Wednesday, April 6, 2016

வருகிறது `ஆர்கானிக் காபி’!

வருகிறது `ஆர்கானிக் காபி’!


காலை எழுந்தவுடன் காபி, அது இல்லையேல் நம்மில் பலருக்கு பைத்தியம் பிடித்தது போலாகிவிடும். காபி என்ற பெயரில் ஏதேனும் ஒன்றை சூடாகக் குடிப்போர் சிலர். ஆனால் பெரும்பாலும் டிகாஷன் காபிக்கு அடிமையானோர் ஏராளம். இத்தகைய டிகாஷன் காபியின் சுவையை சிலாகித்து பேசுவோரும் உண்டு. காபியில் கஃபீன் என்ற பொருள் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்ற மருத்துவ ஆலோசனை கூறுவோரில் பலரும் காபியின் சுவைக்கு அடிமை என்பதுதான் நிஜம்.

விரைவிலேயே ஆர்கானிக் காபி விற்பனைக்கு வர உள்ளது. இத்தகைய காபியை அளிக்கப் போவது கேரள மாநிலத்தில் உள்ள கூட்டுறவு அமைப்பினர்தான்.

கோட்டயத்தைச் சேர்ந்த விவசாயிகள் முற்றிலும் ரசாயன உர கலப்பில்லாத இயற்கை உரங்களின் மூலம் விளைவிக்கப்படும் ஆர்கானிக் காபி-யை விற்பனை செய்ய நாடு முழுவதும் விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

மன்னர்காடு சோஷியல் சர்வீசஸ் சொசைட்டி (மாஸ்) என்ற கூட்டுறவு அமைப்பு இந்த காபி விற்பனையகத்தைத் தொடங்க உள்ளது. சங்கிலித் தொடர் விற்பனையகமாக நாடு முழுவதும் தொடங்க உள்ள இந்த விற்பனையகத்துக்கு `காபி டே மோன்ட்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலாவது விற்பனையகம் கேரளத்தில் தொடங்கப்பட்டு பிறகு படிப்படியாக விரிவாக்கம் செய்யப் போவதாக `மாஸ்’ அமைப்பின் தலைவர் பிஜுமோன் குரியன் தெரிவித்துள்ளார்.

வெறுமனே ஆர்கானிக் காபியை மட்டும் இங்கு விற்பனை செய்யாமல் பிற ஆர்கானிக் தயாரிப்புகளான பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்யவும் `மாஸ்’ திட்டமிட்டுள்ளது.

2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டுறவு அமைப்பில் 5 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு 3,110 ஹெக்டேராகும். உறுப் பினர்கள் 18 கிராமங்களில் பரவியுள்ள னர். காபி, கோகோ பிற நறுமண பொருள்களை ஐரோப்பிய நாடுகளுக்கு `மாஸ்’ ஏற்றுமதி செய்கிறது.

இந்த சங்கம் ஆண்டுக்கு 4,000 டன் நறுமணப் பொருள்கள், 6 ஆயிரம் டன் கோகோ, 2,600 டன் காபி மற்றும் 1,850 டன் பழ வகைகளை உற்பத்தி செய்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தமிழகத்திலும் ஆர்கானிக் காபியை பயிரிடுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ரசாயன உரக் கலப்பில்லாத பொருள்களை ஏற்றுமதி செய்யும் அங்கீகாரம் பெற்ற சங்கமாக `மாஸ்’ திகழ்கிறது. கடந்த ஆண்டு ரூ. 30 கோடியை ஏற்றுமதி வருமானமாக இது திரட்டியுள்ளது.

இந்த சங்கத்தின் உற்பத்திகளுக்கான தேவை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வருடந்தோறும் 20 சதவீத வளர்ச்சியை பெற்று வருவதாக குரியன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் காபி கொட்டை களின் விலை வீழ்ச்சியடைந்து வந்த போதிலும், ரசாயன உரக் கலப்பில்லாத தங்கள் சங்கத்தின் ஆர்கானிக் காபி கொட்டைகளுக்கு கடும் தேவை இருப்பதாக பெருமையோடு குறிப்பிடுகிறார் குரியன். ஆர்கானிக் காபி கொட்டைகளுக்கு அதிக விலை கிடைப்பதால் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு அதிக விலை தர முடிகிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குரியன் தெரிவித்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் ஆர்கானிக் பொருள்களை சாகுபடி செய்வதற்கான மையத்தை உருவாக்கி அதை ஊக்குவித்தும் வருகிறது மாஸ். இங்கு 12 வகையான ரசாயன கலப்பில்லாத பொருள்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் உரக் கலப்பில்லாத பொருள்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் இத்தகைய பொருள் களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் குரியன்.

