Saturday, December 17, 2016

மக்கள் நலன் இல்லை

By என். முருகன்  |   Published on : 17th December 2016 01:24 AM  |   அ+அ அ-   |  
murugan


இன்றைய தலையாய பிரச்னையாக நம் நாட்டில் விவாதிக்கப்படுவதும், சராசரி குடிமகனை பாதிப்பதுமான பிரச்னையாக பணத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நள்ளிரவில், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. நாட்டின் மொத்த ரூபாய் நோட்டுகளில் இந்த இரண்டு வகையானவையும் சேர்ந்து 86 சதவீதம் உள்ளன.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சாமாக பிரதமர் கூறியது கவனிக்கத்தக்கது.
அரசின் இந்த அதிரடி முடிவிற்கு இரண்டு காரணங்களை கூறினார் பிரதமர். ஒன்று, நாட்டின் எல்லைக்கு வெளியே கள்ள நோட்டுகளை தயாரித்து பயங்கரவாதிகள் நம் நாட்டிற்குள் ஊடுருவி இந்த கள்ள நோட்டுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உபயோகிப்பது. இரண்டாவது, கருப்புப் பணத்தையும், ஊழலையும் இந்த இரண்டு வகை ரூபாய் நோட்டுகள் நிலைப்படுத்துவது.
இந்த இரண்டு காரணங்களும் சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துப்படி, "எல்லா கருப்புப் பணமும் ரொக்கப் பணமாக உள்ளது என்பதும் எல்லா ரொக்கப் பணமும் கருப்புப் பணம் என்பதும் தவறான அனுமானங்கள்.'
இது எப்படி என ஆராய்ந்தால், நம் நாட்டின் 90 சதவீத ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை ரொக்கமாகவே பெறுகிறார்கள். இவர்களில் பல கோடி பேர் விவசாயத் தொழிலாளிகள், கட்டட வேலை செய்பவர்கள், பல வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் தினக்கூலி பெறுபவர்கள். நம் நாட்டில் வங்கிகள் பல கிராமங்களுக்குப் பரவிவிட்டபோதிலும், இன்னமும் சுமார் 60 கோடி இந்தியர்கள் வசிக்கும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் வங்கிக் கிளைகளே கிடையாது.
அப்படியே வங்கிக் கிளைகள் உள்ள பல இடங்களில் வசிக்கும் தொழிலாளிகளுக்கு வங்கியை உபயோகித்து பணத்தை சேமிக்கவும், அன்றாட தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் கிடையாது.
தங்கள் தின வாழ்க்கைக்கு ரொக்கப் பணத்தை செலவிடுவதும், தங்கள் சேமிப்பை அதிக மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக வீட்டில் பத்திரமாக பூட்டி வைத்துக்கொள்ளும் பழக்கமும் பெருவாரியான நமது மக்களுக்கு உண்டு. இந்த பழக்க வழக்கங்களை மறந்துவிட்டு இவர்களது வாழ்க்கையை துயரத்திற்கு தூக்கியடிக்கும் தரமற்ற செயல்தான் இந்த செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சமூகவியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் சஞ்சய் ரெட்டி என்பவரின் கருத்தும் இதுதான்.
அவர் கூறுகிறார்: "இந்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டுக்கான திடீர் அறிவிப்பு தவறான ஒன்று. அதன் பின்னணியில் எந்தவிதமான பொருளாதாரக் கோட்பாடும் கிடையாது. ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை சரியான நடவடிக்கைகளை எடுத்து ஒழிக்க முடியாத ஒரு அரசின் அவசரத்தனத்தை இந்த செல்லாத நோட்டுகளுக்கான அறிவிப்பு பறைசாற்றுகிறது.'
பொதுமக்களில் நிறைய பேர் மிகுந்த நல்லெண்ணத்துடன் தங்கள் சேமிப்புப் பணத்தை ரொக்கமாக சேர்த்து வைக்கிறார்கள். இதில் நடுத்தர வர்க்கத்தினரும், சாதாரண தொழிலாளர்களும் அடக்கம். அவர்களது பணம் செல்லாக் காசாகிவிட்ட காரணத்தால் அவர்களது நடவடிக்கைகள் பல ஸ்தம்பித்துப்போய், பின் இது நாட்டின் பொருளாதாரத்தையே பாதித்து விடும் எனக் கூறிகிறார் சஞ்சய் ரெட்டி.
புதுதில்லியின் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை ஆணையத்தின் பேராசிரியர் கோவிந்த ராவ் ஒரு முதிர்ந்த பொருளாதார நிபுணர். அவரது கருத்துப்படி, நம் நாட்டின் மொத்த ரொக்கப் பணத்தில் 86 சதவீதம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே. இவற்றை செல்லாது என்று அறிவித்தபின் நமது பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்ந்து போனது.
நாட்டின் 96 சதவீத செலவினங்கள் ரொக்கப் பணத்தில்தான் நடைபெறுகின்றன என்பதால் இந்த "செல்லா நோட்டு அறிவிப்பு' எப்படிப்பட்ட சமூக குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது என்பது புரிந்திருக்கும். இது தெரியாதவர்கள்தான் நம்மை ஆளும் பொறுப்பில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது, பயங்கரவாதிகளுக்கு பணம் வருவதை தடுப்பது, கள்ள நோட்டுகளைத் தடுப்பது ஆகியவை உடனடியாக செய்யப்பட வேண்டிய வேலைகள் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், இவற்றை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள் என்பதும், நம் நாட்டின் வங்கிகள் இவற்றை உடனடியாக சரி செய்யும் திறமை கொண்டவையாக உள்ளனவா என்பதும் சரியாக கணிக்கப்பட்டுள்ளனவா எனக் கேட்கிறார் கோவிந்த ராவ்.
