Saturday, August 27, 2016

'சைக்கிள்' வாத்தியார் முதல் சேட்டிலைட் சேனல் வரை..! பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது இப்படித்தான்

vikatan.com

சைக்கிளில் சென்று ஆசிரியர் பணியைத் தொடங்கிய டி.ஆர்.பச்சமுத்து இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னணி இது!

சென்னை மேற்கு மாம்பலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து பச்சமுத்து வளர்ச்சி அத்தியாயம் தொடங்கியது. கடன் வாங்கித்தான் அந்த பள்ளியை தொடங்கியதாக அவருடன் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கல்வி சாம்ராஜ்ஜியம் மட்டுமல்லாமல் அரசியலிலும் பச்சமுத்து கால் பதித்தார். காட்டாங்கொளத்தூரில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இந்த அளவுக்கு அவரது வளர்ச்சி ஏற்பட்டது மற்றவர்களை வியப்புக்குள் ஆழ்த்துகிறது. ஆனால், அவர் கடந்து வந்த பாதைகளை விவரிக்கிறார் பச்சமுத்துவின் நெருங்கியவர்கள்...

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கி தொழில் நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்வதிலும் எஸ்.ஆர்.எம். கடைபிடிக்கும் பாலிசியே வித்தியாசமானது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல கட்டடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.நர்சிங் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி, எஸ்.ஆர்.எம். ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ், எஸ்.ஆர்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்மருத்துவ கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து. இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார்.

2005ல் நாகர்கோவிலை சேர்ந்த மதன், மருத்துவ மற்றும் இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை மூலம் பச்சமுத்துவிடம் அறிமுகம் ஆகிறார். 2007ல் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் பெரும்பாலான மாணவர் சேர்க்கை மதன் மூலமாகவே நடக்கிறது. ஒரு கட்டத்தில் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் துணை பொதுமேலாளர் என்ற பதவியும் மதனுக்கு வழங்கப்படுகிறது. நகமும், சதையும் போலவே பச்சமுத்து, மதனின் நட்பு இருந்தது. 2011ல் அரசியல் ஆசை துளிர்விட பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியை தொடங்குகிறார். அதிலும் மதனுக்கு மாநில இளைஞரணி பொறுப்பு அளிக்கப்படுகிறது. பச்சமுத்துக்கு சினிமா பிசினஸ் ஆசை வர, ஒரு தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்படுகிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேந்தர் மூவிஸ் உதயமாகிறது. மொட்ட சிவா, கெட்ட சிவா வரை வேந்தர் மூவிஸ் நிகழ்ச்சிகளில் பச்சமுத்து தவறாமல் ஆஜராகினார். இவர்களின் நட்பு பச்சமுத்துவின் குடும்பத்தின் சிலருக்கு பிடிக்கவில்லை.

இதன் பிறகுதான் இருவரையும் பிரிக்க சதுரங்கவேட்டை ஆரம்பமானது. பூஜை அறையில் பச்சமுத்துவின் படத்தை வைத்து பூஜித்தார். அந்த அளவுக்கு பச்சமுத்து மீது அளவு கடந்த பாசத்தையும், மரியாதையும் வைத்திருந்தார் மதன். பச்சமுத்து குடும்பத்தினர் மதன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் முழு நம்பிக்கை வைத்திருந்தார் பச்சமுத்து. இந்த சமயத்தில் பச்சமுத்துவின் உறவினர் ஒருவர் விருகம்பாக்கத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மதன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தனர் பச்சமுத்துவின் குடும்பத்தினர். இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. திருச்சி மருத்துவக் கல்லூரி அனுமதிக்காக டெல்லிவரை சென்று காயை நகர்த்திய மதன் மீது பச்சமுத்து முதன்முறையாக கோபப்பட்டார். திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பெறப்பட்ட பணத்தில் சில கோடிகள் ஆந்திராவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க ஒரு பெண்ணிடம் கொடுக்கப்பட்டது. அந்த அசைன்மெண்டிலும் மதன் சொதப்ப, கோபத்தின் உச்சக்கே சென்றார் பச்சமுத்து.
 
