Thursday, January 7, 2016

Return to frontpage

கனமழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளின்போது சமூகத்தில் மன அழுத்த பாதிப்பும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது? சில வழிமுறைகள்:

வாழ்வை எளிமையாக்குங்கள்

விரைவாக இயங்கும் நமது சமுதாயத்தில், மிகக் குறைவான நேரத்திற்குள் மிக அதிகமான செயல்பாடுகளை அடைத்துத் திணித்துக்கொள்வதும் தனிப்பட்ட முறையில் உங்களுக்காகக் குறைவான நேரத்தை ஒதுக்குவதும்தான் பெரும்பாலும் மன அழுத்தமாக விளங்குகிறது. எனவே, எல்லாவற்றையும் உள்ளடக்கிச் செயல்படுவதற்கு வழிதேட முயல்வதுடன், சிலவற்றை கைவிட்டுச் செல்வதற்கும் வழிதேட முயலுங்கள். இவ்வாறு, வீட்டிலும் பணியிடத்திலும் உங்கள் வாழ்வை எளிமையாக்கி சமநிலையில் வைத்துக்கொள்வதற்குச் சில ஆலோசனைகளைப் பார்ப்போம்.

வீட்டில் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வீடு அமைதிப் பூங்காவாக விளங்கவேண்டும் மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் இடமாக அது இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வீட்டில் உங்களுடைய மன அழுத்தச் சுமையை எளிதாக்கப் பின்வரும் ஆலோசனைகளை முயன்று பாருங்கள்:

# உணவு அட்டவணையை ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடுங்கள். உங்கள் வார விடுமுறையின் ஒரு பகுதியை உணவுப் பொருட்களை வாங்குவதற்கும், பின்னால் அதை உடனடியாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்துங்கள். விருந்துகளில் வாழை இலையையோ காகிதத் தட்டுகளையோ பயன்படுத்துங்கள்.

# கால அட்டவணை ஒன்றை உருவாக்கி, அடுத்துவரும் மூன்று மாதங்களில் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் வரிசைப்படுத்துங்கள்.

# எதிர்பாராத மாற்றத்துக்கான திட்டங் களை கணவனும் மனைவியும் சேர்ந்து உருவாக் குங்கள்: `நான் வருவதற்கு முன்பு, நீ வீட்டுக்கு வந்துவிட்டால்…’ என்பது போன்ற திட்டங்கள்.

# பொருட்கள் குப்பை போல் குவிந்துவிடுவதை அகற்றுங்கள். காகிதங்கள் சேர்ந்துவிடுவதைத் தடுப்பதற்கு ஓர் எளிய மூன்றடுக்கு கோப்பு முறையைப் பயன்படுத்துங்கள்: பில்களுக்கு ஒன்று, ஒருமாத காலத்திற்குள் உங்களுடைய கவனம் தேவைப்படுகிறவற்றுக்கு இன்னொன்று, கோப்பில் இட வேண்டியவற்றுக்கு மூன்றாவது.

# துப்புரவு குறித்து மறு-வரையறை செய்யுங்கள். நாள்தோறும் உங்கள் வீட்டைத் துப்புரவு செய்வதற்கு எவ்வளவு நேரத்தை உங்களால் செலவிட முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே துப்புரவுக்காகச் செலவு செய்ய நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு அறையிலும் அதற்காக ஐந்து நிமிடங்களைச் செலவுசெய்யுங்கள். இதை மிளிர வைக்கவேண்டும், அதைக் கறையில்லாமல் வைக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்கெல்லாம் இப்போது டாட்டா காட்டிவிடுங்கள்.

# உங்களுடைய நேரத்தை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் வாசலைப் பெருக்குவது, வீட்டு வேலை, பில் அல்லது வரி செலுத்துவது போன்ற பணிகளை எல்லாம் மற்றவரிடம் ஒப்படையுங்கள் அல்லது அவற்றுக்காகச் சம்பளம் கொடுத்து ஒருவரை பணியில் அமர்த்துங்கள். இந்த நேரத்தை உங்கள் குடும்பத்தினருடன் செலவிடுங்கள். அல்லது நல்லதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.

பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

பணியில் உங்கள் நேரத்தைப் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதன் மூலம், நாள்தோறும் கூடுதல் வேலைகளைச் செய்து முடிக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். பணியிடத்தில் செய்ய வேண்டிய பணித் திட்டங்களின் எண்ணிக்கை அல்லது அதன் ஆழம் உங்களுக்குப் பெரும் பாரமாக உள்ளதா? பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்ற முயலுங்கள்:

# ஒவ்வொரு நாளுக்கும் திட்டமிடுங்கள். `செய்ய வேண்டியவை’ பட்டியலை எழுதி, மிக முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். இதை, நீங்கள் வீட்டிற்குச் செல்லும்முன் செய்ய முயலுங்கள். அப்போதுதான் அடுத்த நாள் வேலைக்கு அது தயாராக இருக்கும்.

# பொறுப்பை ஒப்படையுங்கள். நீங்கள் உங்களுடைய `செய்ய வேண்டியவை’ பட்டியலைப் பார்த்து, எவற்றை இன்னொருவரின் பொறுப்பில் ஒப்படைக்கலாம்; எவற்றை முற்றிலும் விட்டுவிடலாம் என முடிவுசெய்யுங்கள்.

# தரமாக வேலையைச் செய்வதற்கு போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். வேலையை முதல் முறையே சரியாகச் செய்வதற்குச் சற்று கூடுதலான நேரம் ஆகலாம். எனினும், பிழைகள் ஏற்பட்டால் அவை சார்ந்த திருத்தங்களுக்கு மேலும் நேரம் செலவாகி, ஒட்டுமொத்த பணி நேரத்தை அது அதிகரிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

# அவசியமற்ற வேலைகளை எடுக்காதீர்கள். கூடுதல் வேலையை ஏற்பதற்கு முன்பு உங்களுடைய குறிக்கோள்களையும் கால திட்டத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.

# அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பெரிய பணிகளைச் சிறுசிறு பணிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொன்றாகச் செய்வதற்கும் சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக முழு பணியையும் நிறைவு செய்யுங்கள்.

# உங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதை மதிப்பிடுங்கள். மூன்று நாளைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை அனைத்தையும் எழுதிவையுங்கள். மேலும், புத்திசாலித்தனமாக நேரத்தைப் பயன்படுத்துவதற்கு வழி தேடுங்கள். எடுத்துக்காட்டாக, பேருந்தில் பணிக்குச் செல்வதன் மூலம், பயண நேரத்தைப் படிப்பதற்காகப் பயன்படுத்தலாம், இல்லையா?

# நன்றாகத் தூங்குங்கள்; நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள். கவனமும் கவனக்குவிப்பும் மேம்படும்போது, உங்கள் பணியைக் குறைவான நேரத்தில் முடிப்பதற்கு துணை புரியலாம்.

# நேர மேலாண்மை பற்றிய வகுப்புக்குச் செல்லுங்கள். உங்கள் பணியிடத்தில் நேர மேலாண்மை வகுப்புக்கு ஏற்பாடு இல்லையெனில், ஓர் உள்ளூர் சமுதாயக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் அதற்கான ஏற்பாடு இருக்கிறதா என விசாரியுங்கள்.

# உங்களுக்குத் தேவைப்படும்பொழுது பணியில் இடைவெளி விடுங்கள். உங்கள் பணியிடத்திலேயே சற்று உடலை வளைத்துப் பயிற்சி செய்யுங்கள். பணியிடத்தில் ஒரு சுற்று நடை போடுங்கள். ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்.



நன்றி: மேயோ கிளினிக் ‘மனஅழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி?’
உங்கள் நலவாழ்வுக்கான எளிய வழிகள் புத்தகம்
தொடர்புக்கு: அடையாளம், 1205/1,
கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் 621310,
திருச்சி.
தொலைபேசி: 04332-373444.

