Tuesday, June 28, 2016

விஸ்வரூபம் எடுக்கும் சுவாதி படுகொலை.. அதிகாரிகளுடன் ஜெ. அவசர ஆலோசனை


சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உள்துறை செயலர் அபூர்வா வர்மா, டிஜிபி அசோக்குமார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சென்னையில் மட்டும் ஜூன் மாதத்தில் 9 படுகொலைகள் நடந்துள்ளன. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சேலத்தில் இளம்பெண் வினுப்பிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆபாச புகைப்படம் வெளியானதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவை போல் பொது மக்களின் பாதுகாப்புக்கு ஏன் தனிச் சட்டம் இயற்றக் கூடாது?.குற்றச் செயல்களை தடுக்க காவல்துறை அவசியம் என்று தெரிந்தும், காவலர் பணியிடங்களை ஏன் நிரப்பவில்லை என்பன உள்ளிட்ட 10 அம்சங்கள் நிறைந்த கடிதத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, இக்கடிதத்தில் உள்ள விவரங்களை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவருகின்றார். உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி அசோக்குமார், காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு ரவுடிகளை சுட்டுத்தள்ள உத்தரவு என்கவுன்டர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்


நெல்லை: தமிழகத்தில் கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருவதைத்தொடர்ந்து ரவுடிகளை சுட்டுத்தள்ள போலீசுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி நிறுவன ஊழியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர சென்னையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 3 வக்கீல்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைகளில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபோல் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பழைய குற்றவாளிகள், ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். சென்னையில் மட்டும் கடந்த 4 நாளில் 491 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 53 ரவுடிகளும், சிவகங்கையில் 12, ராமநாதபுரத்தில் 35, திண்டுக்கல் 80, விருதுநகர் 31 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள்.

அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் டிஐஜி தினகரன் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் விக்ரமன், அஸ்வின்கோட்னீஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி சுமார் 180 ரவுடிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் தவிர பழைய குற்றவாளிகள், கொடூரச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வந்தவர்கள் ஆகியோரை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கொலைகள் கூலிப்படையினர் மூலமே நடக்கின்றன.

மேலும் தென் மாவட்டங்களில் இருந்து தான் சென்னை, கோவை, சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு கூலிப்படையினர் சென்று கொலைகளை கச்சிதமாக முடிக்கின்றனர். சமீபத்தில் சுவாதி கொலையில் கொலையாளி தண்டவாளத்தில் வீசிச்சென்ற கத்தி கூட தென் மாவட்டத்தினர் பயன்படுத்தும் கத்தியாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சுவாதி கொலை சம்பவத்திலும் ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தொடர் கொலை சம்பவங்களில் ஈடுபடும் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை சுட்டுத்தள்ள போலீசுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பட்டியலையும் அவர்கள் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.



இதனால் ரவுடிகள், வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்..

சுவாதி கொலையும், போலீசின் ‘’எல்லை பிரச்சனையும்’’


ஆர். மணி

சென்னையைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணை ரயில்வே போலீசிடமிருந்து ஒரு வழியாக சென்னை போலீசுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி அசோக் குமார் திங்கட்கிழமை பிறப்பித்து விட்டார். இது வழக்கமானதோர் நடைமுறைதான் என்று கூறுகின்றன காவல்துறை வட்டாரங்கள்.

அதற்குள் இது ரயில்வே போலீசின் திறமையின்மையை காட்டுகிறது என்ற அளவில் செய்திகள் ஊடகங்களில் வந்தது தவறானது என்று கூறுகின்றனர் ரயில்வே போலீசில் பணிபுரிபவர்கள். இரண்டு விதமான ரயில்வே போலீஸ் அமைப்புகள் இருக்கின்றன.

ஒன்று மத்திய அரசின் ரயில்வே பாதுகாப்பு படை அதாவது ரயில்வே புரடொக்ஷன் ஃபோர்ஸ் (ஆர்பிஎஃப்). இதனது வேலை ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பது. மற்றொன்று கவர்ன்மெண்ட் ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி).

