Thursday, August 4, 2016

திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் துபாயில் தரையிறங்கிய போது விபத்து: 300 பேர் உயிர் பிழைத்த அதிசயம்

Return to frontpage

கேரளாவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் (இகே521), துபாயில் தரையிறங்கும் போது தீப்பிடித்தது. இந்த விபத்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தில்லை. எனினும், விமானம் ஓடுதளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வு மற்றும் புகை காரணமாக சிலருக்கு காயமும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் இருந்து நேற்று புதன்கிழமை பகல் 10.19 மணிக்கு, போயிங் 777 விமானம் (இகே521) துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 282 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்த னர். இவர்களில் 226 பேர் இந்தியர்கள்.

பகல் 12.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, ஓடுதளத்தை மோதியபடி, நின்றது. முன்னதாக, விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து பாகம் ஒன்று உடைந்து விழுந்ததாகவும், வெடிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, விமானத் தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து, அதில் இருந்து கரும்புகை வெளி யானபடி இருந்தது. உடனடியாக விமானத்தில் இருந்து அவசரகால வழியின் மூலம் பயணிகள் வேக மாக வெளியேறினர். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளி யேற்றப்பட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை எமிரேட்ஸ் நிறுவனம் உனடியாக அறிவிக்கவில்லை. முதலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என, எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து பயணி ஒருவர் குறிப்பிடும்போது, ‘விமானம் வழக்கம் போல தரையிறங்காமல், திடீரென கீழ்நோக்கி இறங்கியது. பின்னர், தரையை வேகமாக மோதியது. திடீர் திடீரென மேல் நோக்கி குலுங்கியது. அதற்குள் கேபினுக்குள் புகை சூழந்துவிட்டது. எந்த முன்னறிவிப்பும் தரப்படவில்லை. அவசரகால கதவை உடைத்து வெளியேறினோம்’ என்றார்.

விமானத்தில் இருந்து அனைவரும் தப்பிவிட்டோம். எனினும், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அதோடு, தரையிறங்கும் சமயத்தில் ஓடுதளத்தில் விமானம் மோதியதால் ஏற்பட்ட அதிர்வுகளால் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை என, எமிரேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விபத்து காரணமாக, துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நிலைமை சீரடைந்த பின் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

விபத்துக்குள்ளான போயிங் 777 விமானம், 2003 மார்ச் மாதம் வாங்கப்பட்டது.

உதவி எண்கள்

எமிரேட்ஸ் அறிவித்த அவசர உதவி எண்கள்:

திருவனந்தபுரம் : 04713377337

ஐக்கிய அரபு அமீரகம் : 8002111

அமெரிக்கா : 0018113502081

Wednesday, August 3, 2016

ரயிலை தவறவிட்டதால் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த உம்மன்சாண்டி: சக பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி

Return to frontpage

கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்க மறுத்துவிட்டார். சாதாரண எம்எல்ஏ.வாகவே இருக்கிறேன் என்று கூறினார். அதனால் அரசியல் பரபரப்பில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் வருவதாக திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ரயிலை தவறவிட்டுவிட்டார். அவரது பாதுகாவலர்கள் கார் ஏற்பாடு செய்வதாக கூறியதையும் ஏற்க மறுத்து விட்டார். கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.

அந்த பேருந்தில் இருந்த பெண் நடத்துநர் கூறும்போது, ‘‘உம்மன்சாண்டி பேருந்தில் ஏறியதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவருக்கு ஓட்டுநருக்கு பின்னால் இருக்கும் இருக்கையை ஒதுக்கி கொடுத்தேன்’’ என்றார். பேருந் தில் இருந்த சக பயணிகளும் ஆச்சரியம் அடைந்தனர். அவரிடம் சென்று பலர் பேசினர். பலர் உற்சாகமாக கைகுலுக்கி ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

