Sunday, September 11, 2016

ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு

DAILY THANTHI

ஆதிகாலத்திலிருந்து தமிழ்நாட்டை மன்னர்கள் ஆண்டபோதும், ஆங்காங்கு ஜமீன்தாரர்கள் நிர்வாகத்திலும் சரி, தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியிலும், பாசனவசதிக்காகவும், குடிநீர்வசதிக்காகவும், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊருணிகள் அமைக்கப்பட்டன. நதிவளம் அதிகமில்லாத தமிழ்நாட்டில் பெய்கிற மழைநீரை இத்தகைய நீர்நிலைகளில் சேமித்துவைத்ததால்தான் பேருதவியாக இருந்தது. அந்தகாலத்திலேயே இவ்வளவு நீர்நிலைகள் இருந்தபோது, பெருகிவரும் ஜனத்தொகைக்கேற்ப இந்தகாலத்தில், புதிதுபுதிதாக நீர்நிலைகளை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால், அவ்வாறு புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படாமல், தற்போது இருக்கும் நீர்நிலைகளிலேயே ஏராளமான ஆக்கிரமிப்புகள் உருவாகிவிட்டன. நீர்நிலைகளின் ஓரங்களில் முதலில் கட்டிடக்கழிவுகள், குப்பைகளைக்கொட்டி தரையாக்கிவிட்டு, அடுத்தமாதங்களுக்குள்ளேயே பட்டா போட்டுவிற்கும் கொடிய செயல்கள் எல்லா இடங்களிலும் அரங்கேறுகிறது. அவ்வப்போது நீதிமன்ற தீர்ப்புகள், பத்திரிகைகளில் படம்போட்டு காட்டும் காட்சிகள் வழங்கப்பட்டாலும், ஆக்கிரமிப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளில் மட்டும் சாதி, மத வேறுபாடின்றி, அதிலும் மிகவும் முக்கியமாக அரசியல்கட்சிகள் வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க முடிகிறது.

சென்னையில், சேலையூரிலுள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரி பாதியாக சுருங்கி, 3 புதிய வார்டுகள், நகராட்சியில் உருவாகும் வகையில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. இந்த வீடுகளுக்கெல்லாம் சாலைவசதி, குடிநீர்வசதி, மின்சாரவசதி, ரேஷன் கார்டு என எல்லாவசதிகளையும் அதிகாரிகள் வேகமாக செய்துதந்துவிட்டனர். ‘‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என மாநிலம் முழுவதிலும் இவ்வாறு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுப்பதும், அனைத்து அடிப்படைவசதிகளை செய்வதும் ஏன்?, அனைத்திற்கும் பின்னணியாக ஊழல்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சென்ற ஆண்டு சென்னையில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த மத்தியகுழு அதிகாரிகள், சென்னையிலுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக்கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஆர்.மகாதேவன், சேலம் மாவட்டத்திலுள்ள 105 நீர்நிலைகளில் இவ்வாறு ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுத்த அதிகாரிகளை எவ்வாறு பதில் சொல்லவைக்கலாம்? என்ற பொறுப்புகடமையை அவர்கள்மீது சுமத்தவேண்டியது குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த நீர்நிலைகளில் எல்லாம் புதிதுபுதிதாக வீடுகள் தோன்றுவதற்கு ஆக்கிரமிப்பு வசதிகளுக்கு அதிகாரிகள் பட்டாபோட்டு கொடுத்திருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தவுடன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், சென்னை வெள்ளம் தொடர்பாகவும், சென்னை நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பதற்காகவும் தொடரப்பட்ட வழக்கில், அடையாறு கரைகளில் 28 குடிசைப்பகுதிகள் ஆக்கிரமிப்பால் தோன்றியதுதான், சென்னை நகருக்குள் பாய்ந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும், நீர்போக்குவரத்து வழியாக தேசிய நீர்வழி சட்டத்தின்கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டதையும் பட்டவர்த்தனமாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கும்போது, சென்னை, சேலம் மாவட்டத்தோடு நிறுத்திவிடாமல், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக உடனடியாக தீவிரநடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்கள், ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள், குட்டைகள் எல்லாவற்றையும் சர்வே எடுத்து, எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறதோ?, அங்கு உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும். இதில் அரசின் கடமை மட்டுமல்ல, அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், அதாவது கிராமப்பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து அமைப்புகளிலும் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதே தங்களின் முதல்கடமையாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். முதல்கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளும், அதன் முழுப்பரப்பில் இருக்கிறதா? என்பதை சர்வேசெய்து, எவ்வளவு ஆக்கிரமிப்பு இருக்கிறது? என்பதை தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் கணக்கிடவேண்டும். மாநிலத்தின் சராசரியான ஆண்டு மழை 911.60 மி.மீ. தண்ணீரை முழுமையாக சேகரித்துவைக்க வேண்டுமெனில், அனைத்து நீர்நிலைகளும் முழுகொள்ளளவும் இருக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்.

இப்போ நல்லா இருக்கீங்களா?- 108-ன் அக்கறை


ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால் மனைவியின் சடலத்தை இறுதிச் சடங்குக்கு 10 கி.மீ., தூரத்துக்குத் தோளில் சுமந்து சென்றார் கணவர். சிகிச்சைக்காக மகனைத் தோளில் சுமந்து சென்றார் தந்தை.

- இந்த இரண்டு சம்பவங்களும் ஆந்திரத்தைத் தாண்டியுள்ள ஒடிசாவில் நடைபெற்றவைதான்.

இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த போது, “ஹலோ நாங்க 108-ல இருந்து பேசுறோம். எங்களோட ஆம்புலன்ஸ் சேவையை நீங்க பயன்படுத்தியிருந்தீங்க. இப்போ உங்க உடம்பு நல்லாயிருக்கா” என அக்கறையுடன் கேட்டது அந்தக் குரல். திடீர் அழைப்பு தந்த ஆச்சரியத்துடன், “நான் நலமா இருக்கேன், நன்றி” என்று சொன்னேன். 108 ஆம்புலன்ஸ் அமைப்பிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பு அது.

நாட்டின் ஒரு பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்படுகிறது. இன்னொரு பகுதியில் இப்படி விசாரிப்புகள். இதுதான் இந்தியா.

ஒரு பெரிய ஹால். நூற்றுக்கும் மேற்பட் டோர் தொலைபேசி அழைப்பு களுக்குப் பதில் தந்தபடி பரபரப்பாக இருக்கிறது அந்த இடம். இவர்கள் ஒவ்வொருவரும் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் அலுவலர்கள் (இ.ஆர்.ஓ.). தமிழகம் முழுவதும் இருந்து ஒரு நாளுக் குச் சராசரியாக இவர்களுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை 25,000.