சுதேசியாக உருவாக்கப்பட்டுள்ள ரசாயன உரக் கலப்பில்லாமல் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் காபி-க்கு அமோக வரவேற்பிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

``மாஸ்’ முயற்சிக்கு மிகப் பெரும் ``மாஸ்’’ உருவாகும்.

வேகமாய் வளரும் ஊழல்

சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்


நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி ‘முந்த்ரா ஊழலை’ நாடாளுமன்றத்தில் எழுப்பினார்

இந்தியாவின் தூதராக 1948-ல் பிரிட்டனில் பணியாற்றிய வி.கே. கிருஷ்ண மேனனைத் தொடர்புபடுத்தி ‘ஜீப் ஊழல்’ வெளியானது. இந்திய ராணுவத்துக்காக 200 ஜீப் ரக வாகனங்கள் வாங்க ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது. அவற்றில் 155 மட்டுமே வந்து சேர்ந்தன. ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மேனன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளினார் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு. 1959-ல் நாட்டின் ராணுவ அமைச்சராகவும் மேனனை நியமித்தார்.

அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. விதிமுறைகளை மீறி, தொழிலதிபர் முந்த்ராவின் நிறுவனங்களில் செய்த ரூ.1.24 கோடி முதலீடு ஒரு ஊழலாக வெடித்தது. 1958-ல் முந்த்ரா ஊழலை நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பினார். முந்த்ராவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நிதித்துறை செயலர் எச்.எம். படேல் ஆகியோர் பதவி விலகினார்கள்.

அலைக்கற்றை ஊழல்

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர் ஆ. ராசா பதவி விலகினார். நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை அளித்த பிறகும்கூட இன்னும் விசாரணை அளவிலேயே இருக்கும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

அரசு நிறுவனமான ‘ஏர்-இந்தியா’ தனக்கான தேவையைவிட இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் விமானங்களைக் கடனுக்கு வாங்கியது. இதற்குக் காரணம் விமானக் கொள்முதலுக்காக அந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட தரகுதான் என்று பின்னர் தெரியவந்தது. அப்போது விமானப் போக்குவரத்து அமைச்சராக பிரஃபுல் குமார் படேல் பதவி வகித்தார். விமானங்களை இரு மடங்காக வாங்கினாலும் வருவாய் தரும் விமான வழிப்பாதைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு இப்போது ரூ.35,000 கோடி கடனும், தொடர் இழப்பும் ஏற்பட்டிருக்கின்றன.

மக்கள் நல திட்ட ஊழல்

அரசுக்குத் தேவைப்படும் கொள்முதல்களில் மட்டுமல்லாமல், மக்கள் நலத்திட்டங்களிலும் கணிசமான அரசுப் பணம் தனியார் நிறுவனங்களுக்கு மடைமாற்றி விடப்படுகிறது. ஏழை மக்களுக்கான மண்ணெண்ணெயில் 40%, டீசலுடன் கலப்படம் செய்வதற்குக் கடத்தப்படுகிறது. மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 50% உரிய பயனாளிகளுக்குச் சென்று சேர்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி அரசின் கொள்முதல், விநியோகம், மக்கள் நலத் திட்டங்களுக்கான தொகை கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டும்கூட அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், இடைத் தரகர்கள், அதிகாரத் தரகர்கள் என்று யாருமே வழக்குகளில் சிக்குவதோ தண்டனை பெறுவதோ மிக மிகக் குறைவு. கொள்ளையில் கிடைக்கும் பணம் மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரையுள்ள அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுவதால் யாரும் தண்டனை பெறுவதில்லை, ஊழலும் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது.

