Wednesday, January 6, 2016

நேருவும் நேஷனல் ஹெரால்டும்...


Dinamani


By தி. இராசகோபாலன்

First Published : 05 January 2016 12:56 AM IST


பிரசவ வேதனையைப் பெண்ணுக்கு மட்டும் ஏன் வைத்தான், என்று பல நேரங்களில் சஞ்சலப்பட்டதுண்டு. ஆனால், பத்திரிகைக் குழுமத்தைச் சார்ந்தவர்கள் மறுநாள் வரவேண்டிய பத்திரிகையை, முதல்நாள் இரவே மூட்டைக் கட்டி அனுப்ப வேண்டுமென்பதில் படுகின்ற பாடுகள் இருக்கின்றனவே, அவற்றை எண்ணிய நேரத்தில் படைத்தவன் சமதர்மவாதிதான் என்பது புலப்பட்டது. இத்தகைய பெரும்பாடுகள் நேஷனல் ஹெரால்டு தோன்றிய காலத்திலிருந்து அதன் அந்திம காலம் வரை அகலவே இல்லை.
பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மூளைதான் நேஷனல் ஹெரால்டு. லண்டனில் படிப்பை முடித்து நேரு அலகாபாத் திரும்பிய நேரத்தில், இன்டிபெண்டன்ட் எனும் பெயரில் ஓர் ஆங்கிலப் பத்திரிகை மோதிலால் நேருவின் முழுமையான பொருளாதாரப் பின்புலத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது. நேரு அப்பத்திரிகையில் தொடர்ந்து எழுதலானார். ஆனால், மனிதவளம் இல்லாமல் போனதால் அப்பத்திரிகை அகால மரணமடைந்தது.
நேருவின் எழுத்துக்களில் இலக்கிய நயம் இல்லை என்று சிலர் விமர்சித்தபோது, "நான் ஓர் இலக்கியக்கர்த்தா அல்ல. ஆனால், ஒரு பத்திரிகை எழுத்தாளனைப்போல் இருக்கின்றேன்' என நவின்றார்.
இன்டிபெண்டன்ட் பத்திரிகை மறைந்த சோகம் நேருவைக் கப்பிக்கொண்டது. என்றாலும், அதுவே அடுத்தொரு பத்திரிகையைத் தொடங்க வேண்டும் எனும் வேகத்தையும் தந்தது. காங்கிரஸ் கட்சியினுடைய நடப்புகளையும், போராட்டங்களையும் காஷ்மீரத்திலிருந்து, இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனும் ஆதங்கத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை 09.09.1938 அன்று லக்னெளவில் தொடங்கினார்.
இதழியல் துறையில் ஒரு துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்த கே.ராமா ராவை நேஷனல் ஹெரால்டின் ஆசிரியராக்கினார் நேரு. இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில்கூட பத்திரிகைக்கு ஆல்பெர்ட் எனும் கனரக இயந்திரத்தை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தவர் நேரு. பத்திரிகையின் நோக்கம், சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது; எதையும் தியாகம் செய்து அதனைக் காப்போம் என்பதாகும்.
இந்தக் குறிக்கோளைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், இந்திரா காந்தி. கேபிரியல் எனும் கார்ட்டூனிஸ்ட் வரைந்த கார்ட்டூனுக்குக் கொடுத்த தலைப்பு அது. அதனை நறுக்கி இந்திரா, நேருவுக்கு அனுப்பினார். நேரு அதனைப் பத்திரிகையின் நோக்கமாக்கினார். இதனைப் பத்திரிகை உலகம், மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையின் குறிக்கோளாகிய ‘Comment is free;’ but facts are sacred என்பதற்குச் சமமானதாகப் பாராட்டியது. ஆசிரியர் கே. ராமாராவ், எங்களுடைய மூலதனம் நேருபிரான். எங்களது முதல் வங்கி ஏழைகளின் சட்டைப் பையே என எழுதினார்.
நேஷனல் ஹெரால்டில் ராமா ராவின் எழுத்துக்கள் தீப்பந்தங்களாகவும், கண்ணி வெடிகளாகவும் ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் கலங்கடித்தது. ஆங்கிலேய அரசு பத்திரிகையின் மீது தனது கிடுக்கிப்பிடியை இறுக்கிப் பிடித்தது. முன்ஜாமீனாக ரூ.6,000/- கட்டச் சொன்னது. அதனைக் கட்டி முடித்தவுடன் மீண்டும் 12,000/- ரூபாயைக் கட்டியாக வேண்டும் அல்லது பத்திரிகை நிறுத்தப்படும் என அச்சுறுத்தியது. ஆத்திரமடைந்த நேரு, ஒரே ஓர் அறிக்கையினைப் பத்திரிகையில் வெளியிட்டார். உடனடியாக ரூ.42,000/- பொதுமக்களிடமிருந்து வந்து குவிந்தது.
ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி ராமாராவ் காரசாரமாக எழுதினார். லக்னெள சிறைச்சாலைக்குள்ளேயே தடியடி செய்து, விடுதலைப் போராட்ட வீரர்களை அடித்து நொறுக்கிய அநாகரிகச் செயலை, ரத்தம் கொப்பளிக்கத் தக்கவகையில் தீட்டிக் காட்டினார் ராமாராவ்.
ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசு, கறுப்புச் சட்டத்தைக் கையில் எடுத்து ராமா ராவைக் கூண்டிலேற்றி ஆறு மாத காலம் சிறையில் அடைத்தது. வெகுண்டெழுந்த நேரு, அலகாபாத்திலிருக்கும் ஆனந்தபவனத்தை விற்றாவது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்துவேன் என்றறிக்கை விட்டார். நேரு என்ற ஒரே ஓர் உறைக்குள், தேசியமும் பத்திரிகா தர்மமும் இரண்டு வாள்களாகக் கிடந்தன. என்றாலும், அதிகார வர்க்கம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்தை இழுத்து மூடியது.
மறுபடியும் நேஷனல் ஹெரால்டு 1945-இல் புத்துயிர் பெற்று எழுந்தது. மணிகொண்டா சலபதி ராவ் ஆசிரியராக வந்தார். நேருவுக்கு நெருக்கமான நண்பர். சலபதி ராவ், 30 ஆண்டுகாலம் அப்பத்திரிகையில் கோலோச்சினார். அமரர் ஏ.என். சிவராமன் கணக்கன் எனும் பெயரில் பத்திரிகை உலகத்தின் லகானைக் கையில் பிடித்திருந்ததுபோல, சலபதி ராவ் எம்.சி. எனும் பெயரில் (மணிகொண்டா சலபதிராவ்) அதிகார வர்க்கத்தை நெம்புகோல் போட்டு நெம்பினார்.
நேஷனல் ஹெரால்டில் நேருவின் எழுத்துக்கள் முழு வீரியத்தோடும், வேகத்தோடும் மின்சாரத்தைப் போல் பாய்ந்தன. போட்டி பத்திரிகையாளர் நேருவுக்கு ஒரு பத்திக்கு ரூ.150/- தருவதாகக் கூறி எழுத அழைத்தனர். ஆனால்,நேரு, பாரதியாரைப் போல,"காசு பெரிதில்லை நெஞ்சிலுள்ள காதல் பெரிது காண்' என மறுதலித்துவிட்டார். 1947-இல் நேரு பிரதமர் ஆனவுடன், பத்திரிகையில் மேலாண்மைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
