Saturday, August 8, 2015

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் எண்: மத்திய அரசு முடிவு

Dinamani

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் ஆதார் எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
வெளிநாடுவாழ் இந்தியர்கள், பிற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உள்பட இந்திய மண்ணைச் சேர்ந்த அனைவருக்கும் ஆதார் எண் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளைச் செய்து முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி: இதனிடையே, அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கூறியதாவது: இறக்குமதி செய்யப்பட்ட தரை விரிப்புகளை இந்தியாவில் வர்த்தகம் செய்ய அனுமதி கோரி பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து அன்னிய முதலீடுகள் ஊக்குவிப்பு வாரியம், அதற்கு கடந்த ஏப்ரலில் ஒப்புதல் வழங்கியது. அலுமினியப் பொருள்கள் மீதான சுங்க வரி தொடர்பாக இந்திய அலுமினிய சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார் அவர்.
சர்க்கரை ஏற்றுமதி: ஏற்றுமதி தொடர்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அமெரிக்காவுக்கு 8,000 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த மாதம் 21-ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 6,101 டன்னும், அமெரிக்காவுக்கு 8,071 டன்னும் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பியூர் டயட் இந்தியா, சுமிந்தர் இந்தியா ஆர்கானிக்ஸ், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் அந்நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்து வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Friday, August 7, 2015

பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!

காரில் ஒரு பக்கம் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அமர்ந்திருக்க, மறுபக்கம் வங்காளக்கடலை ரசித்தபடியே பயணம் செய்யும் அழகிய அனுபவத்தை தரக்கூடியது கிழக்கு கடற்கரை சாலை.
குறைந்த செலவில் வார விடுமுறையை நிறைவாக கொண்டாட விரும்புவர்களுக்கு ஈ.சி.ஆர் ஒரு வரப்பிரசாதம். ஒரு காரும், நான்கு நண்பர்களும் இருந்தால்போதும், காலை முதல் மாலை வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஈ.சி.ஆரில் டிரிப் அடித்துக்கொண்டிருக்கலாம். 

நெருக்கடியான சென்னை சாலைகளில் பயணம் செய்து அலுப்பானவர்கள், விசாலமான, காற்றோட்டமான, இயற்கை எழில் கொஞ்சும் ஈ.சி.ஆரை பார்த்தால் குழந்தையை போல துள்ளி குதித்துக்கொண்டு கார் ஓட்ட ஓடிவருவார்கள். 

திருவான்மியூரில் ஆரம்பித்து முட்டுக்காடு படகு குழாம், மாமல்லபுரம், புலிக்குகை, கடப்பாக்கம் கோட்டை, மரக்காணம் உப்பளம் என வழியில் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு கலாச்சார நகரமான புதுவையில் இரவில் தங்கிவிட்டு, மறுநாள் மீண்டும் சென்னை நோக்கி செல்வது. இதுதான் ஈ.சி.ஆரில் டிரிப் அடிக்கும் பொரும்பாலான இளைஞர்களின் உற்சாக திட்டமாக உள்ளது.  ரோட்டுக்கடை முதல் அரேபியன் ரெஸ்டாரண்ட் வரை ஈ.சி.ஆரில் இடம்பெறாத உணவகங்களே இல்லை. இவ்வளவு ரம்மியமான கிழக்கு கடற்கரை சாலைக்கு வேறு சில பெயர்களும் உள்ளது. அது, ‘‘கிழக்கு கலவர சாலை’’. 

இருவழி சாலையான ஈ.சி.ஆரில் வாரவிடுமுறை நாட்களில் மட்டும்  சுமார் 15,000 வாகனங்கள் கடப்பதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். அதே சமயம் வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்காமல் இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாளுக்கு நாள், அங்கு சாலை விபத்துகளில் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 

சாலை விபத்து என்பது தாங்கிக்கொள்ள முடியாத சோகம், இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு. ஆனால் இன்னொரு சாரருக்கு ஈ.சி.ஆர் சாலையில் நடக்கும் விபத்து, 'வியாபாரம்’.
வாரவிடுமுறை நாட்களில் ஈ.சி.ஆரில் விபத்து நடக்காதா என்று ஏங்கி காத்திருக்கிறது அந்த கழுகு கூட்டம். விபத்தில் சிக்குபவர்கள் இந்த கழுகுக்கூட்டங்களிடமும் சிக்கி சின்னாபின்னமாவதுதான் கொடுமையின் உச்சம். 

