Thursday, July 21, 2016

குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!

பிளஸ் 2 தேர்வும் 'சென்டம்' ரகசியமும்.... குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!


பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வு பணிகளை கண்காணிக்கவும் சென்னையில் இருந்து இயக்குநர்கள், இணை இயக்குநர்களை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பது வழக்கம்.

நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளில், மாணவர்கள் 'மாஸ் காப்பியிங்கில்' ஈடுபடுவதாக நீண்ட நாளாகக் குற்றச்சாட்டு உண்டு. இதற்கிடையே ஈரோட்டில் பிரபலமான ஆதர்ஷ் மற்றும் ஐடியல் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 'பிட்' அடிப்பதாக அப்போதைய இணை இயக்குநரும் தற்போதைய மெட்ரிக் பள்ளி இயக்குநருமான கருப்பசாமிக்கு தகவல் கிடைத்தது.

ஈரோட்டில் உள்ள அந்த பிரபலமான பள்ளிக்கு இணை இயக்குநர் வரும் தகவல் கிடைத்ததும் மாணவர்களுக்கு சிக்னல் கொடுத்தனர், அங்குத் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள். அந்த பள்ளியில் இரு மாடிக்கட்டடங்களிலும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அப்போது அவசர அவசரமாக மாணவர்கள் ஜன்னல் வழியாக பிட்டுகளை தூக்கி எறிந்தனர். அந்த பிட்டுகள் பள்ளி வளாகத்தில் நுழைந்த இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீதே விழுந்ததுதான் வேடிக்கை.

தன் மீது விழுந்த பிட்டு பேப்பர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இரு பிரபலமான தனியார் பள்ளிகளில் 'மாஸ் காப்பியிங்' நடப்பதாக அரசுத் தேர்வுத்துறைக்கு அறிக்கை அனுப்பியதோடு தனது வேலையை முடித்துக்கொண்டார்.

இது ஒரு புறம் இருக்க, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இனிதே தொடங்கியது. திருச்சி லால்குடியில் ஒரு பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது வேதியியல், இயற்பியல், உயிரியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்களில், குறிப்பிட்ட 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் வாங்கியிருந்தனர். அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களின் விடைத்தாள்களில் இருந்த கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்ததை விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கண்டுபிடித்தபோதுதான் 'சென்டம்' ரகசியம் அம்பலமானது. அதாவது ஒரே நபரே 5 மாணவர்களுக்கும் விடைத்தாள்களில் விடைகளை எழுதியிருக்கிறார்.

இதில் ஆச்சர்யமான விஷயம்.. ஈரோட்டில் இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீது பிட்டுகளை வீசிய அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் விடைத்தாள்கள்தான் அது என்று தெரியவந்தது. எங்கேயோ உதைக்கிறது, என்று கருதிய அரசு தேர்வுத்துறை, அந்த விடைத்தாள்களை, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பிய போது, அவை ஒரே ஆளால் எழுதப்பட்டு, அந்த 5 மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களை வரவழைத்து தனித்தனியாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அது தங்களது கையெழுத்து இல்லை, என்று ஒத்துக் கொண்டனர்.



இது தொடர்பாக, இப்போது ஈரோட்டில் பிரபலமான அந்த இரு தனியார் பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நசீர் உட்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டின் பிரபலமான அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கிலும் முதலிடம் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். இதே பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 'சென்டம்' பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில்‘மெரிட்டில்’ சேர்ந்துள்ளனர்.

இப்போது அந்தப் பள்ளி மாணவர்களின் 'சென்ட்ம்' மார்க் மீது மற்றவர்களுக்கு சந்தேகக் கறை படிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விரிவாக விகடன்.டாட் காமில் நேற்று (புதன்) செய்தி வெளியானது. இது தொடர்பாக விளக்கம் கேட்க, ஐடியல் பள்ளி தாளாளர் சிவலிங்கத்தைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க முன்வந்தால் அதனை பிரசுரிக்க தயாராக உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் நம்மை தொடர்பு கொண்டு பேசிய ஈரோடு ஐடியல் மற்றும் ஆதர்ஷ் பள்ளியின் தாளாளரான சிவலிங்கம், "எங்கள் பள்ளியில் எந்தத் தவறும் நடக்கவில்லை. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை. இப்போது எங்கள் மீது திட்டமிட்டே அதிகாரிகள் பழி சுமத்துகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. வீண் வதந்திகளைப் பெற்றோர்கள் நம்ப வேண்டாம். இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

- எம்.கார்த்தி

கபாலி திரைப்படமும், வினுப்பிரியா மரணமும்...!


