Wednesday, November 16, 2016

ராஜதந்திர நெருக்கம்!

By ஆசிரியர்  |   Published on : 16th November 2016 12:40 AM  |   
நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, அரசுமுறைப் பயணமாகச் சென்ற முதல் நாடு ஜப்பான்தான். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு என்பது நெருக்கமானதும், நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டதுமான ஒன்று. பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு உதவ முன்வந்த நாடும் ஜப்பான்தான். அரசு நிறுவனமான எச்.எம்.டி. கைக்கடிகாரம் தயாரிக்க முற்பட்டபோதும் சரி, மாருதி கார்கள் தயாரிக்க முடிவெடுத்தபோதும் சரி, நமக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கி இந்தியாவின் தொடக்க காலத் தொழில் வளர்ச்சியில் கணிசமாக பங்காற்றி இருக்கும் தேசங்களில் ஜப்பானும் ஒன்று. இந்தப் பின்னணியில்தான், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தை நாம் பார்க்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தில், ஜப்பானுடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தாலும்கூட, அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது என்னவோ, இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம்தான். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்த முறையும் கையெழுத்தாகாது என்று அனைவரும் கருதி இருந்த நிலையில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் காட்டிய முனைப்பால், ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்த நாட்டுடனும் ஜப்பான் இதுவரை அணுசக்தி உடன்பாடு செய்துகொண்டதில்லை. இந்தப் பிரச்னைதான் இத்தனை ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கு இடையேயும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்ததற்குக் காரணம். அந்த முட்டுக்கட்டை சாதுர்யமாக இப்போது அகற்றப்பட்டு விட்டிருக்கிறது.
இந்த உடன்படிக்கை கையெழுத்தாகி இருப்பதாலேயே ஜப்பானின் துணையோடு இந்தியாவில் நிறைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை. அதற்கு முதலீடு, அரசியல் ரீதியிலான முடிவுகள், மக்கள் எதிர்ப்பு என்று பல பிரச்னைகளை எதிர்கொண்டாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உடன்படிக்கையில் ஒரு முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா எந்தக் காரணத்திற்காகவும் அணுஆயுத சோதனை நடத்த முற்பட்டால், இந்த அணுசக்தி உடன்பாடு உடனடியாக ரத்தாகிவிடும் என்பதுதான் அது.
பல கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இருந்தாலும்கூட, இந்த உடன்படிக்கையால் ஜப்பானிடமிருந்து தொழில்நுட்பக் கூட்டுறவு எல்லா துறைகளிலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, உலகில் நிறுவப்படும் எந்தவொரு அணுமின் உலையாக இருந்தாலும் அதில் முக்கியமான பாகங்களும், சில அடிப்படைத் தொழில்நுட்பமும் ஜப்பானியர்களுடையதுதான். அதனால், எந்தவொரு நாட்டுடன் அணுமின் உற்பத்திக்கான முயற்சியில் நாம் இறங்கினாலும் இந்த ஒப்பந்தம் தேவைப்படுகிறது. அது அமெரிக்காவோ, பிரான்úஸா, ஏனைய நாடுகளோ, அவர்களிடமிருந்து அணுமின் உலைகளை வாங்குவதற்கு ஜப்பானின் சம்மதம் தேவைப்படுகிறது.
அடுத்தபடியாக, நாம் பாரீஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். அதன்படி, கரியமில வாயுவைக் கட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டும். சூரிய மின்சக்தியும், காற்றாலை மின்சாரமும் மட்டுமே நமது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியாது. அதற்கு, ஆபத்துகள் நிறைந்த அணுமின்சக்தியைத்தான் நாம் நம்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அணுமின்சக்தி உடன்படிக்கை மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையே இன்னும் பல முக்கியமான உடன்படிக்கைகளும் கையெழுத்தாகி இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும், முதலீடும் கணிசமாக அதிகரிக்க இந்த அரசுமுறைப் பயணம் வழிகோலி இருக்கிறது. ஏனைய உலக நாடுகள் அனைத்தையும்விடக் குறுகிய காலத்தில், மிக அதிகமான வர்த்தக உதவி ஜப்பானுடன் மேம்பட்டிருக்கிறது. ஜப்பானின் உதவியும் முதலீடும் சேர்ந்து ஆண்டொன்றுக்கு 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33,750 கோடி) எனும்போது, இது சீனா போன்ற நாடுகளைவிட மிக அதிகம்.
ஏனைய நாடுகளுடனான தொடர்பைவிட, ஜப்பானுடனான நமது தொடர்பு சற்று வித்தியாசமானது, ஆக்கபூர்வமானது. தொழிற்பேட்டைகளையும் "கன்டெய்னர்' முனையங்களையும் இந்தியாவின் பல்வேறு பாகங்களில் உருவாக்குவதில் ஜப்பானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதன்மூலம் இந்தியாவுக்கு பலமான அடித்தளத்தையும், ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கும் உற்பத்திக்கு வழிகோலும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதையும் ஜப்பான் உறுதி செய்கிறது. பொலிவுறு நகரங்கள் நிர்மாணிப்பது, அதிவேக ரயில்களை இயக்குவது உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் நாடும் ஜப்பான்தான்.
மோடி - அபே கூட்டு அறிக்கையில் தென்சீனக் கடல் பிரச்னை குறித்துக் கூறியிருப்பது சீனாவைக் கோபப்படுத்தக்கூடும். ஆனால், இந்தியா அணுசக்தி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சேர்வதை எதிர்ப்பதிலும், பயங்கரவாதிகள் ஹபீஸ் சையது, மசூத் அஸார் ஆகியோருக்கு எதிரான தடை குறித்தும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுக்கும்போது, இந்தியாவும் முக்கியமான பிரச்னைகளில் எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட இருக்கும் சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு நெருங்கிய நண்பர்கள் தேவைப்படுகிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான், பிரதமர் மோடியின் ஜப்பான் விஜயம் அணுகப்பட வேண்டும்!

"ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதால் ஊழலை ஒழித்துவிட முடியாது'

By DIN  |   Published on : 16th November 2016 12:28 AM  |   
புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதால், ஊழலுக்கு முடிவு கட்டிவிட முடியாது என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் கய் சோர்மன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறும் இந்திய அரசின் முடிவானது, புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கை ஆகும். ஆனால் இந்நடவடிக்கையால் ஊழலுக்கு முடிவு கட்டி விட முடியாது.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கையும், புத்திசாலித்தனமானதுதான். இருந்தபோதிலும், இந்நடவடிக்கையானது வர்த்தக செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
அதிக அளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட பொருளாதாரத்தில் ஊழல் எப்போதும் மிகுந்து இருக்கும். ஊழலை கட்டுப்படுத்துவதற்கு விதிகளை தளர்த்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும் என்றார் கய் சோர்மன்.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரத்துறை முன்னாள் முதன்மை ஆலோசகரும், பிரபல பொருளாதார நிபுணருமான இலா. பட்நாயக் கூறியபோது, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி திடீரென செல்லாது என்று அறிவித்திருப்பதற்கு பல்வேறு நோக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போரை வெகுவாக பாதித்துள்ளது. இந்த நிலவரத்தை எப்படி கையாள்வது? இதற்கு தீர்வு காண்பதற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க போகிறோம்? என்ற திகைப்பில் ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகளவு பணத்தை வைத்திருப்போர் உள்ளனர்.
அதேபோல் புதிதாக வெளியிடப்படும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை இனிமேல் ஊழலுக்கோ அல்லது பதுக்கி வைக்கவோ பயன்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், இதுபோன்று மீண்டும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கலாம் என்ற அச்சத்தில், அமெரிக்க டாலர்கள், தங்கம் அல்லது வைரம் ஆகியவற்றை சட்டவிரோத செயலுக்கு அதிகளவுக்கு பயன்படுத்தப்படலாம் என்றார் பட்நாயக்.

Tuesday, November 15, 2016

பணம் எடுப்போர் விரலில் 'மை'- ரூபாய் நோட்டுகளை மாற்ற மத்திய அரசு புதிய கட்டுப்பாடு


ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில், பணம் எடுப்பவர்கள் கை விரலில் எளிதில் அழிக்கமுடியாத மை வைக்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

கைவிரலில் அடையாள மை வைக்கும் முறை இன்றுமுதல் பெருநகரங்களில் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், ரொக்க கையிருப்பு பணம் போதுமான அளவு இருப்பதால் மக்கள் நாட்டில் பணப் புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப் பட்டது.

இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. காசோலை மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

மக்களின் சிரமம் கருதி சில சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் சில கெடுபிடிகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி:

1. பழைய ரூ.1000, 500 மாற்றுவோரின் கை விரலில் அடையாள மை வைக்கப்படும்

2. இதன் மூலம் ஒரே நபர் மீண்டும் மீண்டும் வரிசையில் நிற்பதாலேயே கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க 'மை' நடவடிக்கை

3. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஆட்களை அனுப்பி பணத்தை மாற்றுவது தடுக்கப்படும்.

4. கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

5. ஜன்தன் கணக்குகளில் செலுத்தப்படும் பணத்தை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நியாயமான முறையில் அந்த கணக்குகளில் பணம் செலுத்துபவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.

6. கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் தங்களது உண்டியலில் பெறப்படும் ரூ.100, 50, 20, 10 சில்லறை பணத்தை உடனடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சில்லறை புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.

7. கிளை தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த இரண்டு பேரில், நீங்கள் உண்டா?


உலக நீரிழிவு நோய் நாள்: நவ. 14

பரபரப்பான பணி அவருக்கு. எப்போதும் அலுவலகம், களப்பணி என்று 24 மணி நேரமும் டென்ஷன்தான். இத்தனைக்கும் அவர் வேலை பார்த்தது மருத்துவத் துறை. நீரிழிவு நோய் இருப்பது அவருக்குத் தெரியும், என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?, சிகிச்சை செய்துகொள்ளாவிட்டால் அது என்ன பாடுபடுத்தும் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த நீரிழிவு நோய்க்கு முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டார்.

‘அடப் போகும்போது என்னத்த அள்ளிட்டுப் போகப் போறோம், பாக்காலாம்ங்க. வாயைக் கட்டுப்படுத்திக்கிட்டு எப்படிங்க இருக்க முடியும்; அப்படி ஒரு வாழ்க்கைத் தேவையா’ என்று சொல்லி எந்த உணவுக் கட்டுப்பாடுமில்லை; பரபரப்பு, டென்ஷனில் இருந்து அவர் தன்னை மாற்றிக்கொள்ளவும் இல்லை. விளைவு, ஒரு நாள் நள்ளிரவில் கடுமையான மாரடைப்பு. மனைவியையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார்.

நீரிழிவு நோய் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது என்று அந்நோய் இருப்ப வர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடம்பில் வேறு ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றிருந்தபோது, தற்செயலாகக் கண்டுபிடித்ததாகத்தான் பலரும் சொல்வார்கள். அதற்குள் உடலில் நீரிழிவின் பாதிப்புகள் ஏற்கெனவே உடலில் தொடங்கியிருக்கும்.

குழந்தைகளும் விதிவிலக்கல்ல

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கணிசமான மாணவர்களுக்கு - அதிலும் வளரிளம் மாணவிகளுக்கு ‘டைப் 2’ நீரிழிவு நோய் வருவதற்கான தொடக்கநிலை சாத்தியக்கூறு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றமும், தவறான உணவுப் பழக்கமும்தான்.

இந்தக் காலக் குழந்தைகள் உணவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், நொறுக்குத்தீனியை விரும்பி சாப்பிடுகிறார்கள். வாய்க்குள் நுழையாத பெயர் கொண்ட நொறுக்குத்தீனிகளின் பட்டியல் நீளமானது. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இவற்றைத் தின்கிறார்கள். போதாததற்கு சக்கை உணவையும் (Junk food) இஷ்டம்போல் வயிற்றுக்குள் தள்ளுகிறார்கள். குளிர்பானங்களையும் விட்டுவைப்பவதில்லை. சில உணவகங்களில் ‘காம்போ ஆபர்’ என்ற பெயரில் சக்கை உணவுடன் விலை மலிவாகவோ அல்லது இலவசமாகவோ தரப்படுகிறது.