பதற்றமும் நெகிழ்ச்சியும்

“ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளை அட்டெண்ட் பண்ணுவோம். எதிர்முனையில் பேசும் நபர் பெரும்பாலும் அழுகையும் பதற்றமுமாகவே பேசுவார். அவர்களைப் புரிந்துகொண்டு, ஆசுவாசப்படுத்தித்தான் தகவல்களைப் பெற வேண்டும். பிறகு அருகில் இருக்கும் ஆம்புலன்ஸை அனுப்பி வைப்போம். இங்கு வேலைக்குச் சேர்ந்து ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக்கொண்ட பலரும் தங்கள் உறவினரைக் காப்பாற்ற, உரிய நேரத்தில் வாகனம் அனுப்பியதற்காகத் திரும்ப அழைத்து நன்றி சொல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையில்லை” என்கிறார் ஒரு இ.ஆர்.ஓ.

பலன்பெறும் கர்ப்பிணிகள்

தமிழகத்தில் அரசு - தனியார் பங்களிப்பில் 108 சேவை ஆரம்பித்து இந்த 15-ம் தேதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரத் துறையின் ஆதரவுடன் இந்தச் சேவை இயங்கிவருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற நிலை இருக்கிறது. இதுவரை 5 கோடியே 30 லட்சத்துக்கும் மேலான அழைப்புகள் இந்தச் சேவைக்கு வந்திருக்கின்றன.

108 சேவையால் அதிகம் பயனடைந்தவர்கள் யாரென்று பார்த்தால், கர்ப்பிணிகளே முதலிடம் பெறுகிறார்கள். 108 சேவைப் பயனாளிகளில் 26 % கர்ப்பிணி பெண்கள், 22 % சாலை விபத்தில் சிக்கியவர்கள், 6 % இதயப் பாதிப்பு ஏற்பட்டவர்கள். இதுதவிர நீரிழிவு நோய், விஷம் அருந்தியவர்கள், தற்கொலைக்கு முயற்சித்தவர்கள், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களும் காக்கப்பட்டுள்ளன.

“குறுகலான பாதையில் ஆம்புலன்ஸ் செல்ல வசதி இல்லாததால், உடனடி முதலுதவி வழங்குவதற்காகப் பைக் ஆம்புலன்ஸ் சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. சென்னையில் சில இடங்களில் மிகக் குறுகலான தெருக்கள் இருக்கின்றன. இப்பகுதிகளுக்குப் பைக் ஆம்புலன்ஸ் சேவை பெரிதும் பயன்படுகிறது” என்கிறார் 108 விழிப்புணர்வு சேவைத் துறை மேலாளர் பிரபுதாஸ்.



பிரபுதாஸ்

அத்துடன் 48 மணி நேர ‘ஃபாலோ-அப்’ என்ற சேவையும் இருக்கிறது. நோயாளியின் தற்போதைய நிலையை அறிந்துகொள்வதே இந்தச் சேவையின் நோக்கம். இது மக்களுடன் அணுக்கமான உறவை ஏற்படுத்துகிறது.

104 சேவை எதற்காக?

உயிர் காக்கும் சேவை 108 என்றால், முழுக்க முழுக்க மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்காகவும், புகார்கள் தெரிவிப்பதற்காகவும் 104 என்ற இலவச எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

“மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்வதற்கான முயற்சி இது. இரவு நேரத்தில் திடீரென ஓர் உபாதை ஏற்படலாம். அது எத்தகைய உபாதை எனத் தெரிந்துகொள்வது அவசியம். உதாரணத்துக்கு, ஸ்ட்ரோக் ஏற்பட்ட 60 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு சென்றுவிட்டால் நிரந்தர உடல் ஊனத்திலிருந்து நோயாளியைக் காப்பாற்ற முடியும். 104 சேவையை ஒருவர் தொடர்புகொண்டு எங்கள் மையத்தில் இருக்கும் மருத்துவர் களிடம் தகவல்களை அளிக்கும்போது, நோயின் அறிகுறிகளைப் பற்றி புரிந்துகொண்டு அதற்கு அவசரசிகிச்சை தேவையென நினைத்தால் மருத்துவர்களே அழைப்பை 108-க்கு மாற்றிவிடுவார்கள்.

பரீட்சை நேரங்களில் நிறைய மாணவர்கள் 104 சேவையைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுகிறார்கள். மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருபோதும் மருந்துகளைச் சிபாரிசு செய்வதில்லை.

ஏதேனும் ஒரு பகுதியில் பலருக்கும் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் போதும். அரசு நிர்வாகத்துடன் இணைந்து மருத்துவ முகாம் அமைக்கவும் ஏற்பாடு செய்வோம்.

அவசர நிலையில் 108-ஐ அழைக்க வேண்டும் என்பது மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிந்துவிட்டது. அதேபோல் மருத்துவ ஆலோசனைகளுக்கு 104-யைத் தொடர்புகொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு 3000 அழைப்புகள் வருகின்றன” என்கிறார் 108 சேவையின் செயல்பாடுகள் பிரிவு மாநிலத் தலைவர் ரவீந்திரா.



ரவீந்திரா

விபத்துப் பகுதிகளில் போலீஸ் எப்.ஐ.ஆர்., நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 1,200 இடங்கள் விபத்து அதிகமாக நடைபெறும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே பிளாக் ஸ்பாட் அல்லது ஹாட் ஸ்பாட்களைக் கண்டறிந்து அப்பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை விபத்துகளில் உயிர் சேதம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்பகுதிகளில் அதிகமானோர் இறப்பதைத் தவிர்க்க 108 துணையாக இருக்கிறது.

தயக்கம் இல்லாமல் உதவுங்கள்

108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறும்போது, “உயிர் காக்க நல்ல சமாரியர்கள் தேவை. அப்படிப்பட்ட நல்ல சமாரியர்கள் இன்றும் இருக்கின்றனர். விபத்துகள் குறித்தும் கொலைவெறி தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் தகவல் அளிப்பவர்களின் விவரங்களை, நாங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோம். சட்டச் சிக்கல்கள், போலீஸ் வழக்குகள் என அச்சப்படாமல், தயங்காமல் உதவுங்கள். நல்ல சமாரியர்களை அங்கீகரித்து அவ்வப்போதுச் சான்றிதழ்களும் வழங்குகிறோம்” என்று முடிக்கிறார் பிரபுதாஸ்.

