Thursday, November 17, 2016

நகைகள் 100கோடி...ஹெலிகாப்டருக்கு 20கோடி! காஸ்ட்லி கல்யாணத்தின் ஆச்சர்ய தகவல்கள் - படங்கள்


முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழில் அதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் இன்று பெங்களூருவில் இன்று பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. மகளின் திருமணத்தை நடத்த ரூ.200 கோடிக்கு மேல் ஜனார்த்தன ரெட்டி செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. ஆனால், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999-ம் ஆண்டுதான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்கள். தற்போதையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வாராஜுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ரெட்டி சகோதரர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது, சுரங்கத் தொழிலுக்கான லைசென்ஸ் கிடைத்தது. சுரங்கத் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஜனார்த்தனரெட்டிக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்ந்திருந்தது. கர்நாடகத்தில் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார் ஜனார்த்தன ரெட்டி. தொடர்ந்து 2009-ம் ஆண்டு பெல்லாரி சுரங்க ஊழலில் சிக்கினார். இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்துதான் மகள் பராமனியின் திருமணத்தை நடத்துகிறார்.



மணமகன் ராஜிவ் ரெட்டிக்கு 25 வயதாகிறது. பிபிஎம் பட்டதாரி. மணமகள் பிரமானிக்கு 21 வயதாகிறது. ஹைதராபத் தொழிலதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன்தான் ராஜிவ். தந்தை நடத்தும் நிறுவனத்தின் வெளிநாட்டு தொடர்புகளை கையாள்கிறார்.

இந்த திருமணத்துக்காக எத்தனை கோடி செலவு செய்யப்பட்டது. எப்படி செலவிடப்பட்டுள்ளது என்று பார்க்கலாம். எல்ஈடி திரையுடன் கூடிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டது.அழைப்பிதழை திறந்தவுடன் 'பிரமானி வெட்ஸ் ராஜிவ்' என்ற பாடல் திரையில் ஓடும். ரெட்டி குடும்பத்தினரும் திரையில் தெரிவார்கள். இதற்கு ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

திருமணத்துக்காக குடும்பத்தினர் அனைவருக்கும் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் ரூ.100 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் கலை நிகழ்ச்சிக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் வருவதற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தவுள்ளது. இதற்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்துக்காக ரூ 20 கோடி செலவிடப்பட்டுள்ளது. திருமணத்துக்கான செட் அமைப்பது போன்ற பிற விஷயங்களுக்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த திருமணத்துக்காக தனது 10 சொத்துக்களை அடமானம் வைத்து ஜனார்த்தன ரெட்டி பணத்தை திரட்டியுள்ளார். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக மாநில பெரும் அரசியல் புள்ளிகள் நடிகர்- நடிகைகள் தொழிலதிபர்கள் முதல் நண்பர்கள், உறவினர்கள் என 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவுள்ளனர்.



இதனால் திருமணம் நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3000 தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வி.வி.ஐ.பிக்கள் திருமணத்தில் பங்கேற்பதால் 300 போலீஸ் அதிகாரிகளும் திருமணம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். திருமணத்தை நடத்தி வைக்க திருப்பதி கோயிலில் இருந்து 8 புரோகிதர்கள் வந்துள்ளனர்.

திருமணம் நடைபெறும் பெங்களூரு அரண்மனை மைதானம் பெல்லாரி நகரம் போலவே மாற்றப்பட்டுள்ளது. பெல்லாரி நகரில் உள்ள காவல் பஜார், தனாப்பா பீடி தெரு, ஜனார்த்தன ரெட்டி படித்த பள்ளி ஆகியவை அரங்குக்குள் எழுப்பப்பட்டுள்ளன. இரு பிரமாண்டமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினர் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெங்களூருவில் 1,500 நட்சத்திர ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல 2000 டாக்ஸிகள் விருந்தினர்களுக்காக ஓடுகின்றன. 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பறந்து பறந்து விருந்தினர்களை அழைத்து வரப் போகின்றன. குதிரைகள், யானைகள் போன்றவையும் விருந்தினர்களை வரவேற்க அரண்மனை முகப்பில் நிறுத்தப்படவுள்ளன.

- எம்.குமரேசன்

2000 ரூபாய் நோட்டு சாயம் போனால்தான் ஒரிஜினலா? ஆர்.பி.ஐ. அளித்த விளக்கம்



சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டு ஒரிஜினல் என்ற தகவல், பொது மக்களுக்கு பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.ஐ. தரப்பில் இந்த கேள்வியை கேட்டதற்கும் மழுப்பலான பதிலையே அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கறுப்புப் பணத்தை கமிஷன் பெற்றுக் கொண்டு சிலர் மாற்றுவதாக தகவல் வந்தது. அதை தடுக்க பணத்தை மாற்ற வருபவர்களின் வலது கையில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் ஒரு நபர் மீண்டும், மீண்டும் அடுத்தடுத்த வங்கிகளில் ஒரே நாளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். இந்த மை அழியாது. வங்கி, தபால் நிலையங்களுக்கு ஆர்.பி.ஐ. ஆலோசனைபடி மை சப்ளை செய்யப்படும். முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும். அனைத்து வங்கி கிளைகளுக்கும் 5 மி.லி கொண்ட மை பாட்டில் கொடுக்கப்படும். அதில் உள்ள மூடியில் மை வைப்பதற்கான பிரஸ் இருக்கும். மை வைக்கும் பணியில் கேஷியர் அல்லது வங்கி தரப்பில் நியமிக்கப்படும் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இடது கை விரல்களில் மை வைக்கப்பட்டால் அவரால் பணத்தை மாற்ற இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து வங்கிகளுக்கும், தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், புதிய வரவான 2000 ரூபாய் நோட்டுக்களில் சாயம் போனால்தான் ஒரிஜினல் என்ற தகவலும் வெளியானதால் பொது மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த தகவல்கள் உண்மையா என்ற கேள்வியை ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பானா கில்வாலா முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "பணத்தை மாற்ற மட்டுமே விரலில் மை வைக்கப்படுகிறது. வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு மை வைப்பதில்லை. முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு நகரங்களிலும் கிராம பகுதிகளிலும் மை வைக்கும் பணி விரிவுப்படுத்தப்படும். ஆர்.பி.ஐ விதியில் சேதமடைந்த ரூபாய் நோட்டுக்களுக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்கள் வழங்க முடியும். தேர்தலுக்கு மட்டுமே இடது விரலில் மை வைக்கப்படும். வங்கிகளில் பணத்தை மாற்ற வலது விரலில் மை வைக்கப்படுகிறது" என்றார்.

சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டுக்கள் ஒரிஜினல், மை வைக்கப்பட்ட நபர் மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா போன்ற கேள்விகளுக்கு அல்பானா கில்வாலா பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "விரலில் மை வைப்பதற்கு முன்பே குறிப்பிட்ட ஒரு வங்கியில் பணத்தை மாற்றியவர், அடுத்து 14 நாட்களுக்குப் பிறகே அந்த வங்கியின் எந்த கிளைகளிலும் பணத்தை மாற்ற முடியும். அதே நடைமுறை மை வைத்தப்பிறகும் தொடரும். இதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் 2000 ரூபாய் நோட்டு சாயம் போனால்தான் ஒரிஜினல் என்பது குறித்தும் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் பவுண்ட் பணம், சாயம் போனால்தான் அது ஒரிஜினல் என்ற தகவலும் உள்ளது. தற்போது மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ஆர்.பி.ஐ தெளிவான பதிலளிக்க வேண்டும். எங்களிடம் பொது மக்கள் கேட்கும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை" என்றனர்.

தபால்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஒரு நபர் 4,500 ரூபாய் வரை பணத்தை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் தபால்துறையில் புதிய ரூபாய் நோட்டு பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் நலன்கருதி ஒரு நபருக்கு 2,000 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கிறோம். மேலும் 'மை' வைக்கும் நபர், மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா என்பதற்கும் பதில் இல்லை" என்றனர்.

இதனிடையே, ஏற்கனவே வெளியான 1000 ரூபாய் நோட்டிலும் சாயம் போனதாகவும் தகவல் உள்ளன. தற்போது, புதிய 2000 ரூபாய் நோட்டு வேறு வண்ணத்தில் இருப்பதால் அதிலும் சாயம் போகிறது குறிப்பிடத்தக்கது.

'எங்களுக்கு பணமே வேண்டாமே!' - பணமில்லா தேசங்கள் எப்படி இயங்குகின்றன? #CashlessCountries


இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், பணப் பரிவர்த்தனையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட சில நாடுகளும் (cashless countries) இருக்கின்றன. இங்கு பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் இதை அந்தந்த நாட்டு மக்கள் எதிர்த்தாலும் பின்னாளில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்



இத்தகைய நாடுகளில், 80 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதம் வரை மக்கள் பணப் பரிவர்த்தனையை கைவிட்டு, அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குகின்றனர். ஆரம்பகாலத்தில் கொள்ளையர்கள் பேங்குகளிலும், பொருட்களை வாங்க கடைக்குச் சென்ற வாடிக்கையாளர்களிடம் பணத்தைக் கொள்ளையடித்ததால், இத்தகைய திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்பு, மக்களே ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியதால், பணப் பரிவர்த்தனையை ஒழிக்கும் முயற்சியில் அந்த நாடுகள் இறங்கின. இதில், ‘இன்னும் 20 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களையும் கூடிய விரைவில் கேஷ்லெஸ் முறைக்கு (Cashless Method) மாற்றிவிடுவோம்’ என்கின்றன அந்த நாடுகள். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்...

பெல்ஜியம்



இங்கு முற்றிலும் பணப் பரிவர்த்தனை ஒழிக்கப்பட்டு, கேஷ்லெஸ் முறை கையாளப்பட்டு வருகிறது. இதை அதிகளவில் செயல்படுத்திவரும் முதல்நாடாக இது இருக்கிறது. இங்கு 93 சதவிகித வர்த்தகப் பரிமாற்றங்கள் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்தியே நடக்கின்றன. பெல்ஜியத்தில் 86 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த நாட்டில் 3,000 யூரோக்களுக்கு அதிகமான தொகையை ஒருவர் செலவழிக்க விரும்பினால், அதை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே செய்யவேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் 2,25,000 யூரோக்கள் வரை அரசுக்கு அபராதம் செலுத்த நேரிடும்.

