Monday, August 15, 2016

"மதிப்பெண் பெரிதென நினைக்கும் பெற்றோர் அமைதியை இழக்கின்றனர்'

மதிப்பெண்ணை பெரிதாக நினைக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் குடும்ப அமைதியை இழக்கும் நிலை ஏற்படுகிறது என்றார் புதுகை மனநல மைய ஒருங்கிணைப்பாளர் கே. மோகன்ராஜ்.
புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டை ராமசாமி தெய்வானையம்மாள் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளியும், புதுக்கோட்டை மனநல மையம் இணைந்து அண்மையில் நடத்திய விழிப்புணர்வு முகாமில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
இன்றைய சூழலில் தங்கள் குழந்தைகள் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதுமானது என பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர்.
இதனால், அன்பு, அறம், அமைதி என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல், பிடிவாதமும், தன்னலமுமே வாழ்வின் முக்கிய இலக்குகளாகக் கொள்ளும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
அவ்வாறு வளரும் குழந்தைகள், அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு ஏமாற்றங்களைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை கொண்டவர்களாக உள்ளனர். சிந்தனை மழுங்கி 12 வயதிலேயே போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி, நாளடைவில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
சில நேரங்களில் பாலியல் வன்முறையாளராகவும், சிலர் மனநோயாளிகளாகவும் மாறுகின்றனர். பலர் கல்வியில் பின்தங்கி படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
 இவர்களால் குடும்பம் அமைதியை இழந்து, சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பல பெற்றோர் மனமுடைந்து விடுகின்றனர். சிலர் மனநோயாளிகளாக மாறி, விபத்துக்களில் சிக்குகின்றனர்.
இந்த நிலை மாறவேண்டுமெனில், நல்லவர்களிடம் நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். சினம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அன்பாகப் பேச வேண்டும்.
எதிலும் வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையை ஆக்கப்பூர்வமானதாக மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற வேண்டும். தனியாக இருப்பதை விட்டு, நல்ல நண்பர்களின் துணையுடன் நல்ல விஷயங்களைக் கலந்து பேச வேண்டும். நம்முடைய எதிர்காலம் நம் கைகளில்தான் உள்ளது என்றார்.
முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை மோகன்ராஜ் வழங்கினார். தலைமையாசிரியர் வி.சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் பி. ஜெயமதி வரவேற்றார். ஆசிரியர் பி. ரகு நன்றி கூறினார்.

கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள் By - பா.ராஜா

நாட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இது மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் சவாலாக உள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் பிரச்னை தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் (ஐ.எஸ்.ஐ.) தேசிய புலனாய்வு ஏஜென்சியுடன் (என்.ஐ.ஏ.) இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், நாட்டில் ரூ.400 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.400 கோடி கள்ள நோட்டுப் புழக்கமானது, கட்டுப்படுத்தப்படாமல், கடந்த 4 ஆண்டுகளாக நிலையாக இருந்து வருவதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். கள்ள ரூபாய் நோட்டுப் பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன் கையில் இருக்கும் ரூபாய் நோட்டு நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்பதைக் கண்டறிய முடியாமல் கலங்கி நிற்கின்றார். அதாவது, 10 லட்சம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்குமானால், அவற்றில் 250 நோட்டுகள் கள்ள ரூபாய் நோட்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வப்போது, சந்தைகளில், உணவகங்களில், பேருந்துகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள வளாகங்கள் ஆகிய இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றும்போது பலர் கைது செய்யப்படுகின்றனர். கள்ள கரன்சி நோட்டை புழக்கத்தில் விடுபவர்கள், குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். நாட்டில் பல நகரங்களில் காவல் துறையினரால் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளில் உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் பறிமுதல் செய்யப்பட்டவை மொத்தத்தில் 43% எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய அனைத்து வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், கள்ள கரன்சி புழக்கத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை. வங்கிகளின் ஏ.டி.எம்.களிலேயே கள்ள ரூபாய் நோட்டுகள் உள்ளன. மேலும், சில தனியார் வங்கிகள் சுமார் 80% அளவிலான கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிந்துள்ளன. பொதுவாக, 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளே புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றை அச்சிட்டால்தான் லாபம் எனக் கூறப்படுகிறது. இவற்றில் 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் பிடிபடுகின்றன. மொத்த கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் 1,000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 50% எனக் கண்டறியப்பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில், பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. இவை நேரடியாக இந்தியாவுக்கு வராமல், வங்கதேசம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது. அதைத் தடுக்க, இந்திய-வங்கதேச அரசுகள் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளன.
கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தைத் தடுக்க, கரன்சி டிசைனில் சில மாற்றங்களைச் செய்யலாம், வரிசை எண்களில் மாற்றங்களைச் செய்யலாம் என இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. தற்போதைய வடிவிலான ரூபாய் நோட்டுகள் அப்படியே தொடர்ந்தால், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது.
சராசரியாக ஆண்டுக்கு ரூ.70 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பகுதியே பறிமுதல் செய்யப்படுகின்றன என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புழக்கம் குறைந்துள்ளது. இதை முனைப்புடன் செயல்படுத்தினால், ஆண்டுக்கு 20% என்ற அளவில் புழக்கத்தைக் குறைக்கலாம் என்று இந்திய புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது.
2013-14ஆம் நிதியாண்டில், தில்லியில் 2,15,092 கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10,35,86,240. 2015-16ஆம் நிதியாண்டில் இது ரூ.9,31,13,960 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் 2013-14ஆம் நிதியாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3,78,15,110. இது, 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.2,19,50,450 கோடி எனத் தெரியவந்துள்ளது.
இந் நிலையில், 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் சற்று குறைந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டில் 6.32 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.30.43 கோடியாகும். அதற்கு பின் ஓராண்டில் இதன் புழக்கம் 10% வரை குறைந்துள்ளது.
2015-ஆம் ஆண்டில் பணம் கடத்தல் மற்றும் கள்ள ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக 788 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 816 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு கள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகள் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை கிடைக்கிறது என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. அதாவது, 100 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று புழக்கத்துக்கு வந்தால், ஐ.எஸ்.ஐ.க்கு ரூ.40 வரை கிடைக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிலும் "ஒரிஜினல்' இல்லை என்பது இதன்மூலம் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