'அனைத்து சாலைகளும் ரோமில் போய் முடிவடைகின்றன' என்று சொல்வதுபோல், இங்கு அனைத்து உரையாடல்களும் ‘கபாலி’ திரைப்படத்தில் போய்தான் முடிவடைகின்றன. அண்மையில், ஒரு துக்க வீட்டிற்கு சென்று இருந்தபோது கூட இதை உணர முடிந்தது. “நல்ல மனுஷன்... சமூகத்துக்கு எவ்வளவோ செஞ்சு இருக்காரு..” என்று துவங்கிய அந்த உரையாடல், அடுத்துப் பேசியது கபாலி திரைப்படம் பற்றி. “என்னப்பா... கபாலி டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயாம்ல...” என்று வருந்தினார் அந்த உரையாடலுக்கு உரியவர்.

மிகையாகச் சொல்லவில்லை, உண்மைதான். எப்போதும் நாயகர்களைக் கொண்டாடும் தமிழ் சமூகத்தில், ரஜினி கொண்டாடப்படுவதும், அந்த படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதும் வியப்பில்லை. ஆனால், இந்த கட்டுரை அதன் டிக்கெட் விலை குறித்தானது அல்ல...!

இணையத்தில் கபாலி!

கபாலி டிக்கெட் குறித்த சர்ச்சைகளை விட, அதிகம் ஈர்த்தது கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாவதை தடுப்பதற்காக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுதான். இது குறித்த விவாதங்களை நாம் உரிய முறையில் செலுத்தினால், நிச்சயம் ஆரோக்கியமான சட்டத்திருத்தங்களை நம்மால் கொண்டு வரமுடியும். அதன் மூலம் சில உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும்.

சில தினங்களுக்கு முன், கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுகிறார். '"கபாலி திரைப்படம் 3500 பேர் உழைப்பில், 100 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம். ஆனால், அதை வெறும் 20 ரூபாய் செலவில் முறைகேடாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதனால் இதுபோன்ற திருட்டுகளுக்கு காரணமாக இருக்கும் இணையச் சேவை நிறுவனங்களை முடக்க, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும்" என்கிறார். மேலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் 225 இணையதளங்களின் முகவரியையும் தருகிறார். இதனை விசாரித்த நீதிமன்றம், 180 இணையதளங்களுக்கு இடைக்கால தடை விதிக்கிறது.





சரியான நடவடிக்கைதான். இதில் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இது அனைத்தும் நடந்தது இரண்டு நாட்களில். ஒரு திரைப்படத்தையும், அதன் வணிகத்தையும், அதன் தயாரிப்பாளரையும், 3,500 தொழிலாளர்களின் உழைப்பையும் காக்க நீதிமன்றம் இவ்வளவு துரிதமாக செயல்பட்டு இருக்கிறது.

உண்மையில் இது பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், இயல்பாக ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதாவது, நூற்றுக்கணக்கான இணையதளங்களை இரண்டு நாட்களில் முடக்க முடியும் என்னும் போது... ஏன் வினுப்பிரியா படம் தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு இணையதள பக்கத்தை முடக்க நான்கு நாட்கள் ஆனது..?

வினுப்பிரியாவின் மரணம்!

வினுப்பிரியாவின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து கடந்த ஜூன் 23 ம் தேதி புகார் அளிக்கப்படுகிறது. காவல் துறை மிக நிதானமாக செயல்பட்டு... இல்லை இல்லை... கிட்டத்தட்ட செயல்படவே இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து முறையிட்டதால், நடவடிக்கை எடுக்க, காவல் துறையின் சைபர் பிரிவு ஒரு கைபேசியை லஞ்சமாக கேட்கிறது. ரூபாய் 2000க்கு ஒரு கைபேசியை வினுப்ரியாவின் தந்தை வாங்கித் தந்த பிறகு,
விசாரணை நத்தை வேகத்தில் ஊர்கிறது. அப்போது, மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகிறது. வினுப்பிரியா மன அழுத்தம் தாங்காமல் ஜூன் 27 ம் தேதி தற்கொலை செய்து கொள்கிறாள்.




