Thursday, May 19, 2016

13.30 pm status


எம்ஜிஆர் 100 | 67: மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்! ...தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


திருச்சி சவுந்தரராஜன் அமைச்சராக பொறுப்பேற்றபோது, அருகே நிற்கும் முதல்வர் எம்.ஜி.ஆருடன் அமைச்சர்கள் ராஜா முகமது, நாஞ்சில் மனோகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர்.

M.G.R. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.

முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.

1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!

இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.

எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.

ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.

நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.

தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …

‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’

- தொடரும்...

படங்கள் உதவி: எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், செல்வகுமார்




மத்தியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு கவிழ்ந்த தைத் தொடர்ந்து, சரண்சிங் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த பாலா பழனூர், சத்திய வாணி முத்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தமிழகத்தின் ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்களை முதன்முதலில் மத்திய அமைச்சர்களாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.

முதல்வர் பதவி ஏற்பு விழா பல்கலை அரங்கு தயார்


DINAMALAR

விரைவில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளதால், நேரு விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டு உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று 
எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிப்பது யார் என்பது, மதியத்திற்குள் தெரியும். யார் ஆட்சியை பிடித்தாலும், ஒரு வாரத்திற்குள், புதிய முதல்வர் பொறுப்பேற்பார்.
தி.மு.க., ஆட்சியை பிடித்தால், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கம்; அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தால், சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபம் அல்லது, நந்தம்பாக்கத்தில் உள்ளவர்த்தக மையத்தில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழையால், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படும் நேரு உள் விளையாட்டு அரங்கம், வர்த்தக மையம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மல் மின்சாரம் வழங்குவதற்கான பணிகளில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. அதே போல், அந்த இடங்களில், விழா ஏற்பாடிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

11.31 ...19.05.2016 TN ELECTION LEADING INFORMATION


ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்..

Return to frontpage
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய‌ சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாறி, தற்போது தமிழக அரசியல் களம் வேறுவிதமாக காட்சியளிக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ளன. முதல்வர் போட்டியில் ஜெயலலிதாவை முந்தி விட்டார் கருணாநிதி என ஊட கங்கள் தெரிவித்து வ‌ருகின்றன. இந்நிலையில் நாளை வெளியாகும் தேர்தல் முடிவை ஜெயலலிதா பெரிதும் எதிர்பார்த்து கொண்டி ருக்கிறார்.

ஒருவேளை தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால், ஆட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வியூகங்கள் அமைத்து வருகிறார். அதேபோல முடிவுகள் பாதகமாக வந்தால் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், களையெடுக்க வேண்டிய தலைகள் குறித்து திட்டங்களை தீட்டி வருகிறார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தீர்ப்பு எப்படி வரும்?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளைவிட, உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்று தான் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. ஏனென்றால் ஊழல் வழக்கில் வெளியாகப் போகும் இந்த தீர்ப்புதான் உண்மையில் ஜெயலலி தாவின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கில் கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. எனவே உச்சநீதிமன்றம் இவ்வழக்கை கோடை விடுமுறை காலத்திலே தீர்ப்பை அறிவிக்க முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக வருகிற ஜூன் 1-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து, அன்றைய தினம் அரசு தரப்பு, குற்றம்சாட்டப்பட்டோர் இறுதி தொகுப்பு வாதத்தை முடிக்க காலக்கெடு விதித்துள்ளது.

ஒருவேளை வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் அன்றைய தினமே முடிவடைந்தால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைக்க வாய்ப்பு இருக்கிறது. மாறாக, கர்நாடக அரசு தரப்பிலோ, ஜெயலலிதா தரப்பிலோ கால அவகாசம் கோரினால் முடிந்தவரை வழக்கை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே வழக்கின் ஆவணங்களை அலசி ஆராய்ந்துள்ள உச்சநீதி மன்ற நீதிபதிகள், தீர்ப்பை அறிவிக்க பெரிதாக கால அவகாசம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிபதி குன்ஹாவின் தண்டனை தீர்ப்பை உறுதி செய்யுமா அல்லது நீதிபதி குமாரசாமியின் விடுதலை தீர்ப்பை மீண்டும் அறிவிக்குமா என அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லியிலே தங்கி இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய குரல்கள் எழுந்துள்ளன. கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது ஆச்சார்யாவுக்கு மிரட்டல்கள் வந்ததால், இம்முறை தீர்ப்பு வெளியாகும்போது கூடுதல் பாது காப்பு கோர ஆச்சார்யா முடிவெடுத் துள்ளார். குறிப்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் ஆச்சார் யாவுக்கு ஆதரவாக களமிறங்கி யுள்ளார். இந்நிலையில் வழக் கறிஞர் ரத்னம் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘‘நீதியை நிலைநாட்ட துணை புரியும் அரசு வழக் கறிஞர் ஆச்சார்யாவுக்கு இடை யூறாக இருக்க கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜ ராகும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’என முறை யிட்டு இருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் வழக் கறிஞர் ரத்னம், ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்த தாக ஊடகங்களில் தவறான‌ செய்தி வெளியானது.