உம்மன்சாண்டி பேருந்தில் பயணம் செய்யும் தகவல் அறிந்து நிருபர்கள் பலரும் அதே பேருந்தில் பயணம் செய் தனர். திருவனந்தபுரத்தில் உம்மன் சாண்டியை அழைத்து செல்ல வந்திருந்த கார் இருக்கும் இடத்திலும் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். திருவனந்தபுரம் வந்ததும் அவர்களிடம் உம்மன்சாண்டி கூறும்போது, ‘‘கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணம் செய்வதை எப்போதும் விரும்புவேன். அதிலும் விரைவு பேருந்தில் செல்வது பிடிக்கும். ஆனால், நிறைய நிகழ்ச்சிகள் இருந்ததால் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. இப்போது பயணம் செய் வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. பேருந்தில் தொடர்ந்து பயணம் செய்வேன்’’ என்றார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கொல்லத்தில் இருந்து திருவனந்த புரத்துக்கு 75 கி.மீ. தூரம் உம்மன்சாண்டி பேருந்தில் பயணம் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கூர்நோக்கு இல்லமும் சீர்நோக்குப் பார்வையும்

அன்பும் மன்னிப்பும் புறக்கணிக்கப்பட்ட மனதை சட்டங்கள் எப்படிச் சீர்செய்யும்?

குற்றவாளி பிறக்கிறானா அல்லது உருவாக்கப்படுகிறானா என்ற கேள்வி உளவியலில் பெரும் விவாதப்பொருள். இரண்டும் என்பதுதான் உண்மை. ஆனால், சமூகத்தின் பங்கு பற்றி அதிகம் பேசுகிறோம். காரணம், குற்றத்தின் காரணம் மற்றும் பாதிப்பு இரண்டும் சமூகத்தைச் சேருகிறது. இருந்தும்கூட சட்டரீதியாகப் பார்க்கும் அளவுக்குக் குற்றங்களைச் சமூகரீதியாகப் பார்க்கத் தவறுகிறோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

தண்டனையை அதிகரித்தால் குற்றங்கள் குறையும் என்ற பார்வையை மீறி இங்கு குற்றங்கள் புரிந்து கொள்ளப் படுவதில்லை. குற்றம் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்கூட இங்கு பாரபட்சமாகத்தான் உள்ளன. சென்ற மாதத்தில், சென்னையின் கூர்நோக்கு இல்லத்தில் நடந்த தப்பித்தல், தற்கொலை முயற்சி, பிடிபடல் சம்பவங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் முழுப் பக்கச் செய்தியாக வந்தது. பிளேடால் அறுத்துக்கொண்டு மிரட்டும் பிள்ளைகளையும், பதைக்கும் பெற்றோர்களின் அவலத்தையும் படமாகப் போட்டது என்னை செய்தியைப் படிக்க விடாமல் அலைக்கழித்தது. அரை குறையாகத்தான் செய்தியைப் படித்தேன். பின் மனதில் மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ படம் ஓடியது. கல்லூரிக் காலத்தில் பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள கூர்நோக்கு இல்லம் சென்ற நினைவுகள் வந்துபோயின. மறுநாளும் அந்தப் புகைப்படங்கள் வேலைக்கு நடுவில் என்னை அலைக்கழித்தன. அதையெல்லாம்விட என்னைப் பாதித்தது, பேசிய நண்பர்கள் யாரையும் இந்தச் செய்திகள் பெரிதாகப் பாதிக்காததுதான்! நகரம் இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பெரும் சமூக நிகழ்வு என்றால், ‘கபாலி’ ரிலீஸ்தான்.

பதினைந்து வயதில் குற்றப் பின்னணி

குற்றம் நடக்கையில் தடுக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பேசும் நாம், குற்றவியல் பற்றிய அடிப்படை அக்கறையற்ற சமூகமாக மாறிவருகிறோமோ என்ற சந்தேகம் வந்தது. மணிரத்னம் பட நாயகன்போல பால்கனியிலிருந்து பார்த்து, ‘ஏன் இப்படிச் செய்றாங்க?’ என்று கேட்டுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப் போய்விடுகிறோமோ?