ஈ.சி.ஆர் சாலையில் சில சமூக விரோத கும்பல் இரண்டு அணிகளாக பிரிந்து,  விபத்து நடக்கும் பகுதிகளில் கண்கொத்தி பாம்பு போல காத்திருப்பார்கள். விபத்து ஏதேனும் நடந்தால் காவல்துறைக்கு தகவல் செல்வதற்கு முன் இந்த கும்பலின் காதுகளுக்கு இன்ஃபார்மர்கள் மூலம் விஷயம் போய்விடும்.

சம்பவ இடத்திற்கு தனிதனியாக செல்லும் இந்த கும்பலில் ஒரு பிரிவினர், விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாகவும், மற்றொரு பிரிவினர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் பஞ்சாயத்து பேசுவார்கள். விபத்தை ஏற்படுத்தியவர்கள் 'நாங்கள் காவல்துறை மூலம் பேசிக்கொள்கிறோம்' என்றாலோ அல்லது அவர்கள் பெரிய இடம் என்று தெரியவந்தாலோ இந்த கும்பல் பின்வாங்கிவிடும்.
அதேசமயம் விபத்துக்கு காரணமானவர்கள் தவறான உறவுமுறையினர் அல்லது பெண்தோழிகளுடன் வரும் கல்லுாரி மற்றும்  ஐ.டி  ஊழியர்கள் போன்றவர்களாக இருந்தால், அவர்கள் இந்த விவகாரம் காவல்துறைக்கு செல்வதை விரும்பமாட்டார்கள். 

விஷயம் வெளியே தெரிந்தால் தங்கள் மானம் போய்விடும் என்பதால், அவர்கள் பெரும்பாலும் பேசும்  தொகையை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே விரும்புவார்கள். இத்தகையவர்கள்தான் இந்த கும்பலுக்கு லட்டு போன்றவர்கள். ‘‘போலீசுக்கு போனா உங்க பணமும் நேரமும்தான் வீணாகும். இங்கயே பேசி முடிச்சிட்டு போங்க. நாங்கதான் உங்க பக்கம் இருக்கோம்ல’’ என்று இரண்டு தரப்பையும் மூளைச் சலவை செய்வார்கள்.
எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இந்த விபத்தை பூதாகரப்படுத்துவது போன்று பேசி, அவர்களின் பயத்திற்கு தக்கபடி வசூலித்து, வசூலித்த தொகையில் சொற்ப தொகையை மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துவிட்டு பறந்துவிடுவர். பாதிக்கப்பட்டவர் காவல்நிலையங்களுக்கு சென்றாலும், அவர்களின் புகார் அங்கு எடுபடாது. காரணம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு 'உரிய மரியாதை' செய்யப்பட்டுவிடுவதே.

இதற்கு ஒத்துவராதவர்களை மிரட்டுவதும், அடிப்பதும் கூட சகஜமாக நடக்கும். விவரம் அறியாத பல இளைஞர்கள் காவல்துறைக்கு போனா வம்பு என்று எண்ணிக்கொண்டு இந்த கும்பலிடம் பணத்தை இழக்கிறார்கள். ஈ.சி.ஆரில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளை இந்த கும்பல்தான் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கிறார்கள். உயிரிழப்பு போன்ற சம்பவங்களில் இந்த கும்பல் தலையிடுவதில்லை.

