Tuesday, August 16, 2016

மாயக் காடும் முத்துக்குமார் எனும் வேட்டைக்காரனும்!





தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன்

ரொம்ப வளத்தியான முத்துக்குமார் உறங்கிக்கொண்டிருக்கிறான். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று எதையும் சட்டைசெய்யாமல். அகிரா குரோசோவாவின் ‘ராஷோமோன்’படத்தைப் பல முறை பார்த்த அவனுக்கு தன்னைப் பார்த்துச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னுடைய இனி கலையவே முடியாத உறக்கம் குறித்து ஒவ்வொரு கதை சொல்வார்கள் என்பது தெரிந்துதான் இருக்கும். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலர் அவனுக்காக இரங்குவர் என்பதும் அவனை முன்வைத்து மற்ற காரியங்களைச் சொல்வர் என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும். ஏனெனில், அவன் இருக்கும்போதே அவனைக் குறித்த கதைகளைக் கேட்டுச் சிரித்திருக்கிறான். அவன் இறந்ததாய் தவறுதலாய் செய்திகள் முன்பு வந்தபோது, இறப்புக்குப் பிறகு என்ன பேசுவர் என்பதைக் கேட்டும் பார்த்தும் இருக்கிறான்.

முத்துக்குமார் அவனுடைய சமகால அகக் கதையை, மன உளைச்சலை, சிக்கலை, வலியை, வருத்தத்தை நேரடியாக எழுத்தில் முன்வைத்தது இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு அவன் எளிதில் அடைய முடியாத ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டிருந்ததாகவே தோன்றியிருக்கும். இரண்டு தேசிய விருதுகள், 1500-க்கும் மேற்பட்ட பாடல்கள், 12 வருடங்களாக தமிழ்த் திரைப்படப் பாடல் உலகின் சூப்பர் ஸ்டார், பத்திரிகைகளில் தொடர்கள், எழுத்தாளர்கள் - பத்திரிகை ஜாம்பவான்கள் - அரசியல்வாதிகள் - அரசாங்க உயர் அதிகாரிகள் எல்லோரிடமும் முரண் இல்லா உறவு என அனைத்தும் ஆனது அந்த மலை உச்சி. ஏனையோர் அதிசயிக்கிற மலை உச்சி. ஆனால், அம்மலை உச்சியில் அந்த ஒற்றை மனிதன் சுழற்றி அடிக்கும் காற்றில் தலை மறைக்கும் புற்களுக்கு நடுவே நின்றுகொண்டிருந்தான். அங்கு இரவில் குளிரும் அதிகம், பகலில் வெப்பமும் அதிகம். மழை பெய்யாது கொட்டும், அப்புறம் அந்த உச்சி ஆபத்தானது. எந்த நொடியும் வழுக்கி விழ நேரலாம் என்பதும் அவனுக்கும் திரைத் துறைக்கும் தெரிந்த உண்மை.

பனியில் தெரியும் மலை

உச்சியிலிருந்து வழுக்கி விழாமல் 12 வருடம் தன்னைத் தானே தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தான் முத்துக்குமார். அவன் பாட்டெழுதாத நாள் இல்லை. வீடு, பாட்டு இவை இரண்டும் இன்றி, அவன் வாழ்வில் இந்த 12 வருடங்களில் அவன் அவனுக்காகச் செலவழித்த நேரம் வெகு சொற்பம். பயணங்களில் தீரா விருப்பம் கொண்ட அவன், பயணம் செய்தது வெகு சொற்பம். ஆள் கூட்டத்தில் ஒரு தனி ஆள். சினிமா என்கிற மாயக் காட்டில் அயராது வேட்டைக்குச் சென்ற வேட்டைக்காரன். அந்த மாயக் காடு விருந்துகளும் சிற்றின்பங்களும் கேளிக்கைகளும் நிறைந்த இருட்டு உலகம் என்றே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. அந்த மாயக் காடு ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது என்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால், வேட்டைக்குச் செல்பவனுக்குத்தான் தெரியும், காடு எத்தகையது என்று. ஆபத்துகளும், காயங்களும், அச்சுறுத்தும் பெரும் தனிமையும், வெகு சொற்ப இரை விலங்குகளும், போட்டிகளும் விரோதங்களும் நிறைந்தது அந்தக் காடு. இரை விலங்குகள் அகப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவனுக்கு அகப்பட்டது, இறுதியில் இயற்கையின் விதிப்படி இரைக்கு இரையானான்.

அவன் பெருமலைதான். ஆனால், என்றும் அவன் தன்னை அப்படி உணர்ந்தது இல்லை. மனிதர்களை அவர்களின் சம உயரத்திலேயே சந்தித்தான், பழகினான், பாராட்டினான். அவன் வரியில் சொல்ல வேண்டும் என்றால், சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையாகத்தான் தன்னை வைத்துக்கொண்டான். ஒரு சாதனையாளன், கவிஞன் கைக்கொள்கிற எந்த உடல்மொழியையும் அவன் உருவாக்கிக்கொள்ளவில்லை. உடைகளில் எந்த வடிவமைப்பையும் பொருத்திக்கொள்ளவில்லை. ஒரு ஓட்டை சைக்கிளில் அசோகமித்திரனின் உடல்வாகுடன் கோடம்பாக்கத்துத் தெருக்களில் முதல் வாய்ப்புக்காக சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் எப்படி இருந்தானோ அதே மனநிலையில் இறுதி நாள் வரை இருந்தவன்.