இது முழுக்கவும், தமிழக போலீசின் ஒரு அங்கம் .. அதாவது சிபிசிஐடி, சிலை கடத்தல் தடுப்பு போன்றதோர் ஒரு அங்கம். ஜிஆர்பி யின் வேலை, ரயில்வே ஸ்டேஷன் காம்பவுண்டுக்கள் நடக்கும் குற்றங்களை விசாரிப்பது, பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்றது. வழக்கமாக ஒரு ரயில்வே ஸ்டேஷனில் கொலை நடந்தால் அது சாதாரணமான கொலை வழக்காக இருந்தால் ஜிஆர்பி யே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை நடத்தும். சமீபத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரவுடி வெட்டிக் கொல்லப் பட்ட வழக்கில் ஜிஆர்பி தான் வழக்கை விசாரித்து, குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து, சம்மந்தப் பட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

ஆனால் அதிகப்படியான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் விசாரணையை ஜிஆர்பி சம்மந்தப்பட்ட உள்ளூர் போலீசிடம் ஒப்படைத்து விடுகிறது. இது போலத்தான் ஆணவக் கொலைக்கு ஆளான கோகுல்ராஜ் விசாரணையை திருச்செங்கோடு போலீசிடம் ஜிஆர்பி ஒப்படைத்தது. அதுவேதான் ஸ்வாதி கொலை வழக்கிலும் விசாரணை ஜிஆர்பியிடம் இருந்து நுங்கம்பாக்கம் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

இதற்கு காரணம், ஜிஆர்பி யிடம் சொற்ப அளவிலான அதிகாரிகளும், போலீசாருமே பணியில் இருக்கின்றனர். ஒரு டிஜிபி, ஒரு டிஐஜி, இரண்டு எஸ்.பி க்கள் தான் இருக்கின்றனர். இதுதவிர ஓரளவுக்கு டிஎஸ்பிக்கள் உள்ளனர். இதற்கடுத்த நிலையில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரின் எண்ணிக்கையும் குறைவு. ஆகவே இது முக்கியமான கொலைகளில், ஜிஆர்பி விசாரணைக்கு குந்தகமானதாக இருக்கிறது.

ஒரு கொலையில் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் சிலர் வேறு வேறு ஊர்களில் இருந்தால் அவர்களை கண்டறிவதும், விசாரிப்பதும் ஜிஆர்பி யால் சுலபத்தில் முடியாத காரியம். அதனாலேயே விசாரணை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்றப் படுகிறது. இது வழக்கமான நடைமுறைதான்.

ஆனால் ஸ்வாதி விஷயத்தில் நடந்த கொடுமை அவர் கொல்லப் பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரையில் அவரது உடலில் ஒரு துணியைக் கூட போர்த்தாமல் இருந்த விவகாரம். காரணம் யார் இதனை செய்வது என்பதுதான். ‘' சம்பவ இடத்திற்கு சில நிமிடங்களில் வந்த சென்னை போலீசார் இதனை செய்திருக்க வேண்டும். அல்லது ஜிஆர்பி போலீசார் இதனை செய்திருக்க வேண்டும். யாருடையை கட்டுப்பாட்டில் இந்த இடம் வருகிறது, யார் இந்த கொலையை விசாரிக்க போகிறார்கள் என்ற குழப்பம் அல்லது குடுமி பிடி சண்டையின் காரணத்தால் இரண்டு தரப்பும் இதனைச் செய்யவில்லை. இதனைத் தான் திங்கட்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் கேட்டிருக்கிறது'' என்று கூறுகிறார் தமிழக அரசு வழக்கறிஞர் ஒருவர்.

