Thursday, December 10, 2015

ஆனந்த விகடன் - 16 Dec, 2015

vikatan.com
வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
ப.திருமாவேலன்
‘‘மூன்று மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துவிட்டால் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்குவதையும் அதனால் சேதங்கள் விளைவதையும் தவிர்க்க இயலாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பேசியதைப் படித்தால், ‘நியாயம்தானே’ என்று தோன்றும்!
‘போர் என்ற ஒன்று நடந்தால் மக்கள் இறக்கத்தானே செய்வார்கள்?’ என்று சொன்னவர்தானே இந்த ஜெயலலிதா என்பதை நினைவுபடுத்தி யோசித்தால்தான், ‘எங்களால் என்ன செய்ய முடியும்?’ என்ற சமாளிப்பும், ‘இதெல்லாம் தலைவிதி’ என்ற சால்ஜாப்பும் புலப்படும். ‘எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைக் குற்றம் சொல்லலாமா?’ என்றால், ‘ஆக்கவும் அழிக்கவும் வல்லது அரசு’ என்பதால் அதுதானே பொறுப்பேற்க வேண்டும்? `நான் உத்தரவிட்டேன், எனது தலைமையிலான அரசு, எனது அரசு' என்று எல்லாவற்றுக்கும் தானே என்று சொல்லிக்கொள்கிற ஜெயலலிதா, கடந்த ஒரு மாத காலத்தில் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட விதம், ‘எதிர்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தாரா இல்லையா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
ஏரிகளைக் காப்பாற்றவில்லை, ஏரிகளைத் தூர்வாரவில்லை, நீர்நிலைகள் வீடுகளாக மாற்றப் பட்டுவிட்டன, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வசதி செய்யப்படவில்லை, மழைநீரை சேகரிக்கவில்லை, பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்தவில்லை, உலக அழிவுகளில் இருந்து பாடம் கற்கவில்லை, தமிழ்நாட்டில் எவை எல்லாம் பேரிடர் பகுதிகள் என இனம் காணவில்லை, கடல் அறிவியல் அறியவில்லை, புவி அறிவியல் புரியவில்லை, வளி மண்டல அறிவியல் தெரியவில்லை.... என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு ஜெயலலிதாவைக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. தனிப்பட்ட ஜெயலலிதாவால் இதில் எதையும் செய்ய முடியாது. ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் எதையும் செய்திருக்கவும் முடியாது. ஆனால், ‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, இந்த ஒரு மாத காலத்தில் தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் நூறாண்டுகளில் பார்க்காத துன்ப துயரத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
பூகம்பத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்துப்போனபோது ஒரு விஞ்ஞானியிடம் போய் அதற்கான காரணத்தைக் கேட்டார்கள்.அவர் சொன்னார், ‘‘பூகம்பத்தால் இத்தனை ஆயிரம் பேர் சாகவில்லை. கட்டடங்களால் செத்துப் போனார்கள்” என்று!
அதேமாதிரி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் வரலாறு காணாத வதை முகாமாக மாறியதற்குக் காரணம் மழை மட்டும் அல்ல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அரசும்தான்!
ரமணன் சொன்னால் போதுமா?
மழை எப்போது வரும், எப்போது நிற்கும்,  இது கனமழையா, அதிக கனமழையா, இது புயலா, வடகிழக்கு பருவமழையா? - இது எதுவுமே மக்களுக்குத் தெரியாது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் மழை வரும், வானம் வெளுத்துவிட்டால் மழை வராது - இது மட்டும்தான் மக்களுக்குப் புரிந்த அறிவியல். இவ்வளவு மழை பெய்யும், இதனால் பாதிப்பு இவ்வளவு இருக்கும் என மக்களுக்குத் தெரியாததால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சொல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், இந்த ஒரு மாதத்தில் ஒரே ஓர் அறிக்கையாவது அரசாங்கத்திடம் இருந்து வந்ததா?
‘அதுதான் ரமணன் சொல்லிவிட்டாரே...’ எனச் சொல்லலாம். ரமணனின் வேலை மழை வருமா, அது கனமழையா என அறிவிப்பது மட்டும் தான். அதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும் எனச் சொல்வது ரமணனின் வேலை அல்ல. பருவ நிலை மாற்றத்தை அறிவிக்கிற ரமணன், மக்களைப் பயமுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது அவரது பணி நெறிமுறைகளில் ஒன்று. எனவே, அவர் `புயல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார். `காற்றழுத்தத் தாழ்வு நிலை’ என்று சொல்வார். ஆனால், அது மக்க ளுக்குப் புரியுமா? `புயல்’ என்று சொன்னால்தான் மக்களுக்குப் புரியும்.
புரியும் மொழியில் அரசு அதிகாரிகள் அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நிலவரம் சொல்வதைப்போல இந்த ஒரு மாத காலம் இதற்காக ஓர் அதிகாரியைப் போட்டு பருவநிலை நிலவரம் சொல்லி இருந்தாலே, மக்கள் பாதிப் பேரின் துன்பம் குறைந்திருக்கும். தாழ்வான ஏரிப் பகுதியில் இருப்பவர்கள் இடம் மாறி இருப்பார்கள். பலர் வெளியூர் போயிருக்கலாம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தருகிறது, உலகின் பல்வேறு நாடுகளின் பருவநிலை மாற்ற இணைய தளங்களில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் மக்களுக்குத் தகவல் தருவதைவிட தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு என்ன வேலை... புகைப்படங் களை வெட்டி ஒட்டுவது மட்டும்தானா?
இதை எல்லாம் ஏன் செய்யவில்லை என்றால் மழை வருவதையே, மழை பெய்வதையே இவர்கள் மறைக்க நினைத்தார்கள். சொத்துப் பரிமாற்றங் களை மறைக்கலாம்; ஒவ்வொருவர் தலையிலும் பெய்யும் மழையை மறைக்க முடியுமா? நாட்டில் அதிக மழை பெய்ததற்கு ஜெயலலிதா காரணம் அல்ல. அவர் நினைத்தாலும் மழையைத் தடுக்க முடியாது. ஆனால், அவர் நினைத்திருந்தால் மழையின் பாதிப்பைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
