Monday, October 31, 2016

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா

By இரா. இராஜாராம்  |   Last Updated on : 31st October 2016 02:06 AM  |   
சுதந்திரமாக ஓடி விளையாடித்திரிய வேண்டிய இளவயது குழந்தைகளை காலுறை போட்டு இறுக்கமான ஷூ அணிவித்துக், கழுத்தை இறுக்கி டை கட்டிக் கனமான புத்தக மூட்டையை முதுகிலேற்றி ஆங்கில வழிப்பள்ளிக்கு அனுப்புவதே இன்றைய நாகரிகமாகிவிட்டது.
காலை எட்டு மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் குழந்தை மாலை வரை வகுப்பறையில் அடைபட்டு, ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு உடலும், மனமும் சோர்ந்து போய் வீடு திரும்புகிறது.
வீட்டிற்கு வந்த குழந்தைகளுக்கு பெற்றோர் தின்பண்டங்கள் ஏதாவது உண்ணக்கொடுத்து ட்யூஷனுக்கு அனுப்பி
விடுவது அல்லது வீட்டில் உட்காரவைத்துச் சலிப்பூட்டும் வீட்டுப் பாடங்களைச் செய்ய வைப்பது எனக் குழந்தைகள் வாழ்வு குதூகலமின்றி நெருக்கடிக்குள்ளாகிறது. பெரும்பாலான குழந்தைகளை மாலை நேரத்தில் கூட விளையாட அனுமதிப்பதில்லை.
அவர்களைப் புத்தகப் புழுவாக, மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக ஆக்கிடவே பெற்றோர்கள் பெரிதும் விரும்புகின்றனர். நகரங்களில் மட்டுமே இருந்த இந்த நிலை இப்போது கிராமங்களையும் தொற்றிக்கொண்டது.
ஐந்து வயது முடிந்த பின்பே பள்ளியில் சேர்ப்பது என்ற நடைமுறை இருக்கிறது. அதுவரையாவது குழந்தைகள் இயல்பாகச் சுற்றித்திரிந்து தன்னம்பிக்கையுடன் விளையாடி மகிழும்.
ஆனால் ஆங்கில மோகமும், பகட்டுக்கல்வியும் பச்சிளங் குழந்தைகைளக்கூட பள்ளியில் சேர்த்து விடும் அவல நிலைக்குத்தள்ளிவிட்டது. எந்தப்பள்ளியில் சேர்த்தாலும் ஐந்து வயது நிறைவடைந்த பின்புதான் சேர்த்திட வேண்டும் என்ற நடைமுறையை அரசு கொண்டு வரவேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகளிலெல்லாம் ஐந்து வயது வரை புத்தகச் சுமையைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் சுதந்திரமாக விளையாடி மகிழ்ந்திட வாய்ப்பளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் மிகுதியோ அதனைச் செய்திட வாய்ப்புகள் தரப்படுகின்றன.
படிப்படியாகக் கற்பதில் ஆர்வம் வரும்வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுக் கற்றலில் இனிமை ஏற்படுத்தப்படுகிறது. அதனால் அக்குழந்தைகள் கல்வியிலும், விளையாட்டிலும், சிறந்தோங்குவதோடு தன்னம்பிக்கையும், செயல்திறனும், மிக்கவர்களாகவும் உருவாக முடிகிறது.
பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு மைதானம் போதுமான அளவில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விளையாட்டினால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதோடு, இரவில் நல்ல உறக்கமும் வந்திடும்.
தன்னம்பிக்கையும், நட்புறவும் வளர்கிறது. ஒழுக்கக்கேடான பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆற்றல் விளையாட்டுகளுக்கே உண்டு.
மெக்ஸிக்கோவிற்கு அருகில் உள்ள மிகச் சிறிய நாடு கவுதமாலா. இது போதைப்பொருட்கள் கடத்தல் மையமாக இருந்து வந்தது. அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த கம்டன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் விளையாட்டை அறிமுகம் செய்து அங்குள்ளவர்களை விளையாடும்படிச் செய்தனர்.
அதன்பிறகு அங்குப் பெருமளவில் குற்றங்கள் குறையத் தொடங்கி விட்டதையும் கண்டறிந்தனர். இதே கம்டன் கிரிக்கெட் கிளப் அமெரிக்காவிலும் போதைக்கு அடிமையானவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி நல்ல பலன் கண்டுள்ளது.
கபடி, கோகோ, போன்ற விளையாட்டுகள் நம் நாட்டின் கிராமப்பகுதிகளில் பரவலாக விளையாடப்படுகிறது. நகரங்களில் ஆங்காங்கு உள்ள மைதானங்களிலும், கிடைக்கும் இடங்களிலும் கிரிக்கெட், வாலிபால், பேட்மிண்டன், ஹாக்கி போன்ற விளையாட்டுகளை விளையாடி வந்தனர்.
தொலைக்காட்சி, செல்லிடப்பேசியின் வருகைக்குப் பின்பு வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவது பெருமளவில் குறைந்து, உட்கார்ந்த இடத்திலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், செல்லிடப்பேசியில் வீடியோ கேம் விளையாடுவதிலுமே தங்களை முடக்கிக்கொண்டு விடுகின்றனர்.
சிறுவர் முதல் பெரியவர் வரை தங்களுக்கேற்ற விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து நாளும் விளையாடிடலாம். குறிப்பாகப் பள்ளி ஆசிரியர்கள் மாலையில் பள்ளி முடிந்து விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுடனும், சக ஆசிரியர்களுடனும் விளையாடிப் புத்துணர்வு பெறலாம். இதில் இரட்டைப்பலன் கிடைக்கின்றது.
காலை முதல் மாலை வரை வகுப்பறையிலேயே பாடம் நடத்திக் களைப்புற்ற ஆசிரியர்களுக்கு மைதானத்தில் விளையாடிச் சோர்வு நீங்கப்பெறுவதோடு, சக ஆசிரியர்களுடனான நட்புறவும் வளர்கின்றது.
மாணவர்களுடன் மைதானத்தில் விளையாடும் போது தங்களுடன் ஆசிரியர்கள் விளையாடுவதைப் பெருமையாகக்கருதி மாணவர்கள் பெருமிதம் அடைவர்.
அலுவலகங்களில், கணினியோடு தொடர்புடைய பணிகள் புரிவோர், சற்று இடம் கிடைத்தாலும் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந் து தினமும் விளையாடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
விளையாட்டுகளில் ஈடுபடுவதனால் வேண்டாத பழக்கங்களுக்கு அடிமையாவது தடுக்கப்படும். தேவையின்றி எதையாவது நினைத்து வருத்திக்கொண்டிருப்
பவர்கள் தினமும் விளையாடினால் மனம் வளம் பெற்று ஆக்கச்சிந்தனைகள்
வளரும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அனைவருமே சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் காட்டியவர்களே. அவர்களுடைய நாடு அவர்களுக்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்திப் பயிற்சித் தந்ததே ஒலிம்பிக் வெற்றிக்குக் காரண
மாகியது.
குழந்தைகள் விளையாடச் சென்றால் படிப்பு பாதிக்கும் என்ற தவறான எண்ணத்தைப் பெற்றோர்கள் விடுத்து, அவர்களின் நலன் கருதி விளையாட அனுமதிக்க வேண்டும்.

