Sunday, February 7, 2016

கண்ணா இவர்களையும் காப்பாற்று!


Dinamani


By ஜோதிர்லதா கிரிஜா

First Published : 06 February 2016 05:20 AM IST


பல்லாண்டுகளுக்கு முன்னால், கல்கி இதழில் ஒரு சிரிப்புத் துணுக்கு வந்தது. எழுதிப் படமும் வரைந்தவர் அமரர் சாமா. அரைகுறை ஆடையணிந்து தெருவில் சுற்றும் பெண்களைப் பார்த்தபடி, மகாபாரத திரெளபதி கவலையுடன் கண்ணா இவர்களையும் காப்பாற்று என்று வேண்டிக்கொள்ளுவார்.
இந்நாளில் சில பெண்கள் கால்களில் எதுவுமே அணியாதது போல் தோல் நிறத்து ஒட்டுறைகளை (லெக்கின்ஸ்) அணிந்து செல்வதைப் பார்த்தால் திரெளபதி கண்ணனைக் கூப்பிட மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இத்தகைய பெண்களைக் கண்ணனாலும் காப்பாற்ற முடியாது என்று அவருக்குத் தெரியும்.
அண்மையில், "டீன் ஏஜ்' பெண்களுக்கான பனியன்கள் மிகவும் அருவருப்பான வாசகங்களைத் தாங்கி வருகின்றனவே, பெண்ணுரிமை அமைப்புகள் இவற்றைக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்? எனும் வாசகர் ஒருவரின் கேள்விக்கு, அசிங்கத்தைத் தாங்கிக்கொள்ளுவது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. தவிர, இதையெல்லாம் தடுக்க முயல்வது பெண்ணியத்துக்கு எதிரானது எனும் துக்ளக் ஆசிரியர் சோவின் பதிலில் ஒலிப்பது நையாண்டி மட்டுமன்று; கசப்பும் வேதனையும் கூட அதில் ஒலிக்கின்றன.
பெண்ணுரிமைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பேசுவதையும், எழுதுவதையும் கவனிக்கும்போது அப்படித்தான் என்னைப்போன்ற பெண்ணுரிமைவாதி
களுக்கும் தோன்றுகிறது.
இதுபோன்ற வக்கிரமான வாசகங்கள் உள்ள பனியன்களைத் தயாரிப்பவர்களும் கண்டனத்துக்கு (ஏன் தண்டனைக்கும்) உரியவர்களே. முக்கால் நிர்வாணப் படங்களுடன் ஏடுகளை வெளியிடும் பத்திரிகைக்காரர்களும் கூடத்தான்.
இருக்க வேண்டிய அடிப்படைக் கூச்சநாச்சங்களைக் கூடத் துறந்து விட்டுச் சில பெண்கள் இப்படி அலைந்து கொண்டிருப்பதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் பல தரத்தினராவர். இவர்களில் இப் பெண்களின் பெற்றோரும் அடங்குவர்.
நம் பெண்களில் சிலர் ஏனிப்படித் தரந்தாழ்ந்து போயினர் என்பதற்கான பல காரணங்களிடையே கூட்டுக் குடும்பங்கள் குலையத் தொடங்கி உள்ளதால் கவனிக்கவோ, கண்டிக்கவோ, வழிகாட்டவோ வீட்டில் பெரியவர்கள் அற்றுப் போனதும் ஒரு காரணமாகும்.
கண்ணியமாக உடையணியும் பெண்களையும், சின்னஞ்சிறு அறியாச் சிறுமிகளையும் கிழவிகளையும்கூடச் சில ஆண்கள் விட்டு வைப்பதில்லை என்கிற கசப்பான உண்மையையும் இங்கே சொல்லத்தான் வேண்டும்.
எனவே, அவர்களின் தவறான நடத்தைக்குப் பெண்களின் உடையைக் காரணம் காட்ட முடியாது என்கிற வாதத்தைச் சில பெண்ணியக்காரர்கள் முன்வைப்பதை புறந்தள்ளவும் முடியாது. ஆனால், இது விவாதத்துக்கு மட்டுமே சரியாக இருக்கலாமே தவிர, இதில் விவேகம் துளியும் இல்லை.
கண்ணிய உடையணிபவர்களே சீண்டப்படும் போது, வெளிப்பாடாக உடையணிபவர்கள் இன்னும் அதிக ஆபத்தைத் தாங்களாகவே தேடிக் கொள்ளுகிறார்கள் என்கிற வாதத்தில் பெண்ணியக்கவாதிகள் என்ன தவற்றைக் காண்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.
சில நாள்களுக்கு முன்னால், அனைத்திந்திய மாதர் இயக்கத்தோடு தொடர்பு உடைய ஒரு தலைவி, Youlook sexy (நீ செக்ஸியாகத் தோன்றுகிறாய்) என்று ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் கூறினால் அதை ஒரு compliment (பாராட்டு) ஆக எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது பெண்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது என்று திருவாய் மலர்ந்தார். இதைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
செக்ஸி என்பதற்குக் கண்ணியமான பொருளும் உள்ளதோ என்றறியச் சில அகராதிகளைப் புரட்டினால், எல்லாவற்றிலுமே, பாலுணர்வைத் தூண்டும்படியான என்கிற பொருளே தரப்பட்டிருந்தது. இத்தகையப் பாராட்டுக்கு நன்றி கூறி ஒரு பெண் புன்னகை செய்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: "தன் மனைவியைத் தவிர வேறு பெண்மணி ஒவ்வொருத்தியும் ஓர் ஆணுக்கு அன்னையாகவே தோன்ற வேண்டும். பால் வேற்றுமையைப் புறக்கணித்துவிட்டு, ஆண்களுடன் பழகத் தெரிந்து கொள்ளாத அமெரிக்கப் பெண்கள் உண்மையான முன்னேற்றத்தை அடையப் போவதில்லை... அமெரிக்க ஆண்கள் பெண்களை வணங்கித் தலை தாழ்த்தி, அவர்கள் முதலில் அமர ஆசனம் அளிக்கிறார்கள்.
அதே மூச்சில், "ஓ உன் விழிகள் எவ்வளவு அழகானவை' என்று ஒரு பெண்ணின் அழகைப் புகழ்கிறார்கள். இந்த அளவுக்கு ஆடவர்க்கு எப்படித் துணிச்சல் வந்தது? பெண்களாகிய நீங்கள் இதை அனுமதிக்கலாமா? இத்தகையச் சொற்கள் ஆண் -பெண்களை இழிவு நோக்கியே இட்டுச் செல்லும்'.
}விவேகானந்தரின் இந்த அறிவுரையை, மேற்சொன்ன பெண்ணுரிமை இயக்கத் தலைவி பிற்போக்குத்தனம் என்பாரோ?
ஆண்களைத் திருத்த வேண்டும்தான். அதற்கான முயற்சிகளும் தேவையே. ஆனால், அது மெத்தக் கடினம். எனினும், நல்ல ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள்.
அவர்களின் கண்ணியத்தையும் நாசமாக்கும் இழி செயலை, தங்களின் தவறான நடையுடைபாவனைகள் வாயிலாக பெண்கள் செய்யக் கூடாது. சம உரிமை என்பதன் பெயரால் பெண் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
ஒரு பெண் எதிர்ப்பட்டால், விலகி வழி விட ஓர் ஆணுக்குத் தோன்றும்படி அவள் உடையணிந்திருக்க வேண்டுமேயல்லாது, விரசமான சொற்களை அவளை நோக்கிச் சொல்லும் வக்கிரத்தை, அவளது தோற்றம் விளைவிக்கக் கூடாது.
சில நாள்களுக்கு முன், ஒரு பெண்ணுரிமைவாதி "இருட்டில் உலாவுவது ஆண்களுக்கு மட்டுமே உள்ள உரிமையா?' எனும் கேள்வியை எழுப்பி அந்த உரிமை பெண்களுக்கும் உண்டு என்று வாதிட்டார். சில வாதங்கள் கேட்பதற்கு மட்டுமே சரியானதாக இருக்கும். நடைமுறை என்கிற ஒன்றையும் நினைத்துப் பார்க்கும் அறிவு நமக்கு வேண்டும்.
ஆண்கள் அனைவரும் திருந்திய பின் (அதாவது அத்தைக்கு மீசை முளைத்து அவள் சித்தப்பா ஆனதன் பிறகு), இது போன்ற அசட்டுத்தனங்களைப் பெண்கள் செய்யட்டும்.
மேலும், இது போன்ற உடைகள் ஆரோக்கியத்துக்கு ஊறு செய்பவை. இவற்றைத் தயாரிப்பதையும் அரசு தடை செய்ய வேண்டும்.