தானாக முன் வந்து இந்த விசாரணையை மேற்கொண்ட உயர்நீதி மன்ற அமர்வு, இது சம்மந்தமாக வந்த ஒரு ஆங்கில நாளிதழின் கட்டுரையை மேற்கோள் காட்டி இதனை கேட்டிருக்கிறது. அதன் பின்னர்தான் விசாரணை சென்னை போலீஸூக்கு மாற்றப் பட்டிருக்கிறது. ‘'இரண்டு மணி நேரம் கொலையுண்ட பெண்ணின் உடல் துணி கூட போர்த்தப் படாமல் இருந்திருக்கிறது. இறந்து போனவர்களுக்கும் கண்ணியம் இருக்கிறது'' என்று அப்போது நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்த கண்ணியத்தை ஸ்வாதிக்கு இரண்டு மணி நேரத்திற்கு கொடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு யார் பதில் சொல்ல வேண்டும், யார் இதற்கு பொறுப்பு என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி. தற்போது இந்த கேள்வியை மற்ற அமைப்புகளும் கேட்கத் துவங்கியிருக்கின்றனர். செவ்வாய் கிழமை மதியம் தேசீய மகளீர் ஆணையம் இந்த கேள்வியை சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் ரயில்வே துறையிடம் கேட்டிருக்கிறது. கொலை யாருடையை எல்லையில் நடந்த து என்ற குடுமிடிப் பிடி சண்டையில், அந்த சண்டை கொடுத்த மெத்தனத்தில் இரண்டு மணி நேரம் தங்களது கடமையிலிருந்து இரண்டு தரப்பு போலீசாரும் தவறியிருப்பது கண் கூடாகவே தெரிகிறது. இதனால்தான் இந்தக் கேள்வியை சென்னை உயர்நீதி மன்றத்தை அடுத்து, தேசீய மகளிர் ஆணையமும் கேட்கத் துவங்கியிருக்கிறது.

போலீஸ் சீர்திருத்தங்கள், போலீஸ் இலாகாவை நவீனமயமாக்குவது என்பதெல்லாம் நீண்ட கால விவகாரங்கள். அவையெல்லாம் படிப்படியாகத் தான் நடக்கும், ஒரு வேளை அவை நடந்தால் ... ஆனால் அதற்கு முன்பாக, தற்போதைக்கு இருக்கக் கூடிய தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் போலீசின் திறமையை வைத்து சென்னை போலீசால் அற்புதங்களை சாதிக்க முடியும் தான். மிகப் பெரிய அளவில் இந்த விஷயம், மீடியாக்களில் விவாதிக்கப் பட்டும், எதிர்க் கட்சிகள் குரல் எழுப்பியும் கூட அசையாத அரசு, சென்னை உயர்நீதி மன்றம் தலையிட்ட மூன்று மணி நேரத்திலேயே விசாரணையை சிட்டி போலீஸூக்கு மாற்றியிருக்கிறது. இதனை வெள்ளிக் கிழமை கொலை நடந்த சில மணி நேரத்திலேயே செய்திருக்க வேண்டும். ‘'எல்லைப் பிரச்சனையில்'' தமிழக போலீசின் இரண்டு பிரிவுகள் அடித்துக் கொண்ட போது மெளனம் காத்த மாநில அரசு சென்னை உயர்நீதி மன்றம் சாட்டையை சுழற்றிய பின்னர்தான் செயற்படத் துவங்கியது.

உச்ச நீதி மன்றத்தின் 2006 ம் ஆண்டு பிரகாஷ் சிங் தீர்ப்பின் ஏழு கட்டளைகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதனால் 2013 ல் தமிழக அரசு மீது உச்ச நீதி மன்றம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் தலைமை செயலளார் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியது. ‘'வழக்கமாக இது போன்ற உத்திரவுகளை நாங்கள் பிறப்பிப்பது இல்லை ... இது எங்களுக்கு வலியைத் தருகிறது .. எல்லா தருணங்களிலும் நாங்கள் இதுபோன்ற உத்திரவுகளை பிறப்பிப்பதை தவிர்க்கிறோம். ஆனால் தற்போது நாங்கள் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். நீதி மன்ற உத்திரவுகளை நிறைவேற்றாததற்காக, சில அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, அவர்கள் தண்டிக்கப் பட்டால்தான் நிலைமை முன்னேற்றம் அடையும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு தனது உத்திரவில் தெரிவித்தது.

http://www.firstpost.com/india/sc-calls-chief-secretaries-of-four-states-for-failure-to-implement-police-reforms-960525.html

அதற்கு பிறகு பிரகாஷ் சிங் தீர்ப்பின் ஒரு சில கட்டளைகளை மட்டும் தமிழக அரசு அமல் படுத்தியிருக்கிறது. ஆனால் முக்கியமானதும், முதல் கட்டளையுமான ஸ்டேட் ஸெகியூரிட்டி கமிஷன் என்பதும் அக்கவுண்டபிளிட்டி கமிஷன் என்பதும் அதாவது, போலீசுக்கு அவர்களது செயற்பாடுகளுக்கு பொறுப்பை ஏற்கச் செய்யும் அமைப்பு இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