Sunday, October 30, 2016


விழிப்புடன் இருப்போம்!

By ஆசிரியர் | Last Updated on : 29th October 2016 12:35 AM |

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி அதன்மூலம் ஆட்சியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்திருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இதன் தாக்கத்தைப் பார்த்து பயந்து மாற்றங்களைச் செய்ய முற்பட்டது. நல்லவேளையாக, பொதுநல ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் அந்த முயற்சி தடைபட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தால், இந்த ஆட்சியும் அதிலுள்ள சிறு சிறு குறைகளைப் பெரிதுபடுத்த முயற்சிக்கிறதே தவிர, அதற்கு வலுசேர்ப்பதாக இல்லை. இந்தப் பிரச்னையில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடிக்கின்றன.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற அதிகாரவர்க்கத்தின் குரலை அரசியல்வாதிகளும் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்னையை மாநிலங்களவையில் எழுப்பியவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,மத்திய விமான போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சருமான பிரபுல் படேல். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அரசு திருத்தங்கள் கொண்டு வருமா என்று பிரச்னையைக் கிளப்பினார் அவர்.
இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அவர்.
2005-ஆம் ஆண்டு அவசர கதியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதாகவும், அது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். எந்தவொரு தகுதியோ, பின்னணியோ இல்லாதவர்கள்கூட இந்தச் சட்டத்தை பயன்படுத்திக் கேள்வி எழுப்ப தகவல் பெறும் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது என்றும், அதனால் அதிகாரிகள் எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவரை வழிமொழிந்து காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா, சிலர் தங்களை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் என்று கூறிக்கொள்வதாகவும், அதையே தொழிலாக மாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதைப் பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருக்கும் ஜிதேந்திர சிங் ஆமோதிக்கவும் செய்தார். இதிலிருந்து ஆளும் பா.ஜ.க.வும், ஆட்சியிலிருந்த காங்கிரஸும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பது தெரிகிறது.