பொன், பொருளை பறிக்க ஒரு கும்பல் என்றால், பெண்ணை பறிக்கவும் ஒரு கும்பல் மரக்காணம் பகுதியில் உள்ளது. பெண்களை அபகரிக்க காத்திருக்கும் இந்த கும்பலின் முதல் குறி வெளியூர் வாகனங்கள்தான். வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களில் காதலர்களோ, கணவன் மனைவியோ தனியாக சென்றால் பின் தொடர்வது இந்த கும்பலின் வாடிக்கை. மரக்காணம் பகுதியை தாண்டி கடலும், உப்பளமும் சூழ்ந்த தனிமை பகுதியில் ஓய்வு எடுக்க வெளியூர் ஜோடிகள் காரை விட்டு இறங்கினால், அந்த கும்பலிடம் சிக்குவது உறுதி.
அப்படி இறங்கும் ஜோடிகளிடம் இருந்து பணம், பொருளை பறிப்பது ஒரு பக்கம் என்றால், சமயங்களில் குடும்ப பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. கடந்த மாதம் அப்படி சிக்கிய ஜோடி ஒன்றை,  இந்த கும்பல் மிரட்டி, கணவனை மட்டும் விரட்டிவிட்டிருக்கிறார்கள். பயந்து ஓடிய கணவன் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். 

ஆனால் அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. இரு தினங்களுக்கு பின் ஒதுக்குப்புறமான உப்பளம் ஒன்றின் அருகே, அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் அந்த பெண்.
இப்படியும் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. பணம், பொருட்களை இழக்கும் வெளியூர்வாசிகள் தப்பித்தால் போதும் என்று எந்த புகாரும் அளிக்காமல் சென்றுவிடுகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்கள் மரக்காணம் பகுதியில் அடிக்கடி நடந்தாலும் வெளிய தெரிவதே இல்லை. இந்த சம்பவங்கள் வெளிவராமல் இருப்பதற்கு காவல்துறையும் ஒரு காரணம். 

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க சென்றால், போலீஸார் கேட்கும் வசவு வார்த்தைகள் காது கூச வைக்கும் அளவு இருக்கும். போலீஸாரின் இந்த அலட்சியமே போக்குதான் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வருவதற்கு காரணம்.

கிழக்கு கடற்கரை சாலை பாதுகாப்பான சாலையாக மாற வேண்டும்....!

