Friday, March 25, 2016

திரையில் மிளிரும் வரிகள் 7 - காதலை அறிவிக்கும் காலடியோசை ப.கோலப்பன் THE HINDU TAMIL




திரையில் மிளிரும் வரிகள் 7 - காதலை அறிவிக்கும் காலடியோசை
ப.கோலப்பன்
THE HINDU TAMIL
கும்பகோணம் வெறும் கோயில் நகரம் மட்டுமல்ல. இலக்கியத் துறையிலும் இசைத் துறையிலும் பெருந்தடம் பதித்தவர்கள் குடந்தையின் தெருக்களில் உலவினார்கள். பேராசிரியரும் எழுத்தாளருமான இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்து இது குறித்து உரையாடினேன். கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு ஆசிரியராக இருந்தவர் தி. ஜானகிராமன்.


ஒருமுறை அவரைச் சந்திப்பதற்காக மகாமகக் குளக்கரைக்குச் சென்றபோது அங்கே கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் எழுதி வந்த நாராயணசாமி, “ஒட்டும் இரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் பாடலை விளக்கி்க்கொண்டிருந்தாரம். வடமொழியில் பெரும்புலமை பெற்று, காளிதாசனின் படைப்புகளையெல்லாம் கசடறக் கற்றிருந்த கரிச்சான் குஞ்சு, “பாரதி பாடலின் வரிகளுக்கு நிகரான வரியை இதுவரை படித்ததில்லை” என்று சொல்லிக்கொண்டிருந்தாராம்.

“பாங்கினிற் கையிரண்டும் தீண்டி அறிந்தேன்.

பட்டுடை வீசுகமழ் தன்னில் அறிந்தேன்,

ஓங்கிவரும் உவகை ஊற்றில் அறிந்தேன்;

ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்”.

கடலை நோக்கி அமர்ந்திருக்கும் காதலன் காதலியின் கையைத் தீண்டியும் அவள் உடுத்திருக்கும் பட்டுப் புடவையின் மணத்தை முகர்ந்தும் அவன் உள்ளத்தில் பெருகும் மகிழ்ச்சியையும் கொண்டு அவள் வருகையை அறிகின்றான். ஆனால் அதையெல்லாவற்றையும் விட அவள் வந்ததுமே அவனுடைய இதயமும் ஒரே கதியில் துடிக்க ஆரம்பிக்கிறது. இந்த உணர்வைக் கொண்டே காதலி வருகையை அறிந்துவிடுகிறான்.

இந்த வரிகள்தான் பின்னாளில் கண்ணதாசனின் கைவண்ணத்தில், “உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்” என்று வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தில் வெளிப்பட்டது எனலாம். பாடலின் வரிகள், “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்று தொடங்கும்.

தமிழ்த் திரைப்பட உலகில் வில்லன்கள் வரிசையில் தனக்கென ஒரு பாணியை வகுத்திருந்த கே.ஏ.அசோகன்தான் காதலர்களின் இந்த தேசிய கீதத்தைப் பாடும் காட்சியில் தோன்றினார் என்பது முக்கியமான விஷயம். இப்பாடலுக்கு இசையமைத்தவர் வேதா. பல இந்திப் பாடல் மெட்டுகளை அப்படியே தமிழில் மாற்றித் தந்தவர் இவர்.

“வெற்றிப் பாடல்களைக் காப்பியடித்து ஜெயம் பெறலாம் என்பதே சினிமாக்காரர்களின் கொள்கை. இதற்குப் பலியானார் வேதா. ஆனால் பாட்டுக்காரனின் கனவைப் பார்த்திபன் கனவில் படரவிட்டார். வல்லவன் படங்களில், இந்தி மெட்டுகளையே தமிழில் வாழும்படி செய்துவிடுவதில் தான் வல்லவர் என்று காட்டினார். இளம் வயதில் காலமானாலும் மக்கள் செவிகளில் இன்றும் கானமாக வலம் வருகிறார்” என்று ‘திரை இசை அலைகள்’ புத்தகத்தில் வேதா குறித்து எழுதியிருக்கிறார் திரைத்துறை ஆய்வாளர் வாமனன்.

“நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்

உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை

உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்

ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை”

என்று டி.எம். சௌந்தரராஜன் தொகையறா வரிகளை ஓங்கி உச்சரிக்கையில் உலகமெங்கும் இருக்கும் காதல்களின் உள்ளங்களில் அது எதிரொலிக்கிறது. அதிலும் இரவின் அமைதியில் தூக்கத்தைத் தொலைத்துக் கிடக்கும் காதலர்களை மயிலிறகால் வருடுகிறது இப்பாடல்.