தேவை ஏர் ஆம்புலன்ஸ் சேவை

சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் 108 சேவை குறித்துத் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்:

108 ஆம்புலன்ஸ் சேவை வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மக்கள் நிச்சயமாகப் பயன்பெறுகின்றனர். அதேவேளையில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் 108 ஆம்புலன்ஸ் சேவை, பல நேரங்களில் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்களுடன் டை-அப் வைத்துக்கொண்டு நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதும் நடக்கிறது. அரசு - தனியார் பங்களிப்பில் 108 சேவை இயங்கினாலும், இந்தச் சேவைக்கான 95% நிதி ஆதாரம் அரசாலேயே வழங்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கும்போது இச்சேவையை அவுட் சோர்சிங் முறையில் செயல்படுத்தாமல், அரசே முழுமையாக ஏற்று நடத்துவது சிறப்பானதாக அமையும்.

அதேபோல் 108 மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. பணிப் பாதுகாப்பும் இல்லை. உயிர் காக்கும் சேவையில் இருக்கும் இத்தொழிலாளர்களுக்கு அரசு உரிய ஊதியத்தையும் சலுகையையும் வழங்க வேண்டும். அதேபோல் ஆம்புலன்ஸில் இருக்கும் ஊழியர்கள் இன்னமும் சிறப்பான மருத்துவப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களால், உயிர் சேதங்களைக் கூடுதலாகத் தவிர்க்க முடியும்.

இவற்றைத் தவிரத் தமிழகத்தில் ‘ஏர் ஆம்புலன்ஸ் சேவை‘ மிகவும் அவசியம். குறிப்பாகச் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் இச்சேவை மிக மிக அவசியம். உதாரணத்துக்குச் சென்னை தாம்பரத்தில் ஒரு சாலை விபத்து நடந்தால், ஆம்புலன்ஸில் உரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் உயிர் பிரிந்துவிடுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ‘ஏர் ஆம்புலன்ஸ் சேவை’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பைலட் சேவையாகத் தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும்” என்றார்.



ஜி.ஆர். ரவீந்திரநாத்

புகார்களுக்கு என்ன பதில்?

108-ல் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் சேர்க்க ஓட்டுநர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், துணைக்கு ஆள் இல்லை என்றால் ஆம்புலன்ஸில் நோயாளியை அழைத்துச் செல்லத் தயங்குவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

“நோய் பாதிப்பின் அளவை பொறுத்து அருகில் இருக்கும், உரிய சிகிச்சை வழங்கும் வசதிகள் கொண்ட மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பதே ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொதுவான அறிவுரை. நோயாளியின் உறவினர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே ஊழியர்கள் செயல்படுகிறார்கள். சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கச் சொல்கிறார்கள், பிறகு கட்டணம் கட்டும்போது 108 மீது புகார் தெரிவிப்பதும் நடக்கிறது.

அதேபோல், அட்டெண்டர் (ஆள் துணை) இல்லை என்றால் நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்க மறுக்கக் கூடாது. அட்டெண்டர் இருந்தால் நோயாளிக்கு மனதளவில் துணையாக இருக்கும் என்பதாலேயே அட்டெண்டர் தேவை என்று வலியுறுத்துகிறோம். மற்றபடி இது கட்டாயமில்லை” என்கிறார் பிரபுதாஸ்.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியோ அல்லது அட்டெண்டர் இல்லாததால் வாகனத்தில் ஏற்ற மறுத்தாலோ 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுதவிர அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வரவில்லை, சிகிச்சைக்கு லஞ்சம் கேட்கப்படுகிறது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ அல்லது உள்ளே இருக்கும் மருத்துவ உதவியாளரோ பெண் நோயாளியிடம் கண்ணியமாக நடந்துகொள்ளாவிட்டாலும் மேற்கண்ட எண்ணில் புகார் செய்யலாம்.



கர்ப்பிணிகளுக்கு 102

108, 104 சேவைகளைத் தொடர்ந்து விரைவில் 102 சேவையும் நடைமுறைக்கு வரவுள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கான சேவை. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பதிவுசெய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்பக் காலம் முழுவதும் இதன் கீழ் ஆலோசனை வழங்கப்படும். தாய்மார்களுக்கான பிரசவம் முதல் பிரசவம் முடிந்து வீடு திரும்புவதுவரை இலவசச் சேவை இதன் கீழ் கிடைக்கும்.

இப்போதைக்கு அந்தந்த மண்டல, பிராந்திய அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் சேவை இயங்கிவருகிறது. விரைவில் 102 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு நேரடியாக இச்சேவையைப் பெற முடியும். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்குத் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளும் இச்சேவையின் கீழ் வழங்கப்படும்.

இந்தியச் செஞ்சிலுவை சங்கத்துடன் தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 155377 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இலவச அமரர் ஊர்தி சேவையைப் பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இருந்து சடலத்தை எடுத்துச் செல்லவும், பிணவறையில் இருந்து சடலத்தை எடுத்துச் செல்லவும் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அந்தக் குரல்கள் நம் காதுகளை எப்போது எட்டும்? - உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10


கம்பளிப் பூச்சியொன்று தன்னுடைய நண்பனிடம் பல கேள்விகளைப் பரபரப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது. மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த புழுக்கூட்டைப் பார்த்து, அது என்னவென்று கேட்டது. ‘நீ நிதானமாகச் சில காலம் அதனுள்ளே கண்ணை மூடி தூங்கினால், பிறகு அந்தக் கூட்டை உடைத்துக்கொண்டு சிறகு முளைத்து, அதோ விண்ணில் பறக்கும் வண்ணத்துப்பூச்சியாக மாறுவாய்' என்றது நண்பன் கம்பளிப் பூச்சி.

ஆனால், ‘நான் ஏன் புழுக்கூடு எனும் சிறையில் காலத்தை வீணடிக்கவேண்டும்? என்னால் இப்பொழுதே பறக்கமுடியுமே' என்று தன் மேலிருக்கும் மெல்லிய ரோமங்களைச் சிலிர்த்துக்கொண்டு, சிறகுகள் முளைத்துவிட்ட மயக்கத்தில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்தது அந்தக் கம்பளிப்பூச்சி.

அது கீழே விழும் முன்னே சட்டென்று பறந்து வந்த ஒரு ஊர்க்குருவி, கம்பளிப்பூச்சியைக் கொத்திக்கொண்டு சென்றுவிட்டது.

சுவரொட்டியில் உறையும் பதின்பருவம்

பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் எதையும் செய்துவிடமுடியும், எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்ற அசட்டுத் தைரியம், நினைத்தவுடன் எல்லாம் நடக்கவேண்டும் என்கிற துடிப்பு, கிடைக்கவில்லை என்றால் உடனே உடைந்துபோய்விடுவது போன்றவை இந்தக் காலப் பதின்பருவத்தினரின் இயல்பாக இருக்கிறது.

