Monday, September 12, 2016

விபரீத காதல்

தமிழகத்தில் ஒருதலைக் காதலால் இளம் பெண்கள் வெட்டிக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நுங்கம்பாக்கம் இன்ஜினியர் சுவாதி பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையத்திலே வெட்டிசாய்க்கப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் மக்கள் மனதைவிட்டு அகலாத நிலையில் ஒருதலைக் காதலுக்காக விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா, தற்போது விருத்தாசலம் புஷ்பலதா என கடந்த 3 மாதத்தில் மட்டும் 4 பெண்கள் விலை மதிக்க முடியாத தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
தான் விரும்பிய பெண் தனக்கு கிடைக்காவிட்டால் ஆசிட் வீசி அவளது முக அழகை கெடுக்கும் கொடூர செயல்களில்தான் கடந்த காலங்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஒரு படி மேலே போய் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் வெட்டி சாய்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்யும் கலாசாரம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

காதலுக்காக தாடி வைப்பதும் தற்கொலை செய்துகொண்டதும் பழங்கதையாகிவிட்டது. தற்போது பழி உணர்வுதான் மேலோங்கி வருகிறது. இளைஞர்களின் இந்த கொடூர போக்கிற்கு சினிமா மற்றும் சமூக ஊடகங்களும் ஒரு காரணமாகிவிட்டது. தங்களது காதலை பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இளைஞர்கள் இருக்கின்றனர். பெண்களுடைய ஆசாபாசங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஒருதலைக் காதலில் ஈடுபடும் இளைஞர்கள் கண்டிப்பாக மாற வேண்டும். அதுதான் தமிழ் சமூகத்துக்கு பெருமையை தேடித்தரும். இதுவரை நடந்த நான்கு பலி சம்பவங்கள் மூலம் தாழ்ந்து போய்க்ெகாண்டிருக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமையை மீண்டும் நிலைநிறுத்துவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தளம் புதிது: அல்ஜீப்ரா விதிகள்


கணித மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான இணையதளங்கள் வரிசையில் வருகிறது ‘அல்ஜீப்ரா ரூல்ஸ்' இணையதளம். அல்ஜீப்ரா பாடத்தில் பயிற்சி பெறுவதற்கு உதவுவதற்கு என்றே பிரத்யேகமாகப் பல‌ தளங்களும் இருக்கின்றன என்றாலும், இந்தத் தளம் மிகவும் விஷேசமானது.

அல்ஜீப்ரா பாடத்துக்குத் தேவையான அடிப்படையான விதிகளை மட்டும் இந்தத் தளம் பட்டியலிடுகிறது. அடிப்படை விதிகள் அவற்றுக்கான உதாரணத்துடன் விளக்கப்பட்டிருப்பதுடன், எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் தன்மைக்கேற்ப அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விதியாக சங்கிலித் தொடர் போல எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

அல்ஜீப்ராவில் படிப்ப‌வர்களுக்கு மட்டுமல்ல அல்ஜீப்ரா என்றால் எட்டிக்காயாக நினைப்பவர்களுக்கும்கூட இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி:http://algebrarules.com/index.php

சிங்குர் தரும் படிப்பினைகள்...


THE HINDU

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பல படிப்பினைகளை உணர்த்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்குர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான நானோ கார் (ரூ. 1 லட்சம் விலை) ஆலை அமைக்க மாநில அரசு காட்டிய 6 இடங்களில் டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்தது சிங்குரைத்தான். அப்போது மேற்கு வங்க முதல்வராயிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான அரசு டாடா மோட்டார்ஸுக்கு 997 ஏக்கர் நிலத்தை வழங்கியது.

விவசாய நிலமாக இருந்ததை தொழிற்சாலை கட்டுவதற்காக ஒதுக்கியதை அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.

ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் மம்தா பானர்ஜி.

2008-ம் ஆண்டு சிங்குர் ஆலையிலிருந்து நானோ கார்கள் சந்தைக்கு வரும் என டாடா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆலைப் பணிகள் ஏறக்குறைய 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவேயில்லை. இதையடுத்து 2008-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி சிங்குர் ஆலைத் திட்டத்தைக் கைவிடுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அத்துடன் இந்த ஆலை குஜராத் மாநிலம் சனந்த் நகருக்கு இடமாற்றம் செய்வதாக அக்டோபர் 7-ம் தேதி அறிவித்தார்.