வீட்டையும் காட்டையும் விரும்பியவன்

தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன் முத்துக்குமார். புதுப் புது உத்திகளை முன்வைத்தவன். ஹாஸ்யத்தையும் கொச்சைப்படுத்தாமல் செய்தவன். அவன் தமிழ்த் திரைப்படப் பாடல்களை அதுவரை இருந்த இடத்திலிருந்து மாற்றி வேறு ஒரு செறிவான தளத்துக்கு நகர்த்தியவன்.

அவன் தன் அரசியலைச் சொல்லவும் இல்லை. மறைக் கவும் இல்லை. தான் யாருக்காக எழுதுகிறோம், ஏன் இக்காரியத்தைச் செய்கிறோம் என்று தெரிந்தே அவன் செய்தான். எந்த இயக்கத்துக்குப் பாட்டு எழுதினான் என்பதை அவனும் சொல்லவில்லை, இயக்கமும் சொல்ல வில்லை. அவன் எழுதிய பாட்டு என்று தெரியாத அந்தச் சில பாடல்கள் இன்னும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அம்மா இல்லாமல் வாழ்வைத் தொடங்கிய அவனுக்கு, உறவுகள் மீது தீராக் காதல். மகனாக, அண்ணனாக, தம்பியாக, பேரனாக, அப்பாவாக, கணவனாக அவன் அனைவருக்கும் தன்னால் இயன்றவரை தன் சக்திக்கு உட்பட்டு, பிரியத்தையும் ஆதரவையும் முழுமையாகக் கொடுத்தவன். வீடும் வீடு குறித்த எண்ணமுமே அவனுடைய வாழ்க்கை. வீடே அவன் சொர்க்கம்.

அவனுக்குக் கதைகள் பிடிக்கும்

அவனை நான் முதன்முதலாகச் சந்தித்தபோது, நாங்கள் இருவரும் 20 வயதுகளின் பெரும் கனவில் சுற்றிக்கொண்டிருந்தோம். ‘சில்க் சிட்டி’ (Silk City) என்று ஒரு ஆங்கில நாவலை எழுதிக்கொண்டிருந்தான் முத்து அப்போது. இந்திய ஆங்கில இலக்கியத்தில் தனக்கென ஒரு தடம் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. போட்ட உடையோடு பயணம் கிளம்பிப்போகிற குணங்களால் நாங்கள் இருவரும் பெரிதும் ஈர்க்கப்பட்டோம். தாம்பரம் கிறித்துவக் கல்லூரி ஏரியில் அமர்ந்து பேசுகிற ராப்பேச்சு சூரிய உதயத்தில்தான் நிற்கும்.

எனக்கு சென்னையைப் பரிச்சயப்படுத்தியது அவன் தான். கோடம்பாக்கத்துத் தெருக்களுக்கு என்னை அழைத்துப்போனவன், அறிவுமதி அண்ணனின் அலுவலகத்தைக் காட்டிக்கொடுத்தவன். பால் சுகந்தி மேன்ஷனில் இருந்த அன்பான அஜயன் பாலாவை அறிமுகப்படுத்தியவன். இயக்குநர், குரு பாலுமகேந்தி ராவின் அவ்வளவு எளிதாகத் திறந்துவிட முடியாத அலுவலகக் கதவை எனக்காகத் திறந்துவிட்டவன், யுவன் ஷங்கர் ராஜாவை அறிமுகப்படுத்தியவன், என் குழந்தைகளின் மாமா, என்னை நானாகவே ஏற்றுக்கொண்ட நண்பன் என முத்து இந்த 20 வருட வாழ்க்கை முழுக்க என் உடனேயே இருந்தான்.

ஆகஸ்ட் 14 காலை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த முதல் மாரடைப்பே அவனை எடுத்துக்கொண்டது. 15 நிமிடம் முன்பு வந்திருந்தால் அவன் இருந்திருப்பான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ‘இறந்துபோனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்’என்று எழுதியவன், எதுவும் அறியாமலே இறந்துபோனான். மாயக் காடு அவனை எடுத்துக்கொண்டது. அந்தக் காட்டைப் பற்றியும் அதன் வேட்டைக்காரர்களைப் பற்றியும் கதை சொல்பவர்கள் கதை சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அவனுக்குக் கதைகள் பிடிக்கும்.

முத்து, நீ கேட்டுக்கொண்டிருப்பாய்தானே?

- ராம், ‘தங்க மீன்கள்’ திரைப்பட இயக்குநர், தொடர்புக்கு: thangameenkal@gmail.com

குறள் இனிது: வெற்றிக்கு மேல்வெற்றி!


ரியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறதா, மலைப்பாக இருக்கிறதா?

