Wednesday, August 3, 2016

ஆன்லைனிலேயே இனி காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கலாம்

சவுந்தரியா ப்ரீதா

கைத்தறி ஆடைகளை சந்தைப்படுத்தும் நோக்கில், இந்திய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் 13 ஈ காமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது.

இதன்மூலம் காஞ்சிபுரம் பட்டையோ, மங்கள்கிரி பருத்திப் புடவையையோ, கோவை பட்டையோ ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் நெசவாளர்களிடம் இருந்து அவற்றை நேரடியாகப் பெற்றுக்கொள்ளவும் வழிவகைசெய்யப்பட்டிருக்கிறது.

கைத்தறிப் பொருட்களை ஈ காமர்ஸ்ம் மூலம் விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை வடிவமைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து அவற்றை சந்தைப்படுத்தும் நோக்கில், கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் 13 ஈ காமர்ஸ் நிறுவனங்களோடு கைகோர்த்துள்ளது.

இந்த விற்பனையில் ஆர்வமுள்ள நிறுவனங்கள், வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். அதே நேரம் அவர்கள், தங்களின் இணையதளத்தில் கைத்தறி வணிகத்துக்காக தனிப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். அவற்றில் குறிப்பிட்ட நெசவாளர்களோடு இணைந்து விற்பனை செய்யும் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆடைகளில் கைத்தறி சின்னமோ, இந்திய கைத்தறி அடையாளமோ இருக்க வேண்டும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலோக் குமார், ''இந்த நிறுவனங்கள் மூலம் கடந்த வருடத்தில் ரூ 1.7 கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன. சில நிறுவன இணையதளங்கள் இரண்டு அல்லது மூன்று நெசவாளர்களோடு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன.

வெளிப்படையான கொள்கை

எங்களுடையது வெளிப்படையான கொள்கை. இப்போது வரை எங்களுடன் 13 நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இன்னும் சில ஈ காமர்ஸ் நிறுவனங்களும் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. இணையதள இணைப்புகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள், மற்ற சங்கங்கள் மற்றும் நெசவாளர்களே இவற்றை விற்றுக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி'' என்கிறார்.

கடந்த அக்டோபரில் கைத்தறி வளர்ச்சி ஆணையத்துடன் இணைந்துள்ள அமேசான் நிறுவனம் கைத்தறி புடவைகள், அணிகலன்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 4,000 பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது. அந்நிறுவனம் ராஜஸ்தான் (கோட்டா) நெசவாளர்கள், மேற்கு வங்கம் (நாடியா), ஒடிஷா (பர்ஹார்) மற்றும் தெலங்கானா (போச்சம்பள்ளி) நெசவாளர்களோடு இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கைத்தறிப் புடவைகளை ஆன்லைனில் வாங்கத் தனிப்பிரிவு வைத்திருக்கும் நிறுவனங்கள் சிலவற்றின் விவரம்:

ஷாதிகா இணையதள இணைப்பு: ஷாதிகா

கோகூப் இணையதள இணைப்பு: கோகூப்

அமேசான் இணையதள இணைப்பு: அமேசான்

சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்; ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நீடாமங்கலம்,

சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு குரு இடம் பெயர்ந்ததையொட்டி நேற்று ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழா

ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு நேற்று காலை 9.30 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி குருபரிகாரத்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு 2-வது கால யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

மகாதீபாராதனை

இதனையடுத்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் ஆகிய சாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் குரு பகவானுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. சரியாக 9.30 மணிக்கு குருபகவான் பெயர்ச்சியான நேரத்தில் குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

திட்டை கோவில்

இதேபோல் பிரசித்தி பெற்ற தஞ்சையை அடுத்த திட்டை என்ற தென்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலிலும் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவையொட்டி குருபகவானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குருப்பெயர்ச்சியையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவொற்றியூர்

திருவொற்றியூர் குரு தட்சிணாமூர்த்தி கோவிலில் மட்டும் குருபகவான் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் வட குருஸ்தலம் என்று அழைக்கப்படுகின்றது.