நேஷனல் ஹெரால்டில் பொருளாதார நெருக்கடி வந்தது. பத்திரிகைக் குழுமம் முழுவதும் ஊதியம் வாங்காமலேயே பத்திரிகையை நடத்தினர்.
1968-இல் லக்னெள அலுவலகம் தில்லிக்கு இடம் பெயர்ந்தது. சலபதி ராவ் நேருவின் நண்பராக இருந்தபோதிலும், ஆட்சியின் தவறான அணுகுமுறைகளைக் கண்டிக்கத் தவறுவதில்லை. நேருவினுடைய ஆட்சிக்காலத்தில் பிகினி எனும் இடத்தில் ஓர் அணுச் சோதனை நடந்தது. அதனைக் குறித்துப் பத்திரிகை நிருபர் கேட்டபொழுது, பேட்டி தர மறுத்துவிட்டார் நேரு.
ஆனால், சலபதி ராவ் அது குறித்து நேருவிடம் எடுத்துச்சொல்லிவிட்டு, அது எமனின் ஏஜெண்ட் என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டினார். சலபதி ராவ் தலையங்கங்களைத் துல்லியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் எழுதுவார்.
சலபதி ராவின் நடுநிலைக்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டலாம். பண்டித கோவிந்த வல்லப பந்த் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, ஓர் அரசு விழாவில், விநாயகர் பூஜையை முடித்துவிட்டுப் பேசத் தொடங்கினார். மதச்சார்பற்ற நாட்டில் ஓர் அரசு விழாவில் விநாயகர் பூஜை முடித்துவிட்டுத் தொடங்கியதைச் சலபதி ராவ், தலையங்கத்தில் கண்டித்துக் கடுமையான சொற்களால் காய்ச்சி எடுத்துவிட்டார்.
இது பிரதமர் நேருவின் பார்வைக்குச் சென்றவுடன், அவர் அதனைப் பல படிகள் எடுத்து எல்லா மத்திய அமைச்சர்களுக்கும், முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, எதிர்காலத்தில் அதுமாதிரி நடக்கக்கூடாது என எச்சரித்தார்.
மேலும், சலபதியின் போர்க்குணத்திற்கு மற்றொரு நிகழ்ச்சியையும் எடுத்துக் காட்டலாம். ஒரு பெரிய பணக்காரக் கோடீஸ்வரன் வீட்டு நாய் செத்துப் போயிற்று. செல்வந்தர்கள் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து, பிடிஐயில் எட்டுப் பத்திக்குப் படத்தோடு செய்தி வரும்படியாகச் செய்துவிட்டனர். அதனை எல்லாப் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துவிட்டன.
அதே நாளில், ஓவியக்கலையில் உலகப் புகழ்பெற்ற மாமனிதர் அபீந்தரநாத் தாகூரின் மறைவும் நேரிட்டது. அதனை ஒரு சிறிய பெட்டிச் செய்தியில், அவருடைய மரணத்தைக் குறிப்பிட்டுவிட்டு, அவர் இரபீந்திரநாத் தாகூருக்கு உறவினர் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.
இங்கிலாந்தில் ஓவியக்கலையில் வல்லுநர்கள் மேலும் தம் அறிவை அபிவிருத்தி செய்வதற்காக அபீந்திரநாத் தாகூரின் ஓவியக்கூடத்திற்கு வந்து போவது, சலபதி ராவுக்குத் தெரியும். அபீந்தரநாத் அவர்களின் ஆர்வத்தின் காரணமாகத்தான், இரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எனவும் சிலர் எழுதியிருக்கின்றனர்.
அத்தகைய உலகப் புகழ் பெற்ற ஓவியருக்குப் பெட்டிச் செய்தியும், கோடீஸ்வரன் வீட்டு நாய்க்கு எட்டுப்பத்தியில் இறுதி ஊர்வலத்தை வருணித்திருந்ததும், சலபதி ராவை நக்கீரப் பார்வைக்குக் கொண்டு சென்றது. தலையங்கத்தின் தலைப்பு: அ. தாகூர் - ஒரு நாய் - பிடிஐ என்பதாகும். தலையங்கம் எழுதிய தாள்கள் தீப்பற்றும் அளவுக்கு வார்த்தைகளால் வறுத்து எடுத்துவிட்டார்.
சலபதி ராவ் கடைசி வரை கட்டைப் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். பத்திரிகை உலகம் அவரைப் பத்திரிகைகளுக்காகவே வாழ்க்கைப்பட்டுவிட்டார் என எழுதியது. பத்திரிகை ஊழியர்களின் கண்ணியம் கிஞ்சித்தும் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொண்டார். பத்திராதிபர்கள் அத்துமீறி நிர்வாகத்தில் தலையிடுவதை அவர் அனுமதித்ததில்லை.
பல பெரிய மனிதர்களையும், பல பெரிய பிரச்னைகளையும் ஊர் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சலபதி ராவின் மறைவு, பரிதாபப்படத்தக்கதாக அமைந்தது. 1983-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் சிக்கித் தெருவோரமாக அவருடைய சடலம் கிடந்தது.
நேருவின் மறைவுக்குப் பிறகு நேஷனல் ஹெரால்டு, தாயை இழந்த ஊமைக் குழந்தை போலாயிற்று. காங்கிரஸ் கட்சி, அப்பத்திரிகை தனக்கு வாளும் கேடயமுமாக இருந்ததை மறந்தது. நிதிப்பற்றாக்குறையாலும், கடன் சுமையாலும் லக்னெளவில் இருந்த ஹெரால்டு கட்டடம் ஏலம் விடப்பட்டது.
ஊதியம் இல்லாத காரணத்தால், ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்திரா காந்தி, குஷ்வந்த் சிங்கை அப்பத்திரிகையின் ஆசிரியர் ஆக்கினார். 2000 பத்திரிகைகள் தாம் விற்பனை ஆயின. குஷ்வந்த் சிங் நிலைமையை உணர்ந்து, ஊதியம் வாங்காமலேயே பணியாற்றினார். பி.டி.ஐ., யு.என்.ஐ.க்குரிய சந்தாக்கள் செலுத்தப்படாமையால், 2008-இல் இரட்டைப் பூட்டாகப் போட்டுப் பத்திரிகையை இழுத்து மூடினர்.
கவியரசர் கண்ணதாசன் பெற்ற பிள்ளையைப்போல் போற்றி வளர்த்த தென்றல் பத்திரிகை வேறொரு பெரிய முதலாளியால் வாங்கப்பட்டபோது, தன் கன்னத்தில் வடிந்த கண்ணீரைக் கவிதையாகத் தீட்டினார்:
அந்தோ என் செல்வம் ஆழிவாய்ப்
பட்டதம்மா
பந்தாடும் தென்றல், பாய்போட்டுத்
தூங்குதம்மா
பாண்டியனார் நாட்டில், பழம்பெரிய சோணாட்டில் தோன்றிய நாள்தொட்டுத் தொடர்ந்தோடும் தென்றலது,
ஆண்டி உடற்சாம்பல், அணுபோல்
பறந்ததம்மா
எனக் கண்ணதாசன் பாடியதுபோல், நேருவும், நேஷனல் ஹெரால்டு நின்று போனதைக் கல்லறையின் காதுகளின் வழியே கேட்டிருந்தால், கண்ணதாசன் அழுகையை ஆங்கிலத்தில் வடித்திருப்பார்.