பதினைந்து வயதுகளில் குற்றப் பின்னணி என்பது எவ்வளவு கொடுமையானது? அவன் குற்றவாளியா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், குற்றங்கள் நிகழும் சூழலில் வளர்ப்பு, குற்றம் செய்ய வாய்ப்புகள், காவல் துறையில் பிடிபட்டு குற்றவாளியாக நடத்தப்படும் வாய்ப்புகள் போன்றவை, இந்தச் சிறுவர்களை விளிம்பு நிலைக்குச் சுலபத்தில் தள்ளிவிடுகிறது.

இன்று குற்றப் பின்னணியற்ற, நல்ல விழுமியங்கள் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளிடமே நடத்தைக் கோளாறுகள் ஏராளமாக உள்ளதை ஒரு உளவியல் சிகிச்சையாளனாகப் பார்க்கிறேன். ஆனால், அனேகமாக இவை வெளியில்கூட வருவதில்லை. காரணம், வசதி வாய்ப்புகளும் குடும்பத்தின் முழு ஆதரவும், பிற சமூக ஊக்கிகளும் இவர்களை எப்படியோ ஆளாக்கிவிடுகின்றன. பலர் எனக்குத் தெரிந்து, நல்ல படிப்பும், வேலையும், தொழிலும் பெற்று கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

பொய்யான கற்பிதங்கள்

ஆனால், நலிந்த பிரிவிலிருந்து வரும் பிள்ளைகளின் நிலை அப்படியல்ல. அவர்களைக் குற்றவாளியாகப் பார்க்க சமூகம் தயாராக உள்ளது. பழைய பேப்பர் வாங்க வரும் பையனைச் சந்தேகமாகப் பார்ப்போம். கூரியர் பையனைச் சுமாராக நடத்துவோம். ஆங்கிலம் பேசும் வெள்ளைச் சட்டை அணிந்த விற்பனை சிப்பந்தியை கெளரவமாகப் பதில் சொல்லி அனுப்புவோம். நம் கற்பிதங்கள் அப்படி. வெள்ளைத் தோல், ஆங்கிலம், நல்ல உடைகள், நாகரிகப் பெயர்கள் போன்றவை நம்மை அவர்கள் மேல் கெளரவம் கொள்ள வைக்கின்றன.

கறுப்பு நிறம், கசங்கிய உடை, சிறுபான்மை அடையாளம், கொச்சை மொழி என்றால், அவர்களை அப்புறப்படுத்தத் தயாராகிவிடுகிறோம். அவர்கள் பொருளாதார நிலையிலோ, கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் முன்னேறினால்கூட, நம் ஏற்புத்தன்மை பெரிதாக மாறுவதில்லை.

ஒருமுறை குப்பம் ஒன்றில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியபோது, ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கு மேற்பட்ட வேலை செய்கையில், ஆண்களில் சரி பாதிப் பேர் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது தெரியவந்தது. வேலை இல்லாத மனம் அதற்கான ஒரு வேலையைத் தேடிக்கொள்கிறது. குற்றம்கூட ஒரு தொழில்தான்.

வலைப்பின்னலின் சதி

முறையான கல்வியும், நியாயமான வேலையும் கிடைத்தால் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். எல்லா குற்றங்களிலும் சிறார்களை ஈடுபடுத்துவது தற்செயலான நிகழ்வு அல்ல; ஒரு வலைப்பின்னலாக விரியும் வர்த்தகத் திட்டத்தின் ஒரு செயல் திட்டம்.

போதை மருந்து, பாலியல் தொழில், திருட்டு, பிச்சை என எல்லா தொழில்களிலும் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். காவல் துறையால் ஓரளவே தடுக்க முடியும். புனரமைப்பு, கல்வி, திறன் வளர்ப்பு, உளவியல் ஆலோசனை, வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டாலொழிய இளம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியாது.