தனிநபர் குறித்த விவரங்களைக் கோருவது, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத் தங்களுக்கு எதிரான அதிகாரிகள், ஆட்சியாளர்கள் குறித்த தேவையற்ற கேள்விகளை எழுப்புவது, தேசியப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவது என்பவை இல்லாமல் இல்லை. ஆனால், ஏறத்தாழ, 20 லட்சம் தகவல்கள் கோரப்படும் நிலையில், இவற்றின் அளவு அதில் 10 சதவீதம்கூட இருக்காது. அதைச் சாக்காக வைத்துத் தகவல் பெறும் உரிமைச் சட்டமே தேவையற்றது என்றோ, அதில் மாற்றங்கள் கொண்டுவந்து பலவீனப்படுத்துவது என்பதோ நியாயமல்ல.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கடந்த மாதம் மத்திய தகவல் ஆணையத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் அம்ரித் மஹால் கவல் பசுமைவெளி அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பெற்ற இந்தப் பகுதியில் தேசிய பசுமை ஆணையத்தின் வரைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வியை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் எழுப்பினார். இதற்கு, இந்தக் கேள்வி தேசியப் பாதுகாப்புத் தொடர்பானது என்று கூறி பதில்தர மறுத்துவிட்டனர் அதிகாரிகள். இதுபோல தேசியப் பாதுகாப்பு, தனிநபர் விவரம் என்று கூறி, போதிய கவனம் இல்லாமல் கேள்விகள் நிராகரிக்கப்படுவதை மத்தியத் தகவல் ஆணையம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. சாமானியக் குடிமகனுக்கு, தனது வரிப்பணம் எப்படி செலவிடப்படுகிறது, தனது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகளும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் மக்களின் வரிப்பணம், பள்ளிக்கூடங்கள், சாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் விரயம் செய்யப்பட்டால் அதைத் தெரிந்துகொள்ள இந்தச் சட்டம் உதவியிருக்கிறது.

பொதுவிநியோகக் கடைகளில் நடக்கும் தவறுகள், அரசு அலுவலகங்களில் கையூட்டுத் தரப்படாததால் தேங்கிக் கிடக்கும் கோப்புகள் குறித்த விவரங்கள் போன்றவை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களால் வெளிக்கொணரப்பட்டு, தவறுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய நிதிமோசடிகள், நிலம் ஒதுக்குவதில் முறைகேடுகள், உணவுப் பொருள் பதுக்கல்கள், கருப்புச் சந்தை விவரங்கள் போன்றவை வெளிவருவதற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பயன்பட்டிருக்கிறது.

ஆட்சியிலும், நிர்வாகத்திலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட உலகிற்கே முன்மாதிரியான தகவல் பெறும் உரிமைச் சட்டம், வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர, சில குறைகளை முன்வைத்து பலவீனப்படுத்தப்படக் கூடாது. அதற்கான முயற்சிகளை முறியடித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்!


கல்வி கண் போன்றது

By மா. இராமச்சந்திரன் | Last Updated on : 29th October 2016 12:32 AM |

கடந்த மூன்று ஆண்டுகளில் முப்பத்தெட்டு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் உண்மை. சாராயக்கடைகள் மூடப்பட்டிருந்தால் சந்தோஷமாயிருந்திருக்கும். மூடப்பட்டிருப்பதோ கண்ணொளி கொடுக்கும் கல்விக்கூடங்கள். கவலையாகத்தான் இருக்கின்றது.

மேலும் பல அரசுப் பள்ளிகளின் அவலநிலை பற்றியும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. 1,200 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் தெரிவித்துள்ளது.
எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாகவி பாரதியார், "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்' என்று கூறினார். நாடு விடுதலை பெற்றபின் பொறுப்பேற்ற ஆட்சியாளர்கள் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி செய்ததோடு அரசுப் பள்ளிகளையும் தோற்றுவித்தனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் பல திறக்கப்பட்டன.

