Thursday, June 16, 2016

நிறைவடைந்தது புத்தகத் திருவிழா!

படம்: எம்.மூர்த்தி

7,00,000+ வாசகர்கள் | 10,00,000+ தலைப்புகள் | ரூ.10,00,00,000+ விற்பனை

புதிய தாள்களின் வாசனையுடன் வந்திறங்கிய புத்தகங்களுடன் நடந்த புத்தகக் காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னைத் தீவுத் திடலில் ஜூன் 1 தொடங்கி 13 நாட்கள் நடந்த 39-வது புத்தகக் காட்சி பதிப்பாளர்கள், வாசகர்கள், வணிகர்கள் என்று பலதரப்பினருக்கும் பலன் தந்தது என்றே சொல்ல வேண்டும்.

சுமார் இரண்டு லட்சம் சதுர அடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான புத்தகக் காட்சியில் 700க்கும் மேற்பட்ட பதிப்பாளர் களுடன் ஊடகங்களும் பங்கேற்றன. ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான்கு ஏ.டி.எம்-கள், மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வசதி, விசாலமான வாகன நிறுத்தம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. புத்தகக் காட்சியின் அரங்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்குத் தனிச் செயலி போன்ற புதுமைகளும் இடம்பெற்றன. இந்த அறிவுலகக் கொண்டாட்டத்துக்குச் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்திருந்தனர்; முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூட்டம், விற்பனை இரண்டுமே 60%-70% அளவுக்கே இருந்தது என்றாலும் சென்னைக்கு இந்தக் கோடைப் புத்தகக் காட்சி புதிது.

“வழக்கத்துக்கு மாறாக ஜூன் மாதம் நடத்தப்பட்டது, தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது, கடும் வெயில் போன்ற பல தடைகளையும் எதிர்கொண்டே இந்தப் புத்தகக் காட்சி நடந்தது. எனினும், தடைகளைப் பெருமளவில் தாண்டியிருக்கிறோம். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வந்திருந்தார்கள். இளைஞர்கள் கூட்டமும் அதிகம். வழக்கமாக நட்சத்திரப் பேச்சாளர்களை வைத்துதான் நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த முறை புத்தகம், கலாச்சாரம் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்திருந்தோம். திரண்ட கூட்டம் ஏமாற்றவில்லை. தீவுத் திடலில் பேருந்துகள் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முக்கியமான ஆங்கிலப் பதிப்பகங்களுக்குக் குறைந்த வாடகையில் அரங்குகளை ஒதுக்கியிருந்தோம். கன்னடம், இந்தி போன்ற மொழி அரங்குகளுக்கும் குறைந்த வாடகைதான். இந்த முறை ‘மின் நூல்’ பதிப்பகங்களுக்கு முதல் முறையாக அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதேபோல், அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கான சிறப்பு அரங்காக சிங்கப்பூர் அரங்கு அமைந்தது. சில குறைகள் இருந்தாலும், மொத்தத்தில் திருப்திகரமாகவே இருந்தது புத்தகத் திருவிழா!” என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டார்.

ஒரு அறிவுலகத் திருவிழா நடத்துவதற்கான வாய்ப்பையும் யோசனையையும் நமக்கு இந்தப் புத்தகக் காட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது என்பது கூடுதல் விசேஷம்!

ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி!

தங்க.ஜெய்சக்திவேல்

THE HINDU
இன்று உலகின் மிக முக்கிய ஊடகமாகச் செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி

‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக் கொண்ட ஒரே வானொலி எனும் தனித்த பெருமையும் உண்டு.

இந்தியாவில் வானொலி சேவை 1923-லேயே தொடங்கப்பட்டது. எனினும், ‘அகில இந்திய வானொலி’ என்ற பெயர் வைக்கப்பட்டது 1936 ஜூன் 8-ல்தான். அந்தப் பெயரை வைத்தவர் அகில இந்திய வானொலியின் முதல் இயக்குநரான லையனல் பீல்டன். அதன்படி, அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டதன் 80-ம் ஆண்டு இது. அதற்கு முன்னர் ‘இந்தியன் ஸ்டேட் ப்ராட்காஸ்டிங் சர்வீஸ்’ என்றே அது அழைக்கப்பட்டது. அகில இந்திய வானொலியின் லச்சினையை உருவாக்கியதும் லையனல் பீல்டன்தான். அப்போதைய வைஸ்ராய் கொடுத்த 2,50,000 ரூபாயை வைத்துக்கொண்டு, தனது முழு உழைப்பையும் பயன்படுத்தி, அகில இந்திய வானொலியை வளர்த்தெடுத்தவர் அவர்.

