Thursday, November 17, 2016

சுவிஸ் வங்கி பதுக்கல் முதல் ஏடிஎம் காத்திருப்பு வரை: மாநிலங்களவையில் மோடி அரசை கிழித்த எதிர்க்கட்சிகள் இணையதள செய்திப் பிரிவு


மாநிலங்களவை விவாதம்: மேலே - ஆனந்த் ஷர்மா, பிரமோத் திவாரி | கீழே - மாயாவதி, யெச்சூரி
ரூபாய் நோட்டு உத்தி மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) கடுமையாக விமர்சித்தன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, "ஒரே இரவில் 86% பணத்தை புழக்கத்திலிருந்து அரசு தடை செய்துள்ளது. அப்படியெனில் அரசு அந்த பணம் அத்தனையும் கள்ளப்பணம் என நினைத்ததா? அப்படி என்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு வெளியிட்ட அறிக்கையில் புழக்கத்தில் உள்ள பணத்தில் 0.02% மட்டுமே கள்ளப்பணம் என ஏன் சொன்னது.

மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்கள் எல்லோருமே மருத்துவம் படிக்காமலே மருத்துவர்கள் போல் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாகிவிட்டனர். காரணம் அவர்கள் அவ்வப்போது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.

சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையை எடுத்துவிட்டு சுவிஸ் வங்கியில் பணத்தை குவித்துவைத்திருப்பவர்களை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது? வங்கிகளில் பெருமளவில் பணத்தை கடனாக வாங்கிவிட்டு அவற்றை திருப்பிச் செலுத்தாவதற்கள் பெயரை இந்த அரசு வெளியிடுமா?

நோட்டு நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்னரே அரசு முன்னேற்படுகளை செய்திருந்தால் இப்போது பணப் பற்றாக்குறை வந்திருக்காது. சொந்த நாட்டில் மக்கள் பணத்துக்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்க பிரதமரோ ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்து மக்களை அவர் அவமானப்படுத்திவிட்டார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாளைக்கு ஐந்து முறை உடையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

நோட்டு நடவடிக்கை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால், பாரத ஸ்டேட் வங்கிக்கு கடந்த மார்ச் மாதமே நோட்டு நடவடிக்கை குறித்து தெரியும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு தனக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே நோட்டு நடவடிக்கை குறித்த தகவலை கசியவிட்டிருக்கிறது" என்றார்.

மோடியை ஹிட்லர், முசோலினியுடன் ஒப்பிட்ட பிரமோத் திவாரி

மாநிலங்களவை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி, பிரதமர் மோடியை ஹிட்லர், முசோலினி, மற்றும் கடாஃபி ஆகிய சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டார்.

அவர் பேசும்போது, "சீதாராம் யெச்சூரி கோரியது போல் ரூ.500, 1000 நடவடிக்கை மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசை ஏதோ சிட்பண்ட் நிறுவனம் போல் மாற்றிவிட்டீர்கள்.

சில தொடர் நோட்டுகளை மட்டுமே புழக்கத்திலிருந்து விடுவிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் 86% நோட்டுகளை முடித்துள்ளீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? அயல்நாடுகளுக்கு அனுப்பும் தொகையின் உச்ச வரம்பை அதிகரித்ததன் மூலம் 10 மாதங்களாக இதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்.

உங்களுக்கு ‘பிடித்தமான’ மாநிலங்களில் நிறைய பணம் டெபாசிட் ஆகியுள்ளன. பிரதமர் 50 நாட்கள் கேட்கிறார், ஆனால் 50 நாட்களுக்குப் பிறகு ராபி, கரீப் விளைச்சலை வாங்க ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள். நம் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக்கி விட்டீர்கள். உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.

நம் பிரதமரை இந்த விஷயத்தில் ஹிட்லர், முசோலினி, கடாஃபியுடன் ஒப்பிடலாம்," என்றார்

இவ்வாறு இவர் பேசியவுடன் எதிர்ப்பு கிளம்பியது. ஹிட்லருடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று ரவிசங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் பிரமோத் திவாரி தனது ஒப்பீட்டை தொடர்ந்தார். கடைசியில் "ஒரே வழிதான் உள்ளது, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கவும், நீங்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்க இதனைச் செய்யவில்லை. உங்கள் நண்பர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை" என்று முடித்தார் தன் பேச்சை.

அதிமுக எதிர்ப்பு:

ரூபாய் நோட்டு நடவடிக்கையால் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் சேமிப்பும் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார். அதிமுக எப்போதுமே கறுப்புப்பணத்தை எதிர்க்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் எங்கள் கட்சி எப்போதுமே வரவேற்றிருக்கிறது. கறுப்புப் பணத்தை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கிறார்.

ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறாக புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்ததால் கிராமப்புறங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தியிருக்க வேண்டும் என அவர் கூறினார். | விரிவாக வாசிக்க > மத்திய அரசின் ரூபாய் நோட்டு உத்திக்கு தமிழக அரசு எதிர்ப்பு

மக்களை ஏன் வதைக்கிறீர்கள்?- சீதாராம் யெச்சூரி

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பொதுமக்களை ஏன் வதைக்கிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறும்போது, "தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் இலாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக தனது கட்சி நிதியை பிரதமர் அறிவிப்பதற்கு முன்னதாகவே வங்கியில் செலுத்தியது எப்படி? இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாற்று ஏற்பாடுகள் முழுமை பெற 50 நாட்கள் ஆகும் என பிரதமரே சொல்லியிருக்கும் நிலையில் அதுவரை மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளையே பயன்படுத்தலாம் என அறிவியுங்கள்" என்றார்.

மாயாவதி சரமாரி தாக்கு:

மாநிலங்களவை விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசும்போது, மத்திய அரசின் ரூ.500, 1000 நோட்டுகள் மீதான நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பணக்காரர்களை பாதுகாக்க மத்திய அரசு உதவி செய்ததாக குற்றம்சாட்டி அவர் மேலும் பேசும்போது, "நிதி நெருக்கடி நிலை பிரகடனம் போல் செய்துவிட்டனர். இந்தியாவே முடக்கப்பட்டது போல் உள்ளது. ஜப்பானிலிருந்து வந்த பிரதமர் காஸியாபூர் கூட்டத்தில் பேசும்போது தான் ஊழலுக்கு எதிரானவர் என்றார். ஆனால் அவர் பேசிய கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடே ஊழல் வழிமுறைகளைக் கையாண்டு செய்யப்பட்டதுதான்.

தனது கட்சியினர், சாதகமானோர் மற்றும் பணக்காரர்கள் பெரிய நோட்டுகளுக்கான 'தகுந்த' ஏற்பாடுகளை செய்யும் வரை காத்திருந்து 10 மாதங்கள் எடுத்துக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பகுஜன் முன்னதாக கட்சியாகும் முன் இயக்கமாகவே வளர்ந்தது, சாதாரண மக்களிடமிருந்து நிதி திரட்டியே கட்சியை வளர்த்தோம், கோடீஸ்வர நபர்களிடமிருந்து நிதி திரட்டவில்லை.

இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அலட்சியம் காட்டிய அரசு, பணக்காரர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க உதவி புரிந்துள்ளது. தற்போது உங்கள் பலவீனங்களை மறைக்க மற்ற கட்சியினரை குற்றம் சொல்லத் தொடங்கியுள்ளீர்கள்.

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து இத்தகைய நடவடிக்கையை எடுக்கக் காரணம் உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநில தேர்தல்களே. இந்த மாநில மக்கள் நிச்சயம் உங்களுக்கு தண்டனை அளிப்பார்கள். மக்கள் கையில் மை-யை பூசியதற்கான தகுந்த பலனை எதிர்பார்க்கலாம்' என்றார் மாயாவதி.

கால்கள் செயலிழந்தாலும் மனம் தளராத மருத்துவர்: சக்கர நாற்காலியில் சுழலும் தன்னம்பிக்கை

மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலியில் வந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆறுமுகம்.
என்.சுவாமிநாதன்

வைரஸ் காய்ச்சலால் தனது 2 கால்களையும் இழந்த மருத்துவர், நோயாளிகளின் நம்பிக்கையாலும் குடும்பத்தினரின் அரவணைப்பாலும் மீண்டு வந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிகிச்சை அளித்து வருகிறார்.


கன்னியாகுமரி மாவட்டம், தளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆறுமுகம்(63), மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் மருத்துவர் இவர். தளக்குளம் பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நடக்க முடியாத இவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், வார்டுகளுக்கும் சக்கர நாற்காலியிலேயே சென்று சிகிச்சை அளிக்கிறார். ஏழைகளுக்கு அவர்களது வருமானத்தின் அடிப்படையில் மிக சொற்ப கட்டணமே வசூலிக்கிறார்.

இதுகுறித்து மருத்துவர் ஆறுமுகம் கூறியதாவது:

எனது தந்தை பழனியாண்டி பெரிய விவசாயி. தான, தர்மம் அதிகமாக செய்வார். இரணியல் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்தான் கல்வி பயின்றேன். அப்போதே மருத்துவம் படிக்கும் ஆசை உதயமானது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். தொடர்ந்து 1979-ல் எம்டி பொது மருத்துவம் முடித்தேன். என் தந்தையின் விருப்பப்படி, கிராமப்புறத்தில் சேவை செய்ய விரும்பி, நெய்யூரில் ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். 1985-ம் ஆண்டு வேலூர் சிஎம்சியில் இதயவியலும், 1987-ல் மதுரை மருத்துவக் கல்லூரியில் மூளை நரம்பியலும் படித்தேன். குமரி மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் மருத்துவர் நான்தான். ஆனாலும், தொடர்ந்து நெய்யூரிலேயே பணி செய்தேன்.