காதல்வயப்பட்டுக் கிடப்பவர்கள் எல்லோருமே எல்லாப் பிறவிகளிலுமே ஒன்றாவே இருக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொள்கிறார்கள். பக்தி இலக்கியங்களிலும் இக்கருத்து உண்டு.

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்”

என்று நம்மாழ்வார் வேண்டுகிறார்.

“எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்”

என்று திருப்பாவையில் ஆண்டாள் சொல்கிறாள். அவளே நாச்சியார் திருமொழியில்

“இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்முடையவன் நாராயணன் நம்பி”

என்கிறாள். பக்தியின் இன்னொரு வடிவம்தானே காதல். அதனால்தான் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் சைவ சமயக் குரவர்களும் நாயகி பாவம் கொண்டு ஆண்டவனை அடைய நினைக்கிறார்கள்.

“இந்த மானிடர் காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்”

ஆணவக் கொலைகள் நடக்கும் காலம் இது. மனித மனங்கள் இணைந்தாலும் மனிதர்கள் அவர்களை வாழ விடுவதில்லை. ஆகவே நிரந்தரத் தன்மையற்ற மானுடக் காதலையும் மலர்களின் வாசனையையும் ஒதுக்கித் தள்ளுகிறான் கவிஞன்.

“இந்தக் காற்றினில் நான் கலந்தேன்

உன் கண்களைத் தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

உன் ஆடையில்

ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம்

உன் பூமுகம் காணுகின்றேன்.

Obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இந்த வரிகளைப் பொருத்திக்கொள்ளலாம். தலைவன் நினைவு முழுவதையும் காதலியே ஆக்கிமித்துக் கிடக்கிறாள். உலகில் உள்ள எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி அவளின் பூமுகத்தைக் காண்கிறான். காதல் உணர்வின் உச்சம் என்று இதைச் சொல்லலாமா?

தொடர்புக்கு: bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

அரசு விழாவில் மூதாட்டிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவி வழங்குகிறார். அருகே எஸ்.டி.சோமசுந்தரம்.

எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

THE HINDU TAMIL

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘மும்பையில் மாதுங்கா, டெல்லி யில் கரோல்பாக் போல கொல் கத்தா நகரில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.

எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட் டார். விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவ தாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத் துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் ‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம்’’ என்று கூறி புறப்பட்டு விட்டார்.

மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; வியப்பு மறுபுறம். ‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே’’ என்று கேட்டுக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே, ‘‘தங் களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.

ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன் னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்கு வதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர்.

அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன் னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை. கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.

அப்படி வந்தவர்களில் பெரும் பாலோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பை யும் வெளிப்படுத்தினர்

அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.

தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பு விழா வுக்கு மறுநாள் காலை, திடீரென தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலையில் இறங்கி எம்.ஜி.ஆர். நடக்க ஆரம்பித்து விட்டார். அங்கு வந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் எம்.ஜி.ஆரோடு நடந்தனர். சாலையில் கொய்யாப் பழம் விற்றுக் கொண்டிருந்த வயதான தமிழ்ப் பெண்ணிடம் ‘‘பழம் என்ன விலை?’’ என்று ஜாலியாக கேட்டார். அந்த மூதாட்டியும் சளைக்கவில்லை. எம்.ஜி.ஆரை பார்த்த மகிழ்ச்சியில் அந்த மூதாட்டி, ‘‘உனக்குப் போய் விலை சொல்ல முடியுமாய்யா? எல்லாமே உனக் குத்தான் எடுத்துக்கோ’’ என்று கூறினார்.

அந்த மூதாட்டி நினைத்துப் பார்க்காத தொகையை அவர் கையில் திணித்த எம்.ஜி.ஆர்., கூடையில் இருந்த பழங் களை எடுத்து அருகே இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த மூதாட்டியிடமும் பழத்தைக் கொடுத்து ‘‘நீயும் சாப்பிடு’’ என்றார். அந்த மூதாட்டிக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘நீ நல்லா இருக்கணும் ராசா’’ என்று கூறிக் கொண்டே காலில் விழ முயன்றவரை தடுத்து அணைத்து ஆறுதல் கூறினார் எம்.ஜி.ஆர்.!