மறைந்துபோன பண்டிகை கால வாழ்த்து அட்டை பரிமாற்றம்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மோகத்தால் குறைந்துபோன அஞ்சல் சேவை ...ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Return to frontpage

பண்டிகை கால வாழ்த்துகள் ஜாதி, மதம், மொழி, கலாச் சாரத்தைக் கடந்து ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தின. கடிதங்கள் மூலம் அனுப்பும் வாழ்த்துகள் என் றும் அழியாமல் நினைவில் நிற் பவை. அன்பான உணர்வையும் வாழ்த்து அட்டைகள் ஏற்படுத்தின. அவற்றை் வாழ்நாள் முழுவதும் மலரும் நினைவுகளாக போற்றி பாதுகாக்கும் பழக்கம் மக்களி டையே இருந்தது.

அதனால், பொங்கல் பண்டிகை, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் கடைகள், தபால் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனையும் அமோகமாக இருக்கும்.

தற்போது இ-மெயில், ஃபேஸ்புக், சமீபத்திய ‘வாட்ஸ் அப்’ உள் ளிட்ட மின்னணு தகவல் பரிமாற் றங்களின் வளர்ச்சியால் வாழ்த்து அட்டை பரிமாற்றம் தற்போது முற்றி லும் மறையத் தொடங்கிவிட்டது.

இதுகுறித்து தேசிய விருது பெற்ற கோவை அஞ்சல் அலுவலர் ந.ஹரிஹரன் கூறியதாவது:

தமிழகத்தில் 1970-ம் ஆண்டில் தபால் அலுவலகங்கள் மூலம் 69 லட்சத்து 72 ஆயிரம் வாழ்த்து அட்டைகள் பட்டுவாடா செய்யப்பட் டன. இது 1980-ம் ஆண்டில் 78 லட்சத்து 82 ஆயிரமாகவும், 1990-ம் ஆண்டில் 85 லட்சத்து 27 ஆயிர மாகவும் பல மடங்கு அதிகரித்தன.

2010-ம் ஆண்டில் இ-மெயில் ஃபேஸ் புக் மோகத்தின் அதிகரிப்பால் வெறும் 2 லட்சத்து 60 ஆயிரமாக வாழ்த்து அட்டை பரிமாற்றம் குறைந்துவிட்டது. நடப்பாண்டு (2015) ‘வாட்ஸ் அப்’ வளர்ச்சியால் தமிழக தபால் நிலையங்களில் வெறும் சில ஆயிரங்களாக வாழ்த்து அட்டைகள் பரிமாற்றம் குறைந்துவிட்டது. 2007-ம் ஆண் டில் ரூ.5 மதிப்பீட்டில் சிறப்பு வாழ்த்து அஞ்சல்தலைகளை வெளி யிட்டது. தற்போது குடும்பமாக, குழுவாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் குறைந்துவிட்டன.

அனைவரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், செல்போன் உள்ளிட்ட நவீன தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. உணர்வுபூர்வ மான விழா கொண்டாட்டங்கள், தகவல் பரிமாற்றங்கள் குறைந்து விட்டன.

அதனால், அஞ்சல் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. கடை களில் விற்பனை செய்யப்படும் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பும் பழக்கமும் மக்களி டையே குறைந்துவிட்டன என்றார்.

கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியது நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல: அமலாக்கப் பிரிவு வாதம் ..எம்.சண்முகம்

Return to frontpage

டிபி குரூப்’ நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி ரூபாய் சென்றிருப்பது நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல என்று நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி பணபரிமாற்றம் நடந்தது தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் உட்பட 16 பேர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கப்பிரிவு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக ஆஜரான அமலாக்கப்பிரிவு சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘டிபி குரூப் நிறுவனம் வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியுள் ளது. இது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு கைமாறாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வர்த்தகம் எதிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. கலைஞர் டிவி-க்கு முறையற்ற வழியில் பணத்தை கொடுக்கவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணபரிமாற்றம் நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல. ஒரு விவசாய நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணம் தர வேண்டிய அவசியம் இல்லை. எதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் இல்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த பிணை உத்தரவாதமும் காட்டப்படவில்லை. கணக்குகள் அனைத்தும் மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளன’ என்று வாதிட்டார்.

ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் உடனடி பணி நீக்கம்: கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை..hindu tamil

ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் உடனடி பணி நீக்கம்: கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை

ஆந்திர மாநில கல்வித்துறை முதன்மை செயலாளர் சிசோடியா நேற்று அனந்தபூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தாடிமர்ரி மண்டலம், ஏகபாதம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஒரு வகுப்பில் ஆங்கில பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் சர்தார் பாபு வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அங்கு முதன்மை செயலாளர் சிசோடியா, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்ததை கண்டதும், வகுப்பில் இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
பின்னர் வகுப்புக்குள் சென்ற முதன்மை செயலாளர், பாடத்தை நிறுத்த வேண்டாம் என கூறி தொடர்ந்து பாடம் நடத்தும்படி ஆசிரியர் சர்தார் பாபுவை கேட்டுக்கொண்டார். ஆனால் சர்தார் பாபு ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்காமல் பாடம் நடத்தினார்.
இதைக் கண்டு முதன்மை செயலாளர் சிசோடியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆசிரியர் சர்தார் பாபுவை சோதிப்பதற்காக அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடி னார். ஆனால் பதில் அளிக்க முடியாமல் ஆசிரியர் திணறினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சிசோடியா, ஆசிரியர் சர்தார்பாபுவை உடனடியாக பணிநீக்கம் செய்து, அதற்கான உத்தரவையும் வகுப்பிலேயே வழங்கினார்.