2016 ஜனவரியில் தொடங்கி இவர்களது முட்டல், மோதல் மே மாதத்தில் பூதாகரமாக வெடித்தது. அதற்கு மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வான நீட்டும் ஒரு காரணமாக அமைந்தது.மே 28ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் மதன் எழுதிய தற்கொலை கடிதம் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் காசிக்கு சென்று சமாதி அடைவதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்ட பணத்தை எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலில் எஸ்.ஆர்.எம். நிர்வாகம், மதனுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தது.

உரிய ஆதாரங்கள் வெளிவரத்தொடங்கியதும், மதன் மீது பச்சமுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, மதன் மீதும், பச்சமுத்து மீதும் மாணவர் சேர்க்கை மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை குவித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் திண்டுக்கல் மாவட்ட ஐ.ஜே.கே மாவட்ட செயலாளர் பாபு, மதனின் கூட்டாளி சுதீர், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம் நிர்வாகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால், விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக இன்று பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உசேன் போல்ட்டுகள் ஏன் உருவாவதில்லை?!' -சீறுகிறார் சீமான்

vikatan.com

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நிதி உதவிகள் குவிந்து வருகின்றன. ' தமிழ்நாட்டிலும் உசேன் போல்ட்டுகளுக்கு பஞ்சமில்லை. அவர்களைத் தேர்வு செய்யாமல் குறுக்கீடு செய்வதே விளையாட்டுத்துறை அதிகாரிகள்தான்' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது இந்தியா. " நம்மிடம் வீரர்களுக்குப் பஞ்சமில்லை. தினமும் என்னுடன் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஓடும் வீரர்களைப் பாருங்கள். அத்தனை பேரும் உசேன் போல்ட்டுக்கு இணையானவர்கள்தான். அவர்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டில் தங்கம் வெல்வதற்கு ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

" ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மிக நுட்பமாக கவனிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் போட்டியைக் கைவிட்ட நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளே, அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இரண்டாம் இடத்திற்கான போட்டிகளே தொடர்ந்தன. கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டைக் கைவிட்ட நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் சாதித்துவிட்டன. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் இரண்டு பதக்கங்களையும் பெண்கள்தான் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த நாட்டின் மானத்தைக் காத்த கண்மணிகள் அவர்கள். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் ஒரு தங்கம் வெல்வதற்குக்கூடவா ஆட்கள் கிடைக்கவில்லை?



செர்பியாவில் இருந்து பிரிந்த கொசாவா, வெறும் பத்து லட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடு அது. தங்கம் வென்ற நாடுகள் பட்டியலில் கொசாவா இடம் பெற்றுவிட்டது. உலகின் வெல்ல முடியாத தலைசிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் உசேன் போல்ட். ஜமைக்கா என்ற சிறிய நாட்டைச் சேர்ந்தவர் அவர். அவரை அந்த நாடு எப்படி உருவாக்கியிருக்கிறது பாருங்கள். விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றை ஒரு நாட்டின் அழகான முகங்களாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல விளையாட்டு வீரனை ஒரு நாடு உருவாக்குகிறது என்றால், அந்த நாடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நாட்டில் எல்லாம் வர்த்தக மயமாக்கப்பட்டுவிட்டன. சந்தைப் பொருளாதாரத்தை கவனிக்கவே அரசுக்கு நேரம் சரியாக இருக்கிறது. விளையாட்டுத் துறையின் அனைத்து மட்டத்திலும் சாதி, மத குறுக்கீடுகள் அதிகரித்துவிட்டன.

