Monday, September 12, 2016

சிங்குர் தரும் படிப்பினைகள்...


THE HINDU

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பல படிப்பினைகளை உணர்த்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்குர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான நானோ கார் (ரூ. 1 லட்சம் விலை) ஆலை அமைக்க மாநில அரசு காட்டிய 6 இடங்களில் டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்தது சிங்குரைத்தான். அப்போது மேற்கு வங்க முதல்வராயிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான அரசு டாடா மோட்டார்ஸுக்கு 997 ஏக்கர் நிலத்தை வழங்கியது.

விவசாய நிலமாக இருந்ததை தொழிற்சாலை கட்டுவதற்காக ஒதுக்கியதை அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.

ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் மம்தா பானர்ஜி.

2008-ம் ஆண்டு சிங்குர் ஆலையிலிருந்து நானோ கார்கள் சந்தைக்கு வரும் என டாடா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆலைப் பணிகள் ஏறக்குறைய 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவேயில்லை. இதையடுத்து 2008-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி சிங்குர் ஆலைத் திட்டத்தைக் கைவிடுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அத்துடன் இந்த ஆலை குஜராத் மாநிலம் சனந்த் நகருக்கு இடமாற்றம் செய்வதாக அக்டோபர் 7-ம் தேதி அறிவித்தார்.

சிங்குரிலிருந்து டாடா நிறுவனம் வெளியேறியபோதிலும் நிலம் டாடா மோட்டார்ஸ் வசமே இருந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண் டும் என மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த நிலம் தங்களுக்குத் தேவை என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இழுபறியாக நீடித்து வந்த இந்த வழக்கு கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலத்தை 10 வாரங்களுக்குள் அளவிட்டு உரிய விவசாயிகளிடம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தை அளவிடும் பணியை மாநில அரசு தொடங்கிவிட்டது. தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி இது என்றும், மன நிம்மதியோடு இறப்பேன் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த ஆலைக்கென டாடா நிறுவனம் ரூ. 1,400 கோடி வரை முதலீடு செய்துள்ளது. டாடா நானோ உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 13 நிறுவனங்கள் முழுமையாக தங்களது ஆலையை இங்கு அமைத்திருந்தன. 17 நிறுவனங்களின் ஆலைகள் பல்வேறு கட்ட நிலையில் இருந்தன. அவை அனைத்தும் குஜராத்துக்கு இடம்பெயர்ந்தன. உதிரிபாக தயாரிப்பாளர்கள் மட்டும் ரூ.338 கோடி முதலீடு செய்திருந்தனர். அவை அனைத்தும் அப்படியே பாதியில் முடங்கியது.

நிலத்தை திரும்ப ஒப்படைப்பதால் டாடா நிறுவனத்துக்கு நிலத்துக்கு அளித்த தொகை திரும்பக் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அந்தத் தொகை நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டுக்கு நிவாரணமாக அமையாது.

இந்தியாவில் பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சில பல பகுதிகளில் ஆலைகள் அமைக்கவும் நிலங்கள் வாங்கப்பட்டு அவற்றில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த அளவுக்கு எங்குமே பிரச்சினை ஏற்பட்டது கிடையாது. இது போன்ற எதிர்ப்பும் உருவானது கிடையாது.

விவசாய நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி வாங்கினால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிங்குர் வழக்கு ஒரு சிறந்த உதாரணம். அதே சமயத்தில் இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு அவர்களுக்கு தவறான சமிக்ஞையை தோற்றுவிக்கவும் வாய்ப்புள்ளது.

சிங்குர் வழக்கு அரசியல்வாதி யான மம்தாவுக்கு பெரும் வெற்றியாக இருக்கலாம், தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பின்னடைவாக இருக்க லாம். ஆனால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் அரசிடம் தெளி வில்லை என்பதையே இது காட்டு கிறது. அதே நேரத்தில் விவசாயத்தை அழித்து தொழிற்சாலை உருவாவதை ஏற்க முடியாது என்பதையும் தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...