கொடிதினும் கொடிது - முதுமையில் தனிமை

Dinamani


By இரா. கதிரவன்

First Published : 06 February 2016 05:19 AM IST


யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் - எனத் துவங்கும் பாடல் ஒன்று புறநானூற்றில் உண்டு.

பண்பாலும் அறிவாலும் நிறைந்த மனைவி மக்கள், கற்றறிந்த சான்றோர் வாழும் ஊர், அறம் வழுவா நல்லாட்சி தரும் அரசு - தீங்கு செய்யா அரசன் ஆகியோர் அமைந்தமையால், தமக்கு முதுமை எய்தியும், நரை விழவில்லை என, ஒரு புலவர் எழுதிய பாடல். இது அந்தக் கால நிலை...
இன்றைய காலகட்டத்தில், முதியோர் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க எத்தனிப்போம். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில்,மருத்துவ வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் சென்றடைந்திருக்கின்றன. இது தவிரவும், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் எல்லோருக்கும் உணவு என்ற உணவுப் பாதுகாப்பினை பெருமளவுக்கு உறுதி செய்கின்றது
.
இந்தச் சூழலில் மக்களின் ஆயுள்காலம் அதிகரித்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில், மக்களின் சராசரி ஆயுள்காலம் 43 ஆண்டுகளாக இருந்தது. இப்போது, மேற்சொன்ன காரணங்களால்,சராசரி ஆயுள்காலம் 62-ஐ எட்டியிருக்கிறது.

இன்றைய தினம், பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண் - பெண் இரு பாலரும் வேலைக்குச் செல்லுதல் - குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பது - கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பது, நகரமயமாதல் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடும்பங்கள் இடம் பெயருதல் மற்றும் முக்கியமாக உலகமயமாதல் காரணமாக வேலை செய்யும் ஆண் - பெண் இரு பாலரும் புலம் பெயருதல் போன்றவை, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த மாற்றங்கள், வயோதிகத்தை அடைந்தவர்கள் பால் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காண முற்படுவோம்.

முதியோர்களை மூன்று முக்கிய பிரிவினர்களாக பிரிக்கலாம்.
அவர்களது பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிப்பவர்கள்.
கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிப்பவர்கள்.
ஆணோ அல்லது பெண்ணோ தனியாக வசிப்பவர்கள்.
மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கெடுப்புப்படி, இந்திய மக்கள்தொகையில், 1960-ஆம் ஆண்டு மக்கள்தொகையில் ஐந்து சதவீத மக்கள் 60 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள். 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகையில், சுமார் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள்.
இந்த வயோதிகர்களில், சுமார் 20 சதவீதம் பேர் கணவன் - மனைவி என்ற இருவர் மட்டும், வேறு துணை ஏதுமின்றி வாழ்கின்றனர். மேலும், ஐந்து சதவீதம் பேர் எந்தத் துணையும் இன்றி தனித்து வாழ்கின்றனர்.
ஆக, தற்போதைக்கு சுமார் 10 கோடிக்கும் மேல் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களில் கணவன் - மனைவி மட்டுமோ அல்லது துணையின்றியோ வாழ்வோரின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியைத் தாண்டும். வயோதிக தம்பதியினர், தனித்து வாழும் முதியோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர் என எவரும் இல்லாதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள் என்ற பிரிவினராக இருக்கின்றனர்.

சில பொதுவான விஷயங்கள்: ஒரு குறிப்பிட்ட வயதினைத் தாண்டி வசிக்கின்ற எல்லோரையும் முதுமை பீடிக்கின்றது. முதுமையில் கணிசமானவர்கள் எதிர்கொள்ளும் சில பொதுவான பிரச்னைகள்: மற்றவர்களால் உதாசீனப்படுதல், பொருளாதார ரீதியில் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, தளர்ச்சியுறும் உடல்நலம், குடும்பத்தினரிடமிருந்து தனிமைப் படுதல், பிறரோடு ஒன்ற முடியாத நிலை, பிறர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகுதல், வாழ்க்கையில் பிடிப்பின்மை அல்லது அலுப்பான சூழல்.

முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. எனவே, முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொள்ளுதல் முக்கியம். தவிரவும், முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இரு முக்கியப் பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதல், அது தொடர்பான பிரச்னைகள்.

இதன் காரணமாக, இவர்கள் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் வீட்டில் சிறைவாசம்போல் முடங்கிக் கிடத்தல், வீட்டில் சிறு சிறு வேலை செய்ய இயலாமை, மளிகை, கறிகாய், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு அற்றுப் போகுதல், எழுதப் படிக்க இயலாமை உள்ளிட்ட பிரச்னைகள். இந்தப் பிரச்னைகள் அனைத்தும் உடல் சார்ந்தவை. இவர்களைச் சுற்றி இருப்பவர்கள், அக்கறையோடு சிறு சிறு உதவிகள் செய்தால்கூட, ஓரளவு இப்பிரச்னைகளை முதியோரால் சமாளிக்க இயலும்.

அடுத்தது, மனம் சார்ந்த பிரச்னைகள்: பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கபடுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுதுபோக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை போன்றவை ஏற்படுத்தும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும்.
இவர்களது மிக முக்கிய தேவை என்பது, அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவைதான். ஆனால், முதியோர் அனுபவிக்கும் பிரச்னைகளில் மிகக் கொடுமையானது,அவர்கள் அனுபவிக்கும் தனிமைதான்.

உதாரணத்துக்கு, ஒரு பெரிய நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர், தனிமையில் பேச்சு துணைக்கூட இன்றி இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது இருத்தல், தனது சுக, துக்கங்களை மனம் விட்டு பேச முடியாது இருத்தல் போன்ற விஷயங்கள் அவர்களை கொடுமைப்படுத்துகின்றன.

வேலைக்கார ஆள் அல்லது வீட்டுக்கு வரும் விற்பனை பிரதிநிதி ஆகியோரோடு மட்டுமே பேசக்கூடிய அவல நிலையில் இருக்கும் முதியவர்கள், இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளம். வாரம் ஒரு நாளோ அல்லது மாதம் ஒரு நாளோ, அயல் நாட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பு ஒன்றுதான், அவர்களுக்கு எங்கோ ஒரு மகன் அல்லது உறவினர் இருக்கிறார் என்பதற்கான ஒரே அடையாளம்.
தவிரவும், இவர்களின் இந்தப் பிரச்னைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாதபோது, அவற்றுக்கு தீர்வு என எதுவும் கண்ணில் தெரிவதுமில்லை. நகரங்களோடு ஒப்பிடுகையில் கிராமங்களில் நெஞ்சில் கொஞ்சம் ஈரம் ஒட்டிக் கொட்டிருப்பது என்னவோ உண்மை.

வயோதிகர்களை அவர்கள் தனிமையில் இருந்தால்,அவர்களை வீட்டில் எட்டிப் பார்ப்பது, பேச்சுக் கொடுப்பது, சிறு சிறு உதவிகள் செய்வது என்ற பழக்கம் நம் கலாசாரா ரீதியாக இன்னும் கிராமங்களில் மறையாமல் இருப்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டுக்காரரைத் தெரியாது என்று கூறுவது போலி கெளரவம்.
முதியோரின் இத்தகைய பிரச்னைகளை அரசு அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது. அதனால் சில சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. முதியோருக்கு உதவ முற்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் மற்றும் சலுகைகள் தருவது, முதியோர் பிரச்னைகள் - தீர்வுகள் குறித்த தகவல் திரட்டுதல் மற்று ஆய்வு ஆகியனவற்றுக்கு உதவி, ரயில் பிரயாணம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் சலுகைகள் என்ற விஷயங்களில் நடவடிக்கை எடுத்திருக்கின்றன.
முதியோர் படும் இன்னல் குறித்து சராசரி மனிதர்கள் என்ன செய்ய முடியும்? நாளை நமக்கு முதுமை வரும்போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதேபோல இன்று நம் முன் நடமாடும் முதியோரை நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை அனைவரும் மனதில் பதித்துக் கொள்ளும்போது, நம்மைச் சுற்றியுள்ள முதியோர், நமக்கு அன்னியர்களாகத் தெரிய மாட்டார்கள்.

நாம் எங்கோ சந்திக்கும் ஒரு முதியவர் அல்லது மூதாட்டியின் உடல் நலம் விசாரிப்பதோ அல்லது பேச்சுக் கொடுப்பதோகூட அவர்களுக்குப் பெரும் ஆறுதல் தரும். அதுகூட முடியவில்லை என்றால், ஒரு சிறு புன்னைகைகூட அவர்களுக்கு நிம்மதி தரும்.

பெரும்பாலான முதியோர்கள் ஏங்குவது நிச்சயமாக பணத்துக்காக அல்ல. அவர்களின் தேவை கொஞ்சம் அன்பு, கரிசனம், நல்லதாக நான்கு வார்த்தைகள், முடிந்தால் கொஞ்சம் உதவி அவ்வளவுதான். இதனை செய்யும் திறன் நம் எல்லோரிடமும் இருக்கிறது.

முதுமை ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

Saturday, February 6, 2016

உற்சாகம் களை கட்டலாம்! உயிரை பறிக்கலாமா?- தலையங்கம்

Logo

சென்னை, பிப்.5-


ஒரு தனி மனிதனின் உற்சாக கொண்டாட்டத்தில் ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த மகிழ்ச்சியும் பறிபோய் இருக்கிறது. அந்த குடும்பம் வாழ்க்கையே கேள்விக்குறியாகி நடுத்தெருவில் வந்து நிற்கிறது.

ஈரோடு தொழில் அதிபர் முகமது சபீக் போதையில் போட்ட ஆட்டம் தான் இதற்கு காரணம்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முகம்மது சபீக் கண்காட்சி அரங்கம் அமைத்து இருக்கிறார். அதற்காக நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த முகமது சபீக் இரவு முழுவதும் குடித்து கும்மாளமிட்டுள்ளார்.

போதை இறங்காத நிலையில் சொகுசு காரை கிளப்பி கொண்டு நந்தம்பாக்கம் புறப்பட்டார்.