விளையாட்டு அவசியம்

குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளியிலிருந்து வந்தவுடன் டியூஷன். பின்னர் ஹோம் ஒர்க், டியூஷன் ஹோம் ஒர்க் முடிக்கவே இரவு வெகு நேரமாகிவிடுகிறது. பிறகு எப்போது விளையாடுவது? பள்ளியிலும் விளையாட்டு பீரியடின்போது போர்ஷன் முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக, படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 80 விழுக்காடு மாணவர்கள் வாரத்தில் ஒருநாள்கூட வீட்டுக்கு வெளியில் விளையாடுவதே இல்லையாம். இவையெல்லாமே குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும், பின்னாளில் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

நேரம் கிடைக்கும்போது குழந்தைகளை ஓடியாடி விளையாடச் சொல்லவேண்டும். வீட்டிலும் சின்னச்சின்ன வேலைகளைச் செய்ய வைக்கவேண்டும். உடல் நலமாக இருப்பதற்கு அளவான, சரிவிகித உணவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதைக் குழந்தை களுக்குப் புரியவைக்க வேண்டும். இதன்மூலம் நீரிழிவு இளவயதில் எட்டிப்பார்ப்பதைத் தடுக்க முடியும்.

தேவை துரித நடவடிக்கை

நீரிழிவு நோயைக் கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி 40 வயதை நெருங்கும்போது நீரிழிவுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதுதான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது தொடர வேண்டும். ஒருவேளை நீரிழிவு இருந்தால், தொடக்க நிலையிலேயே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். நீரிழிவுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்சிகிச்சை எடுத்துக்கொள்வது, நீரிழிவின் பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்க உதவும். அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இதற்கான மருந்து மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைத் துரிதப்படுத்தா விட்டால் 2040-ல் இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 64 கோடியாகிவிடும் என்று ‘உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பு’ தெரிவிக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், தகுந்த உணவு பழக்கம் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கவோ, தள்ளிப்போடவோ அல்லது அதன் பக்கவிளைவுகளிலிருந்து தடுத்துக்கொள்ளவோ முடியும்.

நீரிழிவு நோய்க்கு மருத்துவம் செய்துகொள்ளாததால் ஏற்படும் பக்கவிளைவுகளைச் சமாளிக்க மிகுந்த கஷ்டப்பட வேண்டியதை நினைக்கும்போது, அதைக் கட்டுப்படுத்தப் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய் நமக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் நோய் உறுதிப்படுத்தப்படாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டு நீரிழிவு நோயாளிகளில், நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும்.

கட்டுரையாளர், மதுரை தேசிய கண் மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்த தொழிலதிபர்

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தன்னிடம் இருந்த ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார். இந்தத் தொகையில் ரூ.5,400 கோடி வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.

நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார். இந்தத் தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.

பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட், சூட்டை ஏற்கெனவே லால்ஜிபாய் ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர். மேலும் அரசின் பெண் குழந்தை களின் கல்விக்காக ரூ.200 கோடியை அவர் நன்கொடையாக அளித்துள்ளார். தன்னிடம் பணிபுரி யும் ஊழியர்களுக்கு தீபாவளி தோறும் கார், வீடுகளையும் பரிசளித்து வருகிறார்.

அவர் தாமாக முன்வந்து ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பருவத்தே பணம் செய்: நகைச் சீட்டு சேரலாமா?


சேமிப்பு என்பது நம்மில் பலருக்கு வாழ்வாதாரம். அதனால்தான் அதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். நம் சராசரி வயது அறுபத்தைந்து என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் இருபது ஆண்டுகள் படிப்புக்காகச் செலவாகிவிடும். அடுத்த முப்பது ஆண்டுகள் நாம் முழு மூச்சோடு உழைக்கும் காலகட்டம். அந்தக் காலகட்டத்தில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் கல்விக்காகத் திட்டமிட வேண்டும்.

மீதமுள்ள பதினைந்து ஆண்டுகள் நம் ஓய்வு காலம். இளமைக் காலத்தை எண்ணி ரசித்தபடி, நம் குடும்ப வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை அசைபோட்டபடி, பிள்ளைகளின் வெற்றிகளைக் கண்டு பெருமிதப்பட்டபடி கழிக்க வேண்டிய காலகட்டம். ஆனால், அந்த ஓய்வு காலத்திலும் பசிக்கும். உடல் நலத் தேவைகளுக்காகப் பணம் செலவிட வேண்டியிருக்கும்.

