Wednesday, June 1, 2016

ஜெ. வழக்கில் இன்று விசாரணை நிறைவடைகிறது


THE HINDU TAMIL

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிற‌து. கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நாகேஸ்வர ராவ், சேகர் நாப்டே உள்ளிட்டோர் தங்கள் தரப்பு இறுதி வாதங் களை கடந்த மாதமே நிறைவு செய்தனர்.

இதையடுத்து ஆச்சார்யா இறுதியாக ஜெயலலிதா தரப்பு முன் வைத்த வாதங்களுக்கு பதிலளித்து வந்தார்.

இவரது இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதம் இன்னும் நிறைவடையவில்லை. எனவே கடந்த 12-ம் தேதி “இவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் ஜூன் 1-ம் தேதி கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரித்து முடித்து விடலாம். அன்றைய தினம் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா 2 மணி நேரமும், மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு மணி நேரமும் மட்டுமே தங்கள‌து வாதத்தை முன்வைக்க வேண்டும்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தர‌ப்பும், தனியார் நிறுவனங்கள் தரப்பும் தங்களின் இறுதி தொகுப்பு மற்றும் பதில் வாதத்தை அடுத்த சில மணி நேரத்தில் முன் வைக்க வேண்டும்” எனக் காலக்கெடு விதித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தீர்ப்பு தேதி வாய்ப்பில்லை

இதன்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வின் முன்பாக நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே நீதிபதிகள் அனைத்து தரப்பும் தங்களது இறுதி வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். எனவே இன்றுடன் இவ்வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணையும், வாதங்களும் நிறைவடைந்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம். ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்படும் தேதியை அறிவித்து வழக்கை ஒத்தி வைப்பார்கள். உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பார்கள்.

அதேபோல கீழமை நீதி மன்றங்களில் இருப்பது போல தீர்ப்பை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என்ற விதிமுறையும் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. எனவே நீதிபதிகள் தங்களுக்கு வசதியான நாளில் தீர்ப்பு வழங்குவார்கள் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

சிரிக்க வைத்த என்னை அழ வைக்கின்றனர்: வாட்ஸ்அப் வதந்தியால் நடிகர் செந்தில் வேதனை

THE HINDU

எல்லோரையும் சிரிக்க வைத்த நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரப்பி அழ வைக்கின்றனர் என நடிகர் செந்தில் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருச்சியில் நடிகர் செந்தில் அதிமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்போது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தக வல் பரவியது. அதிர்ச்சி அடைந்த அவர், தான் நலமுடன் இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நடிகர் செந்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இதனால் கடும் மன உளைச்சலடைந்த அவர் நேற்று மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங் களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறேன். தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன் நான் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு வந்தேன். அப்போது நான் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் மீண்டும் தகவல் பரவுவதாகக் கேள்விப்பட்டேன். வாட்ஸ்அப் மூலம் இந்த தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

திமுகவினர்தான் காரணம்

நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் எல்லோரையும் சிரிக்க வைத்து பழக்கப்பட்டவன். ஆனால், இப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக என்னை அழ வைக்கின்றனர். இதன் பின்னணியில் திமுகவினர்தான் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக நான் பிரச்சாரம் செய்ததால், தற்போது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவினர்தான் நான் இறந்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர் என்றார்.

எம்ஜிஆர் 100 | 76 - கொடுத்தது கோடிகள்!


எம்ஜிஆர் 100 | 76 - கொடுத்தது கோடிகள்!

‘நாடோடி மன்னன்’ படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சி.
M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.

இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


‘அரச கட்டளை’ படத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ர பாணியின் மகன் ராமமூர்த்தி தயா ரித்தார். சக்ரபாணி இயக்கினார். பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் என எம்.ஜி.ஆர். பட முக்கிய வில்லன் கள் எல்லோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

Tuesday, May 31, 2016

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

vikatan.com

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.

என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.


என்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது?

1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.

'சீப் லேபர்' என்றால் என்ன?