அதனால் ஏற்படுகிற பின்விளைவுகள்தான் இதெல்லாம். நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் சிறந்த நீச்சல் வீராங்கனையாக திகழ்கிறார். அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு விளையாட்டுத் துறை அதிகாரிகளின் குறுக்கீடுகள்தான் காரணம். இதை அரசியல் என்று சொல்ல விரும்பவில்லை. அரசியல் என்ற சொல்லை புனிதமாகக் கருதுகிறேன். ஆந்திராவிலிருந்து நேற்று பிரிந்து சென்ற தெலுங்கானா மாநிலம் வெள்ளிப் பதக்கம் வெல்கிறது என்றால், அந்த மண்ணைச் சேர்ந்தவர்களின் வெறிதான் வெற்றிக்குக் காரணம். 130 கோடி மக்களில் வேகமாக ஓடுவதற்கு ஓர் இளைஞன் கூடவா நம்மிடம் இல்லை? நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதலில் மிகச் சிறந்த வீரர், வீராங்கனைகள் நம்மிடம் உள்ளனர். அவர்களைத் தேர்வு செய்து இந்த நாட்டின் செல்வங்களாக மாற்ற வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பராமரித்து, விளையாட்டைத் தவிர வேறு எந்த சிந்தனையும் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளி வென்ற பி.சி.சிந்து பேட்டி கொடுக்கும்போதுகூட, ' மூன்று மாதங்களாக செல்போனைப் பயன்படுத்தவில்லை' என்கிறார். எந்த ஒரு கவனச் சிதைவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வெற்றியை நோக்கி அவர் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். நமது தடகள வீராங்கனை சாந்திக்கு உரிய நிவாரணத்தைத் தராமல் அரசு அலைக்கழிக்கிறது. அவருக்கான நீதியை தமிழக அரசே உடனே செய்து தர முடியும். இன்று வரையில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அடுத்து வரக் கூடிய காலகட்டங்களில் பதக்கம் வெல்ல வேண்டுமானால், விளையாட்டுத்துறையை விளையாட்டாக பார்க்க வேண்டும். நியாயமான தேர்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும். ' தன் மதம் சார்ந்தவன், சாதியைச் சேர்ந்தவன்தான் வர வேண்டும்' என்றால் எதுவும் உருப்படாது. மத்திய விளையாட்டுத் துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு.

-ஆ.விஜயானந்த்

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை' அவமானத்தால் தற்கொலையா?

vikatan.com


சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஜீ தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒளிபரப்பாகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தொடர்பாக
சிலர் வழக்கும் போட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் (60) என்பவர் இது போன்றதொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அவமானப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் இரண்டு லாரிகள் சொந்தமாக வைத்திருந்தார். தனது மனைவி அம்பிகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மைத்துனி ரேணுகாவிடம் நெருக்கமாக வாழ்ந்துள்ளார். ரேணுகாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரேணுகாவின் கணவர் மகேந்திரன். ரேணுகா மீது சந்தேகமடைந்த மகேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பன் தரப்பினர் போலீஸுடம் சொன்னபோது,
''சொத்து பிரச்சனை காரணமாக ரேணுகா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நாட இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட நாகப்பனை ஒளிபரப்ப மாட்டோம் என்று உறுதி கொடுத்து பேசியுள்ளனர். ஆனால் நிகழ்ச்சியில் நாகப்பன் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் ரேணுகாவின் இரண்டு மகள்களிடம் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம்சாட்டியது ஒளிபரப்பானது. இதனால் மனமுடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தங்கள் தந்தை மரணத்திற்கு சொல்வதெல்லாம் உண்மைதான் காரணம் என்று நாகப்பன் மற்றும் அம்பிகா தம்பதியின் மகள் ஆதி , மகன் மணிகண்டன் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர். தனது தந்தை சாவுக்கு நியாயம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. நிகழ்ச்சி தொகுப்பாளரே நீதிபதி போல் தீர்ப்பு கூறியதால் மனமுடைந்து போனார் தனது தந்தை என்று மகன் மணிகண்டன்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வியாபார நோக்கத்துடன் குடும்பங்களில் சாதாரண சண்டைகளை பூதாகரமக்கி அவர்களது அந்தரங்கத்தை படம் பிடித்து போட்டு அதன் மூல காசு பார்த்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடும்பத்தினரை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என நாகப்பனின் உறவினர் சந்திரசேகர் கூறுகையில், 'சமீபத்தில் மேடவாக்கத்தில் ஒரு இடத்தை 45 லட்சம் ரூபாய்க்கு நாகப்பன் விற்றார். அந்தப் பணம் தொடர்பாகவே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரேணுகாவின் வீட்டில் நாகப்பன் குடியிருந்து வந்தார். அங்கும் தகராறு ஏற்பட்டதால் பெரும்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். போனிலேயே தற்கொலை செய்ய வேண்டாம் என்று அந்த உறவினர் தெரிவித்தார். அப்போது, செய்யாத தவறுக்கு என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்த அவமானத்திற்குப் பிறகு என்னால் வெளியில் நடமாட முடியாது.

இதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று நாகப்பன் விரக்தியில் பேசியதோடு இணைப்பையும் துண்டித்துவிட்டார். உடனடியாக உறவினர்கள் எல்லோரும் அவர் வீட்டிற்க்கு சென்றோம். ஆனால் அவர் அதற்குள் தற்கொலை செய்துவிட்டார். ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டபோதே அதை நிறுத்தும் படி, போனில் தகவல் தெரிவித்தோம். ஆனால், எங்களிடம் நிறுத்துவதாக சொல்லியவர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தி நாகப்பனை கேவலமாக பேசியிருக்கிறார்கள். மேலும், நாகப்பன் ரேணுகாவின் இரண்டு மகள்களிடமும் பாசமாக நடந்துகொள்வார். பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவார். அப்படி பாசமாக இருந்தவர் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் மீது நாகப்பனின் தாயார் நாகம்மாள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரில், தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் சேர்க்க நாங்க முடிவு செய்தபோது போலீஸார் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் அவரது பெயர் இல்லாமல் புகார் கொடுத்தும், போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். முதல்வர் தனிப்பிரிவிற்கும், சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அங்கேயும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவோம்.' என்றார்.


இதுகுறித்து ஜீ தமிழ், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்,

''இந்த சம்பவம் குறித்து, ஜீ தமிழ் தொலைகாட்சி நிர்வாகம் சட்ட வல்லுநர்களை வைத்து ஆராய்ந்து வருகிறது. இந்த செய்தியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி பெரிதுபடுத்தி வருகிறது. பொதுவாக, பிரச்னையோடு வரக்கூடிய நபர்களுக்கு நல்லது செய்வதே எங்களுடைய நோக்கம் ஆகும். எதிர்தரப்பையும் விசாரித்தே அவர்களுக்கான வழிகாட்டுதலை தருகிறோம். அந்த நிகழ்ச்சியில் நான் பேசியபோது கூட, 'குழந்தைகள் உதவி மையத்தின் தொடர்பு எண்ணான 1098 - ஐ தொடர்பு கொண்டு பிரச்னையை கூறியிருந்தாலே, அவர்கள் அதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பார்கள்', என்று சொல்லியிருந்தேன்.'' என்று கூறினார்.

-வே.கிருஷ்ணவேணி

விபத்துகள்

இங்கு விபத்துகள் விற்கப்படுகின்றன...!


சாலையோரக் கடைகளுக்கும் சாலை விபத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்விக்கு சாலையோரக் கடைகளே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று பதில் கிடைக்கிறது.

நீங்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவரா?... அப்படியென்றால், நீங்கள் ஒருநாளில் ஏதாவது ஓர் இடத்தில் திடீரென்று கண்களில் தாக்கும் நொடிப்பொழுது எரிச்சலை அனுபவித்திருக்கக் கூடும். கிராமப்புறங்களில் ஏதேனும் பூச்சி கண்களில் விழுந்துவிடுவதும், நாமும் சற்றுத் திணறி மோட்டார் சைக்கிளை ஓரம்கட்டிவிட்டுக் கண்களைக் கசக்கி, முகத்தைக் கழுவிவிட்டுப் பயணத்தைத் தொடர்வோம். நகர்ப்புறங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் அப்படி நடக்கிறது என்றால், அதற்கான காரணம் பூச்சிகள் அல்ல... சாலையோர புரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் (விரைவு உணவகங்கள்) இருந்து பறந்துவரும் மிளகாய்த்தூள் கலந்த மசாலாவே காரணம்.

குறிப்பிட்ட சில பாதைகள் வழியாகச் செல்லும்போது வாகனத்தை இயக்க முடியாமல் நாம் திணறுகிற அளவுக்கு கண்களில் வந்து காரமான அந்தத் துகள்கள் விழுவதை பலர் அனுபவித்திருப்பார்கள். அந்தவேளையில், வாகனத்தை இயக்குகிறவர், மதுபோதையில் இருந்தார் என்றால் அவரால் வாகனத்தைத் தன்னுடைய வசத்துக்குக் கொண்டுவர முடியாது. வாகனத்துக்கு அவர் வசப்பட்டு விடுவார். எங்காவது மோதி விபத்தையும் ஏற்படுத்திவிடுவார்.