சிறகுகள் முளைக்கும் முன்னரே, முதிர்ச்சியடையாத இறக்கைகளால் பறந்துவிட முடியும் என்ற அசட்டு நம்பிக்கையோடு முட்டிமோதிப் பறக்க நினைத்து நொறுங்கி விழும் பதின்பருவத்தினரின் திடீர் முடிவுகளில் ஒன்றான தற்கொலை முயற்சி, திடீர் மரணத்தில் முடிகிறது. வாழ்வை வண்ணங்களால் அலங்கரிக்க வேண்டிய வயதில், கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் மதில்களில் நிறைந்து காணப்படுவதைப் பார்ப்பது வேதனைதான்.

தனிமையின் வலி

உலகத் தற்கொலை புள்ளிவிவரங்களின்படி 70 வயதுக்கு மேலிருப்பவர்கள் இறப்பதற்கான முதன்மைக் காரணம் தற்கொலை. குடும்பம் சிதைவது, முதியவர்கள் புறக்கணிக்கப்படுவது, பொருளாதாரச் சுமையாய் முதியவர்கள் பாவிக்கப்படுவது, தனிமை, நோயின் தாக்கம், வலி, புலன் குறைபாடு போன்றவையெல்லாம் வெவ்வேறு தளத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி வயது முதிர்ந்தவர்களை மனஉளைச்சலுக்குத் தள்ளி, தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அவர்கள் தற்கொலைக்கு மனக்கவலை நோய் முக்கியக் காரணம்.

அதேபோல, சமீபகாலமாகக் குழந்தைகளோடு பெண்கள் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அதிகமாகியுள்ளது. கணவரின் குடி, உடல், உளவியல் வன்முறை, பண நெருக்கடி என்று பல்வேறு புறக்காரணிகள் நெருக்கடி ஏற்படுத்துவதால் அணுஅணுவாய் சாவது போதும் என்று முடிவெடுத்து, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகத் தற்கொலை நிகழ்கிறது. தன்னுடைய குழந்தை (பல நேரங்களில் பெண் குழந்தை) தனியே தவிக்க வேண்டாம் என்று நினைத்து, சேர்ந்தே தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்கள் புறக்கணிக்கப்படுவதை இந்தத் தற்கொலைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தனிநபர் பிரச்சினையா?

கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம், தேர்வில் தோற்பது, வாழ்க்கையே முடிந்துவிட்டதாகத் தீர்க்கமான முடிவு, உறவு சிக்கல், கல்விக் கடன் வசூலிக்க வருபவர் தரும் நெருக்கடி போன்றவை மாணவர் தற்கொலைக்கான காரணிகள்.

இப்படித் தற்கொலைகளின் காரணிகளை ஆய்வு செய்யும்போது, தனிநபரின் உளவியல் நெருக்கடிக்குக் காரணமாக அமையும் சமூகப் பொருளாதார, அரசியல், சூழலியல், கலாச்சார, உடல், உளவியல் காரணிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றன. அதற்கு நேர்மாறாக, தனிநபர் காரணிகளை முன்னிறுத்தித் தற்கொலைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, தெளிவில்லா பிம்பத்தையே கொடுக்கும்.

இருட்டறையில் புலப்படாத வெளிச்சம்

ஒருவர் தற்கொலை செய்து இறப்பதற்கு முன்னால், சராசரியாக 20 முறையாவது தற்கொலைக்கு முயற்சி செய்வார் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. சட்டென்று முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை குறைவே. தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் நெருக்கடிகளை உணரும்போது 'வாழ்வா, சாவா' என்ற இருமன ஊடாட்டம் மேலோங்கி இருக்கும். அவர்களுடைய சிந்தனை முழுக்கப் பிரச்சினைகள் மட்டுமே ஆட்கொண்டு இருக்கும் சூழலில், அதனால் மனதில் ஏற்படும் வலி, தன் மீதே ஏற்படும் கோபமும் வெறுப்பும், இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று யத்தனிக்கும் மனநிலையும் - தற்கொலைதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது போல நினைக்கத் தூண்டிவிடும்.

கதவுகள் மூடப்பட்ட இருட்டறையில் வெளிவர விழியில்லாதது போல் தோற்றமளித்தாலும், வெளிச்சத்தைத் தேட முயலாமல் தோற்றுப்போய், வெளியே வர வழி தெரியாமல் தனிமையில் உதவி தேடி அழும் அவர்களுடைய குரல்கள் பலரின் காதுகளை எட்டுவதில்லை. பல நேரம் ஒருவரது மரணத்துக்குப் பிறகுதான் அவர்களின் வேதனையையும் வலியின் போராட்டத்தையும் நம்மால் உணரமுடிகிறது.

தற்கொலைக்கு முயல்பவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவது உண்டு. ஏன் விடிகிறதென்றே தெரியவில்லை, தான் எதற்கும் பிரயோஜனம் இல்லை, என்ன செய்வதென்று வழியே தெரியலை என்று சிலர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். பல நேரம் தனிமையிலேயே மூழ்கிவிடுவது, யாருடனும் பேச விருப்பமில்லாமல் இருப்பது, தன்னுடைய எல்லாவிதமான சட்டப்பூர்வக் கடமைகள், பொறுப்புகளை வேகமாய் முடித்துவிடுவது (உயில் எழுதிவைப்பது, வங்கிக் கணக்கை யார் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்வது) போன்ற செயல்கள், தற்கொலை எண்ணம் மேலோங்கியிருப்பவர் மறைமுகமாய் வெளிப்படுத்தும் செயல்கள்தான்.

தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் உதவி நாடி மற்றவரிடம் செல்லாமல் தன் பிரச்சினைகளைத் தானே கையாளுதல், சமூகத் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ளாமல் தனிமையில் இருப்பது, பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகப் பார்த்து, உடனே தீர்வு வேண்டும் அதுவும் தாம் எதிர்பார்க்கும் தீர்வே வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

தடுக்க முடியாதா?

மாணவர் பருவத்திலிருந்தே பிரச்சினைகளை எப்படிப் புரிந்துகொள்வது, எதைப் பிரச்சினைகளாய்ப் பார்ப்பது என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும்.

தனிநபராகவே செயல்பட்டு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வலிந்து அதிகரிக்கப்பட்டிருக்கும் சூழலில், கூட்டுச் செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.

தற்கொலைக்கு முயற்சிப்பவரைப் பொதுவாக இந்தச் சமூகம் கோழைகளாகவும், திறனற்றவர்களாகவும் சித்தரிக்கிறது. அந்த எண்ணத்தைத் தகர்க்க வேண்டும்.