தேசியமய நோக்கம்

1969-ல் தனியார் வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் இந்திரா காந்தி தேசியமய மாக்கினார். விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் வங்கிக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறப்பட்டது..

ஆனால் நடைமுறையில் விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கும் வங்கிக் கடன் கிடைப்பது எளிதல்ல. வங்கிகளிலேயே ‘உள்நபர்கள்’ இடைத் தரகர்களாகச் செயல்பட்டு வங்கிப் பணத்தை, தங்களைக் கவனிப்பவர்களுக்குக் கொடுத்து, கூடுதல் வருமானம் பெறுகின்றனர். இப்போது இந்தத் தொகை இமாலய அளவுக்கு உருவெடுத்துவிட்டது.

சமதர்மம் (சோஷலிசம்) என்பது சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கானது; ஆனால் வரிவிதிப்பு என்பது ஏழைகளிடமிருந்து திருடி பணக்காரர்களுக்குக் கடனும் சலுகைகளும் வழங்குவதாக மாறிவிட்டது. வரி ஏய்ப்பும், ‘ஹவாலா’ என்று அழைக்கப்படும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றங்களும் அரசின் ஆசியோடு நடக்கின்றன. வரி விலக்கு பெற்ற நாடுகளாக சில நாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்நாடுகளின் முகவரிகளில் நிறுவனங்களைப் பதிவுசெய்துகொண்டு கருப்பை வெள்ளையாக்கிக் கொள்கின்றனர் தொழில் அதிபர்கள். இதற்காக ஏற்றுமதி மதிப்பைக் குறைத்தும், இறக்குமதி மதிப்பை அதிகரித்தும் போலியாக ஆவணங்களைத் தயாரித்துக் காட்டி இடைவெளியாகத் திரளும் பெரும் பணத்தை அப்படியே விழுங்குகின்றனர்.

ராஜீவும் ராவும்

1980-களில் ராஜீவ் காந்தியும் 1990-களில் நரசிம்ம ராவும் ‘லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா’ ராஜ்யத்தை ஒழிக்க முயன்றார்கள். முதலீடு, விற்பனை, வருமானம் போன்றவற்றுக்கு அரசு சில சலுகைகளை அளித்தாலும் அரசு இலாக்காக்களின் அதிகாரவர்க்கக் கட்டமைப்பு அப்படியே தொடர்கிறது. எனவே அதன் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும், ஊழல்களும் தொடர்கின்றன. இப்போதைய வித்தியாசம் என்னவென்றால் முன்பைவிடப் பல மடங்குக்குப் பணம் மடைமாறுகிறது.

இத்தகைய ஊழல்களை விசாரிக்கும் நடை முறைகளும் ஆண்டுக்கணக்காக மாற்றமில்லாமல் அப்படியே தக்கவைத்துக்கொள்ளப்படுகின்றன.

கோடிக் கணக்கில் பணம் கொள்ளையடிக்கப் பட்டால் அதை விசாரிக்கவும் தவறிழைத்தவர்களைத் தண்டிக்கவும் அரசு வலுவான கட்டமைப்பை உருவாக்காமல் இருப்பதால், தொழிலதிபர்களுடன் கூட்டுக் சேர்ந்து கொள்ளையடிப்பதே லாபம் என்று அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். அப்படியே குற்றச்சாட்டுகள் பேரில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தாலும் அது ஆண்டுக் கணக்கில் நீடித்து, கடைசியில் ‘போதிய ஆதாரங்கள் இல்லை’யென்று வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது அல்லது சிறு தொகை மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்படுகிறது.

அரசின் வளம், நிதி ஆகியவற்றை விநியோகிப் பதற்கான அமைப்புகள் தவறு செய்தால் தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் பலமோ, அதிகாரமோ வழங்கப்படுவதில்லை. அதன் தலைவர்களே பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், ஆளும் கட்சியின் தயவில் பதவி வகிப்பவர்கள் என்பதால் தங்களைப் போன்ற அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்க அவர்கள் முன்வருவதில்லை.