`இந்தந்த நாட்களில் மழை பெய்யும், இதுவரை பார்க்காத பெருமழையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பிட்ட மாவட்டத்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அரசு இன்னின்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளது, இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என அறிக்கை விடுத்து பொதுமக்களை தயார்ப்படுத்தாமல் மௌனம் சாதித்ததுதான் பேரழிவுக்கு பெரிய காரணம்!
மாற்று இடம் அறியாத மக்கள்!
மழை கொட்டித் தீர்த்துவிட்டது. அடையாறு, கூவம் ஆற்றோரங்களில் வசிப்பவர்களுக்கு உடனடியாக அருகில் இருந்த பள்ளிகளில் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்து தரப்பட்டன. மாநகராட்சி சமூகநலக்கூடங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றில் போய் அந்த மக்கள் தங்கிவிட்டார்கள். ஆனால், இந்த மழை ஆற்றோரங்களில் இருப்பவர்களை மட்டுமல்ல, நகர்ப்பகுதியில் இருப்பவர்களையும் அதிகமாகப் போட்டுத் தாக்கியது. இந்த மக்கள் எங்கே போவது எனத் தெரியாமல் தவித்த தவிப்பே அழிவின் உச்சம்.
முதல் மாடியையே மூழ்கடிக்கும் தண்ணீர் வந்த பிறகு... போட்டுகளில் வெளியேறிய மக்கள் தரைக்கு வந்த பிறகு... போகும் இடம் தெரியாமல் தவித்தார்கள். நோயாளியான வயது முதிர்ந்த பெற்றோரையும், பால் மணம் மாறாப் பிஞ்சுக் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு சாலையில் சொந்த நாட்டு அகதிகளைப்போல நின்றார்கள். சொந்தக்காரர்கள், தெரிந்தவர்களோடு தொடர்புகொள்ள செல்போன் வேலை செய்யவில்லை, நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை அறிய மின்சாரம் இல்லை; கும்மிருட்டு. போகும் இடம் தெரிந்தாலும் வாகனம் எதுவும் கிடையாது; கடைகள் கிடையாது; உணவகங்கள் கிடையாது; பணம் எடுக்க ஏ.டி.எம் கிடையாது; ‘அரசாங்கமும் கிடையாது’ என்பதை அப்போதுதான் மக்கள் உணர்ந்தார்கள்.
`எல்லா பள்ளிக்கூடங்களையும் திறந்துவையுங்கள், அனைத்துத் திருமண மண்டபங்களையும் திறந்துவிடுங்கள், யாரும் வந்து தங்கலாம்' என்று அரசாங்கம் ஒரே ஓர் அறிக்கை விட்டிருந்தால் மக்களுக்கு பெரிய நம்பிக்கை பிறந்திருக்கும். ‘நான் இருக்கிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மக்களிடம் பேசும்போது ஜெயலலிதா சொன்னார். ஆனால் செய்தாரா? பெரிய பெரிய நிறுவனங் களில் வேலை பார்த்து, லட்சக்கணக்கில் பணம் போட்டு வீடு வாங்கி, கௌரமாக வாழ்வதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் இரவு உடைகளோடு மனைவி பிள்ளைகளைக் கையில் பிடித்தபடி வேளச்சேரி ரயில் நிலையத்தில் ஏதோ ஒரு சேவா சங்கம் கொண்டுவந்த சாம்பார் சாதத்தை முட்டி மோதி வாங்கி, கண்ணீரும் கம்பலையுமாக சாப்பிட்ட காட்சி நல்லாட்சியில் பார்க்க வேண்டிய காட்சியே அல்ல. வேளச்சேரி மக்களுக்கு இந்த இடம், அண்ணாநகர் வாசிகளுக்கு இந்த இடம் என அறிவித்துச் சோறு போடக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையா... மனம் இல்லையா... நேரம் இல்லையா?
ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காகவும் சிறையில் இருந்து விடுதலையாவதற்காகவும் கோடிக் கணக்கில் யாகம் நடத்தி, விருந்து படைத்த மந்திரி துரைகள் எங்கே போனார்கள்... கான்ட் ராக்டர்கள், கமிஷன்காரர்கள் எங்கே போனார்கள்... சாலை போடுவதாகச் சுருட்டியவர்கள் சாம்பார் சாதம் போட்டாலாவது பாவம் குறைந்திருக்குமே? ‘வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?’ என்று பாரதி கேட்டது அடிமை தேசத்தில்... அம்மா தேசத்திலுமா?
அத்தியாவசியப் பொருட்களுக்கே அலைச்சல்!
பாலுக்கு அலைந்த பரிதாபக் காட்சிகளே சென்னையில் அதிகம். ‘பால் இல்லை’ என்று எல்லாக் கடைகளிலும் எழுதிப் போட்டார்கள். ‘பால் பவுடர்’ இல்லை என்று மருந்துக் கடைகளில் எழுதி வைத்தார்கள். அரை லிட்டர் பால் கிடைக்காதா என்று அலைந்த முகங்கள் ஏக்கத்தால் வெளிறிப் போயிருந்தன. இரண்டு மூன்று சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஆவின் பால் லாரி வரவில்லை என்று முதல் நாள் சொன்னார்கள். சாலைகள் சரியான பிறகும் புறநகர் பகுதிக்கு பால் வரவில்லை. இதைவிட அநியாயம், பால் பூத்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை. ஆனால், தனியார் கடைகளில் ஆவின் பால் தாராளமாகக் கிடைத்தது. 20 ரூபாய் பால் பாக்கெட், 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தனியார் கடை களுக்கு மட்டும் தனியாக ஆவின் நிறுவனத்தை அரசாங்கத்துக்குத் தெரியாமல் யாராவது நடத்த முடியுமா? ஒரு வைத்தியநாதனைக் கைது செய்து வெளியே விட்டுவிட்டார்கள். இன்னும் ஆயிரம் வைத்தியநாதன்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் அம்பலமாகி இருக்கிறது. ‘60 ரூபாய்க்கு விற்பது நியாயமா?' என்று கேட்டால், ‘50 ரூபாய்க்கு நான் வாங்கி வந்திருக்கேன்’ என்று கடைக்காரர் சொல்கிறார். அப்படியானால் 50 ரூபாய்க்கு விற்றவர் யாருக்கு பங்கு தர விற்கிறார் என்று கேட்டால், அதற்கும்  அவதூறு வழக்கு பாயுமோ?
30 ரூபாய் வாட்டர் கேன் 90 ரூபாய்க்கு விற்பனை ஆனது. காய்கறிகள் விலை சொல்லவே வேண்டாம். `கிடைத்தது லாபம்' என வியாபாரிகள் கொள்ளை அடிக்க, கேட்பார் இல்லாத அதிகாரிகள் இருப்பதுதானே காரணம்? பேரழிவுக் காலத்தில் அம்மா உணவகங்கள், கூட்டுறவு நியாயவிலைக் கடைகள், உணவுப் பொருள் கிடங்குகள் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தி 
இருந்தால், மக்கள் அன்றாட உணவுப் பொருட்களுக்காக அலைந்து திரிந்ததைத் தடுத்திருக்க முடியும்.
இந்தக் காரியங்களை ஒழுங்காகப் பார்த்திருந்தால் மக்கள் எத்தகைய மழையையும் தாங்கும் தைரியத்தைப் பெற்றிருப்பார்கள். அதைச் செய்யாமல், ஓர் அரசாங்கம் தலைமறைவு ஆனது தான் தமிழ்நாட்டு மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. நாளை இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டோருக்கு தலைக்கு 5,000 ரூபாய் கொடுக்கலாம், ஆபத்து நேரத்தில் வராமல், ஆறு மாதங்கள் கழித்து பணம் கொடுத்தால் அந்த மனிதனுக்கும் பயன்படாது... தேர்தலுக்கும் பயன்படாது!
வரலாற்று மழை மட்டுமா... வரலாற்றுப் பிழையும் இதுதான்! 