‘நாடோடி மன்னன்' படத்தில் நாடோடி யாக இருந்த எம்.ஜி.ஆர், சூழ்நிலை காரணமாக மன்னனாக நடிப்பார். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். பேசும் புகழ் பெற்ற வசனம் இது: ‘‘நீங்கள் மாளிகை யில் இருந்து கொண்டு மக்களை பார்க் கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன்.’’

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.

- தொடரும்...

விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


DAILY THANTHI


சென்னை,


கணவன் மறுதிருமணம் செய்த பின்னர், கீழ் கோர்ட்டு பிறப்பித்த விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.


விவாகரத்து
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமிக்கும், சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த ராமலிங்கத்துக்கும் (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2007–ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இதற்கிடையில் கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தாம்பரம் கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு மகாலட்சுமி ஆஜராகாததால், கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமலிங்கத்துக்கு ஒரு தலைபட்சமாக விவாகரத்து வழங்கி தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


மேல்முறையீடு
இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தாம்பரம் கோர்ட்டில் மகாலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம் ராமலிங்கம் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில், தாம்பரம் கோர்ட்டு தன்னுடைய மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் மகாலட்சுமி மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:


திருமணம் செல்லுமா?
விவாகரத்து தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் காலம் முடிந்த பின்னர், கணவர் மறுதிருமணம் செய்து கொண்டார். ஆனால், மேல் முறையீடு செய்யும் கால அவகாசம் முடிந்த பின்னர், கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து முதல் மனைவி மேல்முறையீடு செய்தால், அந்த கணவர் செய்த இரண்டாவது திருமணம் செல்லுமா? என்ற கேள்வி இந்த வழக்கில் எழுந்துள்ளது.


பொதுவாக விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து சில நாட்கள் காலதாமதம் செய்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார், அந்த மனுவை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும்.


ஆஜராகவில்லை
ஏன் என்றால், இதுபோன்ற வழக்கில் கணவன்மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினைகளை தாண்டி, அவர்களது குழந்தைகளின் நலனும் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. இந்த வழக்கில் தாம்பரம் கோர்ட்டு கணவருக்கு ஒரு தலைபட்சமான விவாகரத்து வழங்கிய பின்னர், அதை ரத்து செய்ய வேண்டும் என்று 24 நாட்கள் காலதாமதமாக மகாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அவர் நேரில் ஆஜராகவில்லை. வழக்குக்குரிய கட்டணத்தையும் அவர் செலுத்தவில்லை. எனவே, அவரது மனுவை தாம்பரம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. அந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யும் காலம் முடிந்த பின்னர், ராமலிங்கம் மறுதிருமணம் செய்து கொண்டார். இப்போது தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மகாலட்சுமி மனு செய்துள்ளார்.


உரிமை இல்லை
உரிய காலத்தில் விரைவாக செயல்படாமல், அலட்சியமாக இருந்து விட்டு, காலம் கடந்த பின்னர் அவர் இந்த கோர்ட்டை நாடியுள்ளார். இப்போது ராமலிங்கம் திருமணம் செய்து விட்டதால், அந்த பெண்ணின் வாழ்க்கையையும் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. ஆனால், ராமலிங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மேல்முறையீடு காலம் முடிந்த பின்னர்தான் தன் கட்சிக்காரர் திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்த பின்னர், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய மகாலட்சுமிக்கு உரிமையே கிடையாது’ என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளை தாக்கல் செய்துள்ளார்.


தள்ளுபடி
தற்போது இவர்கள் இருவருக்கும் பிறந்த மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. ஆனால், அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சத்தை ராமலிங்கம் வழங்கி வருவதாக அவரது வக்கீல் கூறினார். எனவே, மனுதாரரின் காலதாமதமான மனுவை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.


இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

சேமிப்பவர்கள் ஏமாளிகளா?

சேமிப்பவர்கள் ஏமாளிகளா?

