Thursday, February 11, 2016

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!


vikatan.com
செல்போன் வெடித்ததால் படுகாயம், உயிர் பலி என்கிற கவலைக்குரிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. இரு வாரங் களுக்கு முன்பு, சென்னை வியாசர்​பாடியைச் சேர்ந்த ஒருவர் இரவு நேரத்தில் செ​ல்போனை சார்ஜ் போட்டு​விட்டுத் தூங்கிவிட்டார். அதிகாலையில் அந்த செல்போன் வெடித்ததில், வீடே தீப்பிடித்தது. அதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து, மதுராந்தகம் அருகே செய்யூர் பகுதியில் செல்போன் வெடித்ததால் பள்ளி மாணவன் ஒருவனின் கண் பாதிக்கப்பட்டது.

செய்யூரைச் சேர்ந்த கூலித்தொ ழிலாளி எட்டியப்பன் - மனைவி வெண்ணிலா. இவர்களின் மூன்றாவது மகன் தனுஷ். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை தனுஷ் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, போன் வெடித்துச் சிதறியது. கண் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான் தனுஷ். வெண்ணிலாவிடம் பேசினோம்.
“போன வாரம் என் பையன் ஸ்கூல் போய்ட்டு வந்தான். நான் சமையல் செஞ்சிட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள விளையாடிட்டு இருந்தான். அப்போ, டமார்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. ஓடிப்போய் பார்த்தா கண், முகம், கை எல்லாம் ரத்தம். உடனே அவனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனோம். அப்புறம் தான் தெரிஞ்சுது செல்போன் வெடிச்சதுல, கண் பார்வை பறிபோய் இருக்குனு. எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. இங்கே ஆபரேஷன் பண்ணினாங்க. இப்போ, கொஞ்சம் பார்வை கிடைச்சிருக்கு. பழைய மாதிரியே கண்பார்வை வருமான்னு தெரியல” என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் வஹிதாவிடம் பேசினோம். “பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பையனை இங்க கொண்டு வந்தாங்க. செல்போனை முகத்துக்கு நேர வைத்துப் பார்த்துட்டு இருக்கறப்போ போன் வெடிச்சதுல, அதன் துகள்கள் கண்ணுக்குள்ளே போயுள்ளன. அதனால பார்வை பறிபோய் இருக்கிறது. வலது கண்ணின் கருவிழி முற்றிலும் சேதம் அடைந்தும், இடது கண்ணில் விழித்திரையும் கிழிந்தும் உள்ளன. முதற்கட்ட சிகிச்சையில், கருவிழி பாதிக்கப்பட்டிருந்த கண்ணில் அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றுக் கருவிழி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் அதில் லென்ஸ் பொருத்த முடியும். இடது கண்ணில் விழித்திரையும் தைக்கப்பட்டது. அந்த அறுவைச்​சிகிச்சைக்குப் பிறகு, தனுஷுக்கு 4 முதல் 5 மீட்டர் வரை பார்வை கிடைத்துள்ளது. சார்ஜ் போட்டிருக்கும் போனைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.பாலசுப்பிர மணியன், “செல்போன் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சந்தைகளில் தரமில்லாத எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதுபோன்ற விபத்துகளுக்கு அதுதான் முக்கியக் காரணம். சார்ஜரில் வோல்டேஜ் அதிகமாகும்போது, அதை முறைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் விலை குறைவான சார்ஜர்களிலும், செல்போன்களிலும் இருப்பதில்லை. எனவே, அவை வெடித்துச் சிதறுகின்றன. எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்கிற அளவீடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று சர்வதேச வரையறை உள்ளது. அப்படி எந்த முறையும் இந்தியாவில் இல்லை. அரசும் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற விஷயங்களில் இனிமேலாவது அரசு கவனம் செலுத்தவேண்டும். தரமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணமும், அதுபற்றிய விழிப்பு உணர்வும் மக்களுக்கு வரவேண்டும்’’ என்றார்.
இன்றைக்கு, பெரும்பாலானோர் கடைகளுக்குச் சென்று தரத்தை ஆராய்ந்து பொருட்கள் வாங்குவதில்லை. பேனா, மொபைல் என என்ன வாங்குவதாக இருந்தாலும், ஆன்லைன் ஷாப்பிங்தான். ‘குறைந்த விலையில் பவர் பேங்க்’ என்று முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்த ஒருவர், அந்த இணைப்பை கிளிக் செய்துள்ளார். சிறப்பான பேக்கிங்கில் பவர் பேங்க் வந்து சேர்ந்தது. பல மணிநேரம் சார்ஜ் போட்டுள்ளார். ஆனால், சார்ஜ் ஏறவே இல்லை. சந்தேகப்பட்டு பவர் பேங்க்கை உடைத்துப் பார்த்தபோது, அதில் 7 பேட்டரிகள் இருந்தன. அதில் ஒன்று மட்டுமே நிஜமான பேட்டரி. மற்றதெல்லாம் மண் நிரப்பட்ட கூடு. இணையத்தில் பொருள் வாங்குவது தவறல்ல. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெருள்தானா என்பதை உறுதிசெய்து அதை வாங்க வேண்டும். 

மொத்தத்தில், செல்போனில் எச்சரிக்கையாக இருங்கள்.

- மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: ப.சரவணகுமார்

பொருளாதாரம்: இது பட்ஜெட்களின் காலம்

Return to frontpage

அம்மாவோ அப்பாவோ ‘‘செலவுக்கு வைச்சுக்க’’ என்று தருகிற பாக்கெட் மணிக்கு நீங்கள் பட்ஜெட் போட மாட்டீர்களா? ‘‘முதல்ல இதை வாங்கிக்கலாம். இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும். அப்புறமா அதை வாங்கலாம்” னு மனசுக்குள்ளே பட்ஜெட்டுக்கான ஒரு திட்டம் போட மாட்டீங்களா? அப்படித்தான் பல அம்மா, அப்பாக்களும் பட்ஜெட் போட்டு வாழ்கிறார்கள்!

அவர்களின் பட்ஜெட்களில் உங்களின் படிப்புகளுக்கான செலவுகள் முதல் இடத்தில் இருப்பது நீங்கள் அறிந்ததுதானே?

அதுபோலத்தான் இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் மாநகராட்சிகள் உள்ளிட்ட பஞ்சாயத்து அரசாங்கங்களும் தங்களுக்கான பட்ஜெட்களைப் போட்டுச் செயல்படுகின்றன.

ஆமாம் ஆனா இல்லை

ஒரு குடும்பம் தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு கம்பெனி தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு நாடு தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் சிறு சிறு ஒற்றுமைகள் இருக்கலாம். அதே நேரத்தில் பலவிதமான வேற்றுமை களும் இருக்கவே செய்கின்றன.

ஒரு நிறுவனம் தனது ஒரு ஆண்டின் வரவையும் செலவுகளையும் ஒப்பிட்டுச் சமன் செய்து கணக்கை முடிப்பதுபோல ஒரு நாட்டின் பட்ஜெட் இருக்காது.

மத்தியப் பட்ஜெட்

மத்திய அரசை எடுத்துக்கொள்வோம். அது நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டுக்குள்ளே சட்டம் ஒழுங்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவது என்னும் பல முனைகளில் செயல்படுகிறது. இவற்றை எல்லாம் செய்வதற்கு அரசாங்கத்துக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. வெளிநாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் உள்நாட்டு பணமான ரூபாய் நோட்டுகள் பயன்படாது. வெளிநாட்டுப் பணம் எனப்படுகிற அந்நியச் செலாவணியும் தேவையாக இருக்கிறது.

மத்திய அரசு தனக்குத் தேவையான பணத்தை மக்களின் மீது விதிக்கப்படும் பல விதமான வரிகள், கட்டணங்கள், அரசு நிறுவனங்களின் வருமானம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிடமும் கடன்கள் வாங்குதல் என்ற முறைகளில் சேகரிக்கிறது.

ஏன் பட்ஜெட்?

இதையெல்லாம் தன்னிடம் வாங்கிக்கொள்கிற மத்திய அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரிச் செலவழித்துக்கொள்ள வேண்டியதுதானே? ஏன் பட்ஜெட் என்று ஒவ்வொரு வருடமும் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாகச் சமர்ப்பிக்க வேண்டும்? நிறைய பணம் வருகிற சில பணக்கார வீடுகளில் வீட்டுச் செலவுகளுக்கு எல்லாம் தனியாகப் பட்ஜெட் போட்டு நேரத்தை வீணாகச் செலவு செய்ய மாட்டார்கள். அது மாதிரி வருகிற வருமானத்தை வைத்துக்கொண்டும் நினைக்கிற செலவைச் செய்துகொண்டும் அரசாங்கம் பாட்டுக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கவேண்டியதுதானே என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.

அப்படி எல்லாம் ஒரு நாட்டால் செய்ய முடியாது.

ஒரு நாட்டில் வளங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு வரம்புக்குட்பட்டவைதான் என்பது முதல் காரணம். நாட்டின் வளங்களைச் செலவழித்துக்கொண்டே இருந்தால் அவை என்றோ ஒருநாளில் தீர்ந்துபோக வேண்டியவைதான். அப்படி நடந்துகொள்கிற நாடுகள் பொறுப்பில்லாத அரசுகளாகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவதாக, ஒரு அரசாங்கம் எப்படித் தனக்கான நிதியாதாரங்களை பயன்படுத்துகிறது என்பதும் எப்படிச் செலவழிக்கிறது என்பதும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் இறுதியில் அந்த நாட்டையும் பாதிக்கும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, ஒவ்வொரு வருடமும் மக்களிடம் வெளிப்படையாகத் தனது வரவு செலவுகளைக் காண்பிக்க வேண்டும்.

இந்த இரண்டும் தார்மிகரீதியான காரணங்கள். இந்தியாவுக்கு மூன்றாகவதாக ஒரு காரணமும் இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் இப்படிப் பட்ஜெட் போடுவதை ஒரு கட்டாயக் கடமையாக நிர்ணயித்துள்ளது.

அரசியல் கடமை

இந்தியா ஒரு நாடாளுமன்ற ஜனநாயக நாடு. நமது நாடாளு மன்றத்தை ஒரு அரசியல் சாசனம் வழிநடத்துகிறது. அந்த அரசியல் சாசனம் மத்திய அரசாங்கத்துக்குப் பல கடமைகளை நிர்ணயித்துள்ளது.

மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தனது வரவு செலவுகளையும் நாட்டின் வளங்களை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதையும் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற்றே செயல்பட வேண்டும் என்பதைக் கட்டாயக் கடமையாக அது நிர்ணயித்துள்ளது. அதனால்தான் மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தனது பட்ஜெட்டை நாடாளுமன்றம் முன்பாகச் சமர்ப்பிக்கிறது.