சிங்குரிலிருந்து டாடா நிறுவனம் வெளியேறியபோதிலும் நிலம் டாடா மோட்டார்ஸ் வசமே இருந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண் டும் என மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த நிலம் தங்களுக்குத் தேவை என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இழுபறியாக நீடித்து வந்த இந்த வழக்கு கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலத்தை 10 வாரங்களுக்குள் அளவிட்டு உரிய விவசாயிகளிடம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தை அளவிடும் பணியை மாநில அரசு தொடங்கிவிட்டது. தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி இது என்றும், மன நிம்மதியோடு இறப்பேன் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த ஆலைக்கென டாடா நிறுவனம் ரூ. 1,400 கோடி வரை முதலீடு செய்துள்ளது. டாடா நானோ உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 13 நிறுவனங்கள் முழுமையாக தங்களது ஆலையை இங்கு அமைத்திருந்தன. 17 நிறுவனங்களின் ஆலைகள் பல்வேறு கட்ட நிலையில் இருந்தன. அவை அனைத்தும் குஜராத்துக்கு இடம்பெயர்ந்தன. உதிரிபாக தயாரிப்பாளர்கள் மட்டும் ரூ.338 கோடி முதலீடு செய்திருந்தனர். அவை அனைத்தும் அப்படியே பாதியில் முடங்கியது.

நிலத்தை திரும்ப ஒப்படைப்பதால் டாடா நிறுவனத்துக்கு நிலத்துக்கு அளித்த தொகை திரும்பக் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அந்தத் தொகை நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டுக்கு நிவாரணமாக அமையாது.

இந்தியாவில் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சில பல பகுதிகளில் ஆலைகள் அமைக்கவும் நிலங்கள் வாங்கப்பட்டு அவற்றில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த அளவுக்கு எங்குமே பிரச்சினை ஏற்பட்டது கிடையாது. இது போன்ற எதிர்ப்பும் உருவானது கிடையாது.

விவசாய நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி வாங்கினால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிங்குர் வழக்கு ஒரு சிறந்த உதாரணம். அதே சமயத்தில் இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு அவர்களுக்கு தவறான சமிக்ஞையை தோற்றுவிக்கவும் வாய்ப்புள்ளது.

சிங்குர் வழக்கு அரசியல்வாதி யான மம்தாவுக்கு பெரும் வெற்றியாக இருக்கலாம், தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பின்னடைவாக இருக்க லாம். ஆனால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் அரசிடம் தெளி வில்லை என்பதையே இது காட்டு கிறது. அதே நேரத்தில் விவசாயத்தை அழித்து தொழிற்சாலை உருவாவதை ஏற்க முடியாது என்பதையும் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

Sunday, September 11, 2016


விமானத்தில் தனியே உலகம் சுற்றிய இளைஞர்

உலகிலேயே மிகக் குறைந்த வயதில் 15 நாடுகளுக்குத் தனியாக விமானத்தை ஓட்டிச் சென்றவர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் படைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த அந்த 18 வயது இளைஞரின் பெயர், லக்லான் ஸ்மார்ட். இவர், தனியாக விமானத்தை ஓட்டிக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினார்.

அதன்படி, ஆஸ்திரேலியாவின் மருச்சிடோர் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூலை 24–ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார் ஸ்மார்ட்.

15 நாடுகளைச் சேர்ந்த 24 இடங்களுக்கு தனது சிறிய விமானத்தில் பறந்து சென்ற அவர், சமீபத்தில் தனது தாய்நாடு திரும்பினார். அப்போது ஸ்மார்ட்டுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்மார்ட், 18 வயது, 7 மாதம், 21 நாட்களில் விமானத்தைத் தனியாக ஓட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த மாத் குத் மில்லர், உலகின் குறைந்த வயதில் தனியாக அதிக நாடுகளுக்கு விமானத்தில் பறந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரை ஸ்மார்ட் முந்திவிட்டார்.

இவர், 45 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 2 மாதங்களில் கடந்து இச்சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி லக்லான் ஸ்மார்ட், தான் சாதனை படைப்பதற்கு உறுதுணையாக இருந்த தமது பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தத் தருணம் தமது வாழ்வில் மிகவும் மறக்க முடியாதது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பறந்தபோது தனது ‘திரில்லிங்’ அனுபவம் பற்றி ஸ்மார்ட் கூறும்போது, இந்தோனேசியா அருகே சென்று கொண்டிருந்தபோது தொலைத்தொடர்பு தகவல் சரியாகக் கிடைக்காததால் விமானம் மலை மீது மோதவிருந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்றார்.