ஃபிரான்ஸ்



பெல்ஜியத்துக்கு அடுத்தபடியாக கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றும் நாடு ஃபிரான்ஸ். பெல்ஜியத்தைப் போன்றே ஃபிரான்ஸிலும் 3,000 யூரோவுக்கு மேல் ஒருவர் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால், அரசு மூலம் அந்த நபருக்கு கடும் தண்டனைகள் கிடைக்கும். அத்துடன், அதிக அபராதமும் செலுத்த நேரிடும். இங்குள்ள மக்களில் 93 சதவிகித மக்கள் பணப் பரிவர்த்தனையைச் செய்வது கிடையாது. இவர்கள் இணைய வழியாகவே தங்களின் பரிவர்த்தனையைச் செய்கிறார்கள். இங்கு, 70 சதவிகிதத்துக்கும் மேலான மக்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கனடா



கேஷ்லெஸ் முறையைப் பயன்படுத்துவதில், தற்போது கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள மொத்த வர்த்தகத்தில் 90 சதவிகிதம், ஆன்லைன் வர்த்தகமாக உள்ளது. கனடாவில், 88 சதவிகிதம் மக்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். வர்த்தகத்தில் பல நடவடிக்கைகளைக் கொண்டுவந்த கனடா அரசு, கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நாணயங்கள் அச்சடிப்பதையும், அவைகளைப் புழக்கத்தில்விடுவதையும் முற்றிலும் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து



சமீபத்தில் ஐரோப்பிய யூனியனை விட்டுத் தனியாகப் பிரிந்துவந்தது இங்கிலாந்து. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்போது அதன் தரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் நம்பியுள்ளது. இந்த நாட்டில் 90 சதவிகித மக்கள் கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்கிலாந்து மக்களில் சுமார் 89 சதவிகிதம் பேர் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இங்கு போக்குவரத்துக்காகப் பெறப்படும் கட்டணங்கள் யாவும் பணமாகப் பெறப்படுவதை இங்கிலாந்து அரசு நிறுத்தியுள்ளது.

சுவீடன்



முதன்முதலாக இந்த கேஷ்லெஸ் முறையைக் கையிலெடுத்தது சுவீடன்தான். காரணம், இங்குள்ள வங்கிகளில் இருந்த பணம், கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்த நாடு கேஷ்லெஸ் முறையைக் கொண்டு வந்தது. இங்கு வங்கிகள், அரசு அலுவலகங்கள், மால்கள், உணவகங்கள் போன்ற அனைத்துமே ஆன்லைன் வர்த்தகம் அல்லது கார்டு முறைகளைத்தான் பின்பற்றி வருகின்றன. இங்குள்ள பொதுப் பேருந்துகளும் கார்டு முறையையே பின்பற்றுகின்றன. இங்கு பெரும்பான்மையான மக்கள் கேஸ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்குள்ள நான்கு வங்கிகளில் ஒரு வங்கி மட்டும், பணப் பரிவர்த்தனையைச் செய்கிறது. அதுவும் கூடிய விரைவில் நிறுத்திவிடும் என்று சுவீடன் அரசு அறிவித்துள்ளது. கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றிவரும் நாடுகளில் சுவீடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Wednesday, November 16, 2016

இனி, வங்கிகளில் ஐந்தில் ஒரு பங்காக கூட்டம் குறையும்: மை வைக்கும் நடவடிக்கையால் ஒரே நபர் பலமுறை வர இயலாது