கருப்புப் பணம் உருவாக அடிப்படைக் காரணங்கள் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், தேர்தல் செலவுகள், நிலம் மற்றும் கட்டுமான வணிகங்கள், வரி ஏய்ப்புகள் மற்றும் அரசு ஊழியர்களின் லஞ்ச நடவடிக்கைகளே.
இதனால் உருவாகும் கருப்புப் பணம் ரொக்கமாக வைத்துக் கொள்ளப்படுவதில்லை. வெளிநாடுகளில் தேக்கி வைப்பதும், நிலங்களாகவும் பல கட்டடங்களாகவும், தங்க - வைர நகைகளாகவும் அவை பதுக்கி வைக்கப்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த பகிரங்க உண்மைகள். ஆக, கருப்புப் பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவிப்பது சரியல்ல என்கிறார் ராவ்.
இதுபோன்ற கருத்துகளை பல பொருளாதார நிபுணர்கள் எடுத்துக்கூறும் வேளையில், இவற்றிற்கெல்லாம் மேலாக இந்த நடவடிக்கை கருப்புப் பண வளர்ச்சியை நம் நாட்டில் மேலும் அதிகரிக்கும் எனக் கூறுகிறார் மெய்த்ரீஷ் ஃகாதக் எனும் லண்டன் நகரத்து பொருளாதார பேராசிரியர். அவர் இந்திய பொருளாதாரத்தை கூர்ந்து கவனிப்பவர்.
நம் நாட்டின் கருப்புப் பணத்தில் 5 அல்லது 6 சதவீதமே ரொக்கப் பணமாக உள்ளது. நமது பிரதமரின் செல்லா நோட்டு அறிவிப்பால் இந்தப் பணம் முழுவதையும் கைப்பறறிய பின்னரும் பெரிய நன்மைகள் விளையாது. காரணம், இனிவரும் காலங்களில் கருப்புப் பணத்தை பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளையும்விட, புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் அதிக அளவில் சேமித்து வைக்க முடியும் என்கிறார் ஃகாதக்.
அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாத பல பொருளாதார ஆய்வாளர்கள் அரசின் இந்த நடவடிக்கை தவறு என சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் பல அரசியல் கட்சிகளும் இதை அரசியல் பிரச்னையாக கையிலெடுத்து வாதம் செய்து வருகின்றன.
எனவேதான், இந்த நடவடிக்கை சரியான ஒன்று என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலைமையில் தேசிய வியாபார குறியீடுகள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்றுவிட்டன. தொழிற்சாலைகளின் உற்பத்திகளும் குறைந்து, வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலைமையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார உற்பத்திக்கும் மக்களின் கையில் உள்ள ரொக்கப் பணத்திற்கும் உள்ள விகிதம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்குக் காரணம் நமது சமூகக் கட்டமைப்புதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நமது பொருளாதாரம் மக்களின் கையிலுள்ள ரொக்கப் பணத்தை உபயோகித்துதான் வளர முடியும். மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழந்தால், நமது பொருளாதாரம் கீழ்நோக்கி வீழ்ச்சி அடையும். இது தற்போது நிரூபணம் ஆகிவருகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் அதிக முக்கியம் நல்ல நாணயமான பல குடிமக்களின் தரமான வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு நாம் ஒரு திடீர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என பல தலைவர்கள் எண்ணுகிறார்கள்.
பழைய 500 ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு,புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்குவோம் என அரசு சொன்னபின்னர், டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி கணக்கீட்டின் படி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டது ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி.
ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட முடிந்த புதிய நோட்டுகள் ரூபாய் 5 லட்சத்து 28 ஆயிரம் கோடியே. இது பணப் புழக்கத்தை சரிபாதிக்கு கீழே கொண்டு சென்றதனால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
ஆக மொத்தத்தில், இந்த நடவடிக்கையை நல்ல நோக்கத்தில் செய்திருந்தாலும், அது சரியாக நடந்தேற முடியாத சூழலில் அதை திரும்பப் பெறும் பல மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமான "மக்கள் நலன்' காக்க எந்த நடவடிக்கைக்கும் தயார் என்ற நல்ல பெயர் இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் என நம்மில் பலர் எண்ணுவது சரியே!

