Friday, July 15, 2016

'கெட்டே போகாத சிக்கன் பிரியாணி வேணுமா?' அலற வைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி


'கெட்டே போகாத சிக்கன் பிரியாணி வேணுமா?' அலற வைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி.





நீண்ட தூரம் செல்லும் ரயில் பயணிகள் வசதிக்காக 6 மாதம் வரை கெட்டுப்போகாத பிரியாணி உள்பட எட்டு வகையான உணவை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு நாளிலேயே உணவுகள் கெட்டு போகும் நிலையில், ஆறு மாதங்கள் கெட்டுப்போகாத உணவு வழங்கப்படுவதால் உடல் நலம் பாதிக்கப்படாதா என்று கேள்வி எழுப்புகின்றனர் ரயில் பயணிகள்.

ரயில்களில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கும், இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கும் உதவிடும் வகையில் உணவு வழங்கும் புதிய திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும் டி.எப்.ஆர்.எல். நிறுவனம் மூலம் தற்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கலவை சாத வகைகளான லெமன் சாதம், புளிசாதம், வெஜ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பருப்பு சாதம் மற்றும் கோதுமை உப்புமா உள்ளிட்ட 8 வகையான சாப்பாடு வகைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த உணவு வகைகள் ‘ரிடோர்ட் பாக்கெட்’ என்ற முறையில் ‘பேக்கிங்’ செய்யப்படுகிறது. குறைந்தது 6 மாதம் வரை கெட்டுப்போகாதாம். சோதனை முறையில் இந்தத் திட்டம் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர், ஒரு மாதத்துக்கு இந்த சாப்பாடு வகைகள் ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. டி.எப்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து ஐ.ஆர்.சி.டி.சி. அந்த உணவு பொருட்களை எப்படி ‘பேக்கிங்’ செய்வது என்று கற்றுக்கொண்டு புதியதாக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. அப்படி அமைத்ததும், சாப்பாடு வகைகளின் விலைப்பட்டியல் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த சாப்பாடு வகைகளை வாங்கிய பின்னர் 2 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு அதன் பின்னர் பிரித்து சாப்பிடலாம். இந்த திட்டத்துக்கு ‘ரெடி டூ ஈட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ரயில் பயணியொருவர் கூறுகையில்,


"ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் புழுக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டால் அவர்கள் பதில் அளிப்பதும் இல்லை. உணவைத் தரப்படுத்துவதுமில்லை. ரயில்வே சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. இப்படி மோசமான உணவுகளை விற்பனை செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இப்போது ஆறு மாதம் கெட்டுப்போகாத உணவுகளை விற்பனை செய்ய உள்ளது. இதனை சாப்பிட்டால் நாங்கள் அவ்வளவுதான். உணவுகளின் தரம் குறைந்து வரும் நிலையில், உணவுகள் கெட்டுப் போகாத வகையில் தயாரிக்கப்படும் உணவுகளில் எப்படிப்பட்ட கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் எங்களது உடல் நிலை எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும்".என்றார்.

ஐ.ஆர்.டி.சி. கவனிக்குமா?

600 சிம்கார்டுகள், 25 மேன்சன்கள், தென்காசி அரிவாள்..!' -ஆந்திரா வரை நீளும் சுவாதி கொலை வழக்கு


vikatan.com
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ' ராம்குமார்தான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். 

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமாரை, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள  டி.மீனாட்சிபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்தது போலீஸ். நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம், மாஜிஸ்திரேட் ராமதாஸ் ரகசிய வாக்குமூலம் வாங்கினார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை, மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பியது நீதிமன்றம். போலீஸ் விசாரணையின்போது, சுவாதியின் நண்பர் முகமது பிலால் சித்திக் உள்ளிட்ட சிலரும் உடனிருந்தனர்.

"கொலை நடந்த மூன்றே நாட்களில் ராம்குமார்தான் குற்றவாளி என்ற இறுதி முடிவுக்குக் காவல்துறை வந்துவிட்டது. அதற்கேற்ப ஏராளமான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த வழக்கிற்கும் ராம்குமாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் தேவையில்லை. ஆனால், கொலைக்கான பின்னணி ஒருதலைக் காதல் என்று சொல்வது தவறானது" என்கிறார் இந்த வழக்கில் ஆரம்பம் முதல் பயணிக்கும் வழக்கறிஞர் ஒருவர். 