சோதனைகளைக் கடந்துதானே சாதனை படைக்கணும்!
ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு

DAILY THANTHI

ஆதிகாலத்திலிருந்து தமிழ்நாட்டை மன்னர்கள் ஆண்டபோதும், ஆங்காங்கு ஜமீன்தாரர்கள் நிர்வாகத்திலும் சரி, தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியிலும், பாசனவசதிக்காகவும், குடிநீர்வசதிக்காகவும், ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊருணிகள் அமைக்கப்பட்டன. நதிவளம் அதிகமில்லாத தமிழ்நாட்டில் பெய்கிற மழைநீரை இத்தகைய நீர்நிலைகளில் சேமித்துவைத்ததால்தான் பேருதவியாக இருந்தது. அந்தகாலத்திலேயே இவ்வளவு நீர்நிலைகள் இருந்தபோது, பெருகிவரும் ஜனத்தொகைக்கேற்ப இந்தகாலத்தில், புதிதுபுதிதாக நீர்நிலைகளை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால், அவ்வாறு புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படாமல், தற்போது இருக்கும் நீர்நிலைகளிலேயே ஏராளமான ஆக்கிரமிப்புகள் உருவாகிவிட்டன. நீர்நிலைகளின் ஓரங்களில் முதலில் கட்டிடக்கழிவுகள், குப்பைகளைக்கொட்டி தரையாக்கிவிட்டு, அடுத்தமாதங்களுக்குள்ளேயே பட்டா போட்டுவிற்கும் கொடிய செயல்கள் எல்லா இடங்களிலும் அரங்கேறுகிறது. அவ்வப்போது நீதிமன்ற தீர்ப்புகள், பத்திரிகைகளில் படம்போட்டு காட்டும் காட்சிகள் வழங்கப்பட்டாலும், ஆக்கிரமிப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளில் மட்டும் சாதி, மத வேறுபாடின்றி, அதிலும் மிகவும் முக்கியமாக அரசியல்கட்சிகள் வேறுபாடில்லாமல் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க முடிகிறது.

சென்னையில், சேலையூரிலுள்ள ராஜகீழ்ப்பாக்கம் ஏரி பாதியாக சுருங்கி, 3 புதிய வார்டுகள், நகராட்சியில் உருவாகும் வகையில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. இந்த வீடுகளுக்கெல்லாம் சாலைவசதி, குடிநீர்வசதி, மின்சாரவசதி, ரேஷன் கார்டு என எல்லாவசதிகளையும் அதிகாரிகள் வேகமாக செய்துதந்துவிட்டனர். ‘‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என மாநிலம் முழுவதிலும் இவ்வாறு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுப்பதும், அனைத்து அடிப்படைவசதிகளை செய்வதும் ஏன்?, அனைத்திற்கும் பின்னணியாக ஊழல்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சென்ற ஆண்டு சென்னையில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த மத்தியகுழு அதிகாரிகள், சென்னையிலுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக்கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஆர்.மகாதேவன், சேலம் மாவட்டத்திலுள்ள 105 நீர்நிலைகளில் இவ்வாறு ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டாபோட்டு கொடுத்த அதிகாரிகளை எவ்வாறு பதில் சொல்லவைக்கலாம்? என்ற பொறுப்புகடமையை அவர்கள்மீது சுமத்தவேண்டியது குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த நீர்நிலைகளில் எல்லாம் புதிதுபுதிதாக வீடுகள் தோன்றுவதற்கு ஆக்கிரமிப்பு வசதிகளுக்கு அதிகாரிகள் பட்டாபோட்டு கொடுத்திருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தவுடன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், சென்னை வெள்ளம் தொடர்பாகவும், சென்னை நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பதற்காகவும் தொடரப்பட்ட வழக்கில், அடையாறு கரைகளில் 28 குடிசைப்பகுதிகள் ஆக்கிரமிப்பால் தோன்றியதுதான், சென்னை நகருக்குள் பாய்ந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும், நீர்போக்குவரத்து வழியாக தேசிய நீர்வழி சட்டத்தின்கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டதையும் பட்டவர்த்தனமாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கும்போது, சென்னை, சேலம் மாவட்டத்தோடு நிறுத்திவிடாமல், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக உடனடியாக தீவிரநடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்கள், ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள், குட்டைகள் எல்லாவற்றையும் சர்வே எடுத்து, எங்கெங்கு ஆக்கிரமிப்பு இருக்கிறதோ?, அங்கு உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும். இதில் அரசின் கடமை மட்டுமல்ல, அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், அதாவது கிராமப்பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து அமைப்புகளிலும் இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதே தங்களின் முதல்கடமையாக எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். முதல்கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளும், அதன் முழுப்பரப்பில் இருக்கிறதா? என்பதை சர்வேசெய்து, எவ்வளவு ஆக்கிரமிப்பு இருக்கிறது? என்பதை தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் கணக்கிடவேண்டும். மாநிலத்தின் சராசரியான ஆண்டு மழை 911.60 மி.மீ. தண்ணீரை முழுமையாக சேகரித்துவைக்க வேண்டுமெனில், அனைத்து நீர்நிலைகளும் முழுகொள்ளளவும் இருக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்.

