Thursday, January 7, 2016

மனசு போல வாழ்க்கை 32: அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே! ....டாக்டர். ஆர். கார்த்திகேயன்



இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது.

பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது.

நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும்.

போலிப் பகலாகும் இரவு

இன்றைய தலைமுறையினர் படும் பல அவதிகளுக்குக் காரணம் தூக்கமின்மைதான். வேகமான வாழ்க்கை இரவை விழுங்கிவிட்டது. பகல் முடிந்தும் இரவை ஒரு போலிப் பகலாக உருவாக்குகிறது.

ஐந்து மணிக்கு வேலையை முடித்து ஆறு மணிக்கு வீடு வந்தால் குடும்பத்துடன் உறவாடி உணவருந்தி இரவு பத்துக்குத் தூங்கச்சென்றால் மறு நாள் பளிச்சென்று விடியும்.

இன்று வேலையும் சாலையின் நெரிசலும் எட்டு மணிக்கு முன்பாக வீடு திரும்ப விடுவதில்லை. ஒரு காபி குடித்துவிட்டு டி.வி. சீரியல்களில் உட்கார்ந்தால் பத்து மணிக்குத்தான் தாமதமான, ஆனால் கனமான சாப்பாடு. பிறகு வாட்ஸ் அப் செய்திகளும் கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆடல், பாடல், கேம் ஷோக்களைப் பார்த்து அயர்ந்துபோகிறோம். அதற்குப் பிறகு படுப்பதற்கு செல்கையில் நடுஇரவு ஆகிவிடுகிறது.

படுக்கையில்தான் எல்லா வலிகளும் பெரிதாகத் தெரிகின்றன. சாலை வெளிச்சங்களும் இரைச்சல்களும், அண்டை வீடுகளின் டி.வி சத்தங்களும் தூங்க விடாது. அப்போதுதான் பாக்கி உள்ள அனைத்து வேலைகளையும் மனம் பட்டியல் போடும். கண்ணை மூடியபின் வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் செய்தியையும் பார்க்கத் தூண்டும். வெட்டிச் செய்தி என்று தெரிந்த பின்னும் பதில் போட வைக்கும். பின்பு ஃபேஸ்புக் போகத் தூண்டும். ஃப்ரிட்ஜில் தண்ணீர் குடித்துவிட்டு வருகையில் ‘தூக்கம்தான் வரவில்லையே? ஏதாவது வேலை பார்த்தால் என்ன?” என்று லேப்டாபை எடுக்க வைக்கும். பின் அயர்ச்சியில் படுக்கையில் விழும்போது ‘சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்.

சிந்தனைகளைக் கழட்டுங்கள்

வாழும் முறையில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள முடியாது. இதற்கு என்ன செய்யலாம்?

என் பரிந்துரைகள் இதோ:

ஏ.ஆர். ரஹ்மான் மாதிரியான பிஸியான பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இல்லாதவரை பகல் பொழுது வேலைக்கும் இரவுப் பொழுது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போது உங்கள் வேலை பற்றிய சிந்தனைகளையும் கழட்டி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை கொடுத்துக் கொள்ளுங்கள்.

தாமதமானால் டீ, காபிக்குப் பதிலாக நேராக உணவுக்குச் செல்லுங்கள். நல்ல குளியலுக்கு பிறகு உண்ணும் மென்மையான இரவுச் சாப்பாடு உங்களுக்கு இளைப்பாறுதல் தரும். டி.வியைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன நலம் காக்கப்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். அவசியச் செய்திகள், அழைப்புகள் முடிந்தபின் கைபேசியை தள்ளி வையுங்கள்.

தூக்கத்துக்குத் தயார் செய்தல் முக்கியம். படுத்த பிறகு குடும்பம், அலுவலகம், அக்கம் பக்கம் என செய்திகள் பகிர்வது உங்களை நல்ல உணர்வுகளுடன் தூங்க வைக்காது. குறிப்பாக, தீராத பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம். இயலாமை, எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் சிந்தனைகளைப் பெருக்கி மனதை அமைதி இழக்கச் செய்யும். மனதைக் காலி செய்து, கழுவித் துடைத்து தூக்கத்துக்குத் தயார் செய்தல் அவசியம். எந்த சிந்தனையும் இல்லாது வரும் அந்த உறக்கம் அவ்வளவு நிர்மலமாக இருக்கும்!

கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை நல்லது. அல்லது நல்ல இசை போதும். நன்றி கூறுதல், தியானம், அஃபர்மேஷன் என எது உங்கள் மனதுக்குப் பிடித்ததோ அதைச் செய்து மற்ற சிந்தனைகளை ஓட்டிவிடுங்கள். நீங்கள் எந்த நேரம் தூங்க ஆரம்பித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு உறக்கத்துக்குள்ளே நழுவியிருப்பீர்கள்.

நல்ல தூக்கம் மறு நாள் எழும்போது ஒரு சாதனை உணர்வைத் தரும். எழுந்தவுடன் பசியும் புத்துணர்ச்சியும் வர வேண்டும். மனித அத்துமீறல்கள் இல்லாத வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளில் அவற்றைப் பார்க்கலாம்.

அலாரத்தைப் பார்த்து அலறி எழுந்து, அவசரத்தில், வேகத்தில், கோபத்தில் ஓடும் அட்ரினல் வாழ்க்கை முறை உங்களை விரைவில் வயோதிகத்தில் தள்ளிவிடும். எதிர்மறை எண்ணங்களை எளிதில் கொண்டு வந்துவிடும். வேகம் விவேகம் அல்ல என்பது சாலைகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்தான்.

வேகத்தை மட்டுப்படுத்த நம் இரவுகளை சமன்படுத்துவோம். ஆறு முதல் எட்டு மணி நேர அமைதியான இரவுத்தூக்கம் அவசியம். வளர்ந்த நாடுகளை பின்பற்றும் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். தூக்க மாத்திரைகள் அதிகம் நுகரப்படும் தேசங்கள் அவை. ரசாயன மருந்துகளின் துணை இல்லாமல் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும் வரலாம். மறந்துவிட வேண்டாம்.

என் சிறு பிராயத்தில் சிலோன் ரேடியோ மிகப் பிரபலம். அதில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியை நாங்கள் தவற விட மாட்டோம் அதில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!” ஒவ்வொரு முறையும் அந்த பாடல் முடிகையில் தூங்கிப்போன நிலையில் இருக்கும் உடலும் மனமும். இப்படி ஒரு தலைமுறையையே அமைதிப்படுத்தி தூங்க வைத்த பாடல்கள் உண்டு.

நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தரும் பெரு வரம் நல்ல தூக்கம். அதற்கான இடையூறுகளைக் களைந்து, நல்ல சூழலை அமைத்து, நல்ல முன்மாதிரிகளாய் நீங்கள் தூங்க ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்ற மாட்டார்களா என்ன?

தொகுப்பு: gemba.karthikeyan@gmail.com

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு


ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

நம் பாட்டன், பூட்டன்களை பராமரிப்போம்!

டி.எல்.சஞ்சீவிகுமார்

தினமும் நாம் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம்? பல் விளக்குகிறோம். காலைக் கடன்களை முடிக்கிறோம். அழுக்குப்போக குளிக்கிறோம். சிக்கெடுத்து தலை வாருகிறோம். மேற்பூச்சிகள் தனி. அப்புறம் உணவு உட்கொள்கிறோம். அவரவர் வசதி கேற்ப நடை பயிற்சி, யோகா, தியானம் என உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறோம். கொஞ்சம் உடல் நலம் கெட்டாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். இப்படி எல்லாம் செய்யாவிட்டால் சீக்கிரமே சீக்காளியாகி இறந்துப்போவோம். சரி, நமக்கு உணவைக் கொடுப்பது யார்? உடலை வளர்ப்பது யார்? நீர்நிலைகள்தானே. அவை இல்லாவிட்டால் சூனியமாகிபோவோம். இன்றும் உயிரோடு இருக்கும் நமது பாட்டன், பூட்டன்கள்போலத்தான் இந்த நீர் நிலைகள் எல்லாம்.

ஆம், ஏரிகள், குளங்களுக்கும் உயிர் உண்டு. இது அறிவியல்பூர்வமான உண்மை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஏரி, குளங்களை அப்படிதான் வரையறுத்துள்ளது. ஏரிகள், குளங்கள் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியோடு ஒப்பிடப்படுகின்றன. அவை ஓர் உயிரினத்தைப் போல புவி யியல்ரீதியாக நிலப் பரப்புகளில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் அல்லது மனிதனால் பிறக்கின்றன. காலப் போக்கில் உயிரினங்களைப் போலவே பல்வேறு வடிவங்களில் பரிணாம மாற் றங்களுடனும் பல்லுயிர் பெருக்கத் துடனும் வளர்கின்றன. அவை தங்க ளுக்கான உணவாக ஆறுகளில் அடித்து வரப்படும் வண்டலில் இருந்து வளத்தைப் பெறுகின்றன. அந்த வளத்தில் பாசிகள், நீர்த் தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகளை வாழ வைக்கின்றன. எனவே, ஏரிகளும் குளங்களும் உயிரினங்களே என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச ஏரிகள் சுற்றுச்சூழல் கமிட்டி ஜெய்ப்பூரில் நடத்திய 12-வது உலக ஏரிகள் மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. இது ‘ஜெய்ப்பூர் பிரகடனம்’ என்றழைக்கப்படுகிறது.

ஆனால், நம் உடலை பராமரிப் பதைப் போல ஏரி, குளங்களைப் பரா மரிக்கிறோமா? நமக்கு தலைவாருவது போல ஏரியை தூர் வார வேண்டாமா? நம் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதைப்போல குளத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? ஆகாயத் தாமரைகள் ஒன்றிரண்டாக வளரும்போது முளையி லேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர் பார்க்கலாமா? அரசாங்கத்தை நடத்து வது அரசியல்வாதிகள்தானே. அவர் களா வந்து நீர் நிலைகளை சரிசெய்யப் போகிறார்கள். நீர் நிலைகளைப் பராமரிக்க ‘நமக்கு நாமே’ திட்டம் உட்பட எவ்வளவோ திட்டங்கள் இருக் கின்றன. மக்களாகிய நாமே... குறிப்பாக, விவசாயிகளே களம் இறங்கலாமே.

தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியின் எல்லைகளையும் குறைந்தது நான் கைந்து கிராமங்களாவது பங்குபோடு கின்றன. அந்தந்த கிராமங்களில் வேலையை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்கி ஒவ் வொன்றாக செய்யலாம். மெதுவாய் குப்பைகளைப் பொறுக்குவோம். அப்புறம் ஆகாயத் தாமரைகளை அகற்று வோம். பெரியதாக எல்லாம் வேண்டாம். சின்ன சின்னதாய் செய்வோம். சிறுக சிறுக சேமிப்போம். சிறு துளி பெருவெள்ளம். சிறியதே அழகு. ஊர் கூடி தேர் இழுப்போம். காந்தியும் ஜே.சி.குமரப்பாவும் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரத் தத்துவம் இதுதானே.

இப்படி எல்லாம் செய்யாமல்தான் எத்தனையோ ஏரிகளை, குளங்களை, நதிகளை இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிட்டோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ளது உப்பலோடை. இந்த ஓடை இருந்த இடம் தெரியாமல் காடு மாதிரி மண்டிக் கிடக்கிறது கருவேல மரங்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு நதிகளே எங்கே என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் இரண்டு முக்கூடல்கள் உண்டு. ஒன்று திருப்புடைமருதூர், இன் னொன்று சிவலப்பேரி முக்கூடல். ஒரு காலத்தில் திருப்புடைமருதூர் முக்கூட லில் கடனா நதி, வராக நதி, தாமிரபரணி மூன்றும் கலந்தன. அதனால்தான், அது முக்கூடல் என்று பெயர் பெற்றது. ஆனால், இப்போது மூன்று நதியில் வராக நதி எங்கே போனது? அது எங்கே இங்கே கலக்கிறது? ஒரு சிலர் கல்லிடைக்குறிச்சி சாலையில் இருக்கும் கடம்பை வழியாக ஓடிவந்து வெள்ளாளங்குடியின் கருணை கால் வாயில் (மஞ்சலாறு அல்லது எலுமிச்சையாறு) கலப்பது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னொரு சாரார், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதியுடன் ராமா நதி கலக்கிறது. அது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை.