குருப்பெயர்ச்சியையொட்டி அங்கு கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கிய லட்சார்ச்சனை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு நிறைவு பெற்று குரு தட்சிணாமூர்த்திக்கு 108 மூலிகைகள் மற்றும் ஹோம திரவியங்கள் நிறைந்த கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இங்கு வெளிமாவட்டங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தனர். பாடி திருவல்லீசுவரர் கோவிலிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tuesday, August 2, 2016

ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு...புனித நீராட ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

vikatan.com

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு தினமான இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக சிறப்பு தர்ப்பண பூஜைகள் செய்த பின்னர் அவர்கள், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.



ஆடி அமாவாசை மற்றும் ஆடி பெருக்கு தினமான இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே வரத் துவங்கினர். இன்று காலை அக்னி தீர்த்தத்தில் கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில், தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீராமர் பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தார். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்களும் புனித நீராடியதுடன் மறைந்த தங்களின் முன்னோர்கள் நினைவாக சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி, அம்பாள் சன்னிதிகளில் அவர்கள் தரிசனம் செய்தனர்.



22 தீர்த்தங்களிலும் நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கோயில் தீர்த்தமாடுவதற்காக 4 ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய இரு நிகழ்வுகளும் ஒரே தினத்தில் வருவது 14 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்பு நிகழ்வாகும். இந்த சிறப்பு நிகழ்வு குறித்து அர்ச்சகர் பக்‌ஷி சிவராஜன் கூறுகையில், '' பிதுர்களின் காலம் என அழைக்கப்படும் தட்ஷியாயண காலத்தில் வருவது ஆடி அமாவாசை. இந்த நாளில் மறைந்த தங்களின் முன்னோர்கள், தங்களை தேடி வருவார்கள் என்பது காலம் காலமாக இந்துக்களிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி தங்கள் முன்னோர்களின் நினைவாக உலகின் முதலில் உருவான தானியங்களில் ஒன்றான எள்ளினை தண்ணீரில் கரைத்து பூஜைகள் செய்வார்கள்.

கடல்கள், நதிகள், ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது விசேஷமானது என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்கள் விடுபட்டிருந்தால், இந்த நாளில் அந்த பூஜைகளை செய்வதன் மூலம் தோஷங்கள் விலகி முழுமையான பலன் கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல வடமாநிலங்களில்கூட, செவ்வாய்க்கிழமையில் வரும் இந்த அமாவாசையை ’சீராவன்’ அமாவாசையாக குறிப்பிட்டு சிறப்பாக கடைப்பிடிப்பார்கள்.

இந்த சிறப்பான நாளுடன், ஆடிப்பெருக்கு தினமும் சேர்ந்து வந்துள்ளது. பூமியில் வாழும் ஜீவராசிகள் உயிர் வாழத் தேவையான விவசாய தானியங்களை விளைவிக்கத் தொடங்கும் காலம் இதுவாகும். விவசாயத்திற்கு நீர்தான் பிரதானம். எனவே விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள், நாட்டில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி அந்த தீர்த்தங்களை காவடியாக எடுத்து சென்று நிலங்களில் தெளித்து பொன் பூட்டிய ஏறுகளின் மூலம் நிலங்களை உழத் துவக்குவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் பழக்கமாகும்.



ஆடி மாதமான இந்த மாதத்தில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளான காவேரி, தாமிரபரணி, வைகை மற்றும் நதிகள் எல்லாம் பெருகெடுத்து ஓடும். இந்த நாளில் காவிரியை தாயாக கருதும் பெண்கள் தங்களின் தாலிச் சரடுகளை மாற்றி வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா வளங்களும் பொங்க வேண்டும் என வேண்டுதல் நடத்துவார்கள். இந்த நாளில் உறவுகள் மேம்பட சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு காதோலையும், கருக மணியையும் கொடுப்பது வழக்கம்.

