Sunday, September 11, 2016

ரயில் பெட்டியை தாழிட்டு இளம்பெண்ணிடம் பலாத்காரம்: ரயில்வே ஊழியர் அதிரடி கைது


திருச்சி: திருச்சி ஜங்ஷன் எடமலைப்பட்டிபுதூர் யார்டில் ரயில்வே பெட்டிகளை பராமரிப்பு பணி நடப்பது வழக்கம். இங்கு புதுக்கோட்ைட ஆலங்குடியை சேர்ந்த மரியச்செல்வம் (40) என்பவர் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் ஊழியராக கடந்த 10 ஆண்டாக பணியில் உள்ளார். 3 மாதங்களுக்கு முன் துப்புரவு பணிக்காக 23 வயது இளம்பெண் புதிதாக பணியில் சேர்ந்தார். இவருக்கு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. கடந்த 5ம் தேதி ரயில் பெட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அந்த பெட்டியில் ஏறிய மரியசெல்வம், ரயில் பெட்டியின் கதவை தாழிட்டு, அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கத்தி கூச்சல் போட்ட இளம்பெண், மரியசெல்வத்திடமிருந்து தப்பி ரயில் பெட்டி கதவை திறந்து வெளியே ஓடிவந்தார். யார்டில் பணியில் இருந்த சூப்பர்வைசரிடம் புகார் அளித்தார். பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இளம்பெண்ணின் புகாரை பெற்றும் சூப்பர்வைசர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று திருச்சி ஜங்ஷன் வந்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

இதையடுத்து அத்துமீறி கதவை தாழிட்டல்(342), அடித்து காயப்படுத்துதல்(322) மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிந்தனர். தலைமறைவாக இருந்த மரியசெல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ரயில் பெட்டியில் சகபெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

20,000 கிமீ நீளத்துக்கு உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை : சீனா நிறைவு செய்தது


பீஜிங்: 20 ஆயிரம் கிமீ நீளத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைத்து, உலகின் மிக நீளமான புல்லட் ரயில் நெட்வொர்க்கை சீனா நிறைவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் சீனா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் மத்திய ஹெனான் மாநிலத்தில் உள்ள ஜெங்சோ என்ற இடத்தில் இருந்து கிழக்கு ஜியாங்சூ மாநிலம் சூஜோ என்ற இடம் வரையில் 362 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் போக்குவரத்தை சீனா நேற்று தொடங்கியது. இதன் மூலம் சீனாவின் புல்லட் ரயில் பாதைகளின் மொத்த தூரம் 20,000 கிமீ தூரத்தை தாண்டிவிட்டது. இவ்வளவு தூரத்துக்கு உலகில் வேறு எங்கும் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படவில்லை.

இதன் மூலம் ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையோன பயண நேரம் 11 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையேயுள்ள உள்ள 9 ரயில் நிலையங்களை மணிக்கு 300 கிமீ வேகத்தில் புல்லட் ரயில் கடக்கிறது. இந்த புல்லட் ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

கடந்த ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடந்தது. சீனாவில் தற்போது 20 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பானுடன் சீனா போட்டி போட்டு வருகிறது. இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் பாதை ஒப்பந்தத்தை ஜப்பான் பெற்றுள்ள நிலையில், சென்னை-டெல்லி இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் ஆய்வு பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
தாம்பத்ய உறவுக்கு மறுத்த பெண்ணுக்கு மருத்துவ சோதனை

மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2010 டிசம்பரில் திருமணம் நடந்தது. அப்போது கணவனுக்கு வயது 38. மனைவிக்கு 33. இருவருக்குமே இது 2வது திருமணம். திருமணத்திற்கு பின் தாம்பத்ய உறவுக்கு மனைவி தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால் 2011ல் விவாகரத்து கேட்டு கணவன் குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘மனைவி குடும்பம் நடத்த தகுதி இல்லாதவர். எனவே விவகாரத்து வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த பெண்ணை சோதிக்கும்படி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அவர் தாம்பத்திய உறவுக்கு தகுதியானவர் தானா அல்லது குறைபாடு உடையவரா என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மும்பை ஜெ ஜெ மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த பெண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘குடும்ப நல கோர்ட் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.தத் விசாரித்தார். அப்போது கணவர் சார்பில் ஆஜரான வக்கீல் ரமேஷ்லால்வானி வாதாடுகையில், ‘‘திருமணமானபின் 3 மாதங்களாக மனைவி தாம்பத்ய உறவுக்கு அனுமதிக்கவில்லை. எனவே அவர் திருமண உறவுக்கு தகுதியானவர் அல்ல. இதற்கு மருத்துவ பரிசோதனை தேவை’’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெண்ணை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த குடும்ப நல கோர்ட் வழங்கிய உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.
பத்தரை மாற்று தங்கம்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை. ஆண்கள் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் மாரியப்பன். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் வெண்கலம் வென்றிருக்கிறார். ஊனம், ஏழ்மை, ஏளனம் போன்ற தடைக்கற்களை தகர்த்தெறிந்து சிகரத்தை எட்டியிருக்கும் இந்த வீரர்களின் சாதனை, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது. பாராலிம்பிக் போட்டியில் கிடைத்த தங்கம் என்று இதை குறைத்து மதிப்பிடுவது கூடாது. உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களின் கடுமையான போட்டியை சமாளித்து மாற்றுத் திறனாளியான மாரியப்பன் வென்றுள்ளது பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது மகத்தான வெற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும்.