இது தொடர்பாக ஆச்சார்யா கூறுகையில்,

‘‘வழக்கறிஞர் ரத்னம் என்னை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தமிழகத்தில் பலர் என்னை எதிர்க்கும் நிலையில் வழக்கறிஞர் ரத்னம் எனக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீதியை நிலைநாட்ட துடிக்கும் ரத்னம் போன்றவர்களின் ஆதரவு என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது’’ என்றார்.

தமிழக தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஆகிய வற்றுக்கு இடையில் வழக்கறிஞர் ரத்னத்தின் மனு ஜெயலலிதாவுக்கு சவாலாக மாறியுள்ளது. அரசு வழக்கறிஞரை மிரட்டிய விவகாரத்தை உச்சநீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. எனவே இந்த மனு தீர்ப்பின் போக்கை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக‌ நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌.

தேர்தல் முடிவுகள் 10 மணி நிலவரம்: அதிமுக முன்னிலை

Return to frontpage

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக கூட்டணி 118 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன.

ஜெயலலிதா முன்னிலை:

சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, உளுந்தூர்பேட்டையில் மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

8 மணிக்கு தொடங்கியது:

தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Wednesday, May 18, 2016

மார்க்கும் மார்க்கமும்

Return to frontpage

மார்க்கும் மார்க்கமும்



டாக்டர் ராமானுஜம்


கொளுத்தும் கோடையின் வெப்பத்தைவிட கொடுமையானது காத்திருப்பு. தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களைப் போன்றே தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் தவிப்பும். “நமக்கு எவ்வளவு மார்க் கிடைக்குமோ” என்று கலக்கத்துடன் காத்திருந்தவர்கள் ஒரு பக்கம். முதலிடம் பெற்றால் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு எப்படிப் பேட்டி கொடுக்கலாம் என்ற தயாரிப்போடு இருந்தவர்கள் இன்னொரு பக்கம். அத்தனை காத்திருப்புக்கும் முடிவு வந்துவிட்டது.

மதிப்பெண் வாழ்க்கை இல்லை

நம்முடைய கல்வி முறையில் மதிப்பெண்களுக்கே மதிப்பு அதிகம் இருப்பதால், மார்க்குகளே நாம் போகப் போகும் மார்க்கத்தை நிர்ணயிப்பதாக அமைகிறது. ஒருவரது உள்ளார்ந்த திறமையும் ஆர்வமும் எந்தத் துறையின்பால் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்விக் கூடங்களை ஒரே மாதிரியான இயந்திரங்களைச் செய்யும் தொழிற்கூடங்கள்போல் கருதும் மனநிலைதான் நிலவுகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள் வந்தாச்சு. மட்டற்ற மகிழ்ச்சியில் வானத்தையே எட்டிப் பிடித்த மனநிலையில் சிலர் இருப்பார்கள். சிலருக்கு உலகமே இருண்டு பாதாளத்துக்குள் விழுந்ததுபோல இருக்கலாம். இரண்டு வகையான உணர்வுகளுமே மிகையானவை. தேவையற்றவையும்கூட!

வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வாழ்க்கைத் தேர்வில் தோல்வி அடைந்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதேபோல் அதிக மதிப்பெண்கள் பெறாமல் தோல்வியடைந்த பலரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று மதிப்போடு வாழ்வதைக் காண்கிறோம்.

முடிவு உங்கள் கையில்

‘மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்று சொல்வதைப்போல் படித்தால் மருத்துவம், பொறியியல்தான்; இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் மனப்பான்மை குறுகிய பார்வை.

இவற்றைத் தாண்டி வேறு எதையும் பார்க்கவிடாத குறுகிய குகைப் பார்வையை Tunnel Vision என்பார்கள். இந்தக் குகைப் பார்வை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட முக்கியக் காரணம் சமூகம் பொதுபுத்தியில் திணித்திருக்கும் மதிப்பீடுகள்தான்.