- ஆ.நந்தகுமார்
படங்கள்: 
தே.சிலம்பரசன்

Thursday, August 6, 2015

ஆபாசத்தை வேரறுப்போம்

Dinamani

வகுப்பறைக்குள் செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பார்த்த சில மாணவிகள் மீது தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக அண்மையில் செய்தி வெளியானது. அந்த மாணவிகளின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பினர். அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?
கல்லூரி மாணவ, மாணவிகளின் நிலைமை இன்னும் மோசம். இணைய வசதியுடன் கூடிய செல்லிடப்பேசி இல்லாத கல்லூரி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். எந்த அதிநவீன வசதியும் நன்மையும், தீமையும் கலந்ததுதான்.
இணைய வசதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோரைவிட, கேளிக்கைக்கும், பாலுணர்ச்சித் தூண்டுதலுக்கும் பயன்படுத்துவோரே அதிகம் பேர்.
இங்குதான் கட்டுப்பாடுகளும், சட்டங்களும் தேவையாகின்றன. குறிப்பாக, பாலியல் வன்முறைக் குற்றங்களில் கைது செய்யப்பட்ட பலர், செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பார்த்ததே குற்றமிழைக்கத் தூண்டியதாக வாக்குமூலம் அளித்துவரும் நிலையில், அதன் இணையப் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைப்பது அவசியமாகியுள்ளது.
பாலுணர்ச்சி உயிர்களுக்குப் பொதுவானது. ஆனால், மனிதன் மட்டுமே பாலுறவை விஷமத்தனமான கேளிக்கையாக்கி இருக்கிறான். அந்தரங்கமாக நடைபெற வேண்டிய பாலுறவைப் பதிவு செய்து அதை வர்த்தகமும் செய்கிறான். இதற்கு உதவுகின்றன ஆபாச இணையதளங்கள்.
பாலுறவைத் தூண்டும் இலக்கியங்களும், திரைப்படங்களும் இதற்கு முன்னரும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை வயது வந்தோர் மட்டுமே, அதுவும் குற்ற உணர்ச்சியுடன் தனியே படிக்கவும் பார்க்கவும் செய்தனர்.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியான ஆபாச விடியோ பேழைகளும்கூட ரகசியமாகவே ரசிக்கப்பட்டன.
ஆனால், நவீன செல்லிடப்பேசிகளின் வருகை நமது வெட்கமின்மையை வெளிப்படுத்தும் கருவியாகிவிட்டது. பயணிகள் சூழ்ந்த பேருந்திலும், ரயிலிலும்கூட செல்லிடப்பேசியில் சிலர் ஆபாசப் படம் பார்க்கிறார்கள்.
இந்த ஆபாசப் படத்தைப் பார்க்கும் செயலே அடுத்த நிலையில் பலாத்காரத்துக்கும் இட்டுச் செல்கிறது. 2012-ஆம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் பலவந்தப்படுத்தப்பட்ட நிர்பயாவின் அவலத்துக்குக் காரணமான குற்றவாளி ஒருவன், தான் பார்த்த ஆபாசத் தளமே தன்னை மிருகமாக்கியது என்று சொன்னதை மறக்க முடியுமா?
இன்று உலக அளவில் கோடிக்கணக்கான ஆபாச இணையதளங்கள் இருப்பதாக புள்ளிவிரங்கள் கூறுகின்றன. செல்லிடப்பேசியில் இவை திறந்தவெளியில் இலவசமாகவே கிடைக்கின்றன.
எனவேதான், கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுத்தார். மிக மோசமான 850 ஆபாச இணையதளங்களைப் பட்டியலிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவர், இந்தத் தளங்களால் இளைய சமுதாயம் சீரழிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, "இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமானது. இந்த விஷயத்தில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?' என்று கடந்த ஜூலை 8-ஆம் தேதி கேள்வி எழுப்பினார். தவிர, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையுடன் ஆகஸ்ட் 10-இல் பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, மத்திய அரசு 857 ஆபாச இணையதளங்களைத் தடை செய்தது. தொலைதொடர்புத் துறையின் கட்டளைக்கு இணங்கி, மேற்படி இணையதளங்களை இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள் (ஐ.எஸ்.பி.) முடக்கியுள்ளன. இதற்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆபாசத் தளங்கள் கருத்துரிமையின் சின்னம் என்று சிலர் முழங்குகிறார்கள். பெண்களை போகப் பொருளாகச் சித்திரிப்பதுடன் பாலியல் குற்றங்களுக்கும் வழிவகுக்கிற ஆபாசத் தளங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களைப் பற்றி என்ன சொல்வது?
உண்மையில், அரசு மிகவும் மென்மையான நடவடிக்கையையே எடுத்துள்ளது. இப்போதும்கூட சமூகக் கட்டுப்பாடுகளை மீறாத யூ-டியூப் போன்ற தளங்கள் தடுக்கப்படவில்லை. சிலரது ஆட்சேபங்களை ஏற்று பல இணையதளங்களின் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தவிர, மெய்நிகர் கணினி இணையத் தொழில்நுட்பம் (வி.பி.என்.) மூலமாக விருப்பமுள்ளவர்கள் தங்கள் வயதை உறுதி செய்து, இத்தளங்களைக் காண்பதை அரசு தடுக்கவில்லை.
இப்போதைய பிரச்னை என்னவென்றால், பருவ வயதை எட்டாதவர்களும் கூட மிக எளிதாக செல்லிடப்பேசியில் ஆபாசத் தளங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் காண முடிவதுதான். எனவே, அரசின் இந்த நடவடிக்கையை பெண்ணியவாதிகளும், பண்பாட்டை நேசிப்பவர்களும் ஆதரிக்க வேண்டும்.
பொதுத் தளத்தில் எழும் கூக்குரல்களின் எண்ணிக்கை ஆபாசத் தளங்களுக்கு சாதகமாகிவிட்டால், அரசு தனது நிலையிலிருந்து பின்வாங்கிவிடும்.
இப்போதும்கூட நீதிமன்ற உத்தரவால்தான் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஆபாசத் தள விவகாரத்தில் அரசு விலகியிருக்க வேண்டும் என்ற கருத்துப் பிரசாரம் செய்யப்படும் நிலையில், எதிர்காலத் தலைமுறையினரின் நலனை விரும்பும் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும்.
பிஞ்சிலேயே வெம்பிவிடும் வாலிப வயோதிக அன்பர்களாக நமது இளைஞர்கள் மாறாமல் தடுக்க வேண்டுமானால், பெண்களின் மாண்பு காக்கப்பட வேண்டுமானால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதையும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களையும் ஓரளவு தடுக்க வேண்டுமானால், இத்தகைய இணையதளங்களை கட்டாயம் முடக்கத்தான் வேண்டும்.

