Saturday, January 16, 2016

காற்றில் கலந்த இசை 38: தேனிசை வெள்ளம்!


இளையராஜாவின் இசைக் குழுவில் கிட்டார் இசைக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்த கங்கை அமரன், பின்னர் இசையமைப்பாளராகவும் இயக்குநராகவும் வளர்ந்தார். அவர் இயக்கிய முதல் படம் ‘கோழி கூவுது’. கிராமம் அல்லது சிறுநகரங்களுக்குள் நடக்கும் கதைகள், எளிய கதை மாந்தர்களை வைத்துக்கொண்டு ரசிக்கத் தக்க படங்களை இயக்கினார் கங்கை அமரன்.

மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் மிக விசேஷமானது. உற்சாகம் கொப்பளிக்கும் ஆர்ப்பாட்டமான பாடல்களை அத்தனை இயல்பாகப் பாடக்கூடியவர் அவர். மற்றொரு கோணமும் உண்டு. வெளித் தோற்றத்தில் இறுக்கமானவர்களாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அன்பும் ரசனையும் கசிந்துகொண்டே இருக்கும் மனிதர்களுக்கும் பொருத்தமான குரல் அவருடையது. இப்படத்திலும் முரட்டு இளைஞராக வரும் பிரபுவுக்குப் பாடிய ‘பூவே இளைய பூவே’ பாடலில் இறுக்கத்தை உடைத்துக்கொண்டு இனிமையை ரசிக்கும் மனதை வெளிப்படுத்தியிருப்பார்.

பிரபு ஊரை விட்டு வெளியேறி ராணுவத்தில் சேர்ந்துவிடுவார். கிராமத்தில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாத தனது காதலிக்கு (சில்க்), தனது நம்பிக்கைக்குரிய சுரேஷ் மூலம் கடிதம் எழுதுவார். அக்கடித வரிகளிலிருந்தே பாடல் தொடங்கும். பின்னணியில் கிட்டார் ஒலிக்க, ‘தம்பி ராமகிருஷ்ணா(வ்) கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று அவர் சொல்வதைக் கேட்டுப்பாருங்கள். அதிகாரமும் அன்பும் மிளிரும் குரல் அது.

வயல்வெளிகள், ஓடைகள், தோப்புகள் என்று இயற்கையின் ஆசீர்வாதங்கள் நிறைந்த கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு இளையராஜாவின் பல பாடல்கள் தங்கள் வாழ்வுடன் ஒன்றிய அம்சங்களாவே இருக்கின்றன. இந்தப் பாடலின் நிரவல் இசையின் கற்பனை வளம் மனதுக்குள் உருவாக்கும் காட்சிகள் அத்தனை பசுமையானவை.

மெல்ல அழைப்பது போன்ற குரலில் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன். பெருமிதமும், ஏகாந்தமும் நிறைந்த குரலில் ‘எனக்குத் தானே…’ என்று பல்லவியை அவர் முடித்ததும், ‘லலால’என்று பெண் குரல்களின் கோரஸ் ஒலிக்கும். துள்ளலான தாளக்கட்டு, இயற்கையை விரிக்கும் வயலின் இசைக்கோவை, பறவைகளின் இருப்பை உணர்த்தும் புல்லாங்குழல், நீர்நிலைகளைக் காட்சிப்படுத்தும் ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளாலேயே இயற்கையின் ஓவியத்தை உருவாக்கியிருப்பார் இளையராஜா.

இப்படத்தில் வரும் ‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே’ எனும் குழுப் பாடலை சாமுவேல் கிரப், தீபன் சக்கரவர்த்தி, வித்யாதர் ஆகியோர் பாடியிருப்பார்கள். ஊருக்குள் சுற்றித் திரியும் காதல் ஜோடியைப் பற்றி பிரபுவிடம் அரசல் புரசலாகப் புகார் செய்யும் பாடல் இது.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல் கிருஷ்ணசந்திரன், எஸ். ஜானகி பாடிய ‘ஏதோ மோகம், மலையாளத் திரையுலகில் நடிகராகவும் பாடகராகவும் அறிமுகமானவர் கிருஷ்ணசந்திரன். ஒப்புமை இல்லாத தனித்தக் குரல் கொண்டவர். ‘ஆனந்த மாலை’ (தூரத்துப் பச்சை), ‘பூவாடைக் காற்று’ (கோபுரங்கள் சாய்வதில்லை), ‘அள்ளி வச்ச மல்லிகையே’(இனிமை இதோ இதோ), ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ (ஒரு ஓடை நதியாகிறது) போன்ற அற்புதமான பாடல்களைப் பாடியவர். ‘ஏதோ மோகம்’ பாடலின் சிறப்பு, மேற்கத்திய செவ்வியல் இசையின் கூறுகளைக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் கிராமியக் காட்சிகளை உருவாக்கும் அதன் தனித்தன்மைதான்.