ஹிட்லரும் செய்திகளும்

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், வானொலியின் முக்கியத்துவத்தைப் பலரும் புரிந்துகொண்டனர். ஹிட்லர் தன்னுடைய பரப்புரைக்கு வானொலியைத் திறமையாகப் பயன்படுத்தியதன் விளைவாக உலக நாடுகளின் கவனம் வானொலியின் பக்கம் குவிந்தது. குறிப்பாக, சிற்றலை வானொலிகளின் பணி அளப்பரியது.

உலக அளவில் ஏற்பட்ட இந்தப் போக்குகள் அகில இந்திய வானொலியிலும் தாக்கம் செலுத்தின. உள்நாட்டு மொழிகள் தவிர, வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செய்தி அறிக்கை முதலில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு, பின்னர் இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. இன்றும் அதே நடைமுறைதான் தொடர்கிறது. பீல்டன் செய்தி அறிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். முதல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய சார்லஸ் பார்ன்ஸ் அவரது கனவுகளைப் பூர்த்திசெய்தார்.

1936 முதல் செய்திச் சுருக்கம் ஒலிபரப்பானது. தேசிய மற்றும் வெளிநாட்டு சேவைக்குத் தேவை ஏற்பட்டது. அதற்காக, சக்திவாய்ந்த ஒலிபரப்பிகள் அமைக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 27 செய்தி அறிக்கைகள் அன்றைய காலகட்டத்தில் ஒலிபரப்பப்பட்டன.

1962, 1965 மற்றும் 1971 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற போர்கள், இந்தியா முழுவதும் உள்ள நேயர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தன. கள நிலவரங்களை நாட்டின் மூலைமுடுக்குகளுக்குக் கொண்டுசென்ற ஒரே ஊடகமாக வானொலி மட்டுமே அப்போது இருந்தது. அந்தச் சமயத்தில் அகில இந்திய வானொலியைக் கேட்கும் நேயர்கள் கணிசமாக உயர்ந்தனர்.

காந்தியின் குரல்

மகாத்மா காந்தி அகில இந்திய வானொலிக்கு ஒரு முறைதான் வந்துள்ளார். அதன் பின்னணி சோகமானது. தேசப் பிரிவினையின்போது இரு தரப்பிலும் நிகழ்ந்த கலவரங்கள் காந்தியைக் கலங்கச் செய்துவிட்டன. கலவரங்களை அடக்க காந்திக்குக் கிடைத்த வழிகளில் ஒன்றுதான் வானொலி உரை. 1947 நவம்பர் 12-ல் நாட்டு மக்களுடன் காந்தி முதலும் கடைசியுமாக உரையாற்றினார். எனினும், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றிய உரைகளை அகில இந்திய வானொலி ஒலிபரப்பிவருவது குறிப்பிடத் தக்கது.

அந்தச் சூழ்நிலையில்தான் வானொலியின் முக்கியத்துவத்தை அறிந்து ஆறு நிலையங்களை 25 நிலையங்களாக உயர்த்தியது அரசு. அடுத்த 25 வருடங்களில் அகில இந்திய வானொலி 86 நிலையங்களைத் தொடங்கி சாதனை படைத்தது. இன்றைக்கு அகில இந்திய வானொலி 91 பேச்சு வழக்கு மொழிகளில் ஒலிபரப்பிவருகிறது. இது உலகின் எந்த நாட்டின் பொதுத்துறை வானொலியும் செய்யாத ஒரு சாதனை.

திரையிசைக்குத் ‘தடா’

நேருவின் அமைச்சரவையில் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த பி.வி.கேஸ்கர் பாரம்பரிய இசையை மட்டுமே வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் என்று கறார் காட்டினார். திரையிசைக்கு வாய்ப்பே தரப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் திரையிசையை மட்டுமே வைத்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்திருந்தது இலங்கை வானொலி. எனவே, நேயர்கள் அகில இந்திய வானொலியில் செய்திகளை மட்டும் கேட்டுவிட்டு, இலங்கை வானொலியின் பக்கம் சென்றுவிடுவது வழக்கமாக இருந்தது. சுதாரித்துக்கொண்ட அகில இந்திய வானொலி, திரையிசைக்கு உரிய முக்கியத்துவம் தரத் தொடங்கியது.