இப்போ நல்லா இருக்கீங்களா?- 108-ன் அக்கறை


ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால் மனைவியின் சடலத்தை இறுதிச் சடங்குக்கு 10 கி.மீ., தூரத்துக்குத் தோளில் சுமந்து சென்றார் கணவர். சிகிச்சைக்காக மகனைத் தோளில் சுமந்து சென்றார் தந்தை.

- இந்த இரண்டு சம்பவங்களும் ஆந்திரத்தைத் தாண்டியுள்ள ஒடிசாவில் நடைபெற்றவைதான்.

இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த போது, “ஹலோ நாங்க 108-ல இருந்து பேசுறோம். எங்களோட ஆம்புலன்ஸ் சேவையை நீங்க பயன்படுத்தியிருந்தீங்க. இப்போ உங்க உடம்பு நல்லாயிருக்கா” என அக்கறையுடன் கேட்டது அந்தக் குரல். திடீர் அழைப்பு தந்த ஆச்சரியத்துடன், “நான் நலமா இருக்கேன், நன்றி” என்று சொன்னேன். 108 ஆம்புலன்ஸ் அமைப்பிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பு அது.

நாட்டின் ஒரு பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்படுகிறது. இன்னொரு பகுதியில் இப்படி விசாரிப்புகள். இதுதான் இந்தியா.

ஒரு பெரிய ஹால். நூற்றுக்கும் மேற்பட் டோர் தொலைபேசி அழைப்பு களுக்குப் பதில் தந்தபடி பரபரப்பாக இருக்கிறது அந்த இடம். இவர்கள் ஒவ்வொருவரும் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் அலுவலர்கள் (இ.ஆர்.ஓ.). தமிழகம் முழுவதும் இருந்து ஒரு நாளுக் குச் சராசரியாக இவர்களுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை 25,000.

பதற்றமும் நெகிழ்ச்சியும்

“ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளை அட்டெண்ட் பண்ணுவோம். எதிர்முனையில் பேசும் நபர் பெரும்பாலும் அழுகையும் பதற்றமுமாகவே பேசுவார். அவர்களைப் புரிந்துகொண்டு, ஆசுவாசப்படுத்தித்தான் தகவல்களைப் பெற வேண்டும். பிறகு அருகில் இருக்கும் ஆம்புலன்ஸை அனுப்பி வைப்போம். இங்கு வேலைக்குச் சேர்ந்து ஐந்தரை ஆண்டுகள் ஆகின்றன. ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக்கொண்ட பலரும் தங்கள் உறவினரைக் காப்பாற்ற, உரிய நேரத்தில் வாகனம் அனுப்பியதற்காகத் திரும்ப அழைத்து நன்றி சொல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையில்லை” என்கிறார் ஒரு இ.ஆர்.ஓ.

பலன்பெறும் கர்ப்பிணிகள்

தமிழகத்தில் அரசு - தனியார் பங்களிப்பில் 108 சேவை ஆரம்பித்து இந்த 15-ம் தேதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரத் துறையின் ஆதரவுடன் இந்தச் சேவை இயங்கிவருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற நிலை இருக்கிறது. இதுவரை 5 கோடியே 30 லட்சத்துக்கும் மேலான அழைப்புகள் இந்தச் சேவைக்கு வந்திருக்கின்றன.

108 சேவையால் அதிகம் பயனடைந்தவர்கள் யாரென்று பார்த்தால், கர்ப்பிணிகளே முதலிடம் பெறுகிறார்கள். 108 சேவைப் பயனாளிகளில் 26 % கர்ப்பிணி பெண்கள், 22 % சாலை விபத்தில் சிக்கியவர்கள், 6 % இதயப் பாதிப்பு ஏற்பட்டவர்கள். இதுதவிர நீரிழிவு நோய், விஷம் அருந்தியவர்கள், தற்கொலைக்கு முயற்சித்தவர்கள், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களும் காக்கப்பட்டுள்ளன.

“குறுகலான பாதையில் ஆம்புலன்ஸ் செல்ல வசதி இல்லாததால், உடனடி முதலுதவி வழங்குவதற்காகப் பைக் ஆம்புலன்ஸ் சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. சென்னையில் சில இடங்களில் மிகக் குறுகலான தெருக்கள் இருக்கின்றன. இப்பகுதிகளுக்குப் பைக் ஆம்புலன்ஸ் சேவை பெரிதும் பயன்படுகிறது” என்கிறார் 108 விழிப்புணர்வு சேவைத் துறை மேலாளர் பிரபுதாஸ்.