இனி பிரீமியம் ரயில்கள் இல்லை, சுவிதா மட்டுமே!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் சிறப்பு ரயில்கள் இனி இயக்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக, சுவிதா சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அமைச்சகத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ரயில் சேவை பயணிகளிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. பல்வேறு முன்பதிவு விதிமுறைகளைக் கொண்டதாகவும், கட்டணம் அதிகமிருந்ததாலும் பிரீமியம் ரயில் திட்டத்தைப் பயணிகள் முழுவதுமாகப் புறக்கணித்தனர். அதிலும், தமிழகத்தில் பிரீமியம் ரயில்களை பயணிகள் கண்டு கொள்ளவேயில்லை என்பதே உண்மை.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ரயில்கள் பெரும் நஷ்டத்தையே பெற்றுத் தந்தன.
இதையடுத்து பிரீமியம் ரயில் திட்டத்தின் குறைகளைக் களைந்து, சுவிதா என்ற பெயரில் புதிய சிறப்பு ரயில்கள் திட்டத்தைப் படிப்படியாக ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி வருகிறது.
சுவிதாவின் சிறப்பு: ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் காத்திருப்புப் பட்டியல் இல்லை, அனைவருக்கும் குறைந்தபட்சம் இருக்கை வசதி உள்ளிட்ட பல அம்சங்களுடன் சுவிதா ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்கவும், இந்த சுவிதா ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் சுவிதா ரயில்களில் முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளுக்கும் குறைந்தபட்சம் உறுதிசெய்யப்பட்ட இருக்கை மற்றும் படுக்கை வசதி வழங்கப்படும். அதேசமயம், எந்தப் பயணியும் காத்திருப்புப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்படமாட்டார்கள்.
நாட்டில் முதல்முறையாக சுவிதா ரயில் கோராக்பூரிலிருந்து ஆனந்த்விகார் நகருக்கு இயக்கப்பட்டது,
இணையத்திலும், கவுன்ட்டரிலும்: சுவிதா சிறப்பு ரயிலுக்கான முன்பதிவை இணையதளத்திலும், பயணச் சீட்டு கவுன்ட்டர்களிலும் பெறலாம். ஆனால், பிரீமியம் ரயில் முன்பதிவு இணையதளத்தில் மட்டுமே செய்யும்படியாக இருந்தது.
சுவிதா ரயில்களுக்கான முன்பதிவு நாள்கள் குறைந்தபட்சம் 10 நாள்களாகவும், அதிகபட்சம் 30 நாள்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் ரயில்களுக்கு 15 நாள்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அது சுவிதா ரயில்களில் நீக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எப்படி: பிரீமியம் ரயில்களில் பயணச்சீட்டு கட்டணம் மிக அதிகளவில் இருப்பதாக மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. மூன்றாம் வகுப்பு ஏசி, 2-ம் வகுப்பு ஏசி கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் புகார் இருந்தது. இந்தக் குறைகள் அனைத்தும் சுவிதா ரயில்களில் நீக்கப்பட்டுள்ளன.
சுவிதா ரயில்களில் பயணச்சீட்டு கட்டணம் வழக்கமான தட்கல் கட்டணத்தைக் காட்டிலும் 20 சதவீதம் மட்டுமே அதிகமாக இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு சிலமணி நேரம் வரை பயணச்சீட்டு விற்பனையாகாமல் இருந்தால், அந்த பயணச்சீட்டுகள் குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்யப்படும்.
மேலும், பயணச்சீட்டு கட்டணத்தோடு, சேவைவரி உள்ளிட்டவை சேர்க்கப்படும். அதேசமயம், இந்த வகை ரயில்களில் எந்தப் பிரிவினருக்கும் சலுகையோ, கட்டணத்தில் தள்ளுபடியோ அளிக்கப்படாது. குழந்தைகளுக்குக்கூட முழுக்கட்டணம் வசூல்செய்யப்படும்.
மூன்று பிரிவுகள்: சுவிதா ரயில்கள் மூன்று பிரிவுகளாக இயக்கப்படவுள்ளன. ராஜதானி விரைவு ரயில்கள் போன்று முழுûமாக ஏ.சி. வசதி செய்யப்பட்டு இடையில் நிறுத்தம் இல்லாத ரயிலாகவும், இரண்டாவதாக துரந்தோ விரைவு ரயில் போன்று சில இடங்களில் மட்டும் நிறுத்தம் உள்ளது போன்றதாகவும் இயக்கப்படவுள்ளன. மூன்றாவதாக, அனைத்து இடங்களிலும் நின்று செல்லும் ரயிலாக இயக்கப்படும்.
இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பயணச் சீட்டுடன், அரசு அங்கீகரித்துள்ள ஏதாவது ஓர் அடையாளச் சான்றை டிக்கெட் பரிசோதனையின் போது காட்டிக்கொள்ளலாம். இந்த சுவிதா ரயில்கள் தவிர்க்கமுடியாத நேரங்களில் மட்டுமே ரத்து செய்யப்படும். ஒருவேளை ரத்து செய்யப்படும் பட்சத்தில் பயணிகளின் கட்டணம் அவர்களின் வங்கிக்கணக்கில் அடுத்த சில நாள்களில் முறையாக திருப்பிச் செலுத்தப்படும்.