இன்னொரு முக்கூடல் 16-ம் நூற் றாண்டில் எம்நயினார் புலவர் முக்கூடற் பள்ளு பாடிய சீவலப்பேரி முக்கூடல். அந்தக் காலத்தில் ஏரி, குளங்களைப் பராமரித்த பள்ளர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. ஆனால், வேளாண்மைக்கு ஆதாரமாகத் திகழ்ந்த பள்ளர்களைப் போற்றவே அழகர் பெருமாள் முக்கூடலுக்கு வந்தார் என்று சொல்லும் அருமையான படைப்பு முக்கூடற் பள்ளு. இங்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் பஞ்சந்தாங்கி பகுதியில் உற்பத்தியாகி குற்றாலம் அருவியாகக் கொட்டி, 14 அணைக்கட்டுகளை நிரப்பி தென்காசி, கங்கைகொண்டான் வழியாக சிவலப்பேரியில் தாமிரபரணியுடன் கலக்கிறது சிற்றாறு. இன்னொரு பக்கம் கழுகுமலை பகுதியில் இருந்து ராஜாபுதுகுடி, தலையால் நடந்தான் குளம், கங்கைக்கொண்டான் வழியாக கயத்தாறு இங்கே வந்துச் சேர்ந்தது. இவ்வாறாக தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் சங்கமம் ஆனதால் மூக்கூடல் என்றழைக்கப்படுகிறது. ஆனால், இன்று அந்த கயத்தாறு எங்கே போனது?



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அருகே உப்பலோடையில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள். | படங்கள்: எம்.லட்சுமி அருண்

கங்கைக்கொண்டானில் இருந்து புளியம்பட்டி செல்லும் பாதையில் வடகரை கிராமத்தின் வடக்குப் பக்க மாக இருக்கிறது பராக்கிரம பாண்டி யன் குளம். இதன் மூலம் வடகரை, கிழக்கோட்டை, கைலாசபுரம், வேப்பங் குளம், கொடியங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பாசனம் பெறுகின்றன. கழுகுமலையில் இருந்து ஓடிவரும் கயத்தாறு பராக்கிரம பாண்டியன் குளத்தில் இணைகிறது.

ஆனால், இந்தக் குளம் தூர் வாரப்படாமல் சீமை கருவேல மரங்களில் ஆக்கிரமிப்பில் தனது முழுக் கொள்ளளவை இழந்துவிட்டது. தண்ணீர் அடுத்தடுத்தக் குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களும் அழிக்கப் பட்டுவிட்டன. கயத்தாற்றின் ஓட்டமே குளத்துடன் நின்றுப்போனது. இதனால் அந்த ஆறு சிவலப்பேரி முக்கூடலில் சங்கமிக்காமல் பராக்கிரம பாண்டியன் குளத்திலேயே மூழ்கிவிட்டது.

இதனால், பெருமழைக் காலங்களில் கயத்தாற்றில் தண்ணீர் பெருகும்போது அது வேறு வழியில்லாமல் பராக்கிரம பாண்டியன் குளத்தில் இருந்து பின் வாங்கி வடகரை, புளியம்பட்டி, கங்கை கொண்டான் கிராமங்களை மூழ் கடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையின்னபோதும் இப்படி தான் கங்கைக்கொண்டான் - புளியம் பட்டி இடையே இருக்கும் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தது. இருபக்கமும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர். என்ன செய்வது? ஆற்றின் பாதையை அழித்த வினைக்கு அனு பவிக்கிறோம்.

அரவமில்லா ஓர் அத்துமீறல்!