மெல்ல உருக்கொண்டு திடீரென முகிழ்க்கும் எதிர்பாலின ஈர்ப்பைச் சித்தரிக்கும் பாடல். ஒற்றை வயலின், வயலின் சேர்ந்திசை, புல்லாங்குழல், பேஸ் கிட்டார் என்று இசைக் கருவிகளின் மூலம் ஐந்தரை நிமிடங்கள் கொண்ட ‘மினி’ பொற்காலத்தைப் படைத்திருப்பார் இளையராஜா. தேன் சொட்டும் ரகசியக் குரலில் ‘ஏதோ மோகம்…ஏதோ தாகம்’ என்று பாடலைத் தொடங்குவார் ஜானகி.

கூடவே ஒலிக்கும் ஹம்மிங்கையும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலில் வெவ்வேறு சுருதிகளில் பதிவுசெய்யப்பட்ட ஹம்மிங்குகளை ஒருமித்து ஒலிக்கச் செய்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் நீண்டுகொண்டே செல்லும் ஜலதரங்கத்தினூடே ஒலிக்கும் குழலிசையும், அதைத் தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோவையும் மனதை மிதக்கச் செய்யும். இரண்டாவது நிரவல் இசையில் வெள்ளத்தைத் திரட்டிக்கொண்டே முன்னேறிச் செல்லும் ஆற்று நீரின் ஓட்டத்தைப் போன்ற வயலின் இசைக்கோவையைத் தந்திருப்பார் ராஜா. நெல் வயல் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட சிம்பொனி இப்பாடல்!

இப்பாடலைப் பாடிய அனுபவம் குறித்து தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும் கிருஷ்ணசந்திரனைக் கேட்டேன். “பிரசாத் ஸ்டூடியோவின் 70 எம்.எம். தியேட்டரில் இப்பாடலை ஒலிப்பதிவு செய்தார் ராஜா சார். 24 ட்ராக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளுடன் பாடலை உருவாக்கியிருந்தார். அப்போது இருந்த பிரம்மிப்பு இன்று வரை எனக்கு இருக்கிறது” என்றார் சிலிர்ப்புடன்.

கிருஷ்ணசந்திரனின் குரலில் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் இதுதான் (ஆனால், ‘பூவாடைக் காற்று’ பாடல்தான் முதலில் வெளியானது!). தமிழில் மிகக் குறைவான பாடல்களைப் பாடியிருந்தாலும் இதுபோன்ற அபூர்வப் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் கிருஷ்ணசந்திரன்!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்! - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்கம்

Return to frontpage

திரைபாரதி

நன்றாக நினைவிருக்கிறது எனக்கு. கடந்த 2008-ல் தீபாவளிக்கு மூன்று வாரங்களே இருந்த அக்டோபர் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை அது. சென்னை புரசைவாக்கத்தில் மோட்சம் திரையரங்கம் அமைந்திருக்கும் மில்லர்ஸ் சாலையைக் கடந்து வில்லிவாக்கம் செல்வதற்காக பைக்கில் விரைந்துகொண்டிருந்தேன். காலை 11 மணிக்கு அந்தத் திரையரங்கை நெருங்கியபோது போக்குவரத்து நெருக்கடி. பேண்ட் வாத்தியம் முழங்க “புரட்சித் தலைவர் வாழ்க! பொன்மனச் செம்மல் வாழ்க! தர்மத்தின் தலைவன் வாழ்க! எங்கள் தங்கம் வாழ்க! எங்க வீட்டுப் பிள்ளை வாழ்க” என்ற கோஷங்கள் காற்றைக் கிழித்தன.