இதற்கு அர்த்தம் தெரிந்தால் டென்ஷன் ஆகிவிடுவீர்கள். சராசரியாக ஒரு 'மனித' மணி நேரத்துக்கு (Manhour) அமெரிக்க பிரஜைகளுக்கு சுமார் 170 டாலரில் இருந்து 280 டாலர் வரை சம்பளம் கொடுக்கவேண்டும். இது இந்திய மதிப்பில் 10,000 ரூபாயில் இருந்து 16,800 ரூபாய் வரை (இது ஒரு மணி நேர வேலைக்கு). ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்றால் கணக்கு போட்டுப் பாருங்கள். ஆனால் அதே வேலையை செய்ய, கல்லூரியில் டாப் ரேங்க் பெற்ற திறமைசாலியான இந்திய என்ஜினியர்களுக்கு 30 டாலர்கள் கொடுத்து வேலை வாங்குகிறார்கள். அப்படியானால் 170 டாலரில் 30 டாலர்கள் போனால் முதலாளியின் பாக்கெட்டிற்கு போவது 150 டாலர் (ஒரு மணி நேரத்துக்கு). இதுவே சுமார் 10,000 தொழிலாளிகள் கொண்ட பெரிய நிறுவனங்களின் மாத வருமானம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் கணிதத் திறனிடமே விட்டுவிடுகிறோம்.

சரி பணம் குறைவாக இருந்தால் என்ன, என்ஜினியரிங்குக்கு வேலை இருக்கிறதே?

'வேலை இருக்கு...ஆனால் இல்லை' என்ற ‘தெளிவான பதில்’தான் இதற்கு விடை. இங்கு 2 விஷயங்களை உற்று நோக்க வேண்டி இருக்கிறது

1) என்ஜினியர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள், அவர்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை கண்ணை துடைத்து பார்க்க வேண்டும். ஐடி சம்பந்தமான வேலைகளை 'பிராஜக்ட் கான்ட்ராக்ட்' எடுக்கிறார்கள். Analysis, Design, Development, Implementation and Evaluation என்ற ஐடி படிநிலைகளில், உடலுக்கு அதிக வேலை இருப்பதும், அதிக மனித ஆற்றல் தேவைப்படுவதும் நான்காவதாக செய்யப்படும் implementation-க்குதான். இங்கே implementation என்பது கிட்டத்தட்ட கொத்தனார் வேலைக்கு சமம். செங்கல்லை எடுக்க வேண்டியது, அதை அடுக்க வேண்டியது, சிமெண்ட் பூசவேண்டியது, மறுபடியும் செங்கல், சிமெண்ட்... அதாவது ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது (Repeatable jobs). ஐடி கம்பெனிகளில் coding, testing எல்லாம் இந்த வகையை சேர்ந்தவைதான். ஆனால் என்ஜினியரிங் அறிவு தேவைப்படுவதோ மற்ற 4 படி நிலைகளுக்குத்தான். பெரும்பாலும் யாரோ ஒருவர் உருவாக்கிய பிராஜெக்டில் மாற்றங்களை மட்டும் சேர்க்கின்றனர். என்ஜினியர்கள் என்ற பெயரை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தரலாம். ஆனால் என்ஜினியர்களின் திறமையை இங்கு முழுமையாக பயன்படுத்துவது இல்லை.



2) இரண்டாவது சிக்கல் ஆட்டோமேஷன். பெரும்பாலான தொழிற்சாலைகளை இன்று ரோபோக்கள்தான் இயக்குகின்றன. என்ஜினியர்களின் இடத்தை இவை ஆக்கிரமித்து விட்டன. ஒரு கார் கம்பெனியில் 5000 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், 4500 பேர் இந்த அசெம்ப்ளி வேலையைத்தான் செய்வார்கள். இந்த அசெம்ப்ளி வேலைக்கு குறைந்த சம்பளத்தில், டிப்ளமோ அல்லது சில இடங்களில் +2 மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இங்கு என்ஜினியர்களுக்கான தேவை மிகக் குறைவு. அதிலும் அந்நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அங்குள்ள என்ஜினியர்கள்தான் இங்கு முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். எனவே மிகத் திறன் வாய்ந்த, சில எண்ணிக்கையிலான என்ஜினியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். அரசு பெரும் முயற்சி செய்து, பல பன்னாட்டு தொழிற்சாலைகளை இந்தியாவில் உருவாக்கச் செய்தால் கூட, ஆண்டுக்கு 2 லட்சம் என்ஜினியர்களை இவற்றில் பணியமர்த்த முடியுமா என்பது சந்தேகம்தான்.