அவர் மேற்கொண்ட விசாரணையின்படி எழுப்பப்படும் சந்தேகங்கள் இதோ...! 

1. சுவாதி படுகொலை வழக்கு மாநில போலீஸாருக்கு மாற்றப்பட்ட தினத்தன்றே, நுங்கம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 25 மேன்சன்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சம்பவ நாளன்று செங்கோட்டைக்கு கிளம்பிய ராம்குமார் மீது சந்தேகம் வலுத்துவிட்டது. அறையில் தங்குவதற்காக ராம்குமார் கொடுத்த விண்ணப்பப் படிவத்தில் இருந்த படமும் சி.சி.டி.வி பதிவுகளும் சந்தேகத்தை உறுதி செய்தன. 

2. நுங்கம்பாக்கம் மேன்சன்களில் தங்கியிருந்தவர்களின் 600 செல்போன் நம்பர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், கொலை நடந்தபோது சுவாதியின் செல்போன் டவரும் ராம்குமாரின் செல்போன் டவரும் ஒரே இடத்தைக் காட்டியுள்ளன. வழக்கின் மிக முக்கியமான ஆதாரம் இது. 

3. ஐந்து முறை ராம்குமார் சுவாதியைப் பின்தொடர்ந்துள்ளார். அப்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் பிலாலுக்கு மெசேஜ் அனுப்பிய சுவாதி, 'கறுப்பாக, ஒல்லியாக இருக்கும் ஒருவன் என்னைப் பின் தொடர்கிறான்' எனக் கூறியுள்ளார். அந்த மெசேஜ்களை அனுப்பும் நேரத்தில் ராம்குமார் இருந்த இடமும், சுவாதி இருந்த இடமும் ஒன்று என துல்லியமாகக் காட்டுகிறது செல்போன் டவர். அதாவது நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரையில் சுவாதியைப் பின்தொடர்ந்துள்ளார் ராம்குமார். 

 

4. ஏப்ரல் மாதத்தில் சென்னை வந்த ராம்குமார் வேறு எங்கும் வேலைக்குப் போகவில்லை. அந்த மாதம் செல்போன் அலைவரிசை நுங்கம்பாக்கத்தையே காட்டுகிறது. மே மாதத்தில் பல நாட்கள் மேன்சனைச் சுற்றியுள்ள பகுதிகளை வலம் வந்திருக்கிறார். அதே மாதம் 20 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் ஆந்திரா சென்று வந்திருக்கிறார். அங்கு யாரை சந்தித்தார்? ஆந்திரா சென்றதற்கான நோக்கம் என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. அந்த இரண்டு நாட்களும் ராம்குமாரின் செல்போன் ஆந்திரா டவரைக் காட்டுகிறது. 'ஆந்திராவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. வேலைக்காக சென்று வந்திருக்கும் வாய்ப்புகளும் இல்லை' என்கின்றனர் சிலர். 

5. நெல்லையில் ராம்குமாரை கைது செய்தபோது அவரது வீட்டில் இருந்து சுவாதியின் செல்போனைக் கண்டெடுத்ததாக போலீஸ் சொல்கிறது. ஆனால், கொலை நடந்த மறுநாள் (25-ம் தேதி) இரவு 8.30 மணிக்கு சுவாதியின் செல்போன் சென்னையில் ஆன் ஆகியிருக்கிறது. சில நிமிடங்களில் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது சுவாதியின் செல்போன் யாரிடம் இருந்தது? 24-ம் தேதி இரவே ராம்குமார் செங்கோட்டைக்குப் போய்விட்டார். கொலைக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, சுவாதியின் செல்போன் மைசூரு டவரைக் காட்டுகிறது. அவர் ஏன் அங்கு சென்றார்? தனியாகச் சென்றாரா... நண்பர்கள், உறவினர்களுடன் சென்றாரா..? அதைப் பற்றி போலீஸார் மௌனம் காப்பது ஏன்? 