இந்தத் தேவைகளுக்கு எங்கே போவது? நாம் நம் பெற்றோருக்குச் செய்தது போல, நமக்குப் பிள்ளைகள் செய்வார்கள் என்று அவர்களை நம்பி இருக்கலாமா? இருக்கலாம், ஆனால் நாம் சுமையாகத் தோன்றும் நிலை வந்துவிடக் கூடாது. அதனால், ஓடியாடி உழைக்கும் காலத்திலேயே எல்லாத் தேவைகளுக்கும் போக மீதம் ஒரு தொகையைச் சேமித்து வந்தால், ஓய்வு காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அதனால்தான் சேமிப்பு முக்கியம் என்று கூவ வேண்டியிருக்கிறது. சரி, சேமிக்கவில்லை என்றால் என்ன? இப்போதைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைப்பவர்கள், தள்ளாத வயதிலும் பத்து மணி நேரம் வேலை செய்யும் முதியோர்களைக் கொஞ்சம் பாருங்கள். உங்கள் எண்ணம் தானாகவே மாறும்.

சீட்டு வளையம்

சீட்டு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது ஒரு விஷயத்தை விட்டுவிட்டேன். அது நகைச் சீட்டு. மத்தியத்தர மக்களை மிகவும் கவரக்கூடிய விஷயம் இந்த நகைச் சீட்டு. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டிக்கொண்டே வந்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கட்டிய தொகைக்கு ஏற்பத் தங்க நகையாக வாங்கிக்கொள்ளும் திட்டம் இது.

பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் விளம்பரங்களைக் கொட்டும் பெரிய நகை விற்பனை நிறுவனங்கள்கூடத் தங்கள் வாடிக்கையாளர்களை இந்தச் சீட்டு வளையத்துக்குள் சிக்கவைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது சின்னச் சின்ன நகைக் கடைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

கார், கம்ப்யூட்டர், பைக் போன்ற பரிசுகள், சேமிப்பில் பல சலுகைகள் என்று எல்லா வித்தைகளையும் காட்டி வாடிக்கையாளர்களை மடக்கப் பாடுபடும் இந்த நகைச் சீட்டு விஷயத்தில், நாம் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தெளிவு தேவை

முன்பு இரண்டு, மூன்று ஆண்டுகள் என்று நீண்ட கால அளவில் சீட்டுகள் சேர்க்கப்பட்டன. ஆனால், சீட்டு என்பதும் பணப் பரிவர்த்தனைதான். அதை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரத்தான் வேண்டும். பதினோரு மாதங்களைத் தாண்டிய எந்தச் சேமிப்புக்குமே கணக்கு சொல்ல வேண்டிய நிலை இருப்பதால், இப்போதெல்லாம் நகைச் சீட்டாகவே இருந்தாலும் பதினோரு மாதங்கள்தான் பரவலாகக் கணக்கிடப்படுகின்றன. அதைத்

தாண்டிய கால அளவைச் சொல்லும் நகை விற்பனை நிறுவனங்களிடம் ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்டுக்கொண்டு சீட்டில் சேருவது நல்லது.

கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள்

“எங்கள் நிறுவனச் சீட்டில் சேர்ந்தால் ஐந்து கிராம் தங்கம் போனஸாகக் கிடைக்கும். எங்கள் சீட்டில் பத்து மாதங்களுக்கு மட்டும் தொகையைச் செலுத்திவிட்டு பதினோரு மாதங்களுக்குரிய பலனை அடையலாம். எங்கள் நிறுவனச் சீட்டில் சேர்ந்தால் கார் பரிசு கிடைக்கும்” என்றெல்லாம் விளம்பரம் செய்வார்கள். நாம் கொடுக்கும் பணத்துக்கு ஈடாகத் தங்கம் தருவதாகச் சொல்லும் இவர்களால் எப்படி இந்தக் கூடுதல் பரிசுகளை நமக்குத் தர முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தரம் முக்கியம்

சீட்டு கட்டும் மக்களுக்கு நகை விற்பனை நிறுவனங்கள் போலியான, தரமில்லாத தங்க நகைகளைக் கொடுக்கிறார்கள் என்று சொல்லவில்லை. நமக்குப் பழக்கமான 22 கேரட் நகையை நினைத்துக்கொண்டு சீட்டு கட்டுவோம். கடைசியில் அவர்கள் 18 கேரட் நகையைக் கொடுத்தால் என்னாவது? அதனால், சீட்டில் சேருவதற்கு முன்பே இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

