Thursday, July 14, 2016

'காமராஜர் உருவத்தில் இனிப்புக் கொழுக்கட்டை!' -மலைக்க வைத்த 'இட்லி' இனியவன்



vikatan.com

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவத்தில் முழுக் கொழுக்கட்டையை தயார் செய்து வருகிறார் சமையல் கலை வல்லுநர் இனியவன். " நாளை காலை காமராஜர் வாழ்ந்த வீட்டில், அவரது உருவத்திலான இனிப்புக் கொழுக்கட்டையை பொதுமக்கள் பார்க்கலாம்" என்கிறார் நெகிழ்ச்சியோடு.

கோவையைப் பூர்வீகமாகக் கொண்டவர் 'மல்லிப் பூ' இட்லி இனியவன். மிகுந்த வறுமைக்கு இடையில் சென்னை வந்தவருக்கு இட்லி வியாபாரமே கை தூக்கிவிட்டது. பிரபலமானவர்களின் திருமணக் கூடங்களில் இனியவனின் இட்லிக்கு என தனி இடம் உண்டு. காலத்திற்கேற்றார் போல, சாக்லெட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி,சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தினார்.

100 கிலோ எடையிலான இட்லி, அப்துல் கலாம் உருவத்தில் இட்லி, அன்னை தெரசா உருவத்தில் இட்லி என இட்லியை வைத்தே ஏராளமான கண்காட்சிகளை நடத்தியவர். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், காமராஜரின் 114-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவத்தில் இனிப்புக் கொழுக்கட்டையைத் தயார் செய்யும் வேலையில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார் இனியவன். நாளை காலை 9 மணியளவில் திருமலைப் பிள்ளை தெருவில் உள்ள காமராஜர் வாழ்ந்த வீட்டில், பொதுமக்கள் பார்வைக்கு கொழுக்கட்டையை வைக்க இருக்கிறார்.

.இனியவனிடம் பேசினோம்.  " காமராஜரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக அரசு கொண்டாடுகிறது. நமது வாழ்வில் ஏதோ ஒருநாள் என்று கடந்த போகக் கூடியதல்ல அவரது பிறந்தநாள்.தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த நேர்மையான ஆட்சியாளர் அவர். நான் எட்டாம் வகுப்பு வரையில் படித்திருக்கிறேன். அதற்குக் காரணமே, காமராஜர் போட்ட சத்துணவுதான். இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே, அவரது பிறந்தநாளையொட்டி ஏதாவது செய்ய வேண்டும் என மனதிற்குள் எண்ண ஓட்டம் இருந்து கொண்டே இருந்தது. இட்லி வடிவத்தில் அவரைக் கொண்டு வருவதைவிடவும், கொழுக்கட்டை உருவில் கொண்டு வருவது என முடிவு செய்தோம். சுமார் 60 கிலோ எடையில் அவரது உருவத்தை இனிப்பு கொழுக்கட்டையில் கொண்டு வருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த பத்து நாட்களாக அவரது உருவத்தை எப்படிக் கொண்டு வருவது என பலவிதமான முயற்சிகளில் இறங்கினோம். நேற்றுதான் முழுமையான வடிவத்தை எட்டினோம். இன்று இரவுக்குள் முழு கொழுக்கட்டையும் தயாராகிவிடும். தவிர, பொதுமக்கள் உண்பதற்காக 114 கிலோ எடையில் ராட்சத இனிப்புக் கொழுக்கட்டை ஒன்றையும் தயார் செய்து வருகிறோம். இந்த கொழுக்கட்டை நாளை காலை 9 மணியளவில், காமராஜர் வாழ்ந்த வீட்டில் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு உணவாக வழங்கப்படும்.
அவரது உருவத்தினால் ஆன கொழுக்கட்டையை, கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடலில் மீன்களுக்கு உணவாகப் படைக்க இருக்கிறோம். கல்விக் கண் திறந்த காமராஜருக்கு எங்களால் முடிந்த சிறிய அளவிலான முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம்" என்றார் மகிழ்ச்சியோடு.