ஜல்லிக்கட்டும் தீர்வும்!

Dinamani


By ஆசிரியர்

First Published : 05 January 2016 12:55 AM IST


கல்யாணத் தேதி குறித்துவிட்டு மாப்பிள்ளை தேடிய கதையாக பொங்கல் இன்னும் பத்து நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்று அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இவர்களுடன் ஊடகங்களும் மல்லுக்கட்டுகின்றன. ஆனாலும், மத்தியிலிருந்து எந்தவிதமான ஆதரவான சூழலும் தென்படவில்லை.
இந்த விவகாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அங்கமாகிய காங்கிரஸ், தி.மு.க. இரண்டும்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்று பொதுவான குற்றச்சாட்டை மற்ற அரசியல் கட்சிகள் பேட்டியளித்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக, கடந்த 18 மாதங்களாக பா.ஜ.க. அரசு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி குஷ்பு.
அரசியல் கட்சிகளை விட்டுத்தள்ளுவோம். ஏன் இதுநாள் வரை, தமிழர் பண்பாட்டில் அக்கறையும் ஆர்வமும் உள்ள அமைப்புகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தத் தவறின என்கிற கேள்வியை யாரும் எழுப்பத் தயாராக இல்லை.
உயர்நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை அடியொட்டி, மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு, காவல் துறையின் கட்டுப்பாடு, அனுமதிக்கப்பட்ட குழுவின் மேற்பார்வை ஆகியவற்றோடு, காளைகளைத் துன்புறுத்தாமல், மது ஊட்டாமல், வெறியேற்றும் செயல்களில் ஈடுபடாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட நிலையில், எத்தகைய குற்றச்சாட்டும் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டதாகவும் எந்தச் சம்பவங்களும் இல்லாத நிலையில், உச்சநீதிமன்றம் தடை விதிக்க நேர்ந்தது ஏன்? நீதிமன்றத்துக்கு இது தொடர்பாக சரியான புரிதலை முன்வைக்கத் தமிழக அரசோ, இதில் அக்கறையுள்ளவர்களோ இல்லாமல் போனதுதான் காரணம்.
ஜூலை 11, 2011-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வெளியிட்ட அரசு அறிவிக்கையின்படி, "கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தவோ அல்லது கேளிக்கை பொருளாக்கவோ கூடாது. இந்த விலங்குகளின் பாலின வேறுபாடு எதுவாக இருப்பினும் இந்த விலங்குகள் அனைத்துக்கும் அந்தச் சட்டம் பொருந்தும். காளை என்று இந்த சட்டத்தில் குறிப்பிடும்போது அது எருமை, மாடு (காயடிக்கப்பட்டது), பசு, கன்று அனைத்துக்கும் பொருந்தும்' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காளை என்ற சொல்லுக்கு, எருமை, மாடு, பசு, கன்று எல்லாமும் அடங்கும் என்றால், எருமையும் பசுவும் தாங்களாக விருப்பப்பட்டா மனிதருக்குப் பால் தருகின்றன? கன்றுக்காக சுரக்கும் பாலை மனிதன் கறப்பது துன்புறுத்தல் அல்லவா? அதன் இயல்புக்கு அப்பாற்பட்டு செயல்படச் செய்யும் விலங்கு - விரோத நடவடிக்கை அல்லவா? கன்றுக்கான பாலை மனிதன் திருடிக்கொள்வது குற்றமல்லவா? அந்தப் பாலை விற்பனை செய்வது, பசுவைத் துன்புறுத்தும் மானுட வணிகம்தானே!
ஒரு நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும்போது, ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் வணிகத்துக்காக பசுக்களை பயன்படுத்துவதும் குற்றம்தானே! ஏறுதழுவுதல் துன்புறுத்தல் என்றால், மாட்டை ஏர் பூட்டுவதும், வண்டி பூட்டுவதும்கூட துன்புறுத்தல்தானே? அவற்றின் இயல்புக்கு பொருந்தா செயல்தானே!
இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், கரடி, குரங்கு, சிறுத்தை, புலி, சிங்கம் ஆகியவற்றை வைத்து தொழில்புரியும் சர்க்கஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதுதான். ஆனால், இதில் காளை சேர்க்கப்பட்டதன் காரணம், ரேக்ளா போன்ற பந்தயத்தைப் போன்று, ஜல்லிக்கட்டும் ஒரு பந்தயம் என்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுதான்.
ஜல்லிக்கட்டு பந்தயம் அல்ல இது ஒரு வீரவிளையாட்டு. இந்த வீரத்துக்குப் பரிசாகக் காளையின் கழுத்தில் அதன் உரிமையாளர் காசுகளை கட்டிவிடுகிறார். இது பணத்துக்காக அல்லது தனிநபர் அல்லது தனி அமைப்பின் லாபத்துக்காக நடத்தப்படும் பந்தயம் அல்லது சூதாட்டம் என்பதாக கருதப்படும் என்றால், உறியடித் திருவிழாக்களும்கூட வெறும் சூதாட்டம் என்று ஆகிவிடும் அவலம் நேரும்.
ஆயிரக்கணக்கில் அடிமாடுகள் லாரிகளில் போய்க்கொண்டிருக்கின்றன. மாடுகள் இறைச்சி ஏற்றுமதி நடந்து கொண்டே இருக்கிறது. காளை என்ற சொல் மாடு என்பதையும் உள்ளடக்கியது என்றால், இது எவ்வாறு நடக்கின்றது? மிகப்பெரும் தோல்பொருள் ஏற்றுமதியும் விற்பனையும் எவ்வாறு நடக்கிறது?
காளையை, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை அரசியல்ரீதியாக யாரும் நடத்தவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், உச்சநீதிமன்றம் தடைவிதிப்பது முறையல்ல என்பதை நீதிமன்ற வழக்காற்றின் அடிப்படையில் எதிர்வினை புரியவும் தமிழ்நாட்டின் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தவறிவிட்டன.
ஜல்லிக்கட்டு என்கிற தமிழர் மரபு சார்ந்த, உணர்வுசார்ந்த விவகாரத்தை, சரியான புரிதல் இல்லாமல் தடுப்பதால், வடநாட்டினர் தமிழர் நலனுக்கு எதிரானவர்கள் என்கிற எண்ணத்தை விதைப்பதாக அமைந்துவிடும். ஒரு சிறிய விவகாரத்தைப் பெரிதாக்கி, தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிரான விஷத்தை விதைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கலாமா?
இந்த விவகாரத்தில், அண்மையில் ஒரு பேட்டியில் பழ. நெடுமாறன் குறிப்பிட்டதைப்போல, காட்சிப்படுத்தல் விலங்குகளின் பட்டியலை தீர்மானிக்கும் பொறுப்பை மாநில அட்டவணைக்கு மாற்றுவது நல்லது. இது இந்தியாவுக்கு பெரும் நன்மை சேர்க்கும். அதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு.