குறள் இனிது: பத்திரமாகப் பார்த்துக்குங்க..

Return to frontpage

சில வருடங்களுக்கு முன்பு, திருச்சியில் எங்கள் வங்கியின் கோட்ட அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சனிக்கிழமை மாலை 4 மணி இருக்கும். தொப்பலாக நனைந்திருந்த ஒரு பெரியவர் பதற்றமாக உள்ளே வந்தார். ‘போச்சு, எல்லாம் போச்சு. மூன்றே நாட்களில் அறுபது ஆயிரம் போச்சு. ஏடிஎம் அட்டை என்னிடம் இருக்கும் பொழுதே பணத்தைக் காணோம். எல்லோரும் உள் கூட்டு’ என்று மூச்சு விடாமல் படபடப்பாகப் பேசினார். அவரை ஆசுவாசப்படுத்தி நடந்தவைகளைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டோம். ஏடிஎம் அட்டையைக் கொடுங்கள் என்றவுடன் “அது என்னுடன் எப்பொழுதும் பத்திரமாக இருக்கும். தூங்கும் பொழுது கூட தலையணைக்குக் கீழேதான் இருக்கும்” என்று சொல்லி, பாண்ட்டில் இருந்த சீக்ரெட் பாக்கெட்டிலிருந்து கார்டை வெளியில் எடுத்துக் கொடுத்தார். அட்டையின் பின்பக்கம் 2525 என்று எழுதி இருந்தார். அவரைக் கேட்டதற்கு அது பின்நம்பர் என்றார். இதை அட்டையில் எழுதலாமா என்று கேட்டதற்கு, அட்டை தன்னிடம் எப்பொழுதும் இருப்பதாகப் பதில் அளித்தார். பின்னர் நாங்கள் ஏடிஎம் காமிராவில் பதிவாகியிருந்த வீடியோ கிளிப்பிங் மூலமாக, அவர் கணக்கில் மூன்று நாட்கள் இரவு 11 மணிக்கு பணம் எடுத்தவரை அவருக்குக் காண்பித்தோம். மனிதர் பதறிப்போய் விட்டார். பணம் எடுத்தது அவருடைய செல்ல மகன்தான் என்று அடையாளம் காட்டி, மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்.மிகக் கவனமாகத் தம்பொருட்களைப் பாதுகாப்பவர்கள் கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விடுகிறார்கள். ஏடிஎம் பின்நம்பரை ஏடிஎம் கார்டில் எழுதுவது என்பது, பீரோவைப் பூட்டி அதிலேயே சாவியைத் தொங்க விடுவதற்கு ஒப்பானதாகும். பின் நம்பர் எளிதில் கணிக்க முடியாததாக இருப்பது நலம். உதாரணமாக உங்கள் வாகனத்தின் பதிவுஎண், வீட்டுஇலக்கம், பிறந்த வருடம் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அதனை அடிக்கடி மாற்ற வேண்டும். ஏடிஎம்-ல் அதற்கு வசதி உண்டு. நீங்கள் இணையதளம் மூலம் உங்கள் வங்கிக் கணக்கை உபயோகிப்பவர் என்றால் இன்னமும் கவனம் தேவை. உங்கள் கடவுச்சொல் (Password) சில எழுத்துக்கள், சில எண்கள், குறியீடுகள்(*!;போன்றவை) கலந்ததாக இருக்க வேண்டும். ABCD1234 போன்ற எளிதில் யூகிக்கக் கூடியவை கூடாது. மேலும் முன்பின் தெரியாதவர்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ உங்கள் வங்கி கணக்கு விவரங்களைக் கேட்டால் கொடுக்கக் கூடாது. அவ்வகை மின்னஞ்சல்களுடன் வரும் இணைப்புகளை க்ளிக் செய்வதும் ஆபத்தானது.

இவை மூலம் உங்கள் கணிணியில் வைரஸ் பரவக் கூடும். உங்களைப் பற்றிய விவரங்களை எடுத்து தவறாக பயன்படுத்த ஏதுவாகும். திறமை மிக்க மன்னனுக்கும் தன் அரணை வலிமையாக வைத்துக் கொள்வது நல்லது என்கிறார் வள்ளுவர். இன்றைய கணிணி உலகில் கடவுச்சொற்கள் தானே நமது பாதுகாப்புச் சுவர்?

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும் (குறள் - 492)

சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

இப்படியும் பார்க்கலாம்: நதியாகிறவர்களும், கரையாகிறவர்களும்... ..... ஷங்கர்பாபு

Return to frontpage

பொது » வெற்றிக் கொடி


திறமை குறைந்தவர்கள் முன்னேறிச் செல்ல,அவர்களின் விமானம் வானில் உயர உயரச் செல்வதை திறமை நிறைந்தவர்கள் பார்க்க நேரிடுவது, வாழ்வின் சோகங்களில் ஒன்று.

அப்படி ஒருவர் ரயிலில் ஏசியில் பயணம் செய்ய,வழியனுப்ப வந்த உங்களுக்கு அவரது அறிவுரை டானிக்கைப் பருக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். “மனசைத் தளர விட்ராதீங்க. நாங்கள்லாம் இருக்கோம். கொஞ்சம் மினரல் வாட்டர் வாங்கிட்டு வந்துடறீங்களா?”

மைண்ட் வாய்ஸில் - பழுதான வீணைகள் பஞ்சு மெத்தையில் ஏன் இருக்கின்றன?

நூலகர் பணிக்கான இண்டர்வியூவிற்காக சென்னைக்கு வந்தார் வசந்தி.

அடிப்படைத் தகுதி இளங்கலை நூலக அறிவியல் பட்டம். வசந்தி இதில் முதல் வகுப்பு பெற்றிருந்தாள். இப்போது ஒரு ‘A' முதுநிலை எம்.எல்.ஐ.எஸ். படித்தவர் வருகிறார் என்றால் அவருக்கே கூடுதல் வாய்ப்பு. அடுத்து ‘B’ பி.எச்டி செய்தவர் என்றால்,அவருக்குத் தகுதி அதிகம். ‘C’ கூடுதலாக 5 வருட வேலை அனுபவத்தையும் வைத்திருக்கிறார் என்றால்? இப்படியே டாக்குமெண்டேஷனும் படித்தவர், கேட்லாக்கில் சான்றிதழ் கொண்டிருப்பவர் என்று தகுதிகள் கூடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த இண்டர்வியூவில் வெற்றி பெற்றவருக்கு அப்படியொன்றும் அதிகத் தகுதி கிடையாது.

திறமை, தகுதி இவற்றின் உச்சி எது என்பது புரியாத விஷயம். சிரமப்பட்டு மலையில் ஏறி ஒரு குன்றில் அமர்ந்து “அப்பாடா...வந்துட்டோம்” என்று பார்த்தால், அதையும் தாண்டி ஒரு இளம்பெண் அமர்ந்து “இங்கே ஸேஃபாத்தான் இருக்கேன்” என்று சூழலை ஃபோனில் அனுப்பிக்கொண்டிருக்கிறார். இப்படியே போய்க்கொண்டிருந்தால்,எதுதான் எல்லை?

ஆனால் உங்கள் மதிப்பீட்டின்படி தகுதி, திறமையற்றவர்களும்,உண்மையிலேயே தகுதி, திறமை இல்லாதவர்களும்கூட வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி?

எல்லா ஊர்களிலும் ஒதுக்குப்புறமாய் கரடு, முரடான இடம் இருக்கும். பகலில் கடந்து செல்லவே பயப்படுவார்கள். “அங்க பேய் இருக்கு,பாம்பு இருக்கு...’ அதை விலைக்கு வாங்க வந்தவரை, “இதப் போய் வாங்கறானே...முட்டாள் !”, “ ஓசிக்குக் கொடுத்தாலும் எவனாவது வாங்குவானா?”என்றெல்லாம் பேசுவார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு அந்த இடம் ஊரின் பிரதானப் பகுதியாக மாறியிருக்கும். இப்போது வாங்க முடியாதவர்கள் முன்பு கைக்கு எட்டும் தூரத்தில் இடமும் சாத்தியங்களும் இருந்தும் வாங்காத தங்களின் புத்திசாலி முன்னோர்களைத் திட்டிக்கொண்டிருப்பார்கள்.

“கேட்டாங்களே, எங்க தாத்தாகிட்ட. இதை மனுசன் வாங்குவானான்னு ரைஸ் மில் வைக்கப் போய்ட்டார். இவர் ரைஸ் மில் வைக்கலைன்னு எவன் அழுதான்?”, “அறிவுள்ளவன் எவனாவது இதை வேண்டாம்னு சொல்லுவானா?” - நூற்றுக்கு 90 குடும்பங்களில் 90 சதவீத மனிதர்களிடம் இந்தத் தினுசில் ஆதங்கம் இருக்கும்.

அன்று அந்த இடத்தை வாங்கிப் போட்டவர் தன் கையிலுள்ள சேமிப்பை எல்லாம் இழந்து வாங்கினார். அப்போது இன்று ஏங்குபவர்களின் முன்னோர்கள் பணமிருந்தும் முதலீடு செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.

அப்படியானால், சரியான நேரத்தில் முதலீடு செய்யப்படும் செல்வம்தானே சிறந்த செல்வம்? பசித்த நேரத்தில் கிடைக்கும் உணவுதானே சிறந்த உணவு? தேவைப்படும் நேரத்தில் வெளிப்படும் - அது எவ்வளவு குறைந்த திறமையாகட்டும், தகுதியாகட்டும் - அவைதானே சிறந்த திறமையாகவும்,தகுதியாகவும் இருக்க முடியும்?