காமராஜருக்கு சிறப்புச் செய்யும் 'இட்லி' இனியவனின் இனிப்புக் கொழுக்கட்டை தித்திப்பாய் பரவட்டும்!

-ஆ.விஜயானந்த்

ஒரு பெண்ணுக்கு கால் டாக்ஸி பயணம் கொடுத்த வேதனை!



அடிப்படை வசதி முதல் நவீன வாழ்வின் ஆடம்பரங்கள் வரை குவிந்திருக்கும் நகரங்கள், இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சம்பவங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. விலாசனி ரமணி , எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். அவர் கடந்த ஞாயிறு இரவு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் செல்ல, ஓலா கால் டாக்சியை புக் செய்துள்ளார். அது 15 கி.மீ தூர பயணம்தான். வாகன நெரிசல் அதிகமாக இருந்தால் கூட ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். அனால், அந்த பயணம் அவருக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. காரணம்...? ஓட்டுநரின் மோசமான நடவடிக்கை.

அன்று என்ன நடந்தது?


திருவான்மியூரிலிருந்து புறப்பட்ட அந்த ஓலா வாகனம், வேகமாக சென்று இருக்கிறது. விலாசனி ஓட்டுநரிடம், “அவசரம் ஏதுமில்லை... மெதுவாகவே செல்லவும்...” என்றுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத அந்த ஓட்டுநர், வாகனத்தை வேகமாக செலுத்தி உள்ளார். மீண்டும் விலாசனி, “உங்கள் வேகம் எனக்கு அச்சமூட்டுவதாக உள்ளது... தயவு செய்து மெதுவாக செல்லுங்கள்...” என்று சொல்ல, அந்த ஓட்டுநர் கோபமாக, “மெதுவாகவெல்லாம் செல்ல முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள், நாங்கள் கணிசமான எண்ணிக்கையிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு அசெளகரியமாக இருந்தால், இறங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லியுள்ளார் கோபத்துடன்.




அச்சமடைந்த விலாசனி அண்ணா பல்கலைகழகம் அருகே வாகனத்திலிருந்து இறங்கி, ஆட்டோவில் செல்ல முயற்சித்துள்ளார்.

அதன்பின் நடந்தவற்றை விவரிக்கிறார் விலாசனி, “நான் வாகனத்திலிருந்து இறங்கிய பின்பும், அங்கேயேதான் ஓலா ஓட்டுநர் நின்று என்னை முறைத்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல், நான் மேற்கொண்ட பயணத்திற்காக, நான் பணம் தர வேண்டுமென்றும் நிர்பந்தித்தார். ஆனால், நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். அவர்தான் என்னை நான் செல்ல வேண்டிய இடத்தில் விடாமல், வாகனத்திலிருந்து இறங்க சொன்னார். நான் ஏன் பணம் தர வேண்டும்...? ஆனால், அதற்கு அந்த ஓட்டுநர் என் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டினார்." என திகிலுடன் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

காவல் துறையினரின் மெத்தனம்:

பின் இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் விலாசனி. அவர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க சொல்லி உள்ளார்கள். ஆனால், அங்கும் அவரின் புகார் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அங்கு இருந்த காவலர்கள், “இந்த சம்பவம் நடந்தது கிண்டியில், அது எங்கள் அதிகார வரம்பிற்குள் வராது. நீங்கள் கிண்டி காவல் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள்...” என்று அலைக்கழித்துள்ளார்கள். இந்தச் சம்பவம் நடந்த போது இரவு பத்து மணி.

ஏற்கெனவே, அச்சத்தில் இருந்த விலாசனியை இந்த சம்பவம் மேலும் மன உளைச்சலில் ஆழ்த்தி உள்ளது. தனியாக கிண்டி செல்ல மறுத்த அவர், குறைந்தபட்சம் தன்னை வளசரவாக்கத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பாக வாருங்கள் என்று காவலர்களிடம் கேட்டுள்ளார். அதன் பின், ஒரு காவலர் துணையாக அனுப்பப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விலாசனி, “சம்பவம் நடந்தது கிண்டி பகுதியில். அந்த ஓலா வாகன ஓட்டுநர் அந்தப் பகுதியில் இருக்க வாய்ப்புகள் அதிகம். நான் ஏற்கெனவே, அச்சமடைந்த சூழ்நிலையில் இரவு பத்து மணிக்கு மேல், என்னைத் தனியாக நந்தம்பாக்கத்திலிருந்து கிண்டி சென்று புகார் அளியுங்கள் என்று சொல்வது, எத்தகைய அறிவுடைய செயல் என்று எனக்கு தெரியவில்லை...” என்றார் வருத்தமாக.