ஓட்டுக்கூரையும் சிறிய தோட்டமும் கூடிய கட்டமைப்புடன் ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளிகளாக அவை செயல்பட்டன. தமிழகத்தில் 300-க்கும் மேல் மக்கள்தொகையுள்ள எல்லா கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

1954-இல் 21,000-ஆக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 1962-இல் 30,000-ஆக அதிக ரித்தது. இதனால் ஏழை, எளியோரின் பிள்ளைகளும் கல்வி கற்கும் வாய்ப்பு உருவானது.

கல்வி கொடுப்பது அரசின் கடமை, அதைப் பெறுவது மக்களின் உரிமை என்ற உணர்வோடு அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலை அரசுப் பள்ளிகளுக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? மாணவர் சேர்க்கை குறைந்ததால் வந்தது என்பர்.
மாணவர் சேர்க்கை குறைவான இழிநிலைக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பின்மை, பொதுமக்களின் தனியார் மோகம், அரசின் அலட்சியம் என்ற மூன்றையும் காரணமாகச் சொல்லலாம்.

தொடக்கக் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணி செய்த ஆசிரியர்கள்போல் பின்னர் வந்த ஆசிரியர்கள் இல்லை. பள்ளிப் பணியைவிடத் தம் சொந்தப் பணியையே அவர்கள் பிரதானமாகக் கருதினர். சொந்த வேலைகளையெல்லாம் முடித்த பின்னர்தான் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.
பாடம் நடத்துவதில் அக்கறையின்றி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாகப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். பாதி நேரம் பள்ளிக்கு வராமல் வெளி வேலைகளில் ஈடுபட்டனர். அரசியல் சார்பும், அதிகாரிகள் தொடர்பும் அவர்களுக்குச் சாதகமாகயிருந்தன.

இதனால் பள்ளியின் தரம் குறைந்தது. மக்கள் மனத்தில் அரசுப் பள்ளிகளின் மீதிருந்த மதிப்பும் நம்பிக்கையும் குறையத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் பெருகின. மக்கள் மனத்திலும். தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் வளர்ந்தது.
பணிப்பாதுகாப்பு போன்ற தங்கள் நலனுக்காகப் போராடிய ஆசிரியர்கள் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர்.
விண்ணுயர் கட்டடங்கள், விதவிதமான விளையாட்டுச் சாதனங்கள், விரிவான கட்டமைப்பு வசதிகள், கவர்ச்சியான சீருடை, ஆங்கிலவழிப் போதனை, வீட்டு வாசல்வரைவரும் வாகன வசதி, மாணவரிடம் காட்டும் கவனம் போன்றவை தனியார் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்கியதோடு, தங்கள் பிள்ளைகள் இத்தகைய பள்ளியில் படிக்கவேண்டும் என்ற மோகத்தையும் அவர்கள் மனத்தில் தோற்றுவித்தது.
ஏற்கெனவே அரசுப் பள்ளிகள் மீது அவர்களுக்கிருந்த அதிருப்தி, செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தூண்டியது.

உள்ளூரில் அரசு பள்ளியில் இலவசக் கல்வி கிடைத்தும் தங்கள் பிள்ளைகள் பள்ளி வாகனத்தில் வெளியூர் சென்று கட்டணம் செலுத்திப் படித்துவருவதைக் கெளரவமாகக் கருதினர். இதனால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்தது.

ஆயினும், அரசின் அலட்சியமே இதன் மூல காரணம் எனலாம். கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய அரசு, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் சம்பளமும் அவர்களுக்குள்ள சலுகைகளும் வீண் என்று எண்ணியது. சங்கம் அமைத்து உரிமை கேட்ட ஆசிரியர்களைப் பகைவர்களாகக் கருதியது.