1957-ல் திரை இசையை மையப்படுத்தி விளம்பரதாரர்களைக் கவர்வதற்காக அகில இந்திய வானொலியால் தொடங்கப்பட்டதுதான் ‘விவிதபாரதி’. அதில் ஒலிபரப்பான ‘ஹவா மகால்’, ‘சைய கீத்’, ‘சங்கீத் சரிதா’, ‘சர்கம்’ மற்றும் ‘பர்மைஸ் கீத்’ போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

அப்போதெல்லாம், இன்று போல் நினைத்த மாத்திரத்தில் வேறு ஒரு ஊடகத்தை நேயர்கள் மாற்றிக்கொள்ள முடியாது. எனினும், பலரது வீடுகளில் சிற்றலை வானொலிப் பெட்டி இருந்ததால், பெரும்பாலானோர், அகில இந்திய வானொலிகளின் செய்திகளை வெளிநாட்டு வானொலிகளின் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டனர். இதனால், செய்தி அறிக்கைகள் தயாரிப்பு, அவற்றை வாசிப்பவர்களின் உச்சரிப்பு ஆகியவற்றில் பெரும் சவால்கள் எழுந்தன. எனினும், இதுபோன்ற சவால்கள்தான் அகில இந்திய வானொலியின் வளர்ச்சிக்கு உரமாக அமைந்தன.

மறக்க முடியாத குரல்கள்

வானொலி அறிவிப்பாளர்களான சச்தேவ் சிங் மற்றும் மெல்வில் டி மெல்லோ ஆகியோரின் கம்பீரக் குரல்கள் மறக்க முடியாதவை. சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினங்களில் அவர்கள் தந்த நேரடி வர்ணனை பெரும் வரவேற்பைப் பெற்றது. விளையாட்டு வர்ணனையாளர்களான பியர்சன் சுரிதா, சுரேஷ் சரய்யா, ஏ.எஃப்.எஸ். தல்யார்கான், ரவி சதுர்வேதி, ஆனந்த் ராவ் மற்றும் பெர்ரி சர்வாதிகாரி ஆகியோரின் நேரடி வர்ணனைகள் நேயர்களை அந்தந்த விளையாட்டு அரங்கங்களுக்கே கொண்டுசென்றன எனலாம். சுராஜித் சென், லோதிகா ரத்னம், தேவகி நந்தன் பாண்டே, மற்றும் வினோத் காஷ்யப், தமிழ் செய்தி வாசிப்பாளர்களான சாம்பசிவம், ராமமூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன் சரோஜ் நாராயண் சாமி, விஜயம் ராஜாராம் என்று தங்களது பங்களிப்புகளால் அகில இந்திய வானொலிக்குப் பெருமை சேர்த்தவர்களின் பட்டியல் மிக நீண்டது!

இன்று தனியார் பண்பலை வானொலிகள் பல வந்துவிட்டாலும் அகில இந்திய வானொலியின் சேவைகள் என்றும் தனித்து நிற்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் அகில இந்திய வானொலி செய்துவரும் சேவை ஓர் உதாரணம். இன்றும் அந்தப் பகுதிகளில் வாழும் 30 லட்சம் மக்களுக்காக 30 வெவ்வேறு பேச்சுவழக்கு மொழிகளில் தனது சேவையைச் செய்துவருகிறது.

சரி, ‘ஆகாஷ்வாணி’ என்ற பெயர் எப்போது வைக்கப்பட்டது? 1938-ல் ரவீந்திரநாத் தாகூர் அகில இந்திய வானொலிக்கு அந்தப் பெயரை வைத்தார். அதற்கு முன்னதாகவே அதே பெயரில் மைசூர் மகாராஜா ஒரு தனியார் வானொலியை நடத்திவந்தார். ஆனால், தாகூரின் வழியாக இந்தியா முழுவதும் சென்றடைந்த ஆகாஷ்வாணி எனும் பெயர் தேசத்தின் பெருமைகளுள் ஒன்றாக உயர்ந்ததுதான் வரலாறு!

