Thursday, April 14, 2016

தவளைக்கு விஷம் உண்டா?

தவளைக்கு விஷம் உண்டா?

எஸ். சுஜாதா

THE HINDU

சில சமயங்களில் உருவத்துக்கும் செயலுக்கும் தொடர்பு இருக்காது. அதற்கு நல்ல உதாரணம் தங்க விஷத் தவளை. இரண்டு அங்குலமே உள்ள இந்தத் தவளைதான் உலகிலேயே மிக அதிக விஷம் கொண்ட தவளை. ஒரு முறை விஷத்தைப் பீய்ச்சி அடித்தால் மூன்றே நிமிடங்களில் 10 மனிதர்களைக் கொன்றுவிடக்கூடியது.

10 ஆயிரம் சுண்டெலிகளைக் கொன்றுவிடக் கூடியது. கொலம்பியாவின் மழைக்காடுகளில் காணப்படும் தங்கத் தவளையின் விஷத்தை, பழங்குடி மக்கள் வேட்டைக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தகதகவென்று அடர் மஞ்சள் நிறத்தில் மட்டுமின்றி, ஆரஞ்சு, வெளிர் பச்சை நிறங்களிலும் இவை காணப்படுகின்றன. நான் ஆபத்தானவன் என்று மற்ற விலங்குகளை எச்சரிப்பதற்காகவே இந்தக் கண்கவர் வண்ணங்கள்.

தங்கத் தவளைகள் ஆபத்தான உயிரினங்களே தவிர, கொடூரமான உயிரினங்கள் அல்ல. பொதுவாக விஷம் கொண்ட விலங்குகளும் பூச்சிகளும் பற்கள், கொடுக்குகள் மூலம் விஷத்தைச் செலுத்துகின்றன. ஆனால், தங்கத் தவளை ஆபத்து என்று உணர்ந்தால், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தோலில் இருந்து விஷத்தைப் பீய்ச்சி விடுகிறது. இந்தத் தவளையை நம் கையில் உறையில்லாமல் வைத்திருந்தால், அடுத்த சில நொடிகளில் மரணம் உறுதி. ‘அல்கலாய்ட்’ என்ற விஷம் தவளையின் தோல் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த விஷம் நரம்புகளின் செயல்களைத் தடுத்துவிடும். தசைகளைச் சுருக்குகிறது. இறுதியில் இதயத்தைச் செயலிழக்க வைத்துவிடுகிறது.

தங்கத் தவளைகளின் விஷத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட, தென் அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த தவளைகளுக்கு விஷம் இல்லை. காலப் போக்கில் இவை சாப்பிடும் உணவுகளிலிருந்தே விஷத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். விஷத் தாவரங்கள், ஈக்கள், விஷ எறும்புகள், வெட்டுக்கிளிகள், வண்டுகள், கரையான்கள் போன்ற இரைகளின் மூலமே விஷம் தவளைகளுக்கு வந்திருக்க வேண்டும்.

2014-ம் ஆண்டு ஜான் கரோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரால்ப் சபோரிடோ செய்த ஆய்வு சுவாரசியமானது. தங்கத் தவளைகளின் தலைப்பிரட்டைகள், தங்கள் அம்மாக்கள் கொடுக்கும் உணவு மூலமே விஷத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பொரிக்காத முட்டைகளைத் தலைப்பிரட்டைகள் தொடர்ந்து சாப்பிடும்போது விஷம் உடலில் சேர்ந்துவிடுகிறது. எதிரிகளிடமிருந்து முட்டைகளைப் பாதுகாப்பதற்கே தாய்த் தவளைகள் முட்டைகளின் மீது விஷத்தைச் செலுத்தி வைக்கின்றன.