மொரிஷியஸ், சிங்கப்பூர்

மொரிஷியஸ் நாட்டில் மூலதன ஆதாய வரி இல்லை. எனவே அங்கிருந்து முதலீடு செய்யப் படுவதாகக் காட்டி வரி விதிப்பிலிருந்து தப்புகின்றனர். சில சிங்கப்பூர் வங்கிகள் பங்கேற்புப் பத்திரங்கள் மூலம், முதலீட்டாளர் யார் என்றே அறிவிக்காமல் முதலீடு செய்யச் சட்டரீதியாக இடம் தருகின்றன. இதைப் போன்ற வழிகளால் கருப்புப் பணம் பெருகுவதுடன் வெள்ளையாக்கப்பட்டு புழக்கத்துக்கும் வந்துவிடுகிறது. வரி ஏய்ப்பு மிக எளிதாகவும் சட்டபூர்வமாகவும் நடக்கிறது. இப்படியொரு ஏற்பாட்டை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் வேண்டுமென்றே உருவாக்காமல், தற்செயலாக நடந்திருக்கிறது என்று நம்ப நீங்கள் தயாரா?

இப்போதுள்ள அரசும் முந்தைய நிர்வாக நடைமுறைகளை அப்படியே காப்பாற்றத்தான் நினைக்கிறது; இதை மாற்ற வேண்டும் என்ற விருப்பமோ நியாயமான சந்தை உருவாக வேண்டும் என்ற வேட்கையோ இப்போதைய அரசுக்குக் கிடையாது. ஊழலுக்கு எதிராகப் பேசும். ஆனால் ஊழலுக்கு வகை செய்யும் வழிமுறைகளை மாற்றாது, கருப்புப் பணம் புழங்குவதற்காகச் செய்துகொள்ளப்பட்ட ஏற்பாடுகளைக் களையாது. மிகப் பெரிய ஊழல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கப் போதிய எண்ணிக்கையில் நீதிபதிகளையும் நீதிமன்றப் பணியாளர் களையும் நியமிப்பதுகூட இல்லை. ஊழலுக்கு எதிரான, கருப்புப் பணத்துக்கு எதிரான இயக்கம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்; மேடைப் பேச்சுக்கு மட்டும்தான்.

- எஸ்.எல். ராவ், பயன்பாட்டுப் பொருளாதாரத்துக்கான தேசியப் பேரவையின் உறுப்பினர்.

தமிழில்: சாரி

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

ஆர்.ஷபிமுன்னா

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் அரசு வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த வீடுகள் காலி செய்யப்படுவதற்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கேடர்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணியில் இணைந்து பணி யாற்றுவது வழக்கம். இந்த கால கட்டத்தில் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் உள்ள அரசு வீடுகள் அல்லது பங்களாக்கள் அவர் களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த அதிகாரிகள் பணி ஓய்வு அல்லது பணியிட மாறுதலுக்குப் பின் தங்கள் வீடுகளை காலி செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. இந்நிலையில் இந்த அவகாசம் முடிந்த பிறகும் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக கேஜ்ரிவால் அரசு அடையாளம் கண்டுள்ளது.

இவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கேஜ்ரிவால் அரசு, இவர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்குமாறு கோரியுள்ளது. டெல்லியில் அரசு குடியிருப்புகள் பற்றாக்குறை நிலவுவது இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்புகளே எங்களுக்கு தரப்படுகிறது.

இதில் பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்து குடியிருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செலவு செய்த அதிகாரிகள் சில மாதங்கள் கூடுதலாக தங்க விரும்புவது உண்டு. மேலும் குழந்தைகளின் கல்வி இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. என்றாலும் கேஜ்ரிவால் அரசு - மத்திய அரசு இடையிலான அரசியல் மோதலே இதன் பின்னணி காரணம். தங்கள் பேச்சை கேட்காதவர்களை குறிவைத்து கேஜ்ரிவால் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது” என்றார்.

முன்னதாக இந்த வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பை டெல்லி அரசு கடந்த சில மாதங்க ளாக தொகுத்து வந்தது. பிறகு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வீடு களை காலி செய்ய அதிகாரி களுக்கு நிர்ப்பந்தம் தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டது. என்றாலும் இதற்கு எந்தப் பலனும் இல்லாததால் தற்போது மத்திய அரசை கேஜ்ரிவால் அரசு அணுகியுள்ளது.