- தங்க.ஜெய்சக்திவேல், உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in

‘அப்பா நீங்க ஏன் அம்மாவுடன் சேரக்கூடாது’’: விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தை கேட்ட கேள்வியால் அதிர்ந்த நீதிமன்றம்

THE HINDU

மேற்குவங்கத்தில் விவகாரத்து பெற்ற தம்பதியின் 6 வயது குழந்தை நீதிமன்ற வளாகத்தில் எழுப்பிய கேள்வி சுற்றியிருந்த அனைவரது உள்ளத்தையும் கணக்க வைத்தது.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியை சேர்ந்த தம்பதி கடந்த 2005-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன் மீதுள்ள பாசத்தால் அவர் சார்ந்த இஸ்லாம் மதத்துக்கே மனைவியும் மாறினார். இவர்களுக்கு 2010-ல் பெண் குழந்தையும், 2012-ல் ஆண் குழந்தையும் பிறந்தது. அதே சமயம் திடீரென கணவன் மீதான சந்தேகத்தால் அவரிடம் இருந்து பிரிந்த மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டில் தஞ்சமடைந்தார். மீண்டும் மனைவியுடன் வாழ்வதற்காக கணவன் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதையடுத்து, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு, சிலிகுரி மாவட்ட நீதி மன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். மனைவி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தை தந்தையிடமும், ஆண் குழந்தை தாயிடமும் வளர தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனைவி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷிதா மகாத்ரே மற்றும் ராகேஷ் திவாரி அடங்கிய அமர்வு, இரு குழந்தைகளும் தாயின் பாது காப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டு, கோடைக் கால விடு முறைக்கு பின் வழக்கு விசார ணையை ஒத்திவைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது கணவர் சார்பில் ஆஜரான வழக்க றிஞர், ‘‘தாயிடம் வசிக்க பெண் குழந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே இரு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என வாதாடினார். அதை ஏற்காத நீதிபதிகள் அடுத்த உத்தரவு வரும் வரை, இடைக்காலமாக தாயிடமே குழந்தைகள் வளர வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்த 6 வயது பெண் குழந்தை தனது தந்தையிடம், ‘அப்பா நீங்க ஏன் அம்மா கூட சேர்ந்து இருக்கக் கூடாது? உங்களோட இருக்க எனக்கு பிடிக்கும்னு ஏன் நீதி மன்றத்துல சொல்லல?’ என அந்த பிஞ்சுக் குழந்தை கேள்வி எழுப்பி யது.

அருகில் இருந்த 4 வயது ஆண் குழந்தையும் அப்பாவுடன் செல்ல வேண்டும் என அழுதது. விவாகரத்து பெற்ற தம்பதியின் குழந்தைகள் பாசத்துக்காக ஏங்கி அழுத இந்த காட்சிகள் கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஒவ்வொருவரையும் மிகுந்த வேதனைப்படுத்தியது.

தனது விடைத்தாளை தானே திருத்தி 100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன்: விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு கல்வித் துறை நோட்டீஸ்



குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவன், தனது விடைத்தாளை தானே திருத்தி, நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் போட்டுக் கொண்டு அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

ஹர்ஷத் சர்வய்யா என்ற மாணவன் பிளஸ் 2 தேர்வில், பொரு ளியல் பாடத்துக்கான தேர்வை எழுதினார். தேர்வு எழுதும் அறை யிலேயே, தனது விடைத்தாளை சிவப்பு நிற மையால் திருத்தி, அதற்கு மதிப்பெண்களைப் போட்டுக் கொண்டார். பின்னர் அதனை, தேர்வு கண்காணிப் பாளரிடம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, குஜராத் மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம், காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இதற்கு முன் இதுபோன்று நிகழ்ந்ததில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறை செயலாளர் (தேர்வு) ஜி.டி. படேல் கூறியதாவது:

அந்த மாணவன் தனது புவியியல் மற்றும் பொருளியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கான தேர்வில் தனக்குத்தானே மதிப்பெண் போட்டுக் கொண் டுள்ளார். புவியியல் தேர்வுத் தாளை திருத்திய ஆசிரியைகள் முறைகேட்டைக் கண்டுபிடித்து விட்டனர். அதில் அவர் 34 மதிப் பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், பொருளியல் தாளை திருத்திய ஆசிரியர்கள் இந்த தவறைக் கண்டுபிடிக்கவில்லை. சந்தேகம் வராமல் இருக்க அந்த மாணவன் முதல் பக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் கூட்டலை எழுதவில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண்களைக் கூட்டி, நூற்றுக்கு நூறு என முதல்பக்கத்தில் எழுதி விட்டனர். தனித்தனியாக ஏழு ஆசிரியர்களும் ஒவ்வொரு விடையையும் மதிப்பீடு செய்து, கையொப்பமிட்டிருந்தால் அதனைக் கண்டறிந்திருக்க முடியும். இது தீவிரமான தவறு. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாணவன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரு தேர்வுகளை எழுத முடியாமல் அவர் நீக்கப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹர்ஷத்தின் தேர்வு முடிவுகள் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கல்வி வாரியத்தின் கணினி மென்பொருளில் தேர்வு முடிவுகளைப் பார்த்தபோது மதிப்பெண்களில் அதிக ஏற்றத்தாழ்வு தெரியவந்தது. அப்போது அவர் மாட்டிக் கொண்டார்.

பொருளியலில் சதமடித்த அவர், குஜராத்தி (13), ஆங்கிலம் (12), சம்ஸ்கிருதம் (4), சமூகவியல் (20), உளவியல் (5), புவியியல் (35) என மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
Keywords: தனது விடைத்தாள், தானே திருத்தியது, 100 / 100 மதிப்பெண் போட்ட மாணவன், கல்வித் துறை நோட்டீஸ், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு

எம்ஜிஆர் 100 | 87 - பெண்களை தெய்வமாக மதித்தவர்!

அரசு விழா ஒன்றில் ஏழைப் பெண்ணுக்கு தையல் மெஷின் வழங்குகிறார் எம்.ஜி.ஆர்.

M.G.R. பெண்களை தெய்வமாக மதிப்பவர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தாய்மார்களே…’ என்று குறிப்பிட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்குவார். கூட்டங்களில் அவரை நாடி உதவி கோரும் பெண்களுக்கு உதவிகள் செய்வதுடன், பெண்களின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்.

நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.

இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.

கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார். அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.

தன்னிடம் உதவி கோருபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு உதவுபவர் எம்.ஜி.ஆர்.! தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே. இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!

திமுகவில் எம்.ஜி.ஆர். இருந்த காலம். அவரது நெருங்கிய நண்பரும் படத் தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவரின் இல்லத் திருமணம் கோவையில் நடைபெற்றது. அதில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசளித்துவிட்டு வந்தார். பின்னர், ஒரு கூட்டத்திலும் கலந்துகொண்டார். பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென தனது உதவியாளர்களைப் பார்த்தார். கூட்டத்தில் குறிப்பிட்ட இடத்தைப் பார்த்துவிட்டு, உதவியாளர்களை மீண்டும் பார்த்தார். எம்.ஜி.ஆருடைய பார்வையின் பொருள் அவர்களுக்குப் புரியும். சத்தம் போடாமல் கூட்டத்தில் மக்களோடு கலந்த உதவியாளர்கள், குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்த ஒரு வாலிபரைப் பிடித்தனர். அங்கேயே அந்த வாலிபரை நிறுத்தி வைக்குமாறு எம்.ஜி.ஆர். சைகை செய்தார்.

கூட்டம் முடிந்த பின், அந்த வாலிபரை உதவியாளர்கள் அழைத்து வந்தனர். ‘‘கூட்டத்திலே வந்து அசிங்கமா பண்றே? உன்னோடு அக்கா, தங்கைகள் பிறக்கலையா?’’ என்று கேட்டவாறே வாலிபரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் எம்.ஜி.ஆர்.! பொறி கலங்கிப் போய் நின்ற வாலிபரிடம் ‘‘இனிமேல் இப்படி நடப்பியா?’’ என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார். ‘‘சத்தியமா இனி இப்படி நடந்துக்க மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க’’ என்று கெஞ்சிய வாலிபரிடம், ‘‘இனிமே என் கூட்டம் எங்கு நடந்தாலும் உன்னை நான் பார்க்கக் கூடாது. ஓடு இங்கிருந்து…’’ என்று விரட்டினார். விட்டால் போதும் என்று வாலிபர் ஓடி மறைந்தார்.