வெள்ளை பேண்டும் மஞ்சள் கட்டம்போட்ட சட்டையும் தலையில் ஆரஞ்சு நிற சன் ஷேட் தொப்பியும் அணிந்து நடுவில் நின்றுகொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரது வலப்புறம் நடிகை லதாவும் இடப்புறம் அந்தத் தாய்லாந்து நடிகையும் பிரமாண்ட ப்ளக்ஸ் பேனரில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த பேனருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். எப்படித் தங்களுக்குள் பதிந்திருக்கிறாரோ அதே வரிசையில் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அந்த ரசிகர்கள் கூட்டத்தில் நாற்பது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் சரிபாதிக்கும் மேலாக இருந்தார்கள்.

100க்கும் அதிகமான பெண்களையும் பார்க்க முடிந்தது. எம்.ஜி.ஆர். நடித்து, இயக்கி, தயாரித்த அந்தப் படம் 35 ஆண்டுகளுக்குப் பின் வெளியானபோது அங்கே திரண்டு நின்ற அவரது ரசிகர்கள் ஒரு புதுப்பட வெளியீட்டைப்போல் கொண்டாடியது ஆச்சரியத்தை அளித்தது. தீபாவளிக்குப் புதுப்படம் வெளியாகும்வரை அந்தத் திரையரங்கில் ‘உலகம் சுற்றும் வாலிப’னுக்குக் கூட்டம் குறையவில்லை. தினசரி அந்தப் பாதையில் பயணித்து வந்த நானே இதற்குச் சாட்சி.

இன்று மோட்சம் திரையரங்கம் தன் சேவையை நிறுத்திக் கொண்டுவிட்டது. ஆனால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீள்பதிவு செய்யப்பட்டு வேறொரு மால் திரையரங்கில் வெளியாகலாம். அப்போதும் இந்த ரசிகர் கூட்டத்தை அதே உற்சாகத்தோடு அங்கே காண முடியும். அதுதான் எம்.ஜி.ஆர். எனும் ஒப்பிடமுடியாத நட்சத்திரம் ஏற்படுத்திச் சென்றிருக்கும் தாக்கம்.

திராவிட இயக்கத்தின் அறுவடை

அவதார புருஷர்களைப் பற்றி புராணக் கதைகள் வழியாக அறிந்திருந்த தமிழர்களுக்கு, தர்மத்தின் காவலனாக எம்.ஜி.ஆர். திரைப்படம் வழியே வசீகரித்த வரலாறு ஒரே நாளில் நடந்த திருப்பம் அல்ல. திராவிட இயக்கத்தின் பிரச்சாரக் கருவியாகத் திரையிலும் அரசியல் மேடைகளிலும் கவனம்பெறத் தொடங்கிய ஒரு வளரும் நட்சத்திரம், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திராவிட பகுத்தறிவு இலட்சியவாதத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தாலும் அதைத் தனக்கான பாதையாக அவர் முன்வைக்கவில்லை.

மாறாக, திரைப்படங்களின் வழியாகத் தன்னை ஊருக்கு உழைக்கும் ஏழைப்பங்காளன் என்ற புனித பிம்பமாக முன்னிறுத்திக்கொண்ட துருவ நட்சத்திரமாக எழுந்து நின்றார். அந்தப் புனித பிம்பம்தான் பின்னாளில் அரசியல் களத்திலும் அவருக்குக் கைகொடுத்தது.

சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்துப் பின் கதையின் நாயகன் ஆனார். அதன் பின் சாகச நாயகனாகவும் அதற்கும் பின் நல்லவர்களைக் காக்கத் தீயவர்களை அடக்கி ஒடுக்கும் அவதார நாயகனாகவும் உயர்ந்து நின்ற எம்.ஜி.ஆர்., அரசியலிலும் பல்வேறு தடைகளைத் தாண்டித் தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் முதலமைச்சராக அவர் அமர்ந்தது தமிழக அரசியல் வரலாற்றின் தற்செயல் நிகழ்வு அல்ல.