அழிந்துவரக்கூடிய அரிய உயிரினங்களின் பட்டியலில் இந்தத் தங்கத் தவளைகளும் உள்ளன. காடுகளை அழித்தல், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கச் சுரங்கம் அமைத்தல், கோகோ பயிரிடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற பல காரணங்களால் தங்கத் தவளைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தங்கத் தவளைகளின் தோலுக்கு அடியில் விஷச் சுரப்பிகள் இருக்கின்றன. விஷம் தேவைப்படும் மக்கள், தங்கத் தவளைகளை ஒரு மரக்குச்சியால் பிடித்து, நகர விடாமல் செய்வார்கள். தவளையின் உடல் வியர்த்து, விஷம் வெளியேறும்போது, அவற்றைச் சேகரித்துக்கொள்வார்கள். அம்புகளில் விஷத்தைத் தடவி வேட்டைக்குப் பயன்படுத்துவார்கள். ஓராண்டு வரை விஷத்தைச் சேமித்து வைத்திருப்பார்களாம்.

தவளைகளின் விஷத்தை மருந்துகளில் பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியும் நடைபெற்றுவருகிறது. ஆனால், தவளையின் விஷத்துக்கு அந்தத் தன்மை இல்லை என்கிறார்கள். இந்த விஷத்தை நேரடியாக வலி நிவாரணிகளில் பயன்படுத்த முடியாவிட்டாலும் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு வேறு மருந்துகளுடன் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்திருகிறார்கள்.

பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை !

பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை !
VIKATAN

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே!' -

திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற 'திருடாதே... பாப்பா திருடாதே 'என்ற பாடலில் இடம்பெறும் இந்த பாடலை கேட்கும் யாருக்கும் மனதில் ஒரு ஆழமான தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கும். இப்படி காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை எழுதிய பொதுவுடைமைக் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் இன்று.

குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்டதெல்லாம் சொந்தம் என்ற தீர்க்க தரிசன வரிகளுக்கு சொந்தக்காரர் அவர்.

மகாகவி பாரதியாருக்குப் பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.

பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி,  சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.

தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில் கலந்தார். பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அவரது வரிகள் ஒவ்வொன்றும் காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.        

உதாரணமாக சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீழே பட்டுக்கோட்டையின் வரிகள்:

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!  
(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)
எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு பாடல்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!- இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி,  தமது 29 வயதில் 08.10.1959 ல் பட்டுக்கோட்டையார் இயற்கை எய்தினார்.

ஒரு முறை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரை சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு பட்டுக்கோட்டை, " அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன் பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம்.

தன்னடக்கமாக அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மானுட சமூகத்தின் மீது அவர் கொண்ட நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.

- மாயன்

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய்

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய்

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

* மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

* கல்லீரலைப் பலப்படுத்தும்.

*இளநரை வராமல் தடுக்கும்.

* புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

* சரும நோய்களைக் குணமாக்கும்.

*மாரடைப்பைத் தடுக்கும்.

*உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

* சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

* கொழுப்பைப் படியவிடாது.

* தொற்றுநோய்களைப் போக்கும்.

* பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

* உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.

* மூலநோய் பிரச்னை இருப்போர், வாரம் இருமுறை சாப்பிடலாம்.

* ரத்தத்தைச் சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்புழுக்களை நீக்கும்.

ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

தினமணி

ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புது தில்லி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போதைய நிலையில் வெளிநாட்டினரும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முகவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் மூலமே தங்களுக்கான ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

புதிய திட்டத்தின்படி வெளிநாட்டினர், தாங்கள் வசிக்கும் நாட்டிலிருந்தே ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கான மாற்றங்களை செய்வதற்கு ஐஆர்சிடிசி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

வெளிநாட்டினர் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் நேரடியாக பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்குரிய வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அது அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிரபலமாக உள்ள 'மகாராஜா', 'பேலஸ் ஆன் வீல்' உள்ளிட்ட ரயில்களில் ஏராளமான வெளிநாட்டினர் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும், முகவர்கள் மூலமே தங்களது பயணச்சீட்டை முன்பதிவு செய்கின்றனர்.