ஆள் அரவம் அடங்கிய அதிகாலை நேரத்தில் அண்ணா சாலையில் ஒரு வழிப்பாதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை விரட்டி இருக்கிறார். போதையில் மிதந்தவருக்கு கார் பறந்தது தெரியவில்லை.

எதிரே பணி முடித்து டூ விலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வாலிபர் கெவின்ராஜ் என்பவர் மீது கார் மோத – ஆங்கில சினிமா காட்சிகளை போல் டூவிலர் உடைந்து நொறுங்கி பறந்தது.

கெவின்ராஜ் உடலும் கூடவே அந்த ரத்தில் பறந்து ரோட்டோர கம்பியில் உயிரற்ற உடலாய் விழுந்து தொங்கியது. அடுத்ததாக ஒரு லாரி மீது மோதிய வேகத்தில் அந்த லாரியின் சக்கரங்கள் கழண்டு லாரியும் கவிழ்ந்தது.

ஆனால் விலை உயர்ந்த காரில் இருந்த பாதுகாப்பு கவசத்தால் தொழில் அதிபரும், அவரது நண்பரும் தப்பித்துக் கொண்டார்கள்.

விலை மதிக்க முடியாத ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் பறிபோய் விட்டது.

வழக்கு – விசாரணை போன்ற சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவாகி இருக்கிறது.

ஒன்றிரண்டு ஆண்டுகள் வரை வழக்கு விசாரணை நீடிக்கலாம். இறுதியில் சில ஆண்டு தண்டனையோ அல்லது சில ஆயிரம் அபராதமோ விதிக்கப்படலாம். ஒரு தொழில் அதிபருக்கு இதெல்லாம் தூசு தட்டி விட்ட கதைதான். ஆனால் கெவின்ராஜை இழந்த குடும்பத்துக்கு...

ஒரே மகனை பறிகொடுத்து விட்டு அந்த குடும்பம் நடுரோட்டில் நிற்கிறது. சாகும் காலம் வரை நமக்கு சோறுபோட்டு காப்பான் என்று நினைத்த மகனை சாகடித்து விட்டனர். அதோடு அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி – எதிர்கால வாழ்க்கை எல்லாவற்றையுமே சாகடித்து விட்டனர்.

தொழிலதிபர் வழக்கில் இருந்து மீண்டு விடுவார். ஆனால் அந்த குடும்பம் துயரத்தில் இருந்து மீளுமா?

இதே போல் போதையில் வாகனம் ஓட்டுவதும், விபத்துகள் நிகழ்வதும் அதிகரித்து வருகிறது. அவர்கள் உயிரை இழப்பது மட்டுமல்ல. அடுத்தவர் உயிரையும் பறித்து விடுகிறார்கள். அடுத்தவர் உயிரை பறிக்க நமக்கென்ன உரிமை இருக்கிறது?

‘குடித்து விட்டு வாகனம் ஓட்டாதே’ என்று வீதி வீதியாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன பயன்?

பாமரன் குடித்து விட்டு தள்ளாடினால் அறிவில்லாமல் குடித்து சீரழிகிறான் என்கிறோம். படித்தவர்களும், பணக்காரர்களும் அறிவிருந்தும் இப்படி அறிவீனமாக நடந்து கொள்வதை என்னவென்பது?

மது பழக்கம் என்பது எல்லா தரப்பு மக்களிடையேயும் பரவி இருக்கிறது. குடிப்பது தப்பு என்று சொல்லவும் முடியாது. சொன்னால் ஏற்கவும் மாட்டார்கள். குடித்தாலும் நிதானம் இழந்து விடாதீர்கள் என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது.

வசதி இல்லாதவன் குடித்து விட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கிறான். வசதி படைத்தவன் குடித்துவிட்டு கண்மூடித்தனமாக அடுத்தவன் உயிருக்கு உலை வைக்கிறான். குடிப்பது, கும்மாளம் போடுவது அவரவர் உரிமை. அதை யாரும் தடுக்கப்போவதில்லை. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவது, வெளியே நடமாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அது அவர்களுக்கும் நல்லது. அவர்களால் அடுத்தவர்களுக்கும் தொல்லை நேராது.

வெளிஉலக தொடர்பு இன்றி இந்தோனேசிய தீவுகளில் வாழும் அபூர்வ ஆதிவாசிகள்

Logo

ஜகர்த்தா, பிப். 6–

வெளி உலக தொடர்பு இன்றி இந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள் வாழ்கின்றனர்.

இந்தோனேசியா பல தீவுகளை உள்ளடக்கிய நாடு. அங்குள்ள தீவுகளில் பலவித கலாசாரங்களுடன் கூடிய ஆதிவாசிகள், பூர்வக்குடி மக்கள் வாழ்கின்றனர்.

அவர்களில் சுமத்ரா தீவில் மென்டாவை என அழைக்கப்படும் அபூர்வ ஆதிவாசிகள் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொள்கின்றனர். மேலும் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அதில் விசேஷம் என்னவென்றால் நாடோடிகளாக வாழும் இவர்கள் தாங்கள் குடியிருக்கும் இடங்களில் வேட்டையாடும் விலங்குகளின் மண்டை ஓடு மூலம் வீடு அமைத்து வாழ்கின்றனர்.

இவர்கள் வெளிஉலக தொடர்பின்றி ஒதுங்கியே வாழ்க்கை நடத்துகின்றனர். செடி, கொடி உள்ளிட்ட அனைத்துக்கும் ஆத்மா இருப்பதாக நம்புகின்றனர். மெண்டாவை இன மக்கள் சுமார் 64 ஆயிரம் பேர் உள்ளனர்.