பிரபுதாஸ்

அத்துடன் 48 மணி நேர ‘ஃபாலோ-அப்’ என்ற சேவையும் இருக்கிறது. நோயாளியின் தற்போதைய நிலையை அறிந்துகொள்வதே இந்தச் சேவையின் நோக்கம். இது மக்களுடன் அணுக்கமான உறவை ஏற்படுத்துகிறது.

104 சேவை எதற்காக?

உயிர் காக்கும் சேவை 108 என்றால், முழுக்க முழுக்க மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்காகவும், புகார்கள் தெரிவிப்பதற்காகவும் 104 என்ற இலவச எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

“மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்வதற்கான முயற்சி இது. இரவு நேரத்தில் திடீரென ஓர் உபாதை ஏற்படலாம். அது எத்தகைய உபாதை எனத் தெரிந்துகொள்வது அவசியம். உதாரணத்துக்கு, ஸ்ட்ரோக் ஏற்பட்ட 60 நிமிடங்களுக்குள் மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு சென்றுவிட்டால் நிரந்தர உடல் ஊனத்திலிருந்து நோயாளியைக் காப்பாற்ற முடியும். 104 சேவையை ஒருவர் தொடர்புகொண்டு எங்கள் மையத்தில் இருக்கும் மருத்துவர் களிடம் தகவல்களை அளிக்கும்போது, நோயின் அறிகுறிகளைப் பற்றி புரிந்துகொண்டு அதற்கு அவசரசிகிச்சை தேவையென நினைத்தால் மருத்துவர்களே அழைப்பை 108-க்கு மாற்றிவிடுவார்கள்.

பரீட்சை நேரங்களில் நிறைய மாணவர்கள் 104 சேவையைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுகிறார்கள். மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருபோதும் மருந்துகளைச் சிபாரிசு செய்வதில்லை.

ஏதேனும் ஒரு பகுதியில் பலருக்கும் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் போதும். அரசு நிர்வாகத்துடன் இணைந்து மருத்துவ முகாம் அமைக்கவும் ஏற்பாடு செய்வோம்.

அவசர நிலையில் 108-ஐ அழைக்க வேண்டும் என்பது மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிந்துவிட்டது. அதேபோல் மருத்துவ ஆலோசனைகளுக்கு 104-யைத் தொடர்புகொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு 3000 அழைப்புகள் வருகின்றன” என்கிறார் 108 சேவையின் செயல்பாடுகள் பிரிவு மாநிலத் தலைவர் ரவீந்திரா.



ரவீந்திரா

விபத்துப் பகுதிகளில் போலீஸ் எப்.ஐ.ஆர்., நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 1,200 இடங்கள் விபத்து அதிகமாக நடைபெறும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே பிளாக் ஸ்பாட் அல்லது ஹாட் ஸ்பாட்களைக் கண்டறிந்து அப்பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை விபத்துகளில் உயிர் சேதம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்பகுதிகளில் அதிகமானோர் இறப்பதைத் தவிர்க்க 108 துணையாக இருக்கிறது.

தயக்கம் இல்லாமல் உதவுங்கள்

108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறும்போது, “உயிர் காக்க நல்ல சமாரியர்கள் தேவை. அப்படிப்பட்ட நல்ல சமாரியர்கள் இன்றும் இருக்கின்றனர். விபத்துகள் குறித்தும் கொலைவெறி தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் தகவல் அளிப்பவர்களின் விவரங்களை, நாங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோம். சட்டச் சிக்கல்கள், போலீஸ் வழக்குகள் என அச்சப்படாமல், தயங்காமல் உதவுங்கள். நல்ல சமாரியர்களை அங்கீகரித்து அவ்வப்போதுச் சான்றிதழ்களும் வழங்குகிறோம்” என்று முடிக்கிறார் பிரபுதாஸ்.

தேவை ஏர் ஆம்புலன்ஸ் சேவை

சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் 108 சேவை குறித்துத் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்:

108 ஆம்புலன்ஸ் சேவை வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மக்கள் நிச்சயமாகப் பயன்பெறுகின்றனர். அதேவேளையில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் 108 ஆம்புலன்ஸ் சேவை, பல நேரங்களில் கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்களுடன் டை-அப் வைத்துக்கொண்டு நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதும் நடக்கிறது. அரசு - தனியார் பங்களிப்பில் 108 சேவை இயங்கினாலும், இந்தச் சேவைக்கான 95% நிதி ஆதாரம் அரசாலேயே வழங்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கும்போது இச்சேவையை அவுட் சோர்சிங் முறையில் செயல்படுத்தாமல், அரசே முழுமையாக ஏற்று நடத்துவது சிறப்பானதாக அமையும்.