நீங்கள் சீட்டு கட்டிச் சேமிக்கும் பணத்துக்கு ஈடான நகைகளை, செய்கூலி சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். கடைக்குப் போய்ப் பார்த்தால் கண்ணுக்கே தெரியாத பொடி எழுத்தில் குறிப்பிட்ட மாடல்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று போட்டிருப்பார்கள். நாம் நகை வாங்குவதே ஆண்டுக்கு ஒருமுறை. அதில் நவீன மாடல்களை வாங்க முடியாமல் முட்டுக்கட்டை போடும் விஷயமாக இந்த நகைச் சீட்டு அமைந்துவிடக் கூடாது.

அதேபோல கல் பதித்த நகைகள் கணக்கில் வராது, வைர நகைகளை நாங்கள் சீட்டுப் பணத்துக்கு ஈடாகத் தர மாட்டோம், நாணயங்களாகவோ, பிஸ்கெட்டுகளாகவோ தர மாட்டோம் என்றெல்லாம் நிபந்தனைகள் போட்டிருப்பார்கள். அதையும் கவனமாகத் தெரிந்துகொண்ட பிறகு சீட்டுச் சேரும் முடிவை எடுப்பது நல்லது. ஆனால், எல்லா நிபந்தனைகளையும் தடைகளையும் தாண்டி ஏதோ ஒரு வகையில் நாம் சேமிக்க வேண்டும். அது முக்கியம்.

சரி, தங்கத்தில் செய்யும் சேமிப்பு நல்லதா, கெட்டதா? அடுத்து அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

ரூபாய் நோட்டு அனுபவம்: முழு திருப்தி தந்த வங்கி சேவை


500 - 1000 நோட்டு மாற்றுவதில் ஆளாளுக்கு ஒரு பதிவினைப் போட்டுக் கொண்டிருக்க, என் பங்குக்கு நானும் ஒரு பதிவு போட வேண்டும் என நினைக்கிறேன். கவலை வேண்டாம், இது யார் மீதும் வெறுப்பை வளர்த்து, பழி போட்டு, புகார் சொல்லி, வஞ்சனை செய்யும் பதிவல்ல. புதிய நோட்டு / சில்லறை மாற்ற முயற்சித்த போது எனக்கு கிடைத்த நல்ல அனுபவம் இது.

குறிப்பிட்ட நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நாளன்று என் கையிலிருந்தது 500 ரூபாய் தாள் ஒன்று மட்டுமே. அடுத்த சில நாட்களுக்கு அதை மாற்ற தேவை வரவில்லை. எப்படியும் தேவைப்படும், அடுத்த சில நாட்களில் ஏடிஎம், வங்கிகளில் கூட்டம் குறைந்த பின் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

ஆனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானதே தவிர குறையவில்லை. எப்படியும் மாற்றித்தானே ஆக வேண்டும் என முடிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை, கொட்டிவாக்கத்தில் நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக்கு விரைந்தேன்.

தனியார் வங்கிகளும் சரியில்லை, வாடிக்கையாளர்களை சரியாகக் கவனிப்பதில்லை போன்ற புகார்களை நானும் கடந்து வந்திருக்கிறேன். எனக்கும் சில தனிப்பட்ட அனுபவங்கள் அப்படி இருக்கிறது. ஆனால் அன்று நடந்த விஷயங்கள் அந்த அபிப்பிராயத்தை மாற்றியது.

ஏற்கெனவே அங்கு பெரிய வரிசை இருந்ததை கடந்த சில நாட்களாக பார்த்த எனக்கு அன்று கூட்டம் சற்று குறைவாக இருந்ததாகவே பட்டது. அரைக் கம்பத்தில் கொடி பறப்பது போல, ஷட்டரை பாதி திறந்து வைத்திருந்தனர். வங்கி வாசலிலேயே வங்கி அதிகாரிகள் இருவர் நின்று கொண்டு, விசாரிக்க வருபவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.

நான் சென்றதும், சார் உங்கள் கணக்கில் காசு இருந்தால் ஒரு காசோலை போட்டு பணத்தை எடுக்கலாம். புது நோட்டு, சில்லறை அதற்கேற்றார் போலத் தருவோம். அதே போல பழைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதை கணக்கில் போட்டு வைக்கலாம். ஆனால் இப்போது பழைய நோட்டுகளை மாற்ற மட்டும் (exchange) இயலாது என்றனர்.