இவர்கள் குறித்து மலேசியாவில் கெலடன் பகுதியை சேர்ந்த முகமது சாலேபின் டோலாஹ் என்பவர் வீடியோவை வெளியிட்டார். புகைப்பட துறையில் ஆர்வமுடைய இவர் இந்தோனேசியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச் சூழலை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

Wednesday, February 3, 2016

சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் -லட்சுமணர் மீது வழக்கு! தள்ளுபடி செய்த பீகார் கோர்ட்

பாட்னா: கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பிய அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பீகாரில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை சீதாமாரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளது

 நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் விசாரணைக்கு வருவதுண்டு. ஆனால் ராமாயணம், மகாபாரதக் கதையை முன்வைத்து வழக்குப் போடுவது அதிகரித்து வருகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங் என்பவர், சீத்தாமரி மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்குதான் தற்போது வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. இதிகாச காவியமான ராமாயணத்தில் ராமரின் மனைவியான சீதா முன்னர் ஜனகபுரியை ஆட்சி செய்த ஜனக மகாராஜாவின் மகளாக மிதிலை நகரில் பிறந்ததாக காணப்படுகிறது. அந்த பழங்கால மிதிலை நகர் தற்போதையை பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீதையின் நினைவாகவே இந்த மாவட்டத்துக்கு பிற்காலத்தில் இந்த பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சீதையின் கணவர் ராமர். ராமரின் தம்பி லட்சுமணர். சிற்றன்னை பேச்சை மீறாமல் 14 ஆண்டுகாலம் ராமர், தன் மனைவி சீதையுடன் வனவாசம் போகிறார். வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராமர், அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், இராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டது தொடர்பாக அவதூறு பேசியதை அறிந்த இராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கர்ப்பிணிப் பெண். வனத்தில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அங்கு சீதைக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். இதை கண்டித்துதான் சீதையை காட்டுக்கு ராமரும், அவர் தம்பி லட்சுமணரும் கொண்டு போனது தவறென்றும், அண்ணன் தம்பியர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் சந்தன்குமார் வழக்குப் போட்டுள்ளார். சீத்தாமரி மாவட்ட தலைமை நீதிபதி ராஷ்பிஹாரி முன்பு, சந்தன்குமார் சிங்கின் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஷ்பிஹாரி, " வாதி சந்தன்குமார் சிங் தாக்கல் செய்துள்ள மனுவானது , உண்மைக்கு மாறான பல சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

 இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சந்தன்குமார்சிங்கின் உறவினர்கள் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, வழக்கைத் தொடுத்த சந்தன்குமார்சிங், இந்த வழக்கை மேல்முறையீடுக்கு கொண்டு போகும் மனநிலையில்தான் அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், இந்த வழக்கை கீழ் கோர்ட்டுக்கு கொண்டு போனதற்கே, சந்தன்குமார்சிங்கிற்கு எதிர்ப்புகள் கிளம்பி விட்டது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மிரட்டலுக்கு உள்ளானார். கோர்ட்டுக்கே பாதுகாப்புடன்தான் போய் வரவேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போது வீட்டுக்கும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் எஸ்.பி.யிடம் சந்தன்குமார் மனு கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/court-finds-case-against-lord-ram-laxman-beyond-logic-sq-245920.html

ஆகாய ஆக்கிரமிப்புகள்!


Dinamani


By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 03 February 2016 01:43 AM IST


ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா } அலங்காரத் தாரகையோடு ஆனந்தம் காணுதே...'

-என்று கண்டசாலா அன்று பாடினார். இன்று அந்த இனிமையான பாடல் நம் மனதில் நிற்கிறது. ஆனால், நாளுக்கு நாள் ஆகாய வீதியும் குப்பையாகி வருகிறது. அழகான வெண்ணிலாவைச் சுற்றி நிற்பது மேகமா? மாசுகளா?

புவியில் கட்டப்பட்ட தொழிற்சாலைகளினாலும் கார், லாரி போன்ற வாகனங்களாலும் எழுந்த கார்பன் புகைதான் கார்மேகங்களாகத் தெரிகின்றன. கார்பன் புகைகள் கார்மேக நீரை உறிஞ்சி விடுவதால் பயந்து ஓடும் கார்மேகங்கள் ஒரே இடத்தில் கூடி ஒரே ஒரு ஊரில் மழை பெய்துவிட்டு மறைவதால் மற்ற ஊர்கள் வறட்சியில் வாடுகின்றன.

பஞ்ச பூத சக்திகளில் நீருக்கு விலை உண்டு. காற்றுக்கு (எஅந) விலை உண்டு. மண்ணுக்கு நிறையவே விலை உண்டு. தீக்கும் (எரிபொருள்) விலை உள்ளது. ஐந்தாவது பூதமாகிய வெளிக்கு விலை இல்லை.

"வெளி' என்பது ஆகாயம். 100 அடி உயரமுள்ள மரமானாலும் 1 அடி உயரமுள்ள செடியானாலும் மண்ணில் வேர் பதித்தாலும் அவற்றின் தலையும் உடலும் வெளியில்தான் உள்ளன. வீடுகளும், கட்டடங்களும், ஆலைகளும், சாலைகளும், அணைகளும், கால்வாய்களும் வெளியில் உள்ளன. மனிதன் மண்ணில் கால் பதித்து நின்றாலும் நடந்தாலும் அது வெளிதானே. நாம் வெளியை நம்பி வாழும் உண்மையை நமக்குப் புரிய வைக்கவே திருச்சிற்றம்பலத்தில் கூத்தபிரானாகிய நடராஜன் கனகசபையில் ஆனந்த நடனம் ஆடுகிறான்.

"வெளி' உருவமற்று இருப்பதால் அதை "சிதம்பர ரகசியம்' என்று ஆன்றோர் மொழிந்தனர். பஞ்சபூத சக்திகளை தெய்வங்களாகப் போற்றி வளர்த்த காரணமே இயற்கையின் பாதுகாப்புக்குத்தான். மெத்தப் படித்தவர்களுக்கு இந்தப் பொது அறிவு புரியவில்லை.

மண்ணைக் காக்க காஞ்சியில் ஏகாம்பரநாதருக்கு ஒரு கோயில். காற்றைக் காக்க காளஹஸ்தியில் காளத்திநாதருக்கு ஒரு கோயில். நீரைக் காக்க திருவானைக்காவலில் ஜலகண்டேஸ்வரருக்கு ஒரு கோயில். தீயைக் காக்க திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு ஒரு கோயில். விண்வெளி காக்க சிதம்பரத்தில் கூத்தபிரானுக்கு ஒரு கோயில்.

நாமோ மண்ணை மாசாக்கினோம். காற்றை மாசாக்கினோம். நீரை மாசாக்கினோம். வெளியை அதிகபட்சம் மாசாக்கி வருகிறோம். ÷தீ மட்டும் எஞ்சியுள்ளது. தீ மட்டும் மிஞ்சினால் உலகே சாம்பலாகும். புவிவெப்பமாகும் பொருள் தீ தானே. இதைக் கருத்தில் கொண்டுதான் இஞட - 21 என்று சுருக்கமாகக் கூறப்பட்ட 21-ஆவது புவி உச்சி மகாநாடு பாரீஸில் கூடியது.