Saturday, August 13, 2016

என்.மகேஷ்குமார்....திருமலை திருப்பதி லட்டு உருவானது எப்படி? - இனிப்பான அரிய தகவல்கள்



திருமலை திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு பிரசாத விநியோகம் தற்போது 76-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. ஏழுமலையானின் அதிவிருப்ப பிரசாதமான இந்த லட்டு குறித்த சில இனிய தகவல்கள்.

பல்லவர்கள் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக் கும் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதாக கல் வெட்டு தகவல்கள் தெரிவிக் கின்றன. இதேபோல், 2-ம் தேவராயுலு அரசர் காலத்தி லும் பல வகையான பிரசாதங் கள் பக்தர்களுக்காக விநி யோகிக்கப்பட்டன.

இக்காலத்தில் அமைச்சராக இருந்த சேகர மல்லண்ணா என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கென்றே தனியாக பல தானங்களை செய்துள்ளார்.

பல மைல் தூரத்தில் இருந்து திருமலைக்கு தரிசனத் திற்காக வரும் பக்தர்களுக்கு அன்னதானத்துக்கு பதிலாக பிரசாதங்களே விநியோகிக் கப்பட்டன. இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்குபிடிக்காமல் விரைவில் கெட்டு விடும் தன்மையில் இருந்தன.

இதனால் வடை பிரசாதத்திற்கு அதிக மவுசு இருந்தது. இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. அதன் பிறகே இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது.

லட்டு பிரசாதத்தின் அளவு

லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என அழைக்கின்றனர். லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ என்கின்றனர்.

இதன்மூலம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம். ஒரு படிக்கு பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ உபயோகப்படுத்தப்படுகிறது.

அதாவது, 5,100 லட்டு தயாரிக்க 852கிலோ எடையுள்ள பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. லட்டு பிரசாதங்கள் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என 3 வகையாக தயாராகின்றன. இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டது. ரூ. 100க்கு இந்த லட்டுகள் கிடைக்கின்றன. தவிர கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, புரோக்தம் லட்டு. இது 175கிராம் எடை கொண்டது. இந்த வகை லட்டுகள் தான் ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது.

தாய் ருசி பார்த்த பிறகே

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக் கும் இடம் உள்ளது. இங்குதான் அனைத்து பிரசாதங்களும் தயாரிக்கப்படுகிறது. இவை தயாரிக்கப்பட்ட பின்னர், ஏழு மலையானின் தாயாரான வகுல மாதாவிற்கு முதலில் படைக்கப் படுகிறது. அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

1940-களில் விநியோகம் செய்யப்பட்ட லட்டு பிரசாதங்கள் கல்யாண உற்சவ லட்டு போன்று பெரிய அளவில் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவை 8 அணாவிற்கு விற்கப்பட்டன. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்கிறது.