இதைப் பெரும்பாலும் தங்களை அறியாமல் வெளிப்படுத்தியவர்களே இன்று உங்களுக்கு டாட்டா காட்டிச் சென்றவர்கள்; உங்கள் முன்னோர் வாங்கத் தவறிய இடத்தை வாங்கிய அன்றைய ஏழைகள்!

கொஞ்சம் உற்றுப் பார்த்தால், திறமையும் தகுதியும் அற்றவர் என்று முத்திரை குத்தப்பட்டவர் வாய்ப்பு கிடைத்த நேரத்தில் தன் துண்டைப் போட்டுத் தனக்கான இருக்கையை முன்பதிவு செய்ததை உங்களால் பார்க்க முடியும்.

நிறையப் பணத்தைச் சேர்த்துக்கொண்டுதான் முதலீடு செய்வேன் என்றால், ஒரு பைசாகூட சம்பாதிக்க முடியாது. எல்லாத் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டுதான் முயற்சி செய்வேன் என்றால் இருந்த இடத்திலேயே சமாதி ஆக வேண்டியதுதான். கற்றது பைட் அளவு. கல்லாதது ஜி.பி அளவு.

ஒரு அலுவலகத்தில் ஒருவர் அதிகத் திறமையுடன் இருக்க, ஏனையோர் சராசரிக்கும் கீழே இருந்தால், அது ஒட்டுமொத்தமாய் சிறந்த அலுவலகம் அல்ல. ஒரு மாணவி மாநிலத்திலேயே முதலாவது வர, ஏனையோர் தோற்கிற வகுப்பைவிட அனைவரும் ஜஸ்ட் பாஸ் எடுக்கிற வகுப்புதானே சிறந்தது?

சராசரித்தனமாய் இருப்பதே மகிழ்ச்சி என்று இதற்கு அர்த்தமல்ல. நன்மைகள் விளைய அரிய ஆற்றல்களும், அதீதத் திறமைகளும் வேண்டியதில்லை.வெற்றி பெற சராசரித்தன்மைகூடப் போதுமானது.

1983-ல் கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற நம் அணியினர் ஒரு நாள் ஆட்டத்திற்கு லாயக்கில்லாதவர்களாகவே கருதப்பட்டார்கள். அவர்களில் யாருமே தனியாகப் பிரகாசிக்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லோரும் சராசரியாக ஆடினார்கள். ஒரு மேட்சில் கபில்தேவ் ஜொலித்தார் என்றால்,இன்னொன்றில் அமர்நாத். வேறொன்றில் காந்த், மதன்லால். கிளைமாக்ஸில் எல்லோரும் அவரவர் பங்கை அளித்தார்கள். ரன்னும் விக்கெட்டும் எடுக்காதவர்களும்கூட கேட்ச் பிடித்துத் தம் பங்கை ஆற்றினார்கள்.

ஒரு சினிமாவில் நல்ல கதை. ஆனால் மீதி எல்லாம் குப்பை. இன்னொரு படத்தில் எதுவுமே பிரமாதமில்லை. ஆனால் நடித்தவர்கள், இயக்கியவர்கள் எல்லோரும் தங்களின் ‘சுமாரை’ வழங்கியிருந்தால் வெற்றி பெற அதுவே போதுமானது. சொல்லப்போனால் இதுதான் சினிமாத் துறையை வாழ வைக்கிறது.

எனவே இருக்கிற சராசரித் திறமையை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதிகத்தகுதி இருந்தும் அது வெளிப்படாமல் இருப்பதை விட, குறைந்த தகுதியைத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்துபவர்தானே சிறந்தவர்?

நீச்சல் நன்கு தெரிந்தவர் குளிர் கண்டு தயக்கம் கொள்கையில், நீச்சல் தெரியாதவர் செம்பும் கையுமாக இறங்கி, சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நதியாகிறார். யார் சிறந்தவர்?

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

உதவும் கரங்கள் ஒன்று சேர்கின்றன


களத்தில் 'தி இந்து': நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!

    டி.எல்.சஞ்சீவிகுமார்
    மு.முருகேஷ்
    ஆர்.பாலசரவணக்குமார்



நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பர்களே. நாளுக்கு நாள் நாலாபுறமும் இருந்து உதவிகள் குவிகின்றன. சேப்பாக்கம் வழியாக சாலைகளில் செல்வோர் எல்லாம் முகாமை பார்த்துவிட்டு வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்துவிட்டுப் போகிறார்கள்.

முகாமுக்கு போன் செய்து, “சார் பெயர் எல்லாம் வேண்டாம், என்ன அனுப்ப வேண்டும் உங்களுக்கு” என்று நெகிழ வைக்கிறார்கள். மழை கொடுத்த நட்புகள் இவை. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வாக்கை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘தி இந்து’வின் வாசகர்கள்.

கைகோர்த்த பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா

நேற்றைய தினம் ‘தி இந்து’வுடன் கைகோத்தது ‘பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பு. அதன் மாநிலப் பொதுச்செயலாளர் முஹம்மது சேக் அன்சாரி கூறும்போது, “இதுவரை நாங்கள் சுமார் 83 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் அளித்துள்ளோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ‘தி இந்து’ குழுமம் சிறப்பான முறையில் உதவிகளை செய்து வருவதை அறிகிறோம்.

எனவே, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் உங்களோடு இணைந்து பணியாற்றும் விதமாக ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பாய், போர்வை, தலையணை, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம். எங்கள் செயல்வீரர்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

சேவை இல்லை, கடமை!

நிவாரண பணியில் பங்கேற்றிருக்கிற எவரிடமும் சேவை செய்கிறோம் என்ற உணர்வில்லை. தன்னை இத்தனை காலமாகச் சுமந்த சென்னைக்கும், உறவாக இருந்த மக்களுக்கும் நாம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணி இது என்கிற உணர்வு மட்டுமே உள்ளது.

திருவல்லிக்கேணியில் பழக்கடை வைத்திருக்கும் சந்திரன் கடந்த ஒரு வாரமாக தன்னிடமிருக்கும் டாடா ஏஸி வண்டி மூலமாக நிவாரணப் பொருட்களை சென்னை நகரின் பாதிக்கப்பட்ட பகுதிகளெங்கும் கொண்டுபோய் சேர்த்து வருகிறார். டீசல் செலவைக்கூட கேட்பதில்லை.

“வெள்ளத்தில என்னோட வீடு பாதிக்கப்படலேன்னு நான் நினைக்கலே. பாதிக்கப்பட்டது எல்லாமே என்னோட குடும்பமா நினைக்கிறேன். என்னால முடிஞ்சது இது. தினமும் இங்க வந்து இந்த வேலைகளைச் செஞ்சிட்டுப் போனாத்தான் மனசுக்கு நிம்மதி வருது…” என்று சந்திரன் சொல்லும்போதே மனதின் ஈரம் கண்களில் வடிகிறது.

ஆயிரமாய் நீளும் உதவிக் கரங்கள்

தன் மனைவியோடு வந்த பெயர் குறிப்பிட விரும்பாத சுங்கத்துறை அதிகாரி ஒருவர், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்ப உடனடியான தேவை என்னன்னு சொல்லுங்க. என்னோட பங்களிப்பா ரூ.25 ஆயிரத்துக்கான பொருட்களை நானே வாங்கித் தந்துட்டுப் போறேன்…” என்று சொல்லிவிட்டு அங்கேயே அமர்கிறார்.

அண்ணா நகர் மேற்கில் வசிக்கும் 84 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே துறை அதிகாரி சி.ஜி.ரத்னம் இரு கைகளிலும் பைகளைச் சுமந்து வருகிறார். “பாதிக்கப்பட்ட மக்களுக்கான என்னோட பங்களிப்பு…” என்று கூறியபடி இரண்டு பைகளையும் தந்தவர், “எங்க ஏரியாவில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வசிக்கிறாங்க. நான் ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு பொருட்கள் கொடுக்கப் போறேன்னு சொன்னவுடனே, அவங்க அம்மாவோட பிறந்த நாளுக்கு வாங்கின மொத்த புதுத் துணியையும் கொடுத்துவிட்டாங்க” என்று இன்னொரு பையையும் சேர்த்துத் தருகிறார்.