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

இதுவரை கைப்பற்றப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு? இளகிய மனம் படைத்தோர் படிக்க வேண்டாம்

By IANS  |   Published on : 17th December 2016 11:04 AM  |  

புது தில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 586 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2,900 கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.140 கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றியதாக வருமான வரித் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, ஆங்காங்கே கருப்புப் பணத்தை மாற்றும் நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது.

இதைத் தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தபோதிலும், வங்கி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில், சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை 586 இடங்களில் அவர்கள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது. அதில் ரூ.300 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளும், ரூ.2,600 கோடி கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கணக்கில் வராத பணத்தில் பெரும்பாலானவை புதிய ரூ.2,000 நோட்டுகளாக இருந்தன. ஒரே சோதனையில் அதிகபட்சமாகக் கைப்பற்றப்பட்டது சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் என்று வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு மட்டும் ரூ.140 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ரூ.52 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தவிர தில்லியில் உள்ள வழக்குரைஞர் ஒருவரது வீட்டில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், மகாராஷ்டிரத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. உரிய ஆதாரங்களின்றி வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எய்ம்ஸ்: ஆதார் எண் தெரிவிக்கும் நோயாளிகளுக்கு பதிவு கட்டணம் கிடையாது

By புதுதில்லி  |   Published on : 17th December 2016 07:34 AM  | 
"தில்லி எய்ம்ஸ்மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோர், ஆதார் எண் தெரிவித்தால் அவர்களின் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை; அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ரூ.100 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்' என்ற புதிய நடைமுறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக எய்மஸ் மருத்துவமனையின் கணினிமயமாக்கல் பிரிவு தலைவரும், மருத்துவருமான தீபக் அகர்வால் கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரிடம், தற்போது பதிவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுகாதார அடையாள எண் ஒதுக்கப்படுகிறது. இந்த நடைமுறையில், ஒரே நோயாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள எண்கள் ஒதுக்கப்படும் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. அதேவேளையில், நோயாளியின் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைத்தால், இந்த தவறுகள் நிகழ வாய்ப்பில்லை.
எனவே, ஆதார் எண்ணை தெரிவிக்கும் நோயாளிகளுக்கு, பதிவுக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யும் புதிய நடைமுறையை விரைவில் செயல்படுத்தவுள்ளோம்.  அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ரூ.100 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய நடைமுறையை, அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான அறிவிக்கையை வெளியிடும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் தீபக் அகர்வால்.
ப்ரீ பெய்டு அட்டைகள்
 மின்னணு பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருவதை கருத்தில் கொண்டு, எய்ம்ஸில் ப்ரீ-பெய்டு அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தீபக் அகர்வால் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அந்த அட்டையில் பணத்தை முன்கூட்டியே டெபாசிட் செய்துவிட்டு, பின்னர் சிகிச்சை பெறலாம். சிகிச்சை நிறைவுற்ற பின், அட்டையில் பணம் மிச்சமிருந்தால் அது நோயாளியிடம் திரும்ப வழங்கப்படும்.இதேபோல, எய்ம்ஸில் பணம் செலுத்துமிடங்களில் 100 ஸ்வைப்பிங் மெஷின்கள் வைக்கப்பட உள்ளன. மேலும், மருத்துவ கல்விக் கட்டணங்களை, மாணவர்கள் இணையவழியில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக எய்ம்ஸ் தலைமை கண்காணிப்பாளர் டி.கே.சர்மா தலைமையில் உயர் நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார் தீபக் அகர்வால்.  

மார்கழி என்றதுமே நினைவில் வரும் எட்டு காட்சிகள்



மாதங்களில் அவள் மார்கழி' கண்ணதாசனால் புகழப்பட்ட மாதம் மார்கழி. விவசாய நாடான இந்தியாவில் அறுவடையைத் தொடங்கி வைக்கும் மாதம் மார்கழி. மித வெப்ப நாடான இந்தியாவில் குளிரால் போர்த்திய நாட்களை நமக்குத் தரும் மாதம் மார்கழி.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறதுதான் என்றாலும் மார்கழி என்றவுடன் நம் மனதிற்குள் சில அடையாளங்கள் சட்டென்று வந்து செல்வதே மார்கழிக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. அப்படி, மார்கழியின் அடையாளங்களாய் எதெல்லாம் நம் கண்முன் வந்து செல்லும் என மனதை கிராமத்திற்குள் ஒரு ரவுண்ட் செல்ல ரெடியா?