மேலும், ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகியன ஒருசேர வரும் இந்த நாளில், ‘அதிசார வக்ரம்’ எனப்படும் குருபகவான் ஒரே ஆண்டில் சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளுக்கு இடம் பெறும் நிகழ்வும் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளும் ஒரு சேர வரும் இந்த அரிய நாளில் இறைவனையும், தங்கள் முன்னோர்களையும் ஒருசேர வழிபடுவதன்மூலம் விவசாயம் செழிக்கும், மழை அதிகமாக பெய்து அறுவடை அதிகரிக்கும். வறண்ட பூமி செழிக்கும்" என்றார்.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!

vikatan.com

எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி.

அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை அடைந்து, புகழையும் பெருமையையும் அடைந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. தன் கட்சியின் தலைவர் தன்னை அறைந்தார் என மாநிலங்களவையின் மையத்தில் நின்று அவர் சொல்லிய ஒற்றை வார்த்தையால் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கிறார் அவர். ஏற்கெனவே இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவரான ஜெயலலிதாவை இன்னும் பெரிய சர்ச்சையில் தன் பேச்சினால் சிக்கவைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.

யார் இந்த சசிகலா புஷ்பா...

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சமயத்தில், நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகர் என்பவருடன் திருமணமானது. ஆசிரியை ஆவதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அதற்காக அடுத்தடுத்து கல்வித் தகுதிகளை ஏற்படுத்திக்கொண்டாலும் வேலை கிடைத்தபாடில்லை. விரக்தியுடன் சென்னைக்கு கணவருடன் ரயில் ஏறினார் சசிகலா புஷ்பா .
சென்னையில் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நர்சரி டீச்சராக சேர்ந்தார். கூடவே மசாஜ் சென்டர் ஒன்றையும் வருமானத்திற்காக நடத்தி வந்தார்.

அந்த சமயத்தில் அ.தி.மு.கவில் செல்வாக்கோடு வலம்வந்த ஜெயக்குமாருடன் அறிமுகம் ஏற்பட்டது. அதன் மூலம் அதிமுகவில் பொறுப்புகள் பெற முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அதன் பின்னர், அவரின் செல்வாக்கில் சென்னை அண்ணாநகரில் மகளிருக்கான தங்கும் விடுதி ஒன்றை நடத்திவந்தார். அவரின் கணவரும் இந்த சமயத்தில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.



ஆனாலும் பொருளாதார ரீதியாக சிரம திசைதான். போராட்டம் மிகுந்த வாழ்க்கையை நடத்தி வந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதை விட்டு அகலவே இல்லை. அ.தி.மு.கவில் பெயரும் புகழும் பெற வேண்டுமானால் தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கு அறிமுகமாகி இருக்கவேண்டும் என்ற திட்டமிடுதலுடன் தலைமையுடன் நெருக்கமான சிலருடன் நட்பு கொண்ட சசிகலா, அந்த வரிசையில் அதிமுக வின் நிழல் மனிதரான மணல் தொழிலதிபர் ஒருவருடன் நட்பு கிடைத்தபின் விடுவிடுவென வளர்ச்சி அடைந்தார்.

மணல் தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த சசிகலா, கட்சியில் தனக்கு ஏதாவது பொறுப்பு வாங்கிக் கொடுக்குமாறு அவரை நெருக்க தொடங்கினார். சசிகலா புஷ்பாவின் இந்த தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக அந்த தொழிலதிபர் மூலம், 'மிடாஸ்' மோகனிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரிடமும் கட்சிப் பொறுப்பு பற்றியே சசிகலா புஷ்பா வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பாவிற்கு கார்டனுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நெருக்கமானார். இது கட்சியில் இன்னும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள காரணமானது.

அதனால்,சென்னையில் குடியிருந்த போதிலும் 2010 ம் ஆண்டு நெல்லை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பு சசிகலா புஷ்பாவுக்கு கிடைத்தது. கட்சி மேலிட வட்டத்தில் நல்ல அறிமுகமானவராக வலம் வரத் துவங்கினார் . 2011 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியின் வேட்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பரவலாக உள்ளூர்க் கட்சி நிர்வாகிகள் பலரும், ‘யார் இந்த சசிகலா புஷ்பா? இவருக்கு எப்படி சீட் கிடைத்தது?’ என்று விவாதிக்க தொடங்கினார்கள். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா மற்றொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன், தனக்கு தெரியாமல் முதல் பட்டியல் வெளியானதாகவும் அறிவித்தார்.