6. ராம்குமாரை முன்னிறுத்தி இந்தப் படுகொலைக்கான ஆபரேஷனை இயக்கியவர்கள் யார்?சுவாதி கொல்லப்பட வேண்டும் என எண்ணியவர்களுக்கு, ராம்குமார் கருவியாகப் பயன்பட்டாரா? கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, தென்காசியில் உள்ள பாப்பம்பாளையத்தில் வாங்கப்பட்டிருக்கிறது. சுவாதி கொலைக்கான ஆபரேஷனுக்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டாரா ராம்குமார்? 

- இப்படி சந்தேகங்களை விவரித்தவர், " இந்த வழக்கில் வெளியில் வராத மர்மங்கள் பல இருக்கின்றன. சுவாதியின் நட்புகள், அவரது தந்தையோடு ஏற்பட்ட சண்டைகள் என முக்கியமான சிலவற்றைத் திட்டமிட்டு மறைக்கின்றனர். கைது செய்யப்பட்ட ராம்குமார், சுவாதியைக் காதலித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அவர் சுவாதியைப் பின்தொடர்ந்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஏன் பின் தொடர்ந்தார்?; சுவாதியைக் கொல்வதற்கான ஆபரேஷனை வடிவமைத்தது யார்?; ராம்குமாரை இயக்கியது யார் என்பதைப் பற்றியெல்லாம் போலீஸாருக்கு எவ்வித அக்கறையும் இல்லை.


அதனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் வழக்கின் போக்கு வேறு திசையில் பயணிக்கும் என்பதால், ஒருதலைக்காதல் என்பதோடு வழக்கை முடித்துக் கொள்ள விரும்புகின்றனர். நேற்று ஐந்து வெற்றுத் தாள்களில் ராம்குமாரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர் போலீஸார். அதில் வேண்டிய வரிகளை இட்டு நிரப்பும் வாய்ப்புகளே அதிகம். எனவே, மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டால் கொலைக்கான உண்மைப் பின்னணி வெளியாகும் என நம்புகிறோம்" என்றார் நிதானமாக. 

-ஆ.விஜயானந்த்

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா?


நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி?

இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம்.

பொதுவாகவே, ஒருவர் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானதே!

இமெயில் பயனாளிகளில் எத்தனை பேருக்கு இந்தக் கேள்வி எழுகிறது? எப்போது எழுகிறது என்பவை சுவாரஸ்யமான துணைக் கேள்விகள்! இப்போது, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வழி இருக்கிறதா? வழி உண்டு. ஆனால் அது உங்கள் இமெயில் சேவையில் இல்லை. தனியே நாட வேண்டும். அதாவது இந்த வசதியை அளிப்பதற்கு என்றே தனியே இணையதளங்கள் இருக்கின்றன.

இத்தகைய சேவைகளைப் பட்டியலிட்டு அவை செயல்படும் விதம் பற்றி விளக்குவதற்கு முன் அடிப்படையான சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறியும் வசதி 'இமெயில் கண்காணிப்பு' என்றே குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘இமெயில் டிராக்கிங்' என்று சொல்லப்படுகிறது. கண்காணிப்பு என்றவுடன் ஒற்று அறிவது அல்லது உளவு பார்ப்பதுடன் ஒப்பிட முடியாது என்றாலும் கூட, இமெயில் வாசிக்கப்பட்டதா என்பதை அறிவதற்கான வழிகள் அனைத்தும் ஒருவிதத்தில் கண்காணிப்பு என்று சொல்லக்கூடிய உத்தியையே பின்பற்றுகின்றன. அதனால்தான் இந்தப் பதில் சிக்கலானதாகவும் அமைகிறது.

வழக்கமாக யார் இமெயில் அனுப்பி வைத்தாலும் சரி, பெறுபவர் அதை உடனடியாகப் படித்துப் பார்க்கலாம் அல்லது தாமதமாகப் படிக்கலாம். இல்லை படிக்காமலே 'டெலிட்' செய்துவிடலாம். இது அவரது விருப்பம், உரிமை. அனுப்புகிறவர் இமெயில் பெறும்போதும் இது பொருந்தும்.