உலகிலேயே அதிக வேகமாக ஓடுபவர் யார் தெரியுமா? 9.58 விநாடிகளில் 100 மீட்டர்களை ஜமைக்கா நாட்டின் உசைன் போல்ட் கடந்ததுதான் இதுவரை முறியடிக்கப்படாத உலக சாதனை!

`மின்னல் போல்ட்' எனும் செல்லப் பெயருடைய இவருக்கு இரண்டாவதாய் வருபவர்கள் மிகவும் பின்னால் இருப்பதையும் பார்த்து ரசியுங்கள்!

இவர் ஒரு காலத்தில் செருப்பை மாற்றி மாட்டிக் கொண்டு ஓடியவர் தான்! ஆனால் இப்பொழுது? 2008, 2012 இரண்டு ஒலிம்பிக்கிலும் 100மீ, 200 மீ இரண்டிலும் முதலில் வருவது என்றால் சும்மாவா?

இவரைப் போல வேறு சிலரும் 6'5”உயரம் இருக்கலாம்.ஆனால் இவர் மட்டும் இவ்வளவு சாதித்தது எப்படி? சிறிதும் சிதறாத கவனக் குவிப்பினால் தானே! கொஞ்சம் அசந்தாலும் அடுத்த ஆள் முன்னாடி ஓடிப் போய் விடுவானே!

சரி, இதுவரை ஒலிம்பிக்கில் மிக அதிக பதக்கங்களை வென்றவர் யாரென்று சொல்லுங்கள் பார்ப்போம். மைக்கேல் பெல்ப்ஸ் எனும் அமெரிக்க நீச்சல் வீரர்தான் 21 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் வாங்கியுள்ளார்! அவர் வாங்கியுள்ள மொத்த ஒலிம்பிக் பதக்கங்கள் 25!

அதிகபட்ச ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் என்றால் சும்மா இல்லைங்க.இவருக்கு அடுத்துள்ளவர் இவர் வாங்கியதில் பாதியைக் கூட வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

விடமாட்டேன் என்று தண்ணீரில் குதித்தவர் தான்!

'பறக்கும் மீன் 'எனக் கூறப்படும் அளவிற்கு வேகமாக நீந்தினார், நீந்தினார்,யாரும் எட்டமுடியாத இடத்திற்கு நீந்தியே வந்து விட்டார்!

7 வயதிலேயே சகோதரிகள் கொடுத்த உத்வேகம்தான் அவரது உற்சாகத்தை ஒருமுகப்படுத்தி உயர்த்தி விட்டது!

சரி, நம்ம திபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டாரே! திரிபுரா பெண்ணான இவர் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஜிம்னாஸ்டிக்ஸ் படிக்கப் போனவராம்!

திபாவின் ஒருமித்த கவனம் இறுதிப் போட்டி வரை விளையாட்டில் இருப்பதற்காகவும், அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாதென்பதற்காகவும், அவரது பயிற்சியாளர் பிஷ்பேஷ்பர் நந்தி அவரை ‘வீட்டுச் சிறையில்' வைத்து விட்டாராம்! பெற்றோர் தவிர யாருக்கும் அவரிடம் பேச அனுமதி இல்லை!

இக்கட்டுரையை நீங்கள் படிக்கும் பொழுது 'பறக்கும் பாவை'யான திபாவின் சாகஸங்களையும் உசைன் மற்றும் பெல்ப்ஸின் புதுப்புது சாதனைகளையும் பார்த்து ரசித்திருப்பீர்கள்!

பணியில் அர்ப்பணிப்பு என்பது ஒருவரை அவரது இலக்குடன் ஒட்ட வைக்கும் பசை என்பார் ஜில் கோனெக்!

விளையாட்டோ, வணிகமோ வெற்றி பெறத் தேவை ஒருமித்த கவனம்!

அலட்சியமின்மை எனும் கருவியைக் கொண்டு கருத்துடன் செயலாற்றினால், முடிக்க முடியாத செயல் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்!

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின் (குறள்: 537)

somaiah.veerappan@gmail.com

Monday, August 15, 2016

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்! By முனைவர். அ. பிச்சை


இந்திய தேசத்தின் 70-ஆவது சுதந்திர தினம் இன்று. 69 ஆண்டுகளுக்கு முன்னால், முதல் சுதந்திர தினத்தை - 15.08.1947-அன்று கொண்டாடியதும், குதூகலித்து மகிழ்ந்ததும் உலக வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வுகள்.

ஆங்கிலேயர் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேற முடிவு செய்தபோது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாளை ஆட்சி மாற்றத்துக்குத் தேர்வு செய்தனர். அது இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு தினம்.

"போரில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி தருவதை விட, போரில்லாமல் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி தரும் நாளாகக் கருதுகிறோம். ஆகவே தான் ஆகஸ்ட் 15-ஆம் நாளை நாங்கள் தேர்வு செய்கிறோம்' என்றார்கள். அவர்களின் உணர்வை மதித்து, ஆகஸ்ட் 15 நம் தேசத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆகஸ்ட் 14 முன் இரவு முதல், விழாவுக்கான முன்னேற்பாடுகளும், சம்பிரதாயச் சடங்குகளும் தொடங்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் சட்ட ஆலோசனை மன்றத்தில்தான் (அதுதான் இந்திய அரசியல் நிர்ணய சபையின் கூட்ட அரங்கமாக பின்னால் மாறியது) விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

அந்த அரங்கை அலங்கரித்த முன்னாள் வைஸ்ராய்களின் புகைப்படங்கள் மலர்களால் மறைக்கபட்டன. வண்ண வண்ண மாலைகளாலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒளிவிளக்குகளால் பிரகாசித்து அந்த அரங்கம்.