DINAMANI

By எஸ். ஸ்ரீதுரை


First Published : 24 March 2016 01:29 AM IST
இந்தியா ஓர் ஆன்மிக தேசம்தான், சந்தேகமில்லை. நேற்று இருப்பவர்கள் இன்று இல்லை, இன்று இருப்பவர்கள் நாளை இருக்கப் போவதுமில்லை என்ற வேதாந்தக் கருத்துகள் மக்களுக்குத் தெரிந்ததுதான்.
அதற்காக, யாரும் எதிர்காலத்துக்கென்று நாலு காசு சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது என்றோ, எல்லாவற்றையும் தெய்வம் பார்த்துக் கொள்ளும் என்று மூலையில் சும்மா உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்றோ கூறிவிட முடியுமா..?
அப்படித்தான் சொல்கிறது நமது மத்திய அரசின் நிதி அமைச்சகம். சிறு சேமிப்பு, ஆயுள் காப்பீடு என்றெல்லாம் காலம் காலமாக நமது தேசத்தின் கோடிக்கணக்கான மக்களையும், சேமியுங்கள், சேமியுங்கள் என்று சொல்லிவிட்டு, இன்று அரசு நிதி நிறுவனங்களில் சேமிப்பவர்களை "அட அப்பாவிகளே! இன்னுமா எங்களை நம்பி சேமித்துக் கொண்டிருக்கிறீர்கள்'? என்று எள்ளி நகையாடிக்கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கிரோம்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, தபால் துறையின் கிஸான் பத்திரத்தில் ஒருவர் சேமிக்கும் தொகை ஐந்தரை வருடங்களில் இரட்டிப்பாகும். இந்திர விகாஸ் பத்திர சேமிப்பு ஐந்தே வருடங்களில் இரட்டிப்பாகும். அரசுத்துறை ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பிராவிடண்ட் ஃபண்டு தொகைக்கு 11% வட்டி உண்டு. ஒரு நிதியாண்டு முழுவதும் அதிலிருந்து பணம் எடுக்காத பட்சத்தில் போனஸ் வட்டியும் உண்டு.
அரசுத் துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நிலை வைப்புக்கான குறைந்த கால முதலீட்டுக்கே 12.5%, நீண்ட கால நிலை வைப்புகளுக்கு 15% வரையிலும் வட்டி கொடுக்கப்பட்டது. தபால் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகளில் துவங்கப்படும் தொடர்வைப்புகளுக்கும் 12% வட்டி இருந்தது.
ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வூதியம் பெறுபவர், சிக்கனம் பேணும் இல்லத்தரசிகள் ஆகிய எல்லோருடைய சேமிப்புகளுக்கும் பாதுகாப்பானதாகவும், நியாயமான லாபம் தேடித் தருவதாகவும் விளங்கிவந்த இத்தகைய சிறு சேமிப்புகளுக்கும் அடுத்தடுத்து வந்த அரசுகளால் அதிர்ச்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை வாழ்விப்பதற்காகவே அவதரிக்கின்ற ஒவ்வொரு நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி ஆளுநர்களும் தங்களது மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசனைகள் பல செய்து ஒரு முடிவுக்கு வந்து, இந்தியத் திருநாட்டின் சிறு சேமிப்பாளர்களை ஓட ஓட விரட்டிவிட்டு, அதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உத்தேசித்திருப்பதாகத் தோன்றுகின்றது.
இல்லாவிட்டால், ஒரு காலத்தில் சாதாரண சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்பட்ட 7% வட்டியை நீண்டகால டெபாசிட்டுகளுக்கு வழங்கும் வினோதம் எங்காவது நடைபெறுமா?
அப்படி அற்ப சொற்பமாக வழங்கப்படும் வட்டியிலும் TDS என்ற வகையில் ஒரு பிடித்தம் செய்து அதை வருமான வரித்துறை எடுத்துக் கொள்ளுமா? அஞ்சலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான போனஸும் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு அதுவும் இல்லாமல் ஆக்கப்படுமா? மூத்த குடிமக்கள் நிலை வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் இப்படிக் கண்மூடித்தனமாகக் குறைக்கப்படுமா?
1990களில் ஆங்காங்கே நகைக் கடைகள், மகிழுந்து விற்பனைக் கூடங்கள், தேக்குப் பண்ணை வியாபாரிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் முளைத்து 18%, 24% வட்டி என்றெல்லாம் ஆசை காட்டியதில் மக்கள் பலரும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து முதலுக்கே மோசமாகிப் போனது நினைவிருக்கலாம்.
அந்தச் சுனாமிகளிலிருந்தெல்லாம் தப்பித்த மக்கள்தான் இப்போது, சேமித்த சொற்பப் பணத்தைக் காப்பாற்றிகொண்டால் போதும் என்றும், அதையும் தபால் துறை, பொதுத் துறை வங்கிகள் போன்றவற்றில் முதலீடு செய்தால் குறைந்த வட்டியானாலும், போட்டு வைத்த பணம் பத்திரமாயிருக்கும் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களைச் சீரமைக்கிறோம் என்ற பெயரில், குறைத்துக் கொண்டே போனால், அப்புறம் யாருக்குத்தான் சேமிப்பில் ஊக்கமும் உற்சாகமும் இருக்கும்..?
விலைவாசி உயர்வு, விழித்தது முதல் உறங்குவது வரை கடன், கடன் அட்டை, மாதத் தவணை விற்பனையில் மகிழுந்து முதல் சகலமும் விற்பனை, கெளரவத்திற்காக வரவுக்கு மீறிய செலவு... என்று எல்லாவற்றையும் கடந்து கொஞ்சமாவது சேமிக்க வேண்டும். அதையும் அரசுத் துறை நிதிகளில் சேமிக்கவேண்டும் என்று முனைகின்ற நடுத்தர மக்களை வட்டிக் குறைப்பு, வட்டிக்கு வரி என்றெல்லாம் அரசே மிரட்டுவது நியாயம்தானா..?
ஒருபுறம் சேமிக்கும் மக்களை வெறுப்பேற்றுவது, கல்லூரிப் படிப்பிற்கும், விவசாயத்திற்கும், வீடு கட்டுவதற்கும் வங்கிக் கடன் வாங்கும் மக்களை அலைக்கழித்து அவமானப்படுத்துவதும், மறுபுறம் எல்லையில்லாத கடன்களை மல்லையாக்களுக்குக் கொடுத்துவிட்டு விழிப்பதுதான் சிறந்த நிர்வாகம் என்பதன் அளவு கோலா என்பதை நம்மை ஆள்பவர்களும், அதிகாரிகளும் யோசிக்க வேண்டும்.
மொத்தத்தில் சொல்வதென்றால், அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களில் இனி முதலீடு செய்வதும் ஒருவகை முட்டாள் தனமோ, ஏமாளித்தனமோ என்ற எண்ணம் நமது மக்களின் மனத்தில் தோன்றுவதற்கு முன்பு உரியவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும்தான்... ஆனால், அதற்கு ஏழை, எளிய சேமிப்பாளர்களின் வயிற்றில் அடிப்பதைத் தவிர வேறு சிறந்த வழிமுறைகள் உண்டு. நம்மை வழி நடத்தும் பொருளாதார அறிஞர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும், நெஞ்சில் ஈரத்தோடு...