அரசு வீடுகளுக்காக ‘எஸ்டேட் ரூல்ஸ்’ என்ற விதிகள் உள்ளன. இதன்படி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய 3 மாதம் அவகாசம் தரப்படுகிறது. இதன் பிறகு 2 ஆண்டுகள் வரை சந்தை மதிப்பில் வாடகை வசூலிக்கலாம்.

இதன் பிறகும் காலி செய்யாதவர்களை சட்டப்பூர்வ மாக வெளியேற்றலாம். என்றாலும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட சில சிக்கலான மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவோ ருக்கு 3 மாதங்களுக்கு பதிலாக 2 ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!

Published: April 6, 2016 08:35 ISTUpdated: April 6, 2016 08:57 IST

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!


மருத்துவர்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிகளை நிர்ணயிக்க வேண்டிய மருத்துவக் கவுன்சிலுக்குத் தலைவராக இருந்தவரே லஞ்சம் வாங்கியதற்காகக் கைது செய்யப்பட நேர்ந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று தனது அறிக்கையில் கண்டித்திருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக் குழு. 120 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் சுகாதார சேவையும் மருத்துவக் கல்வியும் முறையான கட்டுப்பாடுகளின்றி நிர்வகிக்கப்படுவது அதிர்ச்சி தருகிறது. ஒருபுறம் மருத்துவக் கல்விக்காகும் செலவு மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. மறுபுறம் மருத்துவக் கல்வி நிர்வாகமும் வெளிப்படையாக இல்லாமல் திரைமறைவிலேயே நடக்கிறது.

தரமான மருத்துவக் கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் நேரடிப் பொறுப்பாளரான ‘இந்திய மருத்துவக் கவுன்சில்’ (எம்.சி.ஐ.) அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட உயர் அமைப்பாகும். உயர் கல்வி நிறுவனங் களை ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் அதற்குத் தரப்பட்டிருக்கிறது. மருத்துவர்களைப் பதிவு செய்யும் உயர் அமைப்பும் இதுதான். இப்படிப்பட்ட மருத்துவக் கவுன்சில் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்யத் தவறியதல்லாமல் ஊழலிலும் திளைத்தது மன்னிக்க முடியாத தவறு. லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் 2010-ல் கைது செய்யப்பட்டார். அந்தக் கவுன்சிலே தாற்காலிகமாகப் புதிதாக மாற்றியமைக்கப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரியின் உயர் கல்வி இடங்கள் ரூ.50 லட்சம் வரை நன்கொடை பெற்றுக்கொண்டு விற்கப்படுவதாக வரும் செய்திகளைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்றக் குழு, அதைத் தடுக்கத் தவறியதற்காக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்திருக்கிறது. தனியார் பெருநிறுவனங்களைப் போன்ற பெரிய மருத்துவமனைகளைத் தர ஆய்வு செய்வதிலும், புதிய மருத்துவப் படிப்புகளைத் தொடங்க அனுமதிப்பதிலும் ஒரேயொரு முகமையை அனுமதிப்பதில் உள்ள ஆபத்தையும் அறிக்கை உணர்த்துகிறது.