By கு. வைத்திலிங்கம்  |   Published on : 16th November 2016 02:53 AM  |   
விரலில் மை வைக்கும் திட்டத்தால், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவோர் கூட்டம் ஐந்தில் ஒரு பங்காக குறைந்துவிடும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 5 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி ஒரு நாளைக்கு ரூ.4000 வீதம் பழைய நோட்டுகள் மாற்றப்படுகின்றன.
ஆதார் அட்டையை காட்டி பணம் மாற்றியவர்கள் அடுத்தமுறை அதே ஆவணத்தைக் காட்டினால், கணினி காட்டிக் கொடுக்கிறது. இதனால், வங்கி அலுவலர்கள் திருப்பிவிடுகிறார்கள்; அல்லது 10 நாட்களுக்குப் பிறகு வாருங்கள் என்கிறார்கள்.
இதனால், ஒருநாள் ஆதார் அட்டையை காட்டினால், மறுநாள் குடும்ப அட்டை, அடுத்த நாள் ஓட்டுநர் உரிமம் என்று மாற்றி மாற்றி பணம் எடுக்க வரும் கூட்டத்தால்தான் தற்போது வங்கிகளில் நீண்ட வரிசை இருக்கிறது.
இந்நிலையில், பணம் பெற்றவர்களுக்கு மை வைக்கப்படுவதால் அவர் ஏற்கெனவே பணம் பெற்றவர் அல்லது எத்தனையாவது முறையாக வருகிறார் என்பதையெல்லாம் கணித்துவிடுவது எளிது. இதனால், இனி வங்கிகளில் கூட்டம் குறையும் என்கின்றனர் வங்கி அதிகாரிகள்
""இதை முன்னதாகவே செய்திருக்கலாம். இதுவரை பல பேர் ரூ. 400 கமிஷனுக்காக பல முறை வந்திருக்கிறார்கள்.
அவர்களைத் தெரியும். ஆனால், திருப்பி அனுப்ப முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு ஆவணத்துடன் வருவார்கள். அவர்கள் உண்மையாகவே ஏழைகள். அது அவர்களுடைய பணம் அல்ல என்பதை ஊகிக்க முடியும்.
ஆனால், எங்களால் இல்லை என்று சொல்ல முடியாது. தொடக்கத்திலேயே இத்தகைய மை வைக்கும் திட்டத்தை அரசு அறிவித்திருந்தால், ஒரு நபர் திரும்பத் திரும்ப வருவது தடுக்கப்பட்டிருக்கும்'' என்கின்றனர் வங்கித் துறையினர். வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற வருவோரே அதிகமாக இருக்கின்றனர். தங்கள் கணக்குகளில் பணத்தை வரவு வைப்போர் குறைவாக இருக்கின்றனர். ஒரு கிளைக்கு 1000 முதல் 1500 பேர் வரை பழைய நோட்டுகளை மாற்ற வருகிறார்கள். ஆனால், தங்கள் கணக்கில் பழைய நோட்டுகளை வரவு வைக்க வருவோர் சுமார் 200 பேர் மட்டுமே.
முடிந்தவரை, கணக்கில் போடாமல் மாற்ற முடியுமா என்பதிலேயே பலரும் விருப்பமாக இருக்கிறார்கள். ஏனென்றால், பழைய நோட்டுகளை கணக்கில் வரவு வைக்கும்போது, சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு எண், அதில் செலுத்தப்பட்ட பழைய நோட்டுகளின் தொகை என முழு விவரமும் ரிசர்வ் வங்கிக்கு நாள்தோறும் அனுப்பப்படுகிறது.
நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை செல்லாத நோட்டுகளை வழக்கத்துக்கு மாறாக, அல்லது அதிகமாக செலுத்தியவர்கள் எத்தனை பேர் என்று ஜனவரி மாதம் மிக துல்லியமாக ஆராயப்படும் என்கின்றனர் வங்கி உயர் அதிகாரிகள்.
வங்கி மேலாளர் உதவியுடன் பணத்தை மாற்றுகிறார்கள் என்றும், 20% கமிஷன் கிடைப்பதாகவும் வரும் செய்திகள் குறித்து கேட்டபோது, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், ""வங்கிகளில் முறைகேடு இரண்டு வகைகளில் மட்டுமே சாத்தியம். முதலாவதாக பணம் மாற்ற வருவோர், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட தொகையைவிட குறைவாக மாற்றினால், மீதியுள்ள தொகைக்கு வங்கி மேலாளரே, அவர் வாங்கியதாக கணக்கில் சேர்த்து காட்டி, கருப்பு பணத்தை மாற்ற உதவ முடியும். இரண்டாவது, சில செயல்படாத கணக்குகள் என வங்கியில் உண்டு. அந்தக் கணக்குகள் வங்கி மேலாளருக்குத் தெரியும். அதில் பணத்தைப் போடச் செய்து, போலி நபர்களைக் கொண்டு மீண்டும் வித்ட்ராயல் செய்யும்படியும் செய்யலாம். இரண்டுமே கிரிமினல் நடவடிக்கை. சிக்கிக் கொண்டால் சிறை செல்ல வேண்டியதுதான்'' என்று விளக்கம் அளித்தனர் வங்கி அதிகாரிகள்.
பெட்ரோல் பங்க்குகள் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி நடப்பது குறித்து வருமான வரித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, ""நவ.8-ம் தேதி முதல் டிச.30 வரை அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குக்கு எவ்வளவு பெட்ரோல் ஐஓசி மூலம் வழங்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்துகொண்டு, அதன் பிறகு அவர்கள் கணக்கை பிப்ரவரி வாக்கில் வருமானவரித் துறை நிதானமாக ஆய்வு செய்யும். அப்போது அவர்கள் ஐஓசியில் வாங்கிய பெட்ரோல்-டீசலுக்கும் அவர்களது நடப்புக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகைக்கும் அதிக வித்தியாசம் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள்'' என்கின்றனர்.