அரசியல் சாசனத்தில் 112, 265, 266 எனும் எண்களைக்கொண்ட சட்டக்கூறுகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் அனுமதி பெறாமல் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவுகள் நடக்கக்கூடாது என்பதற்கான கடமைகளை நிர்ணயித்துள்ளன.

பட்ஜெட்டின் பகுதிகள்

ஏப்ரல் 1 முதலாக மார்ச் 31 வரையான காலம் நிதியாண்டு எனப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் செய்யக்கூடிய வரவு செலவுக்கான அனுமதியை நாடாளுமன்றத்தில் வாங்குவதற்காகத்தான் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது.

பட்ஜெட்டில் பொதுவாக இரண்டு பகுதிகள் இருக்கின்றன: செலவுகளுக்கான பட்ஜெட், வருமானங்களுக்காகப் பட்ஜெட். செலவுகளுக்கான பட்ஜெட்டில் அந்தச் செலவுகளின் மூலமாக வரும் வருமானங்கள் விவாதிக்கப்படலாம். வருமானங்களுக்கான பட்ஜெட்டில் வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய செலவினங்கள் பற்றிய விவாதங்களும் விவரங்களும் இருக்கலாம்.

அடுத்த நிதியாண்டில் எவ்வளவு பணத்தை எந்த எந்த விஷயங்களில் என்ன என்ன வகைகளில் செலவு செய்ய அரசு நினைக்கிறது என்பது பொதுவாக, செலவுகளுக்கான பட்ஜெட்டில் விளக்கமாகத் தரப்படும்.

அரசு தான் செலவு செய்ய நினைத்துள்ள பணம் எங்கிருந்தெல்லாம் வரும் என்பதையும் அந்தப் பணம் வரக்கூடிய நிதி ஆதாரங்களையும் என்னென்ன முறைகளில் சேகரிக்கப்போகிறது என்பது வருமானங்களுக்கான பட்ஜெட்டில் விளக்கப்படும்.

மாப்பிள்ளைத் தோழன்

மத்திய அரசின் பட்ஜெட் கல்யாண மாப்பிள்ளை என்றால் அதன் பக்கத்திலேயே மாப்பிள்ளைத் தோழன் போல ரயில்வே பட்ஜெட் வெளியாகிறது. இது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மரபு. சில நாட்கள் இடைவெளியில் இரண்டு பட்ஜெட்களும் வெளியாகின்றன.

இந்தியாவின் இருப்புப் பாதைகளைச் சீரமைப்பதற்காக வில்லியம் அக்வொர்த் என்பவர் தலைமையில் 1920-ல் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைப்படி 1924-ல் இந்தியாவின் இருப்புப் பாதை வரவு-செலவு அரசின் பொதுநிலையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது.

இந்தப் பழக்கம் இன்றும் சுதந்திர இந்தியாவில் கடைப்பிடிக்கப் படுகிறது. இப்போதும் ரயில்வே பட்ஜெட் தனியாகச் சமர்ப்பிக்கப் பட்டாலும் பொதுப் பட்ஜெட்டின் விவரங்களுக்குள் ரயில்வே பட்ஜெட்டின் விவரங்களைக் கொண்டுவந்துவிட்டார்கள்.

ஒரு சம்பிரதாயமாகத்தான் ரயில்வே பட்ஜெட் தனியாக வெளியாகிறது.

பட்ஜெட் போடுவது என்ன பெரிய இமயமலை ஏறும் சாதனையா? அதையே செய்ய முடிகிறபோது, இதையும் செய்ய உங்களாலும் முடியும்.

விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


பொதுமக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

THE HINDU TAMIL

ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மற்ற பொருட்களைப் போலவே மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 13,14 ஆகிய தேதி களில் நாடு முழுவதும் உள்ள 8 லட் சம் மருந்து கடைகளை அடைத்து 40 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

ஆன்லைனில் வேண்டாம்

ஆன்லைன் மருந்து விற்ப னைக்கு தடை விதிக்கக்கோரி மத் திய அரசை மருந்து வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் யாராவது மருந்து விற்றால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

தமிழக மருந்து கட்டுப்பாடு துறையும் தீவிரமாக செயல்பட்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கை

இது தொடர்பாக தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:

ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை கண்டுபிடிப் பது கடினம். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப் புள்ளது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நட வடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம். டாக்டர் பரிந்துரைச் சீட்டை காண்பித்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்லைனில் 19 நிறுவனங்கள்

இதுபற்றி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:

நாடு முழுவதும் 19 நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்று வருகின்றன. ஆன்லைனில் மருந்து கள் விற்பனைக்கு இதுவரை யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. ஆனால் சட்டத்தை மீறி மருந்து களை விற்பனை செய்து வருகின் றனர். இதனால் போலி மற்றும் தரமில்லாத மருந்துகள் புழக்கத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.