கடந்த 1992-ம் ஆண்டு எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. சிகிச்சைக்குப் பிறகு, எனது முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால்கள் உட்பட இடுப்புக்குக் கீழ் பகுதி செயல் இழந்துவிட்டது. வீட்டில் படுத்தே இருக்க வேண்டிய சூழல். அப்போதும் சிகிச்சைக்காக நோயாளிகள் தேடி வர ஆரம்பித்தனர். சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் நான் இருப்பதை, என் குடும்பத்தினர் சொன்னபோதும், ஆலோசனை மட்டுமாவது கேட்டுச் செல்கிறோம் என நோயாளிகள் தேடி வந்தனர். மக்கள் வைத்திருந்த அந்த நம்பிக்கையே என்னை ஆபரேட்டிவ் பேட்டரி வீல்சேருக்கு உயர்த்தியது.

தளக்குளம் கிராமத்தில் 1993-ல் சொந்த மருத்துவமனை கட்டி, சிகிச்சை அளித்து வருகிறேன். நர்ஸிங் கல்லூரி, நர்ஸிங் பள்ளி ஆகியவை அமைத்து ஏழை மாணவர்களுக்கு நன்கொடையே இல்லாமல் என்னால் முடிந்த கல்விச் சேவையையும் வழங்கி வருகிறேன் என்றார்.

மாநில அரசின் சிறந்த சேவைக்கான விருது, ஹெலன் கெல்லர் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ள மருத்துவர் ஆறுமுகத்தை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் தேசிய அறக்கட்டளை உறுப்பினராக மத்திய அரசு சமீபத்தில் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஏ.டி.எம் களில் என்ன நடக்கின்றன? ஸ்பாட் விசிட்

சென்னை

தற்போதைய நிலையில் சென்னை போன்ற நகரங்களில் நாலு பேர் எங்காவது வரிசையாக நின்று கொண்டு இருந்தாலே ஏ டி எம் வாசலில்தான் நிற்கிறார்கள் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து எங்கு பார்த்தாலும் பணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

அரசின் புதிய அறிவிப்புகள், தீயாக பரவும் வதந்திகள், அன்றாட வேலைகளோடு வங்கிக்கு சென்று தங்கள் கையிருப்பில் உள்ள பழைய தாள்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், வங்கி கணக்கில் பணம் நிறைய இருக்க சாப்பாட்டுக்கும் போக்குவரத்து செலவுக்கும் கூட வழி இல்லாமல் தவிக்கும் அவலம் என பலதரப்பு மக்களையும் மனதளவில் கடுமையாக பாதித்திருக்கிறது புதிய ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் வாசலில் 7 செக்கியூரிட்டிகள் நின்று கொண்டு இருக்கிறார்கள். வங்கிக்குள் நுழைய முற்படும் ஒவ்வொருவரையும் நிறுத்தி அந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா என விசாரித்து விட்டு அதில் பணம் டெபாசிட் செய்ய வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

சில இடங்களில் வங்கி ஊழியர்கள் ஏ டி எம்களில் பணத்தை நிரப்பிவிட்டு வெளியேறிய பிறகு, அந்த ஏடிஎம் காவலர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், எண் கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கும் முதலில் அழைத்து "பணம் போடப்பட்டிருக்கிறது, சீக்கிரமா வந்து எடுத்துக்கங்க" என தகவல் சொல்வதோடு அதற்கான டிப்ஸையும் வாங்கிக் கொள்கிறார்களாம். ஏ டி எம்மில் பணம் இருந்தாலுமே இல்லை என சொல்லும் அவலமும் நிகழ்கிறது.

இன்னொரு பக்கம், ஏ.டி.எம் வரிசையில் நின்றவர்களைத் தாண்டி பணம் நிரப்புபவருடன் வந்த கன்மேனிடம் பேச்சு கொடுத்தோம். ராஜஸ்தானைச் சேர்ந்த அவர் இங்கு செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். ‘தினம்தினம் கட்டுக்கட்டா பணத்துக்கு காவல் நிக்கறேன். கையில் பத்து ரூபாய் கூட இல்லைங்க’ என்று சோகமாகப் புலம்பிவிட்டுச் சென்றார்.

அரசுப் பேருந்துகளிலோ நீங்கள் 20 ரூபாய், 50 ரூபாய் கொடுத்தாலும், 10 ரூபாய் நோட்டை சேஞ்சாக கொடுப்பதில்லை. 5 ரூபாய் காயின்களைப் பொறுக்கிக் கொடுக்கின்றார்கள் கண்டக்டர்கள். கைகளில் பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் கூட அதைக் கொடுப்பதில்லை என்கிறார் பயணி ஒருவர்.