சமூக ஊடகம் பணிய வைத்தது:

அந்த இரவில் நடந்த சம்பவங்களை சமூக ஊடகத்தில் எழுதினார் விலாசினி. அந்தப் பதிவை பல்லாயிரம் பேர் பகிர்ந்துள்ளார்கள். அதன்பின்னர்தான் இந்த பிரச்னை பொது வெளிக்கு வந்தது. விலாசனி தன் வருங்கால கணவரின் கைபேசியிலிருந்து ஓலா டேக்சியை புக் செய்ததால், அவர் மின்னஞ்சலில் இருந்தே ஓலா நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார். அதன் பின், ஓலா நிறுவனம் விலாசனியை தொடர்பு கொண்டு, நிச்சயம் அந்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது. காவல் துறையும், புகாரைப் பெற மறுத்த காவலர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக ஓலா நிறுவனம் என்ன சொல்கிறது?:

இது குறித்து ஓலா நிறுவனத்திடம் விளக்கம் பெற முயற்சி செய்தோம். நம்மிடம் பேசிய வாடிக்கையாளர் சேவை ஊழியர், “இந்த பிரச்னையை அதற்கான துறையிடம் எடுத்துச் செல்வதாக” கூறினார். நம்மிடம் இது குறித்து ஒரு மின்னஞ்சலும் அனுப்பச் சொன்னார். அனுப்பிவிட்டு, பதிலுக்காக காத்திருக்கிறோம்.

2010 ம் ஆண்டு துவங்கப்பட்டது ஓலா நிறுவனம். இப்போது நூறு நகரங்களில் தன் சேவையை வழங்கி வருகிறது. அதனிடம் 2,50,000 வாகனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்தனை திறன்மிகு ஓட்டுநர்கள் அவர்களிடம் இருக்கிறார்களா...? சமீபத்தில் ஓலா நிறுவனம் 700 மில்லியன் ரூபாயும், உபேர் நிறுவனம் 1,000 மில்லியன் ரூபாயும் முதலீடாக திரட்டியது.

'கல்விக் கடனுக்கு ரிலையன்ஸ்... ரிலையன்ஸ் கடனுக்கு?!' -நாடாளுமன்றத்தை உலுக்கப் போகும் ஜூலை 18

vikatan

இந்திய வங்கிகளில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாய் விவகாரம் பெருத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ' வருகிற 18-ம் தேதியில் இருந்து தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், பா.ஜ.க அரசுக்குப் பெரும் தலைவலியாக இந்த விவகாரம் அமையும்' என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், " இந்திய வங்கிகளில் இருந்து பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாயில், 5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் பட்டியலில் சேர்ந்துவிட்டன. இந்தப் பணத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதால், அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லை என சி.ஏ.ஜி சசிகாந்த் சர்மா கூறியிருக்கிறார்.

இவ்வளவு பெரிய தொகையையும் வசூலிப்பது மிகக் கடினம். இதனால் இந்தியப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தளவுக்குப் பணம் வழங்கியது எதற்காக?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

யெச்சூரியின் கேள்விகள், நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், " 'கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் சேர்ப்பேன்' என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார் மோடி. அதற்கான முயற்சிகளில் இறங்காமல், காங்கிரஸ் அரசைப் போலவே, பெரு நிறுவனங்களுக்கு இந்திய மக்களின் பணத்தில் இருந்து கணக்கு வழக்கில்லாமல் வாரியிறைக்கப்பட்டது சரிதானா" எனக் கேள்வி எழுப்புகின்றன இடதுசாரிக் கட்சிகள்.