பொதுவான இமெயில் அமைப்பில், மெயில் வாசிக்கப்பட்டதா என்பதை உணரும் வழி இல்லை. ‘அவுட்லுக்' போன்ற இமெயில் சேவையில், இதை உறுதி செய்து கொள்வதற்காக, பெறப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் வசதி இருக்கிறது. ஆனால் அந்த மெயில் படிக்கப்பட்டதா என்பதை அறிய முடியாது.

இந்த இடத்தில்தான் இமெயில் டிராக்கிங் சேவைகள் வருகின்றன. பனானாடேக், பூமாரங், காண்டாக்ட் மன்கி மற்றும் இன்னும் பிற பல சேவைகள் இந்த வசதியை அளிக்கின்றன. குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு மூலம் இந்த வசதியை அளிக்கும் சேவைகளும் இருக்கின்றன.

இந்தச் சேவைகளைப் பயன்படுத்தும் போது அவை ஒருவர் அனுப்பும் இமெயிலில் சின்னதாக ஒரு ஒளிப்படக் குறியீட்டை இடம்பெறச் செய்கின்றன. கண்ணுக்குத் தெரியாத புள்ளியாகக்கூட அது இருக்கலாம். அதில் இருக்கும் எச்.டி.எம்.எல். குறியீடு மூலம் மெயில் பிரிக்கப்பட்டதும், சர்வருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். இந்தத் தகவல் பயனாளிக்கும் தெரிவிக்கப்படும்.

இதே முறையில் இமெயிலில் அனுப்பும் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டனவா என்பதை அறியவும் தனியே ஒரு குறியீடு இணைக்கப்படுகிறது. இந்தச் சேவைகளின் மூலம் இமெயில் எப்போது பிரிக்கப்பட்டது என்பதையும், அதன் இணைப்புகள் கிளிக் செய்யப்பட்டனவா என்பதையும் அறியலாம்.

பொதுவாக மார்க்கெட்டிங் நோக்கில் இமெயில்களைக் கூட்டம், கூட்டமாக அனுப்பி வைப்பவர்கள் தங்கள் முயற்சியின் பலனை அறிய இந்தச் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். தனி நபர்களும்கூட இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். இவற்றில் இலவசச் சேவைகளும் இருக்கின்றன, கட்டணச் சேவைகளும் இருக்கின்றன.

ஆனால் இவையெல்லாம் நூறு சதவீதம் உத்திரவாதமானது என்று சொல்வதற்கில்லை. டிராக்கிங் சேவைகள் அதிகபட்சமாக இமெயில் திறக்கப்பட்ட தகவலைத் தெரிவிக்கின்றன. ஆனால் அது வாசிக்கப்பட்டதன் அடையாளமாக அமையுமா என்பது கேள்விக்குறிதான். மெயில் பெற்றவர் மட்டும்தான் அதை உறுதி செய்ய முடியும்.

இது இமெயில் பயன்படுத்தப்படும் விதத்தின் பக்கவிளைவாக உண்டான பிரச்சினை. இமெயில் அடிப்படையில் இலவசமாக இருப்பதால், அதைத் தகவல் தொடர்புக்காக மட்டும் அல்லாமல், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நோக்கிலும் பயன்படுத்திவருகின்றனர். காசா, பணமா, ஒரு இமெயில்தானே என வர்த்தக நிறுவனங்கள் கூட்டமாக மெயில்களை அனுப்பிவைக்கின்றன.

இவை தவிர மோசடி மெயில்கள், வில்லங்க மெயில்கள், மால்வேர் வாகன மெயில்கள் எனப் பல ரகங்கள் இருக்கின்றன. இவை எல்லாமுமாகச் சேர்ந்து ‘ஸ்பேம்' எனப்படும் குப்பை மெயில்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய குப்பை மெயில்களில் இருந்து பயனாளிகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படவே செய்கிறது. இதன் விளைவாகவே மெயில்களைப் படித்துவிட்டோம் எனத் தெரிவிக்கும் வசதி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவை உண்மையான அக்கறையோடு தங்கள் மெயிலுக்கான எதிர்வினையைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இதற்கான மூன்றாம் தரப்பு தீர்வாகவே மெயில் டிராக்கிங் சேவைகள் அமைகின்றன. ஆனால் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இது போன்ற சேவைகள் மூலம் மெயில் பிரிக்கப்ப‌ட்ட நேரத்தை அறிவதோடு, அவை பிரிக்கப்பட்ட இடத்தைக்கூட அறியலாம். இது தனியுரிமை மீறலுக்கு வழிவகுக்கலாம்.