இது குறித்து அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், 'காவல் துறை மீதெல்லாம் தவறல்ல. முகநூல் நிறுவனத்திலிருந்து தகவல்களைப் பெற எங்களுக்கு நான்கு நாட்கள் ஆனது’ என்று பொருள் தரும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதே நேரம், காவலர் லஞ்சம் பெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்தக் கட்டுரையில் காவல் கண்காணிப்பாளர் இவ்வாறாக எழுதி உள்ளார், “ஜூன் 23 ம் தேதி நாங்கள் புகாரைப் பெறுகிறோம். அடுத்த நாள், நாங்கள் அந்த முகநூல் பக்கத்தை முடக்குவதற்கும், அந்தப் படம் எந்த கணினியிலிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை அறிவதற்கும், இணைய நெறிமுறை முகவரியை (IP address) கேட்கிறோம். ஜூன் 27 ம் தேதிதான் அந்த பக்கம் முடக்கப்படுகிறது. இணைய நெறிமுறை முகவரியும் கிடைக்கிறது. அதன் பின் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளியை கைது செய்கிறோம்” என்கிறார்.





அதாவது, 'காவல் துறை மீது தவறு இருக்கிறது. ஆனால், அது பெரிய தவறு அல்ல. பெரும் தவறு முகநூல் நிர்வாகத்தின் மீதுதான்.' என்பதுதான் அவரது கருத்து.

இதை சரியென்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், இதில் தலையிட்டு, சமூக ஊடகங்களை முறைப்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு...? அரசுடைய, அரசைச் செலுத்தும் அதிகாரவர்க்கத்துடைய பொறுப்புதானே அது...?

ஒரு பிரபலத்திற்கு ஏதாவது பிரச்னை என்றால், அதிவேகமாக இயங்கும் அதிகாரவர்க்கம், சாமான்யனுக்கென்றால் மட்டும் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது என்ன நியாயம்...? நாளை இதுபோல் இன்னொரு மரணம் நிகழ்ந்தால், அப்போதும் முகநூல் மேல் மட்டுமேதான் தவறு என்று சொல்லிக் கொண்டிருப்பார்களா...? அப்படி என்றால் எதற்கு அரசாங்கம்....?
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
'ஏன் கபாலிக்கு இவ்வளவு விரைவாக செயல்பட்டீர்கள்...' என்பது எம் கேள்வி அல்ல. நிச்சயம் அது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதே நேரம் அனைவரையும் சமமாக மதித்துச் செயல்படுங்கள் என்பதுதான் சாமன்யனின் வாதம்.

அந்த சாமான்யனின் குரலைப் புறக்கணித்து, கடந்து செல்வது... நிச்சயம் ஆரோக்கியமான போக்கல்ல!

- மு. நியாஸ் அகமது

சிவாஜிகணேசன் நினைவு நாள்:

Inline image 1

ஜூலை 21 சிவாஜிகணேசன் நினைவு நாள்:

தமிழர்களின் 50 ஆண்டுகால அடையாளமாகத் திகழ்பவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமானது. அதில் சிவாஜி கணேசனும் ஒருவர். சில ஞாபகங்களுக்கு நரைப்பதே இல்லை. சினிமா மட்டுமே நம் மக்களின் பொழுதுபோக்கு, சாயங்கால சந்தோஷமாக இருந்த வேளைகளில் சிவாஜி எனும் கலைஞன் தமிழர்களின் நெஞ்சங்களில் ஏற்படுத்திய பிம்பம் அளவிட முடியாதது.

இன்று 40 வயதைத் தாண்டிய தமிழர்களுக்குள் அந்த பிம்பம் ஏற்படுத் திய விளைவுகள் கலைடாஸ்கோப் புக்கு இணையானது. இதை இன்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண் டிருக்கும் அந்த நிமிடத்திலேயே ‘படம் மொக்கை’, ‘படம் சூப்பர்’ என்று மெசேஜ் தட்டுகிற, வாட்ஸ்-அப் செய்கிற தலைமுறையினரால் புரிந்துகொள்ள முடியாது.