விளிம்பு நிலை மக்களின் ரட்சகர்

‘புரட்சித் தலைவர்’, ‘மக்கள் திலகம்’ என்று ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தன்னிடம் உதவி என்று கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி வழங்கியவர் எனப் போற்றப்படுகிறார். ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான அவரது பரிவும் கவனமும் தனித்துவமானது. தன் பால்ய காலத்தில் தாயார் சத்யபாமா, அண்ணன் சக்ரபாணி ஆகியோருடன் வறுமையும் பட்டினியும் சூழ, கும்பகோணத்தில் வசித்தபோது பெற்ற வாழ்வனுபவத்திலிருந்து அவர் பெற்றுக்கொண்டது.

இந்த அனுபவம்தான் அவரது பல திரைப்படங்களில் ‘ஏழைப்பங்காளன்’ காட்சிகளாக உருமாறியது. பின்பு அவர் அரசியலுக்கு இடம்மாறியபோது சமூகநலத் திட்டங்களிலும் பிரதிபலித்தது.

கேரளப் பெற்றோருக்கு இலங்கையில் பிறந்து, சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் எம்.ஜி.ஆர். குடும்பம் குடந்தைக்குப் புலம்பெயர்ந்தது. சிறு வயதில் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து தமிழகம் முழுவதும் நாடோடியாய் அலைந்து திரிந்தார். திரைப்படங்களில் நடிக்க தாமதமாகவே வாய்ப்பு கிடைக்கிறது. நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அதைவிடத் தாமதமாகிறது.

நாயகனாக நிலைபெற்ற பிறகு அதில் திருப்தி அடைய மறுத்துப் புதிய சாகசத்தில் இறங்குகிறார். தன் வாழ்க்கையோட்டத்தின் வரைபடத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத் தான் நடித்து இயக்கிய படத்துக்கு ‘நாடோடி மன்னன்’ என்ற தலைப்பிட்டு ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்க முடிவுசெய்கிறார். அந்தப் பட வெளியீட்டுக்கு முன் “ படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று கூறியிருக்கிறார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று, திரை உலகின் முடிசூடா மன்னராக அவரை மாற்றியது. சாகச முயற்சி சாதனையாக மாறியது.

தனிப் பிறவி

எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த பலரிடத்தில் அவர் பாணியிலான கதைகளைத் தொட்டுக்கொண்டு நடிப்பதன் மூலம் மக்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு அரசியலில் இறங்கலாம் என்ற எண்ணத்தையும் முயற்சியையும் பார்க்க முடிகிறது. திரை பிம்பத்தைக் கட்டமைக்கும் முயற்சிகள் பல வெற்றியடைந்தும் இருக்கின்றன. ஆனால் யாராலுமே எம்.ஜி.ஆர். அளவுக்கு அதில் வெற்றிபெற முடியவில்லை.

சினிமாவில் பெரும்பாலான நாயகர்கள் எம்.ஜி.ஆரைப் போல தர்மத்தைக் காக்கவே போராடுகிறார்கள். ஆனால் யாராலும் ‘தர்மத்தின் தலைவ’னாக, ‘மக்கள் திலக’மாக உருப்பெற முடியவில்லை. தன் படங்கள் மூலமாகச் சமூக உளவியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆரின் தனிப் பெரும் சாதனை. அந்த வகையில் அவர் தனிப் பிறவி. மீண்டும் நிகழ முடியாத முன்னுதாரணம்.

விநாடிக்கு 24 லட்சம் இமெயில்! ... சைபர் சிம்மன்

Return to frontpage

இமெயில் பழங்காலத்து சங்கதி எனும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? எனில் ‘மேக் யூஸ் ஆஃப்' தொழில்நுட்ப செய்தித்தளம் பட்டியலிட்டிருக்கும் இமெயில் தொடர்பான புள்ளி விவரங்கள் உங்களுக்கு இரட்டிப்பு ஆச்சர்ய‌த்தை அளிக்கக் கூடும். (http://www.makeuseof.com/tag/5-staggering-email-stats-that-are-hard-to-believe/)