ஒரு நிறுவன அமைப்பு பெரும்பாலும் மனிதர்களை ஒடுக்கி வைக்கும், எத்தனை மேன்மையான குறிக்கோள்களைக் கொண்டிருந்தாலும். ஆலயம் சார்ந்த அமைப்புகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக, பள்ளிக்கூடங்கள் சிறைச்சாலைகள்போல இயங்குகின்றன. மருத்துவமனைகளையும் குறிப்பாக, மன நல மருத்துவமனைகளைச் சொல்லலாம். அதனால், கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகளிலும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

காவல் துறையும் பரிதாபத்துக்குரியதுதான். புதரில் சிறுவர்களைத் தேடும் காவல் துறைப் பணியாளர்கள் பற்றிப் படிக்கையில் ‘விசாரணை’ படம் நினைவுக்கு வருகிறது. ‘விசாரணை’ அதிகம் விமர்சிக்கப்படாமல் போன படைப்பு என்பது என் கருத்து. அதை செளகரியமாக ஒதுக்கிவைத்துவிட்டது தமிழ்ச் சமூகம்.

கவனிக்கத்தக்க வழக்கம்

சில மாதங்களில் கவுதம் மேனனின் இன்னொரு போலீஸ் படம் வரலாம். அதில் ஒட்ட முடி வெட்டி, வெள்ளைச் சட்டை போட்ட நாயகன், கறுத்த… நீள்முடி வில்லனை ஒரு புல்லட்டில் விசாரணை இல்லாமல் சுட்டுத்தள்ளுவார். சமூகத்தைத் துப்புரவாகத் துலக்கிச் சீர்திருத்தும் உடல் மொழியுடன்.

தமிழ் ரசிகர்கள் நாம் அதை வெற்றிப் படமாக்குவோம். அடுத்த முறை குற்றச் செய்தி படித்தால், ‘போலீஸ் என்ன பண்ணுது?’ என்று கேள்வி கேட்டுவிட்டு நம் கடமையை முடித்துக்கொள்வோம். நெஞ்சைக் கீறி தற்கொலைக்கு மிரட்டுவது நம் பிள்ளைகள் என்றால், இப்படி விலகிச் செல்வோமா?

அன்பும், மன்னிப்பும், நன்மதிப்பும், அங்கீகாரமும், ஆதரவும், ஊக்குவிப்பும் பெருகப் பெருக நடத்தைகள் மாறுவதை நான் பலமுறை குழு சிகிச்சையில் கண்டிருக்கிறேன். உபுண்டு என்ற ஆப்பிரிக்கப் பழங்குடியினர், குற்றத்தைக் கையாளும் வழக்கம் கவனிக்கத் தக்கது. தவறிழைத்த மனிதனை நடுவில் நிறுத்தி, அவன் நற்குணங்களைத் தொடர்ந்து கூறுவார்கள். அவன் செய்த நல்ல செயல்களைப் பட்டியல் போடுவார்கள். இரண்டு மூன்று நாட்கள்கூட இந்தச் சடங்கு தொடரும். சம்பந்தப்பட்டவர் மனம் இளகி, தன் தவறுக்கு வருந்தி நல்வழிக்குத் திரும்புவார்.

அன்பும், மன்னிப்பும் புறக்கணிக்கப்பட்ட மனதை சட்டங்கள் எப்படிச் சீர்செய்ய முடியும்?

- ஆர்.கார்த்திகேயன், உளவியல் மற்றும் மனித வள ஆலோசகர். இந்தியப் பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் தேசியத் தலைவராகச் சமீபத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

முதல்முறையாக மதுரை மருத்துவமனை சாதனை

அபூர்வ வகை 'பாம்பே ஓ' ரத்தம் உடையவருக்கு அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மருத்துவமனை சாதனை