நெகிழ்ந்த நன்றியோடு…

கையில் ‘தி இந்து’வுக்கான நன்றி அட்டையோடும், கொஞ்சம் புகைப் படங்களோடும் உள்ளே வருகிறார் பிரசாத் சிங் (66). குடிசை மாற்று வாரிய முன்னாள் உறுப்பினர். “என்னோட சொந்த ஊரு திருவாலங்காட்டில உள்ள ஜாகீர்மங்கலம் கிராமம். அந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கிற 5 பஞ்சாயத்துல சுமார் 3,500 வீடுகள் இருக்கு. அந்தப் பகுதி மொத்தமும் வெள்ளத்தில் மூழ்கிடுச்சு.

இதை டிசம்பர் 6-ம் தேதி ‘தி இந்து’ நிவாரண முகாம்ல வந்து சொன்னேன். உடனே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, பாய், பிரெட், ரஸ்க், ஸ்டவ்ன்னு கொடுத்தாங்க. அதையெல்லாம் பஞ்சாயத்து பள்ளிக்கூடத்திலேயும், ஊர் லைப்ரரியிலேயும் தங்கியிருக்கிற மக்கள்கிட்டே கொடுத்தேன். ரொம்ப நன்றி” என்றவர், தான் மக்களுக்கு விநியோகித்த பொருட்களை படம் எடுத்து ஆல்பமாக்கி கொண்டு வந்து கொடுத்தார்.

நோய் நாடி உயிர்நாடி…

தினமும் நிவாரண முகாமுக்கு வந்து விடுகிறார் டாக்டர் மகாதீர் முகமது (25). சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் இவர் ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணி செய்கிறார். “என் தம்பியோட நண்பர்கள் மூலமா கேள்விப்பட்டுத்தான் ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு வந்தேன்.

நிவாரண உதவிகளோட சேர்த்து சுகாதாரப் பணிகளையும் செய்ய வேண்டியது ரொம்ப அவசியம். தினமும் இங்க வர்றவங்களுக்கு மருத்துவம் பார்ப்பதோடு, நிவாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் தடுப்பூசிகள் போடுகிறேன்” என்கிறார்.

தொய்வின்றி தொடரும் உதவிகள்…

நிவாரண முகாமுக்கு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா, ஞானசேகரன் ஆகியோர் பாய், பால் பவுடர் உள்ளிட்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைத் தந்துவிட்டு, “இது நாங்களும், எங்கள் துறையின் இணை ஆணையர் ஜெகன்னாதன், துணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் விஜயா ஆகியோர் அளிக்கும் எளிய பங்களிப்பு” என்றார்கள்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.8 ஆயிரம் மதிப்பிலான போர்வைகள், டவல் ஆகியவற்றை தேவகோட்டை கே.பி.என். டிராவல்ஸ் மூலமாக ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கு அனுப்பியுள்ளனர்.

என்.டி.எல். டிராவல்ஸ் நிறுவனத்தினர் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள 2 கார்களை அனுப்பியுள்ளனர். ஏர்செல் நிறுவனம், முகாமுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்பவர்களுக்காக 2 பிரத்தியேக அலை பேசி இணைப்புகளை (99418 22222, 9941733333) இலவசமாக அளித்துள்ளனர்.

சென்னை மகரிஷி பள்ளி நிர்வாகத் தினர் நிவாரணப் பணிகளுக்கு பயன் படுத்திக்கொள்ள 2 பள்ளி வேன்களை அளித்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலும் ‘தி இந்து’ கள நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கனிவான வேண்டுகோள்

அன்புள்ள வாசகர்களே, தாங்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக் கும் உதவி பொருட்கள் மனதை நெகிழச் செய்கின்றன. நன்றி. அதே சமயம், பழைய துணிகள் அனுப்பு வதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.

மேலும், தண்ணீர் பாக்கெட்டுகள் தேவைக்கும் அதிகமாக குவிந்து விட்டதாலும், அவற்றை அனுப்ப உங்களுக்கு செலவு அதிகம் பிடிக்கும் என்பதாலும் தண்ணீர் பாக்கெட் மூட்டைகளை அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கைதட்டி உற்சாகப்படுத்திய ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம்

இதுவரை நமது முகாமில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் முகாமுக்கு வந்து தன்னார்வலர்களை உற்சாகப்படுத்தினார்.



முகாமில் முதல் நாளில் இருந்து ஓய்வின்றி உழைத்து வரும் தன்னார்வலர் ஸ்டெபியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டியவர், அர்ஜூன், அசோக், ஆறுமுகம் ஆகிய சிறுவர்களை பற்றிய விவரங்களை கேட்டறிந்து தோளில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். இந்த நிவாரண முகாம் முடிந்தததும் நீங்கள் மூவரும் கண்டிப்பாக படிக்கப் போக வேண்டும் என்றும் அவர்களை அறிவுறுத்தினார்.

‘கேஜியெஸ் ரெசிடன்சி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முகம் சார்பில் துணைத் தலைவர் டேனியன், பொதுமேலாளர் அனந்தராமன் ஆகியோர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 550 மண்ணெண்ணெய் ஸ்டவ்களை ‘தி இந்து’ இணையதள பிரிவு ஆசிரியர் பாரதி தமிழனிடம் வழங்கினர். உடன் ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம்.

வலி இல்லாத வாழ்க்கை .. டாக்டர் பிரபு திலக்

Return to frontpage

வலி இல்லாத வாழ்க்கை ஒன்று இருக்குமானால் அதுவே சொர்க்கம், அதுவே வாழ்க்கையின் அளவிட முடியாத ஆசீர்வாதம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட வரம் பலருக்கும் வாய்ப்பதில்லை.

பலருடைய வாழ்க்கையில் வலி என்பது நோயின் அறிகுறி என்ற நிலை மாறி, அதுவே நோயாக மாறிவிடுவதும் உண்டு. இப்படி வலியால் அவதிப்படுபவர்களின் தேவைக்குத் தீர்வு கொடுக்கும் மருத்துவத் துறை ‘நோய்த் தணிப்பு பேணுதல்’ எனப்படும் ‘வலி நிர்வாகத் துறை’. தலைவலியில் தொடங்கி முழங்கால் வலி, முதுகுத் தண்டு வலி, மூட்டுவலி, புற்றுநோய் வலி உள்படப் பலவற்றுக்கும் இத்துறை சிகிச்சை தருகிறது.

இன்றைய வாழ்க்கையில் சரிவிகித உணவுப் பழக்கம் இல்லாமை, போதிய உடற்பயிற்சி இல்லாமை, தவறான உடற்பயிற்சிகள், அதிகமான உடல் எடை, உடல் இளைக்கிறேன் எனச் சத்தான உணவை ஒதுக்குதல், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த சரியான விழிப்புணர்வு இன்மை போன்றவை இளம் வயதிலேயே வலிகள் வருவதற்கான அடிப்படைக் காரணங்கள்.

இடுப்பு வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் வலி நிர்வாகத் துறை தீர்வு தருகிறது. அல்ஜியாட் சிகிச்சையின் மூலம் பலருக்கும் வலி நிவாரணம் அளிக்க முடியும். எடுத்துக்காட்டாக, புற்றுநோய் ஏற்படுத்தும் வலியால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்குக் கேங்கிலியான் பிளாக் (Ganglion Block) எனும் நவீன சிகிச்சை பயன் தரும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை இத்துறை பற்றிய விழிப்புணர்வு சற்றுக் குறைவு. கடந்த 4 ஆண்டுகளாகப் பின்தங்கிய கிராமங்களில் இருந்துகூடப் பலர் இந்தச் சிகிச்சையைப் பெறும் அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்துவருகிறது.