மேலும் இணைய விஷமிகள் இதைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே இமெயில் டிராக்கிங் சேவையைப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால், அதை மெயில் அனுப்பும்போது தெரிவித்துவிடுவது சிறந்த இணைய அறமாக இருக்கும். அதிலும் வர்த்தக நிறுவனத்தில் இருந்துகொண்டு இதைச் செய்யும் நிலையில் நிச்சயம் இது தொடர்பான நிறுவனக் கொள்கையை அறிந்திருப்பது நல்லது.

பயனாளிகள் நோக்கில் பார்த்தால், தமது இன்பாக்ஸ் தேடி வரும் இமெயிலுக்குள் இப்படி ஒரு வசதி இருப்பதும் அதை அறியாமல் இருப்பதும் திடுக்கிட வைக்கலாம்.

ஆனால் நல்லவேளையாக இதைத் தடுக்கும் வசதியும் உள்ளது. ஜிமெயில் உள்ளிட்ட பெரும்பாலான மெயில் சேவைகளில் செட்டிங் பகுதிக்குச் சென்று , ஒளிப்படம் போன்றவை இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவை தானாகத் திறக்கப் படாமல், ஒளிப்பட இணைப்பைத் திறக்கலாமா என அனுமதி கேட்டு அதன் பிறகே செயல்படும் வகையில் அமைத்துக்கொள்ளலாம்.

ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: வரி ஏய்ப்பு புகாரில் நடவடிக்கை; முக்கிய ஆவணங்கள் சிக்கின


திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரது வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தொழிலதிபரும், கல்வி யாளருமான இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு, மகாலிங்கபுரம் வீடு, குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீடு மற்றும் அலுவல கங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அடையாறில் உள்ள வீட்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்தார்.

கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி கள், குரோம்பேட்டையில் உள்ள கல்லூரிகள், வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள கல்லூரிகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல், நிர்வாக அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி ஊசுட்டேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் ஊழியர்களையும் அவர்களது வாகனங்களையும் தீவிர சோத னைக்குப் பிறகே வெளியே அனுப்பினர். புதுச்சேரியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி, வழுதாவூரில் உள்ள அவரது வீடு, தொழில் நிறுவனங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடந்தது.

உதகை - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள அவரது ஹோட்டலிலும் சோதனை நடந்தது.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி என 40 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். தனித்தனி குழுவாக பிரிந்து சென்ற அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் காலை 6 மணி அளவில் சோதனையை தொடங்கினர். இரவு வரை நீடித்தது. சோதனையின்போது ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆவணங் களை வைத்து சம்பந்தப் பட்டவர்களிடம் அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். இந்த சோதனை குறித்து எந்த தகவல்களையும் கூற முடியாது என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

15 கோடி பறிமுதல்

சோதனையில் சுமார் ரூ. 200 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. முதல்கட்டமாக கணக்கில் வராத ரூ. 15 கோடியை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

8 பேர் உயிரை காப்பாற்றிய டாபர்மேன்... 4 நாகங்களுடன் சண்டையிட்டு உயிரிழந்தது!



ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில்  சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா, இவர் தனது  வீட்டில் டாபர் மேன் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரது வீட்டை பொறுப்புடன் பாதுகாத்து வந்துள்ளது அந்த டாபர்மேன். 

கடந்த திங்கட்கிழமை அருகிலிருந்த காட்டுப்பகுதியில் இருந்து 4 நாகப்பாம்புகள் திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளன. இதனைக்  கண்ட அவரின் வளர்ப்பு நாய், அந்த 4 பாம்புகளுடன் கடுமையாக  சண்டையிட்டிருக்கிறது. 