அதேபோல் 108 மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. பணிப் பாதுகாப்பும் இல்லை. உயிர் காக்கும் சேவையில் இருக்கும் இத்தொழிலாளர்களுக்கு அரசு உரிய ஊதியத்தையும் சலுகையையும் வழங்க வேண்டும். அதேபோல் ஆம்புலன்ஸில் இருக்கும் ஊழியர்கள் இன்னமும் சிறப்பான மருத்துவப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களால், உயிர் சேதங்களைக் கூடுதலாகத் தவிர்க்க முடியும்.

இவற்றைத் தவிரத் தமிழகத்தில் ‘ஏர் ஆம்புலன்ஸ் சேவை‘ மிகவும் அவசியம். குறிப்பாகச் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் இச்சேவை மிக மிக அவசியம். உதாரணத்துக்குச் சென்னை தாம்பரத்தில் ஒரு சாலை விபத்து நடந்தால், ஆம்புலன்ஸில் உரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன் உயிர் பிரிந்துவிடுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ‘ஏர் ஆம்புலன்ஸ் சேவை’ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பைலட் சேவையாகத் தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும்” என்றார்.



ஜி.ஆர். ரவீந்திரநாத்

புகார்களுக்கு என்ன பதில்?

108-ல் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் சேர்க்க ஓட்டுநர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், துணைக்கு ஆள் இல்லை என்றால் ஆம்புலன்ஸில் நோயாளியை அழைத்துச் செல்லத் தயங்குவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

“நோய் பாதிப்பின் அளவை பொறுத்து அருகில் இருக்கும், உரிய சிகிச்சை வழங்கும் வசதிகள் கொண்ட மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பதே ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொதுவான அறிவுரை. நோயாளியின் உறவினர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே ஊழியர்கள் செயல்படுகிறார்கள். சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கச் சொல்கிறார்கள், பிறகு கட்டணம் கட்டும்போது 108 மீது புகார் தெரிவிப்பதும் நடக்கிறது.

அதேபோல், அட்டெண்டர் (ஆள் துணை) இல்லை என்றால் நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்க மறுக்கக் கூடாது. அட்டெண்டர் இருந்தால் நோயாளிக்கு மனதளவில் துணையாக இருக்கும் என்பதாலேயே அட்டெண்டர் தேவை என்று வலியுறுத்துகிறோம். மற்றபடி இது கட்டாயமில்லை” என்கிறார் பிரபுதாஸ்.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியோ அல்லது அட்டெண்டர் இல்லாததால் வாகனத்தில் ஏற்ற மறுத்தாலோ 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுதவிர அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வரவில்லை, சிகிச்சைக்கு லஞ்சம் கேட்கப்படுகிறது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ அல்லது உள்ளே இருக்கும் மருத்துவ உதவியாளரோ பெண் நோயாளியிடம் கண்ணியமாக நடந்துகொள்ளாவிட்டாலும் மேற்கண்ட எண்ணில் புகார் செய்யலாம்.



கர்ப்பிணிகளுக்கு 102

108, 104 சேவைகளைத் தொடர்ந்து விரைவில் 102 சேவையும் நடைமுறைக்கு வரவுள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கான சேவை. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பதிவுசெய்யும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்பக் காலம் முழுவதும் இதன் கீழ் ஆலோசனை வழங்கப்படும். தாய்மார்களுக்கான பிரசவம் முதல் பிரசவம் முடிந்து வீடு திரும்புவதுவரை இலவசச் சேவை இதன் கீழ் கிடைக்கும்.

இப்போதைக்கு அந்தந்த மண்டல, பிராந்திய அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் சேவை இயங்கிவருகிறது. விரைவில் 102 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு நேரடியாக இச்சேவையைப் பெற முடியும். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்குத் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளும் இச்சேவையின் கீழ் வழங்கப்படும்.

இந்தியச் செஞ்சிலுவை சங்கத்துடன் தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 155377 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இலவச அமரர் ஊர்தி சேவையைப் பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இருந்து சடலத்தை எடுத்துச் செல்லவும், பிணவறையில் இருந்து சடலத்தை எடுத்துச் செல்லவும் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அந்தக் குரல்கள் நம் காதுகளை எப்போது எட்டும்? - உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10


கம்பளிப் பூச்சியொன்று தன்னுடைய நண்பனிடம் பல கேள்விகளைப் பரபரப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது. மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த புழுக்கூட்டைப் பார்த்து, அது என்னவென்று கேட்டது. ‘நீ நிதானமாகச் சில காலம் அதனுள்ளே கண்ணை மூடி தூங்கினால், பிறகு அந்தக் கூட்டை உடைத்துக்கொண்டு சிறகு முளைத்து, அதோ விண்ணில் பறக்கும் வண்ணத்துப்பூச்சியாக மாறுவாய்' என்றது நண்பன் கம்பளிப் பூச்சி.