Thursday, March 24, 2016

டி.எம்.சவுந்தரராஜன் 10 ராஜலட்சுமி சிவலிங்கம்



பிரபல பின்னணி பாடகர்

‘டிஎம்எஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும், தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் (T.M.Soundararajan) பிறந்த தினம் இன்று (மார்ச் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மதுரையில் சவுராஷ்டிரக் குடும்பத்தில் (1923) பிறந்தார். தந்தை தொகுளுவ மீனாட்சி ஐயங்கார், கோயில் அர்ச்சகர். ‘தொகுளுவ’ என்பது குடும்பப் பெயர். பஜனைப் பாடல் பாடுவதில் வல்லவர். இவரும் இயல்பாகவே பாடுவதில் நாட்டம் கொண்டிருந்தார்.

# பள்ளி இறுதிப் படிப்பு வரை பயின்றார். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று, கச்சேரிகள் செய்தார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடைகளில் அவரைப் போலவே பாடினார்.

# பிரபல இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னி தனது ‘கிருஷ்ண விஜயம்’ (1950) திரைப்படத்தில் ‘ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி’ பாடலைப் பாட வாய்ப்பு அளித்தார். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. ‘தூக்குத் தூக்கி’ (1954) திரைப்படப் பாடல்கள் இவரைப் புகழேணியில் ஏற்றிவிட்டன.

# 1960, 70-களில் இவர் பாடாத படங்களே இல்லை எனலாம். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட அனைவருக்கும் பாடி 5 தலைமுறை பின்னணிப் பாடகர் என்ற பெருமை பெற்றார். அந்தந்த நடிகருக்கேற்ப குரலை மாற்றிப் பாடும் ஆற்றல் பெற்றவர்.

# இந்தி இசையமைப்பாளர் நவ்ஷாத் இவரை பலமுறை அழைத்தும் ‘எனக்கு தமிழ் போதும்’ என்று மறுத்துள்ளார். இது இந்தி சினிமாவின் நஷ்டம் என்றாராம் நவ்ஷாத். இவரது ‘ஓராயிரம் பாடலிலே’ பாடலைக் கேட்டு உருகிய இந்தி பாடகர் முகம்மது ரஃபி, இவரது தொண்டையை வருடி ‘இங்கிருந்துதானா அந்த குரல் வருகிறது?’ என கேட்டாராம்.