குளிர் தரும் பனி
மார்கழியின் முதல் அடையாளம் பனி. மாலை தொடங்கியதுமே மெல்ல ஆரம்பித்து, முன்னிரவில் ஆடை மேல் இன்னோர் ஆடை அணிய வைக்கச் செய்யும். பின் கம்பளிக்குள் ஒளியச் செய்து, ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் பனி. அதிகாலையில் புகைப் போல படரச் செய்து, சூரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கி விடும்.

புனல் செட் பாடல்கள்
'தாயே கருமாரி..." கோவிலில் புனல் ஸ்பீக்கரில், எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் கனவின் எந்த அடுக்கில் இருந்தாலும் உலுக்கி எழுப்பி விடும். எல்.ஆர்.ஈஸ்வரியைத் தொடர்ந்து, சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி உள்ளிட்டோர் தொண்டையைச் சரிசெய்தப்படி நமக்காக காத்திருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன், மார்கழி மாதத்தில் ரெக்கார்டு போடுவதற்கு என்றே ஒருவரை நியமித்திருப்பார்கள். அவர் அதிகாலை 4 மணிக்கெல்லாம் டேப் ரெக்கார்ட்டரில் பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்களை ஒலிக்கச் செய்து எல்லோரையும் எழுப்புவார். பென் ட்ரைவைச் செருவி விட்டால் நாள் கணக்கில் பாடல்கள் இசைப்பது போல அப்போது கிடையாது. ஆறு பாடல்கள் முடிந்ததும் கேசட்டைத் திருப்பி போட வேண்டும் என்பதால் அவரும் தூங்க முடியாது. அதேபோல மாலை நேரத்தில் பாடல்களைப் போடுவார். அப்போது சினிமா பாடல்களும் ஒலிச்சித்திரங்களும் இடம்பிடிக்கும்.



சிக்கு கோலமா... பூ கோலமா...
எல்.ஆர். ஈஸ்வரி 4 மணிக்கே எழுப்பி விடுவது, தெருவை அடைத்து கோலம் போடுவதற்குதான். 48 புள்ளிகள், 64 புள்ளிகள் என முதல்நாளே இரவில் திண்ணையில் சாக்பீஸில் ஒத்திகைப் பார்த்தாலும் தெருவில் புள்ளி வைத்ததும், தர்மத்தின் தலைவன் ரஜினி வீடு மாறி செல்வதைப் போல, எல்லாம் சரி எங்கு தப்பு வந்தது எனத் தெரியாமல் அரைமணி குழம்பி, பின் அதையே வேறு கோலமாக மாற்றிப் போடுவது ஒரு திறமை. அதை பக்கத்து வீட்டுக் காரப் பெண்களால் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் அதுவே கலையாகி விடும். கோலம் போடுவதற்கு தம்பிகள், அக்கா இன்னைக்கு சிக்கு கோலமா... பூ கோலமா... என்று கேட்டுக்கொண்டே இருக்கும் தம்பிகளில் கெஞ்சல் ஓர் அழகு என்றால், சொல்றேன்... சொல்றேன் என அக்காக்கள் செய்யும் சஸ்பென்ஸ் இன்னும் பேரழகு. மார்கழியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற சிறப்பு நாட்கள் வரும்போது அதற்கு ஏற்றவாறு கோலங்களில் வித்தியாசம் காட்டி அசத்துவதும் நடக்கும்.

சாணிப் பிள்ளையார் :-
என்ன கோலம் என தம்பிகளை இழுத்தடித்தற்கு பழிவாங்கலாய், பிள்ளையார் செய்ய சாணி எடுத்து வர தம்பிகள் பிகு காட்டுவார்கள். நாளைக்கு உனக்கு பிடித்த கோலம் போடுகிறேன் எனச் சமாதானம் செய்த ஐந்து நிமிடங்களில் சாணி வந்துவிடும். கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையார் வைப்பது வழக்கம் நிறைவேறும்.

கூடுதல் அழகுக்கு பரங்கிப்பூ
கோலம் ரெடி.. நடுவில் பிள்ளையாரும் ஜம்மென்று வீற்றிருக்க... இரண்டையும் அலங்கரிக்க பரங்கிப்பூ அல்லது பூசணி பூ தேவை. மீண்டும் தம்பிகள் தயவு வேண்டும். அல்லது அந்த நேரத்தில் தம்பிகளாக மாறிவிடும் அப்பாவின் உதவியோடு பரங்கி பூ வந்து சேரும். பரங்கி பூ வை வைத்து நிமிர்ந்தால் சூரியன் சோம்பல் முறித்து பகலைத் திறப்பார்.