காதல் என்ற பெயரில் பெண்களை வெட்டிச் சாய்த்து, அமிலம் ஊற்றி சிதைத்து, பின்னர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அளித்த நிலையில், இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஆக்கசக்தியாக, குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாரியப்பனின் வெற்றி உணர்த்துகிறது. சாதனை வீரருக்கு பாராட்டு, வாழ்த்துகளுடன் கோடிக் கணக்கில் ரொக்கப் பரிசுகளும் குவிகின்றன. வென்றவர்களை பாராட்டுவதும், கவுரவிப்பதும் நமது கடமை. அப்போது தான் மாரியப்பன், வருண் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களை கடுமையாக முயற்சிக்கத் தூண்டும். நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறமையான சிறுவர் சிறுமியரை தேர்வு செய்து உணவு, உடை, கல்வி, பயிற்சி என அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும்.

அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து, எதிர்காலம் பற்றிய கவலையை போக்க வேண்டியதும் அவசியம். வெற்றியாளர்களை தோளில் தூக்கிக் கொண்டாடும் அதே சமயம், தோற்றவர்கள் துவண்டு விடாமல் முனைப்புடன் தங்கள் முயற்சியை தொடர ஆதரியுங்கள். ஒலிம்பிக்ஸ் முடிந்து பரபரப்பு ஓய்ந்ததும் விளையாட்டுத் துறை அமைச்சகம், அதிகாரிகள், நிர்வாகிகள் வழக்கம் போல தூக்கத்தில் ஆழ்ந்துவிடாமல், 2020ஐ மனதில் வைத்து ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

வெறி கொலைகளுக்குப் பின்னே மறைந்து கிடக்கும் மனசு!



நன்றி குங்குமம் டாக்டர்

ஏன் இந்த கொடூரம்?

திரும்பிய திசையெல்லாம் ரத்தம் தெறித்த இந்த ஜூன் மாதத்தை இனி எப்போதும் மறக்க முடியாது. மாடியிலிருந்து நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுவதிலிருந்து, ரயில்நிலையத்தில் ஒரு பெண்ணை வெட்டிக் கொல்வது வரை நாம் பார்த்தவை அனைத்தும் பதற வைக்கும் பயங்கரங்கள். சட்டம் ஒழுங்கு் குறைபாடு, மதுப்பழக்கம், ஆணாதிக்கம் என்று இந்த அசம்பாவிதங்களுக்கு எல்லாம் பல காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால், அவை எல்லாமே கிளைக் காரணங்கள்தான். இவற்றின் ஆதாரமான, ஆணிவேரான காரணம் ஒன்று உண்டு. அது… மனசு! அதிர்ஷ்டவசமாக மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது நமக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக அதை நாம் பின்பற்றுவதில்லை. மனிதர்களின் மனம் ஏன் இத்தனை வன்மமாக மாறுகிறது?

இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? உளவியல் மருத்துவரான கார்த்திக்கிடம் பேசினோம்…‘‘கோபம், காதல், சோகம் போன்ற நம் உணர்ச்சிகள் எல்லாம் மூளையில் Limbic system என்ற பகுதியில்தான் உருவாகிறது. இந்த உணர்ச்சிகளைக்கட்டுப்படுத்தும் வேலையைச் செய்வது Frontal lobe என்ற மூளையின் முன்பகுதி. இந்த ஃப்ராண்டல் லோப் செயல்படவில்லை என்றால்தான், அது வெறியாக மாறுகிறது. அதற்கு வடிகால் வேண்டும் என்று தவிக்கும்போது குற்றங்கள் நடக்கின்றன. காதலனுடன் சேர்ந்து தந்தையையே ஒரு பெண் கொன்ற செய்தியைப் பார்த்திருப்பீர்கள். அப்பாவைக் கொல்லலாமா, ஜெயிலுக்குப் போவோமே, மற்றவர்கள் தவறாகப் பேசுவார்களே என்பதையெல்லாம் யோசிக்கும் அளவு அந்தப் பெண்ணின் ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையவில்லை.

பல கள்ளக்காதல் கொலைகளின் அடிப்படைக் காரணம் இதுதான். கணவனையோ, மனைவியையோ கொலை செய்துவிட்டால் சந்தோஷமாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள். ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் என்கிற பின்விளைவை மறந்துவிடுகிறார்கள். எதிர்காலத்தை மறந்து செய்யப்படும் இந்த எல்லாக் குற்றங்களும் ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையாதவர்களால்தான் நடக்கிறது.’’ஃப்ராண்டல் லோப் வளர்ச்சி எதனால் பாதிக்கப்படுகிறது? ‘‘மரபியல் ரீதியாக சிலருக்குப் பாதிக்கப்பட்டாலும், Micro environment என்கிற குடும்ப, சுற்றுப்புறச்சூழல்தான் பெரிய காரணமாக இருக்கிறது. அதனால், குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தை திருடும்போது கண்டிக்க வேண்டும்.

அப்போது திருடுவது தவறு என்று அந்தக் குழந்தை புரிந்துகொள்ளும். முக்கியமாக, ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையும் காலம் 18 வயது முதல் 24 வயது வரை என்பதால் குழந்தைகளை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு நிறைய இருக்கிறது.’’சினிமாக்களால் குற்றங்கள் அதிகமாகிறதா? ‘‘இது தவறான கருத்து. சமூகத்தில் நடப்பதைப் பிரதிபலிக்கும் ஓர் ஊடகம்தான் சினிமா. அடிப்படையிலேயே வன்முறை எண்ணம் கொண்ட ஒருவன், சினிமா பார்க்காவிட்டாலும் கொலை செய்வான். பட்டப்பகலில் ஒரு கொலை நடக்கிறது. சுற்றியிருக்கிறவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியை மறைக்க யார் மீதாவது பழி போடுகிறோம். பொறுப்பேற்றுக் கொள்ளும் நேர்மை இல்லாதவர்கள்தான் இதுபோல மற்றவர்களைக் குறை சொல்கிறார்கள். அதிலும் சினிமா எப்போதும் எளிதான இலக்காக இருக்கிறது.

அரசியல்வாதிகளையோ, போலீசையோ நம்மால் பகிரங்கமாக குற்றம் சொல்ல முடியாது. அதற்குப் பின்விளைவுகள் உண்டு. சினிமா பிரபலங்களை விமர்சிக்கலாம். அதில் விளம்பரமும் கிடைக்கும். அவர்களிடமிருந்து நமக்கு பிரச்னையும் வராது. திரைப்படக் கலைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஆக்கப்பூர்வமான மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள், சினிமாதான் காரணம் என்று சொல்லிவிட்டுத் தப்பிக்கக்கூடாது. தவறுக்கு நானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதுதான் மாற்றத்துக்கு வழி.’’கோபம் எப்போது ஆபத்தாக மாறுகிறது? ‘‘கோபம் ஓர் இயல்பான உணர்ச்சி. அதைக் கையாளும் விதத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண மனிதர்கள் கோபப்பட்டாலும் அதன்பிறகு அதை நினைத்து வருந்துவார்கள். அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள்.

ஃப்ராண்டல் லோப் வளர்ச்சி குறைந்தவர்களின் உணர்ச்சிகள் வேறு வகை. இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர மாட்டார்கள். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் Mirror neurons இவர்களுக்கு செயல்படாது. ஒருவன் மாடியில் இருந்து நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுவதற்குப் பின்னால் இருப்பது இந்த மிரர் நியூரான்கள்தான். நாய்க்குட்டியின் உணர்வைப் புரிந்துகொள்ளாதவன் மனிதர்களையும் அதேபோலத்தான், மாடியிலிருந்து தூக்கிப்போடுவான்.’’மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாகிவிடுவார்களா? ‘‘தானாகப் பேசுவது, சிரிப்பது போன்ற கோளாறுகள் எல்லாம் உடல்ரீதியான குறைபாட்டால் வரும் பிரச்னை. அதில் ஆபத்து இல்லை. மருந்துகள் கொடுத்தால் குணமாகிவிடுவார்கள்.