அன்றும் இன்றும்! எஸ்.வி.சேகர்

By மாலதி சந்திரசேகரன்  |   Published on : 16th November 2016 10:36 AM  |
தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான நடிகர், நகைச்சுவைப் படங்களில் கதாநாயகனாக நடித்து கோலோச்சி வரும்  நட்சத்திரம், சிறந்த தயாரிப்பாளர், இயக்குனர், புகைப்படக் கலைஞர், திரைக்கதாசிரியர், நாடகக் குழுவை (நாடகப்ரியா) தலைமை பொறுப்பேற்று வழிநடத்துபவர், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (Central Board of Film Certification), பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினர் என இப்படி பன்முகத்டுடன் சகலகலா வல்லவரான எஸ்.வி.சேகர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரைக் கண்டதுமே ‘நம் குடும்பம்’ தொடர் ஞாபகம் வந்தது. உற்சாகமாக பேச்சைத் துவக்கினோம்.
நம் குடும்பம் தொடரின், நீங்கள் சினிமா கதாநாயகனாக மிளிர வேண்டும் என்கிற எண்ணத்தில், உங்களின் மனைவியாக பாத்திரமேற்று நடிப்பவர் ‘டயட் கண்ட்ரோல்’ டயட் கண்ட்ரோல் என்று கூறிக் கொண்டு, தண்ணீரைக் குடிக்கச் சொல்லில் உங்கள் வயிற்றை நிரப்பி அனுப்புவாரே! அப்படி நிஜ வாழ்க்கையில் டயட் சிஸ்டம் உண்டா?’ 
நான் பொதுவாகவே எதையும் அதிகமாக சாப்பிட மாட்டேன். போதாத குறைக்கு பதினைந்து வருடங்களாக சர்க்கரை வியாதி வேறு சேர்ந்திருக்கிறது. எனவே உணவைச் சுருக்கமாக முடித்துக் கொள்வேன்.  நான் காபி பிரியன். ஒரு தம்ளர்
காபியை சர்க்கரை சேர்க்காமல், கால் கால் க்ளாஸ்களாக நான்கு தடவைகள் குடிப்பேன். என்னுடைய அன்றாட அட்டவணையைக் கூறுகிறேன். அதற்கு முன்பாக ஒன்றைக் கூற வேண்டும். நான் சுத்த சைவம். காரம் கூட சாப்பிட மாட்டேன். எப்போதாவது ஊறுகாய் சாப்பிடுவதாக இருந்தால் கூட, அதை நன்றாக கழுவி காரத்தை எடுத்து விட்டுத்தான் சாப்பிடுவேன்.
முதலில் காலை எழுந்தவுடன் ஒரு பெரிய தம்பளரில் வெந்நீர் குடிப்பேன். பின் குளித்து முடித்துவிட்டு, ஸ்வாமிக்கு பூ பறித்துக் கொண்டு வந்து, வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு காபி குடிப்பேன். அந்த காபி, ஹோட்டல் மினி காபியிலும் பாதிதான் இருக்கும். பிறகு சிற்றுண்டி வேளைக்கு இரண்டு தோசை சாப்பிடுவேன். பிறகு தேவைப்பட்டால் பதினொரு மணிக்கு காபி அல்லது வெஜிடபிள் சூப், சில சமயங்களில் மோர் குடிப்பேன். மதிய சாப்பாட்டுக்கு அரிசி உணவைத் தவிர்த்து விடுவேன். காய்கறி வகைகள் எடுத்துக் கொள்வேன். அப்போது மோர் குடிப்பேன். சாயந்திரம் ஸ்நாக்ஸ் டயத்துக்கு தாளித்த அரிசி பொரி ஒரு கப் உண்பேன். இரவு ஆகாரத்துக்கு இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு தோசை சாப்பிடுவேன். இரவு சுமார் பத்தரை மணிக்கு ஒரு கப் பால் குடித்துவிட்டு உறங்கப் போவேன். ஜுரம் வந்தால் மட்டும் தான் இட்லி சாப்பிடுவேன். எங்கள் வீட்டில் ‘டயட்’ என்றால் அது பால் தான். டோன்டு மில்க்தான் உபயோகப்படுத்துகிறோம். நான் வெள்ளைப் பண்டங்களான சர்க்கரை, அரிசி, மைதா மூன்றையுமே உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
சில சமயங்களில் விசேஷ நாட்களில் யாராவது இனிப்பு பண்டத்தினைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு நேராக வாஷ்பேசின் அருகில் சென்று விடுவேன். கொடுத்தவரின் மனத்தை நோகடிக்க விரும்பாமல், வாயில் போட்டுக் கொண்டு நன்றாக சுவைத்துவிட்டு பிறகு துப்பிவிடுவேன். இரண்டு பேரின் நோக்கமும் நிறைவேறிவிடுகிறது இல்லையா? 
எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி?
சந்தோஷம் என்பது வெளியில் இல்லை. தேடிப் போக வேண்டிய அவசியம் கிடையாது. நமக்குள்ளே இருக்கும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மனம் லேசாக இருந்தால், முகமும் மலர்ச்சியாக அழகாகத் தென்படும். இது என் தந்தை எனக்குக் கற்றுத்தந்த பாடம். 
மணல் கயிறு இரண்டாம் பாகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...
மணல் கயிறு சினிமா 1982-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதன் இரண்டாம் பாகம் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. முப்பத்து நான்கு வருடங்கள் கழித்து வெளியாகும் இப்படத்தில், முதல் பாகத்தில் நடித்த விசு, குரியகோஸ் ரங்கா, நான் மூவரும் அதே கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறோம். முதல் பாகத்தில் கிட்டுமணியாக நடித்த நான், நாரதர் நாயுடு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த விசுவிடம், நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் எப்படிப்பட்ட பெண் அமைய வேண்டும் என்பதற்கு எட்டு கண்டிஷன்கள் போடுவேன். இரண்டாம் பாகத்தில் என் மகள் (மணப்பெண்) எட்டு கண்டிஷன்களைப் போடுகிறாள். இது அடுத்த தலைமுறை பற்றிய கதையாக வருகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் (உலக திரைப்பட வரலாற்றில் என்று கூறலாமா என்று தெரியாது) முப்பத்து நான்கு வருடங்கள் கழித்து, ஒரே படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர்களே மீண்டும் இதில் நடிக்கிறார்கள் என்பது இதுதான் முதல் தடவை. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்க, மதன் குமார் இயக்கத்தில், தரன் இசையில், என் மகன் அஷ்வின் சேகர் கதாநாயகனாகவும், பூர்ணா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இதன் திரைக்கதையை நான் எழுதியிருக்கிறேன்.
தற்போது மொத்த நாடே நம் பிரதமரைப் பற்றித் தான் பேசுகிறது. நீங்கள் நம் பாரதப் பிரதமரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்?
பிரதமர் மோடிஜியை எனக்கு 2010-லிருந்தே பழக்கம். சோ அவர்கள் தான் எனக்கு மோடிஜியை அறிமுகப்படுத்தினார். சோ அவர்கள் என் மானசிக குரு. அடுத்த முறை நான் மோடிஜியை சந்தித்த போது, அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? நம்ம ராஜகுரு எப்படி இருக்கிறார்? என்றுதான். அடுத்ததாக பழக்கம் ஆன ஒரு மாதம் கழித்து ஒரு நாள், நான் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக ஃபோன் செய்தேன். அப்போது அவர் குஜராத்தில் இருந்தார். போனை அவருடைய சீஃப் செகரட்டரி தான் எடுத்தார். என்னைப் பற்றிய தகவலைத் தெரிவித்ததும், என் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டு, மோடிஜி மீட்டிங்கில் இருப்பதால் அவரிடம் தெரிவிப்பதாகக் கூறினார். நம்பராவது வாங்கிக் கொண்டாரே என்று நான் திருப்தி பட்டுக் கொண்டேன். ஆனால் மாலை சுமார் ஏழு மணி அளவில் எனக்கு ஒரு ஃபோன் வந்தது. எடுத்தவுடன் ‘சேகர்ஜி, ஐம் மோடி ஹியர்’ என்றார். அதையெல்லாம் விட அவர் கூறியதில் என்ன ஆச்சரியமான விஷயம் என்றால், ‘நீங்கள் ஃபோன் செய்தீர்கள் பதிலுக்கு நான் செய்கிறேன். இது ஒரு அடிப்படை மரியாதை’ என்றவுடன் நான் ஆடிப் போய் விட்டேன். 
பிறகு ஒருமுறை குஜராத்தில் ஒரு கல்யாணத்திற்கு குடும்பத்துடன் செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. அப்போது நான் மோடிஜிக்கு போன் செய்து, நாங்கள் மூன்று நாட்கள் குஜராத்தில் இருப்போம். ஏதாவது ஒருநாள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள் என்று கேட்டேன். அவர், சரி நாளை மதியம் மூன்று மணிக்கு வாருங்கள் என்று கூறினார். அடுத்த நாள் காலை எனக்கு பத்து மணிக்கு ஃப்ளைட். ஒரு மணிக்கு குஜராத் போய்விடலாம். மூன்று மணிக்கு அவரை சந்தித்து விடலாம் என்று இருந்தேன். ஆனால் மறுநாள், ஃப்ளைட் மூன்று மணிக்குத்தான் கிளம்புவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் பனிரெண்டு மணிக்கு மேல் தான் அறிவித்தார்கள். நான், உடனே அவருக்கு SMS அனுப்பினேன். அதில தமிழ்நாட்டில் சீதோஷ்ண நிலை சரியில்லாததால் ஃப்ளைட் இங்கிருந்து கிளம்புவதில் தாமதமாகிறது. நீங்கள் கொடுத்த நேரத்தில் உங்களை சந்திக்க முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது. பெரிய மனது செய்து வேறு அப்பாயிண்ட்மெண்ட் தர முடியுமா? என்று கேட்டிருந்தேன். அடுத்த நாள் வாருங்கள் என்று எழுதி நேரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வளவு பெரிய மனிதர் பாருங்கள். இன்னொருத்தராக இருந்தால், ‘நான் அவகாசம் கொடுத்தும் உன்னால் வர முடியவில்லையா? என்று கோபித்துக் கொண்டு பதில் கூட சொல்ல மாட்டார்கள். அவர் பிறரை வணங்கும் போது கூட உடலை வளைத்து, சிரம் தாழ்த்தி தான் வணங்குவார். அவ்வளவு பண்பானவர், பணிவானவர், அன்புள்ளம் கொண்டவர். நாட்டு நலனில் அக்கறை கொண்டவர். அவரை பிரதமராக அடைந்ததில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.’ என்று முடித்தார்.
கலைவாணர் விருது, கலைமாமணி, வசூல் சக்கரவர்த்தி போன்ற பல விருதுகளை வாங்கியிருக்கும் எஸ்.வி.சேகரிடம் மணல் கயிறு 2 வெற்றி பெற வாழ்த்திவிட்டு விடை பெற்றோம்.
- மாலதி சந்திரசேகரன்