Wednesday, August 5, 2015

மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு

அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 58இலிருந்து 60ஆக உயர்த்தி மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து அரசு அதிகாரி கூறியதாவது:
மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது என்று மகாராஷ்டிர அரசு முடிவெடுத்தது. இந்த உத்தரவு முன் தேதியிட்டு கடந்த மே 31ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சட்டம் 1994இல் இருந்த குறைகளை நீக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கும் அமைச்சரவை அனுமதியளித்தது.
மேலும், மகாராஷ்டிர அக்யூபங்சர் சிகிச்சை சட்ட வரைவு 2015க்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது என்று அந்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

Tuesday, August 4, 2015

மணக்குமா மகாமகம்? ஏற்பாட்டுக்கான அறிகுறியே காணோம்!



சென்னை : பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்திற்கான ஏற்பாடுகள் பக்தர்களுக்கு அதிருப்தி அளிப்பதால், முதல்வர் நேரிடையாக இதில் தலையிட, பக்தர்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.

கும்பகோணம் மகாமகம் திருவிழா நடக்க, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முறையான பொறுப்பாளர்கள் இல்லாததால், மகாமக ஏற்பாடுகள் அனைத்தும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது மகாமகம்:

இதுவரை இரண்டு மகாமகத்தை கொண்டாடிய அ.தி.மு.க., அரசு, இப்போது மூன்றாவது மகாமகத்தை கொண்டாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.

மகாமகம் குறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் கூறியதாவது:பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகாமக திருவிழா, 'தென்பாரத
கும்பமேளா' என பிரசித்தி பெற்றது. வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளாவிற்கு, அந்தந்த மாநில அரசுகள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யும். மாசி மக நட்சத்திரத்தில் நடைபெறும் இந்த மகாமக திருவிழா, கொடியேற்றத்துடன், 10 நாள் தீர்த்தவாரி திருவிழாவாக நடை பெறும். முன்னர் தினமும் இரண்டு லட்சம் பக்தர்கள் வந்த இந்த விழாவிற்கு, இந்த முறை, 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரண்டு மகாமகத்திற்கும், ஆதீன பக்தர்கள், மடாதிபதிகள், தொழிலதிபர்கள், உபயதாரர்கள் என ஒரு கமிட்டி அமைத்து, சாலைப் பணிகள், கழிப்பறை வசதி, போக்குவரத்து பணிகள், கோவில் திருப்பணிகள் உள்ளிட்டவற்றை, அதிகாரிகள் நடைமுறைப்படுத்தினர்.