# 60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது முருக பக்திப் பாடல்கள் மிகவும் பிரசித்தம்.

# தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். பட்டினத்தார், அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

# பேரவைச் செம்மல், கலைமாமணி, பத்ம உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். 2002-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

# காஞ்சி மஹா பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர். இவரை ‘கற்பகவல்லி’ பாடலை பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த காஞ்சிப் பெரியவர், தான் போர்த்தியிருந்த சால்வையை பரிசாக அளித்தார். பாடலின் பொருள் உணர்ந்து பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். திருப்புகழ் பாடும் வாய்ப்பு வந்தபோது, வாரியாரிடம் சென்று அதன் பொருளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகே பாடினார்.

# தன் பாடல்கள் மூலம் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் டிஎம்எஸ் 91-வது வயதில் (2013) மறைந்தார்.

கவுசல்யாக்களின் கதி என்ன? ....பாரதி ஆனந்த்



சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இளவரசனை மறந்துவிட்டோம்... படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் பற்றிய விவாதங்கள் ஓய்ந்துவிட்டன.. இப்போது பரப்பபாகப் பேசப்படும் சங்கர் கொலையும் காலத்தினால் கட்டாயம் அழிந்துவிடும்.

ஆனால், இந்தச் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதியின் பிடியில் கருகிய திவ்யா, ஸ்வாதி, கவுசல்யாவின் எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இன்று இவர்களது நிலைமை என்ன? வறட்டு சாதி கவுரவத்தினால் தலைக்கேறிய ஆணவத்துக்கு இரையானதைத் தவிர இவர்கள் அடைந்த பலன் என்ன?

இளவரசன் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். கோகுல்ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட யுவராஜ் போலீஸுக்கே சவால்விடும் அளவுக்குச் செய்த அலப்பறைகளை யாரும் மறந்திருக்க முடியாது. சங்கரைக் கொலை செய்தவர்கள் சலனமில்லாமல் சாவியை மாட்டி வண்டியைச் செலுத்தியபோது தெரிந்த சாதி வெறி இன்னும் சில நாட்களாவது மனசாட்சி உள்ளவர்களின் நினைவுகளில் நிற்கும்.

சாதிப் பெருமையை, குலப் பெருமையைக் காக்க வேண்டிய நிர்பந்தம் பெண்கள் மீது இச்சமூகத்தால் திணிக்கப்பட்டிருக்கிறது.

உயர்கல்வி, வேலை நிமித்தமாகச் சொந்த ஊரை விட்டு நகரங்களுக்குச் செல்லும் பெண் பிள்ளைகளுக்குக் குடும்பப் பெரியவர்கள் திருநீறு இட்டு ஆசீர்வதிக்கும்போது, ‘நம் குடும்ப கவுரவத்தை நீதான் அம்மா காப்பாற்ற வேண்டும்’ என்றே ஆசீர்வதிப்பார்கள். அதன் பின்னால் உள்ள அரசியல் சாதி மாறி திருமணம் என்பதைக் கனவிலும் நினைத்துவிடாதே என்பதே. அதையும் மீறி காதல் செய்ததாலேயே இன்று சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள் சில பெண்கள்.

இன்று தனி மரமாக நிற்கும் கவுசல்யாவின் ஒற்றைக் கோரிக்கை, தன் படிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான். இளவரசன் தற்கொலைக்குப் பின் தனக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவர்களிடம் திவ்யா தெரிவித்ததும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பத்தையே.

‘படிப்பைத் தொடர உதவுங்கள்’ என கவுசல்யா முன்வைத்த வேண்டுகோளுக்கு சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் அதிர்ச்சி தருகின்றன. படிக்கும்போது காதலில் விழுந்ததற்காகக் கிடைத்த தண்டனையை அனுபவியுங்கள், உங்கள் நிலை மற்றவர்களுக்கு ஒரு பாடம் போன்ற கருத்துகளே பகிரப்படுகின்றன. வீட்டில் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருக்கும் என்ற பயத்திலேயே அவசரமான திருமண பந்தத்துக்கு திவ்யாவும் கவுசல்யாவும் தள்ளப்பட்டனர். ஒருவேளை அவர்கள் காதலுக்கு அவர்கள் வீடுகளில் அங்கீகாரம் இருந்திருந்தால் படிப்பை முடித்துவிட்டுத் திருமணத்தைப் பற்றி யோசித்திருப்பார்கள். எந்தத் திருமணம் தங்களைப் பிரிக்காது என நினைத்தார்களோ அதே திருமணம்தான் அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கிறது.