இரண்டாவது பட்டியலில் சசிகலா புஷ்பா பெயர் இடம்பெறவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், கட்சித் தலைமையுடன் நெருக்கமாக இருக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 2011ல் கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா புஷ்பாவுக்கென்று ஆதரவு வட்டம் உருவானது. கட்சியின் சார்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் அளவுக்கு ஜெயலலிதாவால் அப்போது முக்கியத்துவம் தரப்பட்டது.

அந்த அளவுக்கு கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது. பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக வேண்டும் என்கிற கனவுடன் தீவிரமாகச் செயல்பட்டார். கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மூலமாக காய் நகர்த்தினார். ஆனால், சொந்த ஊர்ப் பிரச்னை அதற்கு முட்டுக் கட்டையானது. சென்னையில் வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு தனது வாக்காளர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றினார்.
அவர் எதிர்பார்த்தது போலவே, தூத்துக்குடி மாநகராட்சித் தேர்தலில், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதில் வெற்றி பெற்று மேயராகவும் தேர்வானார். அந்த சமயத்தில் மாநகராட்சிக் கூட்டம் நடந்த போதே ஆணையரை பேச விடாமல் மைக்கை பிடுங்கியதாக சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், கட்சித் தலைமையுடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு ஏற்றம் மட்டுமே ஏற்பட்டது. மேயர் பொறுப்பில் இருந்தபோதே 2014 ல் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பைக் கொடுத்தது, அ.தி.மு.க. தலைமை. அத்துடன், மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. மாநிலங்களவை அதிமுக கொறடாவாகவும் அவர் ஆக்கப்பட்டார். பளபளப்பாக சென்று கொண்டிருந்த அவரது அரசியல் வாழ்வினை ஒரு ஆடியோ அதகளம் செய்துவிட்டது.

ஆண் நண்பர் ஒருவருடன் சசிகலா புஷ்பா செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி கட்சி எல்லையைத் தாண்டி, அவர் மற்றவர்களின் கவனத்திற்கும் வந்தார். அந்த ஆடியோவில் அவர், ‘நேற்று நான் *******இருந்தேன். டெல்லியில் குளிரா இருக்குல்ல.. அதான் *****ந்தேன்’ என்கிற ரீதியில் பரபரப்பாக பேசியதுடன், ‘****** மாவட்ட ஆட்சியர் ஒரு தத்தி. அவருக்கு எதுவுமே தெரியாது’ என்று அதிகாரிகளையும் மட்டம் தட்டி, தம் சொந்தக் கட்சி தொடர்பான ரகசியங்கள் சிலவற்றையும் பேசியிருந்தார்.



அதன் பின்னர் இறங்கு முகம்தான் கட்சியில். கட்சியின் அனைத்துப் பொறுப்புகளும் பிடுங்கப்பட்டன. அத்துடன் மாநிலங்களவை கொறடா பொறுப்பில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். ஆனாலும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். மீண்டும் இழந்த இடத்தை திரும்பப் பெற்று விடமுடியும் என்கிற நம்பிக்கையுடனேயே அவர் செயல்பட்டார். ஆனால் திமுக எம்.பி சிவாவுடனான சர்ச்சை அதை இன்னும் சிக்கலாக்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மாநிலங்களவை எம்.பி.,திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இந்த புகைப்படங்கள் உண்மை இல்லை என்றும் தனது கணவருடன் இருந்த படங்களை யாரோ விஷமிகள் 'மார்பிங்' செய்து வெளியிட்டு தன்னை அசிங்கப்படுத்துவதாகவும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் திருச்சி சிவாவை மையப்படுத்தியே சர்ச்சை அவர் வாழ்வில் மையம் கொண்டுவிட்டது.