மருந்து என்பது மற்ற பொருட்களைப் போல் இல்லை, உயிர் காக்கும் பொருளான மருந்துகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மக்கள் டாக்டரின் பரிந்துரைச் சீட்டுடன் வந்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday, February 10, 2016

நகை வாங்க ‘பான் கார்டு’ எதற்கு?

logo


கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.2 லட்சத்துக்குமேல் நகை வாங்கும்போது, வருமானவரித்துறையிடம் விண்ணப்பம் செய்து பெற்ற நிரந்தர கணக்கு எனப்படும் ‘பான் கார்டு’ விவரத்தை கொடுக்கவேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து, இந்தியா முழுவதிலும் உள்ள நகைக்கடைக்காரர்கள் இன்று ஒருநாள் அடையாள கடை அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நாடு முழுவதிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள், 300 சங்கங்களின் கீழ் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் இருக் கின்றன.

கருப்பு பணத்தை ஒழிக்கவும், வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ‘பான் கார்டு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சார்பில் கூறப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஒரு மாதத்திலேயே நகைக்கடைகளில் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக நகைக்கடை அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த விற்பனை வீழ்ச்சியால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய மற்ற வரிகளின் வருமானமும் நிச்சயமாக குறைந்து இருக்கும். நகைக்கடைகளில் தற்போது உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் உள்ள தங்க விற்பனையில் 50 சதவீதம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 2018–ம் ஆண்டில் இந்த விற்பனை ரூ.5 லட்சம் கோடிக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருமாதத்தில் 30 சதவீத விற்பனை குறைந்துவிட்டதால், தங்கத்தை யாரும் வாங்காமல் இருந்துவிட்டார்கள் என்று பொருளல்ல. ‘பான் கார்டு’ கேட்காத வியாபாரிகளிடம் வாங்கியிருப்பார்கள், அல்லது கிராமப்புறங்களில் உள்ள நகை தொழிலாளர்களிடம் வாங்கியிருப்பார்கள்.

இந்த திட்டத்தை நாட்டில் அனைவரும் ‘பான் கார்டு’ வாங்கியபிறகு, அல்லது வாங்க வைத்தபிறகு கொண்டுவந்து இருக்கலாம். ஏனெனில், இந்தியா முழுவதுமே இப்போது 22 கோடியே 30 லட்சம் பேர்களுக்குத்தான் ‘பான் கார்டு’ கொடுக்கப்பட்டுள்ளது. நகை வாங்க வருபவர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள்தான். பொதுவாக நகை வாங்க வருபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். அதுபோல, கிராமப்புறங்களில் இருந்தும், வீடுகளில் சுபகாரியங்களுக்கும், பெண்களுக்கு அணிகலன்களுக்காகவும் நகை வாங்க வருவார்கள். இதுமட்டுமல்லாமல், விவசாய வருமானத்துக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இவ்வளவு நாளும் ‘பான் கார்டு’க்கு அவசியமே இருந்திருக்காது. மேலும், தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துகொண்டே போகிறது. நேற்று காலையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, ரூ.21 ஆயிரத்து 344–க்கு விற்பனை ஆனது. ரூ.2 லட்சம் என்றால், செய்கூலி, சேதாரம், கல் விலை எல்லாம் கணக்கிட்டால் 7 சவரன்தான் தேறும். இப்போது திருமண நேரம். இந்த நேரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 7 பவுன் என்பது சாதாரணம். மேலும், ரூ.2 லட்சம் என்பதை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி கொஞ்சம் கொஞ்சமாக ரொக்கமாகவே சேர்த்து வைத்திருப்பார்கள். அவர்களிடம் ‘பான் கார்டு’ கேட்டால், இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்று கேட்பார்கள், நோட்டீசு அனுப்புவார்கள், வருமானவரி வளையத்துக்குள் தேவை இல்லாமல் விழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற பயம் மக்களுக்கு இருக்கிறது.

பொதுமக்கள் வாங்கும் தங்கத்துக்கு நகைக்கடைகள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரியை கட்டுகிறார்கள். ஆகவே, வருமான இழப்பு என்பது இருக்காது. மேலும், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து, தங்கம் வாங்கவரும்போது பணப்புழக்கம் அதிகரிக்கும். அது பொருளாதாரத்துக்கும் நல்லது. எனவே, தங்கம் வாங்குவதற்கு ‘பான் கார்டு’ தகவல் தரவேண்டும் என்பது உள்பட எந்தவித கட்டுப்பாடும் தங்கம் வாங்க வருபவர்களுக்கு, மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்படக்கூடாது.