ஜவ்வு பிதுங்குதல்

இரு சக்கர வாகனங்களில் அதிகப்படியாகப் பயணம் செய்யும்போது ஏற்படும் அதிர்வுகள், உட்கார்ந்த நிலையிலேயே பல மணி நேரம் வேலை பார்ப்பது, உடற்பயிற்சியின்போது அதிகப்படியான பளுவைத் தூக்குதல், உடல் எடை அதிகரிப்பு, எடை அதிகமுள்ள பொருட்களைப் பெண்கள் தூக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் தண்டுவட எலும்புகளுக்கு மத்தியில் ‘ஷாக் அப்சர்பர்’ போல வேலை செய்யும் ஜவ்வு பிதுங்குவதால் வலி ஏற்படுகின்றன.

சிலருக்கு இப்படிப் பிதுங்கிய ஜவ்வு, நரம்பை அழுத்துவதால் தாளமுடியாத வலி ஏற்படும். நாளடைவில் கால்கள் உணர்ச்சியற்றுப் போகக்கூடிய ஆபத்தும் உண்டு.

அல்ஜியாட் சிகிச்சை முறைகள் மூலம் அறுவைசிகிச்சையின்றி இந்த வலிகளையும், வலியைத் தோற்றுவிக்கும் மூலக் காரணங்களில் பலவற்றையும் குணப்படுத்தலாம்.

பெண்களும் இளைஞர்களும்

இளம் வயதினர் தேவையற்ற முரட்டுத்தனத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது முதுகுவலி, இடுப்புவலி ஏற்படலாம். அதிகப்படியான பளுவை முறையான பயிற்சியில்லாமல் தூக்கும்போதும், இவ்வலி ஏற்படும். டிஸ்க் பல்ஜ், டிஸ்க் புரோலாப்ஸ் போன்றவை ஏற்பட்டுத் தண்டுவடத்தின் நரம்புகளை அழுத்தும்.

இதனால் ஏற்படும் வலி, இடுப்பு மற்றும் கால்களுக்கும் பரவும். ஜவ்வுகள் கழுத்துப் பகுதியில் பிதுங்கும்போது, கைகளிலும் வலி ஏற்படும். இத்தகைய வலிகளுக்கு ஹைட்ரோசிஷன் (Hydrocision), நியூக்ளோடமி (Neucleatomy) போன்ற சிகிச்சைகள் பயன்படும்.

நாற்பது வயதுக்கு மேல் மெனோபாஸ் ஆரம்பித்துவிடுவதால் உடலில் சுண்ணாம்புச் சத்து குறைந்து முழங்கால், மூட்டு, இடுப்பு வலி போன்றவை பெண்களை அதிகம் பாதிக்கிறது. கர்ப்பப்பையை அகற்றிய பெண்களுக்கு இது இன்னும் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே உடலியல் மாற்றங்களால் அவதிப்படும் அவர்களுக்கு, இந்த வலியும் சேர்ந்து இயல்பு வாழ்க்கையை முடக்கலாம். இத்தகையோரின் வலிகளுக்கான தீர்வை கிளாஸ் 4-லேசர், அல்ட்ரா சவுண்ட், நெர்வ் பிளாக் கருவிகள் மூலம் தர முடியும்.

நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்றவை அதிகம் தாக்குகிற முதியவர்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி போன்றவற்றுக்கு அறுவைசிகிச்சை செய்வது சிக்கலானது. இவர்களுக்கு அறுவை சிகிச்சையும் பக்க விளைவுகளும் இல்லாமல் வலி நிர்வாகத் துறையின் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

நோய்கள் தடையில்லை

டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற நோயால் ஏற்படக்கூடிய வலி மிகவும் மோசமானது. முகத்தில் அவ்வப்போது ஷாக் அடிப்பது போலிருக்கும், பல் விளக்க, முகம் கழுவப் போன்ற செயல்களைச் செய்யக்கூட மிகவும் வேதனையாக இருக்கும்.

குளிர் காலத்தில் பிரச்சினை மேலும் கடுமையாகும். மூளையிலுள்ள ரத்தக் குழாய்களும் நரம்புகளும் பின்னிக்கொள்வது, இதற்கு ஒரு காரணம். சுகுயு சிகிச்சை முறை இதற்கு நல்ல தீர்வு.

வலி நிர்வாகத் துறையின் மற்றொரு சிறப்பு வயது, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற எந்தவொரு விஷயமும் இந்தச் சிகிச்சை முறைக்குத் தடையில்லை. இப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையை முடக்கிப்போடும் பலவிதமான வலிகளிலிருந்து விடுபடக் கத்தியின்றி, ரத்தமின்றி அல்ஜியாட் சிகிச்சையின் மூலம் தீர்வு கிடைக்கிறது.

கட்டுரையாளர், வலி நிவாரண நிபுணர்

தொடர்புக்கு: prabhuthilaak@painwin.com

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை வெள்ளம் வேட்டையாடியது எப்படி? வி.தேவதாசன் / கி.கணேஷ் / கோ.கார்த்திக் / இரா.நாகராஜன்

Return to frontpage

கடந்த மே, ஜூன் மாதங்களிலிருந்து நவம்பர் முதல் வாரம் வரையும் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த சென்னை மாநகர மக்களை, நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து வெள்ளத்தில் தத்தளிக்க வைத்திருக்கிறது வடகிழக்கு பருவ மழை. வழக்கமாக வெள்ளத்தால் சூழப்படும் வேளச்சேரி, முடிச்சூர் போன்ற புறநகர் பகுதிகள் தவிர, தேனாம்பேட்டை, தியாகராய நகர், மேற்கு மாம்பலம் எனச் சென்னையின் மையப் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. அண்ணா சாலையில் போக்குவரத்தைத் தடை செய்யும் அளவுக்கு வெள்ளத்தின் தீவிரத்தைச் சென்னை மக்கள் அப்போதுதான் பார்த்தார்கள். தரைத் தளத்தில் உள்ள வீடுகள் மட்டுமின்றி, முதல்தளம், இரண்டாம் தளத்தில் உள்ள வீடுகளில் கூட வெள்ளம் நுழைந்து, ஏராளமான மக்களை மொட்டை மாடிக்கும் வீதிகளுக்கும் விரட்டியடித்தது.

இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தும் அளவுக்கு வெள்ளம் மிகுதியானது எப்படி சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாகத் திகழும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் திறந்து விடப்பட்ட உபரி நீர் மட்டுமே பேரழிவுக்குக் காரணமா, அடையாறு, கூவம் ஆறுகளுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வந்தது என்பன போன்ற பல கேள்விகள் இப்போது மக்களிடம் எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை காணச் சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட் டங்களின் நீர் நிலைகள், நில அமைவுகள் பற்றி அறிந்து கொள்வதும் மிக அவசியமாகும். இந்த 3 மாவட்டங்களில் சிறியதும், பெரியதுமாக மொத்தம் சுமார் 3 ஆயிரத்து 700 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 1,083 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக மதுராந்தகம், தென்னேரி, உத்திரமேரூர் ஏரி மற்றும் கொளவாய் ஏரிகள் உள்ளன.

காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாமல் ஏரி, காஞ்சி நகரப் பகுதியில் செல்லும் வேகவதி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பெரிய ஏரி செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் ஏரியாக உள்ளது.

மாவட்டத்தின் மையப்பகுதியில் செல்லும் பாலாறு நதி காஞ்சிபுரம், வாலா ஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகக் கல்பாக்கம் அடுத்த வாய லூர் கிராமத்தில் கடலில் கலக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய வட்டங்களில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், தென்னேரியில் கலந்து அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாயில் பயணித்துப் பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது.

திருப்போரூர் வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் கொளவாய் ஏரிக்குச் சென்று, புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கலங்கல் வழியாக நீஞ்சல் மடுவில் கலக்கிறது. பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் மணிமங்கலம் வழியாக அடையாற்றில் கலக்கிறது.