தோழமை உணர்வுடன் பிரச்சினைகளை அவர்களுடைய கோணத்தில் புரிந்துகொள்ளும் அதே வேளையில், தற்கொலைக்கு உந்தித்தள்ளும் அந்தக் கணத்தை எப்படித் தள்ளிப்போட வேண்டும் என்றும், பிரச்சினையை மிகைப்படுத்திப் பார்க்கும் சிந்தனை முறையை மாற்றுவது எப்படி என்ற வழிமுறையையும் கற்றுத்தருவது அவசியமாகிறது.

சமூகச் செயல்பாட்டை அதிகரித்து, சமூகத் தொடர்பை அதிகரிக்கும்போது, தனிநபர் பிரச்சினைகள் பொதுவாக மாறுகின்றன. மக்களும் பொறுப்போடும் அக்கறையோடும் செயல்பட வேண்டிய காலம் இது. இந்தப் பிரச்சினையும் கடந்து போகும், மாற்றம் இயல்பானது என்ற அடிப்படைப் பார்வையைக் கற்றுத்தர வேண்டும்.

கட்டுரையாளர், அரசு மனநல மருத்துவர்
தொடர்புக்கு: spartacus1475@gmail.com

தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை


அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 பேரின் கவிதை களைப் பாராட்டி ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா கவுரவித்தார்.

‘‘தலைமுடியைப் போல எனது பூர்வீகமும் உதிரத் தொடங்கி விட்டது. அம்மா! எங்கே எனக்கு வழுக்கை விழுந்துவிடப் போகிறதோ என அஞ்சுகிறேன்’’ என தமிழகத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் கவிதை வாசித்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஒருவித பிரமிப்பு ஏற்பட்டது. கடைசியில், ‘‘அம்மா! நான் தமிழ் பேசி 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டது’’ என கனத்தக் குரலுடன் அவர் முடித்ததும், பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது.

மிஷேல் ஒபாமாவும், மேடை யில் இருந்தபடியே மாயாவின் கவிதையைப் பாராட்டும் விதமாக உரத்தக் குரல் எழுப்பினார். பின்னர் அவர், ‘‘மாயா, எங்கே மாயா? சிறந்த கவிதை வாசித்துள்ளாய். மேடையில் உள்ள அத்தனைப் பேரையும் கவர்ந்து விட்டாய்’’ எனப் புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சிக்குப்பின் மாயா தனது பேட்டியில், ‘‘நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற கவிதை களை எழுதியிருக்கிறேன். எனது தாய்மொழியை எப்படி இழந்தேன் என்ற அனுபவத்தைத் தான் வெள்ளை மாளிகையில் கவிதையாக மொழிபெயர்த்துக் கூறினேன். தாய்மொழியை மறந்து விட்டு, பிறமொழியை மாற்றாக ஏற்றுக் கொள்வது என்பது மிகுந்த வலி நிறைந்தது’’ என்றார்.

இதேபோல் சென்னையைச் சேர்ந்த தந்தைக்கும், கேரளா வைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த கோபால் ராமன் என்ற இந்திய வம்சாவளி மாணவரின் கவிதையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இமெயிலை மேம்படுத்திக்கொள்ள ஐந்து வழிகள்!


ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் என வந்துவிட்டாலும், இமெயிலின் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், அலுவலகத் தொடர்புக்கும் பெரும்பாலானோர் இமெயிலைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. நல்ல வேளையாக இமெயில்களைச் சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில், இமெயில் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவும் அருமையான சேவைகள் சில:

உடனடி மெயில் வாசகங்கள்

இமெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ‘கேன்ட் இமெயில்ஸ்’ (http://www.cannedemails.com/#) இணையதளத்தைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் இமெயிலுக்காகத் தேவையில்லாமல் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கலாம். எப்படி? எப்போதெல்லாம் வழக்கமான பதில்களை இமெயிலில் அனுப்ப நேருகிறதோ அப்போது இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, இதில் உள்ள வாசகங்களை அப்படியே நகலெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இமெயில்களை அனுப்பும்போது மெயிலின் உள்ளடக்கம் சரியாக இருக்க வேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் கச்சிதமாக அமைந்திருக்க வேண்டும். எனவே இதற்காக நேரம் ஒதுக்கித் தனிக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படிச் செய்ய வேண்டும் என்றில்லை. சில நேரங்களில் மிகவும் சம்பிரதாயமான பதிலை அனுப்பினால் போதும். இன்னும் சில நேரங்களில் வழக்கமான வாசகங்களை டைப் செய்தால் போதும். இதுபோன்ற நேரங்களில் ஒரே விதமான மெயிலை மீண்டும் டைப் செய்வது நேரத்தை வீணாக்கும் என்பதோடு, அலுப்பாகவும் அமையும்.

இந்தப் பிரச்சினைக்கான அழகான தீர்வாகத்தான் ‘கேன்ட் மெயில்' அமைகிறது. வழக்கமாக எதிர்கொள்ளக்கூடிய தருணங்களுக்கான மெயில் வாசகங்கள் இந்தத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பிரச்சினைக்காக மன்னிப்பு கோருவது, சேவையை ரத்து செய்து பணம் திரும்பக் கோருவது, முந்தைய மெயிலுக்கு நினைவூட்டல் அனுப்புவது, மன்னிக்கவும், விருப்பமில்லை எனச் சொல்வது என வரிசையாகப் பல தருணங்களுக்கான ரெடிமேட் மெயில் வாசகங்களை இந்தத் தளத்தில் பார்க்கலாம். எது தேவை எனத் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம், அல்லது ஒரு சில வார்த்தைகளை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் அமைந்திருப்பது மட்டுமே இதன் குறை!

இமெயில் வடிவங்கள்

கேன்ட் மெயில் தளம் போலவே, ‘கான்டாக்சுவலி டெம்பிளேட்ஸ்’ தளமும் (http://templates.contactually.com/) பொருத்தமான இமெயில் உள்ளடக்கத்தைத் தேர்வு செய்வதற்கான தளம். என்றாலும் அதைவிட மேம்பட்ட சேவை இது. சூழ்நிலைக்கு ஏற்ற மெயில்களை இதில் நாமாக உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கென சிறிய விண்ணப்பப் படிவம் முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இமெயில் அனுப்புவது யாருக்கு, அதன் நோக்கம் என்ன எனும் கேள்விகளுக்கான பதில்களைத் தேர்வு செய்தால் போதும். அதற்கேற்ற பொருத்தமான மெயில் மாதிரியை உருவாக்கித்தருகிறது.

இணையதளமாகும் இமெயில்

உங்கள் இமெயிலை ஒரு இணையதளப் பக்கமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது ‘திஸ் இமெயில்' (http://www.thisemail.xyz/) இணையதளம். உங்களுக்கு வரும் இமெயில்களில் சிலவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றும்போது, இந்தச் சேவை கைகொடுக்கும்.