அந்த மண்டபத்தில் அவைத் தலைவரின் இருக்கைக்கு மேல் ஒரு அழகிய பெரிய கடிகாரம் இருந்தது. கடிகாரத்தில் இரு முட்களும் 12-ஐ தொட்டு இணைந்தது.

மணி 12 முறை கணீர் கணீரென்று ஒலித்து ஓய்ந்தது. அதன்பின் ஒரு ஒலி, ஒரு நாதம் எழுந்தது. அது மேல் மாடத்திலிருந்து பயிற்சி பெற்ற ஒருவரால் எழுச்சியோடு இசைக்கப்பட்ட சங்கநாத முழக்கம். இதுவே புதிய தேசம் பிறந்து விட்டது என்பதற்கான அறிவிப்பு.

அரங்கிலுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றார்கள். கையொலி எழுப்பி புதிய தேசத்தின் உதயத்தை புத்துணர்வோடு வரவேற்றார்கள். "வந்தே மாதரம்' என்ற கீதத்தை எல்லோரும் இணைந்து பாடினார்கள்.

"இந்திய தேசத்திற்காகவும் இந்திய மக்கள் நலனுக்காகவும் ஓயாது உழைப்போம், உளப்பூர்வமாக சேவை செய்வோம் என சபதம் ஏற்கிறோம்' என்ற உறுதி மொழியை நேருஜி சொல்ல, அதனை அனைவரும் அப்படியே திரும்பச் சொன்னார்கள்.

அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம், இரண்டு நிமிட அமைதி கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்ச்சிகரமான, மகிழ்ச்சிகரமான அந்த இனிய இரவில், முதல் நிகழ்ச்சியாக மூன்று முக்கியமான பெருமக்கள் உரை நிகழ்த்தினார்கள். முதலாவதாக, இந்திய இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் சார்பாக சௌத்ரி காலிக் உஸ் - ஸமான் பேசினார். அடுத்து சிறந்த சிந்தனையாளர், தத்துவ மேதை டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேசினார்.

அடுத்ததாக, முக்கியமான நிகழ்வாக தேசத்தின் முதல் பிரதமர் பண்டித நேருஜி பேசினார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த உரையில், "உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியா விழித் தெழுகிறது. புதிய விடியலை நோக்கி நம்பிக்கையோடு நாம் நமது பயணத்தைத் தொடங்குகிறோம்' - என முழங்கினார்.

ஆனால், விடுதலை வாங்கித் தந்த தேசப்பிதா காந்திஜியோ அந்தேரத்தில் கல்கத்தா பெலிய கட்டா சாலையில் உள்ள பாழடைந்த மாளிகையின் ஒரு பகுதியில் நெஞ்சில் கனத்த சுமையோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அன்று படுக்கைக்குப் போகும் முன்பு காந்திஜி தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் "நான் இருட்டில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன், இந்த தேசத்தை நான் தவறாக வழிநடத்தி விட்டேனோ' என்று வருந்தி எழுதியிருக்கிறார்.

ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை நகரங்கள், கிராமங்கள், குடிசைப் பகுதிகள் - அனைத்திலும் கொண்டாட்டங்கள் தான். "தேசமெங்கும் புதிய தீபாவளியாக, புதிய ஈத் பண்டிகையாக, புதிய கிறிஸ்துமஸ் தினமாகத் தெரிகிறது' என்றார் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை நிருபர்.

அன்றைய முதல் நிகழ்ச்சியாக சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக மௌண்ட் பேட்டன் பதவி ஏற்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். அருகில் எட்வினா மவுண்ட் பேட்டன் அமர்ந்தார். அவர்களுக்கு இடப்பக்கத்திலும் வலப் பக்கத்திலும் இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமர்ந்திருந்தனர்.

பண்டித நேரு பருத்தியாலான ஜோத்பூர் உடைகளுக்கு மேல், லினன் துணியாலான கோட் அணிந்திருந்தார். அவரது கோட் பை-க்கு வெளியே அழகிய சிவப்பு ரோஜா சிரித்துக் கொண்டிருந்தது.

கதர் வேட்டி, கதர் சட்டை அணிந்த சர்தார் படேல், வெள்ளை நிற வேட்டியை மேலே போர்த்தி, ரோமப் பேரரசர் போலக் காட்சி அளித்தார்.

அடுத்து, சுதந்திர இந்தியாவின் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள். பிரதமர் நேருஜி உட்பட மொத்தம் பொறுப்பேற்றவர்கள் 14 பேர் மட்டுமே. "சுதந்திரம் தேசத்திற்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸýக்கு அல்ல. ஆகவே அனைவரையும் இணைத்துச் செயல்படுங்கள்' - என்பது அண்ணல் காந்தியின் அறிவுரை.