சுவையான பொங்கல்
கோலம் போட்டு முடிக்கும் நேரத்தில் சரியாக கோவில் மணியோசை கேட்கும், ஓடிச் சென்றால் ஊரில் சிறுவர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டே வெட, வெட என நிற்பார்கள். அர்ச்சகர் பொங்கல் வாளியின் மூடியைத் திறந்து, ஒரு கைப்பிடி பொங்கலை மட்டும் இலையில் வைத்திருப்பார். ஆனால் அதன் நறுமணம் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். பூஜை எப்போது முடியுமென காத்திருந்து சுடச் சுட பொங்கலை கையில் வாங்கியதும் சூடு தாங்காமல் இந்தக் கையில் கொஞ்ச நேரம் அந்தக் கையில் கொஞ்ச நேரம் என மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே வீடு வருவதற்குள் பொங்கலின் சூட்டுக்கு கைப் பழகியிருக்கும்.

பஜனைப் பாடல்கள்
முதல்நாள் இரவே பாடல் புத்தகங்களைப் படித்து பஜனைப் பாடல்களை மனப்பாடம் செய்து, அதிகாலையிலேயே எழுந்து தூங்குமூஞ்சி நண்பன் வீட்டுக்குச் சென்று அவனை எழுப்பி கோவிலுக்குச் செல்வதற்குள் தனக்கு தருவதாக சொல்லியிருந்த ஜிங்க் சாக் கருவி வேறொருவனின் கையில் இருக்கும். அவன் நமக்கு முன்பே வந்து அதைக் கைப்பற்ற்றியிருப்பான். நாளை இன்னும் சீக்கிரமே எழுந்திருக்கனும் எனும் மார்கழி பாடத்தைக் கற்று, குருநாதரின் பாடலுக்கு பின் பாடத் தயாராவோம்.



போகி
பொங்கல் பண்டிகைன்னா... அது தை மாசம் இல்லையான்னு சொல்றீங்களா.. மார்கழியின் கடைசி நாள்தான் போகி. மார்கழியின் குளிருக்கு ஏற்ற பண்டிகைதான் இது. வீட்டில் பயன்படாத பொருட்களை தீ வளர்த்து அதில் போட்டு, சுற்றி உட்கார்ந்து குளிர்காய்வது சுகமான அனுபவம்.


மார்கழியைப் போற்றுவோம்! மார்கழியைக் கொண்டாடுவோம்.

Friday, December 16, 2016

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி

ஆர்.ஷபிமுன்னா
Return to frontpage
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார்.

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து?

மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும். சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, செவிலியர்களிடம் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இது உண்மை எனில் அவரது குரலை கட்சித் தொண்டர்களுக்காக பதிவு செய்திருக்கலாமே. அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது செய்ததுபோல், வீடியோ பதிவு கூட வெளியிட்டிருக்கலாம். இதுபோல், அங்கு நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அப்பல்லோ, தமிழக போலீஸ் அதிகாரிகள் என பலதரப்பினரின் தொடர்பு உண்டு. இவர்களிடம் கிடைக்கும் ஆதாரத்தில் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.

ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் நிலை என்ன?

இறப்பின் காரணமாக ஜெயலலிதாவின் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்படாது. அதன் தீர்ப்பில் குற்றங்கள் ஏற்கப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டால் அதில், ஜெயலலிதா மறைவு காரணமாக அவருக்கு மட்டும் தண்டனையை செயல்படுத்த முடியாது.

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு இனி யார் வாரிசு?

ஜெயலலிதாவின் குடும்பத்தார் தான் அவரது சொத்துகளுக்கு வாரிசாக முடியும்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆதரித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜனநாயக முறைப்படி கட்சி தான் ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தால் அதை எதிர்க்க யாருக்கும் சட்டத்தில் இடம் இல்லை.

கடந்த 1999-ல் இருந்த வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதாவை காங்கிரஸுடன் பேசி, துணை பிரதமராக்க நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுவது குறித்து?

இதுபோல் ஒரு முயற்சி நடைபெற வில்லை. தான் பிரதமர் பதவிக்கு குறைவாக எதையும் ஏற்கக் கூடாது என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு அதிகம் உண்டு. எனவே, அவர் துணை பிரதமர் பதவியை எப்போதும் விரும்பியதில்லை. தன்னை வாஜ்பாய் ஏமாற்றியதால் தான் அவரது ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். அப்போது ஜனதா, மதிமுக, பாமக உட்பட ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் அமைந்த கூட்டணியில் 30 எம்.பி.க்கள் இருந்தனர். இது பாஜக ஆட்சி அமைய பெரிய உதவியாகவும் இருந்தது. இதனால், என்னை நிதி அமைச்சராக்க வேண்டும் என வாஜ்பாயிடம் ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். இதை ஏற்றுக்கொண்டு ஆதரவை பெற்ற வாஜ்பாய் அதை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் சட்டத்துறை அமைச்சராக அமர்த்த கேட்டமைக்கும் வாஜ்பாய் மறுத்தார்.

இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த உங்கள் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட காரணம்?

இந்த கேள்விக்கான பதில் எனக்கும் இன்றுவரை தெரியவில்லை. வெளியில் எங்காவது பார்த்தால் நல்ல முறையில் பேசுவார். என்னை கொடநாடு எஸ்டேட்டுக்கு காலை உணவுக்கு அழைத்தார். அப்போது அத்வானிக்காக நான் அவரிடம் பேசினேன். இதற்கு அவர்

‘பாஜகவை விட தன்னிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன. அவருக்காக நான் எதையும் செய்யத் தேவையில்லை’ என மறுத்து விட்டார். தமிழகத்தில் அதிமுகவிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன என்பது உண்மை தான். கொடநாட்டில் பேசியதுதான் நான் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். ஆனால், நிச்சயமாக இதற்கு நான் அவர் மீது தொடுத்த வழக்கு காரணமாக இருக்காது. ஏனெனில். இதை அறிந்த பின் தான் அவர் என்னிடம் கூட்டணியும் வைத்தார்.

ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் மற்றும் பிடிக்காதவை?

ஜெயலலிதா பிரமாதமான அறிவு கொண்டவர். அதிக சுயமரியாதை எதிர்பார்ப்பவர். அவருக்கு இருந்த ஞாபக சக்தி அபரீதமானது. 100 பக்கங்கள் கொண்ட கோப்பாக இருந்தாலும் பத்து நிமிடங்களில் படித்து தெளிவாகப் புரிந்து கொள்வார். நாள்தோறும் ஒரு நூல் படிக்கும் பழக்கம் கொண்டவர். பேராசை என்பது அவருக்கு இருந்தது கிடையாது. கல்லூரி, பல்கலைக்கழகம் சென்று படித்திருந்தால் அவர் ஒரு பேராசிரியர் அல்லது வழக்கறிஞராகி இருப்பார்.

இவருக்கு இருந்த அந்த ஆசையை என்னிடம் அடிக்கடி வெளிப்படுத்தி உள்ளார். ஜெயலலிதா தனது தோல்விக்குப் பின் ஒருமுறை என்னை பாபநாசம் சிவன் சாலை வீட்டுக்கு வந்து சந்தித்தார். இருவரும் கூட்டணி சேர்ந்து கருணாநிதியை தோற்கடிக்கலாம் எனக் கூறினார். இதற்கு நான் அவர் மீது தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெற முடியாது என நிபந்தனை விதித்தேன். இதையும் அவர் பெருந்தன்மையுடன் ஏற்றார். இது, ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஆகும். அவருக்கு திடீர் கோபம், அநாவசியமான சந்தேகம் போன்றவை வந்து புத்தி மாறும். அது எனக்கு பிடிக்காது. திராவிட இயக்கத்தினரிடம் இருந்த சினிமாவில் ஜெயலலிதா ஒரு பிராமணப் பெண் என்பதால் அவரை அதிகமான துஷ்பிரயோகம் செய்திருந்தனர். இவர்களிடம் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் சினிமா துறையினர் மீது மிகவும் கோபமாக இருந்தார். இந்த நரகத்தில் தன்னை தாய் வேதவல்லி தள்ளிவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறி வருந்தியுள்ளார்.

அதிமுகவால் தனி மெஜாரிட்டியுடன் ஆளப்பட்டு வரும் தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தமிழக கட்சிகளுக்கு தேர்தலில் முன்னிறுத்தி வாக்கு கேட்க ஒரு முகம் அவசியம். பாஜகவுக்கு தமிழகத்தில் தொண்டர்கள் அதிகம். ஆனால், முன்னிறுத்த முகம் இல்லை. நரேந்திர மோடியை மக்களவை தேர்தலில் மட்டுமே ஏற்கும் நிலை உள்ளது. தவிர சட்டப்பேரவை தேர்தலில் இல்லை. இதற்கு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தால் தான் பாஜகவுக்கு விடிவு கிடைக்கும். தமிழக அரசியல் பொறுப்பு எனக்கு தரப்பட்டு முழு சுதந்திரம் அளித்தால் நான் பாஜகவை ஆட்சியில் அமர வைப்பேன்.

எம்எல்ஏக்களைப் பிரித்து பாஜகவும், காங்கிரஸும் அதிமுகவை உடைக்க முயல்வதாக வெளியாகும் செய்திகள் குறித்து?