உச்சநீதி மன்றத்தின் கட்டளைகள் ஒரு பக்கம் இருக்கட்டும் ... முதலமைச்சர் ஜெயலலிதா, டில்லி நிர்பயா படுகொலைக்குப் பின்னர், ஜனவரி, 2013 ல் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 13 அம்ச திட்டம் ஒன்றினை அறிவித்தார். இதில் பெரும்பாலானவை அமல்படுத்தப் படவில்லை என்பதுதான் கூடுதல் கேலிக் கூத்து. இதில் முக்கியமானது அனைத்து பொது கட்டிடங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப் படும் என்பது. இன்று சென்னையின் முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்றான நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனிலேயே சிசிடிவி இல்லை. ஜெயலலிதா வின் 13 அம்ச செயற்திட்டம் அறிவிக்கப் பட்டு மூன்றரை ஆண்டுகள் கழித்து காணப்படும் நிலைமைதான் இது.

ஆகவே தாங்கள் அறிவித்த செயற்திட்டத்தையே கூட மூன்றரை ஆண்டுகள் கழித்தும் செயற்படுத்த தவறிய ஆட்சியாளர்கள்தான் மீண்டும் தற்போது அரியணை ஏறியிருக்கிறார்கள். பெண்கள் தமிழகத்தில் அச்சமின்றி நடமாட எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் படும் என்றார்கள், அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் படும் என்றார்கள் ... இவை எல்லாமே இன்றளவும் ஏட்டளவில் தான் இருக்கின்றன. இதில் ஸ்வாதி விவாகரத்தில் வந்த ‘'எல்லை பிரச்சனை'' யால் விளைந்த கால தாமதமும் தமிழக போலீசுக்கு தீராத அவமானத்தை தேடித் தந்திருக்கிறது. குற்றவாளி கண்டறியப் படும் வரையில் இந்த அவப் பெயர் தொடரத் தான் செய்யும்.

ஆட் பற்றாக்குறையும் பெருங் குறையாக இருக்கின்றது. ‘'தமிழக போலீசின் எண்ணிக்கை 1.27 லட்சம். தற்போது இருப்பது 99,000. நவீன பயிற்சிக்கு மொத்த எண்ணிக்கையில் ஒரு சத விகித போலீசார் எப்போதும் அனுப்ப பட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆண்டுதோறும் இது நடைபெற வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுதான் நடைமுறை.'' என்கிறார் ஓய்வு பெற்ற போலீஸ் கல்லூரியின் துணைத் தலைவரும், எஸ்.பி யுமான சித்தண்ணன். ஸ்வாதி கொலைக்குப் பின்னராவது தமிழக அரசு இதற்கெல்லாம் செவி மடுத்தால் அது போலீசுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்லது.


மூலக்கதை

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி அடையாளம் தெரிந்தது: விரைவில் பிடிபடுவார் என தகவல்



நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி (24) கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய ஆதாரங்கள் மூலம் குற்றவாளியின் அடையாளம் தெரிந்துள்ளது. கொலையாளியை நெருங்கிவிட்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். | வீடியோ இணைப்பு கீழே |

சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட் டுள்ளது. ரயில்வே போலீஸார் 2 டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர் கள் தலைமையில் தனிப்படை கள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் 4 வகையான வீடியோக்கள் வெளியிடப்பட் டுள்ளன.

சவுராஷ்டிரா நகர் முதல் தெரு முதல் அங்குள்ள 10 தெருக்கள் வரையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சந்தேகிக்கும் இளைஞர் வந்து போவது பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.