முடிவில் 4 நாகப் பாம்புகளையும் அந்த நாய் கடித்துக் கொன்றது. அதே நேரத்தில், நான்கு நாகங்களும் நாயைக் கொத்தியதில் அதன் உடலில் பாம்புகளின் கொடிய விஷம் பரவியது. இதனால் மயங்கிய நிலையில் கீழே விழுந்த டாபர்மேன் உயிரழந்தது. வீட்டருகே தனது செல்லநாயும் பாம்புகளும் இறந்து கிடப்பதைக்  கண்டு திபாகர் ராய்தா அதிர்ச்சியடைந்தார். பின்னர் நிலைமையை ஊகித்து கொண்ட திபாகரும், அவரின் குடும்பத்தினரும் கண்ணீர் சிந்தினர். 

திபாகர் வீட்டில் மொத்தம் 8 பேர் இருந்துள்ளனர். வீட்டிற்குள் பாம்புகள் புகுந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். இதனை தெரிந்து கொண்ட அந்த ஐந்தறிவு ஜீவன், 4 பாம்புகளையும் தீரத்துடன் எதிர்த்து போராடி தனது உயிரையும் மாய்த்து கொண்டுள்ளது. நாயின் நன்றியையும், விசுவாசத்தையும் அறிந்த அந்த பகுதி மக்கள் ஏராளமானோர், திரண்டு வந்து மலர்கள் தூவி, தக்க மரியாதையுடன் அந்த டாபர்மேனை அடக்கம் செய்துள்ளனர்.

இந்தியாவில் எந்த ரக போனில் இனி வாட்ஸ் ஆப் இயங்காது?



இந்தியாவில் சில ஸ்மார்ட் போன் ரகங்களில் வாட்ஸ் ஆப் சேவை இந்த ஆண்டு இறுதியில் இருந்து ரத்து செய்யப்படுகிறது.



இந்தியாவில் 95 சதவீத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில மொபைல் போன்களில் வாட்ஸ் ஆப் வசதி ரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது.
னைத்து பிளாக்பெரி, பிளாக்பெரி 10 ரக போன்கள், நோக்கியா எஸ் 40, நோக்கியா சிம்பியன் எஸ் 60, ஆண்ட்ராயிட் 2..1 ஆண்ட்ராய்ட் 2.2 ரக போன்கள், வின்டோஸ் போன் 7.1, ஐபோன் .-3ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ரக போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வகை ஸ்மார்ட் போன்களில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடு இருப்பதாக வாட்ஸ்ஆப் சேவை ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

'ஆங்கிலத்தில் பேசத் தெரியாதது அவமானமா?' -மாணவியின் மரணம் சொல்லும் பாடம்

vikatan.com

கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்திற்காக, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பி.காம் மாணவி ஒருவர். " ஆங்கில மோகத்தின் உச்சகட்ட அவலம் இது. தாய்மொழியில் படித்தால் அவமானம் எனக் கற்பிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" எனக் கவலையோடு பேசுகின்றனர் கல்வியாளர்கள்.

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் மாணவி ராஜலட்சுமி. மிகுந்த வறுமைச் சூழலுக்கு இடையில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். முழுக்க தமிழ் வழிக் கல்வியில் படித்தவருக்கு, கல்லூரியின் ஆங்கிலச் சூழல் ஒத்துவரவில்லை. சக மாணவ, மாணவிகளிடையே சரளமான ஆங்கிலத்தில் பேச முடியாமல் வேதனைப்பட்டு வந்திருக்கிறார். நேற்று ராஜலட்சுமியின் தாய் சுசீலா வேலைக்குச் சென்றதும், வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் மாணவி.