புவிவெப்பமாதலின் விளைவால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பேரிடர் பேய் மழையாகக் கொட்டித் தீர்த்துக் கழிவுநீர் ஓடிய கூவமும் அடையாறும் கரை புரண்டோடி சுத்தமானாலும், நிகழ்ந்த சோகம் மறக்க முடியாதது. வெள்ளம் சூழ்ந்து தத்தளித்த சென்னை, உலகச் செய்தியாகி 21-ஆவது பாரீஸ் மகாநாட்டைத் தலைமையேற்று நடத்திய பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் லாரன்ஸ் ஃபேபியஸ் புவிவெப்பமானதால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுக்குச் சென்னை வெள்ளத்தை உதாரணம் காட்டி அறிவித்தது நினைவிருக்கலாம்.

பூமி வெப்பமாவதால் தட்பவெப்பம் தடுமாறுவதைத் தவிர்க்கும் முயற்சியில்தான் இஞட - 21 - புவி உச்சிமகாநாடு 29.11.2015-இல் தொடங்கி 12.12.2015 வரை 14 நாள்கள் தொடர்ந்து பாரீஸில் நிகழ்ந்தது. இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 30.11.2015 அன்று உரையாற்றினார்கள்.

ஒவ்வொரு நாடும் வளர்ச்சியைக் காரணம் காட்டிப் புகை விட்டுப் புகை விட்டு ஆகாயத்தை ஆக்கிரமித்தால், 2050-ஐ நாம் நெருங்கும்போது எரிமலை, பூகம்பம், அளவு மீறிய வறட்சி, வெள்ளிப் பனிமலை உருகுதல், ஊழிக்காற்று, ஊழிவெள்ளம், கடல் மட்டம் உயர்தல், சுனாமி போன்ற பேரிடர்கள் மிக அதிகமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலகத் தலைவர்கள் இதைக் கருத்தில் கொண்டு புவிவெப்பமாகும் இன்றைய நிலை 2 டிகிரி சென்டிகிரேடு என்பதை 1.5 டிகிரி சென்டிகிரேடு நிலைக்குக் குறைக்க வேண்டுமென்பதில் ஏகமனது முடிவை எடுத்துள்ளனர். இதன் காரணமாக பாரீஸ் புவி மகாநாட்டை "வரலாற்றுச் சிறப்புடையது' என்று ஒவ்வொரு தலைவரும் கூறியதை வரவேற்போம். அதேசமயம் இது நிகழக் கூடியதா?

வடக்கு நாடுகளும் வளரும் நாடுகளும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஆகாய ஆக்கிரமிப்புகளை நிறுத்தப் போவதாகத் தோன்றவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடு நிறைய உண்டு. ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லாமல் உணர்ச்சி நிரம்பிய பேச்சுக்களால் ஆகப் போவது என்ன? புவிவெப்பமாவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் தன்னை விட்டால் கிடையாது என்று மார் தட்டும் அமெரிக்கா எந்த அளவில் சாதித்தது?

"நாங்கள் இதுநாள் வரை வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து மரபுசாரா எரிசக்திப் பயனை உகந்த அளவுக்கு வளர்த்தோம். இனி வருங்காலத்தில் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள்தாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஆகாய ஆக்கிரமிப்பைக் குறைக்க வேண்டும்...' என்று ஒபாமா கூறுகிறார். பார்க்கப் போனால் அமெரிக்கா அப்படி எதுவும் சாதித்து விடவில்லை.

2030-ஐ நெருங்கும்போது அமெரிக்காவால் வெளியிடப்படும் கார்பன் புகை அளவு 155 கோடி டன்களாம். இன்றைய நிலவரப்படி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கார்பன் புகை அளவில் 155 கோடி டன்கள் என்பது 75 சதவீதம். ஆகாய ஆக்கிரமிப்பில் முக்கால் பங்கை ஒரே நாடு முழுங்கினால் மற்ற நாடுகள் எங்கே செல்லும்?

2030-இல் அமெரிக்காவின் நிலக்கரி உற்பத்தி 60 கோடி டன்கள் ஆகுமாம். இன்றைய இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியின் அளவும் இதுவே. 2030-இல் அமெரிக்காவில் 60 சதவீத மின்சார உற்பத்தி நிலக்கரி அனல் மின் நிலையங்களிலிருந்து பெறப்படும். 3 சதவீதம் மட்டுமே சூரிய எரிசக்தி.

பாரீஸ் மகாநாட்டில் அமெரிக்கா பேசியதெல்லாம் வாய்ச்சொல் வீச்சுக்களே. 2035-க்குள் உலக நாடுகளின் நிலக்கரிப் பயனை - அதாவது ஊர்ள்ள்ண்ப் ஊன்ங்ப் பயன்பாட்டை பூஜ்ஜியமாக்கினால்தான் புவிவெப்பமாகும் அளவை 1.5 டிகிரி சென்டிகிரேடு என்ற இலக்கை சாதிக்க முடியும். இவ்வாறே, பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மாற்றாக எத்தனால் - உண்ணாத் தாவர எண்ணெய்ப் பயனீடும் உயர வேண்டும்.

இந்தியாவின் சார்பில் பேசிய பிரதமர் மோடியின் உரையில் நல்ல பொருள் உண்டு. மரபுசாரா எரிசக்திப் பயனில் இந்திய எழுச்சி சிறப்புமிக்கது என்றும் 2022-இல் இந்திய மரபுசாரா எரிபொருள் உற்பத்தி 175 ஜிகா வாட் (எ.ர.) அளவில் உயரும் என்றும் இதில் 50 சதவீதம் சூரியசக்தி என்றும் குறிப்பிட்டார். வடக்கு நாடுகள் உதவினால் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் மேலும் வளர்ச்சி பெறலாம் என்று கூறிய அவர், ஆகாய ஆக்கிரமிப்பில் அமெரிக்க அக்கிரமங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

ஆகாய ஆக்கிரமிப்பில் நிலவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்ட அவர், வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது வடக்கு நாடுகளின் ஆகாய ஆக்கிரமிப்புகள் மிக அதிகம் என்றும், ஆகவே, வடக்கு நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் கார்பன் புகை வெளியேற்றத்தில் ஒரே அளவுகோல் பொருந்தாது என்றும், அமெரிக்காவும், வளர்ந்த வடக்கு நாடுகளும் ஆகாயத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்றார் காட்டமாக.