முதல் புள்ளிவிவரத்தைப் பார்ப்போமா? தினந்தோறும் பரிமாறிக்கொள்ளப்படும் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 20,500 கோடி மெயில்கள் ஆகும். அதாவது விநாடிக்கு 24 லட்சம் இமெயில்கள் பறந்துகொண்டிருக்கின்றன. நம்ப முடியாமல் இருக்கிறதா? 2015-ம் ஆண்டு கணக்கு இது. இப்போது இன்னும் கூட அதிகமாகி இருக்கலாம். ஆனால் இன்று, இந்த மெயில்களில் பெரும்பாலானவை (90சதவீதம்) ‘ஸ்பேம்' என்படும் குப்பை மெயில்கள் மற்றும் வைரஸ் வாகனமாக மாறிவிடும் வில்லங்க மெயில்களாகும்.

ஆனாலும் கூட தினமும் 250 கோடி பயனாளிகள் உண்மையான மெயில்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு கணக்குப் படி இமெயில் பயனாளிகளில் 91 சதவீதம் பேர் தினம் ஒரு முறையேனும் தங்கள் முகவரிப் பெட்டியைப் பார்க்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.

இமெயில் சேவைகளில் பிரபலமாக இருக்கும் ஜிமெயில் 100 கோடி தீவிர பயனாளிகளைக் கொண்டிருக்கிறது. ஆக இமெயிலின் பளபளப்பு வேண்டுமானால் குறைந்திருக்கலாம், அதன் பயன்பாடு அல்ல என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் இல்லையா?

தொடங்கியது புத்தகப் பொங்கல்! - 250 அரங்குகள் + 1,00,000 தலைப்புகள் ...ஆசை மு. முருகேஷ்

Return to frontpage

புத்தகக் காதலர்களுக்குப் புத்தகத் திருவிழாக் களைவிட உற்சாகமளிக்கும் நிகழ்வு வேறு ஏது? இதோ சென்னையில் தொடங்கியிருக்கிறது மற்றுமோர் புத்தகத் திருவிழா!

மழை வெள்ளத்தின் காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் நடக்கவிருந்த சென்னை புத்தகக் காட்சி ஏப்ரலுக்குத் தள்ளிப்போனது குறித்துக் கவலை கொண்டிருந்த புத்தகக் காதலர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி! ‘சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா’ என்ற பெயரில் ஓர் புத்தகக் காட்சி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் தொடங்கியிருக்கிறது.

சமீபத்திய சென்னைப் பெருமழை, வெள்ளத்தின் காரணமாக தங்கள் புத்தகங்களை இழந்து தவிக்கும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் எத்தனையோ பேர்! அது மட்டுமல்லாமல் இந்த இயற்கைப் பேரிடரைத் தொடர்ந்து புத்தக விற்பனை மந்தமானதால் பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் சொல்ல முடியாத அளவுக்குப் பாதிப்புக்குள்ளாகினார்கள். இதைத் தொடர்ந்து ‘தி இந்து’ முன்னெடுத்த ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ இயக்கம் தமிழகமெங்கும் பரவி, புத்தக உலகத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. அந்த உற்சாகத்தைத் தொடரும் வகையில் இப்போது தொடங்கியிருக்கிறது ‘சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா’.

250 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் காட்சியில் பதிப்பாளர்களுடன் ஊடகங்களும் பங்கேற்கி றார்கள். ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப் புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

எதுவரை நடக்கிறது?

13-01-2016 அன்று தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி, இந்த மாதத்தின் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் புத்தகக் காட்சி, வார நாட்களில் (ஜனவரி 14, 18, 19, 20, 21, 22) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் (ஜனவரி15, 16, 17, 23, 24) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சிகள்

புத்தகக் காட்சியின் விழா அரங்கில் தினமும் மாலை இலக்கியம், திரைப்படம், மனிதநேயம் தொடர்பான கருத்தாளர்களின் உரைகள், கருத்தரங் குகள், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவிருக் கின்றன. முக்கியமான எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவிருக் கிறார்கள்.

விருதுகள்

புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (14-01-2016) மூன்று பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் பொன்னீலன், பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன், கவிஞர் செல்ல கணபதி ஆகியோருக்கு இந்த விருதை வழங்கி வாழ்த்துரையாற்றியவர் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். இந்த நிகழ்ச்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பொற்கோ தலைமை தாங்கினார்.