விஷயம் என்னவென்றால், கூட்டத் தில் அந்த வாலிபர் தன் அருகே நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் பார்வை யிலிருந்துதான் எதுவும் தப்பாதே. அதை கவனித்துவிட்டு அந்த வாலிபரை பிடிக்கச் சொல்லி புத்தி புகட்டியிருக்கிறார்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்து 1967-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘காவல்காரன்’. அதில் எம்.ஜி.ஆருக்கு ரகசிய போலீஸ் அதிகாரி பாத்திரம். அவரது பணி குறித்து யாருக்கும் தெரியாது. அவரது நடவடிக்கைகள் ஊகிக்க முடியாதபடி இருப்பதைக் கண்டு ஜெயலலிதா, ‘‘ஆமா, நீங்க யாரு?’’ என்று கேட்பார். அப்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய ஸ்டைலில் பாடி நடிக்கும் அருமையான பாடல் இது...

‘அடங்கொப்புரானே சத்தியமா

நான் காவல்காரன்

நீ ஒப்புக் கொள்ள மறுத்தாலும்

நான் காவல்காரன்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

புகழஞ்சலி: வெற்றிகளைக் குவித்த ஏ.சி.திருலோகச்சந்தர்!

ஏ.சி.திருலோகச்சந்தர்

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தரின் மறைவையொட்டி, மூத்த பத்திரிகையாளரும், சமூக வலைத்தள கருத்தாளருமான ஏழுமலை வெங்கடேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார்.

'ஏ.சி.திருலோகச்சந்தர் - வெற்றிகளை குவித்தவர்' என்ற தலைப்பில் அவர் இட்ட பதிவில் இடம்பெற்ற வியத்தகு தகவல்கள்:

* கல்லூரியில் படிக்கும்போது சக நண்பனின் தந்தை அறிமுகம் கிடைக்கிறது. அவர் வேறு யாருமல்ல, பல ஆண்டுகளாக சினிமா உலகில் கோலோச்சிவரும் பத்மநாப ஐயர். அவரிடம் உதவி இயக்குநராக சேருகிறார் ஏ.சி.திருலோகச்சந்தர். 1952ல் வெளியாகும் அந்த படம் எம்ஜிஆர் நடித்த 'குமாரி'யில் பணிபுரிகிறார். இதேபோல இன்னொரு ஜாம்பவான் இயக்குநர் கே.ராம்நாத்திடமும் உதவி இயக்குநர் வேலை.

* இப்படி காலம் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் இயக்குநர் ஜோசப் தளியத், தான் இயக்கும் 'விஜயபுரி வீரன்' படத்தில் உதவி இயக்குநர் என்பதோடு திரைக்கதை அமைக்கும் வாய்ப்பையும் அளிக்கிறார். ஆங்கில படங்களை பார்த்து அதன் தாக்கத்தில் விதவிதமான காட்சிகளையும் கதைகளையும் மனதில் வடிவமைப்பதில் ஏசிடி படு கில்லாடி.

* சி.எல்.ஆனந்தன் (நடிகை டிஸ்கோ சாந்தியின் தந்தை) கதாநாயகனாக நடித்து 1960-ல் வெளியான 'விஜயபுரி வீரன்' படம் மெகா ஹிட். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் எஸ்.ஏ.அசோகனுக்கும் ஏவிஎம் நிறுவனத்திடம் நல்ல நட்புண்டு. அதன் அடிப்படையில் ஏ.சி.டி திறமை பற்றி மெய்யப்ப செட்டியாரிடம் சொல்கிறார். இப்படித்தான் ஏவிஎம் என்ற தாய்வீட்டில் நுழைகிறார் ஏ.சி.டி.

* 1962ல் சி.எல்.ஆனந்தனை கதாநாயகனாகவும் நடிகை சச்சுவை கதாநாயகியாகவும் வைத்து ஏவிஎம்முக்காக வீத்திருமகனை இயக்குகிறார் ஏசிடி. ரோஜா மலரே ராஜகுமாரி மற்றும் வெத்திலை போட்ட பத்தினி பொண்ணு ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் அலறின. படம் படு ஹிட். இன்னொரு பக்கம் ஏசிடி கொடுத்த கதைதான் ஏவிஎம்மில் தயாரான சிவாஜி, ஜெமினி நடித்து நட்பின் பெருமையை சொன்ன 'பார்த்தால் பசி தீரும்' படம். குழந்தை நட்சத்திரத்திலேயே கமல் இரட்டை வேடத்தில் கலக்கிய படம் இது.