விலை உயர்ந்தாலும் தரம் உயராமல் குறைந்து கொண்டு வருவது பக்தர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. நவீன கால எரிவாயு அடுப்பில் பிரசாதங்கள் தயாரிக்கப்படுவதே ருசியும், தரமும் குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

எது எப்படி இருப்பினும், லட்டு பிரசாதத்துக்கு இருக்கும் மவுசு இன்று வரையிலும் குறையவில்லை. இதன் காரண மாகவே கடந்த 2009-ல் திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப் பட்டது குறிப்பிடத்தக்கது.

சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்: ரயில் சென்னை வந்த பிறகே ரூ.5.75 கோடி கொள்ளை?

பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஆய்வு நடத்தும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் | உள்படம்: கொள்ளையடிக்க வசதியாக ஆள் நுழையும் அளவுக்கு ரயில் பெட்டியின் மேற்கூரையில் வெட்டப்பட்ட பகுதி.

ஓடும் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை நடந்த வழக்கு சிபி சிஐடி போலீஸ் வசம் ஒப்படைக் கப்பட்டதையடுத்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரயில் சென்னை வந்த பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந் திருக்கலாம் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்த பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றினர். இப்படி வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ரூ.342 கோடியே 75 லட்சம் சேலம் விரைவு ரயிலில் தனி சரக்குப் பெட்டியில் ஏற்றப்பட்டு அந்த ரயில் கடந்த 8-ம் தேதி சேலத்திலிருந்து புறப்பட்டு 9-ம் தேதி அதிகாலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர், பணம் இருந்த சரக்கு பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு எழும்பூரில் உள்ள பார்சல் சர்வீஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

பின்னர், சென்னை ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் ரயில் பெட்டியின் சீலிடப்பட்ட பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு தமிழக சிபிசிஐடி வசம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டது. நேற்று காலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி கரன்சின்கா எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு கொள்ளை நடந்த ரயில் பெட்டியை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்து சேத்துப் பட்டில் உள்ள பணிமனைக்கு சக அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண் டார். அங்கு பணியில் இருந்த பணிமனை ஊழியர்களிடமும் கொள்ளை எப்படி நடந்திருக்கும் எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊழியர்கள், “ரயில் பெட்டியை பற்றி நன்றாக தெரிந்த வர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்” என்று தெரிவித்தனர்.

பின்னர், அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே போலீஸார் இதுவரை சேகரித்து வைத்திருந்த அனைத்து தகவல் களையும் கரன்சின்கா பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக ரயில் பாதுகாப்பு பணிக்காக சென்ற ஆயுதப் பிரிவு உதவி கமிஷனர் நாகராஜன் உள்ளிட்ட 9 பேரின் பெயர், முகவரி, செல்போன் எண் அடங்கிய பட்டியலை பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சேலம் மற்றும் சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெயர் பட்டியல், அவர்களின் முகவரியை பெற்றுக் கொண்டார்.

கொள்ளை நடந்தது எங்கே?

பணம் கொண்டு வரப்பட்ட ரயில் சேலத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழை யும்போது அங்கிருந்த கண்கா ணிப்பு கேமராவில் பணம் வைக் கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளை எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே சரக்கு ரயில் சென்னைக்கு கொண்டு வரப்பபட்ட பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரிலும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இது கு றித்து கூறியதாவது:

ரயில் கொள்ளை குறித்து முதலில் விசாரணையை தொடங் கியது ரயில்வே பாதுகாப்பு படையினர்தான். அவர்கள் முழுக்க முழுக்க ரயிலில் பாதுகாப்பு பணியை மட்டுமே செய்வார்கள். எனவே அவர்களிடம் புலனறியும் தன்மை அவ்வளவாக இருக்காது.

இதனால், இந்த வழக்கு அவர்களிடம் இருந்து எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு மாற்றப் பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சுவாதி என்ற ஐ.டி. பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கையும் அவர்கள்தான் முதலில் விசாரித்தார்கள். ஆனால், அவர் களால் துரிதமாக செயல்பட முடியவில்லை. காரணம் பாது காப்பு பணி உள்ளிட்ட பல்வேறு இதர பணிகள் அவர்களுக்கு இருந்தது. மேலும், செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்கும் கருவி உள்ளிட்ட முக்கியமான கருவிகள் அவர் களிடம் இல்லை. எனவே, இந்த கொள்ளை வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்தால் கொள்ளையர்களை விரைவாக நெருங்க முடியாது என நினைத்த டிஜிபி அசோக்குமார் உடனடியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாருக்கு பாதுகாப்பு பணி போன்ற எந்த பணியும் கிடையாது. அவர்களிடம் சிறப்பாக புலன் விசாரணை செய்யக் கூடிய அதிகாரிகளும் உள்ளனர். மேலும் சைபர் கிரைம் பிரிவும் தனியாக உள்ளதால் தான் வழக்கு உடனடியாக மாற்றப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்தே வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம்!