Tuesday, February 9, 2016

குடும்ப வன்முறையும், குழந்தைகளும்

Dinamani



By அ. கோவிந்தராஜூ

First Published : 09 February 2016 01:18 AM IST


நான் பணியாற்றும் பள்ளியில், வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள் தொடங்கின. குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைக்க, யெஸ்! மிஸ். யெஸ்! மிஸ்.. என்று குழந்தைகள் சொல்ல, ஆசிரியை வருகைப் பதிவு எடுத்து முடித்தார். அப்போது ஒரு குழந்தை எழுந்து "மிஸ் எங்கம்மா செத்துப் போயிட்டாங்க' என்று சொல்ல ஆசிரியைக்குத் தூக்கி வாரிப் போட்டது.
உடனே, அந்தக் குழந்தையை அழைத்துக்கொண்டு எனது அறைக்கு வந்தார். மெதுவாக அச் சிறுமியிடம் பேசிப் பார்த்தேன். என்னிடமும் அப்படியேதான் சொன்னாள். ஆசிரியையிடம் சிறுமியின் அப்பாவைத் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு பேசச் சொன்னேன்.
இதற்கிடையில், அக்குழந்தையிடம் பேசியபோது அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னாள். பேச்சின் இடையே அவளுடைய அப்பா கொத்தனார் வேலை செய்வதாகச் சொன்னாள்.
மீண்டும் உள்ளே வந்த ஆசிரியை கண்ணீர் மல்க ஏதோ சொல்ல விரும்பினார். ஒரு பலூனைக் கையில் கொடுத்து ஊதி விளையாடுமாறு அக்குழந்தையை வெளியே அனுப்பினேன். "ஹாய்! ப்ளூ பலூன்' என்றபடி வெளியில் சென்றாள். அக் குழந்தை சொல்வது உண்மைதான் என்றும் நேற்றுதான் காரியம் எல்லாம் முடிந்தது என்றும் அச் சிறுமியின் அப்பா சொன்னதாக என்னிடம் தெரிவித்தார்.
அச் சிறுமியைக் கவனமாகக் கண்காணிக்குமாறு ஆசிரியையிடம் சொல்லி அனுப்பினேன். என்றாலும் என் மனம் என்னவோ இதையே நாள் முழுவதும் அசைப் போட்டுக் கொண்டிருந்தது. அச் சிறுமியின் தளிர் விரலைப் பிடித்தபடி அடிக்கடி பள்ளிக்கு வரும் அந்த இளம்தாய் என் மனத் திரையில் தோன்றி மறைந்தார்.
கணவன் - மனைவி வாய்ச் சண்டை முற்றி வன்முறையில் முடிந்தது. அவர் சமையல் கட்டுக்குள் ஓடி மண்ணெண்ணையை மேலே ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக் கொண்டார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நான்கு நாள்களுக்குப்பின் உயிரை விட்டார். கடைசி நேரத்தில் கணவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால், "ஸ்டவ் வெடித்து ஆடையில் தீப்பற்றிக் கொண்டதாக' மரண வாக்குமூலம் கொடுத்தார். பிரச்னை அதோடு முடிந்தது.
இந்தப் பிரச்னையில் அதிகப் பாதிப்பு அந்தக் குழந்தைக்குதான். அந்தக் கோரக்காட்சி, நேரில் பார்த்த குழந்தையின் ஆழ் மனதில் பதிவாகி இருக்கும். வளர்ந்து பெரியவளாகும்போது தன் அப்பாவை ஒரு கொலைகாரனாகப் பார்ப்பாள்.
அது மட்டுமா? தான் செய்யாத தவறுக்கு அக் குழந்தை வாழ்நாள் முழுதும் தாய்ப் பாசத்துக்கு ஏங்கித் தவிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? ஒவ்வோர் அம்மாவுக்கும் ஒரு வாசனை உண்டு. அதை அவளுடைய குழந்தை மட்டுமே முகர்ந்து உணர முடியும். அந்த வாசனையையும், தாயின் மடி சுகத்தையும் குழந்தைக்கு வேறு எவராலும் தர முடியாது.
உலகிலேயே அதிகமான குடும்ப வன்முறை நம் நாட்டில் நிகழ்வதாகவும், நம் நாட்டில் மட்டும் பார்த்தால் தமிழ் நாட்டில்தான் அதிகம் எனவும் ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் கடுங்கோபம், வெறுப்பு, பொறாமை, அவமதிப்பு, பேராசை, கடுங்காமம், தான் என்ற தன்முனைப்புப் போன்ற எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால்தான் குடும்ப வன்முறைகள் உருவாகின்றன.
இந்த எதிர்மறை எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்போது சிக்கல் பெரிதாகிறது. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி அல்லது இடித்துச் சொல்லி சமாதானப்படுத்துவார்கள். கூட்டுக்குடும்ப அமைப்பு இப்போது சிதைந்து விட்டதால் குடும்பச் சண்டையைத் தடுத்து நிறுத்துவாரில்லை.
ஒரு கணவன் மனைவியைத் தாக்குவது (physical abuse), கெட்ட வார்த்தைகளால் திட்டுவது (verbal abuse), அவளுடைய சுய கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படுத்துதல் (emotional abuse), அவளுடைய விருப்பத்திற்கு மாறான அல்லது இயற்கைக்கு மாறான பாலியல் நுகர்வு (sexual abuse), அவளுடைய பெற்றோரிடம் பணம் வாங்கி வரச்சொல்லுதல் அல்லது சம்பளப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு பூ பொட்டு வாங்குவதற்குக்கூட காசு தராமல் இருப்பது (Economical abuse) மற்றும் குடி போன்ற பல காரணங்களால் குடும்ப வன்முறைகள் தோன்றுகின்றன.
வன்முறையின் தாக்கம் எல்லை மீறும்போது கண நேரத்தில் கொலையிலோ, தற்கொலையிலோ முடிந்து விடுகின்றன. அதன் பிறகு அக்குடும்பம் புயலில் சிக்கிய கப்பல் போல தடுமாறுகிறது, சில சமயம் தடம் மாறுகிறது. இத்தகைய குடும்பங்களில் வாழும் சின்னஞ் சிறிய அரும்புகள் அன்புக்காக ஏங்கி அலை மோதுகின்றன.
கணவனும் மனைவியும் பொழுதுக்கும் சண்டையிடும் குடும்பங்களில் தற்கொலை, கொலை, மணமுறிவு முதலியவை ஏற்பட்டு, வளரும் குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும், படிப்பில் பின்தங்கும்.
குடும்ப வன்முறைகளைத் தவிர்ப்பது எப்படி? குடும்பத்தில் உள்ள அனைவரும் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அற வழியில் பொருளீட்டி, செலவைக் குறைத்துச் சேமிக்க வேண்டும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினாலே பாதிச் சிக்கல் தீர்ந்து விடும். ஆணாதிக்கப் போக்கை அறவே விட்டொழிக்க வேண்டும். மனைவிதான் வீட்டைப் பெருக்க வேண்டும் என்பதில்லை; கணவரும் பெருக்கலாம். செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி வாதம் செய்வதை நிறுத்தி, மன்னிக்கும் மனப் பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தீயினால் சுட்ட புண்ணின் வடு மறைந்துவிடும். ஆனால், நாவினால் சுடும்போது ஏற்படும் வடு மறையவே மறையாது என்று வள்ளுவர் சொல்லுவதை கணவன் - மனைவி இருவரும் உணர வேண்டும்.
கணவன் - மனைவி சண்டை முற்றி அதன் வீச்சு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், உடனே கணவன் வீட்டை விட்டு வெளியே சென்று கோபம் தணிந்ததும் திரும்ப வேண்டும். இல்லையேல், ஒரு நாவலை எடுத்துச் சென்று அறையினுள் உட்கார்ந்து படிக்க வேண்டும்.
திருக்குறள் இன்பத்துப் பாலில் கணவன் - மனைவி உறவை நட்பு எனக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். எனவே, பெற்றோர் நண்பர்களாக வாழத் தொடங்கினால் மட்டுமே குடும்பச் சண்டைகள் ஒழிந்து இல்லந்தோறும் மகிழ்ச்சிப் பொங்கும். அங்கே குழந்தைகள் மன வளத்துடன் வளரும்.
இது சாத்தியமா? சாத்தியம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