எல்லா செலவுகளுக்கும் ரூ.4,500 போதுமா? விரலில் மை வைப்பதில் எழும் சந்தேகங்களும், கேள்விகளும்!

By DIN  |   Published on : 16th November 2016 10:47 AM  
சென்னை: வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி வேறு நோட்டுகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.
* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்?
* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா? அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்?
* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா?
* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்?
* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது?
*ஒரு முறை விரலில் மை வைக்கப்பட்டவர் மறுமுறை எப்போது வந்து வங்கியில் பணம் எடுக்கலாம் என்பதை நிர்ணயித்துள்ளார்களா?
* குடும்பத்தில் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் கையில் இருக்கும் பணத்தை வங்கிக்குச் சென்று மாற்றி வருவார் எனில், அவரது விரலில் மை வைக்கும் பட்சத்தில், குடும்பத்தில் உள்ள அனைவரும், கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து வங்கிக்குச் சென்று வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுமா?
*கர்ப்பிணியின் மருத்துவ செலவுக்காக கையில் வைத்திருக்கும் பணத்தை அவரது கணவர் மாற்றி வருவதற்கு இந்த மையால் தடை ஏற்படுமாயின், கர்ப்பிணியே நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டிய பரிதாப நிலை உண்டாகுமா?
* இரண்டு வயதான தம்பதிகள் இருக்கும் வீடுகளில் ஒருவர் முடியாமல் இருந்தால், மற்றொருவர் மட்டுமே வங்கிக்குச் சென்று பணத்தை மாற்றி வருவார். அப்படி இருக்கும்போது, அவருக்கு மை வைத்தால், முடியாமல் இருக்கும் மற்றொரு முதியவரை கட்டிலோடு வங்கிக்கு தூக்கிச் செல்ல வேண்டுமா?
* வாடகை, மளிகை, பள்ளிக் கட்டணம் என அனைத்தையும், இந்த வங்கிகள் ஒரே ஒரு முறை கொடுக்கும் 4,500 ரூபாயில் செலுத்தி விட முடியுமா? அல்லது வாடகை, ரயில், பேருந்து கட்டணம், மளிகை என எல்லா வற்றையும் மத்திய அரசு இந்த மாதத்துக்கு மட்டும் தள்ளுபடி செய்து விடுமா?
இந்த கேள்விகளுக்கு மை வைக்கும் முடிவை அறிவித்தவர்களே பதிலையும் சொல்ல வேண்டும்.