அரவிந்தன் சிவகுமார்

கல்விக் கடன் வசூலிக்க வந்த கார்ப்பரேட் ஈட்டிக்காரர்களின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றுக்குத் தூக்கில் தொங்கி பதில் சொன்ன பொறியியல் பட்டதாரி மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லெனின்...

பி.எஸ்.ஜி மருத்துவமனை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்ட‌ மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவி லட்சுமி....

ஃபேஸ்புக்கில் தன்னை ஆபாசமாய்ச் சித்தரித்ததைத் தடுக்க முயன்று, காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியா...

வாழத் தொடங்கும் முன்னரே மரணத்தின் வாசலைத் தட்டிய இளம்வயதினரின் சமீபத்திய‌ தற்கொலை நிகழ்வுகள், அதிவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர நகரத்தை உலுக்கிச் சற்றே கவனத்தைத் திசைத் திருப்புகிற நிகழ்வாய் அமைந்திருக்கின்றன‌.

2014-ல் பல்கலைகழக மானியக் குழு உதவியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (96 கல்லூரிகள், 4646 மாணவர்கள்) 12.20 சதவீத மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், 15.45 சதவீதத்தினர் தங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருப்பதாகக் கூறியதும் பதிவாகியுள்ளது.

இவ்வாறான‌ தற்கொலைகள் நடக்கும்போதெல்லாம், பிரச்சினைகளைக் கையாளும் திறன் இல்லாமல் போவது, அதீத மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று பூசி மெழுகப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா?

உயிர்- உள்ளம்- சமூகம் ஆகிய மூன்று கோணங்களிலிருந்து நாம் ஆய்வு செய்தால் மட்டுமே தற்கொலைகள் பற்றிய சரியான புரிதலும், அதைத் தடுப்பதற்குச் சரியான‌ வழிமுறையும் கிடைக்கும்.

தற்கொலை எண்ணம் ஏன்?

நெருக்கடிகளின் தாக்கத்தினால் தற்கொலைக்கு முயற்சிப்ப‌வருக்கு ஒருவித ‘உளவியல் வலி' ஏற்படுகிறது. அந்த வலி மேலோங்கி அதைக் குறைப்பதற்கான வழிதேடும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவார்கள். அப்போது அவர்களின் சிந்தனை முறையில் பல மாற்றங்கள் நிகழும்.

அதாவது, ஒரு பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வுகள் இல்லவே இல்லை என்கிற எண்ணம் தோன்றுவது, இம்மியளவுகூட பிரச்சினை குறையாது என்கிற பயம் உள்ளிட்டவை எனக்குள்ள பிரச்சினைகள் இன்றே, இப்போதே முழுமையாய்த் தீர வேண்டும் அல்லது நான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவை நோக்கி ஒருவரைத் தள்ளுகின்றன.

சூழலே காரணம்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவை தனிநபர் மனநிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றன‌. பள்ளி, கல்லூரிகளில் தனிநபர்த்தன்மை அதாவது 'இன்டிவிஜுவலிஸம்' முன்னிறுத்தப்படுகிறது. தவிர ‘டீம் ஸ்பிரிட்' எனும் குணம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘நீ ஜெயிக்கப் பிறந்தவன்/ள்' என்கிற மந்திரம் மட்டும்தான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

பட்டம் பெற்று வேலை தேடும் படலத்தில், அந்த வறட்டுத் தன்னம்பிக்கை மந்திரங்கள் மீண்டும் மீண்டும் மனதில் ஒலிக்கும். இந்த நிலையில்,நெருக்கடிகள் வ‌ரும்போது, பிரச்சினைக்கு வெளியிலிருந்து அவற்றை அணுகாமல், பிரச்சினையின் முழுத் தன்மையையும் புரிந்துகொள்ளாமல், பிரச்சினைக்குள்ளிருந்தே அணுகுவதால், ‘உளவியல் வலி' ஏற்படும். அது தற்கொலைக்கு வழிவகுக்கும்.

ஆக, தற்கொலைகளுக்குக் காரணம் மூளையில் ஏற்படும் வேதி மாற்றங்கள் மட்டுமே அல்ல. நாம் சார்ந்திருக்கும் சமூகச் சூழலும் மிக முக்கியக் காரணம்! இதைத்தான் ‘இயற்கைக்கு முரணாகத் தற்கொலைகள் தோற்றமளித்தாலும், தற்கொலைகளை உற்பத்தி செய்வது சமூகத்தின் இயற்கை குணமாகவுள்ளது' என்கிறார் மார்க்ஸ்.