இந்நிலையில், வளரும் நாடுகளுக்கு விண்ணில் நியாயமான இடம் தரவேண்டும் என்றும், வளர்ச்சியை அலகாக வைத்து எந்த நாடு, எந்த அளவில் கார்பன் புகையை வெளியேற்ற வேண்டுமென்று வித்தியாச அடிப்படையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்பதே தலையான பிரச்னை.

வெப்பநிலையை 2 டிகிரி சென்டிகிரேடிலிருந்து 1.5 டிகிரி சென்டிகிரேடாகக் குறைக்க வேண்டுமென்பதில் ஒருமித்த கருத்து உண்டு. இது பொதுவான திட்டம். இதை நாம் ஏற்றே தீர வேண்டும். ஆனால், ஆகாய ஆக்கிரமிப்பில் சமத்துவம் என்பது வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவிட்டு வேற்றுமைப்பட்ட அளவுகோலை உருவாக்குவதே நியாயம்.

ஆகாய ஆக்கிரமிப்பை நிறுத்தும் நிலை பொதுவானது. அதற்குரிய தீர்வு முற்றிலும் மரபுசாரா எரிசக்திப் பயனைச் சார்ந்துள்ளது. மரபுசாரா எரிசக்தியின் தொழில்நுட்பம் வடக்கு நாடுகளின் பிடிப்பில் உள்ளது.

வளரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மரபுசாரா எரிசக்தி நுட்பங்களை விற்று லாபம் பார்ப்பதே அவர்களின் லட்சியம். இவற்றை இறக்குமதி செய்து வளர வேண்டிய கட்டாயம் வளரும் நாடுகளுக்கு உள்ளதால் செலவு கூடுகிறது. மரபுசாரா எரிசக்தியை ஏற்கும் ஆர்வம் தணிந்து விடுகிறது.

வடக்கு நாடுகள் மரபுசாரா எரிசக்தி நுட்பங்களை உதவி அடிப்படையில் ஏழை நாடுகளுக்கு வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஆகாய ஆக்கிரமிப்பில் சமத்துவம் நிலவும்.

இந்தியாவின் அணுகுமுறையை ஏற்கும் வடக்கு நாட்டுத் தலைவர்கள், "உறுப்பு நாடுகள் ஏற்கும் வண்ணம் ஆகாயத்தில் எவ்வளவு இடம் வேண்டுமென்று கூட்டாக நிர்ணயித்துப் பங்கீட்டு இலக்குகளை நிர்ணயம் செய்துவிட்டுப் பேச்சுக்கு வாருங்கள்' என்று சவால் விடுகின்றனர். உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை ஏற்பட்டால்தான் "வேற்றுமைப்பட்ட அளவுகோல்' சாத்தியம். அதுவரை வடக்கு நாடுகளே ஆகாயத்தை ஆக்கிரமிக்கும்.

உலகை வாழ வைக்க ஆண்டுதோறும் உலகத் தலைநகரங்களில் புவி மகாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை கூட்டுகிறது. முதல் புவி உச்சி மகாநாடு 1994-இல் பிரேசிலில் ரியோடி ஜெனிரோவில் கூடியது. அங்குதான் முதல் முறையாகப் புவி வெப்பமாதலை நிறுத்தும் யோசனையை முன்வைத்து ஒவ்வொரு நாடும் அதற்கான இலக்குகளை நிர்ணயித்து, மறு ஆண்டு கூடும் மகாநாட்டில் விவாதிக்கப் பணித்தது.

அதன் பின், 19 உலக மகாநாடுகள் கூட்டப்பட்டன. உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி வாய்கிழியப் பேசுவதில் ஒரு குறையும் இல்லை. இன்றுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. பாரீஸில் 2015 இறுதியில் இஞட 21 கூடியது. கி.பி. 2050 வருவதற்குள் இன்னும் 30 மகாநாடுகள் உலகத் தலைநகரங்களில் கூடப் போகின்றன. "இப்போது என்ன அவசரம் மெதுவாகப் பார்த்துக் கொள்ளலாம்...' என்று ஒவ்வொரு நாடும் நினைத்துவிட்டால் 1.5 டிகிரி சென்டிகிரேடு என்ற இலக்கை எட்ட முடியாது.

பேச்சுவார்த்தைகள் மட்டுமே மிச்சம் என்று மெத்தனமாயிருந்தால் "அண்ணாமலைக்கு அரோகரா'! பஞ்ச பூதங்களில் தீ மட்டும் மிஞ்சும். பூமியை யாராலும் காப்பாற்ற முடியாது.

பெற்றோர் கவனத்திற்கு...

Dinamani


By சமதர்மன்

First Published : 02 February 2016 01:22 AM IST


பெற்றெடுத்த குழந்தைகளை சான்றோராக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் நியாயமான ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. ஆனால், எத்தனை பெற்றோரின் கனவு நனவாகிறது? வெகுசில பெற்றோரின் குழந்தைகளே ஊர் மெச்சும் சான்றோராக உருவாகின்றனர்.

சான்றாண்மை என்பது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமன்று, நல்லறிவு, ஒழுக்கம் மற்றும் இயலாதவர்களுக்கு உதவுதல் போன்ற பல நற்குணங்களின் கலவையே சான்றாண்மையாகும்.

ஆனால், இன்றைய பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகள் சான்றோராக உருவாவதற்கு ஊரிலேயே அதிக கட்டணம் வசூல் செய்யும் ஒரு தனியார் பள்ளி, குழந்தைகள் பொழுதுபோக்கி விளையாடி மகிழ ஒரு தொலைக்காட்சி, இணைய வசதியுடன் கூடிய ஒரு கணிப்பொறி மற்றும் ருசிப்பதற்கு கொழுப்புப் பண்டங்கள், புத்தம் புதிய ஆடை வகைகள் போன்றவையே போதுமென எண்ணுகின்றனர்.