தென் தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அபூர்வ `பாம்பே ஓ’ ரத்த வகையை சேர்ந்தவருக்கு, அதே வகை ரத்தம் செலுத்தி இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ உள்ளிட்டவற்றின் பாசிட்டிவ், நெகட்டிவ் சார்ந்த 8 வகைகள் இருக்கின்றன. ரத்தப் பரிசோதனையில் பெரும்பாலும் எல்லோருக்கும் இந்த ரத்த வகைகளே கண்டறியப்படுகின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் இதய அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சக்திவேல் (52) என்பவருக்கு அபூர்வ `பாம்பே ஓ’ வகை ரத்தம் கண்டறியப்பட்டது. அவருக்கு தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அதே வகை ரத்தம் செலுத்தி மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இந்த வகை ரத்தம் கிடைப்பது அபூர்வம் என்பதால் இவருக்கு ரத்தம் வழங்க சென்னை, சேலம் பகுதிகளில் இருந்து பாம்பே ஓ வகை ரத்தக் கொடையாளர்களை மருத்துவர்கள் தேடிக் கண்டுபிடித்து வரவழைத்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கித் துறை தலைவர் பேராசிரியர் எம்.சிந்தா கூறியது: உலகளவில் 1952-ம் ஆண்டு பாம்பேயில் முதன்முதலில் இந்த `பாம்பே ஓ’ வகை ரத்தம் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பேயில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த ரத்த வகைக்கு `பாம்பே ஓ’ வகை ரத்தம் எனப் பெயரிடப்பட்டது.

இந்த ரத்த வகை இந்தியாவில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கும், ஐரோப்பிய நாடுகளில் 1 லட்சம் பேரில் ஒருவருக்கும் இருக்கலாம். ஏ, பி, ஏபி, ஓ வகை பாசிட்டிவ், நெகட்டிவ் ரத்த வகையை சார்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், இந்த பாம்பே ஓ ரத்தவகையை சார்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடை யாளப்படுத்தப்படாமல் இருப்பதால் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் மருத்துவ உலகில் அபூர்வமானவர்களாகக் கருதப் படுகின்றனர்.

இந்த ரத்தக் கொடையாளர்கள் தமிழ கத்தில் வெறும் 30 பேர் மட்டுமே உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரத்த வகையை சார்ந்த ஒருவர் கண்டறியப்பட்டு தென்னி ந்தியாவிலே முதல்முறையாக அவருக்கு அதே வகை ரத்தம் செலுத்தி இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்றார்.

`பாம்பே ஓ’ ரத்த வகையை கண்டறிவது அவசியம்

பேராசிரியர் எம்.சிந்தா மேலும் கூறியது: சாதாரணமாக ஓ குருப் ரத்த வகையில் மட்டுமில்லால் அனைத்து வகையிலும் ஹெச் ஆன்டிஜென் இருக்கும். இந்த ஹெச் ஆன்டிஜென் இல்லாததையே பாம்பே ஓ ரத்த வகை எனச் சொல்கிறோம். இந்த வகை ரத்தத்தை சாதாரண ரத்தப் பரிசோதனையில் கண்டறிய முடியாது. ஆன்டி ஹெச் சீரா என்ற ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இதில்தான், பாம்பே ஓ வகை ரத்தமுடையவர்களை கண்டறிய முடியும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வகை பரிசோதனை செய்யப்படாததால் பாம்பே ஓ வகை ரத்தம் உடையவர்கள், ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் என்றே நினைத்துக் கொண்டிருப்பர். இவர்கள் மற்றவர்களுக்கு ரத்தம் தரும்போதும், மற்றவர்களிடம் இருந்து ரத்தம் பெறும்போதும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போதே இவர்களுக்கு பாம்பே ஓ வகை ரத்தம் இருப்பது கண்டறியப்படும். இவர்களுக்கு மாற்றுவகை ரத்தம் செலுத்தினால் இறந்துவிடுவர். அதனால், ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் உடையவர்கள் தன்னுடைய ரத்த வகை பாம்பே ஓ வகை ரத்தம்தானா என்பதை பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றார்.

'இப்படியொரு கொடூர சாவைப் பார்த்தது இல்லை!' -கலங்கடிக்கும் கலைச்செல்வி மரணம்

vikatan.com

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்துக் கொலைக்குக் காரணமான ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். குற்றவாளிகளை ரிமாண்ட் செய்வதில் காவல்துறை கால தாமதம் செய்ய, மதுரை எவிடென்ஸ் அமைப்பு தலையிட்டு ரிமாண்ட் செய்ய வைத்திருக்கிறது.