‘மெயிலைப் பகிர்ந்துகொள்ள எளிய வழி அதை அப்படியே ஃபார்வேர்ட் செய்வதுதானே' என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் இமெயில் முகவரியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மேலும் பலருக்கு அனுப்ப விரும்பினால் சிக்கல்தான். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் பகிர விரும்பும் மெயிலை இந்தத் தளத்துக்கு ஃபார்வேர்ட் செய்தால், அந்த மெயிலை ஒரு இணையப் பக்கமாக மாற்றி, அதற்கென ஒரு இணைய முகவரியையும் உருவாக்கித்தருகிறது. இந்த இணைய முகவரியை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டால் போதும். உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளாமலேயே எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சேவை இது!

இமெயில் பாதுகாப்பு

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளச் சேவைகளில் இமெயில் முகவரியைப் பகிர்ந்துகொள்ளும் தேவை ஏற்படும்போது நேரடியாக முகவரியை டைப் செய்யாமல் ‘ஸ்கிரிம்' (http://scr.im/) தளம் வழியே அதைச் செய்வது நல்லது. ஏனெனில் இணையத்தில் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளுப்படும் இமெயில் முகவரிகளை அறுவடை செய்வதற்கு என்றே விளம்பர நிறுவனங்கள் ‘பாட்'களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

சமூக ஊடகங்களில் மெயில் முகவரிகளை வெளியிடும்போது இந்த பாட்கள் அவற்றை ஸ்கேன் செய்து சேகரிக்கின்றன. இதனால் ‘ஸ்பேம்' மெயில் தொல்லை அதிகமாகலாம். இதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஸ்கிரிம், இமெயில் முகவரியை பாட்கள் ஸ்கேன் செய்ய முடியாத வகையில் பாதுகாப்பாக மாற்றித்தருகிறது.

இமெயில் சுருக்கம்

‘ஃபைவ் சென்டன்சஸ்' (http://five.sentenc.es/) தளம் இமெயில் பயன்பாட்டில் நேரடியாக உதவக்கூடிய சேவை இல்லை. ஆனால் இமெயில் பயன்பாட்டில் நினைவுகொள்ள வேண்டிய முக்கியமான அறிவுரையை இந்தத் தளம் வழங்குகிறது. இமெயிலுக்கு என அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்கும் வகையில், ஐந்து வரிகளில் எல்லா மெயில்களையும் முடித்துக்கொள்ள‌வும் என்பதுதான் அந்த ஆலோசனை.

இமெயிலை அனுப்பவும், பதில் அளிக்கவும் அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பது பிரச்சினை எனக் குறிப்பிடும் இந்தத் தளம் இதற்கான தீர்வு, குறுஞ்செய்திகள் போல இமெயில் பதில்களுக்கும் ஒரு வரம்பு தேவை என வலியுறுத்துகிறது. இதற்காக, எல்லா மெயில்களுக்கும் ஐந்து வரிகள் அல்லது அதற்குக் குறைவாகப் பதில் அளிக்க வேண்டும் எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்துகிறது. இமெயில் பயன்பாடு பற்றி யோசிக்க வைக்கக் கூடிய சுவாரசியமான இணையதளம்.

உங்கள் விரல்களே உங்கள் மருத்துவர்!

By -சலன் 
இன்று மருத்துவத்துறை வணிகமயமாகிவிட்டது என்று எல்லாரும் சொல்கிறார்கள். நீங்கள் மருத்துவமனை சென்றாலும் செலவைப் பற்றி கவலைப்படாமல் இருக்க காப்பீட்டுத்துறையும் உங்களை கவனிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் இது எதுவுமே தேவை இல்லை. நீங்களே உங்கள் விரல்களின் மூலம் உங்கள் நோயைச் சரி செய்து கொள்ளலாம் என்று தைரியமாகக் கூறுகிறார், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் பட்டம் பெற்ற பாசு கண்ணா. அவர் முத்திரைகளின் மூலம் நமது நோயை நாமே தீர்த்துக்கொள்ளும் முறை பற்றி கூறுகிறார்:

 
 ""உடம்பைப் பொருத்தவரை இரண்டே இரண்டு தான் நமக்கு மிக முக்கியம். ஒன்று நோய் வந்தால் சரி செய்து கொள்வது எப்படி? மற்றது நோய்வரும் முன் காப்பது எப்படி? இந்த இரண்டும் நமக்குத் தெரிந்தால் நமக்கு நாமே சிறந்த மருத்துவர்.

எனக்குச் சிறுவயது முதலே ஆராய்ச்சி என்றால் பிடிக்கும். என் மனைவி ஒரு சித்த மருத்துவர். ஒரு முறை நான் ஆராய்ச்சி செய்வதைப் பார்த்த அவர், இது நல்ல விஷயம், தொடருங்கள் என்று ஊக்கப் படுத்தினர். நமது விரல்களே நமக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்றால்

நம்மில் பலரும் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மை. ஆரம்பத்தில் நான் ஆராய்ச்சி மாணவனாக இருந்த போது முத்திரைகளைப் படிக்கப் படிக்க என் மனமும் அறிவும் விசாலமடைந்தது மட்டுமல்லாமல், உடம்பில் வித்தியாசமான ஓர் உணர்வும் ஏற்பட்டது. இதை டாக்டர் என்ற முறையில் எனது மனைவியிடம் பகிர்ந்து கொள்ள, அவர் மேலும் என்னை உற்சாகப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை நான் முத்திரைகளைச் செய்து எனக்குத் தெரிந்த பலரையும் குணப்படுத்தி உள்ளேன்.

சுமார் 3000 முத்திரைகள் உள்ளன. ஒரு மனிதனுக்கு என்ன நோய்கள் வருமோ அதை சரி செய்ய தேவைப் படும் என்று பார்த்துப் பார்த்து முத்திரைகளை தொகுக்க ஆரம்பித்தேன். ஒரு முத்திரை ஆராய்ச்சி என்றால் அதற்கு கிட்டத்தட்ட 90,000 ரூபாய் செலவு ஆகும். ஆராய்ச்சி என்றால் மற்றவர்களை இதைச் செய்யச் சொல்லி அவர்களின் ரத்தம், மலம், சிறுநீர் பரிசோதனை மற்றும் அவர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க மட்டும் அல்லாமல், மற்ற செலவுகளையும் சேர்த்து ஆகும் செலவு இது. ஒரே வேளையில் என்னால் ஒரு முத்திரையை மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடிந்தது. இதற்குக் காரணம் பொருளாதாரம் மட்டும் அல்லாமல்,வேறு பல பிரச்னைகளும் ஏற்பட்டன. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் இப்படி ஆராய்ச்சி செய்ததன் பயனாக 226 முத்திரைகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து அதன் பயன்கள் எவை என்றும் எழுதி வைத்தேன்.