கூட்டங்களின் கொடிய முகம்


Dinamani


By எஸ். ஸ்ரீதுரை

First Published : 08 February 2016 01:05 AM IST


நம் நாட்டில் சட்ட திட்டங்களை மதிப்பது என்பதே ஓர் அலாதியான விஷயம்.
வலியோர் - எளியோர், பணக்காரர் - ஏழை, அதிகாரி - கடைநிலை ஊழியர், அரசியல் கட்சியினர் - சாதாரண பொதுமக்கள் என்ற எதிரெதிர்ப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதில் வெளிப்படையான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
கூட்டங்கள் - தனி மனிதர் என்ற இன்னொரு பிரிவையும் சேர்த்தே அவதானிக்க வேண்டியுள்ளது. நியாயமான விஷயத்தைக் கேட்கவே ஒரு தனி மனிதன் தயங்க வேண்டியுள்ளது. ஆனால், கூட்டமாகப் பலர் சேர்ந்துவிட்டால் எத்தகைய அக்கிரமங்களையும் அரங்கேற்றி விடலாம் என்பது புதிய கலாசாரமாகியுள்ளது.
தனி மனிதன் ஒருவன் சற்றே நாகரிகம் கொண்டவன் போல் நடந்து கொண்டாலும், பல தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமாக உருவானால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காட்டுமிராண்டி ஆகி விடுகிறான் என்பது இப்போது பொது விதி ஆகியிருக்கிறது.
பெங்களூருவில் ஒரு தான்சானிய மாணவி எல்லோரும் பார்க்கப் பலரால் தாக்கப்பட்டதை வர்ணிக்கக் காட்டுமிராண்டித்தனம் என்பதை விட வலுவான வார்த்தை ஒன்று கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
சாலையில் விபத்து நேர்கிறது என்னும் போது, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முனைபவர்களைக் காட்டிலும், விபத்துக்குக் காரணமானவர்கள் என்று ஒரு கூட்டத்தால் கருதப்படுபவரை அடித்துத் துவைக்கும் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.
திருட வந்து மாட்டிக் கொள்பவனை அல்லது மாட்டிக்கொள்பவளைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் குற்றுயிரும் குலை உயிருமாக ஆக்குவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது. நிஜத் திருடர்களை விட, திருடர்களாகத் தவறாக எண்ணப்படுபவர்களும் கூட இதிலிருந்து தப்ப முடிவதில்லை.
அரசியல் கட்சிகளோ, ஜாதி இயக்கங்களோ ஓர் ஊரில் மாநாடு கூட்டிவிட்டால் போதும், அந்தப் பகுதி மக்கள் படும் அவதி சொல்லி முடியாது.
ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வம்பு வளர்த்துப் பணம் கொடுக்காமல் போவது, தங்களுக்கு எதிரான இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சிலைகள், அலுவலகங்கள், பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவது, நினைவுச் சின்னங்களைச் சிதைப்பது இவையெல்லாம் தாராளமாக அரங்கேறும்.
நகரமே குலுங்கியது, சாலைகள் கிடுகிடுத்தன என்று மறுநாள் செய்தி வரவேண்டும் என்பதற்காகவே பெரும் கூட்டத்தைக் கூட்டி வித்தை காட்டும் பொறுப்பற்ற தலைமைகளின் கைங்கரியம்தான் இத்தகைய அத்துமீறல்களுக்கு அஸ்திவாரம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ...?
தனிமாநிலக் கோரிக்கை, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை என்று போராடும் அரசியல் கட்சியினரும், ஜாதி அமைப்பினரும் அரங்கேற்றும் அராஜகங்கள் ஒன்றா? இரண்டா?
முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மீனா இனத்தவர் போராட்டம், குஜராத்தில் நடை பெற்ற படேல் இனத்தவரின் போராட்டம், வட இந்தியாவில் ஜாட் உள்ளிட்ட இனத்தவர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டம் ஆகியவற்றால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நஷ்டங்களும், பொது மக்களுக்கு விளையும் இன்னல்களும் மறக்கக் கூடியவைதானா?
தமிழகத் தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால், சட்டக் கல்லூரி உட்பட, பல்வேறு மாணவர் அமைப்பினர் நடத்தும் போராட்டங்களின் போது எவ்வளவு பொருள்சேதங்களும், உடற்காயங்களும் ஏற்படுகின்றன. இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையேயும், ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கிடையேயும் நடைபெறும் சண்டை சச்சரவுகளில் எத்தனை பொதுச் சொத்துக்கள் பாதிக்கப்படுகின்றன?
மாணவர்களின் போராட்டம் மற்றும் சண்டைதான் என்று இல்லை, கல்லூரி மாணவர் அமைப்புத் தேர்தல் வெற்றி மற்றும் நீதிமன்றங்களாலேயே கண்டிக்கப்பட்ட பேருந்து தினம் ஆகிய கொண்டாட்டங்களின் போதும் பொதுப் போக்குவரத்திற்கு எத்தனை இடைஞ்சல்கள்?
கொண்டாட்டத் தருணங்களின் போது கூட்டமாகச் சேருவோர் செய்யும் இடைஞ்சல்களைக் கூட ஒரு மாதிரி பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பொது இடத்தில் ஏற்படுகின்ற விபத்துகளின் போது, குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்று கூட்டமாகக் கிளம்புவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதிலும், பெங்களூர் சம்பவத்தை எடுத்துக் கொண்டால், இந்த தான்சானியா நாட்டு மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமை எல்லாவிதத்திலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
பெங்களூரில் தங்கிப் படிக்கும் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாகத் தனது மகிழுந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக, அவரது இனத்தைச் சேர்ந்த மாணவியிடம் ஒரு கூட்டமே வன்முறை செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
அரசியல் தலைவர்கள், கட்சியினர், ஜாதி அமைப்பினர், மாணவர்கள் ஆகியோர் கூட்டமாகத் திரளும் போது உருவாகின்ற ஒருவித கட்டுப்பாடின்மையும் வெறியும் பொதுமக்கள் அனைவரிடமும் பரவி விட்டால், அப்புறம் சட்டம் என்பது எதற்காக இருக்கிறது?
இவ்விதம் வெளிநாட்டுக் குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நமது தேசத்தைப் பற்றிய மதிப்பினை உலக அரங்கில் குலைப்பதுடன், பிறநாடுகளுடனான் சுமுக உறவுக்கு வேட்டு வைத்துவிடும்.
சட்டம், கொஞ்சம் தாமதமாகவேனும், தனது கடமையைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். கூட்டங்கள் அளிக்கின்ற தண்டனைகளும், சட்டத்தின் பார்வையில் தண்டனைக்குரியவைதான் என்பதைப் பொதுமக்கள் உணரவேண்டும்.