இவர்கள் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க மாட்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் கிட்டத்தட்ட குழந்தைகளைப் போன்றவர்கள். ஆனால், Personality disorder கொண்டவர்கள்தான் குற்றவாளிகளாகிறார்கள்.’’கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்…‘‘Personality disorder என்ற குணக்கோளாறில் இரண்டு வகை இருக்கிறது. Anti social personality என்ற முதல் வகையைச் சேர்ந்தவர்கள் சமூகத்துக்கு எதிரான குற்றங்களை விருப்பத்துடன் செய்வார்கள். ‘நோ பார்க்கிங்’ என்றால் அங்கேதான் வண்டியை நிறுத்துவார்கள். பணம் என்பதைத் தாண்டி குற்றச்செயல்களைச் செய்வதில் அலாதியான விருப்பம் இருக்கும். கூலிப்படையினர், தீவிரவாதிகள் எல்லாம் இந்த வகையினர்தான். இந்தப் பிரச்னை ஆண்களுக்கு அதிகம் ஏற்படும்.

இதில் இரண்டாவது வகை Border line personality. காதலுக்காகக் கொலை செய்கிறவர்கள் இந்த பார்டர் லைன் பர்சனாலிட்டியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு சுயமதிப்பு இருக்காது. இவர்கள் மற்றவர்களைச் சார்ந்தே இருப்பார்கள். உணர்வுரீதியாக வாழ்க்கையைக் கையாள்கிற பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படும்.’’காதல் கொலைகள் பற்றி...‘‘ ‘நீயில்லாமல் நானில்லை’, ‘நீயில்லாவிட்டால் நான் செத்துருவேன்’ என்பதையெல்லாம் ஆரோக்கியமான மனநிலையில் இருப்பவர்கள் சொல்வது இல்லை. இது பார்டர் லைன் பர்சனாலிட்டியின் அறிகுறி. ஆனால், இதை காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குக் காதல் சம்மதம் கிடைத்தாலும் அமைதியாக இருக்க மாட்டார்கள்.

அதன் பிறகுதான் பிரச்னையே ஆரம்பிக்கும். வேறு யாராவது நம் காதலுக்குக் குறுக்கே வந்து விடுவார்களோ என்கிற பயம் வந்துவிடும். இதன் எதிரொலியாக ‘எங்கே இருக்கிறாய்’, ‘யாருடன் இருக்கிறாய்’ என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சண்டை, சச்சரவு வந்துகொண்டே இருக்கும். கடைசியில் வாழ்க்கையே நரகமாகி விடும்...’’காதல் தோல்வியை இளைஞர்கள் எப்படிக் கையாள வேண்டும்?‘‘ஓர் உறவு முறியும்போது இழப்பு இருவருக்கும்தான். அதனால் விலகலாம் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால் அதற்கு மற்றவர் மரியாதை கொடுக்க வேண்டும். அந்த உறவை இறுக்கிப் பிடிக்க முயற்சித்தாலே, நம் மீது நமக்கு மதிப்பு குறைவாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் கொண்டவர்கள் காதல் தோல்வியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்தப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்குத்தான் இழப்பு என்று நினைப்பார்கள். சுயமதிப்பு இல்லாதவர்களால் இந்த நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதான் கொலையாகவோ, தற்கொலையாகவோ மாறுகிறது. ’’நாம் ஆபத்தான உறவில் இருக்கிறோம் என்பதை உணர முடியுமா?‘‘சுயநலத்துக்காக ஒருவர் உங்களை நிர்பந்தப்படுத்திக் கொண்டே இருந்தால் அவர் ஆபத்தானவர். ‘என் கூடவே இருக்க வேண்டும்’, ‘என்னுடன் இந்த இடத்துக்கு வர வேண்டும்’ என ஒருவரிடமிருந்து டிமாண்ட் வந்துகொண்டே இருந்தால், நீங்கள் ஆபத்தான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறவரும் பிரச்னைக்கு உரியவரே. இதேபோல, சிறிய பிரச்னைக்குக் கூட 4 நாட்கள் பேசாமல் இருக்கிறவர்கள், ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறவர்களிடமும் கவனம் அவசியம்.