திறன் வாய்ந்த என்ஜினியர்களை கல்லூரிகள் உருவாகின்றனவா?

எப்படி முடியும்? டாப் கல்லூரிகளில் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காண முடிகிறது. மற்ற கல்லூரிகளில் பி.இ படித்துவிட்டு வேறெங்கும் வேலை கிடைக்காததால், ஆசிரியர்களாக அடைக்கலம் தேடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எத்தகைய திறனைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே.

'100% பி்ளேஸ்மென்ட்' என்ற வார்த்தையை பெரிதாக போட்டுவிட்டு, ‘நோக்கி’ என்ற வார்த்தையை கண்ணுக்கு தெரியாதபடி அச்சிட்டு பேனர்கள் வைத்தும், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரம் செய்தும் 'சீட்' நிரப்புவதில் அக்கறை கட்டும் கல்லூரிகள், மாணவர் திறன் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் எந்த ஒரு முன்னறிவும் இல்லாமல் இன்டர்வியூவுக்கு செல்லும் மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

இந்த காரணங்களை எல்லாம் நீங்கள் கருத்தில் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் பொறியியல் படிப்பை வெறுப்பது நியாயமானதுதான்.



அப்படியனால் என்ஜினியரிங்க் படிக்கக் கூடாதா...?

எந்த படிப்பும் மோசமானது அல்ல. இன்றைக்கும் பொறியாளர்கள் தேவைப்படும் பல நிறுவனங்கள் உள்ளன. ஒரு நாட்டை செதுக்குவது பொறியாளர்கள்தான். தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என்று மட்டும் இல்லாமல் வங்கி, மருத்துவம், சமூக உள்கட்டமைப்பு போன்ற சேவை பிரிவுகளிலும் பொறியாளர்களுக்கான தேவை உள்ளது.

என்ஜினியர்களுக்கென்று சில தனித் திறன்கள் இருக்கும். அவர்களுடய பகுப்பாய்வு மற்றும் காரணி அறிவு ( Analysis and Reasoning) அணுகும் திறன் ( Approachability), எண்கணித திறமை ( Numerical Ability), தர்க்க திறமை ( Logical) போன்ற திறன்கள்தான் மற்ற துறை மாணவர்களுக்கும் பொறியியல் மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும். இத்திறன் கொண்ட மாணவர்களை அள்ளிக்கொண்டு செல்ல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

அதையும்தாண்டி இந்தியாவின் தற்போதைய புதிய ட்ரெண்ட், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள். ஒரு சின்ன ரூமில் 4 லேப்டாப்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கும் மாடர்ன் இந்திய இளைஞர்களுக்கான களம் இது. திறமைசாலிகளை வேலைக்கு எடுக்கும் அளவுக்கான 'நிதி பலம்' ஸ்டார்ட் அப்களிடம் இருக்காது. இங்கு உங்கள் திறன்தான் முதலீடு. இங்கு ஊழியரும் நீங்களே... சி.இ.ஓவும் நீங்களே. இந்தியா முழுவதும் புதுமையான பிஸ்னஸ் ஐடியாக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள். பெரியப் பெரிய நிறுவனங்களால் செயல்படுத்த முடியாத விஷயங்களை, இந்த என்ஜினியர்கள் அசால்ட்டாக செய்து காட்டுகின்றனர். அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இவர்கள் மீது முதலீட்டை கொட்டுகின்றனர்.



பல லட்சம் சம்பளத்துக்கு வேலை கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்த போதும் அவற்றை உதறிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு 30% ஐ.ஐ.டி மாணவர்கள் இந்திய ஸ்டார்ட் அப்களில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். காரணம், ஸ்டார்ட்அப்களில் நீங்கள்தான் படைப்பாளி. உங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. சொந்த முயற்சியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய முழு திறனையும் பயன்படுத்த முடியும். திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும். உங்கள் உழைப்புக்கான முழு கிரெடிட்ஸ் உங்களுக்கே. இவ்வளவையும் மீறி, 'நான் ஒரு படைப்பாளி' என்ற கர்வம் உங்களுக்கு கிடைக்கும். இந்த கர்வம், உங்களை மேலே தள்ளிக் கொண்டே இருக்கும். ஏனெனில் என்ஜினியர்கள் நல்ல படைப்பாளிகள், அடுத்தவரின் கீழ் வேலை செய்ய பிடிக்காதவர்கள். எனவே தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட்அப்கள் கை கொடுக்கும்.