சசிகலா, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சென்னை திரும்ப, டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கிருந்த திருச்சி சிவாவை சட்டையைப் பிடித்து அடித்ததாக செய்தி வெளியாகி, இப்போது அவர் கட்சியை விட்டு கட்டம் கட்டப்படும் அளவுக்கு நிலை வந்துவிட்டது. தனது கட்சித் தலைமையை அவமரியாதையாக பேசியதால்தான் உணர்ச்சிவசப்பட்டு சிவாவை அடித்து விட்டதாக அவர் அந்த சம்பவத்திற்கு காரணம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்க சென்னையில் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார்.

அந்த சந்திப்பு அவரது அதிமுகவுடனான அரசியல் வாழ்வின் இறுதி என்றே இப்போது சொல்லப்படுகிறது. காரணம் இரும்புப் பெண்மணி என இந்திய மீடியாக்களால் சொல்லப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இமேஜை அசைத்துப் பார்க்கும் விதமாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் நடுநாயகமாக நின்று சர்ச்சைக் கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதிமுகவிற்கும் அதன் தலைமைக்கும் பெரும் சங்கடங்களைத் தரும் பேச்சு அது. “கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன். திருச்சி சிவாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன்.

ஆனால், எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்த பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். ஆனால், என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன்.இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன். என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பியை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்குப் பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில் கூட வாழமுடியவில்லை" என அழுதபடியே தெரிவித்தார் சசிகலா புஷ்பா.

இதன்மூலம் ஜெயலலிதாவை நோக்கி இந்திய மீடியாக்கள் தங்கள் கேமிராவின் வெளிச்சத்தை ஆர்வத்தோடு நீட்ட நாடாளுமன்றத்தில் நடுமையத்தில் நின்று ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இந்தப் பேச்சின் சுருக்கத்தை மாநிலங்களவை பத்திரிகையாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள், சசிகலா புஷ்பா கட்டம் கட்டப்பட்ட செய்தியை அந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து சசிகலாவுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது அதிமுக தலைமை.


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பிலும், ஒருபோதும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் அப்படி யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

.

இது ஒருபுறமிருக்க, சசிகலாவின் வளர்ச்சி அ.தி.மு.கவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பினாமி பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். குறிப்பாக மாற்றுக் கட்சியினர் பெயரில்தான் சசிகலாவின் சொத்துக்கள் உள்ளதாக அதிர்ச்சிக் கொடுக்கிறார்கள் அவர்கள். திருச்சி சிவாவுக்கும், சசிகலாவுக்கும் ஏற்பட்டமோதலுக்கு பின்னணியும் இதுதான் என்கிறார்கள்.



தங்களுக்கு கீழ்ப் படியாத சந்தர்ப்பங்களில் அதிமுக தலைமை, தங்களை அடித்ததாக கடந்த காலங்களில் புகார்கள் கிளம்பியதுண்டு. பத்துக்கு பத்து அறைகளில் புறப்பட்ட இந்த புகார், இப்போது மாண்புமிகு எம்.பிக்கள் குழுமிய இடத்தில் பேசப்பட்டிருப்பதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது.


“நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று மாநிலங்களவையிலேயே ஒரு உறுப்பினர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியதன்மூலம் கட்சிக் கட்டுப்பாடு, தலைமையுடன் முரண், அரசியல் சர்ச்சை என்பதையெல்லாம் மீறி அவர் தனது பிரச்னையில் கட்சித் தலைமை மீதான அதிருப்தியை ஒரு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்வரும் குற்றப் புகாராகவே மாநிலங்களவையில் முன்வைத்திருக்கிறார். இந்திய அரசியலில் இப்போது சசிகலா புஷ்பா விவாதப் பொருளாகி இருக்கிறார். இன்னும் சில தினங்களுக்கு இந்திய மீடியாக்களின் லைவ் வேன்களை சென்னை தெருக்களில் அதிகம் பார்க்கலாம்.