இன்னொரு வகையும் உண்டு. ரொம்பவும் அமைதியாக, யாரிடமும் பேசாமல் சிலர் ஒதுங்கியே இருப்பார்கள். இவர்களை நல்லவர் என்று சமூகம் நினைக்கும். ஆனால், நல்லவர்களின் அடையாளமே சமூகத்தோடு நன்றாகக் கலந்து பழகுவதில்தான் இருக்கிறது. அதனால், இவர்களிடமும் விலகி இருப்பதே நல்லது.
சுதந்திரம் கொடுத்து, தேவைப்படும்போது உதவி செய்கிற, நம்மைப் புரிந்துகொள்கிறவர்களுடனே நட்பு பாராட்ட வேண்டும்.’’காதல் தொந்தரவுகளை சமாளிக்க வழிகள் என்ன?‘‘ஆண்பெண் உறவு கண்ணாடிப் பொருட்களைக் கையாள்வது போலத்தான். ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவருக்கு மனதில் அந்த அபிப்பிராயம் வந்துவிடும் என்பதால் கவனமாகவே கையாள வேண்டும்.

ஒருவேளை, அந்த உறவு சரிவராது என்று நினைத்தால் எதிராளியின் ஈகோவை சீண்டுகிற மாதிரி அவமானப்படுத்துவதோ, மிரட்டுவதோ தவறு. அது மோசமான பின்விளைவுகளையே உண்டாக்கும். காதல் இம்சை செய்கிறவர்களைத் தனியாக சமாளிக்க முடியும் என்று நம்புவதும் தவறு. மற்றவர்களின் உதவியோடு பக்குவமாகவே அந்தப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும்.நன்றாகப் பழகிய பின்னர், காதலைச் சொல்லும் நிலைக்கு வந்தபிறகு, ஒருவரை மறுக்கும்போதுதான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதனால், ஆரம்பத்திலேயே போதுமான இடைவெளியுடன் பழகுவது நல்லது. ஒருவரின் குணம் முழுமையாகத் தெரியாமல் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

சமூக வலைத்தளங்களில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக் கொள்வதி லிருந்து, அவருடைய மெசேஜுக்கு பதில் தருவதிலிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கையாள வேண்டும். நேரில் பேசி, பழகியவரை முகநூலில் நண்பர்களாக வைத்துக் கொள்வதே நல்லது.’’மனநலம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?‘‘உடல்நலத்துக்காக உணவில் கவனம் செலுத்துகிறோம், உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஆனால், மனதை நாம் பொருட்படுத்துவதில்லை. மன ஆரோக்கியத்துக்காக எந்த முயற்சிகளும் செய்வதில்லை. நம் கல்வித் திட்டத்திலும் மனம் என்ற விஷயமே இல்லை. மருத்துவம் படிக்கிறவர்களுக்கே உளவியல் பற்றித் தெரியாது. அதனால்தான் உணர்வு ரீதியான பிரச்னைகளை சமாளிக்கத் தெரிவதில்லை. ஒருவர் தானாகப் பேசினாலோ, சிரித்தாலோதான் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், நமக்குள் இதுபோல நீறுபூத்த நெருப்பாக இருக்கும் குணக்கோளாறுகளை உணர்வதில்லை.’’ஆரோக்கியமான மனநிலை கொண்ட குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

‘‘ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழல் என்று சொன்னால், அதை குழந்தை புரிந்துகொள்ள வேண்டும். அழுது, அடம்பிடித்தால் அந்தக் குழந்தை ஆபத்தாக வளர்கிறது என்று அர்த்தம். தொடர்ந்து அதே பிடிவாதத்தை எல்லா விஷயத்திலும் கடைபிடித்தால் மனநல ஆலோசகரிடம் அழைத்துப் போவதுதான் சரி. ஆர்ப்பாட்டம் பண்ணினால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வளர்கிற ஒருவன், வளர்ந்த பிறகு ஒரு பெண்ணிடமும் அதே ரீதியில் காதலை எளிதாக எதிர்பார்ப்பான். அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவனால் தாங்கிக் கொள்ளாமல் விபரீதம் நடக்கும். ஐஸ்கிரீம் என்ற சின்ன விஷயத்தில் ஆரம்பிப்பதுதான் ஒரு பெண்ணைக் கொலை செய்வதில் முடியும். அதனால், உடனுக்குடனே கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி குழந்தைகளை வளர்க்கக் கூடாது. சைக்கிள் கேட்டால், ‘நல்ல மார்க் எடுத்தால் வாங்கித்தருகிறேன்’ என்று சொல்ல வேண்டும். அப்போது கஷ்டப்பட்டால்தான் பலன் கிடைக்கும் என்கிற பக்குவம் வரும்.’’மன ஆரோக்கியத்தை அளவிட எதுவும் வழிகள் இருக்கிறதா?