ஆசிரியச் சங்கங்களின் வலிமையை அடக்க எண்ணிய ஆட்சியாளர்கள் அரசுப் பள்ளி நலனில் அக்கறை காட்டுவதைத் தவிர்த்தனர். தனியார் பள்ளிகளின் பெருக்கத்தைக் கண்டுகொள்ளாமலே இருந்து, அவற்றை வளரவிட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை நவீனப்படுத்தி, கல்விமுறையில் புதுமையைப் புகுத்தியிருக்க வேண்டியவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இன்றுவரை ஓராசிரியர் பள்ளியும் ஈராசிரியர் பள்ளியும் இருப்பது இதைத்தான் காட்டுகிறது.
கல்வியைத் தனியார் மயமாக்கும் நோக்கத்தை ஓசைப்படாமல் செயல்படுத்தினர். அதன் விளைவு, "பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்' என்ற பாரதியின் கனவுக்கெதிராய்ப் பள்ளித் தலமனைத்தும் மூடுதல் செய்யும் அவலத்திற்கு வித்திட்டுள்ளது.

ஏழையின் கல்வியில் அக்கறையுள்ள அரசு இருந்திருந்தால் இந்த அவலம் உருவாகியிருக்காது. இப்பொழுதாவது அரசு விழித்துக்கொண்டு தொடக்கக் கல்வியில் சீர்திருத்தம் செய்து கிராமப்புற அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கற்றுகொடுக்கவும் கற்றுக்கொள்ளவும்
மனம் இருந்தால் போதும்
சாலைகளும்
பாட சாலைகளாகும்.

நீங்கள் நிலவுக்கு சாலை அமைத்துவிடவில்லை; தற்புகழ்ச்சி வேண்டாம்: சுங்கச்சாவடி நிறுவனத்திடம் உச்ச நீதிமன்றம்


தலைநகர் டெல்லியையும் நொய்டா பகுதிகளையும் இணைக்கும் 8 பாதை ‘பிளை வே’ சாலையை அமைத்த நிறுவனம் சுங்கவரி வசூலிப்பதற்கான அலஹாபாத் உயர் நீதிமன்றத் தடைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் தற்புகழ்ச்சி வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளது.

டெல்லி-நொய்டா-டைரக்ட் (டி.என்.டி) ஃபிளை வே அடுத்த உத்தரவு வரும் வரை வாகனங்களிடம் சுங்கவரி வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

நொய்டா டால் பிரிட்ஜ் கம்பெனி, சுங்கவரி வசூலிப்பதற்கான அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமை அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஏதோ நிலாவுக்கே சாலை அமைத்தது போல் நீங்கள் கூறுகிறீர்களே! சரி, நீங்கள் நல்ல பணிதான் செய்திருக்கிறீர்கள், மக்கள் அதில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அதற்காக உங்களை நீங்களே தட்டிக் கொடுத்து தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதீர்கள்.

மேலும், இது தொடர்பாக சுங்கவரி வசூல் நிறுவனமே ஆலோசனை வழங்கியது போல் தனிப்பட்ட தணிக்கையாளர் அல்லது தலைமை தணிக்கையாளரையோ நியமித்து நிறுவனத்தின் செலவுகள், லாபம் ஆகியவற்றை ஆய்வு செய்வோம் என்று நீதிபதிகள் கூறினர்.

நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அலஹாபாது உயர்நீதிமன்றம் நொய்டா அதிகாரிகளுடன் 1993-ம் ஆண்டு நிறுவனம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் புனிதத்தன்மையை காக்காமல் அலஹாபாத் உயர்நீதிமன்றம் சுங்க வரி வசூலிக்கத் தடை விதித்தது, நிறுவனம் இன்னும் இத்திட்டத்தின் செலவுத்தொகையையே ஈட்டவில்லை. சுங்கவரி நிறுவனம் மைனஸ் வருவாயில் ஓடிக்கொண்டிருக்கிறது பிளை வே 2001-ல் தொடங்கப்பட்டது.

“நாங்கள் சுமார் 80,000 பங்குதாரர்களைக் கொண்ட ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனம். வரிவசூலை நிறுத்தினாலும் நாங்கள் ஒப்பந்தத்தின் படி சாலைகளின் பழுதுகளை பார்த்தேயாக வேண்டும். இன்னும் 15 ஆண்டுகளுக்கு நாங்களே இதற்குப் பொறுப்பு. ஆனால் நாங்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றால் எப்படி?

வரிவசூலை நிறுத்தினால் சுங்கச்சாவடியில் பணியாற்றும் 472 பேரையும் வேலையிலிருந்து அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த தலைமை நீதிபதி, “நீங்கள் 300 கோடி முதலீடு செய்து 1,100 கோடி சம்பாதித்துள்ளீர்கள் என்றுதானே உயர்நீதிமன்றம் வரிவசூலுக்கு தடை விதித்தது” என்றார்.