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

சமஸ்
C  

1
நாஞ்சில் சம்பத் விவகாரம் அடங்கியபாடில்லை. ஒரு கட்சிப் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவது - மன்னியுங்கள், விடுவிக்கப்படுவது - அவ்வளவு பெரிய செய்தியா? இந்த ஆட்சியில் இதுவரை 22 முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது; 20 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; 6 பேர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவை அத்தனைக்குமான காரணங்கள் நமக்குச் சொல்லப்பட்டனவா? நாம்தான் கேட்டோமா?
பட்டத்து யானைகள் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை அல்ல என்றே தம்மைக் கருதுகின்றன. அதிலும் எறும்புகள் அதிகபட்சம் உழைப்பதற்கும் ஓட்டுப் போடுவதற்கும் மட்டுமே உரிமயுடையவை என்றும் அவை கருதுகின்றன. நம்மூரில் ஜனநாயகத்துக்கான அதிகபட்ச மதிப்பு அவ்வளவுதான். சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டிகளில் நாஞ்சில் சம்பத் இதைத்தான் அவருக்கே உரிய திராவிட நடையில் சொல்லியிருக்கிறார்: “எறும்புகள் சாகின்றன என்பதற்காகப் பட்டத்து யானைகள் ஊர்வலம் போகாமல் இருக்க முடியுமா?”
நாஞ்சில் சம்பத் அதிமுக கட்சிப் பதவியிலிருந்து ‘விடுவிக் கப்பட’ அவர் கொடுத்த பேட்டிகள்தான் காரணம் என்று அக்கட்சியின் தலைமை சொல்லவில்லை. என்றாலும், மக்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். மேலும், “அதுதான் உண்மை யான காரணம் என்றால், அவர் பதவி நீக்கப்பட்டது சரிதானே?” என்றும் கேட்கிறார்கள். அதுதான் காரணமா என்று நமக்குத் தெரியாது. ஆனால், அதுதான் காரணம் என்றால், அங்கே ஒருவர்கூடப் பதவியில் நீடிப்பது நியாயமாக இருக்காது.
நாஞ்சில் சம்பத் ஒரு பதச் சோறு
நாஞ்சில் சம்பத் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மேடைப் பேச்சில் தேறியவர். பேட்டிகளும் இக்கட்டான கேள்விகளும் அவருக்குப் புதியவை அல்ல. “ஐயோ, மேடையிலேயே அவர் கொச்சை கொச்சையாகப் பேசுவாரே!” என்று நீங்கள் கேட்பீர்களேயானால், மேடைக்குக் கீழே அவர் இன்னும் பேசுவார் என்பதே பதில். நாஞ்சில் சம்பத்திடம் வெளிப்பட்டது ஆட்சியாளர்களின் மமதைக்கு ஒரு பதம் சோறு. சுற்றிலும் விளக்குகள் எரிய, கேமராக்கள் முன் தான் பேசுவதைக் கோடிப் பேர் பார்ப்பார்கள்; விமர்சிப்பார்கள் எனும் எல்லைக்குட்பட்ட சூழலில், பொதுவெளிக்கு ‘நன்கு பயிற்சி பெற்ற’ சம்பத்தே இப்படிப் பேசுகிறார் என்றால், ஏனையோர் எப்படிப் பேசுவர்?
இந்த வெள்ளம் தொடர்பாக ஒரு மாதமாகப் பல்வேறு தரப்பினருடனும் ஊடகவியலாளர்கள் உரையாடிக்கொண்டிருக்கிறோம். என்னிடம் பேசிய ஒரு அதிமுககாரரும் பரிவோடு பேசி நான் கேட்டதில்லை. “ஆமாம், வெள்ளம் வந்துச்சு… ஆத்தோரம் இருந்தா அடிச்சுக்கிட்டுப்போவத்தான் செய்யும். நாங்க என்னா பண்ண முடியும்? கூட விழுந்து சாவணும்கிறீங்களா?” என்று ஈவிரக்கமே இல்லாமல் கேட்டவர்களே அதிகம்.
அதிகார வாசம் ஏற்படுத்தும் மமதை ஒரு கட்டத்துக்கு மேல் உடலில் தோல் மாதிரி மனதுக்குள் படர்ந்துவிடுகிறது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. அரசியல் யானைகள் தங்களை எப்போதும் பட்டத்து யானைகளாகவே கருதுகின்றன. இலங்கைத் தமிழர் படுகொலையின்போது உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றனவா? குண்டுகள் தமிழர்கள் மீது கொத்துக்கொத்தாக விழுந்துகொண்டிருந்தபோது, “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்றார் கருணாநிதி. “போர் ஒன்று நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றார் ஜெயலலிதா.