தொடர்ந்து பலநாட்கள், இப்படியான ‘காரமான துகள்கள்’ கண்களில் மோதுவது எப்படி என்று விடாமல் சேசிங்கில் இருந்து கவனித்தபோதுதான் இந்த உண்மை தெரியவந்தது. மேலும் இதுபோன்ற கடைகளில் இருபுறமும் வைக்கப்பட்டிருக்கும், ‘எக்ஸார்சிஸ்ட் ஃபேன்’கள், உள்ளிருந்து காரத்துகள்களை அப்படியே இழுத்துச் சாலைக்கு அனுப்பிவைக்கின்றன. ஒன்றல்ல... இரண்டு ஃபேன்கள்!

‘‘இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்காரர்களிடம் எச்சரிக்கை செய்யவேண்டும். எக்ஸார்சிஸ்ட் ஃபேன்வைத்து உள்ளிருந்து, ‘காரப்பொடி துகள்கள்’ வெளியே வராத அளவுக்கு ஃபேனுக்கு மறைப்பாக ஓர் அட்டையைவைக்க வேண்டும். அப்படி வைத்திருக்கிறார்களா என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனையிட வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டுத் துறை, ஹெல்த் டிபார்ட்மென்ட் முதலிய துறையினரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஃபாஸ்ட் ஃபுட் கடைகளால்தான் பைக்கில் போகிறவர்கள் அதிகமான சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால், ஒரு ஏரியாவிலேயே வாரத்தில் 10 விபத்துகள் நடந்துவிடுகின்றன. சாலை விபத்துகளைத் தடுக்கவும், மனித உயிர்களைக் காக்கவும் அரசும், அதிகாரிகளும் இதன்மீது அதிக சிரத்தை எடுத்து கவனம் செலுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 67,250 சாலை விபத்துகளில் 77,725 பேர் காயமடைந்து உள்ளனர். 15,190 பேர் இறந்துள்ளனர். நாட்டிலேயே, தமிழகத்தில்தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. நாட்டின் மொத்த சாலை விபத்துகளில் 14.9 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெற்று உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற விபத்துகளோடு ஒப்பிடும்போது 2014-ல் தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.

சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 26.4 சதவிகிதமும், லாரி மற்றும் கனரக ஓட்டுநர்கள் 20.1 சதவிகிதமும், காரில் செல்பவர்கள் 12.1 சதவிகிதமும், பேருந்து ஓட்டுநர்கள் - பயணிகள் 8.8 சதவிகிதமும் பாதிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் கூறுகிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர், 26.4 சதவிகிதம் சாலை விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம், அதாவது, நடக்கிற விபத்துகளில் கால்பங்கைவிட 1.4 சதவிகித கூடுதல் சாலை விபத்துகள், இரு சக்கர வாகன ஓட்டிகளால் நிகழ்கிறது.

எல்லாமே அவசரம், அவசரம் என்றாகிவிட்டதில் நாடு முழுவதும் சிறு, சிறு ஹோட்டல்களாக முளைத்திருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் சேவை அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அவசியமாகிவிட்டது. சைவப் பிரியர்கள்தான் இந்த வகை உணவகங்களில் இருந்து தங்களின் வயிறைக் காப்பாற்றி, வாழ்க்கையின் எஞ்சிய காலத்தைப் பாதுகாப்பாக ஆக்கிக் கொண்டுள்ளனர். முந்தைய சில தினங்களுக்கு முன்னர் வாங்கிவைத்த சிக்கனையும், மட்டனையும் வினிகரில் கழுவி, ‘அவசர உணவு’ தயாரிப்புக்கான வாணலியில் மசாலாவுடன் போட்டு உருட்டி, புரட்டி கம்பியில் விட்டுத் தூக்கும்போது சொட்டுகிற எண்ணெய்யின் வழியாக ஒருபோதும்
கறிச்சுவை கெட்டுப்போனதை அறிய முடிவதில்லை.

முகர்ந்து பார்த்தால் மனசே நாற்றமடித்துப் போகும் சில்லி சாஸ், தக்காளி சாஸ்களை சிக்கனின் லெக்-பீஸை சுற்றிலும் ஊற்றி அதில் ஒரு தனிச்சுவையை தேடிடும் ஆராய்ச்சியும் அதிக அளவில் தமிழகத்தில்தான் நடக்கிறது. இது போதாதென்று உயிரைப் பறிக்கும் விபத்துகளும் நடக்கிறது.