கலைச்செல்வியின் உறவினர்கள் நம்மிடம், " ராஜேந்திரனோட முதல் மனைவி மாரியம்மாள் உடம்பு சரியில்லாமல் செத்துப் போயிட்டாங்க. அவங்க அக்கா பாப்பம்மாள் வீட்டிலதான் கலைச்செல்வி வளர்ந்து வந்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கறதுன்னு அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது. சம்பவம் நடந்த அன்னைக்கு நைட் புள்ளை எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு. கொடூரமா கொன்னு போட்டுட்டானுங்க. குமார், ராஜான்னு இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும் இல்லாம, வெட்டியா இருப்பானுங்க. தலித் பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான் இவனுக வேலையே. அவங்க சமூகத்து பெரியவங்களும் இதைத் தட்டிக் கேட்க மாட்டாங்க" என வேதனைப்பட்டனர். கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ, " என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம்" எனக் கதறி அழுதார்.

எவிடென்ஸ் கதிர் நம்மிடம், " என் வாழ்நாளில் இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை. நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி. ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். சாலிய மங்கலத்தில் வேற்று சாதி ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தலித் மக்கள் உள்ளனர்.

ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். ' இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம். அரசாங்கத்துகிட்ட சொல்லி எங்களைக் காப்பாத்துங்கய்யா' என அந்த மக்கள் கதறுகின்றனர். இதைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்த இருக்கிறோம். ' பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக வந்து புகார் கொடுங்கள்' என அறிவுறுத்தியிருக்கிறோம். ' அரசாங்கம் எந்த இழப்பீடும் தர வேண்டாம். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டா போதும்' என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

சாலிய மங்கலத்தில் தலித் மக்கள் மீது நடக்கும் கொடுமைகள் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று படுகொலைகள் நடக்கும்போது மட்டுமே, அம்மக்கள் படும் துன்பங்கள் வெளி உலகிற்குத் தெரிய வருகின்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாகவே எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்" என்றார் கொந்தளிப்போடு.

தலித் பெண்ணின் மரணம் பற்றிய தகவல் வெளியாகி 48 மணி நேரங்கள் கடந்தும் அரசு நிர்வாகத்தில் எவ்வித சலனமும் இல்லை. ' சாலிய மங்கலத்தை அரசு சீரியஸாக கவனிக்க வேண்டும்' என எச்சரிக்கை குரல் எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்
.

உங்கள் புரொஃபஷனல் இமேஜை வளர்த்துக் கொள்ள 5 வழிகள்!

உங்கள் புரொஃபஷனல் இமேஜை வளர்த்துக் கொள்ள 5 வழிகள்!


ஒருவர் மிகவும் சந்தோஷமான மனநிலையோடு சேஷியலாக பழகக் கூடிய நபராகவும், மிகவும் தாமதமாக தனது வேலைகளை செய்பவராகவும் இருக்கலாம், இல்லையென்றால் தனிமையில் அதிகம் இருப்பவராகவோ, யாரோடும் சிரித்துப் பேசாத நபராகவோ இருக்கலாம். இதெல்லாம் தனிப் பட்ட வாழ்க்கையில் சரி, ஆனால் புரொஃபஷனல் இமேஜ் என்ற ஒரு விஷயம் உள்ளது. ஒரு நபர் அலுவலகத்திலும், வேலையிலும் இப்படி இருக்க வேண்டும் என்ற புரொஃபஷனல் விஷயங்களைக் கட்டாயம் தெரிந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1. உங்கள் வேலை என்ன?

உங்கள் வேலை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் நிர்வாகம் சில கூடுதல் விஷயங்களை எதிர்பார்க்கலாம். அதனைச் செய்ய நீங்கள் தகுதியானவர் என்பதால் தான் அந்த வேலை உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மையான வேலையையும், இலக்கையும் அடைந்துவிட்டுப் பின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முதன்மையான வேலை தான் உங்களது புரொஃபஷனலிஸத்தை பிரதிபலிக்கும். அதில் தெளிவாக இருங்கள். பின்னர் கூடுதல் வேலைகளைக் கவனியுங்கள்.

2. கற்றுக் கொள்ளுங்கள்!