வார்த்தைகள் ஒரு வெளிப்பாடு. அவற்றைவிட ஆயிரம் மடங்கு அர்த்தமுள்ளவை செயல்பாடுகள். “ஒரு வீட்டில் ஒப்பாரிச் சத்தம் கேட்கிறது என்பதற்காக, பக்கத்து வீட்டில் கல்யாணக் கச்சேரியைத் தவிர்க்க முடியுமா?” என்று கேட்ட நாஞ்சில் சம்பத்தின் வார்த்தைகள், ஒரு கட்சியின் அலட்சியத்தின் வெளிப்பாடு என்றால், வெள்ளப் பிணங்கள் சுடுகாட்டைச் சேரும் முன் மதுக் கடைகளைத் திறந்த ஒரு அரசின் செயல்பாடுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
செய்தியாளர்கள் குணசேகரனும், ரங்கராஜ் பாண்டேவும் எழுப்பிய கேள்விகள் மக்களின் கேள்விகள். வெளியே இதைவிடவும், பல மடங்கு கோபத்தோடும் கேள்விகளோடும் இருக்கிறார்கள் மக்கள். அன்றைய தாய ஆட்டத்தில் நிகழ்தகவில் விழுந்த புள்ளி நாஞ்சில் சம்பத். வேறு யாரேனும் அங்கு உட்கார்ந்திருந்தால் மட்டும் என்ன பதில் சொல்லிவிடப்போகிறார்கள்? “ஆமாம், எங்கள் கட்சி தவறிழைத்துவிட்டது. மக்கள் இன்னலில் உழன்றுகொண்டிருக்கும்போது கட்சிக் கூட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் இவ்வளவு பிரம்மாண்டமும் இப்படியான கொண்டாட்டமும் நடந்தது அநாகரிகம். எங்கள் இயக்கம் சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன்” என்று பேச இன்றைக்கு இங்கே எந்த அரசியல்வாதிக்காவது மனசாட்சி இருக்கிறதா அல்லது அப்படியான ஜனநாயகம்தான் எந்தக் கட்சியிலாவது இருக்கிறதா? எந்த நடராஜனோ ஆட்சியைப் பற்றி விமர்சித்தால், எந்த நடராஜனையோ கட்சியைவிட்டு நீக்கிச் சேர்க்கும் அளவுக்குத்தானே உட்கட்சி ஜனநாயகம் இங்கே இருக்கிறது!
யூனூஸுடன் ஓர் உரையாடல்
ஓரிரு நாட்களுக்கு முன் முஹம்மது யூனூஸைச் சந்தித்தேன். இந்த மழை வெள்ளம் நமக்குக் காட்டிக்கொடுத்த நல்மனிதர்களில் ஒருவரான அதே யூனூஸ்.
“இங்கேதான் நுங்கம்பாக்கத்தில் சின்னதாக ஒரு அலுவலகம் நடத்துறேன். இணைய வர்த்தகம்” என்றார். “எது உங்களை மீட்புப் பணிக்கு உந்தித் தள்ளியது?” என்ற கேள்விக்குப் பின் அவர் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் நாம் இன்றைய அரசியல்வாதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டியது.
“இந்த டிசம்பர் மழைக்கு முன்னாடி நவம்பர்ல ஒரு பெருமழை பெஞ்சுது இல்லையா, அதுதான் என் வாழ்க்கையில திருப்புமுனை. அதுவரைக்கும் என் வாழ்க்கையோட குறிக்கோள் நூறு கோடி ரூபா சம்பாதிக்கிறது. வேகமா சம்பாதிச்சுக்கிட்டும் இருந்தேன். நவம்பர்ல அந்த மழை பெஞ்ச நாளுக்கு மறுநாள் வீட்டுலேர்ந்து வீதிக்கு வந்தப்போ நிறையப் பேர் வீட்டைவிட்டு வெளியே வந்து நின்னதைப் பார்த்தேன். ஓர் இளம்பெண் கைக்குழந்தைக்கு வீதியில உட்கார்ந்து பால் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மனசு என்னமோ மாதிரி இருந்துச்சு.
எனக்குச் சொந்தமான வீடுகள்ல சில வீடுங்க காலியா இருந்துச்சு. வீதியில நின்ன சில குடும்பங்களை அழைச்சுக்கிட்டு வந்து அங்கே தங்க வெச்சோம். தலை மேல கை வெச்சி அவங்க வாழ்த்தினப்போ, வாழ்க்கையோட அர்த்தமே வேறன்னு புரிஞ்சுச்சு.