பிறகு நொய்டா நிறுவனத்தை நோக்கி நிறுவனம் பொதுமக்கள் பக்கம் நிற்கிறதா அல்லது சுங்கவரி நிறுவனத்தின் பக்கம் நிற்கிறதா என்று கேட்ட போது வழக்கறிஞர் உத்தரவுகளை தான் எடுத்துக் கொள்வதாக கூறினார்.

“ஏன் உங்கள் அதிகாரிகள் வரவில்லை. பொது விஷயத்தில் நாட்டம் இல்லையா” என்று கேட்டார் நீதிபதி டி.எஸ்.தாக்குர். மேலும் சுங்கவரி வசூலை தற்காலிகமாக நிறுத்துவதால் நிறுவனம் ஒன்றும் பாதிப்படையாது என்று திட்டவட்டமாகக் கூறியதோடு, நிறுவனத்தின் செலவு., ஈட்டிய தொகை விவரங்கள் தனிப்பட்ட தணிக்கையாளர் அறிக்கையில் இன்னும் சில நாட்களில் வந்து விடும் அந்த அறிக்கை உங்களுக்குச் சாதகமாக இருந்தால் நீங்கள் கூடுதல் காலம் வரி வசூல் செய்யலாமே” என்று அலஹாபாத் உயர்நீதிமன்ற வரிவசூல் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தார்.

நொய்டா குடியிருப்புவாசிகள் சங்கமோ சுங்கச் சாவடி நிறுவனம் இதுவரை சுமார் ரூ.2,300 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை தீபாவளி விடுமுறைகள் முடிந்து மீண்டும் நடைபெறும் என்று தெரிகிறது.

காவு வாங்கும் கலப்பட எண்ணெய்கள்! எந்த எண்ணெயும் நல்ல எண்ணெய் இல்லை!


நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கிய அச்சுறுத்தல்

ஏற்கனவே நாம் பல குழப்பத்தில் இருக்கிறோம்… இதில் ஒவ்வொருவரும் டாக்டராக மாறி ஆலோசனை என்ற பெயரில் நம் குழப்பத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் சமையல் எண்ணெய் பற்றி வெளிவரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் அநியாய குழப்பம். ‘சந்தையில் விற்பனையாகும் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் உங்கள் இதயத்தில் மெழுகு படியும். எங்கள் எண்ணெயில் அது கிடையாது’ என்று சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

எல்லா எண்ணெயிலுமே பிரச்னை என்றால் எந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துவது என்று இதய சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் கேட்டோம்…‘‘எண்ணெய் கலப்படம் என்பது சாதாரணமாகிவிட்டது. காஸ்மெட்டிக் ஆயில் என்கிற தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் செய்கிற கலப்படத்தால் பெரிய பிரச்னைகள் எதுவும் வரப்போவதில்லை. சருமத்தில் அலர்ஜி, எரிச்சல், காயம் போன்ற சின்னச் சின்ன தொந்தரவுகள்தான் ஏற்படும். அரிதாக சில பெரிய பிரச்னைகள் உண்டாகலாம். ஆனால், சமையல் எண்ணெயில் நடக்கும் Adulteration என்கிற கலப்படம்தான் நம் உடனடி கவனத்துக்குரியது.

சில விளம்பரங்களில் சொல்லப்படுவது போல சமையல் எண்ணெய் கலப்படங்கள் ரத்த நாளங்களில் படியாது. கொழுப்பு மட்டும்தான் அப்படிப் படிந்துகொள்ளும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பாக வரும் வாய்ப்பும் கலப்பட எண்ணெய்களால் இல்லை. கொழுப்பு எண்ணெய்கள் சூடான நிலையில் உருகி திரவ வடிவத்துக்கு மாறும். குளிர்ந்த நிலையில் உறைந்துவிடும். அதுபோல இந்த கலப்பட எண்ணெய்கள் மாறுவதில்லை. கலப்பட எண்ணெய்க்கு ஒரே தன்மைதான் உண்டு. அது எப்போதும் திரவ வடிவில்தான் இருக்கும்.