 இந்த முத்திரைகள் எல்லாமே நம் சரீரத்தில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக அமையும். நான் அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் பல்வேறு வகையான சிகிச்சை முறைகளையும் என்னுடைய ஆராய்ச்சியில் இணைத்து, அந்த அந்த முறைகளை விட நம் கை விரல்களே நமக்கு எவ்வளவு முக்கியமானது, உபயோககரமானது, சிறந்தது என்று நிரூபிக்கும் வகையில் செய்ததால், இதை பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த முத்திரைகளைச் செய்ய ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. வலி உள்ளவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. வரும்முன் காப்போம் என்று நான் முன்பே சொன்னேன் அல்லவா? அது போல நோய் இல்லாதவர்களும், நோய் வரும் என்று நினைப்பவர்களும், ""உதாரணமாக சார் எனக்கு ஜுரம் வரும் போல இருக்கு... தொண்டை கரகரனு இருக்கு சார், இருமல்ல கொண்டு போய் விட்டுடுமோ?'' என்றெல்லாம் கேட்பவர்களுக்கு இந்த முத்திரைகள் மிக மிக உபயோகமாக இருக்கும். குறிப்பாக ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும்.

முத்திரைகளால் 21 நாட்களில் ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்ய முடிந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல், வேலை செய்யாத சிறுநீரகத்தை இந்த முத்திரைகள் வேலை செய்ய வைத்திருக்கின்றன. இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும்.

முத்திரைகளை நாம் உட்காரும்போது மட்டுமே செய்ய வேண்டும். நடக்கும் போதோ அல்லது படுக்கும் நிலையிலோ செய்வது சரி அல்ல. ஒரு முத்திரையை சுமார் 20 மற்றும் 30 நிமிடங்களுக்கு செய்தால் நலம். உணவு உண்ட பின் சுமார் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குப்பின் செய்தால் பலன் அதிகமாகும்.

என் மகள் அம்ருதவானி பிட்ஸ் பிலானியில் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஒரு நாள் அவளுக்குத் தலைவலி. அவளது அறை தோழி ஒரு சில முத்திரைகளைச் சொல்லி இதை செய்தால் உனக்கு குணமாகிவிடும் என்றாள். எங்கிருந்து இந்த முத்திரைகளைக் கற்றாள் என்று என் மகள் அவளிடம் கேட்டாள். ""நான் டிவியில் பார்த்தேன். யூடியூபில்லும் இருக்கிறது. நீ தைரியமாகப் பண்ணலாம். உன் தலை வலி பறந்து விடும்'' என்று சொல்ல என் மகள் உடனே எனக்கு தொலைபேசியில் அழைத்து, ""டாடி உங்கள் முயற்சி வீண் போகவில்லை'' என்று பெருமையுடன் கூறினாள். நான் செலவு செய்தாலும் எல்லாரும் இன்புற்றிருப்பதே என் நோக்கம் என்று ஒரு கால கட்டத்திலிருந்து யார் கேட்டாலும் இலவசமாக முத்திரைகளைச் சொல்லித் தருகிறேன். அது மட்டுமல்லாமல், 108 முத்திரைகளை அதன் படங்களுடன், பலன்களையும் சேர்த்து ஒரு புத்தகமாகத் தயாரித்து வெளியிட்டு விட்டேன். யார் வேண்டுமானாலும் பார்த்து, செய்து பயன் பெறலாம். முத்திரை பலவும் கற்று கொள்வோம் முதுமையில் கூட நோயில்லா வாழ்வை பெற்று மகிழ்வோம்'' என்கிறார் டாக்டர். பாசு கண்ணா.
-சலன்

நீதிபதிகள் நியமனம் ராணுவ வியூகமல்ல!