அதன்படி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் - ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி - என ஐந்து மதத்தினரும் இடம் பெற்றிருந்தார்கள். ஏன் நாத்திகர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.

காங்கிரசை காலமெல்லாம் எதிர்த்த ஆர்.கே. சண்முகம் செட்டி, அண்ணல் அம்பேத்கர், இந்து மகா சபையைச் சேர்ந்த சியாம் பிரசாத் முகர்ஜி - ஆகியோரும் அப்பட்டியலில் இடம் பெற்றவர்கள்.

பாபு ஜகஜீவன் ராமைச் சேர்த்து, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கு பிரிதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

தியாகி, தேசபக்தர், கல்வியாளர், ஒன்றுபட்ட இந்தியாவே என் இலட்சியம் எனச் சொன்ன அபுல்கலாம் ஆசாத், ஜான் மத்தாய், (கிறிஸ்தவர்) சி.எச். பாபா (பார்சி - விஞ்ஞானி), சர்தார் பல் தேவ்சிங் (சீக்கியர்) ராஜ்குமார் அமிர்த கௌர் (மகளிர் பிரதிநிதி) - என்று அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் வகையில் அமைச்சரவை அமைந்திருந்தது.

அரசியல் அமைப்பு சபையில் காலை 10-30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. டில்லி மாநகரத்தில் 1000-த்துக்கும் அதிகமான இடங்களில் கொடி ஏற்றப்பட்டதாம்.

மாலை கூட்டத்தில் வெளிநாட்டுத் தூதர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், ஒரு எளிய மனிதர் உட்காரப் போனாராம். "அழைப்பிதழ் எங்கே' எனக் கேட்டபோது, "அழைப்பிதழா அது ஏன் பெற வேண்டும். நாங்கள்தான் சுதந்திரப் பிரஜைகளாயிற்றே' எனச் சொன்னாராம் அவர்.

பேருந்துகளில் ஏறிய கிராமத்து மக்கள் சுதந்திர தேசத்தில் நாங்கள் ஏன் கட்டணம் தர வேண்டும் எனக் கேட்டார்களாம்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாகாண பிரதமர் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தேசியக் கொடியை ஏற்றினார். மக்கள் காலை முதல் இரவு வரை சாரி சாரியாக வந்து, கொடிக்கு வணக்கம் செலுத்தினார்கள்; கோட்டையைக் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிராமப் பகுதிகளில் கரகாட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டார்கள்.

இவ்வாறு தேசமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், அதே நேரத்தில் சில பகுதிகளில் சில மக்கள் சஞ்சலத்திலும், சந்தேகத்திலும், அவநம்பிக்கையிலும், கவலையிலும் மூழ்கிக் கிடந்தார்கள்.

மேற்கு பஞ்சாபில் பாதிக்கப்பட்ட 20,000 அகதிகளுக்கு சிகிச்சையும், பாதுகாப்பும் வழங்கும் பொறுப்பு சுசிலா நய்யாருக்கு காந்திஜியால் வழங்கப்பட்டது.

பம்பாயில் கொலாசியா நகர்ப் பகுதியில் வாழும் ஒரு பெண், தன் வீட்டு பால்கனியில் இந்தியக் கொடியையும் ஏற்றி, பாகிஸ்தான் கொடியையும் ஏற்றினார். அவர்தான் ஜின்னாவின் ஒரே மகளான டினா.

லாகூரைச் சேர்ந்த குஷ்வந்த் சிங் "என் பஞ்சாபைப் பிரித்து சிதைத்து சீரழித்துவிட்டார்ளே. நான் அனைத்தையும் இழந்துவிட்டேனே. நான் மகிழ்ச்சி அடையவில்லை. சுதந்திர தினம் எனக்கு ஒரு சோக நாள்' - எனச் சொன்னார்.

இவ்வாறு தேசத்தின் பெரும் பகுதியில் பெருமகிழ்ச்சி. சிலர் மனங்களில் கலக்கமும் கவலையும்.

அன்று காலையில் அண்ணல் காந்திஜியின் ஆசியும், சுதந்திரதினப் பரிசும் கேட்டு நேருவும் பட்டேலும் எழுதிய கடிதத்தை, ஒரு தூதுவன் கல்கத்தாவில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த காந்திஜியிடம் கொடுக்கிறார்.

கடிதத்தைப் படித்துப் பார்த்த மகாத்மா "நானோ பரம ஏழை, அவர்களோ அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள். அவர்களுக்கு நான் என்ன தந்து விட முடியும்' எனச் சொல்கிறார், அப்பொழுது சிறிது காற்றடிக்கிறது. கிளைகள் அசைகின்றன ஒரு இலை காந்தியின் கையில் விழுகிறது. அந்த இலையை தூதுவனின் கையில் கொடுக்கிறார் காந்திஜி.

இலையைப் பெற்றுக் கொண்ட தூதுவன் கண்ணீர் வடிக்கிறான். அக்கண்ணீரால் இலை ஈரமாகிறது.