- ஆண்டனிராஜ், எஸ். மகேஷ்

Monday, August 1, 2016

எல்சிடி டி.வி.யை உடைத்த தொழிலாளி

ரூ.5 ஆயிரம் மதிப்பு டிவிக்கு ரூ.7 ஆயிரம் வரியா?- மதுரை விமான நிலையத்தில் எல்சிடி டி.வி.யை உடைத்த தொழிலாளி


திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் துபையில் தொழிலாளியாக பணியாற்றுகிறார். நீண்ட நாளாக சொந்த ஊருக்கு வராமல் இருந்தார். இந்நிலையில், தனது மனைவி, குழந்தைகளை பார்க்க சொந்த ஊருக்கு திரும்பத் திட்ட மிட்டார். இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்த போது, அவர்கள் எல்சிடி வாங்கிவரும்படி கூறியுள்ளனர். இதற்காக ஆசை, ஆசையாக மலிவான விலையில் டிவி ஒன்றை துபையில் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அவர் கொண்டு வந்திருந்த பொருட்களை பரிசோதித்த அதிகாரிகள் எல்சிடி டிவிக்கு ரூ. 7 ஆயிரம் வரி விதிப்பதாகக் கூறினர். அதிர்ச்சி அடைந்த முருகேசன், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள டிவிக்கு எப்படி ரூ. 7 ஆயிரம் வரி செலுத்த முடியும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ரூ.2 ஆயிரம் மட்டும் இருக்கிறது என அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் கேட்கவில்லையாம். இதனால் கோபமடைந்த முருகேசன், தான் கொண்டு டிவியை போட்டு உடைத்தார். இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செரீப் கூறியது: துபை போன்ற வெளிநாடுகளுக்கு சாதாரண பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு வரி என்ற பெயரில் அதிக தொகை வசூலிப்பது, கெடுபிடி செய்வதால் தங்களது குடும்பத்தினர் ஆசைப்படும் பொருட்களை தொழிலாளர்களால் கொண்டுவர முடியவில்லை. லால்குடியை சேர்ந்த முருகேசன் துபையில் தள்ளுபடி விலையில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள எல்சிடி டிவியை வாங்கி வந்துள்ளார். இதற்கு ரூ. 7 ஆயிரம் வரி கேட்டதால் கோபத்தில் உடைத்துவிட்டு, மன வேதனையுடன் சென்றார்.

விலை உயர்ந்த கம்பெனி பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கலாம். சாதாரண தொழிலாளர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு நடைமுறையிலுள்ள வரியை வசூலிக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியது: முருகேசன் கொண்டு வந்த டிவிக்கு விதிமுறைப்படிதான் ரூ. 7 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது. அதை அவர் செலுத்த முன்வரவில்லை. அந்த டிவியை, அவர் கை தவறி கீழே போட்டு விட்டதால் சேதமடைந்தது. இதுபற்றி அவரே எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார் என்றார்.

சவுதியில் 7 மாதங்களாக வேலையிழந்து சம்பளம், உணவின்றி பரிதவிக்கும் 10,000 இந்தியரை தாயகம் அழைத்துவர ஏற்பாடு: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

Return to frontpage

சவுதி அரேபியாவில் உணவு இன்றி பரிதவிக்கும் 10,000 இந்தியர்கள் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே மத்திய அரசு உத்தரவின்பேரில் சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் 5 நிவாரண முகாம் கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை சேர்ந்த சவுதி ஒகர் கட்டுமான நிறுவனத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் இந்தியர்கள். அண்மைகாலமாக மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமானத் தொழில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் கடந்த 7 மாதங்களாக சவுதி ஒகர் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அன்றாட சமையலுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் அளிக்கவில்லை. இதனால் 4 ஆயிரம் இந்திய தொழிலாளர்களும் வேலையிழந்து உணவின்றி பரிதவித்து வந்தனர்.

மேலும் சில சவுதி நிறுவனங் களில் பணியாற்றும் இந்தியர்களுக் கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களும் பசி, பட்டினியில் பரிதவித்தனர்.