Monday, February 8, 2016

வாழ்வு இனிது: நடப்போம், நலம் பெற!

Return to frontpage

நடை அழகு

பிறந்த குழந்தை தானாகவே புரண்டு படுத்து, பிஞ்சுக் கால்களை மடித்துத் தவழத் தொடங்குவதைக் காட்டிலும் நெகிழச் செய்வது தத்தித் தத்தி நடக்கத் தொடங்கும் தருணம்தான். நடை அத்தனை மகத்துவமானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை உலகின் பெருவாரியான மக்கள் நடையின் மூலமாகத்தான் பயணித்தனர். நடப்பது என்பது சுவாசிப்பதைப் போன்ற இயல்பான செயல்பாடு. அதை நீரிழிவு வரும் நிலையிலோ வந்த பிறகோ மருத்துவர் சொன்ன பிறகும்கூட செய்யத் தயங்கும் அளவுக்கு மனச் சோம்பலுக்கு ஆளாகிவிட்டோம் நாம்.

நட ராஜா!

எரிக்கப்படாத கலோரிகள் உடல் பருமனை அதிகரித்து மாரடைப்பு, நீரிழிவு, மூட்டு வலி, மறதி உள்ளிட்ட நோய்களுக்கு இட்டுச்செல்லும். கலோரிகளை எரிக்கச் சிறந்த வழி நடை. ஒரு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால் 415 கலோரிகள் எரிக்கப்படும். 6 இட்லியில் கிடைத்த கலோரிகளை ஒரு மணி நேர நடை மூலம் சமன்படுத்தலாம். ஒரு மசாலா தோசையில் 415 கலோரிகள் உள்ளன. மதிய சாப்பாட்டில்1200 கலோரிகள். சாப்பாட்டுப் பிரியராக இருந்தால் நிச்சயம் காலையும் மாலையும் இரு மணிநேரம் நடந்தாக வேண்டும்.