ஒரு தடவை சிவாஜிகணேசனைப் பற்றி இலக்கிய விமர்சகர் கைலாசபதி ‘‘சிவாஜியின் நடிப்பை எல்லோரும் ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். ஆமாம், அவருடையது ஓவர் ஆக்டிங் தான். ஆனால், அவர்தான் எங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், அப்பர், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன்’’ என்று குறிப்பிட்டார்.

இதை இங்குப் பதிவு செய்யக் காரணம் உள்ளது. எப்போதும் ஒன்றை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வது என்பது ஒரு பக்கம். விமர்சித்து விலக்கித் தள்ளுவது இன்னொரு பக்கம். இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும். சிவாஜியும் இந்த வினோதச் சதுரத்துக்குள் கொண்டு வரப்பட்டு இன்று சிவாஜியின் நடிப்பு சிலரால் நகையாடப்படுவதை சிவாஜி ரசிகர்கள் பெருங்கோபத்துடன் எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத் தில் சிவாஜி எனும் பெருங்கலைஞன் காட்டிய ஜால வித்தையை வேறு எந்தத் தமிழ் கலைஞனாலும் நிகழ்த்த முடியுமா? பத்மினி பரதம் ஆடப் போவதை, அழகு மிளிரும் கோயில் தூண் மறைவில் இருந்து சிவாஜி தலையை மட்டும் நீட்டி பார்த்து ரசிக்க முற்படும்போது அவர் முகத்தில் தோன்றும் கலவையான உனார்ச்சிகளை எந்த மொழியில் பதிவு செய்வது?

1952-ல் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆயத்த வேலைகளில் இருந்தபோது, பெருமாள் முதலி யாருக்கு நிதியுதவி செய்ய முன்வந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ‘‘இது நடிப் புக்கேற்ற முகம் கிடையாது. வேறு யாரையாவது கதாநாயகனாக்குங் களேன்’’ என்று பெருமாள் முதலியா ரிடம் சொன்னதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவரல்ல சிவாஜி என்பதற்கு, இது ஒரு வரலாற்று உதாரணம். இப்படித்தான் சிவாஜி எனும் ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் தடைகளை மீறிச் சிறு புள்ளியில் இருந்து ஆரம்பித்திருக்கிறது.

சிவாஜியின் நடிப்பு என்பது காலத்தோடு உறவாடிய ஒரு வெளிப் பாடு. ‘சினிமா என்பது சப்தமல்ல…’ என்பதை 1980-க்கு பிறகுதான் தமிழர்கள் உணரவே ஆரம்பித்தார்கள். அதனை ஆழமாக உணர்த்த கே.பாலசந்தரும், பாரதிராஜாவும், மகேந்திரனும், பாலுமகேந்திராவும் தேவைப்பட்டார்கள். ‘நாடக தாக்கமும், அரங்கமே எதிரொலிக்கும் உரையாடல் உத்தியும் சேர்ந்த கலவைதான் சினிமா…’ என்றிருந்த காலகட்டத்தில் திரையில் தோன்றிய ஒரு கலைஞனை இன்றைய விழுமியங்களுடன் பூதக் கண்ணாடி வைத்து நோக்குவது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

சிவாஜிக்காகவே கதை பின்னப் பட்டது. அப்படியான திரைக்கதையில் தனக்குரிய பங்கு என்ன என்பதை உணர்ந்து, தனது அனைத்துத் திறமைகளையும் கொட்டினார் சிவாஜி. மேலைநாட்டுத் தாக்கத்தால் நவீன மாயைகளில் சிக்கித் தவிக்கும் மனைவிக்கு வாய்த்த பட்டிக்காட்டு கணவனாக அவர் தோன்ற வேண்டிய திரைக்கதையில் அவர் அந்த ஜோடனைகளுடன் கூடிய கட்டுக் குடுமியுடன் வந்து கலக்குவார் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில். ‘அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி…’ என்று அவர் ஆடிப் பாடுவதை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.

நம்பகமான நடிப்புத் திறன்

‘சம்பூரண ராமாயணம்’ என்ற புராணப் படத்தில் பரதனாக வருவார் சிவாஜி. பொதுவாக புராணக் கதைகள் அத்தனையுமே கற்பனையின் அதீதத் தில் உருவானவைதான். அன்றைய கதைசொல்லிகளின் கற்பனை பாதை வழியே சென்றுதான் அந்தக் கதாபாத்திரங்களை நம் மனதில் உருவேற்றிக்கொள்ள முடியும். உண்மையிலேயே பரதன் என்பவன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நம்மை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி பெற்றிருப்பார் சிவாஜி.