வாட்ஸ்அப் தகவல்களைப் பரப்பலாமா?....நிதின் பாய்

Return to frontpage

அவசரகதியில் பகிரப்படும் தகவல்களால் தீமைகள்தான் அதிகம்

எதையும் அலசி ஆராய்ந்து வாதப் பிரதிவாதம் செய்யும் இந்தியர்களின் இடத்தை எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கியெழும் இந்தியர்கள் அபகரிக்கத் தொடங்கிவிட்டார்களோ எனும் ஐயம் எழுகிறது. விசாலமான பார்வைகளை முன்வைக்கும் பொது விவாத மேடைகள் அரிதாகிவருகின்றன. பொது மேடைப் பேச்சுகள் என்றாலே கத்திக் கூப்பாடுபோடுவது என்றாகிவிட்டது. இந்தப் போக்கு தணியப்போவதாகத் தெரியவில்லை. ஆக, தலைப்புச் செய்திகளையும் உடனடி அலசல்களையும் விட்டு விலகி நிற்க வேண்டிய நேரம் இது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊழலுக்கு எதிராகக் களமிறங்கிப் போராடினார்கள். அதன் பிறகு, இந்தப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அந்த வரிசையில் நடிகர் மற்றும் இயக்குநர் அனுபம் கெருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தது நினைவிருக்கும். இந்தியாவில் சகிப்புத்தன்மையும் பாதுகாப்பின்மையும் அதிகரித்துவிட்டதாக நடிகர் அமிர்கான் கூறியதைக் கண்டித்து, அனுபம் கெர் ஊர்வலம் நடத்தினார். இப்படி எதிர்ப்பை எதிர்த்ததற்காக அனுபம் கெருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

எதிர்ப்புச் சங்கிலிகள்

இதேபோன்று சமீபத்தில் பெங்களூருவில் நடத்தப்பட்ட இலக்கியச் சங்கமமும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து, இந்தியாவில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவருவதாகக் கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளைத் திரும்ப ஒப்படைத்தனர் இல்லையா! அந்த எதிர்வினையைச் சிலர் விமர்சித்தனர். அப்படி விமர்சித்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் விக்ரம் சம்பத். இவர் இலக்கியவாதிகளின் ஒப்பற்ற படைப்புகளுக்கு அரசு சாரா நிறுவனமான சாகித்ய அகாடமி கொடுத்த விருதுகளை எதற்காகத் திருப்பித் தர வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். அவர் ஒருங்கிணைத்த இலக்கியக் கூட்டம்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவை முறியடிக்கச் சில எழுத்தாளர்கள் முயன்றதாகச் சிலர் ஆவேசப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு நிகழ்வுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம். அதற்கு அடுத்த காலகட்டத்தில் ஒரு பிரச்சினைக்கு ஊடகம் ஏற்படுத்தும் பிம்பத்துக்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கினோம். இப்போது சமூக வலைதளங்கள் மூலம் எதிர்வினைக்கு எதிர்வினை ஏவப்படுகின்றன. இப்படியாக எதிர்வினைக்கு எதிர்வினை. மீண்டும் அதற்கு எதிர்வினை என ஒரு தொடர் சங்கிலியாக எதிர்வினைகள் முடிவிலியில் சுழன்றுகொண்டிருக்கின்றன. ஆக, செய்திகளுக்குப் பதிலாக எதிர்வினைகளும் எதிர்ப்பலைகளும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. பொதுவெளிகளில் விவாதம் என்பது சுருங்கிக்கொண்டே போகிறது. நாடகத்தனமாகக் கூச்சலிடும் செய்தித் தொகுப்பாளர்களும், கத்திக் கூப்பாடுபோடும் பேச்சாளர்களும், பிரச்சினையைப் பூதாகாரமாக்கும் நிருபர்களும், ஒருதலைப்பட்சமான வர்ணனையாளர்களும், சந்தர்ப்பவாதிகளான ஆதரவாளர்களும், தான் நினைப்பது மட்டுமே சரி எனப் பதாகை தூக்கிப்பிடிக்கும் இணையவாசிகளும் ஒன்றுகூடி நாளொன்றுக்கு ஒரு சாத்தானைத் தேடி அலைகின்றனர்.