மேலும் பெருநிறுவனங்கள் வாங்கிய கடன் விவரங்களும் வெளியுலகின் பார்வைக்கு வந்தன. அதில், ' கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, அதானி குழுமம் ரூ. 96,031 கோடி, எஸ்ஸார் குழுமம் 1.01 ட்ரில்லியன் ரூபாய், ஜி.எம்.ஆர் குழுமம் ரூ.47,976 கோடி, ஜி.வி.கே. குழுமம் 33,933 கோடி, ஜே.பி குழுமம் ரூ.75,163 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ ரூ. 58,171 கோடி, லான்கோ குழுமம் ரூ.47,102 கோடி, ரிலையன்ஸ் 1.25 ட்ரில்லியன் ரூபாய், வேதாந்தா குழுமம் 1.03 ட்ரில்லியன் ரூபாய், வீடியோகான் குழுமம் 45,405 கோடி ரூபாய் என மொத்தம் ரூ.7 லட்சம் கோடிகளைக் கடனாகப் பெற்றுள்ளன. மொத்தத் தொகையில் 5.60 லட்சம் கோடி ரூபாய் பணம் வாராக்கடன் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டன' என்கின்றனர் வங்கி அதிகாரிகள். இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நம்மிடம், " இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது குறித்து, மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். அதானிக்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும், வங்கிப் பணத்தை வாரியிறைப்பதன் மூலம், அரசுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. இந்த நிறுவனங்களின் சொத்துக்களுக்கு இணையாக, வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ளனர். இவர்களிடம் இருந்து வசூலிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அத்தனையும் நம் மக்களின் வரிப்பணம்.

தற்போது மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளன வங்கி நிர்வாகங்கள். மாணவர்களை மிரட்டி கல்விக் கடன் வசூலிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். மாணவர்களிடம் கடனை வசூலிக்கிறார்கள் சரி. ரிலையன்ஸ் வாங்கிய கடனை யார் வந்து வசூலிக்கப் போகிறார்கள்? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலராக குறைந்தாலும், பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைக்கு மேல் சலுகை வழங்குவது எதற்காக?.
இந்திய வங்கிகளில் இருந்து வாரியிறைக்கப்பட்ட பணத்திற்கு, நாடாளுமன்றத்தில் மோடி அரசு பதில் சொல்லும் வரையில் எதிர்க்கட்சிகள் ஓயப் போவதில்லை" என்றார் கொந்தளிப்போடு.

ரயிலில் கூவிக் கூவி குழந்தையை விற்க முயன்ற கொடுமை


VIKATAN 

ரயிலில் கூவிக் கூவி குழந்தையை விற்க முயன்ற கொடுமை! -போலீஸ் விசாரணையில் 2 பெண்கள்

கோவை: ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலில், இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் பயணித்துள்ளனர். அப்போது, சக பயணிகளிடம் யாருக்காவது குழந்தை வேண்டுமா என அவர்கள் கேட்டு குழந்தையை விற்க முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், குழந்தை உதவி மையத்துக்கு இது பற்றி புகார் அளித்திருக்கின்றனர்.

பயணிகளின் புகாரின் அடிப்படையில், கோவை ரயில் நிலையத்தில் வைத்து, குழந்தையை விற்க முயன்ற இரண்டு பெண்களையும் குழந்தையுடன் கோவை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து இருக்கின்றனர். ரயில்வே போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர்கள் ஈரோடு, வாடிப்பட்டியைச் சேர்ந்த ராணி என்பதும், சேலத்தைச் சேர்ந்த சாந்தி என்பதும் தெரியவந்திருக்கிறது.