* 1963ல் ஏசிடி-ஏவிஎம் காம்பினேஷனில் 'நானும் ஒரு பெண்' படம். சிறந்த படம், தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது. சிவக்குமாரை முதன் முதலில் 'காக்கும் கரங்கள்' (1965) என்ற படம் மூலம் திரையில் அறிமுகப்படுத்தியதும் ஏசிடிதான்.ஏவிஎம் முதன் முதலில் வண்ணப்படம் தயாரிக்க விரும்பியதும் அந்த வாய்ப்பு அப்போதைய வசூல் சக்ரவர்த்தியான எம்ஜிஆருக்கே போனது. அதற்குமுன் வெளியான நாகிரெட்டியின் 'எங்க வீட்டு பிள்ளை' செய்து கொடுத்த வசூல் அப்படி..

* எம்ஜிஆரை வித்தியாசமான பாணியில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்து, ஏசிடியே இயக்கவேண்டும் என்று அடம்பிடித்தவர் நடிகர் அசோகன்தான். ஏசிடி இயக்கி 1966ல் வெளியான 'அன்பே வா', 50 ஆண்டுகளாகியும் இன்றும் ரசிகர்களை சுண்டியிழுக்கிறது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமோ?

* இதேபோல ஏசிடி- ஏவிஎம் கூட்டணியில் ஜெமினி நடித்த 'ராமு' படமும் சிவாஜி நடித்த 'பாபு' படமும் ஹிட்டாகி பல மொழிகளில் தாண்டவம் போட்டது தனிக்கதை. நடிகர் ரவிச்சந்திரனையும் காஞ்சனாவையும் வைத்து கலர்ஃபுல்லாக ஆனால் திகிலோடு மிரட்டிய ஏசிடியின் இன்னொரு பிளாக் பஸ்டர் படம் 'அதே கண்கள்'. ஏசிடி இயக்கத்தில் மைல் கல் படம் என்றால் 'இரு மலர்கள்' (1967) படத்தை சொல்லவேண்டும். சிவாஜி, பத்மினி ஆகிய இருவரையும் அசால்ட்டாக சாந்தி என்ற பாத்திரத்தில் துவம்சம் செய்திருப்பார் கே.ஆர். விஜயா.

* இங்கே இன்னொரு சுவையான விஷயம் என்ன வென்றால் 1967-ல் சிவாஜியை வைத்து ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய 'இரு மலர்கள்' படம்.. ரிலீசுக்கு ஏற்பாடு ஆகிவிட்டது.. அதே நாளில் ஜாம்பவான் ஸ்ரீதர், சிவாஜி நடித்த 'ஊட்டி வரை உறவு' படத்தை வெளியிடுகிறார். ஆனால் என்ன ஆச்சர்யம். ஒரு கதாநாயகனின் இரண்டு படங்களுமே நூறு நாட்களை கடந்தன.

* 1970-ல் சிவாஜியை வைத்து ஏசிடியின் 'எங்கிருந்தோ வந்தாள்' படம் ரிலீசுக்கு ஏற்பாடு ஆகிவிட்டது.. சோதனையாக டி.ஆர். ராமண்ணா சிவாஜியை வைத்து 'சொர்க்கம்' படத்தை அதே நாளில் ரிலீஸ் செய்கிறார். இரண்டு படங்களுமே 100 நாட்கள்.

* 1975ல் சிவாஜியை வைத்து ஏசிடி, 'டாக்டர் சிவா' படம் இயக்கி வெளியிடும் அதே நாளில் ஸ்ரீதர் மீண்டும் சிவாஜி கதாநாயகனாக நடித்த 'வைர நெஞ்சம்' படத்தை வெளியிடுகிறார். இம்முறையும் ஸ்ரீதர் படத்தோடு ஏசிடியின் படமும் 100 நாட்களை கடந்து வெற்றிக்கொடி நாட்டுகின்றன. ஒரு கதாநாயகனை வைத்து படம் இயக்கி அதே கதாநாயகனின் இன்னொரு படத்துடன் ஒரே நாளில் மோதி மூன்று முறை வெற்றிகண்டவர் ஏ.சி.திருலோகச்சந்தர்..