எப்படி மீள்வது?

தினக் கூலிகளாய், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்படி அந்தப் பூக்காரம்மாவால் சிரிக்க முடிகிறது? எப்படி இடுப்பொடிய‌ வீட்டு வேலை செய்யும் அந்தப் பெண்ணால் அமைதியாகப் பேச முடிகிறது? மாற்றுத் திறனாளிகளால் எப்படி நம்பிக்கையுடன் உலவ முடிகிறது? அவர்கள் எப்படி நெருக்கடிகளைக் கையாளுகிறார்கள்? எந்தப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முனைவர் பட்டம் பெற்றார்கள்?

இன்றைய பொழுது என் கையில், இன்றைய சூழலில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். அதை மகிழ்ச்சியோடும் உறுதியோடும் செய்யலாம். தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம். இதுவே நமது வாழ்க்கைத் தத்துவமாக இருக்கட்டும்.

‘நீ நூலகத்துக்கு போ!

நான் தெருவில் இறங்கப் போகிறேன்.

வாழ்க்கையை நான்

வாழ்க்கையிலிருந்தே கற்றுக்கொண்டேன்'

என்ற பாப்லோ நெருடாவின்

கவிதை வரிகள்தான், மருத்துவர்களின் ‘ப்ரிஸ்கிரிப்ஷனை' விட‌ இன்று முக்கியத் தேவையாய் இருக்கின்றன‌.



கட்டுரையாளர், கீழ்ப்பாக்கம் அரசு மனநலக்காப்பகத்தில் மனநல மருத்துவர்.

தொடர்புக்கு: spartacus1475@gmail.com

பஞ்சு அருணாசலம்: துணிச்சலான பரிசோதனைகளின் மன்னன்



சுமார் அறுபதாண்டுகளாகத் தமிழ்த் திரையுலகுக்காக உழைத்த பஞ்சுஅருணாசலம், தன் சிந்தனையை நிறுத்திக்கொண்டார். தம் கடைசி மூச்சுவரை அவர் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.

அவர் இதுவரை 99 படங்களுக்குக் கதை வசனகர்த்தாகப் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூறாவது படத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டுத் தயாராக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

கண்ணதாசனுக்கு உதவியாளராகத் தொடங்கிய அவருடைய உழைப்பு, கவுதம் கார்த்திக் வரை தொடர்ந்திருக்கிறது. கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக 21 ஆண்டுகளுக்குப் பின்னால் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதிவிட்டுத்தான் மூச்சை நிறுத்தியிருக்கிறார்.

அவர் திரைத் துறைக்குள் வந்ததும் ஏற்கெனவே யாரோ போட்டு வைத்த பாதையில் பாதுகாப்பாகப் பயணித்துவிடவில்லை. எல்லோரும் நினைக்கக்கூடப் பயந்து ஒதுங்குகிற செயல்களைத் துணிச்சலுடன் செய்து வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறார்.

இளையராஜாவை அறிமுகம் செய்தார். அது சாதாரணமாக நடந்துவிடவில்லை. அப்போது உச்சத்தில் இருக்கும் எம்எஸ்.விஸ்வநாதனையே இசையமைப்பாளராகப் போடலாம் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களே வற்புறுத்தியபோதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார் பஞ்சுஅருணாசலம்.

பரிசோதனை முயற்சிகள்

அவர் கதை வசனம் எழுதிய படங்களில் அதுவரை யாரும் செய்யாத பரிசோதனை முயற்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ரஜினிக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அந்தப் படத்துக்குத் திரைக்கதை வனம் எழுதிய பஞ்சு அருணாசலம், அதுவரை நல்லவராகவே நடித்துவந்த சிவகுமாரைக் கெட்டவராகவும் அதுவரை கெட்டவராக நடித்துவந்த ரஜினியை நல்லவராகவும் எழுதியிருக்கிறார். படக் குழுவினர் எல்லோரும் பயந்தபோதும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி வேடங்களை மாற்றாமல் அப்படியே வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒரே நேரத்தில் கமலை வைத்து ஒரு படம், ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் சுவையான நிகழ்வாகத் திரையுலகில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்த நேரத்தில் இருவரையும் தனித்தனியாக நடிக்கவைத்துப் படமெடுக்க அவர் தயாரானார்.