கொலையாளி என சந்தேகிக் கப்படும் நபரின் புதிய வீடியோ காட்சி ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. அதில் இளை ஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2-வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் அந்த இளைஞர், ரயில் நிலையம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நெருங்கிவிட்டோம்

இது தொடர்பாக ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, ‘‘சுவாதி கொலை வழக்கில் பல்வேறு முக்கிய தடயங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் கிடைத்துள் ளன. அதன் மூலம் குற்ற வாளியை சந்தேகிக்கும் வகை யில் அடையாளம் கண்டறிந்துள் ளோம். அவரை நெருங்கிவிட் டோம். விரைவில் பிடித்து விடு வோம். சந்தேகிக்கும் குற்றவாளி யின் படத்தை வெளியிட்டுள் ளோம். அந்த இளைஞரை நேரில் பார்த்தால் 1512 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.

பட்டா கத்தி

கொலை செய்த இளைஞர் பட்டா கத்தியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த கத்தியை பறிமுதல் செய்துள்ள ரயில்வே போலீஸார், இதுபோன்ற கத்தி எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது, அது எப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும் விசாரித்து வருகின்றனர்.

சுவாதி கொலையாளியை விரைவில் பிடிப்போம்: சென்னை போலீஸ் கமிஷனர் சிறப்புப் பேட்டி

சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் | படம்: கே.வி.ஸ்ரீநிவாஸ்.


சென்னை ஐடி இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை தங்களிடம் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

தொடர் கொலைகள் குறிப்பாக சுவாதியின் கொலை சென்னையை நடுங்கச் செய்துள்ளது. தலைநகரில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டுவிட்டதாக மக்கள் கருதுகின்றனர்...

சென்னையின் நிலவரம் மிகைப்படுத்திக்காட்டப்பட்டுள்ளது. உண்மை அதுவல்ல. கடந்த சில நாட்களாக சென்னையில் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சென்னை நகரில் குற்றங்கள் குறைவாகவே இருக்கிறது. அத்தனை கொலை வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்திருக்கிறோம். தனிநபர் விரோதம், குடும்பப் பிரச்சினை காரணமாக கொலைகள் நடக்கும்போது அதை தடுப்பதில் காவல்துறைக்கு பெரிய பங்கு ஏதுமில்லை.

சென்னையில் அண்மையில் நடந்த கொலைச் சம்பவங்களில் ஒரு சம்பவத்தில் மனைவியே கணவனை கொலை செய்திருக்கிறார். மற்றொரு சம்பவத்தில் கணவர் தன் மனைவியையும் அவருடைய மூன்று பெண் குழந்தைகளையும் கொலை செய்திருக்கிறார். இத்தகைய குற்றங்களை எப்படி தடுக்க முடியும். இவற்றில் குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமே சாத்தியம். அதை 24 மணி நேரத்துக்குள் காவல்துறை செய்திருக்கிறது.

சுவாதியின் வழக்கு திங்கள்கிழமை அன்றுதான் எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என நாங்கள் நம்புகிறோம்.

சமீபத்திய கொலை சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது எள்ளளவும் பயமில்லை என்பதையே காட்டுகிறது. கொடுங் குற்றங்களுக்குப் பிறகு குற்றவாளிகளை பிடிப்பது மட்டும்தான் காவல்துறையினரின் கடமையா?

இங்குதான் பொதுமக்கள் தலையீடு அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற இயலாவிட்டாலும் குற்றவாளி குறித்து போலீஸுக்கு தகவல் அளிக்கலாம், முடிந்தால் குற்றவாளியை சம்பவ இடத்திலேயே பிடிக்கவும் செய்யலாம். சுவாதி கொலையாளி சம்பவத்துக்குப் பிறகு சிறு தூரம் நடந்து சென்று பின்னர் அங்கிருந்த ஒரு சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பியுள்ளார். இந்த நிகழ்வை யாராவது புகைப்படம் எடுத்திருந்தாலோ அல்லது வீடியோ காட்சியாக பதிவு செய்திருந்தாலோ உடனடியாக காவல்துறைக்கு அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவர்களது அடையாளம் மிகமிக ரகசியமாக பாதுகாக்கப்படும்.

இரவு நேர ரோந்து, வாகன தணிக்கை என போலீஸ் கெடுபிடி தளர்ந்துவிட்டதாக கூறப்படுகிறதே..

குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து போதுமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 700 ரோந்து வாகனங்களில் போலீஸார் ரோந்து மேற்கொள்கின்றனர். குற்றச்செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் இரவு நேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 20,000 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கே.கே.நகர், வலசரவாக்கம் காவல் சரகத்துக்கு உட்பட்ட ஒட்டுமொத்த பகுதியும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் உள்ளது. நகர் முழுவதையும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

கொடுங் குற்றச்செயல்களைப் புரிபவர்களில் எத்தனை பேர் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்? குறிப்பாக சென்னையில் நடந்த குற்றச் செயல்கள் குறித்து சொல்லுங்கள்? இது தவிர விசாரணை அதிகாரிகளுக்கு வழக்கமான விஐபி பாதுகாப்பு, போராட்டங்களை தடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இடையே தங்கள் வசம் உள்ள வழக்கு விசாரணைக்கு போதிய நேரம் இருக்கிறதா?

கொடுங் குற்றச்செயல்களைப் புரிபவர்களில் 50% பேர் தண்டனை பெறுகின்றனர். நீங்கள் சொல்வதுபோல் போலீஸாருக்கு வெவ்வேறு பணிகளும் இருக்கின்றன. அதற்கிடையிலும் குறிப்பிட்ட கால இடைவேளையில் அவர்கள் வசம் இருக்கும் வழக்குகளின் விசாரணை நிலவரத்தை கேட்டறிந்து வருகிறோம். வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் விரைவில் தாக்கலாவதை உறுதி செய்கிறோம்.

குற்றங்களை தடுக்க முயன்றாலோ அல்லது குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தாலோ தங்களுக்கு இடையூறு ஏற்படும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. சாட்சிகளை பாதுகாக்க என்ன நடைமுறை இருக்கிறது?

மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. தங்கள் கண்முன் நிகழும் குற்றங்களை தடுக்க முடியாவிட்டாலும் உடனடியாக 100-க்கு போன் செய்யலாம். போன் செய்த சில நிமிடங்களில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் அளவுக்கு ஆங்காங்கே ரோந்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுதவிர குற்றச் சம்பவங்கள் குறித்து தகவல் அளிப்பவர்களை பாதுகாக்க போலீஸாருக்கு தேவையான அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

செல்போன் திருட்டு போனாலோ தொலைந்து போனாலோ அதை போலீஸார் புகாராக பதிவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?இதனால் தங்கள் செல்போனில் உள்ள முக்கிய ஆவணங்களையும், புகைப்படங்களையும் தவறவிட்ட பதற்றத்தில் பலரும் தவிக்கின்றனர்.

செல்போன் திருட்டு, செல்போன் தொலைந்த சம்பவங்கள் குறித்து நிச்சயமாக வழக்கு பதிவு செய்யப்படும். அத்தகைய வழக்குகளை பதிவு செய்ய வேண்டாம் என எவ்வித உத்தரவும் இல்லை.

எம்ஜிஆர் 100 | 95 - கருணை உள்ளம் கொண்டவர்!

தான் வளர்த்த கரடிக் குட்டிக்கு எம்.ஜி.ஆர். உணவு கொடுக்கிறார்.

M.G.R. விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தன்னுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு அடிபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதேபோல, விலங்குகளுக்கும்கூட ஆபத்து ஏற்படக் கூடாது என்று நினைப்பார். தன் வீட்டிலேயே சில விலங்குகளை வளர்த்து வந்தார்!

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அவரது படங்களில் வரும் சண்டைக் காட்சி கள் சர்க்கரைப் பொங்கல். அவ ருடன் சண்டைக் காட்சிகளில் நடித்த நடிகர்களில் ரசிகர்களால் மறக்க முடி யாதவர் ஜஸ்டின். ‘ரகசிய போலீஸ்’, ‘அடிமைப் பெண்’, ‘இதயக்கனி’, உட்பட எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மது ரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் ஜஸ்டின் நடித்துள்ளார். அவரது ஆஜானுபாகுவான தோற்றத் தையும் சண்டைக் காட்சிகளில் திறமை யையும் பார்த்த எம்.ஜி.ஆர்., தன்னுடைய பல படங்களில் பெரும்பாலும் தனித்தே மோதும் வாய்ப்பை ஜஸ்டினுக்கு வழங்கினார். அவை படத்தின் ‘ஹைலைட்’டாக இருக்கும்.