‘‘ஒரு பிரச்னை வருகிற போது தனக்கும் மற்றவர்களுக்கும் பாதகம் வராமல் எப்படி அந்த சூழலைக் கையாள்கிறார்கள் என்ற பக்குவத்தைப் பொறுத்தே ஒருவரின் மன ஆரோக்கியத்தைச் சொல்ல முடியும். Intelligence quotient என்ற அறிவுத்திறனை விட Emotional quotient என்ற உணர்வுகளைக் கையாளும் திறன்தான், இப்போது நாம் எல்லோருக்கும் தேவை.’’மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைச் சொல்லுங்கள்…‘‘யோகாவும் தியானமும் மனநலத்தை மேம்படுத்தும். தியானத்தின் மூலம் நம் உணர்வுகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்போது எண்ணங்கள் மட்டுப்படும். அதன்பிறகு, எந்தச் சூழலையும் எளிதாகக் கையாள முடியும். உணர்ச்சிகளைக் கையாளும் திறனை ஃப்ராண்டல் லோப் தானாகவே பெற்றுவிடும்.

சிறந்த புத்தகம் படிப்பது, நல்ல பாடல்கள் கேட்பது, நல்ல நண்பர்களுடன் பழகுவது, இயற்கையான இடங்களுக்குச் சென்று வரும்போது ஃப்ராண்டல் லோப் நல்லவிதமாகத் தயாராகும். முடிந்தவரை இயற்கையோடு தொடர்பில் இருக்க வேண்டும். சக மனிதர்களோடு பேசிப் பழகவேண்டும். தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதுவும் மனநலப் பாதிப்பை உண்டாக்கும். முக்கியமாக, நம் உணர்வுகளை நாமே கவனிக்கிற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் திட்டினால் நம்மிடம் இருந்து நாமே கொஞ்சம் விலகி நின்று யோசிக்க வேண்டும். என்ன காரணம், இந்தப் பிரச்னை சரியாக என்ன வழி என்று ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும். ‘தேவாங்கு’ என்று திட்டினால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்தான் மனது பாதிக்கப்படும். அதற்கு எதிர்வினை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்னை இல்லை!’’

ஞானதேசிகன்

Saturday, September 10, 2016

வேண்டாம் தற்கொலை

By எஸ். பாலசுந்தரராஜ்  |   Last Updated on : 10th September 2016 01:16 AM  |   அ+அ அ-   |  