Dinamani



By ப. இசக்கி

First Published : 14 December 2015 01:27 AM IST


"குற்றத் தடுப்பு' என்ற பெயரில் தனியார் மற்றும் பொது இடங்களில் "குளோஸ்டு சர்க்கியூட் டெலிவிஷன் காமிரா'வை (சிசிடிவி) பொருத்தி வைத்துக் கொண்டு அடுத்தவர்களின் அந்தரங்கங்களை உற்றுப்பார்க்கும் அநாகரீகம் அதிகரித்து வருகிறது.
பொது இடங்களில் மக்களைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும் சிசிடிவி காமிராக்களைப் பொருத்துவதை தமிழக அரசு கடந்த 2012 டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது.
அரசு, தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், திரையரங்குகள், வியாபார நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், பஸ் நிலையங்கள் என காமிரா பொருத்த வேண்டிய இடங்களாக ஏராளமானவை அரசின் உத்தரவு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், தனியான வீடுகள் தவிர பொதுமக்கள் வந்துபோகும் எந்த இடமாக இருந்தாலும் அங்கு சிசிடிவி காமிராவைப் பொருத்த வேண்டும் என்பதுதான் உத்தரவின் சுருக்கம்.
இந்த உத்தரவை சாக்காகக் கொண்டு இப்போது சகட்டு மேனிக்கு சிசிடிவி காமிராக்களைப் பொருத்தி, பொதுமக்களை ஒருவித பதற்றத்துக்கு ஆளாக்கி வருகின்றனர் என்றால் அது மிகையில்லை. பொது பயன்பாட்டு கட்டடங்களின் வாசலில் நுழையும்போதே கண்ணில் படும்படியாக "கண்காணிப்பு காமிரா சுழன்று கொண்டிருக்கிறது' என்ற அறிவிப்பு அதட்டுகிறது. சில இடங்களில் "தயவு செய்து சிரியுங்களேன், காமிரா ஓடிக் கொண்டிருக்கிறது' என்று ஒரு செல்லமான மிரட்டல்.
பொது இடங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண இந்த சிசிடிவி காமிரா உதவிகரமாக இருக்கலாம். குற்றங்களில் ஈடுபடுவோர் ஒரு சிலர்தான். அதற்காக, அங்கு கூடும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களை காமிரா மூலம் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பது என்பது எஞ்சியவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது ஆகாதா? தான் எப்போதும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பது குற்ற நோக்கம் இல்லாத ஒருவருக்குத் தேவையில்லாத பதற்றத்தையே ஏற்படுத்தும்.
தனி மனித சுதந்திரம் பற்றி பேசும் பொதுநல அமைப்புகள்கூட இந்த சிசிடிவி காமிரா விஷயத்தில் மெளனம் காப்பது வேடிக்கையாக இருக்கிறது.
பொது இடங்களில் இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வயதான பெண்கள் என பலரும் இருப்பார்கள். இந்தக் கால இளம்பெண்கள் பலர் உடையில் சுதந்திரமானவர்கள். கட்டடத்தின் உயரமான இடத்தில், ஒரு மூலையில், ஏதோ ஒரு கோணத்தில் சுழலும் காமிரா ஒவ்வொருவரையும் எப்படி படம் பிடிக்கும் என்பதை யார் அறிவர்? குற்றவாளிகளைக் கண்டறிய காட்சிகளை திருப்பி பார்க்கும்போது அதில் எந்த காட்சி எப்படி பதிவாகி இருக்கிறது, அதை யார் எப்படி பார்ப்பார்கள்? அந்த காட்சிகள் தவறாக பயன்படுத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா? விஷமிகளால் அவை சமூக ஊடங்களுக்கு செல்லாது என்பதற்கு யார் உத்தரவாதம்? சரி, அசம்பாவிதம் ஒன்றுமே நடக்காவிட்டாலும்கூட, காமிராவில் பதிவான காட்சிகள் எல்லாம் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுகின்றனவா? அவை எப்படி அழிக்கப்படுகின்றன?
இதற்கான எந்த விதிமுறைகளும் அரசு உத்தரவில் இல்லை. எனவே, காமிரா பதிவுகள் தவறாக பயன்படுத்தப்படாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.
சரி, வியாபார நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் முதலாளிகள் என்றார் காந்தி. அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பதை விட்டுவிட்டு அனைவரும் திருடர்கள் என்பதுபோல "மூன்றாவது கண்' கொண்டு கண்காணித்துக் கொண்டிருப்பது என்ன நாகரிகம்? அது வாடிக்கையாளர்களை அவமதிக்கும் செயல் ஆகாதா? வர்த்தக நிறுவனத்தினர் இதை உணர வேண்டாமா? கடைகளில் திருட்டு நடக்கிறது என்றால் கவனமுடன் இருக்க வேண்டியது ஊழியர்கள்தான். உஷாரான ஊழியர்கள் இருக்கும் கடைகளுக்கு திருடர்கள் நுழைய முடியுமா?
இந்த சிசிடிவி காமிரா கலாசாரம் ஒரு வகையில் காவல் துறையினரின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலே.
பொது இடத்தில் குற்றம் செய்தவரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதற்கு சிசிடிவி காமிரா பொருத்தப்படாததை காரணமாக கூறுவது அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகிறது. காமிரா இருக்கும் இடங்களில் நடந்த குற்றங்களைத் துப்புதுலக்க அவற்றை மலைபோல நம்பும் போலீஸார், அவை தொழில்நுட்ப காரணங்களால் சரியாக இயங்கவில்லை என்றால் விசாரணையில் நிலைகுலைந்து போவதும் உண்டு. காவல் துறையினர் வழக்கமாக மேற்கொள்ளும் பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளும் குறைய வாய்ப்புண்டு. அதற்காக காமிராவே வேண்டாம் என்பது பொருள் இல்லை.
திருவிழா நேரங்களில் கடைவீதிகளில் காமிராவைப் பொருத்தி காவல் துறையினர் கண்காணிப்பார்கள். பெருங்கூட்டத்தில் தவறு செய்வோரை எளிதில் அடையாளம் காண அது உதவலாம்.
முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்பு, விலை உயர்ந்த பொருள்கள் பாதுகாக்கப்பட்டுள்ள இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என 24 மணி நேர பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் காமிரா இருக்கலாமே தவிர, அரவமில்லா இந்த அத்துமீறல் மற்ற இடங்களில் அவசியமா என்பதை பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

களத்தில் பெண்கள்: அனைத்தையும் மீட்டெடுக்கும் பெண் சக்தி! .... பிருந்தா சீனிவாசன்

Return to frontpage

அதிகாரத்தின் கோர முகத்தையும் ஆக்கிரமிப்பின் பேரழிவையும் மட்டுமல்ல, மனித மனங்களில் மலர்ந்து கிடக்கும் பேரன்பையும் பெருங்கருணையையும் சேர்த்தே உலகறியச் செய்திருக்கிறது இந்தப் பெருமழை. சில நாட்களுக்கு முன்னால் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையில், திரும்பிய திசையெங்கும் அபயக் குரல்களும் மரண ஓலங்களும் ஏற்படுத்திய வேதனை சொல்லில் வடிக்க இயலாது. ஆனால், அந்த வேதனைக் குரல்கள் ஒலித்த திசையெங்கும் நீண்ட அன்பின் கரங்களை எத்தனை வணங்கினாலும் தகும்.

எங்கோ ஒரு மூலையில் விசும்புகிற குழந்தையின் பசி போக்கக் கழுத்தளவு நீரில் மிதந்தபடி பால் பாக்கெட் ஏந்திச் சென்ற கைகள் யாருடையவை? கைகள் முழுக்க உணவுப் பொட்டலங்களைச் சுமந்தபடி சுழற்றியடிக்கும் மழையிலும் சுற்றியிழுக்கும் சேற்றிலும் நடந்த கால்கள் எவருடையவை? அடித்துச் செல்லும் வெள்ளத்தை எதிர்த்துப் படகு செலுத்தி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தவர்களை எல்லாம் இழுத்துவந்து கரைசேர்த்தவர்களின் இனம் என்ன? தன் வீடு மொத்தமும் மூழ்கிய பிறகும் தேவைப்படுகிறவர்களுக்கு எல்லாம் ஓடி ஓடி உதவியவரின் பெயர் என்ன? சென்னையின் கதறலைக் கேட்டு நொடியும் தாமதிக்காமல் வண்டி வண்டியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பிவிட்டு, அனைவரும் நலம் பெற பிரார்த்தனை செய்தவர்களின் மதம் என்ன? இப்படி முகம் தெரியாத, பெயரைச் சொல்லிக்கொள்ள விரும்பாத எத்தனையோ பேரின் கருணையினால்தான் சென்னை ஓரளவு கரைசேர்ந்திருக்கிறது.

சென்னையின் துயர் துடைக்கும் சேவையில் பெருவாரியான பெண்கள் தங்களை இணைத்துக்கொண்டனர். பள்ளிச் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், முதியவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் களத்தில் இறங்கிப் பணியாற்றியது, பெண்மையின் திண்மைக்குச் சான்று.

ஆசிரியரின் அறப்பணி

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பாதிப்பைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மனம் பதறியது ரமா பிரபாவுக்கு. வேலூர் மாவட்டம் திருவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும் இவர், தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையிலாவது உதவ வேண்டுமே என தவித்தார். தான் வசிக்கும் சிவானந்தா நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையிலிருந்து அரும்பாடுபட்டு வீடு திரும்பிய கதையைக் கேட்டதுமே ரமா பிரபாவின் தவிப்பு இருமடங்கானது. அந்த இளைஞர்களோடு தன் நகரில் இருக்கும் வீடுகளின் கதவைத் தட்டினார். மறு வார்த்தை பேசாமல் அனைத்து வீடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் குவிந்தன. தன் கணவரின் உதவியோடு நகர் மக்களை ஒன்றிணைத்து இரவோடு இரவாகச் சமையலைத் தொடங்கினார். ஆயிரம் பேருக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களுடன் மற்ற நிவாரணப் பொருட்களுடனும் சென்னைக்குக் கிளம்பினார்.