இது ஒரு தவறான கருத்து. இருகட்சிகளிடமும் அந்த திறமை இல்லை. இந்த திறமை என்னிடம் உள்ளது. ஆனால், நான் அதை செய்ய மாட்டேன்.

இந்த சூழலில் தமிழக ஆளுநராக நீங்கள் அமர்த்தப்படுவதாக கிளம்பிய செய்திகள் உண்மையா?

ஒரு நண்பர் மூலமாக வந்த இந்த கோரிக்கையை நான் ஏற்க மறுத்து விட்டேன். ஒருமுறை, இந்தியா உட்பட சிலநாடுகள் இணைந்து உருவாக்கும் பிரிக்ஸ் வங்கிக்கு தலைவராக வேண்டும் என்றும் என்னிடம் பிரதமர் கேட்டார். இதற்கும் நான் மறுத்து விட்டேன். ஒரு தமிழனாக தமிழகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்கப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவன் நான். மீண்டும் எந்த வெளிநாட்டுக்கும் செல்ல மாட்டேன். இந்தியாவில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப்ல க்ரூப் மாறி மெஸேஜ் அனுப்பிட்டீங்களா? இதைப் படிங்க!

வாட்ஸ்அப்
இந்த பாஸ் தொல்ல தாங்க முடியலடா! டார்கெட்ட முடிக்கச் சொல்லி உசுற வாங்குறாருனு தெரியாம பாஸுக்கே வாட்ஸ்அப் ஃபார்வர்டு பண்ற ஆளா நீங்க... இல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்ப வேண்டிய லவ் யூ மெஸேஜ் வேற யாருக்கோ போய் முழிக்கிறீங்களா? இனிமே நீங்க பயப்படாம இருக்கலாம் எப்படி தெரியுமா?

ஆமாம், வாட்ஸ்அப் ஆனது மெஸேஜ் எடிட்டிங் அண்ட் ரீகாலிங் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறவும், அதனை எடிட் செய்யவும் முடியும் என்கிறது வாட்ஸ்அப்.

WABetainfo என்ற ட்விட்டர் பக்கம், வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் பீட்டா வசதிகளை பற்றி முன் கூட்டியே கூறி வருகிறது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதிகளைப் பற்றி முதலில் கூறியது இந்த பக்கம் தான். இந்த பக்கம் பதிவெற்றிய ட்விட்டில் கூறியிருப்பது என்னவெனில்,

"வாட்ஸ்அப் நீங்கள் அனுப்பிய மெஸேஜ்களை எடிட் செய்யும் மற்றும் திரும்பப் பெறும் வசதியை பீட்டா தளத்தில் கொடுத்திருக்கிறது. பீட்டா தளத்துக்கு மட்டும் அளித்துள்ளதால், இந்த வசதியில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆப்பிள் நிறுவனத்தின் iOS 2.17.1.869 தளத்தில் இந்த வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது."




சோதனை ஓட்டமாக ஒரு சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் இந்த சேவை அவர்களிடமிருந்து வரும் ஃபீட் பேக்கை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படும். வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்த ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோருக்கு சென்று சைன் அப் செய்ய வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பின் டெஸ்டராக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தகவலும் இடம் பெற்றிருக்கும்.

வாட்ஸ்அப் அப்டேட்டில் அனுப்பிய செய்திகளை திரும்பப் பெற இயலும் என்றாலும் ஒரு சில நிமிடங்களுக்குள் தான் எடிட் அல்லது திரும்பப் பெற முடியும். அதற்குள் செய்யவில்லை என்றால் அது அனுப்பிய நபருக்கு சென்று விடுமாம். இந்தியா வாட்ஸ்அப் பயன்பாட்டில் முன்னணி இடம் வகிப்பதால் இந்தியாவில் முதலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதி இந்தியாவில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி தகவல் ஆப்ஸ்களில் இந்தியாவில் வாட்ஸ்அப் தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் 16 கோடி மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தினமும் வாட்ஸ்அப் மூலம் பத்து கோடி கால்கள் செய்யப்படுகின்றன. வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து அதன் புதிய விஷயங்கள் மக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன.

ம. சக்கர ராஜன்,
மாணவர் பத்திரிகையாளர்

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

vikatan.com
அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, அசைவம் சாப்பிட்டால் உடல் வளர்ச்சிபெறும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது, அசைவம் சாப்பிடுபவர்களுக்கு காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை, இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த `மைக்ரோசாஃப்ட்’, `ஆப்பிள்’ நிறுவனங்களை உருவாக்கியவர்களும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண்சத்துக்களும் காய், கனிகளில் குறைவு. உதாரணமாக, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில், இரும்புச்சத்து 300 மைக்ரோகிராம்தான் இருக்கிறது. எனவே, அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்கவேண்டியது இல்லை. ஆனால், நம் உடலுக்கு அசைவம் மட்டும் போதுமா, அதை எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்துவைத்திருப்பது நல்லது.