‘இதயக்கனி’ படத்தில் பெங்களூர் அரண்மனையில் ஜஸ்டினுடன் மோதும் சண்டைக் காட்சியின் இறுதியில், எம்.ஜி.ஆர். அடித்ததும் மாடிப் படிகளில் குப்புறப்படுத்தவாறே ஒவ்வொரு படியாக தடதடவென்று ஜஸ்டின் சறுக்கி விழும் காட்சி ரசிகர்களின் கைதட்டலைப் பெறும். இதுபோன்ற காட்சிகளில் நடிப் பவர்களுக்கு அடிபடாமல் இருப்பதற் கான உத்திகளை அவர்களுக்கு எம்.ஜி.ஆரே சொல்லிக் கொடுப்பார்!

அந்த அளவுக்கு நடிகர்கள் மீது அக் கறை கொண்டவர். அந்த அக்கறையால் தான், புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மற்றும் திரைத்துறை வல்லுநர்கள் சேர்ந்து 1950-ம் ஆண்டு உருவாக்கிய ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’ அமைப்பையும், பின்னர் உருவான ‘தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்’ என்ற அமைப்பையும் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் முயற்சியால் 1952-ம் ஆண்டு ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உருவானது. ஆரம்ப காலத்தில் அந்த சங்கம் இயங்க தன் வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்ததோடு, பின்னர், இப்போது சென்னை தியாக ராய நகரில் உள்ள இடத்தை வாங்கு வதிலும் முக்கிய பங்காற்றினார். சுமார் 22 கிரவுண்டு உள்ள அந்த இடம் அப்போது 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. வசூலான 35 ஆயிரம் போக மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை எம்.ஜி.ஆர். தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து உதவினார்!

ஒரு தாய், நான்கு குழந்தைகளை வைத்தபடி இருக்கும் நடிகர் சங்க இலச்சினையை உருவாக்கியதும் எம்.ஜி.ஆர்.தான்! அந்த இலச்சினை பொறித்த மோதிரத்தை நீண்ட காலம் அணிந்திருந்தார். நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து அதன் வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளார்.

‘வேட்டைக்காரன்’ படத்தின் கிளை மாக்ஸில் 20 அடி உயரமான இடத்தில் இருந்து ஸ்டன்ட் நடிகர் கே.பி.ராம கிருஷ்ணன் கீழே விழ வேண்டும். அவர் விழும் இடத்தில் பாம்புகள் இருக்கும். ராமகிருஷ்ணனைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘கீழே மெத்தை போடச் சொல்லட்டுமா?’’ என்றார். ‘‘இல்லண்ணே, நான் பார்த்து குதிச்சுடறேன்’’ என்றார் ராமகிருஷ்ணன்.

பின்னர், எம்.ஜி.ஆர். கூறிய வார்த்தை கள், வாயில்லா ஜீவன்களையும் அவர் எப்படி நேசித்தார் என்பதைக் காட்டும். ராம கிருஷ்ணனிடம், ‘‘பாம்புகள் மேலே படாமல் பார்த்து குதிக்கணும். பாம்புகள் மேலே விழுந்தால் அவை செத்துடும், பாவம்’’ என்று கூறினார்.

‘நல்ல நேரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். நான்கு யானைகளை வளர்ப்பார். தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது யானைகளுக்காக நிறைய உருண்டை வெல்லம், கரும்பு, வாழைத் தார்கள் வாங்கி வந்து யானைகளுக்குக் கொடுப்பார். அவைகள் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்வார்!

தனது வீட்டில் கரடிக் குட்டியையும் நாய்களையும் எம்.ஜி.ஆர். வளர்த்து வந்தார். கரடிக் குட்டி தினமும் காலையில் அவர் கையால்தான் ஃபீடரில் பால் குடிக் கும். தன் வீட்டில் வளரும் மிருகங்களை கவனிக்க தனியே ஒரு மருத்துவரையும் நியமித்திருந்தார். கரடிக்கு மூக்கில் சங்கிலி இணைக்க வசதியாக மருத்துவரின் உதவியுடன் துளையிட முயன்றபோது அது இறந்துவிட்டது. எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப்பட்டார்.