உஷார் மக்களே!

- ந.பா.சேதுராமன்

கற்பை நிர்ணயிக்க நாம் யார்?

கற்பை நிர்ணயிக்க நாம் யார்?

Return to frontpage


Inline image 1

கன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை

ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படுவது, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் கொடூரம். பெண்களின் ‘கற்பை’ச் சோதனையிடுவதும் நிர்ணயிப்பதும், அதைக் காரணமாகச் சொல்லி அவர்களின் வாழ்க்கையையே சிதைப்பதும் இன்னமும் பல இடங்களில் நடப்பதுதான் இன்னும் வேதனை!

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தின் நாசிக்கில், போலீஸ் வேலையில் சேரப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த 25 வயதுப் பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது திருமணம். இருவரும் ‘கஞ்சர்பாத்’ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் சமூகம் அது. கண்காணிக்கவும், தண்டனை வழங்கவும் ‘சாதிப் பஞ்சாயத்து’ உள்ளது. அதை மீறி யாரும் காவல்துறைக்கோ நீதிமன்றத்துக்கோ செல்ல முடியாது. திருமணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்தார் அந்த மனிதர், மனைவி கன்னித்தன்மை இழந்தவர் என்ற புகாருடன். அவருக்குத் துணை நின்றது, அச்சமூகத்தின் விநோதமான ‘விதிமுறை’.

அந்தச் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மைக்கு ‘சாதிப் பஞ்சாயத்து’அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முதலிரவின்போது, தம்பதிகள் இருக்கும் அறைக்கு வெளியில் பஞ்சாயத்தார் காத்திருப்பார்கள். வெண்மையான துணி விரிப்பின் மீதுதான் முதலிரவு நடக்கும். அவர்களைப் பொறுத்தவரை, துணிவிரிப்பில் படும் ரத்தக் கறைதான் மணப்பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் சோதனை. உறவின்போது மனைவிக்கு ரத்தம் வரவில்லை. எனவே, அவள் ‘கன்னித்தன்மை அற்றவள்’ என்றார் அந்த நபர். அவருக்கு இது இரண்டாவது திருமணம். இரண்டாவது மனைவியும் கன்னியாகத்தான் வேண்டும். என்ன புனிதம் பாருங்கள்!

கண்டுகொள்ளப்படாத கண்ணீர்

தான் கன்னிதான் என்றும், கடுமையான உடற்பயிற்சி காரணமாக உடலில் மாற்றம் ஏற்பட்டு ரத்தம் வராமல் இருந்திருக்கலாம் என்றும் கதறினார் அந்தப் பெண். அதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. தாலி கட்டிய ஒரே நாளில் திருமணத்தை ரத்து செய்துவிட்டது பஞ்சாயத்து. அடுத்த நாள், போலீஸில் புகார் செய்ய மணப் பெண்ணும் அவர் தாயாரும் தயாரானபோது, சாதிக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த அப்பெண்ணின் தந்தை, அவர்களிடமிருந்த செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டு இருவரையும் அறையில் பூட்டிவைத்தார். சம்பவத்தைக் கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மூலம்தான், விஷயம் வெளியில் வந்தது.

கற்பு என்பது மனம் தொடர்பானது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. தன் விருப்பம் இல்லாமல், சூழ்நிலை காரணமாகப் பலாத்காரம் செய்யப்பட்டவரைக் கற்பிழந்தவராகக் கருத முடியாது. கற்பும் கன்னித்தன்மையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதனால்தான் ‘கற்பு நிலை என்று சொல்லவந்தார் / இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்றார் பாரதி. ஆனால், கற்பும் கன்னித்தன்மையும் பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று பொதுப் புத்தியில் உறைந்துபோயிருக்கிறது.