அதேபோல, இந்த கலப்பட எண்ணெய்களால் இதயம் நேரடியாகப் பாதிக்கப்படுவதும் இல்லை. இதயத்தின் மின் திறன் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். அதாவது, இதயத் துடிப்பின் விகிதம், ரத்தத்தை உள்வாங்கி வெளியேற்றும் தன்மை போன்றவை பாதிப்புக்குள்ளாகும். இந்த உண்மை சில ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி கலப்பட எண்ணெய்களால் ஏற்படும் முக்கியமான பிரச்னை கல்லீரல் பாதிப்பு. நாம் சாப்பிடும் உணவு குடலிலிருந்து முதலில் கல்லீரலில் சென்றுதான் சேர்கிறது.

அங்குதான் கார்போஹைட்ரேட், புரதம் என உணவு உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கிறது. அதனால், கலப்பட எண்ணெய்களால் கல்லீரலே பெரிதும் பாதிக்கப்படும். இந்த எண்ணெய்கள் கார்சினோஜெனிக் என்கிற புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டவை. அதனால் கல்லீரல் புற்றுநோய் வரும் அபாயமே இதில் அதிகம். கல்லீரல் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு. கல்லீரல் மாற்று சிகிச்சை என்பது மிகவும் காஸ்ட்லியான அறுவை சிகிச்சையும் கூட. எல்லோராலும் செய்துகொள்ளவும் முடியாது. இதில் இன்னும் ஒரு அபாயமும் உண்டு.

கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டால் மாற்று சிகிச்சை செய்து கொண்டு தப்பித்துவிடலாம். இந்த புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவிவிட்டால் கல்லீரல் மாற்று சிகிச்சையும் கைகொடுக்காது;6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்துக்குள் உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் அதிகம். அதனால், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை எல்லோரும் உணர வேண்டும். மக்களின் அத்தியாவசியப் பயன்பாட்டில் இடம்பிடித்திருக்கும் எண்ணெய் கலப்படத்தை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கலப்படம் செய்கிறவர்களை சமூக விரோதிகளாகத்தான் கருத வேண்டும். அரசாங்கம் இவர்கள் மேல் தீவிரமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கு வியாபாரம் செய்யும் உரிமை உண்டு. தங்கள் தயாரிப்பின் பெருமைகளைச் சொல்லவும் உரிமை உண்டு. ஆனால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான விளம்பரங்களைச் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இது தார்மீக ரீதியாகவும் பெரும் தவறு’’என்கிறார் ஜாய் தாமஸ்.

சமையல் எண்ணெயில் மெழுகு ஏன் கலக்கிறார்கள் என்ற நம் கேள்விக்கு நுகர்வோர் ஒருங்கிணைப்பு அலுவலரான சோமசுந்தரம் விளக்கமளிக்கிறார்.‘‘இந்த கிரீமை பூசிக் கொண்டால் சிவப்பாகிவிடலாம் என்று சில விளம்பரங்கள் வருகின்றன. அதுபோலத்தான் எண்ணெயில் வாக்ஸ் கலப்படம் என்பதும். இது ஒரு விற்பனைத் தந்திரம். ஏனெனில், மெழுகை எண்ணெயில் கலக்க முடியாது. மெழுகின் குணமே வேறு. சமையல் செய்து முடித்தபிறகு பாத்திரத்தில் படியும் எண்ணெய் கறையைத்தான் Wax என்று குறிப்பிடுகிறார்கள்.

எந்த எண்ணெயில் சமையல் செய்தாலும் கறை படியத்தான் செய்யும். ஆனால், வாக்ஸ் என்றவுடன் மெழுகை எண்ணெயில் கலக்கிறார்கள் போல என்று மக்கள் நினைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மக்களைத் தவறான வழிக்குத் திசை திருப்பும் விளம்பரம் இது. குறைவான விலையில் அரசாங்கமே விற்கிற பாமாயில் பற்றியும் இப்படித்தான் தவறான அபிப்பிராயத்தை மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்
கெடுதல் என்ற நம்பிக்கையையும் இப்படித்தான் உருவாக்கினார்கள்.