இவைகளை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டாலே தங்களது குழந்தைப் பராமரிப்புப் பணி முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். குழந்தைகளுடன் அமர்ந்து ஆக்கப்பூர்வமாக இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் உரையாடுவதில்லை.

நேரமின்மையைக் காரணமாக சொல்லும் இவர்கள் வீடுகளில் தொலைக்காட்சி, செல்லிடப்பேசி போன்றவற்றின் காலவரம்பற்ற பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டாலே அனைத்திற்குமே நேரம் கிடைக்குமே?

ஒரே அறையில் இருந்தாலும் அம்மா தொலைக்காட்சியிலும், அப்பா கட்செவிஅஞ்சலிலும், பிள்ளைகள் கணினியின் முன்பும் இருந்து பொழுதுபோக்குகின்றனர். மென்பொருள் உலகிலிருந்து இவர்கள் மீண்டு வருவது எப்போதோ?

இன்றைய சிறுவர்கள் செல்லிடப்பேசியையே விளையாட்டு மைதானமாக ஆக்கிக் கொண்டதன் விளைவாக இளமையிலேயே உடற்பருமன், கண்பார்வைக் குறைபாடு, சுறுசுறுப்பை இழத்தல் போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

ரீடிங் ரூம் என்ற பெயரில் ஒரு தனி அறையில் மாணவர்களை அடைத்துவிட்டு பக்கத்து அறையில் பெற்றோர் தொலைக்காட்சிளை பலத்த ஒலியளவுடன் கண்டுகளிக்கும் வழக்கம் இன்று பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. இது பிள்ளைகளுக்கு சலிப்பு உணர்வையும், கவனச் சிதறலையுமே ஏற்படுத்தும் என்பதைப் பெற்றோர் உணர்வதில்லை.

அன்றோ ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஐந்து பிள்ளைகள் இருந்தனர். ஆனால், இன்று ஒரு குடும்பத்தில் ஒன்றிரண்டு குழந்தைகளே இருப்பதால் குழந்தைகளின் தேவைகள் பெற்றோரால் எளிதில் பூர்த்தி செய்யப்பட்டு கூடுதல் செல்லத்துடன் வளர்க்கப்படுகின்றனர்.

இது ஒருபுறம் நல்லதுபோல தோன்றினாலும், மறுபுறம் அனைத்துமே எளிதில் கிடைப்பதால் பிள்ளைகளுக்குப் பொருள்களின் அருமை பெருமை தெரிவதில்லை. மேலும், அவர்களுக்கு பணத்தின் மதிப்பு, விலைவாசி ஏற்றம் பற்றியும் புரிவ

தில்லை.

மொத்தத்தில் பெற்றோரின் கஷ்டங்கள் பிள்ளைகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு கிரிக்கெட் மட்டையை அப்பாவிடமிருந்து பெற மூன்று வருடம் காத்திருந்த காலம் முன்பிருந்தது. இன்றோ காலையில் கேட்கப்பட்ட பொருள் மாலையிலேயே பெற்றோரால் வாங்கித் தரப்படுகிறது. அதிகமாக செல்லம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதன் விளைவாக பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த காலம்போய், பெற்றோர் பிள்ளைகளுக்குக் கீழ்ப்படியும் காலம் உருவாகிப்போனது.

இன்றைய மாணவர்கள் பலர் அவர்களது அப்பா - அம்மா அழைத்தால் கூட திரும்பிப் பார்க்காமல் தொலைக்காட்சியிலோ, அல்லது செல்லிடப் பேசியிலோ மூழ்கிக்கிடப்பதைக் காண முடிகிறது.

இத்தகைய கீழ்ப்படியாத பிள்ளைகள், நாளை அவர்தம் சொந்த தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் போவதுடன், தங்கள் பெற்றோருக்கும் பாரமாக இருக்க நேரிடும். ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்பது நம் முன்னோர் அவர்தம் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக வகுத்த பழமொழி.

பள்ளிகளில் நியாயமான காரணங்களுக்குக் கூட தமது செல்லப்பிள்ளைகளை ஆசிரியர்கள் கண்டிப்பதை விரும்பாத பெற்றோர், வீட்டிலாவது அவர்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டியது மிக அவசியம்.

பிள்ளைகளை சான்றோராக ஆக்க பெற்றோர் தங்களது வாழ்க்கை அனுபவம், கடந்து வந்த பாதையின் கஷ்ட, நஷ்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைப் பாடமாக அவர்களுக்கு உணவுபோல ஊட்ட வேண்டும்.

நம் முன்னோர்கள் வகுத்த வாழ்வியல் நெறிகள், நமது பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமைகாணும் நமது நாட்டின் தனித்தன்மை, போன்ற பல பொதுவான விஷயங்களை சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.

இதனால் நாளைய சமுதாயத்தை ஜாதி, மத, மொழி, இன பேதமற்ற சிறந்த மனிதாபிமானம் கொண்டதாக உருவாக்க முடியும்.

உலகின் சிறந்த நூல்களுள் ஒன்றாக கருதப்படும் திருக்குறள், ஏனைய பிற நீதி நூல்கள், செய்தித்தாளில் இடம்பெறும் அறிவியல், பொதுஅறிவு சார்ந்த உலகளாவிய நிகழ்வுகள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை சிறுவர்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். லட்சோப லட்சம்பேரை அறிவு ஜீவிகளாக மாற்றிய ஒரு பெருங்கருவி நல்ல புத்தகங்களே அன்றி வேறென்ன?

பாட்டி சொல்லிய கற்பனைக் கதைகளும், தாத்தா சொல்லிய அனுபவக் கதைகளும் அன்றைய சிறுவர்களுக்குக் கிடைத்தன. அதன் மூலம் அவர்கள் வாழ்வியல் நெறியை கற்றுக் கொண்டனர். ஆனால், இன்றைய தனிக்குடித்தன எந்திரமயமான வாழ்வில் இதற்கெல்லாம் இடமில்லாமல் போனதே!

தொலைக்காட்சி இணையதளம், திரைப்படம், செல்லிடப்பேசி போன்றவை மட்டுமே வாழ்க்கை என்ற ஒரு மாயை எப்படியோ உருவாகிவிட்டது. இந்நிலைமாற, பெற்றோர் முதலில் இவைகளின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை எனும் பழமொழிக்கேற்ப பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அனைவருமே உணர வேண்டிய நேரம் இது.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...