செயல்படாத ஜனநாயகம்

இந்தப் போக்கு சமூக நலத்துக்கு அபாயகரமானது. அதைவிடவும் ஜனநாயகத் தூணையே அசைத்துப் பார்க்கிறது. அரசியல் கொள்கைகள் இதுவரை காணாத அளவுக்குத் தூக்கி எறியப்படுகின்றன. அரசியல் அதிகாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எதுவுமே உண்மை என நம்ப முடியாத இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒருபுறம் முழுமையான ஜனநாயகம் மறுபுறம் ஜனநாயகத்துக்குச் சவால்விடும் சம்பவங்கள். இப்படி இரண்டுக்கும் இடையில் லாவகமாகக் கயிறு மேல் நடப்பதுபோன்ற சாகசத்தைப் பல தசாப்தங்களாக இந்தியா செய்துவந்தது. ஆனால், அந்தக் கயிற்றிலிருந்து இந்தியா இடறி விழுந்துவிடுமோ எனும் அச்சத்தைச் சமீபகாலப் போக்குகள் ஏற்படுத்துகின்றன. ‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்பார்கள். ஆனால், ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழியே. நம்மில் ஒருவர்தான் நம்மை ஆளுகிறார் என்பதுதானே ஜனநாயகம். ஆனால், இன்றைய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆன்மாவை இழந்துவருகிறது. சரியான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான கலந்துரையாடல்களுக்குப் பதிலாகக் களேபரங்கள்தான் அநேகமாக நாடாளுமன்றத்தில் நிகழ்கின்றன.

சமூகவியலாளர் மற்றும் குற்றவியல் ஆய்வாளரான ஸ்டேன்லி கோஹன் 1960-களில் உருவாக்கிய சொல்லாடலான

`தார்மீகப் பதற்றம்’என்பதில் நாம் ஆழ்ந்திருக்கிறோம். ஸ்டேன்லி பார்வையில் இத்தகைய தார்மீகப் பதற்றத்தை ஊடகம்தான் கட்டமைக்கிறது. மக்கள் எதைப் பார்த்து அஞ்ச வேண்டும், எதைக் கண்டிக்க வேண்டும், எதை நிந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. ஊடகங்கள் இல்லையேல் தார்மீகப் பதற்றமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். சில தனிநபர்களையும் அமைப்புகளையும் சமூக விரோதிகள் போல கட்டமைப்பது மோசமான சில ஊடகங்கள்தான் என்கிறார் ஸ்டேன்லி. ஒரு கட்டத்தில் காரணம் தெரியாமலேயே இப்படியாக முன்நிறுத்தப்படும் பிம்பங்களை மக்கள் வெறுக்கிறார்கள், தண்டிக்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தார்மீகப் பதற்றம் உருவாகலாம். மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அவை ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. இதன் விளைவாகத்தான், எதற்கெடுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிப்பது என்னும் போக்கு உருவெடுக்கிறது.

சமூக ஊடகங்களின் தாக்கம்

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு தார்மீகப் பதற்றத்தின் போக்கு மாறியுள்ளதா என்பதை இதுவரை யாரும் கல்வி நிறுவனங்களில் ஆராயவில்லை. அதிலும் மொபைல் போன்களும், இணையதளமும், சமூகத்துக்குள் ஊடுருவிய பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, பொதுவெளிகளில் நடைபெறும் கருத்துரையாடல்களின் தரத்தை டுவிட்டர் தளர்த்திவிட்டது. ஒரு காலத்தில் வலைப்பூ எழுத்துகள் தரத்தை மேம்படுத்த உதவின. ஆனால், தற்போது பொதுப்படையான கண்ணோட்டம் இல்லாமல் தனிப்பட்ட பார்வையிலிருந்து ஒரு செய்தியை விவரிக்கும் முறையான ‘கான்சோ ஊடகவியல்’தான் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு உகந்த உதாரணம் வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் தகவல்கள். தனிப்பட்ட கருத்துகளை இதன்மூலம் நாம் முன்னோக்கிப் பரப்புகிறோம். இதில் ஆபத்து என்னவென்றால், வெகுஜன ஊடகங்களில் காணும் செய்திகளைவிடவும் இத்தகைய ஃபார்வர்ட் தகவல்கள் உளவியல்ரீதியாக நமது நம்பகத்தன்மையைச் சுலபமாகச் சம்பாதித்துவிடுகின்றன. “தான் நினைப்பதுபோலவே பலரும் நினைக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளும் துறுதுறுப்பில் எதை வேண்டுமானாலும் பரப்பும் போக்கு அதிகரித்துவருகிறது. அரசியல் மதிநுட்பமே இல்லாமல் பொத்தாம்பொதுவாகப் பரப்பப்படும் இத்தகைய தகவல்கள், ஒரு கட்டத்தில் இயக்கமாகவே உருமாறுகின்றன” என எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் சந்தோஷ் தேசாய் சுட்டிக்காட்டுகிறார்.

இதை எப்படித்தான் எதிர்கொள்வது என்றால், செய்திகளை வாசிக்கும் அனைவரும் தங்களுக்குள் அதை ஆழமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே போலச் சமூக ஆர்வலர்களும், ஊடகமும், பொதுச் சமூக அறிஞர்களும் பரபரப்புக்குப் பின்னால் ஓடாமல் ஒவ்வொரு சம்பவத்தின் மையத்தையும் கேள்விக்குட்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். என் கருத்தை நான் திணிப்பதாகக்கூட வாசகர்கள் நினைக்கலாம். ஆனால், முதல் கட்டமாகத் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்பேன். எல்லா சேனல்களையும்தான் சொல்கிறேன்! வாட்ஸ்அப் தகவல்களையும், ஃபார்வர்ட் மின்னஞ்சல்களையும் நம்ப வேண்டாம். நெருக்கடியான சூழல்களைத் தவிர மற்ற நேரங்களில் சமூக ஊடகங்களைக் கையில் எடுப்பதைத் தவிர்க்கலாம். என்றென்றும் பேட்டரி சார்ஜ் இறங்காத சிறந்த வயர்லெஸ் தொழில்நுட்பம் நாளிதழ்களும் பத்திரிகைகளும்தான்! உங்கள் டுவிட்டர் ஆப்ஸும் தொலைக்காட்சியும் தரும் சுடச்சுடச் செய்திகள் ஆற அமர விரிவான செய்தி தரும் அச்சு ஊடகத்துக்கு இணையாகாது.