உத்திரமேரூர் ஏரியின் உபரி நீர் இரண்டு பகுதியாக வெளியேறுகிறது. இதில் ஒரு பகுதி தண்ணீர் சங்கிலி தொடராக அப்பகுதியில் உள்ள கிராம ஏரிகளை அடைந்து கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளை நிரப்பி கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது.

மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தும் மீண்டும் கிளியாற்றில் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர், கடப்பேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு நடுவே பயணித்து ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது.

இவை தவிரத் திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள், சென்னை புறநகர் பகுதிகளாகக் கருதப்படும் கேளம்பாக்கம், தையூர், கோவளம் வழியாகப் பக்கிங்காம் கால்வாயில் கலக்கின்றன. தற்போதைய தொடர் மழையில் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கரைகள் பலவீனம் காரணமாக 75 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுத் தண்ணீர் வெளியேறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 587 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 649 ஏரிகள் என 1,236 ஏரிகள் உள்ளன.

மாவட்டப் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 337 ஏரிகள் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ளன. ஆரணி ஆற்றின் வடிநில உப கோட்டத்தின் கீழ் 250 ஏரிகள் உள்ளன. சென்னைக்குக் குடிநீர் தரும் பூண்டி, சோழவரம், புழல் ஆகிய 3 ஏரிகள் தவிர மற்ற ஏரிகள், மழைக்காலத்தில் சங்கிலி தொடர் ஏரிகளாக நிரம்பி உபரி நீர் கூவம், கொசஸ்தலை, ஆரணி, நந்தியாறு நதிகள் மூலம் எண்ணூர், நேப்பியர் பாலம், பட்டினப்பாக்கம், முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் கடலில் கலக்கின்றன.

சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது எப்படி?

தீபாவளி பண்டிகையின்போதே கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் பிறகு நவம்பர் 13-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 326 மிமீ மழை பதிவானது. மீண்டும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் 15-ம் தேதி மட்டும் 230 மிமீ முதல் 370 மிமீ வரை மழை பதிவானது. அப்போதே இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீரை வெளியேற்றின.

இந்தச் சூழலில் நவம்பர் 30 முதல் மூன்று நாட்கள் விடாது கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி பலத்த மழை கொட்டியது. அன்றைய தினம் தாம்பரத்தில் 494 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 470 மிமீ மழை பதிவானது.

பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரி களிலிருந்து உபரி நீர் திறந்து விடப் பட்டது. குறிப்பாகச் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 29 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் துல்லியமான கணக்கீடுகள் இல்லாவிட்டாலும் கூட அடையாற்றில் வினாடிக்கு 90 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை வெள்ள நீர் சென்றதாகக் கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகபட்சம் 29 ஆயிரம் கனஅடி மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் அடையாற்றில் 90 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் சென்றது எப்படி என்பதுதான் முக்கியமானது.

மாகாணியம் மலையம்பட்டு பகுதியில் தொடங்கும் அடையாறு காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 42.5 கிமீ தூரம் பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட உபரி நீர் உடனடியாக அடையாற்றில் சேர்ந்து விடும்.

இது தவிர வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங் காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்கராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர் ஏரி, கோவூர் ஏரி, மாங்காடு, பெரியபணிச்சேரி எனப் பல ஏரிகளின் உபரி நீர் அடையாற்றுக்குதான் வந்தாக வேண்டும். காட்டாங்கொளத்தூர் ஏரி, பொத்தேரியில் உள்ள காவனூர் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் வெளியேறவும் அடையாறுதான் வழி.

மேலும் பாப்பான்கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஒரத்தூர் ஓடை ஆகிய கால்வாய்களும் அடையாறுக்குத்தான் நீரைக் கொண்டு வருகின்றன.

இவ்வாறு கடந்த 1-ம் தேதி பெய்த மழையின்போது ஆதனூர் ஏரி, மணிமங்கலம் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் திருநீர்மலை பகுதியில் ஒன்று சேர்ந்தபோது அடையாற்றில் மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் முழு அண்டா தண்ணீரைத் திடீரெனக் கவிழ்த்தது போலச் சென்னை மாநகர எல்லைக்குள்ளும் பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. மாநகர எல்லையில் பெருகிய வெள்ள நீர் முழுவதும் அடையாற்றிலும், கூவத்திலும்தான் வடிந்தன. ஆக, செம்பரம்பாக்கத்துக்கு கிழக்கே குன்றத்தூர், அனகாபுத்தூர், மதனந்தபுரம், பொழிச்சலூர், விமான நிலையம், ராணுவப் பகுதி, மணப்பாக்கம், கே.கே.நகரை ஒட்டிய பகுதிகள், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், அடையார் எனக் கிழக்கு நோக்கிச் செல்லச் செல்லத் தண்ணீரின் அளவும் பெருகவே, வினாடிக்குச் சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் கன அடி வரை அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டது.

இன்னொருபுறம் சென்னை பெருநகரத்தில் சிஎம்டிஏ வரையறை எல்லைக்குள் மட்டுமே சிறியதும், பெரியதுமாக 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அவற்றில் தொடர் கனமழை காரணமாகப் பல்லாவரம், பீர்க்கன்கரணை, இரும்புலியூர், பெரும்பாக்கம், கடப்பேரி, மடிப்பாக்கம் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, குரோம்பேட்டை வீரராகவா ஏரி, ராஜகீழ்ப்பாக்கம், கோவிலம்பாக்கம், நாராயணபுரம் எனச் 27 ஏரிகள் நிரம்பி உடைப்பு எடுத்தது. இதனால் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கேளம்பாக்கம் என சென்னையின் தென்பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடானது.

கூவம், கொசஸ்தலை ஆறுகள்

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் ஏரியில் தொடங்கும் கூவம் ஆறு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் 72 கிமீ பயணித்து, சென்னை-நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தற்போதைய பெருமழையின்போது திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 45 ஏரிகள் நிரம்பி அவற்றின் உபரி நீர் கூவம் நதியில் பெருகியது. இதனால் கூவம் நதி செல்லும் வானகரம், நெற்குன்றம், பாடிக்குப்பம், என்எஸ்கே நகர், செனாய் நகர், சேத்துப்பட்டு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களை ஒட்டிய சென்னை மாநகரப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. கடந்த 1-ம் தேதி மட்டும் கூவம் நதியில் வினாடிக்குச் சுமார் 25 ஆயிரம் கன அடி நீர் சென்றதாகத் தகவல்.

ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகி, வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் ஏரி வழியாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் நுழைந்து எண்ணூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கும் கொசஸ்தலைஆற்றின் நீளம் சுமார் 136 கிமீ. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் ஏரி, ஞாயிறு ஏரி, சடையங்குப்பம் ஏரி உள்ளிட்ட 213 ஏரிகளின் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நவம்பர் 16 முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை மட்டும் 19 டிஎம்சி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே வங்காள விரிகுடாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக நவம்பர் 24-ம் தேதி வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி மழை நீர், கடலில் கலந்துள்ளது.

அதேபோல் ஆந்திர மாநிலம், நகரி மலையடிவாரத்தில் உருவாகும் ஆரணி ஆறு திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் மட்டும் சுமார் 131 கிமீ பயணித்துப் பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செழியம்பேடு ஆழ் ஏரி, எளாவூர் காட்டேரி உள்ளிட்ட 211 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது.

ஆக ஒரே நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதாலும், அதே நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஒரே சமயத்தில் கொட்டித் தீர்த்த கனமழையாலுமே இந்த 3 மாவட்டங்களிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மேலும் எண்ணிலடங்கா நீர்நிலைகளை ஆக்கிரமித்தது, மழை நீர் வடிகால்களாகத் திகழும் பெரிய ஆறுகள், சிறிய கால்வாய்கள் தூர்வாராதது போன்றவைதான் வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிரதானக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

தற்போதைய மழை வெள்ளம் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அதனை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவது நமது கைகளில்தான் இருக்கிறது. அதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.