* 'பாரதவிலாஸ்', 'அவன்தான் மனிதன்', 'பத்ரகாளி', இலங்கையின் நாயகி மாலினி பொன்சேகாவை சிவாஜியுடன் ஜோடிபோட்டு சஸ்பென்ஸ் படமாக எடுத்த 'பைலட் பிரேம்நாத்', ரஜினியுடன் 'வணக்கத்துக்குரிய காதலியே', நதியாவுடன் சிவாஜி கலக்கிய 'அன்புள்ள அப்பா' என ஏசி திருலோகச்சந்தரின் இயக்குநர் பயணம் பெரியது என்பதைவிட வெற்றிகரமானது.

* 'பாவமன்னிப்பு' படத்தில் சிவாஜி முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு கோரமான முகம் வெளிப்படும் காட்சியை உந்துதலாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் 'தெய்வமகன்' (1969). சிவாஜி தந்தை, மகன்கள் என மூன்று வேடங்களில் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி அசத்திய படம். எல்லாவற்றையும் விட ஆஸ்கார் விருதுக்காக முதன் முதலில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட படம், ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய தெய்வமகன்தான்.

தமிழ் சினிமாவின் சாதனையாளர்களில் ஒருவரான உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கிறோம் ஏ..சி.திருலோகச்சந்தர் அவர்களே.



ஏழுமலை வெங்கடேசன் |அவரின் ஃபேஸ்புக் பக்க இணைப்பு: Elumalai Venaktesan

புதிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடம் கோரும் 80 விண்ணப்பங்கள் நிராகரிப்பு


நாடு முழுவதிலும் புதிய மருத்து வக் கல்லூரிகள் மற்றும் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி கேட்டு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ) இந்த ஆண்டு வந்த விண்ணப்பங்களில் 80 கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டன.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை கண்காணித்து வழிநடத்தவும், புதிய கல்லூரி களுக்கு அனுமதி அளிக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கவுன்சிலிடம் வரும் 2016-17-ம் கல்வியாண்டுக்கு கூடுதல் இடங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி கேட்டி ருந்தன. இதையடுத்து அந்த மருத்துவக் கல்லூரிகளில் அடிப் படை கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் உள்ளனவா என எம்.சி.ஐ. குழு நேரில் சென்று ஆய்வு செய்தது. இதில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு 47 மருத்துவக் கல்லூரிகளின் கோரிக்கை நிரா கரிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் மூலமாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய சுகாதார அமைச்சக அதி காரிகள் மேலும் கூறும்போது, “இந்த மருத்துவக் கல்லூரிகளில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட சேர்க்கை அனுமதியின்படி பேரா சிரியர்கள் எண்ணிக்கை பதிவேடு களில் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இந்தப் பேராசிரியர்கள் தங்கள் பெயரை மட்டும் அக்கல்லூரிகளில் பதிவு செய்து விட்டு தனியாக மருத்துவமனை நடத்தியும் பணியாற்றியும் வரு கின்றனர். எனவே அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் பேராசிரியர்கள் விவரம் மற்றும் அவர்களின் தகுதிகளை கேட்டு எம்.சி.ஐ கடிதம் எழுதியுள்ளது. இதை ஆராய்ந்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கூடுதல் இடங்களுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட பட்டியலில் தமிழகம் முதலி டத்தில் உள்ளது. இதையடுத்து மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்கள் முறையே இரண் டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இவை தவிர ஆந்திரா, கர்நாடகா, தெலங் கானா, உ.பி., கேரளா ஆகிய மாநிலங்களின் விண்ணப் பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதி களை பூர்த்தி செய்த பின் 2017-18-ம் கல்வியாண்டில் மீண்டும் விண்ணப்பிக்குமாறு இக்கல்லூரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 380 மருத்து வக் கல்லூரிகளில் சுமார் 50,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். என்றாலும் இந்த எண்ணிக்கை போதாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டு அதிக விண்ணப்பங்கள் வந்திருந்தன. இவற்றில் 33 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தாக தெரிய வந்துள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...