பண அட்டை மோசடிகள்

By எஸ். ராமன்  |   Published on : 16th November 2016 12:39 AM 
கடந்த அக்டோபர் மூன்றாவது வாரம் வெளியான திடுக்கிடும் பத்திரிகை செய்தி, வங்கி வாடிக்கையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தது எனலாம். அந்த செய்தியை கேட்டு, பல வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்குகளை சரிபார்க்க வங்கி கிளைகளுக்கு படை எடுத்தனர்.
32 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். அட்டைகளின் (Debit cards)   ரகசிய குறியீட்டு தகவல்கள் திருடப்பட்டிருப்பதற்கான(hacking of confidential data) சாத்திய கூறுகள் உள்ளன என்ற பீதி அளிக்கக் கூடிய செய்திதான் அது.
அம்மாதிரி திருட்டு மூலம், 19 வங்கிகளை சேர்ந்த 641 வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து, ரூ.1.3 கோடி அளவு நிதி திருட்டு நடந்திருக்கிறது என்று பின்னூட்டு செய்திகள் சம்பவத்தை ஊர்ஜிதம் செய்தன. இந்திய வங்கிதுறையின் அட்டை மோசடி சரித்திரத்தில் இது ஒரு மிகப்பெரிய அளவிலான நிகழ்வாக கருத்தப்படுகிறது.
அட்டையின் எண், துவக்க மற்றும் காலாவதி தேதி, ரகசிய குறியீட்டு எண் ஆகிய திருடப்பட்ட தகவல்களை பயன்படுத்தி, நகல் அட்டைகள்(Cloned cards)   உருவாக்கப்பட்டு, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில், நிலுவையில் இருக்கும் பணத்தை திருட அவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் தங்கள் வங்கி கணக்கை தினமும் ஆராய்ந்து, விழிப்போடு செயல்பட்ட சிலரின் புகாரால் இந்திய வங்கிகள் விழித்துக்கொண்டு, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சந்தேகத்துக்குள்ளான பல லட்சம் அட்டைகள் வங்கிகளால் உடனடியாக முடக்கப்பட்டன. ஏ.டி.எம். ரகசிய எண்களை உடனடியாக மாற்றும்படி வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். முடக்கப்பட்ட அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகள், எந்தவித கட்டணமும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
ஸ்டேட் பாங்க், பாங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பாங்க், ஆந்திரா பாங்க் உள்பட பல அரசு வங்கிகள், எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ், யெஸ் பாங்க் போன்ற தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருடப்பட்ட தொலைபேசி மற்றும் இ-மெயில் தொடர்பு தகவல்களை பயன்படுத்தி, வங்கிகள் கேட்பதுபோல், பணத்தை எடுப்பதற்கு தேவைப்படும் மேலும் சில நுண்ணிய விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கேட்டு, மோசடிக் கும்பல் வேகமாக செயல்பட்டிருக்கிறது. வங்கிகள் என்று ஏமாந்து, மோசடிக்காரர்களிடம் தங்களை பற்றிய முழு விவரங்களை அளித்தவர்கள், இந்த சம்பவத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
திருட்டு, இயற்கை சீற்றங்கள் ஆகிய எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து தாங்கள் சேமித்த பணத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் வங்கி கணக்குகளை நாடியவர்களுக்கு, இந்நிகழ்வு கேள்வி குறியாகிவிட்டது.
இந்திய வங்கிகளின் ஏ.டி.எம். இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் தளத்தின் (Hitachi Payment Services Platform)  பாதுகாப்பு அரண்களை  (Anti virus system),  சில தீய மென்பொருள்கள்(Malware)   மூலம் உடைத்து, ஊடுருவுவதில், மோசடிக்காரர்கள் இம்முறை வெற்றி கண்டிருக்கின்றனர் என்பதை இதுவரை வெளியான தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.
அரண்மனையை (ATM ser vers)  சுற்றி எதிரிகள் நுழைய முடியாத வகையில், பெரும் முதலைகள் (Anti virus program) அடங்கிய அகழிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், முதலைகளை விட கொடிய விஷ ஜந்துக்களை (Malware)  பயன்படுத்தி, அவைகளை செயல் இழக்க செய்து, அரண்மனைக்குள் எதிரிகள் நுழைவது போன்ற நிகழ்வுதான் இது.
ஏற்கெனவே நிலுவைத் தொகை இருக்கக்கூடிய வங்கி கணக்குகள் சார்ந்த அட்டைகள் மட்டும்தான் (Debit cards)  இந்த மோசடி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. கடன் சார்ந்த அட்டைகளுக்கு (Credit cards) எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் தகவல் அறிக்கையின்படி, ஸ்ஹிம்மர் ஸ்டிக்கர் போன்ற மென்பொருள் வைரஸ், இந்த நிகழ்வின் வில்லனாக, மோசடிக் கும்பலால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலின் பின்புலங்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் ஆகியவைகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, இந்திய பணப்பட்டுவாடா வாரியத்தால் (Payment council of India)  நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய வங்கி வாடிக்கையாளர்களிடையே இரு வகையான அட்டைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. பணப்பரிமாற்ற நிகழ்வுகளில், மின்காந்த தகடுகள் (Magnetic stripes)  பொருத்தப்பட்ட அட்டைகளில் அடங்கியிருக்கும் தகவல் பரிமாற்றத்தின்போது, அத்தகவல்களை எளிதாக கடத்திவிட முடியும்.
நுண் தகடுகள் (Micro chips) பதிக்கப்பட்ட மற்றொரு வகையான அட்டைகளில், தகவல்கள் சங்கேத முறையில் பரிமாறப்படுவதால், இம்மாதிரியான அட்டைகளிலிருந்து தகவல் திருட்டு அவ்வளவு எளிதல்ல.EMV (Europay, Master, Visa)  என்று சுருக்கமாக அழைக்கப்படும் அட்டைகளில் இத்தகைய பாதுகாப்பு வசதி அடங்கியிருக்கிறது.