மேலே கூறியவற்றை புரிந்து கொண்டு, மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிக்க முடிவெடுத்தீர்களானால் ஆல் தி பெஸ்ட்.

- ஆரா ( மனிதவள மேம்பாட்டு வல்லுநர்), ரெ.சு.வெங்கடேஷ்

கோப்புகளை வீட்டில் பார்க்க உயரதிகாரிகளுக்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு



மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகம் டெல் லியின் நார்த் பிளாக் கட்டிடத்தில் உள்ளது. இங்கு நிலவும் கடுமை யான பணிச்சுமை காரணமாக முக்கியக் கோப்புகளை அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று பார்வையிட அனுமதிக் கப்பட்டிருந்தனர். இணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்து கொண்ட அதிகாரிகளுக்கு மட்டும் இந்த அனுமதி தரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அனுமதி தற்போது ரத்து செய்யப் பட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பான கோப்புகள் காணாமல்போய் மீட்க முடியாமல் போனதே இதற்கு காரணமாகும் . இத்துடன் உள்துறை சார்புச் செயலாளர் ஆனந்த் ஜோஷியை சில வாரங்களுக்கு முன் கைது செய்யவேண்டிய சூழல் உருவா னது மற்றொரு காரணம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் தொடர்பான கோப்புகளை ஆனந்த் ஜோஷி தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வந்தார். அதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்று வந்ததாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்ச கத்துக்கு மத்திய உளவுத் துறை (ஐ.பி) ஓர் அறிக்கை அனுப்பி யுள்ளது. அதில் அளிக்கப்பட்டப் பரிந்துரையின் பேரில் கோப்புகளை வீடுகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போ து, “நார்த் பிளாக்கில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் கோப்புகள் உடனடியாக நகல் அல்லது ஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுக்கப்பட்டு விடு கின்றன. இதன்மூலம், சம்பந்தப் பட்டவர்களுடன் பேரம் பேசி சட்டவிரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. இதை தடுக்க ஒரே வழி கோப்புகளை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

மத்திய அரசு பதவியேற்று 2 ஆண்டு கள் நிறைவு கொண்டாட்டத்தில் உள் துறை அமைச்சகத் தின் கோப்புகளும் வரிசைப்படுத் தப்பட்டு வருகின்றன. இவற் றில் வேண்டாத கோப்புகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனுடன் உளவுத்துறையின் பரிந்துரையும் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி உள்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டுமின்றி, சிபிஐ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் தங்கள் வீடுகளுக்கு கோப்புகளைக் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 75 - முதலும் கடைசியுமான விநியோகஸ்தர்!

எம்.ஜி.ஆருடன் கைகுலுக்குகிறார் திலீப் குமார். | ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆரின் அட்டகாச போஸ்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. படங்களின் பாடல்களில் இருந்து பத்து பாடல்களை பட்டியலிடுமாறு அவரது ரசிகர்களிடம் கூறினால், பெரும்பாலோர் முதலாவதாக குறிப்பிடுவது ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்…’ பாடலாகத்தான் இருக்கும். அந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் திலீப் குமார் நடிக்க காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.!

தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. ஏழு திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். அற்புதமாக நடித்திருப்பார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்…’ பாடலில் எம்.ஜி.ஆரின் சுறு சுறுப்பு வியக்க வைக்கும். சாட்டையை சுழற்றியபடி ஒரு இடத்தில் நிற்க மாட்டார்.

அதிலும் ஒரு காட்சியில் கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும். தரையில் சுழலும் எம்.ஜி.ஆர்., ஒரு கையை ஊன்றி, மறு கையை உயர்த்தி மேலே பார்த்தபடி கொடுக்கும் அந்த போஸ் அவருக்குத்தான் வரும். தெலுங்கில் என்.டி.ராமராவும் இந்தியில் திலீப் குமாரும் நடித்துள்ள இந்தப் பாடல் காட்சிகளைப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் எனர்ஜி லெவலே தனி என்பது புரியும்.