ஆனால், ‘நான் ஏன் புழுக்கூடு எனும் சிறையில் காலத்தை வீணடிக்கவேண்டும்? என்னால் இப்பொழுதே பறக்கமுடியுமே' என்று தன் மேலிருக்கும் மெல்லிய ரோமங்களைச் சிலிர்த்துக்கொண்டு, சிறகுகள் முளைத்துவிட்ட மயக்கத்தில் மரக்கிளையிலிருந்து கீழே குதித்தது அந்தக் கம்பளிப்பூச்சி.

அது கீழே விழும் முன்னே சட்டென்று பறந்து வந்த ஒரு ஊர்க்குருவி, கம்பளிப்பூச்சியைக் கொத்திக்கொண்டு சென்றுவிட்டது.

சுவரொட்டியில் உறையும் பதின்பருவம்

பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் எதையும் செய்துவிடமுடியும், எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்ற அசட்டுத் தைரியம், நினைத்தவுடன் எல்லாம் நடக்கவேண்டும் என்கிற துடிப்பு, கிடைக்கவில்லை என்றால் உடனே உடைந்துபோய்விடுவது போன்றவை இந்தக் காலப் பதின்பருவத்தினரின் இயல்பாக இருக்கிறது.

சிறகுகள் முளைக்கும் முன்னரே, முதிர்ச்சியடையாத இறக்கைகளால் பறந்துவிட முடியும் என்ற அசட்டு நம்பிக்கையோடு முட்டிமோதிப் பறக்க நினைத்து நொறுங்கி விழும் பதின்பருவத்தினரின் திடீர் முடிவுகளில் ஒன்றான தற்கொலை முயற்சி, திடீர் மரணத்தில் முடிகிறது. வாழ்வை வண்ணங்களால் அலங்கரிக்க வேண்டிய வயதில், கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் மதில்களில் நிறைந்து காணப்படுவதைப் பார்ப்பது வேதனைதான்.

தனிமையின் வலி

உலகத் தற்கொலை புள்ளிவிவரங்களின்படி 70 வயதுக்கு மேலிருப்பவர்கள் இறப்பதற்கான முதன்மைக் காரணம் தற்கொலை. குடும்பம் சிதைவது, முதியவர்கள் புறக்கணிக்கப்படுவது, பொருளாதாரச் சுமையாய் முதியவர்கள் பாவிக்கப்படுவது, தனிமை, நோயின் தாக்கம், வலி, புலன் குறைபாடு போன்றவையெல்லாம் வெவ்வேறு தளத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி வயது முதிர்ந்தவர்களை மனஉளைச்சலுக்குத் தள்ளி, தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அவர்கள் தற்கொலைக்கு மனக்கவலை நோய் முக்கியக் காரணம்.

அதேபோல, சமீபகாலமாகக் குழந்தைகளோடு பெண்கள் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதும் அதிகமாகியுள்ளது. கணவரின் குடி, உடல், உளவியல் வன்முறை, பண நெருக்கடி என்று பல்வேறு புறக்காரணிகள் நெருக்கடி ஏற்படுத்துவதால் அணுஅணுவாய் சாவது போதும் என்று முடிவெடுத்து, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகத் தற்கொலை நிகழ்கிறது. தன்னுடைய குழந்தை (பல நேரங்களில் பெண் குழந்தை) தனியே தவிக்க வேண்டாம் என்று நினைத்து, சேர்ந்தே தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்கள் புறக்கணிக்கப்படுவதை இந்தத் தற்கொலைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தனிநபர் பிரச்சினையா?

கல்லூரி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம், தேர்வில் தோற்பது, வாழ்க்கையே முடிந்துவிட்டதாகத் தீர்க்கமான முடிவு, உறவு சிக்கல், கல்விக் கடன் வசூலிக்க வருபவர் தரும் நெருக்கடி போன்றவை மாணவர் தற்கொலைக்கான காரணிகள்.

இப்படித் தற்கொலைகளின் காரணிகளை ஆய்வு செய்யும்போது, தனிநபரின் உளவியல் நெருக்கடிக்குக் காரணமாக அமையும் சமூகப் பொருளாதார, அரசியல், சூழலியல், கலாச்சார, உடல், உளவியல் காரணிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றன. அதற்கு நேர்மாறாக, தனிநபர் காரணிகளை முன்னிறுத்தித் தற்கொலைகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, தெளிவில்லா பிம்பத்தையே கொடுக்கும்.