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரைக் கொன்று தாகம் தீர்த்துக் கொண்ட சாதி வெறி திவ்யாவையும், கவுசல்யாவையும் அவர்கள் பாதையில் விட்டுவைக்குமா? சமூகத்தை நோக்கிக் கரம் நீட்டியிருக்கும் திவ்யா, கவுசல்யாக்களுக்கு நாம் செய்யப்போவது என்ன? இதற்கான பதிலில்தான் அவர்கள் வாழ்வும் எதிர்காலமும் அடங்கியிருக்கின்றன.

எம்ஜிஆர் 100 | 28 - ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’!

‘சிரித்துவாழ வேண்டும்’ பட பூஜையில் எம்.ஜி.ஆரை வரவேற்கிறார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனின் மகனும் படத்தின் இயக்குநருமான எஸ்.பாலசுப்ரமணியன்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனக்கு கெடுதல் செய்தவர்களுக்கு கூட நன்மை செய்யும் எண்ணம் கொண்டவர். அப்படிப்பட்டவர், தனக்கு உதவி செய்தவருக்கு நன்மை செய்யாமல் விடுவாரா? அப்படி எம்.ஜி.ஆருக்கு உதவி செய்ததோடு, அவரால் உயரத்துக்குச் சென்றவர்களில் முக்கியமானவர் மணியன்.

ஆனந்த விகடன் பத்திரிகையில் பணியாற்றி வந்த மணியன், 1968-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி ஒரு கட்டுரை வேண்டி எம்.ஜி.ஆரை அணுகினார். அந்த நட்பு தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு சென்று வந்து பயணக் கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதிக் கொண்டிருந்தார் மணியன். அந்த அனுபவத்தால் வெளிநாடுகளில் அவருக்கு தொடர்புகள் உண்டு. அந்த சமயத்தில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

வெளிநாடுகளில் படம் எடுப்பதற்காக எம்.ஜி.ஆர். செல்வாரா? மாட்டாரா? ஏறத் தாழ ஒன்றரை மாதம் எப்படி எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் இருக்க முடியும்? இங்கு எவ்வளவு படங்கள் நடிக்க வேண்டியுள் ளது? அரசியல் வேறு இருக்கிறது; எம்.ஜி.ஆர். போகமாட்டார் என்று சந்தேகங்கள், வதந்திகள் றெக்கை கட்டி பறந்த நிலையில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக வெளிநாட்டுக்கு பறக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து விட்டார்.

1970-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலகினர் வாழ்த்துக்களுடன் எம்.ஜி.ஆர். ஜப்பா னுக்குப் புறப்பட்டுவிட்டார். இங்கே பல்வேறு பணிகள் இருந்தாலும் இனி யும் தாமதிக்காமல் உடனே புறப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் எக்ஸ்போ 70 கண்காட்சி. செப்டம்பர் 15-ம் தேதி யுடன் அந்த மகத்தான கண்காட்சி முடியப் போகிறது என்று செய்தி வந்தது. அதற் குள் அங்கு சென்று காட்சிகளை படமாக்கி தமிழக மக்களின் கண்களுக்கு விருந் தாக்க வேண்டும் என்ற துடிப்புதான் எம்.ஜி.ஆரை புறப்பட வைத்தது.

எக்ஸ்போ -70 கண்காட்சி உட்பட, கீழ்திசை நாடுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புகள் நடப்பதற்கு உதவியவர் மணியன். தனது குழுவின ரோடு செப்டம்பர் 5-ம் தேதி டோக்கியோ நகரின் ஹனீதா விமான நிலையம் சென்று இறங்கினார் எம்.ஜி.ஆர்.! அவரை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். அவர்களோடு ஜப்பா னின் தேசிய உடையான ‘கிமோனோ’ அணிந்த பெண்கள் கையில் மாலையுடன் எம்.ஜி.ஆரை வரவேற்க காத்திருந்தனர்.. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘பன்சாயி...’ பாடலின் ஆரம்பத்தில் நடிகை சந்திரகலா வித்தியாசமான உடை அணிந்திருப்பாரே? அதுதான் ‘கிமோனோ'.

டோக்கியோவில் எம்.ஜி.ஆரை பார்த் தவர்களுக்கு வியப்பு. தனது வழக்கமான தொப்பி, கண்ணாடி, வேட்டி, சட்டையுட னேயே டோக்கியோவில் எம்.ஜி.ஆர். கால் பதித்தார். வரவேற்பை ஏற்றுக் கொண்டு டோக்கியோவின் பிரபல இம்பீரியல் ஓட்டலில் இரவு ஒரு மணிக்கு தான் சென்று தங்கினார் எம்.ஜி.ஆர்.