"கடவுள் கருணை நிறைந்தவர். வறண்ட இலையை நேரு, பட்டேலுக்கு பரிசாகக் கொடுக்க இறைவன் விரும்பவில்லை. ஆகவே தான் அதனை ஈரமாக்கிக் கொடுக்கிறார். இந்த இலை உங்கள் கண்ணீரால் பிரகாசிக்கிறது. அதே போல் இந்தியாவும் பிரகாசிக்கும். இது தான் என் சுதந்திர தினப் பரிசு' எனச் சொல்லுகிறார்.

இந்தியா பிரகாசிக்கும் என்பது அண்ணலின் நம்பிக்கை: அவர் வழி நடந்தால், அவர் நம்பியது நடக்கும்! நினைத்தது நிறைவேறும்!

"மதிப்பெண் பெரிதென நினைக்கும் பெற்றோர் அமைதியை இழக்கின்றனர்'

மதிப்பெண்ணை பெரிதாக நினைக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் குடும்ப அமைதியை இழக்கும் நிலை ஏற்படுகிறது என்றார் புதுகை மனநல மைய ஒருங்கிணைப்பாளர் கே. மோகன்ராஜ்.
புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டை ராமசாமி தெய்வானையம்மாள் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளியும், புதுக்கோட்டை மனநல மையம் இணைந்து அண்மையில் நடத்திய விழிப்புணர்வு முகாமில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
இன்றைய சூழலில் தங்கள் குழந்தைகள் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதுமானது என பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர்.
இதனால், அன்பு, அறம், அமைதி என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல், பிடிவாதமும், தன்னலமுமே வாழ்வின் முக்கிய இலக்குகளாகக் கொள்ளும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
அவ்வாறு வளரும் குழந்தைகள், அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு ஏமாற்றங்களைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை கொண்டவர்களாக உள்ளனர். சிந்தனை மழுங்கி 12 வயதிலேயே போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி, நாளடைவில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
சில நேரங்களில் பாலியல் வன்முறையாளராகவும், சிலர் மனநோயாளிகளாகவும் மாறுகின்றனர். பலர் கல்வியில் பின்தங்கி படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
 இவர்களால் குடும்பம் அமைதியை இழந்து, சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பல பெற்றோர் மனமுடைந்து விடுகின்றனர். சிலர் மனநோயாளிகளாக மாறி, விபத்துக்களில் சிக்குகின்றனர்.
இந்த நிலை மாறவேண்டுமெனில், நல்லவர்களிடம் நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். சினம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அன்பாகப் பேச வேண்டும்.
எதிலும் வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையை ஆக்கப்பூர்வமானதாக மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற வேண்டும். தனியாக இருப்பதை விட்டு, நல்ல நண்பர்களின் துணையுடன் நல்ல விஷயங்களைக் கலந்து பேச வேண்டும். நம்முடைய எதிர்காலம் நம் கைகளில்தான் உள்ளது என்றார்.
முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை மோகன்ராஜ் வழங்கினார். தலைமையாசிரியர் வி.சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் பி. ஜெயமதி வரவேற்றார். ஆசிரியர் பி. ரகு நன்றி கூறினார்.

கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள் By - பா.ராஜா

நாட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இது மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் சவாலாக உள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் பிரச்னை தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் (ஐ.எஸ்.ஐ.) தேசிய புலனாய்வு ஏஜென்சியுடன் (என்.ஐ.ஏ.) இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், நாட்டில் ரூ.400 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.400 கோடி கள்ள நோட்டுப் புழக்கமானது, கட்டுப்படுத்தப்படாமல், கடந்த 4 ஆண்டுகளாக நிலையாக இருந்து வருவதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். கள்ள ரூபாய் நோட்டுப் பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன் கையில் இருக்கும் ரூபாய் நோட்டு நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்பதைக் கண்டறிய முடியாமல் கலங்கி நிற்கின்றார். அதாவது, 10 லட்சம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்குமானால், அவற்றில் 250 நோட்டுகள் கள்ள ரூபாய் நோட்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வப்போது, சந்தைகளில், உணவகங்களில், பேருந்துகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள வளாகங்கள் ஆகிய இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றும்போது பலர் கைது செய்யப்படுகின்றனர். கள்ள கரன்சி நோட்டை புழக்கத்தில் விடுபவர்கள், குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். நாட்டில் பல நகரங்களில் காவல் துறையினரால் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளில் உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் பறிமுதல் செய்யப்பட்டவை மொத்தத்தில் 43% எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய அனைத்து வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், கள்ள கரன்சி புழக்கத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை. வங்கிகளின் ஏ.டி.எம்.களிலேயே கள்ள ரூபாய் நோட்டுகள் உள்ளன. மேலும், சில தனியார் வங்கிகள் சுமார் 80% அளவிலான கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிந்துள்ளன. பொதுவாக, 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளே புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றை அச்சிட்டால்தான் லாபம் எனக் கூறப்படுகிறது. இவற்றில் 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் பிடிபடுகின்றன. மொத்த கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் 1,000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 50% எனக் கண்டறியப்பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கள்ள ரூபாய் நோட்டுகளைக் கண்டறிய போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில், பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. இவை நேரடியாக இந்தியாவுக்கு வராமல், வங்கதேசம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது. அதைத் தடுக்க, இந்திய-வங்கதேச அரசுகள் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளன.
கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தைத் தடுக்க, கரன்சி டிசைனில் சில மாற்றங்களைச் செய்யலாம், வரிசை எண்களில் மாற்றங்களைச் செய்யலாம் என இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. தற்போதைய வடிவிலான ரூபாய் நோட்டுகள் அப்படியே தொடர்ந்தால், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது.
சராசரியாக ஆண்டுக்கு ரூ.70 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பகுதியே பறிமுதல் செய்யப்படுகின்றன என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புழக்கம் குறைந்துள்ளது. இதை முனைப்புடன் செயல்படுத்தினால், ஆண்டுக்கு 20% என்ற அளவில் புழக்கத்தைக் குறைக்கலாம் என்று இந்திய புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது.
2013-14ஆம் நிதியாண்டில், தில்லியில் 2,15,092 கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.10,35,86,240. 2015-16ஆம் நிதியாண்டில் இது ரூ.9,31,13,960 ஆக இருந்தது. தமிழ்நாட்டில் 2013-14ஆம் நிதியாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3,78,15,110. இது, 2015-16ஆம் நிதியாண்டில் ரூ.2,19,50,450 கோடி எனத் தெரியவந்துள்ளது.
இந் நிலையில், 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் சற்று குறைந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டில் 6.32 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.30.43 கோடியாகும். அதற்கு பின் ஓராண்டில் இதன் புழக்கம் 10% வரை குறைந்துள்ளது.
2015-ஆம் ஆண்டில் பணம் கடத்தல் மற்றும் கள்ள ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக 788 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 816 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு கள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. கள்ளநோட்டுப் புழக்கத்தைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகள் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை கிடைக்கிறது என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. அதாவது, 100 ரூபாய் கள்ளநோட்டு ஒன்று புழக்கத்துக்கு வந்தால், ஐ.எஸ்.ஐ.க்கு ரூ.40 வரை கிடைக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிலும் "ஒரிஜினல்' இல்லை என்பது இதன்மூலம் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

Saturday, August 13, 2016

என்.மகேஷ்குமார்....திருமலை திருப்பதி லட்டு உருவானது எப்படி? - இனிப்பான அரிய தகவல்கள்



திருமலை திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு பிரசாத விநியோகம் தற்போது 76-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. ஏழுமலையானின் அதிவிருப்ப பிரசாதமான இந்த லட்டு குறித்த சில இனிய தகவல்கள்.

பல்லவர்கள் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக் கும் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதாக கல் வெட்டு தகவல்கள் தெரிவிக் கின்றன. இதேபோல், 2-ம் தேவராயுலு அரசர் காலத்தி லும் பல வகையான பிரசாதங் கள் பக்தர்களுக்காக விநி யோகிக்கப்பட்டன.

இக்காலத்தில் அமைச்சராக இருந்த சேகர மல்லண்ணா என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கென்றே தனியாக பல தானங்களை செய்துள்ளார்.

பல மைல் தூரத்தில் இருந்து திருமலைக்கு தரிசனத் திற்காக வரும் பக்தர்களுக்கு அன்னதானத்துக்கு பதிலாக பிரசாதங்களே விநியோகிக் கப்பட்டன. இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்குபிடிக்காமல் விரைவில் கெட்டு விடும் தன்மையில் இருந்தன.

இதனால் வடை பிரசாதத்திற்கு அதிக மவுசு இருந்தது. இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. அதன் பிறகே இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது.

லட்டு பிரசாதத்தின் அளவு

லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என அழைக்கின்றனர். லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ என்கின்றனர்.

இதன்மூலம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம். ஒரு படிக்கு பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ உபயோகப்படுத்தப்படுகிறது.

அதாவது, 5,100 லட்டு தயாரிக்க 852கிலோ எடையுள்ள பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. லட்டு பிரசாதங்கள் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என 3 வகையாக தயாராகின்றன. இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டது. ரூ. 100க்கு இந்த லட்டுகள் கிடைக்கின்றன. தவிர கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, புரோக்தம் லட்டு. இது 175கிராம் எடை கொண்டது. இந்த வகை லட்டுகள் தான் ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது.

தாய் ருசி பார்த்த பிறகே

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக் கும் இடம் உள்ளது. இங்குதான் அனைத்து பிரசாதங்களும் தயாரிக்கப்படுகிறது. இவை தயாரிக்கப்பட்ட பின்னர், ஏழு மலையானின் தாயாரான வகுல மாதாவிற்கு முதலில் படைக்கப் படுகிறது. அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

1940-களில் விநியோகம் செய்யப்பட்ட லட்டு பிரசாதங்கள் கல்யாண உற்சவ லட்டு போன்று பெரிய அளவில் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவை 8 அணாவிற்கு விற்கப்பட்டன. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்கிறது.