வங்கி அட்டை தகவல் திருட்டு குற்றங்கள், நம் நாட்டுக்கு மட்டுமான தனிப்பட்ட பிரச்னை இல்லை. சமீபத்தில், உலகின் பல பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஒரு மாதிரி சர்வேயின்படி (Sample survey)  டெபிட், கிரெடிட் மற்றும் டிராவல் அட்டை வைத்திருப்பவர்களில் 30 சதவீதத்தினர், கடந்த ஐந்தாண்டுகளில் ஏதாவது ஒரு தருணத்தில் அட்டையின் தகவல் திருட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் 17 சதவீதத்தினர், டெபிட் அட்டை தகவல் திருட்டுக்கு பலியானவர்கள் ஆவர்.
மூன்றாவது நபரால் விளையும் அட்டையின் தகவல் திருட்டால், நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகைகள் வழங்கும் செலவினங்களை தவிர, தங்கள் வாடிக்கையாளர்களையும் வேகமாக இழக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட கணக்குகளை மேற்கொண்டு தொடர வாடிக்கையாளர்கள் உணர்வுபூர்வமாக பயப்படுவதே அதற்கு முக்கிய காரணமாகும். இந்த பய உணர்வுக்கு Back-of-wallet syndrome என்று பெயர். ஒரு முறை பாதிக்கப்பட்டவர்கள், இம்மாதிரி நவீன சாதனங்களின் மீது அவர்கள் இழந்த நம்பிக்கையை மீட்க நீண்ட காலம் பிடிக்கும்.
2015-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 2016 நிறுவனங்களில் இம்மாதிரியான தகவல் திருட்டுகள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்ஸிகோ (56%), பிரேஸில் (49%), அமெரிக்கா (47%) ஆகியவை முன்னணியில் இருக்கின்றன.
வாடிக்கையாளர்களின் பணத்தை நிர்வகிக்கும் நிதி நிறுவனங்கள் மட்டும் இம்மாதிரி மோசடி நிகழ்வுகளுக்கு முழுக் காரணம் அல்ல. வாடிக்கையாளர்களின் தவறான பழக்க வழக்கங்களும் மோசடிகளுக்கு வித்திடுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2014-இல், அமெரிக்க பல்பொருள் அங்காடியான டார்கெட்டில் (Target) நிகழ்ந்த தகவல் திருட்டு பெரிய அளவில் பேசப்பட்டது. பில் தொகையை, தங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்திய 40 மில்லியன் வாடிக்கையாளர்களின் அட்டை தகவல்கள், மோசடிக்காரர்களால் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களிலிருந்து திருடப்பட்டன.
வாடிக்கையாளர்கள் அட்டையை பயன்படுத்தும்போதே மோசடிக்காரர்கள் அட்டை தேய்க்கப்படும் இயந்திரங்களில் முன்கூட்டியே பதித்து உலவ விட்டிருந்த தீய மென்பொருள்கள், வாடிக்கையாளர்களின் அட்டை தகவல்களை ரஷியாவில் இயங்கிக் கொண்டிருந்த அவர்களின் கம்ப்யூட்டருக்கு மாற்றிக்கொண்டிருந்தன.
இம்மாதிரி மோசடிகளை தடுப்பதற்காக டார்கெட் நிறுவனம், நிகழ்வுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தீய மென்பொருள்களை கண்டறிந்து தடுக்கும் மென்பொருளை தங்கள் கம்ப்யூட்டர்களில் பதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தின் காரணங்களுக்கான ஆய்வுகளின்போது, டார்கெட் நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் விசாரிக்கப்பட்டனர்.
வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஒப்படைத்த பணத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வங்கிகளை சார்ந்ததாகும். அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செயல் முறைகளில் போதிய அரண்களை அமைத்து, அவைகளின் செயல்பாடுகளை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்துவதில் வங்கிகள் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
தற்போது பல பண பரிவர்த்தனை செயல்பாடுகள், வங்கிகளால் வெளி நிறுவனங்களுக்கு "அவுட் சோர்ஸ்' செய்யப்படுகின்றன. அம்மாதிரி செயல்பாடுகளின் பாதுகாப்பு பற்றிய முழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குறைபாடுகள் களையப்பட வேண்டும்.
அட்டை மோசடிகளை தடுக்கும் விஷயத்தில், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவும் பின் நம்பர்களை வங்கிகளின் வழிமுறைகளின்படி அடிக்கடி மாற்றி அவைகளுக்கு உரிய ரகசியத்தை பாதுகாக்க வேண்டும்.
பண பரிவர்த்தனைகளை தெரியப்படுத்தும் வங்கி குறுந்தகவல் வசதியை கேட்டுப் பெற்று, பெறப்படும் குறுஞ்செய்திகளை கவனமாக ஆராய்ந்து, தவறான பரிவர்த்தனைகளை வங்கிக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். பணம் எடுக்கும்போது அறிமுகமாகாத அந்நியர்களின் உதவி பெறுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
சமீபத்திய நிகழ்வுகளின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மோசடிகளை தடுக்கும் சாதனங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியிருக்கும் செய்தி வரவேற்கத்தக்கதாகும்.
இம்மாதிரி சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வங்கிகளின் கூட்டமைப்பும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிந்தித்து செயல்படுத்தினால்தான் நவீன பண பட்டுவாடா சாதனங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை கூடும்.
டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனைகள், கருப்பு பண புழக்கத்தை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வல்லமை படைத்தவை. அதற்குரிய அடித்தளம், அம்மாதிரி பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடையே பரப்புவதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...