உங்கள் வேலைக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன் என்று இருக்காதீர்கள். தினசரி கற்றுக் கொள்ளும் மனநிலையுடன் அனைத்து வேலைகளையும், நபர்களையும் அணுகுங்கள். நீங்கள் அணுகும் வேலையும், நபரும் உங்களைச் சோர்வடைய வைக்கும் விஷயமாக இருக்கக் கூடாது. அது உங்களுக்கு ஒரு புதிய விஷயத்தைக் கற்றுத்தரும் ஒன்றாக இருக்க வேண்டும். உங்களிடம் கேட்டால் சில விஷயங்களுக்குத் தீர்வு இருக்கும் என்ற நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

3. வேலை - நட்பு சமநிலை!

உங்களை ஒருவர் இவர் நமது நண்பர் தானே நாம் சில வேலைகளைச் செய்ய தவறினால் கோபம் கொள்ள மாட்டார். இவர் எப்போது சொன்னாலும் வேலைகளை முடித்துவிடுவார் என்பன போன்ற, உங்களை நிர்ணயிக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். வேலைகளில் எந்தப் பாகுபாடும் பார்க்காதீர்கள். வேலையைத் தரும் பாஸ் முதல், நீங்கள் வேலை வாங்கும் நபர் வரை அனைவரிடமும் நன்றாகப் பழகலாம். ஆனால் வேலையில் நியாயமாக இருங்கள். அதேபோல் எப்போது சொன்னாலும்(உங்கள் அலுவலக நேரம் தவிர) வேலையைச் செய்யும் நபராக இருக்காதீர்கள். அது உங்களை அப்படியேஒரே நிலையில் வைத்திருக்கும். அவசர உதவிகளை மட்டும் செய்யும். எப்போதும் அதிகம் தேவைப்படும் நபராக இருங்கள்.





4. செயல் திறனை அதிகரியுங்கள்!

உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையோ அல்லது பொறுப்போ அதில் செயல்திறனை அதிகரியுங்கள். உதாரணமாக உங்களிடம் 10 பேர் முடிக்கும் வேலையை 8 பேரை கொண்டு முடிக்க சொன்னால் தனிமனிதர்களின் பொறுப்பை உணர்ந்து குழுவாகச் செயல்திறனை கூட்டுங்கள். தானாக வேலையின் செயல்திறன் அதிகரிக்கும். உங்களது குறுகிய இலக்குகளால் பெரிய இலக்குகள் சாத்தியமாகும். உங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

5. உடல்மொழி!

நீங்கள் செய்யும் வேலை 80 சதவிகிதம் என்றால் மீதமுள்ள 20 சதவிகிதத்தை உங்கள் உடை, உடல்மொழி ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன. உங்கள் உடை புரொஃபஷனலாக இருப்பது அவசியம். சில நிறுவனங்களில் உடை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளப்படாது. ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களில் உடை கட்டுப்பாடு என்பது அந்த அளவுக்கு இல்லை. ஆனால் உடல் மொழி அனைத்து இடங்களிலும் கவனிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. நீங்கள் பேசும் போது சில வார்த்தைகளைத் தவிர்த்து, சில சைகைகளைச் செய்யாமல், சரியான அமரும், நிற்கும் முறைகளைப் பிரதிபலித்தால் நீங்கள் பர்ஃபெக்ட் புரொஃபஷனல் இமேஜை பெறுவீர்கள்.



- ச.ஸ்ரீராம்

வேலை செய்யும் இடத்தில் இந்த 6 வாக்கியங்களை பயன்படுத்தாதீர்கள்! #DailyMotivation

vikatan

நீங்கள் சிறப்பாக வேலை செய்பவராக இருக்கலாம். ஒழுக்கம் உட்பட அனைத்திலும் ‘அட.. நம்பர் ஒன்யா இவன்’ என்று பேர் வாங்கி இருக்கலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இந்த ஆறு வாக்கியங்கள், நிர்வாகத்துக்கு உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். அவை என்னென்ன தெரியுமா?