சினிமாவில் அப்பாவாக, அண்ண னாக, கணவனாக, முதலாளியாக, வேலையாளாக, திரைக்கதையில் வலம் வரும் நடிகர்கள் தன்னை உருமாற்றி, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உணர்ச்சியை தன் முகபாவனை களால் காட்ட வேண்டிய கட்டாயம். சிவாஜி அதில் பன்முகத் திறன் பெற்றவராக ஒளி வீசினார்.

“ராஜராஜ சோழன் சிவாஜி கணேசனாக நடித்த ‘ராஜராஜ சோழன்’ படம் பார்த்தேன்’’ என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தது நேற் றைய ஆவணம். இன்றைய கோலிவுட் சரித்திரம்!

ரசிகர்களை நெருங்கும் ஆற்றல்

‘பூமாலையில் ஓர் மல்லிகை, இங்கு நான்தான் தேன் என்றது’ என்று திரையில் சிவாஜி பாடி ஆடியபோது அன்றைய ரசிகர்கள் அதில் தன் முகம் பார்த்துக்கொண் டார்கள்.

‘மலர்ந்து மலராத பாதி மலர் போல’ என்று சிவாஜி கசிந்துருகிய போது ரசிகர்கள் தங்கள் பாச உணர்ச்சியில் கண்களைத் துடைத் துக்கொண்டார்கள்.

‘என் தேவையை யார் அறிவார்? உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்று செல்லம்மாவைப் பார்த்து பிரஸ்டீஜ் பத்மநாபன் பாடியபோது, காதில் சிகை முளைத்த ஒரு அக்ரஹாரத்து மனிதர் ஞாபகத்தில் மின்னி மறைந்தார்.

ஓவியங்களில் ‘போர்ட்ரெய்ட்’ என் கிற ஓவிய வகை உண்டு. நவீன ஓவியங் களுடன் பயணிக்கிற ரசிகர்களுக்கு ‘போர்ட்ரேய்ட்’ ஓவியத்தை அவ்வள வாகப் பிடிக்காதுதான். ஆனால், நம் அப்பாவை, நம் அம்மாவை, நம் அண்ணனை, நம் காதலனை நவீன ஓவியங்களில் வரைந்து வைத்துக் கொண்டு ரசிக்க அவ்வளவாகப் பிடிக்காதுதானே!

ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி கமல்ஹாசன் “சிவாஜி சிங்கம் போன்றவர். அவருக்கு தயிர் சாதத்தை வைத்துச் சாப்பிட சொல்லிவிட்டோம்” என்றார். எவ்வளவு உண்மை அது!

Wednesday, July 20, 2016

விவாதம்: பயணங்களும் பாதுகாப்பானவை இல்லையா? பிருந்தா சீனிவாசன்


விவாதம்: பயணங்களும் பாதுகாப்பானவை இல்லையா?
பிருந்தா சீனிவாசன்


பொதுப் போக்குவரத்துகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல்தான் பலரும் தனியார் நிறுவனங்களின் சேவையை நாடுகின்றனர். வாடகை கார், ப்ரீபெய்ட் டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றில் பெண்களுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்றன அடிக்கடி கேள்விப்படுகிற தகாத நிகழ்வுகள். சமீபத்திய உதாரணம் சென்னையைச் சேர்ந்த விலாசினி ரமணிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்.

இரவு நேரத்தில் தனியார் நிறுவனத்தின் காரில் தனியாகப் பயணம் செய்திருக்கிறார் விலாசினி. ஓட்டுநர் காரை அதிவேகத்தில் இயக்க, கொஞ்சம் பொறுமையாக ஓட்டச் சொல்லியிருக்கிறார். அதற்குத் தகாத வார்த்தைகளில் பேசியதோடு நில்லாமல், பாதி வழியில் இறக்கியும் விட்டுவிட்டார் ஓட்டுநர். வேறொரு ஆட்டோ பிடித்து பயணித்தவரைப் பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தியிருக்கிறார்.

தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயத்துக்கு நடுவே காவல்துறையின் உதவியை அவர் நாடியிருக்கிறார். அங்கேயும் அவருக்கு அலைக்கழிப்புதான் மிச்சம். இது எங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று மாற்றி மாற்றி இரண்டு காவல்நிலையங்களுக்கு அலையவைத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நாளிதழ் மூலமாகவும் இந்தப் பிரச்சினை வெளியே தெரிந்தபிறகுதான் காவல்துறை புகாரை ஏற்றிருக்கிறது.

இதே போன்றதொரு சம்பவம் தன் மனைவிக்கு நேர்ந்ததாகச் சொல்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர். பயணம் இணக்கமாக இல்லாததால் பதிவுசெய்த வண்டியை ரத்து செய்ததற்காகத் தன் மனைவி தகாத வார்த்தைகளால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது பயணங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பானவை இல்லையா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.

நீ ஏன் தனியாகப் பயணம் செய்தாய்? இரவு நேரப் பயணம் தேவையா? துணைக்கு யாரையாவது அழைத்துச் சென்றிருக்கலாமே? ஓட்டுநர் என்ன பேசினாலும் அமைதியாக இருக்க வேண்டியதுதானே? ஏன் எதிர்த்துப் பேசி ஒரு ஆணின் கோபத்தைக் கிளற வேண்டும்? இப்படிப் பெண்களைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, இதற்கான தீர்வு என்ன என்பதை நோக்கி நகர்வதில்தான் பெண்களின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. காரணம், மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகள் எழ வாய்ப்பில்லாத பயணங்களின் போது பெண்கள் மிகப் பாதுகாப்பாக பயணிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

இப்படிப் பயணங்களின்போது எதிர்பாராமல் நடக்கிற அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் எப்படிக் கையாள்வது என்ற பதற்றமும் அச்சமும் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவது இயல்பு.

நிறுவனங்களின் பங்கு என்ன?

தங்கள் நிறுவனத்தின் வாகனங்களில் பயணம் செய்கிற பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை இல்லையா? தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் ஆபத்துக் காலங்களில் அழைப்பதற்கென்று ஏதாவது தனிப்பட்ட பொத்தான் வசதியோ, எச்சரிக்கை மணியோ வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டாமா?

இக்கட்டான நேரங்களில் பெண்கள் காவல் துறையை நாடும்போது காவல்துறையின் அணுகுமுறை எல்லா நேரங்களிலும் அனுசரணையாக இருப்பதில்லை. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களின்போதுகூடப் புகாரை ஏற்றுக்கொள்வதிலோ அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதிலோ காவல் துறை சுணக்கம் காட்டினால் பெண்கள் எங்கே செல்வது? காவல் துறையின் விரைவான செயல்பாடுதானே அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்?

பயிற்சி தேவை

பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொள்கிற ஓட்டுநர் தண்டனை பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவரைப் போல இன்னும் சில நூறு ஓட்டுநர்கள் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இங்கே போதுமான பயிற்சி அளிக்கப்படுகிறதா? பயணிகளிடம், அதுவும் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஓட்டுநர் உரிமத்துக்கு இணையான முக்கிய அம்சம் அல்லவா? பெண் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுதலோ ஆலோசனையோ வழங்கப்படுகிறதா? நிறுவனங்களின் சார்பில் நடக்கும் போக்குவரத்துச் சேவையிலேயே இந்த நிலை என்றால் தனிநபர்களின் வாடகை வண்டிகளில் கிடைக்கக்கூடிய பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

இப்படிப்பட்ட கேள்விகளுக் கிடையேதான் பெண்களின் பாதுகாப்புக்கான விடை பொதிந்திருக்கிறது.

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகர்களே, பயணங்களின் போது சந்திக்கிற அச்சுறுத்தல்களைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்? பாதுகாப்பான பயணத்துக்கு வழி என்ன? இந்தப் பிரச்சினையில் உங்கள் அனுபவம் என்ன? போக்குவரத்துச் சேவை நிறுவனங்களின் பங்கு, காவல் துறையின் கடமை பற்றியெல்லாம் உங்கள் கருத்து என்ன? பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

Tuesday, July 19, 2016

பாரதிராஜா

பாரதிராஜா 10

இயக்குநர் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் ‘திருப்புமுனை’ இயக்குநர் என போற்றப்படும் பாரதிராஜா (Bharathiraja) பிறந்தநாள் இன்று (ஜூலை 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தேனி அல்லி நகரில் (1941) பிறந்தவர். இயற்பெயர் சின்னச்சாமி. சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பெரியவர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் செல்வதில் இவருக்கு அலாதி ஆசை. சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வமும் பற்றிக்கொண்டது.