அடுத்த மழை பிடிச்சப்போ சமூக வலைதளங்கள்ல நண்பர்க ளோட சேர்ந்துக்கிட்டு முடிஞ்சவரைக்கும் உதவிக்கிட்டு இருந்தோம். டிசம்பர் 1 அன்னைக்கு உதவி கேட்டு நூத்துக்கணக்கானவங்க தொடர்ந்து போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. அப்படித்தான், ஊரப்பாக்கத்துலேர்ந்து ஒரு அழைப்பு வந்துச்சு.
`வெள்ளம் ஆறா அடிச்சிக்கிட்டுப்போவுது. எல்லாம் மாடில குழந்தைங்களோட நிக்கிறோம். எப்படியாவது காப்பாத்துங்க'ன்னு. அரசாங்கத் துறைகள் யாரையும் அணுக முடியலை.
ஆயிரக்கணக்கானவங்க சிக்கியிருக்காங்க. பெரிய வெள்ளம். படகுங்க இல்லாம உதவிக்குப் போக முடியாது. கடக்கரையை நோக்கி ஓடினோம். 20 படகோட்டிகளோட 9 படகுகளை எடுத்துக்கிட்டு ரொம்பக் கஷ்டங்களுக்கு மத்தியில போய்ச் சேர்ந்தோம். நாங்க போனப்போ, அது ஊரா இல்லை. வெள்ளக்காடா இருந்துச்சு. குறைஞ்சது பத்தடித் தண்ணீ கடுமையான வேகத்துல ஆறாப் பாயுது. கும்மிருட்டு வேற. ராத்திரி மூணரை மணி இருக்கும். அப்போ ஆரம்பிச்சு மறுநாள் ராத்திரி ஒன்பதரை மணி வரைக்கும் போராடிக் காப்பாத்தினோம்.”
அப்படிக் காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர்தான் நிறைமாதக் கர்ப்பிணி சித்ரா. தன் பிள்ளைக்கு இப்போது யூனூஸ் பெயரைச் சூட்டியிருக்கிறார். வெள்ளத்தில் உதவிக்கு அழைத்தவர்கள் யூனூஸுக்குப் பரிச்சயமானவர்களா? இல்லை. படகோட்டிகள் பரிச்சயமானவர்களா? இல்லை. “நீச்சல் தெரியுமா?” என்று கேட்டால், அதுவும் “தெரியாது” என்றார். அப்புறம் எப்படி திடீரென்று அந்த இருட்டில் கிளம்பிப்போனார்? ‘‘உயிருக்குப் போராடுற இடத்துல நம்மை வைக்காம, உதவுற இடத்துல நிறுத்தியிருக்கார் கடவுள். அப்போ உதவுறது கடமை இல்லையா?’’ என்றார். இந்த மீட்புப் பணியின்போது யூனூஸ் ஒரு இடத்தில் தவறி விழுந்திருக்கிறார். வெள்ளம் அடித்துச் செல்லவிருந்தவரை இழுத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். “மொத்தம் எத்தனை பேரை மீட்டீர்கள்?” என்றேன். “1,500 குடும்பங்கள்” என்றார். கையைப் பிடித்துக்கொண்டேன்.
ஒரு யூனுஸால் 1,500 பேரை மீட்க முடிந்திருக்கிறது என்றால், சர்வ வல்லமையும் கொண்ட ஒரு ஆளுங்கட்சியினரால் இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்? தமிழகத்தில் எல்லா பெரிய கட்சிகளுமே மீனவர்கள் அணி என்று ஒன்றை வைத்திருக்கின்றன. உள்ளதிலேயே பெரியது ஆளுங்கட்சியின் மீனவர் அணி. ஒரு யூனூஸ் அழைத்தால் 20 பேர் ஓடி வருகிறார்கள் என்றால், ஆளுங்கட்சியினர் அழைத்திருந்தால் எத்தனை பேர் ஓடிவந்திருப்பார்கள்? இன்னும் எவ்வளவு பேரை மீட்டிருக்க முடியும்?
பரிவு எங்கே?
எது ஒரு யூனூஸைத் தன் உயிரையும் பொருட்படுத் தாமல் ஓடச்செய்ததோ, அது இல்லாததுதான் இன்றைக்கும் நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்பையும் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினரை மமதையோடு பேசச் செய்கிறது. அன்பு - பரிவு - கருணை.
பட்டத்து யானைகள் வலியவை. பிரம்மாண்டமானவை. பட்டத்து யானைகள் பீடுநடைக்கு முன் எறும்புகளின் சாவுகள் ஒரு பொருட்டல்லதான். ஆனால், சக எறும்புகளை அவை கலங்கவைக்கும்; துன்புறுத்தும்; அச்சத்தில் ஆழ்த்தும்; ஒன்றுதிரட்டும். பட்டத்து யானைகள் பட்டத்து யானைகள்தாம். எறும்புகள் எறும்புகள்தாம். ஆனால், கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னாகும்? யோசிக்க வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

NEWS TODAY 21.12.2025