இதுபோன்ற விளம்பரங்களைப் பற்றி Advertisement Standards Council of India என்ற அமைப்பில் புகார் செய்யலாம். மும்பையில் இருக்கும் இந்த அமைப்பு பற்றிய விவரங்களை இணைய தளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதேபோல ஒரு எண்ணெய் நிறுவனம் கலப்படம் செய்கிறது என்று சந்தேகப்பட்டால் குறிப்பிட்ட எண்ணெயின் மாதிரியை எடுத்து அரசாங்கத்தின் பகுப்பாய்வுக்கூடத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 500 ரூபாயிலேயே இந்த பரிசோதனை செய்துவிடலாம். உணவுப் பாதுகாப்புத்துறையிடமும் புகார் அளிக்கலாம். தவறு உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

தனிமனிதராக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதபட்சத்தில் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ எங்களைப் போன்ற நுகர்வோர் அமைப்பிடமோ உதவிகளைக் கேட்கலாம். நாங்கள் தேவையான உதவிகளைச் செய்வோம். இதையும் விட முக்கியமான விஷயம், நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் எப்போதுமே பாதுகாப்பானவை. நம் ஊரின் வெப்பநிலைக்கும், நம் வாழ்க்கைமுறைக்கும் இந்த 3 எண்ணெய்கள்தான் ஆரோக்கியமானவையும் கூட. இதைத்தாண்டி இன்று சந்தையில் விற்பனையாகி வரும் எல்லா எண்ணெய்களுமே பிரச்னைகளுக்குரியவைதான்’’ என்கிறார்.

எந்த எண்ணெயைத்தான் வாங்குவது?

Refine, Bleach, Deodorised இந்த மூன்று விஷயங்களும் ஒரு எண்ணெயில் இருக்கக் கூடாது. எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் அது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கெட்டுப் போய்விடும். அதனால் ஒரு பொருளின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக செய்யப்படும் வேதிவினைதான் Refine. அடுத்து Bleach என்பது எண்ணெயை சுத்தமாகத் தண்ணீர் போல காட்டு வதற்காக செய்யப்படும் வேதிவினை.

அடுத்து எண்ணெய் நமக்குப் பிடித்த வாசனையில் இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெயின் நிஜமான மணத்தை மாற்றி வேதிப்பொருட்களைக் கலக்கும் முறை. தரமான எண்ணெய் கொஞ்சம் கெட்டியாகத்தான் இருக்கும். தண்ணீர் போல இருக்காது. பளிச்சென்று சுத்தமாகவும் இருக்காது. கடலை எண்ணெய் என்றால் அதன் வாசனை கொஞ்சமாவது இருக்கும். வித்தியாசமான நறுமணம் எதுவும் இருக்காது.

இந்த 3 விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, விளம்பரங்களைப் பார்த்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எல்லாப் பொருட்களுக்குமே இது பொருந்தும். எண்ணெயைப் பொறுத்தவரை குடும்ப நல மருத்துவரிடமோ, இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை கேட்டுத் தேர்ந்தெடுப்பது இன்னும் பாதுகாப்பானது.

எண்ணெய் பயன்பாட்டிலும் பேலன்ஸ்டாக இருங்கள்!
கொஞ்சம் தானிய உணவு, கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள் என்று உணவில் சரிவிகிதத்தை மருத்துவர்கள் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். அந்த பேலன்ஸ்டு டயட் முறை எண்ணெய் பயன்பாட்டிலும் அவசியம். வீட்டுக்கு மாதம் 2 லிட்டர் எண்ணெய் சமையலுக்குத் தேவை என்றால் ஒரே எண்ணெயை மட்டுமே 2 லிட்டர் வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு வகையான சத்துகள் உண்டு. இதை Essential fatty acid என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என பல எண்ணெய்களை மாறி மாறிப் பயன்படுத்தும்போது நமக்குக் கூடுதல் பலன் கிடைக்கும். அதேபோல, சிலர் எண்ணெய் என்றாலே ஆபத்து என்று அலர்ஜியாவார்கள். அப்படி முற்றிலும் எண்ணெயைத் தவிர்ப்பதும் தேவையற்றது. எண்ணெயில் இருக்கும் சத்துகளும் நமக்குத் தேவை. நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் எண்ணெயை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம், எந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறோம், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத்தான்.

ஞானதேசிகன்

படம்: ஏ.டி.தமிழ்வாணன்
வாழ்க்கையில் யாரையும் குறை சொல்லாதீர்கள்...

நல்லவர்கள் மகிழ்ச்சி தருகிறார்கள்

கெட்டவர்கள் அனுபவம் தருகிறார்கள்

மிகக் கெட்டவர்கள் பாடம் தருகிறார்கள்

மிக நல்லவர்கள் நினைவுகள் தருகிறார்கள். :)

NEWS TODAY 18.12.2025