* விளையாட்டுப் பருவம் முடிந்ததும், நாடகம் எழுதுவது, இயக்குவது, நடிப்பதில் கவனம் திரும்பியது. ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ ஆகிய நாடகங்களை எழுதி, அவ்வப்போது திருவிழா மேடைகளில் அரங்கேற்றினார். சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.

* சினிமா மோகத்தில், அரசு வேலையை உதறிவிட்டு, சென்னைக்குப் புறப்பட்டார். உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, தாய் மட்டும் ஆசி கூறி அனுப்பிவைத்தார். மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சி, பெட்ரோல் பங்க் என பல்வேறு வேலைகளை செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

* சென்னையில் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ் ஆகியோர் ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய வீட்டில் இவருடன் சேர்ந்து தங்கியிருந்தவர்கள். இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது. இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றார்.

* 1978-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘16 வயதினிலே’, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். அதுவரை ஸ்டுடியோவுக்குள் மட்டுமே சுழன்ற கேமராக்களை, கிராமங்களை நோக்கிப் படையெடுக்க வைத்தார். முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றியை சாதித்துக் காட்டியவர்.

* தொடர்ந்து இவர் இயக்கிய ‘சிகப்பு ரோஜாக்கள், ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த படைப்புகள்.

* தமிழ், தெலுங்கு, இந்தியில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, விஜயசாந்தி, ரோகிணி, கவுண்டமணி, கார்த்திக், ரேவதி உள்ளிட்ட பலரை அறிமுகம் செய்தவர்.

* ‘தாஜ்மஹால்’, ‘கருத்தம்மா’, ‘அல்லி அர்ஜுனா’ ஆகிய படங்களைத் தயாரித்தார். சிறப்பாக ஓவியம் வரைவார். காட்சி அமைப்புகளை வரைந்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஓவியத் திறன் பெற்றவர்.

* இவரது ‘முதல் மரியாதை’ படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார். பத்மஸ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ‘நந்தி’ விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

* தனது நீண்டகால கனவுத் திரைப்படம் என இவர் குறிப்பிடும் ‘குற்றப் பரம்பரை’ வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். ‘இயக்குநர் இமயம்’ என போற்றப்படும் பாரதிராஜா இன்று 75-வது வயதை நிறைவு செய்கிறார்.

ஆயுள் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவித்தால் போதும்: உச்ச நீதிமன்றம்


THE HINDU

குற்றவாளிக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவித்தால் போதுமானது. அதை அவர் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டியது இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சில வழக்குகளில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனையோ வழங்கப்படுவது உண்டு. அவ்வாறாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை குற்றவாளி எதிர்கொள்ளும் முறையை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதி எப்.எம்.ஐ.கலிபுல்லா, ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒரு வழக்கிலோ அல்லது பல்வேறு வழக்குகளிலோ தொடர்புடைய குற்றவாளி ஒருவர், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை எப்படி அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலானது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "விசாரணை நீதிமன்றங்களோ அல்லது உயர் நீதிமன்றங்களோ குற்றத்துக்கான தண்டனைக் காலத்துடன் ஆயுள் தண்டனையையும் சேர்த்து விதித்திருந்தால், அந்த தண்டனைகளை ஏக காலத்தில் குற்றவாளி அனுபவித்தால் போதுமானது எனத் தீர்ப்பளித்தனர்.

அதாவது, ஒருவருக்கு ஒரு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், அத்துடன் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டால், அவர் இரண்டையும் ஒரே காலகட்டத்தில் அனுபவிப்பார். முதலில் 5 ஆண்டு சிறைத் தண்டனை; பின்னர் ஆயுள் தண்டனை எனப் பிரித்து அனுபவிக்கத் தேவையில்லை.

குறள் இனிது:

குறள் இனிது: சுமாரா வேலை செய்யலாமா குமாரு?