“சென்னையில நடந்த துயரத்தைப் பார்த்ததுமே வேதனையா இருந்துச்சு. ஏதோ ஒரு மூலையில இருக்கற என்னால என்ன உதவி செய்ய முடியும்னு மறுகிப் போனேன். ஆனா நிச்சயமா ஏதாவது செய்யணும்னு எங்க நகர்ல இருக்கறவங்ககிட்டே உதவி கேட்டேன். ஒருத்தரும் ஒரு வார்த்தைகூட மறுத்துப் பேசலை. அவங்க எல்லாரோட சார்பாவும் நானும் எங்க நகர் இளைஞர்களும் சென்னைக்குக் கிளம்பினோம். காஞ்சிபுரம் தாண்டினதுமே மழை வலுத்துடுச்சு. எப்படியோ தட்டுத் தடுமாறி மாநகரத்துக்குள்ளே நுழைஞ்சோம். திரும்பின பக்கமெல்லாம் தண்ணி மட்டும்தான் தெரிஞ்சது. முழங்காலுக்கு மேல ஓடற தண்ணியில இறங்கி, கூவம் கரையோரமா இருக்கற மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் நிவாரணப் பொருட்களையும் கொடுத்தோம். இந்த ஒரு வேளை உணவு போதுமா அவங்க மீண்டு வர்றதுக்குங்கற நினைப்பு என்னை ஒரு சிறு துரும்பா உணர வச்சது. இந்த மக்களுக்கு வேற எதுவும் செய்ய முடியலையேங்கற இயலாமையோடதான் திரும்பினோம்” என்று சொல்லும்போதே ரமா பிரபாவுக்குக் குரல் தழுதழுக்கிறது. கடலூருக்கும் தங்கள் நகர் மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்களைப் பெற்று அனுப்பிவைத்திருக்கிறார் இந்த நல்லாசிரியர்.

“நாங்க செய்யறது எல்லாமே தற்காலிக நிவாரணம்தான். பாதிக்கப்பட்ட மக்களோட வாழ்வை மீட்டெடுக்கறதுதான் இதுக்கு நிரந்தர நிவாரணம். ஆனா எந்தவொரு நிவாரணப் பணியிலும் எந்தக் கட்சியோட முத்திரையும் இருக்கக் கூடாது. அரசாங்க முத்திரை மட்டும்தான் இருக்கணும்” - எதையுமே அரசியலாக்கும் அற்பர்கள் மீதான கோபமும் கசப்புணர்வும் வெளிப்படுகின்றன ரமாவின் கணவர் பரந்தாமனின் வார்த்தைகளில்.

நிரந்தர நிவாரணமே தீர்வு

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார் வானகரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி. வீட்டை நெருங்குவதற்கு முன்னாலேயே பல வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரில் மூழ்குவதைப் பார்த்துப் பதறினார். தன் கண் முன்னே மக்கள் அருகிலிருந்த தேவாலயத்திலும் பள்ளியிலும் தஞ்சம் புகுந்ததைப் பார்த்து உடைந்துபோனார். வீட்டுக்குச் சென்றவர் வீட்டிலிருந்த துணிகளைத் தன் காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பினார். மாற்று உடை கூட இல்லாமல் உயிரை மட்டுமே வைத்திருந்தவர்களுக்கு உடைகளை வழங்கினார். பெரிய சாலைகளைத் தாண்டி உள்ளுக்குள் சென்றபோதுதான் பாதிப்பின் வீரியம் அவருக்குப் புரிந்தது. உடனே தன் சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்று அங்கிருந்தவர்களிடம் நிவாரணப் பொருட்களைப் பெற்றுத் திரும்பினார்.

“மெயின் ரோட்டை ஒட்டியிருந்தவங்களுக்கு ஓரளவு உதவி கிடைச்சுது. ஆனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாம உள்ளே பலர் மாட்டிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு முதல்ல உதவணும்னு நினைச்சோம். என் கணவர் தன்னால முடிஞ்ச இடங்களுக்குப் போனார். சில இடங்களில் ஆட்களோட எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு. அதனால எங்ககிட்டே இருந்த நிவாரணப் பொருட்களை அங்கே இருந்த நிவாரண முகாம்ல கொடுத்து, அவங்களையே எல்லாருக்கும் பிரிச்சு கொடுக்கச் சொல்லிட்டோம்” என்று சொல்லும் விஜயலட்சுமி, சென்னை மக்களின் தேவை இதுபோன்ற தற்காலிக உதவிகள் மட்டுமல்ல என்பதையும் குறிப்பிடுகிறார்.

“வீடு, வாசல், உறவுகள்னு எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிற மக்களுக்கு இந்த உதவிகள் எம்மாத்திரம்? முதலில் அரசாங்கம் இவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடத்தையாவது அமைச்சு தரணும். எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கறவங்களுக்குத்தான் அதோட வலியும் வேதனையும் புரியும்” என்கிறார் விஜயலட்சுமி.

“என்னால வெள்ளம் பாதிச்ச இடங்களுக்கு நேர்ல போய் உதவ முடியாது. மக்களுக்கு நிவாரணம் போய்ச் சேர விடாம சிலர் தடுக்கறதாகவும் கேள்விப்பட்டோம். அதனால நிவாரணப் பொருட்கள் வழங்குற முகாம்ல என்னைத் தன்னார்வலரா இணைச்சுக்கிட்டேன். இங்கே என்கூட இன்னும் இருபது பெண்கள் தன்னார்வலரா இருக்காங்க” என்று சொல்லும் மீனாட்சிக்கு 62 வயது. கடலூர் நிவாரணப் பணிகளில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறார் இவர்.