தற்கொலைக்கான காரணமாக மாணவி குறிப்பிட்டுள்ள ஒற்றைக் காரணம், ' ஆங்கிலத்தில் பேச முடியாததால் அவமானமாக இருக்கிறது' என்பதுதான். " மாணவியின் மரணம் மிகுந்த வேதனையைத் தருகிறது. தாய்மொழியில் படிக்கும் பொறியாளர்கள் இருந்தால்தான், நமது மாநிலத்தை வளர்த்தெடுக்க முயற்சி செய்வார்கள். சொந்த மொழியில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள்தான், நமது மக்களின் நலன் குறித்து சிந்திப்பார்கள். இங்கு உருவாக்கப்படும் மாணவர்களின் நோக்கமெல்லாம் வெளிநாட்டை நோக்கித்தான் இருக்கிறது. வணிகமயமான கல்விச் சூழலில் ஆங்கிலத்தையே உயர்த்திப் பிடிக்கிறார்கள்" என வேதனையோடு பேச தொடங்கினார் திண்டிவனத்தில் தாய்த் தமிழ் பள்ளியை நடத்தி வரும் பேராசிரியர்.பிரபா கல்விமணி.

அவர் நம்மிடம், " இந்தி மொழி திணிப்புக்கு எதிராக, ' உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' எனச் சொல்லி உயிர்த் தியாகம் செய்தவர்கள் ஏராளம். அந்தத் தியாகத்தின் பலனாக ஆட்சிக்கு வந்தவர்கள், தாய்மொழியை வளர்த்தெடுப்பதற்கு எந்த அக்கறையையும் காட்டாததின் விளைவைத்தான், மாணவியின் மரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இது முழுக்க முழுக்க நமது கல்விமுறையில் ஏற்பட்ட குளறுபடி. வெளிநாடுகளில் பத்து லட்சம் மக்கள் இருக்கக் கூடிய மாநிலங்களில் உயர்கல்வி படிப்பு முழுவதையும் தங்கள் மொழியிலேயே கற்றுக் கொள்கிறார்கள். அதன்மூலம் எண்ணற்ற கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துகிறார்கள். பத்து கோடி மக்கள் பேசக் கூடிய தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தை நோக்கி ஓட வைக்கிறார்கள்.

கற்றுக் கொள்வேன்' எனக் கூறும் சமூகத்தை உருவாக்க வேண்டும். கடந்த தி.மு.க ஆட்சியில் பொறியியில் படிப்பில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட மூன்று படிப்புகளை தமிழில் கொண்டு வந்தார்கள். எங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியில் படித்த அகிலா என்ற மாணவி, தாய்மொழியில் பொறியியல் படித்து வருகிறார். சிறந்த மதிப்பெண்களை வாங்கியிருக்கிறார். இந்த மாணவர்களுக்கு தமிழ்வழிப் பொறியியல் படிப்புகளைக் கொடுத்தவர்கள், அதற்கென சரியான புத்தகங்களைக்கூட அச்சிடவில்லை. இலவச தொலைக்காட்சிக்கும் மிக்ஸிக்கும் பணத்தை செலவிடுபவர்கள், தாய்மொழிக் கல்விக்கான புத்தகங்களை அச்சிடக்கூட பணத்தை ஒதுக்குவதில்லை.

தற்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதிலும், ' ஐந்தாம் வகுப்பு வரையில் மாநில அரசு விரும்பினால், தாய்மொழியில் கல்வி கற்க வைக்கலாம். ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்விதான்' என்கின்றனர். இது மிகவும் வேதனையானது. மல்டி நேஷனல் கம்பெனிகளுக்குத் தேவையான ஆட்களைத் தயார் செய்வதற்கான திட்டம் இது. நமது நாட்டில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் முறையே தவறானது. ஒரு குழந்தைக்கு மொழியை அறிமுகப்படுத்தும்போது, முதலில் கேட்பது, பிறகு பேசுவது, அடுத்து எழுதுவது என மூன்று படிநிலைகளில்தான் ஒரு மொழி புரிய வைக்கப்படுகிறது. இங்கு எடுத்த உடனேயே, ஆங்கிலத்தில் எழுதுவதைத்தான் முதலில் செய்கிறார்கள். அடிப்படையே தவறாக இருக்கிறது. ஆங்கிலத்தில் படித்தால் பெருமை என நினைக்கும் மெத்தப் படித்த மேதாவிகள் இருப்பதால்தான், தற்கொலையை நோக்கி மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். அரசின் பார்வையில் மாற்றம் வர வேண்டும்" என ஆதங்கப்பட்டார் பிரபா கல்விமணி.

ஆ.விஜயானந்த்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...