By நீதிபதி கே.டி. தாமஸ் 


நீதித்துறை சில அதிகாரங்களைத் தன்னிடமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில் அந்தத் துறைக்கும் அரசுக்கும் இடையே பெரிய மோதல் நடக்கிறது என்ற பொதுவான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. நீதிபதிகள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.செலமேஸ்வர், தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பற்றி உடனடியாக, தீவிரமாக ஆலோசித்தாக வேண்டும்.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன முறையானது, "கொலீஜியம்' எனப்படுகிற, நான்கைந்து நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறு குழுவுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாக இருந்துவிடக் கூடாது.
நீதியை நிலைநாட்டுவதற்காகவும், பல சந்தர்ப்பங்களில் மக்களையும் தேசத்தையும் பாதிக்கும் பிரச்னைகள், விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதற்காகவும் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். பொதுநலன் விவகாரங்களில் பொறுப்புடன் செயல்படுதல் கட்டாயம் என்பதால், நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
வெளிப்படைத்தன்மைதான் பொறுப்புடன் செயல்படுவதற்கான வழி. முடிவுகளை எடுக்கும் வழிமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், பொறுப்புடைமை என்பது இல்லாதாகிவிடும்.
நீதிபதிகள் நியமனத்துக்காக "கொலீஜியம்' முறை உருவானபோதும், நீதிபதிகள் நியமனம் தொடர்பான "3-ஆவது வழக்குக்குப்' பிறகு அது விரிவடைந்தபோதும், வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன்.வெளிப்படைத்தன்மை என்றால், ஒவ்வொரு கட்டத்திலும் எடுக்கப்படும் முடிவை வெளிப்படுத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல. சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப வெளிப்படைத்தன்மை மாறுதல் பெறும்.
பிறர் ஒதுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நபர் ஏன் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அல்லது சில தகுதிகள் இருந்தும் ஒரு நபர் நீதிபதிப் பதவிக்கு ஏன் கருத்தில் கொள்ளப்படவில்லை- ஏன் நிராகரிக்கப்பட்டார் என்ற காரணங்கள் முக்கியமானவை.
உன்னத நிலையில் உள்ள சிறு குழுவில் இடம்பெறும் சில நபர்களின் மனதில் மட்டுமே அந்தக் காரணங்கள் தங்கிவிடக் கூடாது. எதிர்காலத்தில் அந்த விவரங்களை எடுத்துப் பார்க்கும் வண்ணம், கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டும்.நீதிபதி நியமனம் குறித்த அனைத்து விவரங்களையும் காரணங்களையும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அரசியல் சாசனத்தின் கீழ், நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அல்லது மத்திய அமைச்சரவைதான் ஆலோசனை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.எனவே, நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து இறுதித் தேர்வு வரை நடக்கும் அனைத்து விஷயங்களையும் அதற்கான காரணங்களையும் இந்திய அரசு அறிந்திருக்க வேண்டும்.பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் உண்மையான அதிகாரம் பெற்றிருப்பதால், அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமனக் குழுச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தபோது, நாட்டு மக்களும், அரசும் இந்த விவகாரத்தில் எந்தப் பங்களிப்பையும் தர இயலாத நிலைக்குப் புறந்தள்ளப்பட்டனர்.
எதிர்காலத்தில் அரசு, நீதித்துறை அல்லது அரசியல் சாசன அமைப்பு என எந்த அமைப்புமே அறிந்து கொள்ள முடியாதபடி, நீதிபதிகள் நியமன நடவடிக்கைகளைப் பரம ரகசியமாக வைத்திருக்க முடியாது. நாளை ஒரு தேவை ஏற்படும்போது, அந்தப் பதிவுகள் இல்லையென்றால், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புடைமை என்பதும் இல்லாமல் போய்விடும்.
ரகசியத் தன்மை ராணுவ வியூகங்களிலும் அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தேவைதான். ஆனால் நீதிபதிகள் நியமனத்தில் தேவை இல்லை. இதன் பொருள் நியமனம் குறித்த காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதல்ல பொருள். வெளிப்படைத்தன்மையற்று இருப்பது, ஜனநாயகத்துக்கும் சட்ட மாட்சிமைக்கும் விரோதமானது.
"கொலீஜியம்' முறையை எப்படி வலுப்படுத்த முடியும் என்பது குறித்து அரசும் உச்சநீதிமன்றமும் கலந்தாலோசிக்க வேண்டிய நேரம் இது. உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு என்பது, நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் இடையிலிருந்து மட்டும் தேர்ந்தெடுக்கும் முறையாகத் தற்போது உள்ளது.தகுதி அடிப்படை இல்லாமல், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட இயலும் நிலை உள்ளது. அந்த உயர்நீதிமன்றத்துக்கு முதல் முதலில் எப்போது நியமிக்கப்பட்டார் என்பதுதான், ஒருவர் மிக மூத்த நீதிபதியாவதற்கும் தலைமை நீதிபதியாவதற்கும் அடிப்படையாக உள்ளது.
உயர்நீதிமன்றத்துக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு நபர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது மட்டுமே அவர் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதியாகிவிட முடியாது. இந்தக் காரணத்தாலேயே, தகுதி வாய்ந்த மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விடுகிறது.
எனவே, சிறந்த நீதிபதிகள் என்று கருதப்படும் ஐந்து மூத்த நீதிபதிகளிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து "கொலீஜியம்' ஆலோசிக்கலாம். பணி மூப்பு அடிப்படையில் அல்லாமல், ஐந்து பேரிலிருந்து சிறந்த நபரைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான வழியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த முறையிலும், நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான "கொலீஜியம்' குழுவில் இடம்பெற்றவன் என்ற முறையிலும், நாட்டு நலன், நீதி பரிபாலனம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் நீதிபதிகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை நான் அறிவேன்.
எனவேதான், எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு, சிறப்பான தகுதிகள் உள்ளவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை மட்டும் கருத்தில் கொண்டால் போதாது.
மற்றொரு விஷயம்: நீதித் துறையின் நடவடிக்கைகள் மூலமாகப் பிறந்ததுதான் "கொலீஜியம்' முறை. அரசியல் சாசனம் இயற்றுவதற்கான விவாதங்களின்போது "கொலீஜியம்' என்ற வார்த்தையைக்கூட யாரும் குறிப்பிடவில்லை. அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட பிறகு, வெகு காலம் கழித்து, நமக்குக் கிடைத்த பெரும் அனுபவங்களின் அடிப்படையில்தான் "கொலீஜியம்' என்ற சொல் உருவானது.
நீதிபதி நியமனம் குறித்த "2-ஆவது நீதிபதிகள் வழக்கு'க்குப் பிறகு "கொலீஜியம்' முறை உருவாக்கப்பட்டது. "மூன்றாவது வழக்குக்கு' பிறகு, 1998-இல் சில விதிமுறைகளுடன் "கொலீஜியம்' முறை விரிவடைந்தது. அதன் பிறகு நீண்ட காலம் கடந்துவிட்டது. "கொலீஜியம்' முறையின் சாதக - பாதகங்களைப் பற்றி நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கேட்ட விளக்கத்தின் அடிப்படையில் "மூன்றாவது நீதிபதிகள் வழக்கு' உருவானது. முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்று வந்த நீதிபதிகள் நியமனத்தில் ஏதேனும் குறைகள் உள்ளனவா, அவற்றை எந்த வகையில் களையலாம் அல்லது சரி செய்யலாம் என்று அறிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உருவாக்கினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகளுடன் பெரிய அமர்வை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கடைசியாக விசாரித்த அமர்வில் ஒன்பது நீதிபதிகள் இருந்தனர். புதிய விசாரணையை 11 அல்லது 13 நீதிபதிகள் கொண்ட அமர்வுவிசாரிக்கலாம்.
"அரசியல் சாசனப் பிரிவை ரத்து செய்ய வேண்டுமானால், அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கூறு பற்றி விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு போதாது' என்று கேசவானந்த பாரதி வழக்கின் மீதான தீர்ப்பு கூறுகிறது.
இப்போது அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கூறு என்ற முறையில், அரசியல் சாசனத்தையே பரிசீலிக்கும் நிலை தோன்றியுள்ளது. எனவே, அரசியல் சாசனப் பிரிவைக் கேள்விக்கு உள்ளாக்கும் வழக்கை விசாரிக்க, குறைந்தபட்சம் கேசவானந்த பாரதி வழக்கை எத்தனை நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததோ, அதே எண்ணிக்கையைக் கொண்ட அமர்வு தேவை.
நீதிபதிகள் எண்ணிக்கையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீர்மானிக்கலாம். இது தொடர்பாக, உச்சநீதிமன்ற விதிமுறையில் திருத்தம் கொண்டு வரலாம்.
தேசிய நீதிபதிகள் நியமனக் குழுச் சட்டம் தொடர்பான தீர்ப்பு தவறானது என்று உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் பலரும், முன்னாள் நீதிபதிகள் பலரும் கருதுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
நாட்டு நலன் கருதி, அரசியல் சாசனத்தின் செயல்பாடு கருதி, அந்தத் தீர்ப்பு தொடர்பாக மறுபரிசீலனை தேவையா, உயர் நிலையில் நீதிபதிகளை நியமிக்கப் புதிய நியமன முறை தேவையா என்பதெல்லாம் குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசிக்க மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

NEWS TODAY 23.12.2025