இன்னொரு பக்கம், வங்கிகளில் பணம் மாற்ற நிற்கும் நீண்ட வரிசையிலேயே வந்து ‘உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா?’ என்று கூச்சமே படாமல் கேள்வி எழுப்புகின்றனர் சில தனியார் வங்கி எக்ஸிக்யூடிவ்கள். சில வங்கிகளிலோ பணம் மாற்றுபவர்களிடம் அங்கும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லி மூளைச்சலவையும் நடைபெறுகிறது.



எத்திராஜ் கல்லூரி அருகே இருக்கும் இந்தியன் வங்கி கிளை ஒன்றின் வாசலில் வரிசையில் நின்றவாறு..,

"இந்தப் புது ரூபாய் நோட்டுகள் பத்தின அறிவிப்பு வெளியானதலிருந்து பேங்குக்கும், ஏ டி எம்களுக்கும் போய் வருவதே பெரிய வேலையா இருக்கு. அதிலும் முதல்ல பணம் இருக்கும் ஏ டி எம் மெஷின் எங்க இருக்குனு கண்டுபிடிக்கணும். அங்க ஒன்னு வேலை செய்யுது சீக்கிரம் போங்கன்னு யாராச்சும் சொல்லிட்டு போவாங்க. வேகமா போய் பார்த்தா பணம் தீர்ந்திருக்கும். அப்படியே பணம் இருந்தாலும் ஏற்கெனவே வரிசையில நிர்க்குறவங்களோட கடைசியா நின்னு பணம் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு
போறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது சார்" என வேதனையுடன் சொல்கிறார் முதியவர் ஒருவர்.

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் ஏ டி எம் மெஷினில் இரண்டு லட்சம் ரூபாய் நிரப்பப்படுகிறது என்றால், வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் 4, 5 கார்டுகளை எடுத்துச் சென்று பணம் எடுத்துவிடுகிறார்கள். ரொம்ப சிக்கலான நிலையில் அவசரத்துக்கு பணம் எடுக்க வந்தவர்கள் வெகுநேரம் வரிசையில் நின்றுவிட்டு பணத்தை எடுக்க முடியாமல் விரக்தியோடு திரும்பிச் செல்லும் நிலையும் இருக்கிறது.

வங்கி ஊழியர் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் "நீங்க ஏற்கெனவே 4000 ரூபாயை எடுத்து விட்டீர்கள், இனி எடுக்க இயலாது" எனச் சொல்லியிருக்கிறார். உடனே அந்த இளைஞர் தன் கையிலிருந்த படிவங்களை கிழித்து எறிந்து, கோவத்தில் கத்திவிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். அதே வங்கியில் ஒரு பெண் புதியதாக வெளியிடபட்டுள்ள 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து "100 ரூபாய் நோட்டுகள் தான் வேண்டும் " என அழுத சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. இப்படி ஒரு குழப்பமான
மனநிலையை பலரிடமும் பார்க்க முடிகிறது. வெளியில் இயல்பாக பேசி சிரித்துக்கொண்டாலும் எல்லோருக்குள்ளுமே சிறிய பதற்றம் நிறைந்திருக்கிறது.

கறுப்புப் பண ஒழிப்பு , பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதையெல்லாம் தாண்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத உறுதியான சேவைகளும் ஒரு நாட்டிற்கு தேவை தானே...!?

நகைகள் 100கோடி...ஹெலிகாப்டருக்கு 20கோடி! காஸ்ட்லி கல்யாணத்தின் ஆச்சர்ய தகவல்கள் - படங்கள்


முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழில் அதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் இன்று பெங்களூருவில் இன்று பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. மகளின் திருமணத்தை நடத்த ரூ.200 கோடிக்கு மேல் ஜனார்த்தன ரெட்டி செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. ஆனால், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999-ம் ஆண்டுதான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்கள். தற்போதையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வாராஜுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ரெட்டி சகோதரர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது, சுரங்கத் தொழிலுக்கான லைசென்ஸ் கிடைத்தது. சுரங்கத் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஜனார்த்தனரெட்டிக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்ந்திருந்தது. கர்நாடகத்தில் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார் ஜனார்த்தன ரெட்டி. தொடர்ந்து 2009-ம் ஆண்டு பெல்லாரி சுரங்க ஊழலில் சிக்கினார். இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்துதான் மகள் பராமனியின் திருமணத்தை நடத்துகிறார்.