கருத்து கேட்பு :

ஆனால், இந்தமுறை உபயதாரர்கள், உள்ளூர் மக்களிடம் முறையாக கருத்து கேட்கவில்லை. இது ஒரு சமய விழா என்பதால் ஆன்மிக அமைப்புகளிடமும், ஆன்மிக தலைவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்.
ஆனால் அரசு சார்பில் நிதி ஒதுக்கி, முதற்கட்ட வேலைகள் தொடங்கியதோடு சரி; அதன் பின், எல்லா வேலைகளும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. மகாமகத்திற்கு அரசு சார்பில், கமிட்டி அமைக்கவில்லை. எந்த பணிகளும் இதுவரை முழுமையாகவும் நடைபெறவில்லை. இதற்கென, 260 கோடி நிதி ஒதுக்கியதோடு, எந்த முன்னெடுப்பும் இல்லை. சரியான பொறுப்பாளர்கள் இல்லாததால் பாதிக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் பாதியில் நிற்கின்றன. மேலும் சில கோவில்களில், பாலாலய திருப்பணிகள் துவக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வாய்க்கால்களை சுத்தப்படுத்துவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. தற்போது தற்காலிக கழிப்பறைகள் மற்றும் பொதுகழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மகாமக ஏற்பாட்டில் முதல்வர் தலையிட்டு, அதன் பணிகள் தீவிரமாக நடக்க ஆவன செய்ய வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

குளங்கள் எங்கே?

மகாமக குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இப்போதே தண்ணீர் விட்டு நீர் ஆதாரத்தை பெருக்கினால் தான், மகாமகம் நேரத்தில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். கும்பகோணத்தில், 44 குளங்கள் இருக்கின்றன. அதில், 12 குளங்கள் தான் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. 17 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; 15 குளங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மூன்று குளங்களில் பக்தர்கள் நீராடுவது தான், மகத்தின் சிறப்பே. மகாமக குளத்தில் நீராடி, காவிரியில் குளிக்க வேண்டும். ஆனால், காவிரியின் படித்துறை, நீண்ட படிகளைக் கொண்டது. இதில் இறங்கித்தான் பக்தர்கள் நீராட வேண்டும். இடிந்த நிலையில் உள்ள படித்துறைகளை சீரமைத்தால் தான் பக்தர்கள் எந்தவிதமான சிரமங்களும் இல்லாமல் குளத்தில் இறங்கி நீராட முடியும். திருமஞ்சனத்திற்கான தீர்த்தவாரி மண்டபங்களும் சேதமடைந்து, ஆக்கிரமிப்புகளுடன் காணப்படுகின்றன. சேதமடைந்து கிடக்கும் படித்துறைகளையும், மண்டபங்களையும் சீரமைப்பதற்கோ, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கோ, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சார்பில், எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது.

