மருந்தும் ஆயிற்று.
பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்தக் கல்லூரிகள் வழங்கவுள்ள சில இளங்கலைப் படிப்புகளுக்கு மட்டுமே அந்தந்தப் பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குக் கட்டுப்பட்டதாகவும், அவர்கள் நிபந்தனைப்படி ஆசிரியர், பேராசிரியர் நியமனங்களைச் செய்ய வழி கோலப்பட வேண்டும். பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் வரவில்லை என்பதற்காக அந்த வளாகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் வீணாக வேண்டுமா?
தற்போதும்கூட, பல பொறியியல் கல்லூரிகள் தங்கள் கணினிப் பாடப் பிரிவுக்கு வரவேற்பு இல்லை என்பதால், அந்தப் பிரிவுக்குப் பதிலாகத் தற்போது அதிக வரவேற்பு உள்ள சிவில் அல்லது மெக்கானிக்கல் தொடங்க விண்ணப்பிக்கிறார்கள். மாணவர்கள் விரும்பும் படிப்புகளைப் பரவலாகக் கிடைக்கச் செய்யவும், அவற்றுக்கு வரவேற்பு குறையும்போது அதை நிறுத்தி வைக்கவுமான நெகிழ்வுத் தன்மை உயர் கல்வியின் இன்றைய தேவை.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...