மருத்துவ உதவி அவசியம்

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ருச்சி. வெள்ளத்தை மீறிய மக்களின் துயரமும் கண்ணீரும் ஸ்ருச்சியை கடலூருக்கு வரவழைத்தது. உணவு, பாய், உடைகள் போன்றவைதான் பெருமளவில் நிவாரணப் பொருட்களாகக் குவிவதைப் பார்த்த இவர், மருந்துப் பொருட்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

“கடலூரில் நான் பார்த்த பகுதிகள் முழுக்கக் குடிசைகள்தான். மொத்தமும் நீரில் மூழ்கியிருந்தன. நிற்கக்கூட கூரையில்லாமல் அலைபாய்ந்தபடி நிவாரணப் பொருட்களுக்காகக் காத்திருந்தனர் பலர். இவர்களுக்கு ஏதோ ஒரு வகையிலாவது நிவாரணப் பொருட்கள் கிடைக்கும். ஆனால் தொழுநோயாளிகளுக்கு? சாதாரண நாட்களிலேயே இவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். மழையின் இந்தத் தாண்டவத்துக்குப் பிறகு இவர்களை யார் கைதூக்கிவிடுவார்கள்?” என்று கேட்கும் ஸ்ருச்சி, தொழுநோயாளிகளுக்கான மருந்து, மாத்திரைகளை கையோடு வாங்கிச் சென்றிருக்கிறார்.

“சிலர் மாட்டுக் கொட்டகையில இருந்தாங்க. காயங்கள் சரியா பராமரிக்கப்படாம பெரிய புண்ணாகியிருந்துச்சு. மூணு நாளா சாப்பிடாம இருக்குறோம்னு சொன்னதைக் கேட்டுப் பதறிட்டேன். அப்புறம் அங்கேயே தங்கியிருந்து பத்து நாளுக்கு சாப்பாடு கொடுத்தோம். இதோ நிவாரணப் பணி முடிஞ்சு ஊருக்குக் கிளம்பிட்டேன். இப்போ அந்த மக்களுக்கு யார் ஆதரவு தருவாங்க?” என்ற ஸ்ருச்சியின் கேள்வி நியாமானதே.

“இங்கே விவசாயம்தான் மக்களோட வாழ்வாதாரம். அவங்க வளர்த்த ஆடு, மாடு, கோழி எல்லாமே வெள்ளத்துல அடிச்சிக்கிட்டுப் போயிடுச்சு. அதனால அவங்க வாழ்வை மீட்டுத்தர வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கு. சொல்லப்போனா சின்ன உதவிகூட கிடைக்காம இன்னும் பல கிராமங்கள் கடலூருக்குள்ள இருக்கு” என்கிறார் ஸ்ருச்சி.

அன்னமிட்ட கைகள்

திருப்பூரைச் சேர்ந்த சசிகலா, ஸ்ரீபுரம் டிரஸ்ட் உதவியுடன் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

“எங்களுக்குச் சொந்தமா லாரி இருக்கறதால இங்கே திருப்பூர்ல சேகரிச்ச மளிகை பொருட்களை அதுல கடலூருக்கு அனுப்பினோம். அங்கே பஞ்சாயத்து ஆட்கள் உதவியோடு அங்கிருக்கற பள்ளியில் தினமும் உணவு சமைத்துத் தருகிறோம். இதுல என் பங்கு எதுவுமே இல்லை. நான் உதவின்னு கேட்டதுமே மறுகேள்வி கேட்காமல் உதவியவர்களுக்குதான் எல்லா நன்றியும் போய் சேரணும்” என்கிறார் சசிகலா.

கவனம் பெறாத பெண்களின் தேவை

கோயம்புத்தூரைச் சேர்ந்த காயத்ரி, சென்னையில் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகிறது. அதற்குள் வெள்ளம் அவருக்குப் புதியதொரு தரிசனத்தைக் கொடுத்திருக்கிறது.

“மழை அதிகமானதுமே எப்படியாவது சொந்த ஊருக்குப் போயிடணும்னு தோணுச்சு. எப்படியோ அடிச்சி புடிச்சி ஊருக்குக் கிளம்பிட்டேன். ஆனா அப்படிப் போகும்போதுதான் பாதிக்கப்பட்டவங்களுக்கு எதுவுமே செய்யாம இப்படி தப்பிச்சு ஓடுறமேன்னு குற்ற உணர்வா இருந்துச்சு. நடுராத்திரிக்கு மேலதான் ஊருக்குப் போனேன். தூக்கமே வரலை. மறுநாள் முதல் வேலையா சென்னை மக்களுக்கு எது அவசிய தேவைன்னு லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சேன். இங்கே தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அதனால அந்த நண்பர்களோடு சேர்ந்து நிவாரணப் பொருட்களை சேகரிக்கத் தொடங்கினேன்” என்று சொல்லும் காயத்ரி, பெண்களுக்குத் தேவையான பொருட்கள் மீது அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

“உணவும் தண்ணீரும்தான் அதிகமா விநியோகிக்கப்பட்டது. அதனால நாங்க மற்ற பொருட்களைச் சேகரிச்சோம். பெண்களுக்கு உள்ளாடைகளும் நாப்கின்களும் அவசியம்னு புரிஞ்சுது. நிவாரணப் பொருட்கள் சேகரிக்கறவங்கக்கிட்டே பலரும் இதைக் கேட்கத் தயங்கறாங்க. நாங்களே வீடு வீடா போய் பெண்களைச் சந்திச்சு அவற்றைக் கொடுத்தபோது பலரும் கூச்சப்பட்டாங்க. இந்தத் தயக்கமும் கூச்சமும் அவசியமில்லாதவை. பெண்களுக்கான தேவைகளும் அடிப்படைத் தேவைகள்தான்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும்” என்று நிதர்சனத்தைப் பகிர்ந்துகொண்டார் காயத்ரி.

சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மொத்தமாகச் சேர்த்து 55 லாரிகளில் இவர்கள் பகுதி மக்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.

“இந்த ஐந்து நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. ஆண், பெண் வித்தியாசமின்றி வயது வேறுபாடில்லாமல் அனைவரும் நிவாரணப் பொருட்களை சேகரிச்சோம். லாரியில இருந்து பொருட்களை ஏற்றி, இறக்கின புருஷோத்தமன் தாத்தோவோட அக்கறை என்னை பிரமிக்க வச்சுது. அறுவது வயசை தாண்டின அவரு, தன்னோட இழப்பையெல்லாம் பொருட்படுத்தாம பாதிக்கப்பட்டவங்களுக்காக ஓடி ஓடி உதவினாரு. அதே போல சாய் சித்ராவும் ஒவ்வொரு வீடா போய் டோக்கன் போட்டு நிவாரண பொருட்களைக் கொடுத்தாங்க. இவங்களோட பணிக்கு முன்னால என்னோட பங்களிப்பு எதுவுமே இல்லை” என்று உணர்வுபொங்கச் சொல்கிறார் காயத்ரி.

இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரக்கணக்கான ஈர இதயங்கள்தான் இருண்டிருந்த சென்னைப் பள்ளங்களில் வெளிச்சக் கீற்றை வாரியிறைத்திருக்கின்றன. இணைந்த கரங்களால் நிச்சயம் மீண்டெழும் தமிழகம்!
Return to frontpage

கனமழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளின்போது சமூகத்தில் மன அழுத்த பாதிப்பும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது? சில வழிமுறைகள்:

வாழ்வை எளிமையாக்குங்கள்

விரைவாக இயங்கும் நமது சமுதாயத்தில், மிகக் குறைவான நேரத்திற்குள் மிக அதிகமான செயல்பாடுகளை அடைத்துத் திணித்துக்கொள்வதும் தனிப்பட்ட முறையில் உங்களுக்காகக் குறைவான நேரத்தை ஒதுக்குவதும்தான் பெரும்பாலும் மன அழுத்தமாக விளங்குகிறது. எனவே, எல்லாவற்றையும் உள்ளடக்கிச் செயல்படுவதற்கு வழிதேட முயல்வதுடன், சிலவற்றை கைவிட்டுச் செல்வதற்கும் வழிதேட முயலுங்கள். இவ்வாறு, வீட்டிலும் பணியிடத்திலும் உங்கள் வாழ்வை எளிமையாக்கி சமநிலையில் வைத்துக்கொள்வதற்குச் சில ஆலோசனைகளைப் பார்ப்போம்.

வீட்டில் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வீடு அமைதிப் பூங்காவாக விளங்கவேண்டும் மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் இடமாக அது இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வீட்டில் உங்களுடைய மன அழுத்தச் சுமையை எளிதாக்கப் பின்வரும் ஆலோசனைகளை முயன்று பாருங்கள்:

# உணவு அட்டவணையை ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிடுங்கள். உங்கள் வார விடுமுறையின் ஒரு பகுதியை உணவுப் பொருட்களை வாங்குவதற்கும், பின்னால் அதை உடனடியாகப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்துங்கள். விருந்துகளில் வாழை இலையையோ காகிதத் தட்டுகளையோ பயன்படுத்துங்கள்.

# கால அட்டவணை ஒன்றை உருவாக்கி, அடுத்துவரும் மூன்று மாதங்களில் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் வரிசைப்படுத்துங்கள்.

# எதிர்பாராத மாற்றத்துக்கான திட்டங் களை கணவனும் மனைவியும் சேர்ந்து உருவாக் குங்கள்: `நான் வருவதற்கு முன்பு, நீ வீட்டுக்கு வந்துவிட்டால்…’ என்பது போன்ற திட்டங்கள்.

# பொருட்கள் குப்பை போல் குவிந்துவிடுவதை அகற்றுங்கள். காகிதங்கள் சேர்ந்துவிடுவதைத் தடுப்பதற்கு ஓர் எளிய மூன்றடுக்கு கோப்பு முறையைப் பயன்படுத்துங்கள்: பில்களுக்கு ஒன்று, ஒருமாத காலத்திற்குள் உங்களுடைய கவனம் தேவைப்படுகிறவற்றுக்கு இன்னொன்று, கோப்பில் இட வேண்டியவற்றுக்கு மூன்றாவது.

# துப்புரவு குறித்து மறு-வரையறை செய்யுங்கள். நாள்தோறும் உங்கள் வீட்டைத் துப்புரவு செய்வதற்கு எவ்வளவு நேரத்தை உங்களால் செலவிட முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டுமே துப்புரவுக்காகச் செலவு செய்ய நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு அறையிலும் அதற்காக ஐந்து நிமிடங்களைச் செலவுசெய்யுங்கள். இதை மிளிர வைக்கவேண்டும், அதைக் கறையில்லாமல் வைக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்கெல்லாம் இப்போது டாட்டா காட்டிவிடுங்கள்.

# உங்களுடைய நேரத்தை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் வாசலைப் பெருக்குவது, வீட்டு வேலை, பில் அல்லது வரி செலுத்துவது போன்ற பணிகளை எல்லாம் மற்றவரிடம் ஒப்படையுங்கள் அல்லது அவற்றுக்காகச் சம்பளம் கொடுத்து ஒருவரை பணியில் அமர்த்துங்கள். இந்த நேரத்தை உங்கள் குடும்பத்தினருடன் செலவிடுங்கள். அல்லது நல்லதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.

பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்

பணியில் உங்கள் நேரத்தைப் புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதன் மூலம், நாள்தோறும் கூடுதல் வேலைகளைச் செய்து முடிக்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம். பணியிடத்தில் செய்ய வேண்டிய பணித் திட்டங்களின் எண்ணிக்கை அல்லது அதன் ஆழம் உங்களுக்குப் பெரும் பாரமாக உள்ளதா? பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்ற முயலுங்கள்:

# ஒவ்வொரு நாளுக்கும் திட்டமிடுங்கள். `செய்ய வேண்டியவை’ பட்டியலை எழுதி, மிக முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். இதை, நீங்கள் வீட்டிற்குச் செல்லும்முன் செய்ய முயலுங்கள். அப்போதுதான் அடுத்த நாள் வேலைக்கு அது தயாராக இருக்கும்.

# பொறுப்பை ஒப்படையுங்கள். நீங்கள் உங்களுடைய `செய்ய வேண்டியவை’ பட்டியலைப் பார்த்து, எவற்றை இன்னொருவரின் பொறுப்பில் ஒப்படைக்கலாம்; எவற்றை முற்றிலும் விட்டுவிடலாம் என முடிவுசெய்யுங்கள்.

# தரமாக வேலையைச் செய்வதற்கு போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். வேலையை முதல் முறையே சரியாகச் செய்வதற்குச் சற்று கூடுதலான நேரம் ஆகலாம். எனினும், பிழைகள் ஏற்பட்டால் அவை சார்ந்த திருத்தங்களுக்கு மேலும் நேரம் செலவாகி, ஒட்டுமொத்த பணி நேரத்தை அது அதிகரிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

# அவசியமற்ற வேலைகளை எடுக்காதீர்கள். கூடுதல் வேலையை ஏற்பதற்கு முன்பு உங்களுடைய குறிக்கோள்களையும் கால திட்டத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.

# அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பெரிய பணிகளைச் சிறுசிறு பணிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒவ்வொன்றாகச் செய்வதற்கும் சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக முழு பணியையும் நிறைவு செய்யுங்கள்.

# உங்கள் நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதை மதிப்பிடுங்கள். மூன்று நாளைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை அனைத்தையும் எழுதிவையுங்கள். மேலும், புத்திசாலித்தனமாக நேரத்தைப் பயன்படுத்துவதற்கு வழி தேடுங்கள். எடுத்துக்காட்டாக, பேருந்தில் பணிக்குச் செல்வதன் மூலம், பயண நேரத்தைப் படிப்பதற்காகப் பயன்படுத்தலாம், இல்லையா?

# நன்றாகத் தூங்குங்கள்; நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள். கவனமும் கவனக்குவிப்பும் மேம்படும்போது, உங்கள் பணியைக் குறைவான நேரத்தில் முடிப்பதற்கு துணை புரியலாம்.

# நேர மேலாண்மை பற்றிய வகுப்புக்குச் செல்லுங்கள். உங்கள் பணியிடத்தில் நேர மேலாண்மை வகுப்புக்கு ஏற்பாடு இல்லையெனில், ஓர் உள்ளூர் சமுதாயக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் அதற்கான ஏற்பாடு இருக்கிறதா என விசாரியுங்கள்.

# உங்களுக்குத் தேவைப்படும்பொழுது பணியில் இடைவெளி விடுங்கள். உங்கள் பணியிடத்திலேயே சற்று உடலை வளைத்துப் பயிற்சி செய்யுங்கள். பணியிடத்தில் ஒரு சுற்று நடை போடுங்கள். ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்.



நன்றி: மேயோ கிளினிக் ‘மனஅழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி?’
உங்கள் நலவாழ்வுக்கான எளிய வழிகள் புத்தகம்
தொடர்புக்கு: அடையாளம், 1205/1,
கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் 621310,
திருச்சி.
தொலைபேசி: 04332-373444.

மறைந்துபோன பண்டிகை கால வாழ்த்து அட்டை பரிமாற்றம்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மோகத்தால் குறைந்துபோன அஞ்சல் சேவை ...ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Return to frontpage

பண்டிகை கால வாழ்த்துகள் ஜாதி, மதம், மொழி, கலாச் சாரத்தைக் கடந்து ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தின. கடிதங்கள் மூலம் அனுப்பும் வாழ்த்துகள் என் றும் அழியாமல் நினைவில் நிற் பவை. அன்பான உணர்வையும் வாழ்த்து அட்டைகள் ஏற்படுத்தின. அவற்றை் வாழ்நாள் முழுவதும் மலரும் நினைவுகளாக போற்றி பாதுகாக்கும் பழக்கம் மக்களி டையே இருந்தது.

அதனால், பொங்கல் பண்டிகை, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் கடைகள், தபால் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனையும் அமோகமாக இருக்கும்.

தற்போது இ-மெயில், ஃபேஸ்புக், சமீபத்திய ‘வாட்ஸ் அப்’ உள் ளிட்ட மின்னணு தகவல் பரிமாற் றங்களின் வளர்ச்சியால் வாழ்த்து அட்டை பரிமாற்றம் தற்போது முற்றி லும் மறையத் தொடங்கிவிட்டது.

இதுகுறித்து தேசிய விருது பெற்ற கோவை அஞ்சல் அலுவலர் ந.ஹரிஹரன் கூறியதாவது:

தமிழகத்தில் 1970-ம் ஆண்டில் தபால் அலுவலகங்கள் மூலம் 69 லட்சத்து 72 ஆயிரம் வாழ்த்து அட்டைகள் பட்டுவாடா செய்யப்பட் டன. இது 1980-ம் ஆண்டில் 78 லட்சத்து 82 ஆயிரமாகவும், 1990-ம் ஆண்டில் 85 லட்சத்து 27 ஆயிர மாகவும் பல மடங்கு அதிகரித்தன.

2010-ம் ஆண்டில் இ-மெயில் ஃபேஸ் புக் மோகத்தின் அதிகரிப்பால் வெறும் 2 லட்சத்து 60 ஆயிரமாக வாழ்த்து அட்டை பரிமாற்றம் குறைந்துவிட்டது. நடப்பாண்டு (2015) ‘வாட்ஸ் அப்’ வளர்ச்சியால் தமிழக தபால் நிலையங்களில் வெறும் சில ஆயிரங்களாக வாழ்த்து அட்டைகள் பரிமாற்றம் குறைந்துவிட்டது. 2007-ம் ஆண் டில் ரூ.5 மதிப்பீட்டில் சிறப்பு வாழ்த்து அஞ்சல்தலைகளை வெளி யிட்டது. தற்போது குடும்பமாக, குழுவாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் குறைந்துவிட்டன.

அனைவரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், செல்போன் உள்ளிட்ட நவீன தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. உணர்வுபூர்வ மான விழா கொண்டாட்டங்கள், தகவல் பரிமாற்றங்கள் குறைந்து விட்டன.

அதனால், அஞ்சல் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. கடை களில் விற்பனை செய்யப்படும் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பும் பழக்கமும் மக்களி டையே குறைந்துவிட்டன என்றார்.

கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியது நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல: அமலாக்கப் பிரிவு வாதம் ..எம்.சண்முகம்

Return to frontpage

டிபி குரூப்’ நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி ரூபாய் சென்றிருப்பது நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல என்று நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி பணபரிமாற்றம் நடந்தது தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் உட்பட 16 பேர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கப்பிரிவு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக ஆஜரான அமலாக்கப்பிரிவு சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘டிபி குரூப் நிறுவனம் வேறு நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி வழங்கியுள் ளது. இது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு கைமாறாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வர்த்தகம் எதிலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. கலைஞர் டிவி-க்கு முறையற்ற வழியில் பணத்தை கொடுக்கவே இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணபரிமாற்றம் நியாயமான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல. ஒரு விவசாய நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணம் தர வேண்டிய அவசியம் இல்லை. எதற்காக இந்த பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் இல்லை. இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த பிணை உத்தரவாதமும் காட்டப்படவில்லை. கணக்குகள் அனைத்தும் மோசடியாக உருவாக்கப்பட்டுள்ளன’ என்று வாதிட்டார்.

NEWS TODAY 14.06.2026