அப்போதும், அதுவரை வில்லனாகவும் ஸ்டைல் மன்னனாகவும் நடித்து வந்த ரஜினியை குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நல்லவனாக நடிக்க வைத்திருக்கிறார். 25 வயது முதல் 60 வயது வரையிலான பலவிதத் தோற்றங்களில் ரஜினி நடித்தார். இம்மாதிரியான புதுவிதத் தோற்றத்தில் ரஜினியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் படம் வெளியாகும்வரை எல்லோருக்குமே இருந்ததாம். ரஜினிக்கும் அந்தச் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர் திருப்தியில்லாமல் இருந்திருக்கிறார். அப்போது பஞ்சு அருணாசலம், ஐந்தாயிரம் அடிவரை படத்தை எடுத்து அவருக்குப் போட்டுக் காட்டுவோம், அப்போதும் அவருக்குத் திருப்தியில்லை யென்றால் படத்தை நிறுத்திவிடலாம் என்று சொல்லி எடுத்தாராம்.

எடுத்தவரை போட்டுப் பார்த்து ரஜினி திருப்தியடைந்தாராம். அந்தப் படம் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. அப்படம் பெரிய வெற்றி பெற்றதுடன், அந்த ஆண்டின் சிறந்த படமாக சினிமா ரசிகர் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிக்கும் சிறந்த இயக்குநருக்கான விருதை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் அந்தப் படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மாறுபட்ட திரைக்கதைகள்

1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியான இரண்டு படங்களுக்கும் பஞ்சுதான் கதை வசனகர்த்தா. ஒன்று ‘எங்கேயோ கேட்ட குரல்’, இன்னொன்று ‘சகலகலா வல்லவன்’. கொஞ்சம் யோசித்தாலே ரஜினி நடிக்க வேண்டிய கதையில் கமல் நடித்திருக்கிறார் என்பதும் கமல் நடிக்க வேண்டிய கதையில் ரஜினி நடித்திருக்கிறர் என்பதும் புரிந்துவிடும்.

‘சகலகலா வல்லவன்’ படமாகும் நேரத்தில் இந்தக் கதை எனக்கு செட்டாகுமா என்று கமல் மிகவும் பயந்துகொண்டேயிருந்தார் என்று சொல்லப்படுகிறது. ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘சிம்லா ஸ்பெஷல்’ மாதிரியான படங்களிலேயே தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் கமர்ஷியலாக உங்களுக்குப் பின்னடைவு ஏற்படும்; அவ்வப்போது இப்படிப்பட்ட படங்களிலும் நடிப்பதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லி நடிக்கவைத்திருக்கிறார். அதே நேரம் கமலுக்குத் திருப்தி ஏற்பட வேண்டும் என்பதோடு அவருடைய நடனத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்ததும் அவர் நடனக்காரராகிவிடுகிறார் என்று மையக்கதைக்குப் பாதிப்பில்லாமல் திரைக்கதையை மாற்றினாராம் பஞ்சு. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘விஷ் யூ ஹேப்பி நியூஇயர்’ பாடல் இன்றுவரை பிரபலமாகவே இருக்கிறது. சில்க் ஸ்மிதாவுடனான ‘நேத்து ராத்திரி யம்ம்மா’ பாடலும் கமல் பாணி என்பதற்காகவே வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ‘போக்கிரி ராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘ரங்கா’ போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவைத்திருந்தார். இப்படி யாரும் எதிர்பாராத விஷயங்களைப் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்து சாதனைகளாக்கியிருக்கிறார்.

‘பாபா’ படத்துக்கு முன்புவரை கிட்டத்தட்ட ரஜினியின் எல்லாப் படங்களிலும் பஞ்சு அருணாசலத்தின் பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கிறது. இயக்குநர் யாராக இருந்தாலும் திரைக்கதை எப்படியிருந்தாலும் அதற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் குறைந்தது நான்கைந்து இடங்களில் ரஜினி கைதட்டல் வாங்குகிற மாதிரி செய்துவிடுவாராம் பஞ்சு.

ஓய்வற்ற பயணம்

குள்ள மனிதராகக் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சுமார் நான்காயிரம் அடிவரை படமும் எடுக்கப்பட்டுவிட்டதாம். ஆனாலும் கமலுக்குத் திருப்தியில்லையாம். அதன் பின் பஞ்சு அருணாசலத்தை அணுகியிருக்கிறார். அவர் படத்துக்குள் வந்ததும் அதுவரை எடுத்ததை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, மறுபடியும் முதலிலிருந்து தொடங்கச் சொல்லியிருக்கிறார். அவருடைய திரைக்கதை கமலுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவரும் எடுத்ததை அப்படியே விட்டுவிட்டு முதலிலிலிருந்து எடுத்தாராம்.

கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருந்த காரணத்தாலேயே கண்ணதாசன் அவரைச் சேர்த்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதோடு மடைதிறந்த வெள்ளம்போல கண்ணதாசனின் உதடுகளிலிருந்து ஒருமுறை மட்டுமே உதிரும் சொற்களை அட்சரம் பிசகாமல் பிடித்துக்கொள்ளும் வேகமும் பஞ்சு அருணாசலத்துக்கு இருந்த காரணத்தால் அவரோடு பல ஆண்டுகள் பயணிக்க முடிந்திருக்கிறது. கையெழுத்து மட்டுமின்றி அவர் எழுதிய எழுத்துகளும் நன்றாக இருந்ததால்தான் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் அவருடைய பேனா ஓய்வின்றிப் பணியாற்றியிருக்கிறது.

சிறந்த கலைஞர்களிடம் உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டால், நான் என்னுடைய கலைப் பணியில் இருக்கும்போதே மரணிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

இவருக்கு அப்படியே நடந்திருக்கிறது. ஒரு பக்கம் இப்போது தயாராகிக்கொண்டிருக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதிக்கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் வார இதழ் ஒன்றுக்குத் தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடராக எழுதிக்கொடுத்துக்கொண்டு, மற்றுமொரு பக்கம் புதிய திரைக்கதையை எழுதிவிட்டு மரித்திருக்கிறார்.



கதை எழுதியவரின் மனமும் புண்படாமல் இயக்குநரின் தன்முனைப்பையும் சீண்டிவிடாமல் கதாநாயகர்களுக்குக் கைதட்டல் பெற்றுத் தந்துகொண்டிருந்த அந்தக் கலைஞனின் கைகள் இப்போது ஓய்வெடுக்கின்றன. தமிழ்கூறு நல்லுலகெங்கும் அவருடைய சிறப்புகளை நூற்றுக்கணக்கான கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.

குடும்ப உறுப்பினர்களே அவரை வற்புறுத்திய போதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார்.

தங்க நகைக் கடன்... சுலபமாக அடைக்கும் மூன்று வழிகள்!

ஆத்திர அவசரத்துக்கு இன்றைக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது நகைக் கடன் தான். திடீரென்று அப்பாவுக்கு சுகமில்லை, பையன் காலேஜ் பீஸ் இந்த மாசமே கட்டணுமாம்; பஸ்ல போய் மாளலை; உடனே ஒரு டுவீலர் வாங்கணும்... இப்படி வரும் செலவுகளுக்கு யாரிடமும் கை ஏந்தாமல், நமக்கே நமக்கென இருக்கும் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்று, பயன் அடைவதுதான் தங்க நகைக் கடன். நகர்ப்புறத்து மத்திய தர வர்க்க மனிதர்களுக்கு மட்டுமல்ல, கிராமப்புறங்களில் வாழும் பலருக்கும் நகைக் கடன் ஒன்றுதான் உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. நம்மவர்கள் அதிக அளவில் தங்கம் மீது மோகம் கொள்வதற்கும் இது ஒரு முக்கியமான காரணம்.

மற்ற கடன்களுக்கும் இந்த தங்க நகைக் கடனுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், மற்ற கடன்களை இ.எம்.ஐ. மூலம் ஒவ்வொரு மாதமும் கட்டலாம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது, இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது, கடன் மூலம் வீடு வாங்கும்போது இ.எம்.ஐ. என்று சொல்லப்படுகிற மாதத் தவணை மூலம் கட்டி, நாம் வாங்கிய பொருளை நமக்கானதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஆனால், தங்கக் கடன் இதிலிருந்து மாறுபட்டது. அதாவது, தங்கக் கடன் தொகையும் அந்த காலத்துக்கு கொடுக்கும் வட்டியையும் (அசலுக்கும் வட்டிக்கும் சேர்த்து முழு தொகையினை செலுத்திய பின்னரே) சேர்த்து கட்டியபின்னர்தான் தங்கக் கடனிலிருந்து மீள முடியும் அல்லது வருடத்துக்கோ அல்லது ஆறு மாதத்துக்கோ ஒருமுறையோ கடனுக்கு செலுத்தும் வட்டியை மட்டும் செலுத்தி தங்கக் கடனை புதுப்பிக்க முடியும். சில வங்கிகள், கடனையும் வட்டியையும் முழுமையாக கட்டிய பிறகு மறு அடகு வைக்க அனுமதிக்கிறது.

இல்லையெனில் தங்கக் கடன் காலம் முடிந்து மூன்று அல்லது ஆறு மாதம் கழித்து தங்கம் ஏலத்துக்கு சென்றுவிடும். பிறகு ஏலத்துக்கு சென்ற தங்க நகையை ஏல செலவுகளையும் மற்ற இதர செலவுகளையும் சேர்த்து அதற்குண்டான வட்டியையும் செலுத்தித்தான் தங்கக் கடனிலிருந்து மீள முடியும்.