‘கஞ்சர்பாத்’ சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களில் இந்தக் கொடூரமான முட்டாள்தனம் பின்பற்றப்படுகிறது. சோதனையில் தோல்வியுறும் பெண்ணின் திருமணம் உடனடியாக ரத்து செய்யப்படும். அவர் யாருடன் முதல் உறவு கொண்டார் என்று கேட்டு, அவரைச் சித்ரவதையும் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை கன்னிப் பெண் என்றால், முதல் உறவின்போது ரத்தம் வர வேண்டும். சைக்கிள் ஓட்டுவதன் மூலமோ அல்லது உடற்பயிற்சியின்போதோ கன்னித்திரை கிழியும் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஏற்கெனவே, உறவுகொண்டதாக ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பஞ்சாயத்து அபராதம் விதிக்கும்.

இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில போலீஸாருக்கு மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகைமுரண் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக, சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவும், சாதிப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும் 2016-ல் சட்டம் நிறைவேற்றியது மகாராஷ்டிர மாநிலம்தான். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற அமைப்புகளுக்கும், மனிதத்தன்மையே இல்லாத விதிகளுக்கும் முடிவு கட்டப்படலாம்.

அநாகரிகம்

2013-ல் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுஹான் தலைமையில், ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அப்போது, அப்பெண்களில் பலர், மாவட்ட அதிகாரிகளால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009-லும் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தியாவில், சமீபகாலம் வரை பாலியல் வல்லுறவு வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ‘கன்னித்தன்மை அற்றவர்கள் உறவுக்குச் சம்மதித்திருக்கலாம் என்ற அனுமானம் தவறானது. எனவே, கன்னித்தன்மை பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று 2013-ல் பி.எஸ்.சவுஹான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சொல்லிவிட்டது. ஆனாலும், சில நீதிமன்றங்கள் கன்னித்தன்மை பரிசோதனையைப் பின்பற்றுகின்றன.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதிசெய்ய பெண்களின் பிறப்பு உறுப்பில் நடத்தப்படும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அதைத் தடைசெய்தது மத்திய சுகாதார அமைச்சகம்.

பல நாடுகளில் கன்னித்தன்மை பரிசோதனை உள்ளது. பெரும்பாலும் பெண்களின் கன்னித்தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்புவது கணவர்கள்தான். சில நாடுகளில் அரசுத் துறைகளே அந்தக் கேள்வியைக் கேட்கின்றன. தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு வருடமும் ‘ரீட் டான்ஸ்’ என்ற அரை நிர்வாணக் கலை நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்துகொள்ளப் பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 2016-ம் ஆண்டு புதிய விதியின்படி, இந்தோனேசிய ராணுவத்தில் சேர, ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை அந்நாட்டு போலீஸில் பெண்கள் சேர கன்னித்தன்மை சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கம் ஆட்சேபணை செய்ததால் இந்த நிபந்தனை நீக்கப்பட்டது.

பட்டியல் இன்னும் முடியவில்லை. ஈரானில், ஏடெனா ஃபர்கடானி என்ற கார்ட்டூனிஸ்ட், தன் ஆண் வழக்கறிஞருடன் கைகுலுக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 1970-களில் திருமண விசாவில் பிரிட்டனுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய வரலாறு உண்டு.

பெண்கள் உலகமெங்கும், எல்லாத் துறைகளிலும் பல தடைகளை உடைத்து முன்னேறி நாட்டை ஆள்கிறார்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். எத்தனையோ சாதனைகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, தங்கள் ஒழுக்கத்தை நிரூபிக்க இப்படியெல்லாம் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை என்பதைச் சமூகம் உணர வேண்டும். இது அவர்களது தனி உரிமையில் தலையிடும் விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இதற்கெனத் தனியான சட்டமோ அல்லது சிறப்புச் சட்டமோ தேவையில்லை. இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதைச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களின், சமுதாயத்தின் பொறுப்பும்கூட!

- என்.ரமேஷ், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: nrameshadvocate@gmail.com

Wednesday, August 24, 2016

சிந்து பெயரை மறந்த ஹரியானா முதல்வர்!

கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வாங்கிய பெண்ணாம்... சிந்து பெயரை மறந்த ஹரியானா முதல்வர்!


சண்டீகர்: சாக்ஷி மாலிக்கிற்கு நடந்த பாராட்டு விழாவின்போது, பி.வி.சிந்து பெயரை மறந்ததோடு, அவரை கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை என கூறியுள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.

ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக், சமீபத்தில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக், மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய சாக்ஷிக்கு இன்று பாராட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் மனோகர் லால் கட்டார், சாக்ஷிக்கு ரூ.2.5 கோடி பரிசு வழங்கினார்.

விழாவில் மனோகர் கட்டார் பேசுகையில், பேட்மின்டனில் வெள்ளி வென்ற சிந்து பெயரை குறிப்பிட நினைத்தார். ஆனால் பெயர் மறந்துவிட்டது. எனவே, கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வென்ற வீராங்கனைக்கும் வாழ்த்து என எதையோ கூறி சமாளித்தார்.

உண்மையில், சிந்து, ஹைதராபாத்தை சேர்ந்தவர். எனவே அவர் தெலுங்கானாவுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என இரு மாநிலத்தவர்களும் அடித்துக்கொள்கிறார்கள். இதில் ஹரியானா முதல்வர் புது பஞ்சாயத்தாக கர்நாடகாவையும் இழுத்துவிட்டுள்ளார்.

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பெயரை தவறாக உச்சரித்து சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.


மூலக்கதை

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் வழக்குகள்:

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் வழக்குகள்: நிரந்தர உத்தரவு இருந்தும் பலனில்லை

கி.மகாராஜன்

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தவணை முறையில் பணப்பலன்கள் வழங்கலாம் என உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவு இருந்தபோதிலும், தனித் தனியாக உத்தரவு பெற வேண்டும் என ஊழியர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேவையில்லாமல் வழக்குகள் குவிந்து வருகின்றன.

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் பணிக் கொடை, விடுமுறை நாள் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் ஓய்வு பெற்ற பிறகும் போக்குவரத்துக் கழக அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். நஷ்டத்தை காரணம் காட்டி பணப்பலன்களை வழங்காமல் போக்குவரத்துக் கழ கங்கள் இழுத்தடித்து வருகின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நூற் றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பணப்பலன்களை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை மொத்தமாக விசாரித்த உயர் நீதி மன்ற அமர்வு, ஓய்வூதியர்களுக்கு 12 தவணைகளில் 6 சதவீத வட்டியுடன் பணப்பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற அமர்வின் இந்த உத்தரவே இறுதியானது. ஆனால், அதன்படி ஓய்வூதிய பணப்பலன்களை போக்குவரத்துக் கழக நிர்வாகம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஓய்வுபெறும் ஒவ்வொருவரும் பணப்பலன்களுக்காக நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து தனித் தனியாக உத்தரவு பெற்று வருமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறப் படுகிறது.

வழக்குகள் குவிகின்றன

ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனை வரும் நீதிமன்றத்துக்கு செல்வ தால் அவர்களுக்கு வீண் சிரமம் ஏற்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தேவையில்லாமல் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மட்டும் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்துக் கழக ஊழியர் களின் பணப்பலன்கள் தொடர்பாக 5,000-க்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தவணை முறை யில் பணப்பலன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளன. தினமும் 50 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படுகின்றன.

போக்குவரத்துக் கழக ஊழியர் களின் பணப்பலன் உட்பட ஏற் கெனவே முடிவான விவகாரம் தொடர்புடைய வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் வேலைப்பளுவை வும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்கிறது. இந்த வழக்குகளால் உயர் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. ஏற்கெனவே நீதிபதிகளின் எண்ணிக்கை குறை வாக உள்ள நிலையில், மற்ற வழக்குகளை விசாரிக்க நேரமில் லாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:

மதுரை கோட்டத்தில் 2012-ல் ஓய்வுபெற்ற 3,000 பேருக்கு இன்னும் பணப்பலன்கள் வழங்கப் படவில்லை. இவர்களில் 1,500 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மீதமுள்ளவர்களையும் நீதிமன்றத் தில் வழக்கு தொடர வைப்பதற்காக திடீர் புரோக்கர்கள் உருவாகி உள்ளனர். உயர் நீதிமன்ற அமர்வின் இறுதி உத்தரவு அடிப்படையில் போக்குவரத்துக் கழக ஊழியர் களுக்கு தவணை முறையில் பணப்பலன்களை வழங்க வேண் டும். இது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு, அரசாணை வெளியிட வேண்டும் என்றார்.

NEWS TODAY 23.12.2025