அரசியல் நடை

அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பல்வேறு விதமான தொழிலாளர்களும் நீதி கேட்டோ, நிதி கேட்டோ, ஓட்டு கேட்டோ நடைப் பயணம் மேற்கொள்கின்றனர். சட்டத்தை மீறி உப்பு காய்ச்ச நடந்தது, பூதானம் கோரி நடந்தது, மதுவிலக்குக்காக நடப்பது என்று நடைப் பயணம் சாத்வீகப் போராட்டங்களின் வழிமுறையாகவும் அமைகிறது. கோட்டை நோக்கி, முதல்வரின் வீடு நோக்கி, பிற நாட்டுத் தூதரகங்களை நோக்கி ... என நடைப்பயணங்கள் தொடர்கின்றன.

வீர நடை, விழிப்புணர்வு நடை

மிடுக்கான நடை எனபது ராணுவத்தினரின் வழக்கமான பயிற்சிகளில் ஒன்று. என்.சி.சி. போன்ற தேசிய மாணவர் படையினரும் ஆண்டில் ஒரு நாள் சாலை அணிவகுப்பு என்ற பெயரில் சில கிலோ மீட்டர்கள் நடக்கின்றனர். புற்று நோய், சர்க்கரை நோய் விழிப்புணர்வு போன்ற சமூக, மருத்துவ நோக்கங்களுக்காக மாரத்தான் நடைக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கலோரி எதிரி அல்ல

கலோரி என்றாலே உடல் நலத்துக்கு எதிரிபோலப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது நம் உடலுக்கு அத்தியாவசியமான ஆற்றல். உணவுப் பண்டங்கள் அனைத்திலும் வெவ்வேறு சதவீதத்தில் கலோரிகள் உள்ளன. அன்றாடம் நாம் செய்யும் வேலைகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவது கலோரிதான். வேலை செய்யச் செய்ய கலோரிகள் எரிக்கப்படும். எரிக்கப்படாத கலோரி கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரித்துவிடும். நமது அன்றாடச் செயல்களின் மூலம் 60% கலோரிகள் எரிந்துவிடும். மீதமுள்ள கலோரிகளை எரிக்கக் கூடுதல் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி தேவை.

ஆன்மிக நடை

ஆதி சங்கரர், மத்வாசாரியர், ராமானுஜர், விவேகானந்தர், சிவானந்தர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார், சைவ மடாதிபதிகள், ஆசார்ய துளசி உள்ளிட்ட ஜைன தீர்த்தங்கரர்கள், சீக்கிய மத குருக்கள்,இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், கிறிஸ்துவின் சீடரான புனித தாமஸ் உள்ளிட்டவர்கள்,அன்னை தெரசா, சத்ய சாய் பாபா உள்ளிட்டவர்கள் நடந்தே தம் பணிகளைச் செய்தனர். பக்தர்களும் திருவிழாக்களை ஒட்டியும் பிரார்த்தனையின் பேரிலும் பாதயாத்திரை செல்கிறார்கள்.

வியர்த்தால் எடை குறையுமா?

உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும்போது மீண்டும் குளிரூட்டவே வியர்வை சுரக்கிறது.ஆக, வியர்த்தால் எடை குறையாது என்கின்றனர் நிபுணர்கள். நம் உடலில் 450 கிராம் எடையைக் குறைக்க 3500 கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஆனால் வியர்வை மூலமாக உடலில் இருக்கும் நீரின் எடை மட்டுமே குறைகிறது.

சரியான நடை

நடப்பது இயல்பானதுதான் என்றாலும் எல்லோரும் சரியாக நடக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. முதுகெலும்பு நேராக இருக்க, கைகளை முன்னும் பின்னும் வீசி, பாதங்களைத் தரை மீது அழுத்திப் பதித்து நடக்க வேண்டும். என்னதான் டிரெட் மில்லில் நடைபயின்றாலும் காற்றோட்டமான வெளியில் சுறுசுறுப்பாக நடப்பதற்கு இணையாகாது. இறுக்கமான உடை அணிந்தோ, பளு தூக்கிக்கொண்டோ, மிகவும் நிதானமாகவோ நடந்து பயனில்லை. நடக்கும்போது பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

வியர்வை நச்சுக் கொல்லி

வியர்வையை வைத்து கலோரி எரிவதைக் கணக்கிட முடியாது. ஆனால் அது உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது. விறுவிறுப்பாக நடந்து வியர்க்கும்போது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தோல் மீது படிந்திருக்கும் கழிவுகள் அகலும், சிறு நீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கப்படும், சளி காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

நோய் அகற்ற நடை…

தினந்தோறும் 30 நிமிட விறுவிறுப்பான நடை மாரடைப்பு, வலிப்பு, நீரிழிவுநோய், மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க உதவும். தசைகளுக்கு வலு சேர்க்கும், அதிகாலை சூரிய ஒளியில் நடப்பதன் மூலம் வைட்டமின் டி கிடைத்து எலும்புகள் வலுப்பெறும்.

வாழ்க்கையோடு கலந்தது…

இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 26 கோடியே 30 லட்சம். எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் புகுத்தப்பட்டாலும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் மட்டுமே இன்றும் நாம் சோற்றில் கைவைக்க முடியும். நாற்று நடுதல் முதல் நீர்ப் பாசனம், களை பறித்தல், அறுவடை வரை விவசாயிகள் தினசரி 15 கி.மீ. நடக்கிறார்கள். அதுவே அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும் ஆதாரமாகிறது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பேசிக்கொண்டே சராசரியாக நாள் தோறும் 40 கி.மீ. நடக்கிறார்கள்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...