இந்தி நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்து திலீப் குமாரை நாகிரெட்டி சந்தித்து பேசினார். திலீப் குமாருக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆரைத் தெரியும். சென்னையில் எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார். அவரது படங்களை பார்த்து ரசித்திருக்கிறார். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ‘இன்ஸானியத்’ என்ற இந்திப் படத்தை தயாரித்து இயக்கினார். அதில் திலீப் குமார், நடிகை பீனா ராய், நடிகர் ஜெயந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

எஸ்.எஸ்.வாசனை பார்க்க இவர்கள் மூவரும் ஒருமுறை சென்னை வந்தனர். எம்.ஜி.ஆரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பதை வாசனிடம் திலீப் குமார் தெரிவித்தார். அதற்கு வாசன் ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் திலீப் குமார், பீனாராய், ஜெயந்த் ஆகியோர் சந்தித்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்து கவுரவித்தார்.

தான் பார்த்த எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து, தான் ரசித்த பல காட்சிகளை திலீப் குமார் குறிப்பிட்டு பாராட்டினார். தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூர், மும்பை (அப்போது பம்பாய்) போன்று இந்தியாவின் பிற நகரங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பதைக் கண்டு ‘‘எம்.ஜி.ஆருக்கு இருப்பதைப் போன்று வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு ரசிகர் மன்றங்கள் இல்லை’’ என்றும் பாராட்டினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் எடுப்பது தொடர்பாக திலீப் குமாரை நாகிரெட்டி மும்பையில் சந்தித் துப் பேசியபோது, படத்தைப் பார்க்க திலீப் குமார் விருப்பப்பட்டார். அதற்கா கவே சென்னை வந்தார். குறிப்பிட்ட நாளில் வாஹினி ஸ்டுடியோவில் உள்ள சிறிய தியேட்டரில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் திரையிடப்பட்டது. நாகிரெட்டியின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரும் சென் றார். திலீப் குமாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பின்னர், ‘‘படம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால், நான் நடிக்க விரும்ப வில்லை’’ என்று திலீப் குமார் கூறிவிட்டார். ‘‘ஏன்?’’ என்று வியப்புடன் கேட்டார் நாகிரெட்டி.

‘‘எம்.ஜி.ஆர். இரண்டு பாத்திரங்களை யும் சிறப்பாக செய்திருக்கிறார். அது போல என்னால் முடியாது’’ என்றார் திலீப் குமார்.

அவரை அப்படியே அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் பெரிய நடிகர். இந்தியில் எவ்வளவோ சாதனை கள், பிரமாதமான படங்கள் பண்ணியிருக் கிறீர்கள். நீங்கள் இந்தப் படத்தை இந்தி யில் செய்தால் படம் பெரிய ‘ஹிட்’ ஆகும். ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் உங்கள் பாணியில் பண்ணுங்கள்’’ என்று கூறி உற்சாகப்படுத்தினார். பின்னர், இந்தி யில் திலீப் குமார் நடிக்க ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற அந்தப் படமும் வெற்றிகர மாக ஓடியது. அந்தப் படத்தில் திலீப் குமார் நடித்ததற்கு எம்.ஜி.ஆர். அவருக்கு அளித்த உற்சாகம்தான் காரணம்.

பின்னர், 1969-ம் ஆண்டு பொங்கல் நாளில் சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று திலீப் குமார் கலந்து கொண்டார். அப்போது ஒரு சுவையான சம்பவம்.

சிலை திறப்பு விழாவில் எஸ்.எஸ்.வாச னும் கலந்து கொண்டார். அவர் தீவிர காங்கிரஸ் அபிமானி. அவர் பேசும்போது, ‘‘கலைவாணர் சிலையை திறக்க இப் போதுதான் வேளை வந்துள்ளது’’ என் றார். இறுதியில் பேசிய அண்ணா, ‘‘சிலையை திறக்க இப்போதுதான் வேளை வந்திருப்பதாக வாசன் கூறு கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ள இந்த வேளையைத்தான் அவர் குறிப்பிடு கிறார்’’ என்று கூறி, உடல் நலம் குன்றிய அந்த நிலையிலும் நகைச்சுவை குன்றா மல் பேசினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத் தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். கூடுதலாக கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டு மல்ல; கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்.தான்.

அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘‘நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இந்த தொகையை பயன் படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரிடம் திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயரை துடைத்ததோ? யாருக்குத் தெரியும்?

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் தயா ராகிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் இரவு வாஹினி ஸ்டுடியோவின் எட்டாவது படப்பிடிப்பு அரங்கில் தீவிபத்து ஏற்பட்டது. விஷயம் தெரிந்து எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். தேவையான உதவி களை செய்தார். பின்னர், வீட்டில் இருந்த நாகிரெட்டியையும் சந்தித்து ‘‘கவலைப் பட வேண்டாம்’’ என்று ஆறுதல் கூறியபோது, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று வியந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தார் நாகிரெட்டி.


முந்தைய தொடர்களை வாசிக்க: எம்ஜிஆர் 100

Saturday, May 28, 2016

ராணி தேனீயைக் காப்பாற்ற' காரை 24 மணி நேரம் துரத்திய தேனீக் கூட்டம்

காரை துரத்திய தேனீக்கூட்டம்.| படம்: டாம் மோசஸ் என்பாரின் பேஸ்புக்.

பிரிட்டனில் இயற்கைப் பூங்காவிலிருந்து தன் வீடு நோக்கி 65 வயது பெண்மணி ஒருவர் காரை ஓட்டிச் சென்ற போது சுமார் 20,000 தேனீக்கள் கொண்ட கூட்டம் அவரது காரின் பின்பகுதி கண்ணாடியில் குழுமியிருந்தது கண்டு பீதியடைந்தார்.

கரோல் ஹவர்த் என்ற இந்தப் பெண்மணி வெஸ்ட் வேல்ஸில் உள்ள ஒரு ஹேவர்ஃபோர்டுவெஸ்ட் டவுன் செண்டரில் காரை நிறுத்திய சிறிது நேரத்திற்கெல்லாம் காரின் பின்பகுதியில் பிரம்மாண்ட தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு திகைத்தார். 

பெம்புரோக்‌ஷயர் கடற்கரை தேசிய பூங்காவைச் சேர்ந்த டாம் மோசஸ் என்பவர் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பகுதியில் தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு அனைவரையும் எச்சரித்தார், ஏனெனில் பலர் அதற்குள் அந்தக் காரை படம் பிடிக்கத் தொடங்கியிருந்தனர். 

தேனீக்கள் கொல்லப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் டாம் மோசஸ் பெம்புரோக்‌ஷயர் தேனீ வளர்ப்புக் கழகத்தை அணுகி தேனீக்களைப் பாதுகாப்பாக கார்டுபோர்டு பெட்டியில் பிடிக்க உதவினார். 

இவற்றிற்கெல்லாம் பிறகு தனது காரை கரோல் ஹவர்த் வீட்டுக்கு ஓட்டிச் சென்றார், அதாவது பிரச்சினை முடிந்து விட்டது என்றே அவர் நினைத்தார். ஆனால் திங்கள் காலை மீண்டும் காரைப் பார்த்த போது மீண்டும் தேனீக் கூட்டம் அவரது காரின் பின்பகுதியை மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். 

அதன் பிறகு மீண்டும் தேனீ வளர்ப்புக் கழகத்தினரைத் தொடர்புகொண்டு அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்துச் செல்ல உதவினார்.

பொதுவாக தேனீக்கள் தங்கள் தலைமை ராணித்தேனீயின் வழிகாட்டுதலுடன் கூட்டமாகச் செல்லும் எனவே இம்முறையும் ராணித் தேனீயைப் பின்பற்றியே தேனீக்கூட்டம் வந்திருக்கும் என்று பலரும் நினைத்தனர், ஆனால் அம்மாதிரியான ராணித்தேனீ அங்கு எதுவும் இல்லை. 

ஆனால் ராணித் தேனீயும் இல்லாத போது இந்தக் கூட்டம் எப்படி காரில் வந்து குழுமியது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

NEWS TODAY 18.12.2025