அமைச்சர் சுஷ்மா அறிவிப்பு

இந்தப் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சவுதி அரேபியாவில் ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி பரிதவித்து வருகின்றனர். அவர் களுக்காக இந்தியத் தூதரகம் சார்பில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த முகாம்களில் 2,450 இந்திய தொழிலாளர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

சவுதியில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உணவின்றி தவிக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு தாராளமாக உதவி செய்யுங்கள். இந்தியர்களின் மனஉறுதிக்கு முன்பு எதுவும் பெரிது இல்லை.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அனைவருக்கும் ஜெட்டா வில் இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங் கும். குவைத் நாட்டிலும் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. எனினும் அங்கு நிலைமை கவலைப்படும் அளவுக்கு இல்லை.

சவுதி அரேபியாவில் தவிக்கும் 10 ஆயிரம் இந்தியர்களையும் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப் படும் புகைப்படங்களை சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் வெளியிட் டுள்ளார்.

சவுதி செல்லும் வி.கே.சிங்

இதனிடையே இந்திய தொழிலாளர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் விரைவில் சவுதி செல்கிறார். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இந்தியா அழைத்து வர தேவை யான ஏற்பாடுகளை அவர் செய்வார் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெட்டாவில் அடுத்த சில நாட்களில் மேலும் 3 முகாம்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத் அரசுகளுடன் இந்திய வெளி யுறவு அமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சவுதி அரசு விசாரணை

இதுதொடர்பாக சவுதி அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சில கட்டுமான நிறுவனங்கள் ஊழியர் களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் சட்டத்தை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தன.

அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா நீக்கம்


அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்'' என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

2014-ல் எம்.பி. ஆன சசிகலா புஷ்பாவுக்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் கண்ணீர் மல்க பேச்சு:

இதனிடையே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, "நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என் பதவியை ராஜினாமா செய்யுமாறு நான் நிர்பந்திக்கப்பட்டேன். ஆனால், எனது பதவியை நான் ராஜினாமா செய்யப்போவதில்லை" என்றார்.

ஆனால், தொடர்ந்து அவர் பேச முடியாத அளவுக்கு அவையில் அமளி நீடித்ததால், அவரால் மேலும் பேச முடியாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பின்னணி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்போது திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம். அதன்படி கடந்த சனிக்கிழமை என்பதால் திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆவேசமடைந்த சசிகால புஷ்பா, திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக திருச்சி சிவா, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊடகங்களில் எல்லாம் எனக்கும் அவருக்கும் கைகலப்பு என்று செய்தி வருகின்றன. இருவரும் தாக்கிக் கொண்டால்தான் கைகலப்பு. நான் சசிகலா புஷ்பாவை அடிக்கவே இல்லை. அவர் மட்டும்தான் என்னை அடித்தார். அவர் பெண் என்பதால் நான் எதுவும் செய்யவில்லை.

‘நானும் எம்.பி., திருச்சி சிவாவும் எம்.பி., அப்படி இருக்கும்போது அவருக்கு மட்டும் ஏன் கூடுதல் மரியாதை கொடுக்கிறீர்கள்’ என்று அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் சசிகலா புஷ்பா வாக்குவாதம் செய்தார். அவரது செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசையும், முதல்வரையும் நான் விமர்சித்ததாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு பற்றி குறை கூற வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

அப்படியே விமர்சனம் செய்திருந்தாலும், பொது இடத்தில் அடிப்பதுதான் மரபா? அரசியல் ரீதியாக விமர்சனங்களை செய்தால் பொது இடத்தில் அடிப்பது என்ற புதிய மரபை அவர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடருவதா அல்லது வேறு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பா விளக்கம்

இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சசிகலா புஷ்பா நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, நேற்று பிற்பகல் போயஸ் தோட்டத்துக்கு சென்ற சசிகலா புஷ்பா, நடந்த சம்பவம் தொடர்பாக கட்சித் தலைமையிடம் விளக்கக் கடிதம் அளித்துவிட்டு சென்றார்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பு அதிமுக மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். அதன்பிறகு திருச்சி சிவா எம்.பி.யுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அது மார்பிங் செய்யப்பட்ட படம் என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண் நண்பருடன் சசிகலா புஷ்பா பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் சசிகலா புஷ்பா மீது கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...