இந்திய ரயில்வேவின் அங்கமான ஐஆர்சிடிசி நிறுவனம், ரயில் பயணங்களுக்கான பயணச்சீட்டுகளை பதிவு செய்யும் இணையதளத்தை இயக்கி வருகிறது. அந்த இணையதளம் நிமிஷத்துக்கு 15,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

தினமணி

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

விரைவில், ஆண்டு இறுதிக்குள் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4-ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா, தைவான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4-ஜி தொழில்நுட்பமும், 4-ஜி ஸ்மார்ட் போன்களும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதனால் அங்குள்ள செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களால் குறைந்த விலைக்கு கருவிகளை உற்பத்தி செய்ய முடிகிறது.

இதையடுத்து இந்தியாவில் 4-ஜி சேவையை விரிவுபடுத்துவதில் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களிடம் 4-ஜி  ஸ்மார்ட்போன்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு சந்தையை பிடிக்கும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்து வருகின்றன.

இந்த வாரத்தில் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிகாம் சலுகைகள் உள்பட ரூ.3,999க்கு 4-ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8 ஆயிரத்துக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்

பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்

மாலைமலர்

பதிவு: ஏப்ரல் 13, 2016 13:03

ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.

பெண்கள் சில சமயங்களில் ஆண்களை பற்றி தவறாகவும் நினைப்பதுண்டு. ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.

* நண்பர்களுடன் வெளியே சென்றால் ஆண்கள் மதுவருந்த தான் செல்கிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் எப்போதும் பெண்கள் முன்பு எளிதாக புலம்பவோ, கலங்கவோ மாட்டார்கள், நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

* எதையாவது பற்றி ஆண்கள் ஆழ்ந்து சிந்தனை செய்தால், தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கருதுவது. ஆண்கள் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முற்படுவதில்லை என்பதை பெண்கள் பெருமளவில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

* ஷாப்பிங் செல்ல அழைத்து ஆண்கள் வர மறுத்தால், தங்கள் மீது அன்பு குறைந்துவிட்டது, நாட்டம் இல்லை என்று எண்ணுவது. காலை முதல் மாலை வரை கணினி முன்பு உட்கார்ந்து அலுத்து போய் வருபவனை மாலை வெளியே அழைத்தால் அவன் வர மறுப்பது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் தான். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சில சமயங்களில் பெண்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்

* அலுவலகத்தில் இருந்து நேர தாமதமாக வந்தால், நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் பெண்களின் மனதில் சந்தேகம் எழுகிறது. டார்கெட், டேட்லைன் போன்றவை பற்றி பெண்களுக்கு பெரிதாய் தெரிவதில்லை என்பதால் தான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.

* வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஆண்கள் தப்புத்தண்டா செய்வார்களோ என்ற எண்ணம் சில பெண்களுக்கு எழுவது இயல்பு. சில ஆண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக மொத்தமாக எல்லா ஆண்களையும் குறை சொல்ல கூடாது.

- எப்போதும் சந்தேக கண்ணுடன் பெண்கள் ஆண்களை பார்ப்பதால் தான் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். மேலும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இதனால் தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

படித்தேன் உங்களிடம் பகிர்கிறேன்

படித்தேன் உங்களிடம் பகிர்கிறேன்

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..
விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..
எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு எல்லையில் பாதுகாப்பு பணி ...
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.. அப்பொழுது ஒரு அறிவிப்பு.. மதிய உணவு தயார்..
சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க...பின்னால் ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்..
நீ சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி..அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவு..
ஆமாம்..உண்மை..
இதை கேட்ட பொழுது.... மனம் வலித்தது..
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..
நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்.. இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..
சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து , என் கைகளை பிடித்து குலுக்கி, நான் முன்பு ஏர் போர்ஸ் பைலட்டாக இருந்தேன்..ஒரு நாள் எனக்கும் ஒருவர் உணவு வாங்கி கொடுத்தார். இது ஒரு கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது..என்று சொல்லி சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..
விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...
இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..
காரில் ஏறி அமர்ந்தேன்.. ஒரு ஆத்ம திருப்தி..
இவர்கள் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு.. உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி, கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை தாக்கியது...படித்ததில் மனம் வலித்தது- Velan

NEWS TODAY 08.06.2026