விலை உயர்ந்தாலும் தரம் உயராமல் குறைந்து கொண்டு வருவது பக்தர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. நவீன கால எரிவாயு அடுப்பில் பிரசாதங்கள் தயாரிக்கப்படுவதே ருசியும், தரமும் குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

எது எப்படி இருப்பினும், லட்டு பிரசாதத்துக்கு இருக்கும் மவுசு இன்று வரையிலும் குறையவில்லை. இதன் காரண மாகவே கடந்த 2009-ல் திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப் பட்டது குறிப்பிடத்தக்கது.

சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்: ரயில் சென்னை வந்த பிறகே ரூ.5.75 கோடி கொள்ளை?

பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியின் மேற்கூரையில் ஆய்வு நடத்தும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் | உள்படம்: கொள்ளையடிக்க வசதியாக ஆள் நுழையும் அளவுக்கு ரயில் பெட்டியின் மேற்கூரையில் வெட்டப்பட்ட பகுதி.

ஓடும் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை நடந்த வழக்கு சிபி சிஐடி போலீஸ் வசம் ஒப்படைக் கப்பட்டதையடுத்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரயில் சென்னை வந்த பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந் திருக்கலாம் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்த பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றினர். இப்படி வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ரூ.342 கோடியே 75 லட்சம் சேலம் விரைவு ரயிலில் தனி சரக்குப் பெட்டியில் ஏற்றப்பட்டு அந்த ரயில் கடந்த 8-ம் தேதி சேலத்திலிருந்து புறப்பட்டு 9-ம் தேதி அதிகாலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர், பணம் இருந்த சரக்கு பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு எழும்பூரில் உள்ள பார்சல் சர்வீஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

பின்னர், சென்னை ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் ரயில் பெட்டியின் சீலிடப்பட்ட பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு தமிழக சிபிசிஐடி வசம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டது. நேற்று காலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி கரன்சின்கா எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு கொள்ளை நடந்த ரயில் பெட்டியை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்து சேத்துப் பட்டில் உள்ள பணிமனைக்கு சக அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண் டார். அங்கு பணியில் இருந்த பணிமனை ஊழியர்களிடமும் கொள்ளை எப்படி நடந்திருக்கும் எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊழியர்கள், “ரயில் பெட்டியை பற்றி நன்றாக தெரிந்த வர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்” என்று தெரிவித்தனர்.

பின்னர், அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே போலீஸார் இதுவரை சேகரித்து வைத்திருந்த அனைத்து தகவல் களையும் கரன்சின்கா பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக ரயில் பாதுகாப்பு பணிக்காக சென்ற ஆயுதப் பிரிவு உதவி கமிஷனர் நாகராஜன் உள்ளிட்ட 9 பேரின் பெயர், முகவரி, செல்போன் எண் அடங்கிய பட்டியலை பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சேலம் மற்றும் சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெயர் பட்டியல், அவர்களின் முகவரியை பெற்றுக் கொண்டார்.

கொள்ளை நடந்தது எங்கே?

பணம் கொண்டு வரப்பட்ட ரயில் சேலத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழை யும்போது அங்கிருந்த கண்கா ணிப்பு கேமராவில் பணம் வைக் கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளை எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே சரக்கு ரயில் சென்னைக்கு கொண்டு வரப்பபட்ட பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரிலும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இது கு றித்து கூறியதாவது:

ரயில் கொள்ளை குறித்து முதலில் விசாரணையை தொடங் கியது ரயில்வே பாதுகாப்பு படையினர்தான். அவர்கள் முழுக்க முழுக்க ரயிலில் பாதுகாப்பு பணியை மட்டுமே செய்வார்கள். எனவே அவர்களிடம் புலனறியும் தன்மை அவ்வளவாக இருக்காது.

இதனால், இந்த வழக்கு அவர்களிடம் இருந்து எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு மாற்றப் பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சுவாதி என்ற ஐ.டி. பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கையும் அவர்கள்தான் முதலில் விசாரித்தார்கள். ஆனால், அவர் களால் துரிதமாக செயல்பட முடியவில்லை. காரணம் பாது காப்பு பணி உள்ளிட்ட பல்வேறு இதர பணிகள் அவர்களுக்கு இருந்தது. மேலும், செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்கும் கருவி உள்ளிட்ட முக்கியமான கருவிகள் அவர் களிடம் இல்லை. எனவே, இந்த கொள்ளை வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்தால் கொள்ளையர்களை விரைவாக நெருங்க முடியாது என நினைத்த டிஜிபி அசோக்குமார் உடனடியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாருக்கு பாதுகாப்பு பணி போன்ற எந்த பணியும் கிடையாது. அவர்களிடம் சிறப்பாக புலன் விசாரணை செய்யக் கூடிய அதிகாரிகளும் உள்ளனர். மேலும் சைபர் கிரைம் பிரிவும் தனியாக உள்ளதால் தான் வழக்கு உடனடியாக மாற்றப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

NEWS TODAY 21.12.2025