மணமகன் ராஜிவ் ரெட்டிக்கு 25 வயதாகிறது. பிபிஎம் பட்டதாரி. மணமகள் பிரமானிக்கு 21 வயதாகிறது. ஹைதராபத் தொழிலதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன்தான் ராஜிவ். தந்தை நடத்தும் நிறுவனத்தின் வெளிநாட்டு தொடர்புகளை கையாள்கிறார்.

இந்த திருமணத்துக்காக எத்தனை கோடி செலவு செய்யப்பட்டது. எப்படி செலவிடப்பட்டுள்ளது என்று பார்க்கலாம். எல்ஈடி திரையுடன் கூடிய திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டது.அழைப்பிதழை திறந்தவுடன் 'பிரமானி வெட்ஸ் ராஜிவ்' என்ற பாடல் திரையில் ஓடும். ரெட்டி குடும்பத்தினரும் திரையில் தெரிவார்கள். இதற்கு ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

திருமணத்துக்காக குடும்பத்தினர் அனைவருக்கும் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் ரூ.100 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் கலை நிகழ்ச்சிக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் வருவதற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தவுள்ளது. இதற்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்துக்காக ரூ 20 கோடி செலவிடப்பட்டுள்ளது. திருமணத்துக்கான செட் அமைப்பது போன்ற பிற விஷயங்களுக்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.

இந்த திருமணத்துக்காக தனது 10 சொத்துக்களை அடமானம் வைத்து ஜனார்த்தன ரெட்டி பணத்தை திரட்டியுள்ளார். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக மாநில பெரும் அரசியல் புள்ளிகள் நடிகர்- நடிகைகள் தொழிலதிபர்கள் முதல் நண்பர்கள், உறவினர்கள் என 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவுள்ளனர்.



இதனால் திருமணம் நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 3000 தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வி.வி.ஐ.பிக்கள் திருமணத்தில் பங்கேற்பதால் 300 போலீஸ் அதிகாரிகளும் திருமணம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். திருமணத்தை நடத்தி வைக்க திருப்பதி கோயிலில் இருந்து 8 புரோகிதர்கள் வந்துள்ளனர்.

திருமணம் நடைபெறும் பெங்களூரு அரண்மனை மைதானம் பெல்லாரி நகரம் போலவே மாற்றப்பட்டுள்ளது. பெல்லாரி நகரில் உள்ள காவல் பஜார், தனாப்பா பீடி தெரு, ஜனார்த்தன ரெட்டி படித்த பள்ளி ஆகியவை அரங்குக்குள் எழுப்பப்பட்டுள்ளன. இரு பிரமாண்டமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினர் இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பெங்களூருவில் 1,500 நட்சத்திர ஹோட்டல் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல 2000 டாக்ஸிகள் விருந்தினர்களுக்காக ஓடுகின்றன. 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பறந்து பறந்து விருந்தினர்களை அழைத்து வரப் போகின்றன. குதிரைகள், யானைகள் போன்றவையும் விருந்தினர்களை வரவேற்க அரண்மனை முகப்பில் நிறுத்தப்படவுள்ளன.

- எம்.குமரேசன்

2000 ரூபாய் நோட்டு சாயம் போனால்தான் ஒரிஜினலா? ஆர்.பி.ஐ. அளித்த விளக்கம்



சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டு ஒரிஜினல் என்ற தகவல், பொது மக்களுக்கு பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.ஐ. தரப்பில் இந்த கேள்வியை கேட்டதற்கும் மழுப்பலான பதிலையே அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கறுப்புப் பணத்தை கமிஷன் பெற்றுக் கொண்டு சிலர் மாற்றுவதாக தகவல் வந்தது. அதை தடுக்க பணத்தை மாற்ற வருபவர்களின் வலது கையில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் ஒரு நபர் மீண்டும், மீண்டும் அடுத்தடுத்த வங்கிகளில் ஒரே நாளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். இந்த மை அழியாது. வங்கி, தபால் நிலையங்களுக்கு ஆர்.பி.ஐ. ஆலோசனைபடி மை சப்ளை செய்யப்படும். முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும். அனைத்து வங்கி கிளைகளுக்கும் 5 மி.லி கொண்ட மை பாட்டில் கொடுக்கப்படும். அதில் உள்ள மூடியில் மை வைப்பதற்கான பிரஸ் இருக்கும். மை வைக்கும் பணியில் கேஷியர் அல்லது வங்கி தரப்பில் நியமிக்கப்படும் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இடது கை விரல்களில் மை வைக்கப்பட்டால் அவரால் பணத்தை மாற்ற இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து வங்கிகளுக்கும், தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், புதிய வரவான 2000 ரூபாய் நோட்டுக்களில் சாயம் போனால்தான் ஒரிஜினல் என்ற தகவலும் வெளியானதால் பொது மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த தகவல்கள் உண்மையா என்ற கேள்வியை ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பானா கில்வாலா முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், "பணத்தை மாற்ற மட்டுமே விரலில் மை வைக்கப்படுகிறது. வங்கியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு மை வைப்பதில்லை. முதலில் மெட்ரோ நகரங்களில் மை வைக்கப்படும். அதன்பிறகு நகரங்களிலும் கிராம பகுதிகளிலும் மை வைக்கும் பணி விரிவுப்படுத்தப்படும். ஆர்.பி.ஐ விதியில் சேதமடைந்த ரூபாய் நோட்டுக்களுக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்கள் வழங்க முடியும். தேர்தலுக்கு மட்டுமே இடது விரலில் மை வைக்கப்படும். வங்கிகளில் பணத்தை மாற்ற வலது விரலில் மை வைக்கப்படுகிறது" என்றார்.

சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டுக்கள் ஒரிஜினல், மை வைக்கப்பட்ட நபர் மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா போன்ற கேள்விகளுக்கு அல்பானா கில்வாலா பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "விரலில் மை வைப்பதற்கு முன்பே குறிப்பிட்ட ஒரு வங்கியில் பணத்தை மாற்றியவர், அடுத்து 14 நாட்களுக்குப் பிறகே அந்த வங்கியின் எந்த கிளைகளிலும் பணத்தை மாற்ற முடியும். அதே நடைமுறை மை வைத்தப்பிறகும் தொடரும். இதுதொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் 2000 ரூபாய் நோட்டு சாயம் போனால்தான் ஒரிஜினல் என்பது குறித்தும் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் பவுண்ட் பணம், சாயம் போனால்தான் அது ஒரிஜினல் என்ற தகவலும் உள்ளது. தற்போது மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ஆர்.பி.ஐ தெளிவான பதிலளிக்க வேண்டும். எங்களிடம் பொது மக்கள் கேட்கும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை" என்றனர்.

தபால்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஒரு நபர் 4,500 ரூபாய் வரை பணத்தை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் தபால்துறையில் புதிய ரூபாய் நோட்டு பற்றாக்குறையாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் நலன்கருதி ஒரு நபருக்கு 2,000 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கிறோம். மேலும் 'மை' வைக்கும் நபர், மீண்டும் பணத்தை மாற்ற முடியுமா என்பதற்கும் பதில் இல்லை" என்றனர்.

இதனிடையே, ஏற்கனவே வெளியான 1000 ரூபாய் நோட்டிலும் சாயம் போனதாகவும் தகவல் உள்ளன. தற்போது, புதிய 2000 ரூபாய் நோட்டு வேறு வண்ணத்தில் இருப்பதால் அதிலும் சாயம் போகிறது குறிப்பிடத்தக்கது.

'எங்களுக்கு பணமே வேண்டாமே!' - பணமில்லா தேசங்கள் எப்படி இயங்குகின்றன? #CashlessCountries


இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், பணப் பரிவர்த்தனையே முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட சில நாடுகளும் (cashless countries) இருக்கின்றன. இங்கு பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் இதை அந்தந்த நாட்டு மக்கள் எதிர்த்தாலும் பின்னாளில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்



இத்தகைய நாடுகளில், 80 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதம் வரை மக்கள் பணப் பரிவர்த்தனையை கைவிட்டு, அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குகின்றனர். ஆரம்பகாலத்தில் கொள்ளையர்கள் பேங்குகளிலும், பொருட்களை வாங்க கடைக்குச் சென்ற வாடிக்கையாளர்களிடம் பணத்தைக் கொள்ளையடித்ததால், இத்தகைய திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்பு, மக்களே ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியதால், பணப் பரிவர்த்தனையை ஒழிக்கும் முயற்சியில் அந்த நாடுகள் இறங்கின. இதில், ‘இன்னும் 20 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களையும் கூடிய விரைவில் கேஷ்லெஸ் முறைக்கு (Cashless Method) மாற்றிவிடுவோம்’ என்கின்றன அந்த நாடுகள். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்...

பெல்ஜியம்



இங்கு முற்றிலும் பணப் பரிவர்த்தனை ஒழிக்கப்பட்டு, கேஷ்லெஸ் முறை கையாளப்பட்டு வருகிறது. இதை அதிகளவில் செயல்படுத்திவரும் முதல்நாடாக இது இருக்கிறது. இங்கு 93 சதவிகித வர்த்தகப் பரிமாற்றங்கள் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்டுகளை பயன்படுத்தியே நடக்கின்றன. பெல்ஜியத்தில் 86 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த நாட்டில் 3,000 யூரோக்களுக்கு அதிகமான தொகையை ஒருவர் செலவழிக்க விரும்பினால், அதை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே செய்யவேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் 2,25,000 யூரோக்கள் வரை அரசுக்கு அபராதம் செலுத்த நேரிடும்.