அசைவ உணவுகளை எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்?

* போருக்குச் செல்லும் வீரன்போல, காரில் போகும் சுகவாசி சாப்பிடுவது சரிப்படாது. கட்டுமரத்தில் நிமிர்ந்து நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக இருப்பவர் கேண்டில் லைட் டின்னரில் `ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்வது சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் நாம் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும்.

* ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக்கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்துச் சாப்பிடுவது இன்னும் சிறப்பானது.

* மற்ற நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள்.

* வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள்.

* கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றையச் சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டிறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் அவர்கள்.

* `மாமிசம் சாப்பிடும்போது, கண்டிப்பாக இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவை இருக்க வேண்டும்’ என்கிறது தமிழ் மருத்துவம். எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கறையிலும், இந்தக் கறி மசாலா இல்லாமல், கிடாக்கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், இன்றைக்கு மூலைக்கு மூலை விரிந்திருக்கும் பன்னாட்டு கறிக்கடைகளில், அவித்தும் பொரித்தும் தரப்படும் கறி வகைகளில் கறி மசாலாவைப் பார்க்கவே முடியாது. அதேபோல், நம்முடைய சமையல் அறைகளை ஆக்கிரமித்துள்ள மசாலாப் பொடி பாக்கெட்களும் எந்த அளவுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட கறி மசாலாவில், அந்த மணத்தோடு செய்த கறி வகைகளைச் சாப்பிடுவதே நல்லது.



* ரெஸ்டாரன்ட்டுகளில், ஹோட்டல்களில் கிடைக்கும் கறிவகைகளைத் தவிர்ப்பது சிறந்தது. காரணம், அவற்றில் நூற்றுக்கணக்கான ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன; ரசாயன உப்புகளும் கலக்கப்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோயை வரவேற்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் குளூட்டமேட் ஆகியவை உண்டு.



* கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரைதேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்த்த கோழியாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான முறையில் வளர்ந்த கோழியாக இருப்பின், `உடல் சூட்டைத் தந்து, சாதாரண சளி, இருமல், மந்தம் ஆகியவற்றைப் போக்கும். உடல் தாதுவை வலுப்படுத்தி, ஆண்மையைப் பெருக்கக்கூடியது’ என்கிறது சித்த மருத்துவம். இதில், வைட்டமின் பி 12 சத்து அதிகம். அதனால் உடல் எடை அதிகரிக்காது. நம் ஊரில் `கருங்கோழி’ எனப்படும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. தசை சூம்பி, வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயாளிகளுக்கும், பிற தசை நோயாளிகளுக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாகச் சொல்லி வருகிறது தமிழ் மருத்துவம். பிராய்லர் கோழி இறைச்சி நல்லதல்ல. பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே பூப்படையும் பிரச்னை வரவும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



* மீன்கள் வெறும் உணவு அல்ல; ஊட்ட உணவு. அதிலும், கொழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த உணவு. ஆனால், அந்தப் புரதத்தையும் இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துக்களையும் முழுமையாகப் பெற வேண்டுமானால், மீனை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது. வேக வைத்த மீனே சிறந்தது. `இ.பி.ஏ.’, (Eicosapentaenoic Acid), `டி.ஹெச்.ஏ.’ (Dacosahexaenoc Acid) எனும் இரண்டு `ஒமேகா 3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டையும் நம் உடம்பு உற்பத்தி செய்யாது. சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர்த்து, தாவரங்களிலும் இது பெரிதாகக் கிடையாது. மூளைத் திறனைத் தூண்ட, புற்றுநோயைத் தடுக்க, மாரடைப்பைத் தடுக்க உதவும். இந்த இரண்டு `ஒமேகா 3’ அமிலங்களும் கடல் மீன்களிடம் கிடைக்கும்.

* ஆடோ, மீனோ, கோழியோ... அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சிக்காக ஒரு விலங்கைக் கொல்லும்போது அதன் தோலும் குடலும் முழுமையாக நீக்கப்பட்டவுடன், விரைவாக அடுப்படிக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதில் ஏற்படும் தாமதம், இறைச்சியில் நுண்ணுயிரிகளைப் பெருக்கம் செய்யக் காரணமாகிவிடும். ஆனால், இன்றைக்கு பன்னாட்டு கோழி, ஆட்டுக்கறி உணவகங்களில் இந்தக் கறித்துண்டுகள் கடந்துவரும் பாதை ரொம்ப தூரம் என்பதை மனதில்கொள்ளவும்.

எனவே, இறைச்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த பிறகு சமைத்துச் சாப்பிடுங்கள்... அதையும் அளவாகச் சாப்பிடுங்கள்!

NEWS TODAY 08.06.2026