நமக்கு என்ன வேண்டும், எது நன்றாக வரும் என்பதையெல்லாம் நினைக்கையில் சமூகம் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிக்கல்.

முதன்முதலாகப் பத்திரிகை நிருபர் வேலைக்குச் சேர்ந்த ஒருவரைத் துறைமுகத்திலிருந்து கப்பல் கிளம்புவதைப் பற்றிச் செய்தி சேகரிக்க அனுப்பினார்களாம். காலையில் சென்ற அவரிடமிருந்து அன்று இரவுவரை எந்தத் தகவலும் இல்லையாம். நடு இரவில் அலுத்துக் களைத்த வந்த அவரிடம் செய்தி எங்கே என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு ‘போங்க சார்! கப்பல் கவிழ்ந்து பலர் இறந்துவிட்டார்கள்’ என்று பதில் சொன்னாராம். ‘அடப்பாவி இதுதானே நாளைய தலைப்புச் செய்தி! இதைத்தானே நீ உடனடியாகச் சொல்லியிருக்கணும்!’ என்றாராம் பத்திரிகை ஆசிரியர். இதுபோல எது முக்கியமோ அதைச் சுயமாகத் தீர்மானிக்காமல் போடப்பட்ட பாதையில் குறுகிய பார்வையோடு இருப்பதுதான் சிக்கல்.

ஆராய்ச்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் தேவையான மனித ஆற்றல் இல்லாமல் பல்வேறு துறைகள் இருக்கின்றன. சற்று கவனமாகக் கண்காணித்தால் போதும். வாய்ப்புகள் நம் வசப்படும்.

எது கவுரவம்?

அப்துல்கலாமைப் பற்றிச் சொல்லாமல் சுயமுன்னேற்றக் கட்டுரை எழுத முடியுமா? அவர் மிகப் பெரும் கல்வி நிலையத்தில் கற்றவர் அல்ல. ஆனால் தமது துறைமீது கொண்ட ஆர்வமே அவரை ராக்கெட் தொழில்நுட்ப வல்லுநராக்கியது. இன்னும் கணினி மற்றும் மென்பொருள் துறையின் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் போன்ற வெற்றியாளர்களது கதைகளை எல்லாம் எடுத்துப் பார்த்தால் பலரும் முறையான பள்ளிப் படிப்வைக்கூடப் படித்திருக்கவில்லை.

இது போன்ற உதாரணங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மதிப்பெண் பின்னால் ஓடும் மனப்பான்மைக்குக் காரணம் நல்ல மதிப்பெண் எடுப்பது கார், வீடு வாங்குவது போல் ஒரு சமூகக் கவுரவமாகக் கருதப்படுவதால்தான்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றிபெறத் தேவை, முதலில் ஆர்வம். மகாபாரதத்தில் தர்மரிடம் ஒரு யக்ஷன் பல கேள்விகளைக் கேட்பான். அதில் ஒன்று “யார் மிகச் சிறந்த ஆசிரியர்?” என்பதாகும். அதற்குத் தர்மர் “ஆர்வமே மிகச் சிறந்த ஆசிரியர்” என்றார். “கல்வி என்பது விஷயங்களைத் தெரிந்து கொள்வதல்ல. எப்படிச் சிந்திக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதே” என்பது ஐன்ஸ்டீனின் கருத்து. எனவே, புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்து பெறும் மதிப்பெண் சான்றிதழ் வெறும் அச்சடித்த காகிதம்தான்.

அதைத் தாண்டி நமக்கு நன்கு வரக்கூடிய, நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தைச் செய்வதே வெற்றி. ஆனால் நாமோ பொருள்ரீதியான விஷயங்களைப் பெறுவதே வெற்றி என்ற சமூக அழுத்தங்களுக்கு ஆளாகிறோம். மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு மதிப்பெண்கள் பின்னால் ஓடுவது கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போன்றதே.

ஆகவே மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படுவதை விடுங்கள். வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி!

மிகமிக முக்கியமான விஷயம், தயவு செய்து இந்த அச்சிடப்பட்ட காகிதத்தில் சில எண்கள் நீங்கள் நினைத்ததுபோல் அமையவில்லை என்பதால் வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைக்க வேண்டாம்.

அது எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போன்றதாகும். கலைக்காகவே கலை என்று இலக்கியத்தில் சொல்வதைப்போல் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துக்காக கற்றலே உண்மையான வாழ்க்கைக் கல்வி. அது மதிப்பெண்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. கற்றல் இனிதானது. வாழ்தல் அதனினும் இனிமையானது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர், தொடர்புக்கு: ramsych2@gmail.com

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...