ராணி திருச்சூரில் வேலை பார்த்து வந்துள்ளார். சாந்தியின் மகள் ஷாலினிக்கு குழந்தை இல்லாததால், ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுக்கவோ, விலைக்கு வாங்கவோ அவர் முயற்சித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சம்சீலா என்பவருக்கு கடந்த 8-ம் தேதி பிறந்த பெண் குழந்தையை விலைக்கு அவர்கள் வாங்கியதாகவும் விசாரணையில் இருவரும் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும், இதில் சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படாததால், சிக்கல் வரும் என கருதி மீண்டும் அந்த குழந்தையை சம்ஷீலாவிடம் ஒப்படைக்க முடிவு செய்து அவர்கள் திருச்சூருக்கு குழந்தையை கொண்டு சென்றதாகவும், அப்போது ரயிலில் செல்லும்போது குழந்தையை யாருக்காவது விற்றுவிடலாம் என முயன்றபோது சிக்கிக் கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்சீலாவிடம் இருந்து இடைத்தரகர் மம்மூட்டிகாகா என்பவர் மூலம் குழந்தை வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. மேலும், மீட்கப்பட்ட குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார், குழந்தையின் பெற்றோரான திருச்சூரைச் சேர்ந்த சம்ஷீலாவை வரவழைத்து அவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் குழந்தையை கூவிக் கூவி பெண்களே விற்க முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ச.ஜெ.ரவி

தனிமையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனைத் தொடாமல் உங்களால் எத்தனை நேரம் இருக்க முடியும்?

ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அடிமையா?


தனிமையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனைத் தொடாமல் உங்களால் எத்தனை நேரம் இருக்க முடியும்? இதற்கான பதில் நொடிகளில் இருந்தால் உங்கள் ஊகம் சரியென வைத்துக்கொள்ளலாம். நிமிடங்கள் எனில் நீங்களும்கூட உங்கள் ஸ்மார்ட்போன் பழக்கம் பற்றி சரியாக அறிந்திருக்கவில்லை என முடிவுக்கு வர வேண்டும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வு இந்த எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை நிறுவனமான காஸ்பெர்ஸ்கி லேப் சார்பில் வர்ஸ்பர்க் மற்றும் நாட்டிங்கம் டிரெண்ட் பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வை நடத்தின.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் 44 நொடிகள்கூடத் தங்கள் போனில் கைவைக்காமல் இருக்க முடியவில்லை. பெண்களைப் பொறுத்தவரை 57 நொடிகள்வரை போனைத் தொடாமல் இருக்க முடிந்திருக்கிறது. ஆண்களோ 21 நொடிகள் மட்டுமே போன் பக்கம் கையைக் கொண்டு செல்ல முடியாமல் இருந்திருக்கின்றனர்.

ஆனால், உங்கள் எத்தனை நேரம் போனைத் தொடாமல் இருக்க முடியும் எனக் கேட்கப்பட்டதற்குப் பலரும் 2 முதல் 3 நிமிடங்கள் எனப் பதிலளித்துள்ளனர். புதிய செய்திகள் மற்றும் தகவல்களைத் தவறவிட்டு விடுவோம் என்ற பதற்றம் காரணமாக அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் வழக்கம் பலருக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை

ஐ.ஏ.என்.எஸ்.

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால் எலும்பு முறிந்துள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

லண்டனில் நடைபெறவுள்ள இந்திய திரைத் திருவிழாவில் கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டத்தால் அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

சபாஷ் நாயுடு படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அண்மையில்தான் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பினார். ஹைதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

சென்னை ஐஐடி மாணவி உட்பட 2 பெண்கள் தற்கொலை: போலீஸார் தீவிர விசாரணை



சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்றிரவு 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் கணேசன். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அதனால் கணேசனும் அவரது மனைவி விஜயலட்சுமியும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் நடந்துள்ளது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த விஜயலட்சுமி (வயது 47) நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டூர்புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை

இதற்கிடையே ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி மாணவியர் விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீஸார், விடுதியில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் மகேஸ்வரி என்பதும், அவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், விடுதியில் உள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறும்போது, “ஆராய்ச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டது உண்மைதான். இது துரதிருஷ்டவசமானது. அதேபோல் பேராசிரியர் ஒருவரின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றார்.

இது தொடர்பாக ஐஐடி நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஐஐடி ஆராய்ச்சி மாணவியின் மரணம் துரதிருஷ்டவசமானது. இது பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...