சிறந்த புத்தகங்களுக்கான விருதுகள்

சென்ற ஆண்டில் வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கப்படுவது இந்தப் புத்தகக் காட்சியின் சிறப்பம்சம். பத்துப் பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகளைத் தேர்ந்தெடுத்தவர்கள் எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ச. தமிழ்ச்செல்வன், பத்திரிகையாளர் ப. திருமாவேலன். கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏக்நாத், எஸ். அர்ஷியா, பாக்கியம் சங்கர், பி.என்.எஸ். பாண்டியன், சா. தேவதாஸ், கல்வியாளர் ச. மாடசாமி, சதீஸ் முத்துகோபால், ப்ரியா தம்பி, பாவண்ணன் ஆகியோரின் நூல்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன.

பொங்கல் புத்தகத் திருவிழாவை மையப்படுத்தி ‘ஊர்கூடி ஓவியம் வரைதல்’ எனும் நிகழ்ச்சி 11-01-2016 அன்று நடைபெற்றது. இதனை நடிகர் சங்கத் தலைவர் நாசர் தொடங்கி வைத்தார். மூத்த பத்திரிகையாளர் ஞாநி, ஓவியர்கள் விஸ்வம், ஜேகே, மணிவண்ணன், யூமா வாஸுகி ஆகியோர் பங்கேற்று ஓவியங்கள் வரைந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு ‘வெள்ளம் தாண்டி உள்ளம் தொடுவோம்’ என்ற தலைப்பில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கான ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது.

புத்தக நிவாரணம்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசோக் நகர் அரசு நூலகத்துக்கு இந்தப் புத்தகத் திருவிழா வில் 3,000 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், இந்தப் புத்தகத் திருவிழாவில் நுழைவுக் கட்டணம் மூலமாகக் கிடைக்கும் தொகை, சென்னை மழைவெள்ள நிவாரணத் துக்காக ‘முதல்வர் நிவாரண நிதி’க்குக் கொடுக்கப்படும் என்றும் புத்தகக் காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு துணைவேந்தர் பதவிக்கு ரூ.40 கோடி வரை விலையா?- ராமதாஸ் சந்தேகம்

Return to frontpage

கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ள பல்கலைக்கழகங்க துணைவேந்தர் பதவிகளில் உடனடியாக புதிய வேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும், புதுமைகள் படைப்பதற்கும் அடிப்படைத் தேவை ஆரோக்கியமான, கல்வி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளைப் போல முடங்கிக்கிடக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் இத்தனை பல்கலைக்கழகங்கள் தலைமை இல்லாமல் தடுமாறும் அவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

இவற்றில் சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் மட்டுமே இந்த வாரத்தில் பணி ஓய்வு பெற்றனர். மீதமுள்ள 6 பல்கலைக்கழகங்களில் கோவை பாரதியார் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பதவி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 4 மாதங்களாகவும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பதவிகள் கடந்த ஆண்டு ஜூலை முதல் 6 மாதங்களாகவும் காலியாக உள்ளன.

இவற்றுக்கெல்லாம் முன்பிலிருந்தே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த 09.04.2015 முதல் 10 மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

பல்கலைக்கழகங்களின் இயக்கத்தில் மூளையை போன்றது துணைவேந்தர் பதவி ஆகும். இந்த பதவி காலியாக இருப்பதால் 8 பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களும் முடங்கிவிட்டன. துணைவேந்தர் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கொள்கை அடிப்படையிலான முடிவுகளை எடுக்க முடிய வில்லை; பட்டமளிப்பு விழாக்களை நடத்த இயலவில்லை.

புதிய ஆய்வுகளைத் தொடங்க முடியவில்லை. பல்கலைக்கழகங்களில் காலியிடங்களை நிரப்பமுடியவில்லை. மொத்தத்தில் 8 பல்கலைக்கழகங்களும் முடங்கிக்கிடக்கின்றன.

கடந்த 17.08.2013 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் 155&ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "பல்கலைக்கழக கல்வியின் உலக மையமாக தமிழகத்தை உருவாக்க பாடுபட்டுவருகிறேன்" என்று ஜெயலலிதா கூறினார்.