1. ‘இது முடியாது’ அல்லது ‘இதனைச் செய்வது கடினம்’

புதிதாக நிர்வாகம் ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆலோசனை கேட்கும் போது. செய்ய முடியாது அல்லது அதனை செயல்படுத்துவது கடினம் என்று கூறாதீர்கள். ஒருவேளை உண்மையிலேயே அந்தத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றால், அதிலுள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு அதனை உங்கள் அலுவலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, எப்படி செய்தால் அந்தத் திட்டம் வெற்றி பெறும் என யோசியுங்கள். ஆரம்பிக்கும் போதே முடியாது என்ற‌ வார்த்தையை பயன்படுத்துவதை நிர்வாகம் எப்போதும் விரும்பாது.

2. இது என் வேலை அல்ல

தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு துறையோ சில காரணங்களால் இயங்க முடியாமல் போகும் போது அந்த வேலையை உங்களிடம் அளித்தால், ‘இது என்னுடைய வேலை அல்ல; இதனை நான் செய்ய மாட்டேன்’ என்று கூறாதீர்கள். உங்களுக்கு அந்த வேலை தெரிந்ததால் - அல்லது அதை உங்களால் செய்ய முடியும் என்று நிர்வாகத்திற்கு உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால்தான் - அந்த வேலை உங்களுக்கு அளிக்கப்படுக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வாய்ப்புகளை வீணாக்காமல், சிறப்பாக முடிக்க பழகுங்கள்.



3. இது சிறப்பாக இல்லை!

ஓர் அணி, ஏதோ ஒரு வேலையைச் செய்து அதனை அறிக்கையாக அளிக்கும் போது, இந்த வேலை சிறப்பாக இல்லை. இதில் இந்த விஷயங்கள் இல்லை என்று கூறாதீர்கள். அதில் உள்ள குறைகளை அவர்களுக்கு பரிந்துரைகளாக அளிக்க முயற்சி செய்யுங்கள். இது அந்த அணிக்கு உத்வேகத்தை அளிப்பதுடன், உங்களது தலைமை பண்பையும் பிரதிபலிக்கும் விதமாக அமையும்.

4. இல்லை என்று துவங்காதீர்கள்!

நீங்கள் பங்கேற்கும் முக்கியமான மீட்டிங்குகளையோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களையோ, இல்லை என்ற வார்த்தையோடு ஆரம்பிக்காதீர்கள். உதாரணமாக ஒருவர் ஒரு செயலை எப்படி செய்யலாம் என்று கேட்கும் போது ''இல்லை, இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்காமல், இந்தச் செயலை இப்படிச் செய்யலாமே’ என வழங்குங்கள். அவருக்கும் உடனடி வெறுப்பு வராமல் இருக்கும். உங்கள் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.



5. நாம் இப்படி செய்வதில்லை

அலுவலகத்தில் புதிய முயற்சியை ஒருவர் செய்கிறார் என்றால், அதனை என்ன என்று கவனியுங்கள். அது புதிதாக உள்ளது என்பதற்காக ''இது போன்ற விஷயங்களை நாம் செய்வதில்லை'' என்று கூறி புதுமைகளை மறுத்துவிடாதீர்கள். எல்லா விஷயங்களுமே புதிதாக யாரோ ஒருவர் உருவாக்கிய விஷயம் தான் எனபதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

6. அவர் சரியில்லை, அவர் சோம்பேறி, நிறுவனத்தைப் பிடிக்கவில்லை!

ஒரு நபரை ‘அவர் சரியில்லை’ என்றோ அல்லது ‘அவர் சோம்பேறித்தனமாக இருக்கிறார்’ என்றோ விமர்சிக்காதீர்கள் தனிப்பட்ட மனிதர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. உயரதிகாரியாக இருந்தாலும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வேலையை மட்டுமே விமர்சிக்க முடியும். அதேபோல் நிறுவனத்தைப் பிடிக்கவில்லை என்று விமர்சித்துவிட்டு பணிபுரியாதீர்கள். என்னதான் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தாலும், இவர் விருப்பமில்லாமல் பணிபுரிகிறார் என்ற மனநிலையையே அது உருவாக்கும்.

ச.ஸ்ரீராம்

NEWS TODAY 23.12.2025