பேரிடர் கால வெள்ளத் தடுப்பு சாத்தியமே

பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் ஆர்.தங்கையா

சென்னை மாநகரைப் பொருத்தமட்டில் பெரும்பாலான பகுதிகள் சராசரி கடல் மட்டத்திலிருந்து 10 முதல் 30 அடி உயரத்தில் உள்ளன. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லச் செல்லச் சரிவாக இருந்தால் மழை நீர் வேகமாகக் கடலுக்குச் சென்று விடும். ஆனால் சென்னை மாநகரின் நில அமைவு என்பது மிகப் பெரும்பாலான பகுதிகளில் சரிவாக இல்லாமல் ஒரே தளமாக உள்ளது. இதன் காரணமாக நிலத்துக்கு வந்து சேரும் மழை நீர் கடலுக்குச் சென்று சேருவதற்குப் பிற பகுதிகளை விடச் சற்றுக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும்.

இந்தச் சூழலில் கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதிகளில் மழை கனமழையாகிக் கனமழை மிகத் மிக தீவிரக் கனமழையாக மாறியதால் ஒட்டுமொத்தச் சென்னை மாநகரமே ஒரு பெரிய குளம் போல் மாறியது. அதே நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியதால் வழிந்த உபரி நீர் அடையாறு, கூவம் நதிகள் வழியே சென்னைக்குள் புகுந்தது.

இது தவிர இங்குள்ள மண் வகை இன்னொரு முக்கிய காரணம். இங்கு வடசென்னை மணல் சார்ந்த பகுதியாகவும், மத்தியச் சென்னை களிமண் பூமியாகவும், தென்சென்னை பாறைப் பகுதியாகவும் உள்ளது. மணற்பாங்கான வடசென்னை பகுதியில் மழை நீர் வேகமாகத் தரைக்குள் உறிஞ்சப்படும். ஆனால் களிமண் மற்றும் பாறை நிலங்களில் மழை நீர் மிக மிக மெதுவாகவே உறிஞ்சப்படும். இதனாலேயே இந்த மண் வகைகள் சார்ந்த மத்தியச் சென்னை, தென்சென்னை பகுதிகளில் கனமழை பெய்யும்போது பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இயற்கையிலேயே உருவான இத்தகைய நில அமைவு தவிர, கட்டிடங்கள் கட்டுவதற்காக நீர்நிலைகளை அழித்த நம் மனிதர்களின் செயற்கையான செயல்பாடுகள்தான் பேரழிவு ஏற்பட முக்கியக் காரணம். தனி மனிதன் மட்டுமின்றி, நீர்நிலைகளைக் காப்பாற்ற வேண்டிய மத்திய, மாநில அரசுகளே அந்த நீர்நிலைகளை அழித்ததுதான் பெரும் சோகம். நம்மூரில் உள்ள வள்ளுவர் கோட்டம், நேரு உள்விளையாட்டு அரங்கம், கோயம்பேடு சந்தை போன்ற பிரதான இடங்கள் கூட நீர்நிலைகளை அழித்து உருவான இடங்கள்தான்.

எனினும், இப்போது கூட இத்தகைய இயற்கை பேரிடர்களை எளிதாக எதிர்கொள்ளலாம். அதற்கான அறிவியல் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. உதாரணமாக ஏரிகளின் உபரி நீர் நுழையும் நகரின் மேற்கு புறத்தில் சிறிய தடுப்புகளை உருவாக்கலாம். அங்கிருந்து குழாய்களைப் பதித்துக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெள்ள நீரை நகருக்கு வெளியே கொண்டு சென்று கடலில் கலக்கச் செய்யலாம்.

தேவை நீர்வழிச் சாலை

‘நவாட் டெக்’ அமைப்பின் தலைவர் பேராசிரியர் ஏ.சி.காமராஜ்

வறட்சி, வெள்ளம் இரண்டையுமே சமாளிக்க முடியும். அதற்கான தீர்வுதான் நீர்வழிச் சாலைத் திட்டம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள நதிகளை மட்டுமின்றி, நாட்டின் பெரும்பாலான நதிகளைப் பிணைக்கலாம்.

சமதளத்தில் அமையக் கூடிய இந்த நீர்வழிச் சாலை மூலம் ஓரிடத்தில் வெள்ளம் ஏற்பட்டால், வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்னொரு பகுதியோடு வெள்ள நீரை உடனே பகிர்ந்து கொள்ள முடியும். இந்தத் திட்டத்தை ஆந்திரத்தில் செயல்படுத்த அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகத் தீவிரமாக உள்ளார். தெலங்கானா மாநிலமும் நீர்வழிச் சாலை அமைக்க ஆர்வமாக உள்ளது.

தமிழ்நாட்டிலும் இந்தத் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்கெனவே விவாதித்துள்ளோம். ‘நவீன நீர்வழிச் சாலைகள் மூலம் அனைத்து ஆறுகளையும் இணைப்போம்’ என்று 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல் தமிழ்நாட்டில் நீர்வழிச் சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

பொக்கிஷமாக பாதுகாத்த பொருட்களும் குப்பைக்கு வந்த அவலம் மனம் கலங்கும் சென்னை நகர மக்கள்

logo

சென்னை,

சென்னையில் மழைவெள்ளம் தேங்கிய வீடுகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. வீதிகளில் பொருட்கள் குவிந்து வருகிறது. பொக்கிஷமாக பாதுகாத்த பொருட்களும் குப்பைக்கு போய் உள்ளன.

புரட்டிப்போட்ட மழை வெள்ளம்

சென்னை நகரை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மெல்ல, மெல்ல வடிந்து வருகிறது. சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கோட்டூர்புரம், கிண்டி, அசோக்நகர், கே.கே.நகர், தியாகராயநகர், மேற்கு மாம்பலம் உள்பட பல பகுதிகளில் குடியிருப்புகளுக்கு புகுந்த மழை வெள்ளநீர் நேற்று வடிந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தபோது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள்-நண்பர்கள் இல்லத்துக்கு சென்றவர்களும், வீட்டின் மேல்தளத்தில் தஞ்சமடைந்தவர்களும் தற்போது தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

குப்பை இல்லாமல் எப்போதும் வீட்டை தூய்மையாக வைத்திருந்த இல்லத்தரசிகள் மழை வெள்ளத்தால் தங்கள் வீடு அலங்கோலமாக மாறி உள்ளதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

சிறுக, சிறுக சேமித்து ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டு உபயோகப்பொருட்கள் மழை வெள்ளத்தால் சின்னா பின்னாமாகி போனதை பார்த்து பலரும் மனம் கலங்கி உள்ளனர்.

மலைபோல் பொருட்கள்

12 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் சூழ்ந்த சென்னை மேற்கு மாம்பலம் சவுத் கே.ஆர்.கோவில் தெருவில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் சேதமடைந்து பயனற்றுப்போன மெத்தைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

திருமண புகைப்பட ஆல்பம், மூதாதையர்கள் புகைப்படங்கள், நெருங்கிய நண்பர்கள் வழங்கிய நினைவு பரிசுகள், பள்ளி-கல்லூரி படிப்பின்போது வாங்கிய கேடயங்கள், கோப்பைகள் போன்ற காலம், காலமாக பொக்கிஷமாக பாதுகாத்து வந்த பொருட்களும் குப்பைகளில் கிடப்பதை காண முடிகிறது.

அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்களும் வீணாகி, ஒவ்வொரு வீட்டின் முன்பும் குப்பை மேடு போன்று காட்சி அளிக்கிறது.

மக்கள் குமுறல்

இதுகுறித்து மேற்கு மாம்பலம் சவுத் கே.ஆர்.கோவில் தெருவை சேர்ந்த பகுதிவாசிகள் மனகுமுறலுடன் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் மழை வெள்ள நீரை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. குப்பைகளை அகற்றும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன’ என்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...