இத்தனையும் சொல்லிவிட்டு இந்தக் கட்டுரையை நான் டுவீட் செய்வேன், ஃபேஸ்புக்கில் பகிர்வேன், வாட்ஸ்அப்பிலும் மின்னஞ்சலிலும் ஃபார்வர்ட் செய்வேன். எப்படியும் என்னை எதிர்த்துப் போராட யாரோ, எங்கேயோ தயாராக இருப்பார்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: ம.சுசித்ரா

Tuesday, January 5, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 15 - தற்கொலை எண்ணத்தைத் தூர எறிவோம் .....டாக்டர் ஆ.காட்சன்

Return to frontpage

வளர்இளம் பருவத்தில் ஒரு சிலருக்குத் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இது இயல்பானதல்ல. இது போன்ற எண்ணங்கள், முயற்சிகளை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம்?

l வளர் இளம் பருவத்தினர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தினால், அதைப் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்துச்செல்வதே சரி.

l ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவச் சிகிச்சைக்குப் பயந்து மறுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டார் என்பதும் தவறான நம்பிக்கை. அவர்கள்தான் அதிக ஆபத்தான வட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

l வீட்டில் பெரியவர்கள் யாராவது மருத்துவச் சிகிச்சைக்காகத் தூக்க மாத்திரை சாப்பிட்டுவந்தால், அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும். பார்வையில் தெரியும்படி வீட்டில் பூச்சிக்கொல்லிகளை வைக்கக் கூடாது.

l வளர்இளம் பருவத்தினரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். ஏனென்றால், எல்லா மனநோய்களும் வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதில்லை.

l தற்கொலை எண்ணங்கள் கொண்ட எல்லோரையும் கவுன்சலிங்கால் மட்டுமே மாற்றிவிட முடியாது. மனநோய்களால் ஏற்படும் தற்கொலை எண்ணங்கள், காரணமே இல்லாமல் ஏற்படக்கூடியவை. மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.

l ஊடகங்கள் மற்றும் சினிமாக்களில் காண்பிக்கப்படும் தற்கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் ‘தற்கொலை செய்வது எப்படி?’ என்று தேவையற்ற பாடம் எடுப்பது போலவே பல நேரம் அமைந்துள்ளன. இதுபோன்ற காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு மாணவன் ‘3’ படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வதைப் போலவே, முயன்றது ஓர் உதாரணம்.

l பள்ளி வகுப்புகளிலும் பாடத்திட்டங்களிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வு சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், வளர்இளம் பருவத்தினரின் திடீர் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை என்பதை மறந்துவிடக் கூடாது. பல வளர்இளம் பருவத்தினர் தங்கள் எண்ணங்களைச் சக மாணவர்களிடமே முதன்முதலில் வெளிப்படுத்துகின்றனர்.

l காசநோயின் அறிகுறிகள் பற்றியும், புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்றும், அவசரத் தேவைக்கு 108-ஐக் கூப்பிடுங்கள் என்றும் செய்யப்பட்ட தொடர் விளம்பரங்கள் எந்த அளவுக்குப் பலன் தந்தனவோ அதைப் போலவே தற்கொலைக்கான காரணங்கள், ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களை அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் விளம்பரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

l மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம்கூடத் தற்கொலை குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது வேதனையான விஷயம். ஏனென்றால், தற்கொலை முயற்சிக்கான முதலுதவி சிகிச்சை முடிந்ததும், மனநலப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. தற்கொலை முயற்சி என்பதே ஒரு மனநலப் பாதிப்பின் அறிகுறிதான்.

l இவர்களுக்குப் பெற்றோரின் ஆறுதலும் அரவணைப்பும்தான் முதல் தேவையே தவிர, தண்டனையும் கண்டிப்பும் அல்ல. பெற்றோருக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் தற்கொலை ஏற்கத்தக்க விஷயம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

(அடுத்த முறை: ஏன் இந்த அழுத்தம்?)

தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060. நேரடியாகக் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை ஆலோசனை பெறலாம். முகவரி: சிநேகா, 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028 / www.snehaindia.org

மின்னஞ்சல் தொடர்புக்கு: help@snehaindia.org

இலவச ஆலோசனை

புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை அணுகலாம். முகவரி: மைத்ரேயி, 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பெண்கள் கிண்டலுக்குரியவர்களா? by அரவிந்தன்

Return to frontpage

இன்றைய காலகட்டத்தின் நியதிக்கு உட்பட்டு நானும் வாட்ஸ்அப் குழுக்கள் சிலவற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். Literary & Intellectuals என்றொரு குழு அதில் உண்டு. பல்வேறு செய்திகள், கட்டுரைக்கான இணைப்புகள், குறிப்புகள் ஆகியவற்றுடன் சில சமயம் நகைச்சுவைத் துணுக்குகளும் அதில் பரிமாறிக்கொள்ளப்படும். அதில் அண்மையில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு வந்திருந்தது. ஒரு மனைவியின் பிறழ் நடத்தையை வைத்து உருவாக்கப்பட்ட துணுக்கு.

இந்தத் துணுக்கைப் பார்த்ததும் “பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவைத் துணுக்குகளைத் தவிர்க்கலாமே” என்று அதற்குப் பதில் எழுதினேன். அந்தத் துணுக்கைப் பதிவிட்டிருந்த நண்பர் அப்படிச் செய்தது தவறுதான் என ஒப்புக்கொண்டார். “ஆனால், எல்லா ஜோக்குகளும் யாராவது ஒருவரை இழிவுபடுத்துபவைதானே?” என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். “பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் வரலாறு கொண்டவர்கள் நாம். இனிமேலாவது அதற்குப் பிராயச்சித்தம் செய்வோம்” என்று பதில் எழுதினேன்.

ஆதரித்து ஒரு செய்தி

சில வாரங்களுக்கு முன்பு வேறொரு குழுவில் (இது எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் குழு) பெண்களைக் கேலி செய்யும் வேறொரு துணுக்கு பதிவிடப்பட்டிருந்தது. அப்போதும் நான் எதிர்க் குரல் எழுப்பினேன். பதிவிட்டவரிடமிருந்து அதற்குப் பதில் வரவில்லை. குழுவில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து என்னை ஆதரித்து ஒரு செய்தி வந்தது.

நண்பர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான். நகைச் சுவைத் துணுக்கு என்பதே ஒருவரின் அசட்டுத்தனம், முட்டாள்தனம், அபத்தம், பிறழ் நடத்தை ஆகிய எதையேனும் பகடிசெய்து சிரிப்பதுதான். யாரையும் சற்றேனும் நெளியவைக்காமல் நகைச்சுவை, கிண்டல், கேலி ஆகியவை இருக்க முடியாது. இது அளவோடு இருக்கும்வரை பரவாயில்லை. எல்லை மீறிப் புண்படுத்தும் அளவுக்கு இது செல்லக் கூடாது. ரசனையும் நாசூக்கும் கொண்ட நகைச்சுவைத் துணுக்குகள் அவற்றுக்கு இலக்காகுபவர்களையும் மனம்விட்டுச் சிரிக்கவைத்துவிடும். எல்லை மீறும் துணுக்குகள் அவமானத்துக்கு உள்ளாக்கும்.