வீட்டில் இரண்டு சிங்கங்களையே எம்.ஜி.ஆர். வளர்த்தார். ஒன்றின் பெயர் ராஜா. பெண் சிங்கத்தின் பெயர் ராணி. இதில் ராஜா என்ற சிங்கத்துடன்தான் ‘அடிமைப் பெண்’ படத்தில் கிளைமாக் ஸில் எம்.ஜி.ஆர். மோதுவார். அந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கினார். அது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. ‘‘சிங்கத்தின் வாயை தைத்து விடலாம்’’ என்று சிலர் யோசனை கூறிய போது எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். ராணி சிங்கம் ‘அடிமைப் பெண்’ படம் எடுக்கும் முன்பே இறந்துவிட்டது.

பின்னர், ராஜா சிங்கத்தை மிருகக் காட்சி சாலைக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து விட்டார். அங்கு சில ஆண்டுகளுக்குப் பின் முதுமையால் அது இறந்துவிட்டது. அந்த சிங்கத்தின் மேல் வைத்திருந்த பிரியத்தால் அதன் உடலை வாங்கி பாடம் செய்து வைத்திருந்தார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்குச் சான்றாய், அவரது நினைவு இல்லத்தில் கண்ணாடிப் பேழைக்குள் இன்றும் கம்பீரமாக நிற்கிறான் ‘ராஜா’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




தமிழ்ப் படத்தில் முதன்முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்த ஹீரோ எம்.ஜி.ஆர்.தான்! ‘நாளை நமதே’ படத்தில் சங்கர் என்ற பாத்திரத்தில் வரும் எம்.ஜி.ஆர். கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்திருப்பார்! ‘படகோட்டி’ படத்தில் படம் முழுவதும் செருப்பு அணியாமல் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்!

Monday, June 27, 2016

சுவாதி கொலை வழக்கில்

சுவாதி கொலை வழக்கில் அறிவியல் பூர்வ புலனாய்வு- ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா


சென்னை: நுங்கம்பாக்கம் சுவாதி கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்துவருவதாக திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்துள்ளார். ரயில்வே போலீசாரின் நத்தை வேக விசாரணையால் அதிருப்தியடைந்த டிஜிபி அசோக்குமார், சுவாதி கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுவாதி. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வந்த சுவாதியை மர்மநபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். சுவாதி கொலையில் புதிய வீடியோ படங்கள் போலீசிடம் சிக்கி உள்ளன. அதில் கொலையாளியின் உருவம் ஓரளவு தெளிவாக தெரிகிறது. அதை வைத்து கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களுக்கும் கொலையாளியின் படம் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை பொதுமக்களிடம் வழங்கும்படி மேல் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த படங்களை மக்கள் கூடும்முக்கிய இடங்களுக்கு சென்று போலீசார் பொது மக்களிடம் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணியம், சுவாதி கொலை தொடர்பாக துப்பு துலக்க சென்னை நகர போலீசார் உதவியையும் நாடி இருக்கிறோம். இதையடுத்து அனைத்து உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொலையாளி வீடியோ படங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

சந்தேகப்படும்படியான இடங்களில் சோதனை நடத்தும்படியும், விடுதி உள்ளிட்ட மற்ற இடங்களில் கண்காணிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம். விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கொலையாளியை கண்டுபிடித்து விடுவோம் என்று கூறியிருந்தார்.

திருச்சியில் இருந்து வந்துள்ள ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா, கொலை செய்யப்பட்ட சுவாதி வீட்டில் நேற்றும் இன்றும் விசாரணை மேற்கொண்டார். கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்துவருவதாகவும் எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்தார்.

கொலை நடந்து 3 நாட்களாகியும், இதுவரை குற்றவாளியை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம், ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர போலீசாரும் குற்றவாளியை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.

சுவாதி கொலை வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது என்ற விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கொலையாளியைப் பற்றி இரண்டு வீடியோக்கள் கிடைத்த நிலையிலும் ரயில்வே போலீசாரின் விசாரணை நத்தை வேகத்தில் நகரவே, இந்த கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சுவாதி கொலை வழக்கு விசாரணை வேகமடையும் என்று எதிர்பார்க்கலாம்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...