ஃபிரான்ஸ்



பெல்ஜியத்துக்கு அடுத்தபடியாக கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றும் நாடு ஃபிரான்ஸ். பெல்ஜியத்தைப் போன்றே ஃபிரான்ஸிலும் 3,000 யூரோவுக்கு மேல் ஒருவர் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால், அரசு மூலம் அந்த நபருக்கு கடும் தண்டனைகள் கிடைக்கும். அத்துடன், அதிக அபராதமும் செலுத்த நேரிடும். இங்குள்ள மக்களில் 93 சதவிகித மக்கள் பணப் பரிவர்த்தனையைச் செய்வது கிடையாது. இவர்கள் இணைய வழியாகவே தங்களின் பரிவர்த்தனையைச் செய்கிறார்கள். இங்கு, 70 சதவிகிதத்துக்கும் மேலான மக்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கனடா



கேஷ்லெஸ் முறையைப் பயன்படுத்துவதில், தற்போது கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள மொத்த வர்த்தகத்தில் 90 சதவிகிதம், ஆன்லைன் வர்த்தகமாக உள்ளது. கனடாவில், 88 சதவிகிதம் மக்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். வர்த்தகத்தில் பல நடவடிக்கைகளைக் கொண்டுவந்த கனடா அரசு, கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நாணயங்கள் அச்சடிப்பதையும், அவைகளைப் புழக்கத்தில்விடுவதையும் முற்றிலும் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து



சமீபத்தில் ஐரோப்பிய யூனியனை விட்டுத் தனியாகப் பிரிந்துவந்தது இங்கிலாந்து. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்போது அதன் தரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் நம்பியுள்ளது. இந்த நாட்டில் 90 சதவிகித மக்கள் கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்கிலாந்து மக்களில் சுமார் 89 சதவிகிதம் பேர் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இங்கு போக்குவரத்துக்காகப் பெறப்படும் கட்டணங்கள் யாவும் பணமாகப் பெறப்படுவதை இங்கிலாந்து அரசு நிறுத்தியுள்ளது.

சுவீடன்



முதன்முதலாக இந்த கேஷ்லெஸ் முறையைக் கையிலெடுத்தது சுவீடன்தான். காரணம், இங்குள்ள வங்கிகளில் இருந்த பணம், கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்த நாடு கேஷ்லெஸ் முறையைக் கொண்டு வந்தது. இங்கு வங்கிகள், அரசு அலுவலகங்கள், மால்கள், உணவகங்கள் போன்ற அனைத்துமே ஆன்லைன் வர்த்தகம் அல்லது கார்டு முறைகளைத்தான் பின்பற்றி வருகின்றன. இங்குள்ள பொதுப் பேருந்துகளும் கார்டு முறையையே பின்பற்றுகின்றன. இங்கு பெரும்பான்மையான மக்கள் கேஸ்லெஸ் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இங்குள்ள நான்கு வங்கிகளில் ஒரு வங்கி மட்டும், பணப் பரிவர்த்தனையைச் செய்கிறது. அதுவும் கூடிய விரைவில் நிறுத்திவிடும் என்று சுவீடன் அரசு அறிவித்துள்ளது. கேஷ்லெஸ் முறையைப் பின்பற்றிவரும் நாடுகளில் சுவீடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Wednesday, November 16, 2016

இனி, வங்கிகளில் ஐந்தில் ஒரு பங்காக கூட்டம் குறையும்: மை வைக்கும் நடவடிக்கையால் ஒரே நபர் பலமுறை வர இயலாது