மருத்துவக் கல்வி அமைப்பையும் மருத்துவமனைகளின் நிர்வாகத்தையும் நீண்ட காலமாகச் சீரமைக்காமல் அப்படியே நீடிக்கவிட்டது தவறு. இனியும் இதில் சமரசத்துக்கு இடமில்லை. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் நல்ல தரத்தில் நிர்வகிக்கப்பட வேண்டும். அதற்கான நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுடைய நலனையும் பொது நலனையும் மட்டுமே கருதிச் செயல்பட வேண்டும். இதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் மருத்துவ சேவை தனிப் பிரிவாகவும் மருத்துவக் கல்வி தனிப் பிரிவாகவும் பிரிக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம், மாணவர்களுக்கான குறைந்தபட்சத் தகுதிகள், பாடத்திட்டம், பயிற்சிகள் போன்றவை நல்ல தரத்தில் முறையாக நிர்ணயிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு நியமித்த ரஞ்சித் ராய் சவுத்ரி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி 2 தனித்தனி வாரியங்களை இதற்காக ஏற்படுத்த வேண்டும். பட்ட வகுப்பு, முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சிகளை மேற்பார்வையிடுவது, நிறுவனங்களை மதிப்பிடுவது போன்றவற்றை அந்த வாரியங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று சவுத்ரி குழு பரிந்துரை செய்திருந்தது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஊழலுக்கும் வழிவகுத்துவிட்ட இப்போதைய மருத்துவ உயர் கல்வி நிர்வாக அமைப்பை இனியும் இப்படியே நீடிக்கவிடுவது சரியல்ல. இது ஆதிக்க சக்திகள் பலனடைய மட்டுமே வழிவகுக்கும். ஒருபுறம் மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க உண்மையான ஆர்வத்தோடு காத்துக் கிடக்கும் தகுதியாளர்கள் ஏராளமாக இருக்க, ஒரு சில இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்ல விலைக்கு விற்கும் இந்த வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவக் கவுன்சிலுக்கே இப்போது சிகிச்சை தேவைப்படுகிறது. அரசு தயங்கக் கூடாது!

7-வது சம்பள கமிஷனால் உணவு பொருள் விலை உயரும்: ரகுராம் ராஜன் கருத்து

7-வது சம்பள கமிஷனால் உணவு பொருள் விலை உயரும்: ரகுராம் ராஜன் கருத்து


7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 0.40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2016-17 நிதியாண்டின் இரண் டாவது காலாண்டில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜிடிபி அதிகரிக்க வாய்ப்பு
இதன் காரணமாக நுகர்வோர் விலை குறியீடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் பிரதிபலிப்பு அடுத்த 24 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக ரகுராம் ராஜன் கூறினார்.
நடப்பு கணக்கிலிருந்து சுமார் 0.40 சதவீதம்வரை ஜிடிபி அதிகரிக்கும் வாய்ப்புள் ளது.
இதன் விளைவாக உணவுப் பொருட்கள் விலை உயரும் வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
அரசின் உணவு கையிருப்பு கொள்கைகள் மற்றும் கொள் முதல் விலை, குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கணித் துள்ளது.
5 மாநில தேர்தல் பணப்புழக்கம் ரூ.60 ஆயிரம் கோடி
சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களின் பணப்புழக்கம் சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று குறிப்பிட்டார். தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் கையில் சாதாரணமாக பணப் புழக்கம் அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களிடம் ராஜன் குறிப்பிட்டார். மக்களிடம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி வரை புழங்குகிறது, இது சாதாரணமானதல்ல என்றும் கூறினார்.
இதன் பாதிப்பு தேர்தல் நடக்கும் மாநிலத்தில் மட்டுமல்ல, பக்கத்து மாநிலத்துக்கும் நீள்கிறது என்றார். தேர்தல் நேரத்தில் பணப் புழக்கம் எப்படி நிகழ்கிறது என்பது குறித்து ராஜன் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளி விவரங்கள்படி பணப்புழக்கம் 48 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 2 இடங்களில் பாஸ்போர்ட் ‘மேளா’ 9–ந் தேதி நடக்கிறது

சென்னையில் 2 இடங்களில் பாஸ்போர்ட் ‘மேளா’ 9–ந் தேதி நடக்கிறது

சென்னை,
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பாஸ்போர்ட் பெறுபவர்களின் வசதிக்காக கடந்த மாதம் 19–ந் தேதி தாம்பரம் சேவை மையத்தில் சிறப்பு மேளா நடத்தினோம். இதன் மூலம் 435 பேர் பலனடைந்தனர். இதன்தொடர்ச்சியாக 9–ந் தேதி (சனிக்கிழமை) அமைந்தகரை மற்றும் சாலிகிராமம் ஆகிய இடங்களில் உள்ள சேவைமையத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அமைந்தகரையில் 500 பேரும், சாலிகிராமத்தில் ஆயிரம் பேர் உள்பட 1,500 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் கலந்து கொண்டு பயன் அடைய விரும்புபவர்கள் பாஸ்போர்ட் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான பதிவு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்குகிறது. சிறப்பு மேளாவில் தட்கல் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காணும் இடங்களில் எல்லாம் தெரிய வேண்டும்