எட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியை பல மாதங்களாக நிரப்பாமல் வைத்திருப்பது தான் தமிழகத்தை உயர்கல்வி உலக மையமாக மாற்றும் வழியா? என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்.

துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணத்தை அறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத் தேவையில்லை. துணைவேந்தர் பதவிக்கான விலை பேரம் இன்னும் முடியாதது தான் இதற்கான காரணம் ஆகும். துணைவேந்தர் பதவி என்பது உயர்கல்வியை வளர்ப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஆனால், இப்பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை சிறிதும் கடைபிடிக்கப்படுவதில்லை. தேர்வுக்குழு அமைப்பதிலேயே முறைகேடுகள் தொடங்குகின்றன.

துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவினர் துணைவேந்தரை விட உயர்பதவியில் இருப்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால், துணைவேந்தரை விட குறைந்த நிலையில் உள்ள கல்லூரி முதல்வர்கள் தான் பல தேர்வுக்குழுக்களுக்கு அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் கடைநிலை ஆசிரியர் பணியான உதவிப் பேராசிரியர் பணிக்கு கூட கல்வித் தகுதியைத் தவிர பல்வேறு கூடுதல் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால், துணைவேந்தர் பணிக்கு கூடுதல் தகுதிகள் எதுவுமே தேவையில்லை. நேர்காணலில் கூட பங்கேற்கத் தேவையில்லை. ஆட்சியாளர்களை சந்தித்து பேசி, உரிய விலையை கொடுத்துவிட்டால் துணைவேந்தர் பதவி உறுதியாகிவிடும் என்பது தான் உண்மை.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்ய 06.04.2015 அன்று தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

ஆனால், 10 மாதங்களாகியும் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு காரணம் அப்பதவிக்கு நிலவும் போட்டியல்ல. மாறாக அப்பதவிக்கு முதல்வரும் உயர்கல்வித்துறை அமைச்சரும் யாருடைய பெயரையும் இன்னும் பரிந்துரைக்கவில்லை என்பது தான் காரணம். தேர்வுக்குழு என்பதே பொம்மைக்குழு தான். ஆட்சியாளர்கள் தான் துணைவேந்தர் பதவிக்கு விலை நிர்ணயம் செய்து, அதைக் கொடுக்கும் ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

அமைச்சரிடமிருந்து இதுபற்றிய தகவல் வந்த அடுத்த நிமிடமே அவர் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். ஒரு துணைவேந்தர் பதவிக்கு ரூ.6 கோடி முதல் ரூ.40 கோடி வரை விலை பேசப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வணிகத்தில் உயர்கல்வி அமைச்சர் சிறந்தவர் என்பதால் தான் அவரால் ஆட்சி மேலிடத்திடம் செல்வாக்குடன் திகழ முடிகிறது. ஆட்சியாளர்களின் இந்த வணிக விளையாட்டால் உருக்குலைவது உயர்கல்வியும், துணைவேந்தராக தகுதி, திறமை கொண்ட பேராசிரியர்களின் எதிர்காலமும் தான்.

தமிழகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, துணைவேந்தர் பணி நிறைவு அடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகளைத் தொடங்கி வெளிப்படையான முறையில் நியமனம் மேற்கொள்ளப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்த சோ.ராமசாமி சிறப்புச் செய்தியாளர்

Return to frontpage

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை விமர்சித்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் 46-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், "தமிழக வாக்காளர்கள், தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், ஊழல் பெருகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. அதிமுக ஆட்சியின்போது ரவுடிகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவர் என்ற மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கை சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், ஜெயலலிதா அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை போன்ற விவகாரங்களுக்கு தீர்வு கண்டுள்ளது. தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது" எனக் கூறினார்.