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் வழக்குரைஞர் ஒருவர் அண்மையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் இவர் சட்டமேற்படிப்பை படித்தபோது, ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்துவேறுபாட்டால் கணவன் - மனைவி பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் அந்த பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படித்த பெண் தனது இல்லறவாழ்க்கையை தொடங்கி ஆறு ஆண்டில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 5,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனவும், இதில், பெண்கள் 60 சதவீதம் பேர் என்பது அதிர்ச்சி தகவல். 15 முதல் 25 வயது உள்ள பெண்கள் 20 சதவீதமும், 25 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 30சதவீதமும் என காவல் துறை புள்ளிவிவரம் கூறுகிறது.
தேர்வில் மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், காதலில் தோல்வி ஏற்பட்டாலும், கணவன் மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் மேலும் பல காரணங்களுக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மண்ணெண்ணையை உடல்மீது ஊற்றி தீவைத்து, விஷம் அருந்தி, கிணற்றில் குதித்து, மாடியிலிருந்து குதித்து, தூக்கிட்டு என பல வழிகளில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் 33,000 பேர் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
வாழ்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தற்கொலைக்கு காரணம் கூறுகிறார்கள். வாழ்க்கை என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்.
உலகத்தில் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளன. எந்த ஜீவராசியாவது தற்கொலை செய்துகொண்டது என கேள்விப்பட்டதுண்டா? ஆறு அறிவுள்ள மனிதர்கள் ஏன் தற்கொலை எண்ணத்தை மனதில் நுழைய விடவேண்டும்.
நம்மிடம் அற்புதமான, ஜீவனுள்ள, துடிப்புள்ள, வலிமைமிக்க மனம் உள்ளது என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். மனதில் உற்சாகத்தையும், தைரியத்தையும், மகிழ்ச்சியையும் பாய்ச்ச வேண்டும்.
பழைய இரும்பு வியாபாரம் செய்யும் ஒருவர், தனது சைக்கிளில் செயின் இல்லாததால் அந்த சைக்கிளை நடந்தே தள்ளிக்கொண்டு வியாபாரம் செய்கிறார்.
அவர் தன்னாலும் வாழமுடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார் எனக்கூறலாம். அவர் சவால்களை சந்திக்க தயாராக உள்ளார். பிரச்னைகளை கண்டு முடங்கிவிடவில்லை. என்னால் முடியாது என சும்மா இருந்துவிடவில்லை.
இதுபோன்ற எண்ணற்றவர்கள் நாட்டில் உள்ளார்கள். அவர்களை முன்மாதிரியாக கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் தற்கொலை எண்ணம் நம் மனதில் நுழையாது.
தற்கொலை செய்வதுகொள்பவர்களை வாழ்கையில் பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதாவர்கள் எனக்கூறலாம். தோல்விகளையும், சங்கடங்களையும் மனதில் நுழையவிடக்கூடாது.
ஒரு பிரச்னை ஏற்படுகிறது என்றால் அந்த பிரச்னையை தீர்க்க நான்கு அல்லது ஐந்து தீர்வுகளை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தீர்வாக செயல்படுத்திபார்க்க வேண்டும். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கடவுள் ஒரு ஜன்னலை மூடினால் மற்றொரு ஜன்னலைத் திறப்பார் என முழுமையாக நம்ப வேண்டும். எனது பிரச்னைகளுக்கு தீர்வு கிடையாது. தற்கொலை செய்து கொள்வதுதான் தீர்வாகும் என நினைப்பது என்பது தைரியமில்லாதர்கள் கூறும் காரணம்.
நாம் நம்மைப்பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை ஆராய வேண்டும். அவற்றை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு முட்டாள்தனமாக நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற தெளிவு வரும்.
இந்த தெளிவு தற்கொலை எண்ணத்தை மாற்றிவிடும் என்பது உறுதி.
நம்பிக்கையையும், நல்ல எதிர்காலம் பற்றிய கற்பனையையும் நம் மனதில் நுழையவிட்டால், அது நம் ஆழ்மனதில் பதிந்து தற்கொலை எண்ணத்தை தகர்த்தெறிந்துவிடும். பின்னர் சூழ்நிலை மாறுவதை நாம் உணரலாம்.
பலர் பழைய தோல்விகளை விரிவாக, கதை கூறுவதுபோல கூறுவார்கள். அனுபவித்த கஷ்டங்களை, சங்கடங்களை பெரிதுபடுத்தி கூறுவார்கள். கஷ்டங்களை பெரிதுபடுத்தினால் கஷ்டம்தான் வரும்.
உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களை மனதில் அசைபோட்டுப் பாருங்கள். தற்கொலை எண்ணம் தடுக்கப்படும். அவன் விதி, தற்கொலை செய்து கொண்டான் எனக் கூறுவதுண்டு.
நல்ல விஷயங்களை எண்ணாமல், வாழ்கையின் எதிர்கால மகிழ்ச்சியை எண்ணாமல், உலகில் உள்ள அற்புதமானவற்றை ரசிக்காமல் தற்கொலை என தவறான முடிவை எடுப்பவர்களை அவர்களின் விதி எனக்கூறுவது தவறு.
ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். பிரச்னைகள் இருந்து கொண்டிருந்தால்தான், புலனும், புத்தியம் சுறு சுறுப்பாக இருக்கும்.
எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு. வாழ்க்கை என்னும் விருந்தில் தனது பங்கிற்கான உணவினை உண்ணாமல், தற்கொலை என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வதை மனிதகுலம் நிறுத்த வேண்டும்.

Friday, September 9, 2016

விருத்தாசலம் செவிலியர் புஷ்பா தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: விருத்தாசலம் செவிலியர் புஷ்பா தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

ஒருதலைக் காதல் என்ற பெயரில் சில தறுதலைகள் மேற்கொண்டு வரும் பாலியல் சீண்டலுக்கு மேலும் ஓர் இளம்பெண் பலியாகியிருக்கிறார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் பாலியல் சீண்டலால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.தொடர்கதையாகும் இத்தகைய சீண்டல்கள் கண்டிக்கத்தக்கவை.



விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு அதேபகுதியிலுள்ள காதல் நாடகக் கும்பலைச் சேர்ந்த தனசேகரன் என்ற மிருகம் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதை ஏற்க புஷ்பலதா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்க மறுப்பு

கடந்த 31-ஆம் தேதி இரவு புஷ்பலதா பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்து வழிமறித்த தனசேகரன் தம்மை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்த புஷ்பலதாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் கடுமையாக தாக்கியதாகவும், கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த புஷ்பலதா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை

தூக்கில் தொங்கியவரை மீட்ட அவரது குடும்பத்தினர் முதலில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புஷ்பலதா கடந்த 8 நாட்களாக அளிக்கப்பட்ட மருத்துவம் பயனளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார். கொடிய மிருகத்தின் சீண்டலால் ஏற்பட்ட அவமானம் காரணமாக உயிரிழந்த புஷ்பலதாவின் மறைவுக்கு இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பாலியல் சீண்டல்களுக்கு பெண்கள் இரையாவது அதிகரித்து வருகிறது.சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் இராம்குமார் என்ற இளைஞனால் கொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தையடுத்த வ.பாளையம் கிராமத்தில் நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்து கொலை செய்தது. தொடர்ந்து கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலி என்ற மாணவி வகுப்பறையில் கட்டையால் அடித்தும், தூத்துக்குடியில் பிரான்சினா என்ற ஆசிரியை தேவாலயத்தில் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வினோதி, வித்யா

இவர்களுக்கு முன்பே காரைக்காலில் வினோதினியும், ஆதம்பாக்கத்தில் வித்யாவும் அமிலம் வீசிப் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் திருச்சியில் மோனிகா என்ற மாணவியும், புதுச்சேரியில் அன்னாள் தெரசா என்ற மாணவியும் மனித மிருகங்களால் கத்தி குத்துக்கு ஆளாகி சாவின் நுழைவாயில் வரை சென்று திரும்பியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இப்போது புஷ்பலதா ஒரு மிருகத்தின் பாலியல் சீண்டலால் உயிரிழந்துள்ளார்.

என்ன வகையான கலாசாரம்?

காதல் என்ற பெயரில் தொல்லைக் கொடுப்பதும், அதை தவிர்க்க நினைக்கும் பெண்களை வெட்டிக் கொலை செய்வதும், அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டுவதும் எந்த வகையான கலாச்சாரம் என்பது தெரியவில்லை. காதல் என்பது இருமனம் கனிந்தால் தான் ஏற்படும். இதை உணராமல், ஒப்புக் கொண்டால் காதல்.... இல்லையேல் கொலை என்ற போக்கு மிகவும் ஆபத்தானதாகும். பெண்களின் உணர்வுகளுக்கு மதிக்காமல் இத்தகைய செயலில் ஈடுபடும் மிருகங்களை பெண்ணுரிமை பேசும் அமைப்புகள் கண்டிக்காததும், பெண்களை பாதுகாக்க போராட மறுப்பதும் கவலையளிக்கிறது. இதுபோன்ற செயல்களுக்கு ஆணாதிக்கமும், முதலாளித்துவமும் தான் காரணம் என்று புதிய விளக்கம் அளித்த போலிப் புரட்சியாளர்கள், இத்தகைய கொடிய நிகழ்வுகளை கண்டிக்காததன் மூலம் தங்களின் முகமூடிகளை கிழித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலைமுறைக்கு கல்வியையும், கலாச்சாரத்தையும் போதிப்பதை தவிர்த்து, நாடக காதலையும், பணம் பறிக்கும் திருமணத்தையும் போதித்து வரும் சமூக விரோத கும்பல் தான் இத்தகைய பாலியல் கொடுமைகளுக்கு காரணம் என்பதில் எந்த ஐயமுமில்லை.

75 நாட்களில் 5 பெண்கள்

காதலிக்க மறுத்ததற்காக கடந்த 75 நாட்களில் 5 பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொலை முயற்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தறுதலைகள்...

பெண் முதலமைச்சர் ஆட்சி செய்யும் மாநிலத்தில், ஒருதலைக் காதல் தறுதலைகளிடமிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது வெட்கக் கேடான செயல் ஆகும். பெண்களை பின்தொடர்ந்து தொல்லை தருவோரை கைது செய்து தண்டனை வழங்க வசதியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 345டி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டும், அதைப் பயன்படுத்த தமிழக அரசு தவறியதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து விட்டது.

கடும் நடவடிக்கை

இந்த விஷயத்தில் அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் சீண்டலுக்கு பலியான புஷ்பலதா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.''

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...