பெண்களைப் பற்றிய துணுக்குகள் பெரும்பாலும் இரண்டாவது ரகத்திலேயே இருப்பதுதான் சிக்கல். பெண்கள் மீதான ஈர்ப்பும் இளக்காரமும் ஒருங்கே கொண்ட ஆண்கள், பெண்களைப் பற்றிய தங்கள் மனப் பிறழ்வுகளைப் பழமொழிகள், நகைச்சுவைத் துணுக்குகள் எனப் பல விதங்களிலும் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். பெண்களைப் பற்றிய மேலோட்டமான, ஒருதலைப்பட்சமான விமர்சனமே இந்தக் கேலிகளின் அடிப்படை. மேற்படிக் குழு ஒன்றில் பகிர்ந்துகொள்ளப்பட்ட துணுக்கு ‘ஓடிப் போன’ பெண் பற்றி ஒரு கணவனின் பார்வையாக வெளிப்பட்டிருக்கிறது. பெண்களை இலக்காக்கும் எல்லாத் துணுக்குகளிலும் இதுபோன்ற போக்கைக் காணலாம்.

ஏன் பெண்களை, அதிலும் மனைவியரைக் குறிவைத்தே அதிகத் துணுக்குகள் உருவாக்கப்படுகின்றன? ஆண்கள் அபத்தம், முட்டாள்தனம், பிறழ் நடத்தை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்களா? ஆண்களைக் கேலிசெய்யும் துணுக்குகள் ஆணை / கணவனைப் பொதுமைப்படுத்திப் பேசுவதில்லை. தொழில், ஊர், மதம் ஆகிய பிரிவுகளுக்குள் ஆணைச் சித்தரித்துக் கேலி செய்கின்றன. கேலிக்குரியவர் ஆண் என்றால், அவர் பொதுவாக டாக்டர், வக்கீல், மேனேஜராக இருப்பார். கேலிக்குரியவர் பெண் என்றால், பொதுவாக மனைவி, மாமியார் அல்லது அம்மா பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுப் பரிகசிக்கப்படுவார். அல்லது

`வேலைக்காரி ஜோக், நர்ஸ் ஜோக்'. ஒரு கணவன் அல்லது ஒரு ஆண் என்று குறிப்பிட்டு ஆணைப் பொதுவாகக் கேலிசெய்யும் துணுக்குகள் முதலமைச்சரின் பேட்டி போலவே அரிதானவை. ஆண்கள் அல்லது கணவர்கள் கேலிக்குரியவர்கள் இல்லையா?

கைபேசியில் இடம் பொருள் ஏவல் அறியாமல் சத்தமாகப் பேசும் கணவன்மார்களைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ளும் மனைவிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மனைவியுடன் போய்க்கொண்டிருக்கும்போதும் வெட்கமில்லாமல் பிற பெண்களைப் ‘பராக்கு’ பார்க்கும் ஒரு ஆண், தன் மனைவி மீது பிற ஆண்களின் கண் பட்டால் ரோஷப்படும் அபத்தமும் அன்றாடம் அரங்கேறத்தான் செய்கிறது. நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட கணவன்கள், எதிர் வீட்டுக்குப் புதிதாகக் குடிவரும் கல்லூரிப் பெண்ணைப் பார்த்து அசடுவழியும் அற்பத்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ‘குடும்பத் தலைவர்’களான கணவன்களுக்கு ‘ஓடிப் போக’ வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பிறழ் உறவுகளுக்கும் சில்லறைச் சபலங்களுக்கும் பஞ்சமே கிடையாது. மாட்டு வண்டியே தன்னைக் கடந்துபோனாலும் கவலைப்படாத ஆண் சிங்கங்கள், ஒரு பெண்ணின் இரு சக்கர வாகனம் கடந்து சென்றுவிட்டால் அவமானமடைந்து ஆக்ஸிலேட்டரைத் திருகும் கேலிக்கூத்தும் சாலைகளில் அன்றாடக் காட்சிதான். பொது இடம் என்றும் பாராமல் கிடைக்கிற சந்துகளுக்கெல்லாம் சிறுநீர் அபிஷேகம் நடத்தும் ஆண்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். சாலைகளில் (சிகரெட்) புகை மண்டலப் பூஜை நடத்திப் பிறரைத் துன்புறுத்துவதும் பல ஆண்களுக்கு வாடிக்கைதான். இதையெல்லாம் பரிகசித்து, நாகரிகம் இல்லாத ஆண் அல்லது விவஸ்தையற்ற கணவன் என்னும் பொதுப் பாத்திரத்தை முன்வைத்துத் துணுக்குகள் அதிகம் வருவதில்லை.

`பெண்டாட்டிக்குப் பயப்படும் கணவன்' ஜோக் மட்டுமே வருகிறது. யதார்த்தத்துக்குப் புறம்பான இதை விட்டுவிட்டால் கணவன் பாத்திரம் பொதுவாக கிண்டலடிக்கப்படுவதில்லை.

இதே ஆண்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். சிறுமிகள் முதல் மூதாட்டிகள்வரை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கிறார்கள். அவர்கள் எங்கே, எப்போது, எப்படிப் போகலாம் அல்லது போகக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முயல்கிறார்கள். குடும்பத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் “பொம்பள சரியில்ல, அதான் காரணம்” என்று கூசாமல் சொல்கிறார்கள். பொது வாழ்வில் வெற்றிபெறும் பெண்கள் மீது வெட்கமின்றி அவதூறு சுமத்துகிறார்கள். இதெல்லாம் போதாதென்று, அவர்களைப் பரிகசித்து நகைச்சுவைத் துணுக்குகளையும் அள்ளிவிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான்: பெண்களை இழிவாக, இளக்காரமாக, இரண்டாந்தர மனிதர்களாகப் பார்க்கும் போக்கு.

தொடரும் அசிங்கம்

ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூக அமைப்பு, பெண்களுக்கு இழைத்துவரும் அநீதிகளில் ஒன்றாகவே இந்தத் துணுக்குகளையும் பார்க்க முடிகிறது. வீடுகளிலும் பத்திரிகை, நாடகம், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி ரசிப்பதன் மூலம், ஆண் சமூகம் இவற்றை சகஜப்படுத்திவைத்திருப்பது இந்தத் துணுக்குகளைக் காட்டிலும் கொடுமையானது. உடன்கட்டை ஏறுதல், விதவைகளை முடக்கிவைத்தல், கல்வி மற்றும் சொத்துரிமையை மறுத்தல் போன்ற குற்றங்களுக்குப் பரிகாரம் கண்டதுபோலவே ஆண் உலகம் இதற்கும் பரிகாரம் காண வேண்டும்.