இதை அவர்கள் சொன்ன தொனி மிகவும் பணிவாகவும், தோழமையுடனும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வேளை, ரோட்டில் நின்று கொண்டு, ஒரே கேள்விக்கு மீண்டும் மீண்டும் பதிலளிக்கும் நிலையிலும் அவர்களது அந்த தொனி மாறவில்லை என்பது ஆச்சரியமும், ஆறுதலும் தந்தது.

வீட்டுக்குச் சென்று ஒரு காசோலையைப் பூர்த்தி செய்து, கணக்கில் போட வேண்டிய பழைய 500-1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு, எனது அடையாள அட்டை நகல் ஒன்றை பிரதி எடுத்து மீண்டும் வங்கிக்கு சென்றேன். இம்முறை வாசலில், பிளாட்பாரத்தில் ஒருவர் மேஜை போட்டு உட்கார்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் சென்று கேட்டதும் பொறுமையாக என்ன செய்ய வேண்டும் என விளக்கி, பணத்தைப் போடுவதற்கான சீட்டையும் புது நோட்டுகளைப் பெறத் தேவையான படிவத்தையும் தந்தார்.

உள்ளே சென்று, இருந்த சின்ன வரிசையில் நின்று வேண்டிய பணத்தை முதலில் பெற்றுக் கொண்டேன். எனக்குத் தேவையான நூறு ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு, மீதியிருந்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செலுத்தி விடலாம் என சீட்டை நிரப்பி வரிசையில் நின்றேன்.

அப்போது என்னை கவனித்த வங்கி ஊழியர் ஒருவர், சார், 2000 ரூபாய் புழக்கத்தில் வரவேண்டும் என்று தான் அதை வெளியே தருகிறோம், நீங்கள் மீண்டும் அதை கணக்கில் போட்டால் எங்கள் நோக்கம் நிறைவேறாது, நீங்கள் வேண்டுமென்றால் அந்த 2000க்கான 1000 ரூபாய் நோட்டுகள் என்னிடம் உள்ளன, இதை கணக்கில் போடுங்கள், உங்கள் 2000 நோட்டுகளை நாங்கள் புழக்கத்தில் விடுவோம் எனப் பொறுமையாக எடுத்துக் கூறினார். அவர் கூறியதில் இருந்த நியாயம் புரிந்தது. அவர் கையிலிருந்த 1000 ரூபாய் தாள்கள் என்னிடம் வந்தது. எனது 2000 நோட்டுகள் அவரிடம் சென்றது.

இவ்வளவு சிக்கலிலும், முகம் சுளிக்காமல், பொறுமையாக எடுத்துச் சொல்லி, சந்தேகங்களை தீர்த்து வைத்து, இன்முகத்துடன் அனுப்பி வைத்த வங்கி ஊழியர்களை நினைத்தால் நிறைவாக இருந்தது.

நம்மைச் சுற்றி ஆயிரம் எதிர்மறை செய்திகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையா, புரளியா எனத் தெரியாமல் பல்லாயிரம் தகவல்கள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் பரவி வருகின்றன. ஏராளமானோர் தங்களுக்கு அடிப்படை கூட சுத்தமாக தெரியாத விஷயங்கள் குறித்து விமர்சனம் செய்து ஆராய்ந்து வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் சுற்றியிருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்கள் எல்லாம், தங்களுக்கு பிரச்சினை என வரும்போது மனிதாபிமானி ஆகி நீலிக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இவ்வளவுக்கும் நடுவில் நாமும் ஏன் நமக்கு வந்த கஷ்டத்தை, சில்லறை இன்றி படும் அவஸ்தையை மட்டுமே பெரிதாக்கி எழுத வேண்டும்? இப்படிப்பட்ட நல்ல அனுபவங்களும் அதிகமாக அறியப் படவேண்டும் தானே என்ற நோக்கிலேயே இதை எழுதுகிறேன்.

குறிப்பு: வங்கிக்கு விளம்பரம் போல இருக்க வேண்டாம் என்ற நோக்கிலேயே வங்கியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...