இருட்டறையில் புலப்படாத வெளிச்சம்

ஒருவர் தற்கொலை செய்து இறப்பதற்கு முன்னால், சராசரியாக 20 முறையாவது தற்கொலைக்கு முயற்சி செய்வார் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. சட்டென்று முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை குறைவே. தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் நெருக்கடிகளை உணரும்போது 'வாழ்வா, சாவா' என்ற இருமன ஊடாட்டம் மேலோங்கி இருக்கும். அவர்களுடைய சிந்தனை முழுக்கப் பிரச்சினைகள் மட்டுமே ஆட்கொண்டு இருக்கும் சூழலில், அதனால் மனதில் ஏற்படும் வலி, தன் மீதே ஏற்படும் கோபமும் வெறுப்பும், இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று யத்தனிக்கும் மனநிலையும் - தற்கொலைதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது போல நினைக்கத் தூண்டிவிடும்.

கதவுகள் மூடப்பட்ட இருட்டறையில் வெளிவர விழியில்லாதது போல் தோற்றமளித்தாலும், வெளிச்சத்தைத் தேட முயலாமல் தோற்றுப்போய், வெளியே வர வழி தெரியாமல் தனிமையில் உதவி தேடி அழும் அவர்களுடைய குரல்கள் பலரின் காதுகளை எட்டுவதில்லை. பல நேரம் ஒருவரது மரணத்துக்குப் பிறகுதான் அவர்களின் வேதனையையும் வலியின் போராட்டத்தையும் நம்மால் உணரமுடிகிறது.

தற்கொலைக்கு முயல்பவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவது உண்டு. ஏன் விடிகிறதென்றே தெரியவில்லை, தான் எதற்கும் பிரயோஜனம் இல்லை, என்ன செய்வதென்று வழியே தெரியலை என்று சிலர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். பல நேரம் தனிமையிலேயே மூழ்கிவிடுவது, யாருடனும் பேச விருப்பமில்லாமல் இருப்பது, தன்னுடைய எல்லாவிதமான சட்டப்பூர்வக் கடமைகள், பொறுப்புகளை வேகமாய் முடித்துவிடுவது (உயில் எழுதிவைப்பது, வங்கிக் கணக்கை யார் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்வது) போன்ற செயல்கள், தற்கொலை எண்ணம் மேலோங்கியிருப்பவர் மறைமுகமாய் வெளிப்படுத்தும் செயல்கள்தான்.

தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் உதவி நாடி மற்றவரிடம் செல்லாமல் தன் பிரச்சினைகளைத் தானே கையாளுதல், சமூகத் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ளாமல் தனிமையில் இருப்பது, பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகப் பார்த்து, உடனே தீர்வு வேண்டும் அதுவும் தாம் எதிர்பார்க்கும் தீர்வே வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

தடுக்க முடியாதா?

மாணவர் பருவத்திலிருந்தே பிரச்சினைகளை எப்படிப் புரிந்துகொள்வது, எதைப் பிரச்சினைகளாய்ப் பார்ப்பது என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும்.

தனிநபராகவே செயல்பட்டு ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வலிந்து அதிகரிக்கப்பட்டிருக்கும் சூழலில், கூட்டுச் செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.

தற்கொலைக்கு முயற்சிப்பவரைப் பொதுவாக இந்தச் சமூகம் கோழைகளாகவும், திறனற்றவர்களாகவும் சித்தரிக்கிறது. அந்த எண்ணத்தைத் தகர்க்க வேண்டும்.

தோழமை உணர்வுடன் பிரச்சினைகளை அவர்களுடைய கோணத்தில் புரிந்துகொள்ளும் அதே வேளையில், தற்கொலைக்கு உந்தித்தள்ளும் அந்தக் கணத்தை எப்படித் தள்ளிப்போட வேண்டும் என்றும், பிரச்சினையை மிகைப்படுத்திப் பார்க்கும் சிந்தனை முறையை மாற்றுவது எப்படி என்ற வழிமுறையையும் கற்றுத்தருவது அவசியமாகிறது.

சமூகச் செயல்பாட்டை அதிகரித்து, சமூகத் தொடர்பை அதிகரிக்கும்போது, தனிநபர் பிரச்சினைகள் பொதுவாக மாறுகின்றன. மக்களும் பொறுப்போடும் அக்கறையோடும் செயல்பட வேண்டிய காலம் இது. இந்தப் பிரச்சினையும் கடந்து போகும், மாற்றம் இயல்பானது என்ற அடிப்படைப் பார்வையைக் கற்றுத்தர வேண்டும்.

கட்டுரையாளர், அரசு மனநல மருத்துவர்
தொடர்புக்கு: spartacus1475@gmail.com

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...