முதலாவதாக, நீண்ட காலமாகத் தொடரும் இந்த அசிங்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அடுத்தபடியாக, ஆண்கள் தங்களைப் பரிகசிக்கும் நகைச்சுவைத் துணுக்குகளை உருவாக்கிப் பெருமளவில் உலவவிடலாம். மிஸ்டர் எக்ஸ் என்ற பாத்திரத்தை வைத்துத் துணுக்குகள் வந்ததுபோல ‘அசட்டுக் கணவன்’ அல்லது ‘அலட்டல் பையன்’ என்னும் பாத்திரத்தை வைத்துத் துணுக்குகளை ஆண்களே உருவாக்கலாம். பெண்களும் அதில் பெருமளவு உதவலாம். வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் இவற்றைப் பகிர்ந்துகொண்டு கைகொட்டிச் சிரிக்கலாம். பெண்களைக் கேலிப்பொருளாக்கியதற்கான பிராயச்சித்தத்தைச் சிரித்துக்கொண்டே தொடங்க இது நல்ல வழியாக இருக்கும்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

4G-ஐ விட வேகமான 40 ஆயிரம் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளை இந்தியா முழுவதும் நிறுவுகிறது பி.எஸ்.என்.எல்

இந்தூர்,

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் 40 ஆயிரம் வை-ஃபை ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. 4G இண்டர்நெட் சேவையை வழங்க போதுமான வசதிகள் இல்லாததால் அதை சமாளிக்கும் வகையில் இந்த வசதியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வை-ஃபை ஹாட் ஸ்பாட்டு இண்டர்நெட் வசதி 4G-ஐ விட வேகமானது. இதுவரை 500 ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவியிருப்பதாகவும், இந்த ஆண்டு முடிவுக்குள் 2,500 ஹாட் ஸ்பாட்டுகளை நாடு முழுவதும் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதுதவிர, தொலைதொடர்பு சேவையை அதிகரிக்க 25 ஆயிரம் புதிய மொபைல் டவர்களை நிறுவவும் முடிவு செய்துள்ளது பி.எஸ்.என்.எல்.

இலவசங்கள், மானியங்கள் வேண்டாம்!

logo


ஒருமாத காலமாக கனமழையால் தத்தளித்த தமிழ்நாட்டில், இப்போது அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மே மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதையொட்டி, ஒவ்வொரு கட்சியுமே, இப்போதே ‘கோதாவில்’ இறங்க தயாராகிவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் அடுத்த கட்சித்தலைவர்களை குறிவைத்து அறிக்கைககள் விடத்தொடங்கிவிட்டனர். முதல்–அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ம.க. அறிவித்துவிட்டது. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்துவிட்டது. பா.ஜ.க.வை பொருத்தமட்டில், எங்கள் கூட்டணி அப்படியே இருக்கிறது என்று சொன்னாலும், அதில் சலசலப்பு இருப்பது தெரிகிறது. அடுத்து தி.மு.க. கூட்டணியில் யார்–யார் இடம்பெறப்போகிறார்கள்? என்பது ஒரு எதிர்பார்ப்பு. அ.தி.மு.க.வை பொருத்தமட்டில், பாராளுமன்ற தேர்தலைப் போல தனித்து போட்டியிடுமா?, அல்லது கூட்டணி வைக்குமா? என்று ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கு விடையளிக்கும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவு எடுப்பேன் என்று பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்து விட்டார். விரைவில் ஒரு தெளிவான நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த பிரச்சினைகளில் எல்லாம் ஒரு தெளிவு ஏற்பட்டவுடன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச்செய்வோம், இதைச்செய்வோம், இதைத்தருவோம், அதைத் தருவோம் என்று இலவசங்கள், மானியங்கள் பட்டியல் அடுக்கடுக்காக வரப்போகிறது. ஆனால், உழைப்பே உயர்வுதரும் என்று வாழும் இந்த தமிழ்நாட்டில், 45 ஆண்டுகளுக்கு மேலாக ஓசியே, மானியங்களே, சுகம் தரும் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. உழைத்து சம்பாதிக்கவேண்டிய வயதில், ஓசிகளை வாங்கியே வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற ஒரு சோம்பேறித்தனமான எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயமாக இதுபோன்ற எண்ணங்கள் பயனளிக்காது. முன்னுக்கு செல்லவேண்டிய தமிழ்நாட்டை பின்னுக்கு இழுத்துவிடும்.

தமிழ்நாட்டில், அரசின் மொத்த வருவாயில் 41 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காகவும், பென்சனுக்காகவும் சென்றுவிடுகிறது. 40 சதவீத வருவாய் அரசு வழங்கும் மானியங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் சென்றுவிடுகிறது. வருகிற மார்ச் இறுதியில் தமிழக அரசின் மொத்தக்கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டிக்காக 12 சதவீதம் சென்றுவிடுகிறது. வருவாயின் இவ்வளவு தொகை இந்த 3 இனங்களுக்கு மட்டுமே சென்று விட்டால், எப்படி வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கமுடியும்? அரசு இனிமேலும் கடன்வாங்கி காலத்தை தள்ளமுடியாது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைத்து, மேலும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால்தான் மாநிலம் வளர்ச்சியை காணமுடியும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 87 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஆக, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி, உட்கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்தல் அறிக்கை வரவேண்டுமே தவிர, இலவசங்கள், மானியங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி, நாட்டை பின்னுக்கு தள்ளக்கூடிய தேர்தல் அறிக்கை தேவையில்லை என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

குஜராத்தில் முதல்–மந்திரியாக இருந்த நரேந்திரமோடி, ஒருபோதும் இலவசங்களை அறிவித்து ஓட்டு கேட்கவில்லை என்று பெற்ற பெயரை, வருகிற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் அதைப்போல அறிவித்து, நற்பெயரை பெறவேண்டும். இறக்கம் தரும் இலவசங்கள், மானியங்கள் வேண்டாம். ஏற்றம் தரும் வேலைவாய்ப்புகளை தந்தால், அவர்களே உழைத்து சம்பாத்தியம் செய்துக் கொள்வார்கள்.

NEWS TODAY 21.12.2025