தேமுதிக சாதனை பாராட்டத்தக்கது:

"வரும் தேர்தலில் தேமுதிகவால் வாக்குகள் சிதற வாய்ப்பிருக்கிறது. தேமுதிக, தொடர்ந்து தனது கட்சிக்கு 8 முதல் 9 சதவீத வாக்குவங்கியை தக்கவைத்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இது குறிப்பிடத்தக்க சாதனை" என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய பாமக எம்.பி. அன்புமணி, "பாமக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு சிறப்பு பட்ஜெட் தாக்கல் செய்யும். மதுவிலக்கை அமல் படுத்துவேன்" என்றார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, "குஜராத்தில் அமைந்ததுபோல் தமிழகத்திலும் ஓர் ஆட்சி அமைய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Friday, January 15, 2016

யானைகளின் மன அழுத்தம்! By ஆர்.ஜி. ஜெகதீஷ்


First Published : 15 January 2016 01:19 AM IST
மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்துக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குடும்பச் சூழ்நிலைகள், வேலைப் பளு, கடன் பிரச்னைகள் மற்றும் உளவியல் ரீதியான குறைபாடுகள் போன்றவை அதில் முக்கிய காரணிகளாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனிதனின் மன அழுத்தம் தீர்வதற்கு மனநல மருத்துவர்கள் உதவுவார்கள், அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.
 ஆனால், பிரமாண்ட வன விலங்கான யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கு ஆலோசனை எப்படி வழங்க முடியும்? யானைகளுக்கு உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவத்தில் தீர்வு உண்டு. ஆனால், இப்போது யானைகள் கடும் மனை உளைச்சலில் இருப்பதாக சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.
 மேலும், யானைகளுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்துக்கு மனிதனே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். அதன் விளைவே யானை - மனிதனுக்கு இடையே நடைபெறும் மோதல்.
 இதனை, மோதல் என்று சொல்லுவதைவிட யானை - மனிதன் எதிர்கொள்ளல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.
 யானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
 நம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர்.
 அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை.
 முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன.
 வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.
 ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
 யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.
 அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன.
 அந்த நிமிஷத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட. இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.
 ஜீப்பின் சத்தமும், மனிதனின் கூச்சலும், கும்மாளமும் அவற்றுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறது. மசினக்குடி வனப் பகுதியில் இருக்கும் யானைகளுக்குத் தனியார் ஜீப்புகளைக் கண்டால் ஆகாது. இந்தத் தனியார் வாகன ஓட்டிகள், பயணிகளைக் குஷிப்படுத்தும் நோக்கில் கூட்டமாக இருக்கும் யானைகள் அருகே சென்று ஒலி எழுப்புவது, பின்புறமாக இடிப்பது போன்ற சீண்டல்களில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர்.
 இதை முன்பெல்லாம் சகித்துக்கொண்ட யானைகள், இப்போதெல்லாம் ஜீப்பைக் கண்டால் துரத்த ஆரம்பிக்கின்றன. இதே போல, 2013-ஆம் ஆண்டு கோலின் மானல் என்ற 67 வயது இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தனியார் ஜீப்பில் சுற்றுலாச் சென்றார்.
 அப்போது, எதிரே வந்த ஒற்றை யானையைக் கண்டவுடன் வாகனம் ஓட்டி வந்த நபர் ஓடிவிட்டார். யானையைப் புகைப்படம் எடுத்த அந்த இங்கிலாந்து பயணியை அந்த ஒற்றை யானை கொன்றது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
 மனிதர்களாகிய நாம் நம் சந்தோஷத்திற்காக யானைகளை அவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கிறோம். எழுத்தாளர் ஜெயமோகனின் "யானை டாக்டர்' என்கிற சிறுகதையில் "டாப்ஸ்லிப்' வனப்பகுதியில் பணி புரிந்த கால்நடை மருத்துவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி யானைகளுடனான அனுபவத்தை விவரித்து இருப்பார்.
 மேலும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றளவும் உள்ளது.
 யானைகள் மிகவும் அதிக நுட்பமான உணர்வுகள் உள்ள விலங்கினம். காட்டு யானைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அவை தன் கூட்டத்துடன் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தியைத் தேடி சிகிச்சைக்காக வரும் என ஜெயமோகன் தன் சிறுகதையில் குறிப்பிட்டு ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார்.
 இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, யானைகளுக்குத் தேவையான, உகந்த சூழலை ஏற்படுத்தி யானைக்கும் - மனிதனுக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளலாம், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வும் அதுவே!

 


NEWS TODAY 14.06.2026