By கு. வைத்திலிங்கம்  |   Published on : 16th November 2016 02:53 AM  |   
விரலில் மை வைக்கும் திட்டத்தால், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவோர் கூட்டம் ஐந்தில் ஒரு பங்காக குறைந்துவிடும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 5 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி ஒரு நாளைக்கு ரூ.4000 வீதம் பழைய நோட்டுகள் மாற்றப்படுகின்றன.
ஆதார் அட்டையை காட்டி பணம் மாற்றியவர்கள் அடுத்தமுறை அதே ஆவணத்தைக் காட்டினால், கணினி காட்டிக் கொடுக்கிறது. இதனால், வங்கி அலுவலர்கள் திருப்பிவிடுகிறார்கள்; அல்லது 10 நாட்களுக்குப் பிறகு வாருங்கள் என்கிறார்கள்.
இதனால், ஒருநாள் ஆதார் அட்டையை காட்டினால், மறுநாள் குடும்ப அட்டை, அடுத்த நாள் ஓட்டுநர் உரிமம் என்று மாற்றி மாற்றி பணம் எடுக்க வரும் கூட்டத்தால்தான் தற்போது வங்கிகளில் நீண்ட வரிசை இருக்கிறது.
இந்நிலையில், பணம் பெற்றவர்களுக்கு மை வைக்கப்படுவதால் அவர் ஏற்கெனவே பணம் பெற்றவர் அல்லது எத்தனையாவது முறையாக வருகிறார் என்பதையெல்லாம் கணித்துவிடுவது எளிது. இதனால், இனி வங்கிகளில் கூட்டம் குறையும் என்கின்றனர் வங்கி அதிகாரிகள்
""இதை முன்னதாகவே செய்திருக்கலாம். இதுவரை பல பேர் ரூ. 400 கமிஷனுக்காக பல முறை வந்திருக்கிறார்கள்.
அவர்களைத் தெரியும். ஆனால், திருப்பி அனுப்ப முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு ஆவணத்துடன் வருவார்கள். அவர்கள் உண்மையாகவே ஏழைகள். அது அவர்களுடைய பணம் அல்ல என்பதை ஊகிக்க முடியும்.
ஆனால், எங்களால் இல்லை என்று சொல்ல முடியாது. தொடக்கத்திலேயே இத்தகைய மை வைக்கும் திட்டத்தை அரசு அறிவித்திருந்தால், ஒரு நபர் திரும்பத் திரும்ப வருவது தடுக்கப்பட்டிருக்கும்'' என்கின்றனர் வங்கித் துறையினர். வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற வருவோரே அதிகமாக இருக்கின்றனர். தங்கள் கணக்குகளில் பணத்தை வரவு வைப்போர் குறைவாக இருக்கின்றனர். ஒரு கிளைக்கு 1000 முதல் 1500 பேர் வரை பழைய நோட்டுகளை மாற்ற வருகிறார்கள். ஆனால், தங்கள் கணக்கில் பழைய நோட்டுகளை வரவு வைக்க வருவோர் சுமார் 200 பேர் மட்டுமே.
முடிந்தவரை, கணக்கில் போடாமல் மாற்ற முடியுமா என்பதிலேயே பலரும் விருப்பமாக இருக்கிறார்கள். ஏனென்றால், பழைய நோட்டுகளை கணக்கில் வரவு வைக்கும்போது, சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு எண், அதில் செலுத்தப்பட்ட பழைய நோட்டுகளின் தொகை என முழு விவரமும் ரிசர்வ் வங்கிக்கு நாள்தோறும் அனுப்பப்படுகிறது.
நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை செல்லாத நோட்டுகளை வழக்கத்துக்கு மாறாக, அல்லது அதிகமாக செலுத்தியவர்கள் எத்தனை பேர் என்று ஜனவரி மாதம் மிக துல்லியமாக ஆராயப்படும் என்கின்றனர் வங்கி உயர் அதிகாரிகள்.
வங்கி மேலாளர் உதவியுடன் பணத்தை மாற்றுகிறார்கள் என்றும், 20% கமிஷன் கிடைப்பதாகவும் வரும் செய்திகள் குறித்து கேட்டபோது, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், ""வங்கிகளில் முறைகேடு இரண்டு வகைகளில் மட்டுமே சாத்தியம். முதலாவதாக பணம் மாற்ற வருவோர், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட தொகையைவிட குறைவாக மாற்றினால், மீதியுள்ள தொகைக்கு வங்கி மேலாளரே, அவர் வாங்கியதாக கணக்கில் சேர்த்து காட்டி, கருப்பு பணத்தை மாற்ற உதவ முடியும். இரண்டாவது, சில செயல்படாத கணக்குகள் என வங்கியில் உண்டு. அந்தக் கணக்குகள் வங்கி மேலாளருக்குத் தெரியும். அதில் பணத்தைப் போடச் செய்து, போலி நபர்களைக் கொண்டு மீண்டும் வித்ட்ராயல் செய்யும்படியும் செய்யலாம். இரண்டுமே கிரிமினல் நடவடிக்கை. சிக்கிக் கொண்டால் சிறை செல்ல வேண்டியதுதான்'' என்று விளக்கம் அளித்தனர் வங்கி அதிகாரிகள்.
பெட்ரோல் பங்க்குகள் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி நடப்பது குறித்து வருமான வரித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, ""நவ.8-ம் தேதி முதல் டிச.30 வரை அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குக்கு எவ்வளவு பெட்ரோல் ஐஓசி மூலம் வழங்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்துகொண்டு, அதன் பிறகு அவர்கள் கணக்கை பிப்ரவரி வாக்கில் வருமானவரித் துறை நிதானமாக ஆய்வு செய்யும். அப்போது அவர்கள் ஐஓசியில் வாங்கிய பெட்ரோல்-டீசலுக்கும் அவர்களது நடப்புக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகைக்கும் அதிக வித்தியாசம் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள்'' என்கின்றனர்.

NEWS TODAY 24.05.2026