இதனை ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். நம்மிடம் உள்ள ஆபரண தங்க நகையின் மதிப்பு - ரூ. 1,25,000 என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தின் மதிப்பிற்கேற்ப 80% கடன் கிடைத்தால் ரூ.1,00,000. கடனுக்கான வட்டி விகிதம் - 10% எனில், ஓராண்டில் தங்க நகைக் கடனுக்கு செலுத்தும் வட்டி மட்டும் ரூ.10,000. ஆக மொத்தம் அசலும் வட்டியும் சேர்த்து வருட முடிவில் செலுத்தும் மொத்த தொகை ரூ.1,10,000.

இந்தப் பெரும் தொகையை ஒருவர் மொத்தமாக செலுத்தி அடைப்பது கடினம்தான். இதையே கடன் தரும் வங்கிகள் மாதத் தவணையாக செலுத்த சொல்லும்பட்சத்தில், அவரால் எளிதாக கடனைத் திரும்பக் கட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. எனவே, தங்க நகைக் கடனை எளிதாக திரும்ப செலுத்துவதற்கு என்ன வழி?

மூன்று வழிகள் உள்ளன. முதலாம் வழி, உங்களால் 1,10,000 தங்க நகைக் கடனை 12 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டும் எனில், மாதம் 1,10,000/12= ரூ.9,167 சேமிக்க வேண்டும். இதுவே வங்கி சேமிப்புக் கணக்கில், 4% வட்டி விகிதத்தில் வளரும் திட்டத்தில் மாதம் ரூ.8,999 வீதம் 12 மாதங்களுக்கு சேமிக்கலாம். ஒருவருட கால வங்கி சேமிப்பில் 6.5% என்ற வட்டி விகிதத்தில் ரூ.8896 சேமிக்க வேண்டும். ஆர்டி அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் 8% வருமானத்தில் ரூ.8.835 முதலீடு செய்து வரலாம். இந்த முதிர்வு தொகையை தங்க நகைக் கடனை அடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து சேமித்து வந்தால், தங்க நகைக் கடனை சிரமம் இல்லாமல் சுலபமாக அடைக்கலாம்.

மாதம் சுமார் ரூபாய் 9,000 சேமிப்பது எங்களால் முடியாது என்று நினைப்பவர்கள் இரண்டாவதுவழியைப் பின்பற்றலாம். அதாவது, நகைக் கடனுக்கான வருட வட்டியை மாத வட்டியாக பிரித்து, அதற்கு மேல் எவ்வளவு கூடுதலாக சேமிக்க முடியுமோ சேமித்து, வருட முடிவில், தாங்கள் சேமித்த தொகையை எடுத்து நகைக் கடனுக்கான வட்டியை செலுத்தி கடன் சுமையை குறைக்கலாம். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

தங்க நகைக் கடனாக வாங்கியது ரூ.1,10,000. ஒருவரால் மாதமொன்றுக்கு கட்ட நினைக்கும் தொகை - ரூ.5,000 என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்துக்கு வட்டி ரூ.10,000 எனில், மாதமொன்றுக்கு வட்டியாக சேமிக்க வேண்டிய தொகை ரூ.833. இந்த வட்டித் தொகையுடன் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சேமிக்கும் தொகை ரூ.4,167-ஐ ஒரு வருட வங்கி சேமிப்பு திட்டத்திலோ, அஞ்சலகத்திலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ சேமிக்கலாம்.

இந்த வகையிலும் சேமிக்க முடியாது என்பவர் களுக்கு மூன்றாவது வழி உள்ளது. அதாவது, உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தை சேமித்து இடையிடையே அசலையும் வட்டியையும் கட்டலாம். இப்படி செய்வதினால் வட்டி சுமை குறையும். காரணம், தங்க கடனுக்கான வட்டி அதிகம். அசல் குறைந்தால்தான் வட்டியும் குறையும்.

இன்று தங்க நகைக் கடைக்காரர்கள் சுலப மாதத் தவணை திட்டத்தை வழங்கி வருவதால்தான், குறைந்த வருமானம் உள்ளவர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து தங்க நகைகளை சேமிக்கிறார்கள். இது மாதிரி தங்க நகைக் கடனுக்கும் மாதத் தவணை பணம் செலுத்தும் முறையைக் கொண்டுவந்தால், வங்கிகளுக்கு திரும்ப வரவேண்டிய பணமும் சரியாக வரும். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்பத் தந்து, நகையை எடுத்துச் செல்வார்கள்.

எந்த ஒரு கடனையும் முழுமையாக ஒரே தவணையில் அடைப்பது கடினமான ஒன்றே. சுலப தவணைத் திட்டத்தின் மூலம் சிறுக சிறுக கடன் தொகையை திரும்ப செலுத்தி அதிலிருந்து மீண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.

NEWS TODAY 23.12.2025