வாழ்க்கை எனப்படுவது யாதுஎனின்...By மணவை எஸ். கார்த்திக்

இன்றைய காலக்கட்டத்தில் கடன் தொல்லை, குடும்ப வறுமை, தொழிலில் நஷ்டம், காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி போன்றவற்றால் தற்கொலை செய்துகொள்வது ஊடகங்களில் நாள்தோறும் தவறாமல் இடம் பெறும் செய்தியாகி விட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், பெருநகரங்களின் அடிப்படையில் சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன என்பது குறித்த ஆய்வை நடத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம், ஆய்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது.
அந்த ஆய்வில் 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 15 பேர் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு கடந்த ஆண்டில் 16,307 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 16,122 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் தற்கொலை எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இங்கு கடந்த ஆண்டு மட்டும் 2,214 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பெங்களூரு (1,906) இரண்டாவது இடத்திலும், தில்லி (1,847) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஏன், எதற்காக இந்தத் தற்கொலைகள் நிகழ்கின்றன? தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலுமே பெரும்பாலான தற்கொலைகளுக்குக் கடன் தொல்லைதான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. விவசாயிகளுக்கு விவசாயத்தில் நஷ்டம் என்றால், தொழிலதிபர்களுக்கு வர்த்தகத்தில் நஷ்டம், அவ்வளவுதான் வித்தியாசம்.
இரண்டாவதாக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள். மூன்றாவதாக குடும்பப் பிரச்னை, காதல் தோல்வி, வாழ்க்கையில் விரக்தி இப்படி பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இப்படி, தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் அதுதான் காரணமா?
அதுவும் ஒரு காரணமாக இருக்குமே தவிர, அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு என்னதான் காரணம், சற்றே சிந்தித்துப் பார்த்தோமானால்...
வாழ்க்கை என்பது என்ன? எவ்வாறு வாழ வேண்டும் எனத் திட்டமிட்டு வாழத் தெரியாத கோழைகளே தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்.
குறிப்பாக, வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களையும், தோல்விகளையும் தாங்கிக் கொள்ளக் கூடிய மன வலிமையும், மன உறுதியும் இல்லாதவர்களும், எதையும் எதிர் கொள்ளும் மனத் துணிவும், மனப் பக்குவமும் இல்லாதவர்களும்தான் தற்கொலையைத் தேர்வு செய்கின்றனர்.
மேலும், எதிர்மறையான சிந்தனைகளும் தற்கொலைகளுக்கு முக்கியக் காரணியாகத் திகழ்கின்றன. தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் இது நன்கு புரியும்.
உதாரணமாக, பொருளாதார ஏற்றத் தாழ்வை எடுத்துக் கொள்வோம். பணம் இருப்பவன்தான் இந்த உலகத்தில் வாழ முடியும் என்றால், பரம ஏழைகளும், பிச்சைக்காரர்களும் எப்படி வாழ்கின்றனர். அடுத்ததாக கடன் தொல்லையை எடுத்துக் கொண்டால், யாருக்குத்தான் கடன் இல்லை அல்லது யார்தான் கடன் வாங்காமல் இருக்கிறார்கள்?
குடிசைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் முதல் கோடிக்கணக்கில் கொட்டி தொழில் செய்பவர்கள் வரை தனி நபரிடமோ, வங்கிகளிலோ கடன் வாங்கித்தானே தொழிலை நடத்துகின்றனர்? இவர்கள் அனைவரும் தற்கொலையா செய்து கொள்கிறார்கள்?
காதல் தோல்வி, குடும்பத் தகராறு என அனைவரும் தற்கொலைதான் முடிவு என்று இறங்கி விட்டால் இந்த நாட்டில் எத்தனை பேர் உயிருடன் இருப்பார்கள்?
வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும், பிரச்னை இல்லாத வாழ்க்கை அலுத்துப் போய்விடும். கணவன், மனைவிக்குள் ஊடல் இருந்தால்தான் கூடலும் இருக்கும். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.
சந்தோஷம் மட்டுமே வாழ்க்கையாக இருந்து விட்டால், அது நமக்கு சந்தோஷத்தைத் தராது. இடையிடையே சிறிது துக்கமும் இருந்தால்தான் சந்தோஷத்தின் மகிமை நமக்குப் புரியும். அதனால்தான், நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று அன்றே கூறியிருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது என்ன... 'LIFE IS A BED OF ROSE, BUT IT HAS FULL OF THORNS'. அதாவது, "வாழ்க்கை என்பது அழகான ரோஜாப் பூ படுக்கை போன்றது, ஆனால், ரோஜாப் பூவில் இருப்பதுபோல் அந்தப் படுக்கையிலும் முள்கள் நிறைந்திருக்கும்' என்று வாழ்க்கையைப் பற்றி ஓர் ஆங்கிலக் கவிஞர் அழகாகச் சொல்லி இருக்கிறார்.
இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் இன்பமும், துன்பமும், நல்லதும், கெட்டதும் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் மனப் பக்குவம்தான் வேண்டும். வாழ்க்கையில் சந்தோஷம் வரும்போது துள்ளிக் குதிப்பதும், துன்பம் வரும்போது துவண்டு விடுவதும் கூடாது.
வாழ்க்கையை "ஸ்போர்ட்டிவ்'ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று மாற்றுத் திறனாளிகளையும், திருநங்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ தடைகளைத் தாண்டி இந்த சமுதாயத்தில் அவர்கள் வாழவில்லையா? அல்லது அவர்களது குடும்பத்துக்காக உழைக்கவில்லையா? அவர்கள் எல்லோரும் தற்கொலையா செய்து கொண்டார்கள்?
வாழ்க்கையே ஒரு போர்க்களம், அதை வாழ்ந்துதான் பார்க்கணும். அதற்கு நிச்சயம் மனதில் உறுதி வேண்டும்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...