சோம.வீரப்பன்

நான் சென்னையில் 1977ல் வங்கியில் பணி யாற்றிய பொழுது கருப்பையா எனும் பியூன் எனது கிளையில் வேலை செய்தார். பெயர் பிடிச்சிருக்கா?
7ஆம் வகுப்பு வரை தான் படித்தவர் என்றாலும் வேலையில் கில்லாடி. டெஸ்பாட்ச் எனும் தபால் அனுப்பும் வேலை. தினமும் சுமார் 150 கவர் அனுப்ப வேண்டும். மனுஷன் ஏதோ குஸ்தி சண்டையில் எதிரியைக் கையசைத்து அழைப்பது போல ‘கொடுங்க, கொடுங்க' என்று எல்லோரது இருக்கைக்கும் அவரே சென்று கவர்களை வாங்கிச் செல்வார்!
சென்னையில் வாடிக்கையாளர் திங்கள் மாலை 4.30 க்கு சேலம் காசோலையைக் கொடுத்தால், அன்றே அதை எங்களது சேலம் கிளைக்கு அனுப்பி விடுவோம். அவர்களும் அதை செவ்வாயன்றே கிளியரிங்கில் எஸ்பிஐ-க்கு அனுப்பி அது பணமாகி விட்ட விபரத்தை உடனே தபாலில் அனுப்புவார்கள். இல்லாவிட்டால் நம்ம கருப்பையா தொலைபேசியில் துளைப்பாரே!
அப்புறம் என்ன, துறுதுறு கருப்பையா சென்னையில் தானே இருந்தார். காலை 10.30க்கே தபாலைப் பிரித்து வாடிக்கையாளரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும்.
அதாவது திங்கள் மாலை சென்னையில் செலுத்தப்பட்ட காசோலை புதன் காலையே பணமாகிவிடும். எல்லாப் புகழும் கருப்பையாவிற்கே!
இதில் வேடிக்கை என்னவென்றால் சென்னையில் எங்கள் கிளைக்கு எதிரிலேயே இருக்கும் வங்கிக் காசோலையை திங்கள் மாலை வாடிக்கையாளர் கொடுத்தால் அது செவ்வாயன்று உள்ளூர் கிளியரிங்கில் ஆர்பிஐக்குப் போகும். பின் புதனன்று காசோலை திரும்பவில்லை என்பதறிந்து வியாழக்கிழமை தான் பணமாகும்!
அடிப்படையில் கருப்பையாவிற்கு வேலை செய்வது ரொம்பப் பிடிக்கும். பெரிய கடனுக்கான விண்ணப்பப் படிவங்களைக் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமெனில், இரவு 7, 8 மணியானாலும் காத்திருந்து பேப்பர்களை எல்லாம் அடுக்கி, கனத்த நூல் போட்டுக் கட்டிக் கவரில் போட்டு அனுப்பி விட்டு உளம் புளகாங்கிதம் அடைவார்! ஒப்புதல் வந்துவிட்டால் கடன் வாங்குபவரை விடவும் அதிகம் மகிழ்வார்!
‘மகத்தான பணி செய்ய ஒரே வழி செய்யும் காரியத்தை நேசிப்பது தான்' என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது சரிதானே!
அண்ணே, பணியாளர்களை இருவகைப்படுத்தலாம். மகிழ்ச்சியாக உத்வேகத்துடன் பணி செய்வோர் ஒரு ரகம். வேண்டா வெறுப்பாய், அலட்சியமாய் வேலை செய்பவர்கள் மற்றொரு ரகம்!
கருப்பையா தம் பணியில் காட்டிய ஆர்வத்தினால் அவரை வங்கியில் எல்லோரும் கொண்டாடினர். பல கிளைகளின் மேலாளர்களும் அவரைத் தம் கிளைக்கு மாற்றுமாறு கேட்டனர். உயரதிகாரிகளுக்கு மேலாளர்களைத் தெரிகிறதோ இல்லையோ, கருப்பையாவை நன்கு தெரியும்! வாடிக்கையாளரில் பலர் எங்கள் வங்கியை ‘கருப்பையா வங்கி' என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர்!
படிப்போ பதவியோ கொடுக்க முடியாத பெருமையை அவரது கடமை மறவாமை கொடுத்து விட்டது!
செய்ய வேண்டிய கடமையை அலட்சியப் படுத்துகிறவர்களுக்குப் புகழ் வாழ்வு இல்லை. இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்துமென்கிறார் வள்ளுவர்.
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு (குறள்: 533)

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...