காணும் இடங்களில் எல்லாம் தெரிய வேண்டும்

வ்வொரு ஆட்சியின்போதும், பெயர் சொல்வதற்கு ஏதாவது திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்த ஆட்சியின் பெயர் காலம்காலமாக நிலைத்து நிற்கும். அந்த திட்டத்தை எத்தனை ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும், அதை அறிமுகப்படுத்திய அரசாங்கம்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், 2004–ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு பெயர் வாங்கிக்கொடுத்த திட்டம் என்றால், அது 2006–ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டமாகும்’. பா.ஜ.க. அரசாங்கமும் இதை தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. சாதாரண கிராம மக்களுக்கு இதை 100 நாள் வேலைத்திட்டம் என்றால்தான் தெரியும். கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மக்கள், திறன் பயிற்சிபெறாத மக்கள், தங்கள் உடல் உழைப்புகளைக்கொண்டு வேலைபார்க்க முன்வரும் ஆண், பெண் இருவருக்கும், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைதருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், இப்போது மாநில அரசுகளுக்கான நிரந்தர சொத்துகள் உருவாக்கப்பட்டால், மத்திய அரசாங்கம் 75 சதவீத தொகையையும், மாநில அரசு 25 சதவீத தொகையையும் ஏற்கும்.

தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒருநாள் சம்பளம் 64 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு இந்தத்தொகை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 183 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆண்டுக்கு இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த ஒருநாள் சம்பளம் 183 ரூபாயிலிருந்து 203 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் 229 ரூபாயிலிருந்து 240 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, கர்நாடகத்தில் 204 ரூபாயிலிருந்து 224 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த தொகையை கேரளா அளவுக்கு 240 ரூபாயாக உயர்த்த மத்திய அரசாங்கத்தை, தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில், 85 லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்கள் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான கார்டு வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் கிராம மக்களுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாகும்.

ஆனால், இந்த திட்டத்திலும் பல குறைபாடுகள் கூறப்படுகின்றன. இந்த திட்டம் வந்தபிறகு, கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு இதைவிட அதிக கூலி கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஏனெனில், விவசாய வேலைகளுக்குச்சென்றால் கொடுக்கும் கூலிக்கு வேலை வாங்கிவிடுவார்கள். ஆனால், 100 நாள் வேலைத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக வேலை செய்யாமலோ, அல்லது பெயருக்கு கொஞ்சம் வேலை பார்த்துவிட்டோ, நிர்ணயிக்கப்பட்ட கூலியில் ஒருபங்கை சம்பளமாக வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிவிடலாம். மீதித்தொகை வேலைவாங்கும் பொறுப்பில் உள்ளவர்கள் பைக்கு போய்விடும். இத்தகைய முறைகேடுகளால்தான் இந்த திட்டத்துக்கு இதுவரையில் ஒதுக்கப்பட்ட, செலவழிக்கப்பட்ட தொகைக்கான பலன்களைப்பார்க்க முடியவில்லை. இப்போது ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது. அனைவருக்கும் கூலியை இதன்மூலம் வங்கிக்கணக்கில் செலுத்துவதை உறுதி செய்யவேண்டும். மொத்த வேலைகளையும் நிரந்தர சொத்துகளாக்கவேண்டும். பார்த்த இடமெல்லாம் இது 100 நாள் வேலைத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள், கட்டிடங்கள், கழிப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், வளர்க்கப்பட்ட மரங்கள், கட்டப்பட்ட பாலங்கள் என்று பெயர் சொல்லவேண்டும். இதற்கு பொறுப்பான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் எங்கள் பஞ்சாயத்தில் இவ்வளவு தொகை செலவழித்தோம், அதன் பயனாக இவ்வளவு நிரந்தர சொத்துகளை உருவாக்கினோம் என்று கணக்குகாட்டவேண்டும். அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும். குறிப்பாக, இந்த வேலைகளை விவசாய வேலை இல்லாத நாட்களில் மேற்கொள்ளவேண்டும்.

NEWS TODAY 23.12.2025