அசதி, சோம்பல், நீண்ட ஓய்வு இதெல் லாம் எம்.ஜி.ஆர். அறியாத ஒன்று. இரவு ஒரு மணிக்கு ஓட்டலுக்கு சென்று படுத் தாலும் மறுநாள் அதிகாலையிலேயே எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டார். செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எக்ஸ்போ கண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எட்டு லட்சம் பேர் உள்ளே போய் விட்டார்கள். இனிமேல் உள்ளே வர இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. கண்காட்சிக்கு உள்ளே செல்லும் நுழைவாயில்கள் மூடப்பட்டன.

முக்கியமான அதி காரிகளை சந்தித்து கண்காட்சிக்கு உள்ளே செல்ல அனுமதி பெற்றுத் தந்தார் மணியன். அதிகாரிகளி டம் ‘இந்தோகா ஹிதேகி தகஹாஷி’ என்று ஜப்பானிய மொழி யில் ஒரு அஸ்திரத்தை வீசினார் மணியன். உடனே அனுமதி கிடைத்தது. ஜப்பானில் மக்களால் விரும்பப்படும் புகழ் பெற்ற நடிகரின் பெயர் ஹிதேகி தகஹாஷி. ‘இந்தியாவின் ஹிதேகி தகஹாஷி’ என்று எம்.ஜி.ஆர். பற்றி மணியன் கூறியது தான் அனுமதிக்கு காரணம்.

மணியனால் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இன்னொரு பெரும் புதையலும் கிடைத் தது. ஆனந்த விகடன் இதழில் ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். தனது வாழ்க்கை வரலாற்றை எழுதக் காரணமாக இருந்த வர் மணியன். வெளிநாடு களில் படப்பிடிப்பு நடத்த தனக்கு உதவி செய்த மணிய னுக்கு, பதிலுக்கு உதவ முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

ஒருநாள் மாலை. சென்னை தியாக ராய நகரில் மணியன் வீட்டு வாசலில் எம்.ஜி.ஆரின் கார் சென்று நிற்கிறது. திடீரென தனது வீட்டுக்கே வந்துவிட்ட எம்.ஜி.ஆரை பார்த்து மணியனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அந்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கு முன்பே, அவருக்கு அடுத்த இன்ப அதிர்ச் சியை எம்.ஜி.ஆர். அளித்தார். ‘‘வித்வான் லட்சுமணனுடன் சேர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்குங்கள், நான் நடிக்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

பேப்பரும் பேனாவும் கேட்டு வாங்கி, தனது கையாலேயே படக் கம்பெனியின் பெயரை யும் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆரால் உதய மானதுதான் ‘உதயம் புரொடக் ஷன்ஸ்’ பட நிறு வனம். அந்நிறுவனம் தயாரித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயவீணை’. பின்னர், படத் தயாரிப்பாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் உயர்ந்தார் மணியன்.

‘இதயவீணை’ படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கட்சி நிர்வாகிகளின் சொத்து விவரம் கேட்டதையடுத்து, 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி திமுகவில் இருந்து நீக்கப் பட்டார். அதுவரை புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சித் தலைவரானார். அப்போது, ‘இதயவீணை’ படப்பிடிப்பில் இருந்தார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஷ யத்தைக் கேள்விப்பட்டு, பாயசம் கொண்டு வரச் சொல்லி எல்லாருக்கும் கொடுத்து, தானும் குடித்துவிட்டு, ‘‘இப் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்றார். படத்தில் கார் விபத்து காட்சி ஒன்று வரும். அன்று அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். சிறப்பாக எடுத்து முடித்தார்.

‘இதயவீணை’ படம் முதலில் 1972 அக்டோபர் 6-ம் தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்தது. இடையில் அரசியல் பரபரப்புகள் காரணமாக படம் ‘ரிலீஸ்’ தள்ளிப் போய் அக்டோபர் 20-ம் தேதி படம் வெளியானது. இடைப்பட்ட நாட் களில் அப்போதைய சூழலுக்கேற்ப அரசியல் பொடிவைத்து எழுதப் பட்ட பாடல் காட்சியைப் படமாக்கி, பொருத்தமான இடத்தில் படத் தில் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.

திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் போது, ரசிகர்களின் அலப்பறையால் தியேட்டரே ஆடிய அந்தப் பாடல்:

‘ஒரு வாலும் இல்லே, நாலு காலும் இல்லே; சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே....’

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

‘இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்றன.

- தொடரும்...

NEWS TODAY 21.12.2025